நெரூடா,மார்க்ஸ்,எட்வர்ட்,எட்டாம் தெரு காதல்


காதலில் மிதந்து நனைபவர்கள் ,காதலை சொல்ல முடியாமல் தேக்கி கொண்டவர்கள்,காதலை சொல்லி கடி வாங்கியவர்கள்,காதலி கைக்கூடியும் காதல் கைக்கூடாமல் போன கதையின் நாயகர்கள்,காதலை கொலைவெறியோடு எதிர்ப்பவர்கள் என பூமியின் சகல  நபர்களுக்கும் காதலோடு ஒரு  தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது.எத்தனை சினிமா எடுத்து பழதாக்க பார்த்தாலும் காதல் புதிதாகத்தான் இருக்கிறது ;இன்னமும் சொல்வதென்றால் புதிராகவும் தான் .

 

எங்க ஊரில் ஏன் எல்லா ஊரிலும் ஒரு பழமொழி சொல்வார்கள் -களவும் கற்றுமற .அது திருடுவதை  குறிக்கிறது அப்படின்னு  யாரவது சொன்னால்   நம்பாதீர்கள் .காதலை ஊருக்கு தெரியாமல் ஒரு த்ரில்லோடு  பண்ண வேண்டும் என நம்மவர்கள் சொல்லித்தந்து போன ரகசியம் அது .யோசித்து பாருங்களேன் – சொல்லாத சொல்லாத உங்கள் மனசுக்கு  நெருக்கமான எத்தனை உணர்வுகளை காதல்  பதிந்து விட்டு போயிருக்கிறது ? நம்மை சத்தமே இல்லாமல் ஆக்கிரமித்துக்கொள்ளும் அதன் அடாவடிக்கு அவ்வளவு ஆனந்தமாக ஒப்புதல் தருகிறோம் நாம் ?

 

உலகின் எத்தனையோ உன்னதங்களை காதல் தான் தந்திருக்கிறது ;காரல்  மார்க்ஸ் எனும் எளிய ஏழை மீது எல்லையில்லா காதல் கொண்ட  அரசகுல மாது ஜென்னி    பால் வாங்க காசில்லாத   தருணத்தில் கூட  சுருட்டு வாங்கித்தந்து அவரை காப்பாற்றியதன் முடிவான  விளைவே மலதனம் .அரசன் பதவி துறந்து எளிய மனிதனாக நடைபோட்ட கதை காதல் தந்தது தான் .    எட்டாம்  எட்வர்ட் அந்த மன்னர் .கொஞ்சம் நிதானித்து பார்த்தால் ஏதோ ஒரு மாற்றத்தை காதல் பதித்துவிட்டு போயிருக்கிறது .எத்தனை பேர் அவரின் காதலின் நினைவுகளை ரகசியமாக தேக்கி வைத்து அவஸ்தைப்படுகிறார்கள் .எங்கோ ஒரு தருணத்தில் மீண்டும் காதலித்த பொழுதுகள் எட்டிப்பார்க்கிற பொழுது வெயில் பெய்த வெப்பமழையில் நனைந்த இளவயது பொழுதை போல சொல்ல முடியாத ஒரு உணர்வில் நனைந்து துவட்ட மனமில்லாமல் அப்படியே கிடக்க நினைக்கிற பொழுது நிஜம் கொஞ்சம் பின்னந்தலையில் படார் என்று அடிக்கிறது 

 

காதல் என்பது ஒரு முறை என்பதும்.ஒரே ஒருவரிடம் என்பதும் இன்றைக்கு அவுட் டேட்டட் என பலர் கருதுகிறார்கள் .ஒரு காதலுக்கு ஒரு சமயத்தில் உண்மையாக இருத்தல் தான் உன்னதம் .காதல் கைகூடா விட்டால் ,கூடிய வாழ்க்கையில் ஜாலியாக கரம் கோர்த்து பரவசமடைய தயாராகும் பாக்கியவான்களே நிஜ காதலர்கள் .உருகி துன்பத்தில் அப்படியே புரண்டு எழுந்தால் அழகாக காதல் மீண்டும் வந்து உங்கள் அழுத நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளுமா ?நிதர்சனங்களை சந்திக்க திராணி உள்ளவர்களே காதலிக்க உகந்தவர்கள் .

