‘Everything everywhere all at once’ – திரைப்படம் குறித்துப் பிப்ரவரி மாதம் தான் தெரியவந்தது. நண்பர் ஒருவர் instagram -ல் அப்படத்தில் இருந்து காட்சி ஒன்றை பதிந்திருந்தார். அதன் சாகசம், கற்பனைத்தெறிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக, இசையோடு கூடிய அபத்தமான நிகழ்வுகள் கட்டிப்போட்டன. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பெருமளவில் இப்படம் கவனம் ஈர்த்திருக்கிறது என்று தெரிந்ததும், கடந்த வாரம் திரைப்படத்தைக் கண்டு பேறு பெற்றோம்.
Mild Spoilers ahead
மார்வெல் காமிக்ஸ் அடிப்படையிலான படங்களின் ரசிகர்களுக்கு Multiverse என்பது புதிதில்லை. ஆனால், சூப்பர் ஹீரோக்கள் இல்லாமல் எளிய மனிதர்கள் பல்வேறு பிரபஞ்சங்களுக்கு இடையே எண்ணியபடி தாவி குதிக்க ஆரம்பித்தால் என்னாகும்? அது தான் இப்படத்தின் மைய இழை.
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த ஈவ்லின் (மிச்செல் யோஹ்), அவரின் கணவர், மகள் ஆகியோர் சலவை செய்யும் கடையொன்றை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள். வாழ்க்கை ஒரே மாதிரி எல்லா நாளும் ஓடிக்கொண்டிருக்கும் நம் அன்றாட உலகை இக்குடும்பத்தினர் பிரதிபலிக்கிறார்கள். என்ன செய்கிறோம், எதற்காக ஓடுகிறோம் என்கிற வினா வாழ்க்கையை அரித்துக் கொல்கிறது. ஏற்பிற்கும், அன்பிற்கும், கனிவிற்குமான நேரமே இல்லாதது கண்முன் விரிகிறது. வருவாய் துறை அதிகாரியிடம் கணக்கு, வழக்குகளைக் காட்டுவதற்காகக் கணவனும், மனைவியும் லிஃப்ட்டில் ஏறுகிறார்கள். அங்கே தான் வாழ்க்கை திசை மாறுகிறது.
வேறொரு பிரபஞ்சத்தின் மக்கள் ஈவ்லினின் உதவியை நாடுகிறார்கள்? எதற்காக? ஈவ்லினிற்கு என்னவென்று புரிவதற்குள் பெரும் களேபரங்கள் வரி அலுவலகத்தில் நிகழ்கிறது. வேற்றுலகில் ஈவ்லினின் வாழ்க்கைகள் கண்முன் தோன்றுகின்றன. ஒரே கணத்தில் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு வாழ்க்கைகளுக்கு எகிறி குதிக்க முடிகிறது. இதனால், நிகழ்காலத்தை மாற்ற முடிகிறதா?
நம் காலத்தின் நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கை குறித்த அபத்த நகைச்சுவையாக இப்படத்தை ஒரு தளத்தில் அணுகலாம். உடைந்து போயிருக்கும் சக மனிதர்களின் கதைகளை நிதானித்துப் பார்க்க வைக்கும் மென்மையான விவரிப்பாகவும் புலப்படலாம். நிராகரிப்பும், வஞ்சனையும், துரோகமும் நிறைக்கின்றன. மிக நெருங்கிய உறவின் வெம்மை, மனப்போராட்டங்கள், அங்கீகரிப்புக்கான ஏக்கங்கள் எதுவும் புரியாத நம் வாழ்க்கை ஏன் இப்படியாகிப் போனது?
‘என்னை விட்டுவிடுங்கள். எங்கேயோ போகிறேன்’ எனப் பரிதவித்து, பிரிந்து போகத் துடிக்கும் உறவோடு எப்படி அன்பு பாராட்டுவது? முடிந்து போகும் வாழ்வில் நிலையாமை மட்டுமே உண்மை என்பது புரிந்தும், எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது? தகிப்பையும், புறக்கணிப்பையும், வெறுப்பையும் உமிழும் உலகினில் விரும்பியதை செய்ய நம்மால் முடியுமா?
இத்தனை கேள்விகளுக்கான தேடல்களையும், அறிவியல் புனைவு ஒன்றில் தத்துவ விசாரணைகள், தாய்-தந்தை-மகள் இடையேயான பாசப்போராட்டம் ஆகியவற்றோடு பிணைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பும், இசையும் மறக்க முடியாத அனுபவத்தைப் பரிசளிக்கின்றன. பல்வேறு ஹாலிவுட் படங்களை மென்மையாகக் கேலி செய்யும் காட்சிகளும் இப்படத்தில் உண்டு.
சண்டைக்காட்சிகளில் விலா நோக சிரிப்போம். பல்வேறு பிரபஞ்சங்களுக்குள் பாத்திரங்கள் பயணிப்பதால் சில நொடிகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பார்வைகள், போராட்டங்கள், அனுபவங்கள் திரையில் விரிகின்றன. அதனால் ஒரு கணத்தைத் தவறவிட்டாலும் கதையின் போக்கு குழப்பி விடும். கருந்துளையாக நம்மை உள் இழுக்கும் வாழ்க்கையைப் பேரன்போடு குறுக்கு விசாரணை செய்யும் இப்படத்தின் பெரும் பலம் அதன் நடிகர்கள்.
ஜாக்கி சான் நடிக்க வேண்டியதாக இருந்த நாயகியின் கணவர் வேடத்தில் நடித்திருக்கும் கி ஹுய் குவான் நெகிழ வைக்கிறார். வரி அதிகாரியின் கடுமையும், ஏளனமும், எச்சரிப்பும் கலங்கடிக்கின்றன. Multiverse கதைகளின் சில புள்ளிகள் பூடகமாக இருக்கும். சமயங்களில் எளிய பார்வையாளர்களைக் குழப்பியடிக்கும். இத்திரைப்படம் தன்னுடைய நேர்த்தியான திரைக்கதை, மையமான ஒரு கதையைச் சுற்றிய துணைக்கதைகளால் அருமையாகப் புரியும் வண்ணம் வெளிவந்திருக்கிறது. இப்படம் ஒவ்வொரு மனிதரைப்பற்றிய ஒரே கதைகளைப் புறக்கணித்து, அவர்களுக்குள் ஊற்றெடுக்கும் பற்பல கதைகளின் மீது கவனம் குவித்திருக்கிறது. அரவணைத்துக் கொள்ளவும், முன்முடிவின்றி வாழ்வினை அணுகவும், பேரன்பை பரிமாறவும், இறுதியில் எதுவும் முக்கியமில்லை என்பதையும் வண்ணமயமாகச் சொல்லிச்செல்கிறது. மறக்காமல் திரையரங்குகளில் பாருங்கள்.
‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ எனும் இரு சொற்களின் அடர்த்தி, வலி அபரிமிதமானது. எது தனக்கான நாடு? சமத்துவம், சம உரிமைகள், சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பிறப்பின் அடிப்படையில் அந்நியரைப் போல நடத்தப்படுவது தகுமா? நீதி, நியாயம், நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பை உறுதியளிக்கும் அந்த சமத்துவ விசாவுக்கான காத்திருப்பு எப்போது கைகூடும்? இப்படி பற்பல வினாக்களை முப்பதிற்கும் குறைவான பக்கங்களில் பாபாசாகேபின் தன் வரலாறு எழுப்புகிறது.
ஏராளமான நூல்களை எழுத வேண்டும் என்கிற கனவுகள் கைகூடுமுன்னே அண்ணல் நம்மை விட்டுப்பிரிந்தார். அரசமைப்புச் சட்ட உருவாக்கம், கட்சிப் பணிகள், இந்து சட்ட மசோதா வரைவினை எழுதுதல், சித்தார்த்தா கல்லூரி உள்ளிட்ட கல்வித்தலம் எழுப்பல், மக்கள் பணி, இதழில் என ஓய்வு அலைச்சல் இல்லாமல் இயங்கியவரை வறுமை, ஏளனம், அவமதிப்பு, புறக்கணிப்பு வீழ்த்தவில்லை. அத்தனைக்கு நடுவிலும் அவர் எழுதினார், இயங்கினார். டாக்டர் அம்பேத்கரின் அகவுலகினை கண்முன் நிறுத்தும் எழுத்து இப்போது தமிழில். இந்நூலின் முதல் பதிப்பினை வெளியிட்ட நீலம் பதிப்பகத்திற்கு நன்றிகள்.
இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 158,159-ல் கிடைக்கும். நன்செய் வெளியீடு ஓவியம்: சந்தோஷ் நாராயணன் விலை: 20
சாவித்திரிபாய் பூலேவின் 125 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்பில் இருந்து..
‘வணக்கம். நலமா? என் பெயர் சாவித்திரிபாய் பூலே. என் கதையைச் சொல்கிறேன். இது பல்லாயிரம் பெண்களின் கதை.
என்னுடைய ஊர் சத்தாரா. இப்பகுதியின் அரசர் மூன்றாம் பேஷ்வா பாஜிராவ். ஊர் முழுக்கக் கட்டுப்பாடுகள். கல்வி என்பது பிராமணர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெண்கள் நிலைமை மோசம். குழந்தையாக இருக்கும் போதே திருமணம். கணவர் இறந்தால் மொட்டையடித்து ஒதுக்கிவிடுவார்கள். நெருப்பில் தள்ளும் வழக்கமும் உண்டு. படிப்பெல்லாம் சுத்தம். நாங்கள் படித்தால் உருப்பட மாட்டோம் எனச்சொன்னார்கள். ஊரில் பலருக்கும் கடிதம் எழுதுவோம் என்றார்கள். படிக்கிற பெண்ணுடைய கணவரின் சாப்பாட்டில் புழுக்கள் நெளியும். சீக்கிரம் அவர் செத்துடுவார் என்றுகூடச் சொல்வார்கள். நான் சிரித்துக்கொள்கிறேன். எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?
அதை விடுங்கள். என்னுடைய ஊருக்கு போவோம். என்னுடையது விவசாயக் குடும்பம். நான் குளிர்மிகுந்த ஜனவரி மாதத்தில் பிறந்தேன். இளம் வயதில் பள்ளிக்கூடத்தைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. 9 வயதில் ஜோதிபாய்யோடு திருமணம். புனேவிற்குக் குடிபெயர்ந்தேன்.
அவர் மிஷனரி பள்ளிகளில் கல்வி பயின்றார். எனக்கும் எழுத, படிக்க உதவினார். பல்வேறு கதைகள், அனுபவங்கள். ஒருநாள் பிராமணர் வீட்டுக் கல்யாணம். போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். ‘நாமல்லாம் சூத்திரனுங்களாம். தீட்டாயிடுச்சாம். விரட்டிவிட்டுட்டாங்க’ எனப் புலம்பினார். எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என அவருக்குக் கனவு. சாதிப்பாகுபாடுகள் படிப்பாலும், விழிப்புணர்வாலும் தான் ஒழியும். நான் மேலும் படித்தேன். ஜோதிபாய் உடனிருந்தார், உற்சாகப்படுத்தினார். அவருடைய நண்பர்களும் பாடம் சொல்லிக்கொடுத்தனர். எனக்குப் படிப்பது சுகமானதாக இருந்தது. இன்னமும் கற்க வேண்டுமென ஆசையாக இருந்தது. ஃபராரி, மிட்செல் எனும் இரண்டு ஆங்கிலேய ஆசிரியைகள் அன்போடு உதவினார்கள். நான் படித்ததைப் பலருக்கும் சொல்லித்தரும் நேரம் எப்போது வரும்?
ஜோதிபாய் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். ஒரே எதிர்ப்பு. பள்ளிக்கூடத்திற்கு வெளியே ‘ஒழிஞ்சு போங்க’னு கோஷம் போடுவார்கள். என் மாமனாரை தூண்டி விட்டார்கள். ‘நீ எக்கேடோ கெட்டுப்போ. இவளை ஏன் படிக்க வைக்கிறே’ எனக்கேட்டார். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நடுத்தெரு என்றார். நானும், ஜோதிபாயும் நடுத்தெருவை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்குள் கல்விக்கனல் எரிகிறது. அது ஒரு வீட்டிற்குள்ளேயே அணைந்து விடலாமா? ஆகாது.
எங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஒரே ஆசிரியரையும் மிரட்டினார்கள். வேறு வழியில்லை. என்னையே பாடம் நடத்தச் சொன்னார் ஜோதிபாய். பள்ளிக்கு நடந்து போவேன். என் மீது சாணி, அழுகிய காய்கறிகளை வீசுவார்கள். சில நாட்கள் வெற்றிலைப் போட்ட எச்சில் கூடப் பரிசாகக் கிடைத்தது. முதலில் பயமாக இருந்தது. பள்ளியின் பெண் குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பயமெல்லாம் பாசத்தின் முன் பறந்தது. அழுக்குகளை வீசியவர்களிடம் சொன்னேன், “என்னுடைய தங்கைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்போகிறேன். இந்தக் குப்பைகள் எல்லாம் எனக்கான வாழ்த்து மலர்கள். இறைவன் உங்களை ரட்சிக்கட்டும்’.
