இந்தியா என்கிற கருத்தாக்கம்


ஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.

அரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும். 

Image result for சுனில் கில்னானி

மேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது? ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும். 

(பேராசிரியர் சுனில் கில்நானி)

Image result for சுனில் கில்னானி
இந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள்? இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.

நானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும். 

Image result for இந்தியா என்கிற கருத்தாக்கம்

கைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிரமாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது?

இந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும். 

இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
தமிழில்: அக்களூர் ரவி
சந்தியா பதிப்பகம்
380 பக்கங்கள்
315 ரூபாய்

 

ஒரு அறிமுகம் – கமலா தாஸ்


இந்தியாவின் தனித்துவமான, ஆழமான பெண்ணியக் கவிகளில் முக்கியமானவரான கமலா தாஸ் அவர்களின் சுய சரிதையான ‘என் கதை’ வெளிவந்த நாள் இன்று என்பதை ஒட்டி கூகுள் ஒரு டூடூலை வெளியிட்டு இருக்கிறது. அவரின் சொந்த வாழ்க்கையின் சுவடுகள் கொண்ட ‘ஒரு அறிமுகம்’ கவிதை ஆங்கிலம் வழி தமிழாக்கமாக இதோ:

Celebrating Kamala Das

ஒரு அறிமுகம்- கமலா தாஸ்

எனக்கு அரசியல் தெரியாது, ஆனாலும், நான் பெயர்களையே அறிவேன்
அரசியலில் உள்ளவர்களின் பெயர்களை அறிவேன்
அவற்றை அச்சாரம் பிசகாமல் மீண்டும் மீண்டும் உச்சரிப்பேன்
வாரத்தின் நாட்களைப் போல, மாதங்களின் பெயர்களைப் போல, அவர்கள் பெயர்களை நேருவில் துவங்கி மடமடவென ஒப்பிப்பேன்
நான் இந்தியன், பழுப்பு நிறம், மலபார் மண்ணில் மலர்ந்தவள்
மூன்று மொழிகளில் பேசி, இரண்டில் எழுதி, ஒரு மொழியில் சிந்திப்பவள்
ஆங்கிலம் உன் அன்னை மொழியில்லை, அதனால், அதில் எழுதாதே என்றார்கள்
விமர்சகர்களே, நண்பர்களே, வருகை தரும் உறவுகளே
நீங்கள் எல்லாரும் என்னை ஏன் தனியாக விடக்கூடாது
நீங்கள் அனைவரும் நான் விரும்பும் மொழியில் என்னைப் பேச விடுவீர்களா?
நான் பேசும் மொழி எனதாகிறது
அதன் சிதைவுகள், விபரீதமான வெளிப்பாடுகள்
யாவும் என்னுடையவை, அவை என்னுடையது மட்டுமே
என் மொழி பாதி ஆங்கிலம், பாதி இந்தியன், வேடிக்கையானதும் கூட, என்றாலும், அது சத்தியமானது
நான் எவ்வளவு மானுடம் மிக்கவளோ அத்தனை மானுடம் என் மொழியிலும் வழிகிறது
அம்மொழி எந்தன் ஆனந்தங்கள், காத்திருப்புகள், நம்பிக்கைகளைக் குரலெடுத்துக் கொட்டுகிறது
காக்கைகளுக்குக் கரைதலை போல, சிங்கங்களுக்குக் கர்ஜிப்பதை போல என் மொழி என் பயன் காக்கிறது
