முக்கியமான முன்குறிப்பு :இது ஏற்கனவே நான் பகுதி பகுதியாக முகநூலில் வெளியிட்ட காதல் கதைகளின் தொகுப்பு !தொகுத்து தந்து இருக்கிறேன் .சுவாரசியத்திற்காக சில பகுதிகளை நீக்கி இருக்கிறேன் !
முதல் காதல் கணிதக்காதல் …கல்லூரியில் கணிதத்துறையில் உள்ள ஒரு பெண் விரிவுரையாளர் ஏகத்துக்கும் திட்டிக்கொண்டே இருப்பார் .ஏகத்துக்கும் சிடுசிடு பார்ட்டி என நினைத்தேன் …அவர் கல்லூரியை விட்டு திடீரென விலக நேர்ந்தது .போய் பார்த்தேன்…ஏதேதோ பேசிய பொழுது ,”நான் ஆந்திராவுல விஜயவாடாவில் வளர்ந்தவ ,என் வீட்டுக்காரர் கும்பகோணம் தெரியுமா ?ஐ.ஐ.டி.யில் படிக்கும் பொழுது உண்டான காதல் …இப்போ நான் உன் அளவுக்கு தமிழில் கவிதை எல்லாம் எழுதுவேன் தெரியுமா ..அவர் அப்படியே தெலுங்கில் எழுதுவார் !.எல்லாம் கத்து தருவது தானே காதல் …ஆனால்.இன்னைய வரைக்கும் உங்களை நான் என்னைக்காவது காதலிக்காதீங்க அப்படின்னு சொல்லி இருக்க மாட்டேனே !காதல் அற்புதமான விஷயம் !It has no borders…its endless!”என்ற பொழுது என்றைக்கும் பிடிக்காத அவரை அன்றைக்கு ஏகத்துக்கும் பிடித்துப்போனது #காதல் எல்லை இல்லாதது
வரலாற்று காதல்களை சற்றே தொட்டு வர ஆசை ..தெரியாதகாதல்களை சொன்னால் இன்னமும் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .எட்டாம் எட்வர்ட் எனும் இங்கிலாந்தின் மன்னருக்கு வாலீஸ் சிம்ப்சன் என்கிற எளிய பெண்ணின் மீது காதல் பொங்கியது ….வெகுஜனத்தை திருமணம் செய்துக்கொள்ள அன்றைய தேவாலய நடைமுறை இடம் தராது என்பதால் தன் அரியணையை உதறி விட்டு ஜாலியாக டூயட் பாட கிளம்பி விட்டார் எட்வர்ட் .அவுரங்கசீபிர்க்கு ஆட்சியின் மீது ஆசை வந்ததற்கு பல்வேறு கரணங்கள் சொல்கிறார்கள் ..அதில் கவனம் பெறாமல் போகிற ஒரு கதை அவரின் மெல்லிய காதல் கதை .மராத்தியர்களின் பகுதியில் அவர்களை ஒடுக்க தங்கி இருந்த இளம் வயதில் ஒரு மராத்திய ஹிந்து பெண்ணோடு அவருக்கு காதல் arumbiyathu …கவி பாடினார்,காரணமில்லாமல் சிரித்தார் ..எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்த பொழுது திடீரென ஒரு நாள் கண் முன்னமே அவள் இறந்து போனாள்…சாவதற்கு முன் தன தனத்தை மராத்திய ஒற்றாள் என்றும் அவரை கொள்வதற்காகவே தன்னை நடிக்க சொன்னதாகவும் ,ஆனால்,அவுரங்கசீபை உண்மையாக காதலித்த அவளால் அதை செய்ய முடியாததால் அவருக்கு கொடுக்கப்பட இருந்த விஷம் கலந்த உணவை தானே உண்டு விட்டதாக சொல்லி விட்டு மறைந்தாள்….கண்ணீரோடு அன்றைக்கு அழுத அவுரங்கசீபின் வாழ்க்கையில் அதற்கு பின் அழவேண்டிய தருணமே வராமல் போக்கி விட்டது #காதல் வலிமை தருவது
இந்த கதை திருமணம் ஆன பின்னும் காதலிக்கும் ஒரு சிலரின் வகைக்குள் அடங்கும் கதை .அவர் ஒரு கம்பெனியில் மேலாளராக பணி புரிகிறார் .மனைவி தாவரவியல் படித்தவர் .வீட்டில் பார்த்து செய்து வாய்த்த திருமணம் ,மனிதர் ஆரம்பத்தில் இருந்தே அன்பை பொழிந்து தள்ளி இருக்கிறார்.அவரின் மனைவிக்கோ ஏகத்துக்கும் சங்கோஜம் ஆட்டிப்படைத்து இருக்கிறது .ஒரு வருடம் ரெண்டு வருடம் இல்லை எட்டு வருடம் இப்படியே இருந்து இருக்கிறார் .