






பசவர் எனும் புரட்சியாளர்!
எளிமையான மொழியில், சிவனைப்பற்றிப் பாடும் குரலில் பசவர் கன்னட மொழியில் எழுதிய கவிதைகள் மாபெரும் சமூக எழுச்சியை உண்டு செய்தது. பல்வேறு கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் ஏ.கே.ராமானுஜனின் பசவரின் கவிதை மொழிபெயர்ப்பில் தங்களின் மனதை பறிகொடுத்திருக்கிறார்கள். டெட் ஹூக்ஸ் எனும் கவிஞர் காற்றில் கசியும் குரலாக அவரின் வரிகள் நெகிழ்விப்பதாகச் சிலிர்த்தார்.
நதி சங்கமங்களின் தலைவனான சிவனைப் போற்றிப் பாடும் பசவர் ஒரு சமூகப் போராளியாக, சுதந்திர சிந்தனையாளராக, மத ஆசிரியராக வெளிப்படுகிறார். கிரிஷ் கர்னாட் ‘எல்லா வகையான நிலையான அமைப்புகளையும் பசவரும், அவரின் தொண்டர்களும் நிராகரித்தார்கள். தொடர்ந்து நகர்பவர்களாக, மாறுபவர்களாக, வாழ்க்கையில் தொடர்ந்து செயலாற்றுகிறவர்களாக அவர்கள் இருக்க விரும்பினார்கள். எந்த அறிவுத் திறனையும் காட்ட முயலாமல் மக்களிடம் எளிமையாக உரையாடுவது என்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தார்கள்.’ என்கிறார்.
நதி சங்கமங்களின் இறைவனே
எதுவும் உன்னைக் காயப்படுத்தாது
நான் பாடிக்கொண்டே உன்னைக் காதலிப்பேன்
என்கிற பசவரின் வரியில் இந்த எளிமையே வெளிப்படுகிறது.
தன்னுடைய இறைவனைப் பசவர் கிருஷ்ணா மலப்ராபா எனும் சிறு நதியை சந்திக்கிறது. அங்குதான் பசவர் தன்னுடைய பாடல்களை எழுதினார். வச்சனாஸ் எனும் பாடல் வடிவத்தில் சந்தத்தோடு அவர் எழுதினார்.
மரத்தினில் மந்தியைப் போல
கிளைக்குக் கிளை தாவுகிறது
எப்படி நம்புவேன் எரியும் என் இதயத்தை?
அது என் தந்தையிடம் என்னைப் போகவிடாது
நதிசங்கமங்களின் இறைவனிடம்!
சாதியமைப்பை வச்சனாக்கள் கேள்வி கேட்டன. பல ஒடுக்கப்பட்ட ஜாதியினரும், பெண்களும் பசவரின் இயக்கத்தை முன்னெடுத்தார்கள்.
‘இரும்பை கொதிக்கவைத்தால் நீ கொல்லன்
துணித் துவைத்தால் சலவைக்காரன்
ஆடையை நெய்தால் நெசவாளர்
வேதம் படித்தால் பிராமணன்
பொய், பெரும்பொய் புனித பிறப்பு பற்றிய புரட்டுகள்
தன்னை உணர்ந்தவனே தன்னிகரில்லா மனிதன்’
மத அதிகார பீடங்களை அவரின் வழிவந்த வீரசைவர்கள் கேள்வி கேட்டார்கள். சமூகச் சாதியமைப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. பெண்கள் அவர்களின் பாடல்களிலாவது குறைந்த பட்சம் ஆணுக்குச் சமமாகப் போற்றப்பட்டார்கள். பிராமணியத்தை மட்டுமல்லாமல், பானை, சீப்பு, கோப்பைகள் ஆகியவற்றில் இறைவனைக் கண்ட நாட்டார் மக்களையும் அவர் கேலிசெய்தார். பசவர் வடமொழியில் எழுதாமல் மக்களின் மொழியான கன்னடத்தில் தன்னுடைய கருத்துக்களைத் தீவிரமாகப் பரப்பினார்.
இந்தப் பக்தியெனும் கொடும்பொருளை கொண்டு செல்லாதே
அறுக்கும் ரம்பம் அது
போகிற பொழுதும்
வருகிற பொழுதும்
அறுக்கும் அது அறுக்கும்!
அவரைப் பின்பற்றியவர்கள் அவர் எந்தச் சாதியமைப்பை தீவிரமாகச் சாடினாரோ அதையே தங்களின் அடையாளமாக மாற்றிக்கொண்டார்கள். அவரின் வழிவந்தவர்களே தனிச் சாதியாக மாறினார்கள். லிங்காயத்துகள் எனப்படும் அம்மக்கள் எண்பது லட்சம் பேர் கர்நாடகத்தில் தனி ஆதிக்க ஜாதியாக உள்ளார்கள். அதைப் பசவர் இன்றிருந்தால் கடுமையாகச் சாடியிருப்பார். பசவர் அன்றிருந்த சமூக, சாதியமைப்பை கேள்விக்குள்ளாக்கும் நோக்கில் ஒரு அதீத முடிவை எடுத்தார். செருப்பு தைக்கும் வகுப்பை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், பிராமணப் பெண்ணுக்கும் கலப்புத் திருமணம் செய்ய முயன்றார். மன்னன் கோபங்கொண்டு இரு குடும்பத்து ஆட்களின் கண்களைப் பிடுங்கினான். அவர்களின் உடல்கள் யானைகளால் நசுக்கப்பட்டன. கொதித்து எழுந்து வீரசைவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள். பசவர் எவ்வளவோ தடுத்தும் வன்முறையை விடவில்லை. அதற்குள் அவரின் சமூகம் சிதறி, பசவர் இறந்து போயிருந்தார். மன்னன் அதற்குப் பின்னர்க் கொலை செய்யப்பட்டான்.
