பேரழகிகள் உலகம்


பேரழகிகள் நிரம்பிய உலகில்
குதிப்பது எளிதல்ல

அவர்கள் சில சமயம் அழுவார்கள்
சொல்லாத சொற்களில் வாழ்வின் கதைகளை
பாடம் பண்ணிக்குமைவார்கள்

வாளேந்தி வருபவர்களை
கனிவால் கையறு நிலைக்கு தள்ளுவார்கள்

உருண்டோடும் கண்ணீரில் உலகுக்கே அழுவார்கள்

எல்லாருக்கும் கவலைப்பட்டு
சிலருக்காக உழைத்து
ஊருக்காக அன்பு செய்து
பேருக்காக வாழ்ந்து

சுருக்கங்கள் தேக்கி
கதைகளின் முள்நீக்கி
வெறித்த பார்வை ஒன்றைப்பார்க்கும்
அத்தனை பேரழகிகளுக்கும் சொல்வதற்கு
ஆயிரம் கதைகள் உண்டு

சமையல் கட்டு,
அலுவலக ஒப்பனை அறை,
பேருந்து இருக்கைகள்
படுக்கையறை
என்றே வரையறுக்கப்பட்ட
பேரழகிகள் உலகத்தை
தப்பியும் எட்டாத
தாளாத வெம்மை சுடும்
அவர்கள்
வியர்வைத்துளிகள்
தெறித்த இடமெங்கும்
கருகி உதிர்கின்றன கதைகளின் சுவடுகள்
கொஞ்சம் கரிசனத்தோடு

கடவுளின் மரணமும், சாத்தானின் ஆசியும்


ஒரு கரம் கூட வேண்டாம்
திருப்பிக்கொள்ளும் முகங்களின் கரங்கள் நாடி நின்றது போதும்
ஒரு ஆறுதலை மறுதலிப்பது எளிது
உற்றவர் அகன்றதும் உருளும் நீர்த்துளி விழுவதற்குள்
நடக்கப்பழகுவது நலம்
பிரியங்கள் பச்சாதாபமாகத் தெரிவதற்குள் ஒரு தற்கொலைக் கடிதம் முடித்துவிடு
கடித முடிவில் பெயர் எழுதுவதற்குள் கணம் கணமாய்ச் சாவதற்கு ஆயத்தம் ஆகு
நடுக்கங்கள் தலைதட்டி சிரிக்கையில் பூனைக்குட்டியிடம் பொங்கி அழு
நக்கியபடி நகரும் அந்தப் பிராணியின் கண்களில் ஒளிரும் காலம் ஒரு வாதை
திறக்கப்படாத குறுஞ்செய்தியை அழிப்பதாகத் தனிமைகள் தீர்ப்பது இருப்பதில்லை
வசந்தகாலங்கள் வருகையிலும் வெம்மைகள் விரித்தாடும் பள்ளத்தாக்கின் முனையில் அமர்ந்தபடி கதைத்து முடி
ஒரு கரம் கூட வேண்டாம்
ஒரு கடவுளின் மரணம் கடப்பதற்குள் சாத்தானின் ஆசிகளைப் பொறுக்கியபடி அடுத்தப் பிரிவிற்கு, விடை கொடுத்தலுக்கு விண்ணப்பம் எழுது

நேருவின் நம்பிக்கை – பகுதி 2


நேரு

நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி

இந்தியாவின் சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள் முதலானோர் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே ஓர் அடிப்படையான சவாலை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. நவீன காலங்களில் இந்தியர்களை இணைப்பது எப்படி? அவர்கள் அனைவருக்கும் ஏற்புடைய, ஒப்பான அறங்கள், கடமைகள் ஆகியவற்றை எப்படிக் கண்டடைவது… அதன்மூலம் இந்தியர்களுக்கான பொதுவாழ்க்கையை எப்படி வரையறுப்பது ஆகியவையே அவர்கள் முன்னால் சவால்களாக எழுந்து நின்றன.

இந்தச் சவால்கள் நம்முடைய அறிவியக்க, அரசியல் வரலாற்றின் ஆழமான, பரந்துவிரிந்த தேடல்களாக இருந்தன. எனினும், இந்தியர்களை ஒரு பொதுவான அடையாளத்துக்குள் ஒன்றுசேர்க்கும் தேசியத்தின் கதைக்குள் இந்தச் சவால்மிகுந்த முயற்சிகள் அடங்கிவிட்டன. ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தேசியத்தின் தேடல், முற்றுப்புள்ளியை நெருங்கியதும், வேறுசில கேள்விகள் நம்மைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தன. அரசியல் வாழ்க்கை எனப்படும் பொதுவாழ்க்கையை எப்படி உருவாக்குவது, எப்படி அறம் சார்ந்த அரசியல் வாழ்க்கையைத் தோற்றுவிப்பது, எப்படி அதை நிலைநிறுத்துவது என்கிற அடிப்படையான, இயல்பான கேள்விகள் எழும்பின. இந்தக் கேள்விகளின் வரலாற்றை நாம் மீண்டும் கட்டியெழுப்பவேண்டியுள்ளது.

நாம் தாகூர், காந்தி, நேரு ஆகியோரின் சுயவிமர்சனங்களில், அவர்கள் தங்களுக்குள் மேற்கொண்ட பெரும் விவாதங்களில், ஒரு நவீன அறநெறிக்கான தேடலைக் காண முடிகிறது. (இந்தப் பட்டியலில் எண்ணற்ற தலைவர்களின் கருத்துகளைச் சேர்த்துப் பேச முடியும். நான் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு இவர்கள் மூவரும் முக்கியமானவர்கள் என்பதால், அவர்களின் கருத்துகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன்.) ஓர் அரசாங்கத்தின் குடிமக்களாகப் பொதுவாழ்க்கைக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் இந்தியர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்ட, தள்ளப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் இந்தத் தேடல்களை மேற்கொண்டார்கள்; இந்த அரசியலோடு தொடர்புடைய பொதுவாழ்க்கைக்கான கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றைக் கண்டறிய முயன்றார்கள்; பொதுவாழ்வில் பகுத்தறிவுக்கான ஒரு மரபை அவர்கள் உருவாக்கினார்கள்; இந்த மரபில் அறநெறிகள், ஒழுக்கங்களுக்கான ஓர் அறிவுவெளியை உருவாக்கினார்கள். இப்படிப்பட்ட அறங்கள், ஒழுக்கங்களால் உண்டாகும் அரசியல் தேர்வுகள்குறித்து விவாதித்தார்கள்; மறு ஆய்வு செய்தார்கள்; முடிவெடுத்தார்கள். இந்த விவாதங்களின் மிகச்சிறந்த தருணங்களில் இதன் தேசியம், தேசியவாத சிந்தனையின் குறுகிய எல்லைகளைக் கடந்தன. இப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த விவாதங்களை ஏன் நினைவுகூர வேண்டும்? அவர்களின் அறிவார்ந்த லட்சியங்கள், குறுகிய மனப்பான்மையோடு மட்டும் இந்திய தேசியத்தையோ, அதன் அடையாளத்தையோ அணுகவில்லை என்பதைப் புலப்படுத்துவது அவசியமாகிறது. அவர்கள் பெருங்கேள்விகளை எழுப்பினார்கள்; அந்தக் கேள்விகளுக்கு லட்சியவாதம் மிக்க பதில்களை எதிர்பார்த்தார்கள்.

அறநெறி சார்ந்த கேள்விகளை எழுப்பிக்கொண்டபோது, அவர்கள் ‘ஓர் இந்தியன் என்ன செய்ய வேண்டும்’ என்றோ, ‘ஓர் இந்துவோ, முஸ்லிமோ என்ன செய்ய வேண்டும்’ என்றோ கேள்விகள் எழுப்பவில்லை. ஓர் அறநெறிமிக்க மனிதன் என்ன செய்ய வேண்டும்… அறத் திறன்மிக்க ஒரு மனிதன், எதைச் செய்வது சரியாக இருக்கும் முதலிய கேள்விகளை அடுக்கினார்கள். இப்படிப்பட்ட உலகப் பார்வையைக் கொண்டிருந்தாலும், தாங்களும், தங்கள் சகாக்களும் காலனிய ஆட்சியால் அடிமைப்பட்டிருக்கிறோம் என்கிற சூழலையும், பழைமைவாதம் மக்களைப் பிடித்திருக்கிறது என்கிற நெருக்கடியான நிலைமையையும் உணர்ந்திருந்தார்கள். இதனால், அவர்களின் மகத்தான கனவுகளைச் செயல்படுத்துவது எளிமையான ஒன்றாக இருக்கவில்லை. இப்படிப்பட்ட இடர்ப்பாடுகள் இருந்தாலும், அவர்கள் விசாலமான கண்ணோட்டங்களை நோக்கிய தேடலை நிறுத்திவிடவில்லை. தற்கால அரசியல், அறம் சார்ந்த சிந்தனைகளில் மகத்தான பெருங்கனவுகளும், உடனடித் தேவைகளும் பிரித்தே கையாளப்படுகின்றன. இவர்களோ, உலகத்துக்கான லட்சியங்களை, தாங்கள் வாழும் தனித்துவமான சூழல்களோடு இணைத்துக்கொண்டு எப்படி இயங்குவது எனத் தொடர்ந்து போராடினார்கள்.

தாகூர், காந்தி, நேரு வெவ்வேறு வகையான, வேறுபட்ட கருத்துகளைக்கொண்டிருந்தார்கள் என்பதையோ, அவர்கள் அடிக்கடி முரண்பட்டார்கள் என்பதையோ மறுக்கவில்லை. அதே சமயம், இந்திய வரலாற்றில் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் நவீன அறநெறிகளை அவர்கள் ஒருங்கே அறிமுகப்படுத்த முயன்றார்கள். ஓர் அறம் சார்ந்த, முழுமையான வாழ்க்கையை நவீன காலத்தில் நேருஎப்படி வாழ்வது… அறநெறிக்கும், தனிநபர் அடையாளத்துக்கும் என்ன தொடர்பு… அறநெறிசார்ந்த எப்படிப்பட்ட பொதுவிதிகளை ஏற்பது… பொதுமக்களின் செயல்பாட்டுக்கான அற வடிவங்களை உருவாக்க எதை நாடுவது… அந்த அற வடிவங்களை எங்கே தேடுவது… நவீன அரசியலின் அமைப்பான அரசு, எப்படி அறநெறிப் பாதையிலிருந்து விலகாமல் அறக் கனவுகளை எட்டுவது என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்கள். அந்தத் தேடல்களை நோக்கித் தங்களுடைய அறிவாற்றலைச் செலவிட்டார்கள். இப்படிப்பட்ட பொதுவான சவால்கள், இக்கட்டுகள் நோக்கித் தங்களுடைய பார்வையைச் செலுத்தினார்கள்.

காந்தி, தாகூர், நேரு ஆகிய மூவரும், இந்தியாவில் அரசியல் எப்படி மேலும்மேலும் முக்கியத்துவம் பெறப்போகிறது என்பதையும், பொதுவாழ்க்கையில் வலிமையான ஊடகமாக அது எப்படி மாறப்போகிறது என்பதையும் உணர்ந்தார்கள். அரசியலில் தொடர்ந்து தலையிடுவதையும் செயல்படுவதையும் இவர்கள் மூவரும் மேற்கொண்டார்கள். எனினும் அரசியல், மக்களின் வாழ்க்கையில் நீக்கமற கலக்கும்போது, பொதுவாழ்வு ஊழல்மயமாகும் என்பதை அறிந்திருந்தார்கள். அரசியல் வெறும் சொத்துக் குவிக்கிற கேவலமான தேடலாக மாறக்கூடும் என்பதையும், அது பேரழிவைத்தரும் விளைவுகளை உண்டாக்கும் என்பதையும் உணர்ந்தே இருந்தார்கள். மதம் பொதுவாழ்வைவிட்டு விலகிக்கொண்டிருந்த மேற்கிலும், பல்வேறு வகையான மத நம்பிக்கைகள்மிக்க இந்தியாவிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மதமோ, நம்பிக்கை முறையோ அனைவரும் ஏற்கும்படியாக இருக்காது என்கிற புரிதல் அவர்களுக்கிருந்தது. பல்வேறு நம்பிக்கைகள்கொண்ட எல்லாரும் ஒரே அறநெறியைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்பதையும் இவர்கள் உணர்ந்திருந்தார்கள். மதத்தின் தாக்கம் குறைவதாலோ, பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றுவதாலோ, ஒரு பொதுவான, அனைவரும் ஏற்கும் மத நம்பிக்கை சாத்தியமில்லை. மதம், தன்னுடைய மரபான சிந்தனைகளோடு அனைவருக்கும் உகந்ததாகத் தன்னை அறிவித்துக்கொள்ள முடியாது. அறம் சார்ந்த நம்பிக்கைகள் சார்புத்தன்மை கொண்டதாக இருந்தது. இதனால், தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, புதுமைமிக்க அறவழக்கங்கள், பொறுப்புகளைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. இதை நியாயமாகவும், அனைவருடனும் உரையாடுவதன் மூலமே சாதிக்க முடியும். இப்படி உரையாடுவதன்மூலம் அனைவரும் ஏற்கக்கூடியவை எவை… பலதரப்பும் பொருந்திப்போகும் அற அர்ப்பணிப்புகள்  எவை… இவற்றை எப்படி மேலும் விரிவுபடுத்துவது ஆகியவைகுறித்த தெளிவு, இப்படிப்பட்ட விவாதங்களால் மட்டுமே சாத்தியம்.

