தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன?


தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்

இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)

தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?

இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை,
பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும்,
இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.

(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )

தமிழில்: பூ.கொ.சரவணன்

கும்பளாங்கி இரவுகள்: கனவிலும் கசடுகள் அகற்றும் கதை


 

மது நாராயணின் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா தயாரிப்பில் வெளிவந்திருக்கும்
ஷ்யாம் புஷ்கரனின்
‘கும்பளாங்கி இரவுகள்’ திரைப்படம் ஒரு தனித்த அனுபவம். இதற்கு மேல் சிதிலமடைய முடியாது என்கிற அளவுக்குக் குலைந்து போய் நிற்கும் ஆண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு வீடு தான் கதையின் மையம். குட்டிச்சுவரை கிட்டே நெருங்கும் ஒரு இல்லம். அங்கே கசடுகளும், சச்சரவுகளும், அவநம்பிக்கையுமே சூழ்ந்து நிற்கிறது. ஓரிரு காதல்களும், தன்னை முழுமையான மனிதனாக உணரும் ஒருவரும் இந்த வீட்டின் போக்கை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே கதை.

இந்தக் கதை ஒரு வகையான மாயக்கதை தான். இதனை யதார்த்தத்தின் பிரதி என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தேர்ந்த திரைக்கதையும், வெகு இயல்பாகத் திரையில் வாழும் நடிகர்களும் அலையாத்தி காடுகளும், உப்பங்கழிகளும் நிறைந்த கும்பளாங்கி கிராமத்திற்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையிலான வன்மத்தையும், முன்முடிவுகளையும் தாங்கிக் கொண்டு திரியும் ‘முழுமையான மனிதர்களை’ இப்படம் பகடி செய்கிறது. அதனைப் பரப்புரைத் தொனியின்றிச் செய்வது தான் இப்படத்தை கலைப்படைப்பாக உயர்த்துகிறது. சீர்குலைந்து போன குடும்பங்களை நாடிச்செல்லும் காதல்கள் வீழவே செய்யும் என்கிற பொதுப் புத்தியை கலைத்து போடுகிறார்கள் கும்பளாங்கி மாந்தர்கள்.
மரபை மீறுகிற ஆவேசம் இன்றி, சிற்சில வரிகளில், முக மாற்றங்களில் அடக்குமுறை கேள்விக்கு ஆளாகிறது.

#spoilers ahead#
‘என் பெற்றோரின் சாபம் தான் நான் இருக்கிற இடத்தை எல்லாம் மண்மேடாக ஆக்கிவிடுகிறது. இந்த வீடும் அப்படி ஆகிடும்’ எனக் கதறுகிற பெண்ணைப் பார்த்து, ‘இதுக்கு மேலே இந்த வீட்டில நாசமா போக என்ன இருக்கு? என்னடா ஃபிராங்கி’ எனச் சௌபின் கேட்கையில் ஊழை வெல்லும் உறுதி திரையில் ஒளிர்கிறது. ‘நான் ஆம்பிளைடி’ என ஷானே நிகாம் முஷ்டி முறுக்குகையில் ‘போடா’ என்று நாயகி புறங்கையால் அவனைத் தள்ளுவது அத்தனை அழகானது. ‘மீன் பிடிக்கிறதெல்லாம் மட்டமான தொழில் இல்லையா?’ என்கிற மேட்டுக்குடியின் கேள்வியை மீனவரின் மகனே கேட்கிற போது, அன்பும், உணவின் சுவையின் நினைவுகளும் மின்ன, ‘எனக்கு மீன்னா உசுரு. மீன் பிடிகிறது கேவலம்னு நான் சொன்னேனா’ என்று அவனுடைய காதலி கேட்கையில் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மதங்களைக் கடந்து காதல் கொள்ளும் பெண், %கர்த்தர் நமக்கும் தான் நெருக்கமானவர் % என்கிற கணம் ஆழமானது.

Image may contain: 7 people, including Gowthami, people smiling

‘என்னடீ நான் உனக்கு அண்ணன் இல்லையா’ என்று காதலை குலைத்து போடும் தருணத்தில், ‘நீ அண்ணனாவே இருந்தாலும் வாடி, போடி போடக்கூடாது.’ என்கிற எதிர்க்குரல் ஏன் அத்தனை கம்பீரமானதாக இருந்தது? அதுவரை எதிர்ப்பைக் காட்டாத பெண்ணிற்குள் கனன்று கொண்டிருக்கும் கேள்வித்தீ சுடர்விட்டுப் பரவுகையில் ஊற்றெடுக்கும் வெம்மை தானோ அது?
#spoilers over#

கச்சிதமான மனிதனாக வலம்வரும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பும், அந்த மிரட்டும் பார்வையும், மிரளவைக்கும் மருட்சியான சிரிப்பும், எதையுமே செய்யாமலே எதையாவது செய்து விடுவாரோ என்கிற படபடப்பை தருகிற காட்சியமைப்பும் மறக்க முடியாத அனுபவத்தை வாரி நிறைக்கின்றன. கும்பளாங்கி இரவுகள் அவநம்பிக்கை, மரணங்கள், கண்ணீர், காழ்ப்புகள் அனைத்தையும் கரைக்கும் வல்லமை மானுடத்திற்கும், நகர முனையும் மாந்தர்களுக்கும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. இந்தக் கதையின் நாயகர்கள் அசகாயசூரர்கள் இல்லை, அவர்கள் மடிகள் நாடி தேம்புபவர்கள். உடன்வர மறுக்கும் உறவுகளின் வலிகளை உணர்ந்து கொள்கிறவர்கள். இடிபாடுகளில் இருந்து எழுந்து புன்னகைப்பவர்கள். படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பவர்களை எட்டி உதைக்க அஞ்சாதவர்கள். அவசியம் பாருங்கள்.

நேருவின் நம்பிக்கை பகுதி-4


நேருபகுத்தறிவை பயன்படுத்திக் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்து முடிப்பது எளிமையான காரியம். அதே சமயம், ஒருவரின் அற நம்பிக்கைகளைப் பகுத்தறிவை கொண்டு எடை போடுவது சவாலான ஒன்று. எப்படிப்பட்ட அறக்கொள்கைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு விடாமுயற்சி தேவைப்படும். இதை நேருவின் வாழ்க்கை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. காந்தி அகிம்சையைத் தன் வாழ்நாள் முழுக்கக் கடைபிடித்ததை எடுத்துக் கொள்வோம். அகிம்சை தான் உலகத்தின் உன்னதமான கொள்கையா? நவீன காலத்தில் அரசாங்கங்களின் வன்முறையின் வடிவமாகத் திகழும் சிறைச்சாலைக்குள் நேரு அடைக்கப்பட்டிருந்தார். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்தபடி ‘இந்தச் சிறைச்சாலையில் தான் ஒரு அரசாங்கத்தின் அடிப்படை குணம் என்ன என்று எனக்குத் தெளிவாகப் புரிகிறது. அது வன்முறை, கட்டாயப்படுத்துதல், ஆள்பவர்களின் வன்முறை ஆகியவையே ஆகும்.’ என்று எழுதினார் நேரு. இப்படிப்பட்ட மன உளைச்சல் தரும் வேளையில் காந்தியின் அகிம்சையை நேரு ஆய்வு செய்தார்.

