காந்தியும், மதச்சார்பின்மையும்


காந்தியும், மதச்சார்பின்மையும் – அனில் நௌரியா

(மதச்சார்பின்மை என்கிற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலதுசாரிகள் குரல் எழுப்பிக்கொண்டுள்ள சூழலில், காந்திக்கும் மதச்சார்பின்மைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இக்கட்டுரையை அவசியம் வாசியுங்கள்… )

மதச்சார்பின்மை என்கிற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா, ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே
உபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாகப் புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் மார்ச் 1931 ல் வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. மதச்சார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்தத் தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின்
எழுத்துக்கள் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாகக் காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தைப் பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார். மே 6, 1933 இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்.

மேலும் நவம்பர் 1933 இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார்.

ஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள் முன் உரையாற்றினார். அப்போது “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் சட்டசபை போன்ற மதச்சார்பற்ற அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் )

ஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையைப் பற்றிக் காந்தி பேசுகிற பொழுது இப்படிச் சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொதுப் பயன்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது ? மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையைப் பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத / நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பின்மைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும்.

இதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது.

”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நிதி ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடிமகன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்தப் புரவலும் ஆங்கில அரசு செய்தது போலத் தராது என்றும் சொன்னார். இந்தப் புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது

இந்தச் சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான்
பாடுபட்டதாகக் காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்துத் தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில்
எல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க இயலும்.” என்றார்

நவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லாக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்தத் தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார்.

குருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தைக் கொண்டு சோமநாதர் ஆலயத்தைப் புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : “நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின் தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அக்காலச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்தப் புரிந்துணர்வு 1969க்கு பின்னர்
கண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன.

காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ நன்கு கட்டமைப்பக்பட்ட, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்குச் சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம், வழிகாட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்தப் பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “

காந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது. அவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம் பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளைப் பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய நாட்குறிப்புகளில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். இந்தியா மதச்சார்பின்மையைத் தன் பண்பாகக் கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும், இந்திய தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் காந்தி, நேரு இருவரும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். இதனை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாகப் பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய
பிராந்திய தேசியத்தைக் காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. ஒத்துச்செல்லும் கருத்துகளை விட முரண்பாடுகள் ஆழமாக இருந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேருவும் இணைந்து வெகுகாலம் ஒன்றாகச் செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை காந்தி பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்திக் காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த ஹிந்துத்துவ சக்திகள் இதை முக்கியப்பணியாகச் செய்தன. இப்படிக் காந்தி,நேரு இருவரையும் பிரித்துக் காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாகக் காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்துக் கருத்தியல் ரீதியாகத் தாக்கமுடியும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்தக் காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதைப் பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூடத் தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்காலக் கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் இரு நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

(இக்கட்டுரை அனில் நௌரியாவின் Gandhi on secular law and state எனும்
கட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது )

புகைப்படம்: மதக்கலவரத்தால் சிதறுண்ட பீகார் மாநில வீடொன்றில் காந்தி

நன்றி: நவ்ஜீவன் அறக்கட்டளை

தமிழில்: பூ.கொ. சரவணன்

அம்பேத்கரை அறிதல்


பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா இந்தியாவின் முதன்மையான அரசியல் அறிfவியல் அறிஞர்களில் ஒருவர். ப்ரின்ஸ்டனில் முனைவர் பட்டம் பெற்ற அவர் ஹார்வர்ட், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். ஆழமான பார்வைகளுக்கும் கூர்மையான கருத்துக்களுக்கும் பெயர் பெற்ற அவரின் ‘Ambedkar-Slayer of All Gods’ கட்டுரையின் முக்கியமான சில பகுதிகள்:

ஏன் அம்பேத்கர் நம்மை குத்திக்கிழிக்கிறார்?:

தலைவர்களின் பிறந்த நாள்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் நாட்கள் போன்றவை அப்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ளவும், வெற்றி, தோல்விகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் வாய்க்கும் தருணங்களாகவே பெரும்பாலும் திகழ்கின்றன. இப்படிப்பட்ட அளவுகோல்கள், வெற்றி-தோல்விகளுக்குள் அண்ணல் அம்பேத்கரை அடக்க முயல்வது முந்திரிக்கொட்டைத்தனமானதும், முட்டாள்தனமானதும் ஆகும். மகத்தான தலைவர்கள் பலரைப் பொறுத்தவரை, ஒரு பண்பாட்டின் தர அளவுகோல்கள் லட்சியங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் எந்த அளவுக்கு வாழ்ந்தார்கள் என்றே நாம் அவர்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறோம். அண்ணல் அம்பேத்கரைப் பொறுத்தவரை இது தலைகீழான ஒன்று. ஒட்டுமொத்த பண்பாடே தன்னை மதிப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டிய அளவுகோல் அவரே. நம்முடைய ஆதர்சங்களால் அவரை எடை போட முடியாது.

அம்பேத்கர் எனும் ஆளுமையின் ஆதர்சங்களால்தான் நம்மை நாமே மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அம்பேத்கருடன் உறவாடுவதென்பது அவரை மதிப்பிடுவதென்பதல்ல; நம்மை மதிப்பிட்டுக் கொள்வதும், நாம் ஏன் இன்னமும் அவரின் நீதிக்கான அறைகூவலை, பகுத்தறிவுக்கான வாதத்தை, அமைப்புகள் குறித்த ஆழமான கற்பனைகளைப் பற்றிக்கொள்ளவும், முகத்துக்கு நேராக எதிர்கொள்ளவும் மறுக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும். அம்பேத்கர், நம்மை நாமே பார்த்துக்கொள்ள அஞ்சுகிற கண்ணாடி. அவரின் இருப்பு நம்முடைய மோசமான மனசாட்சியையும்,மோசமான நம்பிக்கைகளையும் பற்றி நமக்குத் தொடர்ந்து நினைவுறுத்துகிறது.

தலித் அல்லாதோர் தாங்கள் ஏன் அம்பேத்கர் குறித்து எழுத வேண்டும் என்கிற மனதளவிலான விலக்கலை மேற்கொண்டிருக்கிறார்கள். பல்லாண்டுகளாக நமக்கு அசௌகரியமான உணர்வைக் கொடுத்துக் கொண்டிருந்த ஆளுமையாகத் திகழும் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்தோம். ஒரு பெருந்தலைவரை ஓரங்கட்ட சமூகம் முயன்றாலும், அவர் அதைத் தாண்டி வெல்வதால் அவரது பரிவாரத்தில் இணைந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அம்பேத்கரைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் அவரை வசப்படுத்தி, கட்டுப்படுத்தும் முயற்சி என்னும் ஐயத்தோடு நோக்கப்படுகிறது. அம்பேத்கரைக் கடவுள்போல ஆக்குவது அவரின் புரட்சிகரமான கருத்துக்களை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான எளிமையான, செய்கையே. அம்பேத்கரை பாஜக அபகரித்துக் கொள்வதற்கான முயற்சிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது. காங்கிரஸ் அவரை ஓரங்கட்டியதும், பாஜக அவரை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதும் நமக்குப் பலவற்றைச் சொல்லாமல் சொல்கின்றன. குறைந்தபட்சம் இப்பொழுதாவது அவர் குறித்து அதிகம் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட பெயரளவிலான போற்றுதல்கள் அவை பெரிதளவில் பயன் தராது என்பதை உணர்த்துவதோடு நின்றுவிடவில்லை. அம்பேத்கர் முன் நாம் தலைகுனிந்து வணங்கி நிற்பதன் மூலம் அவர் நம்முடைய ஆன்மாவைக் குத்திக் கிழிப்பதிலிலிருந்து தப்பிக்க எண்ணுகிறோம்.

அம்பேத்கர் தேசவிரோதியா?:

அவர் வாழ்நாள் முழுக்க அநீதியை அம்பலப்படுத்துவதை அயராமல் செய்தார். ஒரு செயல்நோக்கமோ, தேசமோ, அதிகாரமோ, கலாச்சாரமோ, செல்வமோ அநீதியைச் சற்று மூடி மறைக்க முயன்றாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்கு அர்ப்பணிப்போடு இருக்க முடியவே முடியாது என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அருண் ஷோரி முதலிய விமர்சகர்கள் அம்பேத்கர் தேசியவாதி இல்லை என்கிறார்கள். ‘நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத ஒரு தேசம் தேசமே அல்ல’ என்றதில் அம்பேத்கரின் ஆளுமை பிரமிக்க வைக்கிறது. அவர், கிட்டத்தட்ட எல்லாச் சித்தாந்தங்களும் தலித்துகள் ஒடுக்கப்படுவதை மூடி மறைக்கும் சூழ்ச்சிகளாக நிகழ்ந்ததைக் கண்டு கொதித்தார். சித்தாந்தங்களின் நுண்மையான விவாதங்கள் எனும் பனிமூட்டத்தில், தலித் அடக்குமுறை எனும் உள்ளார்ந்த உணர்வு மூடி மறைக்கப்படுகிறது என்பதை அவர் புலப்படுத்தினார். தலித்துகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மூர்க்கமான வன்முறை, தந்திரமான ஒடுக்குமுறை, தினசரி அவமானங்கள் ஆகியவற்றை நாம் கண்கொண்டு பார்ப்பதே இல்லை. தலித்கள் மீதான வன்முறைகளை அப்படி நடப்பதாக முழுமையாக யாரும் ஒப்புக்கொண்டதே இல்லை. அப்படியே ஒப்புக்கொண்டாலும், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தைப் பொய் வேடத்தாலும், தற்காப்புத் தொனியின் மூலமும் இருட்டடிப்பு செய்துவிடுவதை அவர் சுட்டிக்காட்டினார். காந்தியை கடுமையாகத் தாக்கிய அம்பேத்கர் அதைவிடக் கூடுதலான கடுமையோடு நேருவை நோக்கி முக்கியமான விமர்சனத்தை இப்படி வைத்தார்:

இந்திய சமூகத்தின் மையமாக உள்ள இந்த வன்முறையின் இருப்பை நேரு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். ‘நேருவைப் பாருங்கள். அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெபர்சனின் விடுதலை அறிவிப்பில் அவர் உத்வேகம் பெறுவதாகப் பெருமிதம் கொள்கிறார். இந்தியாவில் உள்ள ஆறு கோடி தீண்டப்படாத மக்களின் நிலை குறித்து எப்போதாவது சஞ்சலமோ, அவமானமோ நேரு அடைந்திருக்கிறாரா? அவரின் எழுதுகோலிலிருந்து ஊற்றெடுக்கும் இலக்கிய வெள்ளத்தில் எங்கேனும் அவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவா?’. அம்பேத்கர் தலித் அல்லாத மக்களை நோக்கித் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ‘தாங்கள் எப்படிப்பட்ட அநீதியை மேற்கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் உணர்வதே இல்லை!’. இன்றுவரை நாமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.#

#பல்வேறு வகைகளில், காந்தியைவிட இந்தியாவை அதிகமாக அகிம்சையோடு பிணைத்தவர் அண்ணல் அம்பேத்கரே ஆவார். தலித்துகளை அரசமைப்புச் சட்ட முறைகளின்படி இயங்க வேண்டும் என்று ஒப்புவித்ததன் மூலம் அவர் அதை நிகழ்த்தினார். இது தங்களின் கைகளைக் கட்டிப்போட்டிருப்பதாகச் சில தலித் புரட்சியாளர்கள் முணுமுணுக்கிற அளவுக்குத் தாக்கம் செலுத்தியுள்ளது.

பிராமணியம் மீதான பெரும்போர்:

இந்துச் சமூகத்தின் மேற்புறத்தில் மிதக்கும் குப்பைக் கூளமல்ல வன்முறை. அந்தக் குப்பையைச் சுத்தப்படுத்தினால் இந்துச் சமூகத்தின் தெளிவான, சுத்தமான நீர்நிலை தென்படும் என்பது புரட்டு. வன்முறையே இந்துச் சமூகத்தின் அடையாளம், அதன் இயங்குசக்தி. அம்பேத்கரைப் பொறுத்தவரை நீதியை அடைய இந்து மதத்தின் மீது கிட்டத்தட்ட ஒரு போரை அறிவிப்பதே வழி என்று அவர் கருதியதைப் பூசிமெழுக முடியாது. காந்திக்கு எழுதிய பதிலில் அம்பேத்கர் இப்படி எழுதினார்: ‘நான் மகாத்மாவிடம் உறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்பு, அவமதிப்பு மிகுந்த உணர்வுகளை வெளிப்படுத்துவது அவர்களின் தோல்வியால் மட்டும் அல்ல. இந்துக்கள், இந்து மதம் மீது நான் அருவருப்புக் கொள்ளக் காரணம் அவர்கள் தவறான லட்சியங்களைக் கொண்டவர்களாக, மோசமான சமூக வாழ்வை மேற்கொள்வதாக உளமார உணர்ந்துகொண்டேன். இந்து மதம், இந்துக்களுடனான எனது பிரச்சினை என்பது அவர்களின் சமூக நடத்தையில் உள்ள குறைபாடுகள் பற்றியதல்ல. அது மேலும் அடிப்படையானது. அது இந்துக்கள், இந்து மதத்தின் ஆதர்சங்களைப் பற்றியது.

அம்பேத்கர் தன்னுடைய விமர்சனத்தில் தாக்க முனைந்தது உலகத்திலேயே மிகவும் ஆச்சரியப்படுத்துவதும், சிறைப்படுத்துவதுமான தத்துவ அமைப்பான பிராமணியமே ஆகும். பிராமணியம் அல்லாத இந்துக் கருத்தியல் முறைகளையும் அது பெரும் தீமையாய்ப் பற்றிக்கொண்டதால் பிராமணியத்தை அக்குவேறு ஆணிவேராகக் கழற்றி எறியாமல் நீதி என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இந்து மதம் இருக்கிறது.

அம்பேத்கரின் பெரும்பாலான படைப்புகளை மீண்டும் வாசிக்கையில் மிக முக்கியமான தேடல் ஒன்று புலப்படுகிறது; அது சாதி என்கிற கொடூரமான ஒடுக்குமுறை அமைப்பை எது உற்பத்தி செய்தது என்பதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி. அம்பேத்கரின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் அவற்றின் சமூகவியல் ஆழம், வரலாற்றுக் கூர்மையால் அசரடிக்கின்றன. ஆரியர் படையெடுப்பால் அடிமைப்படுத்துதல் ஏற்பட்டது எனும் கோட்பாட்டை அவர் நிராகரித்தார். சாதி அமைப்பு குறித்து இனத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்ட எல்லா வகையான விளக்கங்களையும் அவர் நிராகரித்தார். சாதி என்பது தொழில்கள் சார்ந்து எழுந்தது என்பது போன்ற விளக்கங்களை அவர் கடுமையாகச் சாடினார். சாதி என்பது தொழில்கள் அடிப்படையிலான அமைப்புமுறை அல்ல; அது தொழிலாளர்களை அடுக்குமுறையில் வைத்து அடிமைப்படுத்தும் முறையாக இயங்கியது என்பதே இந்தக் கடுமைக்குக் காரணம். அம்பேத்கர் எனும் வரலாற்றாளர், இந்தியவியல் அறிஞரின் பலங்களுக்குள் போவது இந்தக் கட்டுரையின் இலக்கு அல்ல. அர்விந்த் ஷர்மாவின் ‘BR Ambedkar, on the Aryan invasion and the Emergence of the Caste System in India’ எனும் கட்டுரையின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

சாதியை அழித்தொழித்தல்:

அம்பேத்கரின் ஆய்வுகளின் மூலம் இரு முக்கியமான கூறுகள் தெரிய வருகிறது. சாதி அமைப்பின் வினோதமான தன்மையைப் பொருளியல், தொழில்முறை சார்ந்த விளக்கங்களால் விளக்க முடியாது. சாதியமைப்பின் அடிப்படை பிராமணர்களால் அதிகாரத்தின் செயல்பாடாகத் திணிக்கப்பட்ட கொடூரமான தொடர் பிரதிநிதித்துவப்படுத்தல்களால் ஆனது. தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்துக்கான வழிகளான அதிகாரம், பொருளாதார வளம், கல்வி ஆகிய மூன்றும் அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் சாதியமைப்பு தொடர்ந்து உயிர்த்திருக்கிறது. சாதி அடுக்குமுறையிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தனக்குக் கீழுள்ள இன்னொரு பிரிவினரை ஒடுக்குவதன் மூலம் இன்பம் காணும் கொடூரமான அமைப்பு முறையாக அது திகழ்கிறது. சாதியமைப்பு நிரந்தரமான பாகுபாட்டில் களிப்புக் கொள்கிறது. இதனால்தான் பிராமணியம் மீதான அறச்சீற்றம் அம்பேத்கரிடமிருந்து வெளிப்படுகிறது. எந்த வகையிலும் பிராமணியம் உருவாக்கிய அடுக்குமுறைக்கு நியாயம் கற்பிக்க முடியாது. அதிகாரத்தைத் தெளிவாக, எளிமையாகத் திணிக்கும் முறை அது. இந்த அதிகாரம் ஒரு குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது; இந்த ஒட்டுமொத்த கருத்தாக்கத்தை அடித்து நொறுக்கினால் மட்டுமே விடுதலை சாத்தியம்.

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப்போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லிம் கலவரம் வரும் பொழுதுதான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

அம்பேத்கரின் மதம் எது? :

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் அந்தச் சமூகம் அடிமை முறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததுதான் என்கிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல். பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்புபடுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கிருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்துகொள்ளத் தவறுவர்.#

#மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்குப் புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது. எந்த அறரீதியான, வரலாற்றுரீதியான மோதலைச் சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன் மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. புத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகளற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள்.

முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-இல் புலப்படுத்துவதைப்போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கிக் கொண்ட ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயக்கட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப் பண்புகளற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

இந்து மதத்தை அம்பலப்படுத்தல்:

அம்பேத்கர் நம்மை மேலும் மேலும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் இந்து அடையாளத்தின் அற, உளவியல் கூறுகளைத் தன்னுடைய விமர்சனங்களால் தோண்டி எடுக்கிறார். இந்து அடையாளத்தைக் கட்டமைப்பதில் பங்கு வகிக்கும் பல்வேறு அடுக்கு வன்முறை, எதிர்ப்பு ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். அவரே சாதி அமைப்போடு தொடர்புடைய பாலின வன்முறை, மதவாதம் ஆகியவற்றைக் கேள்வி கேட்ட முதன்மையான சிந்தனையாளர். அவரின் ஆரம்பக் காலக் கட்டுரைகளில் அக மண முறையானது சாதியமைப்புக்கு மையம் மட்டுமல்ல. அதுவே பெண்களை, கைம்பெண்களை, மணமாகாத பெண் குழந்தைகளைக் கட்டுப்படுத்தி அதன்மூலம் சாதி அடையாளத்தைக் காக்க முயல்கிறது என அம்பேத்கர் வெளிப்படுத்தினார். அவர் எழுதுவதைப்போல, சாதியின் பிரச்சனை, ‘கூடுதலான ஆண்கள் கூட்டல் கூடுதலான பெண்கள்’ ஆகும். இந்த வகையில் பெண்களைக் கட்டுப்படுத்துவது சாதியின் மையமானது. அவரின் கருணையற்ற வாள் வீச்சாக மதவாதம் என்பது இந்து அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாகும் என்கிற வாதம் அமைந்தது. அவர் அதிர்ச்சி தரும் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறார். ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரோடு இணைத்துத் தன்னை உணர்வதில்லை. ஒரு இந்து-முஸ்லிம் கலவரம் வரும் பொழுதுதான் அவர்கள் ஒன்றாக உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த பாகுபாட்டைத் தாண்டி தங்களுடைய அடையாளத்தை நிலைப்படுத்த இந்துக்களுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறார்.

இந்திய மரபின் மையமாக அகிம்சையை நிறுத்துவது நம்முடைய வன்முறையற்ற வரலாற்றின் விவரிப்பு அல்ல. அதற்கு மாறாக, வன்முறையே வரலாற்றின் மையமாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சி அது. சமூகவியல் அறிஞர் ஆர்லாண்டோ பாட்டர்சன் பண்டைய கிரேக்கத்தில் விடுதலை சார்ந்த முறையான உரையாடல் ஏற்படக் காரணம் அந்தச் சமூகம் அடிமை முறையால் கட்டமைக்கப்பட்டு இருந்ததுதான் என்கிறார். விடுதலை போற்றப்பட்டதன் காரணம் சமூகத்தில் நிலவிய அடிமைத்தனத்தை மறுதலிக்கும் முயற்சியே ஆகும். சமூகத்தில் வன்முறை உள்ளார்ந்து நிறைந்திருந்ததன் அடையாளமே அகிம்சை சார்ந்த உரையாடல். பிராமணியம் புத்த மதத்தின் வன்முறை சார்ந்த விமர்சனத்தை உள்வாங்கியது என்றாலும் அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது. அம்பேத்கர் தீண்டாமையை மாட்டுக்கறியோடு தொடர்புபடுத்தினார். ஆதிக்க ஜாதியினர் தீண்டப்படாதோரிடம் வெளிப்படுத்தும் வினோதமான அருவருப்பை அவர்கள் மாட்டு இறைச்சி உண்பதன் மூலமே விளக்க முடியும். தீண்டப்படாதோர் மீது அவர்களுக்கிருந்த ஆழ்ந்த வெறுப்பை விளக்க அம்பேத்கர் முயன்றார். அது வெறுமனே சமத்துவமின்மை, அடக்குமுறையோடு உள்ள உறவு அல்ல. அது தூய்மைவாதத்தைக் கைப்பற்றும் பணிக்கு உதவியது. இந்த வரலாறு தெரியாதவர்கள்தான் கல்விக்கூடங்களில் மாட்டு இறைச்சி சார்ந்து நிகழும் போராட்டங்களைப் புரிந்துகொள்ளத் தவறுவர்.

நவீன உலகுக்கும், பழங்காலத்து உலகுக்குமிடையே உள்ளே பெரும் வேறுபாடாக மனிதனை மையப்படுத்தல் இருக்கிறது. நம்மை அப்படியே உறையவைக்கும் வாக்கியமாக, ‘என் சமூகம் இன்னமும் பழங்காலச் சமூகமாகவே உள்ளது, இதில் மனிதர்களைப் பற்றிய அக்கறையை விடக் கடவுள்கள் பற்றிய கவலையே முக்கியமாக உள்ளது.’ என்கிற அம்பேத்கரின் வரி உள்ளது. அது ஆறாத துன்பத்தோடு அவரின் நிலையை வெளிப்படுத்துகிறது. மனிதனைவிட வேறொன்று மேலானது என்பது மனிதத்துக்கான சாவுமணி. இந்த அவலமான நிலையை நாம் வென்றெடுக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் எல்லாக் கடவுள்களையும் அழித்து ஒழிக்கக் களம் கண்டார்.

அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதை இந்தப் பின்னணியிலேயே காண வேண்டும். மனிதத்தை உண்மைக்கான தேடலின் மையமாக, அளவுகோலாக மாற்றும் அவரின் தேடல் தீவிரமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. கடவுளை அழித்து ஒழிப்பதோடு மட்டுமல்லாமல், கண்ணுக்குப் புலப்படாதவற்றைத் தேடிச்செல்லும் எல்லா வகையான தேடலையும் மாய்த்துவிட முயலும் அளவுக்கு அந்தத் தேடல் தீவிரமானதாக இருந்தது. அம்பேத்கரின் பல்வேறு தேவைகளுக்குப் புத்த மதம் பயன்பட்டது. எந்த அறரீதியான, வரலாற்றுரீதியான மோதலைச் சுற்றி இந்திய வரலாறு கட்டமைக்கப்பட்டது அதன் மைய அச்சாகப் புத்த மதம் இருந்தது. புத்தம் பிராமணியத்தின் கயமைகளைத் தோலுரித்துக் காண்பித்த மாற்று மரபாக இருந்தது. அது பிராமணியத்தால் அடக்கப்பட்டது. சமூக எதிர்ப்பின் ஒரு நடைமுறை செயல்பாடாகப் புத்த மதத்துக்கு மாறுவது அமைந்தது. புத்த மதத்தில் விடுதலை,சமத்துவம், சமூக இணக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு புரட்சிகரமான சமூக அறமாக அதை மறு உருவாக்கம் செய்ய முனைந்தார். புத்த சங்கத்தில் இணக்கமாகக் கூட்டுறவோடு பல்வேறு மக்கள் ஒன்றிணைந்து இயங்கினார்கள். அதனால் புத்த மதத்தின் சங்கம் ஜனநாயக அமைப்புக்கான மாதிரியாகத் தோன்றியது. அறிஞர்கள் அம்பேத்கர் புத்த மதத்தைக் காரணக் காரியங்கள், கர்மா, சுயம் ஆகிய மெய்யியல் சார்ந்த கேள்விகளற்றதாகக் கட்டமைக்க முயன்றார் என்கிறார்கள். ஒருவர் சமூக அறத்தை கைக்கொள்ளவோ, அல்லது போலியான மெய்யியலுக்கு அடிமைப்பட்டோ இருக்க முடியும். இரண்டையும் ஒருங்கே உடையவராக இருக்க முடியாது என்று புத்த மதத்துக்கு மாறியதன் மூலம் அம்பேத்கர் அறிவித்தார். மதமாற்றம் மனிதத்தை மீட்கும் பெருஞ்செயலாகும்.

அம்பேத்கர் பெரும்பாலும் புத்த மதத்தைச் சமூக அறமாகவே கண்டார். புத்த சங்கங்களின் அமைப்பு முறையோடு அவர் தன்னுடைய கொள்கையான சகோதரத்துவதைக் கொண்டு போய் இணைத்தார். இது வெறும் விபத்தில்லை. புத்தர் பிராமணியத்தின் சடங்குகளை நிர்மூலம் ஆக்கினார், அம்பேத்கர் புத்த மதத்தை மெய்யியலின் எந்தத் தடயமும் இல்லாத ஒன்றாக மாற்ற முயன்றார். மெய்யியல் சார்ந்த தேடல்களில் மனிதன் எதோ ஒரு பெரிய ஆற்றலின் விளைவாக, நுண்பொருளை தேடுபவனாக மாறிவிடுவதைத் தவிர்க்க அம்பேத்கர் முனைந்தார். அவர் மீண்டும், மீண்டும் மந்திர தாயத்தைப் போலத் தன்னுடைய வழிகாட்டும் ஒளிவிளக்காகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்துவது ஆச்சரியமில்லை. அவர் இன்னமும் குறிப்பாகச் சகோதரத்துவதை உண்மையோடு ஒப்பிட்டார். ‘உண்மையும் சகோதரத்துவமும் ஒன்றே’ என்றார். எல்லாவகையான தேடல்களுக்கும் ஒரு மையப்புள்ளி உண்டு அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இந்த மதத்தை மட்டுமே அம்பேத்கர் ஏற்றுக்கொள்வார்.

உண்மையான ஜனநாயகம் எது:

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் புரட்சிகரமாக அம்பேத்கர் பற்றிக்கொள்கிறார். அதனாலேயே, அம்பேத்கர் நம் காலத்தின் பெரும் போராட்டங்களில் ஒன்றான ‘ஜனநாயகத்தின் பண்பு என்ன?’ என்பதன் மைய ஆளுமையாகத் திகழ்கிறார். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கர் அறிவார்ந்த பங்களிப்பை வழங்கினார். அதுவே அரசமைப்பு சட்டத்தின் போதாமைகள் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த தெளிவான பார்வையை நாம் கண்டுகொள்ளாமல் போகக் காரணமாக இருக்கக் கூடாது. முனைவர் ஐஸ்வரி குமார் தனது மிக முக்கியமான புத்தகமான Radical Equality: Ambedkar, Gandhi and the Risk of Democracy (Stanford University Press)-இல் புலப்படுத்துவதைப்போல அம்பேத்கர் பல வகைகளில் புரட்சிகரமானவர். அவர் ஏன் புரட்சிகரமானவர்? ஜனநாயகம் குறித்து உணர்ச்சிவசப்படாத, தயவு தாட்சண்யமில்லாத பார்வையை அவர் கொண்டிருந்தார். சிந்தனையாளர் க்ராட்வேயின் ‘அரசமைப்பு அறநெறி’ என்கிற கோட்பாட்டைத் தனதாக்கிக் கொண்ட ஒரே இந்திய சிந்தனையாளர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அந்தக் கோட்பாட்டின்படி அரசாங்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான சுயக்கட்டுப்பாடு, வெவ்வேறு கருத்துகளுக்கு மரியாதை தருவது, கட்டற்ற உரையாடல் ஆகியவற்றைக் தன்னுடைய கூறுகளாகக் கொண்டது. எனினும், அரசமைப்பு அறமானது ஜனநாயகப் பண்புகளற்ற ஆழமான நிலத்தின் மேற்பகுதி மண் மட்டும் செழிப்பாக இருப்பதைப் போன்றதே ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டார்.

அம்பேத்கரின் இந்த வாசகங்கள் எழுபது வருடங்கள் கடந்த பின்னர், இப்பொழுது நம் முன் நின்று கொண்டு நம்மைக் கடுமையாகச் சாடுவதைப்போல இருக்கிறது : ‘அரசமைப்புச் சட்டத்தின் வடிவத்தைத் துளிகூட மாற்றாமல், ஆட்சிமுறையின் வடிவத்தை மட்டும் மாற்றுவதன் மூலம் அரசமைப்பு சட்டத்தின் ஆன்மாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட, ஒவ்வாத ஆட்சிமுறையைத் தர முடியும். அதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைச் சீர்குலைக்க முடியும்.’

அதேபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான பொறுப்புமிகுந்த அரசாக இருக்க வேண்டியதில்லை. அவர், ‘காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ நூலில் எழுதுவதைப் போல, ‘வயது வந்த அனைவருக்குமான வாக்குரிமை மட்டுமே மக்களுக்கான, மக்களாலான அரசை கொண்டு வந்துவிட முடியாது.’ எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகத்தின் மிக முக்கியமான முரண்பாட்டை அவர் உணர்ந்திருந்தார்: ஆழமான சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மைகளுக்கு இடையே ஜனநாயக சமத்துவத்தை ஏற்படுத்த முயல்வது. இப்படிப்பட்ட முரண்பாடுகளின் போரை வெகுகாலத்துக்கு எந்த ஜனநாயகமும் தாங்க முடியாது.

சமூகநீதி என்பது தலித்துகளை அதிகாரப்படுத்தலில் இருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட அதிகாரப்படுத்தலுக்கு எல்லா வகையான அதிகாரங்களிலும் தலித்துகளுக்குப் பங்கு வேண்டும் என்பதிலும் அம்பேத்கர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாக இருந்தார். மற்ற அமைப்பு முறைகள் பொருளாதார வளம், ஆயுதம், கல்வி ஆகிய பரிமாணங்களில் ஒன்று, இரண்டு பரிமாணங்களில்தான் விலக்குதலை மேற்கொண்டன. ஆனால், ஜாதி அமைப்பில் மட்டும்தான் தலித்துகளைப் பொருளாதாரப் பலம், ராணுவம், கல்வி ஆகிய அனைத்து தளங்களிலும் ஒதுக்கி வைப்பது ஒரே சமயத்தில் நடைபெற்றது. அதனால் அது மிகக்கொடுமையான அடக்குமுறையாக இருந்தது.

அம்பேத்கர் கல்வியை மட்டுமே அதிகாரத்துக்கான திறப்பாகக் காணவில்லை. மஹர் ராணுவப்பிரிவை உருவாக்கி, விரிவுபடுத்தினார். பொருளாதார வளத்திலும் தலித்துகளுக்குப் பங்கு கிடைப்பதற்கான வெளிகளை அவர் கட்டமைக்க முயன்றார். இவையெல்லாம் வெறும் விபத்துக்கள் அல்ல. இவை அனைத்துக்கும் மேலாக, இவற்றை அடைய அரசு அதிகாரத்தில் பங்கு வேண்டும். தலித்துகளுக்குச் சட்டமியற்றும் சபைகளில் நியாயமான இடத்தைப் பெறுவதற்கான அவரின் வாழ்நாள் போராட்டத்தின் பின்னால் இந்தப் புரிதல் இருந்தது. திறமையானவர்கள், தகுதியானவர்கள் என்கிற கருத்தாக்கம் உண்மையில் பரம்பரை, பரம்பரையாகப் பெறப்பட்ட வாய்ப்புகளின் மீது எழுப்பப்பட்ட ஒன்று என்று முதன்முதலில் அப்பட்டமாக அம்பலப்படுத்தியவர்களில் அம்பேத்கரும் ஒருவர். திறமை என்பது தானே வருவதில்லை, அதற்குப் பின்னால் பல்வேறு காரணிகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இத்தனை காலம் கழித்தும் அழுத்திச் சொல்ல வேண்டிய நிலைமை இருப்பது அவரின் கொள்கைகளிலிருந்து நாம் எவ்வளவு தூரம் தள்ளியிருக்கிறோம் என்பதற்குச் சாட்சியாகும்.

அம்பேத்கர் தொடர்ந்து நம்மை அசைத்துப் பார்ப்பவராக இருக்கிறார். அவர் எல்லா வகையான அரசியல்கள், அவற்றோடு தொடர்புடைய பிரமைகளைக் கேள்விக்குட்படுத்துகிறார். அம்பேத்கர் பாரம்பரியம், அதிகாரம், இந்து மதம், ஜனநாயகம். எல்லாவற்றுக்கும் மேலாக மெய்யியியல் என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் நேர்மையற்ற, அபத்தமான சொற்பொழிவுகள் ஆகியவை குறித்த நம்முடைய பிரமைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகிறார். இப்பொழுது இருக்கும் சூழலில், தேசபக்தியை நீதியைவிட முக்கியத்துவப்படுத்துவது குறித்த அவரின் அவநம்பிக்கை மிகுந்த குரலுக்குச் செவிமடுத்து அவசியமாகிறது. ‘தேசியம் என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட கொள்கையும் அல்ல. ஆகவே, மற்ற எதைவிடவும் அதிமுக்கியமான ஒன்றாக தேசியத்தை மட்டும் தேர்ந்தெடுத்து கட்டாயப்படுத்தி ஏற்க வைப்பது ஏற்புடைய ஒன்று அல்ல.’

அவரின் சிந்தனைகளின் மையத்தில் பெரும் சோகத்தை ஊற்றெடுக்க வைக்கும் ஒரு கேள்வி எழுகிறது: மற்ற எவரைவிடவும் மனிதர்களின் கயமைகளை, அடக்குமுறைகளை அனுபவித்த ஒருவர் எப்படி நம்பிக்கையைக் கைவிடாதவராக இருந்தார்? எந்தப் புற ஊன்றுகோல்களையும் அவர் நம்பவில்லை, வரலாற்றின் இயங்கியலிலோ, மெய்யியலின் நிம்மதியிலோ, மதத்தின் ஆறுதல்களிலோ, போலி அறிவியலின் நிச்சயத் தன்மைகளிலோ அவர் பல நூறு ஆண்டுகாலத் துயரங்களிலிருந்து தப்பிக்கும் நம்பிக்கை இருப்பதாக நம்பாதது அவரின் அழியா தீரத்துக்குச் சான்றாகும். ஒரு பண்பில் அவர் காந்தியைப் போலவே தோன்றுகிறார்: நம்முடைய மனசாட்சியின் அறிவார்ந்த குரலைவிடச் சமூகச் செயல்பாட்டிற்குச் சிறந்த அடித்தளம் எதுவும் இல்லை.