இதுவரை நான், தாகூர், காந்தி, நேரு ஆகியோருக்கு இடையே ஒற்றுமைகள் இருப்பதாகக் கருதிக்கொண்டு பேசினேன். இதன்மூலம் அவர்கள் அனைவரையும் ஒரே பொதுப் பகுத்தறிவு மரபின் அங்கமாகக் காட்டினேன். இப்போது அவர்கள், எப்படித் தங்களுக்குள் முரண்பட்டார்கள் என விளக்கப்போகிறேன். இதன்மூலம், நேருவின் நம்பிக்கை எப்படித் தனித்துவமானது என்கிற புரிதல் ஏற்படலாம்.

தாகூர், காந்தி மற்ற இந்தியர்களிடமிருந்து ஒரு முக்கியமான புள்ளியில் மாறுபடுகிறார்கள்; மதத்தை, அதன் மரபான பார்வையில் அப்படியே ஏற்றுக்கொண்டால், அது அனைவரும் ஏற்கக்கூடிய நம்பிக்கைக்கோ, அறநெறிக்கோ அடிப்படையாக அமையமுடியாது என உணர்ந்திருந்தார்கள். இதனால், காந்தி மீண்டும் மீண்டும் மத மரபுகளைப் பெருமளவில் போராடித் தகர்த்தார். அவற்றைத் தன்னுடைய தொடர் முயற்சிகளால் மறுகட்டமைப்புச் செய்தார். இதனால் ஏற்பட்ட அற உணர்வை மரபான இந்து மதத்தின் பார்வையில் புரிந்துகொள்ள முடியாது. தன்னுடைய தேடலை இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து மதத்தின் நாட்டார் வடிவங்கள் நோக்கிச் செலுத்தியதன்மூலம், அவைகுறித்து திறந்தமனதோடு அணுகியதன்மூலம் தன்னுடைய தனித்துவமான அறநெறிப் பாதையைக் காந்தி உருவாக்கினார். அவரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கைகளைப் பெருமளவில் மரியாதையோடு அணுகி, இவற்றையும் தாண்டிப் பயணித்தது. தாகூர், பக்தி மிகுந்த பழைமைவாதியின் மதமாகவும் அல்லாமல், ஓர் ஆன்மிகவாதியின் மதமாகவும் அல்லாமல் ‘கவிஞனின் மதம்’ ஒன்றைத் தோற்றுவித்தார். இது, மத மரபுகளின் உள்ளேயும், வெளியேயும் பயணித்துத் தனித்துவமான ஆன்மிக நம்பிக்கையை உருவாக்க முயன்றது. இந்த மதத்தை, ‘மனிதனின் மதம்’ எனத் தாகூர் அழைத்தார். இது, மனிதாபிமானத்தை நம்புவதாக, மனிதனின் ஆற்றல்களின் மீது நம்பிக்கைவைப்பதாக இருந்தது. அதேபோல அனைத்தையும் கடந்த கலையின், அழகியலின் ஆற்றலை நம்புவதாக இருந்தது.

பகுத்தறிவின் ஆற்றல் என்ன, அதை எந்த அளவுக்கு மதிப்பது, அதன் தேவை என்னவென்பது குறித்து காந்தியும், தாகூரும் மோதிக்கொண்டார்கள். இந்த மோதல், பீகார் நிலநடுக்கத்தில் (1934) தெளிவாக வெளிப்படுகிறது. காந்தி, ‘பீகார் நிலநடுக்கத்தைத் தீண்டாமை என்கிற பாவத்தைத் தொடர்ந்து பின்பற்றியதற்காக, மக்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை’ என நாட்டு மக்களிடம் விளக்கம்கொடுத்தார். ‘இதைப் பெருந்தவறு’ எனத் தாகூர் கருதினார். இறைவன் நல்லவர், சமூகம் தீய செயல்களில் ஈடுபடும்போது ,அவர் தண்டிப்பவர், என நம்பிக்கொண்டு காலம்காலமாக நடக்கும் இந்த விவாதத்தின்போது தாகூர் இப்படி எழுதினார்: ‘தங்களைப் போன்ற சக மனிதர்களிடம் இருந்து வெகுதூரம் தள்ளி நிற்பவர்களை இன்னமும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இந்த நிலநடுக்கத்தில், அப்பாவி குழந்தைகளும், தீண்டப்படாத சமூகத்தைச் சேர்ந்த மக்களும் மடிந்திருக்கிறார்கள். ஒரு நாகரிகம் மிகுந்த மனிதன் இப்படிக் கண்மூடித்தனமாக விளக்கங்கள் தரமாட்டான்.’ மதத்தின் பெயரில், இறைவன் என்கிற சக்தி மக்களைக் கொல்லும் பயங்கரவாதத்தை மேற்கொள்ளலாம் என்கிற அங்கீகாரத்தைக் காந்தியின் பார்வை தருவதைத் தாகூர் கண்டார். இயற்கையாக நடைபெறும் நிகழ்வுகளை விளக்க பகுத்தறிவும், அறிவியலுமே பிரதானம் எனத் தாகூர் கருதினார். காந்தியைவிட,  தாகூர் பகுத்தறிவுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தந்தார். அதேசமயம் காந்தி, மரபுகளை… பகுத்தறிவை கூர்மையான ஆய்வுக்கும், விமர்சனத்துக்கும் தொடர்ந்து உட்படுத்தினார் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

பகுத்தறிவை மதிப்போடு அணுகியவகையில் தாகூர், காந்தியைவிட நேருவுக்கே நெருங்கியவராகத் தோன்றுகிறார். தாகூர் இறந்து சிலகாலம் கழித்து அகமது நகர் சிறையில் இருந்து கிருஷ்ண கிருபாளினிக்கு நேரு எழுதிய கடிதத்தில், ‘காந்தி, தாகூரைப்போல வேறு யாரும் முரண்பட முடியாது’ என எழுதினார். அதேசமயம், அவர்கள் இருவரும் ‘ஒரே ஊற்றின் ஞானம், சிந்தனை, கலாசாரம் ஆகியவற்றில் இருந்து உத்வேகம் பெற்றார்கள்’ என்றும் நேரு பதிவுசெய்தார். தனிப்பட்ட அளவில் தாகூரைவிட காந்தியிடமே நேரு கூடுதல் பிணைப்பு, நெருக்கம்கொண்டிருந்தார். நேருவுக்குக் காந்தி தந்தையைவிட மேலானவர். ஒருவகையில், காந்தி நேருவின் வாடகைத் தாய் போன்றவர். ஆனால், அறிவுரீதியாக இந்த நெருக்கம் தலைகீழானது. ‘ஆன்மிகரீதியாக நான் குருதேவுடன் (தாகூருடன்) நெருக்கமாக உணர்கிறேன்’ என்றார் நேரு. தாகூர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நேரு, ‘அவரின் வாழ்க்கை மீதான காதலை, எல்லாவற்றிலும் அழகைக் கண்டுணர்வதைக் காதலித்தேன். நான் அவரை வழிபடுபவன்’ என எழுதினார்.

நேரு

அறிவியலின்​, அறிவியல் சார்ந்த தேடல்களின் எல்லைகளைத் தாகூர் கூர்மையாக உணர்ந்திருந்தார். அறிவியல் எண்களிலும், புள்ளிவிபரங்களிலும் கேள்விகளை அணுகுவதையும், அதன் தர்க்கம் நிகழலாம், நிகழாமலும் போகலாம் என்று நிகழ்தகவாக (probabilistic) இருப்பதையும் அவர் கண்டார். அறம்சார்ந்த கேள்விகள் இப்படி, அப்படி என்று தள்ளாடுகிற பதில்களை ஏற்காது, அவை துல்லியமாக இருக்க வேண்டும் என்று தாகூர் உணர்ந்திருந்தார். நேருவைப் பொறுத்தவரை, அறம்சார்ந்த வாழ்க்கை தொடர் பயணம். பகுத்தறிவின் துணையோடு அதனைத் தொடர்ந்து சோதனைக்கும், மறு ஆய்வுக்கும் உட்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச் சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மைமிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவர், தீன்மூர்த்தி பவனில் 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை‘ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நேருவின் நினைவு தினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.

நேருவின் நம்பிக்கை- பகுதி 1


நேரு

நேருவின் நம்பிக்கை-சுனில் கில்னானி

#நவீன வரலாற்றில் மதம் சாராத நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அறத்தைக் கட்டியெழுப்ப முயன்ற மகத்தான முயற்சியை மேற்கொண்டவராக பண்டித ஜவஹர்லால் நேரு திகழ்கிறார். நாம் உலக வரலாற்றை ஒரு பருந்துப் பார்வை பார்ப்போம். பால்கன் தீபகற்பத்தில் பல்வேறு நாடுகள் அவை இருந்த சுவடே தெரியாமல் சிதைந்து போயின. அரேபிய தேசம் வீழ்ந்து கொண்டிருப்பதை அதன் இடிபாடுகளின் இடையே நின்றபடி காண்கிறோம். அதேசமயம் மலையுச்சியின் விளிம்பில் நின்றபடி அதல பாதாளத்துக்குள் விழுந்து விடாமல் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடும் நபரைப்போல இந்தோனேசியா போன்ற நாடுகள் தங்களுடைய தேச ஒற்றுமையைக் காப்பாற்ற முயன்று கொண்டிருக்கின்றன. #

இப்படிப்பட்ட சவாலான காலத்தில்தான் நேரு, மதம் அல்லாத நம்பிக்கையின்மீது ஒரு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் எனக் கண்ட கனவின் வலிமையை நாம் உணர்வது மிகவும் அவசியமாகிறது. மதம் உறுதியாகத் தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கிற காலத்தில், அது நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இந்தப் புதிய நூற்றாண்டில் நாம் ஏன் நேருவின் நம்பிக்கையைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டும் என்கிற நியாயமான கேள்வி எழலாம். இப்படிப்பட்ட காலத்தில்தான் நம்பிக்கை சார்ந்த நேருவின் கருத்துகளின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதை, நிராகரிப்பதை நாம் செய்யக் கூடாது. மதத்தின் மீது பல்வேறு தேசியங்கள் உறுதி பெற்று இருக்கும் காலத்தில், நேருவின் நம்பிக்கை சார்ந்த கருத்துகளின் இன்றைய தேவையை, முக்கியத்துவத்தை உணர்வது இன்னமும் அவசியமாகிறது. மதம் சாராத நம்பிக்கையே ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு ஏற்றது என்கிற நேருவின் பார்வை முழுக்க முழுக்கச் சரியானதாகும்.

