அக ஒளியால் அற்புதங்கள் செய்த ஹெலன் கெல்லர் !


ஹெலன் கெல்லர் நினைவு தினம் ஜூன் ஒன்று. வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்ந்து துரத்தும் பொழுது நின்று,நிதானித்து அதை வெல்ல முடியும் என்று உடற்குறைபாடுகளை கடந்து சாதித்த ஹெலன் கெல்லரின் வாழ்க்கை காட்டுகிறது.
இவரின் அப்பா அமெரிக்க உள்நாட்டு போரின் பொழுது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நடுத்தர குடும்பம் அவர்களுடையது. 

 
ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன்
கெல்லர் பதினெட்டு மாத சிறுமியாக இருக்கிற பொழுது மூளைக்காய்ச்சல் வந்தது.  காய்ச்சல் போனதும் எல்லாம் சரியாகி விட்டது என்று பெரியவர்கள் நினைத்தார்கள். பேசும் திறனும்,பார்வையும் அந்த பிஞ்சுக்குழந்தைக்கு பறிபோனது.

இந்த குழந்தை அவ்வளவு தான் என்று எண்ணிய பொழுது   வேலைக்காரர் ராபின் சார்ல்சின் மகள் மார்த்தாவின்  நட்பு வரம் போல வந்து சேர்ந்தது. இடிக்காமல் ஓடவும்,கைகோர்த்து நடக்கும் அவரிடம் பழகினார் இளம்வயது ஹெலன். ஏழு வயதுக்குள் இந்த தோழிகள் இருவரும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள அறுபது
வெவ்வேறு குறியீடுகளை உருவாக்கி இருந்தார்கள். பின்னர் அக ஒளியருக்கான பள்ளியில் அவரை சேர்க்க முயன்ற பொழுது கடுமையாக மறுத்தார் ஹெலன்.

அவருக்கான ஆசிரியரை பல்வேறு இடங்களில் தேடி இறுதியில் ஆன் மான்ஸ்பீல்ட் சுல்லிவன் வந்து சேர்ந்தார். ட்ரக்கொமா எனும் கொடிய கண் வியாதி ஏற்பட்டு கண் பார்வை பறிபோன ஆனி  அக
ஒளியர்  பள்ளியில் சேர்ந்த  அங்கே முதன்மையான மாணவி ஆனார். இருபது வயதை எட்டிய பொழுது தான் அவருக்கு அந்த முக்கியமான பணி வந்தது. ஹெலன் கெல்லருக்கு பாடம் கற்பிக்கும் பணி.

ஒவ்வொரு பொருளையும் உணர வைத்து தான் பாடம் நடத்துவார். DOLL என்று ஹெலனின் கையில் எழுதும் பொழுதே அவரை பொம்மையை தொட்டு உணர வைப்பார். வாட்டர் என்று ஒரு கையில் எழுதும் பொழுதே இன்னொரு கையில் நீரை ஓட விட்டு
அதை உணர வைக்கிற அற்புதத்தை செய்தார்.

கல்லூரிக்கு ஹெலன் கெல்லர் போன பொழுது கூடவே ஆனியும் போவார். அவரின் கரங்களில் ஆசிரியர் பாடம் நடத்த நடத்த வார்த்தைகளை உடனடியாக ஆனி வரைந்து
புரிய வைப்பார் என்றால் நீங்கள் எத்தகைய வேகம் அது என்று புரிந்து
கொள்ளலாம். ஹெலன் கெல்லர் அதிகாரப்பூர்வமாக பட்டம் பெற்றால் ஆணியோ
ஆசிரியையாக சாதித்தார்

ஹெலன் கெல்லர் தன்னுடைய வாழ்க்கை கதையை என் கதை என்று இருபத்தி நான்கு வயதில் எழுதி வெளியிட்ட பொழுது அது பரவலான் கவனம் பெற்றது. நாற்பது
வருடகாலம் ஹெலன் கெல்லருக்கு ஆணி ஆசிரியராக இருந்தார். ஹெலன் கெல்லர் பெண்களுக்கு வாக்குரிமை,அக ஒளியருக்கு உரிமைகள் என்று பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ஹெலன் கெல்லர். ஐம்பத்தி நான்கு நூல்கள்
எழுதி பரவலாக தன்னம்பிக்கை மற்றும் உத்வேகம் ஆகியவற்றை விதைத்தார். அவர் எண்பத்தி எட்டு வயதில் மறைந்த பொழுது சாதிக்க உடலின் ஆற்றலை விட மனதின் முனைதலே முக்கியம் என்கிற வலுவான பாடத்தை உலகுக்கு தந்திருந்தார்.

ஆஷிஷ் நந்தியோடு பேசுங்கள் !


TALKING INDIA எனும் ஆஷிஷ் நந்தியுடன் ரமின் ஜஹன்பெக்லோ எனும் இரானிய பேராசிரியர் நிகழ்த்திய உரையாடல்களின்  தொகுப்பாக வந்திருக்கும் நூலை வாசித்து முடித்த பொழுது நம்மின் நம்பிக்கைகளை ஒரே ஒரு நூல் மறுவாசிப்பு செய்ய வைக்கிற அற்புதம் நிகழும் என்கிற நம்பிக்கை மீண்டும் ஆழமாக நிலை பெற்றது.

கல்கத்தாவின் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த ஆஷிஷ் நந்தி மருத்துவப்படிப்பை பிடிக்காமல் துறந்து சமூகவியலில் பட்டம் பெற்று மருத்துவ உளவியலில் முனைவர் ஆய்வில் இறங்கிய அவர் மரபார்ந்த வாசிப்பை விட்டு நகர்ந்து பல்வேறு மறுவாசிப்புகளை அவர் நிகழ்த்தியதை நூலின் ஆரம்பத்தில் சொல்கிறார்.

இந்துத்வவாதிகள்,பெண்ணியவாதிகள் என்று வெவ்வேறு சிதாந்தந்தங்களை கொண்டு இயங்குவதாக சொல்லிக்கொள்கிற இவர்கள் எல்லாரும் யாருக்காக இயங்குவதாக சொல்கிறார்களோ அவர்களையே அதிகம் தாக்கி தங்களின் கருத்து பரிமாற்றத்தை கட்டமைக்கிறார்கள் என்பதை நந்தி குறிக்கிறார். இந்து மதவாதிகள் கிறிஸ்தவர்களை,இஸ்லாமியர்களை கருத்தியல் ரீதியாக தாக்குவதை விட உங்கள் மதத்தின் மீது உங்களுக்கே பற்றில்லையே என்று இந்துக்களின் மீதே அவ்ர்களின் தாக்குதல் தொடர்கிறது. சவர்க்கார் துவங்கி கோட்சே வரை நீங்கள் இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள் போல பற்றோடு இல்லை என்று அழுத்தி சொல்வதை கவனிக்க சொல்கிறார்.

நவீன மதவாதம் பற்றி நாம் கொண்டிருக்கும் பல்வேறு நம்பிக்கைகளை எக்கச்சக்க கேள்விகள் மூலம் மறுவாசிப்புக்கு அவர் உள்ளாக்குகிறார். ஹைதரபாத்தில் இஸ்லாமிய தலைவர் ஒருவரும்,இந்து தலைவர் ஒருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் கலவரங்களை தங்களின் பேச்சுக்களின் மூலம் அரசியல் தேவைகளுக்காக உண்டு செய்பவர்கள் ; அதே சமயம் அவர்களின் நட்பு அப்படியே இருக்கிறது. கல்யாண் சிங் பாபர் மசூதி இடிப்புக்கு ஒரு முக்கியமான காரணம் ; அடுத்து மதச்சார்பின்மை முகமாக காட்டிகொண்ட சமாஜ்வாதி கட்சியில் அவர் இணைந்தார். அங்கே எந்த நெருடலும் இல்லாமல் அவரின் மகன் அமைச்சரானார். ஆக,கருத்தியல் ரீதியாக இங்கே மதவாதம் என்று ஒன்று இருப்பதாக நாம் நம்பவைக்கப்படுகிறோம். 96.4 சதவிகித மதக்கலவர மரணங்கள் நகர்ப்புறங்களிலேயே நிகழ்ந்திருக்கின்றன. பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லாத நகர்ப்புறத்தில் மதம் என்கிற ஒற்றை அடையாளத்தின் மூலம் மக்களை வன்முறை நோக்கி திருப்பும் செயலை கச்சிதமாக செய்ய முடிகிறது. பணம் கொடுத்து மதக்கலவரங்களை நிகழ்த்த முடியும் என்கிற வகையில அவை திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன. குஜராத்தில் மோடி அரசு வலிமையாக இருந்த பகுதிகளில் மதக்கலவரங்கள் நடக்கவில்லை ; எங்கே ஓட்டுக்கள் அவர்களுக்கு கடந்த தேர்தல் குறைவாக விழுந்ததோ அங்கே தான் கலவரங்கள் ஏற்பட்டன என்பதை பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.எஸ். ஒரு மத இயக்கம் என்பதைவிட அதை அரசியல் இயக்கம் என்றே பார்க்கவேண்டும் என்று தன் பார்வையை அவர் குறிக்கிறார். ஆர்.எஸ்.எஸ் எந்த இந்து கடவுளின் உருவத்தையும் கூட்டங்களில் பயன்படுத்தியது கிடையாது. பாரத மாதாவை மட்டுமே முன்னிறுத்திய அந்த அமைப்பு அயோத்தியாவில் தான் கோயில்கள் சார்ந்த விஷயத்தில் முதன்முறை நுழைந்தார்கள் என்று சொல்கிறார்.

உலகின் எண்பது சதவிகித இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிற இஸ்லாமிய அடிப்படைவாதம் எந்த வகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்புகிறார். சூரியனை வழிபடுகிறார்கள் என்று இரானியர்களை இராக்கியர்கள் குற்றம் சொல்கிறார்கள்,இந்தோனேசிய இஸ்லாம் பவுத்தம் மற்றும் இந்து மதத்தின் தாக்கம் கொண்டிருக்கிறது. வங்கதேச இஸ்லாமும் இந்து மதத்தின் கூறுகளை உள்வாங்கி இருக்கிறது என்கிற பாகிஸ்தான் இஸ்லாமியர்களின் இஸ்லாமும் பல்வேறு மாறுபாடுகளுக்கு உட்பட்டு இருக்கிறது என்பதே சரி ஆக அடிப்படைவாதங்கள் சுய நம்பிக்கையின்மை மற்றும் கலாசார போதாமையால் ஏற்படுகிறது.

  காந்தியே தன் மரணத்தை அப்படி அமைத்துக்கொள்ள விரும்பினார் என்றும் அவரை இந்தியாவின் நவீன முகம் வெறுத்தது,இந்து மதவாதிகள்,லிபரல்கள்,இடதுசாரிகள் என்று பலதரப்பினர் அவரை வெறுத்தார்கள். காந்தியை கொன்ற பின் கோட்சே என் அன்னையை காக்க என் தந்தையான காந்தியை கொல்ல நேர்ந்தது ; அவரை நான் நாயகன் ஆக்கியிருக்கிறேன். அதை அவர் விரும்புவார் என்கிறான். அது உண்மையே ! காந்தி தன்னுடைய மரணம் அதிகம் வீரியம் கொண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர்ந்தே இருந்தார். அவர் விரும்பியவாறே அவர் மரணம் நிகழ்ந்தது. காந்தியின் திறந்த மனதோடு கூடிய இந்து மதம் மற்றும் இறுக்கமான இந்து மதம் ஆகிய இரண்டுக்கும் இடையே நடந்த போராட்டமே காந்தியின் மரணத்தில் வந்து நின்றது. பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த தேர்தலில் காந்தியை போலவே திறந்த மனதோடு கூடிய பெரும்பான்மை இந்துக்கள் பி.ஜே.பியை அடுத்து வந்த தேர்தலில் மொத்தமிருந்த  ஒன்பது தொகுதிகளில் அந்த மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் தோற்கடித்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார்..

