காஷ்மீர் குறித்து வேகமாக பரப்பப்பட்ட  படம்  சொல்வதெல்லாம் உண்மையா? 


பொய்களும், அரைகுறை உண்மைகளும் வேகமாகக் கவனம் பெற்றுவிடுவதன் அடையாளமே கீழ்கண்ட படம். இதனை ஆங்கிலத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டுடே எந்த ஆய்வும் செய்யாமல் வெளியிட அதனைத் தமிழ் ஊடகங்கள் செவ்வனே மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஏன் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தவறானவை அல்லது அரைகுறையானவை என அறிவோம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

(I) காஷ்மீருக்கு என்று இரட்டைக் குடியுரிமை எல்லாம் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்புக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியா ஒற்றைக் குடியுரிமை கொண்டிருக்கும் நாடு. வேறொரு நாட்டின் குடியுரிமையை ஒருவர் பெற்றால் அக்கணமே அவர் இந்தியக் குடிமகனாக இருக்க முடியாது. காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு என்று குறிப்பிட்ட சில சிறப்புரிமைகள் உண்டு. அது குடியுரிமை அல்ல. விடுதலை இந்தியாவில் குடியுரிமை எப்படிக் குடியுரிமை உருவம் பெற்றது என்று அறிய விரும்புபவர்கள் அவசியம் பேராசிரியர் நீரஜா கோபால் ஜெயலின்
‘Citizenship and its discontents’ நூலை வாசிக்க வேண்டும்.

(II) பொருளாதார அவசரநிலை (சட்டப்பிரிவு 360) என்பது இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்த பின்பு ஒரு முறை கூட அறிவிக்கப்பட்டதில்லை. இதுவரை ஜம்மு காஷ்மீரில் போர், அந்நிய தாக்குதலின் போது அவசரநிலையை அறிவிக்க இயலும்.

(III) சிறுபான்மையினருக்கு 16% இட ஒதுக்கீடு என்பது இன்னொரு பூசுற்றல். இந்த எண் எங்கிருந்து முளைத்தது என்று தேடிப்பார்த்தும் தெரியவில்லை. சமீபத்திய சட்டத்திருத்தம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை காஷ்மீரில் உறுதி செய்துள்ளது. சீக்கியர்கள், இஸ்லாமியர்களிலும் மேல்சாதியினர் உண்டு. எதையாவது அடித்து விடுவது என்று வந்த பின்பு உண்மையைப் பற்றி என்ன கவலை?

(IV) ஒரு காஷ்மீரி பெண் வேறு மாநில நபரை மணந்தால் தன்னுடைய குடியுரிமையை இழக்கிறார் என்பது அடுத்தப் பிதற்றல். குடியுரிமையை நெறிப்படுத்தும் சட்டங்களில் இப்படியொரு சட்டப்பிரிவு இல்லவே இல்லை. வேறு மாநிலத்தவரை காஷ்மீரி பெண் திருமணம் செய்து கொண்டாலும் அவரின் குடியுரிமை அப்படியே இருக்கும். சிறப்புரிமைகளைத் தான் குடியுரிமை என்று எண்ணிக்கொண்டார்கள் என்று சமாளிக்க எண்ணுகிறார்களா? அடுத்தப் பத்தியை படிக்கவும்.

(V) காஷ்மீரி பெண் வேறு மாநில ஆணை திருமணம் செய்து கொள்வதால் காஷ்மீரிகளுக்கு என்று இருக்கும் சிறப்புரிமைகள் எதனையும் இழக்க மாட்டார் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு தீர்ப்பு நல்கியது. ஒரே ஒரு நீதிபதி மட்டுமே அத்தீர்ப்பில் முரண்பட்டார். புகழ்பெற்ற சுசீலா சாஹ்னி எதிர் ஜம்மு காஷ்மீர் அரசு வழக்கிலேயே இத்தீர்ப்பு 2002-ல் வழங்கப்பட்டது. ஆக இந்தக் குடியுரிமை, சிறப்புரிமை இழப்பு என்பதெல்லாம் இல்லை. காண்க: https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/j-k-women-marrying-non-natives-don-t-lose-residency-rights-expert-119012201079_1.html

(VI) ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இருக்கிறது. முதலில் நீர்த்துப்போன ஒரு சட்டத்தை 2004-ல் மாநில அரசு நிறைவேற்றியது. 2009-ல் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு இணையான தகவல் அறியும் உரிமைச்சட்டம் காஷ்மீரில் அமலுக்கு வந்தது.