ஏழ்மையாக வாழ்ந்த பசவர் செல்வமில்லாமல் இறைவனுக்கு ஆலயம் எழுப்ப முடியாத தன்னுடைய நிலையை இப்படிப் பாடுகிறார்:
செல்வர்கள் சிவனுக்கு ஆலயங்கள் அமைப்பார்கள்
ஏழை அடியவன் யான் என்ன செய்வேன்?
என் கால்களே தூண்கள்
என் உடலே ஆலயம்
என் தலையே தங்கக் கோபுரம்
நதிசங்கமங்களின் இறைவனே காதுகொடுத்து கேள்
நிலையானவை நிலைகுலைந்து போகும்
நகர்பவை என்றும் நிலைத்திருக்கும்!
அண்டம், ஆலயம், ஆட்சி – அவன் இராஜராஜன்
இராஜராஜ சோழன் பதினோராம் நூற்றாண்டில் கட்டிய 66 அடி அற்புதம் தான் பெரிய கோவில். அந்த நூற்றாண்டில் இந்தியாவில் கட்டப்பட்ட மகத்தான கலைப்படைப்பு இது என்கிற கட்டிடவியல் பேராசிரியர் ஜார்ஜ் மிச்சேல். இந்தக் கோயிலுக்குத் தன்னுடைய பெயரை வழங்கிய ராஜராஜசோழன், அதனைத் தன்னுடைய அதிகாரத்துக்கான திறவுகோலாக மாற்றிக்கொண்டான்.
சோழர்கள் அரசியல் சூழலைப் பற்றிய வல்லுனரான பேராசிரியர் செண்பகலட்சுமி விரிவாக இதனை ‘ஆண்டவன், ஆலயம், ஆட்சி ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு’ என்கிறார்.ராஜராஜன் ஆட்சிக்கு வந்திருந்த பொழுது சோழ தேசம் சிக்கலில் சிக்கியிருந்தது. கன்னட மன்னனிடம் கண்ட தோல்வியின் காயங்கள் ஆறியிருக்கவில்லை. உள்ளூர் அரசர்கள், கிராமத்துப் பெருந்தலைகள், வியாபாரக் குழுக்கள், பிராமணர்கள், நெற்பயிர் விளைவித்த வேளாளர்கள் என்று எண்ணற்ற அதிகார மையங்கள் இருந்தன. இவை அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவருக்குப் படையோ, சிறந்த அதிகாரக் குழுவோ இல்லை. அதனால் பெரியகோயிலை அதற்கான கருவியாக மாற்றிக்கொண்டார். இந்தக் கோயில் அவரைப் பல நாடுகளைப் பிடித்தவராக, அதே சமயம் கருணை கொண்ட பக்திமானாகப் பறைசாற்றியது.
இந்தக் கோயிலில் சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்க்கிற முயற்சியை ராஜராஜன் மேற்கொள்கிறார். அதே போல, இங்கே இருந்தே வரி வசூல் செய்கிற வழக்கமும் இருந்தது. கோயிலுக்கு என்று பல ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கோயிலுக்குள்ளேயே அரசு நிர்வாகம் நடப்பதும் நிகழ்ந்தது. பல்வேறு இனக்குழுக்களைச் சேர்க்கும் வகையில் வேத வழிபாடு, தமிழ் வழிபாடான பூவைக் கொண்டு செய்யும் பூஜை, உணவு, ஆடைகள், ஆபரணங்கள் காணிக்கையாக வழங்குவது ஆகியவை உடன் சேர்க்கப்பட்டன. இவை உயிர்ப்பலி தந்த வேதகாலப் பழக்கத்தில் இருந்து மாறுபட்டது. பல்வேறு மக்களின் தெய்வங்களை ஆலயத்தில் பல்வேறு பகுதிகளில் செதுக்குவதும் திட்டமிட்டு நிகழ்ந்தேறியது. அதுவரை நான்கு வர்ணங்களுக்குள் வராதவர்களைச் சூத்திரர்கள் என்று அழைத்து அவர்களிடம் இருந்து உடல் உழைப்பை பெறுவதையும் அவர் சாதித்தார். செப்புத் திருமேனிகளின் பொற்காலமாக அவரின் காலம் இருந்தது.
இருநூறு கிலோ தங்கம் முதல் எண்ணற்ற செல்வங்களைக் கோயிலுக்கு வழங்கிற ராஜராஜன் அதற்கான செல்வதை வரி, போர்கள், வெளிநாட்டுப் படையெடுப்புகள் வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெற்றார். அதற்கு முன் எந்த இந்திய அரசனும் செய்யாத முயற்சியான மரத்தால் ஆன படகுகளை வியாபாரத்துக்காக உருவாக்கினார். அதன் மூலம் வங்கக்கடல் சோழர்களின் ஏரியாக அவரின் காலத்தில் திகழ்ந்தது. இலங்கையை வெஞ்சினத்தோடு கொள்ளையிட்டார். சுமத்ராவின் ஸ்ரீவிஜய அரசோடு போட்டியிட்டு சீனாவுடன் வியாபாரம் செய்தார்கள். முத்து, ஆடைகள், நறுமணப் பொருள்கள் விற்றுக் கற்பூரம், உலோகங்கள், சீனப் பீங்கான் பாத்திரங்கள் பெற்றுச் சோழர்கள் திரும்பினார்கள்.