காந்தியை போல அகிம்சையில் நேரு அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அகிம்சையில் காந்தி அளவுக்குப் பற்றில்லாத தன்னைப் போன்றவர்களை அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என்றார் நேரு. “நான் தொடர்ந்து சந்தேகங்களால் அலைக்கழிக்கப்படுகிறேன்… எப்போதும் பயன்படும் ஒரு தத்துவம் இருக்கக்கூடாதா? அந்தத் தத்துவம் தனிமனிதனின் அறத்தை காக்க வேண்டும். அதே சமயம் சமூகத்திற்கும் பயன்படுகிற ஒன்றாகவும் அது இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.”(சுயசரிதை, பக்கம் 538). அகிம்சை அரசியலில் வேலைக்கு ஆகுமா? ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை தொடர்ந்து வன்முறை, வன்முறையின் கருவிகளோடு பயணித்துக் கொண்டே இருக்கிறது. “வன்முறையே நவீன அரசுகள், சமூக அமைப்புகளை இயங்க வைக்கும் ரத்தமாக இருக்கிறது…அரசுகள் கருணையின் சாயலின்றி அடிப்படையில் வன்முறையையே நம்பியே இருக்கின்றன.”, அரசுகள் நேரடியாக வன்முறையைப் பயன்படுத்துகின்றன. அது மட்டுமில்லாமல் மறைமுகமாக, நாசூக்காக, ‘வன்முறையைக் கல்வி, பத்திரிகை ஆகியவற்றின் மூலம் மறைமுகமாக, நேரடியாகப் பரப்புரை செய்கின்றன. மதத்தைக் கொண்டும், வறுமை, பஞ்சம் ஆகியவற்றைக் காரணம் காட்டியும் வன்முறையை அரசுகள் நியாயப்படுத்துகின்றன’ என்று நேரு எழுதினார். (சுயசரிதை, பக்கம் 541). ஜெர்மானிய அமெரிக்க ஆன்மீகவாதியான ரெயின்ஹோல்ட் நீபுரின் கருத்துக்களின் தாக்கம் தெரிகிற ஒரு பத்தியில் நேரு இப்படி எழுதினார். “பகுத்தறிவின் வளர்ச்சியோ, மதப்பார்வையின் எழுச்சியோ, அற உணர்வின் பெருக்கமோ எதுவுமே வன்முறையை நாடுகிற மனப்பான்மையைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை.” என்று புலம்பினார் (சுயசரிதை பக்கம்: 542).
நேரு காந்தி

அரசே வன்முறையைப் பயன்படுத்தும் நிலையில் அதை எப்படி எதிர்கொள்வது? அரசை எதிர்க்கும் நேருவைப் போன்றவர்கள் வன்முறையை எப்படிக் கையாள்வது? நாளை இந்தியர்கள் ஆட்சிக்கு வந்தால் நாம் எப்படி அதிகாரத்தைப் பயன்படுத்துவோம் என்று கவலைப்படுவதா? இல்லை கண்மூடித்தனமான நம்பிக்கையோடு வன்முறை பாதையில் எப்போதும் பயணிக்கக் கூடாது என்று உறுதியோடு காந்தியின் வழியில் பயணிப்பதா? நேருவுக்கு இப்படிப் பல்வேறு கேள்விகள் குடைந்து எடுத்தன. எப்படி அதிகாரத்தை அறத்தோடு பயன்படுத்துவது என்கிற கேள்வியோடு நேரு மல்லுகட்டி கொண்டிருந்தார். (இந்தக் கவலை நேருவுக்கு அவர் வாழ்நாள் முழுக்க இருந்து கொண்டே இருந்தது.)

‘நேரு உங்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் எது?’ என்று ஆண்ட்ரே மால்ராக்ஸ் கேட்டார். ‘ஒரு நியாயமான சமூகத்தை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்றார் நேரு. (இதைவிட நேரு துல்லியமாக, ‘ஒரு நியாயமான அரசை நியாயமான வழியில் கட்டி எழுப்புவது.’ என்று சொல்லியிருக்கலாம்.) ஒரு தனிமனிதனுக்கு எது அறமாக இருக்கிறதோ, அதை அரசியல், சமூகச் செயல்பாட்டுக்கான கொள்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா? அது ஒரு பெருங்கூட்டத்தை வழிநடத்த முடியுமா? காந்தி முடியும் என்று நம்பினார். நீபுர் அது சாத்தியமில்லை என்று எண்ணினார். நேரு நீபுர் சொன்னதே சரி என்று பெருமளவில் ஒத்துப்போனார். தனிமனிதனின் அறத்துக்கும், ஒரு பெருங்கூட்டத்தின் அறத்துக்கும் இடைவெளிகள் உண்டு என்று நீபுர் போல நேருவும் கருதினார். ஆகவே, தனிமனித அறம் அப்படியே முழுக்க முழுக்கப் பெருங்கூட்டத்துக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது.

இதுவரை நீபுர் சொன்னதோடு ஒத்துப்போன நேரு, இதற்குப் பிறகு காந்தியின் பக்கம் சாய்கிறார். ‘ஒரு இலக்கை எப்படி அடைகிறோம் என்பதும் முக்கியம். எது நடைமுறைக்கு உகந்தது என்று பார்ப்பதோடு நில்லாமல், எது அறம் என்றும் பார்க்கவேண்டும். மோசமான, அறமற்ற வழிமுறைகள் இறுதியிலும் பெரும்பாலும் தோல்வியைத் தருகின்றன. இல்லையென்றால், அவை புதிதாகப் பெரிய பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றன. ஒரு மனிதன் எப்படிப்பட்ட பாதையில் பயணிக்கிறான் என்பதைக் கொண்டே அவனை உண்மையாக எடை போடவேண்டும். அதைவிட்டுவிட்டு அவன் தன்னுடைய இலக்கை அடைந்ததைக் கொண்டு மட்டும் அவனைச் சீர்தூக்கி பார்க்கக் கூடாது… பயணிக்கிற பாதையும், அடைய வேண்டிய இலக்கும் பிரித்துப் பார்க்க கூடாதவை. இரண்டுமே முக்கியம்.’ (சுயசரிதை பக்கம்: 549). காந்தி தன்னுடைய அறநெறிக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த அகிம்சையைக் கூட நேரு அப்படியே ஏற்கவில்லை. அதைப் பகுத்தறிவோடு அணுக வேண்டும் என்று நேரு கருதினார். அகிம்சையைக் கேள்வி கேட்க கூடாத கொள்கையாகவோ, மத நம்பிக்கையாகவோ நேரு பார்க்க மறுத்தார். அதைத் தொடர்ந்து அறிவுப்பூர்வமாக மீளாய்வு செய்து, அதை வெவ்வேறு எடுத்துக்காட்டுகளோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார்.