 

காந்தியை நவீன இந்தியா மறக்க முயன்றாலும் காந்தி மறக்க முடியாதவராகவே இந்திய சூழலில் இருக்கிறார். அவரை நீங்கள் மறந்தாலும் அவர் வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்பதே உண்மை. காந்தியை முன்னோக்கி நகர்த்த எண்ணற்ற காந்தியவாதிகள் தவறிவிட்டார்கள்,அரசாங்கத்தை விமர்சனம் செய்கிற பண்பை அவர்கள் பெரும்பாலும் இழந்து விட்டார்கள்,ஆனால்,ஆச்சரியமாக இந்திய மார்க்சிஸ்ட்கள் காந்தியை பூர்ஷ்வாக்கள் பக்கம் நின்றவர் என்று வசைபாடினாலும் இந்தியாவின் பெண்ணிய,சுற்றுசூழியல் இயக்கங்களை முன்னெடுத்து காந்தியத்தை முன்னகர்த்தி இருக்கிறார்கள். அந்த இயக்கங்களின் அடிப்படை தத்துவங்களை காந்தி ஏற்கனவே வார்த்து தந்துவிட்டு போய்விட்டார் என்பதை கவனிக்க வேண்டும். காந்தியம் காந்தியை உண்கிறது ; மேலும் காந்தி ஆகச்சிறந்த காந்தியவாதி இல்லை என்பதும் உண்மையே என்று பதிகிறார்.

எமெர்ஜென்சி வெறும் இந்திராவின் செயல் மட்டுமில்லை ; ஜனநாயகத்தின் மீது படிப்படியாக வெறுப்புற்ற அதிகார வர்க்கத்தின் உதவியோடே அது  நிகழ்த்தப்பட்டது. பெண்களை சக்தி மிகுந்தவர்களாக பார்க்கிற மரபார்ந்த சிந்தனை இந்தியாவில் இருந்திருக்கிறது ; இந்த தெற்காசிய பகுதியில் தான் அதிகபட்ச பெண் தலைவர்கள் எழுந்திருக்கிறார்கள். அவர்கள் பதவிக்கு வருவதற்கு அவர்களின் பாலினம் தடையாக இல்லை என்பதை கவனிக்க வேண்டும், சதி என்பது நெடுங்காலமாக இந்திய பாரம்பரியத்தில் இருந்தது என்பதும் தவறான பார்வை. இருக்கின்ற தரவுகளின் படி மிகக்குறைவாகவே சதி நிகழ்ந்துள்ளது,அதிலும் சொத்துக்களில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகளை வங்கத்தில் பறிக்கவே அது பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் பதிவு செய்த பொழுது பெண்ணிய அமைப்புகளின் தீவிரமான எதிர்ப்புக்கு உள்ளானதை இணைத்தே பதிகிறார்.

ராஜராம் மோகன்ராய் நவீனத்துவ பார்வையை தாங்கியபடி சதியை எதிர்க்கவில்லை. சிவனின் நாட்டியம் பார்வதியின் தீக்குளிப்புக்கு பின்னர் நிகழ்ந்தது ; அந்த நம்பிக்கையில் சதி பின்பற்றப்படுகிறது என்று நீங்கள் நம்பினால் அந்த புனிதம் இன்று இல்லாத பொழுது எப்படி ஒரே ஒரு சடங்கின் மூலம் மட்டும் நம்பிக்கையை காக்க முடியும் என்று கருதுகிறீர்கள் என்று அவர்களின் உள்ளுக்குள் இருந்து கேள்வி எழுப்பி சாதித்தார் என்பதை பதிகிறார். நாடுகளைக்கடந்து கலாசாரங்கள் எல்லா காலங்களிலும் கடத்தப்பட்டு உள்ளன. புத்தர் நேபாளிய இறக்குமதி,சிதார் துவங்கி இசை வரை பல்வேறு அற்புதங்களை தந்த அமீர் குஸ்ரூ ஒரு இரானியர்

பாகிஸ்தானின் வரலாறு என்பது அவர்கள் இருக்கிற பகுதியின் வரலாறை பேசவே இல்லை. அது டெல்லியில்,இந்தோ-கங்கை சமவெளியில் இருந்த ஆட்சிகளை பற்றி பேசி அப்படிப்பட்ட பழம்பெருமை கொண்டவர்கள் நாம் என்றே பேசுகிறது ; பாகிஸ்தானியர்கள் தன்னிடம் பணம் கொடுத்து பொருளைத்தர மறுத்ததை அவர் சொல்லி அவர்கள் நம்மிடம் தோற்பதை விரும்பவில்லை. இரு நாட்டவருமே இன்னொருவரின் இருப்பை விரும்புகிறோம். நமக்கு எதிர்க்க ஒருவர் தேவைப்படுகிறார் ; இன்னுமொரு ஆச்சரியமான விஷயம் பாகிஸ்தான் என்கிற கருத்தாக்கத்தை பெரிதும் தூக்கிபிடித்தது தற்கால வங்கதேசமே. இப்போதைய பாகிஸ்தான் விடுதலைக்கு முந்தைய காலத்தில் பல்வேறு பகுதிகளில் இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்பியது. ஒருவேளை வங்கதேசம் பாகிஸ்தான் என்கிற பெயர் சூடியிருந்தால் அவர்களை நாம் எதிர்த்திருப்போம் என்று எள்ளலுடன் குறிக்கிறார். பாகிஸ்தானியர்கள் மற்றும் இந்தியர்கள் இருவருக்கும் மற்றவரை பற்றி நன்றாக தெரியும் என்கிற மாயை இருக்கிறது; அது இன்னொரு பகுதிக்கு பயணிக்கிற பொழுது மாறுகிறது என்பதே உண்மை

சிறுபான்மையினர் பிரிந்து போவதற்காக போராடுகிறார்கள் என்று நினைக்கிறோம் ; உண்மையில் அவர்கள் எதிர்பார்ப்பது தங்களுக்கான கவனத்தை தான். அது ஒழுங்காக தரப்படுகிற பொழுது அவர்களின் எழுச்சி அடங்கிவிடும் என்பதே உண்மை. நவீனத்துவம் வெற்றியாளர்களின் சிந்தனையாக இருக்கிறது ; மதம் ஏற்படுத்திய வன்முறையை தீவிரமாக எதிர்க்கிற அதே சமயம் அது ஏற்படுத்தியதை விட பன்மடங்கு அதிக மரணங்களை நவீனத்துவம் ஏற்படுத்தி இருக்கிறது. நவீனத்துவத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் அடிப்படைவாத இயக்கங்கள் அதன் முக்கிய கூறான வன்முறையை தாங்களும் பற்றிக்கொள்கிறார்கள் என்பதே உண்மை.

மரபில் பல்வேறு சங்கதிகளை,கூறுகளை சோதித்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதை முற்றிலும் தவறு என்று நாம் நிராகரிக்கிற பொழுது நாம் ஏதேனும் முக்கியமான அம்சத்தை தவறவிட்டிருப்போம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். உண்மையில் அடையாளங்களை தூக்கிப்பிடிக்கும் பலர் தங்களின் பலரையும் உள்வாங்கிக்கொண்டு நகரும் பாரம்பரியத்தை தவற விட்டவர்களே. மேற்கில் போய் இந்துவாக வாழ விரும்புகிற இந்தியாவில் பிறந்த இந்து ஒருவன் இங்கே பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு மக்களை ஏற்றுக்கொள்கிற இந்து மதத்தின் கூறுகளை உலகமயமாக்கலில் விட்டு ஒற்றைப்படையான அடையாளத்தை தூக்கிப்பிடித்து வெறுப்பை வளர்க்கிறார்கள். இதுவே அமெரிக்காவில் இருக்கும் யூதர்களுக்கும் பொருந்தும். அவர்கள் இஸ்ரேலிய யூதர்களை விட அதிகம் வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

Talking India: Ashis Nandy in Conversation With Ramin Jahanbeglooபிரிட்டிஷ் அரசு தன் காலத்தில் தன் பகுதியில் எழுந்த ஐயர்லாந்து புரட்சியை தனக்குள் இருந்த வேற்றுமையை மறைத்து இந்தியாவில் ஆட்சி செய்தது. ஒன்றாக இணைந்தே இருங்கள் என்கிற குரல் இங்கே போதிக்கப்பட்டது. நவீனத்தின் வேர்களை பற்றிக்கொண்டு வந்த நாம் அதனால் தான் வேற்றுமைகளை கண்டால் அஞ்சுகிறோம். பல்வேறு மக்களின் நம்பிக்கைகளை மதிக்காமல் ஒற்றுமை என்று மட்டும் குரல் கொடுக்கிறோம்.

நேருவிய பாபியன் சிந்தனைகளை நாம் பெரும்பாலும் துறந்திருக்கிறோம். அவரின் ஜனநாயகத்தை மட்டுமே உள்வாங்கி இருக்கிறோம். காந்தி ஏற்கனவே இருக்கும் ஒரு அமைப்பை அழிக்க அல்லது அதற்கு மாற்றான கருத்தியல் நிலை பெற பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதை உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் தீண்டாமையை முதலில் எதிர்த்தார். அவர்களுக்கு சம உரிமை வழங்க இயங்கினார் ; அதையே இன்று தேர்தல் முறை செய்கிறது. இதையே இந்து மதவாதிகளும் செய்வதாக சொல்லி அவர்களை தங்களின் பிரிவுக்குள் கொண்டு வருகிறார்கள்.

காந்தியை ஒரு மதச்சார்பின்மைவாதி என்று ஏற்க மறுக்கும் நந்தி அவர் உண்மையில் மதத்துக்குள் இருந்தே மதத்தின் பெயரால் நிகழும் அடிப்படைவாதத்தை எதிர்த்தார் என்கிறார். இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் மதச்சார்பின்மை என்பதை அரசாங்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் வெற்று கோஷம் என்றே நினைக்கிறார்கள்.  தொடர்ந்து ஒரு மதத்தின் பெயரால் நடத்தப்படும் வெறுப்பரசியலை ஒற்றைப்படையாக மதத்தின் பெயரால் மட்டும் எதிர்க்கிற பொழுது பல்வேறு சிறிய குழுக்கள் அந்த மதத்தின் உள்வாங்கும் தன்மை கொண்ட,பல்வேறு மதத்தவரோடு இணைந்து அன்போடு பழகிய மக்களையும் இந்த ஒரே ஒரு அடையாளத்துக்குள் அடக்கி நாம் உண்மையில் மதவாதத்துக்கு உதவுகிறோம். பி.ஜே.பி ஆக்கப்பூர்வமான மதச்சார்பின்மை என்கிற கோஷத்தோடு ஐரோப்பிய தேசம் பற்றிய கருத்தியலை இந்தியாவிலும் சாதிக்கலாம் என்று நினைக்கிறது.

