சாவித்திரிபாய் பூலே – கல்விக்கண் திறந்த ஆளுமை


சாவித்திரிபாய் பூலேவின் 125 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்பில் இருந்து..

‘வணக்கம். நலமா? என் பெயர் சாவித்திரிபாய் பூலே. என் கதையைச் சொல்கிறேன். இது பல்லாயிரம் பெண்களின் கதை.

என்னுடைய ஊர் சத்தாரா. இப்பகுதியின் அரசர் மூன்றாம் பேஷ்வா பாஜிராவ். ஊர் முழுக்கக் கட்டுப்பாடுகள். கல்வி என்பது பிராமணர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெண்கள் நிலைமை மோசம். குழந்தையாக இருக்கும் போதே திருமணம். கணவர் இறந்தால் மொட்டையடித்து ஒதுக்கிவிடுவார்கள். நெருப்பில் தள்ளும் வழக்கமும் உண்டு. படிப்பெல்லாம் சுத்தம். நாங்கள் படித்தால் உருப்பட மாட்டோம் எனச்சொன்னார்கள். ஊரில் பலருக்கும் கடிதம் எழுதுவோம் என்றார்கள். படிக்கிற பெண்ணுடைய கணவரின் சாப்பாட்டில் புழுக்கள் நெளியும். சீக்கிரம் அவர் செத்துடுவார் என்றுகூடச் சொல்வார்கள். நான் சிரித்துக்கொள்கிறேன். எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

அதை விடுங்கள். என்னுடைய ஊருக்கு போவோம். என்னுடையது விவசாயக் குடும்பம். நான் குளிர்மிகுந்த ஜனவரி மாதத்தில் பிறந்தேன். இளம் வயதில் பள்ளிக்கூடத்தைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. 9 வயதில் ஜோதிபாய்யோடு திருமணம். புனேவிற்குக் குடிபெயர்ந்தேன்.

அவர் மிஷனரி பள்ளிகளில் கல்வி பயின்றார். எனக்கும் எழுத, படிக்க உதவினார். பல்வேறு கதைகள், அனுபவங்கள். ஒருநாள் பிராமணர் வீட்டுக் கல்யாணம். போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். ‘நாமல்லாம் சூத்திரனுங்களாம். தீட்டாயிடுச்சாம். விரட்டிவிட்டுட்டாங்க’ எனப் புலம்பினார். எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என அவருக்குக் கனவு. சாதிப்பாகுபாடுகள் படிப்பாலும், விழிப்புணர்வாலும் தான் ஒழியும். நான் மேலும் படித்தேன். ஜோதிபாய் உடனிருந்தார், உற்சாகப்படுத்தினார். அவருடைய நண்பர்களும் பாடம் சொல்லிக்கொடுத்தனர். எனக்குப் படிப்பது சுகமானதாக இருந்தது. இன்னமும் கற்க வேண்டுமென ஆசையாக இருந்தது. ஃபராரி, மிட்செல் எனும் இரண்டு ஆங்கிலேய ஆசிரியைகள் அன்போடு உதவினார்கள். நான் படித்ததைப் பலருக்கும் சொல்லித்தரும் நேரம் எப்போது வரும்?

ஜோதிபாய் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். ஒரே எதிர்ப்பு. பள்ளிக்கூடத்திற்கு வெளியே ‘ஒழிஞ்சு போங்க’னு கோஷம் போடுவார்கள். என் மாமனாரை தூண்டி விட்டார்கள். ‘நீ எக்கேடோ கெட்டுப்போ. இவளை ஏன் படிக்க வைக்கிறே’ எனக்கேட்டார். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நடுத்தெரு என்றார். நானும், ஜோதிபாயும் நடுத்தெருவை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்குள் கல்விக்கனல் எரிகிறது. அது ஒரு வீட்டிற்குள்ளேயே அணைந்து விடலாமா? ஆகாது.

எங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஒரே ஆசிரியரையும் மிரட்டினார்கள். வேறு வழியில்லை. என்னையே பாடம் நடத்தச் சொன்னார் ஜோதிபாய். பள்ளிக்கு நடந்து போவேன். என் மீது சாணி, அழுகிய காய்கறிகளை வீசுவார்கள். சில நாட்கள் வெற்றிலைப் போட்ட எச்சில் கூடப் பரிசாகக் கிடைத்தது. முதலில் பயமாக இருந்தது. பள்ளியின் பெண் குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பயமெல்லாம் பாசத்தின் முன் பறந்தது. அழுக்குகளை வீசியவர்களிடம் சொன்னேன், “என்னுடைய தங்கைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்போகிறேன். இந்தக் குப்பைகள் எல்லாம் எனக்கான வாழ்த்து மலர்கள். இறைவன் உங்களை ரட்சிக்கட்டும்’.