தன்னைத் தொடர்ந்து சுய விமர்சனம் செய்து கொண்டிருந்த நேருவின் விழிப்புணர்வைப் புரிந்து கொள்வது முக்கியமானது. நேரு எப்படித் தனக்கான அறப்பொறுப்புகளை முடிவு செய்யப் போராடிக்கொண்டே இருந்தார் என இதுவே உணர்த்தும். எப்படி எதிரிகளைக் கையாள்வது என்கிற கவலைதருகிற கேள்வி நேருவுக்கு எழுந்தது. அது குறித்துக் காந்தியும், நேருவும் முப்பதுகளில் உரையாடிக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் தான் காந்தி தீண்டாமைக்கு எதிராக இயங்கிக் கொண்டிருந்தார். காந்திக்குப் பழமைவாதிகளான சனாதனிகள் பலர் எதிரிகளாக மாறினார்கள். காந்தியை தொடர்ந்து வசைபாடும் விஷமம் மிகுந்த பரப்புரைகளை மேற்கொண்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் நேரு 1933-ல் காந்திக்குக் கடிதம் எழுதினார். தன்னுடைய எதிரியின் முரண்பாடான கருத்துக்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை மக்களுக்கு இல்லாமல் இருப்பதை நேரு சுட்டிக்காட்டினார். அந்தக் கடிதத்தில் இன்னொரு சுவையான உண்மையை நேரு வெளிப்படுத்தினார். நேருவும் சமயங்களில் எதிர்த்தரப்பின் கருத்துக்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதவராக இருந்தார் என்பதே அந்த உண்மை. “ஒருவர் கடுமையாக அழுத்தம் கொடுக்கும் பொழுது எல்லாச் சகிப்புணர்வும் காணாமல் போய்விடுகிறது. சனாதனிகள் உங்களைக் கடுமையாக வெறுப்பதற்கு என்ன காரணம்? நீங்கள் அவர்களுக்குக் கடும் அழுத்தத்தைத் தருவதன் அடையாளமே அது.” என்று நேரு எழுதினார்.

மேலும், “நான், சாப்ரூ ஆகியோர் எங்களுடைய மதச் சகிப்புத்தன்மை எப்படி உயர்ந்தது என்று பெருமையாகப் பேசிக்கொண்டே பீடுநடை போடுவோம். ஆனால், எங்களுக்கு என்று பெரிதாக மத நம்பிக்கை என்று எதுவுமில்லை… எங்கள் மனதுக்கு நெருக்கமான ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து நீங்கள் பேசுங்கள். அப்போது எங்களுடைய சுயரூபம் தெரியும். நாங்கள் சகிப்புத்தன்மை துளிகூட இல்லாதவர்கள் என்று புரிந்துவிடும். சில விஷயங்களில் உங்களை விடப் பொறுமை இல்லாதவர் யார் இருக்கிறார்? உண்மையில் சகிப்புத்தன்மை என்பதே அரிதிலும் அரிதாகத்தான் தென்படுகிறது. சகிப்புத்தன்மை என்கிற பெயரில் அலட்சியமே நிலவுகிறது. நாம் எதை மதிக்கவில்லையோ, அவற்றைக் கொண்டு நாம் மற்றவர்களைச் சகித்துக்கொள்வதாகக் காட்டிக்கொள்கிறோம்.” என்று நேரு எழுதினார். இந்த மேற்கோளின் மூலம் நேரு தன்னுடைய அற லட்சியங்களைத் தொடர்ந்து பரிசோதித்துக் கொண்டே இருந்தார் என்பது தெளிவாகிறது. எப்போதெல்லாம் தான் தடுமாறுவதாக நேரு உணர்ந்தாரோ அப்போதெல்லாம் அதனை நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

Image result for nehru the man who saw future

அறக்கொள்கைகள் உலகத்தில் இருந்தே தோன்ற வேண்டும். அவை உலகத்தோடு தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். நடைமுறைத் தேவைகளை உணர்ந்த பகுத்தறிவாகவும் அறப்பகுத்தறிவு இருக்க வேண்டும். அறப்பகுத்தறிவு வெறுமனே புரியாத கொள்கைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்ல. அனுபவங்கள், வரலாறு ஆகியவற்றைத் தொடர்ந்து மனதுக்குள் அசை போட்டு, எடை போடுகிற தெளிவான முயற்சி அது. “இன்றைய தேவைகள் தங்களுக்கு ஏற்றவாறு புதிய அறங்களை உருவாக்க நம்மைக் கட்டாயப்படுத்தும். நாம் இந்த ஆன்மாவின் நெருக்கடிகளில் இருந்து வெளிவர விரும்பினால், உண்மையான ஆன்மீக இலட்சியங்கள் எது என்று உணர விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? நம் கண் முன்னால் நிற்கும் பிரச்சினைகளைத் திறந்த மனதோடும், தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டும். மதத்தின் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போய்விடக் கூடாது.” என்று நேரு தன்னுடைய சுயசரிதையில் எழுதினார். (பக்கம் 550). இன்னும் பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டும் என்றால் நேருவின் வாழ்க்கையை ஒரு அறிவு சார்ந்த செயல்திட்டம் எனலாம். அந்த வாழ்வில் அவர் பகுத்தறிவின் கருவிகளை, அறப்பகுத்தறிவோடு இணைக்கவும், அவற்றுக்குள் சமரசத்தை ஏற்படுத்தவும் முயன்றார்.

