போஸ் ஐரோப்பாவில் இருந்தபோது சர்தார் வல்லபாய் படேலின் சகோதரரான வித்தல்பாய் படேலை கவனித்துக் கொண்டார். அங்கேயே மரணமடைந்த அவர், தன் சொத்துக்களில் பெரும்பங் கினை நாட்டு நலப்பணித் திட்டங்களுக்குச் செலவிடுமாறு போஸுக்கு எழுதி வைத்தார். வல்லபாய் படேல், ‘அந்தப் பணம் காங்கிரசின் ஒரு சிறப்புக் கமிட்டின் கீழ் வைக்கப்பட்டுச் செலவு செய்யப்பட வேண்டும்!’ என சொன்னதற்கு நேதாஜியும் ஒப்புக்கொண்டார்.
அதே சமயம், கமிட்டியில் யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கோர்ட் படியேறினார்கள். இரண்டு முறையும் படேலே வழக்கில் வென்றிருந்தார்.
தான் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர விரும் புவதாக காந்தியிடம் போஸ் சொன்னார். மதவெறி மிகுந்த சூழ லில் நிலைமையைச் சீராக்க மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை தலைவராக ஆக்க விரும்புவதாக சொல்லிய காந்தி, செயற்குழுவையும் அதை ஏற்க வைத்தார்.
ஆனால் அபுல் கலாம் ஆசாத், போஸும் தானும் வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலைவராக விரும்ப வில்லை என்று விலகிக்கொண்டார். நேருவை அழைத்து தலைவர் தேர்தலில் நிற்க காந்தி அழைப்பு விடுக்க, அவர் போஸுக்கு எதிராக தான் நிறுத்தப்படுகிறோம் என உணர்ந்தவராக, போட்டியிட மறுத்தார்.
காந்தி யாரையும் கலந்தாலோசிக்காமல் பட்டாபி சீதாராமையாவை வேட்பாளர் ஆக்கினார். தாகூர், நேரு மற்றும் காந்தி ஆகியோரிடம் போஸுக்கு ஆதரவு கேட்டுக் கடிதம் எழுதினார். அடுத்த ஜனவரியில் நடக்கும் தேர்தலுக்கு நவம்பரிலேயே கடிதம் எழுதிய தாகூரிடம் அந்தக் கேள்வி குறித்து பெரிதாக விவரிக்காத நேரு, ‘தலைவர் பதவிக்கு நீங்கள் அதீதமாக முக்கியத்துவம் தருகிறீர்கள். எந்த முக்கியமான திட்டமும் கட்சித்தலைவரால் மட்டும் முடிவு செய்யப்படுவது இல்லை’ எனப் பதில் அனுப்பினார். காந்தியோ ‘வங்கத்தின் ஊழல் நிறைந்த அரசியலை சரி செய்வதில் போஸ் கவனம் செலுத்தட்டும்’ என்று பதில் அனுப்பினார்.
போஸ் ஜனவரி 21-ல் கட்சியில் இளவரசர்களுடன் சமரசம் செய்து கொண்டு, கூட்டமைப்பை ஏற்படுத்தும் எண்ணத்தில் உள்ள வலதுசாரிகள் தன்னுடைய தேர்வை எதிர்ப்பதாக அறிக்கை விட்டார். இதை மறுத்து செயற்குழுவின் ஏழு உறுப்பினர்கள் அறிக்கை விடுமாறு காந்தி அறிவுறுத்தியதன் பெயரில், படேல் மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். யாரும் கூட்டமைப்புக்கு ஆதரவாக இல்லை என்று போஸின் குற்றச்சாட்டை மறுத்தார்.
அந்தக் கூட்டறிக்கையில் நேருவை கையொப்பமிட சொன்ன பொழுது நேரு அதற்கு மறுத்துவிட்டார். காந்தி இந்தச் செயலால் தான் வருத்தமுற்று இருப்பதாக நேருவிடம் தெரிவித்தார்.