முழுமையாகப் படிக்க: https://www.facebook.com/100000632559754/posts/2359118834119179/?app=fbl

தமிழில்: பூ.கொ.சரவணன்.

அம்பேத்கரின் கீதை


அம்பேத்கரின் கீதை

பேராசிரியர் மீரா நந்தா எழுதிய ‘அம்பேத்கரின் கீதை’ எனும் கட்டுரையின் சாரம் இங்கே தரப்படுகிறது. கீதை, பிராமணிய தத்துவ மரபுகள் குறித்து ஆழமான பார்வைகளை மீரா நந்தா முன்வைக்கிறார். நான் அம்பேத்கர் கீதையை அணுகிய விதத்தை மையப்படுத்தும் பகுதிகளை மைய இழையாகக் கொண்டு இந்த அறிமுகத்தை எழுதுகிறேன். முழுமையான கட்டுரையை வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்:

பிரதமர் மோடி உலகத் தலைவர்களுக்குப் பகவத் கீதையைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்போதைய அயலுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் அடையாளமாக அப்புனித நூல் உயர்ந்து விட்டதைக் காட்டுகிறது என்கிற ரீதியில் பேசினார் . வெவ்வேறு மத மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தியாவின் தேசிய நூலாக (ராஷ்ட்ரிய கிரந்தமாக) பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று கோரினார்கள். கீதையை அரசு நடத்தும் பள்ளிகளில் பாட நூலாக வைக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுகின்றன. இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்லவா என்கிற எதிர்ப்புகளைச் சமாளிக்க, இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்கள், இறை மறுப்பாளர்கள் ஆகியோரும் பின்பற்றக் கூடிய தத்துவ வெளிச்சங்கள், மானுட விழுமியங்கள் அந்நூலில் உண்டு என்றும் இந்துத்துவத் தலைவர்கள் பேசுகிறார்கள்.

இளவயதினருக்கு அறநெறியை போதிக்கக் கீதை உகந்த நூலா? இந்தியா அதிகாரப்பூர்வமாகப் பின்பற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் சுதந்திரவாத, ஜனநாயக பண்புகள் இதில் இருக்கிறதா? இந்தியாவிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம், பகவத் கீதை என்று இரு தேசிய நூல்கள் இருக்க முடியுமா? இந்தக் குழப்பத்தில் இருந்து தெளிவு பெற அம்பேத்கரை விட ஆகச்சிறந்த வழிகாட்டி யார் உள்ளார்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்கிய வரைவுக் குழுவின் தலைவராக மட்டுமல்லாமல், இந்து மதத்தை உதறித்தள்ளிய ‘தீண்டப்படாதவர்’ என்கிற வகையில் அம்பேத்கரின் கீதை குறித்த பார்வை முக்கியமானது.

எப்படி அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்சன் பைபிளில் உள்ள நம்ப முடியாத அற்புதங்களை எல்லாம் வெட்டித் தள்ளினாரோ அதே போல அண்ணல் அம்பேத்கர் கீதையை எப்படி அணுகினார் என்று அறிந்து கொள்வது அவசியமாகிறது. அண்ணல் அம்பேத்கர் புத்தர், ஜான் டூயி ஆகியோரை நேசித்தார். அயராமல் சாதியை அழித்தொழிக்கத் தன்னை ஒப்புக்கொடுத்து கொண்டவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுள் ஒருவர். இத்தகைய மாண்புமிக்க அம்பேத்கர் கீதையை எப்படிப் பகுப்பாய்வு செய்திருப்பார். அம்பேத்கரின் கீதை எப்படி இருக்கும்?

அம்பேத்கர் கீதையைப் பற்றித் தனியாக எந்த நூலையும் எழுதவில்லை. திலகர், அரவிந்தர், காந்தி உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் கீதைக்கு உரை எழுதினாலும் அம்பேத்கர் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடவில்லை. அவர் கீதை குறித்து என்ன எண்ணினார் என்பதைப்பற்றி ஆங்காங்கே காணக் கிடைக்கிறது. மேலும், மதங்கள் கண்மூடித்தனமாக நம்பச்சொல்பவை எப்படிச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் குறித்து அவர் ஆழமாகச் சிந்தித்தார். இவற்றைப் பகுத்தறிவை கொண்டு கூராய்வு செய்ய வேண்டும் என்கிற அம்பேத்கரின் அணுகுமுறை எந்தப் புனித நூலையும் காண்பதற்கான தெளிவான கண்ணாடி.

அம்பேத்கரின் தேடலை ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம் – நீதி. எல்லாவகையான இறை அடிப்படையிலான அதிகாரமுறைகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு, நீதி எனும் உரைகல்லில் அவற்றை உரசிப்பார்க்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். அவரின் ‘இந்து மதத்தின் தத்துவ’த்தில் தெளிவுபடுத்துவதைப் போல , இந்த நவீன உலகத்தில் எந்த மதத்தின் அறம் , நியாயம் குறித்த விழுமியங்களை நீதியின் தராசில் நிறுத்திப் பார்க்க வேண்டும். அம்பேத்கரை பொறுத்தவரை நீதி என்பதற்குள் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் பிணைந்திருக்கிறது. ‘ஒரு தனிமனிதனுக்கு நீதி வழங்காத ஒன்று சமூகத்திற்குப் பயன்மிக்கதாக இருக்க முடியாது ’ என்கிற அவரின் நீதி குறித்த அளவுகோல், சமூக இணக்கத்தைக் காப்பாற்றுவதால் வர்ணாசிரம முறை தேவை என்கிற பலரின் பார்வையைத் தூக்கி தூர எறிகிறது. அம்பேத்கரின் அறிவு வெளிச்சத்தில் கீதையை அணுகுவது அவசியமாகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு நூலை நவீன காலத்தின் அளவுகோல்களைக் கொண்டு அளவிடுவது அநியாயமாகத் தோன்றலாம். இந்தக் காலத்திற்கும் பொருந்தும் கருத்துகள் அதில் இருப்பதால் அதனைப் பாட நூலாகப் படிக்கலாம் என்கிற பார்வையை வேறெப்படி எதிர்கொள்ள முடியும்? கீதையில் சோசியலிசம், முதலாளித்துவ மேலாண்மை, அகிம்சை, அணு குண்டு என்று எல்லாமும் பொதிந்து இருக்கிறது என்றெல்லாம் கீதையின் மீது ஏற்றப்பட்டிருப்பவற்றைப் படிப்படியாகத் தோலுரிக்க இந்த அணுகுமுறை உதவும். இந்து மத நூல்களுக்கும், சாதிக்கும் தொடர்பே இல்லை என்று அமெரிக்கப் பாட நூல்களை மாற்றி எழுதும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இத்தகைய கூர்மையான தேடல் தவிர்க்க முடியாத ஒன்று.

‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் நால்வர்ண முறையானது பிளாட்டோவின் கருத்தாக்கத்துக்கு வெகு நெருக்கமானதாக இருக்கிறது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:

‘பிளாட்டோவை பொறுத்தவரை இயற்கையாகவே மனிதர்கள் மூன்று வகுப்புகளில் அடங்குவர். சில தனிநபர்களை வெறும் வெட்கைகளே செலுத்தியதாகப் பிளாட்டோ கருதினார். அவர்கள் உழைக்கும், வர்த்தம் செய்யும் வர்க்கங்கள் என்று வகைப்படுத்தினார். பிறர்…தீரமிகுந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களே போர்களில் இருந்து காப்பவர்களாக, நாட்டில் அமைதியை நிலைநாட்டுபவர்களாகப் பிளாட்டோ அடையாளப்படுத்தினார். உலகத்து விஷயங்களுக்குப் பின்னுள்ள அடிப்படைக் காரணங்களை உள்வாங்கிக் கொள்ளும் வேறு சிலருக்கு இருந்தது. இவர்களை மக்களுக்கு நீதிபரிபாலனம் புரிகிறவர்கள் என்று பிளாட்டோ அறிவித்தார்.’

இயற்கையாகவே என்கிற பதம் கருத்தில் நிறுத்த வேண்டிய குறிச்சொல். சிந்தனையாளர் கண்டோர்செட் வார்த்தைகளில் சொல்வது என்றால், கீதையும், பிளாட்டோவும், ‘அரசியல் ஏற்றத்தாழ்வு எனும் குற்றத்தை புரிகையில் இயற்கையைத் தங்களுடைய கூட்டாளி ஆக்கிக்கொள்கிறார்கள்.’ இந்த ஏற்றத்தாழ்வுகளை இயற்கையானவை என்று நிறுவ பிளாட்டோவும், பகவான் கிருஷ்ணனும் “கண்ணியமான பொய்” ஒன்று அவிழ்த்து விடுகிறார்கள். பிளாட்டோ உலோகங்களைக் கொண்டு கதை அளக்கிறார். கிருஷ்ணர் குணம், கர்மா, மறுபிறப்பு கருதுகோளுக்குத் தன்னுடைய ஆசிகளை வழங்குகிறார். அதென்ன பிளாட்டோவின் பொய்?

சாக்ரடீஸ் மனித ஆன்மா மூன்று பகுதிகளைக் கொண்டது என்றார். உணவுக்கும், காமத்துக்கும் அலைந்து திரியும் கீழான வேட்கைகள் கொண்டு திரியும் பகுதி ஒன்று என்றால் மதிப்பும், அதிகாரமும் நாடும் பகுதி மற்றொன்று. இவற்றுக்கு அடுத்தபடியாக அறிவை நாடும் ‘தத்துவ அரசர்கள்’ மூன்றாவது பகுதி. வேட்கை மிக்கவர்கள் மன்னர்கள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகக் கல்வியறிவு பிறப்போடு தொடர்புடைய ஒன்று எனச் சாக்ரடீஸ் வரையறுக்கிறார். இதனை எப்படி உழைப்பவர்களை நம்ப வைப்பது? அவர்கள் தங்கள் வகுப்புகளைத் தாண்டி வேறெங்கும் திருமண உறவு கொள்ளாமல் எப்படித் தடுப்பது. பிளாட்டோ தன்னுடைய ‘கண்ணியமான பொய்யை’ இங்குத் தான் சொல்கிறார். இறைவன் எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மண்ணில் இருந்தே படைத்தார். என்ன சிலரை தங்கத்தைக் கலந்தும், சிலரை இரும்பு, சிலரை பித்தளை கலந்தும் படைத்து விட்டார். ஒவ்வொருவரும் இறைவனின் படைப்பு என்றாலும், பரிசுத்தமான உலோகங்களினால் ஆனவர்கள் உயர்குடியில் பிறப்பார்கள், அவர்களே ஆளவேண்டும் என்றது அந்தப் பொய். கடவுள், உங்கள் வாழ்க்கை நிலைக்கு நீங்கள் எப்படிப்பட்ட பண்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்று படைத்தாரோ அப்படி மட்டும்தான் இருக்க இயலும்.

அப்படியே பிளாட்டோவின் மூன்று உலோகங்கள் கதைக்குப் பதிலாகக் கீதையின் மூன்று குணங்கள் என்பதைப் போடுங்கள். இறைவன் உலோகத்தைக் கலக்கிற கதைக்குப் பதிலாகக் கர்மா, மறுபிறப்பு எனும் ‘இயற்கையான’ நிகழ்வுகளை நிரப்பிக் கொள்ளுங்கள். இது தான் கீதை கட்டவிழ்த்து விடும் ‘கண்ணியமான பொய்’. தன்னுடைய பொய்யை யாராவது நம்புவார்களா என்று பிளாட்டோ வெளிப்படையாகக் கவலைப்பட்டார். பகவத் கீதையைக் கிருஷ்ணர் தானே படைத்ததாக அறிவிக்கிறார். பிளாட்டோவின் சிந்தனை செயல்பாட்டிற்கு வரவில்லை, ஆனால், கீதையின் சாரம் இன்றும் பொதுப் புத்தியில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

அம்பேத்கரின் நிறைவடையாத ‘புரட்சி மற்றும் எதிர்ப்புரட்சி’யில் ‘கீதை ஒரு மத நூல் அல்ல. அது தத்துவ விசாரணையிலும் ஈடுபடவில்லை. மதத்தின் கண்மூடித்தனமான நம்பிக்கைகளைத் தத்துவ அடிப்படைகளைக் கொண்டு நியாயப்படுத்தவே அது முயல்கிறது’ என்கிறார். நால்வர்ண படிநிலை என்கிற அடக்குமுறை அடுக்குநிலையை மூன்று குணங்கள் என்கிற தத்துவ அடிப்படைகளைக் கொண்டு காப்பாற்ற முயல்வது அம்பேத்கரை கவலை கொள்ள வைத்தது.

கீதை ஒரு வர்ணத்தில் பிறந்தவர் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என்கிறது. பிறரின் தொழிலை புரிய முயல்வதைவிட அதுவே மேம்பட்டது என்கிறது. எவ்வளவு மோசமான தொழிலாக இருந்தாலும் தன்னுடைய பிறப்பிற்கு விதிக்கப்பட்ட தொழிலை ஒருவர் செய்வதால் எந்தப் பாவமும் அவரை அண்டுவதில்லை என்கிறது கீதை. உயரிய குணங்களைப் பிராமணர்களுக்கு என்றும், அஞ்சாமல் போரிடும் பண்பு சத்திரியர்களுக்கு உரியது என்றும் கூறிவிட்டு, வர்த்தகத்தில் ஈடுபடுவது வைசியர்களின் பணி, எல்லாருக்கும் ஊழியம் செய்வது சூத்திரர்களின் அடிப்படை பண்பு என்று சொல்லிச் செல்கிறது.

அம்பேத்கர் தன்னுடைய ‘இந்து மதத்தின் தத்துவ’ த்தில் மனுஸ்மிருதியை யாரும் படிப்பதில்லை, அதை யாரும் தூக்கிப்பிடிப்பதில்லை என்று கருதுபவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறார். அனைவரும் படித்து, பின்பற்றும் பகவத் கீதை ‘மனுஸ்மிருதியின் மறுவடிவம்’ மட்டுமே. வேதம், மனுஸ்மிருதி, கீதை மூன்றும் ஒரே மாதிரி நெய்யப்பட்டு இருக்கிறது. அவற்றை ஒரே இழை இணைப்பதோடு, அவை ஒரே துணியைக் கொண்டு நெய்யப்பட்டிருக்கின்றன என்கிறார் அம்பேத்கர்.

உன் வர்ணத்துக்கு விதிக்கப்பட்ட செயலானது நியாயமற்றது என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும் என்கிற கீதையின் கருத்து அப்படியே மனுஸ்மிருதியிலும் காணப்படுகிறது. ஒன்று இன்னொன்றை சார்ந்தே வாழ்கிறது என்கிற அளவுக்கு அவற்றின் கருத்துகள் தொடர்புடையவையாக உள்ளன. கீதையின் ‘கண்ணியமான பொய்யை’ நோக்கி தன்னுடைய கவனத்தைத் திருப்புகிறார் அம்பேத்கர். துளி கூட நியாயமற்ற ஒரு செயலை தன்னுடைய வர்ணத்திற்கு விதிக்கப்பட்ட ஒன்று என்பதற்காக ஒருவன் செய்தால் மட்டுமே அவன் மோட்சம் அடைவான் என்று ஏன் கீதை சொல்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். ஒருவன் தன்னைக் கிருஷ்ணரின் மீதான பக்தியில் தோய்த்துக் கொண்டால் அவனுக்கு மோட்சம் கிட்டாது. இத்தனைக்கும் ‘எல்லா உயிர்களும் நானே, அன்பில் திளைத்த பக்தியோடு என்னோடு கலப்பவர்களில் நானும், என்னில் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்’ என்று கண்ணன் கீதையில் சொல்கிறாரே? பின் ஏன் கிருஷ்ணர் ‘ஒரு சூத்திரன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும், தன்னுடைய வர்ணாசிரம கடமையை மீறி, உயர் வர்ணத்தினருக்கு அடிமை வேலைகளைச் செய்து வரத் தவறினால் அவனுக்கு மோட்சம் இல்லை” என்கிறார்? என்று ‘கிருஷ்ணனும், கீதையும்’ என்கிற தன்னுடைய படைப்பில் அம்பேத்கர் கேட்கிறார்.

‘நானே நான்கு வர்ணங்களையும் குணம், கர்மாவோடு படைத்தேன். நானே அவற்றைக் கொண்டு செயல் நிகழ்த்துபவன். எனினும்,மாற்றமில்லாத நான் எதையும் செய்யாமல் வாளாயிருக்கிறேன். ‘ என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார். கீதையைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தக் குணம் என்பதைப் பண்புநலன்கள் என்றும், கர்மா என்பதை உங்கள் செயல்கள் என்றும் திரித்துப் பொருள் கொண்டார்கள். கீதையிலோ பிற புனித நூல்களிலோ சாதி என்கிற சொல்லே காணப்படவில்லை, வர்ணம் மட்டும் இருப்பதால் காந்தி முதலியோர் ‘சாதிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பில்லை’ என்று ஒரே போடாகப் போட்டார்கள். ஒரு காலத்தில் எல்லா வர்ணங்களும் நன்மை பயப்பதாக, நியாயமானதாக, சமமிக்கதாக இருந்தது, அப்படி விதிக்கப்பட்டவற்றை உளமார செய்வது இறைவன் முன்பு சம மதிப்பை வழங்கும். ஒரு காலத்தில் மனிதர்களிடையேயும் அவை அனைத்தும் சமமாக மதிக்கப்பட்டன என்றெல்லாம் காந்தி கருதினார்.