இதில் என்ன ஆச்சரியம் என கேட்க தோன்றுமே ;அவர்களுக்கு இந்த எட்டு வருட காலமாக பிளளை பேறு இல்லை.மனிதர் ஒரு வார்த்தை அதைப்பற்றி பேச மாட்டார் .மருத்துவர்கள் எந்த குறையும் இல்லை என்று சொல்லியும் பாக்கியம் கிட்டவில்லை .அவர் எதுவும் திட்டவே மாட்டார்.ஆனால் இவரே சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் அவர் முன்னமே அலுத்து சங்கடப்படுதுவார் ,அவர் “குட்டிம ஒன்னும் இல்ல ..அழாதமா ” என்பதே தனி காதல் அத்தியாயம்.இவரே துக்கம் அடக்கமாட்டாமல் “எங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்க !”என சொன்ன பொழுது ,”உன்னை தவிர வேற யாரும் பெஸ்ட் பார்ட்னர் இல்லைமா !”என்றார்.குழந்தையை தத்தெடுக்க வீட்டில் ஒப்பவில்லை .எட்டு வருட காலத்திற்கு பின் மழலை சத்தம் கேட்கும் தருணம் வந்தது ,”அப்பொழுதும் இவர் அழுதார் அவர் இப்பவும்,”குட்டிமா அழாதே !என்ன இது சின்ன பிள்ளையாட்டும் ?”என கேட்க ,”ஆமா நான் உங்க பிள்ளை தானே !”என அவர் அழுகையை அடக்க முடியாமல் சொன்னது அப்படியே உறைந்து போன கவிதை.இப்பொழுது அவர்களின் செல்ல மகள் தவழ்கிறாள்,அவளையும் “சின்னக்குட்டி “என்கிறார் குட்டிமாவுடன் சின்னக்குட்டியும் சிரிக்கிறார் ,#காதல்கள் கல்யாணத்திற்கு பிறகும் ….கல்லறை வரைக்கும்
அதிரி புதிரி காமெடி காதல் கதை ஒன்று உண்டு .அண்ணன் முறை எனக்கு அவன்.வகுப்பில் யாருடனும் பேச மாட்டான்.அவன் பாட்ச்சில் இருந்த வேறு துறை அக்காவிற்கு அதுவும் சென்னை பொண்ணுக்கு இவனை பிடித்துப்போனது .முதல் வருட பாதியிலேயே அவரவர் துறைக்கு போன பிறகு இவனை ஓயாமல் சுற்றி வந்தது அந்த பெண் .இத்தனைக்கும் அவன் யாரிடமும் தப்பிக்கூட பேசாத அப்பாவி .ரெண்டே மாதத்தில் இவனை மிரட்டி பைக்கில் உட்கார வைத்து கூட்டுப்போகிற அளவிற்கு முனேற்றம் .இவன் போவான் பீச்சில் உட்கார்ந்து அம்மணி காசில் கடலை,சுண்டல் கொறிப்பான்.போனிற்கு அந்த புண்ணியவதியின் காசிலேயே ரீசார்ஜ் வேறு .போகிற இடமெல்லாம் இவனுக்கு செலவு செய்து செய்து அந்த அக்கா பல ஆயிரங்களை இழந்தது தனிக்கதை ஆனால் அண்ணன் அவர்கள் ஒரே ஒரு முப்பது ருபாய் டிக்கெட் மட்டும் எடுத்து வைத்துக்கொள்வான் .எங்கேயாவது விட்டால் பஸ் ஏறி வர ..ஒரு நாள் அந்த பெண்ணே வாயை திறந்து காதலை சொன்ன பொழுது ,”உங்களுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று சொல்லி விட்டு போய் விட்டான் .அக்கா ஓயாமல் அவனுடன் பழக்கத்தை தொடர்ந்தார் .சில சமயம் கேட்டால் தின்று கொண்டு இதே பதிலை சொல்வான் .அக்கா இவனுக்காக சைவத்தை விடுத்தது அசைவம் சமைக்க வேறு கற்றுக்கொண்டார் கடைசியில் ஒரு நாள் கண்ணீரோடு அக்கா கேட்க அப்பொழுதும் அதையே சொன்னான்.பளார் என ஒரு சத்தம் கேட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் தெரிவிக்கின்றன .அன்றைக்கு விழுந்த அண்ணன் தற்போது வரை எழுந்திருக்க வில்லை ,இரண்டு குட்டிஸ்கள் நடுவில் குடும்ப சமேதமாக யாவும் சுபம்.அண்ணன் இன்னமும் கன்னத்தை தேய்த்து கொள்வதன் மர்மம் புரியவில்லை .அடிதடிகள் நிறைந்தது காதல் இல்லையா ?