போஸ் நேருவிடம் ஆதரவு கோரினார். நேருவோ,’நான் தலைவர் பதவியை அர்த்தமற்ற ஒன்றாக நினைக்க வில்லை. போட்டியிட்டு தலைவர் தேர்ந்தேடுக்கப்படுவதிலும் எனக்கு ஒன்றும் வேறுபாடில்லை. எந்தெந்த கொள்கைகளில் முரண்பாடு உள்ளது என்று தெரிந்தால் நன்றாக இருக்கும். கூட்டமைப்பு விஷயம் பற்றி மட்டுமே நீங்கள் எழுப்பியுள்ளீர்கள். அதில் மற்ற தலைவர்களும் உங்களுடைய கருத்தை கொண்டிருப்ப தாக தெரிகிறது. சர்வதேச அளவில் நிலைமை மோசமாக இருக்கிற பொழுது இப்படிப் பிரச்சினையைக் கிளப்பியிருக்க வேண்டியதில்லை.’ என்று பல்வேறு பரிமாற்றங்களில் தெரியப்படுத்தினார்.
படேல், ராஜேந்திர பிரசாத் முதலியோரும் தாங்கள் கூட்ட மைப்புக்கு எப்பொழுதும் ஆதரவாக இல்லை என்று அறிக் கை விட்டார்கள். அடுத்தடுத்து போஸ் மூன்று அறிக்கை கள் வெளியிட்டார். இவை எதிலும் கூட்டமைப்புக்கு வலதுசாரிகள் எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக எந்த ஆதாரத்தையும் தரவில்லை. 29/1/1939 அன்று நடைபெற்ற தேர்தலில் போஸ் 1580-1377 என்கிற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.
காந்தி, ‘இது என்னுடைய சொந்த தோல்வி. போஸ் நாட்டுக்கு ஒன்றும் எதிரியில்லை. அவர் நாட்டுக்காக எண்ணற்ற இன்னல்களை சந்தித்துள்ளார். போஸ் தன்னுடைய திட்டங்களே மிகவும் முற்போக்கானதாக, தீரமிகுந்ததாக இருப்பதாக எண்ணுகிறார்’ என்று கருத்து தெரிவித்தார்.
போஸ்,இந்த அறிக்கையால் தான் பெரிதும் காயமுற்று இருப்பதாவும், கடந்த காலங்களில் காந்தியுடன் முரண் பட்டாலும் மற்ற எல்லாரின் நம்பிக்கையைப் பெற்று இந்தியாவின் மிக உயர்ந்த மனிதரின் நம்பிக்கையைப் பெறாவிட்டால் அது துன்பகரமானது.’ என்று அறிக் கை விடுத்தார்.
தாகூரின் பல்கலையில் போஸும், நேருவும் சந்தித்தார்கள். ‘நாம் இடதுசாரிகள், வலதுசாரிகள், கூட்ட மைப்பு ஆகியவற்றைப் பற்றிப் போஸ் தலைவராக இருந்த காலத்தில் விவாதிக்கவில்லையே?’ எனக் கேட்டதோடு, ‘கடுமையான மொழி, பழைய காங்கிரஸ் தலைவர்களைத் தாக்கிப் பேசுவது இடதுசாரிகளின் பண்பல்ல. கூட்டமைப்பு தான் போஸின் சிக்கல் என்றால் அதைச் செயற்குழுவில் விவாதித்திருக்கலாம். விடுதலையை அடைய ஒரு கெடுவை கூடப் போஸ் நிர்ணயிக்கலாம். என்றாலும், தான் இதையெல்லாம் ரசிக்கவில்லை’ என்றும் போஸிடம் சொன்னதாக அவர்களின் கடிதங்களில் இருந்து புலப்படுகிறது.