(VII) இறுதியாக ஜம்மு காஷ்மீருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுவோம். இந்தியாவில் சிறப்புரிமைகளை அனுபவிக்கிற மாநிலம் காஷ்மீர் மட்டுமில்லை. இந்தியா asymmetric federalism-ஐ பின்பற்றுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலசாரம், பண்பாடு, நடைமுறைகள், இந்தியாவோடு இணைந்த பாதை ஆகியவற்றில் மாறுபட்டிருக்கும். அதனால் அவற்றுக்கு ஏற்ப அரசியலமைப்பில் சிறப்புப் பிரிவுகளின் மூலம் சிறப்பு உரிமைகள் காஷ்மீர் அல்லாத பத்து மாநிலங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவாக அறிய படிக்கவும்:

https://www.google.com/amp/s/thewire.in/government/jammu-kashmir-constitution-special-powers-10-states/amp/

பகுத்தறிவும், அரசமைப்புச் சட்டம் குறித்த தேடலும் நம்மிடையே பெருகட்டும்.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

In this era of fake news such half baked posts are widely shared. I will break point by point why this is fake on many accounts. I wish those who share this do some basic study of constitution.
 
(I) There is no dual citizenship in Kashmir. No state in India enjoys this privilege of Dual citizenship. In India there is only Single Citizenship. For those interested in history of making of Citizenship in India They can read Niraja Gopal Jayal’s ‘Citizenship and its discontents’.
 
(II) Article 360 was never implemented in any state or whole of country anytime in past 69 yrs of existence of Constitution. Previously, Emergency can be declared in Jammu and Kashmir when there is war or external aggression.
 
(III) How this number of 16% was arrived I don’t know. The reservation bill actually provides 10% reservation for EWS. EWS are not per se minorities. Even upper castes exist in Sikhs, Muslims.
 
(IV) The losing of citizenship by marrying person outside state is another lie. The property rights are gone yes, but, not citizenship rights. Go get your basics right.
(V) Jammu & Kashmir do have RTI Act. First watered down version was passed in 2004. And in 2009 Jammu & Kashmir Right to Information Act came into force which is on similar lines with Central Act.
 
(VI) The Kashmiri women doesn’t lose Citizenship or residency Rights post 2002. J & K high court in a full bench judgment with one judge dissenting has said (Susheela Sahwney Case) that A women doesn’t lose her rights as Kashmiri by marrying a non-resident. https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/j-k-women-marrying-non-natives-don-t-lose-residency-rights-expert-119012201079_1.html
 
(VII) Finally the first point. Special powers of Kashmir. It was not the only state that enjoyed special powers. India practices asymmetric federalism and provides special powers to Ten States. Here is a summary of it: https://www.google.com/amp/s/thewire.in/government/jammu-kashmir-constitution-special-powers-10-states/amp/
 
Little sense and sanity is to be expected.

சொற்களில் கவனமாயிருங்கள்


சொற்களில் கவனமாயிருங்கள்,
அதிசய சொற்களிலும் கூட,
ஆச்சரிய சொற்களுக்காக நம்மால் இயன்றதையெல்லாம் புரிகிறோம்,
அவை பூச்சிகள் போல மொய்க்கின்றன,
ஆனால், கொட்டாமல் முத்தமொன்றை ஈந்துவிட்டு அகல்கின்றன.
அவை விரல்கள் அளவுக்கு நல்லவையாகவும் இருக்கக் கூடும்.
நீங்கள் நம்பிக்கையோடு அமரக்கூடிய பாறையாகவும் சொற்கள் திகழலாம்.
அவை மலர்களாகவும், காயங்களாகவும் இருக்கலாம்.
எனினும், நான் சொற்களைக் காதலிக்கிறேன்.
அவை மேற்கூரையிலிருந்து தரை சேரும் புறாக்களாக இருக்கலாம்.
அவை என் மடியில் வீற்றிருக்கும் ஆறு புனித ஆரஞ்சு கனிகள்.
அவை மரங்கள், வேனலின் கால்கள்,
வெய்யோன், அவனின் ஒளிரும் முகம்.
இருந்தாலும், அவை அடிக்கடி என்னைக் கைவிடுகின்றன.
நான் சொல்ல விரும்புபவை தீராமல் என்னுள்ளே இருக்கின்றன,
அத்தனை கதைகள், உருவங்கள், சொலவடைகள்,
ஆனால், சொற்கள் போதுமானதாக இருப்பதேயில்லை,
பிழையானவை என்னை முத்தமிடுகின்றன,
சமயங்களில் கழுகைப் போல வான் ஏகுகிறேன்,
சிறுகுருவியின் சிறகுகளுடன்,
ஆனால், சொற்களின் மீது அக்கறையோடு கனிவாய் இருக்கிறேன்.
சொற்களையும், முட்டைகளையும் கவனமாகக் கையாளவேண்டும்.
அவை உடைந்தால் மீண்டும் உயிர்த்தெழுப்பவே முடியாதவை. – Anne Sexton

Image result for anne saxton
தமிழில்: பூ.கொ.சரவணன்

தண்ணீர் மத்தன் தினங்கள்


ஏன் இந்த நாள் இப்படி முடிய வேண்டும்? Sethupathi Nedumaran தம்பி சொல்லித்தான் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்திற்கு சென்றேன். கொண்டாட்டம், தர்பூசணி நிறைந்த குவளைகள், துள்ளல், பெருகிக்கொண்டே இருக்கும் வெடிச்சிரிப்பு என இத்தனை நெருக்கமான, சினிமாத்தனம் இல்லாத ஒரு திரைப்படத்தை பார்த்து பல நாளாகிறது.
 