என் அண்ணன் என்னைக் கடிந்து கொண்டான். ஏன் இந்த வேண்டாத வேலை என்றான். நான் சொன்னேன்,
“படிக்காமல் இருப்பது முழு மிருகத்தனம். அறிவைப் பெறுவதாலே பிராமணர்கள் மேல்நிலையில் உள்ளார்கள். கல்வியும், அறிவும் அற்புதமானது. கற்றவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் எனப்பட்டாலும் அவரே உயர்ந்தவர். நாங்கள் தீண்டப்படாதோர் கற்க வேண்டும் என உழைக்கிறோம். அதன்வழியே விடுதலை கிட்டும். என் கணவர் பிராமணர்களை எதிர்த்துக்கொண்டு ஏன் தீண்டப்படாதவர்களுக்குக் கற்பிக்கிறார்? அவர்களும் சமமான மனிதர்கள். மானமிகு வாழ்க்கை எல்லாருக்கும் ஆனது. அதற்குக் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே நானும் கற்பிக்கிறேன். இதிலென்ன தவறு ? நாங்கள் சிறுமிகள், பெண்கள், மகர்கள், மங்குகள் என அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்போம்’ என்றேன்.

ஆரம்பத்தில் பெரிதாகப் பெண்கள் படிக்ற வரவில்லை. இத்தனைக்கும் எங்கள் பள்ளியே இந்தியர்கள் நடத்தும் முதல் பெண்கள் பள்ளி. நானும், ஜோதிபாயும் ஊர் ஊராகச் சுற்றினோம். படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பரிசுப்பணம் தந்தோம். கிராமம், கிராமமாகப் படிப்பின் அவசியம், நன்மைகளை எடுத்துச் சொன்னோம். கல்வியோடு விளையாட்டுகள், கலைகளைப் பேரன்போடு பகிர்ந்தோம். கூட்டம் பெருகியது.

9 ஆசிரியர்கள், 132 மாணவர்கள், 3 பள்ளிகள். அது கனவின் தொடக்கம். 1851, 1852 காலத்தில் தேர்வுகளை நடத்தினோம். கிட்டத்தட்ட திருவிழா தான். பெண்கள் படித்து, தேர்வில் அசத்துவதைப் பார்க்க 3,000 பேர் கூட்டம். அலையில் எழும் சூரியனாய் எங்கள் பெண்கள் மின்னினார்கள்.

‘பூனா அப்சர்வர்’ எனும் பத்திரிகை 1852 -ல் என்ன எழுதியது? ‘ஜோதிபாய்- சாவித்திரிபாயின் பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களை விடப் பத்து மடங்கு அதிகப் பெண்கள் படிக்கிறார்கள். மிக உயர்ந்த கல்வித்தரம். விரைவில் இப்பெண்கள் பெரும் சாதனைகள் புரிவார்கள்’. 50 க்கும் மேற்பட்ட பெண்கள், அனைவருக்குமான பள்ளிகளை நடத்தினோம்.

எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஜோதிபாயை இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘குழந்தை பிறக்கலைனா பொண்ணு தான் மலடியா? ஆம்பிள கிட்டயும் பிரச்சனை இருக்கலாமே. பிள்ளை பொறக்கலைனு பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனுக்கு எப்படியிருக்கும்? என்னால சாவித்திரியை விட்டுட்டு இருக்க முடியாது’ என்றார்.

பல கைம்பெண்கள் நிலைமை கண்ணீரை வரவைத்தது. சொந்தக்கார ஆண்கள் வதைத்தார்கள். பரிதாபமாகக் கைம்பெண்கள் கர்ப்பமானார்கள். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களைக் காப்பாற்றினோம். 1853-ல் அப்பெண்களை அரவணைக்க இல்லம் துவங்கினோம்.

கையால் நெய்த ஆடைகளை அணிவது வழக்கம். அவை எளிமையான, ஆனால், கம்பீரமான ஆடைகள். இல்லத்தரசிகளுக்கு ஆடை நெய்யக் கற்றுக்கொடுத்தேன். பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் அமைப்பைத் துவங்கினேன். மாமியார், மருமகள், அம்மா, மகள் என அனைவரும் வந்தனர். ஒன்றாக அமர்ந்து சொந்தக்காலில் நிற்கப் பழகினோம்.

கைவிடப்பட்ட கைம்பெண் ஒருவரின் மகனை தத்தெடுத்துக் கொண்டோம். யஷ்வந்த் எனப் பெயரிட்டு வளர்த்தோம். மருத்துவம் படித்தபின் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குச் சேவை செய்தான் யஷ்வந்த்.

கண்முன் இன்னொரு அநீதி தெரிந்தது. கணவன் இறந்ததும் கைம்பெண்களுக்கு மொட்டையடித்தார்கள். மனைவி இறந்தால் கணவனுக்கு மொட்டையடிக்கிறோமா? ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்தக் கொடுமை? சவரம் செய்பவர்களை நாடினோம். வேலை நிறுத்தம் செய்யக் கோரினோம். கூடுதல் கூலி வேண்டியோ, சலுகைகள் நாடியோ அல்ல. கைம்பெண்களின் சமத்துவம் நாடி போராட்டம் நிகழ்ந்தது. சவரக்கத்திகள் ஓய்வெடுத்தன. பல கைம்பெண்களின் கண்ணீர் காணாமல் போனது. அந்தச் சவரத்தொழிலாளர்களை நினைக்கும் போதே பெருமிதம் பூக்கிறது.