 

ஓஷோவிடம் கடவுள் எங்கிருக்கிறார் என கேட்டார்கள் ,”வாழ்க்கை எங்கெல்லாம் கொண்டாடப்படுகிறதோ அங்கெல்லாம் கடவுள் நிறைந்து இருக்கிறார் !”என்றார் .எந்த போலித்தனமும் இல்லாமல் காதல் தான்  தன் பொழுதுகளை கொண்டாடுகிறது .கெட்டித்து போன நெஞ்சங்கள் என நாம் நினைக்கும் யாவருக்குள்ளும் மென்மையான காதல் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறது ;,”இவர்கள் இப்படித்தான் !”என பிம்பங்கள் குத்தி குத்தி எத்தனை காதல்களை தொண்டைக்குழிக்குள் சூழல் கத்தி சொருகி கொல்கிறது சுற்றுப்புறம் என எண்ணுகிற பொழுது இந்த படுகொலைகளுக்கு ஏன் இபிகோ இல்லை என்றே மனசு படபடக்கிறது .

 

வேகமாக ரேசர் பைக்கில் போகும் இடத்தில இருந்து நடை பாதையில் கரம் கோர்த்து சுற்றும் இடங்களில் எல்லாமும் காதல் விரவிக்கிடக்கிறது .கொஞ்சம் நில்லுங்க ;காதல் கல்யாணத்துக்கு முன் ஏன் சுகமாக இருக்கிறது ?மற்றவரின் கருத்தை எண்ணவோட்டத்தை மதித்து விட்டுக்கொடுக்கிற ஒரு விஷயம் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது .அடைந்த பின்பு அதனருமை அவ்வளவே என ஏன் ஆகிப்போகிறோம் நாம் ?கச்சிதமான காதலராக இருப்பதற்கு வயது தடையே இல்லை .மனசு தான் காரணம் .ஏன் சினிமாக்கள் எண்பது வயதில் ரோஜாப்பூ தரும் அழகான பெரியோர் காதலை காட்டுவதில்லை .சண்டைகளால் நிரம்பியது வாழ்க்கை என்கிற மனோபாவம் ஏன் நமக்குள் விளைந்தது ?கனமாகத்தான் இருக்கிறது -நிச்சயம் காதல் அப்படி செய்ய சொல்லித்தரவில்லை .நமக்குள் தான் கோளாறு .

 

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும்,சாலை ஓரத்திலும் காதலின் அடையாளங்களை கடந்து செல்கிறோம் .நம்மில் இருந்த காதலை தொலைத்து விட்டோம் என என்றைக்காவது பதறி இருக்கிறீர்களா ?பதறுங்கள் பாஸ் .காதலிப்பது உடம்புக்கு ரொம்ப நல்லது .காதலை ப்ரியம் என்றும் சொல்லலாம் .பிரியங்களை எதோ சேட்டிடம் அடமானம் வைத்து விட்டோமில்லையா நாமெல்லாம் ?காதலர் தினத்தன்று குறுஞ்செய்தி அனுப்பும் நீங்கள் என்றைக்காவது கடிதத்தில் காதலை கொட்டி இருக்கிறீர்களா ?கொட்டி பாருங்கள் -அற்புதமாக இருக்கும் .மகாகவி பைரன் எம்மாவுக்குபோஸ்ட் செய்யாமலே விட்ட கடிதங்களுக்கும் நீங்கள் சொல்ல நினைத்ததை எழுதாத கடிதத்துக்கும் என்ன வித்தியாசம் ?உங்கள் மனைவியை /கணவரை மனசார காதலியுங்கள் ;இருப்பதை,நினைப்பதை  சொல்லுங்கள்.  

 

பேனாவை எடுங்கள் ;முதல் சந்திப்பை பற்றி நினைவு கூறுங்கள் -எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறேன் என உருகுங்கள் .எல்லா தவறும் உங்கள் மேலேயே என பழி போட்டுக்கொள்ள முடியமென்றால் செய்யுங்கள் ,கொஞ்சமாக அன்பை,கண்ணீரை,முத்தத்தை,அற்புதமான ஊடல்களை பேனா மையில் கரைத்து கொட்டுங்கள் .அடடா இதைவிட உயர்ந்த பரிசு வேறென்ன இருக்க முடியும் உங்கள் பிரியமான உறவுக்கு ?