காந்தியிடமும் நேரு அரசியலில் கவனம் செலுத்துவதை செய்யுங்கள், தனிப்பட்ட நபர்களைப் பற்றிக் கவலை கொள்ளாதீர்கள் என்றார். நேருவை செயற்குழுவை விட்டு விலகச்சொல்லி காந்தி கேட்ட பொழுது அதற்குத் திடமாக நேரு மறுத்தார். ‘எல்லோரின் நியாயங்களைக் கொண்டே முடிவு செய்ய வேண்டும்…’ என்று பதில் சொன்னார்.
போஸ் உடல்நலமில்லாமல் இருந்ததால் செயற்குழு தள்ளிப் போன சூழலில் 12 பேர் கொண்ட செயற்குழு பதவியை விட்டு காந்தியின் வழிகாட்டலில் பதவி விலகியது. நேரு இவர்களோடு இணைந்து பதவி விலகவில்லை. அதே சமயம் போஸின் பக்கமும் சேருவதற்கு போதுமான நியாயங்கள் இருப்பதாக எண்ணவில்லை. தனியாகத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
வார்தாவை நோக்கி கிளம்பிய 12 பேரும் நேருவை காரில் ஏற்றிக்கொள்ளாத அளவுக்குக் கசப்பு வளர்ந்திருந்தது. ‘தீவிரத்தன்மையில் இயங்குவதில் தவறில்லை. அதே சமயம், ஆதிக்க மனோபாவத்தோடு அதை இணைப்பது ஆபத்து. இந்தத் தீவிரமான புரட்சி செயலில் ஈடுபடுகிறோம் என்கிற பெயரில் மக்களை மயக்குவது கூடாது….ஐரோப்பாவின் நிலைமையை யோசிக்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதை உணரவேண்டும்.’ என்றும் எழுதினார்.
‘நேரு நீங்கள் பதவி விலகி விட்டீர்களா?’ என்று போஸ் கடிதம் எழுதிய பொழுது, ‘நான் அவர்களுடன் இணைந்து ராஜினாமா செய்து சிக்கலை அதிகப்படுத்த எண்ணவில்லை. தற்பொழுது செயற்குழுவை கூட்டும் சிற்றெண் கூட இல்லாத நிலையில் நான் உங்களுக்குப் பெரிய அளவில் உதவ முடியும் என்று தோன்றவில்லை.’ என்று எழுதினார்.
திரிபுரியில் ஒரு போருக்கு போஸும், மற்றவர்களும் தயாராகி இருந்தார்கள். காந்தி ராஜ்காட்டில் உண்ணா விரதம் இருந்து கொண்டிருந்தார். போஸ் பக்கம் நின்று அவரைத் தலைவர் ஆக்கிய சோசியலிஸ்ட்கள் காந்தியின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்கும் நிலைமையை நோக்கி சூழல் போவதைக் கண்டார்கள். எல்லா இடதுசாரிகளும் தன்னை ஆதரிப்பார்கள் என்று போஸ் உறுதியாக நம்பினார். போஸுக்கு எதிரான தீர்மானத்தோடு ‘வலதுசாரிகள்’ என்று போஸ் குறிப்பிட்டவர்கள் தயாரான பொழுது காங்கிரஸ் சோசியலிச கட்சி வாக்கெடுப்பில் இருந்து விலகிக்கொண்டது.
‘இடதுசாரிகள் வளதுசாரிகளோடு முரண்படுகிறார்கள் என்பதற்காகக் கட்சியைப் பிளவுபடுத்துகிற அளவுக் குச் செயல்பட முடியாது. நாட்டின் தலையெழுத்தை தனித்துத் தீர்மானிக்கும் ஆற்றல் இடதுசாரிகளுக்கு மட்டுமில்லை.’ என்று சோசியலிச தலைவர் லோகியா குறிப்பிட்டார்.