நேரு தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கு முற்றிலும் நேர்மாறாகக் கொள்கை முடிவுகள், அரசியல் செயல்பாடுகள் ஆகியவற்றில் செயல்பட்ட தருணங்கள் உண்டு. ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பு உரையாடுவது, பகுத்தறிவால் அச்செயலின் பல்வேறு கோணங்களை ஆய்வு செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டார். அதற்குப் பின்பே அவர் செயல்பட்டார். இதற்கு அனைவரும் நன்கறிந்த, நமக்குப் பாடமாகத் திகழும் மொழிவாரி மாநில உருவாக்கமே எடுத்துக்காட்டு. ஐம்பதுகளில் இருந்தே மொழிவாரி மாநிலங்கள் வேண்டும் என்றும், இந்திய குடியரசின் பல்வேறு மாநிலங்களை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் எண்ணற்ற கோரிக்கைகள் எழுந்தன. நேரு தன்னுடைய ஆரம்பக் கால அரசியல் வாழ்க்கையில் மொழிவாரி மாநிலங்களை ஆதரித்தவர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவை மொழிவாரியாகப் பிரித்தால் இந்தியாவின் மாநிலங்களுக்குள் மோதல்கள் ஏற்பட்டு, நாடு பிளவுபடும் என அஞ்சினார். ஆரம்பகட்ட அரசியலமைப்பு சட்ட உருவாக்க விவாதங்களில் அழுத்தமாக நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நேரு பதிவு செய்தார். ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் போராட்டங்கள் (சமயங்களில் வன்முறை போராட்டங்கள்) வாதங்கள் ஆகியவை நேருவின் பார்வையை மாற்றின. நேரு இந்த விஷயத்தில் தொடர்ந்து காலதாமதப்படுத்துபவராக, மழுப்புவராக இருந்தார் என்று சாடப்படுகிறார். பொதுமக்களின் உணர்ச்சி மிகுந்த கோரிக்கைகளுக்கு உடனே செவிமடுக்காமலும், இழுத்தடிக்கவும் செய்தார் நேரு. இதனால் போராடுபவர்களைத் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வைத்ததோடு, படிப்படியாகக் கோரிக்கைகளை மறு ஆய்வு செய்யவும் வழிகோலினார். இப்படிப்பட்ட செயல்பாடுகளின் மூலம் அவர் இந்திய குடியரசை வலிமைப்படுத்தியதோடு, அதன் ஆயுளை நீட்டிக்கவும் செய்தார்.

தாகூர், காந்தியை போல அல்லாமல் நேரு நாட்டை ஆளும் பொறுப்பைச் சுமந்தார். ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பு அதிகாரத்தை ஓரிடத்தில் அமைப்புரீதியாகக் குவித்து வைக்கிறது. நவீனகாலங்களில் பகுத்தறிவை உன்னதமான செயல்களுக்குப் பயன்படுத்தும் வாய்ப்பை தருகிற மிகமுக்கியமான பொறுப்பு அது. இப்படிப்பட்ட அதிகாரத்தோடு எண்ணற்ற தேர்வுகள், பொறுப்புகளும் நேருவை வந்து சேர்ந்தன. இது எப்போதும் ஒரு எதிரியை கூடவே வைத்திருப்பதைப் போன்றது. அர்னால்ட் டோய்ன்பீ குறிப்பிடுவதைப் போல, “தன்னுடைய லட்சியங்களுக்காகப் பிறரை சிறையில் அடைப்பதை விடத் தன்னுடைய லட்சியங்களுக்காகத் தானே சிறைச்சாலையை முத்தமிடுவது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. நேரு இரு வகையான அனுபவங்களுக்கும் சொந்தக்காரர்.” அதிகாரம் கட்டற்ற கண்மூடித்தனத்தோடு இயங்குகிறது என வலியோடு நேரு உணர்ந்தார். அதிகாரத்தை நியாயமான காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற தாகம் குறையாமல் நேரு இயங்கினார். அந்த உயரிய லட்சியத்திற்காக சமூகத்தின் அறநெறிக்கான தேடலைப் பகுத்தறிவை கொண்டு மேற்கொண்டார்.

இந்த அறநெறிக்கான வழிகாட்டுதலைப் பெறுவதற்கு மற்றவர்கள் மதநூல்களை நாடியிருப்பார்கள். நேரு அப்படிச் செய்யவில்லை. பலதரப்பட்ட, தீவிரமான மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டில் நவீன அரசு எப்படிப்பட்ட பண்புகளோடு இருக்கும் என்கிற நேருவின் புரிதலே இதற்குக் காரணம். அவருக்கு இருந்த அசரவைக்கும் வரலாற்று அறிவோடு, அவரின் சொந்த அனுபவங்களும் கைகொடுத்தது. ஒரு அரசாங்கம் எப்படி இயங்கும் என்பதை வெகு அருகில் இருந்து பார்த்தவர் நேரு. ஒரு சிறைக்கைதியாக எப்படி மூடநம்பிக்கை அலைக்கழிக்கும் என்றும் நேருவுக்குத் தெரியும். அரசியல் அதிகாரம் எப்படித் தான் விரும்பியபடியெல்லாம் இயங்கும் என்றும் நேருவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு ஆட்சியாளன் எப்படிப்பட்ட அதிகாரத்தைத் தன்னுடைய குடிகள் மீது செலுத்த முடியும் என்பதை நேரு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்ததால் நன்கு அறிந்திருந்தார்.

இந்தியா மேலும் மேலும் ஜனநாயகமயமாகி வருகிறது. அரசியல் செயல்பாடுகள் பலரையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றன. ஆகவே, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், அரசு ஆகியவை மத நம்பிக்கையை இன்னமும் நெருக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற வாதங்கள் பல தளங்களில், வெவ்வேறு வடிவங்களில் கேட்கின்றன. ஐரோப்பியாவில் வரலாற்று அனுபவங்களில் இருந்து இரண்டு அடிப்படையான அரசியல் பாடங்களை நாம் படிக்க வேண்டியிருக்கிறது. மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அரசின் பண்பை வரையறுக்க முயல்வதில் ஒரு பேராபத்து இருக்கிறது. அரசுக்கு ஒரு மத அடையாளத்தை அது தந்துவிடுகிறது. இரண்டாவதாக, சில அவசர காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் பொது மக்கள் தங்களுடைய அதிகாரங்களைச் சில அரசியல்வாதிகளின் கையில் ஒப்படைக்க முடியாது. அதைப் போலவே மதத்தை நம்பியும் குடிமக்கள் தங்களுடைய அதிகாரங்களை ஒப்படைப்பது ஆபத்தான ஒன்று. தொடர்ந்து வெவ்வேறு ஜனநாயக அமைப்புகளின் மூலம் அரசியல் அதிகாரம் என்பது பொறுப்பு மிக்கதாக, நியாயமான முறையில் செயல்படுவதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக அரசுகளை மத நம்பிக்கை கொண்டதாக மாற்றுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. இந்த இரண்டு பாடங்களுக்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கிறது. ஜனநாயகம், மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாத அரசு ஆகியவை உலகம் முழுக்கப் பெரும்புயலில் சிக்கிக் கொண்ட படகுகள் போல அல்லாடுகின்றன.

