‘Everything everywhere all at once’ திரைப்படம் – அபத்தங்களால் ஆன வாழ்வு குறித்த வெளிச்சம்.


‘Everything everywhere all at once’ – திரைப்படம் குறித்துப் பிப்ரவரி மாதம் தான் தெரியவந்தது. நண்பர் ஒருவர் instagram -ல் அப்படத்தில் இருந்து காட்சி ஒன்றை பதிந்திருந்தார். அதன் சாகசம், கற்பனைத்தெறிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக, இசையோடு கூடிய அபத்தமான நிகழ்வுகள் கட்டிப்போட்டன. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பெருமளவில் இப்படம் கவனம் ஈர்த்திருக்கிறது என்று தெரிந்ததும், கடந்த வாரம் திரைப்படத்தைக் கண்டு பேறு பெற்றோம்.

Mild Spoilers ahead

மார்வெல் காமிக்ஸ் அடிப்படையிலான படங்களின் ரசிகர்களுக்கு Multiverse என்பது புதிதில்லை. ஆனால், சூப்பர் ஹீரோக்கள் இல்லாமல் எளிய மனிதர்கள் பல்வேறு பிரபஞ்சங்களுக்கு இடையே எண்ணியபடி தாவி குதிக்க ஆரம்பித்தால் என்னாகும்? அது தான் இப்படத்தின் மைய இழை.

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ஈவ்லின் (மிச்செல் யோஹ்), அவரின் கணவர், மகள் ஆகியோர் சலவை செய்யும் கடையொன்றை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள்.
வாழ்க்கை ஒரே மாதிரி எல்லா நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நம் அன்றாட உலகை இக்குடும்பத்தினர் பிரதிபலிக்கிறார்கள். என்ன செய்கிறோம், எதற்காக ஓடுகிறோம் என்கிற வினா வாழ்க்கையை அரித்துக் கொல்கிறது. ஏற்பிற்கும், அன்பிற்கும், கனிவிற்குமான நேரமே இல்லாதது கண்முன் விரிகிறது. வருவாய் துறை அதிகாரியிடம் கணக்கு, வழக்குகளைக் காட்டுவதற்காகக் கணவனும், மனைவியும் லிஃப்ட்டில் ஏறுகிறார்கள். அங்கே தான் வாழ்க்கை திசை மாறுகிறது.

வேறொரு பிரபஞ்சத்தின் மக்கள் ஈவ்லினின் உதவியை நாடுகிறார்கள்? எதற்காக? ஈவ்லினிற்கு என்னவென்று புரிவதற்குள் பெரும் களேபரங்கள் வரி அலுவலகத்தில் நிகழ்கிறது. வேற்றுலகில் ஈவ்லினின் வாழ்க்கைகள் கண்முன் தோன்றுகின்றன. ஒரே கணத்தில் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு வாழ்க்கைகளுக்கு எகிறி குதிக்க முடிகிறது. இதனால், நிகழ்காலத்தை மாற்ற முடிகிறதா?

நம் காலத்தின் நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கை குறித்த அபத்த நகைச்சுவையாக இப்படத்தை ஒரு தளத்தில் அணுகலாம். உடைந்து போயிருக்கும் சக மனிதர்களின் கதைகளை நிதானித்துப் பார்க்க வைக்கும் மென்மையான விவரிப்பாகவும் புலப்படலாம். நிராகரிப்பும், வஞ்சனையும், துரோகமும் நிறைக்கின்றன. மிக நெருங்கிய உறவின் வெம்மை, மனப்போராட்டங்கள், அங்கீகரிப்புக்கான ஏக்கங்கள் எதுவும் புரியாத நம் வாழ்க்கை ஏன் இப்படியாகிப் போனது?

‘என்னை விட்டுவிடுங்கள். எங்கேயோ போகிறேன்’ எனப் பரிதவித்து, பிரிந்து போகத் துடிக்கும் உறவோடு எப்படி அன்பு பாராட்டுவது? முடிந்து போகும் வாழ்வில் நிலையாமை மட்டுமே உண்மை என்பது புரிந்தும், எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது? தகிப்பையும், புறக்கணிப்பையும், வெறுப்பையும் உமிழும் உலகினில் விரும்பியதை செய்ய நம்மால் முடியுமா?

இத்தனை கேள்விகளுக்கான தேடல்களையும், அறிவியல் புனைவு ஒன்றில் தத்துவ விசாரணைகள், தாய்-தந்தை-மகள் இடையேயான பாசப்போராட்டம் ஆகியவற்றோடு பிணைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பும், இசையும் மறக்க முடியாத அனுபவத்தைப் பரிசளிக்கின்றன. பல்வேறு ஹாலிவுட் படங்களை மென்மையாகக் கேலி செய்யும் காட்சிகளும் இப்படத்தில் உண்டு.

சண்டைக்காட்சிகளில் விலா நோக சிரிப்போம். பல்வேறு பிரபஞ்சங்களுக்குள் பாத்திரங்கள் பயணிப்பதால் சில நொடிகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பார்வைகள், போராட்டங்கள், அனுபவங்கள் திரையில் விரிகின்றன. அதனால் ஒரு கணத்தைத் தவறவிட்டாலும் கதையின் போக்கு குழப்பி விடும். கருந்துளையாக நம்மை உள் இழுக்கும் வாழ்க்கையைப் பேரன்போடு குறுக்கு விசாரணை செய்யும் இப்படத்தின் பெரும் பலம் அதன் நடிகர்கள்.

ஜாக்கி சான் நடிக்க வேண்டியதாக இருந்த நாயகியின் கணவர் வேடத்தில் நடித்திருக்கும் கி ஹுய் குவான் நெகிழ வைக்கிறார். வரி அதிகாரியின் கடுமையும், ஏளனமும், எச்சரிப்பும் கலங்கடிக்கின்றன. Multiverse கதைகளின் சில புள்ளிகள் பூடகமாக இருக்கும். சமயங்களில் எளிய பார்வையாளர்களைக் குழப்பியடிக்கும். இத்திரைப்படம் தன்னுடைய நேர்த்தியான திரைக்கதை, மையமான ஒரு கதையைச் சுற்றிய துணைக்கதைகளால் அருமையாகப் புரியும் வண்ணம் வெளிவந்திருக்கிறது. இப்படம் ஒவ்வொரு மனிதரைப்பற்றிய ஒரே கதைகளைப் புறக்கணித்து, அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் பற்பல கதைகளின் மீது கவனம் குவித்திருக்கிறது. அரவணைத்துக் கொள்ளவும், முன்முடிவின்றி வாழ்வினை அணுகவும், பேரன்பை பரிமாறவும், இறுதியில் எதுவும் முக்கியமில்லை என்பதையும் வண்ணமயமாகச் சொல்லிச்செல்கிறது. மறக்காமல் திரையரங்குகளில் பாருங்கள்.

விசாவுக்காக காத்திருக்கிறேன் – அண்ணல் அம்பேத்கரின் நினைவலைகள்


‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ எனும் இரு சொற்களின் அடர்த்தி, வலி அபரிமிதமானது. எது தனக்கான நாடு? சமத்துவம், சம உரிமைகள், சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பிறப்பின் அடிப்படையில் அந்நியரைப் போல நடத்தப்படுவது தகுமா? நீதி, நியாயம், நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பை உறுதியளிக்கும் அந்த சமத்துவ விசாவுக்கான காத்திருப்பு எப்போது கைகூடும்? இப்படி பற்பல வினாக்களை முப்பதிற்கும் குறைவான பக்கங்களில் பாபாசாகேபின் தன் வரலாறு எழுப்புகிறது.

ஏராளமான நூல்களை எழுத வேண்டும் என்கிற கனவுகள் கைகூடுமுன்னே அண்ணல் நம்மை விட்டுப்பிரிந்தார். அரசமைப்புச் சட்ட உருவாக்கம், கட்சிப் பணிகள், இந்து சட்ட மசோதா வரைவினை எழுதுதல், சித்தார்த்தா கல்லூரி உள்ளிட்ட கல்வித்தலம் எழுப்பல், மக்கள் பணி, இதழில் என ஓய்வு அலைச்சல் இல்லாமல் இயங்கியவரை வறுமை, ஏளனம், அவமதிப்பு, புறக்கணிப்பு வீழ்த்தவில்லை. அத்தனைக்கு நடுவிலும் அவர் எழுதினார், இயங்கினார். டாக்டர் அம்பேத்கரின் அகவுலகினை கண்முன் நிறுத்தும் எழுத்து இப்போது தமிழில். இந்நூலின் முதல் பதிப்பினை வெளியிட்ட நீலம் பதிப்பகத்திற்கு நன்றிகள்.

இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 158,159-ல் கிடைக்கும்.
நன்செய் வெளியீடு
ஓவியம்: சந்தோஷ் நாராயணன்
விலை: 20

தமிழில்: பூ.கொ.சரவணன்.

சாவித்திரிபாய் பூலே – கல்விக்கண் திறந்த ஆளுமை


சாவித்திரிபாய் பூலேவின் 125 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்பில் இருந்து..

‘வணக்கம். நலமா? என் பெயர் சாவித்திரிபாய் பூலே. என் கதையைச் சொல்கிறேன். இது பல்லாயிரம் பெண்களின் கதை.

என்னுடைய ஊர் சத்தாரா. இப்பகுதியின் அரசர் மூன்றாம் பேஷ்வா பாஜிராவ். ஊர் முழுக்கக் கட்டுப்பாடுகள். கல்வி என்பது பிராமணர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெண்கள் நிலைமை மோசம். குழந்தையாக இருக்கும் போதே திருமணம். கணவர் இறந்தால் மொட்டையடித்து ஒதுக்கிவிடுவார்கள். நெருப்பில் தள்ளும் வழக்கமும் உண்டு. படிப்பெல்லாம் சுத்தம். நாங்கள் படித்தால் உருப்பட மாட்டோம் எனச்சொன்னார்கள். ஊரில் பலருக்கும் கடிதம் எழுதுவோம் என்றார்கள். படிக்கிற பெண்ணுடைய கணவரின் சாப்பாட்டில் புழுக்கள் நெளியும். சீக்கிரம் அவர் செத்துடுவார் என்றுகூடச் சொல்வார்கள். நான் சிரித்துக்கொள்கிறேன். எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

அதை விடுங்கள். என்னுடைய ஊருக்கு போவோம். என்னுடையது விவசாயக் குடும்பம். நான் குளிர்மிகுந்த ஜனவரி மாதத்தில் பிறந்தேன். இளம் வயதில் பள்ளிக்கூடத்தைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. 9 வயதில் ஜோதிபாய்யோடு திருமணம். புனேவிற்குக் குடிபெயர்ந்தேன்.

அவர் மிஷனரி பள்ளிகளில் கல்வி பயின்றார். எனக்கும் எழுத, படிக்க உதவினார். பல்வேறு கதைகள், அனுபவங்கள். ஒருநாள் பிராமணர் வீட்டுக் கல்யாணம். போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். ‘நாமல்லாம் சூத்திரனுங்களாம். தீட்டாயிடுச்சாம். விரட்டிவிட்டுட்டாங்க’ எனப் புலம்பினார். எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என அவருக்குக் கனவு. சாதிப்பாகுபாடுகள் படிப்பாலும், விழிப்புணர்வாலும் தான் ஒழியும். நான் மேலும் படித்தேன். ஜோதிபாய் உடனிருந்தார், உற்சாகப்படுத்தினார். அவருடைய நண்பர்களும் பாடம் சொல்லிக்கொடுத்தனர். எனக்குப் படிப்பது சுகமானதாக இருந்தது. இன்னமும் கற்க வேண்டுமென ஆசையாக இருந்தது. ஃபராரி, மிட்செல் எனும் இரண்டு ஆங்கிலேய ஆசிரியைகள் அன்போடு உதவினார்கள். நான் படித்ததைப் பலருக்கும் சொல்லித்தரும் நேரம் எப்போது வரும்?

ஜோதிபாய் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். ஒரே எதிர்ப்பு. பள்ளிக்கூடத்திற்கு வெளியே ‘ஒழிஞ்சு போங்க’னு கோஷம் போடுவார்கள். என் மாமனாரை தூண்டி விட்டார்கள். ‘நீ எக்கேடோ கெட்டுப்போ. இவளை ஏன் படிக்க வைக்கிறே’ எனக்கேட்டார். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நடுத்தெரு என்றார். நானும், ஜோதிபாயும் நடுத்தெருவை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்குள் கல்விக்கனல் எரிகிறது. அது ஒரு வீட்டிற்குள்ளேயே அணைந்து விடலாமா? ஆகாது.