சப்டைட்டில் இல்லாமல் அருகிருந்த நண்பனின் உதவியோடு முதல் பாதியைக் கடந்த நாங்கள் இரண்டாம் பாதியில் வசனங்கள் புரியாமலே திரைமொழியில், ஆடிப்பெருக்கன்று அடித்துச் செல்லும் நீர்ச்சுழல் போல கலந்து விட்டோம். பள்ளி மாணவன் ஜேசன், அவன் ஆசிரியர் பிற நண்பர்கள், செவ்வி துளிர்க்கும் பிரியங்கள் இதற்குள் இப்படியொரு படையலைத்தர முடியுமா என இன்னமும் நம்பமுடியவில்லை.
Image result for thanneer mathan dinangal;
 
அந்த பதின்பருவ நாயகனும், நாயகியும். நடிக்கவா செய்கிறார்கள். நம் வாழ்வின் திரும்பாத பொழுதுகளை கண்முன் தங்களின் உடல்மொழியில், அடர்த்தியான மௌனத்தில், பேரன்பில் நிறைக்கிறார்கள்.
 
இசையும், படத்தொகுப்பும் புரிகிற மாயத்தில் திக்குமுக்காடுவது ஒரு புறம் என்றால் ஜேசனின் வாழ்வின் தோல்விகள், கசப்புகள், நிராகரிப்புகள் ஊடாக வெள்ளந்தியான தெருச்சண்டைகளும், மயிலிறகு குட்டி போட்டது போன்ற பிரியங்களும், வெகுளித்தன்மை மாறாத குழந்தைமையும், ஊடலுவகையும் நம் இருளினை ஒளிரச்செய்கின்றன. ஒரு வரி கூட மிகையாக எழுதப்பட்டதில்லை. அந்த தர்பூசணித் தினங்களில் சேறு அப்பி, கடிபட்ட பழத்துணுக்குகளின் சாறு ஆடையில் வழிந்து, காத்திருப்பின் கனிவு பெருகி வானில் சற்றே மிதந்தபடி வெளியே வருவீர்கள். கலையின் வெற்றியும், உண்மையின் கதகதப்பும் அதுதானே?

இந்தியாவிற்கான பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவிற்கு தாரைவார்த்து துரோகம் செய்தாரா நேரு?


நேரு காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்தது. சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் தராமல் இந்தியா அதில் இணைவது என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று நேரு அடம்பிடித்ததாக ஒரு கருத்து பரவலாகப் பரப்பப்படுகிறது.

 

மெய்ப்பொருள்:

சீனாவின் ஐநா நுழைவு வரலாறு இடியாப்ப சிக்கலானது. சீனாவில் உள்நாட்டுப் போர் ஒன்று நடைபெற்றது. சியாங் ஷேக் தலைமையிலான சீனக்குடியரசு அமெரிக்க ஆதரவோடு உலகப்போருக்கு பின்னர் ஆண்டுக் கொண்டிருந்தது. அதனை எதிர்த்து மாவோ தலைமையிலான கம்யூனிச கட்சியினர் போராடி வென்றார்கள். அவர்கள் தைவான் தவிர்த்த ஒட்டுமொத்த சீனாவையும் தங்கள் வசப்படுத்தினார்கள். இவர்களுக்குச் சோவியத் ரஷ்யாவின் ஆதரவு இருந்தது. ஆனால், தைவானில் தஞ்சம் புகுந்த சீனக்குடியரசு தான் ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவாக இருந்தது. மேலும், பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாகவும் இருந்தது. அதன் இடத்திற்கு மாவோ தலைமையிலான சீன மக்கள் குடியரசை கொண்டுவர வேண்டும் என்கிற சோவியத் ரஷ்யாவின் முயற்சிகள் அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டது.

Image result for nehru and mao

வீட்டோ எனப்படும் ஒரு எதிர் வாக்கு ஒட்டுமொத்த தீர்மானத்தையும் தோற்கடிக்கும் என்கிற வினோதமான வாக்கு முறையைப் பாதுகாப்புக் கவுன்சில் பின்பற்றியது இதற்கு முக்கியக் காரணம். கடும்கோபத்தோடு 1950 ல் ஐநாவை விட்டு சோவியத் ரஷ்யா சிறிது காலத்திற்கு விலகியது. ஒரு வழியாக, ரிச்சர்ட் நிக்சனின் காலத்தில் அமெரிக்கா சீன மக்கள் குடியரசோடு நல்லுறவு பாராட்டியது. இதனையடுத்து ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவின் இடத்தை 1971-ல் சீன மக்கள் குடியரசு பெற்றுக்கொண்டது.

