‘நோபல் இந்தியர்’ கைலாஷ் சத்யார்த்தி!


கைலாஷ் சத்யார்த்தி எட்டாவது நோபல் பரிசு பெறும் இந்தியர். அன்னை
தெரசாவுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்கிற
பெருமைக்கும் உரியவர். பாகிஸ்தானின் அடிப்படைவாதிகளை எதிர்த்துக் கல்வி
உரிமைக்காகப் போராடிய மலாலாவுடன் நோபல் பரிசை அவர் பகிர்ந்து
கொண்டுள்ளார். “இந்தப்பரிசு மேலும் என் அமைப்பின் செயல்பாடுகளை
முன்னெடுத்து செல்ல உதவும் !” என்று நம்பிக்கை பொங்க பேசுகிறார்.

அறுபது வயதாகும் கைலாஷ் மத்திய பிரேதசத்தின் விதிஷா நகரில் பிறந்தார்.
அப்பா போலீஸ் அதிகாரி. அவர் காலத்தில் பள்ளிக்கல்வி இலவசம் கிடையாது.
வாய்ப்புகள் வாய்த்த கைலாஷ் பள்ளிக்குள் நுழையும் பொழுது செருப்பு
தைக்கும் தொழிலாளி ஒருவரும்,அவரின் மகனும் ஒன்றாக வேலை செய்வதைச் சில
நாட்கள் தொடர்ந்து பார்த்தான். உறுத்தியது ,”ஏன் அந்தப் பையன் மட்டும்
தெருவில் செருப்புக்குப் பாலிஷ் போடவேண்டும் ?” என்று ஆசிரியரிடம்
கேட்டான். “வாயை மூடு !” என்றார் அவர். தலைமையாசிரியரை கேட்டதும் தான்
குடும்பத்தின் வறுமையைப் போக்க இப்படிக் குழந்தைகள் தொழிலுக்குள் இளம்
வயதில் தள்ளப்படுகிறார்கள் என்று புரிந்தது. “ஒரு நாள் மாற்றவேண்டும் இதை
!” என்று மட்டும் எண்ணிக்கொண்டான் கைலாஷ்.


பள்ளிக்கட்டணம் கட்ட முடியாத பிள்ளைகளுக்குக் கால்பந்து போட்டிகள் நடத்தி
அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் கட்டணம் கட்டிய பொழுது வயது பதினொன்று.
பள்ளிகளில் படித்த பல ஏழைகளின் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் என்பதே கனவாக
இருந்தது. ஒரு வண்டியை வாடகைக்குத் தேர்வு முடிவு நாளான்று நண்பனோடு
சேர்ந்து கைலாஷ் எடுத்துக்கொண்டான். வீடு,வீடாக “தேர்வில் வென்ற
தோழர்களுக்கு வாழ்த்து ! உங்கள் புத்தகங்களை ஏழை நண்பர்களுக்குத்
தாருங்கள் !” என்று கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைக்
குவித்துப் புத்தக வங்கி துவங்கி அசத்தினான்.

அடுத்து மின்னியல் துறையில் பொறியியல் பட்டம்.ஒரு டிப்ளமோ பெற்று
ஆசிரியர் பணி. கை நிறையச் சம்பளம் ? போதாது. வாழ்க்கை அலுத்திருந்தது
கைலாஷுக்கு. செருப்புத் தைக்கும் தொழிலாளி சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன
,”மூன்று தலைமுறையாகச் செருப்புத் தைப்பது தான் எங்க தொழில். வேறென்ன
செய்ய ?”. இருபத்தி ஆறு வயதில் வேலையை எறிந்து விட்டுக் களம் புகுந்தார்.
குழந்தைமையைக் காப்போம் என்றொரு அமைப்பை உருவாக்கி பதிந்து கொண்டார்.
அடிக்கடி குழந்தைத்தொழிலாளர்கள் நிறைந்து இருக்கும்
பகுதிகள்,கொத்தடிமைகள் இருக்கும் இடங்கள் என்று ரெய்டுகள் போய்ப் பலரை
மீட்டார்.

