அனந்தரங்கம் பிள்ளை டைரியும்,தடதடக்கும் வரலாறும்


அனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள் நாட்குறிப்புகள் என்பவை கூட சுவையான ஒரு ஆவணமாக,வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான ஆவணமாக ஆகக்கூடும் என்பதை உறுதி செய்பவை. பிரெஞ்சுக்காரர்கள் புதுவையை ஆண்ட காலத்தில் இவரின் மாமா நைனியாப்பிள்ளை அவர்களிடம் துபாஷாக இருந்தார். பெரம்பலூரில் இவர் பிறந்தார். இவரின் அப்பாவை மாமா புதுச்சேரிக்கு அழைக்கவே குடும்பம் அங்கே பெயர்ந்தது. அங்கே சிறிய அளவில் ஆனந்தரங்கம் பிள்ளையின் அப்பா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நைனியா\ப்பிள்ளை அப்பொழுதைய கவர்னர் எபேருக்கு லஞ்சம் தர மறுத்து அவரை பதவி நீக்கம் செய்ய காரணமானார். கவர்னரின் மகன் இளைய எபேர் கவர்னரானதும் நைனியாப்பிள்ளை மீது பொய்யான குற்றச்சாட்டுகளை உள்ளாகி சவுக்கடி வழங்கப்பட்ட பொழுது அந்த அடி தாங்காமல் அங்கேயே இறந்து போனார். அவருக்கு நியாயம் தேடி அவரின் மகன் குருவப்பா பிரான்ஸ் தேசத்தில் அலைந்து நீதி பெற்றார்

. இந்தக்காலத்தில் அனந்தரங்கம் பிள்ளை பாக்கு வியாபாரத்தில் இருந்து தன்னுடைய தொழிலை விஸ்தரித்து கொண்டு போனார். சாராய ஆலை, நீலத்துணி ஏற்றுமதி என்று அவரின் தொழில்கள் நீண்டன. ஆனந்தப்புரவி என்கிற பெயரில் பெரிய கப்பலை சொந்தமாக வைத்து வியாபாரம் செய்கிற அளவுக்கு அவர் வளம் மிக்கவராக இருந்தார். இவருக்கு முன்னரே இவரின் மாமா குருவப்பா குறிப்புகள் எழுதி வைத்திருந்தாலும் அவை கிடைக்காமல் போனதால் இவரின் குறிப்புகளே பிரெஞ்சு ஆட்சியை அறிந்து கொள்ள பயன்படும் மிக முக்கிய குறிப்புகளாக திகழ்கின்றன. இருபத்தி ஐந்து ஆண்டுகள் எழுதப்பட்ட அந்த குறிப்புகளில் பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.

1743 ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை தன்னுடைய டைரியில் பதிவு செய்கிறார் பிள்ளை. இருண்ட அறைக்குள்,திடகாத்திரமான இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு மொட்டையடிக்கப்பட்ட அடிமை வேலை செய்வதற்காக மொரிஷியஸ்,பிரெஞ்சு கயானா முதலிய பகுதிகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டார்கள் என்று நேர்மையாக பதிகிறார்.

கடலோரம் போய் காலைக்கடன் போகக்கூடாது என்று கவர்னர் போட்ட உத்தரவு,எப்பொழுதும் மதுவுக்கு தடை என்பதையே அறியாத மிதத்தல் மாநிலமான புதுவையில் மராத்தியர் தாக்குதலின் பொழுது ஆறு மாதம் மட்டும் விதிக்கப்பட்ட மதுவிலக்கு,சாந்தா சாகிபுக்கு அடைக்கலம் தந்திருந்த கவர்னர் துய்மாவை மிரட்டி தூதுவரை அனுப்பி ஆறு கோடி கப்பம் கேட்ட மராத்திய தளபதி ரகுஜி நாற்பது பாட்டில் பிரெஞ்சு மதுவோடு காதலியின் மது மோகத்தால் சமாதானம் ஆகிக்கொண்ட கதை நம்ப முடியாததாக இருக்கலாம். துப்ளேக்ஸ் புதுவையை ஆண்ட காலத்தில் பிள்ளை தலைமை துபாஷ் ஆக இவரிடமே லஞ்சம் கேட்ட அவரின் மனைவி ழானின் ஊழல் முகம் என்று பலவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதே ழான் இடங்கை எனப்படும் இழிவாக நடத்தப்பட்ட மக்களுக்கு வலங்கை பிரிவினரின் பகுதிகளுக்குள் நுழைய வசதி ஏற்படுத்தி தந்ததும் பிள்ளையால் குறிக்கப்படுகிறது.

துப்ளே இவரையே தலைமை துபாஷாக நியமிக்கிறார். ஒரு துபாஷ் மக்கள் ஒழுங்காக வரி செலுத்துவதை கண்காணிப்பது,கவர்னருடன் அதிகாரப்பூர்வ தொடர்பு கொள்ளுதல்,கிரிமினல் வழக்குகளில் தீர்ப்புகளை தீர்மானிப்பதில் ஆலோசனை வழங்குதல் என்பன மாதிரியான முக்கியமான பணிகளை செய்து வந்தார். அப்பொழுது கூடலூர் எனப்படும் கடலூரை வெள்ளையருடன் ஏற்பட்ட போரில் உடனே கைப்பற்ற வேண்டும் என்று துப்ளே துடிக்க ,”காபி சாப்பிடுகிற இடைவெளியில் கைப்பற்றக்கூடிய அளவுக்கு எளிய இலக்கில்லை அது ! என்றாலும் அங்கே இருக்கும் புனித டேவிட் கோட்டையை கைப்பற்றினால் ஆங்கிலேயரின் கப்பல்கள் நிற்க துறைமுகம் இல்லாமல் செய்து விடலாம் ! ” என்று ஆலோசனை தருகிற அளவுக்கு அவர் அதிகாரத்தின் முக்கிய புள்ளியாக இருந்தார்.

பிரான்கோயிஸ் மார்ட்டின் எனும் கவர்னரின் காலத்தில் இருந்து வேதபுரீஸ்வரர் ஆலயத்தை சம்பக்கோயில் எனும் தேவாலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லை தரும் வகையில் பூஜைகளின் மூலம் சப்தம் எழுப்புகிறது என்று இடிக்க சொல்லி தொடர்ந்து பாதிரியார்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அதை துப்ளே
தன்னுடைய மனைவியின் மீதான ஈர்ப்பால் செய்து முடித்தார். இதுவும் இவரின் டைரிக்குறிப்புகளிலேயே காணக்கிடைக்கிறது.

1742-43 இல் சென்னையை பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி படைகள் கைப்பற்றிய பொழுது துப்ளே மகிழ்ச்சிப்பெருக்கில் துபாஷ் ஆன அனந்தரங்கம் பிள்ளையிடம் “என்ன வேண்டும் ?” என்று கேட்ட பொழுது “ஒரு காசுக்கு பன்னிரெண்டு வெற்றிலை கிடைத்தது. இப்பொழுது போர்க்காலம் என்பதால் ஆறு காசு,எட்டு காசு என்று வெற்றிலையின் விலை ஏறி மக்கள் துன்பப்படுகிறார்கள் ! குறைக்க முயலுங்கள் ” என்று கேட்கிறார். மீண்டும் இவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டதும் ,”இருவரை தவறாக கைது செய்திருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யலாம் கவர்னர் !” என்றே சொல்கிறார். அடுத்த முறை அழுத்தி கேட்டதும் ,”எல்லாம் வல்ல இறைவன் மற்றும் நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன குறை ?” என்று எந்த பரிசும் பெறாமல் விலகிக்கொண்டார் பிள்ளை.