எங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஒரே ஆசிரியரையும் மிரட்டினார்கள். வேறு வழியில்லை. என்னையே பாடம் நடத்தச் சொன்னார் ஜோதிபாய். பள்ளிக்கு நடந்து போவேன். என் மீது சாணி, அழுகிய காய்கறிகளை வீசுவார்கள். சில நாட்கள் வெற்றிலைப் போட்ட எச்சில் கூடப் பரிசாகக் கிடைத்தது. முதலில் பயமாக இருந்தது. பள்ளியின் பெண் குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பயமெல்லாம் பாசத்தின் முன் பறந்தது. அழுக்குகளை வீசியவர்களிடம் சொன்னேன், “என்னுடைய தங்கைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்போகிறேன். இந்தக் குப்பைகள் எல்லாம் எனக்கான வாழ்த்து மலர்கள். இறைவன் உங்களை ரட்சிக்கட்டும்’.

என் அண்ணன் என்னைக் கடிந்து கொண்டான். ஏன் இந்த வேண்டாத வேலை என்றான். நான் சொன்னேன்,
“படிக்காமல் இருப்பது முழு மிருகத்தனம். அறிவைப் பெறுவதாலே பிராமணர்கள் மேல்நிலையில் உள்ளார்கள். கல்வியும், அறிவும் அற்புதமானது. கற்றவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் எனப்பட்டாலும் அவரே உயர்ந்தவர். நாங்கள் தீண்டப்படாதோர் கற்க வேண்டும் என உழைக்கிறோம். அதன்வழியே விடுதலை கிட்டும். என் கணவர் பிராமணர்களை எதிர்த்துக்கொண்டு ஏன் தீண்டப்படாதவர்களுக்குக் கற்பிக்கிறார்? அவர்களும் சமமான மனிதர்கள். மானமிகு வாழ்க்கை எல்லாருக்கும் ஆனது. அதற்குக் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே நானும் கற்பிக்கிறேன். இதிலென்ன தவறு ? நாங்கள் சிறுமிகள், பெண்கள், மகர்கள், மங்குகள் என அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்போம்’ என்றேன்.

ஆரம்பத்தில் பெரிதாகப் பெண்கள் படிக்ற வரவில்லை. இத்தனைக்கும் எங்கள் பள்ளியே இந்தியர்கள் நடத்தும் முதல் பெண்கள் பள்ளி. நானும், ஜோதிபாயும் ஊர் ஊராகச் சுற்றினோம். படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பரிசுப்பணம் தந்தோம். கிராமம், கிராமமாகப் படிப்பின் அவசியம், நன்மைகளை எடுத்துச் சொன்னோம். கல்வியோடு விளையாட்டுகள், கலைகளைப் பேரன்போடு பகிர்ந்தோம். கூட்டம் பெருகியது.

9 ஆசிரியர்கள், 132 மாணவர்கள், 3 பள்ளிகள். அது கனவின் தொடக்கம். 1851, 1852 காலத்தில் தேர்வுகளை நடத்தினோம். கிட்டத்தட்ட திருவிழா தான். பெண்கள் படித்து, தேர்வில் அசத்துவதைப் பார்க்க 3,000 பேர் கூட்டம். அலையில் எழும் சூரியனாய் எங்கள் பெண்கள் மின்னினார்கள்.

‘பூனா அப்சர்வர்’ எனும் பத்திரிகை 1852 -ல் என்ன எழுதியது? ‘ஜோதிபாய்- சாவித்திரிபாயின் பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களை விடப் பத்து மடங்கு அதிகப் பெண்கள் படிக்கிறார்கள். மிக உயர்ந்த கல்வித்தரம். விரைவில் இப்பெண்கள் பெரும் சாதனைகள் புரிவார்கள்’. 50 க்கும் மேற்பட்ட பெண்கள், அனைவருக்குமான பள்ளிகளை நடத்தினோம்.

எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஜோதிபாயை இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘குழந்தை பிறக்கலைனா பொண்ணு தான் மலடியா? ஆம்பிள கிட்டயும் பிரச்சனை இருக்கலாமே. பிள்ளை பொறக்கலைனு பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனுக்கு எப்படியிருக்கும்? என்னால சாவித்திரியை விட்டுட்டு இருக்க முடியாது’ என்றார்.

பல கைம்பெண்கள் நிலைமை கண்ணீரை வரவைத்தது. சொந்தக்கார ஆண்கள் வதைத்தார்கள். பரிதாபமாகக் கைம்பெண்கள் கர்ப்பமானார்கள். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களைக் காப்பாற்றினோம். 1853-ல் அப்பெண்களை அரவணைக்க இல்லம் துவங்கினோம்.

கையால் நெய்த ஆடைகளை அணிவது வழக்கம். அவை எளிமையான, ஆனால், கம்பீரமான ஆடைகள். இல்லத்தரசிகளுக்கு ஆடை நெய்யக் கற்றுக்கொடுத்தேன். பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் அமைப்பைத் துவங்கினேன். மாமியார், மருமகள், அம்மா, மகள் என அனைவரும் வந்தனர். ஒன்றாக அமர்ந்து சொந்தக்காலில் நிற்கப் பழகினோம்.

கைவிடப்பட்ட கைம்பெண் ஒருவரின் மகனை தத்தெடுத்துக் கொண்டோம். யஷ்வந்த் எனப் பெயரிட்டு வளர்த்தோம். மருத்துவம் படித்தபின் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குச் சேவை செய்தான் யஷ்வந்த்.

கண்முன் இன்னொரு அநீதி தெரிந்தது. கணவன் இறந்ததும் கைம்பெண்களுக்கு மொட்டையடித்தார்கள். மனைவி இறந்தால் கணவனுக்கு மொட்டையடிக்கிறோமா? ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்தக் கொடுமை? சவரம் செய்பவர்களை நாடினோம். வேலை நிறுத்தம் செய்யக் கோரினோம். கூடுதல் கூலி வேண்டியோ, சலுகைகள் நாடியோ அல்ல. கைம்பெண்களின் சமத்துவம் நாடி போராட்டம் நிகழ்ந்தது. சவரக்கத்திகள் ஓய்வெடுத்தன. பல கைம்பெண்களின் கண்ணீர் காணாமல் போனது. அந்தச் சவரத்தொழிலாளர்களை நினைக்கும் போதே பெருமிதம் பூக்கிறது.

1877-ம் ஆண்டு. பெரும் பஞ்சம். மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள். விலங்குகள் இறந்து தரையில் விழுந்தன. பெரும் உணவுப்பஞ்சம். மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள். ஆறு, குட்டை, குளம் எல்லாம் வற்றின. தவித்த வாய்க்கு தண்ணீரில்லை. மரங்களில் இலையே தென்படவில்லை. வறண்ட நிலம் பாளம், பாளமாய்ப் பிளந்தது. விஷப்பழங்களை உண்டார்கள், சிலர் சிறுநீரை குடித்தார்கள். மக்கள் உணவுக்காக, தண்ணீருக்காக அழுதார்கள், பின், பரிதாபமாக இறந்தார்கள்.

நாங்கள் கிராமம், கிராமமாகச் சுற்றினோம். இயன்றவரை நீரும், சோறும் தந்தோம். கந்துவட்டிக்கார கொடுமைகளைத் தட்டிக்கேட்டோம். ஏழைப்பிள்ளைகள் தங்கவும், கற்கவும் 52 விடுதியோடு கூடிய பள்ளிகள் திறந்தோம்.

1890-ல் ஜோதிபாய் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஆணும், பெண்ணும் சமம் எனும் தாமஸ் பெய்னின் ‘Rights of Man’ னின் வரிகளை ஜோதிபாய்ச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை எண்ணிக்கொண்டு நானே அவரின் உடலுக்குத் தீமூட்டினேன்.

1897 பெரும் பிளேக் நோய். லட்சக்கணக்கான மரணங்கள். மருத்துவர்கள் சாதி பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் யாருமின்றி இறந்தார்கள். நானும், யஷ்வந்தும் அசரவில்லை. எங்கள் சத்தியசோதக் அமைப்பினரோடு உழைத்தோம். மருத்துவமனைகள் நடத்தினோம். உயிரைப் பணயம் வைத்து போராடினோம். பிளேக் நோயுற்ற மகர் சிறுவன் ஒருவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நானே தொட்டுத் தூக்கினேன். அவன் உயிரை காப்பாற்றி விட்டோம். களைப்பாக இருக்கிறது. பிறிதொரு நாள் இன்னமும் சொல்கிறேன். ‘

சாவித்திரிபாய் பிளேக் நோய்க்கு எதிரான போரின் போதே வீர மரணம் எய்தினார். ‘கல்வித்தாய்’, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ எனும் பல்வேறு பெருமைகளுக்கு உரியவர். ‘மாசற்ற ரத்தினங்களின் பெருங்கடல்’ எனும் கவிதை நூல் இயற்றினார். அவரின் கவிதை ஒன்று:

உனக்கு நீயே துணை, ஓயாமல் உழை.
கல்வியும், பொருளும் கொண்டு சேர்.
அறிவிழந்தால் அனைத்தும் அழியும்.
கல்விச்செல்வமின்றிக் கால்நடை விலங்கு நாம்.
சோம்பி அமராதே, எழு, கல்வி கற்றிடுக.
ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் துயர்துடை.
கற்கும் பொன் வாய்ப்பினை பற்றிக்கொள்.
ஆகவே, கற்றிடுக, சாதிச்சங்கிலிகளை உடைத்தெறிக.
பிராமணர்களின் புனித நூல்களை வேகமாகத் தூக்கியெறிக.

உன் குரலினும் உற்ற கீதம் உண்டோ அம்மா?


சில குரல்களுக்கு வயதே ஆவதில்லை என்று தோன்றும். அல்லது அக்குரல் எல்லா பருவங்களிலும் நம்மோடு அணுக்கமாக, நெருக்கமாக உரையாடும் ரசவாதம் கூட காரணமாக இருக்கலாம். எஸ்.பி.பி.யின் குரல் அத்தகைய கவர்ச்சியை காலங்களைக் கடந்து பரிசளித்துக் கொண்டே இருந்தது. ரஹ்மானின் குரலிலும் எப்போதும் உணர்வெழுச்சியை, புத்துணர்ச்சியை நல்கும் வசியம் உண்டு. கட்டுரை அதைப்பற்றியல்ல.

முதுமையால் பிடித்த பாடகர்கள் வரிகளை மறக்கும் போது ஏற்படும் பரிதவிப்பே தாள முடியாதது. ஞாபகங்கள் தவறி குழறும் உறவுகளின் குரல்களைப் போல நொறுக்குபவை வேறொன்றில்லை.  முதுமை, மூப்பு, நோய்கள் குறித்த கவலைகள் பெருந்தொற்று காலத்தில் பெருகி இன்று வரை கனவுகளிலும் அச்சுறுத்துகிறது.

என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாளின் குரலுக்கு வயதே ஆவதில்லை எனத் தோன்றும்.  உருவத்திற்கும், குரலிற்கும் தொடர்பில்லை என்பதைப் போன்ற ஆளுமை அக்குரலில் வெளிப்படும். மேடைப் பேச்சிற்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர் அளிக்கும் பயிற்சியே சுவை கூட்டுவது. ஏற்ற, இறக்கம், எங்கே நிறுத்துவது, எப்போது புன்னகைப்பது, எங்கே கைகள் உயர வேண்டும், எங்கே விரைய வேண்டும் என அனைத்தையும் பொறுமையாக சொல்லித்தருவார். அசோகமித்திரனின் புலிக்கலைஞனை அக்கணங்களில் ஏனோ நினைவுபடுத்துவார் அம்மா.

அநேகமாக அம்மாவின் பால்யம் முதல் இன்று வரை நோக்காடே விலகாத துணையாக வருகிறது. மஞ்சள் காமாலை, காசநோய் என்று அத்தனைத் தாக்குதல்களும் அவரின் குரலின் தன்னம்பிக்கையை சிதைக்க முடிந்தது இல்லை. வலியின்றி அவர் உறங்கிய நாட்கள் அரிதாகவே வாய்த்தன. ஆயினும், இன்றைக்கு தான் முதல் முறையாக பள்ளிக்குச் செல்லும் சிறுமியைப் போல் உற்சாகமாக அவர் பள்ளிக்குச் செல்வார். அத்தனை வலியும் ஊழித்தாண்டவத்தில் காணாமல் போகும் நிலத்தைப் போல மறையும். தமிழருவியாய் பொழியும். கதைப்பாடல்கள் கண்முன் விரியும். மெய்ப்பாடுகள் அவரை ஆட்கொள்ளும்.

