சாவித்திரிபாய் புலே (1831-97) அவருடைய புரட்சிகரமான கணவருக்கு இணையாக போராடினார், அல்லல்பட்டார். சாதி, பாலின பாகுபாடு மிக்க புறக்கணிப்பால் அவரின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஜோதிபாயின் மனைவி என்பதை தாண்டி அவர் குறித்து அறிவுலகம் பெரிதாக பேசுவதில்லை. நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கு கல்வி என்கிற புரட்சிகர சிந்தனையை மொழிந்தவர். பெண் விடுதலையின் நாயகி. கட்டிப்போடும் கவிதையின் முன்னோடி. சாதி, ஆணாதிக்க சக்திகளை நேருக்கு நேராக எதிர்கொண்ட தீரமிக்க மக்கள் தலைவர். அவருக்கு என்று உரிய தனித்துவமான அடையாளங்களும், சாதனைகளும் பல. நவீன இந்தியாவின் வரலாற்றில் சாவித்திரிபாய் புலே என்கிற பேராளுமையின் பெயரை உச்சரிக்க மறுக்கிற மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் அறிவு உற்பத்தி எவ்வளவு ஈவிரக்கமற்றது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சாவித்திரிபாய் அவர்களின் வாழ்க்கை,போராட்டம் மராத்தியர் அல்லாத மக்களையும் சென்றடைய வேண்டும்.’ – வரலாற்று ஆய்வாளர் பிரஜ் ரஞ்சன் மணி
சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .. மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் .ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்குக் கல்வி பயிற்றுவித்தார் .
இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்குத் தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய் அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகச் சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர் அதைச்சொல்லி புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார் இவர் .
தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்
1852ல் இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.
‘தி பூனா அப்சர்வர்’ இதழ் மே 29, 1852 அன்று இப்படி எழுதியது: “அரசுப்பள்ளியில் படிக்கும் ஆண் பிள்ளைகளை போல பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் ஜோதிராவ் பள்ளியில் பயில்கிறார்கள். இதற்கு காரணம், அரசுப்பள்ளியை விட இங்கே கல்வி மிக உயர்ந்த தரத்தோடு இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தாள் இப்பள்ளியில் மாணவிகள் அரசுப்பள்ளி ஆண்களை விட தாங்கள் அறிவு மிக்கவர்கள் என புரிய வைப்பார்கள். வருகிற தேர்வில் அவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெறக்கூடும். அரசு ஏதேனும் செய்யாவிட்டால் இந்த பெண்கள் ஆண்களை விட கல்வியில் சிறந்து ஒளிர்வதை கண்டு நாம் வெட்கத்தில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்”.
தீண்டப்படாத குழந்தைகள் பள்ளிகளில் சேருவதால் ஆதிக்க சாதி குழந்தைகள் பள்ளியை விட்டு நிற்கும் சூழல் நிலவி வந்த காலம் அது. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு என்று பள்ளிகளை நடத்திய புலே இணையருக்கு பணத்தட்டுப்பாடு இன்னமும் பெரிதாக இருந்தது. அவர்கள் பள்ளியை சேர்ந்த அறங்காவலர் ஒருவர் எழுதிய கடிதம் நிலையையும், சாவித்திரிபாயின் ஆளுமையையும் ஒருங்கே புலப்படுத்துகிறது
“ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிற அளவுக்கு நிலைமை நன்றாக இல்லை. கூடுதல் சம்பளம் தரும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் போகிறார்கள்…பெண்களின் கல்விக்காக இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாவித்திரிபாய் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டார். எந்த சம்பளமும் பெற்றுக்கொள்ளாமல் அவர் பணியாற்றுகிறார். தகவல்களும், அறிவும் பரப்பப்படும் போது பெண் கல்வியின் நன்மைகளை மக்கள் முழுமையாக விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். ”
1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக
உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும்
முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட
என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.
ஆணின் பாலியல் வன்புணர்வுக்கும், வன்முறைக்கும் ஆளாகி கர்ப்பவதி ஆன ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளச் சென்றாள். அவளை ஜோதிபாய் புலே மீட்டு வந்தார். அந்தப் பெண்ணைத் தன்னுடைய வீட்டில் அனுமதிக்கச் சாவித்திரிபாய் எந்த எதிர்ப்பும் சொல்லாததோடு அவளுக்குப் பிறந்த குழந்தையைத் தன் மகன் போலவே வளர்த்து மருத்துவர் ஆக்கினார். இப்படிக் கைவிடப்பட்ட பெண்களைக் காப்பதற்கும், அவர்களின் பிரசவத்தைக் கவனிக்கவும் ‘பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா’ எனும் இல்லத்தைத் துவக்கினார்..
1855-ல் அவரின் பதினொரு வயது மாணவி முக்தாபாய் ‘தியானோதயா’வில் எழுதிய ‘மங்குகள், மகர்களின் துக்கம்’ என்கிற கட்டுரையே சாவித்திரிபாய் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதைத் தெளிவாக்கும்
‘ஓ! இறைவனே எது எங்களின் மதம் என்று சொல்! ஓ இறைவனே! எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி. ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை விட்டு கெட்டு ஒழியட்டும். எங்களின் மனதிற்குள் இப்படிப்பட்ட இழிந்த மதம் எப்பொழுதும் நுழையாமல் இருக்கட்டும்..மங்குகள், மகர்கள், ஏன் பிராமணர்கள் என்று அனைவரையும் படைத்தவன் ஒருவனே! அவனே என்னை அறிவால் நிறைத்து எழுத வைக்கின்றான்… ஓ! மகர்களே! மங்குகளே! நீங்கள் ஏழ்மையிலும், நோயிலும் வாடுகிறீர்கள். அறிவெனும் மருந்து மட்டுமே உங்களைக் குணப்படுத்தவும், ஆற்றவும் முடியும்’
24 செப்டம்பர் 1873-ல் துவங்கப்பட்ட சத்தியசோதக் சமாஜத்தில் சாவித்திரிபாய் முக்கிய பங்காற்றினார். இந்த அமைப்பு புரோகிதர், வரதட்சணை இல்லாமல் திருமணங்களை முன்னின்று நடத்தியது. சமாஜத்தின் முதல் அறிக்கையில் சாவித்திரிபாய் தான் இத்தகைய மதச்சடங்குகள் ஒழித்த புரட்சிகரமான திருமணத்திற்கு காரணம் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்கக் கடுமையான ப்ளேக் சட்டங்களைப் போட்டுப் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து
ராணுவத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை
ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.
தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படி ஊருக்கு வெளிப்புறம் மகர் குடியிருப்பில் வசித்து வந்த பாண்டுரங் பாபாஜி கெய்க்வாட்டின் பத்து வயது சிறுவன் காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்தச் சிறுவன் பிழைத்துக்கொண்டான். வாழ்க்கையையே சேவையால் நிறைத்த அவரை ‘இந்தியக்கல்வியின் தாய்’ என்று போற்றுகிறோம். .
சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை,சமூகம்,வரலாறு,கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன அவரின் கவிதை கீழே :
போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,சோராமல் உழை-ஞானத்தை,செல்வத்தைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய்க் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக
பிராமண நூல்களை வேகமாகத் தூக்கி எறிக !