“மதம் எனக்கு நன்றாகத் தெரிந்த களம் அல்ல. எனக்கு வயதாக, வயதாக நான் மதத்தை விட்டு வெகுவாக விலகி வந்துவிட்டேன் என உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு மதம் வலிமையை, நம்பிக்கையைத் தரவில்லை. அதற்குப் பதிலாக அறிவு, பகுத்தறிவை விடச் சற்றே மேலான ஒன்றே என்னைச் செலுத்தியது. அந்த வரையறுக்க முடியாத, முடிவற்ற ஒரு வேட்கையில், மதத்தின் சாயல் சற்றே தென்படலாம். எனினும், அது மதத்திலிருந்து முழுவதும் வேறுபட்ட ஒன்று. நான் முழுக்க, முழுக்க அறிவின் செயல்பாடுகள் சார்ந்து இயங்குகிறேன். அவை எப்போதும் என்னைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமை மிகுந்தவை அல்ல எனத் தெரியும். எனினும், நான் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறேன். இவற்றைவிட மேலான ஒன்றை என்னால் கண்டு அடைய முடியவில்லை” என்று நேரு 1933-ம் ஆண்டில் காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடார். நேருவின் நெடிய அரசியல் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள், சாதனைகள், ஏமாற்றங்கள் அநேகம். இருபதாம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றின் மகத்தான எழுச்சிகளும், வீழ்ச்சிகளும் அவர் காலத்திலேயே அரங்கேறின. இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்த நேருவுக்கு எது நம்பிக்கையையும், வலிமையையும் தந்தது? அறிவின் செயல்பாடுகள் சார்ந்து இயங்கியதாகவும், அதன் மீதே நம்பிக்கை கொண்டதாகவும் நேரு சொல்கிறார் இல்லையா? அவை என்ன? நாம் தேடுவோம், வாருங்கள் !

வரலாற்றுரீதியாக மட்டுமே நான் நேருவின் நம்பிக்கையை அணுகப்போவது இல்லை. அவருடைய நம்பிக்கையின் மையப்பொருளான நம்பிக்கை / பற்று, அசைக்க முடியாத பக்தி / மன உறுதி முதலியவற்றை மீட்டெடுக்க முயல்வேன். இந்தப் பற்று, பக்தி முதலிய சொற்கள் மதம் சார்ந்த பொருளில் இங்கே பயன்படுத்தப்படவில்லை. அப்படிப் பொருள் கொண்டால், நம்முடைய நம்பிக்கை சார்ந்த கருத்துக்கள் ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைபட்டு விடும் அபாயம் உள்ளது. மதத்தைத் தொடர்ந்து நம்பிக்கையை தனித்துவமான மூலமாகத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அப்போது எல்லாம், மத நம்பிக்கை இல்லாமலும் நம்மால் பொது வாழ்விலும், அகவாழ்விலும் அறம், ஒழுக்கம் ஆகியவற்றை வேறு வகையான நம்பிக்கைகளின் வலுவான அடித்தளத்தின் மீதும் கட்டியெழுப்ப முடியும் என நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். எப்படி மதச்சார்பின்மைக்கு வெவ்வேறு வகையான அர்த்தங்கள் இருக்கலாமோ, அதுபோல, எது நம்பிக்கை என்பதற்கும் வெவ்வேறு வகையான விளக்கங்கள் இருக்கலாம். நவீன வரலாற்றில் மதம் சாராத நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அறத்தை கட்டியெழுப்ப முயன்ற மகத்தான முயற்சியை மேற்கொண்டவராக நேரு திகழ்கிறார்.

பொதுவாக அரசியல்வாதிகள் ஆழமான அற நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருப்பதில்லை. அக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கைக்கும் அறம் அவசியமான ஒன்று என உறுதியாக நம்பினார். எனினும், நேரு எப்போதும் மதம் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவருடைய சுயசரிதையில் நேரு, “நிறுவனமயமான மதம் பயத்தால் நிரம்பியிருக்கிறது…. அது எப்போதும் கண்மூடித்தனமான நம்பிக்கை, எதிர்வினை, விடாப்பிடியான கொள்கைகள், சகிப்பின்மை, மூடநம்பிக்கை, சுரண்டல் ஆகியவற்றுக்காக இயங்கும் ஒன்றாகவே எனக்குப்படுகிறது” என எழுதினார். (பக்கம்: 374). நிறுவனமயமான மதத்தை விமர்சனப் பார்வையோடு அணுகிய நேரு, மதத்தின் அற, ஆன்மீக பரிமாணங்களை ஒப்பு உணர்வோடு அணுகினார். அகமதுநகர் சிறைச்சாலையில் இருந்தபடி நேரு இப்படி எழுதினார், “வாழ்க்கையை அறத்தின் வழியில் அணுகுவது என்னை வலுவாகக் கவர்கிறது”. (கண்டடைந்த இந்தியா, பக்கம் 12). அவர் அறிவை கட்டுக்கோப்பாகப் பயன்படுத்தியதன் மூலம் இந்த அற வழியை, அதன் ஆதார மூலங்களைக் கண்டடைந்தார். பகுத்தறிவு நம்முடைய இலக்குகளை அடைவதற்கான கருவி மட்டும் அல்ல. பகுத்தறிவின் மூலம் அறத்தோடு எப்படி இலக்கு நோக்கி பயணிப்பது, எப்படி இலக்கை அடைவது ஆகியனவும் தீர்மானிக்கப்படுகின்றன. பகுத்தறிவோடு இயங்கும் ஒருவர் தன்னுடைய பொறுப்புகள், அற நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு முழுக்க, முழுக்கத் தானே பொறுப்புடையவர் ஆகிறார். நேருவின் நம்பிக்கையின் சாரம் எது? பகுத்தறிவு, பகுத்தறிவு நோக்கிய பயணங்கள் ஆகியவற்றின் மூலம் அறம் சார்ந்த கனவுகளை உருவாக்கி, அவற்றைப் பேணுவதே ஆகும். நம்முடைய அசரவைக்கும் ஜனநாயக பரிசோதனையில் நேருவின் தேவை தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது. எப்படி?

இந்தியா என்கிற தேசத்தை உருவாக்குவதில் அவர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரும் பணியைவிட வேறொரு வகையில் நேரு இந்தியாவிற்கு இன்றும் அவசியம் தேவைப்படுகிறார். வெற்றியும், தோல்வியும் கலந்த போராட்டங்களால் ஆன தனது பொது வாழ்க்கையை நேரு பகுத்தறிவோடு கூடிய அறத்தால் கட்டமைக்க முயன்றார். அந்த அறிவார்ந்த, அரசியல்ரீதியிலான புரிதலே நமக்கு இன்று தேவை. அந்தப் பகுத்தறிவோடு கூடிய அறமே இந்தியாவுக்கு அவசரத் தேவை. பகுத்தறிவைத் தாக்குவது இப்போது பலருக்குப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. பல்வேறு அறிவுஜீவிகள் மத்தியில், பகுத்தறிவு என்பது மேற்கின் அறிவொளி (Enlightenment) காலத்தின் மோசமான  விளைவாகப் பார்க்கப்படுகிறது. மேற்கின் கோட்பாடுகள், முன்முடிவுகள் ஆகியவற்றின் அளவற்ற ஆதிக்க சக்தியாகவே பகுத்தறிவு திகழ்வதாக அவர்கள் கருதுகிறார்கள். பகுத்தறிவு, கலாசார வேற்றுமைகள், பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் ஆதிக்கம் மிகுந்த ஆட்சி செலுத்துவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. பின் நவீனத்துவத்தின் எழுச்சியும், தற்கால மதத்தின் பெருகிக்கொண்டு இருக்கும் வீச்சும் ஒன்றுக்கு ஒன்று நேரடியாகத் தொடர்பு கொண்டவை அல்ல. அதே சமயம், அவை இரண்டும் முற்றிலும் தொடர்பற்றவை என்றும் சொல்ல முடியாது. நம்முடைய பல்கலைக்கழங்கள் ஜோதிடத்தில் பட்டப்படிப்புகளை நடத்தச் சொல்லி ஊக்குவிக்கப்படும் காலத்தில், பகுத்தறிவுக்காக வாதாடுவது தேவையற்ற ஒன்றாகத் தோன்றலாம். இந்தியாவில் அரசியல் களம் பகுத்தறிவை புறக்கணிப்பவர்களால் நிரம்பியிருப்பதாகத் தெரிகிறது. மதம், நாடு, இனம், கலாசாரம் ஆகியவற்றில் தங்களுடைய அடையாளத்தை முன்னிறுத்திக் கொள்வதைக் காண்கிறோம். இவர்கள் எல்லாரும் தங்களுடைய இச்சைகளை வென்றடைய வன்முறையைப் பயன்படுத்தவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட காலத்தில் பகுத்தறிவு கேட்பாரற்றுக் கிடப்பதாகத் தோன்றுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு நாம் பகுத்தறிவின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும். இதைச் சாதிக்க வேண்டும் என்றால் நாம் பகுத்தறிவை சிக்கல் மிகுந்த வெளிச்சத்தோடு அணுக வேண்டும். அதனைப் புன்னகையோடு அறிவுரை சொல்லும் பகுத்தறிவாகவோ, மானுட கச்சிதத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டஒன்றாகவோ காணக்கூடாது. “கச்சிதம் என்பது நமக்கு அப்பாற்பட்ட ஒன்று. கச்சிதத்தை அடைந்து விட்டோம் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். நாம் எப்போதும் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். எப்போதும் பின்வாங்கிக்கொண்டே இருக்கும் ஒன்றை அடைய நாம் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் பல்வேறு குறைபாடுகள், முரண்பாடுகள் கொண்ட வெவ்வேறு மனிதர்கள் நம்மை ஆளுக்கொரு திசை நோக்கி அலைக்கழிக்கிறார்கள்” என்று நேரு எழுதினார். (கண்டடைந்த இந்தியா, பக்கம் 496). இப்படிப்பட்ட மனிதர்களின் முரண்பாட்டுத்தன்மையினால் தான் இருளில் இருந்து வெளிவர தனி மனிதருக்கும், சமூகத்திற்கும் பகுத்தறிவு போன்ற ஒரு திறன் தேவைப்படுகிறது. மனித மனம் எளிமையானது என்கிற எண்ணத்தினால் பகுத்தறிவின் மீது நம்பிக்கை வரவில்லை. அதற்கு மாறாக, மனித மனதை தூண்டிக்கொண்டே இருக்கும் வேட்கைகள், அவற்றின் புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் மீதான மரியாதையினாலேயே பகுத்தறிவு தேவைப்படுகிறது.

பகுத்தறிவு குறித்த நேருவின் புரிதல் சிக்கலும், நுட்பமும் மிக்கது. இதை அவரின் ஆதரவாளர்கள், விமர்சகர்கள் இருவருமே அங்கீகரிப்பதில்லை. நம் சமகாலத்தை ஒட்டியிருந்த காலத்தில் நேருவின் பகுத்தறிவு உருப்பெற்றது. 1930, 40-களில் பகுத்தறிவு பின்வாங்கிக் கொண்டிருந்தது, பாசிசம் ஐரோப்பியாவை சூறையாடிக்கொண்டு இருந்தது, இந்தியாவை மதவெறி கூறுபோட்டுக் கொண்டிருந்தது. தங்களைத் தாங்களே நேருவியர்களாக அறிவித்துக் கொண்டவர்கள், அவரின் அணுகுமுறையை ‘அறிவியல் உணர்வு’ என்பதற்குள் சுருக்கப் பார்க்கிறார்கள். நேருவை கூர்மையாகச் சாடுபவர்கள் அவரின் அணுகுமுறையை எளிமைப்படுத்தி, ‘ஒற்றைப்படையான பகுத்தறிவு’ என்கிறார்கள். இரு தரப்புமே நேருவின் தனித்துவமான சிந்தனைப் போக்கை உணரவில்லை. பகுத்தறிவின் மீது நம்பிக்கை கொண்ட நேரு, வரலாறு, பகுத்தறிவின் பக்கமே இருக்கிறது என்று அப்பாவியாக நம்பவில்லை. பெரும்பாலான பகுத்தறிவாளர்கள் நம்புவதைப் போல ‘வரலாற்றில் பகுத்தறிவு வெல்வது உறுதி’ என நேரு கண்மூடித்தனமாக நம்பவில்லை. நேரு பகுத்தறிவை பலவீனமான, அறிவார்ந்த செயல்பாடாகக் கருதினார், அவரைப்போலவே நாமும் அதனை அணுகவேண்டும். அவர் நாம் எப்படி வாழவேண்டும் என்பது குறித்த பல்வேறு கருத்துகளை மனித மனதின் எல்லைகளுக்குள் புரிந்து கொள்ள முயன்றார்.