மீட்டால் மட்டும் போதுமா ? அவர்கள் வீட்டின் அடுப்பெரிய வேண்டாமா ?
அவர்களின் பெற்றோர் அல்லது உறவினருக்கு நல்ல கூலி கிடைக்கும் வகையில்
தொழிலுக்கும் வழி செய்தார். கறுப்புப் பணத்துக்கான மிக முக்கிய மூலமாகக்
குழந்தைத்தொழிலாளர் முறை இருப்பதைக் கோடிட்டுக்காட்டும் கைலாஷ்
தமிழகத்தின் சிவகாசியில் ஒரு முக்கிய நீர்ப்பாசன திட்டம் வரவிருந்ததைப்
பெரிய அரசியல் புள்ளியொருவர் தடுத்ததன் பின்னணி அரசியல் தீப்பெட்டி
மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் மலிவான சம்பளத்தில் குழந்தைகள்
வேலைக்குக் கிடைப்பது குறையும் என்பது தான் என்கிறார்.

குட்வீவ் என்கிற ஒரு முத்திரையை உலகம் முழுக்க இருக்கும் வெவ்வேறு
நாடுகளைச் சேர்ந்த ஆடைத்தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கினார்.
குழந்தைத்தொழிலாளர்களை நாங்கள் பயன்படுத்திப் பொருட்களைத் தயாரிக்கவில்லை
என்று அறிவிக்கும் முத்திரை அது. இது போதாதென்று ஒரு மிகப்பெரிய பயணத்தை
உலகம் முழுக்க 140 நாடுகளில் மேற்கொண்டு சர்வேதச தொழிலாளர் அமைப்பை
சென்று சேர்ந்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான ஒப்பந்தத்தை ஏற்க
வைத்தார். மிக வேகமாக நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் அதை
ஏற்றுக்கொள்ள அவரின் முயற்சிகள் காரணமாகின. இந்த முத்திரை கொண்ட
பொருட்களை ஏற்றுமதி செய்கிற நிறுவனங்கள் மற்றும் இறக்குமதி செய்கிறவர்கள்
முறையே 0.75,1.25 சதவிகித வருமானத்தைக் குழந்தைத்தொழிலாளர் மீட்பு
மற்றும் நலமேம்பாட்டுக்குத் தருகிறார்கள்.

அசாம்.குஜாரத்,ஒரிசா,மேற்குவங்கம் என்று இந்தியா முழுக்கக்
குழந்தைத்தொழிலாளர் மீட்பில் தொடர்ந்து ஈடுபடும் அவர் அவர்களின் திறன்
மேம்பாட்டுக்கு பல்வேறு கூடங்களையும் உருவாக்கி நடத்தி வருகிறார்.
மீட்கப்படும் குழந்தைகளைக் கொண்டே குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான
பிரச்சாரங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தார். இதைவிட முக்கிய அம்சம்
கிராமங்களே முன்வந்து தங்கள் ஊரில் குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிக்கச்
செயலாற்றும் திட்டம் தான். எண்ணிக்கை என்கிற வகையில் பார்த்தால்
இந்தியாவில் மட்டும் எண்பதாயிரம் குழந்தைத்தொழிலாளர்கள் மற்றும்
கொத்தடிமைகளைப் பல்வேறு இடங்களில் இருந்து அவரின் அமைப்புகள்
மீட்டிருக்கின்றன. தெற்காசிய முழுக்கவும் அவரின் அமைப்பின் கிளைகள்
செயலாற்றி வருகின்றன

கிரேட் ரோமன் சர்க்கஸ் என்கிற புகழ்பெற்ற சர்க்கஸில் இருந்து
குழந்தைத்தொழிலாளரை மீட்க போன பொழுது,அசாமின் தேயிலைத் தோட்டங்களில்
குழந்தைகளை மீட்ட பொழுது என்று பல இடங்களில் கடுமையாகத்
தாக்கப்பட்டிருக்கிறார் கைலாஷ். “முதுகு,தோள்பட்டை,கைகள்,மண்டை என்று
முறிந்து போகாத இடமேயில்லை. என் தோழர்கள் இரண்டு பேரை இந்தக் கொலைவெறித்
தாக்குதல்களில் இழந்திருக்கிறேன் ! ஆனாலும்,போராட்டங்கள் ஓய்வதில்லை ”
என்று சிரிக்கிறார். இந்தியாவில் கல்வியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற
முக்கியக் காரணமும் இவர்தான்.