1877-ம் ஆண்டு. பெரும் பஞ்சம். மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள். விலங்குகள் இறந்து தரையில் விழுந்தன. பெரும் உணவுப்பஞ்சம். மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள். ஆறு, குட்டை, குளம் எல்லாம் வற்றின. தவித்த வாய்க்கு தண்ணீரில்லை. மரங்களில் இலையே தென்படவில்லை. வறண்ட நிலம் பாளம், பாளமாய்ப் பிளந்தது. விஷப்பழங்களை உண்டார்கள், சிலர் சிறுநீரை குடித்தார்கள். மக்கள் உணவுக்காக, தண்ணீருக்காக அழுதார்கள், பின், பரிதாபமாக இறந்தார்கள்.

நாங்கள் கிராமம், கிராமமாகச் சுற்றினோம். இயன்றவரை நீரும், சோறும் தந்தோம். கந்துவட்டிக்கார கொடுமைகளைத் தட்டிக்கேட்டோம். ஏழைப்பிள்ளைகள் தங்கவும், கற்கவும் 52 விடுதியோடு கூடிய பள்ளிகள் திறந்தோம்.

1890-ல் ஜோதிபாய் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஆணும், பெண்ணும் சமம் எனும் தாமஸ் பெய்னின் ‘Rights of Man’ னின் வரிகளை ஜோதிபாய்ச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை எண்ணிக்கொண்டு நானே அவரின் உடலுக்குத் தீமூட்டினேன்.

1897 பெரும் பிளேக் நோய். லட்சக்கணக்கான மரணங்கள். மருத்துவர்கள் சாதி பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் யாருமின்றி இறந்தார்கள். நானும், யஷ்வந்தும் அசரவில்லை. எங்கள் சத்தியசோதக் அமைப்பினரோடு உழைத்தோம். மருத்துவமனைகள் நடத்தினோம். உயிரைப் பணயம் வைத்து போராடினோம். பிளேக் நோயுற்ற மகர் சிறுவன் ஒருவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நானே தொட்டுத் தூக்கினேன். அவன் உயிரை காப்பாற்றி விட்டோம். களைப்பாக இருக்கிறது. பிறிதொரு நாள் இன்னமும் சொல்கிறேன். ‘

சாவித்திரிபாய் பிளேக் நோய்க்கு எதிரான போரின் போதே வீர மரணம் எய்தினார். ‘கல்வித்தாய்’, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ எனும் பல்வேறு பெருமைகளுக்கு உரியவர். ‘மாசற்ற ரத்தினங்களின் பெருங்கடல்’ எனும் கவிதை நூல் இயற்றினார். அவரின் கவிதை ஒன்று:

உனக்கு நீயே துணை, ஓயாமல் உழை.
கல்வியும், பொருளும் கொண்டு சேர்.
அறிவிழந்தால் அனைத்தும் அழியும்.
கல்விச்செல்வமின்றிக் கால்நடை விலங்கு நாம்.
சோம்பி அமராதே, எழு, கல்வி கற்றிடுக.
ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் துயர்துடை.
கற்கும் பொன் வாய்ப்பினை பற்றிக்கொள்.
ஆகவே, கற்றிடுக, சாதிச்சங்கிலிகளை உடைத்தெறிக.
பிராமணர்களின் புனித நூல்களை வேகமாகத் தூக்கியெறிக.

மறைந்து போதல் எனும் கலை


என்னை உனக்குத் தெரியாதா என்று அவர்கள் வினவும்போது,
தெரியாது என்று பதிலளி.

அவர்கள் பார்ட்டிக்கு அழைக்கையில்,
அந்தக் கூடுகைகள் எப்படியிருக்கும் எனப் பதிலளிப்பதற்கு முன் ஒரு கணம் யோசிக்கவும்.
உரத்த குரலில் யாரோ ஒருவர் தான் எப்போதோ கவிதையொன்றை இயற்றியதாக உன்னிடம் தெரிவிப்பார்கள்.
வழவழப்பான சாஸேஜ் உருண்டைகள் காகித தட்டுகளில் பரிமாறப்படும்.
இப்போது பதிலளி.

நாம் எல்லாம் சேர்ந்து களிப்போம் என அவர்கள் சொன்னால்,
ஏன் என வினவு.

அவர்களை முன்போல நீ அன்பு செய்யவில்லை என்று பொருளல்ல.
நீ மறந்து விடக்கூடாத ஒன்றை நினைவுகூர முயன்று கொண்டிருக்கிறாய்.
மரங்கள். அந்திக் கருக்கலில் ஒலிக்கும் மடாலய மணி.
அவர்களிடம் புதிய வேலையொன்று உனக்காகக் காத்திருப்பதாகச் சொல்.
அது எப்போதும் முடியப்போவதே இல்லை என அறிவிக்கவும்.

காய்கறிக்கடையில் யாரேனும் உன்னை அடையாளம் கண்டுகொண்டால்,
கொஞ்சநேரம் தலையசைத்துவிட்டு, முட்டைகோஸ் போல மாறிவிடு.
பத்தாண்டுகளாகத் தலைகாட்டாத ஒருவரை வாசலில் சந்தித்தால்,
உன்னுடைய புதிய கீதங்களை எல்லாம் அவனிடம் பண்ணிசைக்காதே.
உன்னால் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க இயலவே இயலாது.