அதாவது, கீதையை ஒழுங்காகப் படித்தால் யாரும் பிறப்பால் பிராமணர், சூத்திரர் கிடையாது,. அவர்களின் குணங்களும், செயல்களுமே அவர்களை வெவ்வேறு வர்ணங்களைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தின. உண்மையான வர்ணாசிரம முறையில் எல்லா வர்ணங்களும் சமமான மதிப்பும், இடமும் பெற்றிருந்தன என்றும் இவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்கள். இன்னமும் எளிமையாகச் சொல்வது என்றால், கீதையில் தகுதியின் அடிப்படையிலேயே வர்ணங்கள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் அவை இஸ்லாமியர்கள், பௌத்தர்கள், ஆங்கிலேயர்கள், மேற்கத்திய நவீனத்துவத்தைப் பின்பற்றியவர்கள் செய்த குழப்பங்களால் தான் இன்றைக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் கீதையை ஒழுங்காகப் படிக்காமல், அல்லது வசதிக்கு ஏற்ப பொருள் கொள்வதால் நிகழ்கிற குழப்பங்கள் அன்றி வேறொன்றுமில்லை. கீதை மீண்டும், மீண்டும் ஆன்மாவை தவிர மற்ற அனைத்தும் மூன்று குணங்களால் ஆனது என்று வலியுறுத்துகிறது. குணங்களே எல்லா வேலையையும் செய்யும், மனிதன் அதன்முன்பு சக்தியற்றவன் என்றே கீதை கற்பிக்கிறது. அர்ஜுனனின் குணம் அவனைப் போரிட வைக்கும் என்று அது அறிவிக்கிறது.

கீதையின் இறுதி அத்தியாயத்தில் மூன்று குணங்கள் எல்லா மனிதர்களிடம் காணப்பட்டாலும் குறிப்பிட்ட குணம் அதீதமாகக் காணப்படுவதைக் கொண்டு மனிதர்களைக் கிருஷ்ணன் வகைப்படுத்துகிறார். உயர்ந்த சத்வ குணம் கொண்ட பிராமணர்கள் அறிவை நாடி இயங்குவர், ரஜோகுணம் கொண்டவர்கள் அதிகார வேட்கைமிக்கச் சத்திரியர்கள், தாமச குணங்கள் ஓரளவிற்கு இருப்பவர்கள் இழிவான தொழில்களைச் செய்யும் நிலைக்கு உழைப்பவர்களைத் தள்ளுகிறது, தாமச குணம் மிகுந்தவர்கள் மேற்சொன்ன மூன்று வர்ணங்களுக்குச் சேவையாற்றிய காலந்தள்ள வேண்டிய சூத்திரர்கள் என்கிறது.

எந்தக் குணம் அதீதமாக இருக்கிறதோ அதுவும் கர்மாவோடு கட்டப்பட்ட ஒன்று என்கிறது கீதை. எங்கே பிறக்க வேண்டும், என்ன வர்ணத்தில் பிறக்க வேண்டும் என்பதெல்லாம் இறைவன் தீர்மானித்தது அதனை மாற்ற இறைபக்தியை நாடுவது என்றெல்லாம் முயற்சிக்கலாம். ஆனால், பலனை எதிர்பார்க்கக் கூடாது. உங்களுடைய சத்வ குணத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம், அடுத்தடுத்த பிறப்புகளுக்குக் காத்திருந்து மோட்சம் நோக்கிய பாதையை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பிளாட்டோ சொன்னதிலாவது கடவுள் தான் யார் தங்கம், இரும்பு என்பதைத் தீர்மானிக்கிறார். இங்கே ஒரு வர்ணத்தில் பிறப்பது உன்னுடைய தலையெழுத்து. அதற்கு உன்னுடைய கடந்த காலக் கர்மாவே காரணம் என்று கீதை கூடுதலாகக் கதை அளந்தது. கர்மாப்படியே வெவ்வேறு வர்ணங்களில் இறைவனின் ஆதரவோடு பிறக்கிறோம் என்பது இந்திய பொதுப் புத்தியில் பதிந்திருந்திருக்கிறது. என்றாலும், காந்தி முதலிய இந்து மதச் சிந்தனையாளர்கள் அப்பட்டமாகப் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தை கட்டிக் காக்கும் கீதையின் குரலை வேறு வகைகளில் பொருள் கொண்டு பூசி மெழுகுகிறார்கள்.

சாதி என்பது இந்து மதத்தின் அடிப்படை கிடையாது. அத்தகைய பாகுபாடு எதுவும் அதில் கிடையாது, எல்லாரின் உள்ளேயும் இறைத்தன்மை பொதிந்திருக்கிறது என்பவர்களுக்கு அம்பேத்கரின் எளிமையான பதில் ஒன்று ‘சாதியை அழித்தொழிக்கும் வழியில்’ கிடைக்கிறது:

‘இத்தகைய சச்சரவுகளில் சரண் புகுந்து கொள்வதில் எப்பயனும் இல்லை. மக்கள் எதை நம்ப வேண்டும் என்று சொல்லித் தரப்பட்டு இருக்கிறதோ அப்படியெல்லாம் சாஸ்திரங்கள் சொல்லவில்லை என்பதால் எந்தப் பயனும் இல்லை…மக்கள் எப்படிச் சாஸ்திரங்களைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது…. நாம் சாஸ்திரங்களைப் புறந்தள்ளுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் அதிகாரத்தையும் மறுதலிக்க வேண்டும்.’ என்று அறிவிக்கிறார்.

கீதை தகுதிக்கும், செயல்களுக்குமே மரியாதை செலுத்தச் சொல்கிறது என்று மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், கடந்த பிறப்புகளின் கர்மவினைகள் அடுத்தடுத்த பிறப்புகளுக்கும் தொடர்கிறது என்று சாதாரண இந்துக்கள் நம்புவதை நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நயவஞ்சகமும், கொடூரமும் மிக்கப் பாகுபாடுகள், அடுக்குநிலைக்கான அதிகாரத்தை வழங்கும் மெய்யியலையே மறுதலிக்க வேண்டும்.

அம்பேத்கர் ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’யில் ‘பகுத்தறிவும், அறநெறியும் ஒரு சீர்திருத்தவாதியின் அம்பறாத்தூணியில் உள்ள ஆகச்சிறந்த ஆயுதங்கள். இவற்றை அவன் எடுக்க விடாமல் தடுப்பது என்பது அவனைச் செயல்படவிடாமல் கட்டிப்போடுவதே ஆகும்.’ தன்னுடைய வாழ்நாள் முழுக்கச் சாதியை நியாயப்படுத்தும் தங்களுடைய நம்பிக்கைகளைக் கேள்வி கேட்குமாறு அம்பேத்கர் அயராது வலியுறுத்தினார். அவற்றுக்கு அடிப்படையாக அமைந்தவற்றை நிராகரித்துவிட்டு, தங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிராக இயங்கும்படி அறைகூவல் விடுத்தார்.

அம்பேத்கர் தன்னுடைய பெரும் உழைப்பின் மூலம், இந்து மதத்தின் அதிகாரப்பூர்வ புனித நூல்கள் கேள்வி கேட்பதை பெரும் குற்றமாக ஆக்கி வைத்திருப்பதைக் கவனப்படுத்துகிறார். அவருடைய ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் ‘மனுஸ்மிருதி மூன்றைக் கொண்டு மட்டுமே சமூகத்தில் நிலவிவரும் நம்பிக்கைகளைச் சீர்தூக்கி பார்க்க அனுமதிக்கிறது. அவற்றைக் கொண்டு மட்டுமே நடைமுறைகளையும் ஆராய வேண்டும் என்று மனுநூல் சொல்கிறது. அவை முறையே சுருதி (வேதத்தில் தென்படுவது), ஸ்மிருதி (நினைவுகளால் கடத்தப்படும் மரபு), காலங்காலமாக எது நன்னடத்தை என்று சமூகத்தால் கருதப்பட்டுக் கடத்தப்படுவது. தர்க்கம், கேள்விகளால் நம்பிக்கைகள், நடைமுறைகளை எதிர்கொள்பவர்கள் ‘நாத்திகர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.’ என்பதை அடுக்கிச் செல்கிறார்

மனு எழுதிக்கொடுத்ததைக் கீதை அப்படியே ஒப்பிக்கிறது. சந்தேகப்படுபவர்கள் அசுர வயிற்றில் பிறப்பார்கள் என்று அது எச்சரிக்கிறது. கீதையின் பதினாறாவது அத்தியாயத்தில் கண்ணன் சொல்வதைப் பாருங்கள். தன்னை நம்பாதவர்களைப் பேராசை பிடித்தவர்கள், கபடதாரிகள், எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றெல்லாம் முத்திரை குத்துகிறார். இது பண்டைய காலத்தின் லோகயாதவாதிகள் உள்ளிட்ட நாத்திகர்களைக் குறிக்கப் பயன்படும் அதே சொற்கள். இவர்கள் அசுர வயிற்றில் பிறப்பதோடு, இழிந்த இடத்தையே சென்று சேர்வார்கள் என்று கீதை சொல்கிறது. இதில் இருந்து தப்பிக்க ‘நூல்களே (சாஸ்திரங்கள்) எது சரி, தவறு என உனக்கு வழிகாட்டட்டும். அந்த நூல்கள் நீ எதைச் செய்ய வேண்டும் என்று வகுத்தளித்து இருக்கிறதோ அந்தத் தொழில்களை நெறிபிறழாமல் நீ செய்ய வேண்டும்’ என்று வழிகாட்டுகிறது கீதை.

அம்பேத்கர் ‘மனுஸ்ம்ருதியின் மறுவடிவம்’ என்று கீதையை விளிப்பது எவ்வளவு கச்சிதமானது என்பதை மேற்சொன்னவை தெளிவுபடுத்துகிறது. கேள்விகள் கேட்பவர்களைக் கண்டிக்கிற வகையில் மனுவின் குரலை மட்டும் கீதை எதிரொலிக்கவில்லை. கூடுதலாக, அது பகுத்தறிவாளர்கள், லோகாயதாவதிகளை நாத்திகர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கும் ராமாயண, மகாபாரத மொழியையும் கொண்டிருக்கிறது. ராமாயணத்தில் ஜாபாலியும், மகாபாரதத்தில் சார்வாகனும் அதிகாரபீடங்களை நோக்கி கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார்கள். அதனால் அவர்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள்.

கிருஷ்ணனும், மனுவும் இன்னொரு பாடம் எடுக்கிறார்கள். இது கயமையின் உச்சம் என்று அம்பேத்கர் எண்ணினார். இருவருமே அறிவையும், ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்கிறார்கள். பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்யும் கர்மத்தை பற்றி அர்ஜூனனுக்குப் போதித்த பின்பு, பலனை எதிர்பார்த்து உழைப்பவர்களுக்கு இந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறார் கிருஷ்ணர். மனு இன்னமும் அப்பட்டமாக, பல முறை வேதம் பயின்றவர்கள் அதனைப் பிறருக்குக் கற்றுத்தரக்கூடாது என்று தடை விதிக்கிறான்.

ஏன் இத்தகைய தடை ? அம்பேத்கர், ‘கிருஷ்ணனும், கீதையும்’ எனும் தன்னுடைய எழுத்தில், எதிர்-பரப்புரை எதுவும் நிகழாமல் தடுக்கவே இந்தத் தடை என்கிறார். இந்தச் சடங்குகள், விதிகளுக்கு எதிரான கிளர்ச்சி நிகழாமல் தடுக்கவே இந்த ஏற்பாடு. ஆனால், இவற்றின் ‘அறிவு வெளிச்சத்தை’ பகிர்ந்து கொள்ள மறுக்கும் மனப்பான்மையைக் கண்டு பொங்கி எழுகிறார். இந்து சமூக அமைப்பின் பெருங்குற்றத்தை இப்படித் தோலுரிக்கிறார், ‘வேறெந்த சமூகமும் தன்னுடைய பெரும்பான்மை மக்கள் மத நூல்களைப் படிக்கக் கூடாது என்று தடை விதிக்கும் குற்றத்தை புரியவில்லை. வேறெந்த சமூகமும் தன்னுடைய பெரும்பான்மை மக்கள் கல்வி கற்பதை தடுக்கும் குற்றத்தில் ஈடுபடவில்லை. கடைக்கோடி மனிதன் கல்வி கற்க முயல்வதை வேறெந்த சமூகமும் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கவில்லை..’ .

அரசியலமைப்பை ஆக்கிய அம்பேத்கர் ‘ மக்களின் மனங்கள் இதயங்களில் புரட்சி வராமல் சுதந்திரவாத,ஜனநாயகத் தன்மை கொண்ட அரசியலமைப்பு சட்டமானது ‘சாணக் குவியல்களின் மீது கோபுரங்களைக் கட்டுவதைப் போல’ என்று தெளிவாக அறிந்திருந்தார். ஜான் டூயின் மாணவரான அம்பேத்கர் சமூகப் புரட்சியை வென்றெடுக்க, ‘எந்த நம்பிக்கையையும் அதனை ஆதரிக்கும் அடிப்படைகளையும் முனைப்பாக, இடையறாது, கவனமாகக் கேள்விக்கு உட்படுத்திச் சிந்திப்பது’ முதன்மையானது என்று கருதினார்.

முடிவாக அம்பேத்கரின் கீதை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும். கீதையின் ஆன்மாவான சதுர்வர்ணம் நீதியுணர்வு மிக்கதா என்கிற சோதனையில் தேறாது. அதன் தத்துவ அடிப்படைகளான குணமும், கர்மாவும் அம்பேத்கரின் பகுத்தறிவு சோதனையில் தோற்றுப்போகும். அதிகபட்சமாக, கிருஷ்ணனின் கீதா உபதேசத்தில் காணப்படும் பௌத்த பண்புகளான நிர்வாணம்,மைத்ரி (அன்பின் வழிப்பட்ட இரக்கம்) ஆகியவற்றை மட்டும் ஏற்றுகொண்டிருப்பார். அதனையும் கூட நீதி, பகுத்தறிவு ஆகியவற்றில் நிறுத்தி பார்த்தே அம்பேத்கர் ஏற்றிருப்பார். இந்த அணுகுமுறையே அவரின் புத்தரும், தம்மமும் படைப்பில் காணப்படுகிறது. பிராமணர்களின் ஆதிக்கத்திற்குச் சவால்விட்ட பௌத்தத்துக்கு எதிரான எதிர்-புரட்சிகளை அணிதிரட்டிய ஒன்றாகக் கீதையை அம்பேத்கர் கருதினார். இப்போது கீதையை தேசிய நூலாக்க முயல்வது, அம்பேத்கரின் நீதி, பகுத்தறிவு மிக்க அரசியலமைப்புச் சட்டம் மேல் சாதி இந்து மேலாதிக்கத்துக்கு விடும் சவாலை எதிர்கொள்ளும் நம் கால எதிர்-புரட்சி என்று கருத வேண்டியிருக்கிறது.

தமிழில் : பூ.கொ.சரவணன்

மொழிக்கொல்லியாக இந்தி மாறிய வரலாறு


 

mozhikolli1
டெல்லி பல்கலையின் பீகாரிக்கள் இடையே தங்களைத் தரம் தாழ்த்திக் கொள்ளும் ஒரு நகைச்சுவை புழக்கத்தில் இருந்தது. டெல்லிவாலா ஒருவர் தன்னுடன் பயிலும் பீகாரியிடம், “ஏண்டா உன்னோட காலெல்லாம் மண்ணாகி கிடக்கு?” என்று கேட்டால், “நான் நடந்து போய்கிட்டே இருந்தேன். அப்ப அப்படியே காடோவுல (சேற்றுக்குட்டை) விழுந்துட்டேன்” என்பார். காடோ என்பது போஜ்புரி, மகதி மொழிகளில் சேற்றைக் குறிக்கப் பயன்படும் பதம். சேற்றைக் குறிக்க இந்தியில் பயன்படுத்தப்படும் கீச்சட் என்கிற வார்த்தையைப் பீகாரி பயன்படுத்துவது இல்லை. இதிலென்ன சிரிக்க இருக்கிறது என்று தோன்றுகிறதா? ஒரு பீகாரி என்ன தான் தன்னுடைய பீகாரின் பட்டிக்காட்டுத்தனத்தை நவீன ஆடைகளை அணிந்து மறைக்க முயன்றாலும், அவருடைய மொழி அவரை அடையாளம் காட்டிவிடுகிறது.
இந்தக் கேலி, கிண்டல்களைத் தாண்டி மேற்குறிப்பிட்ட உரையாடல் இந்தி பரவலாகப் புழங்கி வரும் பகுதிகளில் படிப்படியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் வீரியமிக்கக் கலாசார மாற்றத்தை கண்முன் நிறுத்துகிறது. இந்தி அல்லது சர்க்காரி இந்தி (இதைக்குறித்துப் பின்னர்க் காண்போம்) விந்திய மலைக்கு வடக்கே வாழும் பலகோடி மக்கள் பேசும் பல்வேறு மொழிகளை நிதானமாக அரித்து, அழித்துக் கொண்டிருக்கிறது. டெல்லியில் வாழும் ஒருவரின் கண்முன் பஞ்சாபி, ஹரியான்வி, உருது மொழிகள் இறந்து கொண்டிருக்கலாம். என்னுடைய பகுதியில் மகதி (நாங்கள் மகஹி என்று அழைப்போம்) இந்தியால் அழிந்து கொண்டிருக்கிறது. மகதியின் பெயர் சுட்டுகிறபடி அம்மொழி மகதப்பகுதியோடு தொடர்புடையது. அசோகர் முதலிய வலிமைபொருந்திய மன்னர்கள் கோலோச்சிய பகுதியே மகதம்.
என்னுடைய குடும்பத்தின் அடுத்தத் தலைமுறை வாண்டுகள் டெல்லியிலும், பெருநகரங்களிலும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களால் மகத மொழியில் தங்குதடையின்றிப் பேச முடியாது. இரு தலைமுறைகளுக்கு முன்புவரை என் குடும்பத்தின் உரையாடல் மொழியாக மகதியே இருந்தது.
இந்தி அறிவுலகத்தில் போஜ்புரி, மகதி முதலிய மொழிகளை வளர்த்தெடுப்பது இந்தியின் நிலையைப் பலவீனப்படுத்திவிடுமா என்கிற வகையிலான காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட வேர்களை இழந்து அலைபாயும் நிலையால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. மேற்சொன்ன மொழிகள் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒரு எடுத்துகாட்டுப் போதுமானதாக இருக்கும். சாத் பீகார், கிழக்கு உத்திர பிரதேசத்தின் மிக முக்கியமான மதப்பண்டிகையாகும். இப்பகுதிகளில் இருந்து டெல்லி, மும்பை முதலிய பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பெருகியவண்ணம் உள்ளது. இந்நிலையில் சாத் விழாவிற்குப் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது பெரும் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. சடங்குகள் மட்டுமல்லாமல், சாத் விழாவில் நாட்டுப்புற பாடல்களும் இடம்பிடிக்கின்றன.
நான் இதுவரையில் இந்தி மொழியில் எழுதப்பட்ட ஒரே ஒரு சாத் பாடலைக்கூடக் கேள்விப்பட்டதில்லை. அவை மகதி, மைதிலி, போஜ்புரி மொழிகளிலேயே பாடப்படுகின்றன. டெல்லியில் வாழ்கிற பெரும்பாலான இந்தி பேசும் மக்களால் இந்தப் பாடல்களின் பெரும்பகுதிகளைப் புரிந்து, பொருள்கொள்ள முடியாது. இப்பாடல்களை YouTube-ல் ஆர்வமுள்ளவர்கள் கேட்டுப் பார்க்கலாம்.