உலகமயமாக்கல் இன்னமும் நம்மை தேவைகளை நோக்கி நகர்த்தியிருக்கிறது. ஒரே ஒரு அறையில் பலர் வாழ்ந்த அமெரிக்காவில் இன்று ஒவ்வொரு பிள்ளைக்கும் அறைகள் வேண்டும் என்று எண்ண வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் பசியால் இறக்காத பலரை நகரத்தில் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி நகரத்தின் ஆகக்கொடிய ஏழைகளாக பசியோடு கிராமப்புற மக்களை வாடவிட்டு இருக்கிறோம். நிம்மதியாக இருந்தோம் என்று தங்களவில் வாழ்ந்த மக்களை வறுமையில் இருக்கிறோம் என்று மேலும் மேலும் தேவைகளை ஏற்படுத்தும் நுகர்வு சூழலில் உணரவைத்து உள்ளோம். பழங்குடியின மக்கள்,கிராமப்புற மக்களின் வறுமையை நாம் மாற்றிப்பொருள் கொள்ள வைத்து அவர்களை நம்மோடு இணைத்து வருகிறோம். கூட்டு வாழ்க்கையை காணடித்து நகர்கிறோம்

கிராமங்களை துடைத்துக்கொண்டே நகர்கிறது நவீனத்துவம். உலகமயமாக்கல் மற்றும் வளர்ச்சி சிறுகுழுக்கள்  மற்றும் பழங்குடியினரை தின்று கொண்டே இருக்கிறது. மிக குறுகிய பகுதியில் இயங்கும் கவனமற்ற குழுக்களை அது செரிதுக்கொண்டு நகரும். என்றாலும் உலகமயமாக்கல் வந்த பிறகு அரசின் வலிமை குறைந்திருப்பது வரவேற்க வேண்டியது. மக்கள் நல அரசுகளும் இதனால் காணாமல் போகின்றன என்பது கவலைக்குரிய அம்சம்.  

 

காந்தி அரசியல் என்கிற சேரியில் விருப்பப்பட்டு வாழ்ந்தபடியால் அவர் சிறந்த காந்தியவதியாக ஆகாமல் ஒரு தேர்ந்த அரசியல் ஆளுமையாகவே திகழ்ந்தார். காந்தி இங்கிலாந்தில் இருக்கிற பொழுது மார்க்சியவாதிகள்,சவர்க்காரின் வன்முறையை ஆதரிக்கும் அமைப்பு ஆகியவற்றை எல்லாம் பார்த்தபின்பு இறுதியில் டால்ஸ்டாய் பக்கம் திரும்பினார். அதுவே அவரை நவீனத்துவத்தின் மிக முக்கிய பண்பான வன்முறையை கைவிட செய்தது.

மேற்கை தொடர்ந்து பாசிசத்தை தந்தது என்றும் அமெரிக்காவை கொலைகார தேசம் என்கிற நாம் அங்கே இருந்து தோரோ,டால்ஸ்டாய்,ப்ளேக்,வால்ட் விட்மன்,மார்டின் லூதர் கிங் ஆகியோர் தோன்றினார்கள் என்பதையும் அமெரிக்கா தனிநபர் ஜனநாயகம் என்பதை தன் மூச்சாக கொண்டிருக்கிறது என்பதையும் இணைத்தே பேசவேண்டும். இந்த உரையாடல் நிகழாமல் இறுகியவாறே இருப்பது பயன்தராது.

இப்படிப்பட்ட ஒரு உரையாடலுக்கு இந்த நூல் வழிவகுத்திருக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய பெரும்பாலும் எளிய,ஆனால்,ஆழமான நூல்

விலை : 395

பக்கங்கள் : 148  

    

 

மௌன வசந்த போராளி ரேச்சல் கார்சன் !


ரேச்சல் கார்சன் என்கிற மௌன வசந்தம் நூலை எழுதிய பெண்மணியின் வாழ்க்கை ஏற்படுத்திய அதிர்வலை கடந்த நூற்றாண்டின் சூழலியல் வரலாற்றில் மறக்க முடியாதது. எளிய குடும்பத்தில் பிறந்த ரேச்சல் பால்ய வயதிலேயே விலங்குகள்,பறவைகள் ஆகியவற்றைக்கொண்டு கதைகள் தீட்டினார்.

ரேச்சல் கார்சன் உயிரியல் பாடத்தில் பட்டம் பெற்ற பின்னர் கடல்வாழ் உயிரிச்சூழல்,மீன்வளம் ஆகியவற்றை பற்றி படித்து முடித்த பின்னர் முனைவர் ஆய்வு செய்யலாம் என்று பகுதி நேரத்தில் வேலை பார்த்துக்கொண்டே அவர் இயங்க முடிவு செய்த பொழுது அவரின் தந்தையின் இறப்பு குடும்பத்தை உலுக்கியது. 

குடும்பத்தின் பசியை போக்க வேலை செய்ய வேண்டும் என்கிற சூழலில் மேரி ஸ்காட் சிங்கர் எனும் விஞ்ஞானியின் உதவியால் மீன்வளத்துறையில் தற்காலிக பதவி கிடைத்தது. தேர்வெழுதி அதை நிரந்தரமாக்கி கொண்டார் அவர். அக்காவின் மரணத்தால் அவரின் இரண்டு குழந்தைகளையும் தானே வளர்க்க வேண்டிய இக்கட்டுக்கும் அவர் தள்ளப்பட்டார். 

குடும்ப சூழல் அழுத்திக்கொண்டு இருந்த தருணத்தில் சூழலியல் அதிலும் குறிப்பாக கடல் சார்ந்து தன்னுடைய தேடலை அவர் அதிகப்படுத்திக்கொண்டே போனார். கடற்காற்றின் கீழே என்கிற நூல் அவருக்கு பாராட்டை தந்தாலும் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. இந்த சூழலில் அமெரிக்க மீன் மற்றும் காட்டியிரி சேவை அமைப்பின் ஆசிரியராக ஆனபின்பு ‘நம்மை சுற்றியிருக்கும் கடல்’, ‘கடலின் முனையில்’,’வானைபற்றி சில சங்கதிகள்’ ஆகிய நூல்கள் எளிய மொழியில் சூழலியல் பற்றி பார்வையை மக்களிடம் கொண்டு சேர்த்தன. அதிலும் அவரின் இரண்டாவது நூல் ஆவணப்படமாகி ஆஸ்கர் விருதை அள்ளியது.

இந்த சூழலில் தான் அவருக்கு அவரின் தோழியான ஓல்கா ஓவன்ஸ் ஹக்கின்ஸிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. 1956-ம் வாக்கில் இங்கிலாந்தில் இலைகளை ஜப்பான் வண்டுகள் தின்று கொண்டிருந்தன. அவற்றை கொல்ல பூச்சிகொல்லியை வான் வழியாக ஹெலிகாப்டரின் மூலம் தெளித்தார்கள். அந்த பூச்சிக்கொல்லி பூச்சிகளை கொன்றதோடு நில்லாமல் நீர் வெளிகளில் கலந்து மீன்களை கொன்றது. மண் புழுக்களில் சேர்ந்து விஷமாக நிலம்,நீர்,காற்று ஆகியவற்றை பூச்சிக்கொல்லி மாசுபடுத்தியது . அதை உண்ட பறவைகள் கூடு கட்ட மறுத்தன. ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட பறவைகள் கூடு கட்டினாலும் அவை ஈன்ற முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரவே இல்லை. ஓடுகள் வலுவிழந்து போய் பல முட்டைகள் போட்டதும் அழிந்து போயின. அதிலும் குறிப்பாக ராபின் என்கிற வசந்த கால பறவை பாதிக்கப்பட்டது. அதன் மவுனம் தோழியின் மனதை கீறியது. அதை குறிப்பிட்டு அவர் எழுதிய வாசகம் ரேச்சலை உலுக்கியது. 

DDT என்கிற பூச்சிக்கொல்லி முதன்முதலில் 1874 இல் உருவாக்கப்பட்டது ; ஒரு 55 வருடங்கள் கழித்து அதை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம் என்று பால் ஹெர்மான் முல்லர் என்பவர் கண்டுபிடித்தார். அவருக்கு அதற்காக நோபல் பரிசு 1948 இல் வழங்கப்பட்டது. பூச்சிகளை மொத்தமாக கொல்வதற்கு விமானங்களில் இருந்து இந்த பூச்சிக்கொல்லியை தெளித்த சம்பவங்கள் ஏராளமாக உண்டு; DDT பொடியை பூசிக்கொண்டு போர் செய்யப்போகும் இடத்தில் பூச்சிகள் தங்களை கடிக்காமல் இருக்குமாறு ராணுவங்கள் பார்த்துக்கொண்டன. 

இந்த பூச்சிக்கொல்லி அமெரிக்காவில் உண்டாக்கிய தாக்கத்தை பற்றி தோழியின் கடிதத்துக்கு பிறகு ரேச்சல் ஆய்வு செய்தார். ஏற்கனவே பல்வேறு நிபுணர்கள் அதைக்குறித்து செய்த தனித்தனி ஆய்வுகளை ஒன்றாக தொகுத்தார். அந்த பூச்சிக்கொல்லிகள் எப்படி பறவைகள்,விலங்குகள் ஆகியவற்றையும் சூழலையும் பாதிப்பதோடு நில்லாமல் குழந்தைகளையும் தன்னுடைய நச்சுத்தன்மையால் தாக்குகிறது என்று ஆதாரப்பூர்வமாக நான்கு வருடகால தேடலுக்கு பின்னர் எழுதினார். 

மொட்டைக்கழுகுகள் என்கிற அமெரிக்காவின் தேசியப்பறவையின் முட்டை ஓடு வலுவிழப்பது துவங்கி மனிதர்களுக்கு கேன்சர் ஏற்படுவது வரை எண்ணற்ற பாதிப்புகளை அது உண்டாக்குவதை சுட்டிக்காட்டினார். மேலும் எப்படி கதிர்வீச்சு மரபியல் மாற்றங்களை உண்டு செய்கின்றனவோ அது போலவே பூச்சிக்கொல்லிகளும் மனிதர்களிடையே பல மோசமான ஆபத்துக்களை உண்டு செய்கிறது என்று எடுத்து சொன்னார். 

அது மட்டுமில்லாமல் உணவுச்சங்கிலியின் அடுத்த அடுக்குக்கு பூச்சிக்கொல்லி நகர்கிற பொழுது அதன் அளவு அதிகரிப்பதையும் அதிர்ச்சியோடு நிரூபித்தார். மேலும் எந்த பூச்சிகளை கொல்ல பூச்சிக்கொல்லியை உருவாக்கியதாக சொன்னார்களோ அந்த பூச்சிகள் எதிர்ப்பு சக்தி பெற்று DDT யை செயலிழக்க செய்ததையும் பதிந்தார். இன்னொரு பெரிய சிக்கல் இயற்கையான எதிரிகள் ஏற்கனவே DDT யால் அழிக்கப்பட்டு விட்டதால் எதுவுமே தேறாமல் இறுதியில் விஷத்தை மட்டுமே மனித குலம் சுமக்க வேண்டி நேரிட்டது என்று அவர் அறிவித்த பொழுது உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது, 

நியூயார்க்கர் இதழில் தொடராக வந்த மௌன வசந்தம் நூலில் எப்படி பசுமை மற்றும் இயற்கை வனப்பு நிறைந்த ஒரு நிலப்பகுதி எதிரிகளின் சதியெல்லாம் இல்லாமல் அம்மண்ணின் மக்களின் செயல்பாடுகளால் அழிந்து காணாமல் போகிறது என்று கதை வடிவில் அவர் பதிவு செய்து வருங்காலத்தை பற்றி எச்சரித்தார். அவருக்கு எதிராக DDT நிறுவனங்கள் வழக்குகளை பதிவு செய்தன. அவரின் புத்தக அறிமுகங்கள் வராமல் தடுக்கும் முயற்சிகள் நிகழ்ந்தன. ஆனாலும் பத்து லட்சம் பிரதிகள் ஐம்பதே நாட்களில் விற்று தீர்ந்தது. 