இவரின் டைரி வெகுகாலம் கண்டுகொள்ளப்படாமல் இருந்து எண்பது வருட காலத்துக்கு பின்னர் பிரான்சில் பிரதி எடுத்தனர். அதன் பின்னர் ஆங்கிலேயரும் அதை மொழிபெயர்த்து வெளியிட்டனர். வ.வே.சு ஐயர் அவரின் டைரியின் சில பகுதிகளை 
சித்திரகுப்தனைப் போல ஒன்று விட்டிடாமல் குறித்து வைத்த புஸ்தகமே இப்பிரதாப தினசரியாகும்” என்று குறிப்பிட்டு வெளியிட்டார். தமிழ் மொழியில் பற்றுடையவராக திகழ்ந்து தமிழிலேயே கையெழுத்திட்ட பிள்ளை தன்னுடைய நாட்குறிப்புகளை பிரெஞ்சு,உருது மொழிகளை கலந்தே எழுதினார். அவரை இந்தியாவின் சாமுவேல் பெப்பீஸ் என்று அவரின் அற்புதமான நாட்குறிப்பு பதிவுகளுக்காக அழைக்கிறோம். அவரின் பிறந்தநாள் இன்று

(இந்தக்கட்டுரையின் பெரும்பாலான பகுதிகள் பிரபஞ்சன் அவர்களின் நாவல்களான மானுடம் வெல்லும்,வானம் வசப்படும் மற்றும் பல்வேறு கட்டுரைகளை படித்ததன் தாக்கத்தில் எழுதப்பட்டது. அவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் )

ரம்மியமான ராணி !


Queen The Film பார்த்தேன். திரையரங்குக்கு போய் பார்க்கும் முதல் இந்தி படம் என்பதால் சப் டைட்டிலோடு பார்க்க இன்றைக்கு போனேன். திடீரென்று காதலனின் முடிவால் நின்று போகிறது திருமணம். நாயகி ஹனிமூனுக்காக போகவேண்டிய இடங்களுக்கு தனியே போவதற்கு முடிவு செய்து கொண்டு கிளம்புகிறாள். சாலையைக்கூட ஒழுங்காக கடக்க தெரியாத,கட்டுப்பெட்டியாகவே இருந்து பழகிவிட்ட ராணி எனும் நாயகி பாரீஸ்,ஆம்ஸ்ட்ர்டாம் என்று நகரங்களில் சுற்றித்திரிகிற பொழுது அவள் விதவிதமான மனிதர்களை சந்திக்கிறாள். அவர்கள் தருகிற உணர்வுகள்,ஏற்படுகிற அனுபவங்கள்,உறவுகள் எல்லாமும் அவளை மாற்றிப்போடுகின்றன. இதுதான் கதையின் அவுட்லைன். 

விஜயலட்சுமி எனும் பாரீஸ் ஹோட்டலில் பணியாற்றும் பெண்ணுடன் தான் முதலில் ராணிக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அங்கே ஒரு பார்ட்டியில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்பட்டதும் அழுதும்,சிரித்தும் தன்னுடைய மனதில் இருக்கும் எல்லாவற்றையும் கொட்டுகிற காட்சி அத்தனை கனமானது. அப்பொழுது சிரித்தாலும் “எல்லாவற்றையும் மதித்து மதித்தே நான் பழக்கப்பட்டு விட்டேன் ! தெரியுமா உனக்கு !” என்று ராணி கேட்கிற தருணம் பல்வேறு இந்தியப்பெண்களின் குரலாகவே ஒலிக்கிறது. அப்பொழுது சோகத்தோடு ஆடி முடிக்கும் ராணி ஊர் சுற்றப்போகிற இடங்களிலும் கசந்த காதல் நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன. பாரீஸ் தோழியின் வாழ்க்கை முறை,அவளின் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வாழ்க்கை எல்லாமும் ராணியை கொஞ்சமாக இதப்படுத்துகின்றன. 

அங்கே இருந்து ஆம்ஸ்ட்ர்டாம் நகருக்கு போகிற ராணிக்கு மூன்று ஆண்கள் தங்கியிருக்கிற அறையில் தான் இடம் கிடைக்கிறது. முதல் நாள் வெளியே படுத்திருந்தாலும் அதற்கு பின்னர் நட்பான அவர்களோடு நெருங்கி விடுகிறாள். ஜப்பானிய டாக்காவும்,ரஷ்ய ஒலேக்சாண்டரும் அடித்துக்கொண்டு ஓடும் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் சிரிப்பு நமக்கும்,ராணிக்கும் கூட ஒட்டிக்கொள்கிறது. அந்த டாக்காவுக்குள் இருக்கும் சோகம் பின்னர் தெரிகிற பொழுது அவனை கட்டியணைத்து தேறுதல் சொல்லும் காட்சியில் பெண்ணின் அணைப்பு என்றால் காமம் மட்டுமே என்று எண்ணுபவர்கள் நிச்சயம் தங்களின் பார்வையை மாற்றிக்கொள்வார்கள். 

இத்தாலிய உணவுக்காரரின் உணவு பிடிக்கவில்லை என்று நேராக ராணி சொன்னதும் அவர் பணத்தை திருப்பித்தந்த பின்னர் சில கணங்களில் சந்திக்கிறார்கள். அவர் மீது சின்னதாக ஒரு க்ரஷ் உண்டாகிறது ராணிக்கு. அதன் இறுதித்தருணத்தில் என்ன நடந்தது என்பது மென்மையான ஹைக்கூ. அவள் கலந்து கொள்ளும் சமையல் போட்டியில் அவளின் பானி பூரி உண்டாகும் ரணகளங்களும் ரசிக்க வைக்கின்றன. அதற்கு பின்னர் காதலன் தேடிக்கொண்டு அங்கேயே வந்து சேர்கிறான். அவனை அனுப்பிவிட்டு மூன்று ஆண் நண்பர்களுடனான ராக் ஷோவை முடித்துவிட்டு எந்த கனமும் இல்லாமல் வாய்விட்டு ஆட்டம் போட்டு விடைபெறும் ராணி ஊர் திரும்புகிறாள். 

பெண்கள் சமைத்து விட்டு,சீரியல் பார்த்துவிட்டு,கிசுகிசு பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்கிற பார்வை அவள் மீது மீண்டும் திணிக்கப்பட முயற்சி நடக்கிற பொழுது மோதிரத்தை கழட்டி காதலனின் கையில் கொடுத்துவிட்டு ஒரு மெல்லிய அணைப்பு மற்றும் புன்னகையோடு நன்றி மற்றும் ஸாரி சொல்லி இயல்பாக ராணி விடை பெற்றுவிட்டு வருகிற பொழுது கண்கள் நனைந்து போகிறது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். இதைப்பார்த்த பின்னர் பெண்களின் உலகைப்பற்றிய பார்வை ஓரளவுக்காவது மாறும். (படத்தில் சிற்சில குறைகளும் உண்டு ! ஆனாலும்,அதை எழுத விருப்பமில்லை ).