கேரளாவிற்கு வெளியே வளர்கிற பதின்பருவத்தில் இருக்கும் மலையாள பிள்ளை ஒருவனுக்கு மலையாளம் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். எப்போது கேரளாவிற்கு வந்தாலும் அங்கு நிகழும் எந்தச் சமூக, கலாசார விழாவையும் அவனால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இப்படித் தன்னுடைய சொந்த மண்ணை விட்டு வெளியேறி வாழும் பீகாரி ஊர் திரும்புகையில் சாத் பாடல்கள் புரியாமல் விழிக்கவே செய்வான். அந்தக்காலம் அழகாகத்தான் இருந்தது வகையிலான இத்தகைய மலரும் நினைவுகள் மட்டுமே அழியவில்லை. இந்த மொழிகளைப் பல லட்சம் மக்கள் இன்னமும் தங்களின் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காடோ (சேறு) என்பதைக் கீச்சட்டை குறிக்கிறது என்பதை அறியாத ஒருவரோடு இயல்பாக அவர்களால் பேச முடியாது. சுருக்கமாக, தன்னுடைய மண்ணைவிட்டு வெளியூரில் வாழ்ந்து வரும் பீகாரி இளைஞன் ஊர் திரும்புகையில் தாய்மண்ணில் தாய்மொழியின்றித் தவிப்பான்.

வட இந்தியாவின் முதன்மையான தொடர்பு மொழியாக இந்தி இருப்பதையும், மேற்சொன்ன தவிப்பையும் எப்படிப் புரிந்து கொள்வது? இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் எந்தெந்த மொழிகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளப் பெருமளவில் உதவுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்களின் தாய்மொழியைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்துகிறது. தாய்மொழி என்பது ஒரு நபரின் குழந்தைப்பருவத்தில் தாயுடன் உரையாடிய மொழியைக் குறிக்கிறது. ஒருவேளை அவரின் தாய் இறந்திருந்தால் என்ன செய்வது? அப்போதும் தாய்மொழி என்பது வீட்டிற்குள் பேசிக்கொள்ளும் மொழி தானே அன்றி, பயிற்றுமொழியோ, சமூக உரையாடலுக

்குப் பயன்படும் மொழியோ அல்ல.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இருபத்தி இரண்டு மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தாய்மொழியைக் கணக்கெடுக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு (பொதுவெளியில் இருக்கும் சமீபத்திய மொழிவாரி கணக்கெடுப்பு இதுவே) ஒவ்வொரு மொழியின் உட்பிரிவுகளைப் பட்டியல் போடுகிறது. இந்தி என்கிற பெரும் பகுப்பிற்குள் இந்தி உள்ளிட்ட 49 தாய்மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பகுப்பின் கீழ் 42.2 கோடி மக்களில் 61% மக்களின் தாய்மொழியே இந்தியாகும். முதல் ஐந்து இடங்களில் இடம்பெறும் போஜ்புரி, மகதி மொழிகளை முறையே 7.8%, 3.3% மக்கள் பேசுகிறார்கள்.

பீகாரில் மேற்சொன்ன நிலைமை அப்படியே தலைகீழாக மாறுகிறது. கால்வாசிபேர் கூட இந்தியை தங்களின் தாய்மொழியாகப் பதிவு செய்யவில்லை. போஜ்புரி, மகதி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்கள் முறையே 33.6% , 20% ஆவர். எண்ணிக்கையாகச் சொல்ல வேண்டுமென்றால், முறையே இரண்டு கோடிக்கும், 1.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இம்மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். கூட்டாக இவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் இரண்டரை கோடி மக்கள் தொகையை விட அதிகமாகும்.

graph

Graph: Mint
Expand
தன்னுடைய சொந்த நிலத்திலேயே இந்தி எத்தகைய கலாசார வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பதற்கு மேற்குறிப்பிட்ட எண்கள் கட்டியம் கூறுகின்றன. இந்தி மொழியை, இந்தி பேசாத மாநிலங்களின் மீது திணிப்பதால் உண்டாகும் கேடுகள் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதி குவித்துள்ளார்கள். ஆனால், மகதி, போஜ்புரி முதலிய மொழிகளை அரித்து அழிக்கும் இந்தியின் அச்சம் தரும் மேலாதிக்கச் செயல்திட்டம் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. இந்தி-இந்து-இந்துஸ்தான் என்கிற வலதுசாரி இந்து அரசியலின் இன்னொரு பண்பு தானோ இது? இந்தி தேசியத்தின் வரலாற்றைச் சற்றே திரும்பி பார்ப்பது பயன்தரக்கூடியதாக இருக்கும்.
Orient BlackSwan பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அலோக் ராய் எழுதிய இந்தி தேசியம் என்கிற நூல் இந்தி தேசியத்தின் ஆழ, அகலங்களைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான நல்ல அறிமுகம் ஆகும். அலோக் ராய் அலாகாபாத், டெல்லி பல்கலைக்கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

bhasha1-kIKF--414x621@LiveMint

உருது, இந்தி மொழிகளில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளரான முன்ஷி பிரேம்சந்தின் பேரன் அலோக் ராய். இந்நூல், இன்றைக்கு நாம் அறியும் இந்தி எப்படி இத்தனை ஆதிக்கம் மிக்கதாக உருவெடுத்தது என்பதை விரித்துச் சொல்கிறது. பிரிட்டிஷ் வருகைக்கு முந்தைய ஆட்சிக்காலத்தில் பாரசீகமே இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரிவடிவமாக இருந்தது. இது மேட்டுக்குடி அல்லாதவர்களைப் பெருமளவில் பாதித்தது. குறிப்பாகப் பாரசீக வரிவடிவத்தை அறியாத இந்துக்கள் இயல்பாகவே அவதிக்கு ஆளானார்கள். வட மேற்கு மாகாணங்கள், அவாத் பகுதிகளின் லெப்டினன்ட் கவர்னராகத் திகழ்ந்த சர் அந்தோணி மெக்டொன்னெல் 1900-ல் தேவநாகரி வரிவடிவத்தை நீதிமன்றங்களில் பயன்படுத்த அனுமதி நல்கினார். இந்தி தேவநாகரி வரிவடிவத்திலேயே எழுதப்பட்டு வந்தது. இந்த முடிவுக்குப் பின்னால் இரு காரணிகள் இருந்ததாக அலோக் ராய் கருதுகிறார். ஆட்சியதிகார மொழி பொது மக்களுக்குப் புரியும் வண்ணம் இருக்க வேண்டும். மேலும், 1857 கிளர்ச்சியில் இஸ்லாமிய மேட்டுக்குடியினர் முக்கியப் பங்காற்றினார்கள். பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகத்தில் பாரசீகத்தின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், இஸ்லாமியர்களின் சமூக-பொருளாதார நிலையை வலுவிழக்க செய்ய இயலும். பாரசீகம் தெரியாததால் வாய்ப்புகளை இழந்த இந்துக்கள் இதனால் அகமகிழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. வரி வடிவம் எது என்பதை எளிதாகத் தேர்வு செய்துவிட்டாலும் எதனை அலுவல் மொழியாக மாற்றுவது என்பதில் சிக்கல் எழுந்தது. இந்தியாவில் தரமன இந்தி ஒன்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் பிரிட்டிஷார் விரும்பினார்கள். இந்தி, உருது மொழிகளின் கலப்பில் வழங்கி வந்த இந்துஸ்தானி மொழி இத்திட்டத்திற்கு ஏற்றதாக இருக்கவில்லை.

அலோக் ராயின் நூலில் வரும் தகவல் ஒன்று தரம் நிறைந்த மொழிக்கான தேடலை பிரிட்டிஷார் 1857-க்கு முன்பே துவங்கி விட்டார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அன்றைய அரசாங்க கல்வித்துறையின் 1846-47 க்கான ஆண்டறிக்கை ஒரு செய்தியை பதிவு செய்கிறது. பனராஸ் கல்லூரியின் முதல்வரான ஜே.ஆர்.பாலன்டைனேவிடம் ஒரு மாணவன் கேள்வி ஒன்றை எழுப்பினான். “பல நூறு பேசுமொழிகள் வழங்கி வரும் நிலையில், ஐரோப்பியர்கள் எதனை இந்தி என்று குறிக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்களுடைய பார்வையில் எல்லாப் பேசுமொழிகளும் இந்தி என்கிற பெயருக்கு உரியது” என்றான். அதற்குப் பதில் அளித்த பாலன்டைனே “தேசிய மொழியை உருவாக்கும் பொறுப்பைப் பட்டிக்காட்டான்களிடம் விட்டுவிட்டதற்காக” மாணவர்களைக் கடிந்து கொண்டார் என்கிறது அவ்வறிக்கை. மேலும், “பயனற்ற மாகாண பேசுமொழிகளைத் துரத்தி அடித்துவிட்டு” தரமான இலக்கியத்தைப் படைக்குமாறு

அவர் அறிவுறுத்தியதாகத் தெரிய வருகிறது.
எது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்கிற தேடல் விரைவில் அரசியலுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்து, இஸ்லாமிய அறிவறிஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய தரமான மொழிகளில் வழங்கி வந்த பாரசீக, சம்ஸ்கிருத வார்த்தைகளை நீக்கினார்கள். இந்த இருமை வேகமெடுத்த நிலையில், இந்தி என்கிற நாமத்திற்கு உரிய பலநூறு பேசு மொழிகள் மொழிப்போரின் களப்பலியாகச் சிதைந்து போயின. இதனை எதிர்த்தவர்கள் அனைவரும் துரோகிகள் என்று கட்டம் கட்டப்பட்டார்கள். அலோக் ராய் நாதுராம் கோட்சேவின் இறுதி வாக்குமூலத்தை மேற்கோள் காட்டுகிறார். காந்தியை சுட்டுக்கொன்றதற்கு அவர் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை எதிர்த்ததும் ஒரு காரணம் என்கிறான் கோட்சே.

கவலைதரும் தற்காலத்தில் இந்த வரலாற்றை மறந்து விடக்கூடாது. இவ்வரலாற்றை நினைவில் நிறுத்த வேண்டியது தவிர்த்து விடமுடியாத தேவையாகும். இந்தியை திணிக்கும் முயற்சிகள், அறிவிப்புகள் ஐம்பதுகள், அறுபதுகளின் இந்தி எதிர்ப்புக் கனல்களை மீண்டும் மூட்டிவிடுமோ எனும் அச்சம் பீடிக்கிறது.
இத்தகைய பிரித்தாளும் சூழ்சிகளை இந்தி அறிவுலகமும், கலாசார வெளியும் போதுமான அளவு எதிர்க்கவில்லை. இதனால், ஒட்டுமொத்த இந்தி மொழி பேசும் மக்களும் மொழி வெறியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இதுவரை நாம் தெரிந்து கொண்டவற்றை அசைபோட்டு பார்த்தால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒற்றைப்படையான இந்தியை வளர்த்தெடுக்கும் செயல்திட்டத்தின் முதல் பலி இந்தியே. தேசம், கலாசாரம் என்கிற பெரும் கதையாடல்களை வளர்த்தெடுக்கும் போர்வையில், நம்முடைய உள்ளார்ந்த பன்மைத்துவம் அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளது. இந்தி கவிஞர் சுதாமே பாண்டே தூமில் அறுபதுகளில் எழுதிய கவிதையை அலோக் ராய் மேற்கோள் காட்டுகிறார். இக்கவிதை இந்தத் துயரத்தை வலிமையாக வெளிப்படுத்துகிறது:
துமரா ஏ தமிழ்-துக்
மேரி இஸ் போஜ்புரி பீடா கா
பாய் ஹை
பாஷா உஸ் திக்தமி தரிந்தே கா கௌர் ஹை

(உன்னுடைய தமிழ்த் துயரம்
என்னுடைய போஜ்புரித் துயரத்துக்குச் சகோதரன் —
வஞ்சகமிகுந்த மிருகத்துக்கு மொழி வெறும் பருக்கை தானே ….)

இந்தச் சிக்கலை தீர்க்க முனைவதை விட அது குறித்து உரையாடுவது எளிமையானது என்பதில் ஐயமில்லை. இந்தி அறிவுலகத்திலேயே, போஜ்புரி, மகதி முதலிய மொழிகளை வளர்த்தெடுப்பது இந்திக்கு இருக்கும் செல்வாக்கை சீர்குலைக்குமா என்று காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இந்தியின் மேலாதிக்கம் மேன்மேலும் அரசின் ஆதரவை பெறுவதற்கு உதவிகரமாக உள்ளது.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் மகதி முதலிய மொழிகளிடம் இருந்து எப்படி மக்கள் எப்படி அயன்மைப்பட்டுப் போகிறார்கள் எனக்கண்டோம். இந்தச் சிக்கலை மகதியை அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணை மொழியாக மாற்றுவதாலோ (மைதிலி 2004-ல் அட்டவணையில் இணைக்கப்பட்டது), ஓரிரு பல்கலைகளில் தனித்துறைகளைத் துவக்குவதாலோ தீர்ந்து விடுமா என்று எனக்குத் தெரியவில்லை.

அடுத்து ஐந்தாண்டுகளில் யாரேனும் ஒருவர் தெற்கு டெல்லியின் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றில் திரையிடக்கூடிய போஜ்புரி/மகதி மொழி திரைப்படத்தை எடுப்பார்களா? இந்தி பகுதி அறிவறிஞர்கள் தங்களுடைய சாதி அரசியலில் இருந்து மீண்டெழுந்து மதச்சார்பற்ற, வட்டார, வெகுமக்கள் பண்பாட்டைப் பேணி வளர்ப்பார்களா? இத்தகைய பன்மைத்தன்மை தொடர்ந்து அழிவதால் இந்தி பேசும் இந்தியப்பகுதிக்கு ஏற்படப்போகும் இழப்புகள் என்னென்ன? இது குறித்து நம்முடைய அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் அக்கறை இருக்கிறதா?

இன்றைக்கு இந்தியாவிலேயே பிரபலான வெகுமக்கள் தலைவராகத் திகழும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தப் பன்மைத்தன்மையின் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான தன்னுடைய பரப்புரையை 27 அக்டோபர் 2013 அன்று பீகாரின் ஹங்கர் பேரணியில் துவங்கினார். பீகாரின் முப்பெரும் பேசுமொழிகளான போஜ்புரி, மகதி, மைதிலியில் இரண்டு வாக்கியங்களை உதிர்த்தார். எப்போதும் போல, திரண்டிருந்த மக்கள் கூட்டம் மோடிக்கு ஆரவாரம் செய்தது.
மோடியின் சக பயணிகளால் முன்னெடுக்கப்படும் சமஸ்கிருதமயமான, மேலாதிக்கம் மிக்க இந்தியால் நிகழ்ந்திருக்கும் சேதாரங்கள் ஏராளம். இவற்றை மோடியின் அரசியல் ஆளுமை சீர்செய்துவிடமுடியும் என்று நம்புவதற்கான எதுவும் இதுவரை நிகழவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

இக்கட்டுரை ‘Livemint’ நாளிதழில் ‘How a Bihari lost his mother tongue to Hindi’ எனுந்தலைப்பில் வெளியானது.

ரோஷன் கிஷோர் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழின் ‘Data & Political economy’ ஆசிரியர்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

Gully Boy – ‘தெருவோர கீதங்களின் நாயகன்’


 

Gully boy​ திரைப்படம் தேவதைக்கதை தான். மும்பையின் குடிசைப்பகுதியில் பிறந்து வளரும் இஸ்லாமிய இளைஞர் ஒருவரின் இசைக்கனவுகள் என்னாகின என்பதை ‘rap’ பின்னணியில் சொல்லியிருக்கிறார் Zoya Akhtar​. கவித்துவ வரிகளும், ‘rap’ இசையும் படம் முழுக்க வந்து நம்மை துல்லியமாக விவரிக்க முடியாத அனுபவத்திற்குள் தள்ளுகின்றது.

ரன்வீர், ஆலியா இருவரும் வெவ்வேறு வகையில் திரையில் நம்மை ஆட்கொள்கிறார்கள். கனவுக்கும், உண்மைக்கும் இடையே அல்லாடும் பாத்திரத்தில் தயங்கி, தயங்கி ரன்வீர் பொருந்தி கொள்கிறார். வேகமும், மிகைத்த பிரியமும் மிக்க அவருடைய காதலியாக ஆலியா ரசிக்க வைக்கிறார். அவரின் அசட்டையான நடிப்பும், அதட்டும் உடல்மொழியும் அத்தனை அழகு.