அவர் இந்த காலத்தில் புற்றுநோயால் பெருமளவில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவரின் மார்பகத்தை துண்டித்து விட்டு தீனமான குரலில் மக்களுக்காக குரல் கொடுத்தார். தலையில் கதிர்வீச்சு சிகிச்சையால் ஏற்பட்ட வழுக்கையை விக் அணிந்து மறைத்தவாறு பல்வேறு CBS டி.வி. ஷோக்களில் உரையாற்றினார். அவரின் இடுப்பு எலும்பு பகுதி முழுக்க பாதிக்கப்பட்டு அமர முடியாத சூழலிலும் வருங்கால சந்ததி நிமிர்ந்து நடக்க வேண்டும் என்று போராடினார்.

ஒரு பேட்டி முடிந்ததும் தலையின் மீது கரங்களை வைத்து அப்படியே மேசையில் சாய்கிற அளவுக்கு புற்றுநோய் அவரை தின்று கொண்டிருந்தது,என்றாலும். இறக்கிற வரை DDT க்கு எதிராக அவர் போராடி 56 வயதில் மரணித்து போனார். அவரை கம்யூனிஸ்ட் என்றும்,சதி செய்கிறார்,பொய்யர் என்றும் எழுதிய இதழ்களே அவரை உலகை மாற்றியவர் என்று அவரின் இறப்புக்கு பின்னர் DDT தடை செய்யப்பட்ட பின்னர் பதிவு செய்தன. மௌன வசந்தம் உண்மையில் மக்களின் வசந்தத்தை ஓரளவுக்காவது மீட்டது !

ராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கர் !


உலக அரசியலை செலுத்துவதில் ராஜதந்திரத்துக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்த வகையில் கடந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த ராஜதந்திரி ஹென்றி கிஸ்ஸிங்கர். ஜெர்மனியில் பிறந்த இவர் யூதர் என்பதால் பல சமயங்களில் ஜெர்மனியில் மட்டம் தட்டப்பட்டார். ஹிட்லரின் நாஜிப்படைகளின் யூத ஒழிப்பு கொள்கையால் குடும்பத்தோடு அமெரிக்கா வந்து சேர்ந்தார். வறுமையில் குடும்பம் வாடிக்கொண்டு இருந்த பொழுது ஷேவிங் ப்ரெஷ் நிறுவனத்தில் கூட வேலை பார்த்தார். அமெரிக்க குடிமகனாக ஆனபின்பு உலகப்போரில் ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் ஹார்வர்ட் பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அமெரிக்காவும்,சோவியத் ரஷ்யாவும் நீயா நானா என்று பனிப்போரில் முஷ்டி முறுக்கி கொண்டிருந்தார்கள். ஜான் டல்லாஸ் எனும் வெளியுறவுத்துறை செயலாளர் அணு ஆயுதங்களின் மூலமே சோவியத் ரஷ்யாவுக்கு பதிலடி தரவேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். அதை கடுமையாக கிஸ்ஸிங்கர் எதிர்த்தார். ரஷ்யாவுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் முன்னேறுகிற அதே சமயம் அமைதி
வழிமுறைகளையும் கைக்கொள்ள வேண்டும் என்றார். நிக்சன் காலத்தில் அமெரிக்க அரசின் வெளியுறவுக்கொள்கையை முடிவு செய்யும் ஆளுமை ஆனார். ஆயுத குறைப்பு
பேச்சுவார்த்தையான சால்ட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் குறைப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகள் அவரின் வழிகாட்டுதலில் நடைபெற்றன.

வியட்நாம் போரில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்ட பொழுது படைகளை படிப்படியாக விலக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இன்னொரு புறம் கம்யூனுஸ் படைகளுக்கு அடைக்கலம் கொடுத்த கம்போடியா நாட்டின் மீது குண்டு வீசவும் வழிகாட்டினார். நாற்பாதாயிரம் மக்கள் இறந்து போனார்கள். சீனாவுடன் முட்டிக்கொண்டு இருந்த உறவை பாகிஸ்தான் உதவியோடு மீட்டார் இவர். சீனாவை அமெரிக்கா அங்கீகரித்தது. பாகிஸ்தான் அமெரிக்காவின் நெருங்கிய உறவானது. 1971 இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்தார் அவர். கப்பலை அனுப்பி இந்தியாவை மிரட்ட எல்லாம் செய்தார்கள். ஆனாலும்,வங்க தேசம் எழுந்தது.

எகிப்து மற்றும் சிரியா இஸ்ரேல் மீது போர் தொடுத்த பொழுது அமைதியை நிலைநாட்டுவதை இவர் சாதித்தார். ஏழு வருட பகைமையை மறந்து எகிப்துடன் கைகோர்ப்பதை உறுதி செய்தார். சோவியத் ரஷ்யாவை சீனாவை அங்கீகரித்தது,அதனோடு பல்வேறு தொடர்புகள் கொண்டது ஆகிவற்றின் மூலம் எதிர்கொண்டார். சிலி நாட்டில் அலண்டேவின் ஜனநாயக அரசு வீழ்த்தியதற்கு பின்னர் இவரின் ராஜதந்திரம் இருந்தது.

வியாட்நாமில் அமைதியை கொண்டு வருகிறேன் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ஓயாமல் அமெரிக்கா குண்டு போட்டது. பல்லாயிரம் வியட்நாமியர்கள் மற்றும்
அமெரிக்கா வீரர்கள் இறந்து போனார்கள். அமைதி வந்ததாக நிக்சன் மற்றும் இவர் நாடகம் ஆடினார்கள். நோபல் கமிட்டி கிஸ்ஸிங்கர் மற்றும் லே டேக் தோ எனும் வியட்நாமிய தலைவருக்கும் நோபல் அறிவித்தது. லே டேக் தோ அமைதி
திரும்பவில்லை என்று அதை ஏற்க மறுத்தார். இவர் மட்டுமே நோபல் பரிசை தன்னடக்கத்தோடு பெற்றுக்கொள்வதாக சொன்னார். 

கிஸ்ஸிங்கர் பல்வேறு ஆட்சி கவிழ்ப்புகள்,போர்கள்,மரணங்கள் ஆகியவற்றுக்குகாரணமான மூளை என்பது உண்மையே ! அதே சமயம் ஒரு ராஜதந்திரியின் வழிகாட்டுதல் எப்படி உலக அரசியலை புரட்டும் என்பதற்கு கச்சிதமான உதாரணம் அவர்

நேரு இருக்காரே மச்சி !-நேருவைப்பற்றி ஐந்து கறபிதங்கள்


நேருவைப்பற்றிய ஐந்து கற்பிதங்கள் :
கற்பிதம் ஒன்று : நேரு வாரிசு அரசியலை ஆரம்பித்து வைத்தார் :

இந்த வாதத்துக்கு நேருவின் மகள் மற்றும் பேரன் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார்கள் என்பதும்,சோனியா காந்தி அப்பதவியை நோக்கி நகர்ந்தார் என்பதும்,அவரின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி கட்சிக்குள் சேர்ந்த பின்னர் அவரே அடுத்த வாரிசாக இருப்பார் என்று தெரிவதும் ஆதாரமாக இருக்கிறது. 

உண்மையில் நேருவுக்கும்,இந்த வாரிசு அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு தன்னுடைய மகள் இந்தியாவின் பிரதமர் ஆவார் என்று எந்த எண்ணமும்,ஆசையும் இல்லை என்பதே உண்மை. திருமதி.இந்திரா காந்தி அவர்கள் தான் இந்திய தேசிய காங்கிரசை குடும்ப தொழிலாக மாற்றினார். அவரே தன்னுடைய மகன் சஞ்சய் மற்றும் அவரின் மறைவுக்கு பின்னர் அவரின் சகோதரர் ராஜீவ் ஆகியோரை அரசியலுக்கு கொண்டு வந்தார். 

ஒவ்வொரு முறையும் தனக்கு பிறகு தன்னுடைய மகனே ஆட்சி மற்றும் கட்சி தலைமைப்பொறுப்புக்கு வருவார் என்று தெளிவுப்படுத்தப்பட்டது. ஆகவே நேரு-காந்தி பரம்பரையை உண்மையில் இந்திரா காந்தி பரம்பரை என்றே சொல்லவேண்டும். 

கற்பிதம் 2 : நேரு காந்தியின் வாரிசாக தகுதியற்றவர். அவர் உண்மையில் தன்னுடைய தலைவருக்கு துரோகம் செய்து விட்டார். அவரின் தலைவர் அவரை தேர்வு செய்து பெருந்தவறு செய்துவிட்டார் :

இந்த கற்பிதத்தை ராஜ்மோகன் காந்தி தன்னுடைய The Good Boatman புத்தகத்தில் ஆதாரங்களோடு கச்சிதமாக உடைத்திருக்கிறார். அந்த நூலில் பல்வேறு மாற்றுகளில் இருந்து காந்தி நேருவை தேர்வு செய்ய காரணம் அவர் தான் காந்தியின் பன்முகத்தன்மை கொண்ட எல்லாரையும் இணைத்துக்கொண்டு இயங்கும் இந்தியா என்கிற கருத்தாக்கத்தை பிரதிபலித்தார். அவருக்கு மாற்றாக கருதப்பட்ட-படேல்,ராஜாஜி,ஆசாத்,கிருபாளினி,ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இதற்கு மாறாக வெவ்வேறு பிரிவுகளின் நலன்கள் மற்றும் சார்பு கொண்டவர்களாக ஓரளவுக்கேனும் இருந்தார்கள். நேரு மட்டுமே முஸ்லீகள் நம்பக்கூடிய இந்துவாக, தெற்கில் மதிக்கக்கூடிய உத்திர பிரதேச வாலாவாக,பெண்கள் நேசிக்கும் ஆணாக இருந்தார். காந்தியைப் போல ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான தலைவராக அவர் இருந்தார். 

கற்பிதம் 3 : நேரு மற்றும் படேல் எதிரிகள் மற்றும் எதிரெதிராகவே இயங்கினார்கள் :

‘வலிமை’யான இந்தியாவுக்காக தொடர்ந்து வாதாடும் ஆட்கள் இந்த வாதத்தை தொடர்ந்து விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். நேரு பாகிஸ்தான்,சீனா மற்றும் சிறுபான்மையினரிடம் மென்மையாக நடந்து கொண்டார் என்றும் கூடவே படேல் ஒரு வேளை இந்தியாவின் பிரதமர் ஆகியிருந்தால் அவர் இவரை விட சிறப்பான பிரதமராக இருந்திருப்பார் என்றும் அவர்கள் இணைத்தே பேசுவார்கள். 

