காந்தியார் சாந்தியடைய : நூல் அறிமுகம்


2009-ம் ஆண்டின் இறுதி கணங்கள் அவை. வெறுப்பும், அசூயையும், சென்னை மாநகர் தந்த பதற்றமும் என்னை விழுங்கி கொண்டிருந்த படப்படப்பான கணங்கள் அவை. காந்தியை ஏதேதோ காரணங்களுக்காக வெறுக்கப் பழகியிருந்தேன். அவர் குறித்து ஒரு வார்த்தை நல்லதாகக் கேட்டாலும், கடுமையான மொழியை, பதட்டம் நிறைந்த விமர்சனங்களை, கண்மூடித்தனமான காழ்ப்பை கொட்டிய காலம். ஊருக்கு போக வேண்டிய சூழலில் கன்னிமாரா நூலகத்தில் இருந்து காந்தியார் சாந்தியடைய எனும் நூலை எடுத்துக் கொண்டேன். நூலின் தலைப்பில் ‘தடை செய்யப்பட்ட எழுத்தும், காலமும்’ என்கிற தலைப்பு இருந்தது ஈர்ப்புக்குக் காரணம்.

பேருந்தில் ஏறிக்கொண்டேன். உட்கார இடமில்லை. நடக்கிற பாதையில் கால் வலிக்க உட்கார்ந்து விட்டேன். அப்படியே தூங்கி விடலாம் என்று கூடத் தோன்றியது. மருவத்தூர் வரும் வரையில் ஓட்டுவோம் என்று பைக்குள் கைவிட்டு எடுத்ததும் இந்த நூல்தான் கையில் கிடைத்தது. கொஞ்ச நேரம் படிப்போம் என்று கையில் எடுத்து உட்கார்ந்தேன்.
மெதுவாகவே வாசிக்கிற பழக்கம் கொண்ட நான், நான்கு மணிநேர பேருந்து பயணம் முழுக்க அந்த நூலில் மூழ்கிப்போனேன். அந்த எழுத்து நடை, வரலாற்றை நெருக்கமாகக் கண் முன் நிறுத்தும் மொழி, காந்தியோடு வகுப்புவாத களத்துக்கு அழைத்துப் போகும் நூல் பகுப்பு எல்லாமே அசரடித்தன.

காந்தி ஒழிக்கப்பட வேண்டிய சக்தி என்று பெரியார் தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், காந்தியின் படுகொலைக்கு அடுத்து, பெரியார் உணர்ச்சிவசப்பட்டார். இருந்தது ஆரிய காந்தி, இறந்தது நம் காந்தி என்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிற்குக் காந்திஸ்தான் என்று பெயரிட வேண்டும் என்று கூட வலியுறுத்தினார். எந்தக் காந்தி ஒழிய வேண்டும் என்று ஓயாமல் இயங்கினாரோ, அதே காந்திக்கு திராவிட இயக்கத்தின் சார்பாக இரங்கல் கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடத்தப்பட்டன. ‘காந்தியார் சாந்தியடைய’ என்கிற பன்னிரெண்டு பக்க நூலை ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதினார். மதவாதிகளை மிகக்கூர்மையாக எதிர்கொண்ட அந்த நூல் தடை செய்யப்பட்டதோடு, நூல் ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத்தைக் கட்டத்தவறினால் கடுங்காவல் தண்டனைக் காலம் கூட்டப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. சிறையில் அவருக்கும், நூலை வெளியிட்டவர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. அது திராவிட நாட்டில் அட்டைப்படமாக வெளிவந்தது.

இந்தப் பதட்டமும், எதிர்ப்பும் மிகுந்த பிரிவினை, காந்தி படுகொலை காலத்தை இந்துஸ்தான், பாகிஸ்தான், காந்திஸ்தான் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு நூல் அலசுகிறது. ஒரே ஒரு நூல், மனதில் அப்பிக்கிடந்த அத்தனை வெறுப்பையும் அடித்துக் கொண்டு போகக்கூடும் என்பதைக் கண்டடைந்த நாள் அது. நீங்களும் மதவாதத்தைக் காந்தி எதிர்த்த அந்த மகத்தான வரலாற்றை, அதில் திராவிட இயக்கமும் கைகோர்த்துக் கொண்ட காலத்தைப் படித்துணருங்கள். நூல் வெகு காலத்திற்குப் பிறகு மறு பதிப்புக் கண்டிருக்கிறது.

https://www.commonfolks.in/books/d/gandhiyar-saanthiyadaiya-parisal

பக்கம் 158 விலை 160
காந்தியார் சாந்தியடைய
ப.திருமாவேலன்
நூலை பெற 9382853646/8778696612

கச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டுமா?


அன்புள்ள மனிதா!

நீ எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறாய்.

எதிர்பார்ப்பில்லாமல் அன்பை பொழிவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள நீ பிறப்பெடுக்கவில்லை. நீ அளவில்லாத அன்பிலே அல்லவா பிறந்தாய். அங்கேயே நீ திரும்பச் செல்வாய்

பிறகு ஏன் இங்குப் பிறந்தாய்?
தனிநபர் மீது தன்னிகரிலா அன்பு பொழிவதை கற்க பிறந்தாய்
உலக அன்பை உணர்ந்திட வந்தாய்
சிக்கல்கள் மிகுந்த பேரன்பை பற்றிக் கற்றிட வந்தாய்
பைத்தியக்கார பேரன்பை பற்றி அறிய பிறந்தாய்
உடைந்த காதலை உய்த்து அறிய உயிர் பெற்றாய்
முழுமையாகப் பிரியத்தைப் பருகிட வந்தாய்
தெய்வீகம் ததும்பும் அற்புதம் அது
அன்பினுள் நயத்தோடு தடுமாறிக்கொண்டே வாழ்வாய்
அத்தனை பேரன்பையும் குழப்பங்கள் விளைவித்து விரித்துரைப்பாய்

நீ கச்சிதமாகக் காதல் புரிய இங்கு வரவில்லை. நீ் கச்சிதமானவளே/னே

இங்கு மனிதனாக மாறி அழகாகக் காதல் புரிக. பிழைகளால்
சிறக்கட்டும் நின் பிரியம்.