பந்த் கொண்டு வந்த தீர்மானம் செயற்குழுவின் மீது நம்பிக்கையை உறுதி செய்ததோடு போஸ் காந்தியின் விருப்பப்படி செயற்குழுவை நியமிக்க கேட்டுக்கொண்டது. அந்தத் தீர்மானத்தைத் தயாரித்த ராஜாஜி. ‘காந்தி செலுத்தும் படகு ஒன்றும், போஸ் செலுத்தும் ஓட்டை விழுந்த படகு ஒன்றும் எங்கள் முன் உள்ளது. போஸ் தன்னுடைய படகோடு காந்தியின் படகை இணைக்கச் சொல்கிறார். இரண்டும் மூழ்கிப் போகும்.’ என்று கடுமையாகப் பேசினார்.
தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் வரிகளைக் கொஞ்சம் மாற்றினால் சமர சமாகப் போய் விடலாம் என்று சரத் போஸ் கேட்டுக்கொண்டும் எதுவும் மாறவில்லை.போஸ் நேரு தன் னைக் கைவிட்டதே இப்படி ஆனதற்கு முக்கியக் காரணம் என்று கொதித்துப் போனார். மிகக்கடுமையான சொற்களால் கோபம் கொப்பளிக்க நேருவுக்குக் கடிதம் எழுதினார்.
‘ எனக்கு எதிராக பெரிய அளவிலான வெறுப்பை நீங்கள் வளர்த்துக்கொண்டீர்கள் என்று தெரிகிறது. எனக்கு எதிரான எல்லாக் கருத்துகளையும் எடுத்துக் கொள்கிறீர்கள். எனக்குச் சாதகமாக இருக்கும் எல்லாவற்றை யும் தயவின்றி நிராகரிக்கிறீர்கள்’ என்றும், ‘நீங்கள் அரசியலில் எனக்கு மூத்த அண்ணன் என்று உறுதியாக நம்பித்தான் அறிவுரைகள் பெற்றேன். நீங்கள் உங்கள் அறிவுரைகளில் தெளிவில்லாமல், எனக்கு எந்த உறுதியும் தராமலே இறுதிவரை இருந்தீர்கள்.’ என்றும் எழுதிவிட்டு இறுதியாக கடிதத்தில், ‘நீங்கள் இப்படி நடந்து கொண்டது உங்கள் தகுதிக்கு உகந்தது இல்லை. ‘ என்று பொங்கினார்.
நேரு போஸின் திறந்த மடலுக்கு நன்றி சொன்னதோடு இப்பொழுதும் போஸுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகச் சொன்னார். தன்னுடைய குறைகளைத் தான் நன்கு உணர்ந்திருப்பதாகவும், அவற் றோடு கூடிய அதிர்ஷ்டமற்றவன் என்பதால் தன்னை மன்னிக்கும்படியும் நேரு கேட்டுக்கொண்டார்.
போஸ், இதே காலத்தில் ஒரு செயற்குழுவை உருவாக்க பாடுபட்டுக்கொண்டிருந்தார். ஏழு, ஏழு என்று இருபக்க மும் ஆட்களை இணைத்து செயற்குழுவை அமைக்கப் படேலிடம் கேட்டார். காந்தியிடம் உதவி கேட்ட பொழுது, ‘நான் கணக்கிலேயே வரமாட்டேன். நீங்கள் பலரும் இணைந்த குழுவை அமைத்தால் நீங்கள் நினைத்ததைச் செய்ய முடியாது. காந்தியவாதிகள் என்று அழைக்கப்ப டும் அவர்கள் உள்ளே வந்தால் உங்களின் செயல்பாடு களை முடக்கிவிடுவார்கள்.’ என்று அச்சுறுத்தும் தொனி யில் பேசினார்.
‘இப்பொழுது நாம் பிரிந்தால் ஒரு உள்நாட்டுப் போர் ஏற்படும். இப்பொழுது முழு விடுதலைக்கான பெரும் போராட்டத்தை முன்னெடுத் தால் பதினெட்டு மாதங்களில் விடுதலை உறுதி.’ காந்தி இதனோடு உடன்பட மறுத்தார். அவருக்குப் போஸ் சொல்வது அமைதி வழி யிலான போராட்டம் இல்லையென்று நன்றாகத் தெரியும். நேரு காந்தி, போஸ் இருவரையும் சந்தித்துச் சமாதானமாகச் செல்லும்படியும், காந்தி வழிகாட்டட்டும் என்றும் சமரசத்தைச் சாதிக்க முயன்றார்.