உண்மையில்,நேரு மற்றும் படேல் ஒரு குழுவாக அற்புதமாக இணைந்து இயங்கினார்கள். இணைந்த மற்றும் வலிமை மிகுந்த இந்தியாவை விடுதலைக்கு பின்னான உருவாக்க காலத்தில் கட்டமைத்த இணை அவர்கள். அவர்கள் பொறுமை மற்றும் கருத்தியல் ரீதியாக மாறுபட்டார்கள் என்பது உண்மையே. ஆனாலும்,இந்த வேறுபாடுகளை நகர்த்தியும்,களைந்தும் அவர்கள் தங்களின் பொதுவான நோக்கமான சுதந்திரமான,ஒற்றுமையான ,மதச்சார்பற்ற,ஜனநாயக இந்தியாவுக்காக அர்ப்பணித்து இயங்கினார்கள். படேலை விட நேரு சிறப்பாக இயங்கக்கூடிய சில விஷயங்கள் இருந்தன -மக்களிடம் நெருங்கிப்பழகுவது,உலகோடு ஒப்பிட்டுக்கொள்வது,ஆபத்தான சூழலில் இருப்பதாக உணர்ந்த குழுக்களுக்கு (இஸ்லாமியர்கள்,பழங்குடியினர் மற்றும் தலித்துகள் )மற்ற இந்தியர்களை போல சம உரிமைகளை அவர்களும் பெறுவார்கள் என்பதை உறுதி செய்வது. நேருவை விட சிறப்பாக படேல் இயங்கக்கூடிய விஷயங்களும் இருந்தன – சுதேச சமஸ்தான ஆட்சியாளர்களை எதிர்கொள்வது,காங்கிரஸ் கட்சியை வளர்த்தல்,சட்ட உருவாக்க சபையில் எதிர்ப்பாளர்களையும் இணைத்துக்கொண்டு முன்னகர்வது. இருவருக்கும் இன்னொருவரின் திறமைகள் புரிந்திருந்தன ; அதை தாங்கள் கடக்கவோ,குறுக்கிடவோ இருவரும் விரும்பவில்லை. இப்படித்தான் பிரிவினையின் இடிபாடுகளில் இருந்து வலிமையான ஒரு புதிய தேசத்தை அவர்கள் கட்டமைத்தார்கள்

இந்த கற்பிதங்களுக்கு நேருவின் வரிகளிலேயே மிகச்சிறந்த விடை கிடைக்கிறது . காந்தியின் மறைவுக்கு பிறகு நேரு படேலுக்கு இப்படி கடிதம் எழுதினார்,”நம்முடைய பழைய முரண்பாடுகள் இன்றோடு முக்கியத்துவம் இழக்கின்றன. இந்த கணத்தில் நாம் அனைவரும் நெருக்கமாக,கூட்டுறவோடு நம்மால் முடிகிற அளவுக்கு இணைந்து பணியாற்றுவது அதி அவசியமாகிறது.” இந்த வருடங்களில் எல்லாம் தாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதையும் நினைவு கூர்ந்த நேரு ,’உங்கள் மீதான அன்பு மற்றும் மரியாதை இந்த காலங்களில் வளர்ந்திருக்கிறது. எந்த நிகழ்வும் அண்ட அன்பையும்,மரியாதையையும் குறைக்க முடியாது…என்றாலும்,இந்த சிக்கல் மிகுந்த பாபுஜியின் மரண கணத்தில் நாம் மற்றும் நம்முடைய சகாக்கள் இணைந்து பணியாற்றுவது நம்முடைய கடமை என்று நான் சொல்ல விரும்புகிறேன்.”

படேல் நேருவின் கடிதத்துக்கு பதில் எழுதும் பொழுது “தங்களின் கடிதத்தின் அன்பு மற்றும் கனிவால் மிகவும் நெகிழ்ந்தும்,மகிழ்ந்தும் போனேன்” என்று சொல்லிவிட்டு ,”நாம் இருவரும் வாழ்நாள் முழுக்க ஒரு பொது குறிக்கோளுக்காக இணைந்து இயங்கும் காம்ரேட்களாக இருக்கிறோம். நம் தேச நலன் மீதான அளவுகடந்த அக்கறை,இருவரும் கொண்டுள்ள அன்பு மற்றும் மரியாதை நம்முடைய பார்வை மற்றும் வேறுபாடுகளை கடந்து நம்மை இணைத்தே வைத்திருக்கிறது. ” மேலும் “காந்தியின் மரணம் நாமிருவரும் எப்படி இணைந்து பலவற்றை சாதித்துள்ளோம் என்பதையும்,இந்த நாடே சோகம் சூழ்ந்திருக்கும் தருணத்தில் மக்களின் நலனுக்காக இன்னமும் இணைந்து பணியாற்றுவதன் அவசியத்தை மீண்டும் புதிதாக உணரவைக்கும் விழித்தெழுதலாக இருக்கிறது !” என்று குறிப்பிட்டார்.- வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா 

கற்பிதம் நான்கு : நேரு ஒரு சர்வாதிகாரி :

நேருவுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்பதை விடவும் தனக்கு பின் தன்னுடைய வாரிசாக ஒருவரை நேரு அறிவிக்கவில்லை என்பதே இதற்கு வலு சேர்க்கிறது.

நேரு தன்னுடன் இருந்த கட்சி மற்றும் அரசாங்க சகாக்கள் முன்னர் மேலானவராக தோற்றம் தந்திருப்பார் உண்மையே. அவர்கள் அவரின் காஸ்மோபாலிடன் பார்வையையோ,கலை,இசை,இலக்கியம்,அறிவியல் மீதான ஆர்வத்தையோ கொண்டிருக்கவில்லை. ஆனால்,நேருவை விட இந்தியாவின் ஜனநாயகத்தை காக்கும் அமைப்புகள் மற்றும் பண்புகளை யாரும் வளர்த்தெடுக்கவில்லை. அவரே வயது வந்த அனைவர்க்கும் வாக்குரிமைக்காக வாதாடினார்,ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்கட்சிகளை வரவேற்றார் , அதிகார வர்க்கம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தில் அவர் தலையிட்டதே இல்லை. வின்சென்ட் சீன் இப்படி ஒரு முறை குறிப்பிட்டார் : “காந்திக்கும்,நேருவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால் காந்தியடிகள் தான் ஒத்துப்போகாத பெரும்பான்மை கருத்துக்கு இசைவதை காட்டிலும் ஓய்வெடுப்பது,உண்ணாவிரதம் இருப்பது,பிரார்த்தனை செய்வது,தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதும்,குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவது என்று இயங்க போய்விடுவார். நேரு அப்படியில்லாமல் தன்னுடைய கட்சி மற்றும் தேசம் பெரும்பானமையாக ஒரு கருத்து கொண்டிருக்கிற பொழுது அதோடு ஒத்துப்போகா விட்டாலும் அதை மதித்து ஏற்றுக்கொண்டார். ஆகவே நேருவின் கருத்துக்கு மாற்றாக காங்கிரஸ் ஆண்ட மாநில முதல்வர்கள் எப்பொழுதும் கட்சியின் அம்மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மொழிவாரி மாநிலங்களை முதலில் அவர் எதிர்த்தாலும் நாடும்,கட்சியும் அது தேவை என்றதும் ஏற்றுக்கொண்டு அப்படியே செயல்பட்டார். 

நேரு தனக்கு பின் ஒரு வாரிசை நியமிக்காமல் விலகியதற்கு காரணம் அதை மக்களும்,அவர்களின் பிரதிநிதிகளும் தேர்வு செய்யட்டும் என்று எண்ணியதே காரணம். நேருவை வாழ்நாள் முழுக்க தீவிரமாக விமர்சித்த D.F.கரக்கா இப்படி அவரின் உறுதியை புகழ்ந்தார் ,”நேரு தன்னுடைய வாரிசை பற்றி எந்த குறிப்பிடுதலையும் செய்யாதது மெச்சத்தக்கது. நேரு தனக்கு பின் வருகிறவர்களுக்கான பணி அது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை.”

கற்பிதம் 5 :

நேரு மையப்படுத்தப்பட்ட ஸ்டாலினிஸ்ட் பாணியிலான பொருளாதார வளர்ச்சி மாதிரியை கொண்டு வந்து நம்மை பல ஆண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி இருக்க செய்துவிட்டார் 

பொருளாதரத்தை வேகமாக மற்றும் பெரிய அளவில் திறந்துவிட வேண்டும் என்று எண்ணுவோர் இந்த வாதத்தை வலிமையாக முன்வைக்கிறார்கள். உண்மையில் இறக்குமதிக்கு மாற்றான பொருளாதார மாதிரியை கொண்டு வருவதில் விடுதலைக்கு பின்னர் கருத்து ஒற்றுமை இருந்தது என்பதே உண்மை. 

ரஷ்யா மட்டுமல்லாமல் ஜெர்மனி,ஜப்பான் ஆகிய தேசங்களும் எடுத்துக்காட்டுகளாக கொள்ளப்பட்டன. காலனியாதிக்கம் இந்தியர்களை அதிகமான மற்றும் நீளும் வெளிநாட்டு முதலீட்டின் மீது பயத்தை உண்டு செய்தது. மேலும் இந்திய தொழில் துறையே அரசின் ஆதரவு மற்றும் மானியத்தை கோரியது. 1944 இன் பம்பாய் திட்டத்தில் இந்தியாவின் முக்கிய முதலாளிகள் அனைவரும் கையெழுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆற்றல்,நீர்,போக்குவரத்து மற்றும் சுரங்கங்கள் என்று எல்லா முக்கிய துறைகளிலும் அரசின் குறிக்கீட்டையும் அதன் மூலமாக அவற்றை வளர்ப்பதையும் செய்ய சொல்லி கேட்டுக்கொண்டார்கள். தங்களிடம் அப்படி செய்ய போதுமான நிதியில்லாததால் அதை செய்வது அரசின் கடமை என்று அவர்கள் நினைத்தார்கள். 

இது சந்தைமயப்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் இறுகிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு காலங்களுக்கு இடையயேயான போட்டி மற்றும் அவற்றின் நன்மைகள்,தீமைகள் பற்றிய வாதமில்லை. ஏன் நாம் இப்படியொரு தொழில்மய கொள்கையை தேர்ந்தெடுத்தோம் என்பதற்கான பதில் மட்டுமே இது : தொழிலதிபர்கள்,விஞ்ஞானிகள்,பொருளாதார வல்லுனர்கள்,அரசியல்வாதிகள் பல்வேறு தத்துவங்கள் மற்றும் வேறுபாடுகளை கடந்து நேருவோடு இந்த கருத்தில் பெரிதும் ஒத்துப்போனார்கள். அல்லது நேரு அவர்களோடு ஒத்துப்போனார் என்றும் சொல்லலாம். 

நேருவின் காலத்தில் அவரைப்போல நேசிக்கப்பட்டவரும் இல்லை ; அவரின் காலத்திற்கு பிறகு அவரைப்போல வில்லனாக்கப்பட்டவரும் வேறெவரும் இல்லை. வில்லனாக நேருவை காண்பிக்கும் போக்கு இப்படியான பொய்யான கற்பிதங்களால் தொடர்ந்து நீடிக்கிறது. –Ramachandra Guha

மூலம் : http://www.hindu.com/mag/2004/05/23/stories/2004052300240300.htm

விதியோடு ஒரு ஒப்பந்தம்-விடுதலை பெற்ற அன்று நேரு பேசிய உரை !


இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த நள்ளிரவில் நேரு அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரையின் தமிழாக்கம்:

வெகுகாலத்துக்கு முன்னர் நாம் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம் . நம்முடைய சபதத்தை முழுமையாக இல்லா விட்டாலும் பெருமளவில் மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. நல்லிரவு துவங்கும் தருணத்தில் உலகமே உறங்கிக்கொண்டு இருக்கிற பொழுது,இந்தியா உயிர் மற்றும் விடுதலையோடு விழிப்பு கொள்கிறது ! வரலாற்றில் அரிதாக வரும் பழையதில் இருந்து புதியதை நோக்கி அடியெடுத்து வைக்கும் அந்த தருணம் வந்துள்ளது ;தேசத்தின் ஆன்மாவை வெகுகாலத்துக்கு ஒடுக்கி வைத்த காலம் முடிந்து ஆன்மா ஆனந்தக்குரல் எழுப்பும் 

இந்த உன்னத கணத்தில் இந்த தேசத்தின் மற்றும் தேசமக்களின் சேவைக்கும் மனித குலத்தின் நன்மைக்காகவும் சேவை செய்ய உறுதி பூணுவது சரியாக இருக்கும். வரலாற்றின் விடியலில் இந்தியா தன்னுடைய முடிவில்லாத தேடலை துவங்கி இருக்கிறது. அந்த அன்னையின் சுவடுகளில்லா நூற்றாண்டுகளின் வழியான முடிவில்லா தேடலில் வெற்றியும் தோல்வியும் கலந்தே வந்திருக்கிறது, என்றாலும்,அவளுக்கு வலிமை தந்த அடிப்படைகளை எப்பொழுதும் இந்தியா மறந்தது இல்லை ; தன்னுடைய தேடலை தொலைத்ததும் இல்லை. இந்த நாளில் துரதிர்ஷ்ட காலமொன்றை முடித்துக்கொண்டு மீண்டும் இந்தியா தன்னை கண்டடைகிறது. 

நாம் கொண்டாடும் இந்த சாதனை நாம் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய வெற்றிகள் மற்றும் சாதனைகளுக்கான ஒரு படி,ஒரு துவக்கம் அல்லது ஒரு வாய்ப்பு ! நாம் இந்த தருணத்தை பற்றிக்கொள்ளவும்,வருங்காலத்தின் சவால்களை எதிர்கொள்ளவும் நெஞ்சுரம் கொண்டிருக்கிறோமா ? 
விடுதலையும்,அதிகாரமும் பொறுப்பை கொண்டு வருகின்றன. இந்த சபை அதற்கான பொறுப்பை கொண்டிருக்கிறது. இந்த தேசத்தின் இறையான்மையை இந்த மக்களின் சார்பாக காக்க வேண்டிய பொறுப்பை அதை ஏற்றிருக்கிறது. உழைப்பின் வலிகளையும்,இதயம் முழுக்க நிரம்பி இருக்கும் சோகத்தின் நினைவுகளையும் சுமந்தே நாம் இந்த விடுதலையின் பிறப்பை அடைந்து இருக்கிறோம். சில துன்பங்கள் இன்னமும் தொடகிறது. கடந்த காலம் முடிந்துவிட்டது,நம் முன் எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது

வருங்காலத்தில் சோம்பியிருக்கவோ,சும்மாயிருக்கவோ கூடாது. முடிவில்லா தேடலின் மூலம் நம்முடைய நிலைப்பாடுகளை பூர்த்தி செய்து கொள்ள முனைய வேண்டும். இந்தியாவுக்கான சேவை என்பது அல்லலுறும் பல கோடி மக்களுக்கான சேவை என்பதையே குறிக்கிறது. அது வறுமை,அறியாமை,நோய்கள்,வாய்ப்புகளின் சமமின்மை ஆகியவற்றை நீக்குதலையே குறிக்கிறது. 
நம் காலத்தின் உயர்ந்த மனிதர்களின் நோக்கம் எல்லா மக்களின் கண்களின் கண்ணீரை துடைத்தலே ஆகும். அது நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால்,கண்ணீரும் துன்புறுதலும் இருக்கிற வரை நம்முடைய பணி ஓயாது ! 
.

ஆகவே நாம் உழைக்க வேண்டும்,தீவிரமாக நம்முடைய கனவுகளை நிஜமாக்க உழைக்க வேண்டும் ! அந்த கனவுகள் இந்தியாவுக்கானவை. அவை உலகுக்கும்,எல்லா மக்களுக்கும் ஆனவை. 
சமாதானம் பிரிக்க முடியாதது என்று சொல்வார்கள் ; விடுதலையும் அப்படிப்பட்டதே ! வளமும்,பேரிடரும் கலந்தே உலகம் அமையும். எவற்றையும் தனியே பிரித்து விடமுடியாது ! 
எந்த இந்திய மக்களின் பிரதிநிதிகளோ நாம் அவர்களிடம் நம்முடன் நம்பிக்கை மற்றும் பிடிப்பு கொண்டு இந்த பெரும் சாகசத்தில் பங்குகொள்ள அழைக்கிறோம். சிறுமையான,தாழ்த்தும் விமர்சனத்துக்கான காலமில்லை இது. ஒருவரை இன்னொருவர் ஏசிக்கொள்ளவும்,தீய எண்ணங்கள் கொண்டிருக்கவும் இது உகந்த தருணமில்லை. நம் பிள்ளைகள் ஆனந்தமாக வாழும் அற்புத இல்லமாக இந்த விடுதலை இந்தியாவை கட்டமைக்க வேண்டும் 
விதியோடு ஒப்பந்தம் செய்து கொண்ட அமந்த நாள் வந்துவிட்டது. இந்தியா நிமிர்ந்து நிற்கிறது ! நீண்ட உறக்கம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் இந்த தேசம் உற்சாகம் மற்றும் விடுதலை பெற்று எழுந்து நிற்கிறது ! நமக்கான திருப்புமுனை கொண்ட வரலாறு இன்று துவங்குகிறது ! இந்த வரலாற்றில் நாம் செயல்பட்டு,வாழ்ந்து அதை அற்புதமாக படைப்போம். 

இது இந்தியா,ஆசியா மற்றும் உலகத்துக்கு அதிமுக்கியமான தருணம்., ஒரு புதிய நட்சத்திரம்,விடுதலையின் நட்சத்திரம் எழுகிறது ! ஒரு புதிய நம்பிக்கை,தொலைநோக்கு இன்று நிஜமாகிறது ! இந்த நட்சத்திரம் என்றைக்கும் அஸ்தமிக்காமல்,நம்பிக்கை துரோகம் என்றைக்கும் நிகழாமல் இருக்கட்டும் !

மேகங்கள் நம்மை சூழ்ந்து இருந்தாலும் நம்முடைய மக்கள் துன்பத்ல் உழன்றாலும்,பெருஞ்சிக்கல்கள் நம்மை சூழ்ந்திருந்தாலும் இந்த விடுதலையை நாம் கொண்டாடுகிறோம், விடுதலை பொறுப்புகள்,சுமைகள் ஆகியவற்றோடு வருகிறது. அவற்றை விடுதலை மற்றும் ஒழுக்கம் கொண்ட மக்களின் உணர்வோடு எதிர்கொள்ள வேண்டும். 

இந்த நாளில் விடுதலையின் கணத்தில் நம்முடைய முதன்மையான சிந்தனை இந்த விடுதலையின் சிற்பி நம்முடைய தேசப்பிதாவை நோக்கி போகிறது. அவரே இந்தியாவின் ஆன்மாவின் உருவமாக விடுதலையின் விளக்கை ஏற்றி நம்மை சூழ்ந்திருந்த இருளை அகற்றினார் 

அவரின் மதிப்பட்ட்ற பின்பற்றுபவர்களாக நாம் இருந்திருக்கிறோம். அவரின் செய்தியை கறைப்படுத்தி இருக்கிறோம். ஆனாலும்,நம்முடைய வருங்கால சந்ததிகளின் மனதில் அந்த சிந்தனைகளை பதிக்க வேண்டும், இந்த தேசத்தின் பெருமை மிகுந்த மகனின் நம்பிக்கைமாற்றல் தைரியம் மற்றும் தன்னடக்கம் ஆகியவற்றை அவர்களுக்கு சொல்லவேண்டும்,. அந்த நம்பிக்கை விளக்கு அணிய நாம் விட மாட்டோம். எத்தகைய காற்று மற்றும் பெரும்புயல் அடித்தாலும் அந்த விளக்கை அணைய விட மாட்டோம் tempest.

அடுத்த சிந்தனை நம்முடைய முகம் தெரியா தன்னார்வலர்கள் மற்றும் விடுதலையின் வீரர்கள் பற்றியதாக இருக்கவேண்டும்., அவர்கள் எந்த புகழ்,பரிசு ஆகியன இல்லாமல் இந்த தேசத்துக்காக தங்களின் இறப்பு வரை சேவை செய்திருக்கிறார்கள் 

நம்மோடு இப்பொழுது இல்லாத,நம்மிடம் இருந்து அரசியல் எல்லைகளால் பிரிக்கப்பட்ட நம்முடன் மகிழ்ச்சியோடு விடுதலையை கொண்டாட முடியாத,பகிர்ந்து கொள்ள முடியாத நம்முடையசகோதர-சகோதரிகளை நினைவு கூர்கிறோம். அவர்கள் நம்மில் ஒருவர்,நம்மோடு எது நடந்தாலும் உடனிருப்பார்கள். அவர்களின் இன்பம் மற்றும் துன்பத்தில் நாம் பங்குகொள்வோம். 

நம் முன் எதிர்காலம் இருக்கிறது. அப்படியே உலர்ந்து போவோமா ? அல்லது நிலைஒது நிற்போமா ? இந்தியாவின் சாதாரண மனிதனுக்கு,உழைப்பாளிகளுக்கு,விவசாய தொழிலாளிகளுக்கு வறுமை,அறியாமை,நோய்கள் ஆகியவற்றில் இருந்து விடுதலை கொடுத்து அவர்களுக்கு விடுதலை மற்றும் வாய்ப்புகளை உருவாக்கும் சமூக,பொருளாதார,அரசியல் அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் எல்லாருக்கும் நீதி மற்றும் வாழ்வின் முழுமையை உறுதி செய்வோம். நம் முன்னர் கடும் உழைப்பு காத்திருக்கிறது. நாம் நம்முடைய உறுதியை மீட்டெடுக்கும் வரை நம்முடைய மக்களுக்கான விதியை பெறும்வரை நம் யாருக்கும் ஓய்வில்லை. 

நாம் இந்த பெருநாட்டின் குடிமகன்கள் தைரியம் மிகுந்த முன்னெடுப்பின் விளிம்பில் இருக்கிறோம். அதன் உயர்ந்த தருணத்துக்கு ஏற்ப நாம் வாழவேண்டும். நாம் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் நாம் இந்த தேசத்தின் சம உரிமை,சலுகைள் மற்றும் பொறுப்புகள் மிகுந்த பிள்ளைகளே ! நாம் மதவாதம் மற்றும் குறுகிய மனோபாவம் ஆகியன் கொண்டிருப்பதை ஊக்குவிக்க முடியாது. 

உலகின் தேசங்கள் மற்றும் மக்களுக்கு நாம் அமைதி,விடுதலை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை காக்க ஒத்துழைக்கும் வாழ்த்து மற்றும் உறுதியை அனுப்பி வைக்கிறோம். இந்தியா எனும் வெகுவாக நேசிக்கப்படும்,பண்டைய,புனித,எப்பொழுதும் இளமையான அன்னை மண்ணுக்கு மரியாதை மிகுந்த மரியாதையை செலுத்துகிறோம். நாம் அவளின் சேவைக்காக நம்மை புதிதாக ஒப்புவித்து கொள்கிறோம். ஜெய் ஹிந்த் !