இலை போல உணர்ந்து உலவி நட.
எந்த நொடியிலும் நீ தடுமாறி விழலாம் எனத் தெரிந்துகொள்.
உன் நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய என இப்போது முடிவெடு. –
Naomi Shihab Nye,
Words Under the Words: Selected Poems தொகுப்பு

தமிழில்: பூ.கொ.சரவணன்

தமிழ்த்தாய் வாழ்த்து ‘மாநிலப் பாடலான’ வரலாறு.


‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின்  பாயிரத்தில் உள்ளது .  பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர்.  கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார்.    தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக  நூலிற்கு  ஆங்கிலம், தமிழ்  என்று  இரு  மொழிகளிலும்  முன்னுரை எழுதியுள்ளார்.   


தன்னுடைய  முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது”  என்று  வருந்துகிறார்.  

ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை


பாயிரத்தில்  ‘தமிழ் தெய்வ  வணக்கம்’ என்று  தமிழை  தெய்வமாக  போற்றிப் பரவுகிறார்.  கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில்  தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு  என்று பலவாறு  போற்றுகிறார். இப்பாடலில்  வழங்கி வரும் முதன்மையான கருத்துகள்  என்று சிலவற்றைப்  பேராசிரியர் கைலாசபதி  அடையாளப்படுத்துகிறார். அவை,

  (அ) இந்திய நாட்டில்  தெக்கணம்  திலகமாகத்  திகழும்  பகுதி. 

(ஆ) திராவிடம் முதன்மையான  சிறப்புமிக்கதாகும் 

(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும்  புகழும், பெருமையும் மிக்கது

(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை  போன்றது தமிழ்

(உ) தமிழே  திராவிட  மொழிகளுக்கு  தாய்

(ஊ) ஆரியம்  போல்  வழக்கழியாமல்  சீரிளமை  மிக்க  மொழியாகத்  தமிழ்  திகழ்கிறது 


“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்  எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்   கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்  உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”


‘நீராருங்  கடலுடுத்த’ எனும்  துவங்கும்  இப்பாடல்  முந்தைய தமிழ்  படைப்புகளில்  இருந்து பல வகைகளில்  வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில்  புதிய பாய்ச்சலுக்கு  அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின்  பார்வையில்  தமிழ்த்தேசியத்திற்கான  முன்னோடிப்  பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர்  பிரேர்னா  சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர்  நலனும்  கைகோர்க்கும்  இடம் என்கிறார். தமிழ்த்தாயின்  உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று  சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர்   சுமதி  ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார்   கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற  மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.

அவ்வரிகள்,  


வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள் 

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி 

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள

 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.


இப்பாடலுக்கு  பிறகே  தமிழைத் தாயாக, தெய்வமாக  போற்றிப்பரவுவது  பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக  போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில்  எண்ணற்ற  பாடல்கள்  தமிழன்னையை  போற்றி  பாடப்பட்டன. இவற்றுக்கான  முதல்  வித்து  ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’ ஆகும். 

நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்


கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய  மூன்றாம்     ஆண்டறிக்கையை  1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப்  பற்றி  பேசுகிறது:

பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’  என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை  ஆய்வாளர்  கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார். 

1913-ம் ஆண்டறிக்கை


இப்பாடல் படிகளை  கரந்தை  தமிழ்ச்சங்கத்தை  சேர்ந்த  உமாமகேசுவரனார்  பல நூறு  பிரதிகள்  அச்சிட்டு  கொண்டு  சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும்  பாடப்பட்டது. பல்வேறு  தமிழ்ச்சங்க  கூட்டங்களில்  இப்பாடல்  ஒலித்தது. தனித்தமிழ்  மாநாடுகளில்  தவறாமல்  இடம்பெற்றது.  .தனித்தமிழ் மாநாடுகள்,  பாடநூல்களில்  இடம்பெற்றது. தனிநாயகம்  அடிகள் “இப்பாடலின்  வரிகள் கடந்த  அறுபது  ஆண்டுகளாக  எதிரொலித்துக்  கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான  பாடல்  எனும்  அதன்  பெருமையை  விஞ்சும்  படைப்பு  எதுவுமில்லை”  என்று  1963-ல் புகழ்ந்தார். 