 
 

வான் தொட்ட யூரி காகரின்


யூரி ககாரின் (Yuri Gagarin) ரஷ்யா நாட்டுச் சிறுவன். ரஷ்ய மொழியில் ககாரின் என்றால், காட்டு வாத்து என்றொரு அர்த்தம் உண்டு. ஆனால், பிற்காலத்தில் ‘வான் கழுகு’ எனத் தான் போற்றப்படுவோம் என்பது அந்தச் சிறுவனுக்குத் தெரியாது.

ககாரின் அப்பாவுக்கு, தச்சு வேலை. உலகப் போர் சமயத்தில், ககாரினுடைய ஊர் முழுக்க ஹிட்லரின் படையால் துவம்சம் ஆனது. அப்பா, ராணுவத்துக்குச் சென்றார். ஊரே பயத்தில் இருக்க, குட்டிப் பையன் ககாரினோ, பறக்கும் பலவகை விமானங்களைப் பார்த்து, கண்கள் விரியச் சிரித்தான். ”நானும் இதைப்போல பறக்க வேண்டும்” என்று அம்மாவிடம் சொன்னான்.

அந்தச் சமயத்தில், பக்கத்து ஊரில் நடந்த விமான சாகசக் கண்காட்சியைக் கண்டான். அம்மாவிடம் அடம்பிடித்து, ஏரோ கிளப்பில் சேர்ந்தான். காற்றில் மிதந்தபோது, ”இதுதான் நம் வாழ்க்கை” என முடிவு செய்துகொண்டான்.

அரசாங்க விமானப் பயிற்சியில் சேர்ந்து, சிறப்பாகத் தேர்வுபெற்று, துடிப்பான இளைஞனாக மாறினார், யூரி ககாரின். ரஷ்யாவும் அமெரிக்காவும் ‘நீயா… நானா?’ எனப் பல முனைகளில் மோதிக்கொண்டிருந்தன. அதில் ஒன்று, விண்வெளிக்கு யார் முதலில் மனிதனை அனுப்பி சாதிப்பது என்பது.

ரஷ்யாவின் முயற்சியில் ககாரின், விண்வெளிக்கு முதல் மனிதராகப் பயணம் போனார்.  ஏப்ரல் 12, 1961-ல் வாஸ்டோக் 1 என்ற விண்கலத்தில் பயணம்செய்து, விண்வெளியில் நடந்தார். 108 நிமிடங்கள் நீடித்த அந்தச் சாகசம், ககாரினை உலக ஹீரோ ஆக்கியது. ரஷ்ய நாடு முழுக்க பல தெருக்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. பிறகு, எண்ணற்ற பைலட்களுக்கு விண்கலப் பயணத்துக்கான பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்.

இவரது 34 வயதில் அந்தத் துயரம் நடந்தது. 1968 மார்ச் 27-ல் நடந்த ஒரு விமான விபத்தில், யூரி ககாரின் மரணமடைந்தார்.‘Under the wide and starry sky; Dig the grave and let me lie’ எனும் ஸ்டீவன்சன் வரிகள், இவருக்கு அஞ்சலியாக ஒலித்திருக்கும் வான்வெளியில்!

பலே பலே ஃப்ளாஷ்பேக் !


‘தேர்வுகள் நெருங்கிவந்திருச்சே’ என லேசாக உதறல் இருக்கிறதா? இதோ, பிரபலங்களின் வாழ்க்கையில் இருந்து சில ‘எக்ஸாம் பூஸ்டர்’ செய்திகள்…

ஆங்கிலத்தில் தோற்ற ஆர்.கே.நாராயணன்

பள்ளிக் கல்வி முடித்த, ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் என்ற ஆர்.கே.நாராயணன், பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்தார்.  நுழைவுத் தேர்வில் ஆங்கிலத்தில் தோற்றுப்போனார். ஆனாலும், தொடர்ந்து முயன்று, மகாராஜா கல்லூரியில் இடம் பிடித்தார். அங்கேயும் ஒரு வருடம் கூடுதலாக எடுத்துக்கொண்டே பட்டம் பெற்றார். ஓயாத உழைப்பு, வாசிப்பு, வாழ்க்கை அனுபவங்கள் என்று அவர் கலந்து உருவாக்கிய கதைகள், ஆங்கில இலக்கிய உலகில் இன்றைக்கும் போற்றப்படுகின்றன.

பெரிதினும் பெரிதாக அப்துல் கலாம்

கல்லூரியில் வினாத்தாள் லீக் ஆனதால், பட்டம் பெற ஓர் ஆண்டு கூடுதலாகக் காத்திருக்க நேர்ந்தது. விமானிகள் தேர்வுக்குச் சென்ற கலாமுக்கு ஒரே ஒரு கிரேடு அதிகம் வந்திருந்தால், விமானி ஆகியிருப்பார்.  கண்ணீர் மல்க, கங்கையில் குளித்துவிட்டுப், புதிய உத்வேகத்தோடு புறப்பட்டார். விண்ணோடு நேசம் பூண்டார். இந்திய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தந்தை ஆனார்.

 தாமதமாக வென்ற டிராவிட்

டிராவிட், பள்ளிக் காலத்தில் கிரிக்கெட் ஆட நிறைய நேரம் செலவு செய்தார். இதனால், ‘படிப்பில் கோட்டைவிட்டுவிடுவார்’ என்று பெற்றோர் பயந்தார்கள். தலைமை ஆசிரியர்தான் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார். விளையாடிவிட்டு டிராவிட் வந்ததும் நண்பர்கள், ஆசிரியர்கள் உதவினார்கள். அழகாகப் படித்துத் தேறினார். கிரிக்கெட்டிலும் ஐந்து வருட உழைப்பு, பல்வேறு தடைகளுக்குப் பின்னரே இந்திய அணிக்குள் நுழைந்தார்.  இப்படிப் பிற்காலத்தில் சொன்னார்… ”கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது, தரவே மாட்டார் என்று அர்த்தம் இல்லை.”

 நிராகரிப்பில் ஈஃபிள்

அலெக்ஸாண்டர் குஸ்டவ் ஈஃபிள் (Alexandre Gustave Eiffel) படிக்க ஆசைப்பட்டு, பொறியியல் கல்வி நிறுவனத்துக்கு விண்ணப்பம் போட்டார். கணக்கில் மட்டும் இன்றி, எல்லாவற்றிலும் பையன் வீக் என்று சொல்லி, கல்லூரியில் இடம் தர மறுத்தார்கள். அழுகை அழுகையாக வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு வெளியேறினார். நம்பிக்கை, கவனித்தல், கட்டடங்களின் மீதான ஆசை என எல்லாமும் சேர்ந்து, அவரை சாதனையாளர் ஆக்கியது. அவர் படைத்த அற்புதங்கள்தான் ஈஃபிள் கோபுரம், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை.