என் அண்ணன் என்னைக் கடிந்து கொண்டான். ஏன் இந்த வேண்டாத வேலை என்றான். நான் சொன்னேன், “படிக்காமல் இருப்பது முழு மிருகத்தனம். அறிவைப் பெறுவதாலே பிராமணர்கள் மேல்நிலையில் உள்ளார்கள். கல்வியும், அறிவும் அற்புதமானது. கற்றவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் எனப்பட்டாலும் அவரே உயர்ந்தவர். நாங்கள் தீண்டப்படாதோர் கற்க வேண்டும் என உழைக்கிறோம். அதன்வழியே விடுதலை கிட்டும். என் கணவர் பிராமணர்களை எதிர்த்துக்கொண்டு ஏன் தீண்டப்படாதவர்களுக்குக் கற்பிக்கிறார்? அவர்களும் சமமான மனிதர்கள். மானமிகு வாழ்க்கை எல்லாருக்கும் ஆனது. அதற்குக் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே நானும் கற்பிக்கிறேன். இதிலென்ன தவறு ? நாங்கள் சிறுமிகள், பெண்கள், மகர்கள், மங்குகள் என அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்போம்’ என்றேன்.
ஆரம்பத்தில் பெரிதாகப் பெண்கள் படிக்ற வரவில்லை. இத்தனைக்கும் எங்கள் பள்ளியே இந்தியர்கள் நடத்தும் முதல் பெண்கள் பள்ளி. நானும், ஜோதிபாயும் ஊர் ஊராகச் சுற்றினோம். படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பரிசுப்பணம் தந்தோம். கிராமம், கிராமமாகப் படிப்பின் அவசியம், நன்மைகளை எடுத்துச் சொன்னோம். கல்வியோடு விளையாட்டுகள், கலைகளைப் பேரன்போடு பகிர்ந்தோம். கூட்டம் பெருகியது.
9 ஆசிரியர்கள், 132 மாணவர்கள், 3 பள்ளிகள். அது கனவின் தொடக்கம். 1851, 1852 காலத்தில் தேர்வுகளை நடத்தினோம். கிட்டத்தட்ட திருவிழா தான். பெண்கள் படித்து, தேர்வில் அசத்துவதைப் பார்க்க 3,000 பேர் கூட்டம். அலையில் எழும் சூரியனாய் எங்கள் பெண்கள் மின்னினார்கள்.
‘பூனா அப்சர்வர்’ எனும் பத்திரிகை 1852 -ல் என்ன எழுதியது? ‘ஜோதிபாய்- சாவித்திரிபாயின் பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களை விடப் பத்து மடங்கு அதிகப் பெண்கள் படிக்கிறார்கள். மிக உயர்ந்த கல்வித்தரம். விரைவில் இப்பெண்கள் பெரும் சாதனைகள் புரிவார்கள்’. 50 க்கும் மேற்பட்ட பெண்கள், அனைவருக்குமான பள்ளிகளை நடத்தினோம்.
எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஜோதிபாயை இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘குழந்தை பிறக்கலைனா பொண்ணு தான் மலடியா? ஆம்பிள கிட்டயும் பிரச்சனை இருக்கலாமே. பிள்ளை பொறக்கலைனு பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனுக்கு எப்படியிருக்கும்? என்னால சாவித்திரியை விட்டுட்டு இருக்க முடியாது’ என்றார்.
பல கைம்பெண்கள் நிலைமை கண்ணீரை வரவைத்தது. சொந்தக்கார ஆண்கள் வதைத்தார்கள். பரிதாபமாகக் கைம்பெண்கள் கர்ப்பமானார்கள். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களைக் காப்பாற்றினோம். 1853-ல் அப்பெண்களை அரவணைக்க இல்லம் துவங்கினோம்.
கையால் நெய்த ஆடைகளை அணிவது வழக்கம். அவை எளிமையான, ஆனால், கம்பீரமான ஆடைகள். இல்லத்தரசிகளுக்கு ஆடை நெய்யக் கற்றுக்கொடுத்தேன். பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் அமைப்பைத் துவங்கினேன். மாமியார், மருமகள், அம்மா, மகள் என அனைவரும் வந்தனர். ஒன்றாக அமர்ந்து சொந்தக்காலில் நிற்கப் பழகினோம்.
கைவிடப்பட்ட கைம்பெண் ஒருவரின் மகனை தத்தெடுத்துக் கொண்டோம். யஷ்வந்த் எனப் பெயரிட்டு வளர்த்தோம். மருத்துவம் படித்தபின் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குச் சேவை செய்தான் யஷ்வந்த்.
கண்முன் இன்னொரு அநீதி தெரிந்தது. கணவன் இறந்ததும் கைம்பெண்களுக்கு மொட்டையடித்தார்கள். மனைவி இறந்தால் கணவனுக்கு மொட்டையடிக்கிறோமா? ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்தக் கொடுமை? சவரம் செய்பவர்களை நாடினோம். வேலை நிறுத்தம் செய்யக் கோரினோம். கூடுதல் கூலி வேண்டியோ, சலுகைகள் நாடியோ அல்ல. கைம்பெண்களின் சமத்துவம் நாடி போராட்டம் நிகழ்ந்தது. சவரக்கத்திகள் ஓய்வெடுத்தன. பல கைம்பெண்களின் கண்ணீர் காணாமல் போனது. அந்தச் சவரத்தொழிலாளர்களை நினைக்கும் போதே பெருமிதம் பூக்கிறது.
1877-ம் ஆண்டு. பெரும் பஞ்சம். மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள். விலங்குகள் இறந்து தரையில் விழுந்தன. பெரும் உணவுப்பஞ்சம். மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள். ஆறு, குட்டை, குளம் எல்லாம் வற்றின. தவித்த வாய்க்கு தண்ணீரில்லை. மரங்களில் இலையே தென்படவில்லை. வறண்ட நிலம் பாளம், பாளமாய்ப் பிளந்தது. விஷப்பழங்களை உண்டார்கள், சிலர் சிறுநீரை குடித்தார்கள். மக்கள் உணவுக்காக, தண்ணீருக்காக அழுதார்கள், பின், பரிதாபமாக இறந்தார்கள்.
நாங்கள் கிராமம், கிராமமாகச் சுற்றினோம். இயன்றவரை நீரும், சோறும் தந்தோம். கந்துவட்டிக்கார கொடுமைகளைத் தட்டிக்கேட்டோம். ஏழைப்பிள்ளைகள் தங்கவும், கற்கவும் 52 விடுதியோடு கூடிய பள்ளிகள் திறந்தோம்.
1890-ல் ஜோதிபாய் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஆணும், பெண்ணும் சமம் எனும் தாமஸ் பெய்னின் ‘Rights of Man’ னின் வரிகளை ஜோதிபாய்ச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை எண்ணிக்கொண்டு நானே அவரின் உடலுக்குத் தீமூட்டினேன்.
1897 பெரும் பிளேக் நோய். லட்சக்கணக்கான மரணங்கள். மருத்துவர்கள் சாதி பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் யாருமின்றி இறந்தார்கள். நானும், யஷ்வந்தும் அசரவில்லை. எங்கள் சத்தியசோதக் அமைப்பினரோடு உழைத்தோம். மருத்துவமனைகள் நடத்தினோம். உயிரைப் பணயம் வைத்து போராடினோம். பிளேக் நோயுற்ற மகர் சிறுவன் ஒருவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நானே தொட்டுத் தூக்கினேன். அவன் உயிரை காப்பாற்றி விட்டோம். களைப்பாக இருக்கிறது. பிறிதொரு நாள் இன்னமும் சொல்கிறேன். ‘
சாவித்திரிபாய் பிளேக் நோய்க்கு எதிரான போரின் போதே வீர மரணம் எய்தினார். ‘கல்வித்தாய்’, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ எனும் பல்வேறு பெருமைகளுக்கு உரியவர். ‘மாசற்ற ரத்தினங்களின் பெருங்கடல்’ எனும் கவிதை நூல் இயற்றினார். அவரின் கவிதை ஒன்று:
உனக்கு நீயே துணை, ஓயாமல் உழை. கல்வியும், பொருளும் கொண்டு சேர். அறிவிழந்தால் அனைத்தும் அழியும். கல்விச்செல்வமின்றிக் கால்நடை விலங்கு நாம். சோம்பி அமராதே, எழு, கல்வி கற்றிடுக. ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் துயர்துடை. கற்கும் பொன் வாய்ப்பினை பற்றிக்கொள். ஆகவே, கற்றிடுக, சாதிச்சங்கிலிகளை உடைத்தெறிக. பிராமணர்களின் புனித நூல்களை வேகமாகத் தூக்கியெறிக.
சில குரல்களுக்கு வயதே ஆவதில்லை என்று தோன்றும். அல்லது அக்குரல் எல்லா பருவங்களிலும் நம்மோடு அணுக்கமாக, நெருக்கமாக உரையாடும் ரசவாதம் கூட காரணமாக இருக்கலாம். எஸ்.பி.பி.யின் குரல் அத்தகைய கவர்ச்சியை காலங்களைக் கடந்து பரிசளித்துக் கொண்டே இருந்தது. ரஹ்மானின் குரலிலும் எப்போதும் உணர்வெழுச்சியை, புத்துணர்ச்சியை நல்கும் வசியம் உண்டு. கட்டுரை அதைப்பற்றியல்ல.
முதுமையால் பிடித்த பாடகர்கள் வரிகளை மறக்கும் போது ஏற்படும் பரிதவிப்பே தாள முடியாதது. ஞாபகங்கள் தவறி குழறும் உறவுகளின் குரல்களைப் போல நொறுக்குபவை வேறொன்றில்லை. முதுமை, மூப்பு, நோய்கள் குறித்த கவலைகள் பெருந்தொற்று காலத்தில் பெருகி இன்று வரை கனவுகளிலும் அச்சுறுத்துகிறது.
என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாளின் குரலுக்கு வயதே ஆவதில்லை எனத் தோன்றும். உருவத்திற்கும், குரலிற்கும் தொடர்பில்லை என்பதைப் போன்ற ஆளுமை அக்குரலில் வெளிப்படும். மேடைப் பேச்சிற்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர் அளிக்கும் பயிற்சியே சுவை கூட்டுவது. ஏற்ற, இறக்கம், எங்கே நிறுத்துவது, எப்போது புன்னகைப்பது, எங்கே கைகள் உயர வேண்டும், எங்கே விரைய வேண்டும் என அனைத்தையும் பொறுமையாக சொல்லித்தருவார். அசோகமித்திரனின் புலிக்கலைஞனை அக்கணங்களில் ஏனோ நினைவுபடுத்துவார் அம்மா.
அநேகமாக அம்மாவின் பால்யம் முதல் இன்று வரை நோக்காடே விலகாத துணையாக வருகிறது. மஞ்சள் காமாலை, காசநோய் என்று அத்தனைத் தாக்குதல்களும் அவரின் குரலின் தன்னம்பிக்கையை சிதைக்க முடிந்தது இல்லை. வலியின்றி அவர் உறங்கிய நாட்கள் அரிதாகவே வாய்த்தன. ஆயினும், இன்றைக்கு தான் முதல் முறையாக பள்ளிக்குச் செல்லும் சிறுமியைப் போல் உற்சாகமாக அவர் பள்ளிக்குச் செல்வார். அத்தனை வலியும் ஊழித்தாண்டவத்தில் காணாமல் போகும் நிலத்தைப் போல மறையும். தமிழருவியாய் பொழியும். கதைப்பாடல்கள் கண்முன் விரியும். மெய்ப்பாடுகள் அவரை ஆட்கொள்ளும்.
அம்மாவை பெருந்தொற்றுக் காலம் மனதளவில் சோர்வடைய வைத்தது. குழந்தைகள் இல்லாத அவை வெற்று அறைகளாக அவரை வாட்டின. அவர் குரல் சவலையாக ஒலிக்கும். அவர்களைக் கண்ட முதல் நாள் அம்மாவின் குரலின் இளமை ஆச்சரியப்படுத்தியது.
