ஹிந்தித் திணிப்பால் ஹிந்தி வளருமா?:
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளரும்,அரசியல் விஞ்ஞானியுமான யோகேந்திர யாதவ்ஹிந்தி திவாஸ் நாள் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் எனச்சொல்லி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது :
செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்படும் ஹிந்தி திவாஸ் நாள் வருடாவருடம் நடக்கும் ஆன்மாவற்ற அரசாங்க சடங்கு. ஒரு ஹிந்தி திவாஸ் விழாவை நீங்கள் இரங்கல் கூட்டமோ என்று எண்ணிக்கொண்டால் உங்களை மன்னித்துவிடலாம்.
அந்த இரண்டு வாரங்கள் கடமை தவறாமல் வருடம் முழுக்க இந்தி நமக்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை நினைவுபடுத்தும்.
இந்திய அரசாங்கம் ராஜ்பாஷாவான ஹிந்தியை வளர்க்கிறேன் என்று எடுத்த முன்னெடுப்புகள் மாண்டரின்,ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கு அடுத்து பெரிய மொழியாகத் திகழும் ஹிந்தியை ஒரு அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக மாற்றியிருக்கிறது. ஹிந்தி திவாஸ் நம் நாட்டின் மொழிக்கொள்கையில் என்னவெல்லாம் தவறாக இருக்கிறதோ அது எல்லாவற்றின் அடையாளமாக திகழ்கிறது. இந்த தவறுகளை சரி செய்வதன் துவக்கமாக ஹிந்தி திவாஸ் விழாக்கொண்டாட்டத்தை நீக்கலாம்.
ஹிந்தியை தொடர்ந்து தூக்கிப்பிடிக்கும் நானே இப்படியொரு பரிந்துரையை தருவது வினோதமானதாக இருக்கலாம். என்னுடைய நண்பர்கள் இதை எதிர்க்கலாம். அவர்கள் ஹிந்தியில் அதிக பொருள் மற்றும் உயிர்ப்பை கொண்டு வந்து அதை வளர்ப்பதை விட்டுவிட்டு அரசாங்கம் ஹிந்திக்கு கொடுத்திருக்கும் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் விடுவதா என்று எதிர்க்குரல் கொடுக்கலாம்.
நான் முரண்படுகிறேன். ஹிந்தியை சூழ்ந்திருக்கும் அதிகார கருவிகள் ஆங்கிலத்துக்கு ஹிந்தி அடிமைப்பட்டு இருப்பதை உறுதி செய்திருக்கிறது. மற்ற இந்திய மொழிகளோடு ஹிந்திக்கு இருக்கும் தொடர்பையும் அது துண்டித்து விட்டது இன்னமும் மோசமான ஒன்றாகும். அதன் ‘வட்டார வழக்குகளோடு’ம்,அதன் ஆற்றல் மற்றும் படைப்புத்திறனோடும் ஹிந்தி இன்னமும் உயிர்த்திருக்கிறது. இந்த பழைய நடைமுறைகளை உடைத்தால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும்
நான் எப்படி மற்றும் ஏன் என்று விளக்குகிறேன். அதிகாரப்பூர்வ ராஜ்பாஷா பட்டம் ஹிந்தியின் உண்மையான நிலையை மறைக்கிறது. சுற்றிப்பார்த்தால் தான் உண்மையை பதிவு செய்ய முடியும். எங்கெங்கும் நிரம்பி இருக்கும் ஆங்கிலத்தில் சீக்கிரமாக பேச உதவும் கோர்ஸ்களுக்கான விளம்பரங்கள் காளான்கள் போல முளைத்துக்கொண்டு இருக்கும் ஆங்கில வழிக்கல்வி தரும் ‘கான்வென்ட்’கள் ,தன்னை அரைகுறை ஆங்கிலத்தில் வெளிப்படுத்திக்கொள்ள முயலும் பரிதாபத்துக்குரிய சூழல் எல்லாமும் எப்படிப்பட்ட அடுக்குநிலையில் மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
கனவுகளின் மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. வேறெந்த தேர்வும் இல்லாதவர்களின் மொழியே ஹிந்தி. csat சிக்கலில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நிரூபணமானது. ஒரு சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவனின் திறனை ஆங்கில மூலத்தில் இருந்து வரும் மொழிபெயர்ப்பின் மூலம் சோதிப்பது காலனிய மனோபாவமே அன்றி வேறில்லை. என்றாலும்,அரசாங்கம் தேர்வுகளை நடத்தியது. ஆங்கிலமே அதிகாரத்தின் மொழி. இந்த வகையில் மற்ற இந்திய மொழிகளின் நிலையே இந்தியின் நிலையம் ஆகும். அதன் சிறப்பு நிலை மற்ற மொழிகளுடனான அதன் உறவை பாழ்படுத்தியிருக்கிறது . எங்கேயும் இந்தியை தேசிய மொழி என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லாத பொழுதும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். அதை பிற மொழியினர் எதிர்க்கிறார்கள். இந்தி இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்றாலும் அது இந்தியாவின் பழமையான மற்றும் வளமான மொழியில்லை.