தமிழகம் இந்தியாவில் இருந்து மாறுபட்டு தனிமனித வழிபாட்டின் உச்சத்தில் உள்ளது. இங்கே அவர்களின் முதல்வர் ஜெயலலிதா சிறைத்தண்டனையை ஊழல் வழக்கில் பெற்ற பொழுது பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். ‘தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா?’ என்று கேள்வி நிரம்பிய போஸ்டர்கள் எழுந்தன. ராஜராஜ சோழன் தான் இறைவனை வழிபட்டதோடு நில்லாமல், தன்னையும் வழிபாட்டு பொருளாக மாற்றினான். அதன் எச்சமும், தொடர்ச்சியும் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றதோ என்னவோ!
மூலம்: சுனில் கில்னானி
சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்
கண்கள் சொருக நடந்து போகையில் எதோ ஒன்று நெளிந்து கிடப்பதாகக் கண்ணில் படுகிறது. பாம்பென்று அலறுகிற நான் அதன் அருகில் சென்று காண்கிற பொழுது அது வெறும் கயிறு என்று புலப்படுகிறது. ஆத்மா என்பது மாயை, பிரம்மம் எனப்படும் இறைவன் மட்டுமே உண்மை. பிரம்மம், மற்றவை எல்லாம் மாயை என்று இறைவனும், நாமும் வேறல்ல என்பதன் மூலம் ஒற்றையான இறைவனை முன்மொழிந்தவர் சங்கரர். அவரின் தத்துவத்துக்கு அத்வைதம் எனப் பெயர்.
சங்கரர் பற்றிப் பல்வேறு கதைகள் வழங்கி வருகின்றன, எட்டு வயதுக்குள் வேதங்களைக் கற்றுத் தேர்ந்த அவர் அப்பொழுதே துறவறம் நோக்கி நகர்ந்தார். பல்வேறு வேத நூல்கள், வேதாந்தம் ஆகியவற்றைப் பற்றி அவர் பல்வேறு உரைகளை எழுதினார். தாயின் மரணத்தின் பொழுது இறுதிச் சடங்கு செய்ய அவர் வந்த பொழுது, சந்நியாசம் வாங்கிக் கொண்டு போனவர் தாய்க்கு சடங்கு செய்யக் கூடாது என்று ஊர் தடுத்தது. ஜெபங்கள், சடங்குகள் ஆகியவற்றுக்கு எதிரான அவரின் குரல் அந்தக் கணத்தில் இருந்து தான் எழும்ப ஆரம்பித்தது.
வேதங்களை விரித்துப் பேச வந்த வேதாந்தங்கள் தான் உண்மையான இறைவனைப் பேசுகின்றன என்றவர் முன்மொழிந்தவர். வேதாந்தங்கள் பற்றிய தன்னுடைய ஆழமான, வசீகரிக்கும் உரைகளின் மூலம் சங்கரர் புதிய கோட்பாட்டை, எழுச்சியை இந்து மதம் என்கிற பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நம்பிக்கைக்கு உருவம் தந்தார். கடவுளின் இருப்பை நிராகரித்த பவுத்தர்களோடு உரையாடிக்கொண்டே அவர் பவுத்தத்தின் சங்கம் முதலிய கூறுகளை இந்து மதத்தில் வெற்றிகரமாக இணைத்துத் துவாரகை, பூரி, பத்ரிநாத், சிருங்கேரி ஆகிய இடங்களில் தன்னுடைய மடங்களை நிறுவினார்.
அவரின் காலத்தில் ஐரோப்பாவில் சார்லி மாக்னே சாக்சன், மூர், ஸ்லாவ் முதலிய பல்வேறு மக்களைக் கொன்று ரத்தக்கட்டிலின் மீது சிம்மாசனம் ஏறினான். இங்கோ சங்கரர் விவாதங்களின் மூலம் ஒரு மதத்தை நிர்மாணித்தார். சடங்குகளை நம்பாமல் தனக்குள் பிரதிபலித்துக் கொண்டு ஒரு மனிதன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றார் அவர். துறவறம், சந்நியாசம், அறிவுத் தேடல் ஆகியவை தேவை என்றும், தனக்குள் பிரதிபலிப்பதன் மூலம் ஒருவர் மாயையைக் கடந்து மோட்சத்தை அடையமுடியும் என்றும் அவர் சொன்னார்.
எனினும், சங்கரர் மோட்சம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று கருதினார். அவரின் எல்லையற்ற பரம்பொருள் என்கிற கருத்தாக்கத்தில் பிற ஜாதியினருக்கு இடமில்லாத அநீதி இருந்தது. வெண்டி டோனிங்கர், உலகம் என்பதே மாயை என்று எண்ணம் விதைத்தன் மூலம் சமூக அநீதிகள், வறுமை, அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிரான குரலை அழிப்பதை சங்கரரின் தத்துவம் செய்தது என்கிறார்.
ஆத்மாவும், பிரம்மனும் வேறு வேறில்லை என்கிறார் சங்கரர். ஆனால், நாம் வேறுபடாத, எல்லையற்ற பிரபஞ்சத்தின் அங்கம் என்றால் நாம் பிரபஞ்சத்தைப் பற்றி எப்படிப் பிரதிபலித்து மோட்சத்தை அடைய முடியும்? வேதம், வேதாந்தம், சங்கரரின் தத்துவம் ஆகியவையும் மாயை என்றால் இவற்றைக் கொண்டு எப்படி உண்மையைக் கண்டடைய முடியும்? எனினும், இந்தத் தேடல் ஒருவரை உண்மையை நோக்கி செலுத்தக்கூடும்.
