பதினான்கு தினங்களில் நான் பார்த்த, கேட்ட, இணைத்த, அழுத, உடன் வாழ்ந்த காதல் கதைகள், நினைவுகளின் தொகுப்பு இது:
கிண்டி பொறியியல் கல்லூரியில் இருக்கிற ஆறாயிரம் பேரில் வித்தியாசப்படுத்திக் கொண்டே இருக்கும் பலபேர் கண்களில் படுவார்கள். அதில் அவனும் ஒருவன். டாப் கட் ஆஃப், டாப் துறை என்று கலக்கி எடுத்த அவன் கல்லூரியின் கல்வி முறையின் வன்முறையில் ஆறு, ஆறரை என்றே GPA வைத்திருப்பான். ஆனால், நடைமுறை அறிவியலில் (குறிப்பாக எந்தத் துறை சொன்னால் யாரெண்டு தெரிந்து விடும். வேண்டாம்) பின்னி எடுப்பான். அவனிடம் உங்கள் பிள்ளைகளைப் பள்ளி முடித்ததும் அனுப்பி வைத்தால் சத்தியமாக ஒரு விஞ்ஞானியாக ஆவதற்கான உத்வேகத்தையும், திறப்பையும் தந்து விடுவான். அதுவல்ல விஷயம்.
அவனின் மற்ற குணங்கள். எப்பொழுதும் தூக்க கலக்கம் கொண்ட முகமாகத்தான் அவனைப் பார்க்க நேரிடும். ஷேவ் பண்ண வேண்டுமா என்பது போல அவனின் முகம் சிரிக்கும். அலைபேசியை அரைக் கிலோமீட்டர் தூரத்தில் தள்ளி வைத்துவிட்டு தான் அவன் பாட்டுக்கும் இருப்பான். பெண்கள் முகம் பார்த்து ஒரு வார்த்தை அவன் பேசிவிட்டால் தலைப்புச் செய்தி போட்டுவிடலாம். சாட்டில் பிடித்தால் பத்து நாட்கள் கழித்து அரசு நடத்தும் ஊழல் வழக்கு போல அத்தனை வேகமாக நகரும் உரையாடல்.
ஒரு நாள் அவனைப் பார்த்து, “மச்சி! நீயெல்லாம் லவ்லாம் பண்ணுவியாடா? இப்படிலாம் இருந்தா எந்தப் பொண்ணுடா பார்க்கும். ஸ்மார்ட்டா தானே இருக்கே. ஏண்டா இப்படிப் பண்ணுறே?” என்று கேட்டேன். சிரித்துவிட்டு நகர்ந்தான்.
இன்னொரு நாளும் இப்படியே நான் புலம்ப, அவன் “டேய் கொஞ்சம் கூலா இரு. நான் இரண்டு வருசமா கமிடட்.” என்றான்.
அப்படியே பவர்ஸ்டார் தேசிய விருது வாங்கினால் என்னாகுமோ அப்படியொரு அதிர்ச்சிக்கு உள்ளானேன் நான்.
“என்னடா சொல்லுறே.”
“ஸ்கூல்மேட். ரொம்ப நாளா பிரெண்ட்ஸ். இப்ப இப்படி.”
“ஓ. ஒழுங்கா பேசுவியா?”
“அப்பப்ப பேசுவேன். இதெல்லாம் தெரிஞ்சுதானே அவ ஓகே சொன்னா.”
“மேலே சொல்லுடா”
“ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு அப்படினே உடனே சொல்லிடணும். காத்துகிட்டே இருந்தோம்னா நாம சொதப்புறதுக்கான வாய்ப்பு கூடிகிட்டே போகும். ரொம்ப நாள் நட்பு இப்படி மாறினா நல்லதுன்னு தோனுச்சு. சொன்னேன். அவங்க மூன்று மாசம் எடுத்துக்கிட்டாங்க.You know what.. அந்த மூன்று மாசத்தில் என்னை அவங்க வெறுக்க எல்லாக் காரணத்தையும் கொடுத்தேன். ஏனோ கிறுக்கு மாதிரி பண்ணினேன்னு வெச்சுக்கோயேன். அவங்க அதுக்கப்புறம் ஓகே பண்ணினாங்க!” என்று அத்தனை அழகாகச் சிரித்தான்
இப்போதும் இரவு வரை அவன் அலைபேசியை எடுத்துச் சகாக்கள் பார்ப்பது இல்லை. ஏழெட்டு மாதங்களுக்கு ஒருமுறை தான் சந்திக்கிறார்கள். ஆனாலும், காதல் ரம்மியமாக இருக்கிறது என்பதன் சுவடுகளைக் காட்டிக்கொண்டே இருக்கிறது அவனைக் கூர்ந்து கவனிக்கும் தருணங்கள். சமீபத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு சொற்பொழிவுக்கு அவனையும் அழைத்திருந்தேன். அன்றைக்குத் தான் பல மாதங்களுக்குப் பிறகு அவர்கள் சந்தித்தார்கள் போலும். அப்படியே அந்த நாளை சொற்பொழிவில் செலவிட்டு விட்டு, அப்பாவுக்கு, “உள்ளேன் டாடி!” போட பெண்ணைக் கூட நல்ல பிள்ளையாக விடுதியில் விட்டுவிட்டு வந்தான் அவன். இவ்வளவுதான் அவர்களின் பொன்மாலைப் பொழுது…
“வீட்டில் சொல்லிட்டியாடா?”