நேரு

சமகாலத்தில், காந்தி, படேல், போஸ், தாகூர் ஆகியோரின் வாழ்வு மற்றும் பணிகள் சார்ந்த நுட்பமான விளக்கங்களால் அவர்கள் மேலும் மரியாதைக்கு உரியவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். நேருவை பொறுத்தவரை, அவரை எளிமைப்படுத்தி, அவரை நகைப்புக்கு உரிய ஒருவராக மாற்றுகிறார்கள். அறிவியல் சார்ந்து மட்டுமே பகுத்தறிவை அணுகிய ஒருவராக, வெறுமையான சர்வதேசம் பேசிய ஒருவராக அவரைச் சுருக்கப் பார்க்கிறார்கள். இது உண்மையில் நம்பிக்கை மற்றும் காலத்தின் கண்ணாடியாக உள்ளது. இவை நம்முடைய நம்பிக்கைகள், கவலைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றன.  அவை நேரு என்கிற தலைவரின் காலத்தையோ, அவரின் ஆளுமையையோ வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. நம் நாடு என்னாகுமோ என்கிற ஏமாற்றங்கள், விரக்திகளை எதிர்கொள்ள நேருவின் மீது பழிபோடுவது ஒருவகையில் உதவுகிறது.

நேரு பகுத்தறிவு எப்படி மாற்றங்களைச் சாதிக்கிற ஆற்றல் மிக்கதாக இருக்கிறது என்பதை உறுதியாக உணர்ந்தவராக இருந்தார். பகுத்தறிவு முக்கியமாக இரு வகைப்படும். மனித தேவைகளுக்கு ஏற்ப இயற்கையை வளைக்கும் முயற்சியான அறிவியல் பகுத்தறிவு ஒருவகை. மனிதர்களால் ஆன அமைப்புகளை, எல்லாவற்றுக்கும் மேலாக அரசை பயன்படுத்தி எப்படிச் சமூகத்தை மறு ஆக்கம் செய்வது என்பது சார்ந்த சமூகப் பகுத்தறிவு இன்னொரு வகை. பகுத்தறிவைக் கொண்டு எப்படி இயற்கை, மனிதர்களின் உலகை வளர்ச்சி, அழிவை நோக்கிச் செலுத்த முடியும் என நேரு உணர்ந்திருந்தார். இப்படிப்பட்ட பண்புகள் பகுத்தறிவின் ஆதார மூலங்களைக் காலி செய்துவிடவில்லை. பகுத்தறிவை கொண்டு கட்டற்ற அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும், ஆனால், நேரு பகுத்தறிவைக் கொண்டு அறத்தை, ஒழுக்கம் சார்ந்த மகத்தான சாதனைகளைப் புரிய முயன்றார். பகுத்தறிவு என்பது மேற்கில் இருந்து இறக்குமதியான ஒரு சரக்கில்லை என நேரு கண்டுணர்ந்தார். இந்தியாவிற்குள்ளும் அறம் சார்ந்த வாழ்க்கை, செயல்பாடுகள் குறித்த நெடிய, பக்குவப்பட்ட பகுத்தறிவு மிகுந்த உரையாடல் மரபு உண்டு என நேரு கண்டார். வரலாறு, அனுபவங்கள் சார்ந்த பகுத்தறிவு அறம் சார்ந்த உண்மைகளைக் கண்டடையும் வழிமுறையாக மாறியது. தொடர்ந்து சோதிப்பது, கேள்விகள் கேட்பது ஆகியவற்றின் மூலம் தனிநபர் அடையாளங்கள் உருவம் பெற்றன, அறம் சார்ந்த பொறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், அறக்கடமைகள், நம்பிக்கைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டும், அவற்றை வரலாறு, அனுபவம் முதலியவற்றுக்குள் செலுத்தி அக்னிப்பரீட்சை செய்ய வேண்டும். அறம் சார்ந்த நம்பிக்கைகள், கடமைகள் மத நூல்களில் இருக்கிறது என்பதற்காகவோ, காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதற்காகவோ கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது. அறம் என்பது பகுத்தறிவோடு தொடர்புடையது என்பதால் பல்வேறு நம்பிக்கைகளை ஒன்றுக்கொன்று காது கொடுத்துக் கேட்டு, எதிர்தரப்பின் கருத்துக்களை மதித்துச் செயல்பட வேண்டும். உரையாடலில் பங்கு கொள்பவர்கள் ஏன் அப்படி நம்புகிறார்கள் என்பதற்கான காரணங்களைப் பகுத்தறிவோடு முன்வைத்து எதிர்த்தரப்பையும் தன்னுடைய கருத்துக்களை ஏறக்ச் செய்ய வேண்டும்.

நேரு இருபதாம் நூற்றாண்டின் மிகவும் இருண்ட காலங்களில் வாழ்ந்தார். இக்காலத்தை மனித வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்று என்று கூடச் சொல்லலாம். இரு உலகப்போர்கள், ஹிட்லர் நிகழ்த்திய இனப்படுகொலைகள், அணு குண்டு வீச்சு, இந்தியப் பிரிவினை ஆகியன நேரு காலத்தில் நடந்தேறியவை. கடந்த கால வரலாறு குறித்துக் கூர்மையான புரிதல் கொண்ட நேரு எதுவெல்லாம் எதிர்காலத்தில் மனிதனால் முடியும் என நம்பினாரோ அந்தப் பார்வைகளுக்குச் சவால் விடும் வகையில் துயரம் மிகுந்த உலகச்சூழல் நிழலாகக் கவிந்தது. தாகூர், காந்தி ஆகியோர் தங்களின் இறுதிக்காலங்களில் முறையே மனிதகுலத்தின் வருங்காலம் குறித்த அவநம்பிக்கை, எல்லாம் நடக்கிறபடியே நடக்கும் எனக் கருதுபவர்களாக மாறினார்கள். தாகூர் தன்னுடைய அவநம்பிக்கையை ‘The Crisis in Civilisation’ என்கிற கட்டுரையில் நேர்த்தியாகக் கொட்டித் தீர்த்தார். காந்தி ‘எல்லாம் நடக்கிற படி நடக்கும்’ என்கிற போக்கு நோக்கி நகர்ந்ததைத் தன்னுடைய இறுதிக்காலத்தில் அரசியல் வாழ்க்கையை விட்டுப் படிப்படியாக விலகியது புலப்படுத்துகிறது. இறைவன் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையைச் சோதிக்கவும், வலுப்படுத்தவும் காந்தி தனிப்பட்ட வாழ்க்கையில் அறம் சார்ந்த சோதனை முயற்சிகளில் ஈடுபட்டார்.

நேருவுக்கு விதிக்கப்பட்டது வேறொன்றாக இருந்தது. அவர் அரசியல் எனும் கொந்தளிப்பு கூடாரத்துக்குள் தள்ளப்பட்டார். இந்திய அரசின் தலைவராக ஆக்கப்பட்டார். பிரிவினையின் போதும், பிரிவினைக்குப் பிறகும் வன்முறை, வெறுப்பு ஆகியவை உடைந்துபோன அணை போலப் பிரவாகம் எடுத்து பாய்ந்து கொண்டிருந்த காலம் அது. பகுத்தறிவுக் களத்தை விட்டுக் காத தூரம் தெறித்து  ஓடியிருந்தது. நேரு செயல்பட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இப்படிப்பட்ட இருண்ட காலங்களில் நேருவை எது செலுத்தியது? இந்தக் கவலை மிகுந்த காலங்களிலும் அறிவார்ந்த தேடல்களை, நேருவின் வார்த்தைகளில் சொல்வது என்றால், ‘அறிவின் செயல்பாடுகளை’ விட்டுவிட முடியாது. இருண்டகாலங்களில் இனிய துணையாகப் பகுத்தறிவை இறுகப்பற்றிக்கொள்ள வேண்டும். இந்த இருண்ட காலங்களில் உண்மையான நம்பிக்கையின் தோல்வி, நிஜமான அற வீழ்ச்சி எது தெரியுமா?  பகுத்தறிவின் மீதான நம்பிக்கையைக் காற்றில் பறக்க விடுவதுதான்.

நாம் அரசியல் தலைவர்களை இப்படிப்பட்ட பார்வையிலிருந்து அணுகுவதில்லை. அரசியல்வாதிகளை ஏதோ ஒரு தொழிலை தொடர்ந்து நடத்தும் தொழில்முறை ஆட்களைப் போலக் கருதி அவர்களின் கோட்பாடுகள், நம்பிக்கைகள் குறித்து ஓரளவுக்கே  கவலைப்படுகிறோம். அவர்களின் அறம் சார்ந்த பண்புகள் நம் கவனத்தை அரிதிலும் அரிதாகவே ஈர்க்கின்றன. அரசியல்வாதிகள், அதிகாரத்தை மட்டும் ஒரே குறிக்கோளாகக் கொண்டு துரத்த வேண்டும், மற்றவர்களை விமர்சிப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்க்கிறோம். ஒரு அரசியல் தலைவர் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்பவராக  இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. தன்னுடைய பொறுப்புகள், தேர்வுகள் குறித்து விருப்பு, வெறுப்பற்ற சுய விமர்சனம் செய்து கொள்கிற அறம் சார்ந்த, அறிவார்ந்த பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில் அறத்திற்கு இடம் உண்டு என்கிற எண்ணமே பைத்தியக்காரத்தனமானதாக அரசியல் தொழிலாகி விட்ட இக்காலத்தில் தோன்றலாம். எனினும், இந்தப் பார்வை இல்லாமல் போனால் நேருவின் அரசியல் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. எப்படி அற வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் பிணைத்தபடி பயணிப்பது என்கிற தொடர் தேடலில் அவர் ஈடுபட்டார். அதனால்தான் ஒரு அரசியல்வாதியாக நேரு நமக்கு ஆர்வமூட்டுகிற ஒருவராகத் திகழ்கிறார். அவர் ஆழமான எண்ணங்கள் கொண்ட ஆளுமையாக இருந்தார். இந்தியா கண்ட அரசியல் தலைவர்களில் சிக்கலான, தனித்துவமான அரசியல்வாதியாக நேரு திகழ்ந்தார் எனலாம்.

நேருவும், காந்தியும்

பொதுவாக அரசியல்வாதிகளிடம் இல்லாத ஆழமான அற பொறுப்புணர்ச்சி மிக்க நேரு, காந்தியை போல அல்லாமல் மிகச் சாதாரணமான ஒருவராக எப்படித் திகழ்ந்தார் என்பதையும் சொல்ல வேண்டியது அவசியம். காந்தி தனித்துவமானவர். நம்பமுடியாத பண்புகளைக் கொண்டவராகத் திகழ்ந்த காந்தி, நம்ப முடியாத அளவு தீவிரத்தன்மையோடு சுயநலம் என்பதே அற்றவராகத் திகழ்ந்தார். நேரு அப்படிப்பட்டவர் அல்ல. அவர் நம்மைப்போன்றவர். மானுட இச்சைகள் நிரம்பியவர், வாழ்வின் தேர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டவர், சுய சந்தேகம் மிக்கவராக, முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறுபவராக, முன்கோபம் கொண்டவராக, சமயங்களில் மனம் தளர்ந்து போகிறவராகத் திகழ்ந்தார். காந்தியை போல மனித சக்திக்கு அப்பாற்பட்ட அறச் சாதனைகளைச் சாதிக்க அவர் முயலவில்லை. எனினும், காந்தியை போல அவரும் தன் நம்பிக்கையின் மீது மெச்சக்கூடிய வகையில் திடமானவராக இருந்தார். நம் எல்லாருக்கும் உள்ள பகுத்தறியும் திறனை பயன்படுத்தியே நேரு செயல்பட்டார்.

பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவர் தீன்மூர்த்தி பவனில் 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.