ஐரோப்பாவின் அரசியல் அனுபவத்தில் இருந்து பாடம் படித்த மிகச் சில இந்திய அறிவுஜீவிகளில் நேரு ஒருவர். அவர் இந்த இரண்டு முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டார்: ஒரு நவீன அரசுக்கு அரசியல் ஏற்பை தருகிற ஒரே அளவுகோல் ஜனநாயகம் மட்டுமே. ஒரு நவீன அரசை மதத்தோடு தொடர்புபடுத்தினால் அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும். நேரு ஐரோப்பிய, இந்திய வரலாறுகளை வாசித்து உணர்ந்தவர் என்பதால் அவரால் ஒரு ஒற்றுமையைக் காண முடிந்தது. இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய அரசுகள் எப்படி அதிகாரத்தையும், மதத்தையும் கையாண்டன என அவர் ஆராய்ந்து பார்த்தார். இந்த அரசுகள் எல்லாம் சமூகத்தின் மத நம்பிக்கைகளை முடிந்தவரை அரசியல் அதிகாரத்தில் இருந்து தள்ளியே வைத்திருந்தன. சமயங்களில் மதம் அரசியலில் தலையிட்டாலும், அதை அரசுகள் மட்டுப்படுத்தவே முயன்றன என நேரு உணர்ந்து கொண்டார்.

Related image

பேராசிரியர் சுனில் கில்னானி, இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். தீன்மூர்த்திப் பவனில் அவர், 2002-ல் நிகழ்த்திய ‘நேருவின் நம்பிக்கை’ எனும் உரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு நேருவின் நினைவுதினத்தை ஒட்டி வெளியிடப்படுகிறது.

கடவுள் தொடங்கிய இடம்- அ.முத்துலிங்கத்தின் மனிதம் நிரம்பிய உலகம்


அ.முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய இடம் நாவலை ஆனந்த விகடனில் தொடராக வந்த பொழுது வாசிக்கவில்லை. நூலாக வந்து வெகுநாட்கள் பரணிலேயே கிடந்தது. சிறுகதையில் அற்புதமான உணர்வுகளை, நிசப்தத்தைக் கடத்தியவர் நாவல் வடிவத்தில் கோட்டை விட்டிருப்பாரோ என்கிற அச்சமே காரணம்.

நிஷாந் எனும் ஈழத்தமிழ் இளைஞன் பதினொரு ஆண்டுகளைக் கடந்தபின்பு தன்னை அகதியாக ஏற்கும் ஒரு மண்ணை இறுதியாகக் கண்டறிவதே களம். ஐந்து கோடி அகதிகளின் வலியை பல்வேறு கதைகளின் மூலம் கடத்தி விடுகிறார் ஆசிரியர். சொல்லியதை விட, சொல்லாமல் விட்டு இடைவெளிகளை நம்மை நிரப்ப வைத்து ஆசிரியர் ஒரு தவிப்பான நிலையை நோக்குத் தள்ளுகிறார்.

மாஸ்கோ நகரத்தை நோக்கி இயக்கத்தில் சேர விரும்பியதால் அனுப்பப்படும் நாயகன் விமானம் கிளம்புவதற்கு முன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளுடைய வசீகரம், கம்பீரம் ஆகியவை பற்றி வர்ணனைகள் ஒரு காதல் அத்தியாயமோ என்று எண்ண வைக்கிறது. அந்தப் பெண்ணை அதிகாரிகள் விசாரித்து விட்டு, தூக்கிக் கொண்டு போகையில் ‘நானில்லை, நானில்லை’ என அவள் கதறும் கணத்தில் எத்தனையோ நினைவுகள் நம்மை மோதி அதிரடிக்கின்றன. முத்துலிங்கம் அவளைப் பற்றி ஒரு வரி இப்படி எழுதுகிறார், ‘அவள் கண்களில் எத்தனை நம்பிக்கை தெரிந்தது?’

இயக்கத்தில் சேர்ந்த தன்னுடைய மாணவர்களைப் பற்றிப் பேசும் ஆசிரியர் ‘மரணத்துக்கு அஞ்சாமல் இருந்துவிட்டால் பரிணாம வளர்ச்சியே இருக்காது’ அறிவுரீதியாகச் சொல்லிவிட்டு, ‘நாங்கள் சாவுலகத்துக்குப் பயணப்படவில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணப்படுகிறோம். அவ்வளவுதான்’ என்கிறார் ஆழமாக.

சிங்கள பேரினவாத வன்முறையை இப்படிக் கடத்துகிறார் ஆசிரியர். ‘ரொஹான் என்கிற சிங்கள பொடியனைப் பற்றி விசாரித்ததில் அவன் பெயர் இன்னமும் பிரபலமாக இருந்தது. விசாகா பள்ளிக்கூடத்தில் படித்த பள்ளி மாணவியை இவன் பலாத்காரம் செய்த இடத்தில பிடிபட்டுவிட்டான்.’ கொள்ளையில் ஈடுபட்ட பத்மராசன் எனும் பாத்திரம், ராணுவ பாதுகாப்பு அமைச்சரைக் கொன்ற தமிழ்ப் பொடியன்கள் என்று அன்று நிலவிய சூழலின் சிக்கலை கண்முன் நிறுத்துகிறார். அந்த இளைஞர்கள் தப்பி விமானத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கழுத்தில் நச்சுக்குப்பி இரண்டு வருடங்களாக இருந்திருக்கிறது. ‘ஒருவன் சாவதற்கு இத்தனை வழிகள். அப்படியென்றால் வாழ்வதற்கு எத்தனை வழிகள் இருக்கும்?’ என வாழ்வின் நம்பிக்கை தொலைத்துவிட்ட எல்லாரிடமும் கேட்கிறது ஒரு குரல்.

கிரேக்க நாடகம், பாக் லண்டனின் நாவல், மைக்ரோக்ராப்டர் பறவை என்று ஆங்காங்கே கதைகளும், தகவல்களும் கதைப்போக்கை சுவைப்படுத்துகின்றன. க்யூபா போய்ச் சேர்ந்த மாஸ்டர் ஒருவர், நோபல் பரிசைப் பெற்ற, ‘கிழவனும், கடலும்’ நாவலை இங்கேயிருந்து தான் எழுதினார். அவர் உட்கார்ந்து எழுதிய வீடு கிட்டத்தில் தான் இருக்கிறது. அவர் வாழ்ந்த வீட்டை பார்க்கவேவில்லை.’ என ஏக்கம் ததும்ப எழுதுகிறார்.

