‘அம்பேத்கரும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கமும்’ – கிறிஸ்தோஃபி ஜாப்ரிலா’


‘நல்ல உயரம், கட்டுகோப்பான உடல், கரிய நிறம். லாவகமாகவும், துரிதமாகவும் இயங்கும் மூளைக்குச் சொந்தக்காரர். அவர் அறிவின் பேருரு. வெளியே கரடுமுரடாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மானுடம் மிகைத்த பண்பாளர். இன்னல்கள் இடைவிடாது துரத்தினாலும், எப்போதும் வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடுக்காத தீரம் மிக்கவர். ஒரு காலத்தில் சமூகத்தில் மேல்தட்டினர் வாழும் பகுதியில் அவர் கீழ்சாதி என்பதால் தங்க கூட இடம் தரப்படவில்லை. அவரின் மனவுறுதியின் தீரம் அவரை மகத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்றது.’ (ஹரி ஷரண் சப்ரா (தொகுப்பாசிரியர்) Opposition in the Parliament, Delhi, New Publishers, 1952, பக்கம் 142)

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பத்தி ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு பிராமண எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இது அப்போது அம்பேத்கர் தன்னுடைய அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருந்தார் என்பதைத் தெளிவாக நிறுவுகிறது. இப்படிப்பட்ட அங்கீகாரம் அம்பேத்கருக்கு கிடைத்தற்கு அவர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புக்கு உரிய ‘வரைவுக்குழு’வின் தலைவராக அம்பேத்கர் திகழ்ந்ததும் காரணம். அந்த வரைவுக்குழுவில் சட்ட நிபுணரான அம்பேத்கர் உன்னதமான உச்சத்தை எட்டினார். அதுவே அம்பேத்கரின் வாழ்வின் பெருமைமிகு காலமாகும். இறுக்கமான சூட், டை, வட்ட வடிவிலான கண்ணாடி, கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி, கையில் அரசியலமைப்புச் சட்டம் என்கிற அம்பேத்கரின் உருவமே பொதுமக்களின் மனக்கண்ணில் இன்றும் அகலாமல் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இப்படி அம்பேத்கரை சிலையாகச் செதுக்குவதும் வழக்கமானது. 1

தீண்டப்படாத சாதியை சேர்ந்த ஒருவர் தேசிய அரசியலில் மாபெரும் தாக்கம் செலுத்துகிற நிலையை அடைந்தார் என்பதே உயர் சாதி இந்துக்களிடமிருந்து கசப்பான விமர்சனங்களை ஊற்றெடுக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார் என்பதையே நிராகரிக்கிற அளவிற்குச் சிலர் சென்றார்கள்.

அம்பேத்கர் ‘போலி மனுவா’?

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவிற்கு அம்பேத்கர் நியமிக்கப்பட்டதால், அவருக்கு ‘நவீன மனு’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது. இப்பட்டம் மனுநீதியை இயற்றிய புரதான மனுவை நினைவுபடுத்தியது. மனுநீதியை 1927-ல் நடைபெற்ற மகத் சத்தியாகிரகத்தின் போது அம்பேத்கர் எரித்தார் என்பதை நினைவுகூர்ந்தால் இந்தப்பட்டம் வேடிக்கையான ஒன்றாகத் தெரியும்.
அம்பேத்கர் குறித்த தன்னுடைய குற்றப்பத்திரிகையில் அருண் ஷோரி, அம்பேத்கரை ‘போலி மனு’ என்று முத்திரை குத்துகிறார். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் பல்வேறு துணை குழுக்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளைச் செப்பனிடும் பொறுப்பு மட்டுமே வரைவுக்குழுவிற்கு இருந்தது. வரைவுக்குழுவின் பரிந்துரைகளையும் கூட அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முழு அமர்வு விவாதித்தே முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தவில்லை என்பது அருண் ஷோரியின் வாதம். மேலும் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. அக்கட்சியினருக்குள் தான் ஒவ்வொரு சட்டப்பிரிவின் முக்கியமான அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன என்பது அருண் ஷோரியின் வாதம்.2 அம்பேத்கர் துணை குழுக்கள், வரைவு குழு, முழு அமர்வு ஆகிய பல இடங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் தோற்கிற பக்கமே இருந்தார் என்று ஷோரி வாதிடுகிறார். அருண் ஷோரியின் இக்கருத்துகள் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன என்பதே என்னுடைய வாதமாகும். காங்கிரஸ் தலைவர்கள் முன்னரே பேசி வைத்துக்கொண்டு சில சட்டப்பிரிவுகளை வேகமாக நிறைவேற்ற முயன்றார்கள் என்று அம்பேத்கர் அவ்வப்போது குறைபட்டுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கர் மற்றவர்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளை வெறுமனே செப்பனிடுவதொடு மட்டும் நின்றுவிடவில்லை. 3

அருண் ஷோரி அம்பேத்கரை சித்தரிக்கும் விதத்தில் இருந்து அறிஞர்கள் ஹெச்.எஸ்.வர்மா, நீதா வர்மா முற்றிலும் முரண்படுகிறார்கள். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவரின் ஆட்சி நிர்வாகத்திறனும், அரசியல் தாக்கமும் தான் காரணம் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.4 அம்பேத்கரை வரைவுக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் காரணமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 1946-ல் சபையில் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அம்பேத்கரின் தலையீடு பலரையும் கவர்ந்தது. நேரு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன் அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களைப் பட்டியலிட்டார். சபையின் இன்னொரு உறுப்பினராக ஜெயகர் ஒரு பிரச்சினையை எழுப்பினார் பாகிஸ்தானா, இந்தியாவா என்று இன்னமும் ஊசலாடிக்கொண்டிருந்த முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் சபையில் இணைவதா, வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலையில் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார் ஜெயகர். அடுத்து எழுந்த அம்பேத்கர், மிகவும் அற்புதமானதொரு ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரை நடுநிலைமையோடு திகழ்ந்ததோடு, அம்பேத்கருக்கு இருந்த கச்சிதமான, ஆழ்ந்த சட்ட அறிவையும் புலப்படுத்தியது. அம்பேத்கர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமரசத்தீர்வை முன்வைத்தார். ஆகவே, அம்பேத்கரின் திறமையினால் தான் அவரை அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமித்தார்கள் என்று வர்மாக்கள் வாதிடுகிறார்கள்.

அடுத்ததாக, நாம் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இக்குழு அடிப்படையான சட்டங்களை இயற்றுகிற பணியில் ஈடுபடவில்லை. பல்வேறு துணைக்குழுக்கள் பரிந்துரைத்த சட்டப்பிரிவுகளை, செம்மைப்படுத்தி, செப்பனிட்டு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன்னால் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பே வரைவுக்குழுவுக்கு உரியது. சபையானது பல்வேறு வரைவுகளை வாசிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் சட்டப்பிரிவுகள் குறித்து நிகழ்ந்த விவாதங்களை நெறிப்படுத்தி, வழிநடத்தும் பணியில் வரைவுக்குழுவின் உறுப்பினர்கள், அதிலும் அடிக்கடி அம்பேத்கரே ஈடுபட்டார். மேலும், அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் வரைவுக்குழுவின் உறுப்பினராகவும், பதினைந்து குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினராகவும் திகழ்ந்த வெகு சில உறுப்பினர்களில் அம்பேத்கரும் ஒருவர்.5 ஆகவே, அம்பேத்கரால் அனைத்து சட்டப்பிரிவுகள் சார்ந்து நடைபெற்ற விவாதங்களையும் கவனிக்க முடிந்தது. சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவுகள் சார்ந்த விவாதங்களையும் கூர்ந்து நோக்க முடிந்தது.

பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் வரைவுக்குழுவின் தலைவர் என்கிற முறையில் அம்பேத்கருக்கும், குழுக்களின் செயலாளராகத் திகழ்ந்த எஸ்.என்.முகர்ஜிக்கும் (இவருக்கு இறுதியாக அம்பேத்கர் நெகிழவைக்கும் புகழாரத்தைச் சூட்டினார்) அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் சட்டப்பிரிவுகளைத் திருத்தியமைப்பதோடு,பல சட்டப்பிரிவுகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிற போது அவற்றைப் பல்வேறு குழுக்களிடம் இருந்து பெறுகிற பொறுப்பும் இருவருக்கும் உரியதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே இல்லை. இதனால், இந்தத் திருத்தியமைக்கும் பணிச்சுமைகள் பெரும்பாலும் அம்பேத்கரின் தோளிலேயே விழுந்தன. இந்த வரைவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி நவம்பர் 1948-ல் சபையின் முன்னால் இப்படிப் பேசினார்:

‘நீங்கள் வரைவுக்குழுவிற்கு நியமித்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் பதவியை விட்டு விலகியதால், அந்த இடத்துக்கு வேறொரு நபரை நியமனம் செய்தீர்கள். ஒரு உறுப்பினர் காலமானார். அவரின் இடம் நிரப்பப்படவில்லை. இன்னொரு உறுப்பினரோ அமெரிக்காவில் இருந்தார். அவரின் இடத்திற்கும் யாரும் கொண்டுவரப்படவில்லை. இன்னொரு நபரோ அரசாங்க அலுவல்களில் மும்முரமாக மூழ்கிவிட்டார். ஓரிரு உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து வெகுதூரம் தள்ளியிருந்தார்கள். அவர்களின் உடல்நலக்குறைவால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் ஒட்டுமொத்த பொறுப்பும் டாக்டர்.அம்பேத்கரின் தலைமேல் விழுந்தது. இப்பணியை மெச்சத்தக்க வகையில் சிறப்பாகச் செய்து முடித்திருக்கும் டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.’ 6
அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதவில்லை என்றாலும், அதன் உருவாக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் அவரின் கைவண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அவர் குழுக்களின் பரிந்துரைகளைத் திருத்தியமைப்பதோடு நிம்மதியடையவில்லை. சபையின் முழு அமர்வில் கலந்து கொண்டு, பொறி பறக்கும் விவாதங்களில் சட்டப்பிரிவின் ஒரு வரைவு ஏன் மற்றொன்றை விட மேம்பட்டது என விளக்கினார். விவாதங்களின் போக்கையே தொடர்ந்து திசைமாற்றும் பணியிலும் அவர் அயராது ஈடுபட்டார். ஆகவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார். இதுவே, ஏன் அருண் ஷோரி அவர் மீது இத்தனை வன்மமிகுந்த விமர்சனங்களை வைக்கிறார் என்பதை விளக்குகிறது. அருண் ஷோரியின் இன்னொரு வாதமான, காந்திய சிந்தனைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார் என்பதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது.

காந்தியை பழிதீர்த்த மேற்கத்திய ஜனநாயகவாதி:

அம்பேத்கர் இளவயதில் வெளிநாட்டில் படித்த போது தான் உள்வாங்கிக்கொண்ட விழுமியங்களையும், அரசியல் மாதிரிகளையும் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் நியாயப்படுத்தினார். அவர் தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டப்பிரிவில், இந்தியாவைச் ‘சோசியலிஸ்ட்’ என அறிவிப்பதில் துவங்கி, இந்திய குடியரசை முழுவதும் மாற்றியமைக்க முயன்ற இடதுசாரிகளை அம்பேத்கர் எதிர்த்தார். அப்படி, இந்தியக்குடியரசை சோசியலிஸ்ட் என்று அறிவித்து விட்டால், ‘அது ஜனநாயகத்தை எளிதாக அழித்துவிடும்’ என்று அவர் எண்ணினார்.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே எது மிகச்சிறந்த சமூக அமைப்பு என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை, அவர் நவம்பர் 19, 1948 அன்று கீழ்கண்டவாறு விளக்கினார்:

‘ நாம் நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசியல் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். எந்த வகையிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவும் தொடர்ந்து சர்வாதிகாரத்தோடு கோலோச்ச கூடாது என்கிற காரணத்துக்காகவே அரசியல் ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம். நாம் அரசியல் ஜனநாயகத்தை நிறுவி விட்டோம் என்பதால், லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்… […] [இப்போது], பொருளாதார ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு மக்கள் பல்வேறு வழிகளைக் கைக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். தனி உரிமை கோட்பாடே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று சிலர் நம்புகிறார்கள்; வேறு சிலரோ சோசியலிச அரசே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று கருதுகிறார்கள்; இன்னும் சிலர், கம்யூனிச சிந்தனைகளே மிகக் கச்சிதமான பொருளாதார ஜனநாயக வடிவம் என்று எண்ணுகிறார்கள் […] [இப்படிப்பட்ட சூழல்களில்] வழிகாட்டு நெறிமுறைகளில் நாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி திட்டமிட்டே இறுக்கமானதாக, நிலையானதாக எழுதப்படவில்லை. பல்வேறு வகையான சிந்தனைகள் கொண்ட பல்வேறு மக்களுக்குப் போதுமான இடத்தை வழங்கியுள்ளோம். லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தை அடைய அவரவரும் அவர்களின் சொந்த வழியில் முயற்சிக்கலாம். அவர்களின் வழியே பொருளாதார ஜனநாயகத்தை எட்டுவதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்று பொதுமக்களை நம்பவைக்க அவர்கள் முயலட்டும்.’8

இந்த வாதத்திற்குத் தன்னை உளமார ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக, இயற்கை வளங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அவர் எதிர்த்தார். அந்தச் சட்டத்திருத்தம் வாக்களிப்பிற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் எத்தகைய அறரீதியான வல்லமை மிக்கவராக திகழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.9 அம்பேத்கர் தாராளவாத ஜனநாயகத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. எப்போதும், வரைவுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட சட்ட வடிவத்தை நியாயப்படுத்துவதையே அம்பேத்கர் செய்வார். ஆனால், ஒருமுறை அவ்வாறு சட்ட வடிவத்தைத் தாக்கல் செய்த போது, அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்று முழு அமர்வை கேட்டுக்கொண்டார். அவர் தாக்கல் செய்த சட்டவடிவத்தைத் திருத்தி, அரசு நிர்வாக அதிகாரத்தையும் , நீதித்துறையையும் முழுமையாகப் பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.10 சில உறுப்பினர்கள், அரசின் அதிகாரத்துக்கு ஆதரவாக வாதிடுவதாகச் சொல்லிக்கொண்டு, நீதித்துறையின் மிகக்கடுமையான கட்டுப்பாடு அரசை பலவீனப்படுத்தும் என்றார்கள். நிற்க கூட நேரமின்றிப் பிரதமராக பல்வேறு பொறுப்புகளோடு இயங்கிக்கொண்டு இருந்த நேரு கூட, அம்பேத்கரின் சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் பொருட்டு விவாதத்தில் கலந்து கொண்டார்.11 இதன் விளைவாக, அம்பேத்கரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, இந்த முழுமையான அதிகாரப் பிரிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் சட்டப்பிரிவு 50 ஆனது. பிரிட்டிஷ் நீதித்துறையின் தாக்கத்தில் ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்தி இருப்பதை அம்பேத்கர் பின்னர் நியாயப்படுத்திப் பேசினார்.12 அதிகாரங்களைப் பிரித்து வைப்பது, எந்த வகையிலும் அரசை பலவீனப்படுத்தி விடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

கூட்டாட்சி முறையினால் ஏற்படும் அதீதமான அதிகாரப்பரவலாக்கம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிக்கும் என்பதால் அம்பேத்கர் வலிமைமிக்க மத்திய அரசையே ஆதரித்தார். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்குக் கூடுதலான சுயாட்சி கிடைத்தால், தீண்டாமை ஒழிப்பை கட்டாயமாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரி அமல்படுத்தாமல் போகக்கூடும் என்று வாதிட்டார்.13 காந்தியவாதிகள் கிராமத்தில் இருந்து துவங்கி எல்லா மட்டத்திலும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டிருந்தார்கள். இதனால், அதிகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற முடிவு, இயல்பாகவே காந்தியின் ஆதரவாளர்களைக் காயப்படுத்தியது. மிகவும் தீவிரமான காந்தியவாதிகளின் பரிந்துரைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார், அல்லது அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தினார். இவ்வாறு அம்பேத்கர், மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரைப் பழிதீர்த்துக் கொண்டார்.

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத உபயோகப்படுத்திய எழுத்துக்கள் பெரும்பாலும் காந்திய பார்வை கொண்டவையாக இருக்கவில்லை. நேரு கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் குறித்த தீர்மானத்தில் மகாத்மா காந்தியின் தாக்கம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தென்பட்டது. பல்வேறு குழுக்கள், துணைக்குழுக்களின் அறிக்கைகள் (இவற்றில் முக்கியமான குழுக்கள், துணைக்குழுக்களுக்கு நேரு, படேல் தலைமை தாங்கினார்கள்) காந்தி குறித்து மூச்சே விடவில்லை. இவற்றால் மட்டுமே, நவம்பர் 1948-ல் அம்பேத்கர் சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தில் காந்தியத்தின் முத்திரை இல்லாமல் போனது என்பதற்கு இல்லை. அம்பேத்கர் தாக்கல் செய்த சட்ட வடிவத்தில், மலைப்பை ஏற்படுத்தும் வகையில் 315 சட்டப்பிரிவுகள் இருந்தன. இதனால் தான், அம்பேத்கர் அப்பட்டமான நிறைவோடு, ‘உலகத்தின் வேறு எந்த அரசியலமைப்பு சட்டமும் இத்தனை பெரிதில்லை.’ என்றார்.14 அதற்குப் பின்னர், அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தில் கிராமங்களுக்கு இடமில்லை என்கிற காந்தியவாதிகளின் விமர்சனத்தைக் கீழ்கண்டவாறு தவிடுபொடியாக்கினார்:

‘வரைவு அரசியலமைப்பு சட்டத்தின் மீது வைக்கப்படும் இன்னுமொரு குற்றச்சாட்டு உண்டு. அது பண்டைய இந்திய ஆட்சியமைப்பை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பண்டைய இந்து அரசை மாதிரியாகக் கொண்டு உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். மேற்கின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னமும் தீவிரமான காந்தியப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மத்திய, மாநில அரசுகளும் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான கிராம அரசுகள் மட்டும் இருந்தால் போதுமானது. அறிவார்ந்த இந்தியர்கள் கிராம சமூகத்தின் மீது கொண்டிருக்கும் காதல் பரிதாபப்படும்படியாக இல்லாவிடினும், அளவில்லாததாக இருக்கிறது. […] கிராமம் என்னவாக இருக்கிறது? உள்ளூர் பெருமிதம் ஊற்றெடுக்கும் சாக்கடையாக, அறியாமை, குறுகிய மனப்பான்மை, வகுப்புவாதத்தின் கிடங்காக அல்லவா இருக்கிறது. வரைவு அரசியலமைப்புச் சட்டம் கிராமத்தை தூக்கி எறிந்துவிட்டு, தன்னுடைய அடிப்படையாகத் தனிமனிதனை ஏற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.’15

தமிழில்: பூ.கொ.சரவணன்

(இப்பகுதிகள் ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ எனும் மொழியாக்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நூலை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=mp_s_a_1_1?keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&qid=1574734728&sprefix=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87&sr=8-1#mediaMatrix_secondary_view_div_1574734735906)

தலித் அடையாளமே என்னைச் செதுக்கியிருக்கிறது. – சட்ட அறிஞர் அனுராக் பாஸ்கர் நேர்முகம்



பல கோடி விளிம்புநிலை மக்களின் கனவுகளின் அடையாளமாக என்னுடைய ஹார்வர்ட் டிகிரி திகழ்கிறது.”- அனுராக் பாஸ்கர்

அனுராக் பாஸ்கர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து தன்னுடைய LL.M. பட்டத்தை 2019-ல் பெற்றிருக்கிறார். அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக  வேலை பார்த்த அனுபவம், ஹார்வர்ட் நோக்கிய பயணம், ஹார்வர்ட் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை, அவரின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்.