இப்பாடலை  தமிழக  அரசு  அனைவரும்  பாடும்வண்ணம்  வழிவகை  செய்ய  வேண்டும்  என்கிற  கோரிக்கைகள்  அறிஞர் அண்ணா  ஆட்சிக்காலத்தில்  வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா  இயற்கை  எய்திவிட, கலைஞர்  கருணாநிதி  அப்பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கரந்தைத்  தமிழ்ச்சங்க  விழாக்களிலேயே  முதல்  ஆறு  வரிகள்  மட்டுமே  பாடப்பட்டு  வந்தன  என்பதை  சுட்டிக்காட்டுகிறார் கரந்தை  ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான  விருதளிப்பு  விழாவில்  தமிழ்நாட்டின் வழிபாட்டுப்  பாடலாக   ‘நீராருங் கடலுடுத்த’ அமையும்  என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

புகைப்பட நன்றி: kalaignar.dmk.in

 பிற  மொழிகளை  தாழ்த்திப்  பேசும்  வரிகளைத்  தவிர்த்து  பாடலை  அமைத்துக்  கொண்டதாக  அவர் குறிப்பிட்டார். ஆரியம்  போல்  வழக்கழிந்து  முதலிய  வரிகளும்  சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத்  தமிழ்ச்சங்கத்தின்  வழக்கத்தை  அடியொற்றியே  இப்பாடல் வரிகள்  அமைந்திருப்பதையும் கவனத்தில்  கொள்ள  வேண்டியிருக்கிறது.  மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை  தமிழ்நாட்டின்  வழிபாட்டுப்  பாடலாக  ஆக்கிய  அரசாணையை  கூர்ந்து  நோக்கினால்  இன்னொன்றும்  புலப்படும்.

 ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை  எண்  1393-ல் தமிழ்நாடு  முழுமைக்கும்  பொதுவாக  வழிபாட்டுப்  பாடல்  அமையும்  வண்ணமே  ‘நீராருங்  கடலுடுத்த ‘  இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட  நம்பிக்கையோடு’  தொடர்புடையதாக    இல்லாத  வண்ணம்  இப்பாடல் இருக்குமாறு  அமைந்திருப்பதாகவும்  அரசாணையில்  சொல்லப்பட்டு  இருந்தது.  பல்வேறு  தமிழ்நாட்டு  நிகழ்ச்சிகளில்  இந்து  மதப்  பாடல்களும்,  வடமொழி,தெலுங்கு  பாடல்களும்  ஆதிக்கம்  செலுத்திக்கொண்டிருந்த  போது  இந்த  அறிவிப்பு அவற்றை  மாற்றியது. மேலும், பாயிரத்தில்  உள்ள  சிவனைப்பற்றிய  குறிப்பு இடம்பெறாமல்   போனதையும், ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’  ஆனது  ‘தமிழ்த்தாய்  வாழ்த்தாக’ மாறியதையும்  மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ்  அடையாளத்தை  முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது.  (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )


மேற்சொன்ன  அரசாணையை  ஒட்டி 23 நவம்பர்  1970-ல்  அரசாணை  ஒன்று  வெளியிடப்பட்டது.  அதில்  ‘நீராருங் கடலுடுத்த ….’  வழிபாட்டுப்பாடலாக  விழாக்களின்  துவக்கத்தில்  பாடப்பட  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி  நிறுவனங்கள், உள்ளாட்சி  அமைப்புகள்  நடத்தும் நிகழ்ச்சிகளில்  இப்பாடல்  மோகன  ராகத்தில், திஸ்ர  தாளத்தில்  இசைக்கப்பட  வேண்டும்  என்றும் கூறப்பட்டு  இருந்தது.

Memo no. 3584/70-4

காஞ்சி  மடாதிபதி  விஜேயந்திரர்  கலந்து   கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ இசைக்கப்பட்ட  போது  கண்மூடி அமர்ந்து  இருந்தார். இதனையடுத்து  கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில்  உள்ள காஞ்சி  மடத்தின் கிளையில்  நுழைந்தார். அதற்கு  மட  மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை  கண் இளங்கோ  மிரட்டியதாக  .  மடத்தின்  மேலாளர்  காவல் துறையில்  புகார்  அளித்து  இருந்தார்.  இது தொடர்பாக  தன்மீது  பதியப்பட்ட   முதல் தகவல்  அறிக்கையை ரத்து  செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை  கண்  இளங்கோ  நாடினார். 


இவ்வழக்கில்  நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்  மேற்குறிப்பிட்ட இரண்டு  அரசாணைகள்  1393,  3584/70-4  ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ வழிபாட்டுப்  பாடலாகவே  இந்த  அரசாணைகள்  வரையறுத்து  இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய்  வாழ்த்து  வழிபாட்டுப்பாடல், அது, கீதம்  அன்று”. என்று குறிப்பிட்டார்.  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படும்  போது   எழுந்து நிற்க  வேண்டும்  என்று எந்தச் சட்டமும், அரசாணையும்  இல்லை என்பதையும்  அத்தீர்ப்பில்  கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய்  வாழ்த்திற்கு  உச்சபட்ச  மரியாதையும், மதிப்பும்  தரவேண்டும். தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும்  போது  கூட்டத்தினர் எழுந்து நிற்பது  மரபாக  இருக்கிறது  என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில்  தான்  மரியாதை  செலுத்த வேண்டும் என்று   கேள்வி எழுப்பிக்கொள்ள  வேண்டும்.   பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும்  நாம் கொண்டாடும்  போது, ஒரே வழியில்  தான் மரியாதை செலுத்த  வேண்டும்  என்று வலியுறுத்துவது போலித்தனமானது.  …..  
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு  ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு  எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி  எளிய  வாழ்வினையே   வாழ்கிறார்.அவர்  வழிபாட்டில்   ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான  நிலையில் இருப்பார். தமிழ்த்தாய்  வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால்  சந்நியாசி  தியான  நிலையில் அமர்ந்து இருப்பது  நிச்சயம்  நியாயமானது. இந்த  நிகழ்வில், மடாதிபதி தியான  நிலையில்  அமர்ந்து  கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும்   செலுத்தும் விதமாகும்.”  என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி


இதனையடுத்து, தமிழ்நாடு  அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய்  வாழ்த்தின்  தோற்றம், வளர்ச்சி,  அதனை அரசு  நிகழ்ச்சிகளில்  விழாவின்  துவக்கத்தில்  பாடவேண்டும் என்று ஆணையிட்ட  அரசாணைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக  அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில்  அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு  அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள் உள்ளிட்ட பொது  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு  முன்பு தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாயம்  பாடப்பட  வேண்டும் என்றும், தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும் போது  அனைவரும்  தவறாமல் எழுந்து  நிற்க  வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல்  பாடப்படும்  போது  எழுந்து  நிற்பதில்  இருந்து மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணித்  தாய்மார்கள்  ஆகியோருக்கு விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

 சான்றுகள்/ உதவியவை :

1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm

2. மனோன்மணியம்  சுந்தரனாரின்  இன்னொரு  பக்கம் – பேராசிரியர்   அ  கா பெருமாள் 

3. நீராருங் கடலுடுத்த –  கரந்தை ஜெயக்குமார்

 4.   ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture  Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam

 5.  ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy 

6. தமிழ்நாடு அரசாணை  நிலை எண் 1393, பொதுத்  (அரசியல்) துறை, 17.06.1970

7. தமிழ்நாடு அரசாணை   எண் 3584/70-4, 23.11.1970 

8. தமிழ்நாடு  அரசாணை  நிலை  எண் 1037, 17.12.2021 

 9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296

10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy

11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy  Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725

12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123

13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021

சொற்களில் கவனமாயிருங்கள்


சொற்களில் கவனமாயிருங்கள்,
அதிசய சொற்களிலும் கூட,
ஆச்சரிய சொற்களுக்காக நம்மால் இயன்றதையெல்லாம் புரிகிறோம்,
அவை பூச்சிகள் போல மொய்க்கின்றன,
ஆனால், கொட்டாமல் முத்தமொன்றை ஈந்துவிட்டு அகல்கின்றன.
அவை விரல்கள் அளவுக்கு நல்லவையாகவும் இருக்கக் கூடும்.
நீங்கள் நம்பிக்கையோடு அமரக்கூடிய பாறையாகவும் சொற்கள் திகழலாம்.
அவை மலர்களாகவும், காயங்களாகவும் இருக்கலாம்.
எனினும், நான் சொற்களைக் காதலிக்கிறேன்.
அவை மேற்கூரையிலிருந்து தரை சேரும் புறாக்களாக இருக்கலாம்.
அவை என் மடியில் வீற்றிருக்கும் ஆறு புனித ஆரஞ்சு கனிகள்.
அவை மரங்கள், வேனலின் கால்கள்,
வெய்யோன், அவனின் ஒளிரும் முகம்.
இருந்தாலும், அவை அடிக்கடி என்னைக் கைவிடுகின்றன.
நான் சொல்ல விரும்புபவை தீராமல் என்னுள்ளே இருக்கின்றன,
அத்தனை கதைகள், உருவங்கள், சொலவடைகள்,
ஆனால், சொற்கள் போதுமானதாக இருப்பதேயில்லை,
பிழையானவை என்னை முத்தமிடுகின்றன,
சமயங்களில் கழுகைப் போல வான் ஏகுகிறேன்,
சிறுகுருவியின் சிறகுகளுடன்,
ஆனால், சொற்களின் மீது அக்கறையோடு கனிவாய் இருக்கிறேன்.
சொற்களையும், முட்டைகளையும் கவனமாகக் கையாளவேண்டும்.
அவை உடைந்தால் மீண்டும் உயிர்த்தெழுப்பவே முடியாதவை. – Anne Sexton

Image result for anne saxton
தமிழில்: பூ.கொ.சரவணன்

Gully Boy – ‘தெருவோர கீதங்களின் நாயகன்’


 

Gully boy​ திரைப்படம் தேவதைக்கதை தான். மும்பையின் குடிசைப்பகுதியில் பிறந்து வளரும் இஸ்லாமிய இளைஞர் ஒருவரின் இசைக்கனவுகள் என்னாகின என்பதை ‘rap’ பின்னணியில் சொல்லியிருக்கிறார் Zoya Akhtar​. கவித்துவ வரிகளும், ‘rap’ இசையும் படம் முழுக்க வந்து நம்மை துல்லியமாக விவரிக்க முடியாத அனுபவத்திற்குள் தள்ளுகின்றது.