அம்மாவிற்கு சமீபத்தில் உடல்நலம் பெருமளவில் குன்றியது. பக்கவாதம் அவரின் பேச்சையும், செயல்பாட்டையும் பதம் பார்த்தது. மருத்துவமனையின் அச்சுறுத்தும் சூழலில் கூட ‘நான் கொடியேத்தப் போயிருவேனில்ல?’ என்று மட்டுமே அவர் கேட்டார். ‘எப்படா என்ன ஸ்கூலுக்கு கூப்பிட்டுப் போவீங்க’ எனக்கேட்கையில் அக்குரலின் ஏக்கம் என்னவோ செய்தது. ஆயினும், மனவுறுதியாலும், மருத்துவத்தின் உதவியாலும் அம்மா தேறி வருகிறார்.
நேற்று தான் முதல் சுழி போட்ட சிறுமியைப் போல, எழுத்துகளை அசைவற்ற விரல்களால் உயிர்ப்பூட்டினார். அவை கண்ணாமூச்சி ஆடின. அவர் தளர்வார். உடைந்து போய் மீண்டும் முயல்வார். அவரின் குரலை நோய்மை வருத்தியது. மூப்பும், வாழ்வின் நிலையாமையும் இன்னமும் அருகே அச்சுறுத்தின. ஆயினும், அம்மாவின் மணி, மணியான கையெழுத்து மீண்டும் துளிர்த்தது. அவர் பள்ளித்தலம் நோக்கிச் சென்ற அந்நாள் அவரின் குரலில் அத்தனை நம்பிக்கை இல்லை. ஒவ்வொன்றிற்கும் பிறரைச் சார்ந்திருப்பதை அவர் வெறுத்தார். ஆயினும், பள்ளி வாசலை மிதித்ததும் அவரின் குரல் மறுபிறப்பெடுக்கும். காணொளியில் அத்தருணங்களை விழி நீர் வழியாமல் காணவே முடியாது. அம்மாவின் கடந்த காலக்குரல் தான் இப்போதும் ஒலிக்கிறதா எனத்தெரியவில்லை. ஆயினும், அக்குரல் அதிசயமானது. அது துவளாதது. முதுமை அருகே வருகையிலும் இளமையாய் முறுவலிப்பது. உடற்பிணி எவற்றின் தடயமும் இன்றி மிளிர்வது. அம்மா பாடிக் கேட்டதே இல்லை. அவரின் பேச்சினும் அரிய இசைக்குறிப்பு உண்டா என்ன?
(இன்றோடு அம்மா ஆசிரியப்பணியில் சேர்ந்து 26 ஆண்டுகள் நிறைவடைகின்றன).
நாகராஜ் மஞ்சுளேவின் ‘Jhund’ திரைப்படத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். நாக்பூரின் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை ‘கால்பந்து’ எப்படி மாற்றுகிறது என்கிற ஒரு வரிக்கதையாக இப்படத்தை கடந்துவிட முடியாது. அமிதாப் பச்சன் பேராசிரியர் விஜய் வேடத்தில் இன்னுமொரு ‘மீட்பர்’ வந்து ஈடேற்றும் படமும் அல்ல. இவற்றைத்தாண்டிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வினை நுண்மையான திரைமொழியில் நாகராஜ் தருகிறார்.
இப்படத்தின் உச்சத்தருணம் ‘தோற்கப்பிறந்தவர்கள்’ பெரும் வெற்றியைப் பெறுவதாக இல்லை. அது முதல் பாதியிலேயே நிகழ்ந்து விடுகிறது. அதற்கடுத்து வறுமை, அநீதி, சாதி, சமூகப்புறக்கணிப்பு, அரசாங்க ஒதுக்கல், ஏளனம் ஆகியவற்றால் ஆன சுவர்களைக் கடந்தேறும் பயணமே பல்வகை கதைகளால் கண் நிறைக்கிறது. அசலான மனிதர்கள் அவர்களாகவே திரையில் மின்னுகிறார்கள். கொண்டாட்டமும், கழிவிரக்கம் கோராத கம்பீரமும் அவர்களின் தொனி, பண்பு, வாழ்வினில் ஒளிர்கிறது.
ஆவணப்படங்களாக, புள்ளிவிவரங்களாக மட்டுமே கடக்கக்கூடிய ஆதிக்க சாதி, ‘படித்த’, ‘மேம்பட்ட’ பொதுபுத்தியிடம் இப்பெருங்கூட்டம் யாசகம் எந்த மறுக்கிறது. இருக்கிறானா, செத்தானா என கவலைப்படாமல் ஆவண ஆதாரங்களில் மட்டுமே குடிமக்களை அளவிடும் அதிகார வர்க்கத்தை எள்ளி நகையாடியபடியே எதிர்கொள்கிறது. ‘உங்களின் பாரதம் கம்பிகளால், அநீதிகளால், புறக்கணிப்புகளால் ஆனது. எங்களுடையதே அசலான, உண்மையான திறமைமிக்க பாரதம். ‘ என நரம்புபுடைக்க வீரவசனங்கள் இல்லாமலே கடத்தப்படுகிறது. ‘நாங்க வந்துட்டோம்னு சொல்லு’ என அத்தனை அழகியலோடு, நெகிழ வைக்கும் தருணங்களின் வழியே நெக்குருக வைக்கிறார்கள்.
இத்திரைப்படம் நாம் பொதுவாக பார்க்கும் விளையாட்டுப் படங்களில் இருநது வேறுபட்டது. நாமும் பாபாசாகேப்பின் நீல வண்ணம் மின்னும் நாக்பூர் மண்ணிற்கு பயணமாகிறோம். பதைபதைப்பில் பங்குகொள்கிறோம். வண்ண உடை அணிந்து போர்க்களத்தில் விழாக்கோலம் பூணுகையில் சிரித்து இணைகிறோம். ‘என் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருந்தாலும் நான் யாருடைய பரிதாபத்துக்குரியவனாக இருக்க விரும்பவில்லை’ எனும் அண்ணல் அம்பேத்கரின் வரிகள் திரைக்காவியமாக மாறுகிறது. கழிசடைகள் அல்ல கனவுக்காட்டாறு நாங்கள எனும் கனவு அனுபவம். சென்னையில் ‘Inox’ ல் மட்டும் subtitles உடன் காணக்கிடைக்கிறது. தவறாமல் பாருங்கள்.
‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின் பாயிரத்தில் உள்ளது . பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர். கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார். தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக நூலிற்கு ஆங்கிலம், தமிழ் என்று இரு மொழிகளிலும் முன்னுரை எழுதியுள்ளார்.
தன்னுடைய முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது” என்று வருந்துகிறார்.
ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை
பாயிரத்தில் ‘தமிழ் தெய்வ வணக்கம்’ என்று தமிழை தெய்வமாக போற்றிப் பரவுகிறார். கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில் தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு என்று பலவாறு போற்றுகிறார். இப்பாடலில் வழங்கி வரும் முதன்மையான கருத்துகள் என்று சிலவற்றைப் பேராசிரியர் கைலாசபதி அடையாளப்படுத்துகிறார். அவை,
(அ) இந்திய நாட்டில் தெக்கணம் திலகமாகத் திகழும் பகுதி.
(ஆ) திராவிடம் முதன்மையான சிறப்புமிக்கதாகும்
(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும் புகழும், பெருமையும் மிக்கது
(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை போன்றது தமிழ்
(உ) தமிழே திராவிட மொழிகளுக்கு தாய்
(ஊ) ஆரியம் போல் வழக்கழியாமல் சீரிளமை மிக்க மொழியாகத் தமிழ் திகழ்கிறது
‘நீராருங் கடலுடுத்த’ எனும் துவங்கும் இப்பாடல் முந்தைய தமிழ் படைப்புகளில் இருந்து பல வகைகளில் வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில் புதிய பாய்ச்சலுக்கு அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின் பார்வையில் தமிழ்த்தேசியத்திற்கான முன்னோடிப் பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர் பிரேர்னா சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர் நலனும் கைகோர்க்கும் இடம் என்கிறார். தமிழ்த்தாயின் உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர் சுமதி ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார் கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.
இப்பாடலுக்கு பிறகே தமிழைத் தாயாக, தெய்வமாக போற்றிப்பரவுவது பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற பாடல்கள் தமிழன்னையை போற்றி பாடப்பட்டன. இவற்றுக்கான முதல் வித்து ‘தமிழ்த்தெய்வ வணக்கம்’ ஆகும்.
நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்
கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய மூன்றாம் ஆண்டறிக்கையை 1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப் பற்றி பேசுகிறது:
‘பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’ என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை ஆய்வாளர் கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார்.
1913-ம் ஆண்டறிக்கை
இப்பாடல் படிகளை கரந்தை தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த உமாமகேசுவரனார் பல நூறு பிரதிகள் அச்சிட்டு கொண்டு சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும் பாடப்பட்டது. பல்வேறு தமிழ்ச்சங்க கூட்டங்களில் இப்பாடல் ஒலித்தது. தனித்தமிழ் மாநாடுகளில் தவறாமல் இடம்பெற்றது. .தனித்தமிழ் மாநாடுகள், பாடநூல்களில் இடம்பெற்றது. தனிநாயகம் அடிகள் “இப்பாடலின் வரிகள் கடந்த அறுபது ஆண்டுகளாக எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான பாடல் எனும் அதன் பெருமையை விஞ்சும் படைப்பு எதுவுமில்லை” என்று 1963-ல் புகழ்ந்தார்.
இப்பாடலை தமிழக அரசு அனைவரும் பாடும்வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் அறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா இயற்கை எய்திவிட, கலைஞர் கருணாநிதி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
கரந்தைத் தமிழ்ச்சங்க விழாக்களிலேயே முதல் ஆறு வரிகள் மட்டுமே பாடப்பட்டு வந்தன என்பதை சுட்டிக்காட்டுகிறார் கரந்தை ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான விருதளிப்பு விழாவில் தமிழ்நாட்டின் வழிபாட்டுப் பாடலாக ‘நீராருங் கடலுடுத்த’ அமையும் என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
புகைப்பட நன்றி: kalaignar.dmk.in
பிற மொழிகளை தாழ்த்திப் பேசும் வரிகளைத் தவிர்த்து பாடலை அமைத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார். ஆரியம் போல் வழக்கழிந்து முதலிய வரிகளும் சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வழக்கத்தை அடியொற்றியே இப்பாடல் வரிகள் அமைந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை தமிழ்நாட்டின் வழிபாட்டுப் பாடலாக ஆக்கிய அரசாணையை கூர்ந்து நோக்கினால் இன்னொன்றும் புலப்படும்.
ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை எண் 1393-ல் தமிழ்நாடு முழுமைக்கும் பொதுவாக வழிபாட்டுப் பாடல் அமையும் வண்ணமே ‘நீராருங் கடலுடுத்த ‘ இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட நம்பிக்கையோடு’ தொடர்புடையதாக இல்லாத வண்ணம் இப்பாடல் இருக்குமாறு அமைந்திருப்பதாகவும் அரசாணையில் சொல்லப்பட்டு இருந்தது. பல்வேறு தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளில் இந்து மதப் பாடல்களும், வடமொழி,தெலுங்கு பாடல்களும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த போது இந்த அறிவிப்பு அவற்றை மாற்றியது. மேலும், பாயிரத்தில் உள்ள சிவனைப்பற்றிய குறிப்பு இடம்பெறாமல் போனதையும், ‘தமிழ்த்தெய்வ வணக்கம்’ ஆனது ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ மாறியதையும் மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )
மேற்சொன்ன அரசாணையை ஒட்டி 23 நவம்பர் 1970-ல் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ வழிபாட்டுப்பாடலாக விழாக்களின் துவக்கத்தில் பாடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்பாடல் மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் இசைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
Memo no. 3584/70-4
காஞ்சி மடாதிபதி விஜேயந்திரர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்ட போது கண்மூடி அமர்ந்து இருந்தார். இதனையடுத்து கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில் உள்ள காஞ்சி மடத்தின் கிளையில் நுழைந்தார். அதற்கு மட மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை கண் இளங்கோ மிரட்டியதாக . மடத்தின் மேலாளர் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக தன்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை கண் இளங்கோ நாடினார்.
இவ்வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மேற்குறிப்பிட்ட இரண்டு அரசாணைகள் 1393, 3584/70-4 ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ வழிபாட்டுப் பாடலாகவே இந்த அரசாணைகள் வரையறுத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய் வாழ்த்து வழிபாட்டுப்பாடல், அது, கீதம் அன்று”. என்று குறிப்பிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தச் சட்டமும், அரசாணையும் இல்லை என்பதையும் அத்தீர்ப்பில் கவனப்படுத்தினார்.
மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உச்சபட்ச மரியாதையும், மதிப்பும் தரவேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது கூட்டத்தினர் எழுந்து நிற்பது மரபாக இருக்கிறது என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில் தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும். பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் நாம் கொண்டாடும் போது, ஒரே வழியில் தான் மரியாதை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவது போலித்தனமானது. ….. ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி எளிய வாழ்வினையே வாழ்கிறார்.அவர் வழிபாட்டில் ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான நிலையில் இருப்பார். தமிழ்த்தாய் வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால் சந்நியாசி தியான நிலையில் அமர்ந்து இருப்பது நிச்சயம் நியாயமானது. இந்த நிகழ்வில், மடாதிபதி தியான நிலையில் அமர்ந்து கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும் செலுத்தும் விதமாகும்.” என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்தின் தோற்றம், வளர்ச்சி, அதனை அரசு நிகழ்ச்சிகளில் விழாவின் துவக்கத்தில் பாடவேண்டும் என்று ஆணையிட்ட அரசாணைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு விலக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தந்தை என்.சிவராஜ் அவர்கள் ஆசிரியராக நடத்திய ‘ஜெய் பீம்’ இதழ் ஏப்ரல் 13 1946ல் பாபாசாகேப் அம்பேத்கரின் அண்ணலின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. பாபாசாகேப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கீழ்கண்ட சிறப்புச்செய்தியை வழங்கினார் :
என்னுடைய 55-வது பிறந்த நாளையொட்டிய சிறப்பிதழிற்கு நான் பங்களித்து என் கருத்துகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டீர்கள். வெளிநாடுகளில் மக்கள் தங்களுடைய இறைத்தூதர்களின் பிறந்தநாட்களையே கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கெடுவாய்ப்பாக, இந்தியாவில் மட்டுமே இறைத்தூதர்களுக்கு நிகராக அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப்படுகின்றன. இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பது பரிதாபகரமானது. தனிப்பட்ட முறையில் என் பிறந்த நாளை கொண்டாடுவது எனக்கு உவப்புடைய ஒன்றல்ல. உச்சபட்ச ஜனநாயகவாதியான நான், நாயக வழிபாடானது ஜனநாயகத்திற்குப் பெருங்கேடு விளைவிக்கிறது எனக்கருதுகிறேன். ஒரு தகுதிமிக்கத் தலைவன் மீது நேசம், அன்பு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றைச் செலுத்துவது ஏற்புடைய ஒன்றுதான். அதுவே அத்தலைவனுக்கும் அவர் தொண்டர்களுக்கும் போதுமானது. ஆனால், தலைவர்களை வழிபடுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. அது இருதரப்பினரின் ஒழுக்கச்சிதைவிற்கு வழிவகுக்கும். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். எப்போது ஒரு அரசியல் தலைவரை இறைத்தூதர்களுக்கு நிகராக முன்னிறுத்துகிறோமோ, அப்போது அவர் இறைத்தூதரைப் போல நடந்து கொண்டு தன்னைப் பின்பற்றுபவர்களுக்குச் செய்தி வழங்க வேண்டும்.
புகைப்பட நன்றி : அம்பேத்கர் அம்பேத் தளம்
நான் உங்களுக்கு என்ன செய்தியை வழங்குவது? அதற்குகுப் பதிலாக ஒரு கிரேக்க புராணக் கதையைச் சொல்லி அதன் நீதியை தங்களுக்குச் சுட்டிக்காட்ட முனைகிறேன். ஹோமர் கிரேக்க இறைவி டெமிடருக்கு இயற்றிய பாடலில் இக்கதை காணக்கிடைக்கிறது. டெமிடர் தன்னுடைய மகளைத் தேடி கேலியோஸ் மன்னனின் அவைக்கு வருகிறார். எளிய செவிலித்தாய் உருவத்தில் வந்திருந்த இறைவியை யாராலும் கண்டுகொள்ள இயலவில்லை. இராணி மெட்டோநிய்ரா அண்மையில் தான் பெற்றெடுத்திருந்த பச்சிளம் குழந்தை டெமோஃபூனை (பிற்காலத்தில் ட்ரைப்ட்டோலமஸ் என அறியப்பட்டவன்) டெமிடரிடம் வளர்த்தெடுக்கக் கொடுக்கிறார்.மொத்த மாளிகையும் உறங்கிய பிறகு, ஒவ்வொரு இரவும், தொட்டிலில் இருந்து மழலையை வாரியெடுத்து, மின்னுகிற தீக்கங்குகளால் ஆன படுக்கையில் கிடத்தி வந்தார். பார்ப்பதற்குக் கொடூரமானதாகத் தோன்றினாலும், உண்மையில் அக்குழந்தையை தெய்வத்தன்மை உடையவனாக ஆக்கும் பேரன்பு, வேட்கையினால் தான் டெமிடர் அப்படிச் செய்தார். தீக்கங்கின் வெம்மையில் சிக்கி படாதபாடுபட்ட மழலை டெமோஃபூன் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று வளர்ந்து வந்தான். படிபடிப்படியாகச் சற்று தெய்வத்தன்மையும், சற்று கட்டுரமும், சற்று நம்புதற்கரிய மகிமையோடும் அவன் வளர்த்தெடுக்கப்பட்டான்.
இராணி மெட்டோநிய்ரா மாலை வேளை ஒன்றில் பரபரப்புடன் சோதனை நடக்கும் அவ்வறையின் கதவை திறந்து, தேவையற்ற அச்சத்தால் உந்தப்பட்டு வளர்ப்புத்தாயை தள்ளிவிட்டு, பேராளுமையாக மாறிக்கொண்டிருந்த குழந்தையைத் தீக்கங்குகளிலான தொட்டிலில் இருந்து மீட்கிறார். குழந்தை காப்பாற்றப்பட்டாலும் அதன் பேராளுமையையும், தெய்வத்தன்மையையும் இழக்கிறது.
இக்கதை நமக்கு என்ன நீதியைக் கூறுகிறது? என்னைப் பொருத்தவரை , வாழ்வினில் மேன்மையை இன்னல்களையும் தியாகங்களையும் சந்தித்தால் மட்டுமே எட்டமுடியும் எனக்கற்பிக்கிறது. மானுடப்பண்போ, தெய்வத்தன்மையோ அக்னிப்பரீட்சைக்கு ஆளாகாமல் கிட்டுவதில்லை. நெருப்புப் பரிசுத்தப்படுத்துகிறது, உரமேற்றுகிறது. அதேபோல் தான் போராட்டங்களும், துயரங்களும் வலிமை கூட்டும். ஒடுக்கப்பட்ட எந்த மனிதனும் போராட்டங்களும் இன்னல்களும் இன்றி மேன்மையை அடைய இயலாது. அவன் தன் சுகதுக்கங்களையும், தற்போதைய உடனடித் தேவைகளையும் தியாகம் செய்தால்தான் ஓர் நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும். விவிலியத்தின் மொழியில் சொல்வதென்றால் வாழ்வின் ஓட்டப்பந்தயத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர். ஏன்? அதற்கான காரணம் தெள்ளத்தெளிவானது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கைப்பந்தயத்தில் நிகழ்காலத்தின் இன்பங்களை எதிர்காலத்தேவைகளுக்காகத் தியாகம் செய்யும் தைரியமோ, மன உறுதியோ இல்லாததால் மேன்மையை எட்ட இயலவில்லை.
இக்கதையில் உள்ளதைவிட மேலான,உயர்ந்த அறிவுரை உள்ளதா? எனக்குத் தெரிந்தவரை இதுவே தீண்டப்படாதவர்களுக்கு வழங்கும் சிறந்த, உகந்த அறிவுரையாகும். அவர்களின் போராட்டங்கள், அவர்களின் வேதனைகளை அறிந்தே உள்ளேன். விடுதலைக்கான அவர்களின் போராட்டத்தில் என்னைவிடப் பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என நன்கறிவேன். இத்தனைக்குப் பிறகும், அவர்களுக்கு வழங்க என்னிடம் ஒரே செய்தி தான் உள்ளது. என்னுடைய செய்தி இதுதான்: போராடுங்கள், இன்னமும் போராடுங்கள், தியாகம் செய்யுங்கள், இன்னமும் தியாகம் புரியுங்கள். தியாகங்களுக்கும், துயரங்களுக்கும் துவளாத போராட்டங்கள், இடையறாத போராட்டங்கள் மட்டுமேவிடுதலை அளிக்கும். வேறெதுவும் நமக்கான விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை.
தீண்டப்படாதவர்கள் ஒன்றுபட்டு எழுந்து,எதிர்க்கத் துணிய வேண்டும். தாங்கள் ஒப்புக்கொடுத்திருக்கும் அரும்பணியின் புனிதத்தை உணர்ந்து , உத்வேகத்தோடு ஒருங்கே உறுதிபூண்டு தங்களின் இலக்கை அடைய முயலவேண்டும். அவர்கள் காரியத்தின் மகத்துவத்தையும் உன்னத நோக்கத்தையும் மனதில் நிறுத்தி பிரார்த்தனையாக இதனைக் கூட்டாக உச்சரிக்க வேண்டும் :
தங்களோடு பிறந்தவர்களை வளர்ப்பதற்கான கடமைக்காகக் களம் கண்டு உயிர்வாழ்பவர்கள் பேறு பெற்றோர். தங்கள் காலத்தின் மலர்களை, உடல்,பொருள், ஆவியின் வலிமையை, தீரத்தை எல்லாம் தங்களின் அடிமைத்தளையை அறுக்க அர்ப்பணித்தவர்கள் பேறு பெற்றொர். நன்மை வரட்டும், தீமை வரட்டும், கோடை சுடட்டும், கடுங்குளிர் வாட்டட்டும், புகழ் பெருகினாலும், அவமானங்கள் அடைந்தாலும் தீண்டப்படாதவர்கள் தங்களுடைய ஆண்மையை மீட்கும் வரை துவளமாட்டோம் என உறுதியோடு உழைப்பவர்கள் பேறுபெற்றோர்”
மகத் சத்தியாகிரகம் அம்பேத்கரால் மார்ச் 20 அன்று 1927-ல் நிகழ்த்தப்பட்டது. அதைப்பற்றி பேராசிரியர் கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா எழுதிய ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ நூலில் காணப்படும் பக்கங்கள் உங்கள் வாசிப்புக்காக:
மார்ச் 1927-ல் ஒரு மாநாட்டை அம்பேத்கர் மகத்தில் கூட்டினார். இந்த மாநாட்டிற்குத் தலித் அல்லாத தலைவர்கள் ஆதரவு நல்கினார்கள். காயஸ்தரான எஸ்.திப்னிஸ், பூனாவில் பிராமணரல்லதோர் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரும், அம்பேத்கர் வழக்கேற்று நடத்தியவருமான கே.எம்.ஜெத்தே ஆகியோர் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தந்தார்கள். மகத்தில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை சமஸ்கிருதமயமாக்கலின் இலட்சியங்களை நோக்கிய பயணமாக இருந்தது:
‘நாம் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் முன்னேற்றத்தை எட்ட மூன்று கட்ட சுத்திகரிப்பிற்கு நம்மை நாமே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நடத்தையின் பொதுவான தொனியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், நம்முடைய உச்சரிப்பை செம்மைப்படுத்த வேண்டும், நம்முடைய சிந்தனைகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆகவே, இந்தக் கணத்தில் இருந்து நீங்கள் அழுகிப்போன இறைச்சியை உண்பதை துறப்பீர்கள் என்று உறுதி பூணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’
இதற்குப் பிறகு அம்பேத்கர் ஒரு ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசிய மேடையில் துவங்கிய அந்த ஊர்வலம், சவுதார் குளத்தில் முடிந்தது. தண்ணீர் மூலமான அந்தக் கிணறு எழுத்தளவில் தீண்டப்படாத மக்களுக்குத் திறந்திருந்தது. ஆனால், அந்தக் குளத்தைப் பயன்படுத்த தீண்டப்படாத மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காந்தி தண்டி யாத்திரையின் போது உப்பை கையில் எடுத்ததைப் போல, சாதி தடையை உடைத்ததன் அடையாளமாக, கம்பீரமாக அம்பேத்கர் குளத்தில் இருந்து நீரை எடுத்து பருகினார். இந்த அத்துமீறல் தங்களை உசுப்பேற்றுகிற செயல் என்று கருதிய உள்ளூர் உயர் சாதி இந்துக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டம் நடந்த இடத்திற்குத் திரும்பிக்கொண்டு இருந்த போது தாக்கினார்கள்.