அனுராக் பாஸ்கர் தன்னுடைய LL.M. பட்டத்தை ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிடம் இருந்து பெற்றிருக்கிறார். இவர் லக்னோவில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( RMLNLU) B.A. LL.B பட்டங்களை 2012-17 காலத்தில் பெற்றார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக ஜூலை 2017-18 காலத்தில் பணியாற்றினார். அனுராக் கூர்மையான அறிவுத்திறமிக்கப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. செய்தித்தாள்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தோவியங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளார். அவருடைய கட்டுரைகள் The Wire, LiveLaw, The Print, EPW முதலிய பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இனி அவரின் பயணம் குறித்து உரையாடுவோம்.

கேள்வி: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து LL.M. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்?

அனுராக் : திக்குமுக்காடிப் போயிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய பட்டமளிப்பு விழா மே 30, 2019 ல் நடைபெற்றது. நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதை நம்பவே ஒரு வாரம் ஆனது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை, நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. அமெரிக்காவை எட்டிப் பார்க்க வேண்டும் என்று கூட எனக்குப் பட்டதில்லை. எண்பதுகளில் எங்கள் வீட்டிற்குச் சவால்மிக்கக் காலம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து வேலை தேடி லக்னோவிற்கு என் அப்பா அடிக்கடி நாற்பது கிலோமீட்டர்கள் கால் வலிக்க, வலிக்கச் சைக்கிள் மிதிப்பார். என் அப்பாவை பொறுத்தவரை லக்னோ சென்று வருவது என்பது வெளிநாட்டிற்குப் போய்வருவதாகும். நான் லக்னோவில் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போது, வேலையின் பொருட்டு டெல்லிக்கு இடம்பெயர வேண்டும் என்பது எனக்கு வெளிநாட்டிற்குப் போகிற ஒன்றாகவே தோன்றியது. அந்தச் சைக்கிள் பயணத்தில் இருந்து ஹார்வர்ட் வரையிலான இப்பயணத்தை வந்தடைய என் குடும்பம் நெடுந்தூரம் நடந்திருக்கிறது. தற்போது நான் கலவையான உணர்வுகளில் ஆட்பட்டுள்ளேன்.

கேள்வி: நீங்கள் ஏன் சட்டம் பயில முடிவு செய்தீர்கள்? உங்கள் குடும்பத்தில் யாரேனும் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்களா?

அனுராக்: இல்லை ! நான் முதல் தலைமுறை வழக்கறிஞர்.

நான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க ஒரு வரலாற்று ஆளுமையே முதன்மையான காரணம். அவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பள்ளிக்காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் படைத்தளித்த தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் என்கிற மனப்பிம்பம் என்னைப் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. அவரின் வாழ்வானது சட்டம் பயின்று அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்திற்கான கருவியாக மாறவேண்டும் என்கிற கனவினை விதைத்தது. ஆனால், சட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நான் பொறியியல் பயில வேண்டும் என்று விரும்பினார்கள். அடிக்கடி, நடுத்தர வர்க்க/அடித்தட்டு நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதாரத்திலோ, சமூகத்திலோ பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபர்களின் முதல் போராட்டம் தங்களுடைய குடும்பங்களிலேயே துவங்குகிறது. நாம் விரும்பிய பாடத்தைப் படிக்கப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. என்னுடைய பெற்றோர் நான் விரும்பிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

கேள்வி: ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (RMLNLU) உங்களுடைய எத்தகைய அனுபவம் கிட்டியது?

அனுராக்: செறிவான அனுபவம்! சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள், வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள இப்பல்கலைக்கழகம் உதவியது. மேலும், எனக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொணரவும் RMLNLU பெருமளவில் கைகொடுத்தது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்புக் கொண்ட பல்கலைக்கழகங்களில் என் கல்விக்கூடமும் ஒன்று. அங்கே உள்ள நூலகத்தில் குவிந்துள்ள நூல்கள் அறிவின் ஊற்று. எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் மகத்தானவர்கள். எனினும், RMLNLU கல்வி நிறுவனமாக இன்னமும் தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்குக் கிட்டிய சில நல்ல நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்து வருகிறார்கள்.

கேள்வி: RMLNLU-ல் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வேறென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

அனுராக்: பொதுவாகச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது, விவாதம் புரிவது ஆகியவற்றில் மின்னுவார்கள். நான் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வந்தமையால், எனக்குச் சரளமான ஆங்கிலம் கைவரவில்லை. இதனால், பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்கவோ, பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய அவசியமிருக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ எனக்குத் தயக்கமாக இருக்கும். இதைக்கண்டு திகைத்து போய் நிற்காமல், என்னுடைய பிற திறன்களைப் பட்டை தீட்டிக்கொண்டேன்.

RMLNLU-வில் படித்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தினேன். இது எனக்குள் தலைமைப்பண்பை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. களத்தில் அரும்பெரும்  சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், அரசுப்பதவி வகிப்பவர்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. பின்தங்கிய குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகப் பாடுபடும் டாக்டர். சந்தீப் பாண்டே (ராமன் மகசேசே விருதினை 2002-ல் பெற்றவர்), உத்திர பிரதேச குழந்தை உரிமைப்பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் தலைவர் திருமதி. ஜூஹி சிங் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியதை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். மனித உரிமைகள் வழக்கறிஞரான ஆதித்யா ஸ்ரீவத்ஸவா வழிகாட்டுதலில் களத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய உதவியோடு புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயத் தற்கொலைகளைக் கவனப்படுத்தவும், அதற்குப் பின்னுள்ள காரணங்களை ஆவணப்படுத்தவும் முடிந்ததைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். என்னுடைய பல்கலையின் இணைப் பேராசிரியரான முனைவர். KA பாண்டேவுடன் இணைந்து இந்தியாவின் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைச் சமூகத் தணிக்கை புரியும் செயல்பாட்டை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்து முடித்தோம். மேற்சொன்ன அமைப்பு ரீதியான திறன்களைத் தாண்டி, ஆய்வுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன். என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் பெருமைமிக்க Economic & Political Weekly இதழில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் வெளிவந்தன.

கேள்வி: நீங்கள் RMLNLU-வில் சட்டம் பயின்ற போது ஏழு வெவ்வேறு நீதிபதிகளுடன் பணியாற்றினீர்கள். எது இத்தனை நீதிபதிகளிடம் பயிற்சி பெற உங்களைத் தூண்டியது?

அனுராக்: என்னுடைய மூன்றாவது செமஸ்டரின் போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) இம்தியாஸ் முர்டாசாவிடம் பயிற்சி பெற்றேன். அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் நீதிபதிகள் பணியாற்றும் முறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எப்போது, எவ்வளவு முடியுமோ அப்போதெல்லாம் பல்வேறு நீதிபதிகளிடம் பயிற்சி பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர்களுடைய ஆக்கங்களுக்கு என்னாலான பங்களிப்பினை புரிந்தேன்.’Philadelphia’ திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், “ அடிக்கடி அது அமைவதில்லை. எங்காவது, எப்போதாவது அரிதாகத்தான் நீதி வழங்குவதில் நீ பங்கேற்க இயலும். அது நிகழும் போது ஏற்படும் பரவசம் அதியற்புதமானது.” அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நான் வெவ்வேறு துறை வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளின் கீழ் பணியாற்ற விண்ணப்பித்தேன். இதன்மூலம் பலதரப்பட்ட வழக்குகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, நான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி DY சந்திரசூட் வழிகாட்டுதலில் பணியாற்றியதும், லக்னோ உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தேவேந்திர உபத்யாயா, ராஜன் ராய், AR மஸூதி ஆகியோரிடம் பணியாற்றியதும் சுவாரசியம் கூட்டுபவையாக இருந்தன.

கேள்வி: இதே காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சட்ட உதவியாளராக பணிபுரிந்தீர்களா?

அனுராக்: நவம்பர் 2013-ல் எங்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அலகாபாத் தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பங்கேற்றார். அவர் பேசியதை கேட்டது முதல் அவர் ஊக்கமூட்டும் ஆளுமையாக எனக்கு ஆனார். அவரிடம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பித்தேன். அவரிடம் நேரடியாகக் கற்றுத்தேறும் வாய்ப்பில்லாமல் போயிருந்தால் வேறேதேனும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்.

கேள்வி : நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது ?

அனுராக்: அது அசாதாரணமான ஒன்றாக இருந்தது என்று எண்ணுகிறேன். சட்ட உதவியாளர்களில் நான் பெரும் நல்வாய்ப்பு பெற்றவன் என்றே உணர்கிறேன். அவர் செவிமடுத்த பல்வேறு புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் ஜூலை 2017-18 காலத்தில் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. நீதிபதி சந்திரசூடின் அனுபவங்களை அவர் அடிக்கடி தன்னுடைய சட்ட உதவியாளர்களிடம்  பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனைப் பதிவு செய்வதற்காக நீதிபதி சந்திரசூட் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணுகிறேன்.

நீதிபதி சந்திரசூட் ஒருமுறை தன்னுடைய தந்தையும், காலஞ்சென்ற நீதிபதியுமான YV சந்திரசூட் குறித்த தன்னுடைய நினைவலைகளில் மூழ்கினார். அவருடைய தந்தை அப்போது இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் பம்பாயில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வார். (அனேகமாகக் காலா கோடா கஃபே/வேஸைட் இன்). அங்கே நண்பகல் வேளையில் ஒரு மனிதர் எப்போதும் அமர்ந்திருப்பதைக் காண்பார். அம்மனிதர் தனக்குள்  தோன்றும் கருத்துகளைச் சளைக்காமல் எழுதிக்கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார். அந்த மாமனிதர் டாக்டர். அம்பேத்கர். நீதிபதி YV சந்திரசூட் தான் டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்கில் அவருக்கு எதிர்தரப்பில் நின்று வாதாடிய நினைவுகளை ஆசையோடு அசைபோடுவாராம்.

கேள்வி: கடந்த செப்டம்பர் 2018-ல் விஞ்ஞான் பவனில் உரையாற்றும் போது நீதிபதி சந்திரசூட் உங்களைக்குறித்துக் குறிப்பிட்டார். அவர் உங்களுடைய சமூகப் பின்னணி குறித்தும் பேசினார். உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், அதைக்குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அனுராக்: “ஆம். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பல்வேறு அடையாளங்களில் அதுவும் ஒன்று. எனினும், என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான தேர்வுகளைத் தலித் அடையாளமே செதுக்கியிருக்கிறது. ஹார்வர்டில் பட்டம் பெற்றது என்பது என்னைப்பற்றிய ஒன்று என்பதையும் தாண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எனக்குத் தனிப்பட்ட அளவிலும், வழக்கறிஞராகவும் கிட்டிய அனுபவங்கள் முக்கியமானவை என்பதோடு என்னுடைய ஹார்வர்ட் நோக்கிய இந்தப் பயணமானது இன்னமும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழவேண்டிய நிலைக்கு இன்றுவரை தள்ளப்பட்டிருக்கிற பல கோடி மக்களின் கனவுகளின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த ஹார்வர்டில் பெற்ற LL.M. பட்டமானது, மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் முன்பே தற்கொலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர். பாயல் தட்விக்குச் சமர்ப்பணம். இந்தப் பட்டமானது ரோஹித் வெமுலாவிற்கான என்னுடைய அஞ்சலி. அவருடைய இறுதிக்கடிதம் அறவுணர்வுமிக்கதாகத் திகழவேண்டிய தேசத்தினுடைய மனசாட்சியை நோக்கி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் முன்முடிவுகளை அறவே அழிக்க வேண்டியதை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். குதிரையில் ஏறி சவாரி செய்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்ட, இது போன்ற எண்ணற்ற அநீதிகளை அன்றாடம் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எம்மக்களுக்கான பட்டம் இது. பஞ்சம் தாக்கிய பகுதிகளில் நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளுக்காக இப்பட்டம். இது ஒடிசாவில் ஃபனி புயலில் பாதிக்கப்பட்டும், புயற்காலப் பாதுகாப்பு உறைவிடங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டும், நிவாரண உதவிகள் தரப்படாமலும் அல்லல்படுத்தப்படும் தலித்துகளுக்கான பட்டம். நான் ஹார்வர்டில் பட்டம் பெற்றது எண்ணற்றோரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். என்டிடிவியில் தோன்றிய பதினான்கு வயது சிறுமி சுனைனா உள்ளிட்ட பெருங்கனவுகள் கொண்ட அனைவருக்கும் எட்டாததாகத் தோன்றும் எல்லைகளையும் தொட்டுவிட இது உத்வேகம் தரும் என்று நம்புகிறேன்.”

கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் LL.M. பட்டம் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.

அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான தேவைகள், இடம் பிடிப்பதற்கான தகுதிகள் இந்தத் தளத்தில் காணக்கிடைக்கும்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions/https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions
பல்வேறு கட்டத் தேர்வுகளுக்கான காலக்கெடு, பாடப்பொருட்களைக் கீழ்கண்ட சுட்டியில் காணலாம்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-application-deadlines-and-materials/

. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ஒருவர் : தற்குறிப்பு (CV/Résumé); தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை ( Personal statement question); மதிப்பெண் பட்டியல்கள், குறைந்தபட்சம் இரண்டு பேரின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை A, B என்று இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில், விண்ணப்பிப்பவர் தனக்குப் பிடித்த துறையில் காணப்படும் முக்கியமான பிரச்சனை ஒன்றையோ, ஒரு நாடு/பகுதி/உலகம் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல் ஒன்று குறித்து விவரிக்க வேண்டும். பின்னர் இது சார்ந்து தத்துவார்த்த வரைவு ஒன்றையோ, அச்சிக்கலை எதிர்கொள்ளும் அணுகுமுறையையோ பரிந்துரைக்க வேண்டும். இந்தச் சட்டக்கட்டுரையானது முழுக்க முழுக்க விவரணையாக அமையாமல் பகுத்தாய்வது, ஒழுங்குமுறைகளை (normative) அணுகுவதில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையானது நீங்கள் எடுத்துக்கொண்ட சட்டச்சிக்கல் குறித்து அசலான, ஆழமான புரிதலை வெளிக்கொணர வேண்டும். தேவையான மேற்கோள்கள், தேவையென்றால் விளக்கத்தோடு கூடிய அடிக்குறிப்புகள் இடம்பெறலாம். பகுதி B ஆனது ‘தன்னைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கை’ பிற LL.M பட்டங்களில் அமைவதை ஒத்திருக்கும். இதில் விண்ணப்பிப்பவர் ஏன் ஹார்வர்டில்  LL.M பட்டம் பெற விரும்புகிறார் என்பதையும், இப்பட்டம் பெறுவது அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்களை எப்படி இணைக்கிறது என்றும் பேச வேண்டும். மேலும், மனதைக்கவரும் தனிப்பட்ட கதையொன்றையும் இப்பகுதியில் எழுத வேண்டும். ஹார்வர்ட் சட்டக்கல்லூரிக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறரும், நானும் சட்டத்தின் குறிப்பிட்ட கூறுகளோடும், எங்களுடைய பணி அனுபவங்களையும் இணைத்து இப்பகுதியை எழுதியிருந்தோம். விண்ணப்பிப்பவர் அடிப்படையில் கீழ்கண்டவற்றை விளக்கி எழுத வேண்டும்: (1) ஏன் LL.M பட்டம் பயில விரும்புகிறார், (2) என்னென்ன பாடங்களைப் பயில விருப்பம், ஏன்?, (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும்?. விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலதரப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள்? ( (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.)

கேள்வி : ஹார்வர்டில் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும், உங்களுடைய பார்வையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஹார்வர்ட் சட்டக் கல்லூரி இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் உதவித்தொகைகளை வழங்கி உதவுகிறதா?

அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரி ஹார்வர்டில் படிக்கப் போதுமான வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது. எனக்கு $52000 டாலர் நிதியுதவி கிட்டியது (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 36 லட்சம்). இதைக்கொண்டு கல்விக்கட்டணத்தில் 80% செலுத்த முடிந்தது மீதமிருந்த கட்டணத்தை வங்கிக்கடனை கொண்டு செலுத்தினேன் ஹார்வர்ட் வழங்கும் நிதியுதவி போக இன்லாக்ஸ் உதவித்தொகை, ஃபுல்ப்ரைட் உதவித்தொகை ஆகியவை உள்ளன. மேலும், வட்டியில்லா கடனாக உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளும் உண்டு (டாடா அறக்கட்டளை போன்றவை).

கேள்வி: ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்

அனுராக்: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனக்குள் கனன்று கொண்டிருந்த கனவு. நம்முடைய கனவுலகில் நிஜமாகவே சஞ்சரிப்பது என்பது உலகத்தின் அற்புதமான உணர்ச்சிகளில் ஒன்று.

ஹார்வர்ட் பல்வேறு அரிய  வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் கொட்டிக்கிடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் LL.M. பட்டப்படிப்பிற்கான ஒன்பதரை மாதத்தில் பயன்படுத்துவதும், அறிவுக்கடலில் முத்துக் குளிப்பதும் மலைப்பூட்டுகிற ஒன்று. என்னுடைய சகா ஒருவர் குறிப்பிட்டதைபோன்று “ஹார்வர்ட்டின் ஒட்டுமொத்த எல்லையைத் தொட்டுணரவும், அதன் அனுபவங்களை முழுமையாக அள்ளிக்கொள்ளவும் ஆக்டோபஸாகத் தான் இருக்க வேண்டும்”. மகத்தான சில பேராசிரியர்களிடம் படிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம். வகுப்புகளைத் தாண்டி என்னுடன் உடன் பயின்ற மாணவர்கள் பலதரப்பட்ட கலாசாரங்கள், சமூகப் பின்புலங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடன் 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றார்கள். இவர்கள் சட்டக்கல்வி, சட்டத்துறை ஆய்வு, அரசாங்க பணி, நீதித்துறை, சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தனியார் துறையினர் என்று பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்.