சங்கரரின் கடவுள் வேறுபட்டவர். சுயநலம் கொண்ட, ஆணாதிக்கம் மிக்க ஆப்ரகாமிய கடவுள்களைப் போலவோ, அதிகச் சக்திகளைக் கொண்ட தனிப்பட்ட பண்புகளைக் கொண்ட வேதகாலக் கடவுள்களைப் போலவோ அல்லாமல் சங்கரரின் கடவுள் ‘நிர்குண பிரம்மன்’ என அவரால் அழைக்கப்பட்டார். அவர் குணங்கள் அற்ற இறைவன். இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்களின் ஒரு இறைவன் கோட்பாடோடு சங்கரரின் கருத்துக்கள் ஒத்துப்போவதாக எண்ணினார்கள். அவரின் எண்ணத்தையே முழுமையான இந்து மதமாக அவர்கள் முன்னிறுத்தினார்கள். எனினும், சங்கரரின் இந்து மதம் பல்வேறு இந்து மதங்களில் ஒன்று அவ்வளவே!
அவரின் எழுத்தும், நடையும் அழகாக, கிளர்ச்சி தருவதாகப் பல்வேறு இடங்களில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒன்று:
நான் நிலமில்லை, நீருமில்லை, நெருப்புமில்லை, காற்றுமில்லை. நான் உணர்வு கொண்ட உறுப்பும் அல்ல. நான் இவற்றின் தொகுப்பும் இல்லை. இவை அனைத்தும் மாறுபவை, இயற்கையில் நிலையற்றவை. .. நான் மேலேயும் இல்லை, கீழேயும் இல்லை, நான் உள்ளேயும் இல்லை, வெளியேயும் இல்லை. நான் நடுவிலும் இல்லை, அப்பாலும் இல்லை. நான் கிழக்கும் இல்லை, மேற்கும் இல்லை. நான் பிரிக்கமுடியாதவன், நான் ஒன்றானவன், வானைப் போல முழுமையாக எங்கும் நிறைந்தவன்!
ஆரியபட்டர் என்கிற ஆளுமையைப் பற்றித் தனிப்பட்ட முறையில் நமக்குத் தெரிவது வெகு சொற்பமே. அவரின் ஆரியபட்டியம் என்கிற ஒரே ஒரு நூல் மட்டுமே நம்மிடம் உள்ளது. அவர் ‘அறிவெனும் ஆபரணத்தை மூழ்கி மீட்டவன் நான். நல்லறிவும், தீயறிவும் மிகுந்த பெருங்கடலில் அறிவெனும் ஓடம் ஒட்டி பிரம்மனின் அருளோடு இவற்றைக் கண்டேன்.’ என்று எழுதுகிறார். பையின் மதிப்பை கண்டறிந்தார், திரிகோணவியலை செம்மைப்படுத்திச் சூரிய, சந்திர கிரகணங்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கம் தந்தார். கலிலியோ, கோபர்நிக்கஸ் ஆகியோருக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பூமி தன்னுடைய அச்சில் சுழல்கிறது என்றார்.
தன்னுடைய பிறப்பை கூடப் புதிராகவே அவர் எழுதியுள்ளார். ‘அறுபது முறை அறுபது வருடங்களும், முக்கால் பங்கு யுகமும் கழிந்த காலத்தில் எனக்கு இருபத்தி மூன்று வயதாகிறது’ என்பதாக அது செல்கிறது. சூரியனே உலகின் மையம் என்று ஆரியபட்டர் சொல்லவில்லை. எனினும், வானமே சுற்றுகிறது என்று நம்பப்பட்ட பொதுவான அறிவுக்கு மாற்றான கருத்தாகப் பூமி சுழல்கிறது என்பதை அவர் முன்வைத்தார். அவரின் இந்த அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்துத் தொழில், திருமணம் என்று பல்வேறு செயல்களைச் செய்யும் மூடநம்பிக்கைக்குப் பயன்பட்டிருக்கும் என்று அவர் எண்ணியிருக்கமாட்டார்.
அப்பொழுதெல்லாம் தூசு நிறைந்த பலகைகளிலேயே கணக்குகள் போடப்பட்டதால் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளச் சுருக்கமாக, துலக்கமாக எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆரியபட்டர் தள்ளப்பட்டார். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சம்ஸ்கிருத பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் மின்கோவஸ்கி ‘முப்பத்தி இரண்டு அடிகளில் பதின்மான எண் முறை, மும்மடங்கு வர்க்கமூலம், வர்க்க மூலங்கள், முக்கோணங்கள் என்று பலவற்றைப் பற்றி விறுவிறுவென்று சொல்லிச்செல்கிறார்.’ ஆரியபட்டர் தீர்க்கமான பார்வையும், அறிவும் கொண்டவர் என்றாலும் மேற்கின் கட்டமைப்பில் அவரின் சிந்தனைகள் பொருந்தவில்லை என்பதால் அவர் [பெரிதாக முற்காலத்தில் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆரியபட்டர் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தார், அவர் புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்தார் என்று பல்வேறு கதைகளும் வழங்கி வருகின்றன.. இவை எதுவும் உண்மையில்லை. அறிவெனும் ஓடத்தில் இப்பொழுதுதான் இந்தியாவின் அறிவியல் பயணம் நகர ஆரம்பித்துள்ளது. அல்பெருனி சொன்னதைப் போல முத்தும், சாணமும் கலந்தே கிடைக்கும். கவனம்!
eye in the sky திரைப்படத்தைப் பார்த்துக் கண்கள் மல்க இந்தப் பதிவை எழுதுகிறேன். தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பதில் எண்ணற்ற சவால்கள், சிக்கல்கள் உள்ளன. அரசுகள், ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையே சிக்கிக்கொள்ளும் அப்பாவிகளைப் பற்றி இவர்கள் ஏதேனும் கவலைப்படுகிறார்களா? ஆம் என்றால் பின்னர் ஏன் இத்தனை மக்கள், குழந்தைகள், பெண்கள் இறந்து போகிறார்கள்? இப்படிப்பட்ட எண்ணற்ற கேள்விகளை இந்தப் படம் இயல்பாக எழுப்புகிறது
கென்யாவில் இருக்கும் தீவிரவாதிகள் ஆறு பேரை வெகுகாலத் தேடலுக்குப் பிறகு பிரிட்டன் கலோனல் கண்டறிகிறார். அவர்களை உயிரோடு பிடிக்க முதலில் முயற்சிகள் எடுத்தாலும், அதில் இருவர் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட இருப்பது தெரியவே தன்னுடைய திட்டத்தை அவர்களைக் கொல்வதை நோக்கி அவர் திருப்புகிறார். இதில் ஆலியா எனும் கென்ய சிறுமி நடுவில் சிக்கிக்கொள்கிறாள்.