மதிப்பெண் குறைந்த ராமானுஜன்

ஸ்ரீனிவாச ராமானுஜன், இளம் வயதில் கணிதத்தின் மீது காதல்கொண்டது, தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்ற பிறகுதான் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். கணிதத்தில் அவரது நண்பன் சாரங்கபாணி, 45-க்கு 43 வாங்கியிருந்தார். ராமானுஜன், அவரைவிட ஒரு மதிப்பெண்தான் குறைவாக வாங்கினார். அதனால், கல்லூரி மாணவர்கள் படிக்கும் கணிதப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். லோனி (Loney)  எழுதிய ‘மட்டத் திரிகோணவியல்’ என்கிற நூலையும் கார்(carr)எழுதிய ‘சினாப்சிஸ்’ நூலையும் படித்தார். அதன் உள்ளடக்கங்கள் தந்த உத்வேகத்தில் தீவிரமாக இயங்கினார். விரைவிலேயே கணிதத்தில் சாதனைகள் படைத்து, கணித மேதை என்று புகழப்பட்டார்.

தேர்வைத் தவறவிட்ட ரபேல்

ரஃபேல் நடால், டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆடுவதில் இளம் வயதிலேயே புலி. தொடர்ந்து கலக்கிக்கொண்டு இருந்தவரை, ”ஒழுங்காகப் பாடங்கள் படி” என்றார் அப்பா. இவரும் நல்ல பையனாக அப்படியே படித்தார். ஒரு தேர்வு நேரத்தில் விமானத்தில் புத்தகங்களோடு சென்றபோது, அவற்றைத் தவறவிட்டார். வருத்தத்தோடு இருந்த ரஃபேலிடம் அவரது தந்தை, ”மகனே, அந்தத் தேர்வு இருக்கட்டும். டென்னிஸ் உலகம் காத்திருக்கிறது கிளம்பு” என்றார். இப்போது, மிகவும் இளம் வயதில் நான்கு கிராண்ட்ஸ்லாம்களை வென்ற வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர், ரஃபேல்.

எதற்கும் அசராத ரெய்மான்

பல்கலையின் பேராசிரியருக்கான தேர்வு அது. பெர்னார்ட் ரீமென் (Bernhard Riemann) காத்திருந்தார். வானையே பார்க்காமல், எந்த நட்சத்திரம் எங்கே தோன்றும் என்று கணக்குப் போட்டே சொன்ன மாமேதை, காஸ்(Gass)வந்தார். மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை ரீமெனுக்குத் தரவேண்டும். அப்போது, மிகக் கடினமான துறையாகப் பார்க்கப்பட்ட வளைபரப்புகள் சார்ந்த தலைப்பை அவருக்குத் தந்தார் காஸ். அசராமல் ஆய்வுகள் செய்து, அந்தத் தேர்வில் வென்றார் ரீமென். அதன் அடிப்படையில் எழுந்ததுதான் சார்பியல் தத்துவம்.

 சவாலை சந்தித்த மைக்கலாஞ்சலோ

மைக்கலாஞ்சலோ (Michelangelo) இத்தாலியின் பெரிய சிற்பி. போப் திடீரென்று அவரை அழைத்தார். ”ரோம் நகரில் உள்ள சிஸ்டின் தேவாலயத்தின் மேற்கூரையில் பைபிள் காட்சிகளை ஓவியமாகத் தீட்ட வேண்டும்” என்று உத்தரவு போட்டார். அது, மிகவும் சவாலான பரீட்சை. ஒப்புக்கொண்டார் மைக்கலாஞ்சலோ. கண்களை நெருக்கி, கடினப்பட்டு ஓயாமல் உழைத்து, ஓவியங்களை வரைந்தார். அன்றைய இத்தாலியின் தலைசிறந்த ஓவியரும், ஏஞ்சலோவைப் போட்டியாளராகக் கருதிய ரஃபேல், அவற்றைப் பார்த்தார். ”இத்தனை சிறப்பான ஓவியங்களைப் பார்த்ததே இல்லை. கண்ணீர் கோத்துக்கொள்கிறது ஏஞ்சலோ, உன் திறமைக்குத்  தலைவணங்குகிறேன்” என்றார்.

 

இசையால் நிறைத்த பீத்தோவன்!


மேற்குலக இசையுலகின் சூப்பர் ஸ்டார்கள் என்றால் மொஸார்ட் மற்றும் பீத்தோவன் ஆகிய இருவரையும் குறிக்கலாம். இதில் மொஸார்ட் பிறவி மேதை ; பீத்தோவன் குறைபாடுகளில் வலிகளோடு நகர்ந்து உன்னதம் அடைந்தவர்.

பீத்தோவனின் குடும்பத்தில் எண்ணற்றோர் இசைக்கலைஞர்கள். இவரின் தந்தையும் நல்லஇசைக்கலைஞர். மொஸார்ட் எனும் மாமேதை அப்பொழுது உச்சத்தை அடைந்துகொண்டு இருந்தார். அவரைப்போல தன் மகனும் ஆகவேண்டும் என்று நிற்க வைத்து மணிக்கணக்காக இசைப்பயிற்சி தந்தார் தந்தை. கால் வலிக்கிறது என்று சின்ன வயது பீத்தோவன் அழுதால் அழுதால் முட்டியை அடியால் பெயர்த்து விடுவார். கை விரல்களின் நடுவே பிரம்பால் அடித்து சித்திரவதையின் மூலம் இசைப்பெருக்கை கொண்டு வந்து விட அவர் முயன்ற தருணங்களில் எல்லாம் பீத்தோவன் உள்ளுக்குள் குமுறினார்.

மொஸார்டுடன் இணைந்து இசைப்பணியாற்ற கிளம்பிய அவர் அம்மா இறந்து போனதால் வீட்டுக்கு திரும்ப நேரிட்டது. தந்தை இன்னமும் மோசமாக குடிக்க ஆரம்பித்து இருந்தார். இரண்டு தம்பிகள் வேறு இருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் இசைப்பயணத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்தார்.

மீண்டும் இசைக்க ஆரம்பித்து எண்ணற்ற அற்புதமான கோர்வைகளை தந்தார். அவரின் ஒரு சில இசைக்கோர்வைகளை உருவாக்க எட்டு வருடங்கள் கூட எடுத்துக்கொண்டார் என்பது அவரின் அசாத்திய உழைப்பை காட்டும். எத்தனையோ இசைக்கோர்வைகள் வந்தாலும் அவருக்கு மனதில் நிம்மதி உண்டாகவே இல்லை.

காதலை தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்த அவருக்கு முழுமையான ஒரு காதல் கிட்டவே இல்லை. காதலியை நிலா வெளிச்சத்தில் சந்தித்து முத்தமிட்டதை மூன் லைட் சோனாட்டா என்று இசையாக மாற்றுகிற அளவுக்கு அவருக்கான ஒரே வடிகாலாக இசை இருந்தது.