எடுத்துக்காட்டாக நான் அஷுடோஷ் சலீல் (மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முனைப்பான  அரசு அதிகாரி), ஷீலா செய்ல் (ஐம்பது வயதாகும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அதிகாரி) உள்ளிட்ட ஊக்கமூட்டும் ஆளுமைகளுடன் இணைந்து வகுப்புகளில் பங்கெடுப்பேன், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பரிமாறிக்கொள்வேன் என்றோ எப்போதும் எண்ணியதில்லை. மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளிலும் (கென்னடி கல்லூரி போன்றவை), பிளெட்சர் கல்லூரியிலும் இணைந்து பயிலும் வாய்ப்பும் உண்டு. இதனால் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பாடங்களைப் பயிலும் மாணவர்களோடு தொடர்புகொள்ள இயலும். அமெரிக்கா வந்ததால் நான் வெகுவாக மதிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும் பேராசிரியர் மைக்கேல் சாண்டெல் (நம் காலத்தின் கற்றறிந்த தத்துவ அறிஞர்), டாக்டர் ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர்) ஆகியோரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.

கேள்வி : நீங்கள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்றுத்தேர்ந்தீர்கள்?

அனுராக் : 2018 செப்டம்பர்-டிசம்பர் காலத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் நடத்திய ‘சட்டத் தொழில்’ பாடம், ஜென்னி ஸுக் ஜெர்சனின், ‘அரசியலமைப்புச் சட்டம்: அதிகாரப் பகுப்பு, கூட்டாட்சி மற்றும் பதினான்காவது சட்டதிருத்தம்’, பேராசிரியர் லூஸி வைட்டின், ‘வறுமை, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி’, பேராசிரியர் ஸ்டீபனி ராபின்சனின் , ‘நிறப்பாகுபாட்டில் இருந்து நிறக்குருட்டுத் தன்மை, அதிலிருந்து நிறத்தை மறுவரையறை செய்வது : மாறிக்கொண்டே இருக்கும் இனம் குறித்த கருதுகோள்களோடு அமெரிக்காவின் போராட்டங்கள்’ முதலிய பாடங்களைப் பயின்றேன். :. 2019-ன் பிப்ரவரி – ஏப்ரல் காலத்தில் மைக்கேல் க்ளார்மேனின் ‘அரசியலமைப்பு சட்ட வரலாறு II: அமெரிக்காவின் புனரமைப்புக் காலத்தில் இருந்து சிவில் உரிமைகள் இயக்கம் வரை’ , பேரசிரியர் லாரன்ஸ் லெஸ்ஸிக்கின், ‘அரசியலமைப்பு சட்டங்களின் ஒப்பீடு’, பேராசிரியர் டயானா ரோசென்ஃபீல்டின் ’பாலின வன்முறை, சட்டம் மற்றும் சமூக நீதி’ ஆகிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்தேன். மேலும், தத்துவம் சார்ந்து பேராசிரியர்கள் ராபர்டோ உங்கெர், மைக்கேல் பொயட் ஆகியோர் நடத்திய, ‘மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவங்களில் வாழ்வியல் ஒழுக்கங்கள்’ எனும் பாடத்தையும் கற்றறிந்தேன்.

கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் உங்களால் மறக்க முடியாத நினைவு என்று ஏதேனும் உண்டா?

அனுராக் : ஒட்டுமொத்த ஹார்வர்ட் அனுபவமே மறக்க முடியாத ஒன்று தான். எனினும், சில தருணங்கள் இன்னமும் உரமேற்றுவதாக, ஊக்கப்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக மூன்று தருணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது அனுபவம் இது:

2018-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட வகுப்பின் இறுதி வகுப்பு பேராசிரியர் ஜென்னி ஸுக்ஜெர்சன் தன்னுடைய வலிமையான உரையோடு வகுப்பை முடித்துவைத்தார். அவர் நம் சமகாலத்தின் அரசியலமைப்பு சட்ட நெருக்கடிகள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய பாத்திரத்தை குறித்தும் விரிவாக உரையாற்றினார் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் பேசிக்கொண்டே இருக்கையில் உணர்ச்சிவசப்பட்டவராகத் தென்பட்டார். அவர் தன்னுடைய வகுப்பை, “நமக்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான தடுப்புச்சுவராக அரசியலமைப்பு சட்டமே உள்ளது” என்று சொல்லியவாறு நிறைவுசெய்த போது கிட்டத்தட்ட அழுதுவிட்டார். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க பற்றுறுதியும், பிணைப்பும் கொண்ட அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், இப்பெரும்பணிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிற உணர்வும் மெய்சிலிர்க்க வைத்தது.

இரண்டாவது, பட்டமேற்பு விழாவிற்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் பேராசிரியர் மைக்கேல் க்ளார்மேனின் ‘இறுதி சொற்பொழிவு’. இது ஏப்ரல் 2019-ல் நிகழ்ந்தது. அந்த உரையில் பேராசிரியர் க்ளார்மேன் தற்போதைய தலைமுறை அரசியல், சமூக நிலப்பரப்பில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த காலத்தில் சிவில் உரிமைகளுக்காக அயராது போராடிய வழக்கறிஞர்களின் வாழ்க்கை நம்பிக்கையையும், மீண்டெழும் வலிமையையும் நமக்கு வழங்குவதைக் கவனப்படுத்தினார். சிவில் உரிமைகள் சார்ந்த பேராசிரியரின் ஆய்வுகள் பிரமிக்க வைப்பவை.

மனதுக்கு நெருக்கமான மூன்றாவது நினைவு என்பது அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பு. 1990களில் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் இருந்து ஒபாமா பட்டம் பெற்றார் என்பதால், அவரோடு நெருங்கிப் பழகிய பேராசிரியர்களிடம் இருந்து அவர் குறித்த கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பேராசிரியர் வில்கின்ஸ் ஒபாமா குறித்துச் சொல்லும் போது, தன்னுடைய சட்டப்படிப்பிற்குப் பின்பு சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கிற சிந்தனைத் தெளிவு ஒபாமாவிற்கு அப்போதே இருந்தது என்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் டீனாக இருந்த பேராசிரியை மார்த்தா மினோவ் பராக் ஒபாமா வகுப்பில் அடிக்கடி பேசமாட்டார், ஆனால், அவர் பேச எழுந்தால் அதில் தொனிக்கும் உறுதி அனைவரையும் அவர் குரலுக்குச் செவிமடுக்க வைக்கும் என்று நினைவுகூர்ந்தார். இவை போக, எனக்குப் பிடித்த பேராசிரியர்களோடு மத்திய உணவிற்கு வெளியே போவது என் ஞாபக அடுக்கினால் நீங்காத நினைவாக ஆழப்பதிந்திருக்கிறது.

கேள்வி: உங்களுடைய ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த முதல் மாணவர் நீங்கள் தான். அனேகமாக, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்று L.L.M பட்டம் பெற்ற முதல் தலித் ஆளுமையும் தாங்களாக இருக்கக்கூடும். எப்படி உணர்கிறீர்கள்?

அனுராக் : இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல டோபி மக்வொயர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன் படத்தில் எனக்குப் பிடித்த வசனம் உதவும்.. அதில் பீட்டர் பார்க்கர், “வாழ்க்கை எனக்காக எதை என்ன வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், ‘பேராற்றலோடு பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது.’ என்கிற வார்த்தைளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்பான். என்னுடைய வெற்றி, சாதனைகளுக்கும் மேற்சொன்ன வசனம் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

ஒவ்வொரு வெற்றியோடும், பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இந்தப் பொறுப்பானது கிட்டிய பாடங்களை மேம்பட்ட எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. எப்போது எல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மிடையே உள்ள விரிசல்கள், வேறுபாடுகளை (Fault-lines) பகுத்தாய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதும் பொறுப்பில் அடங்கும். இதே நேரத்தில், இத்தனை காலம் எனக்கு ஆதரவாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகிறது. குறிப்பாக எனக்கு எப்போதும் உற்ற வழிகாட்டியாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களாகவும் திகழ்ந்த முனைவர் பூனம் ஜெயந்த் சிங், முனைவர் பூஜா அவஸ்தி, திவ்யா திரிபாதி, அபூர்வா விஸ்வநாத், ஸ்ரீ அக்னிஹோத்ரி, சவிதா தேவி ஆகிய ஆறு பெண்களை நினைவுகூர்ந்து நன்றிகூற விரும்புகிறேன்.

கேள்வி: உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

அனுராக் : அன்றாடம் பாதாள சக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்யும் போது இறந்துபோகும் நம்முடைய குடிமக்கள் குறித்த செய்திகளைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். பசியால் குடிமக்கள் இறப்பது குறித்து வாசிக்கிறோம். வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் இயைந்து இயங்க வேண்டிய இத்தகைய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நான் அறிவுத்துறை, சட்டப்போராட்டம், செயல்திட்டத்திற்கான கொள்கைகளைத் திட்டமிடல், அரசியல் ஆகியவற்றில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான்கு தளங்களிலும் தீவிரமாக இயங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருக்கிறேன். என் தொழில் சார்ந்த புத்தம் புதிய மைல்கற்களைக் கண்டடைவதன் மூலம், இத்துறைகளில் பரவலாகப் பங்களிக்க முனைய வேண்டும். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின். 2019-ம் ஆண்டின் வகுப்பறை நாள் விழாவில் மே 29 அன்று தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ரிச்சர்ட் லாசரஸ், “உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பெற்ற ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் பட்டத்தைக் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இந்தப் பட்டத்தைக் கொண்டு வாழ்வில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதிலேயே வாழ்வின் உண்மையான மதிப்பு பொதிந்திருக்கிறது.” என்றார். ஆகவே, இந்தியாவிற்குத் திரும்பி இயங்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

அனுராக்: நன்றி

இக்கட்டுரை ‘நீலம்’ டிசம்பர் 2020 இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு மனம்நிறைந்த நன்றிகள்.

நன்றி: livelaw இணைய  இதழ் 
தமிழில்: பூ.கொ.சரவணன்

பி.எஸ்.கிருஷ்ணன் – சமூக நீதி சாம்ராட்.


இப்படி சாம்ராட் என்று விளிக்கப்படுவதை  மக்களாட்சி, சமத்துவத்தில் ஆழமான பிடிப்புடைய பி.எஸ்.கிருஷ்ணன் ஏற்க மறுத்திருப்பார். என்றாலும், அவரின் பங்களிப்புகள், பணிகள் மகத்தானவை. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் செயலாளராகவும் சமூக நீதியை முன்னெடுப்பதில் அவர் பெரும் பங்காற்றினார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த பி.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய பதினோராவது வயதினில் ஆங்கில செய்தித்தாளில் இந்தியாவில் ஏழில் ஒருவர் தீண்டப்படாதவராக சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்கிற அம்பேத்கரின் அறிக்கையை படிக்கிறார். தீண்டாமை என்றால் என்ன என்று தந்தையிடம் கேட்டார். அது அநீதியானது என்பதை உயர்சாதியில் பிறந்த அவரின் தந்தை தெளிவுபடுத்தினார். மேலும், தீண்டாமை எனும் பெருங்கொடுமை எப்படி சமூகத்தில் பின்பற்றப்படுகிறது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இதனையடுத்து, திருவிதாங்கூரில் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமூகத்தை சேர்ந்த கே.சுகுமாரன் நடத்தி வந்த ‘கேரளா கௌமுதி’ நாளிதழில் தீண்டாமைக்கு எதிரான பல்வேறு எழுத்துகள் கிருஷ்ணனின் சிந்தனையை ஆட்கொண்டன. ‘என் மதம் சுயமரியாதைக்கு அவமதிப்பாக திகழ்கிறது என்றால் நான் எந்த மதத்திற்கு மாற வேண்டும்?’ என்கிற கே.சுகுமாரனின் மாநாட்டு கூக்குரல் கேரளாவின் ஆலயக்கதவுகளை  அனைத்து சாதியினருக்கும் திறந்து விட்டது.

நாராயண குருவின் ‘ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம்’ எனும் முழக்கம் கிருஷ்ணனின் வாழ்க்கையை செலுத்த ஆரம்பித்தது.  கேரளவில் தலித் தொழிலாளர்கள் தங்கள் சந்ததியினருக்கு கல்விக்கூடங்களை திறந்துவிட வேண்டும் என்று நிகழ்த்திய போராட்டங்கள், அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகளும் அவரின் வாழ்க்கை பயணத்தின் ஒளிவிளக்குகளாக திகழ்ந்தன.

காஞ்சிபுரத்தின் பச்சையப்பா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த காலத்தில்  கிருஷ்ணன் குடிமைப்பணி தேர்வு எழுதினார். அவர் ஐ.ஏ.எஸ். ஆக தேர்வு பெற்றார். எந்த மாநிலத்தில் பணி வேண்டும் என்கிற விருப்பத்தை சொல்லுமாறு கேட்ட போது, ‘எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் என்னை அனுப்பி வையுங்கள். எம்மாநிலமும் என் மாநிலமே’ என்று அவர் உறுதிபடச் சொன்னார். (அன்றைய ஹைதராபாத்) ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.

நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர் என்று சமூகத்தில் உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின் நலன்களுக்காக அயராது பாடுபட்டார். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த கிருஷ்ணன் மக்களின் மொழியில் உரையாடி அவர்களின் சிக்கல்களை அறிந்து கொண்டு உடனடியாக தீர்வு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதற்கு முந்தைய தேடல், ஆய்வு, வாசிப்பு, விதிகள், சட்டங்கள் குறித்த சளைக்காத உழைப்பு அவரிடம் இருந்தது. இதனைக்கொண்டு கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என்று பல தளங்களில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார். அரசு நிலங்கள், ஊருக்கு பொதுவான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய போது ஆதிக்க சக்திகளின் எதிர்ப்பை மீறி பகிர்ந்து கொடுத்தார். ஜமாபந்திகளை தலித்துகள் வாழும் பகுதிகளில் நடத்திய முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணன் சமத்துவத் தேரை சேரிக்கும் இழுத்து வந்தவர் என்றால் மிகையில்லை.

தன்னுடைய சாதியை யார் கேட்டாலும் சொல்ல மறுத்த கிருஷ்ணன், சாதி விதித்த எல்லா கட்டுப்பாடுகளையும் தகர்த்ததாக மகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார். அவரின் அரும்பணிகளை கண்ட அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் ‘நீங்கள் ஏன் உங்கள் சாதியை மறைக்கிறீர்கள். நீங்கள் உயர்சாதியில் பிறந்தவர். நீங்கள் அதனை மறைப்பதால் என்ன நன்மை விளையப்போகிறது?’ என்று கேட்டார். கிருஷ்ணன் தீர்க்கமாக, ‘ஐயா, நான் சாதியை மறைக்கவில்லை. சாதியை நிராகரிக்கிறேன்’ என்று பதிலுரைத்தார்.  நெகிழ்ந்து போன ஜெயில் சிங் ‘இறைவன் ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்காக உழைக்கும் புத்தியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார்’ என வாழ்த்தினார்.

வர்ணமா? வர்க்கமா? எது இந்திய சமூகத்தில் முக்கியமாக எதிர்கொள்ள வேண்டிய சவால் என்கிற வினாவிற்கு இரண்டுமே தான் என்று அவர் கருதினார். ஏழ்மையும், சாதி ஒடுக்குமுறையும் இணைந்து பெரும்பாலும் பயணிப்பதை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் நில சீர்திருத்தம், நிலப்பகிர்வை தீவிரமாக வலியுறுத்தினார்.

கே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஆளுநர்களை கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு தலித்துகளுக்கு நிலப்பகிர்வை சாதிக்க முடியுமா என்று ஆய்வு செய்தது. பெரும்பாலான தலித்துகள் நிலமற்றவர்களாக, வறுமையில் சிக்குண்டவர்களாக இருப்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்த அக்குழு அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போதுமான அளவு நிலமிருப்பதையும் சுட்டிக்காட்டியது. இதனை கவனப்படுத்திய பி.எஸ். கிருஷ்ணன் ‘கண்ணியமான வாழ்வு, பாதுகாப்பு, தீண்டாமை எதிர்ப்பு ஆகியவற்றுக்கு நிலவுரிமை, கல்வி இரண்டும் அவசியமாகும். நீர்ப்பாசன வசதியுள்ள நிலமிருந்தால், பிள்ளைகளை படிக்க வைக்கும் பொருளாதார பலம் இருக்கும். போதுமான வருமானம் இல்லாமல் போனால், குடும்பத்தின் தேவைகளுக்காக பிள்ளைகளை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்ற வேண்டிய அவலம் ஏற்படும். பாசன வசதியுள்ள நிலத்தால் வருமானம் கிடைக்கும் என்றால் பிள்ளைகளை படிக்க அனுப்புவது இலகுவாக இருக்கும்.’ என்று பதிந்தார்.

பொருளாதார ஏற்றத்தை சாதிக்க பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்களில்  நிலமில்லாத ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் , பெண்கள், சீர்மரபினர்  இணைத்துக்கொள்வது அவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அளவில் நெடுங்காலமாக அமலுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அப்பணியில் இணைச் செயலாளராக சீரிய பங்காற்றினார் பி.எஸ்.கிருஷ்ணன். பின்னர், வி.பி.சிங் அரசு ஆட்சிக்கு வந்த போது மண்டல் பரிந்துரைகளை அமலாக்கும் பொறுப்பு செயலாளராக இவர் வசம் வந்து சேர்ந்தது. அப்பணியையும் செவ்வனே செய்தார். ஆந்திர பிரதேச அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்த போது பி.எஸ்.கிருஷ்ணனின் உதவியை நாடியது. சட்ட வரைவு, உருவாக்கம், அமலாக்கத்தை அவர் திறம்பட கையாண்டார். உச்சநீதிமன்றம் வரை சென்று அந்த இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

புகைப்பட நன்றி: நீதிராஜன்

சமீபத்தில் ஒரு விவாத நிகழ்வில் அவர் கலந்து கொண்ட போது, ‘எத்தனை நாளைக்கு தான் இட ஒதுக்கீடு தொடரும்?’ என நெறியாளர் கேட்க, மூப்பினால் நடுங்கிக் கொண்டிருந்த நிலையிலும் உறுதியாக ‘சாதியின் பெயரால் அநீதிகள் இந்திய சமூகத்தில் நிகழ்த்தப்படுவது நிற்கும் நாள்வரை இட ஒதுக்கீடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.’ என்று பதிலுரைத்தார்.
பட்டியலின சாதியினர், பழங்குடியினர் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் (தடுப்புச்) சட்டம் உருவாவதற்கு பின்னால் அவரின் பெரும் உழைப்பிருந்தது. அச்சட்டம் கால் நூற்றாண்டு கழித்து திருத்தப்பட்டதிலும் அவரின் முத்திரை இருந்தது. மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும்  தொழிலை தடை செய்வதோடு, அக்கொடுமையினால் உயிரிழப்போருக்கு இழப்பீடு வழங்கும் சட்ட உருவாக்கத்திலும் பங்களித்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வலுவிழக்க வைத்த போது, அதனை சீர்செய்யும் சீராய்வு மனுவை வடிவமைப்பதில் எண்பது வயதை கடந்த நிலையிலும் பங்குபெற்றார்.