காந்தியோ சற்றும் நகராமல், போஸ் தன்னுடைய செயற்குழுவை அமைத்துக்கொள்ளட்டும் என்றுவிட்டார். தனக்குக் கட்சியின் பெரும்பான்மை காந்தியின் பின் நின்று எதிர்ப்பதை உணர்ந்த போஸ் வேறு வழியில்லாமல் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
நேரு, போஸ் தன்னுடைய பதவி விலகலைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். கட்சிக்குள்ளேயே பார்வர்ட் ப்ளாக் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்தார். கட்சியின் மற்ற இடதுசாரி அமைப்புகளை அதில் இணைக்கலாம் என்று பார்த்தார். ஆனால், அவை இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக மட்டும் போஸ் அவர்களைக் கட்சிக்குள் நியமித்தன.
கட்சியின் உறுப்பினர்கள் தனிப்பட்ட சத்தியாகிரகங்களில் ஈடுபடக்கூடாது, அந்தந்த மாகாணத்தில் இருக்கும் அரசுகள் மாகாண காங்கிரஸ் கட்சியின் உத்தரவுகளை மதிக்க வேண்டாம் என்று போஸுக்கு அஞ்சி காங்கிரஸ் அறிவுறுத்தியது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பம்பாயில் போஸ் போராட்டம் அறிவித்தார். கட்சியை விட்டு மூன்று ஆண்டுகள் போஸ் நீக்கப்பட்டார். ‘இப்பொழுதும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். கட்சியில் வலதுசாரி சக்திகள் பலம்பெற்று இருப்பதையே என்னை நீக்கியது காட்டுகிறது.’ என்று எழுதினார்.
மேலும், நேருவோ ‘பார்வர்ட் ப்ளாக் கட்சி திறந்த வகையான பண்பு கொண்டதாக இருக்கிறது. பாசிசச சக்திகள், சந்தர்ப்பவாதிகள் கட்சிக்குள் நுழைந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று தயாராக இருக்கி றீர்களா போஸ்? இப்படித்தான் ஐரோப்பாவிலும் மாறுவேடம் பூண்டு பாசிச சக்திகள் வெற்றி பெற்றன.’ என்று அச்சம் தெரிவித்த பொழுது, ‘என் கட்சியில் எந்தச் சந்தர்ப்பவாதம், பாசிசம் ஆகிய வற்றை நேரு கண்டார்? முயலுடன் இணைந்து ஓடுவதாகக் காட்டிக்கொண்டு வேட்டை நாயுடன் இணைந்து வேட்டை யாடுபவர்களை என்ன சொல்வது?
இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டு வளதுசாரிகளோடு இணைந்து பணியாற்றும் நபர்கள் எங்களைப் பாசிஸ்ட்கள் என்கி றார்கள்… கட்சிக்குள் இருக்கும் பாசிசத்தை எதிர்க்க முடியாதவர் கள்…அவர்களோடு கூட்டமாக இணைந்து விடுவது. இல்லையேல் ரகசியமாக அவர்களின் திட்டங்களில் பங்குகொள்வது, தீர்மானங் களைத் தயாரிப்பது…’ என்று ‘நம்மை விமர்சிப்பவர்கள்’ என்கிற கட்டுரையில் எழுதினார்.
நேரு பொறுமையாக, ‘நான் உங்களைப் பாசிஸ்ட் என்றோ, சந்தர்ப் பவாதி என்றோ சொல்லவில்லை. கட்சிக்குள் அப்படிப்பட்ட சக்தி கள் ஊடுருவிவிடும் என்று தான் அச்சம் தெரிவித்தேன். சோசிய லிசம் பேசிவிட்டு பாசிச சக்திகள் ஆட்சியைப் பிடித்த காட்சிகள் நடைபெற்றுள்ளன. தனிப்பட்ட தாக்குதல்களை நான் எப்பொழு தும் விரும்பவதில்லை….நம்முடைய கொள்கைகள் சார்ந்து விமர் சனங்கள் இருந்தால் நன்றாக இருக்கும், தனிப்பட்ட நபர்களைப் பற்றித் தாக்கிப் பேசவேண்டாமே!’ கடிதம் எழுதினார்.