‘குனிந்தே இருப்பது தான் நம்முடைய விதி’ என்கிற தந்தையும், அதனை இல்லையென்று மறுதலிக்கிற மகனும் உரையாடிக்கொள்ளும் காட்சி திரைப்படத்தின் உச்சம் எனலாம். அது கனவுக்கும், வீட்டின் நிலைக்கும் இடையே அல்லாடும் இளைஞர்களின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது.

இசையால் மட்டுமே இப்படத்தில் போர்கள் நடக்கின்றன. வன்முறை என்பதைக் குடும்பம் மட்டுமே இதில் கையாள்கிறது. இக்கதையில் வரும் பெண்கள் தங்களின் ஆதங்கத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்துகிற கணங்கள் சிறப்பானவை. ‘உடலுறவில் என்னை நீ திருப்திப்படுத்தல. அதான் இன்னொருத்தி’ என்கிற கணவனிடம், ‘ஆமாம் உனக்கு என்னைக்குத்தான் எப்படி என்ன தொடணும்னு தெரிஞ்சுருக்கு’ என்று மனைவி இரைகிறாள். கணவன் மிரண்டுபோய் நிற்கிறான்.

Image may contain: 1 person, text

குடிசைக்கும், கோபுரத்திற்கும் இடையே உள்ள தூரத்தை அடையவே முடியாது என்று நம்புகிறவர்கள் தங்களுடைய பிள்ளைகள் எத்தனிக்கிற போது பலநூறு அஸ்தமனங்களைக் கண்ணுற்ற அவநம்பிக்கையோடு வாழத்த மறுக்கிறார்கள். திருமணமும், வயிற்றுப்பாடும் அச்சுறுத்தும் இஸ்லாமிய பெண்ணும், ஆணும் அமைதியாகவே இவற்றை எப்படி வெல்கிறார்கள் என்பதைத் திரைக்கதை சுவாரசியமாக விவரிக்கிறது. அதிலும் முக்கியமாக உன்னுடைய வாழ்க்கையை நீயே எழுதிப்பாடு என்கிற வரிகளும், ‘உன் உணர்வுகளை நீ பாட அஞ்சுகிறாய் என்றால் நான் மட்டும் ஏன் அதனை உச்சரிக்க வேண்டும் நண்பனே.’ எனும் கேள்வியும் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது.

இந்தக் கதையின் இசையும், அசலான ‘rap’ கலைஞர்களும் பெரும்பலம் என்றால், இந்திக்கே உரிய கமர்ஷியல் கதை சொல்லல் பின்னடைவு. தற்காலத்தின் வன்முறை, ஒதுக்கல், வெறுப்பு ஆகியவற்றையும், ஏற்றத்தாழ்வுகள் எப்படிச் சக மனிதரின் கண்ணீரை துடைக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் இசையோடு இழைத்துத் தந்திருக்கிறார் ஜோயா அக்தர். ‘நமக்கான காலம் வரும்’ என்கிற வரி தான் படத்தின் கருப்பொருளும், கதை சொல்லலும். ‘நீ ஒரு கலைஞன்’ என்று கண்கள் நிறையச் சொல்லும் பெண்ணின் லட்சியவாதம் நம்மையும் சற்றே வருடும் படம் ‘gully boy’.

சபரிமலை தீர்ப்பை புரிந்து கொள்வது எப்படி


சபரிமலை தீர்ப்பை புரிந்து கொள்வது எப்படி – மணிவண்ணன் ஐ.ஏ.எஸ்
 
————————————————–
 
“அத்தை, சபரிமலை கோயிலில் என்ன தான் நடக்குது? பொண்ணுங்களை அங்க விட மாட்டாங்கன்னு இதுக்கு முன்னவரை எனக்குத் தெரியவே தெரியாது. ஏன் இப்படிப் பண்றாங்க?”
 
“ராஜூ, சபரிமலையின் மூலவரான ஐயப்பன் ‘நைஸ்திக பிரம்மச்சாரி’. அதாவது அவரு வாழ்நாள் முழுக்கப் பிரம்மச்சரிய விரதம் இருக்கிற கடவுள். இந்த மாதிரி விரதம் கடைபிடிக்கிற ஆம்பிளைங்க பொண்ணுங்க கிட்டே இருந்து தள்ளியே இருப்பாங்க. அதனாலதான் சபரிமலை கோயிலுக்குள்ள பொண்ணுங்கள விடறதில்ல.
இன்னொரு காரணமும் இருக்குனு சிலர் சொல்றாங்க. பதினெட்டுப் படிகள் வழியா கோயிலுக்குள்ள நுழையுறதுக்கு முன்ன தீவிரமா 41 நாள் விரதம் இருக்கணும். இவ்ளோ கஷ்டமான விரதத்தைப் பெண்கள் இருக்க முடியாது. அதனால அவங்க கோயிலுக்குப் போக முடியாது”
 
“அதென்ன 41 நாள் விரதக்கணக்கு அத்தை?”
 
“ராஜூ, உனக்கு மாதவிடாய் பத்தி தெரியுமில்ல. நம்மாளுங்க சில பேர் அந்த நாளில எல்லாம் பொண்ணுங்க அசுத்தமாகிடறாங்கன்னு நம்புறாங்க. சுத்த பத்தமா இல்லாதப்ப எப்படி விரதம் இருக்க முடியும்? அதனால பொண்ணுங்க தொடர்ச்சியா 41 நாள் விரதம் இருக்க முடியாது. விரதமே இருக்க முடியாது அப்படிங்கறப்ப எப்படிக் கோயிலுக்குள்ள நுழைய முடியும்.”
 
“ஓ! இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, மாதவிடாயை அசுத்தம்னு ஏன் நினைக்கிறாங்க? எனக்கு அபத்தமா தெரியுது. அந்த நாலஞ்சு நாள் அவங்களோட உடம்பு நோய்வாய்ப்படாம பாத்துக்கிட்டா போதுமில்லையா? இன்னைக்கு அதெல்லாம் பெரிய விஷயமா என்ன? அப்புறம் என்ன தான் பிரச்சினை.”
 
“ராஜூ, நீ சொல்றது சரிதான். தன்னுடைய உடம்பை அவங்கவங்க சுகாதாரமா பாத்துக்கிட்டாலே போதும். இயற்கையான ஒரு உடலியல் நிகழ்வை அசுத்தம்னு சிலர் நினைக்கிறது வருத்தமா இருக்கு. பொண்ணுங்க முன்னலாம் சபரிமலை கோயிலுக்குப் போனாங்கங்கறதுக்கு ஆதாரம்லாம் இருக்கு. அதெல்லாம் 1991-யோட நின்னு போச்சு”
 
“இதெல்லாம் புரிஞ்சுடுச்சு அத்தை. ஏன் உச்சநீதிமன்றம் மேலே கோபத்தைக் கொட்டறாங்க? கோயிலோடு தொடர்புடைய விஷயங்களில் எல்லாம் உச்சநீதிமன்றம் தலையிடைவே கூடாதுன்னு நினைக்கிறாங்களா? இல்லை, உச்சநீதிமன்றம் தலையிடலாம், ஆனா, இந்த முறை தப்பான தீர்ப்பை தந்திருக்குனு கருதுறாங்களா?”
 
“ஒன்னொன்னா சொல்றேன் ராஜூ. நீதிமன்றங்கள் மத விஷயங்களில் தலையிடக்கூடாதுன்னு எதிர்க்கிறாங்க. ஆனா, நம்ம அரசியலமைப்புச் சட்டம் ரொம்பத் தெளிவா இருக்கு. அது மதத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வெளியேலாம் ஒன்னும் வைக்கலை.
டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ரொம்ப அழகா, ” இந்த நாட்டில் மதக் கருத்தாக்கங்கள் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நீக்கமற கலந்திருக்கிறது என்கிற அளவுக்குப் பரந்து விரிந்துள்ளன. இங்கே மதம் கலக்காதது என ஒன்றுமில்லை. தனிநபர் சட்டங்களை நாம் காப்பாற்ற முயல்வோம் என்றால், சமூகம் சார்ந்த விஷயங்களில் நாம் தேங்கி நின்றுவிடுவோம் என்று என்னால் உறுதிபடச் சொல்ல இயலும்’ன்னு சொல்லியிருக்கார்.
Image result for sabarimala
 
சிரூர் மடத்தின் லக்ஷ்மிந்திர தீர்த்த சுவாமியார் வழக்கு (1954)-ல் துவங்க இப்ப நடந்த தலாக் வழக்கு வரை மதப் பிரச்சினைகளில் நீதிமன்றம் தீர்ப்புத் தந்திருக்கு. இதனால், நீதிமன்றம் எங்க மதத்தில் தலையிடக்கூடாது அப்படிங்கற எதிர்ப்புல அர்த்தமே இல்லை. சரி அடுத்ததுக்கு வருவோம். நீதிமன்றம் தவறான தீர்ப்பை கொடுத்துருச்சா?”
 
“அத்தை, அவங்க எல்லாம், “பத்துல இருந்து அம்பது வயசு வரை இருக்கப் பொண்ணுங்கள விடாம இருக்கிறது மரபுன்னு சொல்றாங்களே. அவங்களோட பாரம்பரிய வழக்கத்தை நிறுத்தி நீதிமன்றம் தப்பு பண்ணிடுச்சு. சில மரபுலாம் ரொம்பக் காலமா இருக்கு. அதனோட விளைவை எல்லாம் புரிஞ்சுக்குற அளவுக்கு நாம பெரிய ஆளெல்லாம் இல்லையே. இப்ப, செத்துப் போனவங்களைப் புதைக்கிறதையே எடுத்துக்குங்க. புதைச்சா pollution ஆகுதுன்னு நாம அதை நிறுத்த முடியாது இல்லையா?”
 
“அடடா. செம ராஜூ. உன்னோட லாஜிக் எனக்குப் புடிச்சிருக்கு. நீதிமன்றம் என்ன சொல்லுதுன்னு பாப்போமா? நீதிமன்றம் மத மரபில் தலையிடக்கூடாதுன்னு சொல்றதை ஏத்துக்குது. எப்பலாம் அந்த மரபுக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் மோதல் வருதோ அப்ப மட்டும் நீதிமன்றம் தலையிடுறதை தவிர வேற வழியில்லை.”
 
“ம்ம்ம். இது நியாயம் தானே அத்தை. அப்புறம் யாரு வேணாம் என்ன வேணாம் மரபுன்னு சொல்லிட்டுப் பண்ணலாம். இந்த நரபலியையே எடுத்துப்போமே. அது எதோ ஒரு இந்து மதப் பிரிவோட மரபு தான். அதுக்காக அதை ஏத்துக்க முடியுமா. முடியாது இல்லை. எல்லா மரபும் அப்படியே தொடரக்கூடாதுன்னு சொல்றதுல இருக்கிற நியாயம் எனக்குப் புரியுது”
 
“அதேதான் ராஜூ. நீதிமன்றம் நீ சொல்றதை தான் சொல்லுது. ஒரு மரபு தொடரனுமா வேணாம்னு முடிவெடுக்க இரண்டே இரண்டு நிபந்தனைகளைத் தான் கணக்கில எடுத்துக்குது.
 
1. இந்த மரபு இடைவெளி இல்லாம நெடுங்காலமா அப்படியே தொடருதா?
2. அந்த மரபு அம்மதத்திற்கு இன்றியமையாத ஒன்றா? அந்த மரபை நிறுத்திட்டா மதத்தோட பண்பு மாறிவிடுமா?
 
இந்த வழக்கில, தொடர்ந்து மரபு பின்பற்றப்படலை அப்படிங்கறதுக்கு எடுத்துக்காட்டுகள் இருக்கு. மேலும், பெண்கள் வேறுபடுத்திப் பாக்குறது இந்து மதத்தோட ‘பிரிக்க முடியாத மரபு’ன்னு நீதிமன்றம் கருதலை. அதனால, ரெண்டு நிபந்தனையையும் இந்த மரபு திருப்திப்படுத்தலை. அதனால தான், பெண்களை வேறுபடுத்திப் பாக்குற இந்த மரபு அரசிலயமைப்பு சட்டத்துக்கு எதிரானதுன்னு உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கு.”
 
“அதெல்லாம் சரியாத்தான் படுது அத்தை. ஆனால், கொஞ்ச பேரு, ஐயப்ப பக்தர்கள் எல்லாம் இந்து மதத்தின் ஒரு பிரிவு, அதனால அவங்க பிரிவோட மரபை அரசியலமைப்பு சட்டப்படி தொடரலாம்னு வாதம் பண்றாங்களே”
“உனக்கு எவ்ளோ தெரிஞ்சிருக்கு. ஆனா, நீதிமன்றம் வைணவர்கள், ஆனந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களைப் போல ஐயப்ப பக்தர்கள் ஒன்றும் தனிப்பிரிவு இல்லைன்னு சொல்லிடுச்சு. அவங்களுக்குள்ள பொதுவா இருக்க ஒரே கூறு இந்த நாப்பத்தி ஒரு நாள் விரதம் தான். கிறஸ்துவ, முஸ்லீம் பக்தர்கள் கூட விரதம் இருந்து ஐயப்பனை பாக்க போக முடியும். அதனால ஐயப்ப பக்தர்களை இந்து மதத்திற்குள் இருக்கும் ஒரு பிரிவுன்னு சொல்ல முடியாது.”
 
“புரியுது. ஆனா, அத்தை ஒவ்வொருவாட்டியும் எது ஒரு மதத்தில இன்றியமையாத மரபு, தேவையற்ற மரபுன்னு நீதிமன்றம் முடிவு பண்ண முடியுமா? இந்து மததில எவ்ளோ பிரிவு, வழக்கங்கள் எல்லாம் இருக்கு. ஒருத்தருக்கு தேவையானதா இருக்கிறது இன்னொருத்தருக்கு தேவையில்லாததா இருக்கலாமே?”
 
“நல்ல கேள்வி. இது ரொம்ப முக்கியமான வாதமும் கூட. ஆனா, ஒவ்வொரு வாட்டியும் எது தேவையான மரபுன்னு நீதிமன்றம் தான் முடிவு பண்ணனும். இதுக்கு மாற்று ஒன்னும் எனக்கு இப்போதைக்குத் தெரியலை. வேணா ஒரு வழியிருக்கு. மொத்தமா மதத்தை விட்டே தள்ளி இருக்கலாம். ஆனா, எது தேவையான மரபுன்னு முடிவு பண்ணுறதை விட அது மோசமான ஒன்னா தான் இருக்கும்.”
 
“சரி அத்தை. நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு புரியுது. ஆனா, நீதிமன்றத்துக்கு இந்தத் தீர்ப்பால மக்கள்லாம் கொதிச்சு போவாங்கனு தெரியுமா? இந்த மரபை பின்பற்றான என்ன கேடு வந்துட போகுது. இது யாரையாச்சும் பாதிக்குதா என்ன?
 
சமூகச் சீர்திருத்தவாதிகள் படிப்படியா மக்களைப் பேசி, சீர்திருத்தத்தை ஏத்துக்க வெச்சு மாற்றத்தை கொண்டு வரலாமே?”
“அட்டகாசமான கேள்வி ராஜூ. மனுஷங்க சமூக மிருகங்கள் அப்படின்னு வரலாறு சொல்லித்தருது. ஒரு காலத்தில குழுக்களா வாழ்ந்தோம். நாம ஒரு தனிக்குழுவா, சமூகமாக வாழ்ந்தப்ப தனி மனிதர்களை விடச் சமூகம், சமூக வழக்கங்கள் பெருசா இருந்தது. தனிநபர் உரிமைகள் சமூகத்திற்கு அடங்கின ஒன்னா இருந்தது. ஆனா, படிப்படியா, அதுவும் குறிப்பா மறுமலர்ச்சி காலத்தில இருந்து தனி மனிதர்களின் உரிமைகள் முக்கியம் அப்படிங்கற நிலைமை வந்தது.
 
தனி மனித உரிமைகள் ஒரு சமூகத்தை முன்னேற்ற நிச்சயமா தேவை. அவங்களோட பாலினம், மதம், மொழியால யாரும் பாகுபடுத்தப்படக் கூடாதுன்னு உறுதியா இருக்கணும். அதைத்தானே நம்முடைய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14 சொல்லுது.
 
ஒரு பொண்ணைக் கோயிலை விட்டு தள்ளி வைக்கிறது, பாகுபடுத்தாம வேறென்ன? அவ பொண்ணா பொறந்ததைத் தவிர வேறென்ன பாவம் பண்ணினா? அது சாபக்கேடா என்ன?
 
சமூகச் சீர்திருத்தவாதிங்க வந்து, மக்களோட மனசை மாத்தினா அதைவிட நல்லது ஒன்னு இருக்க முடியாது. ஆனா, மிக முக்கியமான முடிவுகளை வருங்காலம் பாத்துக்கும்னு விடக்கூடாது. இந்த மாதிரி பிரச்சினைங்க ரொம்பக் காலத்திற்குத் தாக்கம் செலுத்தும்.
 
நீதிமன்றங்கள் அமைதியாக இருந்தா, மக்களுக்கு அரசாங்கம் மேலே இருக்க நம்பிக்கை போயிடும். அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறதை விட மதத்தை மதிக்கிறது மேலேன்னு நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க. இது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கிடும். மத அடிப்படையில நாடு துண்டு துண்டு சிதறிக்கூடப் போகலாம்.
 