 

காதலின் காலடிகள் பதித்து விட்டுப்போன தடத்தில் நடக்கும் குழந்தைகள் தான் எல்லாரும் ;வாழ்க்கையின் வேக ஓட்டத்தில் குழந்தைமையை தொலைத்து எதிலோ நிலைத்து நின்று விடுகிறோம் .காதல் .காற்றில் ஒலிக்கும் எதோ ஒரு பழைய பாடல் கரைவது போல துன்பியலான உணர்வுகளை கரைய விடுங்கள் ;ஜிலீர் என்று காதலை மீண்டும் வரவேற்கலாம் .எந்த வயசிலும் உங்களுக்கானவரை காதலிக்கலாம் .நெருடாவின் கவிதை ஒன்றோடு முடித்தால் உசிதம் என விண்ணப்பம் போடுகிறது காதல் :

 

 

நிழலுக்கும் ஆன்மாவுக்கும் 

இடையே ரகசியமாக உன்னை 

இருட்டின் சங்கதிகளை 

விரும்புதல் போல உன்னை காதலிக்கிறேன் 

பூவாத மலரை நேசிப்பதை போல 

உன் மீது ப்ரியம் கொள்கிறேன் 

மலராத மலரின் கசியாத வெளிச்சமாகிய உன் பிரியத்தை  சேமிக்கிறேன் 

சிக்கல்களோ பெருமையோ இல்லாமல் உன்னை காதலிக்கிறேன் 

உன்னையன்றி வேறெதையும் எனக்கு காதலிக்க வழி புலப்படவில்லை 

என் இதயத்தின் மீது நீ வைக்கும் உன் கரமே என் கரம் 

நீ கண்மூடினால் நான் யாவையும் மறந்து சொக்கிப்போவேன் 

 

காதற்பதினான்கு


சண்டைக்கும் சமரசத்துக்கும் 
இடையே காற்புள்ளி 
காதற்சொல் 

ஊடலும் ,முயங்குதலும் 
உருள்திரள் மாயம் 
காதற்காமம் 

கிடைத்தும் கிட்டாமல் 
கிட்டியும் எட்டாமல் 
எட்டியும் ஒட்டாமல் 
காதலாட்டம்
♥ 

பகலின் நிலாமலரலும் 
இரவின் சூரியச்சிதறலும் 
வழிந்தோடும் காதல்வான் 

கலங்கலும் துலங்கலும் 
மண்டியிடலும்,மலர்ச்சிதறலும் 
காதற்பண்பு 

சொட்டிடும் ஏகாந்தச்சாரல்
வெற்றிட மகரந்த வானவில் 
காதல்மழை 

கடகட ஓசையும் ,ரீங்கார கீதமும் 
முதற்சுருதியும்,கடைத்தாளமும் 
காதலிசை 

கண்ணீர்வழி பாதையும்,முறுவல் ஓய்வும் 
பிரிவு முற்களும்,பரிவோம்பலும் 
காதற்பயணம் 

இதய உயிர்த்தலும்,அறிவு மறித்தலும் 
தழுவல் உதிரமும்\,பந்த நரம்பும் 
காதல் மருத்துவம் 

மழலைச்சொல்லும்,தவழ்மொழியும் 
அடர்சுவையும்,திடப்பிணைப்பும்
காதற்குழந்தை 


குறைகடத்தலும்,அணு முத்தமும் 
அயனி இணைப்பும்,காந்தப்பிரிவும் 
காதல் மின்சாரம் 

சொல்லாத சொற்களும்,முடியாத மொழிகளும்
கேளாத பிரியம்,உலராத உணர்மை
காதற்கடிதம் 

நெருக்கவிலகல் ,பிரிவு நெருக்கம் 
பருகுதாகம்,விடுதலைச்சிறைப்படலம் 
காதற்சிறப்பு 

சாதச்சிரிப்பும் ,சுடுநீர் பிணக்கும் ,
அவியல் முறைப்பும் ,அடிசில் இணக்கமும் 
காதற்சமையல் 