ரன்வீர், ஆலியா இருவரும் வெவ்வேறு வகையில் திரையில் நம்மை ஆட்கொள்கிறார்கள். கனவுக்கும், உண்மைக்கும் இடையே அல்லாடும் பாத்திரத்தில் தயங்கி, தயங்கி ரன்வீர் பொருந்தி கொள்கிறார். வேகமும், மிகைத்த பிரியமும் மிக்க அவருடைய காதலியாக ஆலியா ரசிக்க வைக்கிறார். அவரின் அசட்டையான நடிப்பும், அதட்டும் உடல்மொழியும் அத்தனை அழகு.

‘குனிந்தே இருப்பது தான் நம்முடைய விதி’ என்கிற தந்தையும், அதனை இல்லையென்று மறுதலிக்கிற மகனும் உரையாடிக்கொள்ளும் காட்சி திரைப்படத்தின் உச்சம் எனலாம். அது கனவுக்கும், வீட்டின் நிலைக்கும் இடையே அல்லாடும் இளைஞர்களின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது.

இசையால் மட்டுமே இப்படத்தில் போர்கள் நடக்கின்றன. வன்முறை என்பதைக் குடும்பம் மட்டுமே இதில் கையாள்கிறது. இக்கதையில் வரும் பெண்கள் தங்களின் ஆதங்கத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்துகிற கணங்கள் சிறப்பானவை. ‘உடலுறவில் என்னை நீ திருப்திப்படுத்தல. அதான் இன்னொருத்தி’ என்கிற கணவனிடம், ‘ஆமாம் உனக்கு என்னைக்குத்தான் எப்படி என்ன தொடணும்னு தெரிஞ்சுருக்கு’ என்று மனைவி இரைகிறாள். கணவன் மிரண்டுபோய் நிற்கிறான்.

Image may contain: 1 person, text

குடிசைக்கும், கோபுரத்திற்கும் இடையே உள்ள தூரத்தை அடையவே முடியாது என்று நம்புகிறவர்கள் தங்களுடைய பிள்ளைகள் எத்தனிக்கிற போது பலநூறு அஸ்தமனங்களைக் கண்ணுற்ற அவநம்பிக்கையோடு வாழத்த மறுக்கிறார்கள். திருமணமும், வயிற்றுப்பாடும் அச்சுறுத்தும் இஸ்லாமிய பெண்ணும், ஆணும் அமைதியாகவே இவற்றை எப்படி வெல்கிறார்கள் என்பதைத் திரைக்கதை சுவாரசியமாக விவரிக்கிறது. அதிலும் முக்கியமாக உன்னுடைய வாழ்க்கையை நீயே எழுதிப்பாடு என்கிற வரிகளும், ‘உன் உணர்வுகளை நீ பாட அஞ்சுகிறாய் என்றால் நான் மட்டும் ஏன் அதனை உச்சரிக்க வேண்டும் நண்பனே.’ எனும் கேள்வியும் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது.

இந்தக் கதையின் இசையும், அசலான ‘rap’ கலைஞர்களும் பெரும்பலம் என்றால், இந்திக்கே உரிய கமர்ஷியல் கதை சொல்லல் பின்னடைவு. தற்காலத்தின் வன்முறை, ஒதுக்கல், வெறுப்பு ஆகியவற்றையும், ஏற்றத்தாழ்வுகள் எப்படிச் சக மனிதரின் கண்ணீரை துடைக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் இசையோடு இழைத்துத் தந்திருக்கிறார் ஜோயா அக்தர். ‘நமக்கான காலம் வரும்’ என்கிற வரி தான் படத்தின் கருப்பொருளும், கதை சொல்லலும். ‘நீ ஒரு கலைஞன்’ என்று கண்கள் நிறையச் சொல்லும் பெண்ணின் லட்சியவாதம் நம்மையும் சற்றே வருடும் படம் ‘gully boy’.

நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே


சாவித்திரிபாய் புலே (1831-97) அவருடைய புரட்சிகரமான கணவருக்கு இணையாக போராடினார், அல்லல்பட்டார். சாதி, பாலின பாகுபாடு மிக்க புறக்கணிப்பால் அவரின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஜோதிபாயின் மனைவி என்பதை தாண்டி அவர் குறித்து அறிவுலகம் பெரிதாக பேசுவதில்லை. நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அனைவருக்கும் கல்வி, பெண்களுக்கு கல்வி என்கிற புரட்சிகர சிந்தனையை மொழிந்தவர். பெண் விடுதலையின் நாயகி. கட்டிப்போடும் கவிதையின் முன்னோடி. சாதி, ஆணாதிக்க சக்திகளை நேருக்கு நேராக எதிர்கொண்ட தீரமிக்க மக்கள் தலைவர். அவருக்கு என்று உரிய தனித்துவமான அடையாளங்களும், சாதனைகளும் பல. நவீன இந்தியாவின் வரலாற்றில் சாவித்திரிபாய் புலே என்கிற பேராளுமையின் பெயரை உச்சரிக்க மறுக்கிற மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் அறிவு உற்பத்தி எவ்வளவு ஈவிரக்கமற்றது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சாவித்திரிபாய் அவர்களின் வாழ்க்கை,போராட்டம் மராத்தியர் அல்லாத மக்களையும் சென்றடைய வேண்டும்.’ – வரலாற்று ஆய்வாளர் பிரஜ் ரஞ்சன் மணி

சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .. மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் .ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்குக் கல்வி பயிற்றுவித்தார் .