தன்னுடைய அண்ணன் மகன் அமியா போஸுக்கு எழுதிய கடிதத் தில், ‘ எனக்கு நேருவை விட அதிகத் தீங்கு இழைத்தவர்கள் யாரு மில்லை. என்னை ஆதரித்து இருந்தால் பெரும்பான்மை பெற்றிருப்பேன். அவர் நடுநிலைமை கொண்டி ருந்தால் கூட நான் பெரும்பான்மை பெற்றிருப்பேன். திரிபுரியில் எனக்கு எதிராகப் பழைய தலைவர்களுடன் இணைந்து கொண்டார். அந்த 12 பேரைவிடநேருவின் பிரச்சாரம் எனக்கு அதிகத் தீங்கை விளைவித்தது.’ என்று எழுதினார்.
நேருவோ, ‘நான் போஸ் பக்கம் அப்பொழுது நிற்காமல் போனது உண்மைதான்!’ என்று பின்னர் ஒரு பேட்டியில் வருத்தப்பட்டார். அதே சமயம், நேரு பழைய குழுவுடன் இணையவில்லை என்பதும் அவர் தனித்தே ராஜினாமா செய்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். கிருஷ்ண மேனனுக்கு அந்த வருட ஏப்ரலில் எழுதிய கடிதத்தில். ‘நான் பின்னிருந்து எல்லாவற்றையும் ஆட்டுவிப்பதாகப் போஸ் எண்ணு கிறார். நான் போஸுக்கு எந்தளவு முடியுமோ அந்தளவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு இருக்கிறேன்.’ என்று கடிதம் எழுதினார்.
இதற்குப் பின்னும் தன்னை வந்து சந்திக்கும்படி போஸ் நேருவை அழைத்தார். ‘நீங்கள் அழைத்தால் நான் முடியாது என்று சொல்லமாட்டேன்.’ என்று நேரு பதில் அனுப்பினார். போஸ் தன்னைச் சோசியலிசத் தலைவர்கள் கைவிட்டது, சில தவறான யுக்திகள் தோல்வி தந்ததாக உறுதியாக நம்பினார். ஆங்கிலேய அரசை வீழ்த்த ஜெர்மனி தான் சரியான தேர்வு. ‘ஏகாதிபத்தியம், பாசிசம் இரண்டையும் எதிர்க்க வேண்டும். வாய்ப்பிருந்தால் கொஞ்சம் பாசிசத்தோடு சமரசமாகப் போகலாம்’ என்று நேருவுக்கு எழுதிய கடிதத்தில் போஸ் குறிப்பிட்டார்.
ஜெர்மனி போலந்து மீது தாக்குதலோடு இரண்டாம் உலகப் போரை துவங்கி வைக்க இந்தியாவின் அரசியல் சூழலிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. காந்தி லண்டன் மாநகரம் தாக்கப்பட்டதில் கண்ணீர் வடித்தார். காந்தி மேலும், வைஸ்ராய் லிங்க்லித்தோவை சந்தித்துத் தன்னுடைய சொந்த அனுதாபத்தைப் பிரான்ஸ், இங்கிலாந்து தேசங்களுக்குத் தெரிவித்துக்கொண்டார்.