அதனாலதான், நீதிமன்றம் முத்தலாக் வழக்கில தலையிட்டுச்சு. அது இஸ்லாமிற்கு இன்றியமையாத மரபில்லைன்னு அறிவிச்சதோட, அது அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானதுன்னு தீர்ப்பு எழுதிச்சு
நீதிமன்றம் இந்த விஷயத்தில தலையிட்டது நாட்டிற்கு ரொம்ப நல்லது. நமக்கும் நல்லது. புரிஞ்சுதுல்ல ராஜூ”
 
“நிச்சயமா அத்தை. நீங்க சொல்றதை முழுசா ஏத்துக்கிறேன். பெண்களைப் பாகுபடுத்துற மரபை நீதிமன்றம் இந்து மதத்தின் இன்றியமையாத மரபு இல்லைன்னு சொன்னதில எனக்கு மகிழ்ச்சி தான். இந்துக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி தீர்க்கணும்’
Image result for sabarimala
 
“கண்டிப்பா ராஜூ. நிறையப் பேருக்கு இந்தத் தீர்ப்பால மகிழ்ச்சி தான். இந்து மதம் பெண்களை மதிக்குதுங்கறதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துது. மூவாயிரம் ஆண்டுகளா இருக்க இந்து மதம் தன்னைச் சீர்த்திருத்திக்கிட்டு நம்ம காலத்திற்கு ஏத்த மதமா மாறும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!”
 
———————————————————————————-
அடிக்குறிப்புகள்:
இந்த உரையாடலை நான் எழுதக்காரணம் என்ன? உச்சநீதிமன்றத்தையும், இந்த வழக்கில் அது வழங்கிய தீர்ப்பை மதிக்கிறேன் என்பது ஒரு காரணம். அதோடு, நான் இந்து மதத்தின் பல்வேறு பண்புகளை மதிக்கிறேன் என்பதும் முக்கியக் காரணம். இந்திய வரலாற்றின் மாணவனாக வேதங்கள், உபநிடதங்கள், சில சாஸ்திரங்கள் குறித்து எனக்குப் பரிச்சயம் உண்டு. இந்து மதத்தை உயர்ந்த தத்துவச்செறிவு மிக்க மதமாக நான் காண்கிறேன். அது மனிதனை கடவுளுக்கு ஒப்பான ஒருவராகக் காண்கிறது. அஹம் பிரம்மஸ்வாமி . அது தனிமனிதர்களுக்கு மிகப்பெரிய மரியாதையைத் தருகிறது, எனக்குத்தெரிந்தவரை வேறெந்த மதமும் இந்த விஷயத்தில் அதன் அருகில் கூட வர முடியாது. அதனால் தான் மூவாயிரம் ஆண்டுகளாக இந்து மதம் நீடித்து நிற்கிறது. அது இன்னும் முப்பாதாயிரம் ஆண்டுகள் உயிர்ப்போடு இருக்கும். அது நடக்க, சில பிற்போக்கான, தங்களைத் தாங்களே இந்து மதத்தின் காவலர்களாகக் கருதிக்கொள்ளும் நபர்கள் இந்து மதத்தைக் கட்டுப்படுத்த முயல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நான் திருவரங்கத்தில் வளர்த்தேன். அங்கே இந்துக்கள் எப்படி முற்போக்கு மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதைக் கண்ணார கண்டு வளர்ந்தவன் நான். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.
சரணம் ஐயப்பா!
 
———————————————————————————
[அரசு அதிகாரிகள் உரையாடிக்கொள்ளும் telegram group (டீ கடை ), Raghunandan Tr சார், ட்வீட்டர் நண்பர்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி]
###############################################################

மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து எழுதியிருப்பவை இவை:

சபரிமலை ஆலயத்திற்குள் பெண்கள் நுழையக்கூடாது என சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டது 1972-ல் தான்.

குடியரசுத்தலைவர் வருகைக்காக சாலைகள் அமைக்கப்பட்ட பின்பு பெண்கள் கோயிலில் வழிபட்டு வந்தார்கள்.
ஆண் பக்தர்கள் இதனால் காயப்பட்டதாலே சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச்சட்டம் நடைமுறையில் அமலாக்கப்படவில்லை.

1986-ல் நடிகைகள் பதினெட்டு படிக்கட்டுகளில் நாட்டியமாட தமிழ்ப்படமொன்று காட்சிப்படுத்தப்பட்டது.
தேவசம் ஆணையம் 7500 கட்டணம் பெற்றுக்கொண்டது.

1990 ல் தொடரப்பட்ட பொதுநல வழக்கை அடுத்தே கேரளா உயர்நீதிமன்றம் 10-50 வயது பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது எனத்தடை விதித்தது.

ஆண்டாண்டு காலமாக பாடப்பட்டு வருவதாக சொல்லப்படும் ஹரிவராசனம் பாடல் மெட்டமைக்கப்பட்டு பாடப்படுவது 1955 ல் இருந்து தான்.

எப்படி ஒரு பிராமண குடும்பத்திற்கு சபரிமலை ஆலயத்தில் உரிமையுள்ளதோ அது போல ஒரு ஈழவக்குடும்பத்திற்கும் வெடி வழிபாட்டு உரிமை இருந்தது.
ஐயப்பன் அவர்களிடம் போர்க்கலைகள் கற்றதாக நம்பிக்கை. இங்கே எல்லாம் காலங்காலமாக நிலவும் நம்பிக்கை என்பதெல்லாம் கணக்கில் இல்லை என்பது போல தேவசம் ஆணையம் அந்த வெடி வழிபாட்டு உரிமையை ரத்து செய்து அதனை பொது ஏலத்திற்கு விடுகிறது.
பாலினப்பாகுபாடு மட்டுமல்ல, சாதிக்கும் இங்கே பங்கிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

1993 ல் வந்த கேரள உயர்நீதிமன்றத்தீர்ப்பு பெண்கள் கோயிலுக்கு வருவதற்கு பழங்காலம் முதல் தடையில்லை என்று சுட்டிக்காட்டுவதோடு, சமீபகாலம் வரை குழந்தைக்கு சோறுண்ணு சடங்கிற்காக 10-50 வயது பெண்கள் சபரிமலை கோயிலிற்கு வருவார்கள்.
அதைத்தடுக்கும் வகையில் சந்நிதியின் முன் கொடிமரம் ஏற்படுத்தியிருக்கிறார்கள என்கிறது.

1939 ல் திருவிதாங்கூர் ராணி ஆலயத்திற்கு வருகை புரிந்தததும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காந்தியார் சாந்தியடைய : நூல் அறிமுகம்


2009-ம் ஆண்டின் இறுதி கணங்கள் அவை. வெறுப்பும், அசூயையும், சென்னை மாநகர் தந்த பதற்றமும் என்னை விழுங்கி கொண்டிருந்த படப்படப்பான கணங்கள் அவை. காந்தியை ஏதேதோ காரணங்களுக்காக வெறுக்கப் பழகியிருந்தேன். அவர் குறித்து ஒரு வார்த்தை நல்லதாகக் கேட்டாலும், கடுமையான மொழியை, பதட்டம் நிறைந்த விமர்சனங்களை, கண்மூடித்தனமான காழ்ப்பை கொட்டிய காலம். ஊருக்கு போக வேண்டிய சூழலில் கன்னிமாரா நூலகத்தில் இருந்து காந்தியார் சாந்தியடைய எனும் நூலை எடுத்துக் கொண்டேன். நூலின் தலைப்பில் ‘தடை செய்யப்பட்ட எழுத்தும், காலமும்’ என்கிற தலைப்பு இருந்தது ஈர்ப்புக்குக் காரணம்.

பேருந்தில் ஏறிக்கொண்டேன். உட்கார இடமில்லை. நடக்கிற பாதையில் கால் வலிக்க உட்கார்ந்து விட்டேன். அப்படியே தூங்கி விடலாம் என்று கூடத் தோன்றியது. மருவத்தூர் வரும் வரையில் ஓட்டுவோம் என்று பைக்குள் கைவிட்டு எடுத்ததும் இந்த நூல்தான் கையில் கிடைத்தது. கொஞ்ச நேரம் படிப்போம் என்று கையில் எடுத்து உட்கார்ந்தேன்.
மெதுவாகவே வாசிக்கிற பழக்கம் கொண்ட நான், நான்கு மணிநேர பேருந்து பயணம் முழுக்க அந்த நூலில் மூழ்கிப்போனேன். அந்த எழுத்து நடை, வரலாற்றை நெருக்கமாகக் கண் முன் நிறுத்தும் மொழி, காந்தியோடு வகுப்புவாத களத்துக்கு அழைத்துப் போகும் நூல் பகுப்பு எல்லாமே அசரடித்தன.

காந்தி ஒழிக்கப்பட வேண்டிய சக்தி என்று பெரியார் தொடர்ந்து பேசி வந்தார். ஆனால், காந்தியின் படுகொலைக்கு அடுத்து, பெரியார் உணர்ச்சிவசப்பட்டார். இருந்தது ஆரிய காந்தி, இறந்தது நம் காந்தி என்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிற்குக் காந்திஸ்தான் என்று பெயரிட வேண்டும் என்று கூட வலியுறுத்தினார். எந்தக் காந்தி ஒழிய வேண்டும் என்று ஓயாமல் இயங்கினாரோ, அதே காந்திக்கு திராவிட இயக்கத்தின் சார்பாக இரங்கல் கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடத்தப்பட்டன. ‘காந்தியார் சாந்தியடைய’ என்கிற பன்னிரெண்டு பக்க நூலை ஏ.வி.பி.ஆசைத்தம்பி எழுதினார். மதவாதிகளை மிகக்கூர்மையாக எதிர்கொண்ட அந்த நூல் தடை செய்யப்பட்டதோடு, நூல் ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத்தைக் கட்டத்தவறினால் கடுங்காவல் தண்டனைக் காலம் கூட்டப்படும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. சிறையில் அவருக்கும், நூலை வெளியிட்டவர்களுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது. அது திராவிட நாட்டில் அட்டைப்படமாக வெளிவந்தது.

இந்தப் பதட்டமும், எதிர்ப்பும் மிகுந்த பிரிவினை, காந்தி படுகொலை காலத்தை இந்துஸ்தான், பாகிஸ்தான், காந்திஸ்தான் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு நூல் அலசுகிறது. ஒரே ஒரு நூல், மனதில் அப்பிக்கிடந்த அத்தனை வெறுப்பையும் அடித்துக் கொண்டு போகக்கூடும் என்பதைக் கண்டடைந்த நாள் அது. நீங்களும் மதவாதத்தைக் காந்தி எதிர்த்த அந்த மகத்தான வரலாற்றை, அதில் திராவிட இயக்கமும் கைகோர்த்துக் கொண்ட காலத்தைப் படித்துணருங்கள். நூல் வெகு காலத்திற்குப் பிறகு மறு பதிப்புக் கண்டிருக்கிறது.

https://www.commonfolks.in/books/d/gandhiyar-saanthiyadaiya-parisal

பக்கம் 158 விலை 160
காந்தியார் சாந்தியடைய
ப.திருமாவேலன்
நூலை பெற 9382853646/8778696612

இந்தியா என்கிற கருத்தாக்கம்


ஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.

அரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும். 

Image result for சுனில் கில்னானி

மேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது? ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும். 

(பேராசிரியர் சுனில் கில்நானி)

Image result for சுனில் கில்னானி
இந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள்? இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.

நானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும். 

Image result for இந்தியா என்கிற கருத்தாக்கம்

கைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிரமாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது?

இந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும். 

இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
தமிழில்: அக்களூர் ரவி
சந்தியா பதிப்பகம்
380 பக்கங்கள்
315 ரூபாய்

 

தெற்கிலிருந்து ஒரு சூரியன்


தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூல் தொகுப்பை படித்து முடித்தேன். திராவிட இயக்கம் தேய்பிறை காலத்தில் இருக்கிற போது, அதன் கடந்த கால வரலாற்றை, சாதனைகளை ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு நூல் தொகுக்கப்பட்டு உள்ளது. சமயங்களில் கட்சி அறிக்கையோ என்கிற வியப்பு ஏற்பட்டாலும் பல இடங்களில் ஆசிரியர் குழுவின் உழைப்பு மெச்ச வைக்கிறது.

‘தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற தலைவர்கள் காலங்கள் செல்ல செல்ல கடுமையாக வெறுக்கப்படுவது நிகழும்’ என்கிற ராமச்சந்திர குஹாவின் வரிகள் கலைஞர் கருணாநிதிக்கும் பொருந்தும். வாரிசு அரசியல், ஊழல், ஈழப்போர் என அவரின் அரசியல் வாழ்வை இளைய தலைமுறை அடையாளம் காண்கிறது. அதேசமயம், அது மட்டும் தானா அவர்? திராவிட இயக்கம் திருடர்களின் இயக்கம் என்று ஒரு தரப்பு
சொல்லித்திரிவது எத்தனை உண்மை? இந்த நூல் நல்ல துவக்கப்புள்ளி. 

Image result for தெற்கிலிருந்து ஒரு சூரியன்

மாநில சுயாட்சி சார்ந்த கருணாநிதியின் முழக்கம் எப்படிப் பஞ்சாப், அசாம், கர்நாடகம் எனப் பலமுனைகளில் ஒலித்தது ஏன் அது இலங்கை வரை சென்றது என்கிற வரலாறு பலருக்கு தெரியாத ஒன்றாக இருக்கும். அதிகார பரவலாக்கம் கேட்பவர்களைத் தேச விரோதிகள் எனக் கருதிய தேசியத்தின் தேர்தல் அரசியல் உச்சகாலத்தில் எழுந்த ராஜ மன்னார் அறிக்கை ஏன் இன்றைக்கும் தேவைப்படுகிறது என நூலில் பல மாநில ஆளுமைகள் விளக்குகிறார்கள். மூன்றாவது பட்டியலை மாற்ற வேண்டும், பொதுப்பட்டியல் மத்திய அரசுக்கு மட்டும் அதிகாரம் தருவதாக அமையக்கூடாது, நிதி நிர்வாகம், பெரும்பான்மை அதிகார பங்கீடு எனப் பல முனைகளில் இக்குரல்கள் பேசுகின்றன. கூட்டணியாட்சி கூட்டாட்சி நோக்கிய பயணம் என இன்று அரசியல் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி முன்மொழிந்தார் என்பது ஆச்சரியம் தரலாம்.

பிரேர்ணா சிங், அமர்த்திய சென், யோகேந்திர யாதவ் முதலியோரின் கட்டுரைகள் தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் சாதனைகளைக் கணக்கில் கொள்கின்றன. யோகேந்திர யாதவ் பீகாரில் வெற்றி பெறாத சமூகநீதி ஏன் தமிழகத்தில் சிறப்பாக இயங்கியது என விளக்குகிறார். துணை தேசியம் எப்படி ஒற்றுமை, உள்ளடக்கிய வளர்ச்சியை ஒருங்கே சாதிக்கிறது எனும் பிரேர்ணா சிங்கின் கட்டுரை இரண்டு பக்கங்களில் முடிந்தாலும் முக்கியமான ஒன்று.

மே தினம் சார்ந்த விடுமுறை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், மத்திய அரசிற்கு முன்பே கூட்டுக்குடும்பச் சொத்திலும் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது, நில உச்சவரம்பு சட்டத்தைச் செயல்படுத்தியது, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 33% இட ஒதுக்கீடு, தலித் மக்கள் நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தல் சட்டம் முதலிய சட்டரீதியான சாதனைகளை நீதிபதி சந்துரு அடுக்குகிறார்.

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அரிசியியல் எனும் கட்டுரையின் மூலம் வட்டிக்குப் பணம் வாங்கிச் சாப்பிட்ட வறுமையை விட்டுத் தமிழகத்தை வெளியே கொண்டு வரும் உணவு அரசியலை பொருளாதார மேதைகள், மத்திய அரசின் ஏளனங்களுக்கு இடையே தமிழகம் எப்படி முன்னெடுத்தது எனப் புரிய வைக்கிறார்.

நீர்ப்பாசன திட்டங்களைத் திராவிட இயக்கம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எனும் பரப்புரை ஆதாரங்களோடு முறியடிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை சார்ந்த சாதனைகளில் திராவிட அரசுகளின் தொலைநோக்கு கவனப்படுத்தப்பட்டு உள்ளது.

சித்திர ஓவியங்களின் மூலம் பரப்புரை புரிந்தது. இளைஞர்களை ஊடகம், மேடைப்பேச்சு, திரைப்படம், படிப்பகம் எனப் பல முனைகளில் அரசியல்படுத்திய திராவிட இயக்கம் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு அதை முன்னெடுப்பதில் காட்டிய சுணக்கம் நூலில் கவனம் பெறவில்லை.

சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எப்படிச் சட்டமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டும், மக்களுக்காகப் போராட வேண்டும், விவாதங்களுக்கு மெனக்கெட வேண்டும், கருத்துரிமையை மதிக்க வேண்டும் என்பதற்குக் கருணாநிதியின் சட்டசபை செயல்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் பாலபாடமாகத் திகழ கூடும். இடதுசாரி இயக்கங்களைப் போல அல்லாமல் தனிமனித உரிமைகளை மதிக்கும் வெளியை எப்போதும் திராவிட இயக்கம் கொண்டிருக்கும் என்கிற கருணாநிதியின் வாக்கு சாதிய சக்திகளின் முன்னால் மங்கி நிற்கிறது என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சாதிய கூர்முனையை முறிக்கத் திராவிட இயக்கம் தவறிவிட்டது, அதிகார போதை மக்களை விட்டு தள்ளி நிற்க வைக்கிறது முதலிய விமர்சனங்களைப் பால் சக்கரியா முன்வைக்கிறார். உயர்கல்வியைக் கூடுதல் வருமானம் ஈட்டும் மூலமாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றியதை சாடுகிறார் அனந்நகிருஷ்ணன். ஈழப்போரில் கருணாநிதியின் செயல்பாடு குறித்த விமர்சனம் ஓரிரு பத்திகளில் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. தலித் நலன்களில் பெரிய கவனமில்லாமல் இருக்கிறது என்கிற கேள்வியைக் கி.வீரமணி தடுமாற்றத்தோடு தான் எதிர்கொள்கிறார். ஊழல் குறித்த கேள்விகளை இந்தியாவில் எங்குத் தான் இல்லை, தண்டிக்கப்படுபவர்களின் சாதியப்பின்புலம் பெரிய பங்காற்றுகிறது எனக் கடப்பது இயக்கம் வலிமையோடு நீடித்திருப்பதற்கு உதவுவதாக அமையாது. குடும்ப அரசியல் எப்படித் திமுகவை வலுவிழக்க வைத்தது என்பது குறித்து ஸ்டாலினிடம் கேட்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி காத்திரமான ஒப்பீடுகளோ, கேள்விகளோ வேறெங்கும் இடம் பெறவில்லை. முதல்வரையும் அரசு ஊழியர் என்கிற வரையறைக்குள் 1973லேயே கொண்டு வந்த திமுக ஊழல் தடுப்பில் பெருமளவில் சுணங்கி இருப்பதைக் கவனத்தில் கொள்ள நூலில் பேசியவர்கள் தவறிவிட்டார்கள்.