“அவங்க வீட்டில போய்கிட்டு இருக்கு..”
“உங்க வீட்டில்?”
“எங்க அம்மா எப்பவும் என் பக்கம். அப்பாவும் நானும் எதுலேயுமே ஒத்துப்போக மாட்டோம். அவர் என்ன சொன்னாலும் நேர்மாறாதான் நான் செய்வேன். ஸோ நோ ப்ராப்ஸ்.” என்று அவன் ஷேவ் செய்யாத தாடியை வருடியபடி என்னை டிராப் செய்தான்
—————————————————————–
“லவ் பண்ணினியே அறிவு இருக்கா? இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாதா?”
“ஒத்துக்க மாட்டங்கன்னு தெரியுமில்ல. அப்புறம் என்னத்துக்கு லவ் பண்ணினீங்க?”
“நீ வேற ஜாதி, அவன் வேற ஜாதி. ஸ்டேட்ஸ் ஒத்துப் போகாது. கலரும் சகிக்கல. ஏண்டி பண்ணினே?”
“முன்ன,பின்ன பார்த்துப் பண்ணியிருக்கக் கூடாதா?”
இப்படிக் காதலிப்பவர்களை, காதல் கைகூடுமா என்று தவிப்பவர்களை எப்படியெல்லாம் போட்டு வறுக்க முடியுமோ அப்படியெல்லாம் துளைக்க ஒரு பெரிய க்ரூப் இருக்கு smile emoticon மனசு ஒத்துப் போயோ, அல்லது எப்படியும் சேர்ந்துடலாம் என்கிற நம்பிக்கையோடு காதலிக்க ஆரம்பிக்கும் பலருக்கு இத்தனை எதிர்ப்பா என்பது போகப் போகத் தான் புரியவே செய்கிறது. கணக்கு போட்டு, இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தேடித் தேடி (சில பேர் ஜாதிக்குள் பெண் பார்த்து காதலிக்கிறார்கள், சிலர் ஜாதகம் கூடப் போட்டுப் பார்த்து விட்டு உள்ளே நுழைகிறார்கள், இன்னம் சிலர் வகையறா கூட ஜாதிக்குள்ளேயே பார்த்துவிட்டு லவ்வு(?) பண்ண களம் புகுகிறார்கள். போன தலைமுறையோட டச் அப்படியே தொடருது.
ஓரிரு பிரிவுகளை மட்டும் இங்கே சொல்கிறேன். ஒரு தம்பி ரொம்பப் பொறுப்பாகக் காதலித்து, கண்ணீர்விட்டு, கதைத்து இறுதியில் அடித்தான் பாருங்கள் பல்டி…ஜாதகம் பார்த்துவிட்டு ஒத்துப்போகலை என்று கோடி கும்பிடு போட்டான். பெண் உடைந்து, இன்னமும் அழுது, அலுத்து, மீண்டும் அழுது…ப்ச்..விடுங்கள்.
பல கதையில் நடக்கும் இன்னொரு விஷயம்..”நீ எங்க பேச்சை கேட்கலைனா சூசைட் பண்ணிப்போம்.” என்கிற பெற்றோரின் மிரட்டல்
என் நண்பன் இப்படிக் கேட்டான், “நான் உங்ககூடப் பொறுமையா, ‘லவ் பண்ணுறோம். ஒத்துக்குங்க’ அப்படின்னு தானே விளக்கி பேசறேன். நீங்க சேர்த்து வைக்கலைனா செத்துடுவேன்னு மிரட்டினேனா? நீங்க மட்டும் ஏன் இப்படிப் பண்றீங்க. நல்லா இருக்கா அப்பா..” என்று ஒரே போடாகப் போட்டான்.