இப்போது நேரு பாதுகாப்புக் கவுன்சிலில் சீனாவிற்கு இடமில்லாமல் நிரந்தர இடத்தைப் பெற மறுத்தார் என்கிற கூற்றை எடுத்துக்கொள்வோம். இந்தக் கருத்தை பாஜகவினர் மட்டும் எடுத்துரைக்கவில்லை. சசி தரூர் தன்னுடைய ‘Nehru-The invention of India’ நூலில் இதே கருத்தை முன்வைக்கிறார். இந்திய அயலுறவு அதிகாரிகள் ஆகஸ்ட் 1950-ல் இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடத்தைச் சீனாவிற்குப் பதிலாக எடுத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாக அமெரிக்கா அழைத்தது. அதனை நேரு ஏற்க மறுத்தார், இது பெரும்பிழை என்று கோப்புகளைப் பார்த்த அயலுறவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சசி தரூர் எழுதுகிறார்.

அடுத்து இன்னொரு முறை, 1955-ல் சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் செய்த போது (கவனிக்க அமெரிக்கா இல்லை) இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் ஆறாவது நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று யோசனை இருப்பதாகத் தெரிவித்தது. இதனையும் இந்தியா ஏற்கவில்லை. ஏன் என்று விரிவாகப் பார்ப்போம்.

முதலில் அமெரிக்கா சீனாவின் இடத்தைப் பாதுகாப்புக் கவுன்சிலில் எடுத்துக் கொள்ள வழங்கிய வாய்ப்பு. இது பரிந்துரைக்கப்பட்டது 1950-ல். அதாவது காஷ்மீர் பிரச்சினை ஐநாவில் இந்தியாவின் உள்நாட்டு சிக்கலாக அணுகப்படாமல், இந்திய-பாகிஸ்தான் பிரச்சினையாகப் பிரிட்டன், அமெரிக்காவால் மாற்றப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வு. ஆகஸ்ட் 24 1950-ல் சீனாவின் இடத்தை இந்தியா எடுத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சிலர் பரிந்துரைப்பதை அமெரிக்காவின் தூதுவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் நேருவிற்குத் தெரியப்படுத்துகிறார்.

இது இந்தியாவிற்கும்-சீனாவிற்கும் இடையே மோதலை மூட்டிவிடும், மேலும், ஐநா சபையை விட்டு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வெளியேறுவதும், ஐநா சபையே கலைவதற்கும் இது வழிகோலும் என்றும் நேரு அஞ்சினார். இந்தியாவிற்கு ஐநாவில் நிரந்தர இடம் வேண்டும், ஆனால், இப்படி அமெரிக்காவின் காய் நகர்த்தல் ஐநா சபைக்கும், உலக அமைதிக்கும் கேடாக முடியும் என்கிற அச்சம் நேருவிற்கு இருந்தது.

பேராசிரியர் நபரூன் ராய் வேறு சிலவற்றைக் கவனப்படுத்துகிறார். எகிப்திய தலைவர் நாசருடன் நேரு பேசுகிற போது, ‘சீனா பல லட்சம் மக்களை இழப்பதை குறித்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்னோடு உரையாடிக்கொண்டிருந்த மாவோ வெகு சாவகசமாகச் சில கோடி மக்களை இழப்பதற்கு நாங்கள் தயார்’ என நினைவுகூர்வதைக் கவனப்படுத்துகிறார். பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதும் சீனாவின் ஆக்ரோஷத்திற்குக் காரணம் என்று நேரு கருதினார்.

சீனா இந்தியாவின் அயலுறவு கொள்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும், அதனோடு உரையாடல், நல்லுறவு, அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதன் மூலமே ஐநா இயங்க முடியும் என்று நேரு கருதினார் என்கிறார் 1949-1962 காலத்தைய இந்திய சீன உறவுகள் குறித்து ஆய்வு செய்த ஆண்டன் ஹார்டர்.

மேலும், ஒருவேளை இந்தியா அமெரிக்கா வழங்குவதாகச் சொன்ன பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை ஏற்றிருந்தாலும் இதனைச் சோவியத் ரஷ்யா வீட்டோ செய்திருக்கக் கூடும். (ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்குள் வந்து விட்டது)

ஜவகர்லால் நேரு லண்டனில் 1960-ல் நிகழ்த்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீன மக்கள் குடியரசு ஐநாவின் பகுதியானால் உலகின் பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் எளிதாகிவிடும்’ என்றார். தன்னுடைய முதலமைச்சர்களுக்கு நேரு 1950-ல் எழுதிய கடிதத்தில், ‘….உலகின் அதிகாரச்சமநிலை புதிய சீனாவின் வருகைக்குப் பிறகு கிழக்கில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் மாறியிருக்கிறது. இதனை மேற்கத்திய நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்த உண்மையை உணர்வது துரிதமாக நடப்பது பேரிழப்புகளைத் தவிர்க்கும்’ என்று அக்கறையோடு எழுதினார்.

