உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல!


‘என்ன இருந்தாலும் பெத்து, தூக்கி வளர்த்த அப்பா அம்மாவோட கனவுலாம் கொல்ற பிள்ளை என்ன பிள்ளையோ’ என்கிற வகையான சாடல்கள் கண்ணில் படுகின்றன.

ஒரு மொழிபெயர்ப்பு பதிலாகட்டும்:

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை

அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது

நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால், அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்
வாழ்க்கை பின்னோக்கி பயணிப்பதில்லை
கடந்தகாலத்தில் சுணங்கி கிடப்பதுமில்லை

உங்கள் குழந்தைகள் எனும் உயிருள்ள அம்புகளை ஏவும் விற்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
வில்லாளி முடிவுகளற்ற பாதையில் குறிவைத்து
முழுவலிமையோடு வில்லான உங்களை வளைக்கிறான்
அவன் அம்புகள் அதிவேகமாய், அளவற்ற தொலைவுகள் பயணிக்கலாம்
விற்பெருவீரனின் கர வளைப்பினில் உங்கள் ஆனந்தம் ஆர்ப்பரிக்கட்டும்
பாய்கிற அம்பை விரும்புகிற அவன்
பதறாத வில்லையும் விரும்புகிறான். – கலீல் ஜிப்ரான்

Image result for கலீல் ஜிப்ரான்
தமிழில்: பூ.கொ.சரவணன்

நீ கற்றுக்கொள்வாய் – போர்ஹெஸ்


நீ கற்றுக்கொள்வாய்

ஒரு கரத்தை பிடித்திருப்பதற்கும், ஒரு ஆன்மாவை சங்கிலியிட்டு சிறையிடுவதற்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டை வெகுசீக்கிரம் நீ கற்றுக்கொள்வாய்
காதல் என்பது தோள் சாய்ந்து கொள்வதற்கானது இல்லை என நீ கற்றுக்கொள்வாய்
உடனிருப்பதே உன்னதப் பாதுகாப்பு அன்றென நீ கற்றுக்கொள்வாய்

நீ கற்றுக்கொள்ள ஆரம்பிப்பாய்
முத்தங்கள் முறியாத உடன்படிக்கைகள் அல்ல என
பரிசுகள் வாக்குறுதிகள் அல்ல
தலைநிமிர்ந்து, கண்கள் விரித்து உன் தோல்விகளை ஏந்திக்கொள்வாய்

ஒரு பெண்ணின் நயத்தோடு நீ கற்றுக்கொள்வாய்
மழலையைப் போல மடைதிறந்து அழமாட்டாய்
நாளைய பொழுது என்னாகுமோ எனத்தெரியாது என்பதால்
உயரத்தில் பறக்கையிலே உடைந்து விழுவது வருங்காலத்தின் வழக்கமென்பதால்
இன்றைக்கான சாலைகளை மட்டுமே போட கற்றுக்கொள்வாய்

சில காலத்திற்குப் பின் நீ கற்றுக்கொள்வாய் …
கதகதப்பான சூரிய ஒளியும் பெருக்கெடுத்தால் சுட்டெரிக்கும்
நறுமலர்கள் நல்லவர்கள் கொண்டுவந்து நீட்டுவார்கள் என நம்பாமல்
உன் பூங்காவனத்தைப் பயிரிட்டு , உன் ஆன்மாவை அலங்கரி

உன்னால் தாங்கிக்கொள்ள முடியும் எனக் கற்றுக்கொள்வாய் …
நீ வலிமையானவள்/ன் என
உனக்கு உண்மையாகவே மதிப்பிருப்பதாக…
நீ கற்றுக்கொள்வாய், கற்றுக்கொண்டே இருப்பாய்
ஒவ்வொரு பிரிவிலும் நீ கற்றுக்கொள்வாய். – போர்ஹெஸ்

தமிழில்: பூ.கொ.சரவணன்

அறம் திரைப்படம் பேசும் அரசியல்


அறம் திரைப்படத்தின் அதிர்வுகள் அகல்வதற்கு முன்பு இப்பதிவை எழுதுகிறேன். அரசியலமைப்பின் அறம் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் என்று அம்பேத்கர் கனவு கண்டார். (‘Constitutional morality’ குறித்த அறிமுகத்திற்குக் காண்க http://www.india-seminar.com/2010/615/615_pratap_bhanu_mehta.htm) ஆனால், அரசும், ஆள்வோரும், அதிகாரிகளும் கடைக்கோடி மக்களின் கண்ணீரை துடைப்பதை எந்தளவுக்குச் சாதித்திருக்கிறார்கள் என்பதைக் கூராய்வு செய்கிறது அறம் திரைப்படம்.
சமீபத்தில் பணமதிப்பு நீக்கம் குறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் கேபினட் செயலாளர் T.S.R.சுப்ரமணியம் இந்தியாவில் உயிர்கள் போவது இயல்பான ஒன்று, நீண்ட காலத்தில் பணமதிப்பு நீக்கத்தால் வரும் பயன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனப் பேட்டி தந்திருந்தார். மனித உயிர்கள் இந்த நாட்டில் எத்தனை மலிவானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்படத்தைக் காண்கையில் உணர்ந்து உறைந்து போவோம். போர்வெல் மரணங்கள் திரையில் ஏற்படுத்தும் பதைபதைப்புச் செய்தித்தாளில் மலக்குழியில் விழுந்து இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் மரணங்கள் ஏன் நமக்கு ஏற்படுவதில்லை எனப் படம் பார்க்கையில் தோன்றியது.
மக்களிடம் வாக்கு கேட்க வருகையிலே தெரியாத தூரம் ஏன் அவர்களின் கண்ணீரை போக்க முனையும் போது தப்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சட்டங்கள் மக்களின் நலன் சார்ந்ததாக, அரசியலமைப்பின் கனவுகளைக் காப்பதாக இல்லாமல் ஏன் வழி தவறுகின்றன? மக்களின் வலிகளைப் போக்க தடையாகச் சட்டத்தையே ஆயுதமாக்கும் வழிதவறல் குறித்த சுயபரிசோதனை எப்போது ஏற்படும்? அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், தொழில்நுட்பங்கள் தொலைதூரக்கனவுகளைத் துரத்தும் என்றால் அதன் கௌரவம் யாருக்கானது? தங்களைத் தவிக்க விடும் தேசத்தின் மீது பக்தி கொள்ளக் கடைக்கோடி மக்களுக்கு என்ன தேவை?
Image result for அறம்
சொகுசு வாகனங்களில் செல்வோரின் பிள்ளைகளின் கல்வி குறித்தும், அன்றாட வாழ்க்கை குறித்தும் பெரிதும் கவலைப்படும் அதிகார வர்க்கம் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகளுக்கும் வாழ்வும், கனவுகளும் உண்டென உணராமலேயே ஏன் காலந்தள்ளுகிறது? அரசியல் என்பது தேர்தல் வெற்றிகளோடு முடிந்து விடுகிறதா? வெற்றிகளைப் பெற்றுத்தருபவர்களைக் காப்பது தான் அரசியலை செலுத்தும் அச்சு என்றால் அறம் எங்கே? சமத்துவமின்மையின் வன்முறையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இப்படிப் பல கேள்விகளைப் பதைபதைப்பு மிக்கக் கதை சொல்லலின் மூலம் அறம் சாதித்திருக்கிறது. இயக்குனர் கோபிக்கு வாழ்த்துகள். இப்படிப்பட்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாராவுக்குப் பூங்கொத்து.
அதிகாரிகளை முழுக்க நல்லவர்கள் போலவும், அரசியல்வாதிகள் தவறுகளின் முழு உருவம் போலவும் இருமை இந்தக் கதை சொல்லலில் கடத்தப்படுகிறது. அது அப்படியில்லை என்பதை உணர வைக்காமல் போகையில் அரசியல் சார்ந்த அணிதிரட்டல், சக மனிதருக்கான சம மதிப்பு, மரியாதை என்கிற கனவு பொன்னுலகக் கனவாகவே நின்று விடும். அரசியலில் தான் ஆழமான மாற்றங்களுக்கான வித்து இருக்கிறது என உணர வைக்கிற அறம் அனைவரும் காணவேண்டிய படம்.