திராவிட இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகால ஆட்சி- சாதனைகள், சறுக்கல்கள்


திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. அது சமூகநீதியை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. சமூக நலத்திட்டங்களைக் கடைக்கோடி வரை கொண்டு சேர்த்தது. தமிழகத்தின் மருந்து விநியோக-கொள்முதல் முறை உலக வங்கிக்கு மாதிரியாக உள்ளது. இந்தியாவில் மிகச்சிறந்த மருத்துவச் சேவை தமிழகத்தில் தரப்படுவதாக அமர்த்தியா சென் புகழாரம் சூட்டுகிறார்.

சாதி அடுக்கை வலிமையாகக் காக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களை வலிமைப்படுத்தும் சடங்குகள், புரோகிதர் ஆகியவற்றை நீக்கிய சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் தரப்பட்டது. கோயில்களை அரசுகள் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அறநிலையத்துறை, முன்மாதிரிச் சட்டங்கள் தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் துவங்கப்பட்டு விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அரசுகளால் மேலும் வலுப்படுத்தப்பட்டது. இவை இந்தியாவுக்கு முன்மாதிரி ஆகின (காண்க சுஹ்ரித் பார்த்தசாரதியின் கட்டுரை). இந்து பொதுச்சட்டத்தில் பெண்களுக்குப் பரம்பரைச்சொத்துக்கள், Coparcenary rights ஆகியவற்றைத் தருவதற்கு ஐம்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. தமிழகம் அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அதைச் செய்து முடித்திருந்தது. (காண்க: Leila Seth – Talking of justice) பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு எண்பதுகளில் தரப்பட்டு விட்டது.

மண்டைக்காடு போன்ற சில சம்பவங்களைத் தவிர்த்துத் தமிழகத்தில் மதக்கலவரங்கள் என்பதில்லை. அதற்கு அந்தந்த ஊரின் கலாசாரமே காரணம் என ஒரு குழு கிளம்பும். அவர்கள் தமிழகத்தில் என்ன மாதிரியான சூழல் விடுதலைக்கு முந்திய காலத்தில் நிலவியது என அறியாதவர்கள் எனலாம். அரசியல் அறிஞர்கள் வலுவான சமூக, அரசியல் அமைப்புகள் மத வெறியை குலைக்கவோ, கூட்டவோ இயலும் என வாதிடுகின்றனர். (காண்க அஷூடோஷ் வர்ஷனே)
பிராமண எதிர்ப்பு என்பதும் அடிநாதமாக இருந்த திராவிட இயக்க முன்னெடுப்பில் மதச்சிறுபான்மையினர் மையநீரோட்டத்தில் இணைக்கப்படுவது சாதிக்கப்பட்டது. (காண்க: Being Hindu and being secular.)

தமிழகத்தின் வளர்ச்சிக்கதை உற்பத்தித் துறையில் தனித்துவமானது. அது இந்தியாவிற்கே முன்மாதிரியாகும் என்கிறார் பொருளாதார அறிஞர் ஹரீஷ் தாமோதரன். காங்கிரஸ் ஆட்சியில் தான் தொழில் வளர்ச்சி பிரமாதம் அது திராவிட ஆட்சியில் வீழ்ந்தது என்பது ஒரு வாதம். பொருளாதாரப் பத்திரிகையாளர் சுசீலா ரவீந்திரநாத் தன்னுடைய ‘SURGE: TAMILNADU’S GROWTH STORY’ நூலில் அதற்கு முக்கியக் காரணம் மத்தியில் ஆண்ட இந்திராவின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணம் என்கிறார். MRTP துவங்கி லைசென்ஸ் பெர்மிட் ராஜ்யம் வரை பெட்டியைத் தள்ளி, லாபி செய்யத்தெரிந்தவர்களே அப்பொழுது சிறக்க முடிந்தது.(காண்க. Political economy of reforms in India) தமிழகம் பொருளாதாரம் திறந்து விடப்பட்டதும் அடித்து ஆடியது. பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, உள்கட்டுமானத்தில் தமிழகம் சிறப்பாக இயங்கி உள்ளது என்பது பல்வேறு மத்திய அரசு அறிக்கைகளின் சான்றிதழாகும்.

பிராமணிய எதிர்ப்பு பிராமண எதிர்ப்பாக நின்று விட்டது. 69% இட ஒதுக்கீட்டில் பெரும்பான்மையாகப் பின்தங்கியுள்ள தலித்துகளுக்கு 18% இட ஒதுக்கீடு மட்டுமே தரப்பட்டு உள்ளது. 50% ஐ பொருளாதார, சமூக அடுக்கில் ஒப்பீட்டளவில் நன்றாக முன்னேறியுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs)பெறுகிறார்கள். தமிழ் வழிக்கல்வி தரம் குறைந்ததாய் இருந்து ஒடுக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித்துகள் இடையே உள்ள வருமான ஏற்றத்தாழ்வு இந்தியாவிலேயே மிக அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான். நிலமில்லாத ஊரகத் தலித்துகளின் எண்ணிக்கை 92%. இந்திய சராசரி 61%. (http://m.timesofindia.com/elections-2016/tamil-nadu-elections-2016/news/Mind-the-Dalit-OBC-gap-in-TN/articleshow/52103820.cms). தலித்துகள் மீதான வன்முறைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட எந்த விசாரணை கமிஷன் அறிக்கை மீதும் நடவடிக்கை எடுக்காத மாநிலம் தமிழகம். ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை ஏற்க மறுத்த வெகுசில மாநிலங்களில் தமிழகம் ஒன்று. இந்தியாவில் மிகக் குறைவான கலப்புத்திருமணங்கள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் ஒன்று.

உயர்கல்வியில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருப்பது ஒருபுறம். இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாகக் கபளீகரம் செய்வது இன்னொருபுறம். ஊழல் மிகுந்து இருப்பதும், வாரிசு அரசியலும் பரவலாக விவாதிக்கப்படச் சாபக்கேடுகள். தேர்தல் அரசியலில் பணத்தை வாரியிறைப்பதில் தமிழகத்தை மிஞ்ச ஆளில்லை எனத் தேர்தல் ஆணையம் மெச்சும் பெருமைக்குரியது தமிழகம். உள்ளாட்சி அமைப்புகளை முடக்கிப்போட்டு இருக்கிறது தமிழக அரசு. பகிர வேண்டிய 22 அதிகாரங்களில் மூன்று தான் உள்ளாட்சி அமைப்புகள் வசம் உள்ளது. கடந்த காலப்பெருமைகள் காலத்துக்கும் உடன் வராது. அவ்வளவே.

ஒரு முன்னோக்கிய பயணம் என்பது விமர்சனங்களை உள்வாங்குவது. மட்டையடியாக மறுப்பது அல்ல. கொடுக்கிற இடத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டே சமூகநீதி பேசுவது முரண்பாடான ஒன்று. ‘நாங்கள் போட்டது. போதாதா?’ எனக் கேட்கையில் ஆதிக்கத்தின் குரல் அது என ஏன் புரிய மறுக்கிறது? ஒரு மதத்தை விட்டு வேண்டுமானால் வெளியேறுங்கள் என்பவர்கள் எந்த மதமும் மனிதர்களாக மதிக்கத் தவறுவதை வசதியாக மறக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட மேம்பட்டவர்கள் எனப் பேசிக்கொண்டே இருப்பது என்ன மாதிரியான அரசியல்? கண் முன்னே முகத்தில் அறையும் அநீதிகள், சமத்துவமின்மைகள், வன்மங்கள் எல்லாவற்றையும் ‘இதுவே அதிகம்’ என்கிற தொனியில் கடப்பது வீழ்ந்து கொண்டிருக்கும் வீட்டினில் இன்னொரு அடியே. நன்றி கெட்டவர்கள் எனப் பேசுவதே ஒரு ஆதிக்கத் தொனி தான். தேர்தல் அரசியலின் எல்லைக்குள் இவ்வளவு செய்தோம், இன்னமும் செய்திருக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச ஏற்பு கூட இல்லாத சமூக நீதி அறமற்றது, ஆகாதது.

#DravidianRule50
இது சார்ந்து முகநூலில் நடந்த விவாதத்தைப் படிக்க https://m.facebook.com/story.php?story_fbid=1425856567445415&id=100000632559754

துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப் போகிறேன் – நெரூதா


துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப்போகிறேன்

இப்படி எழுதலாம் : முறிந்த இரவில் தொலைவில் நீல விண்மீன்கள் நடுங்குகின்றன

இரவின் தென்றல் வானில் கீதம் மீட்டுகிறது

துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப்போகிறேன்
நான் அவளை காதலித்தேன்,
அவளும் சில சமயங்களில் என்னைக் காதலித்தாள்

அந்த இரவுகளில்
அவளை என் கரங்களில் ஏந்தி இருந்தேன்

அளவற்ற ஆகாயத்தின் கீழே முத்தங்களால் அவளை நிறைத்தேன்

எப்படி அவளை காதலிக்காமல்
இருந்து இருப்பேன்,
அதுவும் அந்த கண்களை !

துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப்போகிறேன்

அவள் எனக்கானவள் இல்லை
என்றே எண்ணுகிறேன்;
அவளை இழந்ததாக உணர்கிறேன்

நீண்ட இரவு,
இன்னமும் நெடிதாக
அவளில்லாமல் நீள்கிறது

புல்நுனி மீது விழும் பனித்துளியாக
வரிகள் உயிரில் விழுகிறது

துயர்மிகு வரிகளால் இன்றிரவை நிறைக்கப்போகிறேன்

என்னுடன் அவளை
பிணைத்திருக்க முடியவில்லையே என்பதே உலுக்குகிறது

இரவு முறிந்திருக்கிறது; அவள் என்னுடனில்லை

அவ்வளவே; தொலைவில் யாரோ பாடுகிறார்கள்

என் ஆன்மா அவளை இழந்து புழுங்குகிறது

என் பார்வை அவளைத்தேடுகிறது; அவளை அடைய

அவளுக்காக என் இதயம் மருகி காத்திருக்கிறது; அவள் என்னுடன் இல்லை

அதே கிளைகளில் அதே இரவு வெளுக்கிறது

அந்தப்பொழுதில் இருந்து நாங்கள் ஒன்றில்லை

நான் அவளை காதலிக்கவில்லை; அது உறுதி. ஆனால் அவளை எப்படியெல்லாம் காதலித்தேன்

என் குரல் அவளை அடையும் தென்றலைத் தீண்டுகிறது

அவள் மீது என் முத்தங்கள் பொழிவதைப் போல இன்னொருவரின் முத்தங்கள்

அவளின் குரல்,ஒளிர் மேனி,விரிந்த விழிகள்

நான் அவளை காதலிக்கவில்லை;அது உறுதி,ஆனால் நான் அவளை காதலிக்கிறேன்

காதல் தவச்சிறிது; மறத்தல் சாலப்பெரிது

அந்த இரவுகளில் அவளை என் கரங்களில் ஏந்தி இருந்தேன்

என் ஆன்மா அவளை இழந்து புழுங்குகிறது

இதுவே நான் அனுபவிக்க அவள் எனக்கு தந்த இறுதி வலி

இதுவே நான் அவளுக்காக எழுதும் இறுதி வரி -நெரூதா

 

Image result for நெரூதா

மெஹருன்னிஸா தல்வாய்- அடிப்படைவாதத்தை அசைத்துப் பார்த்தவர்


மெஹருன்னிஸா தல்வாய் கடந்த எட்டாம் தேதி இயற்கை எய்தினார். இஸ்லாமிய சமூகத்தை நவீனத்துவம் நோக்கி செலுத்திய மகத்தான வாழ்க்கைக்கு உரியவர். ஹமீத் தல்வாய் மராத்தி பேசும் இஸ்லாமியர். மெஹருன்னிஸா மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்து, காதி நிறுவனத்தில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஹமீத் மெஹருன்னிஸாவுடன் நட்பானார். காலப்போக்கில் நட்பு காதலானது. பெண் வீட்டில் திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு. காரணங்கள் இரண்டு. ஹமீத் இஸ்லாமியர்களிடையே நிலவி வந்த முத்தலாக், பல தார திருமணம் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடியவர். மேலும், ஹமீத் நிரந்தரமான பணியிலும் இருக்கவில்லை.