பிறப்பால் பிராமணரான அவர் ஒடுக்கப்பட்ட மக்களோடு விருந்துண்ண தன் சாதியை
சேர்ந்தவர்களை இளம்வயதில் அழைத்த பொழுது அவர்கள் மறுக்கத் தானே அந்த
நிகழ்வை நடத்தினார். அவரை ஜாதியை விட்டு விலக்கம் செய்துவைத்தார்கள்.
அன்று முதல் தன் பேருக்குப் பின்னிருந்த ஜாதி அடையாளத்தைத் துறந்து
சத்யார்த்தி என்கிற குடும்பப்பெயர் மட்டுமே தாங்கிவரும் அவருக்கு
ரோல்மாடல் காந்தி தான். “காந்திக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர்
நான் பெற்றிருந்தால் இன்னமும் நிறைவாக இருந்திருக்கும். காந்தியிடம்
இருந்தே எனக்கான உத்வேகத்தைப் பெற்றேன்,பெறுகிறேன். இந்தத் தேசத்தில்
நூற்றுக்கணக்கான சிக்கல்களும்,லட்சக்கணக்கான தீர்வுகளும்
இருக்கின்றன.”என்று கரம் உயர்த்துகிறார் இந்தச் சேவை நாயகன் !

கடல்புரத்தில் – ஆழியினும் ஆழமானது!


வண்ணநிலவனின் கம்பா நதி தான் அவரின் சிறுகதையைத் தாண்டி வாசித்த முதல் நாவல். அதில் பேசப்படும் காதலும், மனித வாழ்க்கையின் வீழ்ச்சியும் மறக்கவே முடியாதவை. அவரின் முதல் நாவலான கடல்புரத்தில் இரு நாட்களுக்கு முன்னர் வாசிக்க எடுத்தேன்.

கடல் பகுதிகளில் வாழும் கிறிஸ்துவர்களின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அடிக்கடி வண்ணநிலவனின் நடை இயேசுவின் மலைச்சொற்பொழிவை நினைவூட்டும் அளவுக்குக் கவித்துவமும், அன்பும் மிகுந்ததாக ஊற்றெடுக்கிறது. மணப்பாட்டு மக்களின் வாழ்க்கையை, பிரியத்தைக் கதையாகச் சொல்ல வந்த வண்ணநிலவன் வலிந்து எதையும் கதையில் திணிப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை.

நூற்றுக்குச் சற்றே கூடுதலான பக்கங்களில் ஆழமும், சிக்கலும் மிகுந்த ரஞ்சி, பிலோமி, மரியம்மை என்று இத்தனை பெண்களை அவர் உருவாக்கி காட்டியிருக்கும் விதம் வியக்க வைப்பது. காதலித்தவனையே கைபிடிக்க வேண்டும் என்கிற மரபான பார்வையை மீறும் படைப்பாகக் கடல்புரத்தில் அவ்வப்பொழுது வெளிப்படுகிறது. மணமான பின்னரும் தன்னுடைய காதலரான வாத்தியை மரியம்மை பார்க்கிறாள். குரூஸ் எனும் மரியம்மையின் மகன் உருகி நேசித்த ரஞ்சியை விடுத்து கூடுதல் பணத்துக்காக வேறொரு பெண்ணை மணக்கிறான். அப்படியும் ரஞ்சி அவனை வெறுக்கவில்லை. “எல்லாப் பிரியத்தையும் அவரே கொண்டு போயிட்டாரே!’ என்கிறாள். குரூஸின் தங்கை பிலோமி தான் நாவலின் உச்சபட்ச படைப்பு.