தெற்கிலிருந்து ஒரு சூரியன்


தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூல் தொகுப்பை படித்து முடித்தேன். திராவிட இயக்கம் தேய்பிறை காலத்தில் இருக்கிற போது, அதன் கடந்த கால வரலாற்றை, சாதனைகளை ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு நூல் தொகுக்கப்பட்டு உள்ளது. சமயங்களில் கட்சி அறிக்கையோ என்கிற வியப்பு ஏற்பட்டாலும் பல இடங்களில் ஆசிரியர் குழுவின் உழைப்பு மெச்ச வைக்கிறது.

‘தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற தலைவர்கள் காலங்கள் செல்ல செல்ல கடுமையாக வெறுக்கப்படுவது நிகழும்’ என்கிற ராமச்சந்திர குஹாவின் வரிகள் கலைஞர் கருணாநிதிக்கும் பொருந்தும். வாரிசு அரசியல், ஊழல், ஈழப்போர் என அவரின் அரசியல் வாழ்வை இளைய தலைமுறை அடையாளம் காண்கிறது. அதேசமயம், அது மட்டும் தானா அவர்? திராவிட இயக்கம் திருடர்களின் இயக்கம் என்று ஒரு தரப்பு
சொல்லித்திரிவது எத்தனை உண்மை? இந்த நூல் நல்ல துவக்கப்புள்ளி. 

Image result for தெற்கிலிருந்து ஒரு சூரியன்

மாநில சுயாட்சி சார்ந்த கருணாநிதியின் முழக்கம் எப்படிப் பஞ்சாப், அசாம், கர்நாடகம் எனப் பலமுனைகளில் ஒலித்தது ஏன் அது இலங்கை வரை சென்றது என்கிற வரலாறு பலருக்கு தெரியாத ஒன்றாக இருக்கும். அதிகார பரவலாக்கம் கேட்பவர்களைத் தேச விரோதிகள் எனக் கருதிய தேசியத்தின் தேர்தல் அரசியல் உச்சகாலத்தில் எழுந்த ராஜ மன்னார் அறிக்கை ஏன் இன்றைக்கும் தேவைப்படுகிறது என நூலில் பல மாநில ஆளுமைகள் விளக்குகிறார்கள். மூன்றாவது பட்டியலை மாற்ற வேண்டும், பொதுப்பட்டியல் மத்திய அரசுக்கு மட்டும் அதிகாரம் தருவதாக அமையக்கூடாது, நிதி நிர்வாகம், பெரும்பான்மை அதிகார பங்கீடு எனப் பல முனைகளில் இக்குரல்கள் பேசுகின்றன. கூட்டணியாட்சி கூட்டாட்சி நோக்கிய பயணம் என இன்று அரசியல் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி முன்மொழிந்தார் என்பது ஆச்சரியம் தரலாம்.

பிரேர்ணா சிங், அமர்த்திய சென், யோகேந்திர யாதவ் முதலியோரின் கட்டுரைகள் தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் சாதனைகளைக் கணக்கில் கொள்கின்றன. யோகேந்திர யாதவ் பீகாரில் வெற்றி பெறாத சமூகநீதி ஏன் தமிழகத்தில் சிறப்பாக இயங்கியது என விளக்குகிறார். துணை தேசியம் எப்படி ஒற்றுமை, உள்ளடக்கிய வளர்ச்சியை ஒருங்கே சாதிக்கிறது எனும் பிரேர்ணா சிங்கின் கட்டுரை இரண்டு பக்கங்களில் முடிந்தாலும் முக்கியமான ஒன்று.

மே தினம் சார்ந்த விடுமுறை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், மத்திய அரசிற்கு முன்பே கூட்டுக்குடும்பச் சொத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது, நில உச்சவரம்பு சட்டத்தைச் செயல்படுத்தியது, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 33% இட ஒதுக்கீடு, தலித் மக்கள் நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தல் சட்டம் முதலிய சட்டரீதியான சாதனைகளை நீதிபதி சந்துரு அடுக்குகிறார்.

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அரிசியியல் எனும் கட்டுரையின் மூலம் வட்டிக்குப் பணம் வாங்கிச் சாப்பிட்ட வறுமையை விட்டுத் தமிழகத்தை வெளியே கொண்டு வரும் உணவு அரசியலை பொருளாதார மேதைகள், மத்திய அரசின் ஏளனங்களுக்கு இடையே தமிழகம் எப்படி முன்னெடுத்தது எனப் புரிய வைக்கிறார்.