நேருவோ பாசிசத்தின் மீதான அதே கடுமையான பார்வையை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் மீது நேரு கொண்டிருந்தார். ஐரோப்பாவை பாசிசம் என்ன செய்கிறதோ, அதை இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு செய்கி றது. எந்த ஜனநாயகம், சமத்துவம், சுய நிர்ணயம் ஆகியவற்றுக்காகப் போராடுவதாகச் சொல்கிறீர்களோ அதை எங்களுக்கும் தாருங்கள்.’ என்று அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உலகப்போர் ஆரம்பித்த ஒரு வாரத்தில் வார்தாவில் கூடியது. அதற்குச் சிறப்பு அழைப்பாளராகப் போஸ் அழைக்கப்பட்டிருந்தார். நேருவுக்கும், அவருக்குமான இறுதி சந்திப்பு அதுதான் என்று இருவருக்குமே தெரியாது. போஸ் பெரிய ஒத்துழையாமைப் போரை நிகழ்த்தி ஆங்கிலே யரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்லியதை காங்கிரஸ் ஏற்கவில்லை. பாசிசம், நாசிசம் இரண்டை யும் கடுமையாக எதிர்த்த நேரு ஆங்கிலேய அரசாங்கம் இந்தியாவிற்கு விடுதலை வழங்கும் என்கிற கருத்தை முன்வைத்தார்.
போஸ் இதைப் பார்த்துக் கடுமையாகக் கடுப்பானார். ‘யாரை எதிர்த்து போராடுகிறார்கள்’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘நம்மை ஆங்கிலேய அரசாங்கம் எட்டி உதைத்தாலும் அவர்களின் காலை நாம் நக்கிக் கொண்டு இருப்போம்.’ என்று கொதித்தார். ஆங்கிலேய அரசு கொஞ்சமும் இறங்கி வராத சூழலில் காங்கிரஸ் அமைச்சரவைப் பதவிகளை விட்டு விலகியது. இருப் பினும், அகிம்சையில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், ஆக்கப்பணிகளில் ஈடுபட்டு அரசு மதிக்கத்தக்க ஒப்பந்தத் துக்கு வருவோம் என்று நம்புவதாகச் செயற்குழு தீர்மா னம் போட்டது.
நேரு மனதளவில் தனியராக உணர்ந்தார். காந்தி இதை உணர்ந்து, ‘நேரு நீ என் மீது கொண்டிருக்கும் அன்பும், மதிப்பும் அப்படியே இருந்தாலும் வெளிப்புறப் பார்வை யில் இருக்கும் முரண்பாடுகள் அதிகரித்து உள்ளதாகத் தெரிகிறது.’ என்று கடிதம் எழுதினார். ஓய்வு பெறவும் முடியாது; நடக்கின்ற செயல்களுக்கு முழுமையாகப் பொறுப்பும் ஏற்க முடியாது’ என்றவர் துயரத்தின் பள்ளத்தாக்கில் விழுந்திருப்பதாக உணர்ந்தார்.
லெனின், முசோலினி போல போஸ் சாகசங்கள் செய்து விடுதலை பெற விரும்பினார். இருந்தாலும் 1940-ல் காந்தியை இறுதி முறையாகச் சந்தித்தார். அந்தக் கூட்டத்தால் எந்த பயனும் விளையவில்லை. போஸ் மீதான தடையைக் காங்கிரஸ் நீக்கிக்கொள்ள வேண்டும் என்று காந்திக்கு தாகூர் கடிதம் எழுதினார்.
‘ஜெர்மனியைப் பற்றி ஒரு வார்த்தை’ என்கிற கட்டுரையில், ‘என் அன்பு ரோஜாப் பூவைப் போல மென்மை யானது. அதே சமயம் நான் கடுமையானவனாக நடந்து கொள்ள முடியும்…. சுபாஸ் பாபு எனும் மகனை நான் பெற்றிருப்பதாக எண்ணிக்கொண்டு இருந்தேன். தற்பொழுது நான் என் மரியாதையில் இருந்து வீழ்ந்து விட் டேன்.’என்று எழுதியவர், ஆண்ட்ரூஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘ சுபாஸ் ஒரு வழிதவறிய மகனாக நடந்து கொள்கிறார். அவர் தன்னுடைய கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டார்.
Reblogged this on இராட்டை.