ஒரு பிரியத்தை முறித்தல்
அத்தனை சுலபமாய் இருப்பதாக சொல்கிறார்கள்.
அழுகையை அடக்கியபடி ஒருவர் பிரிவது தெரியும் உனக்கு…
மரணத்தின் மவுனம் தவறவிடப்படுவது
புரியும் நமக்கு…
கடவுளின் ஆயுதங்கள் சாத்தானுக்கு கைமாறுவது
அறிந்தும் கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது…
முத்தங்கள் கொடுத்துக்கொண்ட இதழ்களில்
“இனி பார்க்க முடியாது!” என்கிற சப்தங்கள் எழுவது
கால்டாக்ஸி ஒலியில் ஒளிந்து கொள்ள பிரார்த்திக்க மட்டுமே முடிகிறது…
பரிசுப் பொருட்கள் மீண்டும் வந்து சேரும் நாளில்
முகவரி மாறியிருப்பது சொல்ல நாய்க்குட்டி மட்டுமே இருக்கும்..
ஊருக்காக வாழ்தல் என்றபடி சோறள்ளிப் பிசைகையில் கை எப்பொழுதும் போல் அலைபேசியை அனிச்சையாய் வருடுகிறது…
ஆமாம்! எத்தனை முறை முறித்தாலும் காயாமல்
கசியும் ரணத்தின் திரவத்தை
அன்பு ஏன் பசிகொண்டு கேட்கிறது?