சாமிதாஸ் மீது அன்பு கொண்டு தன்னை முழுமையாக ஒப்புவிக்கும் பிலோமி. அண்ணன், அப்பா, அம்மா மூவருக்கும் இடையிலும் சிக்கிக்கொண்டு அல்லற்படும் சூழலிலும், துரோகங்கள், நோய், மரணங்கள் அனைத்தையும் சூழ்கையிலும் வெறுப்பைச் சற்றும் காட்டாமல் நடமாடுகிறாள். ‘உண்மையாக உண்மையாகச் சொல்கிறேன். கோதுமை மணி தனித்துத் தான் இருக்க வேண்டும், அது இறந்தால் ஆனால் அதிக விளைச்சலை தரும்.’ என்கிற விவிலிய வசனத்தை நினைவுபடுத்துவது போல அவளை விட்டு நீங்கும் சாமிதாசிடம், ‘நான் எப்பவும் உன் பிலோமி தான். நின்னு கூப்பிட்டா வந்து பார்க்கப்போறேன்’ என்று அவளால் மட்டும்தான் சொல்ல முடியும்.

மைக்கேல் என்கிற மீனவனின் ஊடாக வல்லம் எனும் நாட்டுப்படகுகளை லாஞ்சிக்கள் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் அழித்து வெல்ல ஆரம்பித்த கதையை விவரிக்கிறார். அன்பு வடிவான மணப்பாட்டு மனிதர்கள். குடித்து ஆற்றாமைகள் ஆற்றும் ஆண்கள் அடித்துக்கொள்கிறார்கள். கொலையும், வஞ்சமும் இந்தப் போட்டியால் நிறைகிறது. பின் அது கதையில் ஒரு ஓரத்துக்கு அனுப்பப்படுகிறது.

மரியம்மையை எல்லாரும் நேசிக்கிறார்கள். ஆனால், யாரும் அவளிடம் அதைச் சொல்லவே இல்லை. இறந்த பிறகு அவளின் பிணத்தின் முன்னால் உள்ளுக்குள் மருகியபடி அவர்கள் நிற்கிறார்கள். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நாமும் அன்பைச் சொல்லத் தவறிய, வெளிப்படுத்த வெம்பிய நினைவுகள் அலை போல மோதித்தள்ளும்.  கடல் அன்னை வண்ணநிலவனின் காலத்தில் அத்தனை பாவங்கள் செய்த மனிதர்களின் அழுக்குகளைக் கழுவி அன்பால் நிறைப்பதாக எழுதிச்செல்கையில் கடல்புரம் ‘ அன்பு வழியை’ ஒத்த படைப்பாகவே தோன்றுகிறது.

காக்கா முட்டை- தமிழர்கள் கொண்டாட வேண்டிய மகத்தான படைப்பு


காக்கா முட்டை படத்தைச் சங்கம் திரையரங்கில் பார்த்த அந்த 105 நிமிடங்களும் அழகானவை. கலைப்படைப்பு பொது மக்களின் வரவேற்பை பெறாது என்பதை அடித்து நொறுக்கியிருக்கிறது இப்படம் என்பதை அவ்வப்பொழுது எழுந்த ஆரவாரமும், இறுதியில் ஒலித்துக்கொண்டே இருந்த கைதட்டலும் உறுதிப்படுத்தின.

பெயர் தெரியாத எத்தனையோ சிறுவர்கள் பள்ளிப்பக்கம் எட்டிப்பார்க்க முடிவதே இல்லை. உலகில் குழந்தைத் தொழிலாளர்கள் மிக அதிகமாக இருக்கும் நாடு நம்முடையது! அப்படிப்பட்ட இரு சிறுவர்களின் பீட்சா சாப்பிட வேண்டும் என்கிற ஆசையும், அது சார்ந்த பயணமும் தான் காக்கா முட்டை கதை. இறுதிவரை சின்னக் காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையின் உண்மையான பெயர் சொல்லப்படவே இல்லை.

சென்னை வாழ்க்கையில் கிராமத்து பையனாக இருந்துவிட்டு நுழைந்த நான் ஒரு பீட்சா துண்டை என் கல்லூரி வாழ்க்கை காலத்தில் சாப்பிட்டதே இல்லை. விலை அதிகமான உணவகங்களில் போய்ச் சாப்பிட கல்விக்கடனில் படித்த எனக்குத் தைரியம் வந்தது கிடையாது.