காதலின் நினைவுகள் ஏந்தி கசிந்துருகி மீண்டெழுக

ஆனால், எதிர்பார்ப்புகளற்ற காதல் என்கிற கட்டுக்கதையை என்னிடம் சொல்லாதே

உண்மையைச் சொல்லவா? காதல் அலங்காரச்சொற்கள் நாடி அலைவதில்லை
அதற்குப் புகழ்மாலைகள் தேவையில்லை
கச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டும் என்பதில்லை

அது உன் காதலை கட்டுடைத்து காட்டு என்கிறது
அத்தனை பிரியத்தையும் பொழியச்சொல்கிறது
இந்தக் கணத்தில் மட்டும் வாழ்ந்தபடி, முழுமையாகக் காதல் செய்க எனக்கேட்கிறது

காதல் என்ன சொல்கிறது தெரியுமா?
காதலிப்பவளே/காதலிப்பவனே!
நீ ஜொலித்திடு, பறந்திடு.
நீ புன்னகை. நீ அழு.
காயப்படு, மீண்டு வா. விழுந்திடு, எழுந்து நில்.
ஆடிக்களித்திடு, உழைத்திடு.
நீ நீயாகவே வாழ்ந்திடு.
நீ நீயாகவே மரித்திடுக.

அது போதும்.
அதுவே அதீதமானது. – Courtney A Walsh

தமிழில்: பூ.கொ.சரவணன்.

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?


எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

(“என்னால் எம்.ஜி.ஆராக ஆக முடியாது; ஆனால், எம்ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்” என்று அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் ஆட்சி உண்மையில் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இங்கே பிரசுரிக்கப்படுகிறது. பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ள ‘Image Trap’ நூலிலிருந்து எடுத்தாளப்படும் கட்டுரை இது. )

எம்.ஜி.ஆரின் மீது அடித்தட்டு வர்க்கம்கொண்ட அரசியல் பக்திக்கான காரணம் தன்னுடைய 11 வருடகால ஆட்சியில் அவர் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அல்ல என்பது புரியாத புதிராகும். அவருடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் எந்த முக்கியமான கட்டமைப்பு மாற்றமோ, ஏழைகளின் துயரங்கள் பெருமளவில் குறைவதோ நிகழவில்லை. தமிழ்நாடு அரசு எப்படித் தன்னுடைய நிதி மூலங்களைத் திரட்டியது, அவற்றை எப்படிச் செலவிட்டது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு, எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசு ஏழைகள் (மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்) மீது வரி போட்டுப் பணக்காரர்கள், கிராமப்புறச் செல்வந்தர்கள் பயன்பெறுமாறு செயல்பட்டது என்பதை விளக்குகிறது. (1)

ஏழைகளின் மீது சுமத்தப்பட்ட வரி

1975-85 வருடகாலத்தில் அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவிகிதம் விற்பனை வரியிலிருந்தே பெறப்பட்டது. இதில் பெரும்பான்மையான விற்பனை வரி நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் நுகர்வோர் பொருள்களான பருத்தி, இழைகள், மருந்துகள், பருப்பு வகைகள் தேயிலை, கரும்பு, மின்னணுப் பொருள்கள் மற்றும் சோப் மீதான வரிவிதிப்பு மூலமே பெறப்பட்டது. ஏழைகள் அதிலும் கொடிய வறுமைக்கு உள்ளான ஏழைகள் தங்களுடைய பயன்பாட்டை உணவு, அடிப்படைத் தேவைகளோடு நிறுத்திக்கொண்டதால் விற்பனை வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. 1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது. இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதற்கு நேர்மாறாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பணக்கார வர்க்கத்தினர் பெருமளவில் வரிவிதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிக்க அனுமதித்தது. நேரடி வரிகளான நில வரி, விவசாய வருமான வரி, நகர்ப்புற நில வரி முதலிய செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானமானது 1975-80 வருட காலத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் வெறும் 4.6 சதவிகிதம் மட்டுமே ஆகும். அடுத்த 1980-85 வருட காலத்தில் இந்த வரிகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் வெறும் 1.9 சதவிகிதத்துக்கு வீழ்ந்துவிட்டது. மேலும், 1960-65 வருட காலத்தில் நேரடி வரியின் மூலம் பெறப்பட்ட வரி வருமானமானது ஒட்டுமொத்த வரி வருமானத்தில் 15.5 சதவிகிதம் என்கிற பெரிய அளவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுச் செல்வந்தர்களின் சொத்துகளின் மீதும், வருமானத்தின் மீதும் நேரடி வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் செலுத்திய தாக்கம் வெகு சொற்பமானது.

… ஒட்டுமொத்த விவசாயத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் நேரடி வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே இக்காலத்தில் இருந்துவந்துள்ளது. உண்மையில் 1960களில் இருந்த 1.9 சதவிகிதத்திலிருந்து 1970களில் 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. விவசாய வருமானத்தின் மீதான நேரடி வரிவிதிப்பு முக்கியத்துவம் அற்றதாக மாறியது. விவசாய வருமானம் புதிய தொழில்நுட்பங்கள், பம்ப் செட்கள் வளர்ச்சியால் பெரிய விவசாயிகள் பலனடைந்த அக்காலத்தில் நேரடி வரிவிதிப்பு மேலும் குறையவே செய்தது. 1980களில் இந்தக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.

பணக்காரர்களுக்குப் பலன் தந்த ஆட்சி

எம்.ஜி.ஆர் ஆட்சி ஏழைகள் மீது வரிவிதித்து வாழ்ந்தது என்றால், அது பணக்காரர்களுக்குப் பலன் தந்தது, குறிப்பாக நிலவளம் மிகுந்த கிராமப்புறப் பணக்காரர்கள் பொதுச் செலவுகளின் மூலம் பலன் பெற்றார்கள். விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மானிய மின்சாரம் ஓர் எடுத்துக்காட்டாகும். விவசாயப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை எம்.ஜி.ஆர் அரசு 1979 வருடத்திலிருந்து படிப்படியாகக் குறைத்தது. இந்தப் பெரிய அளவிலான மானியத்தால் தமிழக மின்சார வாரியத்துக்கு ‘சராசரியாக 1980-85 காலத்தில் 150 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது. இதே காலத்தில் இந்த இழப்பீட்டு அளவு இரு மடங்கு அளவுக்கு அதிகரித்தது.’ இதேபோல, அரசு பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்திருந்த பொது நீர்ப்பாசன வசதிகளை மிகக் குறைந்த கட்டணங்களில் விவசாயத் துறை பயன்பாட்டுக்கு விட்டது.

ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயத் துறைக்கு மாநில அரசு வழங்கிய மானியம் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு வருடமும் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் போராட்ட அரசியலைத் தேவைப்படுகிறபோது பம்ப் செட் உரிமையாளர்களான பணக்கார விவசாயிகள் மேற்கொண்டார்கள். பலம் பொருந்திய அழுத்தக் குழுவாகத் திகழ்ந்த இவர்களுக்கே இந்தச் சலுகைகள் பெருமளவில் பயன் தந்தன.

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது என்று பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள். சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள். அஇஅதிமுக அரசின் முறையற்ற தனித்துவமான மதுக் கொள்கையானது தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ளும் டாஸ்மாக் அமைப்புக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களையே விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது. சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன. (2) லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. (3)

ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள்

பட்ஜெட் செயல்பாடுகளில் மட்டும் அஇஅதிமுக அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள் நின்றுவிடவில்லை. மற்ற கொள்கை சார்ந்த விஷயங்களிலும் ஏழை மக்களின் சிக்கல்களை அணுகுவதிலும் இரக்கமும் அறிவும் அற்றதாக அது நடந்துகொண்டது. 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது. (4) 1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது. (5)

இப்படி ஒருபக்கச் சார்பான பொருளாதாரக் குறுக்கீடுகளால் ஏற்பட்ட கட்டமைப்பு சார்ந்த விளைவுகள் கண்ணைக் கூசும் அளவுக்கு வெளிப்பட்டன. அதிகாரபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை. (6) மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது. 1972-73 & 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது. இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது. (7)

இப்படிப்பட்ட சமத்துவமின்மைகளோடு எண்ணற்ற மக்களை ஈர்க்கும் வகையில் 1982இல் பெருத்த ஆரவாரத்தோடு தொடங்கப்பட முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் முதலிய புகழ்பெற்ற பொருளாதாரத் திட்டங்களும் இணைந்தே இயங்கின.

ஜூலை 1982 முதல் பால்வாடி, நர்சரிகளில் பதிவு செய்துகொண்ட பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள இரண்டு வயதிலிருந்து இருக்கும் கிராமப்புறக் குழந்தைகள், பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளிக்குச் செல்லும் 38 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை என்கிற அளவில் வருடம் முழுக்கச் சத்துணவு வழங்கப்பட்டது. 56 லட்சம் பேர் திட்டம் தொடங்கப்பட்டபோது பங்கேற்றார்கள். செப்டம்பர் 1982இல் நகர்ப்புற குழந்தைகளுக்கும், மெட்ராஸ், மதுரை, கோவை பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 6.5 லட்சம் குழந்தைகள் இணைக்கப்பட்டார்கள். இரு மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே இருந்த கட்டமைப்பைக்கொண்டு மாதமொரு முறை பல்பொடி விநியோகிப்பட்டது.

… ஜனவரி 1983இல் முதியோர் ஓய்வுநிதி பெறுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள் இவர்களால் இன்னுமொரு 1.9 லட்சம் நபர்கள் கூடுதலாக இணைந்தார்கள். ஒரு வருடம் கழித்து முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் இலவச உணவு பெறத் தகுதி உடையவர்கள் ஆனார்கள். (8)

இதுவும், இதைப் போன்ற அளவில் சிறிய அரசியல் முதலீடுகளும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. அவை பொருளாதாரத்தின் கட்டமைப்பில் எந்த வகையான பெரிய மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. இவற்றுக்கான நிதி மூலங்கள் ஏழைகளிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தின் மூலமே சாத்தியமானது, இவை வருமானம், சொத்து ஆகியவற்றைப் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதில் மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தின.

சுருக்கமாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால், பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஒன்றாகும்.

அடிக் குறிப்புகள்:

1. இப்பகுதியின் விவரங்கள், வாசகங்கள் உட்படப் பெரும்பாலானவை எஸ்.குகன் (1988) தமிழ்நாட்டின் மாநில நிதிகள்: 1960-85: போக்குகள், கொள்கை பற்றிய மறுஆய்வு. செயற்தாள் 77, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்டல் ஸ்டடிஸ், மெட்ராஸ்.

2. இந்தியா டுடே, 31 மார்ச் 1989; அசைட் 15, மார்ச் 1989

3. அசைட் 15 மார்ச் 1989; அசைட் ஜூன் 16, 1988.

4. துக்ளக் 1 மார்ச் 1987

5. இந்தியன் எக்ஸ்பிரஸ், 3 பிப்ரவரி 1987

6. மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட்டல் ஸ்டடிஸ், 1988: 345

7. மேலே குறிப்பிட்டுள்ள அதே புத்தகம்

8. பார்பரா ஹாரிஸ், (1988) தென்னிந்தியாவில் உணவு, மதிய உணவு: உணவு, தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற உணவு பொருளாதாரத்தில் ஊட்டச்சத்துக் கொள்கை. விவாதத்தாள் 31, வளர்ச்சி ஆய்வுப்பள்ளி, கிழக்கு ஆங்க்லியா

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1958-2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துகளையும் தமிழகத்துக்கு வெளியே காத்திரமான முறையில் விரிவாக முன்வைத்தவர் இவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சினைகள், சாதியச் சிக்கல்கள், தமிழ்த் திரைப்படங்கள் எனப் பல துறைகளிலும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களிடம் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர். தமிழின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்தவர்.)

 

(இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய ‘Image Trap’ நூலின் தமிழாக்கமான ‘பிம்பச் சிறை’ நூலின் (பிரக்ஞை பதிப்பக வெளியீடு) இரண்டாம் அத்தியாயத்திலிருந்துவெளியிடப்படுகிறது. தமிழில்: பூ.கொ.சரவணன். )