நீர்ப்பாசன திட்டங்களைத் திராவிட இயக்கம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எனும் பரப்புரை ஆதாரங்களோடு முறியடிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை சார்ந்த சாதனைகளில் திராவிட அரசுகளின் தொலைநோக்கு கவனப்படுத்தப்பட்டு உள்ளது.

சித்திர ஓவியங்களின் மூலம் பரப்புரை புரிந்தது. இளைஞர்களை ஊடகம், மேடைப்பேச்சு, திரைப்படம், படிப்பகம் எனப் பல முனைகளில் அரசியல்படுத்திய திராவிட இயக்கம் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு அதை முன்னெடுப்பதில் காட்டிய சுணக்கம் நூலில் கவனம் பெறவில்லை.

சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எப்படிச் சட்டமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டும், மக்களுக்காகப் போராட வேண்டும், விவாதங்களுக்கு மெனக்கெட வேண்டும், கருத்துரிமையை மதிக்க வேண்டும் என்பதற்குக் கருணாநிதியின் சட்டசபை செயல்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் பாலபாடமாகத் திகழ கூடும். இடதுசாரி இயக்கங்களைப் போல அல்லாமல் தனிமனித உரிமைகளை மதிக்கும் வெளியை எப்போதும் திராவிட இயக்கம் கொண்டிருக்கும் என்கிற கருணாநிதியின் வாக்கு சாதிய சக்திகளின் முன்னால் மங்கி நிற்கிறது என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சாதிய கூர்முனையை முறிக்கத் திராவிட இயக்கம் தவறிவிட்டது, அதிகார போதை மக்களை விட்டு தள்ளி நிற்க வைக்கிறது முதலிய விமர்சனங்களைப் பால் சக்கரியா முன்வைக்கிறார். உயர்கல்வியைக் கூடுதல் வருமானம் ஈட்டும் மூலமாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றியதை சாடுகிறார் அனந்நகிருஷ்ணன். ஈழப்போரில் கருணாநிதியின் செயல்பாடு குறித்த விமர்சனம் ஓரிரு பத்திகளில் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. தலித் நலன்களில் பெரிய கவனமில்லாமல் இருக்கிறது என்கிற கேள்வியைக் கி.வீரமணி தடுமாற்றத்தோடு தான் எதிர்கொள்கிறார். ஊழல் குறித்த கேள்விகளை இந்தியாவில் எங்குத் தான் இல்லை, தண்டிக்கப்படுபவர்களின் சாதியப்பின்புலம் பெரிய பங்காற்றுகிறது எனக் கடப்பது இயக்கம் வலிமையோடு நீடித்திருப்பதற்கு உதவுவதாக அமையாது. குடும்ப அரசியல் எப்படித் திமுகவை வலுவிழக்க வைத்தது என்பது குறித்து ஸ்டாலினிடம் கேட்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி காத்திரமான ஒப்பீடுகளோ, கேள்விகளோ வேறெங்கும் இடம் பெறவில்லை. முதல்வரையும் அரசு ஊழியர் என்கிற வரையறைக்குள் 1973லேயே கொண்டு வந்த திமுக ஊழல் தடுப்பில் பெருமளவில் சுணங்கி இருப்பதைக் கவனத்தில் கொள்ள நூலில் பேசியவர்கள் தவறிவிட்டார்கள்.

முஸ்லிம்கள் காங்கிரஸ் ஆட்சியில் எப்படித் தமிழகத்திலும் மாற்றாந்தாய் மனோபாவத்தோடு அணுகப்பட்டார்கள், அது திமுக ஆட்சியில் தான் பெருமளவில் மாறியது என்பது மதவெறி தமிழகத்தில் தலையெடுக்காமல் இருப்பதற்கான காரணத்தைப் புலப்படுத்துகிறது. 

பெரியாரியமும், அம்பேத்கரியமும் இணைந்து பயணிக்க வேண்டிய தேவையைத் திருமாவளவன் பேசுகிறார். கருத்தொருமிப்பு அரசியல் என்பது தேர்தல் அரசியலில் தாராளவாதத்தை முன்னெடுக்க அவசியம் என ராஜன் குறை கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். திமுகத் தொண்டர்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட நேர்முகங்கள், புகைப்படங்கள் நூலில் உண்டு. அதேசமயம், விமர்சனங்கள் ஆங்காங்கே தூவிக்கிடந்தாலும் மு.கருணாநிதி என்கிற ஆளுமையின் எழுச்சி, இயக்கம், அரசியலை திராவிட இயக்கத்தின் தேவையோடு இணைத்து உணரவும், தமிழ் நிலத்தில் வேரூன்றிய திராவிட அரசியலை இன்னமும் கனிவோடு தற்காலத் தலைமுறை அணுகுவதற்கான திறப்பாக இத்தொகுப்பு அமையும். தெற்கிலிருந்து இந்தியாவின் சமகால வரலாற்றை, அரசியலை புரிந்து கொள்ள, ஆய்வு செய்ய ஊக்கமும், உற்சாகமும் தரும் திமுக மீது மென்மையான அணுகுமுறை கொண்ட முக்கியமான நூல் இது. 

Image result for தெற்கிலிருந்து ஒரு சூரியன்

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
208 பக்கங்கள்
200 ரூபாய்
தமிழ் திசை பதிப்பக வெளியீடு

கருத்துரிமை நெரிப்பின் கலங்க வைக்கும் வரலாறு – 2



ஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:
இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்?:
ஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொன்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.