Image result for nehru and china security council

ஜனவரி 1950-ல் சீன மக்கள் குடியரசை ஐநாவில் சேர்க்காத போக்கை கண்டித்துச் சோவியத் ரஷ்யா ஐநாவை விட்டு வெளியேறி இருந்தது. இதே காலகட்டத்தில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா பங்குகொண்ட கொரியப்போரில் ஆரம்பத்தில் இந்தியா அமெரிக்காவிற்குச் சாதகமாக இயங்கியது. போக, போக நிலைமைக்கு ஏற்ப தன்னுடைய அமெரிக்க ஆதரவை இந்தியா குறைத்துக்கொண்டது. கொரியப்போர் குறித்த ஐநாவின் மூன்றாவது தீர்மானம் முழுக்க, முழுக்க அமெரிக்காவிற்குச் சாதகமாக இருந்த போது அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்கு வந்து சேர்ந்திருந்தது. இத்தகைய நிலையில் இந்தியா அமெரிக்காவின் அழைப்பை ஏற்றிருந்தால் அது முழுக்க அமெரிக்காவின் கையாளாக மாறியிருக்க வேண்டியிருக்கும். மேலும், சோவியத் ரஷ்யா, சீனாவின் பகையை ஒருங்கே பெற்றுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். சர்வதேச அமைதியை குலைக்கிற செயலில் இந்தியா ஈடுபடாது என்று நேரு உறுதியாக இருந்தார்.

இதே காலகட்டத்தில் தான் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்க்க அமெரிக்கா அழைத்தது. காஷ்மீர் பிரச்சினை ஐநாவிற்குச் சென்ற போது, விஜயலட்சுமி பண்டிட் ‘இந்தியா ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்றால் காஷ்மீரை கைகழுவ வேண்டியிருக்கும் போல’ என்று 2 செப்டம்பர் , 1949-ல் எழுதியிருந்தார். (விஜயலட்சுமி பண்டிட் தாள்கள் கோப்பு எண். 59, 47, NMML). ராணுவ ரீதியாகத் தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருப்பது புதிதாக உதித்த ஒரு நாட்டிற்கு உகந்தது அல்ல என்பது நேருவின் அக்கறையாக இருந்தது என்பது ராணுவ, அயலுறவு வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை.

சமீபத்தில் வந்த தி இந்து செய்தித்தாளின் பழைய கட்டுரையொன்றை மாலன் மேற்கோள் காட்டி நேரு பொய் சொல்லியிருக்கிறார் என்று எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நேருவிடம் உறுப்பினர் பரேக் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதற்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? என்கிற கேள்விக்கு ‘அப்படி எந்த அழைப்பும் வரவில்லை’ என்று நேரு செப்டம்பர் 1955-ல் உறுதிபட மறுத்திருக்கிறார். இதனைத்தான் ஏ.ஜி.நூரனி விஜயலட்சுமி பண்டிட் தாள்களை வாசித்து எழுதிய கட்டுரையைக் கொண்டு பொய்யர் நேரு என்கிற ரீதியில் மாலன் எழுதிச் செல்கிறார். (The Nehruvian approach)

என்ன நிகழ்ந்தது 1955-ல்?

சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் போயிருந்த போது அந்நாட்டின் பிரீமியர் புல்கானின் இந்தியாவை ஐநாவின் ஆறாவது பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராகச் சேர்க்க எண்ணம் என்கிறார். நேரு அதனை ஏற்க மறுக்கிறார். இதற்குப் பிந்தைய நாடாளுமன்ற விவாதத்தின் போது இதை அப்படியே நேரு மறைத்துவிட்டார் என்பது மாலன் முன்வைக்கிற பார்வை.

அந்த உரையாடலின் சில பகுதிகளை மட்டும் மாலன் பதிவு செய்கிறார். ஆனால், சோவியத் ரஷ்யா எப்படிச் சாதுரியமாக இந்தியாவைக் குழப்ப பார்த்தது என்பதையும், அதில் இருந்து நேரு எப்படிச் சாமர்த்தியமாகத் தப்பினார் என்பதையும் விளக்கும் உரையாடலின் பகுதியை மாலன் அறியாமல் விட்டுவிட்டார். சர்வபள்ளி கோபால் எழுதியிருக்கும் Jawaharlal Nehru; எனும் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றின் Volume II; பக்கம் 248-ல் வரும் “He (Jawaharlal Nehru) rejected the Soviet offer to propose India as the sixth permanent member of the Security Council and insisted that priority be given to China’s admission to the United Nations” என்கிற வரியை பிடித்துக் கொள்கிறார். சீனாவிற்காக இந்தியா ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்தது என்கிற பார்வையை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார் மாலன்.

