தமிழகத்தில் மேடைப்பேச்சு!


அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள பேசித் தீர்த்த பொழுதுகள் எனும் மேடைபேச்சு பற்றிய நூலை வாசித்து முடித்தேன். தமிழகத்தின் அரசியல்,சமூக, பண்பாட்டு வரலாற்றில் நீக்கமற கலந்துவிட்டு மேடைப்பேச்சின் நெடிய வரலாற்றை நூற்றி சொச்சம் பக்கங்களில் நூல் அடக்க முயற்சித்து இருக்கிறது.

மேடைப்பேச்சின் வரலாறு என்பது மக்களை நோக்கிப் பேசுகிற பேச்சின் வரலாறு ஆகும். ‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’ என வரும் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியனின் சொற்பொழிவு தமிழகத்தின் முதல் சொற்பொழிவு எனலாம். வள்ளுவரின் அவை அறிதல் கற்றறிந்த அவையில் பேசும் பேச்சைப் பற்றியே பேசுகிறது. வெகுமக்களிடம் பேசும் பேச்சானது பல காலம் தமிழ்ச்சூழலில் இல்லை. யாழ்ப்பாணம் வண்ணார்பிள்ளை கோயிலில் நூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறுமுக நாவலர் நிகழ்த்தியதே தமிழின் முதல் பொதுச்சொற்பொழிவு என்கிறார் அறிஞர் பெர்னார்ட் பேட். சைவ சித்தாந்த மகாசமாஜம் (பெருமன்றம்) தமிழ் பொதுச் சொற்பொழிவுக்கான அடுத்தக் கட்ட நகர்வை எடுத்து வைத்தது.


சைவ பெருமன்றங்கள் ஆரம்பித்து வைத்த தமிழ் மேடைப்பேச்சு வளர்ச்சியைச் சுதேசி இயக்கம் பரவலாக்கியது. தமிழில் மேடைப்பேச்சுக்கு ஒரு மாதிரியாகப் பிபன் சந்திர பால் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய உரை திகழ்ந்தது. பாலின் விவகார நுட்பமும், வாக்குத் திறமையும் பாரதியை கவர்ந்தன. வ.உ.சி, சுப்ரமணிய சிவா மேடைப்பேச்சால் விடுதலை உணர்வைப் பெருக்கினார்கள்.
மேடைப்பேச்சில் திரு.வி.க செந்தமிழிலும், மக்களின் தமிழிலும் உரையாடி மேடைத் தமிழை நோக்கி பலரை ஈர்த்தார். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட முதல் வெகுமக்கள் பேச்சாளராகப் பெரியாரின் நண்பரான வரதராஜுலு நாயுடு மாறினார். மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு அவரின் பேச்சு அடித்தளமாக அமைந்தது (1918).

கல்கி பெரியாரின் சொற்பொழிவை இப்படி வியக்கிறார், “அவர் உலகானுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்..எங்கிருந்து தான் அவருக்கு இந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ. நான் அறியேன்.”

Image result for பெரியார் மேடை

சீர்காழியில் பெரியார் பேச வந்தார். கற்கள், மூட்டைகள் அவரை நோக்கி வீசப்பட்டன. “கல்லடிக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போங்கள். மற்றவர்கள் தலையில் துண்டை கட்டிக் கொள்ளுங்கள்.” என்றார். அவர் பேச பேச மக்கள் கூட்டம் பெருகியது. கூட்டம் முடிந்ததும் அந்நகரின் துணை நீதிபதி “உங்களை ஊர்மக்கள் ஊர்வலமாக அனுப்பி வைக்கிறோம்” எனக்கேட்ட பொழுது பெரியார் அதற்கு மறுத்தார் என்கிற செய்தியை தமிழேந்தியின் கட்டுரை சொல்கிறது.

அடுக்குமொழியில், எழுவாய், பயனிலைகளைப் புரட்டிப் போட்டு, அலங்காரங்கள் மிகுந்த அணி இலக்கணத்தோடு மேடையில் பேசும் புதிய பாணியை அண்ணா துவங்கி வைத்தார். அதேபோல அண்ணாவின் காலத்தில் ஒலிப்பெருக்கி வந்திருந்தது. உரக்கப் பேசியே தன் உயிர் நொந்ததாகத் திரு.வி.க நொந்து கொண்டார். ஜீவாவின் செவித்திறன் போனதில் கத்தி கத்தி பேசவேண்டிய சூழலுக்குப் பெரும் பங்குண்டு. இப்படிப்பட்ட நிலையில் ஒலிப்பெருக்கியை அண்ணா கச்சிதமாகப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தார். மேற்சொன்ன கட்டுரைகள் வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரையில் காணக்கிடைக்கின்றன.