Image result for republic of rhetoric
Lady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.
        அதே சமயம், உச்சநீதிமன்றம் தேவிதாஸ் ராமச்சந்திர துலிஜாபுர்கர் வழக்கில் காந்தி முதலிய தேசத்தலைவர்கள் குறித்து ஆபாசமாக எழுத கூடாது என்று தீர்ப்பு எழுதியது.  அவீக் சர்க்கார் தன்னுடைய செய்தித்தாளில் போரிஸ் பெக்கர் தன்னுடைய காதலியோடு நிற்கும் அரை நிர்வாண படத்தை நிறவெறிக்கு எதிரான அடையாளமாக வெளியிட்டார். அதை ஆபாசம் என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஒரு படைப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டே அது ஆபாச உணர்வுகளைத் தூண்டுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதியதன் மூலம் உச்சநீதிமன்றம் ஹிக்லின் சோதனையில் இருந்து ஓரளவிற்கு நகர்ந்து வந்தது.
Image result for boris becker aveek sarkar
   குஷ்பு கற்பு சார்ந்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,’காம உணர்ச்சியை, மோக சிந்தனைகளைத் தூண்டிவிடுவது ஆபாசமானது. அவர் பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய எதையும் சொல்லிவிடவில்லை….திருமணம் என்பது சமூக அமைப்பு தான். எனினும், இந்தியாவில் பல்வேறு பூர்வகுடிகள் திருமண அமைப்புக்கு வெளியே உடலுறவு கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ என்று விவரித்துக் குஷ்பு பேசியது ஆபாசமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
Image result for khusboo and supreme court
ராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.

        கேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.

Image result for contempt of court india

நேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:
எல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

            இது நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக நேரு மீது வழக்கு போட யோசிக்கப்பட்டது. நேருவே அதற்குள் விவியன் போஸ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவும் நேரு ஒப்பினார். நேருவின் மன்னிப்பு ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பிரிவுபாசார விழாவில் நேரு கலந்து கொண்டார். டால்மியா-ஜெயின் நிறுவனங்கள் மீதான விசாரணை பொறுப்பை விவியன் போஸிடமே நேரு ஒப்படைத்தார்.
மான நஷ்ட வழக்கு:
இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .
நக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்கர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

Image result for nakheeran rajagopal auto shankar

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

         மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டப்பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னணியில் ‘ரங்கீலா ரசூல்’ எனும் பிரசுரம் இருந்தது. வண்ணமயமான நபிகள் என்கிற பொருள் தரும் இந்த நூல் நபிகள் நாயகத்தின் அக வாழ்வு சார்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது. இது பண்டித சமுபதியால் எழுதப்பட்டது. இதைத் தடை செய்யக்கோரி தலிப் சிங் என்கிற நீதிபதி முன் வழக்குச் சென்றது. அந்நூல் மோசமானது என்றாலும் அது பகை, வெறுப்பை வளர்க்கவில்லை என்று தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருக்கிற சட்டமானது இறந்து போன மதத்தலைவர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும், வரலாற்று பார்வையுள்ள நூல்களும் இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்தினால் வராமல் போகும் என்று தீர்ப்பு எழுதினார். பல்வேறு கலவரங்கள் அந்நூலால் வெடித்தன.
Image result for rangeela rasool           

               ரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.

இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

விடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா?:
பல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

பெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:
‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.

          ஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் காயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

Image result for periyar  ramayana

அதே சமயம், பரகூர் ராமச்சந்திரப்பா வழக்கில் நீதிமன்றம் பசவர் குறித்த ஆசிரியரின் கருத்துக்களுக்காக நூலை தடை செய்ததோடு, ‘மிகப்பெரிய மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பலவீனமான மக்களின் மனங்கள் காயப்படாமல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கவனமும், கரிசனமும் வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. பல்வேறு புத்தகத் தடைகளை, திரைப்படத் தணிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது. 

பத்திரிகைகளின் கழுத்தை நெரித்தல்:
இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.

Continue reading

கோக்கோ – கனவைத் துரத்துங்கள், குடும்பத்தையும் கவனியுங்கள்!


கோக்கோ’ திரைப்படத்தை முதல் முறை பார்த்துவிட்டுக் கண்கள் பனிக்க வெளியே வந்தேன். குடும்பத்தின் பல்வேறு பாடுகளில் பெரும்பாலும் பங்கேற்காத என் கடந்த கால வாழ்க்கை அப்படிப்பட்ட அனுபவத்திற்குக் காரணமோ எனத்தோன்றியது. இரண்டாவது முறை இன்று அப்படத்தை மீண்டும் பார்த்த பின்பு மீண்டுமொரு முறை நெகிழ்ந்தேன்.

இசைக்கனவுகளைத் துரத்தும் சிறுவன் மிகைல். அவனுடைய குடும்பம் காலணி தயாரிப்பில் பெயர் பெற்றது. அவனுடைய எள்ளு தாத்தா இசை நாடி குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார். அதனால் அக்குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இசை வெறுக்கப்படுகிறது. இந்நிலையில் மிகைலுக்கு ஏற்படும் மாய அனுபவங்கள் அவனை இறந்தவர்களின் பூமிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே இசைக்கும், குடும்பத்திற்கும் இடையே அவன் உயிர் சிக்கிக்கொள்கிறது.

Image result for coco movie

கனவுகளை விடாமல் துரத்துவதா? குடும்பத்தொழிலில் தோய்ந்து தொலைந்துபோவதா என்கிற தள்ளாட்டத்தில் மிகைல் வாடிப்போகிறான். இசை பெருகி, கனவுகள் கைகூடி வரும் நிலையில் அவனுக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. கனவுகளைத் துரத்துகையில் சகலமும் மறந்து போகிறோம்.பிரியம் வழிய இமை சோர, கண்ணீர் வழிய நினைவுகளோடு நிறையும் உறவுகளின் காத்திருப்பை மறத்தல் தகாது எனக் கோக்கோ அத்தனை நெகிழ்வாகக் கடத்துகிறது.

படத்தில் பல்வேறு ஸ்பானிஷ், ஆங்கிலம் கலந்த பாடல்கள். அவை மெக்சிகோவுக்கே அழைத்துச் செல்கின்றன. வலுவான கதையும், உற்சாகமான இசையும், கனவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இடையேயான போராட்டமும் ஒரு பரவச அனுபவமாகக் கோக்கோவை மாற்றுகின்றன. குழந்தைகள், பெற்றோர்கள், கூடுகள் நொறுக்கி வானை நாடும் இளைஞர்கள் யாவரும் கண்டு நெகிழ வேண்டிய அழகிய படம் கோக்கோ.

அருவி- திசைகளற்ற அன்பின் பயணம்!