ஆலியா எனும் அடையாளங்கள் அறியாத சிறுமி. பிரிட்டன் ராணுவம்,. அமெரிக்க விமானி, கென்ய அரசு, வானில் பறக்கும் விமானம் என்று விரியும் இந்தப் பரப்பில் ஊசலாடுவது மனித நேயமும், மகத்தான ஒரு குழந்தையின் உயிரும் தான். அந்த வீட்டின் மீது தாக்குதல் செய்யலாம் என்று முடிவு செய்கிற பொழுது ஆலியா அங்கே அமர்ந்தபடி ரொட்டிகள் விற்கிறாள். அவள் அந்தத் தாக்குதலில் உயிரழக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற சூழலில், தற்கொலைப் படை தீவிரவாதிகளைத் தடுப்பது எப்படி என்கிற சவால் கண்முன் நிற்கிறது.
எண்பது உயிர்களைக் காப்பதா, அல்லது ஒரு சிறுமியின் உயிரா என்று கேள்வி எழுகிறது. அமெரிக்க விமானி அந்தப் பெண் இருக்கும் பகுதியில் குண்டு வீசமாட்டேன் என்கிறார். அந்தப் பெண் தன்னுடைய விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் கண்கள் நிறையப் பார்ப்பவர்களே குண்டு வீசும் பணி நோக்கி அனுப்பப்படுகிறார்கள். பிரிட்டனின் பெண் மந்திரி ஒருவர் குண்டு வீசப்பட்ட பின்பு அந்தப் பெண்ணின் உயிர் துடித்து அடங்கும் பொழுது கண்ணீர் சிந்துகிறார். லெப்டினென்ட் தன்னுடைய பேத்திக்கு பொம்மையோடு கிளம்புகிறார். ஆலியா மருத்துவ உதவிகள் கூட இல்லாமல் பரிதாபமாக இறந்து போகிறாள்.
‘ஒரு ராணுவ வீரனிடம் போர் என்பது எப்படியிருக்கும் என பாடம் எடுக்காதீர்கள்!’ என்கிற இடத்தில் ஆலன் ரிக்மெனின் குரலும், பார்வையும் பலவற்றைச் சொல்கிறது. போரில்லா உலகம் வேண்டும் என்பதைப் பிரச்சார நெடி இல்லாமல், எக்கச்சக்க ரத்தக்களரி காட்சிகளால் சொல்லாமல், ஆலியா என்கிற மொழி புரியாத பெண்ணின் வழியாகக் கடத்திய வகையில் மனிதநேயத்தின் மீது நம் கண்களைப் பதித்திருக்கிறது இந்தப் படம். அவசியம் பாருங்கள்!
ஆயுர்வேதம் என்பது நீண்ட ஆயுளைத் தரும் அறிவு என்கிற பொருள் கொண்டது.. இதனை இந்தியாவுக்கு அளித்தவர் என்று சரகரை சொல்கிறார்கள். அவரே இந்திய மருத்துவத்தின் தந்தை என்றும் அறியப்படுகிறார். சரகச் சம்ஹிதை மூன்று முதல் ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் தொகுக்கப்பட்டது. அதில் இமாலய தாவரங்கள், உணவு வகைகள் குறித்துச் சொல்வதால் அவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது புலனாகிறது. சரகர் என்பவர் ஒருவரா இல்லை பலரா என்பது உறுதியாகச் சொல்லமுடியாத அளவுக்குப் பல்வேறு குரல்கள் இந்த நூலில் காணப்படுகின்றன.
டொமினிக் வுஜாஸ்ஸ்டிக் எனும் பண்டைய இந்தியா பற்றிய ஆய்வுகள் குறித்த வல்லுநர் சரகச் சம்ஹிதை வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் தொடுகிறது என்கிறார்/ சிறுநீர் வந்தால் உடனே கழிக்க வேண்டும், எப்படி ஒரு மருத்துவமனையை நடத்த வேண்டும், எப்பொழுது எழ வேண்டும், என்ன உண்ண வேண்டும் என்று பலவற்றைத் தொட்டுச் செல்கிறது. வாதம், பித்தம், கபம் என்கிற மூன்றும் இணைந்து உடல் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பொருத்தமான இடங்களை விட்டு அவை இடமாற்றம் அடைகிற பொழுது உடலில் நோய்கள் உண்டாகின்றன என்பது சரகரின் முடிவு.மற்ற பண்டைய மருத்துவ முறைகளைப் போலவே ஆயுர்வேதமும் மனிதனை பரந்த அண்டவெளியின் அங்கமாகக் காண்கிறது.