அடுத்தடுத்த நாட்கள், வாரங்களில் மகத்தின் உயர் சாதியினர் தீண்டப்படாத மக்களைச் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆட்படுத்தினார்கள். சமயங்களில் அவர்களை வேலையை விட்டு நீக்குவது, உழுது கொண்டிருந்த நிலத்தை விட்டு வெளியேற்றுவது ஆகிய செயல்களிலும் ஈடுபட்டார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆகஸ்ட் 4,1927 அன்று மகத் நகராட்சி மூன்றாண்டுகளுக்கு முன்னால் சவுதார் குளத்தைத் தீண்டப்படாத மக்கள் பயன்படுத்தலாம் என்கிற தன்னுடைய 1924-ம் ஆண்டு உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டது. அம்பேத்கர் இரண்டாவது கூட்டத்தைக் கூட்டினார். இதில் ஒரு புதிய வகையான போராட்டம் உருப்பெற்றது. இந்த இரண்டாவது மகத் மாநாடு டிசம்பர் 1927-ல் நடைபெற்றது. அம்பேத்கரின் பேச்சு சாதி அமைப்பை அக்குவேர், ஆணிவேராக அறுத்தெறிய அறைகூவல் விடுத்தது. அவர் பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை நினைவுகூர்ந்தார். மகத் மாநாட்டை, மூன்றாவது எஸ்டேட் பிரெஞ்சு புரட்சியை ஒட்டுமொத்தமாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘Etats Generaux de Versailles’ நிகழ்வோடு ஒப்பிட்டார்.
‘துவக்கத்திலேயே நான் உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். இந்தச் சவுதார் குளத்தில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பதற்காகக் கலைந்து செல்லவில்லை. இப்போது அந்தக் குளத்திற்குள் நாங்க நுழைய விரும்புவதற்கு ஒரே காரணம் தான் உண்டு…நாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள் என்று நிரூபிக்க விரும்புகிறோம் […] இந்த மாநாட்டைக் கூட்டியதன் மூலம் இந்த மண்ணில் சமத்துவச் சகாப்தத்தைத் துவக்கி வைத்துள்ளோம். தீண்டாமையை அகற்றுவது, அனைத்து சாதியினரும் கலந்து உணவுண்ணும் சமபந்தி ஆகியவை மட்டுமே நமக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு முடிவு கட்டிவிடாது. நீதிமன்றங்கள், ராணுவம், காவல்துறை, வியாபாரம் முதலிய அனைத்து சேவைத்துறைகளும் நமக்குத் திறந்து விடப்பட வேண்டும் […] இந்து மதம் சமத்துவம், சாதிய ஒழிப்பு ஆகிய இரண்டு முக்கியக் கொள்கைகளின் மீது மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.’
இந்தப் பேச்சை தொடர்ந்து மனித உரிமை அறிக்கை, மனிதர்களுக்கான பிரிக்க முடியாத சமத்துவத்தை ஆதரிக்கும் தீர்மானம் ஆகியவை கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் இன்னும் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் இந்து சமூகத்தின் உட்பாகுபாடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டு ஒரே மக்கள் குழுவாக இணைய வேண்டும் என்றது. இரண்டாவது தீர்மானம் அர்ச்சகர் தொழிலை அனைத்து சாதியினருக்கும் உரியதாக ஆக்க வேண்டும் என்றது. இறுதியாக, பல்வேறு பேச்சாளர்களும் மனுஸ்மிருதியை கடுமையாகத் தாக்கினார்கள். அந்நூலின் ஒரு பிரதி மேடையின் முன்னால் இருந்து பீடத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. மனுஸ்மிருதியை ஒரு தலித் துறவி கம்பீரமாக எரித்தார்.
அடுத்த நாள், சவுதார் குளத்திற்குள் இலவச நுழைவை பெறுவதற்கான சத்தியாகிரகத்தை அம்பேத்கர் துவங்கினார். அதில் நான்காயிரம் தன்னார்வலர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். சவுதார் குளம் தனியார் சொத்து என்று சொல்லி மேல்சாதி இந்துக்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தார்கள். ஆகவே, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வரும்வரை அமைதியாகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், அம்பேத்கர் போராட்டத்தை ஒத்திவைத்து விட்டு, நீர்நிலையைச் சுற்றி ஒரு ஊர்வலத்தை நடத்தினார். இந்த அணுகுமுறை இப்படிப்பட்ட சூழல்களில் வருங்காலத்தில் அவர் பின்பற்றப்போகும் யுக்தியை ஒத்திருந்தது. அந்த யுக்தியானது பிரச்சினைகளை வீதிகளில் தீர்த்துக் கொள்வதை விட, நீதிமன்றத்திடம் அவற்றை ஒப்புக்கொடுப்பதே ஆகும். இது சட்டத்தை முழுமையாகச் சார்ந்திருப்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்கிற அம்பேத்கரின் பாணியை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, அம்பேத்கரின் நிலைப்பாடு சரியென்று நீதிமன்றங்கள் 1937-ல் தீர்ப்பளிக்கும்.
“பல கோடி விளிம்புநிலை மக்களின் கனவுகளின் அடையாளமாக என்னுடைய ஹார்வர்ட் டிகிரி திகழ்கிறது.”- அனுராக் பாஸ்கர்
அனுராக் பாஸ்கர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து தன்னுடைய LL.M. பட்டத்தை 2019-ல் பெற்றிருக்கிறார். அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக வேலை பார்த்த அனுபவம், ஹார்வர்ட் நோக்கிய பயணம், ஹார்வர்ட் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை, அவரின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்.
அனுராக் பாஸ்கர் தன்னுடைய LL.M. பட்டத்தை ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிடம் இருந்து பெற்றிருக்கிறார். இவர் லக்னோவில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( RMLNLU) B.A. LL.B பட்டங்களை 2012-17 காலத்தில் பெற்றார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக ஜூலை 2017-18 காலத்தில் பணியாற்றினார். அனுராக் கூர்மையான அறிவுத்திறமிக்கப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. செய்தித்தாள்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தோவியங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளார். அவருடைய கட்டுரைகள் The Wire, LiveLaw, The Print, EPW முதலிய பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இனி அவரின் பயணம் குறித்து உரையாடுவோம்.
கேள்வி: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து LL.M. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்?
அனுராக் : திக்குமுக்காடிப் போயிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய பட்டமளிப்பு விழா மே 30, 2019 ல் நடைபெற்றது. நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதை நம்பவே ஒரு வாரம் ஆனது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை, நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. அமெரிக்காவை எட்டிப் பார்க்க வேண்டும் என்று கூட எனக்குப் பட்டதில்லை. எண்பதுகளில் எங்கள் வீட்டிற்குச் சவால்மிக்கக் காலம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து வேலை தேடி லக்னோவிற்கு என் அப்பா அடிக்கடி நாற்பது கிலோமீட்டர்கள் கால் வலிக்க, வலிக்கச் சைக்கிள் மிதிப்பார். என் அப்பாவை பொறுத்தவரை லக்னோ சென்று வருவது என்பது வெளிநாட்டிற்குப் போய்வருவதாகும். நான் லக்னோவில் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போது, வேலையின் பொருட்டு டெல்லிக்கு இடம்பெயர வேண்டும் என்பது எனக்கு வெளிநாட்டிற்குப் போகிற ஒன்றாகவே தோன்றியது. அந்தச் சைக்கிள் பயணத்தில் இருந்து ஹார்வர்ட் வரையிலான இப்பயணத்தை வந்தடைய என் குடும்பம் நெடுந்தூரம் நடந்திருக்கிறது. தற்போது நான் கலவையான உணர்வுகளில் ஆட்பட்டுள்ளேன்.
கேள்வி: நீங்கள் ஏன் சட்டம் பயில முடிவு செய்தீர்கள்? உங்கள் குடும்பத்தில் யாரேனும் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்களா?
அனுராக்: இல்லை ! நான் முதல் தலைமுறை வழக்கறிஞர்.
நான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க ஒரு வரலாற்று ஆளுமையே முதன்மையான காரணம். அவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பள்ளிக்காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் படைத்தளித்த தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் என்கிற மனப்பிம்பம் என்னைப் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. அவரின் வாழ்வானது சட்டம் பயின்று அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்திற்கான கருவியாக மாறவேண்டும் என்கிற கனவினை விதைத்தது. ஆனால், சட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நான் பொறியியல் பயில வேண்டும் என்று விரும்பினார்கள். அடிக்கடி, நடுத்தர வர்க்க/அடித்தட்டு நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதாரத்திலோ, சமூகத்திலோ பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபர்களின் முதல் போராட்டம் தங்களுடைய குடும்பங்களிலேயே துவங்குகிறது. நாம் விரும்பிய பாடத்தைப் படிக்கப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. என்னுடைய பெற்றோர் நான் விரும்பிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
கேள்வி: ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (RMLNLU) உங்களுடைய எத்தகைய அனுபவம் கிட்டியது?
அனுராக்: செறிவான அனுபவம்! சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள், வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள இப்பல்கலைக்கழகம் உதவியது. மேலும், எனக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொணரவும் RMLNLU பெருமளவில் கைகொடுத்தது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்புக் கொண்ட பல்கலைக்கழகங்களில் என் கல்விக்கூடமும் ஒன்று. அங்கே உள்ள நூலகத்தில் குவிந்துள்ள நூல்கள் அறிவின் ஊற்று. எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் மகத்தானவர்கள். எனினும், RMLNLU கல்வி நிறுவனமாக இன்னமும் தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்குக் கிட்டிய சில நல்ல நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்து வருகிறார்கள்.
கேள்வி: RMLNLU-ல் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வேறென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?
அனுராக்: பொதுவாகச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது, விவாதம் புரிவது ஆகியவற்றில் மின்னுவார்கள். நான் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வந்தமையால், எனக்குச் சரளமான ஆங்கிலம் கைவரவில்லை. இதனால், பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்கவோ, பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய அவசியமிருக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ எனக்குத் தயக்கமாக இருக்கும். இதைக்கண்டு திகைத்து போய் நிற்காமல், என்னுடைய பிற திறன்களைப் பட்டை தீட்டிக்கொண்டேன்.
RMLNLU-வில் படித்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தினேன். இது எனக்குள் தலைமைப்பண்பை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. களத்தில் அரும்பெரும் சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், அரசுப்பதவி வகிப்பவர்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. பின்தங்கிய குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகப் பாடுபடும் டாக்டர். சந்தீப் பாண்டே (ராமன் மகசேசே விருதினை 2002-ல் பெற்றவர்), உத்திர பிரதேச குழந்தை உரிமைப்பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் தலைவர் திருமதி. ஜூஹி சிங் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியதை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். மனித உரிமைகள் வழக்கறிஞரான ஆதித்யா ஸ்ரீவத்ஸவா வழிகாட்டுதலில் களத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய உதவியோடு புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயத் தற்கொலைகளைக் கவனப்படுத்தவும், அதற்குப் பின்னுள்ள காரணங்களை ஆவணப்படுத்தவும் முடிந்ததைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். என்னுடைய பல்கலையின் இணைப் பேராசிரியரான முனைவர். KA பாண்டேவுடன் இணைந்து இந்தியாவின் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைச் சமூகத் தணிக்கை புரியும் செயல்பாட்டை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்து முடித்தோம். மேற்சொன்ன அமைப்பு ரீதியான திறன்களைத் தாண்டி, ஆய்வுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன். என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் பெருமைமிக்க Economic & Political Weekly இதழில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் வெளிவந்தன.
கேள்வி: நீங்கள் RMLNLU-வில் சட்டம் பயின்ற போது ஏழு வெவ்வேறு நீதிபதிகளுடன் பணியாற்றினீர்கள். எது இத்தனை நீதிபதிகளிடம் பயிற்சி பெற உங்களைத் தூண்டியது?
அனுராக்: என்னுடைய மூன்றாவது செமஸ்டரின் போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) இம்தியாஸ் முர்டாசாவிடம் பயிற்சி பெற்றேன். அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் நீதிபதிகள் பணியாற்றும் முறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எப்போது, எவ்வளவு முடியுமோ அப்போதெல்லாம் பல்வேறு நீதிபதிகளிடம் பயிற்சி பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர்களுடைய ஆக்கங்களுக்கு என்னாலான பங்களிப்பினை புரிந்தேன்.’Philadelphia’ திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், “ அடிக்கடி அது அமைவதில்லை. எங்காவது, எப்போதாவது அரிதாகத்தான் நீதி வழங்குவதில் நீ பங்கேற்க இயலும். அது நிகழும் போது ஏற்படும் பரவசம் அதியற்புதமானது.” அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நான் வெவ்வேறு துறை வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளின் கீழ் பணியாற்ற விண்ணப்பித்தேன். இதன்மூலம் பலதரப்பட்ட வழக்குகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, நான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி DY சந்திரசூட் வழிகாட்டுதலில் பணியாற்றியதும், லக்னோ உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தேவேந்திர உபத்யாயா, ராஜன் ராய், AR மஸூதி ஆகியோரிடம் பணியாற்றியதும் சுவாரசியம் கூட்டுபவையாக இருந்தன.
கேள்வி: இதே காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சட்ட உதவியாளராக பணிபுரிந்தீர்களா?