ஒரு பதினேழு வயது தமிழ் இளைஞன் ஒருவன், அடுத்துக் கனடா போவது எப்படி எனத்தவித்துக் கொண்டிருக்கும் மாஸ்டரிடம் தன்னுடைய போர்டிங் அட்டையைத் தந்து ‘அண்ணை நீங்கள் தயங்காமல் ஏறிப்போங்கள்.’ என்கிறான். அதற்குப் பின் அவன் எப்படி வருவான் எனச்சொல்லும் வழி சுவையானது.
சந்திரா மாமி கணவனை இழந்து பறவைகளின் குரலைக் கேட்டு அகதி வாழ்க்கை சீக்கிரம் ஒரு புள்ளியை எட்டும் என நம்புகிறவர். விலங்குப் பண்ணையில் எலி நல்லதா, கெட்டதா எனப் புரியாமல் இரு பக்கமும் வாக்களிக்கும் நாய், பூனை போலத் தன்னுடைய வாழ்க்கையில் தவிப்பவர். சிக்கட்டி பாடுகிறது எனும் அவர் எல்லை தாண்டி தப்பித்துப் போகையில் விபத்தில் சிக்கி மரணத்தை எதிர்கொள்ளும் சூழலில், ‘லூன் நீர்ப்பறவை வலசை முடிந்து திரும்பிவிட்டது. இதுதான் நாள்’ என்கையில் எல்லாரும் பறவைகள் தானோ என்று சோகம் கம்முகிறது.

லாரா என்கிற ரஷ்ய பெண்ணிடம் பூண்ட காதல் வெகுசீக்கிரமே கைநழுவி போய்த் தற்கொலை எண்ணத்தில் நிற்கிறான் நிஷாந். அப்பொழுது கொலை செய்துவிட்டு துப்பாக்கியோடு அமர்ந்திருக்கும் ஒரு முதியவன் இப்படிக் கேட்கிறான், ‘கியெவ் நகரத்தில் அழகான ஒரு தேவாலயம் உள்ளது., அங்கே தொங்கும் சரவிளக்குகள் நான்கு டன் எடை கொண்டவை. அதன் அழகை ரசித்தாயா?’ எனக்கேட்கிறார். ‘நான் அகதி ஐயா! நாடில்லாதவன்’ என்று நிஷாந் சொல்கையில் ‘நாடில்லாதவன் காதலிக்கலாம் ரசிக்கக்கூடாதா? ரசிப்பதற்கு நாடு தேவை இல்லை. வியப்படைய அறிவு தேவையில்லை..’ என்று சாகத்துடிக்கும் எல்லாருக்கும் சேர்த்து வைத்துப் பேசுகிறார்.


நாவலின் உச்சமான பகுதியும், உணர்வுப்பூர்வமான தருணமும் அகல்யா எனும் நாயகி வரும் கணங்கள் தான். ஓரிரு அத்தியாயங்கள் மட்டுமே வரும் அவளின் ஊடாகப் பெண்ணின் ஆழமான மனத்தைக் கடத்துகிறார் முத்துலிங்கம். தன்னுடைய கணவனை விட்டு வானம்பாடி பிடிக்கும் மனிதனிடம் சென்று திரும்பும் அகவ்யா எனும் பெண் கணவனை விட்டு நீங்க முடிவு செய்கிறாள். அவளின் கதை செகாவின் எழுத்தில் வருவதை ரஷ்யப்பெண்மணி ஒருவர் சொல்கிறார்.
மிருகசிருஷம் நட்சத்திரக் கூட்டம் சாட்சியாகக் காதலை உறுதிப்படுத்தும் அகல்யா, ரோமன் எழுத்துக்கள் பதித்த கடிகாரத்தை நாயகனுடன் இணைத்து வாங்கிக் காலத்தைக் காதலோடு கடக்கிறாள்.

\ வில்லைப் பற்றுவது போல என வரும் ‘வில்லக விரலின் பொருந்தி’ என்பதைப் போலத் தன்னைப் பற்றச்சொல்கிறாள்.
அவர்களுக்கிடையே நடக்கும் கலப்பை முத்துலிங்கம் வித்தியாசமான மொழிநடையில் இயந்திரத்தனமாகத் தருவதாகத் தோன்றியது. அந்த அகல்யா அகவ்யா போல ஆகும் கணத்தில் எண்ணற்ற கதைகள் இப்படித்தானே என்று மருகத்தான் முடிகிறது. அவள் அனுப்பிவைக்கும் முன்னூறு டாலரில் ‘நான் நினைவில் வெச்சா மறக்கமாட்டேன்’ என்கிற அவளின் வரி நகைமுரணாக எதிரொலிக்கிறது.

வண்ணநிலவனின் கடல்புரத்தில் கொலை செய்தவர்கள் மீது கூட வெறுப்பு வராத வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைப்போலப் புஷ்பநாதன் கொலை செய்த பொழுது அவரை வெறுக்க முடியவில்லை. அனுதாபமே ஏற்படும் வகையில் காட்சி அமைகிறது. ரஷ்ய பெண்ணுடன் சண்டையிட்டு, பயந்து ஓடிவரும் அவரை நிஷாந் காத்த பின்னர் ‘நான் வீர சைவ வேளாளர்’ என அவர் இரைவதில் தெறிக்கும் வீரம் எல்லா ஜாதிப்பெருமையையும் எள்ளி நகையாடி மிளிர்கிறது. அதே புஷ்பநாதன் ஏழாண்டு சிறைத்தண்டனை பெற்று சிறையை நோக்கிப் போகையில் நிஷாந்திடம் கிட் காட் வாங்கித் தன்னுடைய மகளுக்கு அனுப்பச்சொல்கிறார். மூன்று வயதில் பார்த்த மகளை இருபது வருடங்கள் பார்க்காமல் வலியைத் தேக்கிக்கொண்டு அவளுக்குச் சாக்லேட் வாங்கித்தரும் துடிக்கும் அந்தத் தவிப்பு பல லட்சம் அப்பாக்களுக்கும் உரியதுதானே?

மாஜிஸ்திரேட் ஒருவரின் வாயிலாக டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்டு, சுரண்டிய கதை கண்முன்னால் விரிகிறது. அவரின் மூதாதையர் மயில்வாகனம் என்கிற நல்ல புரவலரை மக்களின் பசியைப் போக்கிய பொழுது சிறையில் அடைத்ததற்குப் பழிவாங்கும் வண்ணமாகத் தற்போது இரு நாடுகளில் அகதியாகப் பணித்து டச்சு அரசிடம் கில்டர் காசுகளை வசூலிக்கும் மாஜிஸ்திரேட் நிலை என்னானது என்பது நம்முடைய அனுமானத்துக்கே விடப்படுகிறது.