வேறொரு பேட்டியில், ‘இட ஒதுக்கீட்டை சிலர் மட்டுமே அனுபவிக்கிறார்கள் என்று உயர்சாதியினர் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்களே?’ என்று வினவப்பட்ட போது, ‘அது உயர்சாதியினரின் பொய் பரப்புரை அன்றி வேறொன்றுமில்லை. அவர்களின் மனநிலை சாதிக்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களையே குறைசொல்வதாக இருக்கிறது. அம்மக்களுக்கு நிலம், கல்வியை தருவதில் முனைப்பாக ஈடுபட்டுவிட்டு பின்னர் இட ஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்களை குறை சொல்லுங்கள்’ என்றார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் செயலாளராக இருந்த காலத்தில் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலையை அறிந்துணர்ந்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்த்தார். பட்டியலின சாதியினர், பழங்குடியினருக்கான ஆணையங்களை அரசியலமைப்பு அந்தஸ்து கொண்டதாக மாற்றுவதற்கும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காரணம் ஆவார். 

புகைப்பட நன்றி: நீதிராஜன்

பி.எஸ்.கிருஷ்ணனுக்கு இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுக்கையில் இருந்தார். இட ஒதுக்கீட்டிற்கான வரையறைகளை சாமர்த்தியமாக பொருள் கொண்டு இட ஒதுக்கீட்டை பல மாணவர்களுக்கு மறுத்த அவலநிலை அவரிடம் கொண்டு செல்லப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில் சமூகநீதிக்கான சமருக்காக அவர் படுக்கையை விட்டு எழுந்தார். நடுங்கும் விரல்களோடு தானே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய மனுவை தட்டச்சு செய்து கொடுத்தார். அம்மாணவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை காக்கப்பட்டு அவர்களின் குடிமைப்பணி இடங்களை பெறுவது உறுதி செய்யப்பட்டது.

பி.எஸ்.கிருஷ்ணன் எழுதி முடிக்காமல் போன இறுதிக் கட்டுரையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலித்துகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள், நீதி குறித்து கவலையோடு, ‘பட்டியலின சாதியினருக்கு கண்ணியமிக்க வாழ்வும், மரணமும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன’ என்று பதிவு செய்திருந்தார். எத்தனை நாளைக்கு இந்த அநீதி தொடரும் என்று ஆதங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் சட்டங்கள், செயல்பாடுகள், திட்டங்கள் என்று பலமுனைகளில் சாதி ஒழிப்பு, சமத்துவத்துக்கான போரினை முன்னெடுக்க தன்னுடைய இறுதிக் கட்டுரையில் அழைப்பு விடுத்தார். முடிக்கப்படாத அந்த மாபெரும் சாம்ராட்டின் கனவினை முன்னெடுத்து ஈடேற்றுவதே அவருக்கான புகழஞ்சலியாக இருக்கும்.

நூலினை வாங்க: சமூக நீதிக்கான அறப்போர் : https://www.amazon.in/gp/product/8194340705/ref=cx_skuctr_share?smid=A2FA8VKKREFM6M

பி.எஸ்.கிருஷ்ணன் பங்களிப்பில் உருவான சட்டங்கள்:
புத்த மதத்தில் இணைந்த தலித்துகளைப் பட்டியல் சாதியினர் என்று அங்கீகரிப்பதற்கான சட்டம், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989) & திருத்தச் சட்டம் (2015),
மனித கழிவகற்றுவோரைப் பணியமர்த்தல் மற்றும் உலர்கழிப்பறைகள் கட்டுதல் தடுப்புச் சட்டம் (1993). மேற்சொன்ன சட்டத்தின் மேம்பட்ட வடிவாமான மறுவாழ்வுக்கான சட்டம் (2013)

எழுதிய நூல்கள்: Empowering Dalits for Empowering India- A Road Map
Social Exclusion and Justice in India
நினைவலைகள் : ‘சமூக நீதிக்கான அறப்போர் – பி.எஸ்.கிருஷ்ணன் : நலிந்தோர் நலனுக்கான ஓர் வாழ்வின் அர்ப்பணம்’

(இன்று பி.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்)

நன்றி: விகடன் இயர்புக் 2020

புரட்சியாளர் அம்பேத்கர் – ஒரு சகாப்தம்


அண்ணல் அம்பேத்கர் குறித்த இந்த அண்ணன் யுகபாரதியின் இப்பாடலை எத்தனை முறை காலையில் இருந்து கேட்டிருப்பேன் என்று தெரியாது. திட்டமிட்டு விடுதலை இந்தியாவில் பாபாசாகேபின் பெயர் புறக்கணிக்கப்பட்டது என்று உறுதிபடச் சொல்லலாம்.

‘இனி இவருக்கு வெல்வதற்கு உலகங்கள் இல்லை.’ என்று பேராசிரியர் பாக்ஸ்வெல் தன்னுடைய செயலாளருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்த அதே வேளையில், படிப்பதற்குப் பணம் கிடைக்குமா என்று தெரியாமல் லண்டனிற்குள் அவர் இறங்கியிருந்தார் என்பது எத்தனை நகை முரண்.

மூன்றாவது முனைவர் பட்ட ஆய்வினை BONN பல்கலையில் செய்ய அவர் கடிதத்தை சரளமான ஜெர்மன் மொழியில் எழுதியிருந்ததைப் பார்த்த போது மனம் எங்கெங்கோ அலைந்தது. பள்ளியில் பிறப்பின் அடிப்படையில் சம்ஸ்கிருதம் மறுக்கப்பட்ட அந்தச் சிறுவனின் கனவுக்கடல் எல்லையற்றதாகப் பிரபஞ்சமாகப் பாய்ந்த வண்ணம் இருந்தது.

கல்வி, அதிகாரம், பொருள் சேர்ப்பது, ஆயுதம் ஏந்துவது என்று அனைத்தும் மறுக்கப்பட்ட சமூகங்களை தட்டியெழுப்ப தான் கற்றவற்றை எல்லாம் அவர் செலுத்தினார். சாதியின் ஆணிவேரான பிராமணியக் கருத்தியலுக்கு எதிராக அவர் போர் முரசம் கொட்டிய போது அவருக்கு வயது 25!

பம்பாய் நீதிமன்றத்தில் உடன் யாரும் உணவருந்த இல்லாமல் தனியே அவர் தவித்திருந்த காலங்களில் கூட எளியவர்களின் பாடுகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எளியவர்கள், இழப்பீடு இல்லாமல் நீக்கப்பட்ட தொழிலாளிகள், கருத்துரிமை நெரிக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள், ‘தேசவிரோதி’ என முத்திரை குத்திய காங்கிரஸ் இயக்கத்தினர் என்று அனைவருக்காகவும் போராடினார். பெரும்பணமும் , தனிப்பட்ட அதிகாரமும் தரும் உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பை நிஜாம் வழங்கியபோது ‘சுதந்திரமான அம்மனிதர்’ ஏற்க மறுத்தார்.

பல நூறு வழக்கறிஞர்களையும், பட்டதாரிகளையும் அவர் நிர்மாணித்த சித்தார்த், மிலிந்த் கல்லூரிகள் உருவாக்கின. ‘கற்பி’ என்பதன் பொருள் தான் கற்றுத் தேர்வதில் முடிவதில்லை. சமூகத்தைத் தட்டியெழுப்ப நம்மை ஒப்புக்கொடுப்பதே பெரும் கனவு என்கிற சமூக, அரசியல் ஜனநாயகத்துக்கான பெரும் வழியை அவர் போட்டுக் கொடுத்தார்.

அவர் கண்ட சமத்துவக் கனவு என்பது பொருளாதாரத் தளத்தையும் ஆட்டிப்பார்த்தது. பிரிவினை நெருங்கி கொண்டிருந்த காலத்தில் அவர் இயற்றியளித்த ‘அரசும், சிறுபான்மையினரும்’ எனும் மாதிரி அரசியலமைப்புச் சட்டம் ஒரு புரட்சிகர ஆவணம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம்,நிலம் என்று அனைத்திற்குமான உரிமை கடைக்கோடி மனிதருக்கும் உரியது எனும் புரட்சிகரச் சமத்துவக் கனவு அது. வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டாம்,மேற்சொன்ன உரிமைகள் யாவும் அடிப்படை உரிமைகளாகத் திகழ வேண்டும் எனும் பெரும் கனவு அவருக்கு இருந்தது. அந்த லட்சியத் தாகத்திற்கு அரசியலமைப்பு சட்ட உருவாக்க குழுவினர் ஈடுகொடுக்கவில்லை என்பது துயரமான ஒன்று.

சாதியை அழித்தொழிக்கவும், ‘அறநெறி, பகுத்தறிவை’ கொல்லும் மதக்கருத்தியலை தகர்க்கவும் அவர் அறிவு வெடிமருந்தினை நமக்கு நல்கினார். பெண்களின் சொத்துரிமை, தத்தெடுப்பு உரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார். அவரின் கனவுச் சட்ட வரைவினில் பரம்பரை சொத்தில் சம உரிமை, தத்தெடுப்பதில் ஆண்களுக்கு இணையான இடம், விவகாரத்தில் முறையான ஜீவனாம்சம், கணவன் இறந்த பின்பு சொத்தில் உரிமை என்று பெரும் பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டு இருந்தது. ‘இந்து மதத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு’ என்று அலறினார்கள். குடியரசுத் தலைவர் முதல் காங்கிரஸ் கொறடா வரை தடுத்தார்கள். ‘இந்த மசோதாவிற்கு ஏன் நேரம் தரவேண்டும்’ என்று படேல் வினவினார்.

அண்ணல் நொந்து பதவி விலகினார். அவருக்குப் பதவி துய்ப்பதற்கான ஒன்றல்ல. அது சமூக-பொருளாதார-அரசு சமத்துவத்தைச் சாதிப்பதற்கான கருவிகளில் ஒன்று. அது சாத்தியமில்லை என்ற போது, பட்டியல் சாதியினரின் உரிமைகளை பாதுகாக்க தவறிய அரசினை குற்றஞ்சாட்டினார். நேருவின் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமைகள் வழங்காமல், அவர்களுக்கான ஆணையத்தை அமைத்து இட ஒதுக்கீடு வழங்காமல் போனதையும் சாடினார்.

இந்து மதத்தில் தான் நிகழ்த்தவிருந்த ஆகச் சிறந்த சீர்திருத்தத்தைக் கொன்றதை குறித்து அரற்றினார். சமூகப் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு சட்டங்கள் இயற்ற முடியாமல் போனது ‘சாணிக் குவியல்களின் மீது கோட்டைகளைக் கட்டுவது தான்’. சனாதன கோட்டைகளை தகர்க்கும், எல்லா மனிதருக்கும் எல்லா வகையிலும் சம மதிப்புக்கான தேடலுக்கான அறிவு, அற வெளிச்சத்தை, அடிமைத்தன்மை அற்ற விழிப்புணர்வை நல்கும் பாபாசாகேப் வாழ்வினை திரையில் பார்க்க காத்திருக்கிறேன்.

அவரின் வாழ்க்கை எத்தனை அறிவு பூர்வமாக அணுகினாலும் உணர்ச்சிவசப்பட வைப்பது. அவமானம், ஏளனம், வஞ்சகம் சூழ்ந்த வாழ்வினில் புரட்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்ட அந்நாயகனின் வாழ்வினை திரையினில் தொடராக பார்ப்பது பலரையும் அவர் வாழ்வினை நோக்கி இழுத்து வரும். அண்ணன் யுகபாரதியின் வரிகளில் பாபசாகேப் கண்முன் நிற்கிறார். தட்டியெழுப்புகிறார். குரலற்றவர்களின் தலைவரின் கிளர்ச்சியும், சுயமரியாதையும் மிக்க வாழ்வோடு பயணிப்போம்,
‘உச்சத்திலே ஒரு சூரியன்

நீ ஊமை சனங்களின் காவலன்

சட்டத்தின் சட்டைக்கு நூலைக் கொடுத்தவன்

சண்டைக்கும் சாதிக்கும் பாலைத் தெளித்தவன்

காணொலி வடிவத்தில் : https://m.facebook.com/story.php?story_fbid=3697740023578982&id=100000290612233&anchor_composer=false

ஏன் அம்பேத்கர் புரட்சியாளர் என அழைக்கப்படுகிறார்: https://m.facebook.com/story.php?story_fbid=5072034132822335&id=315331651825964&fs=0&focus_composer=0

ஜெய் பீம் !

அண்ணல் அம்பேத்கரும், தேர்தல் ஆணையமும்:


இன்று தான் இந்திய அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 289 (தற்போது சட்டப்பிரிவு 324) ஐ பாபாசாகேப் அம்பேத்கர் இதே நாளில் (15-06-1949) அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் வாக்குரிமையை வடிவமைப்பதில் அம்பேத்கரின் பணியை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, அதற்குப்பிறகு தேர்தல் ஆணையத்திற்கு வருவோம். முதல் கூறை விரிவாகப் பார்த்தால் தான் தேர்தல் ஆணையத்தில் அண்ணல் அம்பேத்கர் செய்த புரட்சிகர மாற்றத்தின் தத்துவ அடிப்படை புலப்படும்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது நடைமுறையில் இருக்கவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை தர வேண்டும் என்கிற சிந்தனை மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உருப்பெறாத காலம். பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பெண்கள், ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை கிட்டியது. பெண்களின் வாக்குரிமைக்காக போராடியவர்களை suffragette என்று அழைத்தார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாட்சியில் வாக்குரிமை என்பதைச் சொத்து, கல்வி, பாலினம் என்று பலவற்றைக் கொண்டு நிர்மாணித்தார்கள். மதம் சார்ந்து சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள், வாக்களிப்பதற்கான தகுதியை குறைவாக நிர்மாணிப்பது ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் இந்திய அரசு சட்டம் 1935-ல் தான் அதிகபட்ச வாக்குரிமை விரிவாக்கம் நிகழ்ந்தது. அப்படியும் கூட ஐந்தில் ஒரு பங்கு வயது வந்த மக்களுக்கே வாக்குரிமை கிட்டியது. (சான்று: Sumit Sarkar: ‘Indian Democracy: The Historical Inheritance)

இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று பல்வேறு பெண்கள் போராடினார்கள். இவர்களின் வரலாற்றை வரலாற்றாசிரியர் சுமிதா முகர்ஜி ஆவணப்படுத்தியுள்ளார். (காண்க:
Indian Suffragettes: Female Identities and Transnational Networks). 1928-ல் வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று கனவு கண்டது. இதனையடுத்து, கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. இப்படிப் பல தரப்பினரும் வயது வந்தோர் வாக்குரிமைக்கு ஆதரவாக இந்தியாவில் இயங்கினார்கள். எனினும், ஏட்டளவில் வயது வந்தோர் வாக்குரிமை எனும் கனவை முன்மொழிந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே காலனிய ஆட்சியாளர்கள், மாகாணங்களில் பதவியில் இருந்த இந்தியர்கள் எண்ணினார்கள் (இந்திய வாக்குரிமை அறிக்கை, 1932).

இந்தப் பின்னணியில் தான் வாக்குரிமையைக் குறித்த அண்ணல் அம்பேத்கரின் வாதங்கள், பார்வைகள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. யாருக்கெல்லாம் வாக்குரிமை தரவேண்டும் என்பதைத் தீர்மானிக்க அமைக்கப்பட்ட சவுத்பரோ கமிட்டியின் முன் அம்பேத்கர் தோன்றி தன்னுடைய கருத்துகளை 1919-ல் பதிவு செய்தார். அப்போது, ஒரு நாட்டின் குடிமக்களுக்குப் பிரதிநிதித்துவ உரிமை, ஆட்சியதிகாரத்தில் பதவி வகிக்கும் உரிமை ஆகியவை மிக முக்கியமான உரிமைகள் என்று கருத்துரைத்தார். மேலும், தகுதியுள்ளவர்களே வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் என்கிற வாதத்தை அழகாக எதிர்கொண்டார். அவர் பேராசிரியர் L.T.Hobhouse ஐ மேற்கோள் காட்டி ‘ஜனநாயகம் வெற்றியடைவது மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒட்டியே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், வாய்ப்புகள் தரப்பட்டால் தான் மக்கள் அவற்றைப் பயன்படுத்த இயலும். பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு இயங்கும் அரசின் செயல்பாடுகள் பங்கேற்பது எல்லாமே கல்வி தான்… வாக்குரிமை வழங்குவதன் மூலமே மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டி, தட்டியெழுப்ப இயலும்.’ என்று வாதிட்டார்.

மேலும், சொத்துரிமையைக் கொண்டு வாக்குரிமையைத் தீர்மானிப்பது எப்படிப் பட்டியலின சாதி மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். பட்டியலின சாதி பெண் ஒருவர் தர்பூசணி விற்றதற்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட அநீதியை தொட்டுக் காட்டினார். செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகளை, உரிமைகளை மறுதலித்து விட்ட சாதி சமூகத்தில் தங்களுக்கான வாக்குரிமையைச் சொத்துரிமையைக் கொண்டு தீர்மானிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அல்லவா இருக்கிறது என்று அண்ணல் அம்பேத்கர் கேள்வி எழுப்பினார்.