பீத்தோவன் இறந்த பின்னர் அவரின் கடித குவியலில் இருந்து “immortal beloved” என்று ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் ததும்பும் கடிதங்கள் கிடைத்தன. அவர் யாரென்றே தெரியவில்லை. அதில் இருந்த வரிகள் இவை :

ஏன் மிகவும் நேசிக்கிற ஒருவரிடம் இருந்து பிரிந்தே இருக்குமாறு நேரிடுகிறது ? வியன்னாவில் என்னுடைய வாழ்க்கை துன்பமயமாக இருக்கிறது. உன் காதல் மாந்தருள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவனாகவும்,சோகம் நிறைந்தவனாகவும் ஆக்கியிருக்கிறது….அமைதியாக இரு. என்னை காதலி ! இன்று-நேற்று-எத்தகைய கண்ணீர் தரும் காத்திருப்பை உனக்கு நான் தந்திருக்கிறேன். உனக்காக,என் வாழ்க்கையான உனக்காக… தொடர்ந்து என்னை காதலி ! உன் காதலனின் நன்றி
மிகுந்த இதயத்தை எப்பொழுதும் தவறாக எடை போட்டு விடாதே.

இருபத்தி ஆறு வயதில் தான் பீத்தோவனின் காதுகளில் மணி யடிப்பது போல தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. படிப்படியாக காது கேட்காமல் போனது. டின்னிடஸ் எனும் அரிதான நோய் அது. போர்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த
மன்னர்கள் அவரை கவனித்துக்கொள்ளவில்லை. வருமானத்துக்கு வழியில்லாமல் தன்னுடைய இசைக்கோர்வைகளை மிக சொற்ப விலைக்கு விற்றார் அவர்.

முழுமையாக காது கேட்காமல் போன பிறகு நடந்த முதல் இசை நிகழ்ச்சி பெருந்தோல்வியில் முடிந்தது. மனந்தளர்ந்து வேசிகளிடம் போய் அமைதி தேடினார் அவர். அப்பொழுதும் அவரால் அமைதி பெற முடியவில்லை. அவரின் இசைக்கோர்வைகள் எப்படி தங்களை உத்வேகப்படுத்தின என்று நண்பர்கள் எழுதிக்கொண்டு வந்து கொடுத்தார்கள். அதைப்படித்து மீண்டும் இசைக்கலாம் என்று கனத்த மவுனத்துக்கும், சோகத்துக்கும் நடுவில் பீத்தோவன் வந்தார்.

பல்லாயிரம் பேர் நின்று கொண்டு இருந்தார்கள். இசைக்கருவியை தொட்ட பொழுது வெறுமை மட்டுமே அவரை சூழ்ந்திருந்தது. சுற்றியிருந்த எதுவுமே கேட்கவில்லை ; நிச்சயமாக எதுவுமே ! ஒவ்வொரு கட்டையாக அழுத்திய பொழுது எழுந்த அதிர்வை மட்டுமே கொண்டு இசைத்தார் அவர். வாசித்து முடித்ததும் கூர்மையான விமர்சனப்பார்வை கொண்ட கூட்டத்தின் எல்லாரும் எழுந்து நின்று அவரின் இசைக்கு எல்லாரும் கைதட்டிய பொழுது பொங்கி அழுதார் அவர்.

அதற்கு பிறகு மிகப்புகழ் பெற்ற இசைக்கொர்வைகளை உருவாக்கி தள்ளினார் அவர். அவரின் இசை எப்படி காலங்களை கடந்து நிற்கிறது என்பதற்கு ஒரே ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக சொல்ல முடியும். உலகப்போர் சமயத்தில் துவண்டு போன பிரிட்டன் வீரர்கள் மற்றும் மக்களை உற்சாகப்படுத்த பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனி தொடர்ந்து இசைக்கப்பட்டது. துவண்டு கிடந்த தேசம் நிமிர்ந்து நின்று போராடி வென்றது.

அவரின் இசை காலங்களை கடந்து மொஸார்ட்டின் கோர்வைகளுக்கு இணையாக கொண்டாடப்படுகிறது. இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. மொசார்ட் பிறவி மேதை ; பீத்தோவன் தன்னுடைய வலிகள், தோல்விகள், உடற்குறைபாடுகள் எல்லாவற்றுக்கும் இசையின் மூலம் வடிகால் தேடினார். பீத்தோவன் உருவத்தில் குள்ளம், காது கேட்காமல் போனது. இருந்தாலும் அவரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு நூற்றாண்டுகளை கடந்து அவரை நினைக்க வைக்கிறது. சோகங்களை தன்னுடைய கலையில் தோய்த்து கொடுத்த மகா கலைஞன் அவர். அவரின் நினைவு தினம்
இன்று.

இம்ரான் கான் பெற்றுத்தந்த உலக கோப்பை !


மார்ச் 25: பாகிஸ்தான் உலக கோப்பையை வென்ற தினம் (1992)
 
 

உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது.

இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்களுக்கு முன் எலும்பு முறிவால் விலகி இருந்தார். பேட்டிங் நம்பிக்கை சயீத் அன்வரும் உலகக்கோப்பையில் ஆட வரவில்லை. ஜாவித் மியான்தத் மற்றும் இம்ரான் இருவருக்கும் காயங்கள் உலகக்கோப்பை முடிகிற வரை கூடவே ஒட்டிக்கொண்டு தொல்லை கொடுத்தன.

அணியை ஸ்ட்ரிக்ட்டான தலைமைஆசிரியர் போலத்தான் நடத்தினார் இம்ரான். சரியாக ஆடாவிட்டால் தனியாக கதவை சாற்றிவிட்டு டோஸ் விட்டு உசுப்பேற்றுவார். ஆனால்,முதல் ஐந்து போட்டியில் நடந்தது என்னவோ வேறு ! மேற்கிந்திய தீவுகளிடம் பத்து விக்கெட்டில் தோல்வி,பரமவைரி இந்தியாவிடம் 43 ரன்களில் தோல்வி,தென் ஆப்ரிக்காவிடம் இருபது ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தார்கள். ஒரு போட்டியை தத்தி தத்தி டை செய்தார்கள். இன்னொரு போட்டியில் வெறும் 74 ரன்களில் சுருண்டு இருந்தார்கள். எதோ மழை வந்து புண்ணியம் கட்டிக்கொண்டது. அடுத்த ஐந்து போட்டிகளில் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதி என்கிற நிலை !

இம்ரான் கான் அணியினரை அழைத்தார் ,”நாம் ஒரு ஓரத்துக்கு தள்ளப்பட்ட புலிகள் போலத்தான் இப்பொழுது உணரவேண்டும். புலிகள் ஒதுங்குவது ஒழித்துகட்டத்தான் ! இறங்கி அடிப்போம் ! வெற்றி நமதே !” என்று கர்ஜித்தார். எண்பதுகளில் கிரிக்கெட் பாணியில் அணியின் ஆட்டத்தை அமைத்துக்கொண்டார்கள். முதல் நாற்பது ஓவர்களில் பெரிதாக விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு மெதுவாக ஆடுவார்கள், இறுதி பத்து ஓவரில் துவம்சம் செய்து வெல்வார்கள். இப்படி ஆடியே அரையிறுதியை தொட்டது அணி !

அதுவரைக்கும் அணியில் சொதப்பிக்கொண்டு இருந்த இன்சமாமை தூக்கி விட வேண்டும் என்று எல்லாரும் முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர் கண்கள் கலங்கி இம்ரான் அறைக்குள் வந்தார் ,”எந்த போட்டியிலும் நான் ஒழுங்காக ஆடவே இல்லை ! அப்படியே ஊருக்கு கிளம்பறேன். வேற நல்ல ப்ளேயரை போட்டுக்குங்க கேப்டன் !”