அமைச்சர் வரை போய்த் தான் உருகி, மருகி மகள் போலப் பாசம் காட்டிய பெரிய இடத்துப் பெண்ணைக் கரம் பிடிக்க முயன்றான் அந்தப் பையன். இறுதிவரை தலையாட்டிக்கொண்டே வந்த பெண் நான்கு வருடக் காதலின் இறுதிப் புள்ளியில், எந்தச் சலனமும் இல்லாமல், “எங்க அப்பா, அம்மா தான் முக்கியம். வேற பையன் கிடைப்பான். வேற தாய், தந்தை கிடைப்பங்களா?” என்று ஒரே போடுபோட்டுவிட்டு பெற்றோர் மனங்குளிர அந்த அன்புத்தாரகை கிளம்பினார். அந்த வாலிபர் என்னிடம் இப்படிப் புலம்பினார்:
“எனக்கு முதுகுத் தண்டுவடத்தில் இன்பெக்ட் ஆகி ஆபரேட் பண்ணினாங்க. அப்பலாம் அவ இருக்கா அப்படிங்கறே நினைப்பே மிதக்க வெச்சது. இப்ப அவ மொத்தமா போயிட்டா. தூக்கமே ஒரு வருசமா இல்லை. இன்னமும் கட்டிக்கிட்டு இருக்கு தம்பி.. என் தங்கத்தைக் குறை சொல்ல வரலை. விடுங்க பாஸ்…”
————————————————–
தூரங்கள் காதலை உடைத்து நொறுக்குவது பல சமயங்களில் நடக்கிற ஒன்று. பலருக்கும் பிடித்த அண்ணன் ஒருவன் தன்னுடைய காதலை ஷங்கர் படத்தின் கதை போலப் பத்திரமாகக் காப்பாற்றினான். நான்கு சொச்சம் ஆண்டுகள் பிரிவென்பது மரணத்தில் தான் என்று போன காதல், அவனின் பிரியை அமெரிக்கா போய் எம்.எஸ். படிக்க ஆரம்பித்ததும் பிளவுற்று முறிந்து போனது.
பூனாவில் இருந்தபடியே தன்னுடைய புதுக்காதலை காக்கலாம் என்று நம்பிய அண்ணனுக்கும், அந்த அக்காவுக்கும் ஏற்பட்ட சின்னச் சின்னச் சிக்கல்கள் கூடப் பெரிதாய் கிளை பரப்பின. “ரிலேஷன்ஷிப்பில் தொடர்ந்து இருக்க அப்பப்ப நடக்குற மனஸ்தாபத்தை அப்படியே ஞாபகம் வெச்சுக்காம அன்னியோனியமா இருக்கணும். அந்தக் கம்ஃபர்ட் முகத்தைப் பார்த்துட்டா தான் வரும். மினிமம் மன்த்லி ஒன்ஸ் பார்க்கணும். அதுக்கு வாய்ப்பில்லாம போய் முடிஞ்சுடுச்சு தம்பி எல்லாமே.” என்று அவர் வெறுமையாய் எங்கோ பார்த்தார்.
சிலர் இதிலும் கலக்கி எடுக்கிறார்கள். பம்பாயில் இருந்து கெம்பகவுடா அஸ்திவாரம் போட்ட நகரில் இருக்கும் தன்னுடைய இணையைப் பார்க்க எப்பொழுதெல்லாம் விடுமுறை கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அந்தத் தம்பி போய்விடுவான். “பிரிவு கொடிது.” என்று சொல்லிக்கொண்டே அனுதினமும் அந்தப் பிரிவை பற்றி மட்டும் பேசாமலே நட்பாய் இருந்த காலம் போலவே கதைத்து கப்பலை கம்பீரமாகச் செலுத்துகிறான்.
இன்னொருத்தன் இருக்கிறான். “பொசசிவ் ஆகித்தொலையேன்டா!” என்று அவன் ஆள் பளார் பளார் என்று அறைந்தால் கூடத் தேமே என்று நிற்கிறான். smile emoticon குதித்து மிதிக்கும் அவனுடைய காதலி மூன்று கண்டங்களில் படித்துவிட்டு வந்துவிட்டார். இன்று வரை கோபம் என்றால் என்ன பாஸ் என்று கேட்டே காதலை கெட்டிப்படுத்தி வைத்திருக்கிறான் அவன்.
காதல் கைகூடிய அடுத்த வருடத்திலேயே அந்த அக்கா அமெரிக்கா போக வேண்டியதாகப் போயிற்று. ஏர்டெல் கட்டிக்கொண்ட புண்ணியத்தில் ஒரு ரூபாய் ஒரு நிமிஷத்துக்கு என்று அனுதினமும் நள்ளிரவு விழித்திருந்து அவர்கள் கதைப்பார்கள். நடுவில் அண்ணனின் முதுகிலே பெரிய நோய்த்தொற்று ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாகி போனான். “ஆசை முகம் மறந்து போச்சே!” என்று அக்கா விம்மி அழுததற்கு ஆறுதல் சொல்லும் நள்ளிரவுப் பணியில் சிக்கி தேர்தல் நேரத்து ட்ராபிக்கில் ஆபிஸ் போகும் நபர் போல விழி பிதுங்கினேன். அக்கா அழகாய் அவனுக்கு ஆங்கிலத்தைக் கடிதங்கள் எழுதினார். அச்சுப் பிசகாமல் மொழி பெயர்த்து அவனுக்கு அனுப்பி வைத்தேன்.