அம்மாவை பெருந்தொற்றுக் காலம் மனதளவில் சோர்வடைய வைத்தது. குழந்தைகள் இல்லாத அவை வெற்று அறைகளாக அவரை வாட்டின. அவர் குரல் சவலையாக ஒலிக்கும்.  அவர்களைக் கண்ட முதல் நாள் அம்மாவின் குரலின் இளமை ஆச்சரியப்படுத்தியது.

அம்மாவிற்கு சமீபத்தில் உடல்நலம் பெருமளவில் குன்றியது. பக்கவாதம் அவரின் பேச்சையும், செயல்பாட்டையும் பதம் பார்த்தது. மருத்துவமனையின் அச்சுறுத்தும் சூழலில் கூட ‘நான் கொடியேத்தப் போயிருவேனில்ல?’ என்று மட்டுமே அவர் கேட்டார். ‘எப்படா என்ன ஸ்கூலுக்கு கூப்பிட்டுப் போவீங்க’ எனக்கேட்கையில் அக்குரலின் ஏக்கம் என்னவோ செய்தது. ஆயினும், மனவுறுதியாலும், மருத்துவத்தின் உதவியாலும் அம்மா தேறி வருகிறார்.

நேற்று தான் முதல் சுழி போட்ட சிறுமியைப் போல, எழுத்துகளை அசைவற்ற விரல்களால் உயிர்ப்பூட்டினார். அவை கண்ணாமூச்சி ஆடின. அவர் தளர்வார். உடைந்து போய் மீண்டும் முயல்வார். அவரின் குரலை நோய்மை வருத்தியது. மூப்பும், வாழ்வின் நிலையாமையும் இன்னமும் அருகே அச்சுறுத்தின. ஆயினும், அம்மாவின் மணி, மணியான கையெழுத்து மீண்டும் துளிர்த்தது. அவர் பள்ளித்தலம் நோக்கிச் சென்ற அந்நாள் அவரின் குரலில் அத்தனை நம்பிக்கை இல்லை. ஒவ்வொன்றிற்கும் பிறரைச் சார்ந்திருப்பதை அவர் வெறுத்தார். ஆயினும், பள்ளி வாசலை மிதித்ததும் அவரின் குரல் மறுபிறப்பெடுக்கும். காணொளியில் அத்தருணங்களை விழி நீர் வழியாமல் காணவே முடியாது. அம்மாவின் கடந்த காலக்குரல் தான் இப்போதும் ஒலிக்கிறதா எனத்தெரியவில்லை. ஆயினும், அக்குரல் அதிசயமானது. அது துவளாதது. முதுமை அருகே வருகையிலும் இளமையாய் முறுவலிப்பது. உடற்பிணி எவற்றின் தடயமும் இன்றி மிளிர்வது. அம்மா பாடிக் கேட்டதே இல்லை. அவரின் பேச்சினும் அரிய இசைக்குறிப்பு உண்டா என்ன?

(இன்றோடு அம்மா ஆசிரியப்பணியில் சேர்ந்து 26 ஆண்டுகள் நிறைவடைகின்றன).

மறைந்து போதல் எனும் கலை


என்னை உனக்குத் தெரியாதா என்று அவர்கள் வினவும்போது,
தெரியாது என்று பதிலளி.

அவர்கள் பார்ட்டிக்கு அழைக்கையில்,
அந்தக் கூடுகைகள் எப்படியிருக்கும் எனப் பதிலளிப்பதற்கு முன் ஒரு கணம் யோசிக்கவும்.
உரத்த குரலில் யாரோ ஒருவர் தான் எப்போதோ கவிதையொன்றை இயற்றியதாக உன்னிடம் தெரிவிப்பார்கள்.
வழவழப்பான சாஸேஜ் உருண்டைகள் காகித தட்டுகளில் பரிமாறப்படும்.
இப்போது பதிலளி.

நாம் எல்லாம் சேர்ந்து களிப்போம் என அவர்கள் சொன்னால்,
ஏன் என வினவு.

அவர்களை முன்போல நீ அன்பு செய்யவில்லை என்று பொருளல்ல.
நீ மறந்து விடக்கூடாத ஒன்றை நினைவுகூர முயன்று கொண்டிருக்கிறாய்.
மரங்கள். அந்திக் கருக்கலில் ஒலிக்கும் மடாலய மணி.
அவர்களிடம் புதிய வேலையொன்று உனக்காகக் காத்திருப்பதாகச் சொல்.
அது எப்போதும் முடியப்போவதே இல்லை என அறிவிக்கவும்.

காய்கறிக்கடையில் யாரேனும் உன்னை அடையாளம் கண்டுகொண்டால்,
கொஞ்சநேரம் தலையசைத்துவிட்டு, முட்டைகோஸ் போல மாறிவிடு.
பத்தாண்டுகளாகத் தலைகாட்டாத ஒருவரை வாசலில் சந்தித்தால்,
உன்னுடைய புதிய கீதங்களை எல்லாம் அவனிடம் பண்ணிசைக்காதே.
உன்னால் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க இயலவே இயலாது.

இலை போல உணர்ந்து உலவி நட.
எந்த நொடியிலும் நீ தடுமாறி விழலாம் எனத் தெரிந்துகொள்.
உன் நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய என இப்போது முடிவெடு. –
Naomi Shihab Nye,
Words Under the Words: Selected Poems தொகுப்பு

தமிழில்: பூ.கொ.சரவணன்

‘Fullbright Scholar’  ஆனந்த் தட்சிணாமூர்த்தியின் கல்விக்கனவிற்கு கைகொடுங்கள் !


அனைவருக்கும்  அன்பு கலந்த வணக்கம், 

    உங்களிடம் ஒரு பேருதவியை  எதிர்நோக்கி எழுதுகிறேன். தமிழ்நாட்டில் புனைவு, அல்புனைவில் வெளிவரும் ஆக்கங்கள் அற்புதமானதாக இருந்தாலும் எப்போதும் ஒரு குறை உண்டு. அவை பிற மொழிகளிலோ, ஆங்கிலத்திலோ  முறையான  மொழியாக்கம், செம்மையாக்கம்  இல்லாததால் சென்று சேர்வதே இல்லை. இப்போது எதற்கு இதெல்லாம்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன்.

அமெரிக்க-இந்திய அரசுகள் இணைந்து  Fulbright-Nehru  Fellowship ஒன்றை உருவாக்கின. இதன் நோக்கம் ஒன்று தான். அமெரிக்காவின்  தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்தியாவை  சேர்ந்தவர்கள் மேற்படிப்பு  படிப்பதற்கான உதவியை நல்கும்  திட்டமாகும். பல்வேறு கட்டத்  தேர்வுகள், நேர்முகத்திற்கு  தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகள்  அமெரிக்காவில்  மேற்படிப்பு படிக்க அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு என்று J1 விசா வழங்கப்படும். இந்த விசா  சற்று வேறுபட்ட ஒன்று. இந்த விசாவில்  அமெரிக்கா  செல்லும் மாணவர்கள் படிப்பு  முடிந்ததும்   இந்தியாவிற்கு திரும்பி விடவேண்டும்.  கல்விக்காலம்  முடிந்த  பிறகு  அங்கே வேலை  பார்த்து கல்விக்கடன், செலவுகளை  ஈடுகட்டும்  வாய்ப்பு அறவே இல்லை. Fullbright Fellowship  கல்விக்காலம்  முடியும் வரை, குறிப்பிட்ட  உதவித்தொகையை  மாதாமாதம்  வழங்கும். இந்த உதவித்தொகை பாதி கல்விக்கட்டணத்திற்கு தான் போதுமானது. மீதமுள்ள தொகையை  கற்கப்போகும் மாணவரே திரட்ட வேண்டும். Inlaks Scholarship, JN Tata Endowment loan scholarship என்று  சிற்சில  உதவித்திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாருக்கும்  உதவுவதில்லை. 

இப்போது ஆனந்த் தட்சிணாமூர்த்தியை  சந்திப்போம். அவரின்  சொற்களிலேயே ,

“என் பெயர்  ஆனந்த் தட்சிணாமூர்த்தி.  நியூயார்க் பல்கலைக்கழகத்தின்,  ‘Centre for Publishing’ ஆனது  ‘Publishing: Digital and Print Media’ -ல் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. இக்கனவை  எட்டுவதற்கு இப்படிப்பிற்கு  செலுத்த  வேண்டிய  கட்டணமே தடையாக கண்முன்  நிற்கிறது. 

பெருமைமிகு Fulbright-Nehru  Fellowship எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தரப்படவுள்ள உதவித்தொகைமேற்படிப்பினை  முடிக்க  போதுமானதில்லை. பாதிக்கு பாதி கட்டணத்தை  கட்ட  முடியாத  நிலையில் உள்ளேன். இக்கட்டணத்தை  செலுத்த  உங்களின் மேலான உதவியை  நாடுகிறேன். 

பதிப்புத்துறையில்  மேற்படிப்பில் கால்பதிக்கப் போகும் முதல் Fullbright  Scholar  நானாகவே  இருப்பேன். பதிப்புத்துறையில்  புதியன விரும்பும் ஒருவனாக இக்கனவை  துரத்துகிறேன். 

அம்மாவை இளம்வயதிலேயே  பறிகொடுத்துவிட்ட  என்னை  என் அப்பா தான் தனியொருவராக  வளர்த்தெடுத்தார்.  அப்பா தமிழ்  இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். (சட்டம், பொருளாதாரம் என்று அவரின் கல்வித்தாகம்  விரிந்து கொண்டே இருந்தது ).  அப்பா, சங்க இலக்கியத்தை நிலாச்சோறுடன்   ஊட்டி வளர்த்தார். என்னை பகுத்தறிவாளனாக  வளர்த்தெடுத்தார். பக்தி இலக்கியத்தின் கவிதைகளை ஆழமாக  அறிந்துகொள்ள மட்டுமே ஆலயங்களை நோக்கி பயணித்தோம். தீவிர இலக்கிய கூட்டங்களின் வழியாக தமிழ் இலக்கியத்தில் மனதைப்  பறிகொடுத்தேன். பெரும்பாலான  மாணவர்களை  போல பொறியியல் படித்து முடித்தேன். இருந்தாலும் மனதெல்லாம் கலை, இலக்கியத்தை சுற்றியே சுழன்றது. 

‘Young India Fellowship’ (YIF) எனும்  இலக்கியம், வரலாறு  உள்ளிட்ட பல்கலை பயிற்சியினை வழங்கும் படிப்பினில்  இணைந்தேன். இப்படிப்பிற்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாணவர்களில் முழு  உதவித்தொகை பெற்ற  வெகு சிலரில் நானும் ஒருவன். அங்கே வழங்கப்பட்ட எழுத்துப்பயிற்சி, கடுமையான பாடம் சார்ந்த தேடல்கள் எழுதுவதற்கான  ஊக்கமாக அமைந்தது. தமிழிலக்கியத்தினை உலக அரங்கிற்கு  கொண்டு சேர்க்கும் என் கனவுகள் அங்கேயே துலக்கம்  பெற்றன. தயங்கி தயங்கி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த நான் நம்பிக்கை மிளிர பேசவும், எழுதவும் ஆரம்பித்தேன். என் வாழ்க்கையும், இலக்கும்  தெளிவானது. எனக்கான  திசை புலப்பட்டது. 

What have I done so far?

YIF-ல் வாசிப்பின் மீது தீராக்காதல்  பெருக்கெடுத்தது. பல்வேறு  எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை  சந்தித்தேன். எப்படி  மைய நீரோட்ட பதிப்பாளர்கள்  இந்திய மொழிகளில் வெளிவரும் ஆக்கங்களை கண்டும் காணாமல்  இருக்கிறார்கள் என்று கண்முன்னே பார்த்தேன். ராயல்டி என்று  சொற்பத்தொகை மட்டுமே படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவதை கண்டேன். மேற்கத்திய  நாடுகளில் எப்படி படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஏலம்  விடப்படுகின்றன, நம்ப முடியாத அளவுக்கு படைப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுவதையும்  அறிந்து கொள்ள முடிந்தது. பதிப்பாளரால் தான் பதிப்புத்துறையின்  போக்கை மாற்றி, உள்ளூர் மொழிகளில் இயங்கும் எழுத்தாளர்களை  உலகமெங்கும் கொண்டு சேர்க்க முடியும் என்று  புரிந்தது. 