இம்ரான் சுருக்கம் விழுந்த முகம் விரிய இன்சமாமை பார்த்து இப்படி உறுதியாக சொன்னார் ,”உன்னை முல்தானில் இருந்து கூப்பிட்டு வந்தது நீ ஆடி ஜெயிக்க வைப்பேன்னு தான் ! நடுவில எல்லாம் அனுப்ப முடியாது. நீ அரையிறுதியில் ஆடுறே ! நாம உன்னால ஜெயிக்கிறோம் ! போ ரெடியாகு !”. கேப்டன் பேசிவிட்டால் எதிர்த்து பேச முடியாது ! கூடாது.

நியூசிலாந்து அணியுடனான அந்த போட்டியில் பாகிஸ்தான் பவுலிங் செய்தது. 262 ரன்கள் அடிக்கப்பட்டு இருந்தது. அதை சேஸ் செய்ய பாகிஸ்தான் களம் புகுந்த பொழுது இந்த அணி தேறாது என்று முடிவு செய்து எதிரணியின் க்ரோவ் காயம் படாமல் இறுதிப்போட்டியில் ஆட  அறையில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டார். அது பெரிய தவறாக முடிந்தது என்பது இறுதி பத்து ஓவரில் தான் புரிந்தது. முதல் நாற்பது ஓவரில் 140 /4 என்றே ஸ்கோர் சிரித்துகொண்டு நின்றது. இறுதிப்போட்டியில் நாம் தான் என்று நியூசிலாந்து அணி குதூகலித்து கொண்டிருந்தது. இன்சமாம் இல்லை என்று அடித்து ஆடி நிரூபித்தார். முப்பத்தி ஏழு பந்துகளில் அறுபது ரன்கள் அடித்து அணியை இறுதிபோட்டிக்கு கூட்டிக்கொண்டு போனார் அந்த அதுவரை சொதப்பல் மன்னர் !

அதுவரை சிங்கம் போல ஆடிக்கொண்டு இருந்த இங்கிலாந்து அணி இருதிப்போட்டிக்குள்  சர்ச்சைக்குரிய மழையால் பாதித்த அரையிறுதி போட்டியின் உதவியோடு வந்திருந்தது. பாகிஸ்தான் இந்த முறை முதலில் பேட் செய்தது. ரமலான் மாதத்தின் பதினெட்டாவது நாள் அன்று. 87,182 பேர் நிரம்பியிருந்த எம்.சி.ஜி. மைதானத்தில் போட்டி துவங்கியது. முந்தைய அதே பாணி   நாற்பது ஓவரில் வெறும் 150 ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இன்சமாம் மற்றும் வாசிம் அகரம் இறுதி பத்து ஓவர்களில் கிட்டத்தட்ட  நூறு ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை  249 க்கு உயர்த்தினார்கள். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் சுலபமாக சரிந்து விழுந்தது. லாம்ப் மற்றும் பேர்ப்ராதர் எனும் இரண்டு பேர் மட்டும் தண்ணிக்காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

இம்ரான் கான் முப்பத்தி ஐந்தாவது ஓவரில் வாசிம் அக்ரமை மீண்டும் அழைத்தார். “எனக்கு வேண்டியது வெற்றி மட்டுமே !” என்று சொல்லித்தான் பந்து தரப்பட்டு இருந்தது. எதோ மாயாஜாலம் போல அந்த இரண்டு பந்துகளில் அற்புதம் புரிந்தார் அக்ரம். இரண்டு இன்ஸ்விங்கர்கள் இரண்டு விக்கெட்கள். அவ்வளவு தான்,கொஞ்ச நேரத்தில் வாலையும் மடக்கி கோப்பையை பாகிஸ்தானின் நாற்பது வயது புலி இம்ரான் தூக்கிய பொழுது தேசமே கொண்டாட்டத்தில் மூழ்கிப்போனது. கேன்சர் மருத்துவமனை கட்ட பணம் திரட்டிய திருப்தியோடு அணியில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார் அவர். ஏனோ எல்லாரின் கண்களும் கலங்கியிருந்தன. அந்த நம்ப முடியாத வெற்றிப்பயணத்தின் இறுதிக்கணம் நடந்த தினம் மார்ச் 25

அச்சேபே எனும் ஆசான் !


ஆல்பர்ட் சினுவாலுமோகோ அச்சேபே ஆப்ரிக்கா தந்த அற்புத எழுத்தாளர். அம்மக்களின் கதையை சொன்ன தேர்ந்த கதைசொல்லி. நைஜீரியாவில் வேலை பார்க்கும் அண்ணன் கண்கள் விரிய இப்படி சொன்னான் ,”அவரோட கதைகளை மக்கள் ரொம்ப கொண்டாடுறாங்க ! அவரோட புத்தகங்கள் படிக்கிறப்ப தானாவே கண்ணுல தண்ணி தேங்கி நிற்குது !”. அவரின் நாவல்கள் ஆப்ரிக்க மக்களின் வாழ்க்கையை அவர்களின் பார்வையில் சொல்கிறது. காட்டுமிராண்டிகள்,இருண்ட கண்டத்தின் ஆட்கள்,பண்பாடு அற்றவர்கள்,வன்முறை கொண்டவர்கள் என்கிற அவர்களைப்பற்றிய நம்முடைய பிம்பத்தை அது உடைக்கிறது. வெள்ளையர்களின் வன்முறையின் முன் அவர்கள் எப்படியெல்லாம் அழிந்து போனார்கள் என்பதை அவரின் எழுத்தில் படிக்கிற பொழுது தான் வரலாறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை தவிர்த்தே எழுதப்படுகிறது என்பதை உணர்த்தும். 

அவரின் சில வாசகங்கள் உங்களுக்காக :

பிறரின் கதை உங்களுக்கு பிடிக்கவில்லையா ? உங்களின் கதையை நீங்களே எழுதுங்கள்.

சூரியன் மண்டியிட்டு இருப்பவர்களை விட நிமிர்ந்து நிற்பவர்களுக்கே ஒளிர்ந்து காட்சி தருகிறது. 

இப்படித்தான் எழுத வேண்டும் என்பதை நான் அறக்கடமையாக பார்க்கவில்லை. ஆனால்,எளியவர்களுக்கு எதிராக அதிகார பீடங்களோடு கை கோர்ப்பாமல் இருப்பதை அறக்கடமையாகவே கருதுகிறேன். 

நாம் வாழ்வோம். நாம் பிள்ளைகள்,வாழ்க்கை,நல்ல அறுவடை,மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக வேண்டிக்கொள்கிறோம். உனக்கு நன்மையானதை நீயும்,எனக்கு நன்மையானதை நானும் கொண்டிருக்கிறேன். கொக்கு சிறகப்படிப்பதற்கு இடம் உண்டென்றால்,பட்டத்திற்கும் இடம் இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் எதிர்ப்பவரின் இறக்கைகள் முறியட்டும் ! 