*Spoiler alert*
அருவி திரைப்படத்தை அன்பு நண்பர்களோடு பார்த்தேன். படம் குறித்து பல்வேறு நேர்மறையான, நெகிழ்ச்சியான பதிவுகளை படித்திருந்தாலும் எந்த எதிர்பார்ப்பில்லாமலே காணச்சென்றேன். அருவி எனும் பெண்ணின் வாழ்க்கையை சுற்றி நகரும் சம்பவங்கள் கண்ணீரும், பேரன்பும், புன்னகையும் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.

முதல் இருபது நிமிடங்கள் இலக்கின்றி சற்றே பயணிப்பது போலத்தோன்றினாலும் கதையோடு படிப்படியாக ஒன்றிவிட முடிகிறது. உறவுகள், உதவுபவர்கள், உள்ளமைதி தருவதாக சொல்பவர்கள் செய்யும் கொடுமைகளை மன்னிப்பின் வழியே கடக்க முயல்கிற கனமான பாத்திரம் அருவி. ஆனால், அடிப்படை ஆண் மைய  அடக்குமுறையின்  கட்டமைப்பை  ஓரிரு வசனங்கள் தவிர்த்து படம் பெரிதாக அசைத்துப் பார்க்கவில்லை. அது அதன் இலக்காக இல்லை. இடைவேளைக்கு முன் நாயகி பேசும் வசனத்தில் அதன் கேள்விகளில் திரையரங்கே கைதட்டல்களால் நிறைகிறது.

தொடர்ந்து கதகதப்பையும், பாதுகாப்பையும், அரவணைப்பையும் தந்த உறவுகள் கைவிட்ட நிலையில் கணங்களில் கடக்கிற உறவுகளை புன்னகையால், கொண்டாட்டத்தால், மானுடத்தால் நிறைக்கிற கணங்கள் நெகிழ்வானவை.   இரண்டாம் பாதியில் தனிமனிதர்களின் சிக்கல்களை, பிரச்சினைகளை சந்தைப்பொருளாக்கும் நிகழ்வான ‘சொல்வதெல்லாம் உண்மை’ பகடி செய்யப்படுகிறது. அது ஒரு கட்டத்தில்  அருவருப்பானதாகவும், கீழ்மையானதாகவும் மாறி நகைச்சுவை என்கிற பெயரில் கடத்தப்படுகிறது. அவர்களிடத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என உணர்த்தவே அப்படிச்செய்தோம் என கருதினால் அந்த இலக்கிலும் படம் வெற்றிபெறவில்லை. ஆழமான விமர்சனங்கள் என்பவை தனிப்பட்ட தாக்குதல்களின் மூலம் எழுப்பப்பட்டால் அவை நீர்த்து போவது திரையரங்கில் தெரிந்தது.

எச்ஐவி நோய் அரிதான காரணத்தால் நாயகிக்கு ஏற்பட்டது கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. எய்ட்ஸ் குறித்த பரப்புரைகள், முன்னெடுப்புகளால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு எல்லாம்  வல்லுறவில் கொண்ட மூவருக்குமே நோய்த்தொற்று இல்லை என்கிற காட்சிப்படுத்தலில் சிதைகிறது. ஏனோ தடுப்பூசி எதிர்ப்பாளர்களரின் முகங்கள் வந்து போயின.  அதேபோல எய்ட்ஸ் நோய் சிகிச்சை குறித்த நாயகியின் குரலாக எழும் விமர்சனமும் பொறுப்புணர்வற்று  இருந்தது வருத்தத்துக்குரியது.

இறுதிக்காட்சிகளில் உருக்குலைந்து உள்ளம் கரைந்து போகிறோம். மனதின் கசடுகள் கரைந்து அருவி போல அன்பும், காதலும், விடுதலையும் நிறைக்கிறது. படத்தின் இசை அத்தனை வண்ணமயமானதாக, உற்சாகப்பெருக்காக, உணர்வுகளை இசையில் இழைத்து தரும் பேரனுபவமாக மாற்றுகின்றது. அருவி திசைகளற்ற உலகினில் ஊற்றெடுக்கும் நம்பிக்கை ஊற்று.

கருத்துரிமை நெரிப்பின் கலங்கவைக்கும் வரலாறு-ஒன்று!


காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா கருத்துரிமையைக் காப்பதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் ஆய்வு செய்கிறது. கௌதம் பாட்டியாவின் கருத்துரிமை குறித்த நூல் அரசியல், சமூகச் சூழ்நிலைகளைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விமர்சனத்துக்கு இடையே இந்நூல் அந்த இடைவெளியை பெருமளவில் நிரப்புகிறது.
இந்திய விடுதலை மன்னர்கள், ஆதிக்கச் சாதியினர், நிலச்சுவான்தார் ஆகியோரின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதை ஓரளவுக்குச் செய்தது. இந்தச் சாதனை ஆங்கிலேயர் காலத்து அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தது. கருத்துரிமை சார்ந்து அப்படிச் சொல்ல முடியாது என்பதை இந்தியாவின் கருத்துரிமை சார்ந்த சட்டங்கள், கட்டுப்பாடுகள் உணர்த்துகின்றன. அரசியலமைப்பு சட்ட விவாதங்களில் ஹனுமந்தையா சொன்னதைப் போல, ‘நாம் வீணை, சிதார் இசைக்கு ஆசைப்பட்டோம். ஆங்கிலேயே வாத்தியக்குழுவின் இசை தான் கிட்டியுள்ளது’. அபினவ் இந்த நூலில் நிரூபிப்பதை போலச் சமயங்களில் ஆங்கிலேயரின் சட்டங்களை விடக் கடுமையான கட்டுப்பாடுகளை விடுதலைக்குப் பிந்தைய சட்டங்கள் விதித்து இருக்கின்றன. 