இந்தியாவுக்கு ஒரு மாதகால விடுமுறையில் அக்கா வருவது என்று ஆனதும் வீட்டை மீறி அவனைப் பார்க்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. அதனால் தேவதை கால் சென்னை மண்ணில் படுவதற்கு முன்னரே மும்பைக்கு ப்ளைட் பிடித்துப் போனான் அண்ணன். அங்கே நள்ளிரவு முழுக்க இணைந்து விமான நிலையத்திலேயே அமர்ந்தும், நடந்தும் நள்ளிரவைக் கழித்தார்கள் அவர்கள். அவர்களின் கையில் நான் எழுதிக்கொடுத்த கவிதை. smile emoticon அந்தக் கவிதையைக் கண்களில் கண்ணீரும், காதலும் பெருக்கெடுக்க அவர்கள் வாசித்தபடி கரம்பற்றி நேசித்த கணத்தில் புவியியல் உருவாக்கிய பிரிவை வேதியியல் வென்று இருந்தது
—————————————————
மொழிகளைக் கடந்து காதலிப்பவர்களின் காதல்களைக் கவனித்து இருக்கிறீர்களா? மொழி தான் சமயங்களில் மனிதர்களுக்குள் இத்தனை சிக்கல்களை உண்டாக்கி விட்டதோ என்கிற எண்ணத்தைத் தருகிற அளவுக்கு அவர்களின் காதல்கள் அத்தனை ரம்மியமாக இருக்கின்றன.
அந்தப் பெண் அப்படியொரு அன்புக்கு உரியவள். எத்தனையோ வலிகளை வாழ்க்கையும், பெற்றோரும் தந்திருந்தும் துளி கூடச் சக மனிதர்கள் மீது வெறுப்பை அவள் உமிழ்ந்து நீங்கள் பார்க்க முடியாது. அழுத்திப் பிடிக்கும் வாழ்க்கையின் அழுகைகளை எல்லாம் எப்பொழுதும் சிரித்துக் கடக்கப் பார்க்கும் பேரழகி அவள். பலரும் விண்ணப்பம் நீட்டிய போதெல்லாம் கண்ணெடுத்துப் பார்க்க கூட அவளின் கடந்த கால வலிகள் தடுத்தன.
“வீட்டில காட்டுறவனைக் கண்டிப்பா கட்டிக்க மாட்டேன்பா..எதாச்சும் வேற மொழி பேசுற பையனா தான் பார்க்கணும்..” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். இந்தி, கன்னடம், தெலுங்கு என்று வெவ்வேறு பசங்களைப் பார்த்துவிட்டு இறுதியில் அவள் சொன்னது போலவே சாதித்துக் காட்டினாள்.
“எப்படியா இருக்கே…எப்பவும் நல்லவனாவே நடிக்காதே…எப்பவும் சிங்கிளாவே இருக்க வேண்டியது தான்..”என்றபடி அன்றைக்கு அலைபேசியில் சொன்னாள்..
“உன் கதை என்னாச்சு?” என்று கேட்டேன் நான். நேரில் சொல்வதாகச் சொன்னாள். ஆஜரானேன்…
“சொல்லல இல்ல உனக்கு…கேண்டில் லைட் வெளிச்சத்தில் கமிட்டாகிட்டேன். சீக்கிரம் கல்யாணம் நடக்கும். சொல்லுறேன்..வந்துடு”
“பையன் யாரு?”
“நைஜீரியன்..அவர் தான் முதல்ல சொன்னார். இயல்பா இருந்தது. ஒத்துக்கிட்டேன். முத்தம் கூடக் கொடுத்துக்கிட்டோம்…வாழ்க்கை புதுசா ஆரம்பிக்கிற மாதிரி இருக்கு..”என்ற அவளுக்கு மௌனமான புன்னகையால் வாழ்த்து சொன்னேன். அவளுக்குப் புரிந்திருக்கும் smile emoticon
என் ஹாஸ்டல் வாசலுக்கு அண்ணனை அனுதினமும் அழைத்துச் செல்ல அந்த வடகிழக்குப் பெண் வருவார். அண்ணனோ வங்காளி. ஆங்கிலத்தில் பேசியே இரண்டு வருடங்களாகக் காதலை வளர்த்து நகர்கிறார்கள்.