அனுராக்: நவம்பர் 2013-ல் எங்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அலகாபாத் தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பங்கேற்றார். அவர் பேசியதை கேட்டது முதல் அவர் ஊக்கமூட்டும் ஆளுமையாக எனக்கு ஆனார். அவரிடம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பித்தேன். அவரிடம் நேரடியாகக் கற்றுத்தேறும் வாய்ப்பில்லாமல் போயிருந்தால் வேறேதேனும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்.
கேள்வி : நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது ?
அனுராக்: அது அசாதாரணமான ஒன்றாக இருந்தது என்று எண்ணுகிறேன். சட்ட உதவியாளர்களில் நான் பெரும் நல்வாய்ப்பு பெற்றவன் என்றே உணர்கிறேன். அவர் செவிமடுத்த பல்வேறு புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் ஜூலை 2017-18 காலத்தில் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. நீதிபதி சந்திரசூடின் அனுபவங்களை அவர் அடிக்கடி தன்னுடைய சட்ட உதவியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனைப் பதிவு செய்வதற்காக நீதிபதி சந்திரசூட் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணுகிறேன்.
நீதிபதி சந்திரசூட் ஒருமுறை தன்னுடைய தந்தையும், காலஞ்சென்ற நீதிபதியுமான YV சந்திரசூட் குறித்த தன்னுடைய நினைவலைகளில் மூழ்கினார். அவருடைய தந்தை அப்போது இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் பம்பாயில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வார். (அனேகமாகக் காலா கோடா கஃபே/வேஸைட் இன்). அங்கே நண்பகல் வேளையில் ஒரு மனிதர் எப்போதும் அமர்ந்திருப்பதைக் காண்பார். அம்மனிதர் தனக்குள் தோன்றும் கருத்துகளைச் சளைக்காமல் எழுதிக்கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார். அந்த மாமனிதர் டாக்டர். அம்பேத்கர். நீதிபதி YV சந்திரசூட் தான் டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்கில் அவருக்கு எதிர்தரப்பில் நின்று வாதாடிய நினைவுகளை ஆசையோடு அசைபோடுவாராம்.
கேள்வி: கடந்த செப்டம்பர் 2018-ல் விஞ்ஞான் பவனில் உரையாற்றும் போது நீதிபதி சந்திரசூட் உங்களைக்குறித்துக் குறிப்பிட்டார். அவர் உங்களுடைய சமூகப் பின்னணி குறித்தும் பேசினார். உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், அதைக்குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
அனுராக்: “ஆம். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பல்வேறு அடையாளங்களில் அதுவும் ஒன்று. எனினும், என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான தேர்வுகளைத் தலித் அடையாளமே செதுக்கியிருக்கிறது. ஹார்வர்டில் பட்டம் பெற்றது என்பது என்னைப்பற்றிய ஒன்று என்பதையும் தாண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எனக்குத் தனிப்பட்ட அளவிலும், வழக்கறிஞராகவும் கிட்டிய அனுபவங்கள் முக்கியமானவை என்பதோடு என்னுடைய ஹார்வர்ட் நோக்கிய இந்தப் பயணமானது இன்னமும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழவேண்டிய நிலைக்கு இன்றுவரை தள்ளப்பட்டிருக்கிற பல கோடி மக்களின் கனவுகளின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த ஹார்வர்டில் பெற்ற LL.M. பட்டமானது, மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் முன்பே தற்கொலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர். பாயல் தட்விக்குச் சமர்ப்பணம். இந்தப் பட்டமானது ரோஹித் வெமுலாவிற்கான என்னுடைய அஞ்சலி. அவருடைய இறுதிக்கடிதம் அறவுணர்வுமிக்கதாகத் திகழவேண்டிய தேசத்தினுடைய மனசாட்சியை நோக்கி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் முன்முடிவுகளை அறவே அழிக்க வேண்டியதை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். குதிரையில் ஏறி சவாரி செய்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்ட, இது போன்ற எண்ணற்ற அநீதிகளை அன்றாடம் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எம்மக்களுக்கான பட்டம் இது. பஞ்சம் தாக்கிய பகுதிகளில் நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளுக்காக இப்பட்டம். இது ஒடிசாவில் ஃபனி புயலில் பாதிக்கப்பட்டும், புயற்காலப் பாதுகாப்பு உறைவிடங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டும், நிவாரண உதவிகள் தரப்படாமலும் அல்லல்படுத்தப்படும் தலித்துகளுக்கான பட்டம். நான் ஹார்வர்டில் பட்டம் பெற்றது எண்ணற்றோரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். என்டிடிவியில் தோன்றிய பதினான்கு வயது சிறுமி சுனைனா உள்ளிட்ட பெருங்கனவுகள் கொண்ட அனைவருக்கும் எட்டாததாகத் தோன்றும் எல்லைகளையும் தொட்டுவிட இது உத்வேகம் தரும் என்று நம்புகிறேன்.”
கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் LL.M. பட்டம் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.
. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ஒருவர் : தற்குறிப்பு (CV/Résumé); தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை ( Personal statement question); மதிப்பெண் பட்டியல்கள், குறைந்தபட்சம் இரண்டு பேரின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை A, B என்று இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில், விண்ணப்பிப்பவர் தனக்குப் பிடித்த துறையில் காணப்படும் முக்கியமான பிரச்சனை ஒன்றையோ, ஒரு நாடு/பகுதி/உலகம் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல் ஒன்று குறித்து விவரிக்க வேண்டும். பின்னர் இது சார்ந்து தத்துவார்த்த வரைவு ஒன்றையோ, அச்சிக்கலை எதிர்கொள்ளும் அணுகுமுறையையோ பரிந்துரைக்க வேண்டும். இந்தச் சட்டக்கட்டுரையானது முழுக்க முழுக்க விவரணையாக அமையாமல் பகுத்தாய்வது, ஒழுங்குமுறைகளை (normative) அணுகுவதில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையானது நீங்கள் எடுத்துக்கொண்ட சட்டச்சிக்கல் குறித்து அசலான, ஆழமான புரிதலை வெளிக்கொணர வேண்டும். தேவையான மேற்கோள்கள், தேவையென்றால் விளக்கத்தோடு கூடிய அடிக்குறிப்புகள் இடம்பெறலாம். பகுதி B ஆனது ‘தன்னைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கை’ பிற LL.M பட்டங்களில் அமைவதை ஒத்திருக்கும். இதில் விண்ணப்பிப்பவர் ஏன் ஹார்வர்டில் LL.M பட்டம் பெற விரும்புகிறார் என்பதையும், இப்பட்டம் பெறுவது அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்களை எப்படி இணைக்கிறது என்றும் பேச வேண்டும். மேலும், மனதைக்கவரும் தனிப்பட்ட கதையொன்றையும் இப்பகுதியில் எழுத வேண்டும். ஹார்வர்ட் சட்டக்கல்லூரிக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறரும், நானும் சட்டத்தின் குறிப்பிட்ட கூறுகளோடும், எங்களுடைய பணி அனுபவங்களையும் இணைத்து இப்பகுதியை எழுதியிருந்தோம். விண்ணப்பிப்பவர் அடிப்படையில் கீழ்கண்டவற்றை விளக்கி எழுத வேண்டும்: (1) ஏன் LL.M பட்டம் பயில விரும்புகிறார், (2) என்னென்ன பாடங்களைப் பயில விருப்பம், ஏன்?, (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும்?. விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலதரப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள்? ( (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.)
கேள்வி : ஹார்வர்டில் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும், உங்களுடைய பார்வையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஹார்வர்ட் சட்டக் கல்லூரி இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் உதவித்தொகைகளை வழங்கி உதவுகிறதா?
அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரி ஹார்வர்டில் படிக்கப் போதுமான வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது. எனக்கு $52000 டாலர் நிதியுதவி கிட்டியது (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 36 லட்சம்). இதைக்கொண்டு கல்விக்கட்டணத்தில் 80% செலுத்த முடிந்தது மீதமிருந்த கட்டணத்தை வங்கிக்கடனை கொண்டு செலுத்தினேன் ஹார்வர்ட் வழங்கும் நிதியுதவி போக இன்லாக்ஸ் உதவித்தொகை, ஃபுல்ப்ரைட் உதவித்தொகை ஆகியவை உள்ளன. மேலும், வட்டியில்லா கடனாக உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளும் உண்டு (டாடா அறக்கட்டளை போன்றவை).
கேள்வி: ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்
அனுராக்: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனக்குள் கனன்று கொண்டிருந்த கனவு. நம்முடைய கனவுலகில் நிஜமாகவே சஞ்சரிப்பது என்பது உலகத்தின் அற்புதமான உணர்ச்சிகளில் ஒன்று.
ஹார்வர்ட் பல்வேறு அரிய வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் கொட்டிக்கிடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் LL.M. பட்டப்படிப்பிற்கான ஒன்பதரை மாதத்தில் பயன்படுத்துவதும், அறிவுக்கடலில் முத்துக் குளிப்பதும் மலைப்பூட்டுகிற ஒன்று. என்னுடைய சகா ஒருவர் குறிப்பிட்டதைபோன்று “ஹார்வர்ட்டின் ஒட்டுமொத்த எல்லையைத் தொட்டுணரவும், அதன் அனுபவங்களை முழுமையாக அள்ளிக்கொள்ளவும் ஆக்டோபஸாகத் தான் இருக்க வேண்டும்”. மகத்தான சில பேராசிரியர்களிடம் படிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம். வகுப்புகளைத் தாண்டி என்னுடன் உடன் பயின்ற மாணவர்கள் பலதரப்பட்ட கலாசாரங்கள், சமூகப் பின்புலங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடன் 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றார்கள். இவர்கள் சட்டக்கல்வி, சட்டத்துறை ஆய்வு, அரசாங்க பணி, நீதித்துறை, சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தனியார் துறையினர் என்று பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்.
எடுத்துக்காட்டாக நான் அஷுடோஷ் சலீல் (மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முனைப்பான அரசு அதிகாரி), ஷீலா செய்ல் (ஐம்பது வயதாகும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அதிகாரி) உள்ளிட்ட ஊக்கமூட்டும் ஆளுமைகளுடன் இணைந்து வகுப்புகளில் பங்கெடுப்பேன், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பரிமாறிக்கொள்வேன் என்றோ எப்போதும் எண்ணியதில்லை. மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளிலும் (கென்னடி கல்லூரி போன்றவை), பிளெட்சர் கல்லூரியிலும் இணைந்து பயிலும் வாய்ப்பும் உண்டு. இதனால் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பாடங்களைப் பயிலும் மாணவர்களோடு தொடர்புகொள்ள இயலும். அமெரிக்கா வந்ததால் நான் வெகுவாக மதிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும் பேராசிரியர் மைக்கேல் சாண்டெல் (நம் காலத்தின் கற்றறிந்த தத்துவ அறிஞர்), டாக்டர் ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர்) ஆகியோரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.
கேள்வி : நீங்கள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்றுத்தேர்ந்தீர்கள்?
அனுராக் : 2018 செப்டம்பர்-டிசம்பர் காலத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் நடத்திய ‘சட்டத் தொழில்’ பாடம், ஜென்னி ஸுக் ஜெர்சனின், ‘அரசியலமைப்புச் சட்டம்: அதிகாரப் பகுப்பு, கூட்டாட்சி மற்றும் பதினான்காவது சட்டதிருத்தம்’, பேராசிரியர் லூஸி வைட்டின், ‘வறுமை, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி’, பேராசிரியர் ஸ்டீபனி ராபின்சனின் , ‘நிறப்பாகுபாட்டில் இருந்து நிறக்குருட்டுத் தன்மை, அதிலிருந்து நிறத்தை மறுவரையறை செய்வது : மாறிக்கொண்டே இருக்கும் இனம் குறித்த கருதுகோள்களோடு அமெரிக்காவின் போராட்டங்கள்’ முதலிய பாடங்களைப் பயின்றேன். :. 2019-ன் பிப்ரவரி – ஏப்ரல் காலத்தில் மைக்கேல் க்ளார்மேனின் ‘அரசியலமைப்பு சட்ட வரலாறு II: அமெரிக்காவின் புனரமைப்புக் காலத்தில் இருந்து சிவில் உரிமைகள் இயக்கம் வரை’ , பேரசிரியர் லாரன்ஸ் லெஸ்ஸிக்கின், ‘அரசியலமைப்பு சட்டங்களின் ஒப்பீடு’, பேராசிரியர் டயானா ரோசென்ஃபீல்டின் ’பாலின வன்முறை, சட்டம் மற்றும் சமூக நீதி’ ஆகிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்தேன். மேலும், தத்துவம் சார்ந்து பேராசிரியர்கள் ராபர்டோ உங்கெர், மைக்கேல் பொயட் ஆகியோர் நடத்திய, ‘மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவங்களில் வாழ்வியல் ஒழுக்கங்கள்’ எனும் பாடத்தையும் கற்றறிந்தேன்.
கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் உங்களால் மறக்க முடியாத நினைவு என்று ஏதேனும் உண்டா?
அனுராக் : ஒட்டுமொத்த ஹார்வர்ட் அனுபவமே மறக்க முடியாத ஒன்று தான். எனினும், சில தருணங்கள் இன்னமும் உரமேற்றுவதாக, ஊக்கப்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக மூன்று தருணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது அனுபவம் இது:
2018-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட வகுப்பின் இறுதி வகுப்பு பேராசிரியர் ஜென்னி ஸுக்ஜெர்சன் தன்னுடைய வலிமையான உரையோடு வகுப்பை முடித்துவைத்தார். அவர் நம் சமகாலத்தின் அரசியலமைப்பு சட்ட நெருக்கடிகள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய பாத்திரத்தை குறித்தும் விரிவாக உரையாற்றினார் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் பேசிக்கொண்டே இருக்கையில் உணர்ச்சிவசப்பட்டவராகத் தென்பட்டார். அவர் தன்னுடைய வகுப்பை, “நமக்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான தடுப்புச்சுவராக அரசியலமைப்பு சட்டமே உள்ளது” என்று சொல்லியவாறு நிறைவுசெய்த போது கிட்டத்தட்ட அழுதுவிட்டார். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க பற்றுறுதியும், பிணைப்பும் கொண்ட அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், இப்பெரும்பணிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிற உணர்வும் மெய்சிலிர்க்க வைத்தது.
இரண்டாவது, பட்டமேற்பு விழாவிற்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் பேராசிரியர் மைக்கேல் க்ளார்மேனின் ‘இறுதி சொற்பொழிவு’. இது ஏப்ரல் 2019-ல் நிகழ்ந்தது. அந்த உரையில் பேராசிரியர் க்ளார்மேன் தற்போதைய தலைமுறை அரசியல், சமூக நிலப்பரப்பில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த காலத்தில் சிவில் உரிமைகளுக்காக அயராது போராடிய வழக்கறிஞர்களின் வாழ்க்கை நம்பிக்கையையும், மீண்டெழும் வலிமையையும் நமக்கு வழங்குவதைக் கவனப்படுத்தினார். சிவில் உரிமைகள் சார்ந்த பேராசிரியரின் ஆய்வுகள் பிரமிக்க வைப்பவை.
மனதுக்கு நெருக்கமான மூன்றாவது நினைவு என்பது அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பு. 1990களில் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் இருந்து ஒபாமா பட்டம் பெற்றார் என்பதால், அவரோடு நெருங்கிப் பழகிய பேராசிரியர்களிடம் இருந்து அவர் குறித்த கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பேராசிரியர் வில்கின்ஸ் ஒபாமா குறித்துச் சொல்லும் போது, தன்னுடைய சட்டப்படிப்பிற்குப் பின்பு சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கிற சிந்தனைத் தெளிவு ஒபாமாவிற்கு அப்போதே இருந்தது என்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் டீனாக இருந்த பேராசிரியை மார்த்தா மினோவ் பராக் ஒபாமா வகுப்பில் அடிக்கடி பேசமாட்டார், ஆனால், அவர் பேச எழுந்தால் அதில் தொனிக்கும் உறுதி அனைவரையும் அவர் குரலுக்குச் செவிமடுக்க வைக்கும் என்று நினைவுகூர்ந்தார். இவை போக, எனக்குப் பிடித்த பேராசிரியர்களோடு மத்திய உணவிற்கு வெளியே போவது என் ஞாபக அடுக்கினால் நீங்காத நினைவாக ஆழப்பதிந்திருக்கிறது.
கேள்வி: உங்களுடைய ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த முதல் மாணவர் நீங்கள் தான். அனேகமாக, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்று L.L.M பட்டம் பெற்ற முதல் தலித் ஆளுமையும் தாங்களாக இருக்கக்கூடும். எப்படி உணர்கிறீர்கள்?
அனுராக் : இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல டோபி மக்வொயர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன் படத்தில் எனக்குப் பிடித்த வசனம் உதவும்.. அதில் பீட்டர் பார்க்கர், “வாழ்க்கை எனக்காக எதை என்ன வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், ‘பேராற்றலோடு பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது.’ என்கிற வார்த்தைளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்பான். என்னுடைய வெற்றி, சாதனைகளுக்கும் மேற்சொன்ன வசனம் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.
ஒவ்வொரு வெற்றியோடும், பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இந்தப் பொறுப்பானது கிட்டிய பாடங்களை மேம்பட்ட எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. எப்போது எல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மிடையே உள்ள விரிசல்கள், வேறுபாடுகளை (Fault-lines) பகுத்தாய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதும் பொறுப்பில் அடங்கும். இதே நேரத்தில், இத்தனை காலம் எனக்கு ஆதரவாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகிறது. குறிப்பாக எனக்கு எப்போதும் உற்ற வழிகாட்டியாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களாகவும் திகழ்ந்த முனைவர் பூனம் ஜெயந்த் சிங், முனைவர் பூஜா அவஸ்தி, திவ்யா திரிபாதி, அபூர்வா விஸ்வநாத், ஸ்ரீ அக்னிஹோத்ரி, சவிதா தேவி ஆகிய ஆறு பெண்களை நினைவுகூர்ந்து நன்றிகூற விரும்புகிறேன்.
கேள்வி: உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?
அனுராக் : அன்றாடம் பாதாள சக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்யும் போது இறந்துபோகும் நம்முடைய குடிமக்கள் குறித்த செய்திகளைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். பசியால் குடிமக்கள் இறப்பது குறித்து வாசிக்கிறோம். வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் இயைந்து இயங்க வேண்டிய இத்தகைய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நான் அறிவுத்துறை, சட்டப்போராட்டம், செயல்திட்டத்திற்கான கொள்கைகளைத் திட்டமிடல், அரசியல் ஆகியவற்றில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான்கு தளங்களிலும் தீவிரமாக இயங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருக்கிறேன். என் தொழில் சார்ந்த புத்தம் புதிய மைல்கற்களைக் கண்டடைவதன் மூலம், இத்துறைகளில் பரவலாகப் பங்களிக்க முனைய வேண்டும். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின். 2019-ம் ஆண்டின் வகுப்பறை நாள் விழாவில் மே 29 அன்று தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ரிச்சர்ட் லாசரஸ், “உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பெற்ற ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் பட்டத்தைக் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இந்தப் பட்டத்தைக் கொண்டு வாழ்வில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதிலேயே வாழ்வின் உண்மையான மதிப்பு பொதிந்திருக்கிறது.” என்றார். ஆகவே, இந்தியாவிற்குத் திரும்பி இயங்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.
உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்
அனுராக்: நன்றி
இக்கட்டுரை ‘நீலம்’ டிசம்பர் 2020 இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு மனம்நிறைந்த நன்றிகள்.
டி.என்.சேஷன் 10-11-2019 ல் காலமானார். கேரளாவின் திருநெல்லை நகரில் பிறந்த சேஷன் பொறியியல் படிக்கிற அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்தும் அண்ணனின் வழியில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று உறுதி பூண்டார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார். காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற அவர் அப்பணிக்கு செல்லாமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் மதுரை ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது போராட்டங்களை மிக கடுமையாக அவர் அடக்கினார் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும் முதல்வர் பக்தவச்சலம் அதற்கு செவி சாய்க்கவில்லை. பின்னாளில் சேஷனின் நினைவலைகள் கோவிந்தன் குட்டி எழுத்தில் நூலான போது, ‘மதுரை ஆட்சியராக இருந்த காலத்தில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அண்ணா சி.ஐ.ஏ கைக்கூலி என்று எனக்கு தெரிய வந்தது. அவர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அவர் முன்னின்று நடத்தினார்’ என்கிற தொனியில் பேசியிருந்தார். இத்தகைய கூற்றுக்கு சேஷன் எந்த ஆதாரத்தையும் தரவில்லை. நூல் வெளிவருவதற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியாக மேற்சொன்ன கருத்து இதழ்களில் வெளிவந்தது. திமுக, அஇஅதிமுக ஆகியவை அவர் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தன.
திரிபுரா தலைமை செயலாளர், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவரும், இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் டெல்லியில் இருந்து அதனை கண்காணித்தவர்களில் ஒருவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ப.ஸ்ரீ.இராகவன் அண்ணா குறித்த சேஷனின் கூற்று ‘அபாண்டமான குற்றச்சாட்டு, ஒன்று, அறிந்து சொல்லிய பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வீண் வம்பு பேசுகிறவர்கள் இவர் காதில் போட்ட வதந்தியாக இருக்க வேண்டும். அல்லது வேறெதாவது மறைமுக உள்நோக்கத்தில் பிறந்த குசும்பாக இருக்க வேண்டும்’ என்று ‘நேரு முதல் நேற்று வரை’ நூலில் பதிவு செய்கிறார்.
புகைப்பட நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
சேஷனின் நூலிற்கு நீதிமன்றங்கள் தடை விதித்தன. ப.ஸ்ரீ.ராகவன் சேஷனின் அண்ணா பற்றிய கருத்துக்கு வெளியிட்ட மறுப்பு அறிக்கை குறித்து சேஷன் அமைதி காக்கவே செய்தார். நூல் வெளிவந்த போது அண்ணா குறித்த பகுதிகளை அவர் நீக்கியிருந்தார்.
சேஷன் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் செயலலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் போபார்ஸ் பீரங்கி வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது பாதுகாப்புத் துறை செயலாளராக சேஷன் திகழ்ந்தார். போபர்ஸ் ஆயுத பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று அடித்து பேசினார். இது அவரை கேபினட் செயலாளராக ஆக்கி அழகு பார்க்கும் அளவுக்கு ராஜீவ் காந்தியின் நம்பிக்கையை பெற்றுத்தந்தது. வி.பி.சிங் பிரதமர் ஆனதும் சேஷனை திட்ட கமிஷன் உறுப்பினராக கட்டம் கட்டினார்.
அடுத்து சந்திரசேகர் பிரதமர் ஆன போது சுப்பிரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக இருந்தார். ஹார்வர்டில் சேஷன் படித்த போது அங்கு பணியாற்றிய சுவாமி சேஷனை தலைமை தேர்தல் ஆணையராக ஆக்க பரிந்துரைத்தார். அடுத்த ஆறு ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராக சேஷன் நிகழ்த்தியது இந்திய ஜனநாயகத்தின் போக்கையே மாற்றியது. தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் குறித்ததை போல தேர்தல் ஆணையத்தின் வரலாற்றை சேஷனுக்கு முன், சேஷனுக்கு பின் என்று பகுக்கலாம் என்கிற அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கியிருந்தது. சேஷன் அதற்கு முன்பு தேர்தலை எப்போதும் நடத்திய முன் அனுபவம் கொண்டவரில்லை. ‘சற்றும் தாமதமோ, குறைபாடோ இல்லாமல் இயங்க வேண்டும்’ என்று மட்டும் முடிவு செய்து கொண்டதாக பின்னாளில் தெரிவித்தார். முதல் வேலையாக தேர்தல் காலங்களில் நடக்கும் குற்றங்களை பட்டியலிட்டார். அவற்றின் எண்ணிக்கையே நூறுக்கு மேலே நீண்டது. அடுத்தது மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்த முனைந்தார்.
மாதிரி நடத்தை விதிகள் தேர்தல் காலத்தில் அமலுக்கு வருபவை. அவை சட்டங்கள் இல்லை என்றாலும் அவற்றை பொதுவாக பின்பற்ற வேண்டும் என்பது எழுதப்படாத உடன்படிக்கை. கேரளாவில் அறுபதுகளில் குடிமைச் சமூகத்தின் முயற்சியால் நடத்தை விதிகள் முதல்முறை உருப்பெற்றன. அவை அவசர நிலை அட்டூழியங்களுக்கு பிறகு புதிய, வலுவான வடிவத்தில் அனைத்து கட்சிகளால் வடிவைமைக்கப்பட்டன. எனினும், நடைமுறையில் அவை அரிதாகவே பின்பற்றப்பட்டன.
சேஷன் எங்கே சிக்கல் என்று பார்த்தார். தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மீது முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்திற்கே வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அதற்குண்டு என்று அவர் கேட்டார். சிலர் முரண்டுபிடித்தார்கள், சிலர் நீதிமன்ற படியேறினார்கள். சேஷன் உறுதியாக நின்றார். தேர்தலை நிறுத்தி வைக்கும், தள்ளிப்போடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு என்கிற சவுக்கை எடுத்துக் கொண்டார். சரத் பவார் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலத்தில் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் காலத்தில் எல்லைமீறும் அதிகாரிகளை வகையாக கவனித்து கொள்வதாக பொதுவெளியில் மிரட்டல் விடுத்தது இருந்தார். வாக்கு எண்ணிக்கையை நடத்த மாட்டேன் என்று சேஷன் தொடை தட்டியதும் பவார் இறங்கி வந்தார்.