இரண்டாவது ஆப்பிள்-ஸ்டீவ் ஜாப்ஸ் சாதித்த கதை


Slv Moorthy அவர்கள் எழுதியிருந்த இரண்டாவது ஆப்பிள் என்கிற ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய புத்தகத்தை படித்து முடித்தேன். டெக் உலகின் மன்னர் என்று நாமெல்லாம் அறியும் அவரின் குறைகளோடு இணைத்தே அவரின் வாழ்க்கையை பேசுகிற வகையில் இந்த நூல் ஈர்க்கிறது. அவரை பெற்றவர்கள் திருமணத்துக்கு முந்தைய உறவில் பிறந்தவர் என்பதாலும்,தந்தை வேறு நாட்டவர் என்பதாலும் பிள்ளையை ஆதரவற்றோர் விடுதியில் விட்டு விட்டு நகர்ந்தார்கள். இது வாழ்க்கையின் முதல் நிராகரிப்பு ; அடுத்து முதன்முதலில் தத்தெடுக்க வந்தவர் பெண் குழந்தை தான் வேண்டும் என்று அடம் பிடித்தது அடுத்த நிராகரிப்பு. ஆனால் அவரை ஜாப்ஸ் தம்பதி தத்தெடுத்த பின்பு அவரிடம் “உன்னை உன் பெற்றோர் விட்டுவிட்டு போய் விட்டார்கள் !” என்று மென்மையாக சொன்னாலும் உண்மை அவரை சுடவே செய்தது. 

அதை பாசிட்டிவாக எடுத்துக்கொண்ட குறும்புக்கார சிறுவனான ஸ்டீவ்வின் வகுப்பில் அவருக்கு அமைந்த ஆசிரியர் இமோஜின் ஏதேனும் சாதித்தால் பரிசுகள் கொடுத்து ஊக்குவித்து அவரின் வால்தனத்தை சீர்படுத்தினார். “அவர் இல்லாமல் போயிருந்தால் நான் ரவுடியாக ஆகியிருப்பேன் !” என்று ஸ்டீவ் பிற்காலத்தில் குறிக்கிற அளவுக்கு அந்த ஆசிரியரின் தாக்கம் அவரின் வாழ்க்கையில் இருந்தது. போன் நிறுவனங்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு இருவருக்குள் பேசிக்கொள்ள உதவும் ப்ளூ பாக்ஸ் கருவியை இளம் வயதில் தயாரித்த பொழுது அதை நாற்பது டாலரில் தயாரித்து நூற்றி ஐம்பது டாலரில் விற்கிற மார்க்கெடிங் யுத்தி அவரிடம் இருந்தது. “நல்ல தரமான பொருளை தருகிறோம் ; எதற்கு விலையில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். எனக்கு போட்டி நானே தான் !”என்பது அவரின் தாரக மந்திரமாக இருந்தது. 

வெறும் மூன்றே மூன்று கணினிகளை தயாரித்து விட்டு சான் பிரான்சிஸ்கோ பொருட்காட்சியில் நாளைக்கு கண்காட்சி என்றால் முதல்நாள் இரவு வரை எதுவுமே செய்யாமல் திரை போட்டு மூடி ஆர்வத்தை கிளப்பிவிட்டு இரவோடு இரவாக இழைத்து விட்டு பல்வேறு காலி பெட்டிகளை கம்பீரமாக அடுக்கி வைத்து நிறைய கணினிகள் தயார் என்று நம்ப வைத்து ஒரு ஆரம்ப கால கம்பெனிக்கு ஐநூறு ஆர்டர்களை பிடித்ததும் அவரின் சாமர்த்தியமே !

பல நாள் குளிக்காமல்,ஒழுங்காக தலை சீவாமல்,சவரம் செய்யாமல்,இரண்டே இரண்டு வகையான மனிதர்கள் தான் உண்டு அதி புத்திசாலிகள்,அடிமுட்டாள்கள் என்று வகை பிரித்தே வேலை பார்த்த அவருடன் நிறைய பேர் வேலை பார்க்க முடியாமல் ஓடினார்கள்.பீஸ் கொடுக்க காசில்லாமல் இருந்த சூழலிலும் வகுப்புக்குள் அனுமதித்த ஆசிரியரால் கற்றுக்கொண்ட காளிக்ராபி வகுப்புகள் அவற்றின் கேட்ஜெட்களின் எழுத்துரு வடிவமைப்பில் பெருமளவில் உதவின. 

ஜெராக்ஸ் நிறுவனத்தின் Graphical user interfaceமற்றும் மவுஸ் ஆகிய இரண்டு கண்டுபிடிப்புகளை இவரும்,பில் கேட்ஸும் சுட்டுக்கொண்டு போய் இன்னமும் மேம்படுத்தினார்கள். இவர் ஜெராக்ஸ் நிறுவனம் பயன்படுத்தி இருந்த மூன்று பட்டன்களை நீக்கியதோடு நில்லாமல் கூடவே முன்னூறு டாலர் செலவான மவுசை பதினைந்து டாலரில் கச்சிதமாக வடிவமைத்து கலக்கினார். 

மெக்கிண்டோஷ் கணினிகளை உருவாக்கிய பொழுது அதில் உண்டான வெப்பம் மற்றும் குறைவான சேமிப்பு வசதி அதை தோல்விக்கு தள்ளியது. இவரை லிசா திட்டத்தில் இருந்து டம்மியான தலைவர் பதவி கொடுத்து கழட்டியவர்கள் பின்னர் வேறொரு கம்பெனிக்கு நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு தொழில்நுட்ப உதவிகள் தந்து செயல்பட்டிருந்தாலும் பேக்கப் செய்தார்கள். அதை பெப்சி நிறுவனத்தில் இருந்து சர்க்கரை தண்ணீரை விற்றுக்கொண்டே இருக்காதீர்கள் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் அழைத்து வந்த ஸ்கல்லியே செய்து முடித்தார். நெக்ஸ்ட்,பிக்ஸார் என்று தன்னுடைய பயணத்தை அமைத்துக்கொண்டாலும் அவற்றின் விற்பனை தோல்வியே கண்டது. ஆப்பிள் நிறுவனம் இறங்குமுகத்தில் இருந்ததும் மீண்டும் அழைக்கப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஒரே ஒரு பங்கை மட்டும் வைத்துக்கொண்டு இருந்தவர் நாற்பத்தி இரண்டு கணினி வகைகளில் முப்பத்தி எட்டை மூட்டை கட்டினார். சிப் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு நிறுவனங்களிடம் பேரம் பேசி விலையை குறைத்தார். பல பேரை தயவு பார்க்காமல் வீட்டுக்கு அனுப்பினார். வைரியான பில்கேட்ஸ் அவர்களை தயாரிப்பில் உதவ அழைத்தார். 

அடுத்து பாடல்களை தன்னுடைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள மியூசிக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு iTunesமூலம் கொள்ளை லாபம் சம்பாதித்தார். iStoreகளை துவங்கி அங்கே கணினியை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒருவர் பயன்படுத்தி பார்க்கலாம் என்பதோடு ஜீனியஸ் என்று ஒரு ஆளை நியமித்து அவர்களின் சந்தேகம் மட்டுமே தீர்க்கிற பணியை கொடுத்து அதையும் பெருத்த ஹிட் ஆக்கினார். அவர் உருவாக்கிய செல்களில் ஸ்க்ரூ கூட தெரியக்கூடாது,கண்ணாடியில் கேஸிங் இருக்க வேண்டும் என்று இழைத்து கீபோர்ட் இல்லாமல் செல்போன்களை கொண்டு வந்து துவம்சம் செய்தார். 

தன்னுடைய மகளுக்கு தான் தகப்பனில்லை என்று முதலில் அடம் பிடித்தாலும் பின்னர் ஏற்றுக்கொண்டு அவருக்கு உதவிகள் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் இறக்கிற தருவாயில் கூட ,”ஓ வாவ் ! ஓ வாவ் !” என்று அழகியலோடு விடை பெற்றார் என்பதோடு நூல் முடிகிற பொழுது நமக்கும் ஒரு வாவ் போடத்தோன்றுகிறது. 

விலை : 75
vikatan பிரசுரம் 

ஆசிரியர் : எஸ்.எல்.வி மூர்த்தி 
பக்கங்கள் : 152
http://books.vikatan.com/index.php?bid=1948

ஷெர்லாக் ஹோம்சை உருவாக்கிய தோல்வியுற்ற மருத்துவர் !


ஷெர்லாக் ஹோம்ஸ் காதலரா நீங்கள் ?அப்பொழுது நீங்கள் நன்றி சொல்லவேண்டியது சர் ஆர்தர் கானன்டெயில் எனும் தோற்றுப்போன மருத்துவருக்கு தான்
!மருத்துவத்தில் மாபெரும் தோல்வி அடைந்த கானன்டாயில் தான் பார்த்த ஒரு நண்பரின் தாக்கத்தில் உருவாக்கிய கதாப்பாத்திரம் காலத்தை கடந்து நிற்கும் என்று அவரே எதிர்பார்க்கவில்லை தான் 

ஹோம்ஸ் பறந்து பறந்து
சாகசங்கள் செய்ய மாட்டார் ,இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் அப்பொழுது இல்லை !அவரிடம் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை;காதலிகள் இல்லை 
ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு ஜீனியஸ் ;விழுந்து கிடக்கும் களிமண்ணை வைத்தே அது லண்டனின் எந்த பகுதி களிமண் என சொல்கிற அளவிற்கு அறிவு உண்டு .தன்னை
பார்க்க வருகிறவரை பற்றி ஒவ்வொரு கதையிலும் மிக துல்லியமாக சொல்லும் ஆற்றலும் இவருக்கு உண்டு.ஆனால் இதில் எந்த மாயாஜாலமும் இல்லை என்பதை
ஹோம்ஸ் வாட்சனிடம் விவரிக்கும் பொழுதே நமக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ளும்

எல்லா குற்றங்களைப்பற்றியும் தகவல் ஹோம்ஸ் வைத்திருப்பார் . “எல்லா
குற்றங்களும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டன “என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம் மொத்தம் 56 சிறுகதைகள் மற்றும் நான்கு நாவல்களில்
வந்து சாகா வரம் பெற்று விட்ட இந்த கதாபத்திரத்தை தற்போழுது திரைப்படங்களின் மூலமும் சீரியல்கள் மூலமும் தற்போதும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். .