நிஷாந் உட்பட அகதிகள் ஒரு உணவகத்தில் உட்கார்ந்து இருக்கிற கொஞ்ச காசில் ஏதோ அருந்துகிறார்கள். கடையைத் துடைக்கும் மூதாட்டி அவர்களைச் சந்தேகத்தோடு பார்க்கிறாள். காட்டிக்கொடுத்து விடுவாரோ என்று வேகமாக விரையும் அவர்களைத் பின்தொடர்ந்து வரும் அவரின் பையில் பழங்களும், நீரும் இவர்களுக்காக இருக்கிறது. அன்னைமாரின் அடிவயிற்றில் பிள்ளைகளின் பசியைப் போக்க எரியும் தீ கண்டங்களைக் கடந்தும் ஒரே மாதிரிதான் என்பது பெல்ஜியத்தில் நிகழும் இக்காட்சியால் புலப்படுகிறது.


கனகலிங்கம் என்கிற பாத்திரப்படைப்பு சுவாரசியமானது. தங்கைக்குக் கல்வீடு கட்டித்தரவேண்டும் என்று அவர் கனடாவில் நாதஸ்வரம் ஊதப்போவதாகச் சொல்கிறார். வோட்கா அருந்தி அவர் மிகக்கடுமையான ஆம்ஸ்டர்டாமை விமானத்தில் கடக்கும் கணம் பதைபதைப்பைத் தருவது. சகுந்தலா எனும் பெண்மணி சோக உருவாகப் பிள்ளைகளைக் காணக்காத்து கிடக்கிறார். அவரைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்கும் நிஷாந்துடன் போகும் அவர் ஒரு கட்டத்தில் மாட்டிக்கொள்ளும் பொழுது அவனைக்காட்டிக் கொடுக்காமல் சிறைபுகும் காட்சி பெண்களின் உலகம் எவ்வளவு உணர்ச்சிகளால் ஆனது என்பதை மேலும் துலக்கமாக உணரவைக்கிறது.

சபா என்கிற சபாநாயகம் ஒரு மதிப்பெண்ணில் முதலிடத்தைத் தவறவிடவே அவரைக் கனடாவுக்கு மருத்துவராக அனுப்பி வைக்கும் தந்தையின் கனவை நிறைவேற்ற முடியாமல் போதை மருந்து கடத்த உதவி இலங்கையில் முதல் பக்கச்செய்தியாக மாறிப்போகிறார் சபா. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என நம்பிய தந்தைக்காக இங்கே வந்து இரண்டு மில்லியன் தட்டுக்களைக் கழுவி தன்னுடைய கடன்களை அடைத்ததைச் சலனமில்லாமல் சபா சொல்கிறார்.

‘அதைப் பார்த்த என் அப்பாவின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? ஒரு மார்க் தவறியதால் கனடா புறப்பட்ட மகனா இவன் என எப்படியெல்லாம் தவித்திருப்பார். செய்தியை நம்பமுடியாமல் பத்திரிக்கையைக் கையில் பிடித்தபடி, குழந்தையில் என்னைக் கூப்பிடும் ‘சபுக்குட்டி, சபுக்குட்டி என்கிற பெயரை உச்சரித்துக்கொண்டு ரோட்டு ரோட்டாக அலைந்தார் என்று பின்னர்க் கேள்விப்பட்டேன். அவரைச் சமாதானம் செய்யவோ, அவரிடம் மன்னிப்பு கேட்கவோ எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இரண்டு மாதத்தில் அவர் இறந்துபோனார்.’ எனச் சபா அரற்றுகிற கணம் மதிப்பெண்ணில், உலகியல் வெற்றி அளவுகோல்களில் பிள்ளைகளை அளக்கும் பெற்றோர்களின் மனக்கனவுகளின் மீது தீவிரமான கேள்விகளை முன்வைக்கிறது.

கடவுள் தொடங்கிய இடம் நாவல் பல்வேறு கதைகளை வீசிக்கொண்டு நகரும் ஒரு பெரும்பயணம். மூன்று கண்டங்களின் ஊடாகப் பயணிக்கும் இந்தக்கதையில் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே புலப்படுகிறார்கள். ஐந்து கோடி அகதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலின் மூலம் அ.முத்துலிங்கம் ஒரு மகத்தான மனிதம் ததும்பும், வெறுப்பைத் தாண்டிய நம்பிக்கையை விதைக்கும் உலகத்தைக் கண்முன் சமைக்கிறார்.

பக்கங்கள்: 270
விகடன் பிரசுரம்
விலை: 155

— with Appadurai Muttulingam.

சார்லி – அவன் அன்பைத் தருவான்!


‘சார்லி’ எனும் இந்தப் படம் தந்த பரவசத்தின், அன்பின் இதத்தை ஓரளவுக்கேனும் சொல்லிவிடத் துடிக்கிறேன். கொடுமையான வாழ்க்கையை, வாதையை எப்பொழுதும் பெற்றவர்களின் கண்ணீரை ஒருநாள் துடைத்தால் என்னாகும்? இன்றைக்குத் தான் வாழ்க்கையின் கடைசி நாள் என்று யாருக்கும் சொல்லாமல் கொண்டாடி மண்டியிட்டு நிற்கும் ஆத்மாக்களின் முகத்துப் புன்னகையும், அதன் பின்னால் இருக்கும் சோகமும் எப்படிப்பட்டவை?

ஒருவர் இருக்கையில் அன்பைக் காட்டுவதினும் இறந்து விட்டான் என்று செய்தி கேட்டு பதைத்து வந்து கண்ணீர் விடுபவர்கள் முகத்தின் முன்னால் செத்துப் போனதாக எண்ணியவர் உயிரோடு நின்றால் எப்படியிருக்கும்? சிரித்துக்கொண்டே அவர்கள் கன்னத்தோடு கன்னம் தேய்த்து அந்த உறவின் வெப்பத்தை இருவரும் பரிமாறிக்கொள்ளும் ஆனந்தம் எத்தகையது?

பிரிவின் துயரத்தில் மீளமுடியா பெருந்துன்பத்தை அப்பாவிக்குத் தந்தபின்பு மன்னிப்பே ஒரு உயிருக்கு சாத்தியமில்லையா? வெறுப்பின் சுவடுகளும், வடியும் வலிகளையும் விட்டு ஒரு சில்லென்று வீசும் காற்றோடு சிரித்துப் பைக் பயணம் போக அவர்களால் முடியவே முடியாதா? தவறுகள் குற்றங்கள் அல்ல என்று புரிந்து ஆசீர்வதிக்கும் ஆன்மாக்கள் பூமியில் ஏதேனும் மூலையில் அந்த ஜீவனுக்காகக் காத்திருப்பார்களா?