கண்ணாடிச்சரவிளக்கு ஒன்று 
பிரியம் பூண்டு நடக்கையில் 
ஊஞ்சல் மரங்கள் கண்முன் 
பின்னோய்ந்து சிரித்தன 
தாள்தடவி மைகள் காற்றெங்கும் 
நீர்படர்ந்த எதிர்வீட்டு அம்முவின் கூந்தலாகின 
குழந்தைகளின் முத்தங்கள் மோதிமோதி
விளக்கை இடித்தன 
கொஞ்சம் விரிசல் 
கால்சட்டை தேவர்கள் 
சிறுநீர் மழையில்
அவ்விரிசல் அடைத்து அழுதார்கள் 
கொலைகாரனின் குருதி தோய்ந்த 
தும்பைப்பூ காய்ந்து கட்டிக்கொள்கிறது விளக்கை 
திரியோ நழுவி 
மண்புழு போல ஊர்ந்து போகிறது 
வயற்காடெங்கும் 
தடியோடு வருகிறார்கள் புனிதர்கள் 
உதிர்ந்த கண்ணாடித்துகள்கள்,
காற்றோடு இணைகிறது 
கால் மிதிப்பில் தும்பைப்பூ துளிகள் ,
அவலநெருப்பை புணர்கிறது திரி
கண்ணாடித்தும்பை காதல் ,,,
சீழ்வடியும் வானின் இடுக்குகள் எல்லாம் 
இன்னமும் தும்பையின் பிரிவும் 
கண்ணாடியின் சிமிட்டலும் …
தடிகள் வீசி ஓய்கிறார்கள் பெரியவர்கள் 
உரசிக்கொள்கின்றன தடிகள் 
நெடுங்குருதியாக ஓடுகிறது காதல் 
முடியாத ஓலம் அது


கிழிந்த பக்கங்களை 
அப்படியே வைத்து வாசித்து கொண்டிருக்கிறேன்
அறுந்து போன கயிறோடு 
ஊஞ்சலில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறேன்
பெயர்ந்துபோன பொழுதுகளை நிரந்தரமானவை என கூவிக்கொண்டிருக்கிறேன்
மீந்துபோன மவுனத்தொடு 
உரையாடல் நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன்
தூர்ந்துபோன மண்ணோடு நெகிழி கொண்டு
வன்முறை செய்கிறேன்
பூக்களுக்கு குண்டுகளின் மூலம் உரமிடுகிறேன்
பாருங்கள் தேசியம்,இறையாண்மை,ஜனநாயகம் எல்லாம் எளியவனுக்கு
நீதிதரும் என ஓயாமல் முணுமுணுக்கிறேன்
எல்லாம் நடக்கும்…காலம் கைகொட்டி சிரிக்கும்

நீச்சல் சுனாமி ஐஸ்வர்யா !


ஆறாம் வகுப்பில் ஸ்டேட்… பத்தாம் வகுப்பில் நேஷனல்…

 

 
 
 
 

”எத்தனை வெற்றிகளைச் சந்தித்தாலும், ‘சென்ற முறை எடுத்துக்கொண்ட நேரத்தைவிட குறைவான நேரம் எடுக்க வேண்டும்’ என்பது மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் நான் எடுக்கும் உறுதிமொழி!”

– அத்தனை வேகமாக நீரில் நீந்தி எழுந்து வரும் ஐஸ்வர்யா, ஜில்லெனப் பேசினார். சென்னை,  அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் இவர், சர்வதேச அளவில் கலக்கிக் கொண்டிருக்கும் நீச்சல் சுனாமி!