என்றைக்கும் என் அப்பா என்னை திட்டியது இல்லை .அதிகப்பட்சம் “ஏன் சரவணா ?இப்படி!” என்பதையே அத்தனை மெதுவாகத்தான் கேட்பார் .அவர் கல்லூரி காலங்களில் மிகப்பெரிய கேங்கின் தலைவர் .ஹாக்கி மட்டையும்,கட்டைகளும் உருண்ட கரங்கள் அவருடையவை என அவர் நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றேன் எப்படி அப்பா இப்படி என கேட்டேன் .பதிலே சொல்லாமல் வெகு நாள் காக வைத்தவர்.ஒரு நாள் ஒரு வீட்டிற்கு போன பொழுது சிதம்பரத்தில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணியோடு திடீர் என்று உரையாட நேர்ந்தது .எல்லாம் முடிந்த பின் நாங்கள் கிளம்பும் பொழுது “இந்த மேடம் இருபது வயது பெண்ணாக இருக்கும் எனக்கு இருபத்தைந்து வயது இருக்கும் .நான் அப்ப தான் சொந்தமா வேலை செய்ய ஆரம்பிச்சு இருந்தேன் .இந்த பெண் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை .இவங்க டீச்சர் ட்ரைனிங் முடிச்சு இருந்தாங்க .என்னை கல்யாணம் பண்ணிக்குங்க அப்படின்னு கேட்டாங்க .நான் முதலில் எதுவும் சொல்லலை .என காரணம்னு கேட்டப்ப நீங்க ரொம்ப தைரியசாலி அது எனக்கு பிடிக்கும் “.என்றார்..கொஞ்சம் மௌனம்.” நான் அவங்களுக்கு பெட்டெர் ஆன மாப்பிள்ளை கிடைப்பாங்க அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டேன் .அப்பறம் எங்க பார்த்தாலும் தலையை குனுஞ்சுப்பாங்க .எனக்கே ஒரு மாதிரி ஆனது .இந்த பகுதி பக்கம் அதுக்கப்புறம் கிளம்பி வந்து ஆட்டம் போடறதை நிறுத்தியாச்சு .”என்றார் .அ”அப்பா நீங்க அவங்கள காதலீச்சங்கள?”என நான் கேட்க,அவர் தலையை வருடி கொடுத்து விட்டு ,”காதல் தானே !அது கெடக்குது கழுதை “என என் அப்பா என் தலையை கோதி விட்டு சிரித்த பொழுது கண்கள் கலங்கி விட்டன எனக்கு !இதே மாதிரி ஒரு காட்சியை என் வாழ்விலும் நடந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன் ,அதுவே வலித்தது ,அப்பா யூ ஆர் சிம்ப்லி கிரேட் என சொல்லாமல் இருக்க முடியவில்லை
என் நண்பன் அவன் …பள்ளிப்பருவத்தில் ஓயாமால் குறும்புகள் செய்வான் ..பக்கத்து அறையில் எப்பொழுதெல்லாம் பொழுது போகவில்லையோ அப்பொழுது எல்லாம் என்னை அழைத்து ஒட்டி பொழுதை போக்குவான் …ஒரே கல்லூரி வந்ததும் அவனிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் ….திடீர் திடீர் என்று சிரிப்பான் ,தலை முடியை அடிக்கடி கலைத்து விட்டுக்கொள்வான் ,அடிக்கடி வயிற்று கடுப்பு வந்தவன் போலவே ஓடுவான்…ஒரு பக்கம் தலையை சாய்த்து கொண்டே திரிந்தான்,கருமம் காக்காவை கூட அதிகபட்ச பீலிங்கோடு ரசித்தான் ..எல்லாம் ஒரு ஆறு மாதத்திற்கு…இவை எல்லாம் காதலின் அறிகுறிகள் என எனக்கு சொல்ல ஆட்கள் இல்லாமல் போனது..அவனின் சிரிப்பு மங்கியது ,எப்போது பார்த்தாலும் பேசியவன் இப்பொழுது எப்போது பேசுவான் என்கிற அளவிற்கு ஆகி விட்டது…அவனின் காதல் முறிந்து விட்டதாக சொன்னார்கள் …பல நாள் பேசாத அவன் என்னை ஒரு நாள் அழைத்தான் ,கையில் ஒரு தாளை திணித்தான் ,முத்து முத்தான கையெழுத்தில் கவிதை ஒன்று …நிச்சயம் அது ஒரு மாஸ்டர் பீஸ் !அவனுக்கு இத்தனைக்கும் கவிதைகள் வாசிக்கும் பழக்கம் கிடையாது …#காதலினால் பல கவிதை செய்க .