நோயுற்று இருக்கும் குழந்தைகளின் கனவுலகக் கடல்கன்னிகளை நாம் காட்டுகிறோம் என்று கூட வாக்குறுதிகள் தருகிறோமா? திருடப் போனவனின் கரம் பற்றிக்கொண்டு ஒரு மிதிவண்டிப் பயணம் போக யாருக்கு பிடிக்கும்?

சொல்லாமலே போய்விட்ட காதலையும், தன்னுடைய காதலுக்குரியவர் வருவார் என்கிற நம்பிக்கையையும் தேக்கியபடி மரணத்தின் விளிம்பினில் நின்ற கணத்திலும் காத்திருப்பவர் முன்னால் காதலி தோன்றிப் பேசினால் அவருக்கு என்ன சொற்கள் கேட்கும்? என்ன செய்வார்? எப்படி உணர்வார்? அவள் பிரிகையில் அறைக்குள் மறைந்து என்ன எண்ணுவார்?

தனக்கான காதலனை தேடித்தேடி அந்தக் கொண்டாட்ட தேவன் கண்முன் நிலத்தை உடைத்துத் தோன்றுகையில் அவன் கரத்தை மறுப்பவளின் மன ஓட்டம் என்னவாக இருக்கும்? இத்தனை கேள்விகளுக்கும் சார்லி பதில் தருவான். அங்கங்கே கண்ணீரும், எல்லையற்ற பிரியமும், நெகிழ்ச்சியும் தோன்றும். அவசியம் பாருங்கள்!

— with CHARLIE 2015and Dulquer Salmaan.

கடல்புரத்தில் – ஆழியினும் ஆழமானது!


வண்ணநிலவனின் கம்பா நதி தான் அவரின் சிறுகதையைத் தாண்டி வாசித்த முதல் நாவல். அதில் பேசப்படும் காதலும், மனித வாழ்க்கையின் வீழ்ச்சியும் மறக்கவே முடியாதவை. அவரின் முதல் நாவலான கடல்புரத்தில் இரு நாட்களுக்கு முன்னர் வாசிக்க எடுத்தேன்.

கடல் பகுதிகளில் வாழும் கிறிஸ்துவர்களின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலில் அடிக்கடி வண்ணநிலவனின் நடை இயேசுவின் மலைச்சொற்பொழிவை நினைவூட்டும் அளவுக்குக் கவித்துவமும், அன்பும் மிகுந்ததாக ஊற்றெடுக்கிறது. மணப்பாட்டு மக்களின் வாழ்க்கையை, பிரியத்தைக் கதையாகச் சொல்ல வந்த வண்ணநிலவன் வலிந்து எதையும் கதையில் திணிப்பதாக நமக்குத் தோன்றுவதில்லை.

நூற்றுக்குச் சற்றே கூடுதலான பக்கங்களில் ஆழமும், சிக்கலும் மிகுந்த ரஞ்சி, பிலோமி, மரியம்மை என்று இத்தனை பெண்களை அவர் உருவாக்கி காட்டியிருக்கும் விதம் வியக்க வைப்பது. காதலித்தவனையே கைபிடிக்க வேண்டும் என்கிற மரபான பார்வையை மீறும் படைப்பாகக் கடல்புரத்தில் அவ்வப்பொழுது வெளிப்படுகிறது. மணமான பின்னரும் தன்னுடைய காதலரான வாத்தியை மரியம்மை பார்க்கிறாள். குரூஸ் எனும் மரியம்மையின் மகன் உருகி நேசித்த ரஞ்சியை விடுத்து கூடுதல் பணத்துக்காக வேறொரு பெண்ணை மணக்கிறான். அப்படியும் ரஞ்சி அவனை வெறுக்கவில்லை. “எல்லாப் பிரியத்தையும் அவரே கொண்டு போயிட்டாரே!’ என்கிறாள். குரூஸின் தங்கை பிலோமி தான் நாவலின் உச்சபட்ச படைப்பு.

சாமிதாஸ் மீது அன்பு கொண்டு தன்னை முழுமையாக ஒப்புவிக்கும் பிலோமி. அண்ணன், அப்பா, அம்மா மூவருக்கும் இடையிலும் சிக்கிக்கொண்டு அல்லற்படும் சூழலிலும், துரோகங்கள், நோய், மரணங்கள் அனைத்தையும் சூழ்கையிலும் வெறுப்பைச் சற்றும் காட்டாமல் நடமாடுகிறாள். ‘உண்மையாக உண்மையாகச் சொல்கிறேன். கோதுமை மணி தனித்துத் தான் இருக்க வேண்டும், அது இறந்தால் ஆனால் அதிக விளைச்சலை தரும்.’ என்கிற விவிலிய வசனத்தை நினைவுபடுத்துவது போல அவளை விட்டு நீங்கும் சாமிதாசிடம், ‘நான் எப்பவும் உன் பிலோமி தான். நின்னு கூப்பிட்டா வந்து பார்க்கப்போறேன்’ என்று அவளால் மட்டும்தான் சொல்ல முடியும்.

மைக்கேல் என்கிற மீனவனின் ஊடாக வல்லம் எனும் நாட்டுப்படகுகளை லாஞ்சிக்கள் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் அழித்து வெல்ல ஆரம்பித்த கதையை விவரிக்கிறார். அன்பு வடிவான மணப்பாட்டு மனிதர்கள். குடித்து ஆற்றாமைகள் ஆற்றும் ஆண்கள் அடித்துக்கொள்கிறார்கள். கொலையும், வஞ்சமும் இந்தப் போட்டியால் நிறைகிறது. பின் அது கதையில் ஒரு ஓரத்துக்கு அனுப்பப்படுகிறது.

மரியம்மையை எல்லாரும் நேசிக்கிறார்கள். ஆனால், யாரும் அவளிடம் அதைச் சொல்லவே இல்லை. இறந்த பிறகு அவளின் பிணத்தின் முன்னால் உள்ளுக்குள் மருகியபடி அவர்கள் நிற்கிறார்கள். இந்தக் கதையை வாசித்து முடிக்கையில் நாமும் அன்பைச் சொல்லத் தவறிய, வெளிப்படுத்த வெம்பிய நினைவுகள் அலை போல மோதித்தள்ளும்.  கடல் அன்னை வண்ணநிலவனின் காலத்தில் அத்தனை பாவங்கள் செய்த மனிதர்களின் அழுக்குகளைக் கழுவி அன்பால் நிறைப்பதாக எழுதிச்செல்கையில் கடல்புரம் ‘ அன்பு வழியை’ ஒத்த படைப்பாகவே தோன்றுகிறது.