முஸ்லிம்கள் காங்கிரஸ் ஆட்சியில் எப்படித் தமிழகத்திலும் மாற்றாந்தாய் மனோபாவத்தோடு அணுகப்பட்டார்கள், அது திமுக ஆட்சியில் தான் பெருமளவில் மாறியது என்பது மதவெறி தமிழகத்தில் தலையெடுக்காமல் இருப்பதற்கான காரணத்தைப் புலப்படுத்துகிறது. 

பெரியாரியமும், அம்பேத்கரியமும் இணைந்து பயணிக்க வேண்டிய தேவையைத் திருமாவளவன் பேசுகிறார். கருத்தொருமிப்பு அரசியல் என்பது தேர்தல் அரசியலில் தாராளவாதத்தை முன்னெடுக்க அவசியம் என ராஜன் குறை கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். திமுகத் தொண்டர்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட நேர்முகங்கள், புகைப்படங்கள் நூலில் உண்டு. அதேசமயம், விமர்சனங்கள் ஆங்காங்கே தூவிக்கிடந்தாலும் மு.கருணாநிதி என்கிற ஆளுமையின் எழுச்சி, இயக்கம், அரசியலை திராவிட இயக்கத்தின் தேவையோடு இணைத்து உணரவும், தமிழ் நிலத்தில் வேரூன்றிய திராவிட அரசியலை இன்னமும் கனிவோடு தற்காலத் தலைமுறை அணுகுவதற்கான திறப்பாக இத்தொகுப்பு அமையும். தெற்கிலிருந்து இந்தியாவின் சமகால வரலாற்றை, அரசியலை புரிந்து கொள்ள, ஆய்வு செய்ய ஊக்கமும், உற்சாகமும் தரும் திமுக மீது மென்மையான அணுகுமுறை கொண்ட முக்கியமான நூல் இது. 

Image result for தெற்கிலிருந்து ஒரு சூரியன்

தெற்கிலிருந்து ஒரு சூரியன்
208 பக்கங்கள்
200 ரூபாய்
தமிழ் திசை பதிப்பக வெளியீடு

தேசியம்-ஒரு உரையாடல்


#விடுதலை தினத்தைப் புறக்கணிக்க வேண்டும், இது கருப்பு தினம் என்றெல்லாம் பகிர்கிறார்கள். அரசுக்கும், தேசத்திற்கும் வேறுபாடு உண்டு. அது முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிய நாடு இது. இதன் பெருமைகளும், சிறுமைகளும் நமக்குரியவை. ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ எனக் கேட்டார் வரலாற்றாசிரியர் முகுல் கேசவன். நம் அனைவருக்குமான கேள்வி அது.#
 
இப்படியொரு பதிவை விடுதலை திருநாள் அன்று எழுதினேன். இந்தியா ஒரு நாடா? இந்தத் தேசியத்தை ஏற்கனவே பெரும்பான்மைவாதமாக மாற்றிவிட்டார்கள், பின் என்ன செய்வது? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள். இவற்றுக்கு முழுமையாகச் சில பத்திகளில் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. எனினும், வரலாற்று ஆசிரியர்கள் முகுல் கேசவன், ஸ்ரீநாத் ராகவன், அரசியல் அறிஞர் சுனில் கில்னானி ஆகியோரின் வாதங்களை இணைத்து எழுதுகிறேன். த. பெனடிக்ட் ஆண்டர்சன் தேசியம் குறித்துச் செய்த ஆய்வுகள், முன்வைத்த கருத்துக்கள் தேசியம் என்பதே தீங்கானது என்கிற பார்வையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. பதிவை நீள வைத்துவிடும் என்பதால் அது இன்னொரு நாள். ற்காலம் குறித்து நான் விரிவாக எழுத முடியாது என்றாலும், இந்தப் பதிவின் மூலம் தேசியம் குறித்த அசூயை குறைந்து, அதில் நமக்கான பங்கை, உரிமையை உணர்ந்து உரையாடுவதன் அவசியம் புரியும் என நம்புகிறேன்
 
தற்போதைய இந்தியா எக்காலத்திலும் ஒரே தேசமாக இருந்தது கிடையாது என்பது பலரின் வாதம். முழுக்க உண்மை. இந்தியாவை அரசியல் அறிஞர்கள் ‘உருவாகி கொண்டிருக்கும் தேசம் ‘ என்பார்கள். தேசியம் என்பது பன்னெடுங்காலமாக இருப்பது என்கிற வாதத்தை நவீன அரசியல் அறிவியல் ஏற்பது இல்லை. வரலாற்று ஆசிரியர்களும் அதனோடு ஒப்புகிறார்கள். தேசியங்கள் என்பவை கட்டமைக்கப்படுபவை. ஐரோப்பாவின் தேசியங்கள் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நாடு என்கிற ரீதியில் கட்டமைக்கப்பட்டன. மாஜினி. கரிபால்டி, பிஸ்மார்க் எனப் பல்வேறு ஆளுமைகள் ஐரோப்பாவில் உருவாக்கிய தேசியங்கள் வேற்றுமைகளைத் துடைத்து எறிந்து விட்டு, ஒற்றைப்படையாக மக்களை ஒன்று சேர்க்க முயன்றன.
 
1878-ல் டெல்லியில் லிட்டனால் தர்பார் கூட்டப்பட்டது. அதில் பல்வேறு சுதேச சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டார்கள். இந்தியா என்கிற வனவிலங்கு சரணாலயத்தின் பல்வேறு விலங்குகளும் அங்கே இருந்தன என்று முகுல் கேசவன் குறிப்பிடுகிறார். இதே பாணியில், ஆனால் , ஆங்கிலேயருக்கு வந்தனம் என்று சொல்லாத ஒரு இந்திய வனவிலங்கு கூட்டத்தைக் காங்கிரஸ் நடத்த முயன்றது. காங்கிரசில் ஆதிக்க ஜாதியினரே ஆரம்பக் காலங்களில் நிரம்பி இருந்தார்கள். அது தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் என அழைத்துக் கொண்டது. இந்தியாவுக்கே பேசுகிறேன் என்று எப்படி நிரூபிப்பது? நோவாவின் கதை தெரியும் இல்லையா? உலகை இறைவன் அழிக்க எண்ணிய போது, ஒரு பெரிய கப்பலை படைத்து அதில் ஒவ்வொரு உயிரினத்தின் ஜோடிகளை மட்டும் ஏற்றுக்கொண்டார் நோவா என்கிறது விவிலியம். அப்படி இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பிய காங்கிரஸ், எல்லாரையும் பெயரளவில் ஆவது தன்னுடைய உறுப்பினராக ஆக்கிக்கொண்டது. இப்படி நோவாவின் மிதவையைப் போல அனைவரையும் உள்ளடக்கக் காங்கிரசின் தேசியம் முயன்றது. இதையே முகுல் கேசவன், ‘Noah’s Ark of Nationalism’ என்கிறார்.
Image result for முகுல் கேசவன்
 
இந்தத் தேசியம் எல்லாருக்குமான தேசியம் இல்லை என்பது உண்மை. ஒரு குடையின் கீழ் எல்லா இனங்கள், மொழியினரையும் கொண்டு வர இது முயன்றது. இந்தக் குடையில் ஒதுங்க முடியாது என்று வெவ்வேறு தரப்பினர் குரல் கொடுத்தார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், தலித்துகள் என்று பலரும் தங்களுடைய தேசியம் இதுவல்ல என்று எண்ணினார்கள், போராடினார்கள்.
 
காங்கிரசின் இந்தத் தேசியத்தை எப்படி வர்ணிப்பது? இதை முகுல் கேசவன், ‘சந்தர்ப்பவாதம், திட்டமிடல், லட்சியவாதம் ஆகியவற்றின் கலவை. ஆங்கிலக் காதல் கொண்ட மக்கள் வருடத்திற்கு ஒருமுறை கூடிய படித்த மேல்தட்டினர் ஆரம்பக் காலத்தில் சமைத்த தேசியம்.’ என்கிறார். இந்தத் தேசியம் அடுத்தக் கட்டத்துக்குத் தாதாபாய் நவ்ரோஜி, ஆர்.சி.தத் முதலியோரால் நகர்ந்தது. இந்தியா என்கிற எங்கள் கனவில் அனைவருக்கும் இடம் என்று மட்டும் சொன்னால் போதுமா? ஆங்கிலேய அரசை எதிர்ப்பது எப்படி? எல்லா இந்தியர்களையும் ஒரே மதம் என்று சொல்லி சேர்க்க முடியாது. அனைவருக்கும் பொதுவான வரலாறு என்று ஒன்றில்லை. மொழி ரீதியாகவும் ஐரோப்பாவை போல ஒன்று திரட்ட முடியாது. தலை சுற்றியிருக்கும் இல்லையா?
 
மொழி, மதம், வர்க்கம் என்றெல்லாம் கிளம்பினால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்குப் புரிந்தது. எல்லா இந்தியர்களையும் பாதிக்கும் ஒன்றை முன்னிறுத்த எண்ணினார்கள். இஸ்லாமிய வியாபாரிகள், ஜாட் விவசாயிகள், பார்சி முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்று அனைவரையும் பாதித்தது காலனியம். ஆங்கிலேய அரசு எப்படித் தன்னுடைய காலனிய ஆட்சியின் மூலம் சுரண்டுகிறது என்பதை எடுத்துரைத்தும், பரப்புரை செய்தும் மக்களை ஒன்று திரட்டினார்கள். காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தைப் பேசியதே அன்றிக் கலாசார தேசியத்தைப் பேசவில்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள் ஆகிய அனைவர்க்கும் அது குரல் கொடுத்தது. வரி விதிப்பு, கட்டணங்கள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் என்று பலவற்றைச் சாடி மக்களை ஒன்று சேர்த்தது.
 
காங்கிரஸ் கனவு கண்ட இந்திய தேசியத்தை இந்துத்வர்கள் மேற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பார்கள். ஆனால், காங்கிரஸ் கனவு கண்ட, பெருமளவில் சாதித்த இந்திய தேசியம் அசலானது. அதற்கு முன் எங்கும் முன்மாதிரி இல்லாதது. ஆச்சரியம் தருவது. இந்துத்வமே உண்மையில் ஐரோப்பிய தேசியத்தின் இறக்குமதி ஆகும். இந்திய தேசியம் ஏன் வளர்ந்தது? அது யாரையும் நீ தேசியவாதி என நிரூபிக்கச் சொல்லவில்லை. ‘தேசபக்தன் என நிரூபிக்க வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தாமலே வளர்ந்த அற்புதம் அது.’ என்பார் சுனில் கில்னானி. எளிமையாகச் சொல்வது என்றால், எது ‘Idea of India?’, ‘No idea/Not one idea’. செக் தேசியவாதி ஜான் மஸர்யக் தேசியம் என்பதில் தேசமே உச்சமான அரசியல் விழுமியம் என்றார். ஆனால், எண்ணற்ற இந்திய தேசியவாதிகள் தேசம் உச்சமான அரசியல் விழுமியம் என்று பேச மறுத்தார்கள். தேசியம் என்கிற வார்த்தையை வரையறை செய்யாமல் காங்கிரஸ் சாமர்த்தியமாக நடந்து கொண்டது.
Image result for srinath raghavan mukul kesavan
 
இந்தத் தேசியம் இஸ்லாமியர்களை இணைத்துக் கொள்ள விடுதலைக்கு முன்னர்த் தவறியது. அது ஆதிக்க ஜாதியினர் பெரும்பாலும் கோலோச்சும் ஒன்றாக இருந்தது. எனினும், இவற்றைத் தாண்டி இந்தத் தேசியம் இந்தியாவை விடுதலைக்குப் பிறகு மதச்சார்பற்ற தேசமாகக் கட்டமைத்தது. தாராளவாதம் மிகுந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைப் பரிசளித்தது. இட ஒதுக்கீடு, சமத்துவம், அனைவருக்கும் வாக்குரிமை என்று பலவற்றை அது கட்டமைத்தது. காங்கிரசின் தேசியத்தின் ஆதிக்க ஜாதி பண்பு, பல்வேறு தரப்பின் கவலைகளைக் கவனிக்காமல் இருந்தது, அதன் போதாமைகளைத் தாண்டி இந்தச் சாதனைகளை அது செய்தது. பல தரப்பையும் ஓரளவுக்காவது அது இணைப்பதை சாதித்தது.
 
ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தின் மூலம் மக்களைத் திரட்டிய காங்கிரஸ் அவர்கள் நாட்டை விட்டு விலகியதும் சவால்களை எதிர்கொண்டது. மக்களை ஒன்றிணைத்த ஆங்கிலேய எதிர்ப்பு விடுதலையோடு முடிந்து போயிருந்தது. எல்லா மக்களுக்கும் பயன் தரும் ஆரம்பக்கல்வியைப் பற்றியோ, விவசாயிகளுக்கு உதவக்கூடிய நில சீர்திருத்தங்கள் குறித்தோ காங்கிரஸ் கவலை கொள்ளவில்லை. அதன் கனவுகள் மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதாக இருந்தது. சோட்டு ராம், சரண் சிங் முதலியோர் எப்படி இந்தியா நகர்ப்புற இந்தியா, கிராமங்களின் இந்தியா என்று பிளவுபட்டு நிற்கிறது எனச் சுட்டிக்காட்டி போராடினார்கள்.
 
ராம் மனோகர் லோகியா, பெரியார் ஆகியோர் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோருக்கு குரல் கொடுத்தார்கள். லோகியா பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கனவு கண்டார்.
எமெர்ஜென்சி இந்துத்துவர்களை அரசியல் மையத்துக்குக் கொண்டு வந்தது. அந்தப் பிளவுபடுத்தும் தேசியத்திற்கான மாற்றான காங்கிரஸ் தேசியம் நேருவுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் அரித்துக்கொண்டே போனது. முகுல் கேசவன் வரியில் சொல்வது என்றால், முன்னையது பட்டவர்த்தனமாக மதவாதம் போற்றுவது, காங்கிரஸோ சமயம், சந்தர்ப்பம் பார்த்து மதவாதத்தைப் பற்றிக்கொள்வது.
Image result for periyar lohia
 
இவற்றுக்கு மாற்றாக எழுந்திருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள் குரல்கள் வடக்கில் வெற்றி பெறவேவில்லை. ஸ்ரீநாத் ராகவன் தெற்கில் காங்கிரஸ், பாஜக அல்லாத வெற்றியை திமுக, அதிமுகச் சாதித்ததன் காரணம் அவை ஆட்சியில் இருந்த போது மக்கள் நலனுக்குத் தங்களால் ஆனதை செய்து காட்டியும் உள்ளன, இது வடக்கில் நிகழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
 
காங்கிரஸ் கனவு கண்ட தேசியம் தன்னிடம் பதில் இல்லாத கேள்விகளைத் தள்ளிப்போட்டது. எது தேசிய மொழி என்கிற கேள்விக்கு விடுதலைக்கு முன்னால் இந்துஸ்தானி மொழி என்றது தேசியம். அதுவும் பாரசீக, தேவநாகரி வரிவடிவங்கள் என இரண்டிலும் இடம்பெறும் என வாக்குத் தந்தது. விடுதலைக்குப் பின்னால் பிரிவினையைக் காரணம் காட்டி பாரசீக வரிவடிவத்தைக் கைவிட்டது. அதோடு நில்லாமல் உருது மொழியைக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. இந்தியை பின்னர் வந்தவர்கள் திணிப்பதற்கான வேர்கள் சமரசம் என்கிற பெயரில் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஊன்றப்பட்டன.
Image result for symbols of indian nationalism'
தேசிய கொடி கிட்டத்தட்ட விடுதலைக்குப் போராடிய காங்கிரசின் கொடி. அதில் அசோக சக்கரத்தை பதித்து அதற்குப் புதுப் பொருள் தரப்பட்டது. தேசிய கீதத்தை பெரும்பான்மைவாதிகள்
விடுதலைக்கு முன்னர்க் கடுமையாக எதிர்த்தார்கள். விடுதலைப்போரில் அவர்களுக்குத் தொடர்பே இல்லை. எனினும், இன்று தேசியத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். அவர்களின் பிளவுபடுத்தும் கனவுகளை நிராகரித்த தலைவர்களை உரிமை கொண்டாடுகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய கனவுகளின் மீது எழுந்த தேசியத்தை ஒற்றைப்படையான பார்வை தனதாக்க பார்க்கிறது. போதுமான அளவில் இல்லை என்றாலும், தன்னளவில் அனைவரையும் இணைத்துக் கொள்ள முயன்ற தேசியம் குறித்துப் பேசுவோர் இல்லை. இப்போது முகுல் கேசவனின் வரிகளை மீண்டும் படியுங்கள், ‘ ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ தேசியத்தைப் பெரும்பான்மைவாதத்தோடு தொடர்புபடுத்திகொள்வதால் நிகழ்வது அதுவே தேசியம் என அங்கீகரிப்பது தான்!
 
உதவியவை:
 
Secular Common Sense
 
Mukul Kesavan’s writings on Nationalism
 
Idea of India