இதே  காலகட்டத்தில் இதழியல், படைப்புகளை சந்தைப்படுத்தல், பலரிடம் படைப்புகளை சென்று சேர்த்தல்  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். இந்தியாவின்  முன்னணி இதழியலாளர்களில்  ஒருவரான   சேகர் குப்தாவுடன் இணைந்து ThePrint  எனும்  செய்தித்தளத்தை  வளர்த்தெடுப்பதில் ஈடுபட்டேன். அங்கே அரசியல் கட்டுரைகள், ஆளுமைகள்  குறித்த ஆக்கங்கள், நெடுங்கட்டுரைகள் ஆகியவற்றை  இடைவிடாமல்  எழுதினேன்.    

You can find all the articles under my byline here – https://theprint.in/author/aananth-daksnamurthy/

இப்பணிக்கு பிறகு, தமிழ்நாட்டின்  கலைப்படிப்புகளுக்காக உருவான முதல் தனியார் பல்கலைக்கழகத்தினை  வளர்த்தெடுப்பதில்  பங்காற்றினேன். தமிழ்நாடு அரசின் தொழிற்துறையில்  ‘ Content & brand communications’-னை  தலைமையேற்று  நடத்தினேன். 70 பக்க அளவில் வெளிவரும் தொழிற்துறையின்  காலாண்டிதழினை தொகுப்பது, எடிட் செய்வதில் ஈடுபட்டேன். முதலமைச்சரின் உரைக்கான  கருத்துகளை  வடிவமைப்பதிலும்  பங்காற்றினேன்.  

 
https://investingintamilnadu.com/DIGIGOV/TN-pages/enewsletters.jsp?pagedisp=static
 இவை போக  வெவ்வேறு ஆவணப்படங்களின் மொழியாக்கத்திலும்  ஈடுபட்டேன்.  My work for Race to Feed the World Docuseries

 CNA Insider docuseries-ல் வெளிவந்த  ‘Race to feed the world’ ஆசியாவின் உணவுப்பாதுகாப்பு குறித்து பேசுகிறது. 
https://www.channelnewsasia.com/watch/race-feed-world/question-space-1925316My work for The Longest Day Docuseries

‘The Longest Day’ எனும் ஆவணப்படம் பருவநிலை  மாற்றத்தினால்  ஆசியா  எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறது  என்பதை  விவசாயிகள், மக்கள் நலப்பணியாளர்கள், இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்கள்  ஆகியோரின்  குரல்களின் வழியாக ஆவணப்படுத்தியது. 

https://www.channelnewsasia.com/watch/longest-day/water-1463951

அண்மையில், அல்புனைவு தமிழ் நூலொன்றின் சில பகுதிகளை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம்  செய்தேன்.  தமிழ் இலக்கிய  ஆர்வலராக  இருந்ததில்  இருந்து பதிப்புத்துறையின்  ஆழ, அகலங்களை அறியும் இடத்திற்கு  வந்து நிற்கிறேன். 

என்னுடைய  கனவு அயலகத்திற்கும், தமிழகத்திற்கும் பாலம் அமைக்கும்  ஒன்றாகும். நம் நாட்டின்  எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்களை  அமெரிக்காவின்  புகழ் மிக்க  பதிப்புத்திட்டங்களுக்கு  அறிமுகப்படுத்துவது ஒரு கனவு.  உலகமெங்கும்  பரவிக்கிடக்கும் ஆகச்சிறந்த  சிந்தனைகள், திறன்கள்,  வளங்களை இந்திய மொழிகளுக்கான பதிப்புத்துறைக்குள் கொண்டு  சேர்ப்பது மற்றொரு கனவு.   இதனை இப்பட்டப்படிப்பு  சாத்தியப்படுத்தும்.  


மேற்படிப்புக்கு ஆகும் செலவு: 
 

NYUஇரண்டாண்டு படிப்பு 
முதலாண்டு (12 மாதங்கள் )இறுதியாண்டு  (10 மாதங்கள் )
tuition $42,462$44,797
கல்விக்கட்டணம் $2,346$2,475
காப்பீடு $3,845$4,056
விடுதிக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் $26,220$21,850
புத்தகங்கள் $1,200$1,000
மொத்தம் $76,073$74,178
Fulbright Award$39,995$44,056
பற்றாக்குறை $36,078$30,122

 
ஏறத்தாழ 66,190 $ பற்றாக்குறை  உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான  வாய்ப்பினை  வேண்டாம்  என்று  சொல்கிற மனநிலைக்கு வந்து விட்டேன். எனக்கான கல்விக்கான  வாசல் கதவுகளை  திறக்க  தமிழ்ச்சமூகம்  உதவும்  என்கிற நம்பிக்கையில்  உங்களிடம் உதவி கேட்கிறேன். நியூயார்க் பல்கலையில்  படிக்கும் வாய்ப்பினை பெறுவதற்கு  தாராளமாக  உதவிடுங்கள். 

Milaap தளத்தில்  ஆனந்தின் மேற்படிப்புக்கு உதவுவதற்காக சுட்டி:  https://milaap.org/fundraisers/support-aananth-daksnamurthy

 உங்களின்  நேரத்திற்கும், பேரன்பிற்கும் நன்றிகள், 
அன்புடன், ஆனந்த்  தட்சிணாமூர்த்தி 

வங்கிக்கணக்கு  விவரம்: 

Account holder name: Aananth D

Account number: 002001001623067

Bank name: City Union Bank

IFSC code: CIUB0000153

Swift Code: CIUBIN5M


மேலதிக விவரங்களுக்கு: 


 aananth95@gmail.com எனும் மின்னஞ்சல்  முகவரியில்  என்னைத் தொடர்பு  கொள்ளலாம்

வங்கிக்கடன் முதலியவற்றை  முயன்று  பார்க்கலாமே?:

என்  தந்தை  ஓய்வு பெற்ற  அரசு  ஊழியர். ஓய்வூதியத்தை  சார்ந்து  வாழும் அவரால் இவ்வளவு பெரிய தொகைக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. எப்படியாவது இந்த கட்டணத்தை கட்ட நான் முயன்று பார்த்து விட்டேன். வேறெந்த  வழியும் இல்லாத நிலையில் தான், உங்களின்  உதவியை வேண்டுகிறேன்.  

இப்படிப்பிற்கு பின்பு என்ன திட்டம் ? 

படிப்பு  முடிந்ததும், இந்தியாவிற்கு  திரும்பி இந்திய மொழிகளில்  பதிப்புத்துறையில் உடனடியாக இயக்குவேன். சிறிய அளவிலான பதிப்பகம்  ஒன்றை  துவங்கி  நடத்தும்  திட்டம் உள்ளது. வளர்ந்து வரும்  எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்  ஆகியோர் பயன்பெறும் வண்ணம் உள்ளுறை உதவித் திட்டங்களை  எடுத்து நடத்தும்  திட்டமும்  உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து ‘மாநிலப் பாடலான’ வரலாறு.


‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின்  பாயிரத்தில் உள்ளது .  பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர்.  கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார்.    தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக  நூலிற்கு  ஆங்கிலம், தமிழ்  என்று  இரு  மொழிகளிலும்  முன்னுரை எழுதியுள்ளார்.   


தன்னுடைய  முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது”  என்று  வருந்துகிறார்.  

ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை


பாயிரத்தில்  ‘தமிழ் தெய்வ  வணக்கம்’ என்று  தமிழை  தெய்வமாக  போற்றிப் பரவுகிறார்.  கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில்  தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு  என்று பலவாறு  போற்றுகிறார். இப்பாடலில்  வழங்கி வரும் முதன்மையான கருத்துகள்  என்று சிலவற்றைப்  பேராசிரியர் கைலாசபதி  அடையாளப்படுத்துகிறார். அவை,

  (அ) இந்திய நாட்டில்  தெக்கணம்  திலகமாகத்  திகழும்  பகுதி. 

(ஆ) திராவிடம் முதன்மையான  சிறப்புமிக்கதாகும் 

(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும்  புகழும், பெருமையும் மிக்கது

(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை  போன்றது தமிழ்

(உ) தமிழே  திராவிட  மொழிகளுக்கு  தாய்

(ஊ) ஆரியம்  போல்  வழக்கழியாமல்  சீரிளமை  மிக்க  மொழியாகத்  தமிழ்  திகழ்கிறது 


“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்  எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்   கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்  உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”


‘நீராருங்  கடலுடுத்த’ எனும்  துவங்கும்  இப்பாடல்  முந்தைய தமிழ்  படைப்புகளில்  இருந்து பல வகைகளில்  வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில்  புதிய பாய்ச்சலுக்கு  அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின்  பார்வையில்  தமிழ்த்தேசியத்திற்கான  முன்னோடிப்  பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர்  பிரேர்னா  சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர்  நலனும்  கைகோர்க்கும்  இடம் என்கிறார். தமிழ்த்தாயின்  உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று  சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர்   சுமதி  ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார்   கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற  மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.

அவ்வரிகள்,  


வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள் 

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி 

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள

 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.


இப்பாடலுக்கு  பிறகே  தமிழைத் தாயாக, தெய்வமாக  போற்றிப்பரவுவது  பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக  போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில்  எண்ணற்ற  பாடல்கள்  தமிழன்னையை  போற்றி  பாடப்பட்டன. இவற்றுக்கான  முதல்  வித்து  ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’ ஆகும். 

நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்


கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய  மூன்றாம்     ஆண்டறிக்கையை  1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப்  பற்றி  பேசுகிறது:

பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’  என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை  ஆய்வாளர்  கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார். 

1913-ம் ஆண்டறிக்கை


இப்பாடல் படிகளை  கரந்தை  தமிழ்ச்சங்கத்தை  சேர்ந்த  உமாமகேசுவரனார்  பல நூறு  பிரதிகள்  அச்சிட்டு  கொண்டு  சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும்  பாடப்பட்டது. பல்வேறு  தமிழ்ச்சங்க  கூட்டங்களில்  இப்பாடல்  ஒலித்தது. தனித்தமிழ்  மாநாடுகளில்  தவறாமல்  இடம்பெற்றது.  .தனித்தமிழ் மாநாடுகள்,  பாடநூல்களில்  இடம்பெற்றது. தனிநாயகம்  அடிகள் “இப்பாடலின்  வரிகள் கடந்த  அறுபது  ஆண்டுகளாக  எதிரொலித்துக்  கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான  பாடல்  எனும்  அதன்  பெருமையை  விஞ்சும்  படைப்பு  எதுவுமில்லை”  என்று  1963-ல் புகழ்ந்தார். 

இப்பாடலை  தமிழக  அரசு  அனைவரும்  பாடும்வண்ணம்  வழிவகை  செய்ய  வேண்டும்  என்கிற  கோரிக்கைகள்  அறிஞர் அண்ணா  ஆட்சிக்காலத்தில்  வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா  இயற்கை  எய்திவிட, கலைஞர்  கருணாநிதி  அப்பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கரந்தைத்  தமிழ்ச்சங்க  விழாக்களிலேயே  முதல்  ஆறு  வரிகள்  மட்டுமே  பாடப்பட்டு  வந்தன  என்பதை  சுட்டிக்காட்டுகிறார் கரந்தை  ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான  விருதளிப்பு  விழாவில்  தமிழ்நாட்டின் வழிபாட்டுப்  பாடலாக   ‘நீராருங் கடலுடுத்த’ அமையும்  என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

புகைப்பட நன்றி: kalaignar.dmk.in

 பிற  மொழிகளை  தாழ்த்திப்  பேசும்  வரிகளைத்  தவிர்த்து  பாடலை  அமைத்துக்  கொண்டதாக  அவர் குறிப்பிட்டார். ஆரியம்  போல்  வழக்கழிந்து  முதலிய  வரிகளும்  சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத்  தமிழ்ச்சங்கத்தின்  வழக்கத்தை  அடியொற்றியே  இப்பாடல் வரிகள்  அமைந்திருப்பதையும் கவனத்தில்  கொள்ள  வேண்டியிருக்கிறது.  மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை  தமிழ்நாட்டின்  வழிபாட்டுப்  பாடலாக  ஆக்கிய  அரசாணையை  கூர்ந்து  நோக்கினால்  இன்னொன்றும்  புலப்படும்.

 ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை  எண்  1393-ல் தமிழ்நாடு  முழுமைக்கும்  பொதுவாக  வழிபாட்டுப்  பாடல்  அமையும்  வண்ணமே  ‘நீராருங்  கடலுடுத்த ‘  இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட  நம்பிக்கையோடு’  தொடர்புடையதாக    இல்லாத  வண்ணம்  இப்பாடல் இருக்குமாறு  அமைந்திருப்பதாகவும்  அரசாணையில்  சொல்லப்பட்டு  இருந்தது.  பல்வேறு  தமிழ்நாட்டு  நிகழ்ச்சிகளில்  இந்து  மதப்  பாடல்களும்,  வடமொழி,தெலுங்கு  பாடல்களும்  ஆதிக்கம்  செலுத்திக்கொண்டிருந்த  போது  இந்த  அறிவிப்பு அவற்றை  மாற்றியது. மேலும், பாயிரத்தில்  உள்ள  சிவனைப்பற்றிய  குறிப்பு இடம்பெறாமல்   போனதையும், ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’  ஆனது  ‘தமிழ்த்தாய்  வாழ்த்தாக’ மாறியதையும்  மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ்  அடையாளத்தை  முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது.  (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )


மேற்சொன்ன  அரசாணையை  ஒட்டி 23 நவம்பர்  1970-ல்  அரசாணை  ஒன்று  வெளியிடப்பட்டது.  அதில்  ‘நீராருங் கடலுடுத்த ….’  வழிபாட்டுப்பாடலாக  விழாக்களின்  துவக்கத்தில்  பாடப்பட  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி  நிறுவனங்கள், உள்ளாட்சி  அமைப்புகள்  நடத்தும் நிகழ்ச்சிகளில்  இப்பாடல்  மோகன  ராகத்தில், திஸ்ர  தாளத்தில்  இசைக்கப்பட  வேண்டும்  என்றும் கூறப்பட்டு  இருந்தது.

Memo no. 3584/70-4

காஞ்சி  மடாதிபதி  விஜேயந்திரர்  கலந்து   கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ இசைக்கப்பட்ட  போது  கண்மூடி அமர்ந்து  இருந்தார். இதனையடுத்து  கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில்  உள்ள காஞ்சி  மடத்தின் கிளையில்  நுழைந்தார். அதற்கு  மட  மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை  கண் இளங்கோ  மிரட்டியதாக  .  மடத்தின்  மேலாளர்  காவல் துறையில்  புகார்  அளித்து  இருந்தார்.  இது தொடர்பாக  தன்மீது  பதியப்பட்ட   முதல் தகவல்  அறிக்கையை ரத்து  செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை  கண்  இளங்கோ  நாடினார். 


இவ்வழக்கில்  நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்  மேற்குறிப்பிட்ட இரண்டு  அரசாணைகள்  1393,  3584/70-4  ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ வழிபாட்டுப்  பாடலாகவே  இந்த  அரசாணைகள்  வரையறுத்து  இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய்  வாழ்த்து  வழிபாட்டுப்பாடல், அது, கீதம்  அன்று”. என்று குறிப்பிட்டார்.  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படும்  போது   எழுந்து நிற்க  வேண்டும்  என்று எந்தச் சட்டமும், அரசாணையும்  இல்லை என்பதையும்  அத்தீர்ப்பில்  கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய்  வாழ்த்திற்கு  உச்சபட்ச  மரியாதையும், மதிப்பும்  தரவேண்டும். தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும்  போது  கூட்டத்தினர் எழுந்து நிற்பது  மரபாக  இருக்கிறது  என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில்  தான்  மரியாதை  செலுத்த வேண்டும் என்று   கேள்வி எழுப்பிக்கொள்ள  வேண்டும்.   பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும்  நாம் கொண்டாடும்  போது, ஒரே வழியில்  தான் மரியாதை செலுத்த  வேண்டும்  என்று வலியுறுத்துவது போலித்தனமானது.  …..  
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு  ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு  எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி  எளிய  வாழ்வினையே   வாழ்கிறார்.அவர்  வழிபாட்டில்   ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான  நிலையில் இருப்பார். தமிழ்த்தாய்  வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால்  சந்நியாசி  தியான  நிலையில் அமர்ந்து இருப்பது  நிச்சயம்  நியாயமானது. இந்த  நிகழ்வில், மடாதிபதி தியான  நிலையில்  அமர்ந்து  கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும்   செலுத்தும் விதமாகும்.”  என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி


இதனையடுத்து, தமிழ்நாடு  அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய்  வாழ்த்தின்  தோற்றம், வளர்ச்சி,  அதனை அரசு  நிகழ்ச்சிகளில்  விழாவின்  துவக்கத்தில்  பாடவேண்டும் என்று ஆணையிட்ட  அரசாணைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக  அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில்  அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு  அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள் உள்ளிட்ட பொது  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு  முன்பு தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாயம்  பாடப்பட  வேண்டும் என்றும், தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும் போது  அனைவரும்  தவறாமல் எழுந்து  நிற்க  வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல்  பாடப்படும்  போது  எழுந்து  நிற்பதில்  இருந்து மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணித்  தாய்மார்கள்  ஆகியோருக்கு விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

 சான்றுகள்/ உதவியவை :

1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm

2. மனோன்மணியம்  சுந்தரனாரின்  இன்னொரு  பக்கம் – பேராசிரியர்   அ  கா பெருமாள் 

3. நீராருங் கடலுடுத்த –  கரந்தை ஜெயக்குமார்

 4.   ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture  Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam

 5.  ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy 

6. தமிழ்நாடு அரசாணை  நிலை எண் 1393, பொதுத்  (அரசியல்) துறை, 17.06.1970

7. தமிழ்நாடு அரசாணை   எண் 3584/70-4, 23.11.1970 

8. தமிழ்நாடு  அரசாணை  நிலை  எண் 1037, 17.12.2021 

 9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296

10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy

11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy  Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725

12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123

13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021

தலித் அடையாளமே என்னைச் செதுக்கியிருக்கிறது. – சட்ட அறிஞர் அனுராக் பாஸ்கர் நேர்முகம்



பல கோடி விளிம்புநிலை மக்களின் கனவுகளின் அடையாளமாக என்னுடைய ஹார்வர்ட் டிகிரி திகழ்கிறது.”- அனுராக் பாஸ்கர்

அனுராக் பாஸ்கர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து தன்னுடைய LL.M. பட்டத்தை 2019-ல் பெற்றிருக்கிறார். அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக  வேலை பார்த்த அனுபவம், ஹார்வர்ட் நோக்கிய பயணம், ஹார்வர்ட் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை, அவரின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்.

அனுராக் பாஸ்கர் தன்னுடைய LL.M. பட்டத்தை ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிடம் இருந்து பெற்றிருக்கிறார். இவர் லக்னோவில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( RMLNLU) B.A. LL.B பட்டங்களை 2012-17 காலத்தில் பெற்றார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக ஜூலை 2017-18 காலத்தில் பணியாற்றினார். அனுராக் கூர்மையான அறிவுத்திறமிக்கப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. செய்தித்தாள்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தோவியங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளார். அவருடைய கட்டுரைகள் The Wire, LiveLaw, The Print, EPW முதலிய பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இனி அவரின் பயணம் குறித்து உரையாடுவோம்.

கேள்வி: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து LL.M. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்?

அனுராக் : திக்குமுக்காடிப் போயிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய பட்டமளிப்பு விழா மே 30, 2019 ல் நடைபெற்றது. நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதை நம்பவே ஒரு வாரம் ஆனது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை, நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. அமெரிக்காவை எட்டிப் பார்க்க வேண்டும் என்று கூட எனக்குப் பட்டதில்லை. எண்பதுகளில் எங்கள் வீட்டிற்குச் சவால்மிக்கக் காலம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து வேலை தேடி லக்னோவிற்கு என் அப்பா அடிக்கடி நாற்பது கிலோமீட்டர்கள் கால் வலிக்க, வலிக்கச் சைக்கிள் மிதிப்பார். என் அப்பாவை பொறுத்தவரை லக்னோ சென்று வருவது என்பது வெளிநாட்டிற்குப் போய்வருவதாகும். நான் லக்னோவில் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போது, வேலையின் பொருட்டு டெல்லிக்கு இடம்பெயர வேண்டும் என்பது எனக்கு வெளிநாட்டிற்குப் போகிற ஒன்றாகவே தோன்றியது. அந்தச் சைக்கிள் பயணத்தில் இருந்து ஹார்வர்ட் வரையிலான இப்பயணத்தை வந்தடைய என் குடும்பம் நெடுந்தூரம் நடந்திருக்கிறது. தற்போது நான் கலவையான உணர்வுகளில் ஆட்பட்டுள்ளேன்.

கேள்வி: நீங்கள் ஏன் சட்டம் பயில முடிவு செய்தீர்கள்? உங்கள் குடும்பத்தில் யாரேனும் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்களா?

அனுராக்: இல்லை ! நான் முதல் தலைமுறை வழக்கறிஞர்.

நான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க ஒரு வரலாற்று ஆளுமையே முதன்மையான காரணம். அவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பள்ளிக்காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் படைத்தளித்த தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் என்கிற மனப்பிம்பம் என்னைப் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. அவரின் வாழ்வானது சட்டம் பயின்று அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்திற்கான கருவியாக மாறவேண்டும் என்கிற கனவினை விதைத்தது. ஆனால், சட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நான் பொறியியல் பயில வேண்டும் என்று விரும்பினார்கள். அடிக்கடி, நடுத்தர வர்க்க/அடித்தட்டு நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதாரத்திலோ, சமூகத்திலோ பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபர்களின் முதல் போராட்டம் தங்களுடைய குடும்பங்களிலேயே துவங்குகிறது. நாம் விரும்பிய பாடத்தைப் படிக்கப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. என்னுடைய பெற்றோர் நான் விரும்பிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

கேள்வி: ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (RMLNLU) உங்களுடைய எத்தகைய அனுபவம் கிட்டியது?

அனுராக்: செறிவான அனுபவம்! சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள், வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள இப்பல்கலைக்கழகம் உதவியது. மேலும், எனக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொணரவும் RMLNLU பெருமளவில் கைகொடுத்தது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்புக் கொண்ட பல்கலைக்கழகங்களில் என் கல்விக்கூடமும் ஒன்று. அங்கே உள்ள நூலகத்தில் குவிந்துள்ள நூல்கள் அறிவின் ஊற்று. எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் மகத்தானவர்கள். எனினும், RMLNLU கல்வி நிறுவனமாக இன்னமும் தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்குக் கிட்டிய சில நல்ல நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்து வருகிறார்கள்.

கேள்வி: RMLNLU-ல் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வேறென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

அனுராக்: பொதுவாகச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது, விவாதம் புரிவது ஆகியவற்றில் மின்னுவார்கள். நான் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வந்தமையால், எனக்குச் சரளமான ஆங்கிலம் கைவரவில்லை. இதனால், பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்கவோ, பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய அவசியமிருக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ எனக்குத் தயக்கமாக இருக்கும். இதைக்கண்டு திகைத்து போய் நிற்காமல், என்னுடைய பிற திறன்களைப் பட்டை தீட்டிக்கொண்டேன்.

RMLNLU-வில் படித்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தினேன். இது எனக்குள் தலைமைப்பண்பை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. களத்தில் அரும்பெரும்  சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், அரசுப்பதவி வகிப்பவர்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. பின்தங்கிய குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகப் பாடுபடும் டாக்டர். சந்தீப் பாண்டே (ராமன் மகசேசே விருதினை 2002-ல் பெற்றவர்), உத்திர பிரதேச குழந்தை உரிமைப்பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் தலைவர் திருமதி. ஜூஹி சிங் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியதை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். மனித உரிமைகள் வழக்கறிஞரான ஆதித்யா ஸ்ரீவத்ஸவா வழிகாட்டுதலில் களத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய உதவியோடு புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயத் தற்கொலைகளைக் கவனப்படுத்தவும், அதற்குப் பின்னுள்ள காரணங்களை ஆவணப்படுத்தவும் முடிந்ததைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். என்னுடைய பல்கலையின் இணைப் பேராசிரியரான முனைவர். KA பாண்டேவுடன் இணைந்து இந்தியாவின் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைச் சமூகத் தணிக்கை புரியும் செயல்பாட்டை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்து முடித்தோம். மேற்சொன்ன அமைப்பு ரீதியான திறன்களைத் தாண்டி, ஆய்வுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன். என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் பெருமைமிக்க Economic & Political Weekly இதழில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் வெளிவந்தன.