”என் அப்பா, பிரபலமான நீச்சல் பயிற்சியாளர் சந்திரசேகர். அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் கோச். அவரிடம் நீச்சல் பயின்ற மீன்குஞ்சு நான். முதன் முதலில் நீந்த ஆரம்பித்தபோது எனக்கு வயது நான்கு. அந்த வயதில் நான் நீச்சல் போட்டியில் வென்ற தங்கம், மறக்கவே முடியாத முதல் வெற்றியின் ருசி. ஆனால், அதற்குப் பின் என் அப்பா, ‘இனி போட்டிகள் வேண்டாம். நன்றாகப் பயிற்சி எடு’ என்றார். ஃப்ரீ ஸ்டைல், பட்டர்ஃப்ளை, பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக் என நீச்சலில் நான்கு பிரிவுகள் உண்டு. நான் பேக் ஸ்ட்ரோக்கை என் பிரிவாக தேர்வு செய்தேன். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நீருக்குள்ளேயே கழித்து கடுமையான பயிற்சிகள் எடுத்தேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் போட்டியில் கலந்து கொண்டபோது, நான் ஆறாம் வகுப்பு மாணவி. மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தேன்.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது நான் வாங்கிய பரிசுகள், என் வாழ்வின் பெரிய ஏணி. பேக் ஸ்ட்ரோக்கில் ஒரே சமயத்தில் மூன்று தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை மாநில அளவில் ஜெயித்து தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றேன். அங்கு நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பினேன். அந்த வெற்றியின் விளைவாக சென்னையில் இருந்து முதல் முறையாக இந்தியாவின் சார்பாக தெற்காசிய விளையாட்டுகளுக்கு தேர்வு ஆனேன். ஆனால், போட்டிக்கு முன்பாக முட்டிக்காலில் சுளுக்கு ஏற்பட, தவித்துப் போனேன். நீச்சலில் முக்கியமான விஷயம் ‘கிக்’தான். ஆனால், ‘அதை செய்யக்கூடாது’ என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இன்னும் பத்து நாட்களில் தெற்காசியப் போட்டிகள் காத்திருந்தன. என் வாழ்வின் கனவு அது. வலித்தால் தாங்கிக் கொள்வோம் என முடிவெடுத்து, பேக் ஸ்ட்ரோக்கில் ஐம்பது மீட்டர் போட்டியில் கலந்து கொண்டேன்.

பாகிஸ்தானில் நடந்த அந்தப் போட்டிக்கு அப்பா அவர் பணிகளின் காரணமாக என்னுடன் வர இயலவில்லை. அது எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் எதையெல்லாம் செய்யக் கூடாது என அவர் சொல்கிற தொனியில் அழுத்தம் அடைவதாக நான் நினைத் திருந்ததே அதற்குக் காரணம். ஆனால், போட்டி துவங்க சில மணி நேரம் இருக்கும்போதுதான், அப்பா உடன் இல்லாதது எவ்வளவு சோர்வாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கண்ணீர் வழிய அவரிடம் தொலைபேசியில் பேசிவிட்டு போட்டிக்குச் சென்றேன். வெள்ளி வென்றேன். பரிசோடு வந்து அப்பாவை கட்டிக்கொண்டு, ‘நீங்க கூட இருந்திருந்தா தங்கம் அடிச்சிருப்பேன்னு தோணுதுப்பா’ என்று அழுதபோது, அப்பாவுக்கு நான் வென்ற பரிசுகளையெல்லாம் விட அந்த வார்த்தைகள் சந்தோஷம் தந்தன. என்னை இன்னும் மெருகேற்றினார். அந்த வருடம் மட்டும் மாநில அளவில் 15 ரெக்கார்டுகள் செய்தேன்.

இந்த வெற்றிகளுக்கு இடையே ஒரு சிக்கல். நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பள்ளியில், ‘அஞ்சு மாசத்துக்கு மேல அட்டெண்டன்ஸ் போயிடுச்சு. அதனால எக்ஸாம் எழுத வேண்டாம். அல்லது, நீச்சலை விட்டுட்டு ஸ்கூலுக்கு ரெகுலரா வரணும்’ என்று கட்டுப்பாடு விதித்தனர்.

ஆனால்… ‘உன்னால நீச்சலை விடாமலும் படிக்க முடியும் ஐஸ்!’ என்றார் அம்மா.

நம்புவீர்களா..? பத்தே நாள் தேர்வுக்குப் படித்துப் பொதுத்தேர்வில் 80% மேல் மார்க் வாங்கினேன். ப்ளஸ் ஒன்-ல் ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் சேர்ந்தபோது, அவர்கள் தந்த ஊக்கம் மற்றும் எடுத்துக் கொண்ட பயிற்சியால் ஓபன் கேட்டகரியில் பெரிய சீனியர்களை எல்லாம் ஜெயித்து, தமிழக அளவில் முதல் ரேங்க் பெற்றேன். அதே வருடம் ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை தேசிய ஜூனியர் போட்டிகளிலும் அடித்தேன். அந்த வெற்றிகள் எல்லாம்தான் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இரண்டாம் இடத்தை எனக்குப் பெற்றுத் தந்து, நான் விரும்பிய ஸீட் கிடைக்கச் செய்தது.  