சிரியாவும், புதுயுக நாத்திகர்களும்


சிரியாவும், புதுயுக நாத்திகர்களும்- ஆர்.வி.சுரேஷ்.
புது யுக நாத்திகர்ளுக்கும், பெரியார், மார்க்ஸ் போன்ற நாத்திகர்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. பெரியார், மார்க்ஸ் முதலானோர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிணங்களைப் பயன்படுத்தித் தங்களுடைய நாத்திக கருத்துக்களை, மதம் குறித்த விமர்சனங்களை அவர்கள் பரப்பவில்லை. ‘Pray for Syria’ என்று ஹாஸ்டேக் பரவுவவதை பல்வேறு மீம்களின் மூலம் புது யுக நாத்திகர்கள் எள்ளி நகையாடுகிறார்கள். எங்கும் நிறைந்திருப்பதாக ஆத்திகர்கள் சொல்லிகொள்ளும் கடவுளின் இயலாமையைக் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். இல்லாத ஒருவரிடம் மன்றாடுவதால் என்ன பயன் என்று நகைக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் உண்மையாக இருக்கலாம். ஆனால், புது யுக நாத்திகர்கள் பிணங்களைக் கொண்டு தங்களுடைய கருத்துக்களைப் பரப்ப முயல்வது கண்ணியமற்ற செயலாகும். இச்செயல் மக்களை அழித்தொழித்த அநியாயத்தை விட அநீதியானது ஆகும். இது வீழ்ந்து போன உயிர்களுடைய மானுட மேன்மையை அபகரிக்கிறது. இந்தப் புது யுக நாத்திகர்களைப் பொறுத்தவரை தங்களுடைய கருத்துககளைப் பரப்பும் கருவிகளாக மட்டுமே உயிரிழந்த மக்கள் மாறுகிறார்கள். இதனால் தானோ என்னவோ, எல்லா நாத்திகர்களும் கருணை மிக்கவர்களாகவோ, மனிதநேயர்களாகவோ (அவர்கள் இப்படித்தான் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்) இருக்க வேண்டியதில்லை எனக் கருத வேண்டியிருக்கிறது. இந்த இரக்கமற்ற வெறியர்கள் தங்களுடைய தட்டையான நாத்திகத்தைத் தங்களுடைய பெற்றோர்கள், உடன்பிறந்தோர், உறவினர்கள் பிணங்களைக் கொண்டு பரப்புவார்களா என வியக்கிறேன். இந்தப் புது யுக நாத்திகவாதிகளும் கூடத் தேவை ஏற்படுகிற போது தங்களுடைய வாழ்க்கையிலும், வீடுகளிலும் மதச் சடங்குகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம்.
இந்த இடத்தில் தான் தங்களை அறிவுமிக்கவர்களாகக் கருதிக்கொள்ளும் போலியான இக்கூட்டத்திடம் இருந்து மார்க்ஸ், பெரியார் முதலானோர் முரண்படுகிறார்கள். மார்க்ஸ், ‘மத அவலமானது ஒரே வேளையில் உண்மையான அவலத்தின் வெளிப்பாடாகவும், அந்த உண்மையான அவலத்திற்கெதிரான எதிர்ப்பாகவும் திகழ்கிறது. மதம் ஒடுக்கப்பட்ட மனிதனின் ஏக்கப்பெருமூச்சாக, இதயமற்ற உலகத்தின் இதயமாக, ஆன்ம உயிர்ப்பற்ற சூழல்களின் ஆன்மாவாக உள்ளது. அது வெகுமக்களின் அபின்.’ என்றார். பெரியாரும் புது யுக நாத்திகவாதிகளிடம் இருந்து வேறுபடுகிறார். தனக்கு உண்மையான அன்போடு விபூதியை வழங்கிய உற்ற தோழரின் நேசத்தை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட மூடத்தனமான மத வழக்கங்களை அயராது எதிர்த்து களமாடிய பெரியார், விபூதியை தன்னுடைய நெற்றியில் பூசிக்கொள்ளத் துளியும் தயங்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களான மார்க்ஸ், பெரியாரின் கருத்துக்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் பிணங்களைக் கொண்டு நாத்திகத்தைப் பரப்பும் ஈவிரக்கமற்ற பரப்புரைகளை நான் கண்டதில்லை.
இப்படிப்பட்ட சூழல்களில், ஒரு அரசியல் கருத்தை கட்டி எழுப்பவதே கொடூரமான செயலாகத் தோன்றுகிறது. இவர்கள் உண்மையில் ஆதரவற்ற இறந்து போன அம்மக்களின் இறப்புக் குறித்துக் கவலைப்படுகிறார்களா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. எப்போது சாவார்கள், எப்போது பரப்புரையைத் தீவிரமாக மேற்கொள்ள முடியும் என்று இவர்கள் காத்து கொண்டிருந்ததைப் போல இருக்கிறது. இவர்களுக்கு நசுக்கப்பட்ட ஆன்மாக்களை விட, தங்களுடைய நாத்திக பரப்புரையே முக்கியமானதாக இருக்கிறது போல. ஒருவருக்கு உண்மையாகவே சிரியாவில் இறந்து போயிருக்கும் மக்கள் குறித்து அக்கறை இருக்கும் என்றால், தங்களுடைய ஒட்டுமொத்த கோபத்தையும், விமர்சனத்தையும் அதற்குக் காரணமான சக்திகளின் மீது தானே தொடுக்க வேண்டும்? ஏதேனும் அதிசயம் நடந்து அம்மக்கள் காப்பாற்றப்பட மாட்டார்களா என நெக்குருகி பிரார்த்திப்பவர்களைக் குத்தி கிழிக்க மாட்டார்கள். மனிதனின் இயலாமையின், காயங்களின் படைப்பு தானே இறைவன்? தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கட்டுப்படுத்த முடியாத ஆற்றாமையில் தானே கடவுளை மனிதன் உருவாக்கினான்? துளியும் அதிகாரமற்ற இறைநம்பிக்கை உள்ள இம்மக்களின் ஹாஷ்டேக்குகள் சிரியாவின் மக்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்கிற உளமார்ந்த ஏக்கத்தின் வெளிப்பாடே அன்றி, தங்களுடைய இறைநம்பிக்கையைப் பரப்புவது அவர்களின் நோக்கமில்லை. இதைக்கூடப் பகுத்து உணர முடியாத அறிவால் என்ன பயன்? ஆத்திகர்களின் இந்த இறைஞ்சல்களுக்குப் பின்னால் இருப்பது அன்பும், அக்கறையும் மட்டுமே. அதனை அவர்கள் கொட்டித்தீர்ப்பதை நாம் தடுக்கக் கூடாது.
இந்தக் கொந்தளிப்பான தருணத்தில் இப்படி நடந்து கொள்வது சரியானது இல்லை. இந்த அணுகுமுறை துளியும் இரக்கமற்ற ஒன்றாகும். இவற்றை எல்லாம் இந்தப் புது யுக நாத்திகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்று எண்ணிக்கொண்டு, தங்களுடைய வாய்ப்புகளால் ஆன வசந்த மாளிகையில் இருந்து கொண்டு அனைத்தையும் அணுகுவது சரியல்ல. ஒருவேளை இவைதான் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கின்றனவோ என்னவோ – Suresh RV
தமிழில்: பூ.கொ.சரவணன்

இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா?