தேசத்துரோக சட்டத்தின் திகில் வரலாறு:
மெக்காலே இந்திய குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய போது தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவையும் உருவாக்கினார். எனினும், குற்றவியல் சட்டம் 1860-ல் நடைமுறைக்கு வந்த போது வரைவில் இருந்த தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவான 113 அமலுக்கு வரவில்லை. பத்தாண்டுகள் கழித்தே அந்தச் சட்டத்தைச் சீரமைத்து சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தில் தேசத்துரோக சட்டத்தின் எல்லைகள் பெரிது என்றாலும், நடைமுறையில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. மெக்காலே அரசின் மீது ‘disaffection’ காட்டினால் ஒருவர் மீது இச்சட்டத்தைப் பாய்ச்சலாம் என்று வரையறுத்து இருந்தார். அரசின் மீது நல்ல நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் இதில் வராது என்பது அவரின் பார்வையாக இருந்தது. பர்னேஸ் பீகாக் என்கிற சட்டத்துறை வல்லுநர் வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதாகக் கருத்துகள் இருந்தால் மட்டுமே தேசத்துரோக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாற்றியமைத்தார். அவரின் சட்டம் பிரிட்டனின் தேசத்துரோக சட்டத்தை ஒத்திருந்தது. ஆனால், ஸ்டீவன் என்கிறவர் உருவாக்கிய இறுதி வடிவத்தில் சட்டம் கடுமையானதாக ஆக்கப்பட்டது. அப்போது இஸ்லாமிய வாகாபிக்கள் கிறிஸ்துவர்களான ஆங்கிலேயருக்கு எதிராகப் புனிதப்போரை நடத்தக்கூடும் என்கிற அச்சத்தில் இச்சட்டம் தேவைப்படுவதாக அறிவித்தார்.
உடலுறவுக்கான விருப்ப வயதை பத்தில் இருந்து பன்னிரெண்டுக்கு உயர்த்திய ஆங்கிலேய அரசின் நடவடிக்கையை விமர்சித்துப் பங்கோபாசி என்கிற செய்தித்தாள் எழுதிய கட்டுரைகள் சார்ந்தே முதல் தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டது. எனினும், இந்த வழக்கு சீக்கிரமே விலக்கி கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என்கிற அச்சத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம், இந்து தேசியவாதியான திலகர் மீது பாய்ச்சப்பட்டது. திலகரின் சிவாஜி குறித்த உரை மக்களைத் தூண்டிவிடுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில் ஜூரி தீர்ப்பளிக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் ஜூரி ஒரு மனதாகத் தீர்ப்பு வழங்கினாலே இரண்டாண்டு தண்டனை. இந்தியாவிலோ அதற்கு மாறாகப் பெரும்பான்மை போதும். கூடுதலாக, நாடு கடத்தல் இந்தியர்களுக்குத் தண்டனை. இந்தியர் அல்லாத ஐரோப்பியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மட்டுமே. இதனால் திலகர் மீது சுமத்தப்பட்ட ராஜதுரோக குற்றங்களில் இந்திய உறுப்பினர்கள் அவரைத் தண்டிப்பதை எதிர்த்து வாக்களித்தாலும் பெரும்பான்மை ஆங்கிலேய உறுப்பினர்களின் வாக்குகளால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், திலகர் மராத்தி மொழியில் எழுதிய கட்டுரைகள் படிப்பறிவு இல்லாத, முட்டாள் மக்களுக்காக எழுதப்பட்டது. அவை வாசித்துக் காட்டப்பட்டு அவர்களைத் தவறான பாதையில் செலுத்துகிறது என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருதிப்பகுதிக்குள் மெக்காலேவின் குறுகலான குற்றங்களை மட்டுமே தண்டிக்கும் ராஜதுரோக சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தண்டனையை வழங்கின. இதை அடுத்து, தேசத்துரோக சட்டத்தை விரிவாக்கி ‘அரசு மீதான வெறுப்பு, அவமதிப்பு, பகை’ ஆகியவற்றை வளர்ப்பதையும் தேசத்துரோக குற்றம் என வரையறுத்துச் சட்டம் 1898-ல் அமலுக்கு வந்தது. காந்தி மீது இச்சட்டம் பயன்படுத்தப்பட்ட போது வரலாற்றில் முதன்முறையாக அந்தச் சட்டத்தின்படி தான் குற்றவாளி என்று காந்தி ஏற்றுக்கொண்டு அதிரவைத்தார். வன்முறைக்குத் தூண்டாத வரை அரசுக்கு எதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்துவது குற்றமில்லை என்றும், தான் தோன்றித்தனமான ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களின் தலை மீது இறங்க தயாராக் இருக்கும் வாளே இச்சட்டம் என்று கடுமையாகக் காந்தி சாடினார்.
Gwyer என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டினால் மட்டுமே இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உலகப்போர் சமயத்தில் தீர்ப்பு எழுதினார். மஜூம்தார் என்கிற சட்டசபை உறுப்பினர் நாற்பத்தி ஒன்றில் டாக்காவில் மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது எனத் தொடரப்பட்ட வழக்கில் இப்படி அவர் தீர்ப்பு எழுதினார். அரசாங்கங்களின் கர்வத்தைக் காயப்படுத்துகிற கருத்துக்களுக்கு மருந்து போட்டுக்கொள்ள இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றார். ஆனால், அவரின் கருத்தை பலேராவ் வழக்கில் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சில் ஏற்க மறுத்தது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஆயுள்தண்டனை தேசத்துரோக குற்றத்துக்கு விதிக்கப்பட்டது. 1974-ல் கைது உத்தரவு இல்லாமலே தேசத்துரோக குற்றங்களுக்குக் கைது செய்யலாம் என்று இந்திரா காந்தி அரசால் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
Image result for republic of rhetoric
கருத்துரிமை காவலர் கே.எம்.முன்ஷி:
கே.எம்.முன்ஷியை கிரான்வில் ஆஸ்டின் உரிமைகளை மட்டுப்படுத்துகிற செயலில் ஈடுபட்டவர் என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரோடு இணைத்து குறிப்பிடுகிறார். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது என்பதை அபினவ் சந்திரசூட் நிறுவுகிறார். கே.எம்.முன்ஷி பத்திரிக்கைகளை முன் தணிக்கை செய்கிற பணியில் உலகப்போர் சமயத்தில் ஈடுபட்டிருந்தார். அவரே கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் வரைவை தயாரித்த குழுவின் தலைவராக இருந்தார். அதில், பொது அமைதி, நன்னெறி, தேசத்துரோகம், ஆபாசம், அவதூறு, தெய்வ நிந்தனை என்று பல்வேறு கருத்துரிமையை மறுக்கும் பிரிவுகள் அடுக்கப்பட்டன. கே.டி.ஷா, ‘ஒரு வலது கை தந்ததை மூன்று, நான்கு இடது கைகள் பறித்துக் கொள்வதைப் போல’ இது இருப்பதாகக் குறைபட்டார். அம்பேத்கர் இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திப் பேசினார். டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் கருத்துரிமை கட்டுப்பாடுகள் அற்றதாக இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