Image result for nehru bulganin

இப்போது புல்கானின், நேரு இடையே நடந்த உரையாடலை பார்ப்போம்:

புல்கானின்: “நான்கு சக்திகள் மாநாடு குறித்த உங்களுடைய பரிந்துரையைக் கணக்கில் கொண்டு தேவையான நடவடிக்கையை எடுப்போம்.உலகளவில் நிலவி வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், பதற்றத்தை தணிக்கும் பொருட்டும், பிற்காலத்தில் இந்தியாவைப் பாதுகாப்பு கவுன்சிலின் ஆறாவது உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று எண்ணுகிறோம்…

நேரு: அமெரிக்காவில் சிலர் ஏற்கனவே சீனாவிற்குப் பதிலாக இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைத்ததைப் புல்கானின் அறிந்திருக்கலாம். அது எங்களுக்கும், சீனாவுக்கும் இடையே பகையைத் தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டது. அதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். அதேபோல, சில இடங்களைப் பிடிப்பதற்க வேகமாக முந்திக்கொண்டு செல்லவும் விரும்பவில்லை. அது பிரச்சினைகளை உண்டு செய்வதோடு, இந்தியாவையே சர்ச்சைக்கான பேசுபொருளாக மாற்றக்கூடும். இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் இணைக்க வேண்டுமென்றால், ஐநாவின் சாசனத்தைத் திருத்தி எழுத வேண்டும். அதற்கு முன்பு சீனாவை அனுமதிப்பது குறித்த சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். முதலில் சீனாவை சேர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். சாசனத்தைத் திருத்துவது குறித்துப் புல்கானின் அவர்களின் கருது என்ன? அதனைத் திருத்த இது சரியான நேரம் இதுவல்ல என்று நாங்கள் எண்ணுகிறோம்.

புல்கானின்: நாங்கள் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்ப்பது குறித்து உங்களின் கருத்துக்களை அறியவே இப்படிப்பட்ட பரிந்துரையை முன்வைத்தோம். இது அதற்கான நேரமில்லை, காலம் கனிந்து வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொன்றாகக் காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

மேற்சொன்ன உரையாடலில் சீனாவை நேரு அதிகமாக முன்னிறுத்துவது நமக்கு உறுத்தலை தரலாம். ஆனால், சாசனத்தைத் திருத்துவது கவனத்துக்கு உரியது. சாசனத்தைத் திருத்த ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து உறுப்பினர்களோடு பொதுக்குழுவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இது சாத்தியமில்லை என்பது நேருவுக்கு நன்றாகவே தெரியும். சோவியத் ரஷ்யா இந்தியா அமெரிக்கா பக்கம் சாய உள்ளதா? அது பாதுகாப்புக் கவுன்சிலில் தான் மட்டும் இடம்பெற கணக்கு போடுகிறதா என்று ஆழம் பார்த்தது. நேரு கச்சிதமாகச் சிக்காமல் தப்பினார். நேரு அயலுறவு சார்ந்த விஷயங்களை உள்நாட்டு பிரச்சினையாக்கி வாக்குச் சேகரிப்பதில் ஈடுபடாத மகத்தான தலைவர் என்று அதே கட்டுரையில் நூரனி புகழாரம் சூட்டுகிறார். இதை மாலன் வசதியாக மறந்துவிடுகிறார்.

உரையாடலின் போது வருகிற ஒரு பரிந்துரை ஏற்கப்படாத போது, அது நம் நாட்டை ஆழம் பார்க்கிற ஒன்றாக இருக்கிற போது அதனைப் பொதுச்சபையில் வைப்பது தேசத்தின் நலனிற்கும், அயலுறவு கொள்கைக்கும் மாறானதாக முடியக்கூடும் என்பது இந்திய அயலுறவு கொள்கையின் தந்தையான நேருவுக்கு நன்றாகத் தெரியும். நேருவுக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பு அமெரிக்காவின் நலனிற்கு உகந்ததாக இருந்திருக்கும். அதனால் சீனா, ரஷ்யாவின் பகைமையோடு வீட்டோவால் பாதுகாப்புக் கவுன்சில் இடமும் இந்தியாவிற்குக் கிடைக்காமல் போயிருக்கும். இன்னொரு முறை ரஷ்யா வாய்ப்பை வழங்கிய போது, அது கண்துடைப்பாகவே இருந்தது என்பதையும், அதை நிறைவேற்றுவது அப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா நன்றாகவே உணர்ந்திருந்தது.

இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்கிற அக்கறை நேருவிற்கு இருந்தது. அதே வேளையில், ஐநாவை கூறுபோட்டு, தன்னுடைய சீன, ரஷ்ய உறவுகளைக் கெடுத்துக்கொண்டு இன்னொரு போருக்கான சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்கிற தீர்க்கமும் நேருவிற்கு இருந்தது. இந்தச் சிக்கலான வரலாற்றை ‘நேரு பொய்யர்’, ‘சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை நேரு தாரைவார்த்து விட்டார்’ முதலிய அரைகுறை வரிகளால் விளங்கிக்கொள்ள முடியாது. ஐநாவில் சீனா அதன் தோற்றத்தில் இருந்தே இடம்பெற்று இருந்தது. எந்தச் சீனா என்பது தான் சிக்கலாக இருந்தது. சீனாவை தூக்கி எறிய வேண்டும் என்கிற அமெரிக்காவின் கணக்கிற்கு இந்தியா பலியாகாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது. சோவியத் ரஷ்யா சொன்னதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை இந்தியா தெளிவாக உணர்ந்திருந்தது. சாசனத்தைத் திருத்த தான் தயார் என்று புல்கானின் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், பிற்காலத்தில் இந்தியாவை ஆறாவது உறுப்பினராக ஆக்குகிறோம் என்கிற வரியின் ராஜதந்திர சதுரங்கத்தில் நேரு வெட்டுப்படாமல் தப்பினார். நேரு காஷ்மீர், சீனாவில் பிழைகள் புரிந்தார், அவர் அவற்றில் சரியாகவும் காய்களை நகர்த்திய தருணங்கள் உண்டு. வரலாறு சிக்கலானது மட்டுமல்ல, வெறுப்பினால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றல்ல.

காண்க:

Not at the Cost of China: India and the United Nations Security Council, 1950

In the Shadow of Great Power Politics: Why Nehru Supported PRC’s Admission to the Security Council

The Nehruvian approach

UN seat: Nehru clarifies

சொல்லித்தீராத சுட்டி விகடன்  நினைவுகள் 


சுட்டி விகடன் ‘பிரிந்து செல்கிறார் ஸ்பைடர்மேன்’ என்கிற தலைப்போடு தன்னுடைய இறுதி அச்சிதழை வெளியிட்டுள்ளது. தமிழ் படிக்க ஆரம்பித்த காலத்தில் தங்கமலர், சுட்டி விகடன், கோகுலம், அம்புலி மாமா என்றே எங்களுடைய உலகம் செழித்து இருந்தது. அதுவும் சுட்டி விகடனின் கிரியேசன்ஸ் செய்வதற்காகவே அதனைப் போட்டி போட்டுகொண்டு வாங்குகிறவர்களாக நண்பர்கள் பலர் இருந்தோம்.

Image result for சுட்டி விகடன் 

வழ வழ தாளில் காமிக்ஸ், அறிவியல், கதைகள், பொது அறிவு என்று வண்ணங்களில் எங்கள் பால்யத்தை அது நிறைத்தது. அதில் எழுதிய பலரின் பெயரை தலைகீழாகத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இன்றுவரை சொல்ல இயலும். ‘மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்’ எழுதிய வள்ளி டீச்சர் யார்? அறிவியலை சுவாரசியமாகத் தரும் கார்த்திகா குமாரி அக்கா எப்படி இருப்பார்? கையளவு களஞ்சியம் எழுதித் தள்ளுகிற சங்கரச் சரவணன் சார் என்று ஒருவர் உண்மையாகவே இருக்கிறாரா? மின்னியைக் கொன்றுவிடு என்று மாதாமாதம் மாயக்கதை சொல்லும் ரமேஷ் வைத்யா யார் என்றே எனக்கான வினாக்கள் இருந்திருக்கின்றன. முதல்முறையாக வெற்றியின் பரவசமும், தோல்வியின் கசப்பும் ஒருங்கே விகடன் நடத்திய போட்டிகளிலேயே கிடைத்தன.

எப்படி எழுதுவது என்று எனக்குக் கல்லூரி வரும் வரை தெரியாது. ராகுல் காந்தி கல்லூரிக்கு வருகிறார், அவரோடு உரையாட வகுப்புவாரியாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவலை விகடன் வேல்ஸ் சாரிடம் சொன்னேன். அவர் அங்கே நடப்பதை கட்டுரையாக்கி தரச்சொன்னார். எதோ காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, இருபத்தி ஐந்து பக்கத்தில் நடந்ததைத் தள்ளாடுகிற மொழிநடையில் எழுதிக் கொடுத்தது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும். எனினும், என்னை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரைப் பக்கத்தில் ராகுல் காந்தி சந்திப்பு குறித்த கட்டுரை சுட்டி விகடனில் வெளிவந்தது. அச்சில் என் பெயரை வெகு நாட்களுக்குப் பின்னர்ப் பார்த்த அந்தப் பரவசத்தைச் சுட்டி விகடன் பல நூறு குழந்தைகளுக்கு இறுதி வரை பரிசளித்த வண்ணம் இருந்தது.