அது மனிதரின் பேச்சு
அது மனதின் பேச்சு. அங்குத் தொலையாமல் அருகே தொடரும் பேச்சு அது
விழித்தும், கூர்ந்தும் இருக்கும் மனமது
புயலில் தொலையும் மரங்களின், மழையில் கரையும் பருவகால மேகங்களின்
சிதையில் எரியும் பிணத்தின் கோர்வையற்ற முணுமுணுப்புகளின்
கேளாத, காணாத குரல் அல்ல அது
நான் மழலையாக இருந்தேன்
நான் வளர்ந்து விட்டேன் எனப் பின்னர் அறிவித்தார்கள்
என் தோள்கள் ஊதி பெருத்தன
ஓரிரு இடங்களில் ரோமங்கள் தோன்றின
வேறென்ன கேட்பது என்று தெரியாமல் காதல் வேண்டுமெனக் கேட்ட போது
அவன் பதினாறு வயதினளை படுக்கையறைக்கு அழைத்துப் போய்த் தாழ்ப்பாளிட்டான்
அவன் என்னை அடிக்கவில்லை, என் துயர்மிகு பெண்ணுடல் வதைபட்டதாய் மருகிற்று
என் மார்பகங்களின், கர்ப்பப்பையின் சுமை என்னை நசுக்கியது
நான் பரிதாபமாகச் சுருங்கிப்போனேன்
அதன் பின்….ஒரு சட்டையை, என் தம்பியின் ட்ரவுசரை அணிந்து கொண்டேன்
முடியை வெட்டி, எந்தப் பெண்மையைக் காணாமல் கடந்தேன்
புடவையைப் போர்த்திக்கொள்
பொம்பளையா இரு, பொண்டாட்டியா இரு என்று அவர்கள் சொன்னார்கள்
துணிகளில் வேலைப்பாடுகள் செய்து வீழ்ந்து போ
சமையல்காரியாய் இரு, வேலையாட்களோடு சண்டையிடு
அனுசரித்துப் போ என்று கத்தினார்கள் வகைப்படுத்துபவர்கள்
சுவர்களில் அமராதே
திரைச்சீலைகள் மூடிய சன்னல்களுக்குள் ஊடுருவி பார்க்காதே
ஆமியாய் இரு இல்லை கமலாவாய் இரு
இல்லை மாதவிக்குட்டியாகவே இரு
எதோ ஒரு பெயரை, எதோ ஒரு வேடத்தைத் தேர்வு செய்யும் நேரம் நெருங்கிவிட்டது
கண்ணாமூச்சி ஆட்டங்கள் ஆடாதே
மனச்சிதைவோடு மற்போர் புரியாதே
பெருங்காமம் கொண்ட பெண்ணாகாதே
காதலன் கைவிட்டு அகல்கையில் அழுதழுது அவமானம் கூட்டாதே
நான் ஒரு ஆடவனைக் கண்டேன்,காதலித்தேன்
அவனை எப்பெயர் இட்டும் அழைக்க வேண்டாம்
அவன் எல்லா ஆடவரை போன்றவன்
அவர்களைப் போல அவனுக்கு ஒரு பெண் தேவை
எப்படி ஒவ்வொரு பெண்ணைப் போலவும் பிரியம் நாடி நான் பசலை கொள்கிறேனோ
நதியின் பெரும்பசி பிரவாகம் என்னுள்
ஓயாத அலைகடலின் காத்திருப்பு
நீ யார் என்று அனைவரையும் கேட்கிறேன்
விடை இது தான். நான் தான் அது
தன்னைத்தானே அழைப்பவர்களை இந்த உலகம் முழுக்கக் கண்ணுறுகிறேன்
உறைக்குள் வாள் போல உறைந்து இருக்கிறான்
நான் தனித்துக் குடிக்கிறேன்
நள்ளிரவில், உணவு விடுதிகளில், புதிரான நகர்களில் குடித்துக் கிடக்கிறேன்
நான் தான் சிரிக்கிறேன், நானே காதல் லீலைகள் புரிகிறேன்
பின்னர் நானே அவமானம் கொள்கிறேன்
பொய்கள் பேசி, தொண்டைக்குள் விம்மியபடி பொய்களோடு பிணமாகிறேன்
நானே பாவி, நானே புனிதர்
நான் பிரியத்துக்கு உரியவள்
துரோகங்கள் தாங்குபவள்
உனக்கில்லாத பேரின்பங்கள் எனக்கும் இல்லை
உனக்கில்லாத வலிகள் எனக்குமில்லை
நானே என்னை நான் என அழைத்துக்கொள்கிறேன் .

Image result for MADHAVIKUTTY

தமிழில்: பூ.கொ.சரவணன்