இந்திக்கு இணையான இடம் தமிழுக்கும் வேண்டும்!


இந்திக்கு இணையான இடம் தமிழுக்கும் வேண்டும்:

இந்த வருட குடியரசு தினம் சிறப்பானது. தென்னிந்தியாவை அதிர வைத்த, தமிழகம் முன்னின்று நடத்திய பரவலான இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களின் ஐம்பதாவது ஆண்டை அடைகிறோம்.

பல்வேறு போலீஸ் தாக்குதல்கள், மரணங்கள் ஆகியவற்றுக்கு வழிவகுத்த இந்தப் போராட்டங்கள் ஆங்கிலத்தை இந்திக்கு இணையாக அதிகாரப்பூர்வ மொழியாக மத்திய அரசு தொடரச் செய்தது. இந்தி வெறியர்கள் இந்த நாள் வரை இது ஆங்கிலம் என்கிற அந்நிய மொழியின் மீது தென்னிந்தியர்களுக்கு உள்ள காதலை இது காட்டுவதாக எண்ணிக்கொண்டு உள்ளார்கள். ஆனால், அது தவறான பார்வை. தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தை நாடவில்லை, தங்களின் சொந்த மொழியை இந்திக்கு இணையான இடத்தில் வைக்கவே விரும்புகிறார்கள். இந்தி மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது எதிர்ப்பதற்கான காரணங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இந்திய கூட்டமைப்பு உருவான சம்பவங்களைக் கவனித்தால் தென்னிந்தியா பெரிய ஆர்வமில்லாமலே அதில் பங்கேற்றதை காணமுடியும். ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிகள் பெரிய அளவில் வட இந்தியாவில் நடை பெற்றதையும் வட இந்தியாவில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களின் நீட்சியே பெரும்பாலும் தென்னிந்தியாவில் நடந்தது. இவற்றில் வடக்கு அதிக ஆர்வம், வேகம் கொண்டு செயல்பட்டது. இதற்கு என்ன காரணம் இருந்தாலும், விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தெற்கின் பங்கேற்பு இதனால் குறைவாகவே இருந்தது. இந்தக் காரணம், மற்றும் வெறும் பல காரணங்களால் தங்களின் மொழியை இந்திக்கு இணையாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று அப்பொழுது அழுத்திச் சொல்ல தவறிவிட்டது தெற்கு. ஆனால், தற்போது வேறொரு காலத்தில் வாழ்கிறோம்.

தென்னிந்திய மாநிலங்கள் தற்போது அரசு அதைச் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். நான் இதை எழுதுகிற பொழுதே, பல்லாயிரக்கணக்கான திராவிட இளைஞர் செயல்பாட்டாளர்கள் எட்டாவது பட்டியலில் இருக்கும் எல்லா மொழிகளையும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இது என்னவோ சென்னையோடு முடிந்து விடுகிற போராட்டம் என்று நினைத்தால் பெங்களூரு மக்களும் இதே மாதிரியான கோரிக்கையை வைக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். யாரெல்லாம் இந்தியே இந்தியர்களின் மொழி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக ஏன் அதற்கும் மேலாகத் தங்களின் தாய்மொழியைத்தான் இம்மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் ஆங்கிலத்தையோ, அது தருகிற வாய்ப்புகளையோ நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் ரங்ககூ என்கிற ஜப்பானிய சொல்லின் பொருளான, ‘மேற்கிடம் இருந்து கற்றல்’ என்பதை விரும்புகிறார்கள். தங்களின் தாய்மொழியை ஆங்கிலத்தில் உள்ள விஷயங்களால் செம்மைப்படுத்தலை இளைஞர்கள் செய்கிறார்கள். கூட்டாகப் பலர் சேர்ந்து பங்களிக்கும் Wiktionary மாதிரி தளங்களில் இந்தியின் இருப்பை விடத் தமிழ்,கன்னடம் ஆகியவற்றின் இருப்பு அதிகமாக உள்ளது பல நூறு கோடிகளை மத்திய அரசு அநியாயமாக இந்தியை வளர்க்க செலவிட்டும் சில திராவிட இளைஞர்களின் வேகத்துக்கு அது ஈடுகொடுக்க முடியவில்லை. நன்றாகப் படித்த மக்கள் தங்களின் பிள்ளைகளைக் கூட்டாக நடத்தப்படும் தாய் மொழி வழிக்கல்வி கூடங்களுக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்து உள்ளார்கள். ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் பல்வேறு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதைவிட ஆங்கிலத்தைத் திணித்தலே ஒரு பெரிய வன்முறைதான்.