மேலும், பத்தாண்டுகள் கழித்துச் சைமன் கமிஷன் முன்பு தோன்றிய அண்ணல் அம்பேத்கர் வாக்குரிமை என்பது சலுகை அல்ல, அது உரிமை என்றார். மேலும், அதனை வெறுமனே சலுகை என்று கருதுவதால் வாக்குரிமை இல்லாத மக்கள் முழுக்க முழுக்க வாக்குரிமை உள்ளவர்களை அண்டி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும் என்று வாதிட்டார். கல்வியை அடிப்படையாகக் கொண்டு வாக்குரிமையை மறுப்பது என்பது கயமைத்தனமானது என்று அம்பேத்கர் சாடினார். கல்வியைக் காலங்காலமாக மறுத்துவிட்டு, அதனையே வாக்குரிமைக்கான தகுதி ஆக்குவது எப்படித் தகும் என்பது அவரின் வினாவாக இருந்தது. ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் ஜனநாயகத்திற்கும், அரசியல் பங்கேற்பிற்கும் இடையே உள்ள உறவை கவனப்படுத்தினார். பலதரப்பட்ட மக்கள் இணைந்து ஜனநாயகத்தில் இயங்க வேண்டியிருக்கிறது. அது மக்கள் தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. வாக்குரிமையின் மூலமே ஒருவர் பிறரோடு இணைந்து வாழும் தன்னுடைய வாழ்க்கையை நெறிப்படுத்தும் அதிகாரத்தைப் பெற முடியும் என்று அம்பேத்கர் தெளிவாகப் பேசினார். இத்தகைய வாக்குரிமையை மறுதலிக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்தால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்குண்டு கிடக்க நேரிடும் என்று அவர் கவலைப்பட்டார். (இப்பத்தி மாதவ் கோஷ்லாவின் ‘India’s founding moment, முனைவர் Scott Stroud-ன் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது)

மேலும், வாக்குரிமை குறித்துச் சைமன் கமிஷன் முன்பு கருத்துகளை முன்வைத்த அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் ஏழைகளாக, சமூகத்தில் அடிமைப்படுத்தப்பட்டவர்களாக, அரசியல்ரீதியாகப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள்; ஆகவே,சிறுபான்மையினராக அவர்களுக்கு அரசியல்ரீதியான பாதுகாப்புக் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. ஆகவே, அனைவருக்கும் வாக்குரிமை இல்லையென்றால் தனித் தொகுதிகளைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தரவேண்டும் என்றும், வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை இருந்தால் ஒதுக்கீட்டு இடங்கள் தரப்பட வேண்டும் என்றும் அண்ணல் அம்பேத்கர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் கூட்டத்திற்கு வாக்குரிமையைப் பயன்படுத்தும் அளவுக்கு போதுமான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா ? என்கிற வினாவிற்கு, ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சார்பாகப் பேசுகிற முறையில், தீண்டாமைக் கொடுமை அவர்களின் வாழ்வை நீக்கமற பீடித்திருப்பதால், அப்பிணியில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஒரே வழி அரசியல் அதிகாரம் மட்டுமே என்று அறிந்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த வாக்காளர் தன்னுடைய வாக்குரிமையை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவார் என்று உறுதிபடக் கூற முடியும்.’ என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.

மேலும், மக்கள் தொகைக்கு ஏற்ப மட்டும் இடங்களை ஒதுக்குவது சரியான அணுகுமுறை இல்லை என்று அவர் வாதிட்டார். சட்டமன்றத்தை ஏதோ அருங்காட்சியகம் போலக் கருதிக்கொண்டு ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த சிலரை மாதிரிகளாகச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பது சரியானது அல்ல. சட்டமன்றம் என்பது அரசியல் போர்கள் நிகழும் களம், சிலர் மட்டும் வாய்ப்புகளில் தனியுரிமை செலுத்துவதைத் தகர்க்கவும், உரிமைகளை வென்றெடுக்கவும் முனைந்து இயங்கும் இடம் அதுவே ஆகும். மக்கள் தொகைக்கு ஏற்ப சிறுபான்மையினருக்கு இடம் தருவது என்பது சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வாய்ப்பை மறுத்து, அவர்கள் எப்போதும் சிறுபான்மையினராகச் சிறைப்பட்டிருப்பதை உறுதி செய்வதாகும் என்று அண்ணல் அம்பேத்கர் பேசினார்.

சிறுபான்மையினர் என்று அவர் பட்டியலின மக்களை மட்டும் குறிக்கவில்லை என்பது அவரோடு சைமன் கமிஷன் உறுப்பினர்கள் நிகழ்த்திய உரையாடலில் தெளிவாகிறது. பழங்குடியினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் ஆகியோரில் உள்ள வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை தர வேண்டும் என்று கருதுகிறீர்களா என்று அம்பேத்கரிடம் கேட்கப்பட்டது. மேற்சொன்ன சிறுபான்மையினரில் உள்ள அனைத்து வயது வந்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் பதிலுரைத்தார்.

இவ்வாறு வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதற்காக அண்ணல் அம்பேத்கர் அயராது குரல் கொடுத்தார். அவரே ஜூன் 15 அன்று 1949 -ல் தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தினார். அதனை அறிமுகப்படுத்தும் போது, அண்ணல் அம்பேத்கர் தேர்தல் ஆணையம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இரண்டு தேர்வுகள் இருந்தன – ஒன்று நிரந்தர அமைப்பொன்றை நிறுவி நான்கைந்து உறுப்பினர்கள் இடைவெளியின்றித் தொடர்ந்து பதவி வகிக்கும் அமைப்பு ஒன்றாக இருப்பது அல்லது தேர்தல் வருகிற போது மட்டும் தேர்தல் ஆணையத்தைத் தேவைக்கேற்ப நிறுவிக்கொள்வது. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்றாகத் தலைமை தேர்தல் ஆணையரோடு ஒரு அமைப்பை நிறுவ முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார். தேர்தல்களைச் செவ்வனே நடத்த இத்தகைய அமைப்பு தேவை என்று அம்பேத்கர் பேசினார்.

மேலும், முதலில் தேர்தல்களைச் சுதந்திரமாக நடத்துவது, தேர்தலை நடத்துவதில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் தலையிடாமல் இருப்பதை அடிப்படை உரிமையாகக் கருத வேண்டுமென அடிப்படை உரிமைகள் கமிட்டி கருத்துத் தெரிவித்தது. அம்பேத்கர் , ‘சட்டமியற்றும் மன்றங்களுக்கான தேர்தல்கள் தூய்மையாக, சுதந்திரமாக நடக்க ஆட்சியில் இருக்கும் அரசுகளின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும்’ என்கிற கருத்தை நிர்ணய சபையும் எந்த எதிர்ப்புமின்றி உறுதிப்படுத்தியது. சபையின் இக்கருத்தை கணக்கில் கொண்டு, வரைவுக் குழு அடிப்படை உரிமைகளில் இருந்து அவற்றைப் பிரித்தெடுத்து தனி அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 289, 290 என்று இயற்றப்பட்டன. தேர்தலை நடத்தும் அமைப்பானது ஆட்சியில் இருக்கும் அரசின் ஆளுகையில் இருந்து வெளியே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் எந்தச் சச்சரவும் இல்லை. சட்டப்பிரிவு 289 அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முடிவை நிறைவேற்றுகிறது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது, சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களைக் கண்காணித்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்துவது ஆகிய அதிகாரங்களை ஆட்சியில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வராத தேர்தல் ஆணையத்திடம் கைமாற்றப்படுகிறது.’ என்று தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தி இதே தினத்தில் பேசினார்.

முதலில் தேர்தல் ஆணையத்தை உருவாக்கும் சட்டப்பிரிவு 289-ஐ முன்மொழிந்த போது நாடாளுமன்ற தேர்தல்களை மட்டுமே நடத்தும் அமைப்பாகத் தேர்தல் ஆணையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல்களை நடந்த அந்தந்த மாநிலத்தின் ஆளுநர் அல்லது மாநில ஆட்சியாளர் தேர்தல் ஆணையத்தை நியமித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆய்வாளர் ஆர்னித் ஷானி தன்னுடைய ஆய்வுகளின் மூலம் எப்படிப் பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவில் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் மாநில அரசுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினரை நீக்க முயற்சி செய்தன முயன்றன என்பதை நிறுவுகிறார். இந்தப் பின்புலத்தில். அண்ணல் அம்பேத்கர் மேற்சொன்ன சட்டப்பிரிவில் ஒரு அவர் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘ஒரு புரட்சிகரமான மாற்றத்தை’ செய்தார்.

தேர்தலை நடத்த ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தை நிறுவுவதோடு, அதற்கு உதவும் வண்ணம் பிராந்திய ஆணையர்களை நியமிப்பது என்று சட்டப்பிரிவு மாற்றப்பட்டது. ‘பல்வேறு மாநிலங்களில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அந்த மாநிலத்தின் பூர்வ குடிகள் இருப்பார்கள். அவர்களோடு இனம், மொழி அல்லது கலாசார ரீதியாக அவர்களிடம் இருந்து வேறுபட்ட மக்கள் அந்த மாகாணங்களில் வசிக்கிறார்கள். அந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் இனம், கலாசாரம் அல்லது மொழிரீதியாக தங்களிடமிருந்து வேறுபட்ட மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாகாண அரசுகள் உத்தரவிடுவது, செயல்களைத் திட்டமிடுவது எல்லாம் சட்ட வரைவுக்குழுவின் கவனத்திற்கு வந்துள்ளது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். …. அந்தந்த உள்ளூர் அரசின் முன்முடிவுகள் அல்லது அதிகாரியின் மனச்சாய்வுக்கு ஏற்ப வயது வந்த யாரையும் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது. அத்தகைய செயல்கள் ஜனநாயக அரசின் ஆணிவேரை அசைத்துப் பார்ப்பதாகும். இந்த வகையான அநீதியை மாகாண அரசுகள் மேற்கொள்வதைத் தடுக்கும் பொருட்டே …வரைவு அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் சட்டப்பிரிவுகளில் புரட்சிகரமான, அடிப்படையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.’

வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, அரசின் கட்டுப்பாட்டிற்குள் வராத தேர்தல்களைச் சுதந்திரமாக, நேர்மையாக நடத்துவதற்கான தேர்தல் ஆணையம் ஆகியவற்றைச் சாதிப்பதற்குப் பெருமளவில் முயன்ற அண்ணல் அம்பேத்கரை இந்நாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்.

உதவியவை:

1. An Undocumented Wonder: The Great Indian Election: S. Y. Quraishi
2. https://papers.ssrn.com/sol3/papers.cfm?abstract_id=2994265
3. India’s Founding Moment: The Constitution of a Most Surprising Democracy: Madhav Khosla
4. https://www.livemint.com/mint-lounge/features/ambedkar-and-the-right-to-vote-1555040490483.html
5. https://www.constitutionofindia.net/constitution_of_india/elections/articles/Article%20324
6. https://velivada.com/2019/09/03/dr-babsaheb-ambedkar-and-simon-commission/
7. https://velivada.com/2015/06/15/15th-june-in-dalit-history-dr-ambedkar-proposed-the-creation-of-election-commission/#.XucDW-4G05E.hootsuite
8. How India Became Democratic: Citizenship and the Making of the Universal Franchise: Ornit Shani
9. http://www.ambedkar.org/ambcd/07.%20Evidence%20before%20the%20Southborough%20Committee.htm
10.https://books.google.co.in/books?id=LfVyDwAAQBAJ&pg=PT36&dq=partha+chatterjee+ambedkar+minority+rights&hl=en&sa=X&ved=0ahUKEwicybmB34PqAhX_4zgGHYUQBd4Q6AEIJjAA#v=onepage&q=partha%20chatterjee%20ambedkar%20minority%20rights&f=false

அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல்


அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல் -முனைவர் சுமீத் மஹஸ்கர்
கடந்த சில ஆண்டுகளில் டாக்டர் அம்பேத்கரை ‘மையநீரோட்டப்படுத்தும்’ முயற்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. வலதுசாரிகள், இடதுசாரிகள் என்று பல தரப்பிலும் உள்ள அரசியல் கட்சிகள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்த அரும்பாடுபடுகிறார்கள். ஆய்வுலகிலும் அண்ணல் அம்பேத்கர் குறித்து எழுதுவது வாடிக்கையாகி விட்டது . முன்முடிவோடு கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணலின் எழுத்துகளை மறைப்பதோடு, அவரின் சமூக, அரசியல் தலையீடுகளையும் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நிகழ்ந்தது. இதனை மேற்சொன்ன முயற்சிகள் கேள்விகேட்கவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ தவறின.
தொழிலாளர் பிரச்சனையை அம்பேத்கர் எப்படி அணுகினார் என்பது இதற்குச் சான்று பகர்கிறது. பல அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் அம்பேத்கர் “சாதி பிரச்சனையை” மட்டுமே கருத்தில் கொண்டு அதனை எதிர்கொண்டார். அவர் “பெரும்” முக்கியத்துவம் மிக்க “வர்க்க பிரச்சனையை” கண்டுகொள்ளவில்லை என்று வாதிடுவதைக் கண்டிருக்கலாம். இத்தகைய பார்வை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் பம்பாய் நகரத்தில் எழுந்த கம்யூனிச அரசியலையும், அம்பேத்கரின் தலைமையில் சாதி ஒழிப்புக்காக அணிதிரண்ட புரட்சிகரமான தலித் அரசியலையும் கணக்கில் கொள்ளத் தவறுகின்றன. இவ்விரு அரசியல் இயக்கங்களும் களத்தில் “தொழிலாளர் பிரச்சனைகளில்” தீவிரமாக மோதிக்கொண்டன. அவை அரிதாக ஒன்றிணைந்தும் இயங்கின. இவ்விரு இயக்கங்களிடையே நிகழ்ந்த பலதரப்பட்ட ஊடாட்டங்கள் “உழைக்கும் வர்க்க ஒற்றுமையின்” போதாமைகளையும், இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்களையும் ஒருங்கே முன்னிலைப்படுத்தின.

ஜவுளி ஆலைப் போராட்டங்கள்

அம்பேத்கரின் ஆரம்ப கால தொழிலாளர் இயக்க செயல்பாடுகள் பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் யூனியனில் இணைந்து இயங்குவதாக இருந்து. இந்த தொழிலாளர் அமைப்பை N.M. ஜோஷி,R.R.பக்ஹலே ஆகியோர் துவங்கினார்கள். இந்த ஆலைகளில் நெசவு நிகழும் துறைகளில் அதிகபட்ச கூலி வழங்கப்பட்டு வந்தது. இந்த வேலைகளில் தலித்துகள் ஈடுபட்டால் “தீட்டாகி”விடும் என்று சொல்லி புறக்கணிக்கப்பட்டார்கள். ஆடை இழையை நெய்வதற்கு உதவும் பாபினை மாற்ற வேண்டும் என்றால், நூலை தங்கள் எச்சிலால் தொழிலாளர்கள் ஈரப்படுத்தி முடிச்சிட வேண்டும். மராத்தா சாதியை சேர்ந்த தொழிலாளர்கள் இப்பணியில் தலித்துகள் ஈடுபட்டால் அது தங்களுக்கு தீட்டாகி விடும் என்று வாதிட்டார்கள். இதைக்காரணம் காட்டி தலித்துகளை நெசவுப் பணிகளில் ஈடுபடுத்த மறுத்தார்கள்.
அண்ணல் அம்பேத்கர் இப்பிரச்சனையை புகழ்பெற்ற 1928 பம்பாய் ஜவுளி தொழிலாளர் போராட்டத்தின் போது கவனப்படுத்தினார். அவர் முன்வைத்த உரிமைகளுக்கான கோரிக்கைகளில் ஆலையின் எல்லா தொழில்களிலும் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என்பதும் இருந்தது. அதனை கம்யூனிச தலைவர்கள் ஏற்க மறுத்தால் தலித் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டாமென தான் தடுக்கப்போவதாகவும் அம்பேத்கர் அச்சுறுத்தினார். பெரும் தயக்கத்தோடு அம்பேத்கரின் உரிமைக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அம்பேத்கர் மேற்சொன்ன போராட்டத்தை ஆதரித்தார் என்றாலும், 1929-ல் நடந்த ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை எதிர்த்தார். இப்போராட்டத்தின் போது தலித் தொழிலாளர்கள் ஆலைகளுக்குள் பணியாற்ற போவதற்கான வசதிகளை அவரே முன்னின்று ஏற்படுத்திக் கொடுத்தார்.

A BR Ambedkar statue

இடதுசாரி விமர்சகர்கள் மேற்சொன்ன போராட்டத்தில் அம்பேத்கர் “தொழிலாளர் ஒற்றுமையை” ‘சாதியைக்’ கொண்டு தகர்த்தெறிந்ததோடு நில்லாமல், தொழிலாளர் போராட்டத்தை பிசுபிசுக்க வைக்கும் வண்ணம் ஆலைகளுக்குள் கருங்காலிகளை அனுப்பி வைத்தார் என்று சாடுகிறார்கள். 1928-ல் நடந்த போராட்டம் தலித் தொழிலாளர்களை கடன் சுமைக்கு ஆட்படுத்தியதோடு, அவர்கள் பெரும் அவமானங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. தலித் அல்லாத தொழிலாளர்களை போல நெடுங்காலம் போராட்டங்கள் தொடர்ந்தால் தங்களை ஜீவித்துக் கொள்வதற்கு என்று விவசாய நிலங்கள் எதுவும் தலித்துகளிடம் இல்லை. ஆகவே, இன்னொரு நீண்ட போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் தலித்துகள் இல்லை என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது.

இதே காரணங்களுக்காக 1934-ல் கம்யூனிஸ்ட்கள் நடத்திய பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் போராட்டத்தையும் அம்பேத்கர் எதிர்த்தார். அதே வேளையில், நீதிமன்றங்களில் இப்போராட்டத்தின் தலைவர்களுக்காக அம்பேத்கர் வாதாடவும் செய்தார். இப்போராட்டங்களில் ஈடுபட்டதற்காக வழக்குகள் பாய்ச்சப்பட்ட நிலையில், ஒரு தொழிற்சங்க தலைவருக்காக அம்பேத்கர் திறம்பட வாதிட்டதால் அவர் விடுதலையானதோடு பிற கம்யூனிச தலைவர்களின் விடுதலைக்கும் அதுவே வழிவகுத்தது.

‘கட்டாய ஊழியத்தை ’ எதிர்ப்பது

உழைக்கும் வர்க்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காக பாடுபடுவதற்காக அம்பேத்கர் 1936-ல் சுதந்திர தொழிலாளர் கட்சியை தோற்றுவித்தார். இக்கட்சி எந்த ஒரு ஒற்றை மதம், சாதியையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அறிவித்தது. மேலும் தீண்டப்படுபவர்-தீண்டப்படாதோர், பிராமணர்-பிராமணரல்லாதோர், இந்து-முஸ்லிம் இடையே எந்த பாகுபாடும் இல்லை என்று முழங்கியது. அடுத்தாண்டு நிகழ்ந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தொழிற்சாலை சச்சரவுகள் சட்டம்,1938 ஐ எதிர்ப்பதில் அக்கட்சி முதன்மையான பங்காற்றியது. இச்சட்டமானது, சமரசத்தை கட்டாயமாக்கியதோடு சட்டத்துக்கு புறம்பான போராட்டங்களில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கியது.
இந்த மசோதாவை எதிர்த்து பம்பாய் சட்டமன்றத்தில் உரையாற்றிய அண்ணல் அம்பேத்கர், போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர்களை தண்டிப்பது என்பது “தொழிலாளரை அடிமையாக்குவது அன்றி வேறொன்றுமில்லை” என்று வாதிட்டார்.

மேலும், அடிமைமுறை என்பது “கட்டாய ஊழியமே ஆகும்.” என்றும் முழங்கினார். மேலும், சட்டமன்றத்துக்கு வெளியே இந்த மசோதாவிற்கு எதிராக ஒரு நாள் போராட்டத்தை நவம்பர் 7, 1938-ல் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். இம்மசோதா நிறைவேறாமல் தடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட்கள், சோசியலிஸ்ட்கள் வழங்கிய ஆதரவையும் அம்பேத்கர் வரவேற்றார்.