என்னுடைய விஷயங்கள் பிரிந்து கிடைக்கின்றன நாவலை யாரும் எழுத சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. எந்த பதிப்பகமும் நூலைத்தரவேண்டும் என்று கட்டாயப்படுத்தவுமில்லை. ஒரு இரவு முழுக்க அதை படித்துவிட்டு என் உறவுக்காரர் அந்த நாவல் பெரிய தலைவலியை தந்தது என்றதே எனக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்து நூலை வெளியிட வைத்தது. 

வெள்ளையன் புத்திசாலி. அவன் தன்னுடைய மதத்தோடு இங்கே அமைதியாக வந்தான். அவனின் முட்டாள்தனத்தை ரசித்தவாறே அவனை நாம் இருக்க விட்டோம். நம் சகோதர்களை வென்று நம்மினத்தை ஒன்றாக சேர்ந்து இயங்காதவாறு செய்துவிட்டான் அவன். நம்மை இணைத்தவைகளில் கத்தியை சொருகி நம்மை உடைந்து விழ வைத்துவிட்டான் !

ஒரு பிரபலமான வாசகம் உண்டு – சிங்கத்துக்கு வரலாற்றாசிரியன் கிடைக்கிற வேட்டையின் வரலாறு வரை வேட்டையாடுபவனையே கொண்டாடும். இதை உணர்ந்த கணம் நான் எழுத்தாளன் ஆனேன் !

நாம் மேன்மையை கருணைக்கிழங்கையோ,மக்காச்சோளத்தையோ பயிரிடுவது போல உற்பத்தி செய்ய முடியாது. மரங்களில் சிறந்த மரமான இரோகோ மரம் தானாகவே காட்டில் வளர்கிறது. அதன் விதைகளை சேகரித்து நீங்கள் விதைத்தாலும் அது வளராது. எங்கே மரம் வளர வேண்டும் என்று தானே முடிவு செய்கிறது,அங்கே அதை நாம் காண்கிறோம். மனிதர்களிடம் இருக்கும் மேன்மையும் இப்படியானதே !

உலகம் என்பது முகமூடி அணிந்த நடனம் போன்றது. அதை நன்றாக அனுபவிக்க நீங்கள் ஒரே இடத்தில் தேங்கிவிடக்கூடாது

அந்த ஒன்று அதுவே தான் !


வெயில் மணிகள் கரைந்து 
பொழிந்த புழுதி வெளிகளில் 
நிற்கையிலே சரலென்று 
கேட்கிறது எதிர்வீட்டு அக்காவின் அழுகுரல்

பத்தாயத்தில் பூத்திருந்த சோகங்களை 
அள்ளி அணைக்கையில் 
குருதி வேய்ந்த அழுக்குத்துணிகளை 
கரம் பற்றிக்கொள்ள துடிக்கிறது

நெருக்கி சிரிக்கும் பேருந்துகளில் 
பெண்களின் இருக்கைகளில் சரிந்து தூங்கும் 
சகலரும் இட ஒதுக்கீடு வேண்டாம் என்கையில் 
எழுந்து அமர்ந்து சிரிக்கின்றன பெருநகர எருமைகள்

கைவிரலில் மைபூசி வெளியேறுகையில் 
ஒரு கொலையை செய்ய காத்திருந்து முடித்துவிட்ட 
பேரமைதி சூழ்வதாக தெரிவதற்குள் 
வாழ்த்து அறிக்கைகளில் மூச்சுத்திணறி 
மயங்கிவிடுகிறது அந்த ஒன்று !

வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான்


ஷேக் முஜூபூர் ரஹ்மான் பிறந்த தினமின்று .(மார்ச் பதினேழு ( மொழி சார்ந்த ஒரு அரசியல் ஒரு நாட்டை உருவாக்கிய வரலாறு இவரின் வங்கதேசத்துக்கு உண்டு .அடிப்படையில் ஜின்னாவின் பாகிஸ்தான் முஸ்லீம் லீகில் இணைந்து இருந்தவர் சுக்ரவர்த்தி .அவர் வங்கத்தில் பிரிவினையின் பொழுது நடந்த படுகொலைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய ஊழல் பேர்வழி ;காந்தியுடன் இணைந்து நடந்து அமைதியை அவரே நிலைநாட்ட வேண்டிவந்தது வலி
மிகுந்த வரலாறு .அவர் ஜின்னாவின் மறைவுக்கு பின் கிழக்கு பாகிஸ்தானின் வங்க மொழி பேசும் மக்களுக்கு உருவான அவாமி முஸ்லீம் லீக் கட்சியில் இணைந்தார் .கிழக்கு பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் அதிகம் இருந்ததால் வங்கத்தை
இரண்டாக பிளந்து உருவாக்கப்பட்டது .எனினும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் ஆகாத பிள்ளை போலவே அப்பகுதி நடத்தப்பட்டது ;அப்பகுதியில் வங்க மொழியே
பரவலாக பேசப்பட்டது ;உருது மொழி பேசிய மேற்கு பாகிஸ்தான் அன்பர்கள் இவர்களை மட்டமாக பார்த்தனர் 

தேசிய மொழியாகவே உருது மட்டுமே முதலில்
இருந்தது .1956 இல் போராட்டத்துக்கு பின்னே தான் வங்காளம் தேசிய மொழி ஆனது .இதற்கிடையே சுக்ரவர்த்தி மறைந்து ,அவாமி முஸ்லீம் லீக் கட்சிக்கு முஜுபூர் ரஹ்மான் தலைவர் ஆனார் .பாதி பரப்பளவு கொண்டிருந்த பொழுதும் வரி,விவசாயம்,தொழிற்துறை எல்லாவற்றிலும் மிகக்குறைந்த உதவிகளே கிழக்கு
பாகிஸ்தானுக்கு செய்யப்பட்டது .

க்ளைமாக்ஸ் காட்சி 1970-71
பொதுத்தேர்தலில் வந்தது .மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 160 கிழக்கு பாகிஸ்தான் தொகுதிகளையும் அவாமி லீக் வென்றது ;பூட்டோவின் கட்சி மேற்கு பாகிஸ்தானில் என்பத்தி ஒரு தொகுதிகளை மட்டுமே வென்று இருந்தது .பஞ்சம்
வேறு ஏற்பட்டு மக்கள் இறந்து கொண்டிருந்தார்கள் .ஆனால், பூட்டோ ஆட்சியில் தானும் பங்கெடுக்க வேண்டும் என அவர் அடம் பிடித்தார் ;ஜனாதிபதி யாஹியா கானும் அதையே சொல்ல கடுப்பானார் ரஹ்மான் .

போராட்டங்கள் கிழக்கு பாகிஸ்தானில் வலுத்தன ;இவர் கைது செய்யப்பட்டார் .ஆயுதம் ஏந்தி போராட ஆரம்பித்தார்கள் மக்கள் ;ராணுவம் புகுந்தது -பலர் கொல்லப்பட்டனர் . இந்தியாவிற்குள் பலர் அகதிகளாக நுழைந்தனர் ;இந்திய ராணுவம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானின் முக்தி வாகினி படைகள் இணைந்து பாகிஸ்தானை தோற்கடித்தன ,பூட்டோ பாகிஸ்தானின் ஜனாதிபதியாகி இருந்தார் .முதலில் மறுத்தாலும் பின் ரஹ்மானை விடுதலை செய்தார் .வங்கதேசம் உருவானது ;அமர்
சோனா பங்களா எனும் தாகூரின் கீதம் அவர்களின் தேசிய கீதம் ஆனது வங்கத்தின் ஜனாதிபதியானார் இவர் .