இந்தியை தங்களின் அரசியல் ஆர்வம், வளர்ச்சி ஆகியவற்றை அடைக்க வந்த புல்லுருவியாகவே இவர்கள் பார்க்கிறார்கள். இந்தியை இதற்கு முன் இருந்த எந்த அரசுகளைவிடவும் விட வேகமாக மோடி அரசு வளர்க்க செய்த அபத்தமான செயல்கள் இந்த எண்ணத்தைக் காட்டுத்தீ போலப் பரப்பியிருக்கிறது. எங்கெல்லாம் இந்தியை தென்னகத்தில் பார்க்கிறார்களோ அங்கெல்லாம் அதை எதிர்க்க திராவிட இளைஞர்கள் (தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல) அழைக்கப்படுகிறார்கள். சமூக வலைதளங்களில் எப்படி இந்தி திணிப்பை பொது இடங்கள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விளம்பர நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் எதிர்கொள்வது என்று பதிவுகள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக, மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு தங்களின் சொந்த சிக்கல்களைத் தாண்டி மற்றவற்றையும் கவனிக்க வைத்திருக்கிறது. அவர்கள் கர்நாடகாவில் கன்னடம் பேசுபவர்களை, தமிழகத்தில் தமிழ் பேசுகிறவர்களைக் காண்கிறார்கள். பயணம், இணையம் ஆகியனவும் உலகம் முழுக்க என்ன நிலை உள்ளது என்பதைப் புரிய வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் பல்வேறு மொழிகளின் மொழிபெயர்ப்புக்கு பல கோடி டாலர்களைச் செலவிடுவதைப் போலவே இந்திய நாடாளுமன்றமும் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முக்கிய மொழியையும் இந்திய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவிக்க வேண்டும்.

நான் முன்னரே சொன்னது போல நாம் வேறொரு காலத்தில் வாழ்கிறோம். ஒரு பக்கம் இந்தி திணிப்பே இந்தியாவை ஒன்றாக வைத்திருக்கும் ஒரே வழி என்று எண்ணுகிறவர்களும், அப்படி இந்தியை திணிக்கக் கூடாது என்று கருதுகிறவர்கள் இன்னொரு பக்கமும் நிற்கிறார்கள். இன்னமும் இந்திய ஜனநாயகத்தின் ஆரம்பக் கட்டத்தை விட்டு அவர்கள் வெளிவரவில்லை. இந்தி என்ன இடத்தை அனுபவிக்கிறதோ அதை மற்ற மொழிகளும் அனுபவித்தால் மட்டுமே இந்தியா ஒன்றிணைந்த நாடாகத் தொடரும். அது நடந்தால், ஆங்கிலத்துக்கு அதிலிருந்து நல்ல விஷயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு அதன் வழி என்ன என்று காட்டப்படும்.

(இன்றைக்கு மொழிப்போரின் பொன்விழா ஆண்டு. கிரண் பட்னியின் கட்டுரை அதை ஒட்டி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது )

மூலம் :
http://ibnlive.in.com/blogs/kiranbatni/3707/65468/hindi-imposition-on-south-india-then-and-now.html

தமிழில் : பூ.கொ. சரவணன் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s