கிராமப்புறத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மாற்றுவது:

கம்யூனிஸ்ட்கள் முன்னின்று நடத்திய தொழிலாளர் அரசியல் எல்லாம் நகர்ப்புற தொழிற்சாலைகள் சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தன. அம்பேத்கரோ கிராமப்புறத்தில் வழக்கத்தில் இருந்த மகர் வட்டன் முறையை எதிர்த்து போரிட்டார். இதன்மூலம் சாதி அடிப்படையில் தொழில்களை வகுத்து பாகுபடுத்தும் படிநிலையை கிடுகிடுக்க வைத்தார். மகர் வட்டன் என்பது கிராமத்தின் சமூக-பொருளாதார அமைப்பினில் மகர்களுக்கு வழங்கப்படும் நிலமாகும். இந்த நிலத்திற்கு பதிலாக மகர்கள் பலதரப்பட்ட கடுமையான வேலைகளை செய்ய வேண்டும் என்பதோடு, கடும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

இவ்வாறு கிராமப்புறத்தின் பொருளாதார அமைப்புகளின் உழைப்பை சுரண்டும் முறைகள் சாதி அமைப்போடு ஆழமாக பின்னிப்பிணைந்து இருந்தன. அம்பேத்கர் இவற்றை அறவே அழித்தொழிக்க பாடுபட்டார். அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிரான போரானது இத்தகைய அடிமைப்படுத்தும் அமைப்புகளை எதிர்த்து போர் தொடுக்காமல் முழுமையடையாது என்று அறிவித்தார். அம்பேத்கர் 1928-ல் பம்பாய் சட்ட மேலவையில் மகர் வட்டன் முறையை ஒழிப்பதற்கான மசோதாவை , தாக்கல் செய்தார். மேலும், அரசானது மகர் வட்டன்தாரர்களை அரசாங்க ஊழியர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கான உழைப்புக்கான ஊதியத்தை கிராமத்தினர் வழங்க அடிகோல வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆரம்பத்தில் பிராமணர் அல்லாதோர் இம்மசோதாவை ஆதரித்தாலும், பின்னர் படிப்படியாக இதனை எதிர்த்தனர். மகர்கள் செய்து கொண்டிருந்த இழிவாக கருதப்பட்ட, வெறுத்தொதுக்கப்பட்ட தொழில்களை இனிமேல் யார் செய்வார் என்கிற கவலை அவர்களை ஆட்கொண்டுவிட்டது.
அம்பேத்கரின் நெருங்கிய சகாவான A.V. சித்ரே ஷெட்காரி சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு கொங்கன் பகுதியில் நிலவி வந்த கோட்டி எனும் நில வரி வருவாய் முறையை ஒழிக்க பாடுபட்டது. இம்முறையானது சிறு, குறு விவசாயிகளை சுரண்டியதோடு, அவர்களை கொத்தடிமைத்தனத்தில் உழல வைத்தது. ஆங்கிலேயே அரசு வசூலித்த வரியை போல நான்கு மடங்கு கூடுதல் வரியை இம்முறையில் செலுத்த வேண்டியிருந்தது. இம்முறையில் நிலச்சுவான்தார்களாக சித்பவன பிராமணர்கள், சில உயர்சாதி இந்து மராத்தாக்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். இம்முறையால் சுரண்டப்பட்ட பயிரிடுபவர்களாக மராத்தாக்கள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரான குன்பிக்கள், பண்டாரிக்கள், அக்ரிக்கள், தலித்துகளில் சில மகர்கள் இருந்தனர்.
பழமைவாத தேசியவாதியான பால கங்காதர திலகர் காலனிய அரசு கோட்டி முறையை ஒழிக்க முயன்ற போது கடுமையாக அதனை எதிர்த்தார். இம்முறைக்கு எதிராக கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் அம்பேத்கர் போராட்டங்கள், மாநாடுகளை நடத்தினார். அவர் பம்பாய் சட்டமன்றத்தில் கோட்டி ஒழிப்பு மசோதாவை 17 செப்டம்பர் 1937-ல் அறிமுகப்படுத்தினார். மாகாண அவைகளில், முதன்முறையாக விவசாயிகளை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்கான சட்ட மசோதாவை முன்னெடுத்த சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கரே ஆவார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வைஸ்ராயின் செயற்குழுவில் தொழிலாளர் உறுப்பினராக அம்பேத்கர் பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவை விடுதலைக்கு பிந்தைய இந்தியாவில் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியது.

பிராமணியம் எனும் இன்னொரு பெரும் பகை:

முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி என்கிற பார்வையில் கம்யூனிஸ்ட்களோடு உடன்பட்ட அம்பேத்கர், அதற்கு இணையான எதிரி பிராமணியம் என்று வாதிட்டார். மேலும், கம்யூனிஸ்ட்களைப் போல முதலாளித்துவ அமைப்பினை அழித்தொழித்து விட்டால் தானாகவே சாதி முறையினால் உண்டாகும் இன்னல்கள் காணாமல் போய்விடும் என்று அவர் கருதவில்லை. அண்ணல் அம்பேத்கரை பொருத்தவரை, சமூகப் பாகுபாட்டைக் களைவது என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் இன்றியமையாத ஒன்றாகும். அம்பேத்கர், உழைப்பாளர் சந்தையில் தலித்துகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முதலாளித்துவத்துக்கு எதிரான போர் சாத்தியப்படும் என்று வாதிட்டார். இதனைச் சாதிக்க, சாதி அடிப்படையில் பணிக்கு ஆட்களை எடுக்கும் பிராமணிய தாக்கத்தை விடுத்து, அதனைப் புறந்தள்ளும் சந்தைப் பொருளாதார அடிப்படைகளின்படி இயங்கலாம். இது தொழிலாளர்கள் இடையே உள்ள சாதி, மத வெறுப்பைப் போக்குவதோடு, உழைப்பாளர் ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்தெறியும்.

அம்பேத்கர் “வர்க்கம்” என்பதைப் பொருள் ரீதியான உறவுகள், பொருளாதாரச் சுரண்டல் சார்ந்து மட்டும் குறுகலாக அணுகுவதை ஏற்க மறுத்தார். மூலதனம்-தொழிலாளர் இடையே உள்ள உறவை நிர்மாணிப்பதில் பொருளாதாரக் காரணிகளோடு, பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், சுரண்டல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார். மேலும், இத்தகைய பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், மக்கள் சுயமரியாதை மிக்க வாழ்க்கை வாழவும், பரஸ்பர மதிப்பை பெற்று வாழ்வும், பொதுச் செயல்பாடுகளில் பங்குபெறவும் விடாமல் தடுக்கின்றன. இந்தியாவில் தனிமனிதர்களின் வாழ்க்கை தேர்வுகளில் சாதி, பாலினம், மதம் பெரும் தாக்கம் செலுத்தி வரும் சூழலில் தொழிலாளர் பிரச்சனையில் அம்பேத்கரின் செயல்பாடுகள், தலையீடுகள் கருத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன.

Sumeet Mhaskar (@sumeetmhaskar) | Twitter
முனைவர் சுமீத் மஹஸ்கர் O.P.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர்.
தமிழில்: பூ.கொ.சரவணன்
கட்டுரை மூலம்: https://theprint.in/opinion/ambedkars-fight-wasnt-just-against-caste-scholars-have-overlooked-his-labour-activism/401133/

அம்பேத்கரை அறிதல்


பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிfவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். ஆழமான பார்வைகளுக்கும் கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் முக்கியமான சில பகுதிகள்:

ஏன் அம்பேத்கர் நம்மை குத்திக்கிழிக்கிறார்?:

தலைவர்களின் பிறந்த நாள்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் நாட்கள் போன்றவை அப்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ளவும், வெற்றி, தோல்விகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் வாய்க்கும் தருணங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. இப்படிப்பட்ட அளவுகோல்கள், வெற்றி-தோல்விகளுக்குள் அண்ணல் அம்பேத்கரை அடக்க முயல்வது முந்திரிக்கொட்டைத்தனமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். மகத்தான தலைவர்கள் பலரைப் பொறுத்தவரை, ஒரு பண்பாட்டின் தர அளவுகோல்கள் லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்தார்கள் என்றே நாம் அவர்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறோம். அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை இது தலைகீழான ஒன்று. ஒட்டுமொத்த பண்பாடே தன்னை மதிப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டிய அளவுகோல் அவரே. நம்முடைய ஆதர்சங்களால் அவரை எடை போட முடியாது.

அம்பேத்கர் எனும் ஆளுமையின் ஆதர்சங்களால்தான் நம்மை நாமே மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அம்பேத்கருடன் உறவாடுவதென்பது அவரை மதிப்பிடுவதென்பதல்ல; நம்மை மதிப்பிட்டுக் கொள்வதும், நாம் ஏன் இன்னமும் அவரின் நீதிக்கான அறைகூவலை, பகுத்தறிவுக்கான வாதத்தை, அமைப்புகள் குறித்த ஆழமான கற்பனைகளைப் பற்றிக்கொள்ளவும், முகத்துக்கு நேராக எதிர்கொள்ளவும் மறுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும். அம்பேத்கர், நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடி. அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சியையும்,மோசமான நம்பிக்கைகளையும் பற்றி நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது.

தலித் அல்லாதோர் தாங்கள் ஏன் அம்பேத்கர் குறித்து எழுத வேண்டும் என்கிற மனதளவிலான விலக்கலை மேற்கொண்டிருக்கிறார்கள். பல்லாண்டுகளாக நமக்கு அசௌகரியமான உணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்த ஆளுமையாகத் திகழும் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்தோம். ஒரு பெருந்தலைவரை ஓரங்கட்ட சமூகம் முயன்றாலும், அவர் அதைத் தாண்டி வெல்வதால் அவரது பரிவாரத்தில் இணைந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் அவரை வசப்படுத்தி, கட்டுப்படுத்தும் முயற்சி என்னும் ஐயத்தோடு நோக்கப்படுகிறது. அம்பேத்கரைக் கடவுள்போல ஆக்குவது அவரின் புரட்சிகரமான கருத்துக்களை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான எளிமையான, செய்கையே. அம்பேத்கரை பாஜக அபகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் அவரை ஓரங்கட்டியதும், பாஜக அவரை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதும் நமக்குப் பலவற்றைச் சொல்லாமல் சொல்கின்றன. குறைந்தபட்சம் இப்பொழுதாவது அவர் குறித்து அதிகம் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெயரளவிலான போற்றுதல்கள் அவை பெரிதளவில் பயன் தராது என்பதை உணர்த்துவதோடு நின்றுவிடவில்லை. அம்பேத்கர் முன் நாம் தலைகுனிந்து வணங்கி நிற்பதன் மூலம் அவர் நம்முடைய ஆன்மாவைக் குத்திக் கிழிப்பதிலிலிருந்து தப்பிக்க எண்ணுகிறோம்.

அம்பேத்கர் தேசவிரோதியா?:

அவர் வாழ்நாள் முழுக்க அநீதியை அம்பலப்படுத்துவதை அயராமல் செய்தார். ஒரு செயல்நோக்கமோ, தேசமோ, அதிகாரமோ, கலாச்சாரமோ, செல்வமோ அநீதியைச் சற்று மூடி மறைக்க முயன்றாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு அர்ப்பணிப்போடு இருக்க முடியவே முடியாது என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அருண் ஷோரி முதலிய விமர்சகர்கள் அம்பேத்கர் தேசியவாதி இல்லை என்கிறார்கள். ‘நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத ஒரு தேசம் தேசமே அல்ல’ என்றதில் அம்பேத்கரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது. அவர், கிட்டத்தட்ட எல்லாச் சித்தாந்தங்களும் தலித்துகள் ஒடுக்கப்படுவதை மூடி மறைக்கும் சூழ்ச்சிகளாக நிகழ்ந்ததைக் கண்டு கொதித்தார். சித்தாந்தங்களின் நுண்மையான விவாதங்கள் எனும் பனிமூட்டத்தில், தலித் அடக்குமுறை எனும் உள்ளார்ந்த உணர்வு மூடி மறைக்கப்படுகிறது என்பதை அவர் புலப்படுத்தினார். தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மூர்க்கமான வன்முறை, தந்திரமான ஒடுக்குமுறை, தினசரி அவமானங்கள் ஆகியவற்றை நாம் கண்கொண்டு பார்ப்பதே இல்லை. தலித்கள் மீதான வன்முறைகளை அப்படி நடப்பதாக முழுமையாக யாரும் ஒப்புக்கொண்டதே இல்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தைப் பொய் வேடத்தாலும், தற்காப்புத் தொனியின் மூலமும் இருட்டடிப்பு செய்துவிடுவதை அவர் சுட்டிக்காட்டினார். காந்தியை கடுமையாகத் தாக்கிய அம்பேத்கர் அதைவிடக் கூடுதலான கடுமையோடு நேருவை நோக்கி முக்கியமான விமர்சனத்தை இப்படி வைத்தார்:

இந்திய சமூகத்தின் மையமாக உள்ள இந்த வன்முறையின் இருப்பை நேரு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘நேருவைப் பாருங்கள். அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெபர்சனின் விடுதலை அறிவிப்பில் அவர் உத்வேகம் பெறுவதாகப் பெருமிதம் கொள்கிறார். இந்தியாவில் உள்ள ஆறு கோடி தீண்டப்படாத மக்களின் நிலை குறித்து எப்போதாவது சஞ்சலமோ, அவமானமோ நேரு அடைந்திருக்கிறாரா? அவரின் எழுதுகோலிலிருந்து ஊற்றெடுக்கும் இலக்கிய வெள்ளத்தில் எங்கேனும் அவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவா?’. அம்பேத்கர் தலித் அல்லாத மக்களை நோக்கித் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ‘தாங்கள் எப்படிப்பட்ட அநீதியை மேற்கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் உணர்வதே இல்லை!’. இன்றுவரை நாமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.#

#பல்வேறு வகைகளில், காந்தியைவிட இந்தியாவை அதிகமாக அகிம்சையோடு பிணைத்தவர் அண்ணல் அம்பேத்கரே ஆவார். தலித்துகளை அரசமைப்புச் சட்ட முறைகளின்படி இயங்க வேண்டும் என்று ஒப்புவித்ததன் மூலம் அவர் அதை நிகழ்த்தினார். இது தங்களின் கைகளைக் கட்டிப்போட்டிருப்பதாகச் சில தலித் புரட்சியாளர்கள் முணுமுணுக்கிற அளவுக்குத் தாக்கம் செலுத்தியுள்ளது.

பிராமணியம் மீதான பெரும்போர்:

இந்துச் சமூகத்தின் மேற்புறத்தில் மிதக்கும் குப்பைக் கூளமல்ல வன்முறை. அந்தக் குப்பையைச் சுத்தப்படுத்தினால் இந்துச் சமூகத்தின் தெளிவான, சுத்தமான நீர்நிலை தென்படும் என்பது புரட்டு. வன்முறையே இந்துச் சமூகத்தின் அடையாளம், அதன் இயங்குசக்தி. அம்பேத்கரைப் பொறுத்தவரை நீதியை அடைய இந்து மதத்தின் மீது கிட்டத்தட்ட ஒரு போரை அறிவிப்பதே வழி என்று அவர் கருதியதைப் பூசிமெழுக முடியாது. காந்திக்கு எழுதிய பதிலில் அம்பேத்கர் இப்படி எழுதினார்: ‘நான் மகாத்மாவிடம் உறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்பு, அவமதிப்பு மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது அவர்களின் தோல்வியால் மட்டும் அல்ல. இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்புக் கொள்ளக் காரணம் அவர்கள் தவறான லட்சியங்களைக் கொண்டவர்களாக, மோசமான சமூக வாழ்வை மேற்கொள்வதாக உளமார உணர்ந்துகொண்டேன். இந்து மதம், இந்துக்களுடனான எனது பிரச்சினை என்பது அவர்களின் சமூக நடத்தையில் உள்ள குறைபாடுகள் பற்றியதல்ல. அது மேலும் அடிப்படையானது. அது இந்துக்கள், இந்து மதத்தின் ஆதர்சங்களைப் பற்றியது.

அம்பேத்கர் தன்னுடைய விமர்சனத்தில் தாக்க முனைந்தது உலகத்திலேயே மிகவும் ஆச்சரியப்படுத்துவதும், சிறைப்படுத்துவதுமான தத்துவ அமைப்பான பிராமணியமே ஆகும். பிராமணியம் அல்லாத இந்துக் கருத்தியல் முறைகளையும் அது பெரும் தீமையாய்ப் பற்றிக்கொண்டதால் பிராமணியத்தை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றி எறியாமல் நீதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இந்து மதம் இருக்கிறது.

அம்பேத்கரின் பெரும்பாலான படைப்புகளை மீண்டும் வாசிக்கையில் மிக முக்கியமான தேடல் ஒன்று புலப்படுகிறது; அது சாதி என்கிற கொடூரமான ஒடுக்குமுறை அமைப்பை எது உற்பத்தி செய்தது என்பதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி. அம்பேத்கரின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் அவற்றின் சமூகவியல் ஆழம், வரலாற்றுக் கூர்மையால் அசரடிக்கின்றன. ஆரியர் படையெடுப்பால் அடிமைப்படுத்துதல் ஏற்பட்டது எனும் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். சாதி அமைப்பு குறித்து இனத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட எல்லா வகையான விளக்கங்களையும் அவர் நிராகரித்தார். சாதி என்பது தொழில்கள் சார்ந்து எழுந்தது என்பது போன்ற விளக்கங்களை அவர் கடுமையாகச் சாடினார். சாதி என்பது தொழில்கள் அடிப்படையிலான அமைப்புமுறை அல்ல; அது தொழிலாளர்களை அடுக்குமுறையில் வைத்து அடிமைப்படுத்தும் முறையாக இயங்கியது என்பதே இந்தக் கடுமைக்குக் காரணம். அம்பேத்கர் எனும் வரலாற்றாளர், இந்தியவியல் அறிஞரின் பலங்களுக்குள் போவது இந்தக் கட்டுரையின் இலக்கு அல்ல. அர்விந்த் ஷர்மாவின் ‘BR Ambedkar, on the Aryan invasion and the Emergence of the Caste System in India’ எனும் கட்டுரையின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

சாதியை அழித்தொழித்தல்:

அம்பேத்கரின் ஆய்வுகளின் மூலம் இரு முக்கியமான கூறுகள் தெரிய வருகிறது. சாதி அமைப்பின் வினோதமான தன்மையைப் பொருளியல், தொழில்முறை சார்ந்த விளக்கங்களால் விளக்க முடியாது. சாதியமைப்பின் அடிப்படை பிராமணர்களால் அதிகாரத்தின் செயல்பாடாகத் திணிக்கப்பட்ட கொடூரமான தொடர் பிரதிநிதித்துவப்படுத்தல்களால் ஆனது. தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்துக்கான வழிகளான அதிகாரம், பொருளாதார வளம், கல்வி ஆகிய மூன்றும் அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் சாதியமைப்பு தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. சாதி அடுக்குமுறையிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தனக்குக் கீழுள்ள இன்னொரு பிரிவினரை ஒடுக்குவதன் மூலம் இன்பம் காணும் கொடூரமான அமைப்பு முறையாக அது திகழ்கிறது. சாதியமைப்பு நிரந்தரமான பாகுபாட்டில் களிப்புக் கொள்கிறது. இதனால்தான் பிராமணியம் மீதான அறச்சீற்றம் அம்பேத்கரிடமிருந்து வெளிப்படுகிறது. எந்த வகையிலும் பிராமணியம் உருவாக்கிய அடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரத்தைத் தெளிவாக, எளிமையாகத் திணிக்கும் முறை அது. இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது; இந்த ஒட்டுமொத்த கருத்தாக்கத்தை அடித்து நொறுக்கினால் மட்டுமே விடுதலை சாத்தியம்.