அம்பேத்கர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பேச்சுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். வகுப்புவாத வெறியை தூண்டிவிடும் பேச்சு கருத்துரிமையின் கீழ் வரக்கூடாது என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் வாதிட்டார். இது அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் என்று கவலை தெரிவித்தார் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. கே.எம்.முன்ஷி வன்முறையைத் தூண்டிவிடாத பேச்சை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றார். தெளிவாக, ஆபத்தை விளைவிக்கும் பேச்சுக்களையே கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். அவரின் வாதங்களால் அம்பேத்கர், அல்லாடி ஆகியோரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தேசத்துரோகம் சார்ந்த பேச்சுக்களையும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் பிரிவுக்குள் கொண்டுவருவதையும் முன்ஷி நீக்க திருத்தம் கொண்டு வந்தார். அது ஏற்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு முடிவு செய்தது. நீதிபதிகள் காலனிய ஆட்சிக்கு நன்றியோடு இருந்துவிட்டு இன்னமும் பதவியில் தொடர்கிறார்கள், அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு என்று பி.தாஸ் என்கிற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று முடிவு செய்யப்பட்டது. நியாயமான கட்டுப்படுகளையே கருத்துரிமைக்கு விதிக்க வேண்டும் என்கிற பார்கவாவின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.

முதல் சட்ட திருத்தத்துக்கு வழி வகுத்த பிரசாத், முகர்ஜி:
கருத்துரிமைக்குக் கட்டுப்பாடுகள் ஓரளவுக்கே விதிக்கப்படுவதை அரசியலமைப்பு சட்ட குழுவின் விவாதங்கள் உறுதி செய்தாலும் சீக்கிரமே சிக்கல்கள் எழுந்தன. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு வெறுப்பைத் தூண்டும், வகுப்பு வாதத்தை வளர்க்கும் பேச்சுக்களை, எழுத்துக்களைத் தடை செய்ய அரசுகள் முயன்ற போது அது கருத்துரிமைக்கு எதிரானது என நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. ரொமேஷ் தாப்பர் என்கிற இடதுசாரியின் ‘CrossRoads’ செய்தித்தாள், ப்ரிஜ் பூஷன் என்கிற வலதுசாரியின் ‘Organiser’ செய்தித்தாள்களை அரசு கட்டுப்படுத்தியது. அவை கருத்துரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இருக்கும் மதச் சிறுபான்மையினரின் நலனை காக்க லியாகத் அலிகான் உடன் நேரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது சார்ந்தும் பிரிவினை, காஷ்மீர் சிக்கல்கள் சார்ந்தும் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி கடுமையாகப் பேசினார். பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று தொடர்ந்து பேசினார். இது படேல், நேரு ஆகியோரை கவலைக்கு உள்ளாக்கியது.

இன்னமும் மோசமாக, சார்ஜூ பிரசாத் என்கிற நீதிபதி, சங்க்ராம் என்கிற துண்டு பிரசுரத்தில், ‘நான் ரத்தவெறிக் கொண்ட காளி…. நான் தாகம் கொண்டிருக்கிறேன், எனக்குப் புரட்சி வேண்டும், போராட்டத்தின் மீது நம்பிக்கை வேண்டும்., அநீதியின் சங்கிலிகளைக் கிழித்து, கிழித்து எறியுங்கள்.’ என்று எழுதப்பட்டதை எதிர்த்துத் தொடர்ப்பட்ட வழக்கில், ‘கொலை செய்யத் தூண்டினாலும் அதுவும் கருத்துரிமை. அதற்கான தண்டனையைத் தூண்டியவர் அனுபவிக்க வேண்டும், ஆனால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியாது’ எனத் தீர்ப்பு தர அதிர்ந்து போனது அரசு. முதல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் ‘பொது அமைதி’, ‘அயல்நாடுகளோடு நட்புறவு’, ‘குற்றத்துக்குத் தூண்டுவது’ ஆகியன சார்ந்து கருத்துரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று திருத்தும் கொண்டு வந்தார். அயல்நாடுகளோடு நட்புறவை ஒரு தனிக் குடிமகனின் கருத்துகள் சீர்குலைக்குமா என்று நஸ்ரூதின் ஷா என்கிற உறுப்பினர் ஆச்சரியப்பட்டார்.

நியாயமான கட்டுப்பாடுகள் (reasonable restrictions) விதிக்கப்பட வேண்டும் என்கிற திருத்தத்தை அம்பேத்கர் கொண்டு வந்ததை உள்துறை அமைச்சர் ராஜாஜி பெரும் விவாதத்திற்குப் பிறகே ஏற்றுக்கொண்டார். குற்றத்துக்குத் தூண்டுவது என்கிற பிரிவு இருக்க வேண்டுமா என்கிற விவாதம் எழுந்த போது, ‘மதுவிலக்கு இருக்கும் ஊரில் மற்றவர்கள் கால்சட்டை பையில் சாராயம் சுமந்து செல்ல தூண்டுவது குற்றமில்லையா?’ என்று கேட்டார் ராஜாஜி. அம்பேத்கர், ‘வயல்களுக்கும், விறகு பொறுக்கக் காடுகளுக்கும் பட்டியலின சாதியினர் போகக்கூடாது எனச் சமூக விலக்கை சாதி இந்துக்கள் விதித்தால் அவற்றை ஏற்க முடியாது.’ என்று வாதிட்டார். பிளிட்ஸ் இதழில் கரஞ்சியா இந்தச் சட்ட திருத்தத்தைக் கருப்பு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்தை வன்புணர்வு செய்வது என்றெல்லாம் சாடினார். சட்டதிருத்தங்கள் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.
எதிர்ப்புக்குரியவற்றைப் பதிப்பிப்பது சார்ந்து 1951, 1971-ல் நேரு, இந்திரா அரசுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன. இவை காலனிய சட்டத்தை விடக் கடுமையாகப் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின என்கிறார் சந்திரசூட். எவ்வளவு முன்பணத்தை அச்சகம் செலுத்த வேண்டும் என்கிற வரையறையை விதிக்காமல் இந்தச் சட்டங்கள் அதை அரசை தீர்மானிக்க விட்டன, ஆங்கிலேயர் காலத்தில் வரையறை விதிக்கப்பட்டு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