தேர்தலில் ஆள் மாறாட்டங்கள், கள்ள வாக்குகள் மலிந்திருந்த காலம் அது. புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அட்டை வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கேட்டார் சேஷன். பதினெட்டு மாதங்கள் அரசாங்கம் சட்டை செய்யாமல் இருந்தது. சேஷன் ஒன்றே ஒன்றுதான் சொன்னார், ‘ஜனவரி 1,1995 முதல் புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்த தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தாது. அவ்வளவே!’. அலறியடித்து கொண்டு இயந்திரம் இயங்கியது. உச்சநீதிமன்றம், வாக்குரிமை என்பது குடிமக்களின் உள்ளார்ந்த உரிமை, அவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை என்கிற காரணத்துக்காக தேர்தல்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று தீர்ப்பு எழுதியது. எனினும், சேஷன் ஓய்வு பெறுவதற்குள் இருபது லட்சம் அடையாள அட்டைகள் புழக்கத்திற்கு வந்திருந்தன.
அடுத்தது வாரி இறைக்கப்படும் பணம். தண்ணீர் போல தேர்தல் காலத்தில் பணம் செலவிடப்பட்டு கொண்டிருந்தது. எல்லா கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் வரவு, செலவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேஷன் உத்தரவு போட்டார். பூச்சாண்டி காட்டுகிறார் என்றே பலர் அசட்டையாக இருந்தார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்கிற முறையை அறிமுகப்படுத்தினார். தேர்தல் செலவுகள் 1991 நாடாளுமன்ற தேர்தலின் போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. கணக்குகளை ஒழுங்காக தாக்கல் செய்திருக்காத 1,488 வேட்பாளர்களை சேஷன் மூன்றாண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77 அவருக்கு கைகொடுத்து இருந்தது. வேட்பாளர்களின் செலவுக்கு கட்டுப்பாடுகளையும் வெற்றிகரமாக விதித்தார்.
அதோடு நிற்காமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிற காலத்தை மாற்றியமைக்க முடிவு செய்தார். சேஷனின் வருகைக்கு முன்புவரை தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது பொதுவாக தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பே நிகழும். அதற்கு பதிலாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் நாளில் இருந்தே விதிகள் நடைமுறைக்கு வரும் என்று தடாலடி காட்டினார்.
அடுத்தது சுவர்களை ஆக்கிரமித்து கொள்ளும் தேர்தல் சின்னங்கள், விளம்பரங்கள், காதை கிழிக்கும் ஒலிப்பெருக்கிகள் பக்கம் கவனம் திரும்பியது. காங்கிரஸ் கட்சி பெருமளவில் பிளவுண்டு சின்னங்கள் சார்ந்து பல்வேறு மோதல்கள் வெடித்த காலத்தில் அதனை விசாரிக்கும் பொருட்டு சின்னங்கள் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் 1968 -ல் இருந்து பயன்படுத்த ஆரம்பித்து இருந்தது. அதனை தனக்கு ஏற்றார் போல் வசதியாக பொருள் கொண்ட சேஷன் அனுமதி இல்லாத ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டன. கிராமங்கள், நகரங்களில் முறையே இரவு 11 மணி, 10 மணியோடு பரப்புரை முடிந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டினார். ஒரு படி மேலே போய், பொது இடங்களில் தேர்தல் விளம்பரங்கள் என்பதே இருக்க கூடாது என்று உத்தரவிட்டதோடு, முடிந்தால் தனியார் வீடுகளில் தேர்தல் காலத்தில் விளம்பரங்கள் செய்பவர்கள் முடிந்தபிறகு தாங்களே வெள்ளையடித்து தரவேண்டும் என்றும் கண்டிப்பு காட்டினார். தேர்தலின் வண்ணமய பொழுதுகள், பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் பறிபோகிறதே என்று சிலர் சேஷனிடம் குறைபட்டுக் கொண்டார்கள். ‘பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் வேண்டுமென்றால் திரையரங்குக்கு போய் உட்காருங்கள். தேர்தல் தான் கிடைத்ததா?’ என்று அவர் பதிலளித்தார்.
சேஷன் கையில் தேர்தல் நிறுத்த ஆயுதம் சிக்கிக்கொண்டு படாத பாடு பட்டது என்றால் மிகையில்லை. வி.பி.சிங் கட்சியின் கோட்டைகளாக திகழ்ந்த பகுதிகளில் அவர் தேர்தலை உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி சேஷன் நிறுத்தினார் என்பதை பேராசிரியர் கிறிஸ்தோஃப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுகிறார். பஞ்சாபின் கல்கா இடைத்தேர்தலின் போது சாலைகளை அடைப்பது, வாகனங்களை மொத்தமாக தடை செய்வது என்று சேஷன் எல்லை மீறினார். மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது என்று செய்தித்தாள்கள் கவனப்படுத்தின. பஞ்சாபில் வாக்குப்பதிவிற்கு நடக்க சில மணி நேரங்களே இருந்த போது தடாலடியாக சேஷன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தலை நிறுத்த ஆளுநர் மனம் நொந்து பதவியை விட்டு விலகினார்.
தேர்தல் சமயத்தில் சாதி, மதம் என்றோ, இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்றோ வாக்குறுதிகள் தருவது கூடாது, அதன் மூலம் வாக்காளர்களை ஈர்த்தால் தேர்தலை ரத்து செய்வேன், வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று சேஷன் கண்டிப்பு காட்டினார். இது தேர்தல் அரசியலுக்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு வகையில் எதிரானது கூட. தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்காமல் எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என்று பேராசிரியர் கில்மார்ட்டின் வினா எழுப்புகிறார். இத்தகைய சேஷனின் அணுகுமுறைக்கு அவர் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருந்த பார்வையும் ஒரு காரணம் . ‘இந்தியாவின் இருநூறு அரசியல் தலைவர்கள் – மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று இவர்களில் எத்தனை பெற தனிப்பட்ட அல்லது கொள்கை ரீதியான ஊசலாட்டங்களில் தெளிவு பெற அணுக முடியும்? ஒருவரைக்கூட அணுக முடியாது…. இவர்கள் எல்லாம் சித்திரக்குள்ளர்கள்’ என்று சேஷன் எழுதினார்.
சேஷன் இப்படி மனம் போன போக்கில் தேர்தல்களை நிறுத்திக் கொண்டிருந்தது இடதுசாரிகளை கடுப்பேற்றியது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். தனக்கு உதவிகரமாக இருப்பார் என்று தப்புக்கணக்கு போட்ட நரசிம்ம ராவ் சேஷனை காப்பாற்றினார். சேஷன் மகனுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஆளுநரின் செயலால் தேர்தலை நிறுத்தினார். பீகார் தான் சேஷனின் சோதனையின் உச்சம். வன்முறை, படுகொலைகள், பூத் கைப்பற்றல்களுக்கு பெயர் பெற்ற அந்த மாநிலத்தில் 650 கம்பெனி துணை ராணுவப்படையை இறக்கினார். நான்கு கட்டங்களாக தேர்தலை நடத்தினார். அதற்கு பிறகும் நான்கு முறை தேர்தலை தள்ளி வைத்தார். இந்த புள்ளிவிவரம் எவ்வளவு காலம் எடுத்தது என்கிற தெளிவைத் தரலாம்: தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 8, 1994 -ல் செய்யப்பட்டது. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்தது மார்ச் 28, 1995. சேஷனின் தீவிரமான முயற்சிகளால் வன்முறைகள் பெருமளவில் தேர்தலில் குறைந்தன. உத்திர பிரதேசத்தில் 1991 பூத் கைப்பற்றல்கள் 873, 1993-ல் இந்த எண்ணிக்கை 255 ஆக குறைந்திருந்தது. 1996 பொதுத் தேர்தலில் 1500 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தியா முழுக்க அனுப்பப்பட்டார்கள். மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் முறையே 59,000 பேர் , 1,25,000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். மத்திய பிரதேசத்தில் மட்டும் 87,000 வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. பூத் கைப்பற்றல்கள் இந்திய அளவில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2614 ஆக இருந்தது இப்போது 1056 ஆக குறைந்திருந்தது. தேர்தல் வன்முறைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை 272-ல் இருந்து ஏழே வருடத்தில் 60 ஆக குறைந்திருந்தது.
சேஷன் தேர்தலில் வாக்களிக்க தைரியத்தோடு வரலாம் என்கிற நம்பிக்கையை தன்னுடைய நடவடிக்கைகளால் தந்ததால் வன்முறை சூழல், மதப்பிணக்குகள் என்று பல தரப்பட்ட சவால்களுக்கு இடையேவும் உத்திர பிரதேசத்தில் 1993-ல் வாக்களித்தவர்களின் அளவு 10% அளவு உயர்ந்தது. இதனை ‘சேஷன் விளைவு’ என்று பேராசிரியர் கிறிஸ்தோப் ஜாப்ரிலா புகழ்கிறார். தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்தலில் அச்சமில்லாமல் வாக்களிக்க இந்நடவடிக்கைகள் உதவின என்கிறார்.
சேஷன் தேர்தல் பரப்புரையில் விதிமுறைகளை மீறியதாக சொல்லி இரண்டு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று நரசிம்ம ராவிடம் அழுத்தம் கொடுத்தார். பல்வேறு வகைகளில் அவரின் செயல்பாடுகள் அரசுக்கு தலைவலி கொடுப்பதாக இருந்தன. சேஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்னும் இரண்டு தேர்தல் ஆணையர்களை அரசு நியமித்தது. ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட நியமனம் ஒன்றை முன்னெடுத்தவர் சேஷன். இப்போது தன்னுடைய கழுத்திலேயே கத்தி வைக்கப்பட்ட போது அவர் உச்சநீதிமன்ற படியேறினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டே மத்திய அரசு அவர்களை நியமித்து இருந்தது. நீதிமன்றம் அரசின் முடிவுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை என்றாலும் சேஷன் இரு ஆணையர்களுக்கும் எந்த பணியையும் ஒதுக்க வெகுகாலம் மறுத்து சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். நீதிமன்றம் ‘தன்னுடைய சொந்த பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்தி கொள்ள முனைகிறார்’ என்கிற அளவுக்கு காட்டம் காட்டிய பிறகே இறங்கி வந்தார். மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒரே அளவு அதிகாரம் படைத்தவர்கள், முரண்பாடுகள் வரும் போது பெரும்பான்மை வாக்கின் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
சேஷன் தன்னுடைய பதவிக்காலம் முடிந்ததும் குடியரசு தலைவர் தேர்தலில் சுயேட்சையாக நின்றார். அவர் சிவசேனா, பாஜக கட்சிகளிடம் ஆதரவு கோரினார். பால் தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரினார். ‘சாதி, மத, ஊழல் வேறுபாடுகளை கடந்த ஒருவரே ஜனாதிபதி ஆகவேண்டும்’ என்று அவருக்கு ஆதரவு நல்குவதாக சிவசேனா அறிவித்தது. ஐ.கே.குஜ்ரால் சிவசேனையின் இந்த முடிவு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்கோத்ராவிடம் கேட்டார், ‘அது வேறொன்றுமில்லை. ஒரு தலித் குடியரசுத் தலைவர் ஆகிவிடக்கூடாது என்பதே சிவசேனாவின் எண்ணம்’ என்றார். இதனை தன்னுடைய சுய சரிதையில் குஜ்ரால் பதிவு செய்துள்ளார். கே.ஆர்.நாராயணன் அந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். மனசாட்சியின் படி வாக்களியுங்கள் என்று குரல் கொடுத்த சேஷன் 5% வாக்குகளை மட்டும் பெற்று டெபாசிட்டை இழந்தார். வெகு சீக்கிரமே காந்தி நகரில் அத்வானியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நின்று சேஷன் இரண்டு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று தோற்றுப்போனார்.
‘உங்களுடைய சிறகுகளை அரசு வெட்டி எறிந்து விடும் போல் இருக்கிறதே?’ என்று சேஷனை பார்த்து கேட்டதும் இப்படி பதில் சொன்னார், ‘நான் அப்போதும் நெருப்புக் கோழியை போல மின்னல் வேகத்தில் இலக்கு நோக்கி ஓடுவேன்’. தேர்தல்களில் தோற்றவர் என்றாலும், தேர்தல் அரசியலில் கடைக்கோடி குடிமக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பெரும் முயற்சியை முன்னெடுத்த அரிய அதிகாரி என்று அவர் நினைவுகூரப்படுவார்.