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப்போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லிம் கலவரம் வரும் பொழுதுதான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

அம்பேத்கரின் மதம் எது? :

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் அந்தச் சமூகம் அடிமை முறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததுதான் என்கிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல். பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்புபடுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கிருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்துகொள்ளத் தவறுவர்.#

#மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்குப் புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது. எந்த அறரீதியான, வரலாற்றுரீதியான மோதலைச் சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன் மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. புத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகளற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள்.

முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-இல் புலப்படுத்துவதைப்போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கிக் கொண்ட ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயக்கட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப் பண்புகளற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

இந்து மதத்தை அம்பலப்படுத்தல்:

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப்போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லிம் கலவரம் வரும் பொழுதுதான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் அந்தச் சமூகம் அடிமை முறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததுதான் என்கிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல். பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்புபடுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கிருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்துகொள்ளத் தவறுவர்.

நவீன உலகுக்கும், பழங்காலத்து உலகுக்குமிடையே உள்ளே பெரும் வேறுபாடாக மனிதனை மையப்படுத்தல் இருக்கிறது. நம்மை அப்படியே உறையவைக்கும் வாக்கியமாக, ‘என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது.’ என்கிற அம்பேத்கரின் வரி உள்ளது. அது ஆறாத துன்பத்தோடு அவரின் நிலையை வெளிப்படுத்துகிறது. மனிதனைவிட வேறொன்று மேலானது என்பது மனிதத்துக்கான சாவுமணி. இந்த அவலமான நிலையை நாம் வென்றெடுக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் எல்லாக் கடவுள்களையும் அழித்து ஒழிக்கக் களம் கண்டார்.

அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதை இந்தப் பின்னணியிலேயே காண வேண்டும். மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்குப் புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது. எந்த அறரீதியான, வரலாற்றுரீதியான மோதலைச் சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன் மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. புத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகளற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள். ஒருவர் சமூக அறத்தை கைக்கொள்ளவோ, அல்லது போலியான மெய்யியலுக்கு அடிமைப்பட்டோ இருக்க முடியும். இரண்டையும் ஒருங்கே உடையவராக இருக்க முடியாது என்று புத்த மதத்துக்கு மாறியதன் மூலம் அம்பேத்கர் அறிவித்தார். மதமாற்றம் மனிதத்தை மீட்கும் பெருஞ்செயலாகும்.

அம்பேத்கர் பெரும்பாலும் புத்த மதத்தைச் சமூக அறமாகவே கண்டார். புத்த சங்கங்களின் அமைப்பு முறையோடு அவர் தன்னுடைய கொள்கையான சகோதரத்துவதைக் கொண்டு போய் இணைத்தார். இது வெறும் விபத்தில்லை. புத்தர் பிராமணியத்தின் சடங்குகளை நிர்மூலம் ஆக்கினார், அம்பேத்கர் புத்த மதத்தை மெய்யியலின் எந்தத் தடயமும் இல்லாத ஒன்றாக மாற்ற முயன்றார். மெய்யியல் சார்ந்த தேடல்களில் மனிதன் எதோ ஒரு பெரிய ஆற்றலின் விளைவாக, நுண்பொருளை தேடுபவனாக மாறிவிடுவதைத் தவிர்க்க அம்பேத்கர் முனைந்தார். அவர் மீண்டும், மீண்டும் மந்திர தாயத்தைப் போலத் தன்னுடைய வழிகாட்டும் ஒளிவிளக்காகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துவது ஆச்சரியமில்லை. அவர் இன்னமும் குறிப்பாகச் சகோதரத்துவதை உண்மையோடு ஒப்பிட்டார். ‘உண்மையும் சகோதரத்துவமும் ஒன்றே’ என்றார். எல்லாவகையான தேடல்களுக்கும் ஒரு மையப்புள்ளி உண்டு அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இந்த மதத்தை மட்டுமே அம்பேத்கர் ஏற்றுக்கொள்வார்.

உண்மையான ஜனநாயகம் எது:

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் புரட்சிகரமாக அம்பேத்கர் பற்றிக்கொள்கிறார். அதனாலேயே, அம்பேத்கர் நம் காலத்தின் பெரும் போராட்டங்களில் ஒன்றான ‘ஜனநாயகத்தின் பண்பு என்ன?’ என்பதன் மைய ஆளுமையாகத் திகழ்கிறார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் அறிவார்ந்த பங்களிப்பை வழங்கினார். அதுவே அரசமைப்பு சட்டத்தின் போதாமைகள் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த தெளிவான பார்வையை நாம் கண்டுகொள்ளாமல் போகக் காரணமாக இருக்கக் கூடாது. முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-இல் புலப்படுத்துவதைப்போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கிக் கொண்ட ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயக்கட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப் பண்புகளற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

அம்பேத்கரின் இந்த வாசகங்கள் எழுபது வருடங்கள் கடந்த பின்னர், இப்பொழுது நம் முன் நின்று கொண்டு நம்மைக் கடுமையாகச் சாடுவதைப்போல இருக்கிறது : ‘அரசமைப்புச் சட்டத்தின் வடிவத்தைத் துளிகூட மாற்றாமல், ஆட்சிமுறையின் வடிவத்தை மட்டும் மாற்றுவதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒவ்வாத ஆட்சிமுறையைத் தர முடியும். அதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைச் சீர்குலைக்க முடியும்.’

அதேபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான பொறுப்புமிகுந்த அரசாக இருக்க வேண்டியதில்லை. அவர், ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ நூலில் எழுதுவதைப் போல, ‘வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை மட்டுமே மக்களுக்கான, மக்களாலான அரசை கொண்டு வந்துவிட முடியாது.’ எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகத்தின் மிக முக்கியமான முரண்பாட்டை அவர் உணர்ந்திருந்தார்: ஆழமான சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மைகளுக்கு இடையே ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்த முயல்வது. இப்படிப்பட்ட முரண்பாடுகளின் போரை வெகுகாலத்துக்கு எந்த ஜனநாயகமும் தாங்க முடியாது.

சமூகநீதி என்பது தலித்துகளை அதிகாரப்படுத்தலில் இருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட அதிகாரப்படுத்தலுக்கு எல்லா வகையான அதிகாரங்களிலும் தலித்துகளுக்குப் பங்கு வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக இருந்தார். மற்ற அமைப்பு முறைகள் பொருளாதார வளம், ஆயுதம், கல்வி ஆகிய பரிமாணங்களில் ஒன்று, இரண்டு பரிமாணங்களில்தான் விலக்குதலை மேற்கொண்டன. ஆனால், ஜாதி அமைப்பில் மட்டும்தான் தலித்துகளைப் பொருளாதாரப் பலம், ராணுவம், கல்வி ஆகிய அனைத்து தளங்களிலும் ஒதுக்கி வைப்பது ஒரே சமயத்தில் நடைபெற்றது. அதனால் அது மிகக்கொடுமையான அடக்குமுறையாக இருந்தது.

அம்பேத்கர் கல்வியை மட்டுமே அதிகாரத்துக்கான திறப்பாகக் காணவில்லை. மஹர் ராணுவப்பிரிவை உருவாக்கி, விரிவுபடுத்தினார். பொருளாதார வளத்திலும் தலித்துகளுக்குப் பங்கு கிடைப்பதற்கான வெளிகளை அவர் கட்டமைக்க முயன்றார். இவையெல்லாம் வெறும் விபத்துக்கள் அல்ல. இவை அனைத்துக்கும் மேலாக, இவற்றை அடைய அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும். தலித்துகளுக்குச் சட்டமியற்றும் சபைகளில் நியாயமான இடத்தைப் பெறுவதற்கான அவரின் வாழ்நாள் போராட்டத்தின் பின்னால் இந்தப் புரிதல் இருந்தது. திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்கிற கருத்தாக்கம் உண்மையில் பரம்பரை, பரம்பரையாகப் பெறப்பட்ட வாய்ப்புகளின் மீது எழுப்பப்பட்ட ஒன்று என்று முதன்முதலில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். திறமை என்பது தானே வருவதில்லை, அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இத்தனை காலம் கழித்தும் அழுத்திச் சொல்ல வேண்டிய நிலைமை இருப்பது அவரின் கொள்கைகளிலிருந்து நாம் எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகும்.

அம்பேத்கர் தொடர்ந்து நம்மை அசைத்துப் பார்ப்பவராக இருக்கிறார். அவர் எல்லா வகையான அரசியல்கள், அவற்றோடு தொடர்புடைய பிரமைகளைக் கேள்விக்குட்படுத்துகிறார். அம்பேத்கர் பாரம்பரியம், அதிகாரம், இந்து மதம், ஜனநாயகம். எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். இப்பொழுது இருக்கும் சூழலில், தேசபக்தியை நீதியைவிட முக்கியத்துவப்படுத்துவது குறித்த அவரின் அவநம்பிக்கை மிகுந்த குரலுக்குச் செவிமடுத்து அவசியமாகிறது. ‘தேசியம் என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கொள்கையும் அல்ல. ஆகவே, மற்ற எதைவிடவும் அதிமுக்கியமான ஒன்றாக தேசியத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கட்டாயப்படுத்தி ஏற்க வைப்பது ஏற்புடைய ஒன்று அல்ல.’

அவரின் சிந்தனைகளின் மையத்தில் பெரும் சோகத்தை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு கேள்வி எழுகிறது: மற்ற எவரைவிடவும் மனிதர்களின் கயமைகளை, அடக்குமுறைகளை அனுபவித்த ஒருவர் எப்படி நம்பிக்கையைக் கைவிடாதவராக இருந்தார்? எந்தப் புற ஊன்றுகோல்களையும் அவர் நம்பவில்லை, வரலாற்றின் இயங்கியலிலோ, மெய்யியலின் நிம்மதியிலோ, மதத்தின் ஆறுதல்களிலோ, போலி அறிவியலின் நிச்சயத் தன்மைகளிலோ அவர் பல நூறு ஆண்டுகாலத் துயரங்களிலிருந்து தப்பிக்கும் நம்பிக்கை இருப்பதாக நம்பாதது அவரின் அழியா தீரத்துக்குச் சான்றாகும். ஒரு பண்பில் அவர் காந்தியைப் போலவே தோன்றுகிறார்: நம்முடைய மனசாட்சியின் அறிவார்ந்த குரலைவிடச் சமூகச் செயல்பாட்டிற்குச் சிறந்த அடித்தளம் எதுவும் இல்லை.

முழுமையாகப் படிக்க: https://www.facebook.com/100000632559754/posts/2359118834119179/?app=fbl

தமிழில்: பூ.கொ.சரவணன்.

அம்பேத்கரை அறிவோம் : வழக்கறிஞர் அம்பேத்கர்


‘சட்ட மேதை அம்பேத்கர்’, ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை’ என்றும் மெச்சப்படுகிற அண்ணலின் இந்த இரு பட்டங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் அற்புதம் ஒன்றுள்ளது. அது வழக்கறிஞர் அம்பேத்கர். ரோஹித் தே யேல் பல்கலையில் வரலாற்றுத் துறையில் பணியாற்றுகிறார். அவர் ‘People’s Constitution’ என்கிற தலைப்பில் எளிய மக்கள் எப்படி இந்தியாவின் அரசியலமைப்பை செதுக்கினார்கள் என்கிற நூலை எழுதியுள்ளார். அவரின் தேடலில் அம்பேத்கர் எப்படிப் பிரமிக்க வைக்கும் மனிதம் மிக்க வழக்கறிஞராக ஒளிர்ந்தார் என்பது தெளிவாகிறது.

‘சட்ட பயிற்சியும், பொது வாழ்வும் என் வாழ்வின் இரு மின்னோட்டங்கள். இவற்றில் நேர்திசை/மாறுதிசை மின்னோட்டம் எதில் என் வாழ்க்கை முடியுமா எனத் தெரியவில்லை.’- அம்பேத்கர் ஜலந்தரில் அக்டோபர் 15,1956-ல் ஆற்றிய உரையிலிருந்து…

அம்பேத்கர் வாழ்க்கையில் அவரின் பன்முக ஆளுமை பற்றிப் பலரும் பேசி காணமுடிகிறது. அவரின் அரசியல் செயல்பாடுகள், வரலாறு, சமூகம் குறித்த எழுத்துகள், சட்ட வல்லுநர், இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை என்றெல்லாம் அப்பட்டியல் நீள்கிறது. ஆனால், வழக்கறிஞராக அவரின் வாழ்வும், பணியும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.

இத்தனைக்கும் அம்பேத்கர் 1916 சட்டம் படிக்கக் கிரேஸ் இன்னிற்குள் நுழைந்தார். அவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நின்று போனதால் சட்டப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, சிடேன்ஹாம் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக வேலை பார்த்தார். வெளியே ட்யூசன் நடத்தி அதில் கிடைத்த பணத்தைச் சேமித்து 1923-ல் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு வழக்கறிஞர் ஆனார்.

நண்பரிடம் கடன்வாங்கிய ஒரு சிறிய இடத்தில் பம்பாயில் தன்னுடைய அலுவலகத்தை அண்ணல் அம்பேத்கர் திறந்தார். அம்பேத்கர் வழக்கறிஞராக நீதிமன்றங்களில் செயல்பட்ட விதத்தால் இருமுறை பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்புகள் வந்தன. அவற்றை அம்பேத்கர் ஏற்கவில்லை. இத்தனைக்கும் அவரின் பொருளாதார நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இருக்கவில்லை. காந்தி, ஜின்னா, நேருவைப் போல அவருடைய சட்டப்படிப்பிற்கு அவருடைய குடும்பம் செலவு செய்யக்கூடிய நிலையில் இருக்கவில்லை. தானே பொருளீட்டி அதன்மூலம் அவர் வழக்கறிஞர் ஆனார்.

இந்தியாவில் சமூக, அரசியல் தளங்களில் சுதந்திரமாகச் செயல்பட வழக்கறிஞர் தொழிலே உதவுகிறது என்பது அம்பேத்கரின் பார்வை. இதனால் தான் தன்னுடைய விடுதலை உணர்ச்சியை நீதிபதி பதவி மழுங்கடித்துவிடும் என்று கருதி ஹைதராபாத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பை ஏறெடுத்தும் அவர் பார்க்கவில்லை.

சட்டம் படிப்பது சவாலாக இருந்தது ஒருபுறம் என்றால், வழக்கறிஞராகக் கோலோச்ச குடும்ப, சமூகத் தொடர்புகள் தேவைப்பட்டன. காந்திக்கு அவருடைய சமூக உறவுகள் வழக்கறிஞர் தொழிலில் கால் ஊன்ற உதவின. மோதிலால் நேரு தன்னுடைய அண்ணனின் வழக்கறிஞர் தொழிலில் இணைந்து கொண்டார். அம்பேத்கருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாதியாக இருப்பதே வருமானம் அதிகமாகத் தரும் என்கிற சூழலில் தொடர்புகள் இல்லாததால் பிரதிவாதியின் வழக்கறிஞராக இருக்கிற முடிவையே அம்பேத்கர் எடுத்தார்.

அவரின் சட்டப் பயிற்சிக்கான முக்கியமான காரணம் அது சமூகச் சேவையில் ஈடுபடத் தடையாகாது என்பதோடு, பிற பணிகளில் ஈடுபடப் போதுமான நேரத்தை வழங்கும் என்பதும் காரணமாக இருந்தது. அம்பேத்கர் எந்தளவிற்குப் போராட வேண்டியிருந்தது என்பதை ஜனவரி 9, 1929-ல் வெளிவந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்திக்குறிப்பு வெளிப்படுத்துகிறது. ஜின்னா 2.5 லட்சம் மதிப்புள்ள திவால் நோட்டீஸ் வழக்கில் ஆஜரானார். அம்பேத்கரோ 24 ரூபாயை தராமல் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமியர் ஒருவருக்காக வாதாடினார். அம்பேத்கர் அரசியல் களத்திலும் இயங்குகிற ஒருவராக இருந்ததோடு, வழக்கறிஞர் தொழிலை வருமானம் ஈட்டுகிற மூலமாக அவர் பார்க்காதது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, அம்பேத்கர் சமூக உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடிய முன்னோடியாகத் திகழ்கிறார். அந்த நினைவு கூர்ந்தே ஆகவேண்டிய பயணத்தில் நடைபோடுவோம்.

அம்பேத்கர் பங்குபெற்ற பெரிய குற்றவியல் வழக்கு என்றால் பிலிப் ஸ்ப்ராட் எனும் கம்யூனிச தலைவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்த தேசத்துரோக வழக்கை சொல்லலாம். இந்த வழக்கில் அம்பேத்கர் ஜுனியராகப் பங்குகொண்டார். ஸ்ப்ராட் ‘இந்தியாவும், சீனாவும்’ என்கிற படைப்பில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சீனர்களைப் போல ஆயுதமேந்தி இந்தியர்கள் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து இருந்தார். திலகர், அன்னி பெசன்ட் முதலியோரின் மீது கடந்த காலத்தில் தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்குகளை மேற்கோள் காட்டி அரசாங்கத்திற்கு எதிரான வெறுப்பை வளர்க்கவில்லை, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டுமே அவர் எழுதினார் என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.

தன்னை ஐரோப்பியர்கள் இருக்கும் ஜுரி முன்பு நிறுத்த வேண்டாம் என்று ஸ்ப்ராட் வாதிட்டார். அம்பேத்கர், ஜின்னா உள்ளிட்டோரின் உழைப்பால் அவர் விடுதலையானார். தேசியவாதிகளைக் கடுமையாக விமர்சித்த ஸ்ப்ராட்டின் விடுதலையைக் கொண்டாடிய விழாவிற்குத் தலைமை தாங்கியவர் சரோஜினி நாயுடு. இடதுசாரிகளோடு பல வேளைகளில் முரண்பட்ட அம்பேத்கரும், தேசியவாதியான சரோஜினி நாயுடுவும் தேசியவாதிகளைக் குத்திக் கிழித்த இடதுசாரியான ஸ்ப்ராட்டிற்கு ஆதரவாக ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்? அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான எதிராளியின் உரிமையைக் காப்பதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

அம்பேத்கர் இடதுசாரிகளை அவர்களிடையே நிலவும் உயர்சாதி ஆதிக்கம், வன்முறை ஆதரவு ஆகியவற்றுக்காக விமர்சித்தாலும் தொழிலாளர் யூனியன்களோடு பல்வேறு தருணங்களில் இணைந்து இயங்கினார். தொழிலாளர் தலைவர்கள்,தொண்டர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் அம்பேத்கர் முதல் ஆளாக நின்று வாதாடினார். V.B. கர்னிக் , மணிபென் கரா, B.T.ரணதிவே, அப்துல் மஜித் முதலிய கம்யூனிச தலைவர்கள் ஆலைத் தொழிலாளர்களைப் போராட்டம் செய்யத் தூண்டிவிட்டதாகவும், அது சமூகத்திற்குக் கேடாக முடிந்ததாகவும் வழக்குப் பிரிட்டிஷ் அரசால் தொடரப்பட்டு இருந்தது.