இதுவரை 500 பதக்கங்களுக்கு மேல் ஜெயித்து இருக்கிறேன். இன்னமும் டூ மினிட்ஸ குறைச்சுட்டா… ஒலிம்பிக்ல விளையாடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சுடும். அது விரைவில் நடக்கும்!”

– துள்ளலோடு முடிக்கிறார் தண்ணீரின் தேவதை!


நெருங்கிய பிணைப்புகளின்
இடைவெளியில் கொஞ்சமாக தெரிகிறது மெல்லிய பிளவுகள் 
நுழைந்து துளைக்கும் 
மவுனத்தின் முனையில் சொட்டுகிறது இசைத்துளி 
நிராகரிப்பின் அடைப்புகளின் 
ஊடே எட்டிப்பார்க்கிறது 
ஆதரவுக்கான கரங்கள் 
பொய்மைகளின் கால்நசுக்கலில் கதறிப்பொழிகிறது 
உண்மை உதிரம் 
தெருவோரம் மரித்துக்கிடக்கும் காக்கையை 
காணாது கடக்கும் ஆயிரம் கண்கள் போல பாய்கிற 
பொழுதுகளில் எங்கேனும் 
சிலத்துளி தேவதைப்பார்வை
கவனிப்பதற்குள் ஒட்டிக்கொண்டிடும் 
மழலைத்தெருவின் மழைக்கம்பி பொழுதுகள் 
அரை நொடி முத்தம்,
கணச்சிணுங்கல்,
முடிப்பதற்குள் முந்திவிடுகிற முறுவல்கள் 
முடிவில்லா இருட்டில் ஒளிக்கற்றைகளை பிரசவிக்கும் 
தெருவோர விளக்கு போல நிகழ்த்துகின்றன வாழ்வை


ஒளிரும் குட்டிநாயும்,ஒற்றைச்சிறுவனும் 

நீர்க்கோப்பையில் நஞ்சை நிரப்பி 
கொஞ்சம் சொற்களை பரப்பி 
மவுனப்படுக்கையை விரித்து 
வன்மச்செடியை நடவெண்ணி 
நைந்த விதையை புதைக்கிறான் ஒருவன் 

கனிந்த சிரிப்போடு குழந்தைப் போட்டுடைக்கிறது அதை 
பாய்ந்தோடி பாதரசமணி போல 
உருளும் அதனில் புரள்கிறது குட்டிநாய் 
அதன் ரோமங்களனைத்தும் பூரித்து 
ஒளிர்கின்றன 

சிதறிய நஞ்சை தேடித்தேடி தவழ்கிறான் 
உதிர்ந்துபோனவன் 
ஒளிரும் குட்டிநாயும்,ஒற்றைச்சிறுவனும் 
எங்கோ சிரிக்கிறார்கள் 
அவை மின்னிமின்னி 
கசடால் உலர்ந்த சாலையை நிறைக்கின்றன


மதங்களின் தெருவில் 
பயணம்போக ஆசை 

காவியங்கள் வார்ப்பதாக 
சொல்லி எழுத்தாணியை 
முறித்து போட்டார்கள் 

நீதி தருகிறேன் எனச்சொல்லி
தர்மதேவதையின் 
கண்கள் மவுனமாக 
பிடுங்கப்படுகின்றன 

புனிதம் வடிக்கிறேன் 
என வாக்குறுதிகள் தந்தபடி 
உளியால் அன்பின் 
குரல்வளையை செதுக்கி 
தள்ளுகிறார்கள் 

தெருவெங்கும் கிழிந்து தொங்குகிறது 
கடவுளின் வாசகங்கள்
அங்கங்கே மதத்தை 
காக்கிறேன் என 
தேவதூதன் முகமூடி 
நெய்து சிரிக்கிறான் சாத்தான் 

சொர்க்கத்தின் பத்திரத்தை தருவதாக 
கைநாட்டு கேட்டு 
நரகத்தின் நடுப்புறத்தில்
நிற்கவிட்டு போகிறார்கள் 
கேட்டால்
மதத்தின் தெரு இது தான் என்றார்கள் !