கேள்வி: நீங்கள் RMLNLU-வில் சட்டம் பயின்ற போது ஏழு வெவ்வேறு நீதிபதிகளுடன் பணியாற்றினீர்கள். எது இத்தனை நீதிபதிகளிடம் பயிற்சி பெற உங்களைத் தூண்டியது?

அனுராக்: என்னுடைய மூன்றாவது செமஸ்டரின் போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) இம்தியாஸ் முர்டாசாவிடம் பயிற்சி பெற்றேன். அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் நீதிபதிகள் பணியாற்றும் முறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எப்போது, எவ்வளவு முடியுமோ அப்போதெல்லாம் பல்வேறு நீதிபதிகளிடம் பயிற்சி பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர்களுடைய ஆக்கங்களுக்கு என்னாலான பங்களிப்பினை புரிந்தேன்.’Philadelphia’ திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், “ அடிக்கடி அது அமைவதில்லை. எங்காவது, எப்போதாவது அரிதாகத்தான் நீதி வழங்குவதில் நீ பங்கேற்க இயலும். அது நிகழும் போது ஏற்படும் பரவசம் அதியற்புதமானது.” அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நான் வெவ்வேறு துறை வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளின் கீழ் பணியாற்ற விண்ணப்பித்தேன். இதன்மூலம் பலதரப்பட்ட வழக்குகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, நான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி DY சந்திரசூட் வழிகாட்டுதலில் பணியாற்றியதும், லக்னோ உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தேவேந்திர உபத்யாயா, ராஜன் ராய், AR மஸூதி ஆகியோரிடம் பணியாற்றியதும் சுவாரசியம் கூட்டுபவையாக இருந்தன.

கேள்வி: இதே காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சட்ட உதவியாளராக பணிபுரிந்தீர்களா?

அனுராக்: நவம்பர் 2013-ல் எங்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அலகாபாத் தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பங்கேற்றார். அவர் பேசியதை கேட்டது முதல் அவர் ஊக்கமூட்டும் ஆளுமையாக எனக்கு ஆனார். அவரிடம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பித்தேன். அவரிடம் நேரடியாகக் கற்றுத்தேறும் வாய்ப்பில்லாமல் போயிருந்தால் வேறேதேனும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்.

கேள்வி : நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது ?

அனுராக்: அது அசாதாரணமான ஒன்றாக இருந்தது என்று எண்ணுகிறேன். சட்ட உதவியாளர்களில் நான் பெரும் நல்வாய்ப்பு பெற்றவன் என்றே உணர்கிறேன். அவர் செவிமடுத்த பல்வேறு புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் ஜூலை 2017-18 காலத்தில் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. நீதிபதி சந்திரசூடின் அனுபவங்களை அவர் அடிக்கடி தன்னுடைய சட்ட உதவியாளர்களிடம்  பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனைப் பதிவு செய்வதற்காக நீதிபதி சந்திரசூட் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணுகிறேன்.

நீதிபதி சந்திரசூட் ஒருமுறை தன்னுடைய தந்தையும், காலஞ்சென்ற நீதிபதியுமான YV சந்திரசூட் குறித்த தன்னுடைய நினைவலைகளில் மூழ்கினார். அவருடைய தந்தை அப்போது இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் பம்பாயில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வார். (அனேகமாகக் காலா கோடா கஃபே/வேஸைட் இன்). அங்கே நண்பகல் வேளையில் ஒரு மனிதர் எப்போதும் அமர்ந்திருப்பதைக் காண்பார். அம்மனிதர் தனக்குள்  தோன்றும் கருத்துகளைச் சளைக்காமல் எழுதிக்கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார். அந்த மாமனிதர் டாக்டர். அம்பேத்கர். நீதிபதி YV சந்திரசூட் தான் டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்கில் அவருக்கு எதிர்தரப்பில் நின்று வாதாடிய நினைவுகளை ஆசையோடு அசைபோடுவாராம்.

கேள்வி: கடந்த செப்டம்பர் 2018-ல் விஞ்ஞான் பவனில் உரையாற்றும் போது நீதிபதி சந்திரசூட் உங்களைக்குறித்துக் குறிப்பிட்டார். அவர் உங்களுடைய சமூகப் பின்னணி குறித்தும் பேசினார். உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், அதைக்குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அனுராக்: “ஆம். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பல்வேறு அடையாளங்களில் அதுவும் ஒன்று. எனினும், என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான தேர்வுகளைத் தலித் அடையாளமே செதுக்கியிருக்கிறது. ஹார்வர்டில் பட்டம் பெற்றது என்பது என்னைப்பற்றிய ஒன்று என்பதையும் தாண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எனக்குத் தனிப்பட்ட அளவிலும், வழக்கறிஞராகவும் கிட்டிய அனுபவங்கள் முக்கியமானவை என்பதோடு என்னுடைய ஹார்வர்ட் நோக்கிய இந்தப் பயணமானது இன்னமும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழவேண்டிய நிலைக்கு இன்றுவரை தள்ளப்பட்டிருக்கிற பல கோடி மக்களின் கனவுகளின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த ஹார்வர்டில் பெற்ற LL.M. பட்டமானது, மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் முன்பே தற்கொலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர். பாயல் தட்விக்குச் சமர்ப்பணம். இந்தப் பட்டமானது ரோஹித் வெமுலாவிற்கான என்னுடைய அஞ்சலி. அவருடைய இறுதிக்கடிதம் அறவுணர்வுமிக்கதாகத் திகழவேண்டிய தேசத்தினுடைய மனசாட்சியை நோக்கி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் முன்முடிவுகளை அறவே அழிக்க வேண்டியதை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். குதிரையில் ஏறி சவாரி செய்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்ட, இது போன்ற எண்ணற்ற அநீதிகளை அன்றாடம் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எம்மக்களுக்கான பட்டம் இது. பஞ்சம் தாக்கிய பகுதிகளில் நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளுக்காக இப்பட்டம். இது ஒடிசாவில் ஃபனி புயலில் பாதிக்கப்பட்டும், புயற்காலப் பாதுகாப்பு உறைவிடங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டும், நிவாரண உதவிகள் தரப்படாமலும் அல்லல்படுத்தப்படும் தலித்துகளுக்கான பட்டம். நான் ஹார்வர்டில் பட்டம் பெற்றது எண்ணற்றோரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். என்டிடிவியில் தோன்றிய பதினான்கு வயது சிறுமி சுனைனா உள்ளிட்ட பெருங்கனவுகள் கொண்ட அனைவருக்கும் எட்டாததாகத் தோன்றும் எல்லைகளையும் தொட்டுவிட இது உத்வேகம் தரும் என்று நம்புகிறேன்.”

கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் LL.M. பட்டம் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.

அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான தேவைகள், இடம் பிடிப்பதற்கான தகுதிகள் இந்தத் தளத்தில் காணக்கிடைக்கும்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions/https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions
பல்வேறு கட்டத் தேர்வுகளுக்கான காலக்கெடு, பாடப்பொருட்களைக் கீழ்கண்ட சுட்டியில் காணலாம்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-application-deadlines-and-materials/

. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ஒருவர் : தற்குறிப்பு (CV/Résumé); தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை ( Personal statement question); மதிப்பெண் பட்டியல்கள், குறைந்தபட்சம் இரண்டு பேரின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை A, B என்று இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில், விண்ணப்பிப்பவர் தனக்குப் பிடித்த துறையில் காணப்படும் முக்கியமான பிரச்சனை ஒன்றையோ, ஒரு நாடு/பகுதி/உலகம் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல் ஒன்று குறித்து விவரிக்க வேண்டும். பின்னர் இது சார்ந்து தத்துவார்த்த வரைவு ஒன்றையோ, அச்சிக்கலை எதிர்கொள்ளும் அணுகுமுறையையோ பரிந்துரைக்க வேண்டும். இந்தச் சட்டக்கட்டுரையானது முழுக்க முழுக்க விவரணையாக அமையாமல் பகுத்தாய்வது, ஒழுங்குமுறைகளை (normative) அணுகுவதில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையானது நீங்கள் எடுத்துக்கொண்ட சட்டச்சிக்கல் குறித்து அசலான, ஆழமான புரிதலை வெளிக்கொணர வேண்டும். தேவையான மேற்கோள்கள், தேவையென்றால் விளக்கத்தோடு கூடிய அடிக்குறிப்புகள் இடம்பெறலாம். பகுதி B ஆனது ‘தன்னைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கை’ பிற LL.M பட்டங்களில் அமைவதை ஒத்திருக்கும். இதில் விண்ணப்பிப்பவர் ஏன் ஹார்வர்டில்  LL.M பட்டம் பெற விரும்புகிறார் என்பதையும், இப்பட்டம் பெறுவது அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்களை எப்படி இணைக்கிறது என்றும் பேச வேண்டும். மேலும், மனதைக்கவரும் தனிப்பட்ட கதையொன்றையும் இப்பகுதியில் எழுத வேண்டும். ஹார்வர்ட் சட்டக்கல்லூரிக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறரும், நானும் சட்டத்தின் குறிப்பிட்ட கூறுகளோடும், எங்களுடைய பணி அனுபவங்களையும் இணைத்து இப்பகுதியை எழுதியிருந்தோம். விண்ணப்பிப்பவர் அடிப்படையில் கீழ்கண்டவற்றை விளக்கி எழுத வேண்டும்: (1) ஏன் LL.M பட்டம் பயில விரும்புகிறார், (2) என்னென்ன பாடங்களைப் பயில விருப்பம், ஏன்?, (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும்?. விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலதரப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள்? ( (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.)

கேள்வி : ஹார்வர்டில் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும், உங்களுடைய பார்வையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஹார்வர்ட் சட்டக் கல்லூரி இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் உதவித்தொகைகளை வழங்கி உதவுகிறதா?

அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரி ஹார்வர்டில் படிக்கப் போதுமான வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது. எனக்கு $52000 டாலர் நிதியுதவி கிட்டியது (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 36 லட்சம்). இதைக்கொண்டு கல்விக்கட்டணத்தில் 80% செலுத்த முடிந்தது மீதமிருந்த கட்டணத்தை வங்கிக்கடனை கொண்டு செலுத்தினேன் ஹார்வர்ட் வழங்கும் நிதியுதவி போக இன்லாக்ஸ் உதவித்தொகை, ஃபுல்ப்ரைட் உதவித்தொகை ஆகியவை உள்ளன. மேலும், வட்டியில்லா கடனாக உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளும் உண்டு (டாடா அறக்கட்டளை போன்றவை).

கேள்வி: ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்

அனுராக்: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனக்குள் கனன்று கொண்டிருந்த கனவு. நம்முடைய கனவுலகில் நிஜமாகவே சஞ்சரிப்பது என்பது உலகத்தின் அற்புதமான உணர்ச்சிகளில் ஒன்று.

ஹார்வர்ட் பல்வேறு அரிய  வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் கொட்டிக்கிடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் LL.M. பட்டப்படிப்பிற்கான ஒன்பதரை மாதத்தில் பயன்படுத்துவதும், அறிவுக்கடலில் முத்துக் குளிப்பதும் மலைப்பூட்டுகிற ஒன்று. என்னுடைய சகா ஒருவர் குறிப்பிட்டதைபோன்று “ஹார்வர்ட்டின் ஒட்டுமொத்த எல்லையைத் தொட்டுணரவும், அதன் அனுபவங்களை முழுமையாக அள்ளிக்கொள்ளவும் ஆக்டோபஸாகத் தான் இருக்க வேண்டும்”. மகத்தான சில பேராசிரியர்களிடம் படிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம். வகுப்புகளைத் தாண்டி என்னுடன் உடன் பயின்ற மாணவர்கள் பலதரப்பட்ட கலாசாரங்கள், சமூகப் பின்புலங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடன் 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றார்கள். இவர்கள் சட்டக்கல்வி, சட்டத்துறை ஆய்வு, அரசாங்க பணி, நீதித்துறை, சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தனியார் துறையினர் என்று பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்.