நான் எழுதப் பழகுவதற்குக் கற்றுத் தந்த கண்டிப்புகள் இல்லாத பள்ளியாகச் சுட்டி விகடனே இருந்தது. திரைப்படம், ஆளுமைகள், வரலாறு, விளையாட்டு, மொழியாக்கம் என்று எதையெல்லாம் செய்ய விரும்பினேனோ அத்தனையையும் செய் என்று ஊக்குவிக்கிற களமாகச் சுட்டி விகடன் இருந்தது. என் எழுத்துகளை ஒலிக்கோர்வையாக இரண்டாண்டுகள் ஒலிக்க விட்டு அழகு பார்த்த அன்னை மடியும் சுட்டி விகடனே. மேற்கோள்கள் வேண்டும், ஆளுமைகள் குறித்த சிறு குறிப்புகள் வேண்டும் என்று எதைக்கேட்டாலும் எழுதித் தருகிற ஒரே இதழாகச் சுட்டி விகடன் மட்டுமே இருந்தது. அதன் லேஅவுட்களில் கட்டப்பட்ட சிரத்தை பலரின் கண்களில் படாமல் போயிருக்கும். புதிது புதிதாகப் பல்வேறு முயற்சிகளை அது எடுத்த வண்ணம் இருந்தாலும் அச்சு விற்பனையும், லாப நோக்கமும் அதன் ஆயுளை முடித்து வைப்பது கசப்பைத் தருகிறது.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அதிலும் கணேசன் சார், யுவராஜன் சார், சரா அண்ணன், விஷ்ணுபுரம் சரவணன் அண்ணன் ஆகியோர் பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்து பார்த்தார்கள். FA பக்கங்கள் கல்வியோடு கூடிய கலகலப்பான வகுப்பறைக் கனவை நெருங்க முயற்சித்தது. பல்வேறு அரசுப்பள்ளிகளின் அன்புத் தோழனாகச் சுட்டி விகடன் இருந்தது என்பது மிகையில்லை. இன்றைய அதிவேக உலகத்தில் வளரிளம் பருவத்தினரை தமிழ் கொண்டு கட்டிப்போடுவதில் உள்ள சவால் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் ஒரு காலத்திற்குப் பிறகு செய்தித் தாள்களின் இணைப்பிதழ்கள், சிறிய குழுக்களின் முயற்சிகள் தவிர்த்துப் பெரிதாக எதுவும் மிஞ்சியிருக்கப் போவதில்லை என்பது பெருந்துயர்.

திடீரென்று எப்போதோ படித்த சுட்டி விகடனின் கதைகள் கனவுகளில் சிரிக்கும். குட்டன் பாட்ரிஸ் அக்லினாவை தேடிக்கொண்டு சமீபத்தில் யுவராஜன் சாரை அலைபேசியில் அழைத்தேன். அதனைத் தேடிக்கொண்டு போன பயணம் ஏறத்தாழ பத்தாண்டு காலச் சுட்டி விகடனின் பக்கங்களைப் புரட்ட வைத்தது. ஒரு ஆறு மணிநேரத்தை அரைக்கணம் போலத் தொலைக்கிற பயணத்தை அந்தத் தேடல் பரிசளித்தது. சார்லியும், சாக்லேட் பாக்டரியும் எனும் பாஸ்கர் சக்தி அண்ணனின் மொழியாக்கத்தின் எளிமையும், கொண்டாட்டமும் நாவின் நுனியில் தேங்கி நிற்கிறது. ஆயிஷா நடராசனின் அறிவியல் எழுத்து துவங்கி மருதன் அண்ணனின் புனைவு போன்ற வரலாற்று எழுத்துகள் வரை எல்லாமே இனி நினைவலைகள் மட்டும் தான்.

கோகுலம் நின்றுபோன சில மாதங்களுக்குள் சுட்டி விகடனும் விடைபெறுவது தமிழ் சார்ந்த குழந்தைகள் வாசிப்பின் பேரிழப்பு எனலாம். தொடுதிரைகள் மிகுந்துவிட்ட நம் காலத்தில் குழந்தைகளுக்குக் காணொளிகளும், வீடியோ கேம்சும் தரும் பரவசத்தை வாசிப்பின் மூலம் ஊட்ட முடியாமல் போகிறது என்பது கசப்பான உண்மை. தன்னுடைய எல்லைகளுக்குள் வாசிப்பின்பத்தை வாரி வழங்கிய இரு சிறுவர் சுடர்கள் அணைந்து போவது அரைப்பக்க அஞ்சலியாகக் கூட இல்லாமல் போகும் அவலத்துக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.
படபடப்பும், குறைகளும், அவசரமும் மிகுந்த ஒரு கிராமத்து சிறுவனை அடைகாத்து, அவனுக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்த பெரும் நம்பிக்கையின் மரணம் என்னென்னவோ செய்கிறது.

சுட்டி விகடனின் முகப்பு வாசகமாக இருந்த ‘உயிர்த்தமிழ் பயிர் செய்வோம்’ என்பதையே எம் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் முகப்பு வாசகமாகத் தேர்வு செய்தோம். உயிர்த்தமிழை பயிர் செய்யக் குழந்தைகளின் உலகை வாசிப்பால் நிறைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.