“அக்காவே பைக்கை ஓட்டுறாங்க…ஏன் நீங்க வெச்சுக்கிட்டுப் பறக்கிறது”
“பெமினிசம் பேசினா மட்டும் போதுமா… அவளே ஓட்டட்டும்…”என்று பெரிய தத்துவம் பேசியவன் பின்னர்ச் சொன்னான், “எனக்கு ஓட்டத்தெரியாதே…என்ன பண்ண” tongue emoticon
இருவரின் மதமும் வேறு தான் grin emoticon
அவர் நிகழ்வுகளில் நடுவராக உட்கார்ந்தால் தோலை உப்புக்கண்டம் போட்டுவிடுகிற கடுமை இருக்கும். அவர் தெக்கத்தி நபர்.
“இவரையெல்லாம் கல்யாணம் பண்ணிட்டவங்க பாவம்” என்று என் நண்பன் கமென்ட் அடித்தான்
அந்த நிகழ்வில் அவரின் பெர்சனல் பக்கம் சொல்லப்பட்டது,
“நான் வடநாட்டுப் பக்கம் போனேன். அவங்க இந்தி வாத்தியார். நான் இந்தி கத்துக்கப் போய், இனிதே காதலில் முடிந்தது. இன்னமும் இந்தி கத்துக்கல..” என்ற பொழுது அவர் என்னமோ பக்கத்து வீட்டில் நோட்டை வைத்து முகத்தை மறைத்தபடி நடந்து போகிற அக்காவை சைட் அடிக்கும் அண்ணன் போலத் தெரிந்தார்.
“எப்படிச் சார் பேசிக்கிடுவீங்க?”
“சைகையாலே பேசிறது செம ரொமாண்டிக்கா இருக்கும்யா…இல்லைனா இங்கிலீஷ்..அவங்களை நான் தமிழ் கத்துக்கோனு கட்டாயப்படுத்தல…நானும் இந்தி கத்துக்கல” என்று அவர் சொன்ன பொழுது பிரமிப்பாக இருந்தது. ஊருக்குக் குச்சி எடுத்த வாத்தியார் எல்லாம் வீட்டில், உத்தமக் காதலர்கள் சாமியோவ்
——————————————————————
சரசரவென்று நகரும் காதல் கல்யாணத்தில் முடிந்த பிறகு எத்தனை கரடுமுரடான அனுபவங்களைத் தந்து விடுகிறது? சிலர் மட்டும் அதிலும் அத்தனை அழகாய் அன்பு காட்டுவதைக் கண்டு வியப்படையும் தருணம் பெற்றவன் நான்.
ஓவியர் மனோகர் தேவதாஸை மாணவ நிருபராக இருந்த பொழுது சந்திக்கச் சென்றிருந்தேன். அவரின் ஓவியங்களின் துல்லியம், கோடுகளின் வழியாகவே அத்தனை கம்பீரம், எழிலைக் கடத்தும் அவரின் நகர் உலா உங்களை அடித்துப் போடுகிற கலைத்தன்மை கொண்டது.
அவருக்குத் திருமணமாகி ஆறாண்டுகள் ஆகியிருந்த சூழலில் மனைவி மஹிமா காரோட்டிக்கொண்டு வெளியே போனார். அப்பொழுது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் அவருடைய முதுகுத் தண்டுவடம் துண்டிக்கப்பட்டது. பத்து மாத போராட்டத்துக்குப் பிறகு அவரின் கழுத்துக்குக் கீழே எந்தப் பாகமும் செயல்படாது என்கிற நிலை ஏற்பட்டது.
கண்ணில் பார்வை மங்கத்தொடங்கியது. சோதித்துப் பார்த்தால் Retinitis pigmentosa என்கிற கண் வியாதி ஏற்பட்டிருந்தது தெரிந்தது. படிப்படியாக ரெடினா திரை பாதிக்கப்பட்டுப் பார்வை பறிபோவது உறுதி என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
அவரின் மனைவி அவருக்கு ஆறுதல் சொல்லவில்லை ,”மனோ நீங்க நல்லா படம் வரைவீங்க இல்லையா?போங்க மதுரையோட அழகை பதிவு பண்ணுங்க ! பார்வை முழுசா போனதுக்கு அப்புறமாவா பதிவு பண்ணுவீங்க ?”என்றார்.