லீ மெரிடியன் ஹோட்டலுக்கு என்னுடைய நெருங்கிய நண்பன் அறையில் உறங்கிக்கொண்டு இருந்த என்னை அப்படியே ஷார்ட்ஸ், சாயம் போன டி-ஷர்ட்டோடு சாப்பிட அழைத்துப்போனான். ஓட்டல் பாதுகாவலர் நான் அணிந்திருந்த ஆடைகளோடு உள்ளே நுழைய முடியாது என்று திடமாக மறுத்து அனுப்பி வைத்தார். என் நண்பன் தன்னிடம் பணம் இருக்கிறது, சாப்பிடத்தான் வந்திருக்கிறோம் என்றது அவர் காதுகளை எட்டவேயில்லை. நான்,”முன்னவே வேணாம்னு சொன்னேனே மச்சி!” என்று சலித்துக்கொண்டேன்.

உலகமயமாக்கல் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையின் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது என்பதை எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் படம் காட்டிச்செல்லும் கணங்கள் அத்தனை நுண்மையானவை. தாங்கள் விளையாடிக்கொண்டிருந்த மைதானம் கைப்பற்றப்பட்டு அதன் மரங்கள் பீட்சா கடை வருவதற்குச் சாய்க்கப்படுவதற்குக் குழந்தைகள் கைதட்டுவது குழந்தைகளை மட்டுமே சொல்வதாகப் படவில்லை.

மீடியாக்களின் சில நொடிகள் கண்ணீர் விடும் போலி மாய்மாலங்கள், செய்தியை சுட்டு சொந்த சரக்கு போலப் பிரம்மாண்டம் காட்டி பரிமாறும் யுக்தி, பரபரப்புத் தருணங்களில் மட்டும் தலைகாட்டி ஊதிப் பெரிதாக்கும் வழிகள் இயல்பான அங்கதத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.

சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்ப்ரெஸ் அவென்யு முதலிய மால்களில் எத்தனை அழுக்கு உடை அணிந்த, ஏழ்மை மிக்க மக்களைக் காண்கிறோம்? வளர்ச்சி என்பது ஒரு பக்கம் மட்டும் நிறைத்தால் அது வீக்கமில்லையா என்கிற கேள்விகளை வசனங்கள் இயல்பாக எழுப்புகின்றன. சென்னைத்தமிழ் செறிவாகத் திரையில் கடத்தப்பட்டு இருக்கிறது.

A still from the film அரசியல், ஊடகம், நடுத்தர மக்கள், மேட்டுக்குடி என்று அத்தனை பேரின் மீதும் அப்படியொரு மென்மையான சாடல் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. காக்கா முட்டைகளின் அம்மாவாக அசர வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்  சொல்வது போல, “உங்களை கை நீட்டி அடிக்கக்கூடாதுன்னு பாலிசி வெச்சிருக்கேன்.” என்ற வசனம் இயக்குனர் தனக்குத் தானே போட்டுக்கொண்ட மெல்லிய கோடாக படுகிறது.

மேட்டுக்குடியின் வாழ்க்கையைப் பிரதி போட்டு விடத்துடித்து மற்றவற்றை மறந்து அங்கே போய்ச் சேர்கையில் அது ஒன்றுமில்லை என்று உணர்வை பலரும் பெற்றிருந்தாலும் அதைத் திரையில் நச்சென்று சொன்ன கணத்தில் அரங்கமே விசில்கள், கைதட்டல்களால் நிறைந்தது. கதையில் யாவரும் வெகு இயல்பாக வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

எத்தனையோ கொண்டாட்டங்கள், கவனிப்புக்கு பிறகு அந்தச் சேரி குழந்தைகள் மீண்டும் அதே வாழ்க்கைக்குத் திரும்புவதாக முடியும் காக்கா முட்டையின் கதை பல கோடி தம்பி, தங்கைகளின் வாழ்க்கை யதார்த்தம் என்பதை உணர்ந்துவிட்டு வீட்டில் அமர்ந்து காட்சிகளை அசைபோடுங்கள். சிரித்த கணங்களில் சிந்தியிருக்க வேண்டிய கண்ணீர் பற்றிப் புரியும். தமிழின் திரை வரலாற்றில் மிக முக்கியமான மனிதர்களுக்கான மகத்தான படைப்பு காக்கா முட்டை. இதை நெஞ்சாரத் தழுவி வரவேற்பது தமிழர்களின் பெருங்கடமை. இயக்குனர் மணிகண்டனுக்கும், குழுவினருக்கும் மனம் நிறைந்த முத்தங்களும், வாழ்த்துகளும். இந்தக் கட்டுரையை அடித்து முடிக்கையில் பீட்சா விளம்பரம் ஆன்லைனில் சிரிக்கிறது  நல்லா வருவீங்க!