சிறப்புக் கட்டுரை: இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா?

இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா

புதுக்கோட்டை துணை ஆட்சியர் சரயு மோகனசந்திரன்

நான் இங்குத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. அப்போதிலிருந்து ஒவ்வொரு வரதட்சணை சாவும், ஆய்வும், விசாரணையும் ஏற்படுத்தும் வலி என் இதயத்தை ஓயாமல் ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இங்கே பொறுப்பேற்ற முதல் பத்து நாட்களில் மட்டும் ஐந்து சந்தேகத்துக்குரிய மரணங்கள்.

எந்தப் பெண்ணாவது தனக்குத் திருமணமான முதல் ஏழு வருடங்களுக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணம் அடைந்தால் அதனை விசாரித்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட துணை ஆட்சியருக்கு உண்டு. இப்படி ஒவ்வொரு முறை விசாரணை நடத்துகிற போதும், நான் உணர்ச்சிப் பெருக்கில் தத்தளிக்கிறேன். இந்தப் பணியில் ஈடுபடக் கிளம்புவதற்கு முன்பு, என் காதில் விழுந்த அறிவுரைகள் எல்லாம், ‘நீ ஒரு அதிகாரியாக உன் கடமையை நிறைவேற்றுகிறாய். அதனால் உணர்ச்சிவசப்படாமல் இரு.’ என்று நீண்டன. ஆனாலும், ஒவ்வொரு முறையும் ஒரு பிணவறையின் கதவருகே நிற்கையிலும் எனக்குள் பல்வேறு எண்ணங்கள் அலையடிக்கின்றன.

என்ன ஆயிற்று இந்தப் பெண்களுக்கு?

நான் நிம்மதியாகத் தூங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. காயத்ரியின் மரணம் IPC 174இன் கீழ் பதியப்படும் 12ஆவது வழக்கு. அவளுடைய வாழ்க்கை குறித்தும், அதன் நினைவுகள் ஏன் என்னைக் கலங்க வைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதைக் குறித்தும் பிறகொரு நாள் விரிவாகச் சொல்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டு, எனக்கு இந்த வழக்குகளில் தூண் போல உறுதுணை புரியும் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.ராம்குமாரை அழைத்தேன்.

மனதளவில் உடைந்துபோய், குரல் கம்ம அவரிடம், “இந்தப் பொண்ணுங்களுக்கு என்னதான் ஆச்சு டாக்டர்?” எனக்கேட்டேன்.

“எனக்குத் தெரியலை மேடம். உங்களைப் போலத் தான் நானும் திகைச்சு நிக்கிறேன்” என்றார் அவர்

நாங்கள் காயத்ரியின் மரணம் குறித்தும், அவளின் சாவை சுற்றிச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் குறித்தும் விரிவாகப் பேசினோம்.

“இதுக்கெல்லாம் எதாச்சும் பண்ண முடியுமா? கவுன்சிலிங் இல்லைனா விழிப்புணர்வு முகாம்கள் எதாச்சும்…” என்று இறுதியாகக் கேட்டேன்

என் கண் முன்னே அந்தப் பெண்களின் முகங்கள் நிழலாடின. இப்பெண்கள் என்னைவிட வயதில் இளையவர்கள். திருமணமாகி, பால் மணம் மாறாத பிஞ்சுகளின் அம்மாக்கள். இப்போது வாழ்க்கையை முடித்துக்கொண்டு விட்டார்கள். பிணவறையில் ஃபார்மலின் வாசனைக்கு இடையே நான் நடக்கிறேன். என் காதுகளுக்குள் வேறு யாருக்கும் கேட்காத குரல்கள் ஒலிக்கின்றன. அவை தங்களுக்கான நீதிக்கு இறைஞ்சும் கெளரி, ரேவதியின் குரல்கள். என் கனவுகளில் இவர்களின் மழலைகள் தங்களுடைய அம்மா இனி திரும்ப வரவே மாட்டார் என்று தெரியாமல் ஓலமிட்டு அழுகின்றன.

“நீங்க கவனிச்சீங்களானு தெரியலை மேடம். நாம பாத்த பெரும்பாலான கேஸ்களில் தற்கொலை முடிவை மாதவிடாய் (பீரியட்) சமயத்திலதான் பெண்கள் எடுத்திருக்காங்க” என்றார் டாக்டர்.

நான் விக்கித்து நின்றேன்.

“நான் பாத்த 90% கேஸ்களில், எந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டாங்களோ, அவங்க எல்லாரும் மாதவிடாய் காலத்தில் தான் இருந்திருக்காங்க. இப்படிப்பட்ட நேரத்தில அந்தப் பொண்ணுங்களுக்கு என்னலாம் ஆகுதுன்னு யாருக்காச்சும் புரியுது, தெரியுதுன்னு எனக்குத் தோணலை. இந்த நேரத்தில் எல்லாம், கோபம் ரொம்பப் பொத்துகிட்டு வரும், அது போக ஒரே விரக்தியா இருக்கும். இது எல்லாத்தை விடக் கொடுமை என்ன தெரியுமா? அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க இது எதையும் புரிஞ்சுக்காம உயிரை எடுப்பாங்க. இதனால் மனசு உடைஞ்சு போயிடும். நாம பாத்த பெரும்பாலான தற்கொலைகளில் அப்போதான் அவங்களுக்குக் குழந்தையே பிறந்திருக்கு. பிரசவத்துக்குப் பின் ஏற்படுற மனச்சோர்வு பத்தி நமக்கு யாருக்கும் புரிஞ்சுருக்கானே தெரியல.” என்றார் டாக்டர்.

மாதவிடாய் தரும் மனச்சுமைகள்

இங்கே தான் நம் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறோம். நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும், கட்டுப்பாடுகளும் மாதவிடாய், அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம், புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது. இதனால், எதைக் குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ, அது குறித்துப் பேச மறுக்கிறோம். இந்த மாதவிடாய் நாட்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் வேதனை சொல்லி மாளாது. மாதவிடாய் நெருங்கும்போது, மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள் குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை. பள்ளிக் காலத்தில் எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், மாதவிடாய் தலைப்பை எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்தார். வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று ஒரு பெரிய பாடப்புத்தகத்தின் இன்னுமொரு பக்கமாக முடிந்து போனது.