Image result for அண்ணா பேச்சு

 

மேடைப்பேச்சில் தனக்கென ஒரு தனித்த பாணியைக் கலைஞர் கருணாநிதி அமைத்துக் கொண்டார். “இதயத்தைத் தந்திடு அண்ணா..” என அவர் தீட்டிய கவிதை மொழிப் பேச்சு பலரின் நாவில் நடமாடியது. பேராசிரியர் பெர்னார்ட் பேட் “நான் தமிழகத்தின் மேடைப்பேச்சுக்களில் பராசக்தி திரைப்படத்தின் மேடைப்பேச்சின் தாக்கத்தை அதிகமாகக் காண்கிறேன்.” என்கிற அளவுக்கு அவரின் தாக்கம் காலங்களைக் கடந்து பரவியது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு நீதிபதியோடு கலைஞர் மேடையேற வேண்டிய சூழல் வந்தது. நீதிபதி பேசி முடித்த பின்பு கலைஞரின் முறை, “நீதிபதிக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சுகிறேன்.” என்றார். அவர் எதுவும் தவறாகப் பேசவில்லையே எனக் கூட்டம் யோசித்தது. “நீதிபதி ஜப்பானை பாருங்கள், ஜப்பானை பாருங்கள் என்று அடிக்கடி சொன்னார். ஜப்பான் என்றால் உதயச் சூரியன் என்று அர்த்தம்.” என்றார் கலைஞர்.

எம்ஜிஆரின் பதினொரு ஆண்டுகால ஆட்சியில் தன்னுடைய கட்சியைத் தன்னுடைய நாவன்மையாலே கலைஞர் காப்பாற்றினார். எண்பத்தி ஆறில் உள்ளாட்சி தேர்தல்கள் வந்த பொழுது, “கம்சன் ஏழு குழந்தைகளைக் கொன்ற பின்பு எட்டாவது குழந்தையாகக் கண்ணன் எழுந்ததைப் போலத் திமுகத் தேர்தலில் வெல்லும்.” என உத்வேகப்படுத்தலை செய்து தேர்தலில் வெல்வதை உறுதி செய்தார். இவற்றையெல்லாம் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்டுரை பதிகிறது.

Image result for அண்ணா பேச்சு

எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவர் எளிய தமிழில் இப்படி மக்களை நோக்கி பேசினார். “நான் என்ன குற்றம் செய்தேன். இன்னும் இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாக்கியிருக்கும் போது ஏன் என்னைப் பதவியில் இருந்து இறக்கினார்கள். நான் லஞ்சம் வாங்கினேனா? இல்லை. ஊழல் செய்தேனோ? இல்லை. அவர்கள் உங்கள் மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் தான் நாடாளுமன்றத்தில் அவர்களைத் தேர்ந்தெடுத்தீர்களாம். …நான் நிரபராதியா இல்லையா என்பது நீங்கள் வாக்களிப்பதில் இருந்து தெரிய வேண்டும்.: என்றது அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.

வைகோவின் ஆளுமை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அவரைப் பெரும் பேச்சாளராக அடையாளப்படுத்தியது. உலக வரலாற்றை, புரட்சியாளர்களை மக்கள் கண்முன் நிறுத்தி மக்களை உணர்ச்சிக்கும், எழுச்சிக்கும் உள்ளாக்குவது அவரின் பாணியாக இருந்தது.

Image result for வைகோ

தமிழகத்து மேடைப்பேச்சு குறித்து விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பெர்னார்ட் பேட் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனப்படுத்துகிறார். தமிழகத்தின் மேடைபேச்சுச் செந்தமிழில் பெரும்பாலும் திராவிட இயக்கத்தால் வார்க்கப்பட்டது. எப்படி அமெரிக்காவின் கட்டிடங்கள் ரோம, கிரேக்க கட்டிடங்களின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஆங்கிலேயரில் இருந்து மாறுபட்ட செவ்வியல் தன்மை கொண்டவர்கள் எனக் காட்டும் பாணியாக, அரசியலாக அது இருந்தது. அதுபோலச் செவ்வியல் தமிழைப் பயன்படுத்தித் தங்களுக்கான தனி நாட்டைத் திராவிட இயக்கத்தினர் கனவு கண்டார்கள். அதைப் பெர்னார்ட் பேட் திராவிட் செவ்வியல்வாதம் என்கிறார்.

தவம் போல மேடைப்பேச்சை அணுகி, ஒரு மேடையில் பேசியதை இன்னொரு மேடையில் பேசாத தமிழருவி மணியன்; அம்பேத்கரின் சிந்தனைகளை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் தொல்.திருமாவளவன்; நையாண்டி மிகுந்த சோவின் பேச்சு; சங்கீதம் போல இழையும் குமரி அனந்தனின் பேச்சு என்று பலரைப்பற்றிய குறிப்புகள் நூலில் உண்டு.

திராவிட இயக்கம் மேடைப்பேச்சில் செவ்வியல்வாதத்தை முன்வைத்த காலத்தில் அதை எதிர்கொள்ளக் கிருபானந்த வாரியார், கீரன் முதலிய ஆன்மீக சொற்பொழிவாளர்கள் தமிழில் இருந்து புராண இலக்கியங்களைப் பிரபலப்படுத்தினார்கள். குன்னக்குடி அடிகளார் இதுவா, அதுவா என்கிற ரீதியிலான பட்டிமண்டபங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

பக்கங்கள்: 11௦
விலை: ரூபாய்.9௦

பின்னூட்டமொன்றை இடுக