எடுத்துக்காட்டாக நான் அஷுடோஷ் சலீல் (மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முனைப்பான  அரசு அதிகாரி), ஷீலா செய்ல் (ஐம்பது வயதாகும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அதிகாரி) உள்ளிட்ட ஊக்கமூட்டும் ஆளுமைகளுடன் இணைந்து வகுப்புகளில் பங்கெடுப்பேன், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பரிமாறிக்கொள்வேன் என்றோ எப்போதும் எண்ணியதில்லை. மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளிலும் (கென்னடி கல்லூரி போன்றவை), பிளெட்சர் கல்லூரியிலும் இணைந்து பயிலும் வாய்ப்பும் உண்டு. இதனால் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பாடங்களைப் பயிலும் மாணவர்களோடு தொடர்புகொள்ள இயலும். அமெரிக்கா வந்ததால் நான் வெகுவாக மதிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும் பேராசிரியர் மைக்கேல் சாண்டெல் (நம் காலத்தின் கற்றறிந்த தத்துவ அறிஞர்), டாக்டர் ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர்) ஆகியோரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.

கேள்வி : நீங்கள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்றுத்தேர்ந்தீர்கள்?

அனுராக் : 2018 செப்டம்பர்-டிசம்பர் காலத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் நடத்திய ‘சட்டத் தொழில்’ பாடம், ஜென்னி ஸுக் ஜெர்சனின், ‘அரசியலமைப்புச் சட்டம்: அதிகாரப் பகுப்பு, கூட்டாட்சி மற்றும் பதினான்காவது சட்டதிருத்தம்’, பேராசிரியர் லூஸி வைட்டின், ‘வறுமை, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி’, பேராசிரியர் ஸ்டீபனி ராபின்சனின் , ‘நிறப்பாகுபாட்டில் இருந்து நிறக்குருட்டுத் தன்மை, அதிலிருந்து நிறத்தை மறுவரையறை செய்வது : மாறிக்கொண்டே இருக்கும் இனம் குறித்த கருதுகோள்களோடு அமெரிக்காவின் போராட்டங்கள்’ முதலிய பாடங்களைப் பயின்றேன். :. 2019-ன் பிப்ரவரி – ஏப்ரல் காலத்தில் மைக்கேல் க்ளார்மேனின் ‘அரசியலமைப்பு சட்ட வரலாறு II: அமெரிக்காவின் புனரமைப்புக் காலத்தில் இருந்து சிவில் உரிமைகள் இயக்கம் வரை’ , பேரசிரியர் லாரன்ஸ் லெஸ்ஸிக்கின், ‘அரசியலமைப்பு சட்டங்களின் ஒப்பீடு’, பேராசிரியர் டயானா ரோசென்ஃபீல்டின் ’பாலின வன்முறை, சட்டம் மற்றும் சமூக நீதி’ ஆகிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்தேன். மேலும், தத்துவம் சார்ந்து பேராசிரியர்கள் ராபர்டோ உங்கெர், மைக்கேல் பொயட் ஆகியோர் நடத்திய, ‘மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவங்களில் வாழ்வியல் ஒழுக்கங்கள்’ எனும் பாடத்தையும் கற்றறிந்தேன்.

கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் உங்களால் மறக்க முடியாத நினைவு என்று ஏதேனும் உண்டா?

அனுராக் : ஒட்டுமொத்த ஹார்வர்ட் அனுபவமே மறக்க முடியாத ஒன்று தான். எனினும், சில தருணங்கள் இன்னமும் உரமேற்றுவதாக, ஊக்கப்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக மூன்று தருணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது அனுபவம் இது:

2018-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட வகுப்பின் இறுதி வகுப்பு பேராசிரியர் ஜென்னி ஸுக்ஜெர்சன் தன்னுடைய வலிமையான உரையோடு வகுப்பை முடித்துவைத்தார். அவர் நம் சமகாலத்தின் அரசியலமைப்பு சட்ட நெருக்கடிகள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய பாத்திரத்தை குறித்தும் விரிவாக உரையாற்றினார் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் பேசிக்கொண்டே இருக்கையில் உணர்ச்சிவசப்பட்டவராகத் தென்பட்டார். அவர் தன்னுடைய வகுப்பை, “நமக்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான தடுப்புச்சுவராக அரசியலமைப்பு சட்டமே உள்ளது” என்று சொல்லியவாறு நிறைவுசெய்த போது கிட்டத்தட்ட அழுதுவிட்டார். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க பற்றுறுதியும், பிணைப்பும் கொண்ட அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், இப்பெரும்பணிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிற உணர்வும் மெய்சிலிர்க்க வைத்தது.

இரண்டாவது, பட்டமேற்பு விழாவிற்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் பேராசிரியர் மைக்கேல் க்ளார்மேனின் ‘இறுதி சொற்பொழிவு’. இது ஏப்ரல் 2019-ல் நிகழ்ந்தது. அந்த உரையில் பேராசிரியர் க்ளார்மேன் தற்போதைய தலைமுறை அரசியல், சமூக நிலப்பரப்பில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த காலத்தில் சிவில் உரிமைகளுக்காக அயராது போராடிய வழக்கறிஞர்களின் வாழ்க்கை நம்பிக்கையையும், மீண்டெழும் வலிமையையும் நமக்கு வழங்குவதைக் கவனப்படுத்தினார். சிவில் உரிமைகள் சார்ந்த பேராசிரியரின் ஆய்வுகள் பிரமிக்க வைப்பவை.

மனதுக்கு நெருக்கமான மூன்றாவது நினைவு என்பது அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பு. 1990களில் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் இருந்து ஒபாமா பட்டம் பெற்றார் என்பதால், அவரோடு நெருங்கிப் பழகிய பேராசிரியர்களிடம் இருந்து அவர் குறித்த கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பேராசிரியர் வில்கின்ஸ் ஒபாமா குறித்துச் சொல்லும் போது, தன்னுடைய சட்டப்படிப்பிற்குப் பின்பு சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கிற சிந்தனைத் தெளிவு ஒபாமாவிற்கு அப்போதே இருந்தது என்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் டீனாக இருந்த பேராசிரியை மார்த்தா மினோவ் பராக் ஒபாமா வகுப்பில் அடிக்கடி பேசமாட்டார், ஆனால், அவர் பேச எழுந்தால் அதில் தொனிக்கும் உறுதி அனைவரையும் அவர் குரலுக்குச் செவிமடுக்க வைக்கும் என்று நினைவுகூர்ந்தார். இவை போக, எனக்குப் பிடித்த பேராசிரியர்களோடு மத்திய உணவிற்கு வெளியே போவது என் ஞாபக அடுக்கினால் நீங்காத நினைவாக ஆழப்பதிந்திருக்கிறது.

கேள்வி: உங்களுடைய ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த முதல் மாணவர் நீங்கள் தான். அனேகமாக, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்று L.L.M பட்டம் பெற்ற முதல் தலித் ஆளுமையும் தாங்களாக இருக்கக்கூடும். எப்படி உணர்கிறீர்கள்?

அனுராக் : இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல டோபி மக்வொயர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன் படத்தில் எனக்குப் பிடித்த வசனம் உதவும்.. அதில் பீட்டர் பார்க்கர், “வாழ்க்கை எனக்காக எதை என்ன வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், ‘பேராற்றலோடு பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது.’ என்கிற வார்த்தைளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்பான். என்னுடைய வெற்றி, சாதனைகளுக்கும் மேற்சொன்ன வசனம் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

ஒவ்வொரு வெற்றியோடும், பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இந்தப் பொறுப்பானது கிட்டிய பாடங்களை மேம்பட்ட எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. எப்போது எல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மிடையே உள்ள விரிசல்கள், வேறுபாடுகளை (Fault-lines) பகுத்தாய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதும் பொறுப்பில் அடங்கும். இதே நேரத்தில், இத்தனை காலம் எனக்கு ஆதரவாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகிறது. குறிப்பாக எனக்கு எப்போதும் உற்ற வழிகாட்டியாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களாகவும் திகழ்ந்த முனைவர் பூனம் ஜெயந்த் சிங், முனைவர் பூஜா அவஸ்தி, திவ்யா திரிபாதி, அபூர்வா விஸ்வநாத், ஸ்ரீ அக்னிஹோத்ரி, சவிதா தேவி ஆகிய ஆறு பெண்களை நினைவுகூர்ந்து நன்றிகூற விரும்புகிறேன்.

கேள்வி: உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

அனுராக் : அன்றாடம் பாதாள சக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்யும் போது இறந்துபோகும் நம்முடைய குடிமக்கள் குறித்த செய்திகளைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். பசியால் குடிமக்கள் இறப்பது குறித்து வாசிக்கிறோம். வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் இயைந்து இயங்க வேண்டிய இத்தகைய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நான் அறிவுத்துறை, சட்டப்போராட்டம், செயல்திட்டத்திற்கான கொள்கைகளைத் திட்டமிடல், அரசியல் ஆகியவற்றில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான்கு தளங்களிலும் தீவிரமாக இயங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருக்கிறேன். என் தொழில் சார்ந்த புத்தம் புதிய மைல்கற்களைக் கண்டடைவதன் மூலம், இத்துறைகளில் பரவலாகப் பங்களிக்க முனைய வேண்டும். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின். 2019-ம் ஆண்டின் வகுப்பறை நாள் விழாவில் மே 29 அன்று தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ரிச்சர்ட் லாசரஸ், “உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பெற்ற ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் பட்டத்தைக் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இந்தப் பட்டத்தைக் கொண்டு வாழ்வில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதிலேயே வாழ்வின் உண்மையான மதிப்பு பொதிந்திருக்கிறது.” என்றார். ஆகவே, இந்தியாவிற்குத் திரும்பி இயங்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

அனுராக்: நன்றி

இக்கட்டுரை ‘நீலம்’ டிசம்பர் 2020 இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு மனம்நிறைந்த நன்றிகள்.

நன்றி: livelaw இணைய  இதழ் 
தமிழில்: பூ.கொ.சரவணன்

பி.எஸ்.கிருஷ்ணன் – சமூக நீதி சாம்ராட்.


இப்படி சாம்ராட் என்று விளிக்கப்படுவதை  மக்களாட்சி, சமத்துவத்தில் ஆழமான பிடிப்புடைய பி.எஸ்.கிருஷ்ணன் ஏற்க மறுத்திருப்பார். என்றாலும், அவரின் பங்களிப்புகள், பணிகள் மகத்தானவை. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் செயலாளராகவும் சமூக நீதியை முன்னெடுப்பதில் அவர் பெரும் பங்காற்றினார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த பி.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய பதினோராவது வயதினில் ஆங்கில செய்தித்தாளில் இந்தியாவில் ஏழில் ஒருவர் தீண்டப்படாதவராக சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிற அம்பேத்கரின் அறிக்கையை படிக்கிறார். தீண்டாமை என்றால் என்ன என்று தந்தையிடம் கேட்டார். அது அநீதியானது என்பதை உயர்சாதியில் பிறந்த அவரின் தந்தை தெளிவுபடுத்தினார். மேலும், தீண்டாமை எனும் பெருங்கொடுமை எப்படி சமூகத்தில் பின்பற்றப்படுகிறது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, திருவிதாங்கூரில் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்தை சேர்ந்த கே.சுகுமாரன் நடத்தி வந்த ‘கேரளா கௌமுதி’ நாளிதழில் தீண்டாமைக்கு எதிரான பல்வேறு எழுத்துகள் கிருஷ்ணனின் சிந்தனையை ஆட்கொண்டன. ‘என் மதம் சுயமரியாதைக்கு அவமதிப்பாக திகழ்கிறது என்றால் நான் எந்த மதத்திற்கு மாற வேண்டும்?’ என்கிற கே.சுகுமாரனின் மாநாட்டு கூக்குரல் கேரளாவின் ஆலயக்கதவுகளை  அனைத்து சாதியினருக்கும் திறந்து விட்டது.

நாராயண குருவின் ‘ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்’ எனும் முழக்கம் கிருஷ்ணனின் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்தது.  கேரளவில் தலித் தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினருக்கு கல்விக்கூடங்களை திறந்துவிட வேண்டும் என்று நிகழ்த்திய போராட்டங்கள், அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகளும் அவரின் வாழ்க்கை பயணத்தின் ஒளிவிளக்குகளாக திகழ்ந்தன.

காஞ்சிபுரத்தின் பச்சையப்பா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த காலத்தில்  கிருஷ்ணன் குடிமைப்பணி தேர்வு எழுதினார். அவர் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வு பெற்றார். எந்த மாநிலத்தில் பணி வேண்டும் என்கிற விருப்பத்தை சொல்லுமாறு கேட்ட போது, ‘எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பி வையுங்கள். எம்மாநிலமும் என் மாநிலமே’ என்று அவர் உறுதிபடச் சொன்னார். (அன்றைய ஹைதராபாத்) ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.

நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர் என்று சமூகத்தில் உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக அயராது பாடுபட்டார். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த கிருஷ்ணன் மக்களின் மொழியில் உரையாடி அவர்களின் சிக்கல்களை அறிந்து கொண்டு உடனடியாக தீர்வு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதற்கு முந்தைய தேடல், ஆய்வு, வாசிப்பு, விதிகள், சட்டங்கள் குறித்த சளைக்காத உழைப்பு அவரிடம் இருந்தது. இதனைக்கொண்டு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என்று பல தளங்களில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார். அரசு நிலங்கள், ஊருக்கு பொதுவான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய போது ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை மீறி பகிர்ந்து கொடுத்தார். ஜமாபந்திகளை தலித்துகள் வாழும் பகுதிகளில் நடத்திய முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணன் சமத்துவத் தேரை சேரிக்கும் இழுத்து வந்தவர் என்றால் மிகையில்லை.

தன்னுடைய சாதியை யார் கேட்டாலும் சொல்ல மறுத்த கிருஷ்ணன், சாதி விதித்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்ததாக மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். அவரின் அரும்பணிகளை கண்ட அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் ‘நீங்கள் ஏன் உங்கள் சாதியை மறைக்கிறீர்கள். நீங்கள் உயர்சாதியில் பிறந்தவர். நீங்கள் அதனை மறைப்பதால் என்ன நன்மை விளையப்போகிறது?’ என்று கேட்டார். கிருஷ்ணன் தீர்க்கமாக, ‘ஐயா, நான் சாதியை மறைக்கவில்லை. சாதியை நிராகரிக்கிறேன்’ என்று பதிலுரைத்தார்.  நெகிழ்ந்து போன ஜெயில் சிங் ‘இறைவன் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்காக உழைக்கும் புத்தியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார்’ என வாழ்த்தினார்.

வர்ணமா? வர்க்கமா? எது இந்திய சமூகத்தில் முக்கியமாக எதிர்கொள்ள வேண்டிய சவால் என்கிற வினாவிற்கு இரண்டுமே தான் என்று அவர் கருதினார். ஏழ்மையும், சாதி ஒடுக்குமுறையும் இணைந்து பெரும்பாலும் பயணிப்பதை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் நில சீர்திருத்தம், நிலப்பகிர்வை தீவிரமாக வலியுறுத்தினார்.

கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஆளுநர்களை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு தலித்துகளுக்கு நிலப்பகிர்வை சாதிக்க முடியுமா என்று ஆய்வு செய்தது. பெரும்பாலான தலித்துகள் நிலமற்றவர்களாக, வறுமையில் சிக்குண்டவர்களாக இருப்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்த அக்குழு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போதுமான அளவு நிலமிருப்பதையும் சுட்டிக்காட்டியது. இதனை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் ‘கண்ணியமான வாழ்வு, பாதுகாப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நிலவுரிமை, கல்வி இரண்டும் அவசியமாகும். நீர்ப்பாசன வசதியுள்ள நிலமிருந்தால், பிள்ளைகளை படிக்க வைக்கும் பொருளாதார பலம் இருக்கும். போதுமான வருமானம் இல்லாமல் போனால், குடும்பத்தின் தேவைகளுக்காக பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டிய அவலம் ஏற்படும். பாசன வசதியுள்ள நிலத்தால் வருமானம் கிடைக்கும் என்றால் பிள்ளைகளை படிக்க அனுப்புவது இலகுவாக இருக்கும்.’ என்று பதிந்தார்.

பொருளாதார ஏற்றத்தை சாதிக்க பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்களில்  நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர்  இணைத்துக்கொள்வது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அளவில் நெடுங்காலமாக அமலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அப்பணியில் இணைச் செயலாளராக சீரிய பங்காற்றினார் பி.எஸ்.கிருஷ்ணன். பின்னர், வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்த போது மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும் பொறுப்பு செயலாளராக இவர் வசம் வந்து சேர்ந்தது. அப்பணியையும் செவ்வனே செய்தார். ஆந்திர பிரதேச அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்த போது பி.எஸ்.கிருஷ்ணனின் உதவியை நாடியது. சட்ட வரைவு, உருவாக்கம், அமலாக்கத்தை அவர் திறம்பட கையாண்டார். உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

புகைப்பட நன்றி: நீதிராஜன்

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது, ‘எத்தனை நாளைக்கு தான் இட ஒதுக்கீடு தொடரும்?’ என நெறியாளர் கேட்க, மூப்பினால் நடுங்கிக் கொண்டிருந்த நிலையிலும் உறுதியாக ‘சாதியின் பெயரால் அநீதிகள் இந்திய சமூகத்தில் நிகழ்த்தப்படுவது நிற்கும் நாள்வரை இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.’ என்று பதிலுரைத்தார்.
பட்டியலின சாதியினர், பழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் (தடுப்புச்) சட்டம் உருவாவதற்கு பின்னால் அவரின் பெரும் உழைப்பிருந்தது. அச்சட்டம் கால் நூற்றாண்டு கழித்து திருத்தப்பட்டதிலும் அவரின் முத்திரை இருந்தது. மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும்  தொழிலை தடை செய்வதோடு, அக்கொடுமையினால் உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்கும் சட்ட உருவாக்கத்திலும் பங்களித்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வலுவிழக்க வைத்த போது, அதனை சீர்செய்யும் சீராய்வு மனுவை வடிவமைப்பதில் எண்பது வயதை கடந்த நிலையிலும் பங்குபெற்றார்.

வேறொரு பேட்டியில், ‘இட ஒதுக்கீட்டை சிலர் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்று உயர்சாதியினர் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்களே?’ என்று வினவப்பட்ட போது, ‘அது உயர்சாதியினரின் பொய் பரப்புரை அன்றி வேறொன்றுமில்லை. அவர்களின் மனநிலை சாதிக்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களையே குறைசொல்வதாக இருக்கிறது. அம்மக்களுக்கு நிலம், கல்வியை தருவதில் முனைப்பாக ஈடுபட்டுவிட்டு பின்னர் இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களை குறை சொல்லுங்கள்’ என்றார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயலாளராக இருந்த காலத்தில் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை அறிந்துணர்ந்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்த்தார். பட்டியலின சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையங்களை அரசியலமைப்பு அந்தஸ்து கொண்டதாக மாற்றுவதற்கும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காரணம் ஆவார். 

புகைப்பட நன்றி: நீதிராஜன்

பி.எஸ்.கிருஷ்ணனுக்கு இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுக்கையில் இருந்தார். இட ஒதுக்கீட்டிற்கான வரையறைகளை சாமர்த்தியமாக பொருள் கொண்டு இட ஒதுக்கீட்டை பல மாணவர்களுக்கு மறுத்த அவலநிலை அவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில் சமூகநீதிக்கான சமருக்காக அவர் படுக்கையை விட்டு எழுந்தார். நடுங்கும் விரல்களோடு தானே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய மனுவை தட்டச்சு செய்து கொடுத்தார். அம்மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை காக்கப்பட்டு அவர்களின் குடிமைப்பணி இடங்களை பெறுவது உறுதி செய்யப்பட்டது.

பி.எஸ்.கிருஷ்ணன் எழுதி முடிக்காமல் போன இறுதிக் கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள், நீதி குறித்து கவலையோடு, ‘பட்டியலின சாதியினருக்கு கண்ணியமிக்க வாழ்வும், மரணமும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன’ என்று பதிவு செய்திருந்தார். எத்தனை நாளைக்கு இந்த அநீதி தொடரும் என்று ஆதங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் சட்டங்கள், செயல்பாடுகள், திட்டங்கள் என்று பலமுனைகளில் சாதி ஒழிப்பு, சமத்துவத்துக்கான போரினை முன்னெடுக்க தன்னுடைய இறுதிக் கட்டுரையில் அழைப்பு விடுத்தார். முடிக்கப்படாத அந்த மாபெரும் சாம்ராட்டின் கனவினை முன்னெடுத்து ஈடேற்றுவதே அவருக்கான புகழஞ்சலியாக இருக்கும்.

நூலினை வாங்க: சமூக நீதிக்கான அறப்போர் : https://www.amazon.in/gp/product/8194340705/ref=cx_skuctr_share?smid=A2FA8VKKREFM6M

பி.எஸ்.கிருஷ்ணன் பங்களிப்பில் உருவான சட்டங்கள்:
புத்த மதத்தில் இணைந்த தலித்துகளைப் பட்டியல் சாதியினர் என்று அங்கீகரிப்பதற்கான சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989) & திருத்தச் சட்டம் (2015),
மனித கழிவகற்றுவோரைப் பணியமர்த்தல் மற்றும் உலர்கழிப்பறைகள் கட்டுதல் தடுப்புச் சட்டம் (1993). மேற்சொன்ன சட்டத்தின் மேம்பட்ட வடிவாமான மறுவாழ்வுக்கான சட்டம் (2013)

எழுதிய நூல்கள்: Empowering Dalits for Empowering India- A Road Map
Social Exclusion and Justice in India
நினைவலைகள் : ‘சமூக நீதிக்கான அறப்போர் – பி.எஸ்.கிருஷ்ணன் : நலிந்தோர் நலனுக்கான ஓர் வாழ்வின் அர்ப்பணம்’

(இன்று பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்)

நன்றி: விகடன் இயர்புக் 2020

காந்தியும், மதச்சார்பின்மையும்


காந்தியும், மதச்சார்பின்மையும் – அனில் நௌரியா

(மதச்சார்பின்மை என்கிற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலதுசாரிகள் குரல் எழுப்பிக்கொண்டுள்ள சூழலில், காந்திக்கும் மதச்சார்பின்மைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இக்கட்டுரையை அவசியம் வாசியுங்கள்… )

மதச்சார்பின்மை என்கிற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா, ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே
உபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாகப் புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் மார்ச் 1931 ல் வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. மதச்சார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்தத் தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின்
எழுத்துக்கள் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாகக் காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தைப் பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார். மே 6, 1933 இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்.

மேலும் நவம்பர் 1933 இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார்.

ஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள் முன் உரையாற்றினார். அப்போது “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் சட்டசபை போன்ற மதச்சார்பற்ற அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் )

ஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையைப் பற்றிக் காந்தி பேசுகிற பொழுது இப்படிச் சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொதுப் பயன்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது ? மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையைப் பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத / நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பின்மைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும்.

இதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது.

”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நிதி ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடிமகன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்தப் புரவலும் ஆங்கில அரசு செய்தது போலத் தராது என்றும் சொன்னார். இந்தப் புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது

இந்தச் சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான்
பாடுபட்டதாகக் காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்துத் தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில்
எல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க இயலும்.” என்றார்

நவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லாக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்தத் தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார்.

குருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தைக் கொண்டு சோமநாதர் ஆலயத்தைப் புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : “நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின் தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அக்காலச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்தப் புரிந்துணர்வு 1969க்கு பின்னர்
கண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன.

காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ நன்கு கட்டமைப்பக்பட்ட, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்குச் சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம், வழிகாட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்தப் பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “

காந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது. அவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம் பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளைப் பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய நாட்குறிப்புகளில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். இந்தியா மதச்சார்பின்மையைத் தன் பண்பாகக் கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும், இந்திய தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் காந்தி, நேரு இருவரும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். இதனை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாகப் பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய
பிராந்திய தேசியத்தைக் காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. ஒத்துச்செல்லும் கருத்துகளை விட முரண்பாடுகள் ஆழமாக இருந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேருவும் இணைந்து வெகுகாலம் ஒன்றாகச் செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை காந்தி பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்திக் காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த ஹிந்துத்துவ சக்திகள் இதை முக்கியப்பணியாகச் செய்தன. இப்படிக் காந்தி,நேரு இருவரையும் பிரித்துக் காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாகக் காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்துக் கருத்தியல் ரீதியாகத் தாக்கமுடியும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்தக் காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதைப் பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூடத் தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்காலக் கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் இரு நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

(இக்கட்டுரை அனில் நௌரியாவின் Gandhi on secular law and state எனும்
கட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது )

புகைப்படம்: மதக்கலவரத்தால் சிதறுண்ட பீகார் மாநில வீடொன்றில் காந்தி

நன்றி: நவ்ஜீவன் அறக்கட்டளை

தமிழில்: பூ.கொ. சரவணன்