ஒருவழியாகத் திருமணத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. இருவரும் இஸ்லாமிய முறைப்படி முதலில் திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது அமலுக்கு வந்திருந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின் படியும் திருமணம் செய்து கொண்டார்கள். அந்தச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவரை மட்டுமே மணந்து கொள்ள முடியும். விவாகரத்து உரிமையும் அதில் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படிப் பதிவு செய்யப்பட்ட முதல் இஸ்லாமிய திருமணம் என்கிற பெருமையை அது பெற்றது.

“வீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உங்களுடைய சமூகச் சேவைகளைத் தொடருங்கள்.” என்று மெஹருன்னிஸா உற்சாகம் தந்தார். அதே சமயம், தன்னுடைய செலவுகளை ஹமீத்தே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். ஹமீத் உடன் இணைந்து இஸ்லாமிய பெண்களின் முன்னேற்றம், கல்வி சார்ந்து தீவிரமாக அவர் உழைத்தார். இஸ்லாமியர்கள் தங்களுடைய மதம், நவீனத்துவம் இரண்டையும் பிரித்து முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. நவீன கல்வியின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

Image may contain: 1 person

ஹமீத் 1965-ல் Sada-e-Nisvan என்கிற அமைப்பை துவங்கினார். அடுத்த வருடம் முத்தலாக்கை நீக்க வேண்டும் என்கிற முழக்கத்தோடு மந்திராலயம் நோக்கிய போராட்டத்தை அவர் மேற்கொண்டார். ஏழு இஸ்லாமிய பெண்கள் அவருடன் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அதில் மெஹருன்னிஸா முன்னணியில் நின்றார். முதலமைச்சரை சந்தித்து முத்தலாக்கை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இஸ்லாமியர்களையும் இணைத்துக் கொள்ளும் பொதுச் சிவில் சட்டம் தேவை என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்த வகையான போராட்டங்களால் அவர்கள் மத விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். இவர்களுடைய போராட்டங்களை எதிர்கொள்ள அணைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட பாதுகாப்பு குழு 1971-ல் ஏற்படுத்தப்பட்டது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இதே அமைப்பு தான் முத்தலாக் நடைமுறைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது என்பது நினைவுக்கு வரலாம். ஆறு ஆண்டுகள் கழித்து 44 வயதில் ஹமீத் இறந்து போனார். ஹமீத் அவர்களின் விருப்பப்படியே அவரை இஸ்லாமிய சடங்குகள் இன்றிப் புதைத்தார்கள்.

ஹமீத் ஆரம்பித்து இருந்த இசுலாமிய சத்திய சோதக் மண்டல் அமைப்பின் தலைவர் பொறுப்பை மெஹ்ருன்னிஸா ஏற்றுக்கொண்டார். முத்தலாக் செல்லாது என்று அறிவிப்பதோடு மட்டும் நில்லாமல் அது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட வேண்டும் என்று அவர் ஓயாது குரல் கொடுத்தார். இஸ்லாமிய பெண்கள் ஒடுக்கப்படுவது ஒழிய வேண்டும், அவர்களுக்குச் சமத்துவமான உரிமைகள் சாத்தியப்படுவதற்கு இஸ்லாமிய சமூகம் முன்வர வேண்டும் என்று அயராது இயங்கினார்.
Image result for mehrunnisa dalwai
ஷா பானு என்கிற பெண்மணி தன்னை விவாகரத்து செய்த கணவன் மீது குற்றவியல் வழக்கு போட்டு அதன் மூலம் ஜீவனாம்சம் பெற்றார். அதை ஏற்கக்கூடாது என்று இஸ்லாமிய இயக்கங்கள் குரல் கொடுத்தன. ராஜீவ் காந்தி அரசு திருத்த சட்டம் ஒன்றை கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செயலற்றதாக மாற்றியது. அப்போது இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை வேண்டும், ஜீவனாம்சம் என்பதும் அடிப்படை உரிமை என்று தீவிரமாக மெஹருன்னிஸா முழங்கினார். மற்ற குடிமக்கள் நவீன அரசின் உரிமைகளுக்கு உரியவர்களாக இருக்கும் போது அது ஏன் இஸ்லாமிய பெண்களுக்கு மறுக்கப்படுகிறது என்பது அவரின் கேள்வியாக இருந்தது.

இஸ்லாமிய அடிப்படைவதாக இயக்கங்கள் வெளிநாட்டில் இருந்து வரும் பெட்ரோலிய டாலர்களை வாங்கிக்கொண்டு இஸ்லாமியர்களை வகாபிய மயமாக்குகின்றன, அதற்கு மாறாக மக்களை நவீனத்துவம் நோக்கி அழைத்துச் செல்வதே முதல் பணியாக இருக்க வேண்டும் என்று அவர் பேசினார்.இஸ்லாமிய மதத்தில் நிலவி வந்த ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் அவர் எதிர்த்தார். தன் வாழ்நாள் முழுக்க இஸ்லாமிய பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்ட மெஹருன்னிஸாவின் இரு மகள்களும் வேற்று மதத்தினரை மணந்து கொள்ள விரும்பிய போது அன்போடு சம்மதித்தார். தன்னுடைய ஒட்டுமொத்த சேமிப்பை திரட்டி தன்னுடைய கணவரின் கிராமத்தில் அவர் பெயரில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார்.

மெஹருன்னிஸா வாழ்நாள் முழுக்கப் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தார். கொலை மிரட்டல்கள் வந்தன. மத விரோதி என்று முத்திரை குத்தப்பட்டார். எனினும், அவரின் நூலின் தலைப்பை போல ‘முழுமையான வாழ்க்கை’யை அவர் வாழ்ந்தார். மெஹருன்னிஸாவின் உடல் அவரின் விருப்பப்படி மருத்துவ ஆய்வுகளுக்குத் தானம் செய்யப்பட்டதுள்ளது. அவரை நினைவுகூர்வோம்

நேரு-இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்


ந்தியாவின் பிரதமராக மகத்தான செயல்களைப் புரிந்த ஜவகர்லால் நேருவின் சாதனை பக்கங்களில் சறுக்கல்களாகக் காஷ்மீர், சீனா ஆகியவை திகழ்கின்றன.  தற்போது எல்லாம் வரலாற்றை  மறுவாசிப்பு செய்கிற பல்வேறு புத்தகங்கள் வெளிவருகின்றன. இந்த நூல்கள் இந்திய ராணுவத்துக்கு போதுமான மரியாதையை நேரு தராமல் போனதாலே காஷ்மீர், சீனப்போர்களில் தோல்வியைத் தழுவினார் என்று குற்றம் சுமத்துகின்றன. அதிகாரப்பூர்வ வரலாறுகளில் நேரு இறுக்கம் வாய்ந்த  அமைதி விரும்பியாகச் சித்தரிக்கப்படுகிறார். இது பெருமளவில் உண்மைக்குப் புறம்பானதாகும். இதனால் தான்  மறுவாசிப்பு வரலாறுகள் நம்பகத்தன்மையைப் பெறுகின்றன. நேரு எப்படி ராணுவ தளத்திலும் புவி-அரசியலின் ஆழ, அகலங்களை  உணர்ந்த ராஜதந்திரியாக இருந்தார் என வரலாற்று ஆசிரியர்கள் சிலாகிக்கிறார்கள். அதைப் பிறகொரு நாள் விரிவாகப் பேச வேண்டும். அது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை. சீன, காஷ்மீர் சிக்கல்களைத் தாண்டி இந்தியாவில் எழுபது ஆண்டுகளைக் கடந்தும் ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு கட்டுப்பட்டு இருப்பதற்குக் காரணமான வலிமையான அடித்தளத்தை எப்படி நேரு அமைத்துக் கொடுத்தார் என்பதை ஆராய்வோம்.

இந்த வரலாறு விடுதலைக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது.ஆங்கிலேய முடியாட்சியிடம் இருந்து இந்திய, பாகிஸ்தானின் சுதந்திர டொமினியன்களுக்கு அதிகாரத்தைக் கைமாற்றும் நடவடிக்கையின் பகுதியாக இடைக்கால அரசு ஒன்று காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களோடு செப்டம்பர் 1946-ல் அமைக்கப்பட்டது. இதில் வைஸ்ராயின் செயற்குழுவில் (பிரதமருக்கு இணையான)   துணைத் தலைவராக நேரு பதவியேற்றுக் கொண்டார்.  பாதுகாப்புத் துறை  அமைச்சருக்கு இணையான பொறுப்பான  பாதுகாப்பு உறுப்பினராக இருந்து வந்த ராணுவத் தளபதியின் இடத்திற்கு அரசியல் தலைவரான சர்தார் பல்தேவ் சிங்கை நேரு நியமித்தார். இது எதோ போகிற போக்கில்  முடிவு அல்ல. இந்திய தேசியவாதிகள், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் நெடுங்காலக் கோரிக்கையின் கூட்டு வெளிப்பாடே அது. 1928-ல் வெளிவந்த மோதிலால் நேரு குழு அறிக்கை வைஸ்ராய் செயற்குழுவின் பாதுகாப்பு உறுப்பினர் ராணுவ பின்புலம் இல்லாத மக்கள் தலைவராக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன் நோக்கம் ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இரும்புப் பிடிக்குள் வைத்திருப்பதே ஆகும்.

ஜவகர்லால் நேரு பல்தேவ் சிங்கை பாதுகாப்பு உறுப்பினராக நியமித்ததோடு நேரு விட்டுவிடவில்லை. இந்திய ராணுவத்தை தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ராணுவத் தளபதிக்கு நேரு உத்தரவிட்டார்.அதோடு நில்லாமல், மோதிலால் நேரு குழுவின் பரிந்துரையான ராணுவத்தில் சேர்க்கப்படும் அதிகாரிகள் பல்வேறு சமூகக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையின்  பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பதும் செயல்வடிவம் பெற்றது. காலனிய அரசுக்குச் சேவகம் செய்து கொண்டிருந்த ராணுவத்தைப் புதிதாக எழப்போகும் தேசத்தின் மதிப்பீடுகள், கனவுகளுக்கு தோள்கொடுக்கும் ஒன்றாக மாற்றும் முன்னெடுப்பாக அது அமைந்தது. ராணுவத்தை உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதில் ஈடுபடுத்தினால் அது ராணுவத்தை அரசியலுக்குள் மூக்கை நுழைக்க அனுமதிப்பதோடு, ராணுவம் அரசியல்மயமாகவும் வழிகோலும் என இடைக்கால அரசு உணர்ந்தது.  இதனால்  உள்நாட்டுப் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளத் துணை ராணுவப்படைகளை ஏற்படுத்த இடைக்கால அரசு  பரிந்துரைத்தது. நேரு முதலமைச்சர்களுக்கு எழுதிய தொடர்ச்சியான கடிதங்களின் வாயிலாக ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றில் ராணுவமயம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது என்கிற புரிதலால் நேருவின் பார்வை எப்படிச் செதுக்கப்பட்டது என வெளிப்படுகிறது.

நேருவின் சிந்தனைத் தெளிவு, அவரின் கட்டளைகளில் இன்னமும் தெளிவாக வெளிப்பட்டது. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த ராப் லாக்ஹார்ட் கொடியேற்றும் விழாவில் பொதுமக்கள் பங்குகொள்ளக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்துச் செய்து ஆணை பிறப்பித்த நேரு இப்படித் தளபதிக்கு மறுமொழி அனுப்பினார், ”  ராணுவம் எடுக்கும் எந்தக் கொள்கை முடிவுகளையும் இந்திய அரசின் கருத்துக்கள், அது உருவாக்கும் கொள்கைகளே வழிநடத்தும். அரசின் கொள்கைகளோடு ஒத்துப்போய்  அதன்படி செயல்படமுடியாத அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் இடமில்லை.”