அதற்குப் பின் நடந்தது ஓவியரின் வார்த்தைகளிலேயே,
“நான் பயிற்சி பெற்ற ஓவியன் கிடையாது
…ஆனால் எனக்கு ஆழ்ந்த பொறியயல் அறிவு உண்டு.அதனால் நான் வரகிற ஓவியங்கள் அளவீடுகளைக் கொண்டதாக அமைந்து இருக்கும் .துல்லியமாகவும் இருக்கும் ,சென்னையில் இருந்து மதுரைக்கு அடிக்கடி பயணம் போனேன்.அனைத்தையும் பதிவு செய்தேன் .கண்பார்வை மங்கிக்கொண்டே வந்தது .என்
செல்லம் என்ன செய்வாள் தெரியுமா ?நான் சோர்வடையக் கூடாது என்பதற்காகப் புத்தகத்தை வாசித்துக்கொண்டே இருப்பாள்.அங்கே புத்தகத்தை என் மகள்
பிடித்து உதவி செய்வாள் .என் கண்கள் ஏகத்துக்கும் நகர்ந்து கொண்டே இருக்கும் ..நேரான கொடு வளைந்து நிற்பது போலத் தெரியும் ….இதனால் வரைவதற்கு ரொம்பவே சிரமம் .கண்களில் கண்ணீர் ஏகத்துக்கும் கொட்டும் …
என் பார்வை மங்க ஆரம்பித்ததும் நான் பல விஷயங்களை ஓவியம் வரைவதற்காக மாற்றிக் கொண்டேன் .உலகிலே அதிகபட்ச பவரான +இருபத்தி ஏழு அணிந்து ஓவியம் வரைகிறேன் …இப்படி சொல்லலாம் …ஒரு பொட்டை கால் பந்து அளவிற்குப் பெருக்கினால் தான் மங்கலாகத் தெரியும் …எஸ் டி முதலிய வார்த்தைகளுக்கு
வித்தியாசம் தெரியாது …ஸ்கேலால் தடவி தடவி தான் எழுத்தை வித்தியாசப்படுத்திக் கொள்வேன் ,நிறமே தெரியாது ..ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் வைத்து கொள்வேன் .பச்சை பென்சில் நீளமாக இருக்கும் .மஞ்சள் குட்டையாக,சிவப்பில் பொட்டு ஒட்டி இருப்பேன் .இப்படி …
மஹிமா நான் மதுரையைப் பற்றி வரைந்த ஓவியங்களையும் ,உடம்பின் எந்தப் பாகமும் நகர முடியாத நிலையில் தன் தோள்பட்டை எலும்பை கடினப்பட்டு நகர்த்தி வரைந்த
ஓவியங்களையும் HERITAGE கார்ட்ஸ் என்கிற பெயரில் தயாரித்துப் பெரிய நிறுவனங்களுக்கு அனுப்புவாள்.அதிலிருந்து லட்சகணக்கில் திரளும் பணத்தை ஆதரவற்றவர்களுக்கும் ,அனாதைகளுக்கும் கொடுத்து உதவி செய்வாள் .நாற்பத்தி
இரண்டு வருடங்கள் இந்தச் சேவையைச் செய்தோம் .
பின் எனக்கு மீதம் இருந்த ஒரு கண்ணிலும் பார்வை மொத்தமாகப் போகிற நிலை . ஒரு கட்டத்தில் வெறும்
வெளிச்சமும் ஒளிப்புளிகளும் மட்டும் தான் தெரிந்தது ,என் புன்னகை மாறாத மனைவி மரணம் அடைந்த பொழுது அவள் முகம் கூட எனக்குத் தெரியவில்லை …அவள் ரொம்பவே அழகாகத் தனக்குப் பிடித்த மல்லிகை பூவை அணிந்து
கொண்டு கண் மூடி இருந்தாள் எனப் பலரும் சொன்னார்கள் .அவளை என்னால் தான் பார்க்க முடியாமல் போனது .கிட்டத்தட்ட பத்து வருடம்,”மனோ “என்கிற அந்த
குரல் மட்டும் தானே எனக்குக் கேட்டது .
…ஏற்கனவே கிரீன்வெல் டேஸ் என்கிற மதுரையைப் பற்றிய புத்தகம் ஐந்து பதிப்பு வந்து விட்டது …இனிமேல் எங்கே எழுதுவது ? எனக்கு உங்கள் முகம் தெரியவில்லை …ஒரு உதவி பண்ணுறீங்களா தம்பி ?என் மனைவி படத்துக்கு
கேண்டில் ஏற்றுங்க …அந்த வெளிச்சம் மட்டும் புள்ளியா தெரியும்…பண்ணுங்களேன்!”என அவர் கேட்க நாங்கள் ஏற்றிய அந்த எழுகிற தீபத்தில் ஒளிர்கிறது இறவாத காதல்..
————————————————————
ஓயாமல் அடித்துக்கொள்வதாக நமக்குத் தோன்றுகிற, மிகவும் அமைதியாக இருக்கிறவர்களாகக் காட்சியளிக்கிற காதல்கள் இரண்டிலுமே நம்மை ஏமாற்றிப் பிரியத்தை வாரிச்சூடி கொள்வதில் இணைகள் சிறப்புற்று சிரிக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தால் அறிய முடியும்.