அதேசமயம், தனிமனிதர்களே தங்களின் உடல்நலனை செம்மைப்படுத்துபவர்கள் என்று அது கருதுகிறது. நல்ல பழக்கவழக்கங்களின் மூலம் உடலை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் சொல்கிறார். விவாதம் என்பதும் ஆயுர்வேதத்தின் மையத்தில் உள்ளது. கேள்வி, பதில் பாணியில் அவரின் நூல் அமைந்துள்ளது. கேள்விகளை எழுப்பி நோயாளியை புரிந்துகொண்ட தீர்வுகளைத் தரவேண்டும்.ஆயுர்வேத சோதனைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கலவையான முடிவுகளைத் தந்துள்ளன.
ஆயுர்வேதத்தில் பிராகிருதி என்கிற கருத்தாக்கம் மனிதர்களின் உடல் கூறுகள், உளவியல் கூறுகள், பழக்க வழக்கங்களின் தனிப்பண்புகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சிகிச்சை அளிக்கின்றது. அதே சமயம் இவை ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனித்தன்மை கொண்டு அமைக்கப்பட்டவை என்று எண்ணக்கூடாது என்கிறார் பேராசிரியர் டொமினிக். காந்தி சரகரின் ஆயுர்வேதம் முதலிய பல்வேறு இந்திய மருத்துவ முறைகளால் தாக்கம் பெற்றார். அவர் நேச்சுரோபதி என்கிற முறையில் தன்னுடைய உடலின் மீது பல்வேறு சோதனைகள் புரிந்து பார்த்தார். அவரின் நூல்களிலேயே ‘உடல்நலத்துக்கான வழிகாட்டி’ எனும் நூலே அதிகமாக விற்கிறது.
இந்தியாவில் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு மிகக் குறைவான பணமே செலவிடப்படுகிறது. நோய்களால் வருடத்துக்கு ஆறு கோடி பேர் இந்தியாவில் வறுமையில் தள்ளப்படுகிறார்கள். தேர்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கை சொற்பமாக உள்ளது.அதிக செல்வம், நகரமயமாக்கல் ஆயுர்வேதம் மீண்டும் எழுச்சி பெற வழிவகுத்து விட்டன. அது கொடிய நோய்களுக்குத் தீரவில்லை என்றாலும் அன்னையைப் போலக் கவனிப்பதும், என்ன சாப்பிட வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்றும் கவனிப்பதாலும் தனி அந்தஸ்து பெற்றுள்ளது.
தொழிற்சாலையில் பல்வேறு பாகங்களை வரிசையாக ஒன்று சேர்ப்பது போல மனிதர்களை அணுகும் நவீன மருத்துவ முறையின் மூச்சடைக்கும் செயல்பாடுகளில் இருந்து ஆயுர்வேதம் வேறுபட்டு இருக்கிறது. அதே சமயம், அது பெரிய அதிசயங்களைச் சாதிக்கவில்லை. உயர்தட்டை கடுப்பேற்றும், மத்திய வர்க்கத்தை ஏழைகளாக ஆக்கும், ஏழைகளை அழிக்கும் நவீன மருத்துவக் கட்டமைப்பில் இருந்து வேறுபட்டு ஒரு வகையான நிம்மதியை மேலும் கொஞ்சம் உரையாடல், கேள்விகளோடு மனிதர்களை மனிதர்களாக ஆயுர்வேதம் அணுகுவதால் அதற்கு மவுசு கூடியுள்ளது.
மூலம்: சுனில் கில்னானி
சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்
அசோகர் புதிதாகக் கிளைபரப்பி இருந்த புத்த மதத்தை உலக மதமாக அதிகாரத்தை விடுத்து இணக்கத்தால், அகிம்சையால் மாற்றினார். அசோகர் ஆட்சிக்கு வந்த காலத்தில் பூனிக் போரில் ரோமானியர்கள் மோதிக்கொண்டார்கள், பாராசீகம் உள்நாட்டுப் போரில் எரிந்து கொண்டிருந்தது, சீனாவில் சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட ஆரம்பித்து இருந்தது. வன்முறையும், போர்களுமே அதிகாரத்துக்கான வழிகள் என்று கருதப்பட்ட காலத்தில் அசோகர் அன்பால் அதைச் சாதித்தார். அமைதி, திறந்த மனது, சகிப்புத் தன்மை ஆகியவற்றை அவர் பரவலாக்கினார்.
மவுரியர்களின் அரசு அசோகரின் காலத்தில் தெற்குப்பகுதியை தவிர இந்தியாவின் பெரும்பான்மைப்பகுதியில் பரவியிருந்தது. அசோகரின் காலத்தில் ஆப்கனின் தட்சசீலத்தில் துவங்கிய சாலை பீகாரின் பாடலிபுத்திரத்தில் முடிகிற 2௦௦௦ கிலோமீட்டர் சாலையாக இருந்தது. நமக்குத் தெரிந்து அசோகர் 33 கல்வெட்டுகள் மூலம் இந்தியா முழுக்க இருந்த தன்னுடைய பிரஜைகளிடம் உரையாடினார். ஹாரல்ட் இன்னிஸ் எனும் வரலாற்று ஆசிரியர் மையப்படுத்தப்பட்ட அரசுகள் பேப்பர், பனை ஓலைகள் ஆகியவற்றில் மக்களைத் தொடர்பு கொள்கின்றன. அதிகாரப் பரவலாக்கம் கொண்ட அரசுகள் திடமான கல், களிமண் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்கின்றன. அசோகரின் அரசு அதிகார பரவலாக்கம் கொண்ட அரசு ஆகும்.