கானன்டாயில் மேலும் பல கதைகளையும் எழுதி உள்ளார்.அவரின் இழந்த உலகம் என்னும் கதையில் டினோசர் எல்லாம் வந்து பயம் காட்டும்..அதில் நடக்கும்
சாகசங்கள் எல்லாம் த்ரில்லிங் ஆக இருந்தாலும் ஷெர்லாக் ஹோம்ஸ் மயக்கத்தில் இருந்த மக்கள் இதை சட்டை செய்யவே இல்லை/பார்த்தார் மனுஷன்

கடுப்பாகி அவர் தோற்ற கேஸ்கள் என நூல் வெளியிட்டார் !அதுவும் ஹிட்,அவர் இறந்தே விட்டார் எனவும்
முடித்தார் ; ஷெர்லாக் தன் எதிரி மரியார்டியுடன் சண்டை போட்டு இறந்து விட்டதாக எழுதி விட்டார்.அது வரை ஷெர்லாக் ஹோம்ஸ்கதைகள் தொடர்ந்து வந்து கொண்டு
இருந்த strand magazine விற்பனை சர் என விழுந்து விட்டது .பல நாட்களுக்கு டாக்ஸி டிரைவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்

கடும் எதிர்ப்புக்கு பின் ஹோம்ஸை மீண்டும் கொண்டுவந்தார். ஆனால் கதை முன்னமே நடப்பது போல வடிவமைத்தார் 221 B பேக்கர்தெரு என்னும் இல்லாத ஷெர்லாக் ஹோம்ஸின் முகவரிக்கு இன்று வரை
பல்வேறு குற்றங்களை கண்டுபிடிக்க சொல்லி வரும் கடிதங்கள் ஏராளம்.அந்த ஷெர்லாக் ஹோம்ஸை உருவாக்கிய கானான்டாயில் பிறந்த தினம் மே 22

 
 

சமூக தீர்திருத்த பேரொளி ராஜாராம் மோகன் ராய் !


நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். 1772 இல் வங்கத்தில் பிறந்தார் இவர். இவரின் குடும்பம் வைணவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. முகலாய ஆட்சியாளர்களின் கீழே வரி வசூல் செய்யும் பணியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் பால்ய காலத்திலேயே உயர் ஜாதியில் இயல்பாக இருக்கும் வழக்கத்தால் அவருக்கு இருமுறை திருமணம் செய்துவைக்க பட்டது. முதலில் வங்காளி மற்றும் பாரசீகத்தை கற்று தேர்ந்த பின் பாட்னா போய் அராபிய மொழியை கற்றுக்கொண்டார். அங்கே அவரின் ஆசிரியர்கள் அவருக்கு அரிஸ்டாட்டில்,குரான் மற்றும் பைபிளை அறிமுகப்படுத்தினார்கள். பனாரஸில் அவர் சமஸ்க்ருதத்தை கற்றுத்தேர்ந்தார். இப்படி அவர் கற்ற மொழிகள் மட்டும் ஒரு டஜன் ! 

அவரின் அண்ணன் இறந்ததும் அவரின் கண் முன்னரே அவரின் எதிர்ப்பையும் மீறி அவரின் அண்ணி சதியால் தீக்கிரையாக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக பல்வேறு ஊர்களில் அவர் பணியாற்றினார். அவரின் முதல் நூல் பாராசீகத்தில் அராபிய மொழியிலான முன்னுரையோடு வெளிவந்தது. அது உருவ வழிபாட்டை தாக்கியிருந்தது. கல்கத்தாவில் வாழ ஆரம்பித்ததும் ஆத்மிய சபையை துவங்கி இந்து மதத்தில் இருந்த மத மற்றும் சமூக தீமைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தார். 

பிரம்ம சபையை நிறுவினார் ; பின்னர் அதுவே பிரம்ம சமாஜம் ஆனது. உருவ வழிபாட்டை எதிர்த்ததோடு இல்லாமல் ஜாதிய அமைப்பின் இறுக்கமான தன்மை,அர்த்தமற்ற மத சடங்குகள் ஆகியவற்றை விமர்சனம் செய்தார். ஒரே ஒரு இறைவனை தான் இந்து மதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் வலியுறுத்துவதாக உறுதிபட சொன்ன அவர் இந்திய மதத்தின் பல கடவுள் வழிபாடு,கிறிஸ்துவத்தின் இறைவன்,அவரின் மகன் மற்றும் புனித ஆவி வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தின் தத்துவ வெளிச்சத்தை இந்துக்கள் அறிய வேண்டும் என்று அவர் இயங்கினாலும்,PERCEPTS OF JESUS நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்று நிராகரித்தார். இவ்வாறு இரு மதத்து மக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார். 

இந்து மதத்தை கிறிஸ்துவ மிஷனரிக்கள் தாக்குவதை தீவிரமாக எதிர்த்ததோடு மத மாற்றத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார். மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு பகுதிகளின் தத்துவ சங்கமம் நிகழ வேண்டும் என்று அவர் இயங்கியதோடு எல்லா மதத்தின் நம்பிக்கையாளர்களும் சகோதர்களாக சேர்ந்திருக்க முடியும் என்று நம்பினார். அவரை பழமைவாதிகள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் ; அதற்கான கூட்டத்தில் இவரை பெற்ற அன்னையே கலந்து கொண்டார். அவரை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்.

பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை. 

மேலும் ஆங்கிலேயே நாடாளுமன்றத்துக்கு உடன் கட்டை ஏறுதலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் கடிதம் எழுதிய பொழுது கொண்டு வரக்கூடாது என்று உறுதிபட இவரும் கடிதம் எழுதினார். பல்வேறு இறுதி சடங்கு நடைபெறும் இடங்களில் பெண்கள் தீக்கிரையாக்கப்படாமல் இருக்க உறவினர்களிடம் நெடிய சமரச பேச்சுவார்த்தையை நிகழ்த்துகிற பண்பாளராகவும் அவர் இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றும்,பல தார திருமணம் கூடவே கூடாது என்றும் அவர் வாதாடினார்.

ஆண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை துவங்கி அதில் ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பித்தார். கூடவே இயங்கியல் மற்றும் வால்டேரின் தத்துவங்களை அவர் அங்கே கற்பித்தார். பல்வேறு இதழ்களை நடத்திய இந்தியாவின் பத்திரிக்கை துறை முன்னோடி அவர். வங்க மொழியில் இலக்கணம் சார்ந்து பல்வேறு நூல்களையும் அவர் இயற்றினார். ஜமீன்தார்கள் நிலத்தில் பாடுபடும் தொழிலாளியை சுரண்டுவதை அவர் சாடினார். ஆங்கிலேய அரசு ஒரு நிலத்தில் இருந்து எவ்வளவு வரி பெறப்பட வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை சாடியதோடு இந்திய பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் அவர் முயற்சிகள் எடுத்தார். 

லத்தீன் அமெரிக்காவின் மக்கள் புரட்சி வென்றதும் அவர் ஊரில் உள்ள எல்லாருக்கும் விருந்து போட்டார். அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார் 

1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் போன அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த பொழுது மரணமடைந்தார். அங்கே எரிக்க வசதிகள் இல்லாததால் புதைக்கப்பட்டார். அவரின் கல்லறையின் மீது இந்த வாசகங்கள் ஒளிர்கின்றன :

இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள்
இறைவனின் மகிமை மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் அவரின் நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்.

சாக்ரடீஸ் எனும் தத்துவ பேராசான் !


சாக்ரடீஸ்-பள்ளி போய் படிக்காத,குளிக்க ஆர்வமே இல்லாத,அழுக்காடை அணிந்த வெண்மையான சிந்தனைக்காரர் அவர் .இளைஞர்களை சிந்திக்க சொல்லித்தூண்டினார் . மதம்,கடவுள்,அரசு,நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மனித சிந்தனையின் ஆய்வுக்குரியவை என்றார் .எல்லாவற்றின் புனிதத்தையும் கேள்வி கேட்க சொன்னார் .

ஒருவருடன் பேசும் பொழுது வாதத்தை கேள்விகள் மூலம் எழுப்பி உண்மையை உணரும் முறையை உருவாக்கினார் ;இளைஞர்கள் அவர் இருக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக போனார்கள் .உன்னையே நீ அறிவாய் என பகுத்தறிவை வலியுறுத்தினார் .டெல்பி ஆலய அசரீரி நாட்டிலேயே அறிவாளி யார் என்கிற கேள்விக்கு சாக்ரடீஸ் என பதில் சொன்னதும்,அதற்கு இவர் ,”எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்கு தெளிவாக தெரியும் அதுவே காரணமாக இருக்கலாம் “என்றார் .

தெருவின் ஊடாக பல கடைகள் வழியாக போனார் ;எதிலும் எதையும் வாங்கவில்லை .”ஏன் “எனக்கேட்டதற்கு ,”எத்தனை பொருட்கள் இல்லாமல் நிறைவான வாழ்வு வாழமுடிகிறது என சோதித்து பார்த்தேன் .”என்றார் .அவரின் பேச்சுக்களை பிளாட்டோ முதலிய சீடர்கள் தொகுத்தார்கள் .

அரசாங்க விருந்தில் ஒரு பிரமுகருக்காக சாக்ரடீஸ் வெகுநேரம் காத்திருந்தார் .அவர் வருகிற மாதிரி தெரியவில்லை ;கிளம்ப எத்தனித்தார் அவர் .,நண்பரோ ,”அவர் கோவித்துக்கொள்வார் .அரசாங்க பகை வேண்டாம் .”என்றதும் ,”அரசாங்கம் என்னை கைது செய்ய முடிவு செய்துவிட்டால் தானே காரணங்களை கண்டுபிடித்து கொள்ளும் .”என்றுவிட்டு வெளியேறினார் .மதநம்பிக்கையை கேலி செய்கிறார் ,இளைஞர்களை தவறான பாதைக்கு தூண்டுகிறார் என இவர் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும்,லைகோன் எனும் மேடைப் பேச்சாளனும் வழக்கு தொடுத்தனர் .

வழக்கின் பொழுது மக்களை சிந்திக்க தூண்டியது தவறு என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ;கடவுளை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் நாத்திகம் ;ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பார்ப்பது அன்று என வாதிட்ட சாக்ரடீஸ் மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொன்னார்கள் .கம்பீரமாக மறுத்தார். .மரண தண்டனைக்கு ஆதரவாக 281 ஓட்டும்,எதிராக 220 ஓட்டும் விழுந்தன .சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். தப்பித்து போக நண்பர்கள் ஏற்பாடு செய்ய முற்பட்ட பொழுது ,”எனக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு சமூக ஒப்பந்தம் உண்டு. அந்த அமைப்புக்குள் இருந்து கொண்டு தான் நான் கேள்வி கேட்பேன். அதை மீறி சென்று நான் தவறான எடுத்துக்காட்டு ஆகமாட்டேன் !” என்றார் அவர். 

.ஹெம்லாக் மரத்து விஷம் குடித்து சாக வேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டு இருந்தது. .சிறையில் இசைக்கருவி வல்லுநர் ஒருவரிடம் இசை கற்றுக்கொண்டார் அவர் .சாகிற பொழுத எதற்கு இது ?என கேட்டதற்கு ,”சாவதற்கு முன் புதிதாக எதையாவது கற்க வேண்டும் !”என்றார் .

விஷம் கொடுக்கப்பட்டதும் ,வாங்கி சிரித்துக்கொண்டே அதை பதிவாக எழுத சொன்னார் .”அருந்திவிட்டேன் ;கால்கள் மரத்து போகிறது .இதயம் படபடக்கிறது .மயக்கமாக இருக்கிறது ;போர்வையை போர்த்தி படுத்துக்கொள்கிறேன் “என தன் மரணத்தை பதிவு செய்த முதல் ஆள் சாக்ரடீஸ் தான் .சாவதற்கு கொஞ்சம் முன்,” எதிர்வீட்டுகாரனுக்கு கோழிக்குஞ்சு கடன் ,மறக்காமல் கொடுத்து விடு !”என மனைவியிடம் சொல்லி சாகும் பொழுது கூட கடன்காரனாக சாக விரும்பாமல் கம்பீரமாக இறந்த அவருக்கு கடன்பட்டிருக்கிறது இச்சமூகம்