உலக சுற்றுச்சூழல் தினம்


உயிர்கள் வாழ்கிற ஒரே கோளான நம் பூமி எல்லாருக்கும் ஆனது. அதன் வளங்களால்  நாம் வாழ்கிறோம், வளர்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள  இந்த உலகை பற்றி நாம் கவனிக்கிறோமா? நேசிக்கிறோமா? கவலை கொள்கிறோமா? இவற்றை செய்ய வேண்டியதை வலியுறுத்தும் நாள் தான் உலக சுற்றுச்சூழல் தினம். ஜூன் 5 அன்று வருடாவருடம் கொண்டாடப்படும் இந்த தினம் ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்டத்தினால் துவங்கப்பட்டது. யார் வேண்டுமானாலும் இந்த நாளை கொண்டாடலாம். 

 

எப்பொழுது துவங்கியது?

 

1972-ல் ஸ்டாக்ஹோமில் கூடிய ஐ.நா.வின் மனித சுற்றுச் சூழல் மாநாடு வருடாவருடம் இப்படியொரு தினத்தைக் கொண்டாடுவது என்று முடிவு செய்ததது. ஒவ்வொரு வருடமும் ஒரு பேசுபொருள், முழக்கம் சுற்றுச் சூழல் தினத்துக்கு வழங்கப்படுகிறது.  உலக சுற்றுச்சூழல் தினத்தை சுருக்கமாக WED  என்று அழைக்கிறார்கள். இந்த வருட WED -ன்  பேசுபொருள் நிலையான உற்பத்தி, நுகர்வு என்பதாகும். முழக்கம்  ‘ஏழு பில்லியன் கனவுகள். ஒரே கோள். கவனமாக செலவிடுங்கள்!’   

 

ஏன் வளங்களை நாம் கவனமாக செலவிட வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது இல்லையா? 

 

உலகத்தின் மக்கள் தொகை இன்னமும் 35 வருடங்களில் 9600 கோடியாக  உயர்ந்து விடும். அவ்வளவு மக்கள் தொகையின் தேவையை சமாளிக்க மூன்று பூமி அளவுக்கு வளங்கள் தேவைப்படும்!  தண்ணீர், உணவு, ஆற்றலை வீணாக்கி கொண்டே இருந்தால் உலகமும், நாமும் பெரிய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். சிக்கனமாக, சாமர்த்தியமாக வளங்களை பயன்படுத்துவது அதனால் அவசியமாகிறது. 

 

நீர்: 

 

உலகின் நீரில் 0.5% மட்டுமே மனித பயன்பாட்டுக்கு உரிய நல்ல நீராக இருக்கிறது. உலகம் முழுக்க நீரை பெருமளவில் வீணடித்துக் கொண்டும், மாசுபடுத்திக்கொண்டும் இருக்கிறோம்.  இப்போதே  100 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு சுத்தமான தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும், பயன்படுத்தவும் கிடைப்பதில்லை. 

 

குழாயில் நீர் வீணாக ஓடிக்கொண்டு இருந்தால் நிறுத்துங்கள். வீட்டில் குழாயில் ஓட்டைகள் இருந்தால் உடனே அடைக்க சொல்லுங்கள். எப்படியெல்லாம் தண்ணீரை சேமிக்கலாம் என்று நண்பர்களோடு விவாதியுங்கள். செயல்படுத்துங்கள். 