அந்தத் தம்பி என்னிடம் பேசுகிற ஒவ்வொரு கணத்திலும் அவனுடைய காதலை இறைவன் தந்த வரம் என்பதில் துவங்கி, உருகி, மருகி பேசியவாறே இருப்பான். ஊரிலே பல்வேறு விண்ணப்பங்கள் வந்தாலும் ஏறெடுத்தும் பார்க்காதவன் அவன். புத்தாண்டு நெருங்கிய நள்ளிரவில் அவனின் காதலியோடு காரில் போகையில் நானும் அவனும் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தோம்.
இவன் சொன்னவற்றை அப்படியே சொல்லிக்கொண்டே வந்தேன் நான். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணோ, கண்கள் விரிய, முகமெல்லாம் சிரிப்பு நுரைத்து ததும்ப, “அப்படியெல்லாமமா சொன்னான் இவன்…என்கூட எப்பவுமே சண்டை போட்டுகிட்டே தான் இருப்பான்!” என்று சொன்னார். இதையே அவர்கள் எப்படி அலுக்காமல் ஐந்து வருடங்களாகச் செய்கிறார்கள் என்பது புரியாத ஒன்று.
இன்னொரு தம்பி கல்லூரி கலை நிகழ்வுகளில் முக்கிய இடம் வகிப்பவன். “என்கூட அவனுக்கு ஸ்பென்ட் பண்ண டைமே இல்லைணா. எப்பவாவது பார்த்தா பேசிக்கிட்டா உண்டு.” என்று தங்கை பொருமுவாள். நான் அவனைக் கூப்பிட்டுக் கண்டித்தேன். “எல்லாம் சரிதான் ப்ரோ. சாயந்திரம் எனக்கு என்ன டூட்டி அப்படின்னு அவளைக் கேளுங்க” என்றான் அவன். இவன் அவளின் வகுப்பில் இருந்து பேருந்து வரும் வரை உடனிருந்து பேசிவிட்டு வரவேண்டிய கட்டாயப் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருப்பது அப்பொழுது தான் தெரிந்தது.
சில ஜோடிகள் இன்னமும் வில்லங்கமானவர்கள். நம்முடனே இருப்பார்கள். “இப்பலாம் பெருசா எதையும் ஷேர் பண்ணிக்க டைமே இல்லை.” என்று அரற்றுவார்கள். அப்படி ஒரு தம்பி புலம்பிக்கொண்டு இருந்தான். “சரி அவங்களை நட்பு வேண்டுகோள் அப்புறமா ப்ரீ ஆனா கொடுக்கச் சொல்லு.” என்றேன். அவனை அப்படியே கொண்டு போய் ஹாஸ்டல் வாசலில் விட்டு விட்டு முகநூலை ஆன் பண்ணிய அடுத்தக் கணம் அந்தப் பெண்ணின் நட்பு வேண்டுகோள் இருந்தது. அதிகபட்சம் இரண்டு நிமிடம் இடைவெளி இருந்திருக்கும்
நம்மிடமெல்லாம் எகிறிப் பேசும் பல முரடர்கள் அவரவரின் இணையை வாடி, போடி என்று கூட அழைக்க மாட்டார்கள். அவன் சண்டை என்று வந்தால் ரத்தம் பார்க்காமல் ஓயமாட்டான். அன்றைக்கு ஏதோ அழைப்பு வந்தது, “சொல்லும்மா..இல்லைமா தங்கம்…சரிம்மா” என்று பலவாறு பம்மினான். “யாருடா?” என்று கேட்டதும் தலையைச் சொறிந்து துப்பாக்கி தூக்குபவன் பூப்பறிக்க அஞ்சுவது போலச் சிரித்தான்
——————————————————————————————– 
காதலை புனிதமான ஒன்றாகப் பார்க்கும் பல பேரால் பீச்சிலும், பார்க்குகளிலும் பிணைந்து கிடக்கும் ஜோடிகளைக் கொண்டு இது காமதினம் என்று சொல்லி குமுறுகிறார்கள். மலரினும் மெல்லிது காமம் என்பதும், காதலில் அது பிரிக்க முடியாத அங்கம் என்பதையும் மனம் ஏற்க மறுக்கிறது. இப்படியெல்லாமா காதல் புரிவார்கள் என்று அதை நெறிப்படுத்த நாம் துடிக்கிறோம். காதலைப் பற்றிப் பெரிய கனவுகளும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் யோசிக்காமல் நீங்கள் காதலியுங்கள்.