இதைப் புரிந்துகொள்ளாமல் போனதற்காக எல்லா ஆண்களையும் நான் நிச்சயம் குறை சொல்ல மாட்டேன். தங்களுடைய அம்மாக்கள், தங்கைகள், தோழிகள் என்று பலரின் சீற்றத்தை இந்த மாதவிடாய் நாட்களில் எதிர்கொள்கிறார்கள். அப்பெண்களால் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை எதிர்கொள்ள ஆண்களாலும் முடியாமல் போகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று அந்த ஆண்கள் கேள்வி கேட்கிறபோது, நம்முடைய மனமும், உடலும் என்ன பாடுபடுகிறது என்று சொல்லாமல் அவர்களைக் கடுமையாகப் புறக்கணிக்கிறோம். இப்படி அதீதமான சிக்கல்கள் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், அப்படி ஏற்படுகிற போது அது குறித்து மனந்திறந்து பேசுவது முக்கியமானது. அப்போது தான் நம்மை இன்னமும் முதிர்ச்சியோடு நடத்தும் சமூகத்தைக் கட்டமைக்க முடியும். என்னுடைய குடிமைப்பணி தேர்வு தயாரிப்புக் காலங்களில் தான், இந்தக் காலங்கள் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்து கொண்டேன்.

உங்களுடைய அன்னையை, சகோதரியை, தோழியை இன்னமும் ஆழமாக, தெளிவாகப் புரிந்துகொள்கிறபோது அவர்களை மென்மேலும் நேசிக்க முடியும். அவர்களின் இயல்பான நடத்தை மாறி, அவர்கள் அடக்க முடியாத கோபத்தைக் கொட்டும்போது அவர்களின் ஹார்மோன்கள் உயிரை வதைக்கின்றன என உணர்ந்துகொள்ளுங்கள். நாம் மனந்திறந்து, “நான் மாதவிடாய் காலத்தில (பீரியட்ஸ்ல) இருக்கேன். எனக்குச் சட்டுன்னு கோபம் வருது, பட்டுன்னு சோகமாயிடுறேன்” என்று சொல்வதால் நம்மை யாரும் துளிக்கூட மரியாதைக் குறைவாக நடத்தப்போவதில்லை.

கருப்பையில் பல கட்டிகள் தோன்றுவது, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மனசிதைவுகள் குறித்துப் போதுமான விழிப்புணர்வை ஆண்கள், பெண்கள் இருவரிடமும் ஏற்படுத்த வேண்டும். நம் அனைவருக்குமான சமூகத்தை அப்படித்தான் வளர்த்தெடுக்க முடியும். பெண்களாக, இந்த ஆண்களிடம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கூச்சப்பட வேண்டாம். என்னை நம்புங்கள். ஒவ்வொரு ஆணும்- தகப்பனும், தமையனும், தோழனும் அளவற்ற அன்போடு உங்களுக்குத் தோள்தரவே விரும்புவார்கள்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

மூன்று பில்போர்ட்களோடு ஒரு கொலையாளியை தேடுவது எப்படி?


நீதி என்பது எளியவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருக்கிறது. படியேறவே முடியாதவர்கள், போராடி களைத்தவர்கள், தோள் சாயக்கூட ஆளில்லாதவர்கள் எப்படி போராடுகிறார்கள்? வெறுப்பு மட்டும் தான் காயப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட மனிதர்களை செலுத்துகிறதா? Three billboards in Ebbings  திரைப்படம் இந்த கேள்விகளை தாங்கி மறக்க முடியாத திரை அனுபவத்தை தருகிறது.

மில்ட்ரெட் எனும் பெண்ணுடைய மகள் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்படுகிறாள். பல மாதங்கள் ஆகியும் வழக்கில் துளி கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கிறது. மூன்றே பில் போர்ட்களில் விளம்பர வாசகங்களை எழுதுவதாக காட்டிக்கொண்டு காவல்துறையை எள்ளி நகையாடுகிறார் மில்ட்ரெட். குறிப்பாக கணைய புற்றுநோயோடு போராடிக் கொண்டிருக்கும் தலைமை காவல் அதிகாரியை குறிவைத்து தாக்குகிறது ஒரு பில்போர்ட்.
Image result for three billboards outside ebbing
இனவெறி கொண்ட, வன்முறையை தோன்றுகிற போதெல்லாம் ஏவும் காவலன் ராக்வெல் கொதிக்கிறான். மில்ட்ரெட்டுடன் வேலை பார்க்கிற பெண், விளம்பர நிறுவன இளைஞன் என பலரையும் தொல்லை செய்கிறான். முகத்தில் சற்று கூட இரக்கத்தின் சாயல் படியாத மில்ட்ரெட் வீடு தேடி  வந்த ஒரு மானிடம் மனம் விட்டு பேசுகிற கணம் அற்புதமானது. இறை நம்பிக்கையில்லாமல், மகள் முற்றாக இறந்து போனாள் என உணர்ந்தாலும் மகளின் மரணத்திற்கு நியாயம் தேடி ஓய மறுக்கிற மில்ட்ரெடின் அன்பு ததும்ப அக்கணத்தில் வெளிப்படுகிறது.
தலைமை காவல் அதிகாரி தற்கொலை செய்து கொள்கிறார். அவர் மில்ட்ரெட், ராக்வெல், தன்னுடைய மனைவி என பலருக்கும் கடிதங்கள் வரைகிறார். மில்ட்ரெட் மகளை கொன்றவனை கண்டுபிடிக்காமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறார். விளம்பர பலகை வைத்து தன்னை கூனிக்குறுக வைத்த
மில்ட்ரெட்டை நுண்மையாக பழிவாங்கியதை தெரியப்படுத்துகிறார். ராக்வெல் பில்போர்ட்டை வரைந்த நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞனான வெல்பியை அடித்து துவைத்து பணியிழக்கிறான். அவன் காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியின்  கடிதத்தை படிக்கிறான். ‘வெறுப்பது எதையும் சாதிக்க உதவாது. அன்பு செய்யப்பழகு. அது உன்னை மகத்தான துப்பறிவாளனாய் ஆக்கும்’ என்கிறது. மில்ட்ரெட்டால் பற்றியெரியும் காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்கும் ராக்வெல் அவளுடைய மகளின் வழக்கு கோப்பை காப்பாற்றுகிறான்.
Image result for three billboards outside ebbing
முகம் முழுக்க மூடப்பட்டு தீக்காயங்களோடு மருத்துவமனை போகிறான் ராக்வெல். அங்கே இவனால் அடிபட்ட வெல்பி, ராக்வெல் எனத்தெரியாமல் கனிவோடு நம்பிக்கை ஊட்டுகிறான். கரிசனம் ததும்ப ஆரஞ்சு சாறு அருந்த உதவ முனைகிறான். கண்ணீர் வழிய ‘மன்னித்துவிடு வெல்பி’ என்கிறான் ராக்வெல். அவனென தெரிந்த பின்பும், ‘அழாதே. உப்புநீர் காயத்தை இன்னும் கூட்டிவிடும்’ என கவலை கொள்கிறான் வெல்பி. இன்னமும் அக்கறையோடு உதவுகிறான்.
ராக்வெல் மில்ட்ரெட்டின் மகளின் கொலையாளியை தேடி பயணிக்கிறான். சில தடயங்கள் கிடைக்கின்றன. மில்ட்ரெட்டின் வாழ்க்கையில் நம்பிக்கை பூக்கிறது. அடுத்து என்ன ஆனது என்பதை திரையில் பாருங்கள்.
நீதி நாடுபவர்களை அடக்கும் அதிகார வர்க்கம், நீதிக்கான சிறுமுயற்சியும் சமூகத்தால் நிர்மூலமாக்கப்படுவதை சொல்லாமல் சொல்லும் பற்றியெரியும் பில்போர்ட்கள், வெறுப்புகள், கசடுகள் தாண்டி மனித மேன்மை நாடுபவர்கள், மன்னித்தலுக்கும், பழிவாங்கலுக்கும் இடையே அல்லாடுபவர்கள், புன்னகைக்க மறைந்த இழப்புகளின் வடுக்கள் தாங்கியவர்களின் உலகம் என அத்தனை நெருக்கமான திரைப்படம்.
Image result for three billboards outside ebbing