திமுகவை பிரிவினை முழக்கத்தைக் கைவிட வைத்த சட்ட திருத்தம்:
திமுக அறுபதுகள் வரை திராவிட நாடு/தமிழ்நாடு கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்தது. சீனப்போர், நாகா, பஞ்சாப் பிரிவினை முழக்கங்கள் எல்லாம் சேர்ந்து கொள்ளப் பதினாறாவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் ‘தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை’ சார்ந்து கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம் என்கிற சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்ட சீர்திருத்தத்தைச் செய்யுமாறு சி.பி.ராமசுவாமி ஐயர், காமராஜர் முதலியோர் அடங்கிய தேசிய ஒற்றுமை கமிட்டி பரிந்துரை செய்தது. மேலும், பதவி ஏற்றுக்கொள்ளும் சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையைக் காக்கும் வகையில் இயங்குவேன் என்று உறுதிமொழி ஏற்பதும் கட்டாயமானது. நீதிபதிகளும் இவ்வாறு பதவி பிரமாணம் எடுக்க வேண்டியது கட்டாயமானது. இதன்மூலம் நீதிபதிகள் பிரிவினையை ஆதரிக்கும் பேச்சுகளைக் காப்பாற்ற முடியாமல் தடுக்கப்பட்டது. நரசிம்ம ரெட்டி எனும் உறுப்பினர் முந்தைய தேர்தலில் திமுகத் தந்த கடும் எதிர்ப்பை தாங்க முடியாமல் காங்கிரஸ் அதைப் பழிவாங்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார். சட்ட அமைச்சர் சென் நாகா, பஞ்சாப் பிரிவினை, தெற்கின் போராட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். பூபேஷ் குப்தா என்கிற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அப்போது அமலில் இருந்த அவசரநிலை சட்டத்தைச் சுட்டிக்காட்டி கருத்துரிமை உறைந்து போயிருக்கும் காலத்தில் அது குறித்து விவாதிக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார். மக்களவையில் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அண்ணா ஏழு திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தது கணக்கில் கொள்ளப்படவில்லை என்றார். மாநிலங்களவையில் அண்ணா மட்டுமே சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார். செழியன் சட்டத்தை எதிர்த்துப் பேசுகையில்:

‘தயவு செய்து எங்களோடு வாதிடுங்கள், போட்டி போடுங்கள், எங்களைச் சம்மதிக்க வையுங்கள். நாங்கள் மாறவே மாட்டோம் என்று தெரிந்தால் எங்களை விட்டுவிடுங்கள், மக்களிடம் போய் அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். இதை நீங்கள் செய்தால் தான், அது உண்மையான ஜனநாயகம். வேறு ஏதேனும் செய்வீர்கள் என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகம் இல்லை. அது வேறொன்று.’

என்றார்.
Image result for anna with era sezhiyan
         மேலும் அமெரிக்க உச்சநீதிமன்றம், ‘கருத்துக்களைக் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பது என்பது கல்லறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒற்றுமையை மட்டுமே சாதிக்கிறது.’ என்று அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசினார் செழியன். ஹெச்.என்.முகர்ஜி இறையாண்மை, ஒற்றுமை முதலிய வார்த்தைகள் தெளிவாக இல்லை, அவற்றைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்று கவலை தெரிவித்தார். காமத் ஸ்காட்டிஷ் ஹோம் ரூல் கட்சியைப் போல வன்முறையைத் தூண்டாமல் பிரிவினை பேசி, தேர்தலில் பங்கு கொண்டால் ஏற்பதில் ஒன்றும் தவறில்லை என்றார். வடக்கிற்கும், தெற்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் கோப்ரகடே, பிபுதேந்திர மிஸ்ரா முதலியோர் சுட்டிக்காட்டி பேசினார்கள்.

(ஆபாசம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்ற அவமதிப்பு குறித்த கருத்துரிமை விவாதங்கள் நாளை விரிவாக பேசப்படும்)


……………………………

எல்லா எல்லைகளும் கடந்து எழுக – மகாகவி குவேம்பு


மகாகவி குவேம்பு கன்னடத்தின் பெருங்கவிஞர். அடையாளங்கள் கடந்து மானுடம் பேசியவர். அவருடைய எட்டாண்டு உழைப்பினில் எழுந்த ஶ்ரீ ராமாயணத் தரிசனம் ராமனையும் தீக்குளிக்க வைத்தது. குவேம்புவின் கண்களுக்கு ரோஜா மலர்கள் மன்மதன் முத்தமிட்டு ரதியின் இதழில் இருந்து வழிந்த குருதியாகக் காட்சியளித்தது. சொர்க்கத்தின் கதவுகள் ஹேமியின் காதலன் என்ற போதே எனக்குத் திறக்கும் எனத் தன் மனைவியின் மீதான பேரன்பு மேலிட எழுதினார். ஞானபீடம் முதலிய விருதுகளை வென்ற அவரின் ‘O nanna chetana’ கவிதை தமிழில்

என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும்  கடந்து எழுக!

எல்லா வடிவங்களையும் கடந்து எழுக
ஆயிரம் நாமங்களும், அடையாளங்களையும் கடந்து எழுக
என் உணர்வுகள்  இதயத்தைக் குத்திக்கிழிக்கிறது என்றாலும்
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

ஒரு நூறு சாதிகளின் பதர்களை ஊதி தள்ளுக

தத்துவங்களின் போதாமைகளைக் கடந்து எழுக
என் ஆன்மாவே !
தொடுவானம் தாண்டியும் எழுக
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்தெழுக
Kuppali Venkatappa Puttappa's 113th birthday

முடிவுறாத சாலையில் எங்கும் சோர்ந்து சுணங்கி உறங்காதே
கூடுகள் எழுப்பிக் கட்டுண்டு கலங்காதே
இயன்றதை அடைந்து விட்டு இன்புற்று நிற்காதே
அழியாமல் இரு
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

அழிவற்றது எப்போதும் அழியாது
யோகி அழிவற்றவன் ஆகிறான்
நீ அழிவற்றவன், எப்போதும் அழிவற்றிரு
அழிவற்று இரு இரு இரு இரு
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

தமிழில்: பூ.கொ.சரவணன்