ஒவ்வொரு இந்தி பேசாத பிற மக்கள் ஓரளவுக்கேனும் இந்தியை பள்ளிகளில் கற்க வேண்டியிருக்கிறது. இந்தி பேசுபவர்கள் வேறெந்த நவீன இந்திய மொழியையும் கற்பதில்லை. உண்மையில் அரசாங்க ஹிந்தி அதன் கலாசார மற்றும் மொழியியல் பாரம்பரியம் மற்றும் அதன் பன்னிரெண்டு ‘வட்டார’ வழக்குகளை விட்டும் தள்ளி நிற்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஹிந்தி மற்றும் உருது ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவினை திட்டமிட்டே வளர்க்கப்பட்டது. ஹிந்தி இறந்து விட்டது என்றோ அது இறந்து கொண்டிருக்கிறது என்றோ அர்த்தமில்லை. அது உண்மையில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. பம்பாய் சினிமா,கிரிக்கெட் வர்ணனை,வேகமாக வளரும் ஹிந்தி மீடியா அதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. சமகால ஹிந்தி இலக்கியம் மற்ற நவீன மொழிகளின் இலக்கியங்களோடு ஒப்பிடும் வண்ணம் சிறந்திருக்கிறது. ஹிந்தியில் அற்புதமான இலக்கிய விமர்சன பாரம்பரியம் இருக்கிறது மற்றும் சமூக அறிவியலில் பல்வேறு ஆக்கங்கள் அரசாங்க ஹிந்தி வளர்ப்பைத் தாண்டி நடந்திருக்கின்றன. er,
ஆகவே ஹிந்தி திவாஸ் நிகழ்வுக்கு பதிலாக பாஷா திவாஸ் என்கிற நிகழ்வை மாற்றாக நடத்த நான் பரிந்துரைக்கிறேன். அந்நாளை இந்த நாட்டின் மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் வளத்தை குறிக்க பயன்படுத்தலாம். பல்வேறு மொழிகளுக்கு இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் அது ஒரு அடையாளம் ஆகும். அரசாங்கம் அதை செய்யாது. ஹிந்தியை உண்மையில் காதலிப்பவர்கள் இந்த போலித்தனத்தை உடைக்க முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.
அதற்கு பதிலாக அவர்கள் என்ன செய்ய வேண்டும் ? ஹிந்திக்கு செய்யக்கூடிய பெரிய சேவை அதை பயன்படுத்துவது தான். முதலில் பயன்படுத்தக்கூடிய,செயல்பாட்டுத்தன்மை கொண்ட ஹிந்தி அகராதிகளை உருவாக்க வேண்டும்.
சமஸ்கிருதமயமக்கப்பாட்ட அரசாங்க ஹிந்தியை விட்டு நகரவேண்டும். ஹிந்தி தன்னுடைய கதவுகள்,ஜன்னல்களை அதன் வட்டார வழக்குகள்,ஆங்கிலம் முதலிய பிற மொழிகளுக்காக திறந்து வைத்து அதை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். இளந்தலைமுறையை நாம் ஹிந்தி சார்ந்து ஈடுபடுத்த வேண்டுமென்றால் நாம் அவர்களை ஈர்க்கும் இலக்கியம் படைக்க வேண்டு. குல்சாரின் பாஸ்கி கா பஞ்சதந்த்ரா அல்லது சுகுமார் ரெவின் அபோல் தபோல் ஆகியன இதற்கு மாதிரியாக பயன்படலாம். உயரிய தரம் வாய்ந்த பாடப்புத்தகங்களை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஹிந்தி மாணவர்களுக்காக எழுத வேண்டும்
மேலும் சீனம் மற்றும் ஜப்பானிய மொழியைப்போல ஹிந்தியும் இணைய பயன்பாட்டுக்கு உகந்ததாக மாறவேண்டும். மேலும் அதிகத்தரம் வாய்ந்த மொழிபெயர்ப்பு திட்டத்தை தேசிய அளவில் முன்னெடுத்து ஆங்கிலம் உட்பட வெவ்வேறு மொழிகளில் இருந்து நூல்களை ஹிந்திக்கு மொழிபெயர்க்க வேண்டும். ஹிந்தி உருதுவில் இருந்து ஷஹ்யரி வகைக்கவிதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதன் சட்டமொழியையும்,தமிழின் செம்மையான பாரம்பரியத்தையும்,மலையாளத்தின் அச்சு கலாசாரத்தையும்,கன்னடத்தின் சமகால இலக்கியங்களையும்,மராத்தியின் எதிர்ப்பிலக்கியதையும், வங்கத்தின் அறிவுசார்ந்த எழுத்துக்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஹிந்தியை வளர்க்க அதை பரப்புவதை விட அது மற்ற மொழிகளோடும்,மொழிகளோடும் ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலங்களை அப்படியே இருக்கிறபடியே இருக்க விடுவதுமே சிறந்த வழி