அசோகரின் கல்வெட்டுகள் மக்களின் மொழியான பிராகிருதத்தில் இருந்தன. ‘நான் உறங்கிக் கொண்டிருந்தாலும், உண்டு கொண்டிருந்தாலும், நான் அந்தப்புரத்தில் இருந்தாலும், நான் படைக்களத்தில் இருந்தாலும், நான் அணிவகுப்பில் இருந்தாலும் மக்கள் சேவகர்கள் என்னை எப்பொழுது வேண்டுமானாலும் வந்து காணலாம்.’ என்கிறார் அசோகர். அசோகரின் அண்ணன் சுசிமா பட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அசோகர் ரத்த வெள்ளத்தில் அதிகாரம் ஏறினார் எனத் தெரிகிறது. சில கதைகள் அவர் 98 சகோதரர்களைக் கொன்றதாகச் சொல்கின்றன. காமத்தில் திளைத்தவராக அசோகர் இருந்தார். தனக்கு இணங்காத பெண்களை எரிக்கிற அளவுக்கு அவர் கொடூரனாக ஆரம்பகாலத்தில் இருந்தார்.
முதல் கலிங்கப்போரில் அவரின் குரூரம் உச்சத்தை அடைந்தது. அங்கே பார்த்த ரத்தம், பிணங்கள், இழப்பு அவரைப் புரட்டிப் போட்டன. அமைதியின் பாதையான பவுத்தம் அவரை அடைந்தது. அசோகரைப் பற்றிய இந்தக் கதைகளை விடுத்துவிட்டு பார்த்தால் அவரின் காலத்தில் மவுரிய அரசில் கிரேக்கர்கள், அராமிக் மக்கள் உட்படப் பலதரப்பட்ட இன, மதக்குழுக்கள் இருந்தார்கள். நகரமயமாக்கலும் மிகுந்திருந்தது. இந்தச் சூழலில் அசோகர் ஆட்சி நிலையானதாக அமைய ஒரு வழியைப் பவுத்தத்தின் வழியாகக் கண்டடைந்தார். அவரின் தம்மம் பொறாமை, வன்முறை ஆகியவற்றை நிராகரித்தது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் நலன்களைக் காப்பது தம்மம் என்று அசோகர் கருதினார்.
சாணக்கியர் பேசிய வழிகளில் இருந்து மாறுபட்டு அசோகர் பேசினார், இயங்கினார். அசோகரின் பன்னிரெண்டாவது கல் தூண் அற்புதமான கருத்தை முன்வைக்கின்றது:
ஒரு மதத்தைப் புகழ்வதோ, தூற்றுவதோ நல்ல நோக்கமில்லாமல் மேற்கொள்ளப்படக்கூடாது. ..தன்னுடைய மதத்தை அளவற்ற பற்றினால் போற்றிப் புகழ்வதும், இன்னொருவரின் மதத்தைத் தன்னுடைய மதத்தை உயர்த்திப் பிடிப்பதற்காகத் தாழ்த்துவதும் அவரின் மதத்துக்குத் தான் தீங்காகும். மதங்களுக்கு இடையே தொடர்பு நல்லது. அதே சமயம், பிற மதத்தவரின் கருத்துக்களை, நம்பிக்கைகளைக் கவனிக்கவும், மதிக்கவும் வேண்டும். தேவர்களுக்கு உகந்த மன்னர் பியதசி எல்லாக் குடிமக்களும் மற்ற மதங்களின் கோட்பாடுகளை நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.’
ஒற்றர்கள், குழப்பம் விளைவிப்பவர்கள் ஆகியோரை ஒரு அரசு கொண்டிருக்க வேண்டும் என்று சாணக்கியர் சொன்னால் அசோகரோ தர்ம மகாமதர்களைக் கொண்டு தர்ம யாத்திரைகள் மேற்கொண்டு அறத்தை பரப்பினார். நெறிப்படுத்தல், இணக்கமான வழிமுறைகளால் தான் தம்மம் பரவும் என்று அவர் கருதினார்.
அசோகர் தன்னுடைய இறுதிக் காலத்தில் கடுமையான வழிகளைப் பின்பற்றவும் செய்தார். போரின் இருப்பை ஒப்புக்கொண்டார். மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைப் புத்த மடங்களை விட்டு வெளியேற்றினார். காட்டுவாசிகளைப் புத்த மதத்துக்குக் கட்டாயமாக மாற்றினார். அசோகரின் பெயர் பல்லாயிரம் வருடங்களுக்கு உலகுக்குத் தெரியாமல் இருந்தது. ஜேம்ஸ் பிரின்செப் எனும் ஓரியண்டல் அறிஞர் பிராமி வரிவடிவத்தைப் படித்து அசோகரை மீண்டும் மீட்டெடுத்தார், ஆங்கிலேயர்கள் மறுகண்டுபிடிப்பு செய்த அசோகரை இந்தியாவின் கலாசார, மதப் பன்முகத்தன்மைக்கு நேரு, காந்தி பயன்படுத்திக்கொண்டார்கள்.
இந்தியாவின் தேசியக்கொடியில் அசோகரின் சக்கரம் சேர்க்கப்பட்டது. நேரு அப்பொழுது, ‘இந்திய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே மகத்தான பெயரான அசோகரின் சின்னத்தை, பெயரை நம்முடைய தேசிய கொடியோடு பொருத்தியிருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. போர்கள், பூசல்கள், சகிப்பின்மை ஆகிய நிரம்பிய இந்தக் காலத்தில் பழங்காலத்தில் இந்தியா எதற்காக நின்றது என்பதை நோக்கி நம் மனம் செல்லவேண்டும்.’ என்றார். இன்றைக்கும் அசோகரின் அகிம்சையும், அன்பும், இணக்கமும் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.