வங்கதேசம் தனி நாடாக உருவானதும் பாகிஸ்தான் காவலில் இருந்த இவர் விடுதலை
செய்யப்பட்டார் ;அந்நாட்டின் பிரதமர் ஆனார் இவர் ;படிப்படியாக சட்டத்தை திருத்தி நாட்டின் நிரந்தர தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார் ;ஒரு கட்சி
ஆட்சிமுறையை கொண்டு வந்து நான்கே நான்கு அரசு இதழ்களை தவிர மற்ற எல்லா இதழ்களையும் தடை செய்தார் .சாதாரண மக்களிடம் இருக்கும் ஆயுதங்களை
கைப்பற்ற ஜட்டியோ ராக்கி வாஹினி என்கிற படைப்பிரிவை உருவாக்கினர் .அது மக்களை பல துன்பத்துக்கு உள்ளாக்கியது

.ராணுவ வீரர்கள் இவரைக்கொல்ல திட்டமிட்டார்கள் ;இது ஏற்கனவே 1971 போரில் தன் போர்க்கப்பலை அனுப்பி மிரட்டியும் வங்கதேசம் உருவானதால் இவரை தீர்த்து கட்ட அமெரிக்காவின் சி ஐ ஏ போட்ட திட்டம் என சொல்வோரும் உள்ளனர் .எதுவாகினும் இவரைக்கொல்வதற்கு பல மேஜர்கள் தயாரானார்கள் .நான்கு பிரிவாக கொலைகாரர்கள் பிரிந்து கொண்டார்கள் .ஆகஸ்ட் 15,1975 அன்று இவரின் வீட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் படையை உள்ளே விட்டனர் ; இவரின் மகன் வீட்டின் வரவேற்பறையில் கொல்லப்பட்டார் ;முஜிபை வீடு மாடியில் பார்த்தார்கள் ,”பதவியை விட்டு இறங்குங்கள் !”என காலக்கெடு கொடுத்தார்கள்
.

ராணுவ உளவுத்துறை தலைவர் ஜமீலை போனில் அழைத்தார் இவர் ;அவர் வந்ததும் அவர் வீரர்களை வெளியேற சொன்னார் ;முடியாது என்பதை துப்பாக்கி மொழியில் சொன்னார்கள் ;அவரும் கொல்லப்பட்டார் .”என் மகனோடு தான் வருவேன்” என இவர் சொல்லிய பொழுதே இவரை சுட்டுகொன்றார்கள் .பிற குடும்ப உறுப்பினர்களும் குழுக்களால் கொல்லபட்டார்கள் .இவரின் இரண்டு மகள்கள் மட்டும் மேற்கு ஜெர்மனியில் இருந்ததால் தப்பித்தார்கள் .படைகளையும் தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவந்தனர் ;முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்டார்கள் .இவரின் அமைச்சரவை சக முஸ்தாக் அஹமத் பதவியை ஏற்றுகொண்டார் ; கொன்றவர்கள் முக்கியமான பதவி உயர்வுகளை பெற்றனர் . பின் இவர்களும் இன்னொரு ராணுவ புரட்சியில் பதவி இழந்தார்கள் .இழப்பெதிர் காப்பு சட்டம் போட்டு இவர்கள் மீது வழக்கு போடாமல் முஸ்டாக் காப்பாற்றினார்

பின் 1996 இல் முஜீபின் மகளே ஆட்சிக்கு வந்ததும் அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது ;வெளிநாட்டுக்கு ஓடியவர்கள் கொண்டுவரப்பட்டார்கள் .20 பேரில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது .;பல்வேறு இழுபறிகள் உண்டாகின ;எல்லாம் முடிந்து 2010 இல் முஜிபுரின் ரத்தத்தை நிலத்துக்கு வழங்கியவர்களின் தலையை தூக்கு கயிறு தழுவிக்கொண்டது .

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட கதை


ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம் இன்று .(மார்ச் பதினைந்து ) .சீசரின் அப்பா மற்றும் இவர் இருவருக்கும் ஒரே பெயர் . இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ வளம் மிகுந்த மக்களுக்கான ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும்,மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர் . உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது . 

சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,”கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார்,பேச்சுக்கலையில் சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார் ;பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார். 

ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார்,எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம் பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார். 
ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர். 

போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட,நீயா நானா போட்டி சீசர் மற்றும் பாம்பே இடையே வந்தது .சீசரின் படைகள் கலைக்கப்பட வேண்டும் ,அது சர்வாதிகாரத்துக்கு வழி விடும் என்றார் பாம்பே … போர் மூண்டது ;பலகால இழுபறிக்கு பின் பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு சீசரை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஆசை கொண்ட எகிப்திய மன்னன் தாலமி அவரை கொன்றான் 

அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவரின் மனைவி கிளியோபட்ராவை பார்த்து காதல் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் மனிதர் .நாட்டின் இணையற்ற வெற்றி வீரனாக நின்ற அவர் சென்ற பக்கமெல்லாம் வென்று சாதித்தார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் மனிதர் என கருதிய செனட் அவரின் படைகளை விட்டுவிட்டு சாதாரண குடிமகனாக நாட்டுக்கு வர சொன்னது

செனட்டின் முடிவை மீறி நாட்டுக்கு படைகளோடு வந்து செனட் படைகளோடு மோதினார் நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வென்று ரோமின் வாழ்நாள் சர்வாதிகாரியானார் சீசர்.குடியாட்சி போனதே என அவர் மகன் போல பாவித்த ப்ரூட்டஸ் முதலியவர்கள் கொதித்தார்கள் ;அவரை கொல்ல திட்டமிட்டார்கள் .செனட் அரங்கிற்கு வந்த பொழுது பலர் சேர்ந்து தாக்கி அவரை கொல்ல முயன்ற பொழுது அவர்களை எதிர்த்து கொண்டிருந்த சீசர் ப்ருட்டசும் கத்தியை உயர்த்துவதை பார்த்ததும் ,”நீயுமா குழந்தையே ?” என சிலர் சொன்னதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிக்கிறார் .ஆனால் தான் எதையும் கேட்கவில்லை என்றே அங்கே இருந்த பிளினி முதலியோர் குறித்து உள்ளனர் .

எனினும் ”யூ டூ ப்ரூட்டஸ் ?”என கேட்டுவிட்டு அவர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது மக்களின் மத்தியில் பரவிப்போனது .அதையே ஷேக்ஸ்பியரும் தன் நாடகத்தில் வடித்தார் .நல்ல எழுத்தாளரும் ஆன சீசரின் புகழ் பெற்ற வாசகம் “சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாக சாவதேமேல் “.சர்வாதிகாரத்தை விதைக்க முயன்ற அவர் நாயகனாக கொண்டாடப்படுவது வரலாற்றின் வினோதம் தான்.