காதல்களில் சண்டைகள் ஒரு அற்புதமான அதிகாரம் .இன்னமும் கல்லூரி,பீச்,ரயில்வே நிலையம் எங்கு வேண்டுமானாலும் பாருங்கள் ஒரு பெண்ணோ,பயனோ முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருப்பன்,இன்னொருவர் கெஞ்சலாக குழைய ,மற்றவர் சிணுங்க அதை அடடா என ரசிக்க ஆரம்பித்தாலே போதும் ,உலகமே அழகாகி விடும் .தேடல் இல்லா வாழ்வு கூட சுகமாக இருக்கலாம் ,ஊடல் இல்லாத காதல் நிச்சயம் சுவைக்காது .சண்டை என்றதும் எத்தனையோ ஜோடிகள் கண்முன் தோன்றினாலும் எப்பொழுதும் முந்திக்கொண்டு நிற்பது அந்த ஜோடி தான் .இதற்கெல்லாமா சண்டை போடுவார்கள் என கடுப்பாகிற அளவிற்கு சண்டைகள் பறக்கும்.உச்சபட்சமாக தன்னவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்பதற்காக கல்லூரி தேர்வை எழுதாமல் அடம் பிடித்து நின்றதை எல்லாம் என்ன என்று சொல்வது ?எல்லா காதலிலும் நிச்சயம் இருக்கிற ஒரு விஷயம் கழிவிரக்கம் என்கிற அந்த possessiveness,தான் முன்னே வேறொருவருடன் பேசும் பொழுது அப்படியே கண்ணால் மிரட்டும் காதலிகளின் உருட்டலும் ,கலகலத்து போய் விடும் காதலர்களின் முக பாவமும் செமையான ஹைக்கூ .அதிலும் இந்த ஜோடியில் தலைவி எங்கேனும் இவர் கடலை வறுப்பதை பார்த்தால் துரத்தி துரத்தி அடிப்பார் .சண்டை உச்சத்துக்கு போய் காதலன் மௌனசாமியாகி விட ஹீரோவின் வீட்டில் அவரின் மாமாப்பெண்ணின் தோழி என அம்மணி நுழைந்து செய்த அலப்பறைகள் தான் ஹைலைட் .இப்போதும் சண்டை போட்டுக்கொண்டு தான் இருக்கிறது அந்த சண்டை,பிரிக்க போனால் உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை !
காதலை சொல்லாமல்,சொல்லாமலே கடந்து தவிக்கும் புண்ணியவான்களை பற்றி சொல்லாமல் போனால் பெரும் பாவம் என்னை ஒட்டிக்கொள்ளும் .கிட்டத்தட்ட ஏழு வருடம் பழகி இருப்பான்,தோழியை காதலியாக உணர்ந்த தருணம் பேசுவதை நிறுத்திக்கொண்டு பள்ளி மாறிய தோழனை எனக்கு தெரியும் .இன்னொருவன் ரொம்பவும் நெருக்கமான பெண்ணுக்கு பிறர் அனுப்பும் காதல் தூதுகளை எந்த சலனமில்லாமல் சுமந்தவன் தன் காதலை சொல்ல எண்ணி வாயெடுத்த தருணம் வாயில் காற்றும்,கண்ணில் கண்ணீரும் வந்தது ,அதற்கு பிறகு அவன் காதலுக்கு துணை ஏக்கமும் ,மௌனமும் தான்.நன்றாக பழகிய தோழனிடம் காரணமே இல்லாமல் சண்டையிட்டு ,அவன் எண்ணை அழித்து விட்டும் அவன் நினைவை காதலுக்கு பரிசளித்து ,இப்பொழுதும் அதை சொல்லாமலே வலியோடு அவனோடு சிரித்து உரையாடும் அக்காவையும் எனக்கு தெரியும் .பிடித்தாலும்,விருப்பமிருந்தாலும் சரிப்பட்டு வராது என போலித்தேற்றலோடு கடக்கும் நண்பர்கள் நூறு பேர் இருப்பார்கள் .#சொல்லாத காதல்கள் சொர்க்கத்தில்
சின்ன சைக்கிளை உருட்டிக்கொண்டு போகும் அந்த பேராசிரியர் ,கிருஸ்துவ பாதிரியார் அவர் பின்னே ஒரு ரெண்டு நாயாவது தினமும் ஓடும் .அவைகளுக்கு அனுதினமும் உணவிடும் அம்மைஅப்பன் அவர் .மாறாத சிரிப்போடு நிற்கும் அவர் அதிர்ந்துக்கூட பேச மாட்டார் . தனக்கு தெரிந்த மாணவர்களை அன்போடு அழைத்து இரண்டு நிமிடமாவது பேசி விட்டுப்போகும் புண்ணியவான் அவர் .ஷோ மீ யுவர் ஹான்ட் என்று கையில் செல்லமாக கையால் அவர் அடிக்கும் பொழுதுஎந்த கவலை இருந்தாலும் பறந்து விடும் .மனிதர் அப்துல் கலாமிடம் முதன்முதலில் ஆய்வு பட்டம் பெற்றவர் அவர் .ஒரு நாள் அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தான் தெரிந்தது .அவருக்கு இன்னுமொரு முகம் இருந்தது ;தான் சம்பளத்தில் பெரும் பகுதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிடும் வித்தியசமானவர் ,அவருடன் ஒரு நாள் பேசும் பொழுது தான் தெரிந்தது ,அவருக்கும் காதல் இருந்தது “எனக்கு கல்யாணம் ஆகி இருந்தது …அவள் ஒரு தேவதை …குழந்தைகள் என்றால் அவளுக்கு மிகவும் விருப்பம்,கர்த்தர் அவளை கூட்டிக்கொண்டார் .ஆனாலும் அவளின் ஆசை முடிந்தவரை குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்பதே .கடவுள் கூட காதலிக்க தான் சொல்கிறார் !அதனால் ஒரு முறையாவது காதலித்து பாரேன் !”என்ற பொழுது காதலுக்கு மற்றுமொரு முறை வணக்கம் சொன்னேன் #காதலித்தால் கண்ணீரும் சேவையாகும்
காதல் கரடுமுரடானவர்களுக்குள்ளும் தன் தொய்ந்து போய் இருக்கிறது .அவர் எங்கள் ஊரின் பெரிய மனிதர் …அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வேண்டிய அவசியமே இல்லை …அந்த அறுபது கிராம் மீசையே போதும்…”டேய் ëனா அவர் செருமினால் பலபேருக்கு ஏதேதோ கழண்டு இருக்கும்,மனிதர் வண்டியில் ஒரு ரவுண்டு போனார் என்றாலே பல இளவட்டங்களுக்கு உதறிப்போகும் .அப்படி பட்டவரின் உறவுக்காரன் காதலித்தான்…இவரின் எதிர்வினை எப்படி இருக்கும் என எல்லோரும் பயந்தோம் –அவரின் காதுக்கு விஷயம் போனது -அவனின் கூட்டாளிகள் எல்லாரையம் கூப்பிட்டு அனுப்பினார்,”ஏன்டா காதலிக்கிறியா?யோக்கியமா பாத்துப்பியா?களவாணி காலாலே வட்டம் போடுறான் பாரு…முதல்ல படிச்சு முடி !பொறவு பாத்துக்கலாம் !” என அவர் சொன்னபொழுது எங்களுக்கு செமையான அதிர்ச்சி .அப்பொழுது தான் அங்கிருந்த கிழவி சொன்னது ,”டேய் அவனும் காதலிச்சான் டா…ஊரே கண்ணு வைக்கிற காதல் …அவ்வளவு பதவிசா பொன்னை பாத்துக்கிட்டான்….ஏதோ பொறுக்கலை அவளை கொள்ளை நோய் கொண்டு போய்டுச்சு …பாவிப்பய அதிலிருந்து இன்னைய வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கலையே …எவனாச்சும் காதல்னு வந்து நின்னா முதல கெளம்புற புல்லட் அவனுது தான் ….கோவக்காரன் அவன் …இப்பலாம் அவன் கோவமே படறது இல்ல …அப்படி பட்ட அந்த கண்ணிலாத கடவுளை பாத்து தான் படணும் ..என்னத்த சொல்ல ! ” என சொல்லிக்கொண்டே இருக்கும் பொழுதே “போலீஸ் காரங்க கூப்பிடறாங்க, எல்லாம் நமக்கு கைகூடாத விஷயம் தான்” என அவர் சொன்னபொழுது கலங்கி விட்டோம் நாங்கள் கல்லுக்குள்ளும் கள்ளிப்பூ…வேறென்ன சொல்ல ?