அம்பேத்கர் வழக்கில் கம்யூனிச தோழர்களுக்காக வாதாடினார். குறுக்கு விசாரணையின் உச்சம் என்கிற அளவுக்கு அரசுத்தரப்பை தன்னுடைய கூர்மையான கேள்விகளால் அண்ணல் துளைத்து எடுத்தார். மிகவும் மெனக்கெட்டு அரசு தயாரித்து இருந்த சாட்சிகள் அம்பேத்கரின் வினாக்கள், துல்லியமான தாக்குதல்கள் முன்பு சரிந்து விழுந்தன. இந்தப் போராட்டங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின என்கிற முதலாளிகளின் வாதத்தை அவர்களின் வாயாலேயே பொய்யென்று அம்பேத்கர் நிறுவிய மேதைமையைப் பத்திரிகைகள் சிலாகித்து எழுதின.

இதோடு நில்லாமல், சத்தியாகிரகிகளுக்காகவும் அம்பேத்கர் வாதாடி வென்றார். சிர்னார் வனப்பகுதியில் சத்தியாகிரகிகள் போராட திரண்டார்கள். காவல்துறை கண்மூடித்தனமாகத் துப்பாக்கி சூட்டை நடத்தியது. இதனை அடுத்து மூண்ட கலவரத்தில் நான்கு அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள். நாற்பத்தி ஏழு பேர் மீது கொள்ளை, கொலை, சட்டத்துக்குப் புறம்பாகக் கூடியது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படித்தது. அம்பேத்கர் அரசுத்தரப்பை கதிகலங்க வைத்தார் என்றால் மிகையில்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையை அம்பலப்படுத்தினார். காவல்துறையின் வன்முறையை ஆதாரங்களோடு நிறுவினார். ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்து தீட்டிய சதித்திட்டம் என்கிற அரசாங்க வாதம் எவ்வளவு நகைப்புக்குரிய ஒன்று என்பதைத் தன்னுடைய வாதத்திறமையால் நிறுவினார். அரசியல்ரீதியாக முரண்பட்ட இருதரப்பின் சமூக உரிமைகளுக்காகச் சளைக்காமல் அவர் சமராடினார் என்பதே நெகிழ வைக்கிறது.

கேசவ் ஜெத்தே என்பவர் பிராமணிய அடிமைச்சிந்தனைகளைத் தூக்கிப்பிடித்த திலகர், சிபுலுங்கர் முதலிய தலைவர்களை “Deshache Dushman” நூலில் தேசத்தின் எதிரிகள், கழுதைகளின் பிள்ளைகள் என்றெல்லாம் தாக்கி எழுதினார். இந்நூல் தடை செய்யப்பட்டதோடு, ஒரு பிராமணர் அவதூறு வழக்கினை தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான அம்பேத்கர் அவதூறு வழக்கை இறுக்கமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். அவதூறு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் திலகர் உள்ளிட்ட யாரும் உயிரோடு இல்லை. மேலும், அவதூறு செய்யப்பட்டவர்களோ அவர்களோடு தொடர்புடையவர்கள் மட்டுமே வழக்கைத் தொடர முடியும் என்பதால் இந்த வழக்கில் தண்டனை வழங்க முடியாது என்று சாமர்த்தியமாக வாதிட்டார். வழக்கு பிசுபிசுத்துப் போனது.

மகளிர் நலம், முன்னேற்றம் சார்ந்து இயங்கிய கார்வே மீது ஆபாசத்தைப் பரப்பியதாக வழக்குப் போடப்பட்டது. காரணம் இதுதான் : அவர் குடும்பக் கட்டுப்பாடு, பாலியல் நலம் குறித்த பரப்புரை நூல்களைப் பதிப்பித்தார். இந்த வழக்கில் அம்பேத்கர் மீண்டும் காலனிய சட்டத்தை இறுக்கமாகவே பொருள்கொள்ள வேண்டும் என்கிற வாதத்தை முன்வைத்தார். ஆபாச எழுத்து என்பது மலினமானவர்களின் மனதை களங்கப்படுத்தக்கூடிய படைப்பையே குறிக்கும். இந்த நூல் பொதுப் புழக்கதிற்கான ஒன்று கிடையாது. ஆகவே,. இது ஆபாசம் இல்லை என்று அம்பேத்கர் வாதாடினார். நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்தது. இந்த வழக்கிற்குப் பின் குடும்பக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்த வேண்டும் என்றொரு மசோதாவை அம்பேத்கரின் கட்சி பம்பாய் சட்டமன்றத்தில் முன்மொழிந்தது.

பேராசிரியர் அனுபமா ராவ் பார்வையில் அம்பேத்கர் சமூக உரிமைகளைக் குறித்த நவீன கருத்தாக்கத்தை நீதிமன்றங்களில் முன்னெடுத்து அதன்மூலம் மதத்தை ஜனநாயகப்படுத்த முயன்றதோடு, பழமைவாதம், அடையாளத்தில் ஊறிப்போயிருந்த காலனிய ஆட்சிக்கும் சவால் விட்டார். சௌதார் குளத்தைத் தலித்துகள் பயன்படுத்த சட்டப்போராட்டத்தை முன்னெடுத்த போது அது பொதுச்சொத்து என்பதை முதலில் நிறுவினார். அதன்பின்னர், இஸ்லாமிய கசாப்புக் கடைக்காரர் அக்குளத்தைக் காலங்காலமாகப் பயன்படுத்தி வருவதை ஆதாரத்தோடு நிறுவினார். இதன்மூலம், மாமிசம் உண்பவர்கள் அசுத்தமானவர்கள் அதனால் அனுமதிக்கவில்லை என்கிற உயர்சாதியினரின் ‘தூய்மைவாத’த்தை அம்பேத்கர் தவிடுபொடியாக்கினார். பொதுச் சொத்து என்கிற வாதத்தின் மூலம் தலித்துகளுக்கும் சட்ட உரிமை உண்டு என்பதை நீதிமன்றம் தீர்ப்பாக எழுத அம்பேத்கர் அவ்வழக்கில் அடிகோலினார்.

தனிமனித உரிமைகளைப் பெரும்பான்மையின் ஆதிக்க மனப்பான்மையிடமிருந்து காக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு காங்கிரஸ் அரசு பம்பாயில் முப்பதுகளில் கொண்டு வந்திருந்த மதுவிலக்குச் சட்டத்திற்கு எதிராகப் போராடினார். ஒரு கிறிஸ்துவரை மது புட்டியோடு பிடித்துச் சிறையில் தள்ளிய வழக்கில் அச்சட்டமே திரும்பப் பெறப்பட்ட பிறகும் வழக்கு தொடுத்து தனி மனிதர்களைத் தொல்லைப்படுத்துகிற அநீதியை தோலுரித்துக் காட்டினார். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சுதந்திரமான போக்குக் கொண்டவர்கள் என்கிற பார்வையோடு விடுதலைக்கு முன்பே நீதிமன்றத்தில் அண்ணல் வாதாடினார் என்பது பிரமிக்க வைக்கிறது.

அம்பேத்கர் ஏழை, எளியவர்களுக்காகத் தொடர்ந்து வழக்கறிஞராகப் பணியாற்றினார். கட்டணமே வாங்கிக்கொள்ளாமல் பல ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயத்தை நீதிமன்றங்களில் எதிரொலித்தார். தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்காகப் பல வழக்குகளில் அவர் நீதிமன்ற படியேறினார். ரயில்வே தொழிலாளர்களின் உரிமைகளுக்காகச் சட்டப்போராட்டங்களை நிகழ்த்தினார். பல்வேறு தூக்குத் தண்டனை கைதிகளின் வழக்குகளில் தானே முன்வந்து வாதாடினார். இவர்களில் பெரும்பான்மையானோர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அவ்வழக்குகள் நேரடியாக உயர்நீதிமன்றம் வரை போகும் என்றாலும் வாதாட வழக்கறிஞர்கள் இல்லாமல் திணறுவார்கள். அவர்களைக் காக்கும் மீட்பராக அம்பேத்கர் தானே முன்வந்து வழக்குகளை எடுத்து நடத்தினார்.

மிகச் சொற்பமான கட்டணமோ, அல்லது இலவசமாகவோ வழக்குகளை எளியவர்களுக்காக அம்பேத்கர் தொடர்ந்து நடத்தினார். அவரைப் பார்க்க வரும் ஏழை, எளியவர்களுக்குத் தன்னுடைய அறையில் தங்க வைத்து, உணவளித்து அரவணைக்கும் பெருமனதும் அண்ணலுக்கு இருந்தது. அவரின் இத்தகைய அறவுணர்வும், தயாள மனமும் துலா பீமாண்ணா வாக் பனவாலையே மற்றும் வக்கீல் டாக்டர் ஜலி முதலிய மராத்திய நாட்டுப்புற பாடல்களில் இன்றும் போற்றப்படுகின்றன. ‘ஏழைகளின் வக்கீல்’ என்று அம்பேத்கர் நினைவுகூரப்படுகிறார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போராட்டக்காரர்கள், எளிய மக்களைக் காக்கும் பொருட்டுச் சட்டங்களை இறுக்கமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார் அம்பேத்கர். விடுதலைக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு மக்களின் சுதந்திரம், சமத்துவத்தைக் காக்க வேண்டும் என்று வாதிட்டார். காமேஷ்வர் சிங் வழக்கில் ‘அரசியலமைப்பின் ஆன்மாவை’ காக்கும் வகையில் சட்டத்தினைப் பொருள் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் கருத்துரைத்தார். இக்கருத்தினை வந்தடைய நீதிமன்றங்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலானது.

அம்பேத்கரின் வழக்கறிஞர் பரிமாணம் ஏன் இருட்டிலேயே இருந்தது அல்லது ஏன் மறக்கப்பட்டது என்பது சிந்தனைக்குரியது. அம்பேத்கர் பம்பாய் சட்டக்கல்லூரியில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றினார். சித்தாத் கல்லூரியை நிறுவி பல முதல் தலைமுறை தலித் வழக்கறிஞர்களை உருவாக்கினார். சமூக, அரசியல் நீதியில் தண்ணி தோய்த்துக் கொண்ட ஒரு வழக்கறிஞர் அர்ப்பணிப்புணர்வோடு சமூக நீதி நாடி இயங்குவது சட்ட அறிவின் பரப்பினை விரிவாக்கிக் கொண்டே போகும் என்பதற்கு அம்பேத்கரின் வாழ்வு உன்னதமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று ரோகித் தே தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை முடிக்கிறார். வழக்கறிஞர் அம்பேத்கரினை தொடர்ந்து நினைவுக்கூர்வோமாக.

முழு கட்டுரை இங்கே: https://www.academia.edu/34592004/Lawyering_as_Politics_The_Legal_Practice_of_Dr._Ambedkar_Bar-at-Law

கட்டுரையாசிரியர்: ரோஹித் தே.

கட்டுரைச் சுருக்கம் தமிழில் : பூ.கொ.சரவணன்

காஷ்மீர் குறித்து வேகமாக பரப்பப்பட்ட  படம்  சொல்வதெல்லாம் உண்மையா? 


பொய்களும், அரைகுறை உண்மைகளும் வேகமாகக் கவனம் பெற்றுவிடுவதன் அடையாளமே கீழ்கண்ட படம். இதனை ஆங்கிலத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டுடே எந்த ஆய்வும் செய்யாமல் வெளியிட அதனைத் தமிழ் ஊடகங்கள் செவ்வனே மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஏன் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தவறானவை அல்லது அரைகுறையானவை என அறிவோம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

(I) காஷ்மீருக்கு என்று இரட்டைக் குடியுரிமை எல்லாம் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்புக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியா ஒற்றைக் குடியுரிமை கொண்டிருக்கும் நாடு. வேறொரு நாட்டின் குடியுரிமையை ஒருவர் பெற்றால் அக்கணமே அவர் இந்தியக் குடிமகனாக இருக்க முடியாது. காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு என்று குறிப்பிட்ட சில சிறப்புரிமைகள் உண்டு. அது குடியுரிமை அல்ல. விடுதலை இந்தியாவில் குடியுரிமை எப்படிக் குடியுரிமை உருவம் பெற்றது என்று அறிய விரும்புபவர்கள் அவசியம் பேராசிரியர் நீரஜா கோபால் ஜெயலின்
‘Citizenship and its discontents’ நூலை வாசிக்க வேண்டும்.

(II) பொருளாதார அவசரநிலை (சட்டப்பிரிவு 360) என்பது இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்த பின்பு ஒரு முறை கூட அறிவிக்கப்பட்டதில்லை. இதுவரை ஜம்மு காஷ்மீரில் போர், அந்நிய தாக்குதலின் போது அவசரநிலையை அறிவிக்க இயலும்.

(III) சிறுபான்மையினருக்கு 16% இட ஒதுக்கீடு என்பது இன்னொரு பூசுற்றல். இந்த எண் எங்கிருந்து முளைத்தது என்று தேடிப்பார்த்தும் தெரியவில்லை. சமீபத்திய சட்டத்திருத்தம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை காஷ்மீரில் உறுதி செய்துள்ளது. சீக்கியர்கள், இஸ்லாமியர்களிலும் மேல்சாதியினர் உண்டு. எதையாவது அடித்து விடுவது என்று வந்த பின்பு உண்மையைப் பற்றி என்ன கவலை?

(IV) ஒரு காஷ்மீரி பெண் வேறு மாநில நபரை மணந்தால் தன்னுடைய குடியுரிமையை இழக்கிறார் என்பது அடுத்தப் பிதற்றல். குடியுரிமையை நெறிப்படுத்தும் சட்டங்களில் இப்படியொரு சட்டப்பிரிவு இல்லவே இல்லை. வேறு மாநிலத்தவரை காஷ்மீரி பெண் திருமணம் செய்து கொண்டாலும் அவரின் குடியுரிமை அப்படியே இருக்கும். சிறப்புரிமைகளைத் தான் குடியுரிமை என்று எண்ணிக்கொண்டார்கள் என்று சமாளிக்க எண்ணுகிறார்களா? அடுத்தப் பத்தியை படிக்கவும்.

(V) காஷ்மீரி பெண் வேறு மாநில ஆணை திருமணம் செய்து கொள்வதால் காஷ்மீரிகளுக்கு என்று இருக்கும் சிறப்புரிமைகள் எதனையும் இழக்க மாட்டார் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு தீர்ப்பு நல்கியது. ஒரே ஒரு நீதிபதி மட்டுமே அத்தீர்ப்பில் முரண்பட்டார். புகழ்பெற்ற சுசீலா சாஹ்னி எதிர் ஜம்மு காஷ்மீர் அரசு வழக்கிலேயே இத்தீர்ப்பு 2002-ல் வழங்கப்பட்டது. ஆக இந்தக் குடியுரிமை, சிறப்புரிமை இழப்பு என்பதெல்லாம் இல்லை. காண்க: https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/j-k-women-marrying-non-natives-don-t-lose-residency-rights-expert-119012201079_1.html

(VI) ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இருக்கிறது. முதலில் நீர்த்துப்போன ஒரு சட்டத்தை 2004-ல் மாநில அரசு நிறைவேற்றியது. 2009-ல் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு இணையான தகவல் அறியும் உரிமைச்சட்டம் காஷ்மீரில் அமலுக்கு வந்தது.

(VII) இறுதியாக ஜம்மு காஷ்மீருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுவோம். இந்தியாவில் சிறப்புரிமைகளை அனுபவிக்கிற மாநிலம் காஷ்மீர் மட்டுமில்லை. இந்தியா asymmetric federalism-ஐ பின்பற்றுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலசாரம், பண்பாடு, நடைமுறைகள், இந்தியாவோடு இணைந்த பாதை ஆகியவற்றில் மாறுபட்டிருக்கும். அதனால் அவற்றுக்கு ஏற்ப அரசியலமைப்பில் சிறப்புப் பிரிவுகளின் மூலம் சிறப்பு உரிமைகள் காஷ்மீர் அல்லாத பத்து மாநிலங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவாக அறிய படிக்கவும்:

https://www.google.com/amp/s/thewire.in/government/jammu-kashmir-constitution-special-powers-10-states/amp/

பகுத்தறிவும், அரசமைப்புச் சட்டம் குறித்த தேடலும் நம்மிடையே பெருகட்டும்.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

In this era of fake news such half baked posts are widely shared. I will break point by point why this is fake on many accounts. I wish those who share this do some basic study of constitution.
 
(I) There is no dual citizenship in Kashmir. No state in India enjoys this privilege of Dual citizenship. In India there is only Single Citizenship. For those interested in history of making of Citizenship in India They can read Niraja Gopal Jayal’s ‘Citizenship and its discontents’.
 
(II) Article 360 was never implemented in any state or whole of country anytime in past 69 yrs of existence of Constitution. Previously, Emergency can be declared in Jammu and Kashmir when there is war or external aggression.
 
(III) How this number of 16% was arrived I don’t know. The reservation bill actually provides 10% reservation for EWS. EWS are not per se minorities. Even upper castes exist in Sikhs, Muslims.
 
(IV) The losing of citizenship by marrying person outside state is another lie. The property rights are gone yes, but, not citizenship rights. Go get your basics right.
(V) Jammu & Kashmir do have RTI Act. First watered down version was passed in 2004. And in 2009 Jammu & Kashmir Right to Information Act came into force which is on similar lines with Central Act.
 
(VI) The Kashmiri women doesn’t lose Citizenship or residency Rights post 2002. J & K high court in a full bench judgment with one judge dissenting has said (Susheela Sahwney Case) that A women doesn’t lose her rights as Kashmiri by marrying a non-resident. https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/j-k-women-marrying-non-natives-don-t-lose-residency-rights-expert-119012201079_1.html
 
(VII) Finally the first point. Special powers of Kashmir. It was not the only state that enjoyed special powers. India practices asymmetric federalism and provides special powers to Ten States. Here is a summary of it: https://www.google.com/amp/s/thewire.in/government/jammu-kashmir-constitution-special-powers-10-states/amp/
 
Little sense and sanity is to be expected.

ஏன் அதிகாரப்பூர்வ அடையாளத் துறப்புகள் ஆபத்தானவை?