காதல் என்பதன் மீதான புரிதல்கள் வயதுக்கு வயது மாறுபடுகிறது. உணர்வுகள் தரும் கிளர்ச்சி, அன்புக்கான ஏக்கம், வயதுக்கேற்ற தேடல்கள் எல்லாமும் செலுத்துகின்றன. ஒவ்வொருவரும் சொதப்பியே காதலில் மூழ்கி முங்கியோ, முனகியோ, கரை சேர்ந்தோ விடுகிறார்கள். வேக வேகமாகக் காதல் இன்றைக்கும் பயணித்து ஓய்ந்து போகிறது என்பதும் உண்மை.

மிகவும் இயல்பான ஒரு விஷயம் அது. குழந்தைகளிடம் காமம் பற்றியோ, காதல் பற்றியோ மனந்திறந்து பேசுவதைத் தவிர்த்துச் சினிமாக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமே அவர்கள் அறிகிறார்கள். பல்வேறு தடைகளை உருவாக்கி இயற்கையில் ஆயிரமாயிரம் வருடங்களாக நடக்கும் ஒன்றை சில நூறு வருடங்களில், சமயத்தில் தற்போது தான் உருவாக்கிய விலங்குகளால் பிடிக்கப் பார்க்கும் உங்களுக்கு எதோ மன வியாதி இருக்கிறது என்று அர்த்தம்.
என் தங்கையோ, என் தம்பியோ, மகனோ இப்படிப் போனால் மனம் பதை பதைக்கிறதே என்று மனதார மருகும் அன்பு நெஞ்சங்கள் உங்களின் உறவுகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அன்போடு அவர்களின் உணர்வுகளை உள்வாங்குங்கள். கௌதம் வாசுதேவ் மேனன் நேர்முகத்தில் சொன்னது போலக் ‘காதலுக்கான தேடல், தீவிரம், ஏக்கம், நம்பிக்கை, ஆயுசுக்குமான ப்ரியம்… இதெல்லாம் மிஸ் ஆகுது. அது ரொம்பக் கவலையா இருக்கு.’ என்பதைப் புரிய வைக்கப் பாருங்கள். அந்த உணர்வே தவறு, காதல் என்பது கைபடாத உறவு, அது ஒருவருடன் மட்டுமே ஒருவருக்கு நிகழ வேண்டும் என்று மனதெங்கும் இறுக்கமாக முடிவுகளோடு இருப்பீர்கள் என்றால் நல்ல டாக்டரை பார்ப்பதோ, அல்லது குப்புற படுத்தோ உறங்குவது நல்லது.

——————————————————————————————-
ஆறு நிமிடங்களில் இந்த இறுதிக்கட்டுரையை அடித்து முடித்து விடுவேன்..
அழுதபடி எத்தனை காதலை தொலைத்திருக்கிறோம். இனிமேல் பார்க்கவே முடியாது என்றறிந்தும் சிரித்த படி கையசைத்து அனுப்பியிருக்கிறோம். மனத்தால், உடலால் பிணைந்திருந்தும் பிரிவின் வெம்மை தாங்காமல் உடைத்துக்கொண்டு உள்ளமெங்கும் வலிதாங்கி மௌனமாக அழுத காலங்கள் நினைவின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
ஒரு காலத்தில் சாப்பிடக் கிடைத்த அம்மாவின் அற்புத சமையல் போல அவரவரின் மெல்லிய, வல்லிய காதல்கள், ஆங்காங்கே ஏனென்று தெரியாமல் பூத்து, கனிந்து உதிர்ந்து போன பிரியங்கள் எத்தனை எத்தனை அற்புதங்கள் இந்தச் சிறிய வாழ்வில். எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே இருப்பது சிலருக்கும், கண் மூடி சடசடவென்று பயணிக்கும் சினிமா ப்ளாஷ் காட்சிகளாக நினைப்பதும் நிறைவைத் தருகிறது.
அந்த ஊடல்கள், நினைவுகள், முத்தங்கள், தகவல் பரிமாற்றங்கள், மௌனமான நேசங்கள், காலங்கள் கடந்து குரல் கேட்கையில் கசிந்த கண்ணீர்த் துளிகள், பரிசுகள் தாங்கி வருகையிலும் முகம் பார்த்ததும் ஒளிரும் சிறு மின்னல்கள், திட்டுதல் மூலம் செல்லம் கொஞ்சுதல், இளைப்பாறும் மரமாக, காதுக்குள் ரகசியம் சொல்லும் உறவாக, அத்தனையும் எத்தனையோ காதல்களில் குவித்து வைத்திருக்கும் அனைவரின் காதலின் நினைவுகளும், புதுப்பிக்கும் நேசத்தின் தூரல்களும் அன்பை ஜீவிக்கட்டும். smile emoticon ஆதலால், காதலில் சொதப்புங்கள், காதலிலேயே கிடந்திடுங்கள். காதல் எனும் பெருநாகம் தீண்டிய நாம் எல்லாம் பேறுபெற்றவர்கள்