காதல் கரடும்,கசடும் மிகுந்த வாழ்வில் கூட கனிவையும்,கவலையையும் ஒருங்கே பொதிந்து விட்டு பயணிக்கிறது !வாழ்நாள் முழுக்க மண்,போர் என வாழ்ந்த நெப்போலியன் மற்றும் ஹிட்லரின் காதல் கடிதங்கள் எல்லாமே தனிக்காவியம் !காரல் மார்க்சை காத்தது ஜெனியின் அளவில்லாத காதல் தான் !பிள்ளைக்கு பால் வாங்க காசில்லாத பொழுதும் கணவன் ஜீவிக்க சுருட்டு வாங்குவதை நிறுத்தாத மகா மனுஷி அவள் !பெனிடோ முசொலினியை காதலித்து நடுவில் ஓடாமல் இறுதியில் அவன் முன்னே தன்னை துப்பாக்கிகளுக்கு கொடுக்க துணிந்த க்ளாரட்டா பெடாக்கி காதலின் அதீத சொரூபம் !காப்ரியல் நூற்றாண்டு காலத்தனிமை எழுதிய காலமெல்லாம் அவருக்கு அளவில்லா தனிமையை பரிசளித்த அவரின் மனைவி தான் உன்னதமானவள்.இதில் ஆணாதிக்கம்,அடக்குமுறை,கம்யூனிசம்,மன்னராட்சி எதுவும் பிரித்தெடுக்க முடியாத ஒரு உணர்வாக காதல் கசிந்து பாய்ந்து இருக்கிறது ;இன்னமும் பூக்களின் கருக்கலுக்கு பின்னும் சொட்டும் துளித்தேன் போல சுயநல வாழ்விலும் ஆங்காங்கு இனிக்கிறது !நின்று ருசித்து தான் பாருங்களேன் !
இனிமையான பொழுதுகளால் ததும்பி வழிகிறது காதல் ;தெருவோர நிழல் மரங்களின் அடியில் சொன்ன காதல்கள் நெஞ்சை நிறைக்கட்டும்.கிணற்று முறறங்களிலும்,பாதையோர நடைகளிலும்,ஆற்றின் கரைகளிலும் உறைந்து போன தேவதைகளின் கொலுசு சத்தங்கள் ஜதியாக சிலிர்க்க வைக்கின்றனவா ?கண்ணை மூடினால் இல்லாத ஏதோ ஒன்று உள்ளதை கணக்கா வைக்கின்றதா?திருப்பும் எழுத்துக்கள் நிறைந்த தாட்கள் வெறுமையாகவும் ,வெறுமையான வானம் முழுமையாகவும் தோன்றுகிறதா ?அழாமல்,பதறாமல்,கதறாமல்,மிரட்டாமல் கண் சிமிட்டலில் மரண தண்டனை விதிக்கும் காதலுக்கு ஆதரவாக தான் நீதிபதிகள் செயல்படுகிறார்கள் !கொஞ்சம் பின்னோக்கி போங்கள்,,,காதலித்த தேவதைகளுக்கும்,அழுக்கன்களுக்கும் மனதார நன்றி சொல்லுங்கள் .தள்ளி நின்று இன்னமும் ஒற்றை ரோஜாவோடு காதல் காத்து இருப்பதாக சொல்லுங்கள் !காதலித்துக்கொண்டே இருங்கள்