ஆணவப்படுகொலையை ஆவணப்படுத்துவது…


அல்ஜசீரா தொலைக்காட்சிக்காக சாதனா சுப்ரமணியம் சங்கரின் ஆணவப் படுகொலை அதையொட்டி நிகழ்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளை ஆவணப்படம் ஆக்கியிருக்கிறார்.

கௌசல்யாவின் தம்பி பெற்றோருடன் பிள்ளைகள் இருக்கிற புகைப்படத்தை வெறித்தபடி, கௌசல்யாவை கைகளால் மறைத்தபடி  ‘மூணு பேருதான் குடும்பத்துல’ என்கிறார்.
அவரின் பாட்டியோ, ‘பொம்பள பொண்ணலாம் பத்தாவது மேல படிக்க வைக்க வேணாம். எனபானம் கழுவ விடுங்கன்னு சொன்னேன் …காலேஜீ படிக்க போய் சுயபுத்தி போயிடுச்சு ….மேடை மேடையா ஏறிப்பேசுறா. பேசக்கூடாதது எல்லாம் பேசுறா.  இன்னொரு மேடையில பேசினா வெஷங்குடிச்சு செத்துருவேன்…  நாங்கல்லாம் அவிஞ்சு போகணும்…’ என்கிறார்
சங்கர் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர், ‘உசிலம்பட்டில பிறமலைக்கள்ளர் சமூகத்தில பொம்பளை புள்ளயலாம் பிறந்தன்னிக்கே கொன்னுருவாங்க…எங்க ஆளுங்க அப்படிலாம் பண்ணல… முதிர்ச்சியில்லாம கண்டிப்பா வளர்த்தத தப்பா எடுத்துகிட்டு பழிபழிவாங்க பாக்குது’ என நீட்டுகிறார்
கௌசல்யா பேருந்தில் துவங்கிய பிரியம் வளர்ந்ததை மென்னகையோடு நினைவுகூர்கிறார். ‘சங்கர் அவ்ளோ பாசம் காட்டுவான்…அவனளவுக்கு யாருகிட்டவும் அத்தனை அன்பை பாத்ததில்ல’ என நெகிழ்கிறார்.
கௌசல்யாவை பெற்ற அன்னலட்சுமி, தீர்ப்பிற்கு பிறகு விடுதலையான பின்பு பேசுகையில், மகளுக்கு ஒரு தோசை கூட ஒழுங்காக
வாக்கத்தெரியாது என்கிறார். ‘கல்யாணம் இப்ப வேணாம், பொண்ணு படிச்சு வேலை வாங்கட்டும். பிறகு பாத்துக்கலாம்னு நான்தான் சொன்னேன்… லவ் பண்ணலேன்னு சத்தியம் பண்ணா. அப்படி பண்ணா உன்ன கொலை பண்ணிருவேன்னு சொன்னேன்..
சொந்தக்காரங்க இன்னும் ஏன் இரண்டு பேரும்  வெக்கமில்லாம உயிரோட இருக்கீங்கன்னு கேட்டாங்க. ஏன் இப்படி இருக்கா? இவ ஒருத்தியால சாதி ஒழிஞ்சுருமா? எவ்வளவோ பேரு முயற்சி பண்ணியும் போகாத ஒன்னு இவ முயற்சி  பண்ணி வெடிஞ்சிருமா. மாத்திட முடியுமா. நாமதான் மாறிக்கணும்’ என படபடக்கிறார்.
Image result for al jazeera kausalya documentary
கௌசல்யா சங்கர் இல்லாத வாழ்க்கையில் புன்னகைத்தபடி வாழ முனைவதை, ‘நாள் முழுக்க சிறை வளாகத்தில் சுற்றித்திரிந்து சந்தோஷமா இருந்துட்டு நைட்டு  ஜெயிலுக்குள்ள அடையுற கைதி போல தான் என் நிலைமையும்’ என்கிறார்.
அப்பாவியாக மணமான ஆனந்தம் நிறைய சிரிக்கும் புகைப்படத்தை நம்பமுடியாமல் வருடுகிறார். பெற்றோர் மணமான பின்னும் விடுத்த கொலை மிரட்டல்களை நினைவுகூர்கிறார். சாதி ஒழிப்பு லட்சியம் என கண்கள் விரிய முழங்குகிறார்.
தாய் விடுதலை என்கிற செய்தியை பார்த்துவிட்டு ‘தாய்…வாவ்!!! அன்னலட்சுமின்னு போடச்சொல்லுங்க’ என்கிறார் சலனமில்லாமல். ‘என் வழக்கில வர்ற தீர்ப்பை வச்சு ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சட்டம் வேணும்னு போராடுவேன்’ என தெளிவாக பேசுகிறார்.
தீர்ப்பு வந்தததும்,
‘தேவர் சாதிக்கு பாதுகாப்பு இல்லை’ என குமுறுகிறது ஒரு குரல். படுகொலைக்கான சிறு குற்றவுணர்ச்சியும் யாரிடமும் இல்லை.
‘நீ ஓடிப்போனே. உனக்கு இது தேவைதான்னு நடந்துகிட்டாங்க.
…நான் முன்ன போவேன். நான் இருக்கிறதுலயே பெருசா நினைக்கிறது சாதி ஒழிப்புக்கான என்   பயணம் தான். வெற்றியடைஞ்சுட்டேன்னு நினைக்கல. அதுக்கான அடிக்கல் தான் இது’ என கௌசல்யாவின் நம்பிக்கை மிகுந்த குரல் சாதியத்தின் கொடுங்கரங்களை ஒழிக்கும் பயணத்தில் நம்மையும் உடன் அழைக்கும் தட்ட முடியாத குரல்.
ஆவணப்பட சுட்டி:
ஆவணப்பட இயக்குனர் சாதனா- புகைப்பட நன்றி: தி இந்து
Image result for al jazeera kausalya documentary sadhana