Image result for nehru the man who saw future

ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை நிறுவனமயப்படுத்தும் செயலில் நேரு மட்டும் தனி ஒருவராக ஈடுபடவில்லை. பாகிஸ்தானோடு இணைவதாக ஜுனாகாத் அறிவித்த பின்பு அக்டோபர் 1947-ல் அங்கே படைகளை அனுப்பி வைக்க  இந்திய அரசு முடிவெடுத்தது. அதைப் படைகளின் தளபதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் ஆட்சேபித்தார்கள். இது துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலை நேருவை விட அதிகமாகக் கோபப்படுத்தியது. நேரு, படேல் இருவரும் தங்களுடைய ஆணையைப் படைத்தளபதிகள் ஏற்க மறுத்தால், படைத்தளபதிகளோடு மோதிப்பார்க்கவும் தயார் என்று முஷ்டி முறுக்கினார்கள். இந்த நிகழ்வுக்குப் பிறகு அமைச்சரவை மட்டத்திலான பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்குழு அரசு-ராணுவம் ஆகியவற்றுக்கு இடையே தேசப்பாதுகாப்பு குறித்த உரையாடலுக்கான அமைப்பாக மாறியது. 

1955-ல் ஒருங்கிணைந்து இருந்த ராணுவப்படைகளை மூன்று தனித்தனி பிரிவுகளாக ராணுவம், வான்படை, கப்பற்படை என நேரு  பிரித்தார். ஒவ்வொன்றுக்கும் சரிநிகர் தகுதி கொண்ட தளபதிகளையும் நியமித்தார். இதை யேல் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஸ்டீவ் வில்கின்சன் நேருவின் மகத்தான  தருணம் என்று வர்ணிக்கிறார்.  நேருவே பிப்ரவரி 1963-ல் ஒப்புக்கொண்டது போல இதன் மூலம் ‘இந்திய சூழலில் ராணுவத்தின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டது.’ என்று  வில்கின்சன் வாதிடுகிறார்.

ஐம்பதுகளின் இறுதியில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கிருஷ்ண மேனனின் செயல்பாடுகள் நேரு ராணுவத்தைக் கையாண்ட விதம் குறித்த நியாயமான கேள்விகளை எழுப்பின. அவற்றில் மிகவும் சர்ச்சைக்கு உரியது செப்டம்பர் 1959 -ல் ராணுவ தலைமைத் தளபதி திம்மையாவின் பதவி விலகலை நேரு கையாண்ட விதம். நேருவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசு-ராணுவம் ஆகியவற்றுக்கு இடையேயான  உறவின் மிக மோசமான தருணம் என்று வில்கின்சன் இந்த நிகழ்வை குறிப்பிடுகிறார். திம்மையா மூத்த ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு சார்ந்து கிருஷ்ண மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார் என்கிறார் வில்கின்சன்.

வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன் பதவி விலகலுக்கான காரணங்கள் இன்னமும் ஆழமானவை என்கிறார். இந்தியாவின் கிழக்கு பகுதி எல்லையில் இந்திய -சீனப்படைகள் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்துக்கு  பின்னால் திம்மையா அயூப் கானின் திட்டத்தை இந்திய அரசியல் தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்பினார். அது என்ன திட்டம்? இந்தியாவும்-பாகிஸ்தானும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதே அது. நேருவும், கிருஷ்ண மேனனும் இந்தப் பரிந்துரையை எதிர்த்தார்கள். திம்மையா இதுகுறித்து நேருவிடம் தனியாகப் பேசினார். இந்தக் கூட்டு செயல்பாடு சாத்தியமா எனக் கிருஷ்ண மேனனிடம் கலந்து பேசுவதாக நேரு உறுதியளித்தார். நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக்கண்ட திம்மையா தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நேருவுக்கு அனுப்பினார். எந்த உறுதிமொழியையும் தராமல் நேரு திம்மையாவை பதவி விலகலை திரும்பப் பெற வைத்தார். நேரு இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுகையில்,  இயல்பான கருத்து முரண்பாடுகள் என்று மழுப்பினார். அதே சமயம், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரமே உச்சமானதாக இருக்கிறது, இருக்கும்.’ என்று அழுத்தந்திருத்தமாக முழங்கினார்.

“திம்மையாவுடன் நேருவுக்கு ஏற்பட்ட முரண்பாட்டை ராணுவ விவகாரங்களில் அரசின் தலையீடு என்று பொதுவாக நம்பப்படுவதற்கு உண்மையில் அடிப்படை  எதுவுமில்லை. ராணுவம் இறுதி முடிவை எடுக்கக் கூடாத ஒரு பிரச்சினை தொடர்பானது அது.” என்கிறார் ஸ்ரீநாத் ராகவன். ராணுவத்தின் மீது நேரு கொண்டிருந்த கட்டுப்பாட்டைச் சீனப்போரின் தோல்வி பலவீனப்படுத்தியது. சீனப்போரின் தோல்விக்குப் பிறகு ராணுவம் குறித்து மக்களிடையே அதிருப்தி நிலவினாலும், ராணுவத்தின் களச்செயல்பாடு சார்ந்த முடிவுகளில் அரசு தலைமை இனிமேல் தலையிடக்கூடாது என்கிற ராணுவத்தின் நிபந்தனையை அரசு ஏற்றுக்கொண்டது. 1962 போரால் அரசியல்வாதிகளின் முன்னால் நிமிர்ந்து நிற்க வேண்டியதன்  முக்கியத்துவத்தை ராணுவம் முக்கியமாகக் கற்றுக்கொண்டது. அப்பொழுதைய வடகிழக்கு எல்லை அமைப்பை ( North Eastern Frontier Agency) நோக்கி படைகளை நகர்த்துமாறு 1963-ல் நேரு உத்தரவிட்டும் ராணுவ தலைமை தளபதி ஜெயந்தோ நாத் சௌத்ரி, அப்பகுதி படைத்தலைவர் சாம் மானெக்ஷா ஆகியோர்  கீழ்படிய மறுத்தார்கள். 

 

Image result for nehru the man who saw future

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான உறவை மிகக் கவனமாக நேரு நெய்திருந்தார். எனினும், அந்த நெசவில் சில கிழிசல்கள் அவரின் இறுதிக்காலத்தில் ஏற்பட ஆரம்பித்தது. காலனிய ஆட்சியில் இருந்து விடுபட்ட மற்ற நாடுகளில்  இருந்து இந்தியா தன்னுடைய ஆரம்பக் காலங்களில் கலாசாரம், நியதிகள், நிர்வாக அமைப்புகளின் கட்டமைப்பு ஆகியவற்றில் வேறுபட்டு நின்றது. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை தந்த பொழுது தெளிவான அரசு-ராணுவ உறவை உருவாக்கித் தந்துவிட்டு போகவில்லை. 

1857 முதல் 1947 வரையிலான 90 வருடங்களில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசின் ஒட்டுமொத்த செலவினங்களில்  கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம் ராணுவத்துக்கே சென்றது. வைஸ்ராயின் செயற்குழுவில் பாதுகாப்பு உறுப்பினராகத் தலைமைத் தளபதி செயல்பட்டார். 1943-ல் ராணுவ  தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆர்ச்சிபால்ட் வேவல்,  இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இதனால் விடுதலை இந்தியாவில் ராணுவத்தைக் கையாள்வதற்குப் புதிய வழிமுறையை வார்த்து எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நேரு ஆளானார். 

தன்னுடைய ஆய்வு நூலில் இறுதியாக வில்கின்சன், “நேரு 1946-ன் ஆரம்பத்திலேயே இந்தியாவில் எழப்போகும் புதிய குடியரசுக்கு எப்படி ராணுவம் பலம் வாய்ந்த ஆபத்தாக மாறக்கூடும் என்று உணர்ந்துகொண்டு தொலைநோக்கோடு செயல்பட்டார். அதனால் மக்களாட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்று துரிதமாக இயங்கி ராணுவ அமைப்பை மாற்றினார், சாதுரியமாகப் பதவி உயர்வுகளை மேற்கொண்டார்.” என்கிறார். 

ஸ்ரீநாத் ராகவன் இந்தக் கருத்தோடு உடன்படுகிறார்: ” ராணுவம் அளவுகடந்த அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு காலனிய அரசை, தாராளவாதம் மிகுந்த ஜனநாயக நாடாக மாற்றியதே நேருவின் உண்மையான சாதனை ஆகும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சியும், அதிகாரமும் இருந்த அரசாக இருந்த காலனிய இந்தியாவை விடுதலைக்குப் பின்னால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அடிபணிந்து இயங்கும் ராணுவத்தைக் கொண்ட நாடாக மாற்றியமைத்தார். அவரின் காலத்தில் அது நம்பமுடியாத சாதனை. அதற்காக நேருவை நாம் மெச்சியே ஆகவேண்டும்.”

http://indianexpress.com/article/india/india-news-india/jawaharlal-nehru-legacy-prime-minister-military-4371638/

சுஷாந்த் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸின் இணையாசிரியர்

தமிழில்: பூ.கொ.சரவணன்

ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை? நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்.


அன்வர் அலிகான்

நேரு

ந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி திம்மய்யாவைக் காண நேரு வந்திருந்தார். அவருடைய வீட்டில் மேஜைக்குப் பின்னால், ஓர் இரும்பு பீரோ இருப்பதை நேரு கண்டார். “அதில், என்ன இருக்கிறது” என்று ஆவலாகக் கேட்டார்.

”மேல் அறையில் தேசத்தின் பாதுகாப்புத் திட்டங்கள்” இருப்பதாகச் சொன்னார் திம்மய்யா. இரண்டாவது அறையில், “நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள தளபதிகள் குறித்த ரகசிய கோப்புகள்” இருப்பதாக விளக்கினார் திம்மய்யா.

”மூன்றாவது அறையில் என்ன இருக்கிறது” என்று நேரு ஆவலோடு கேட்டார்.

நேருவை நோக்கி எந்தச் சலனமும் இல்லாமல், தலைமைத் தளபதி, “அதில் உங்களுக்கு எதிராக ராணுவப் புரட்சியை நடத்துவதற்கான ரகசிய திட்டங்கள் இருக்கின்றன” என்றார்.

நேரு புன்னகைத்தார். ஆனால், அந்தப் புன்னகையில் அனேகமாக ஒரு பதற்றம் கலந்து வெளிப்பட்டிருக்கும்.

காலனிய ஆட்சியில் இருந்து விடுதலைபெற்ற பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ராணுவ சர்வாதிகார ஆட்சிகள் ஏற்பட்டன. இந்த ஆட்சிகள் ஏற்பட்ட ஐம்பது, அறுபதுகளில் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்தன. 1967-ல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலைக் களத்தில் இருந்து கவனித்த ‘தி டைம்ஸ்’ இதழ் நிருபர் நெவில் மாக்ஸ்வெல், “அதுவே இந்தியாவின் கடைசித் தேர்தலாக இருக்கக் கூடும்” என்று ஆரூடம் சொன்னார். அவரைப்போலப் பல பேர் இந்தியா வெகு சீக்கிரம் ராணுவ ஆளுகைக்குள் வரும் என்று நம்பினார்கள்.

ஆனால், அந்த நம்பிக்கை நமநமத்துப் போனது.

ஏன் அப்படி?

இந்திய ராணுவம் ஏன் எப்போதும் ஆட்சியைக் கைப்பற்ற முயலவில்லை என்பதற்கு ஒரு காரணத்தைப் பலரும் கைகாட்டுவார்கள். ஆங்கிலேயரின் 250 வருட பாரம்பர்யத்தைக் கட்டிக்காக்கும் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டோடு, மிகச்சிறந்த ஒழுங்கைக் கொண்ட ராணுவமாகத் திகழ்கிறது என்பார்கள். ஆனால், இந்த விளக்கம் வேடிக்கையான ஒன்று. அதே பாரம்பர்யத்தில் இருந்துவந்த பாகிஸ்தானிய ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றச் சற்றும் தயங்கவில்லை.

இதையே வேறொரு கோணத்தில் பார்க்கலாம்… மிகச்சிறந்த ஒழுங்கைக் கொண்டிருந்த பாகிஸ்தானிய ராணுவம், நாடு குழப்பத்தின் பிடியில் சிக்கிச் சிதறிக்கொண்டிருந்தபோது வேடிக்கை பார்க்காமல் நாட்டைக் காப்பது தன்னுடைய கடமை எனக் களத்தில் குதித்தது எனவும் கருதலாம்.

ஆகவே, இந்தக் குழப்பம் தரும் கேள்விக்கான விடையை அலசி ஆராய வேண்டியிருக்கிறது. அரசியல் அறிவியல் அறிஞர் ஸ்டீவ் வில்கின்சன் இதற்கான விடையைத் தன்னுடைய பிரமிக்கவைக்கும் Army and Nation நூலில் நமக்குத் தருகிறார்.