மூலம்: சுனில் கில்னானி
சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னாள் மைசூரில் உள்ள அரசாங்க ஓரியண்டல் நூலகத்துக்கு ஒரு பெயர் தெரியாத தஞ்சை பிராமணர் ஒருவர் ஓலைச்சுவடி கட்டு ஒன்றைத் தந்தார். அந்த ஏட்டை இயல்பாகப் படிக்க ஆரம்பித்த நூலகர் ருத்ரபட்டினம் சாமாசாஸ்திரி தான் ஒரு பொக்கிஷத்தை கண்டிருப்பதை உணர்ந்து கொண்டார். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் இந்தியர்களுக்கு மீண்டும் கிடைத்தது இப்படித்தான்!
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் கண்டெடுக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் முதலிய ஆசிய சக்திகள் எழுச்சி கண்டன. அப்பொழுது இந்தியர்களிடம் ஆட்சித்திறம் பற்றிய ஆழமான அறிவிருந்தது என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லும் வழியாகச் சாணக்கியரின் நூல் மாறியது. மாக்ஸ் வெப்பர் எனும் புகழ்பெற்ற சமூகவியல் அறிஞர் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் தன்னுடைய குரூரமான வழிமுறைகளில் நிக்கோலா மாக்கியவல்லியின் ‘தி பிரின்ஸ்’ நூலை பலமடங்கு மிஞ்சிவிட்டது என்று கருதுகிறார்.
பாட்ரிக் ஒலியேவெல்லி எனும் பேராசிரியர், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் தொடர்ந்து நாடு பிடிக்கும், தன்னுடைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்த எண்ணும் அரசனுக்கு வழிகாட்டுகிறது என்கிறார். பல்வேறு வலிமை மிகுந்த நாடுகள் நிறைந்த உலகத்தில் எப்படி ஒரு மன்னன் தீர்க்கமாக இயங்குவது என்பதற்கான வழிகாட்டுதலை சாணக்கியர் வெஸ்ட்பாலியா உடன்படிக்கை எனும் நவீன தேச அரசுகளை உருவாக்கிய நிகழ்வுக்கு முன்னரே கனவு கண்டார் என்று அயலுறவுத் துறை அதிகாரி சிவசங்கர் மேனன் குறிப்பிடுகிறார்.
இந்திய மனதில் துறவு என்கிற எண்ணம் எழும்பிக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் மன்னன் அதிகார வெறி கொண்டவனாகவும் இருக்கிறான். இவை இரண்டுக்கும் இடையேயான மோதல் ‘பாரம்பரியத்தின் உள்மோதல்’ என்று வர்ணிக்கப்படுகிறது. ஒரு மன்னன் அதிகாரத்தை விரும்பாதவன் போலத் தன்னைக் காட்டிக் கொண்டு., தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டே போகவேண்டும் என்று சாணக்கியர் இரண்டு ஒத்துவராத குணங்களை ஒன்று சேர்க்கும் கலையைச் சொல்லித்தருகிறார்.
சுதந்திரம், பாதுகாப்பு, வளம் ஆகியவற்றுக்கு இடையேயான கொடுக்கல், வாங்கலில் இறுதி இரண்டுக்கு சாணக்கியர் முக்கியத்துவம் தருகிறார். ஊழல் நடைபெறும் நாற்பது வழிகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். உளவு பார்க்கும் மன்னன் பறவைகள் வானில் சென்று மறைவதைப் போலச் சென்று மறையும் உளவாளிகளைச் சோதிக்க இன்னுமொரு உளவு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மன்னன் மாய மந்திர சக்திகள் கொண்டவன் என்று மக்களை நம்பவைக்க வேண்டும், மக்களை ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாத பொழுது திசைதிருப்ப வேண்டும் என்று வழிகாட்டுகிறார்.
கடுமையான தண்டனைகளைப் பரிந்துரைக்கவும் அவர் அஞ்சவில்லை. சந்திரகுப்தரின் காலத்தைச் சேர்ந்தவர் சாணக்கியர் என்று கர்ண பரம்பரைக் கதைகள் சொன்னாலும், சமீபத்திய ஆய்வுகள் இருவரின் காலமும் ஒத்துப்போகவில்லை என்று உறுதிப்படுத்துகின்றன. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் மட்டுமே வடமொழியில் இருந்து மதச்சார்பின்மை கொண்ட இலக்கியமாகப் பண்டைய இந்தியாவில் இருந்து நம்மை வந்தடைந்து இருக்கிறது.
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் பிராமணத் தர்மத்தை தாண்டி பலமடங்கு கொடும் வழிகளைக் காட்டியதால் அதனை மாற்றி எழுதுவது பிற்காலத்தில் நடந்தது. பிராமணத் தர்மம், மத அறம், கடமைகள் ஆகியவற்றோடு ஒத்துப்போகும் வகையில் அந்நூல் மாற்றியமைக்கப்பட்டது என்று பாட்ரிக் ஒலியேவெல்லி முதலிய பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பாகிஸ்தானில் இந்திய மனதைப் புரிந்து கொள்ள ராணுவ அதிகாரிகளுக்கு அர்த்த சாஸ்திரம் பயிற்றுவிக்கப்படுகிறது. சாணக்கியர் என்கிற பெயரில் 37-ல் கல்கத்தாவின் மாடர்ன் ரீவியு இதழில் ஒருவர் நேருவின் அதிகார மமதை, ஜனநாயக பண்பற்ற செயல்களை, அவரின் ஆதிக்க மனோபாவத்தைத் தாக்கி எழுதினார். அந்தக் கட்டுரையின் ஆசிரியர் நேருவே தான்! ஒவ்வொரு அரசியல்வாதியின் மனதிலும் ஜனநாயகவாதி, அதிகார மமதை கொண்ட சர்வாதிகாரி ஆகியோரிடையே இன்றைக்கும் பரமபத ஆட்டம் நடக்கிறது.
மூலம்: சுனில் கில்னானி
சுருக்கமான தமிழில்: பூ.கொ.சரவணன்