 

உணவு: 

 

1.3 பில்லியன் டன் உணவு ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுக்க வீணாக்கப்படுகிறது. நூறு கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், இன்னொரு நூறு கோடி மக்கள் மூன்று வேளை  உணவில்லாமல் துன்புறுகிறார்கள். நில, நீர் வள இழப்பு, கடல்வள  பாதிப்பு ஆகியவற்றால் உணவுப் பற்றாக்குறை பெருகிக்கொண்டே போகிறது என்பது இன்னமும் கவலை தருவது.  இனிமேல் சாப்பாட்டை வேண்டாம் என்று வீணாக்க மாட்டீர்கள் தானே? 

 

 ஆற்றல்: 

 

உலகின் மொத்த மோட்டார் வாகனங்கள் இன்னமும் ஐந்தே வருடத்தில் 40% அளவுக்கு அதிகரிக்கும். 32% அளவுக்கு வாகனங்கள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை எகிற  உள்ளது.ஆனால், பெட்ரோல் முதலிய வளங்கள் ஒரு காலத்துக்குப் பிறகு தீர்ந்து போகும் என்பதால்  சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

 

 வெவ்வேறு வருடத்தின் உலக சுற்றுச்சூழல் கொண்டாட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் துவக்குவது வழக்கம். அதற்கொரு பேசுபொருள் உண்டு.  

2006 பாலைவனம், பாலைவனமாக்கல்  – வறண்ட நிலங்களை பாலைவனமாக்காதீர்கள் அல்ஜியர்ஸ், அல்ஜீரியா
2007 உருகும் பனி- தீவிரமான சிக்கலா? லண்டன், இங்கிலாந்து
2008 குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி- பண்பை  வளர்த்துக்கொள்ளுங்கள் வெல்லிங்க்டன் , நியூசிலாந்து
2009 உலகத்துக்கு நீங்கள் தேவை  – பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வோம் மெக்சிகோ
2010 பல உயிரிங்கள். ஒரே கோள் . ஒரே எதிர்காலம் ராங்பூர்  ,வங்கதேசம்
2011 காடுகள்: உங்களின் சேவைக்காக இயற்கை! புது டெல்லி
2012 பசுமை பொருளாதாரம்- உங்களின் பங்களிப்பு இல்லாமலா? பிரேசில்
2013 யோசியுங்கள் உண்ணுங்கள் சேமியுங்கள். உங்களின் உணவுப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் மங்கோலியா
2014 குரலை உயர்த்துங்கள், கடல் மட்டத்தை அல்ல லாகூர், பாகிஸ்தான்
2015 ஒரே உலகம், ஒரே சுற்றுச்சூழல் சில்ஹெட்,வங்கதேசம்
2016 நம் உலகம், நம் கவனிப்பு சௌதி  அரேபியா

உலகச் சுற்றுசூழல் தினத்துக்காக உலக கீதத்தை இந்திய  வெளியுறவுத்துறை அதிகாரி அபய்  இயற்றியுள்ளார். அது உலகம் முழுக்க பாடப்படுகிறது. அதன் மொழியாக்கம்: 

 
நம் பிரபஞ்ச சோலை, பிரபஞ்ச நீல முத்து 
அண்டத்தின் அழகிய கோள்  பூமி 
உலகின் கண்டங்களும், கடல்களும் 
நாம் இணைந்து மலர்களாகவும், மிருகங்களாகவும் நிற்கிறோம் 
இணைந்து ஒரே உலகின் ஒரே இனமாகவும் நிற்கிறோம்
கருப்பு, பழுப்பு, வெண்மை,  பல்வகை வண்ணங்கள் 
நாம் மனிதர்கள், பூமி நம் இல்லம் 
நம் பிரபஞ்ச சோலை, பிரபஞ்ச நீல முத்து 
அண்டத்தின் அழகிய கோள்  பூமி 

உலகின் எல்லா மக்களும், கிரகங்களும்

அனைவருக்கும் ஒன்று, ஒன்று அனைவருக்கும் 
இணைந்து நாம் நீல பளிங்குக். கொடியை  விரிப்போம்

கருப்பு, பழுப்பு, வெண்மை,  பல்வகை வண்ணங்கள் 
நாம் மனிதர்கள், பூமி நம் இல்லம் 
(உலக சுற்றுச்சூழல் தினத்துக்காக சுட்டி விகடனில் வெளிவந்த கட்டுரை)