நீட் தேர்விற்கு வெளியூர் சென்று வர என்ன கேடு எனக்கேட்டவர்களுக்கு ஒரு கடிதம்…


மாடமாளிகைகளில் இருந்து கொண்டு வெளியூருக்கு சென்றுவர என்ன கேடு என்று கேட்காதீர்கள். உங்கள் மேட்டிமைப்பார்வைகளுக்கு ஆயிரமாயிரம் வந்தனங்கள். எத்தனையோ தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்றிருக்கிறேன். பாதிக்கு பாதி மருத்துவ மாணவிகள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். கேரளா மட்டுமே நம்மைவிட அதிகப் பெண் மருத்துவர்களை விகிதாசாரப்படி கொண்டிருக்கிறது.

ஐஐடி தேர்வுகளை நிறையப் பெண்கள் எழுத முடியாமல் போகத் தேர்வு மையங்கள் வெகுதூரம் தள்ளியிருப்பது காரணம் என ஆய்வுகள் நிறுவுகின்றன. அண்ணா பல்கலை கலந்தாய்வுக்கு வர காசில்லாமல் தன் மகனை வண்டியேற்றி தனியாக அனுப்பும் குடும்பங்களை நான் கண்டிருக்கிறேன். தனியாகச் சென்னை வரை அனுப்ப வேண்டுமா என அஞ்சிக்கொண்டு ஊர் பக்கமாகவே பெண்களைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பலர் இங்குண்டு. வீட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் தங்கள் மகள்/மகனின் கல்வியில் மட்டுமே கொட்டிவிட்டுக் காத்திருக்கும் ஆயிரம் குடும்பங்கள் இங்குண்டு. திருமணம் தவிர்த்து பிள்ளையின் படிப்புக்காக அடமானம் போகும் தங்க நகைகள் எங்கள் அன்னைகளின் கழுத்தை மீண்டும் ஏறாத கதைகள் ஆயிரம் உண்டு.

சென்னையில் சேர வந்த காலத்தில் ஒரு நாள் கூடுதலாகத் தங்க எங்கே போவது என அஞ்சி கொசுக்கடிகள் இடையே அண்ணா பல்கலை வளாகத்திலேயே அச்சத்தோடு அப்பாவோடு தூங்கிய மாணவன் நான். என்னைப்போல இங்கே வெளியே சொல்லாதவர்கள் பலருண்டு. கல்வி என்கிற ஒரே பற்றுக்கோல் மட்டுமே இந்தத் தமிழ்ச்சமூகத்தின் பெரும்பான்மைக்கான சொத்து, நம்பிக்கை. அதைத்தகர்க்கும் முயற்சிகளை இச்சமூகம் ஒருங்கே எதிர்கொள்ளும். மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்காத செம்பகம் துரைராஜனும், அரசமைப்புச் சட்டம் இயற்றிய குழுவின் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமியும் மருத்துவப்படிப்புக்கான கதவுகளை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மூட முயன்ற வரலாறு அரங்கேறி 65 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது.

பல்வேறு வகையான உளவியல் தாக்குதல்கள். எதிர்காலம் குறித்த கவலைகள். வெளியூர் போய் நீட் எழுதியே ஆக வேண்டுமா எனத் தேர்வு எழுதுவதைக் கைவிட்ட பிள்ளைகளை அறிவேன். யாரிடமும் உதவி பெற தயங்குபவர்களும் இங்கு இருக்கிறார்கள். சம வாய்ப்புள்ள தேர்வாக இது எங்கே நடக்கிறது. மாதவிடாய் காலங்களில் தேர்வெழுத இத்தனை தூரம் போகிற பெண்களின் அவலக்குரல்கள் யார் காதுகளிலும் விழுமா? புது ஊரில் பயமும், நடுக்கமும் தாண்டி எழுதுவது சாத்தியப்படுமா? எம் பெண்களின் பயணம் ஒற்றை ஆளாகச் சென்னை மருத்துவக்கல்லூரியில் பழமைவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகச் சமராடிய முத்துலட்சுமியில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டது. அது ஓயாது.

ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் சேவை இட ஒதுக்கீடு மறுப்பால் 31% காலியிடங்கள் அதிகரித்துள்ளன. காத்திரமான, பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய மக்களுக்கான மருத்துவக்கட்டமைப்பு உடைகிறது. என்னவோ.

இச்சமூகம் இதைக்கடந்து வரும் என இரு நாட்களில் நம்பிக்கை ஊற்றெடுக்கிறது. எம் தமிழ்ச்சமூகம் கல்வி என வருகிற போது எல்லா வேறுபாடுகளையும் கடந்து ஒன்று திரள்கிறது. கண்ணீர் துடைக்க, தோள் கொடுக்கச் சித்தமாக இருக்கிறது. அன்புத்தம்பி, தங்கைகள் அஞ்சாமல் இந்த இன்னல்களை எதிர்கொள்ளப் பெற்றோரும், உற்றோரும் துணையாய் இருங்கள்.