இந்தியாவில் ஏன் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, ஏன் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது என அறிவது அவசியம். பாகிஸ்தானில் ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதற்கு ஒரு விறுவிறுப்பான முன்கதை இருக்கிறது. விடுதலைக்கு முந்தைய பிரிக்கப்படாத இந்தியாவில் ராணுவத்தில், மிக அதிகபட்ச ஆட்கள் பிரிக்கப்படாத பஞ்சாபில் இருந்தே பணிக்கு எடுக்கப்பட்டார்கள். ஆகவே, விடுதலைக்குப் பின்னால், பாகிஸ்தான் பெற்றுக்கொண்ட பல்வேறு அமைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெரும்பான்மை பஞ்சாபியர்களைக் கொண்டிருந்த ராணுவம் பெற்றது.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்த, நெடுங்காலம் தாக்குப்பிடிக்கக் கூடிய அமைப்பாகத் திகழ்ந்தது. பாகிஸ்தானைப் பெற்றுத் தந்த ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சியோ, “ஜின்னா, அவரின் அந்தரங்கச் செயலாளர்” என்கிற அளவுக்கே இருந்தது. இது, ஜின்னா 1948-ல் மரணமடைந்த பின்பு பாகிஸ்தானில் ஆபத்தான அதிகார பதற்ற நிலையை உண்டு செய்தது. பாகிஸ்தானின் வலிமைமிகுந்த, கேள்வி கேட்பார் இல்லாத அமைப்பாக ராணுவம் உருவெடுத்தது.

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி கண்மூடித் திறக்கும் கணப்பொழுதில் ஏற்பட்டுவிடவில்லை. ஐம்பதுகளில் லாகூரில் பெரிய கலவரம் ஏற்பட்டது. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘ராணுவமே தங்களுக்கு வந்தனம், வந்து இவர்களை அடக்குங்கள்’ என அழைத்தார்கள். ராணுவம் வந்தது, துரிதமாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

அந்தப் படையின் தலைமை அதிகாரி ஒரு வித்தியாசமான வேண்டுகோளைவைத்தார். ”நாங்கள் எங்கள் படைகளோடு இருப்பிடம் திரும்புவதற்கு இரண்டு நாள்கள் அவகாசம் கொடுங்கள்.” ”சரி” எனத் தலையசைத்தார்கள். ராணுவம் நகரைச் சுத்தம் செய்து, கட்டடங்களுக்கு வர்ணம் பூசியது; சாலைகளைச் செப்பனிட்டு, ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்துத் தள்ளி, மரத்தை நட்டது; பல நாட்களாக அரசாங்கம் கண்டுகொள்ளாத வேலைகளை விறுவிறுவென முடித்துவிட்டு, ராணுவம் அமைதியாக நடையைக் கட்டியது. போவதற்கு முன்னால் ஒரு சுத்தமான, நன்கு பராமரிக்கப்படும் ராணுவ வளாகம்போல லாகூரை மாற்றிவிட்டுப் போனார்கள்.

நேருபொது மக்களிடையே ராணுவம் நள்ளிரவுக்குள் நாயகனாக மாறியது; ‘என்னடா, அரசாங்கம் பல வருடங்களாகச் செய்ய முடியாததை இவர்கள் மூச்சுவிட்டு முடிப்பதற்குள் சரி செய்துவிட்டார்களே’ என மரியாதை பெருகியது. 1958-ல் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தைச் சீர்செய்யும்படி ராணுவத்துக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டது. பாகிஸ்தானியர்களில் ஒருசாரார் அதை ஆனந்த கூத்தாடி வரவேற்றார்கள். அப்போது பாகிஸ்தானில் ஒரு சொலவடைகூட ஏற்பட்டது, ‘எல்லாம் வல்ல அல்லாவின் கருணையினால், பாகிஸ்தானில் அனைத்தும் இப்போது நலமே’ என ராணுவம் கொண்டாடித் தீர்க்கப்பட்டது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் தளபதி அயூப் கான், ஜனாதிபதியாகப் பாகிஸ்தானில் இயங்கிய காலத்தில் தேசம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டது. ஆனால், அவருக்குப் பின்னால் கேட்பாரற்ற அதிகாரம்கொண்ட ராணுவ ஆட்சி ஊழல்மயமாகிப் போனது.

இந்திய ராணுவமும், பாகிஸ்தான் ராணுவத்தைப் போன்ற மரபில் இருந்தே பிறந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசியலில் ராணுவம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. கொள்கை முடிவுகளில்கூட ராணுவம் பங்கு வகித்தது. பாதுகாப்புத் துறை அமைச்சராக எப்போதும் ராணுவத் தலைமைத் தளபதியே திகழ்ந்தார். அதற்கும் மேலாக இந்தியாவில் வைஸ்ராய்க்கு அடுத்தபடியாக மிகவும் அதிகாரம் மிக்கவராக அவரே திகழ்ந்தார். ஆனால், விடுதலைக்குப் பிறகு காட்சிகள் மாறின.

”விடுதலைக்குப் பிந்தைய புதிய இந்தியாவில் ராணுவத்தின் பணி என்ன என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்று பிரதமர் நேரு உறுதியாக நம்பினார். ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்படுகிற ஒன்றாக மாற்றும் கொள்கையை அவர் தொடங்கிவைத்தார். விடுதலைக்குப் பின் நடந்த ஒரு சம்பவம் இதைத் தெளிவாகப் படம்பிடித்தது. ராணுவத் தலைமைத் தளபதி தங்கும் பிரம்மாண்டமான இல்லமாகத் திகழ்ந்த தீன்மூர்த்தி இல்லம், பிரதமருக்கு ஒதுக்கப்பட்டது. இது, சிறிய நடவடிக்கை என்றாலும், காற்று எந்தத் திசையில் அடிக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு வாரி இறைக்கப்பட்ட சம்பளம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியான பீல்டு மார்ஷல் கரியப்பா, அரசின் செயல்பாடுகளைப் பொதுவெளியில் விமர்சித்தார். அவரை அழைத்து ‘உங்களுக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்” என அரசு கடுமையாக எச்சரித்தது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் ராணுவத்துக்கு வேலிபோடும் வேலைகள் தொடர்ந்து நடந்தன. இந்தியச் சமூகத்தில் அவர்களின் தாக்கத்தைக் குறைக்கும் செயல்பாடுகள் பாகிஸ்தானில் 1958-ல் நடந்த ராணுவப் புரட்சிக்குப் பின்னால் வேகம்பெற்றன. அதிலும், இதற்குச் சில காலத்துக்கு முன்னர் ஓய்வுபெற்றிருந்த ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் கரியப்பா அந்த ராணுவப் புரட்சியை வரவேற்றுப் பேசியிருந்தார். ராணுவத்தைக் கையாள பலம்வாய்ந்த, கடுமையான, இடதுசாரி அறிவுஜீவியான கிருஷ்ண மேனன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சராக ஆக்கப்பட்டார். இதைத் ‘திருப்புமுனை’ எனவும் சொல்லலாம்; ‘நேருவைத் திருப்பியடித்த முனை’ எனவும் வர்ணிக்கலாம். ‘இதுதான் உன் இடம்’ என ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே கிருஷ்ண மேனன் கொண்டுவரப்பட்டார். இது மோசமான பின்விளைவுகளை உண்டுசெய்தது. அது, துரதிர்ஷ்டவசமாகச் சீனப்போரில் இந்தியா அவமானப்படும் அளவுக்குத் தோல்வியடையக் காரணமாக மாறியது. எனினும், அது தனிக்கதை.

எழுபதுகள் வாக்கில் இந்திய ராணுவப் படைகள் புரட்சி செய்வதற்கு வழியில்லாத வகையில் பல்வேறு தடுப்புகள், பாதுகாப்புகள் அமைப்புரீதியாக ஏற்படுத்தப்பட்டன. நேரு காலத்தின் மகத்தான சாதனையாக இந்திய ஜனநாயகத்தை நீடித்து நிற்கவைத்ததை நிச்சயம் சொல்லலாம். இந்தச் சாதனை போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள மற்ற தெற்காசிய நாடுகள் அனைத்திலும் ராணுவப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன; அவற்றில் சில வெற்றியும் பெற்றிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட எந்த முயற்சியும் நடக்கக்கூடவில்லை.

வில்கின்சன், ‘இந்திய ராணுவம் புரட்சி செய்யும் போக்கற்றதாக வெவ்வேறு செயல்களால்’ மாற்றப்பட்டதாக விளக்குகிறர். இந்திய ராணுவத்தில் பலதரப்பு மக்களும் சேர்க்கப்பட்டார்கள். வெவ்வேறு கட்டளைகள், கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு அதிகார அடுக்கில் முக்கியத்துவம் தரப்பட்டு, ராணுவத் தலைவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வுகள் கூர்மையாகக் கவனிக்கப்பட்டன; ராணுவ அதிகாரிகள் பொதுவெளியில் கருத்துகள் சொல்ல அனுமதி மறுக்கப்பட்டது; ராணுவத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் துணை ராணுவப்படை உருவாக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் மேலாக ஓய்வுபெற்ற ராணுவத் தளபதிகளைத் தூர தேசங்களுக்குத் தூதுவர்களாக மரியாதையோடு அரசு வழியனுப்பிவைத்தது.

வி.கே.சிங் ராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் 2012-ல் ராணுவப் படைப்பிரிவுகள் டெல்லி நோக்கி ரகசியமாக நகர்ந்தன. இதை மோப்பம் பிடித்த செய்தித்தாள்கள், ‘மூச்சுவிடாமல் ராணுவப் புரட்சிக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது’ எனக் கூவியபோது, நீங்களும் நானும், ‘என்ன கட்டுக்கதை இது’ என்று நகைத்துவிட்டு விளையாட்டுச் செய்திகளுக்குத் தாவினோம்.

இப்படிப்பட்ட மகத்தான சாதனையை, வரத்தை நாம் இயல்பாகக் கடக்கிறோம்.

அன்வர் அலிகான் சமூக வரலாற்றாளர். ராணுவ வியூகத்துறை ஆர்வலர். @AnvarAlikhan

தமிழில்: பூ.கொ.சரவணன்

மரணகால மயக்கங்கள்


Funeral Blues:
எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள் ,தொலைபேசிகளை துண்டித்து விடுங்கள்
கொழுப்பு மிகுந்த எலும்புத்துண்டை வீசி நாய் குரைப்பதை நிறுத்துங்கள்
பியானோக்களை,மேளங்களை அமைதிப்படுத்துங்கள்
சவப்பெட்டியை கொண்டுவாருங்கள் ; துக்கம் கொண்டாடுபவர்கள் வரட்டும்

தலைக்கு மேலே விமானங்கள் வட்டமிட்டு முனகட்டும்
வானில் “அவர் இறந்துவிட்டார் !” என்கிற வரியை கிறுக்கட்டும்
புறாக்களின் வெள்ளை கழுத்தில் அலங்காரத்துணிகள் சுற்றப்படட்டும்
போக்குவரத்து காவலதிகாரிகள் கருப்பு பஞ்சு கையுறைகள் அணியட்டும்

அவனே என்னுடைய கிழக்கு,என்னுடைய தெற்கு,என்னுடைய வடக்கு மற்றும் மேற்கு
என் வேலை வாரமும்,ஞாயிற்றுக்கிழமையும் ஓய்வெடுக்கட்டும்
என் மதியம்,என் நள்ளிரவு,என் பேச்சு,என் பாடல் ;
நான் என் காதல் இறுதிவரை இருக்கும் என்றிருந்தேன் ; நான் தவறிழைத்து விட்டேன்

நட்சத்திரங்கள் இப்பொழுது தேவையில்லை ; அவை எல்லாவற்றையும் வெளியே அள்ளி வீசுங்கள்
நிலவை மூட்டை கட்டி அனுப்புங்கள் ; சூரியனை சுக்குநூறாக்குங்கள்
பெருங்கடலை ஊற்றி விடுங்கள்,காடுகளை கழித்து விடுங்கள்
ஏனெனில், இவை எதுவும் இக்கணத்தின் பெருந்துயரை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. – W. H. Auden