Image result for savitribai phule

இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்குத் தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய் அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகச் சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்கசாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர் ,ஜோதிபாயிடம் இவர் அதைச்சொல்லி புலம்பியதும் “அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ !பின் அங்கே போய் நல்ல சேலையை அணிந்து கொள் !”என்றார் அவ்வாறே செய்தார் இவர் .

தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்

1852ல் இவர் தொடங்கி வைத்த ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்)  மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.

Image result for savitribai phule

‘தி பூனா அப்சர்வர்’ இதழ் மே 29, 1852 அன்று இப்படி எழுதியது: “அரசுப்பள்ளியில் படிக்கும் ஆண் பிள்ளைகளை போல பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் ஜோதிராவ் பள்ளியில் பயில்கிறார்கள். இதற்கு காரணம், அரசுப்பள்ளியை விட இங்கே கல்வி மிக உயர்ந்த தரத்தோடு இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தாள் இப்பள்ளியில் மாணவிகள் அரசுப்பள்ளி ஆண்களை விட தாங்கள் அறிவு மிக்கவர்கள் என புரிய வைப்பார்கள். வருகிற தேர்வில் அவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெறக்கூடும். அரசு ஏதேனும் செய்யாவிட்டால் இந்த பெண்கள் ஆண்களை விட கல்வியில் சிறந்து ஒளிர்வதை கண்டு நாம் வெட்கத்தில் தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கும்”.

தீண்டப்படாத குழந்தைகள் பள்ளிகளில் சேருவதால் ஆதிக்க சாதி குழந்தைகள் பள்ளியை விட்டு நிற்கும் சூழல் நிலவி வந்த காலம் அது. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு என்று பள்ளிகளை நடத்திய புலே இணையருக்கு பணத்தட்டுப்பாடு இன்னமும் பெரிதாக இருந்தது. அவர்கள் பள்ளியை சேர்ந்த அறங்காவலர் ஒருவர் எழுதிய கடிதம் நிலையையும், சாவித்திரிபாயின் ஆளுமையையும் ஒருங்கே புலப்படுத்துகிறது
“ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிற அளவுக்கு நிலைமை நன்றாக இல்லை. கூடுதல் சம்பளம் தரும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் போகிறார்கள்…பெண்களின் கல்விக்காக இப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாவித்திரிபாய் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்துவிட்டார். எந்த சம்பளமும் பெற்றுக்கொள்ளாமல் அவர் பணியாற்றுகிறார். தகவல்களும், அறிவும் பரப்பப்படும் போது பெண் கல்வியின் நன்மைகளை மக்கள் முழுமையாக விளங்கிக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். ”

Image result for savitribai phule

1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக
உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும்
முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட
என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.

ஆணின் பாலியல் வன்புணர்வுக்கும், வன்முறைக்கும் ஆளாகி கர்ப்பவதி ஆன ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளச் சென்றாள். அவளை ஜோதிபாய் புலே மீட்டு வந்தார். அந்தப் பெண்ணைத் தன்னுடைய வீட்டில் அனுமதிக்கச் சாவித்திரிபாய் எந்த எதிர்ப்பும் சொல்லாததோடு அவளுக்குப் பிறந்த குழந்தையைத் தன் மகன் போலவே வளர்த்து மருத்துவர் ஆக்கினார். இப்படிக் கைவிடப்பட்ட பெண்களைக் காப்பதற்கும், அவர்களின் பிரசவத்தைக் கவனிக்கவும் ‘பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா’ எனும் இல்லத்தைத் துவக்கினார்..

1855-ல் அவரின் பதினொரு வயது மாணவி முக்தாபாய் ‘தியானோதயா’வில் எழுதிய ‘மங்குகள், மகர்களின் துக்கம்’ என்கிற கட்டுரையே சாவித்திரிபாய் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதைத் தெளிவாக்கும்

‘ஓ! இறைவனே எது எங்களின் மதம் என்று சொல்! ஓ இறைவனே! எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி. ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை விட்டு கெட்டு ஒழியட்டும். எங்களின் மனதிற்குள் இப்படிப்பட்ட இழிந்த மதம் எப்பொழுதும் நுழையாமல் இருக்கட்டும்..மங்குகள், மகர்கள், ஏன் பிராமணர்கள் என்று அனைவரையும் படைத்தவன் ஒருவனே! அவனே என்னை அறிவால் நிறைத்து எழுத வைக்கின்றான்… ஓ! மகர்களே! மங்குகளே! நீங்கள் ஏழ்மையிலும், நோயிலும் வாடுகிறீர்கள். அறிவெனும் மருந்து மட்டுமே உங்களைக் குணப்படுத்தவும், ஆற்றவும் முடியும்’

24 செப்டம்பர் 1873-ல் துவங்கப்பட்ட சத்தியசோதக் சமாஜத்தில் சாவித்திரிபாய் முக்கிய பங்காற்றினார். இந்த அமைப்பு புரோகிதர், வரதட்சணை இல்லாமல் திருமணங்களை முன்னின்று நடத்தியது. சமாஜத்தின் முதல் அறிக்கையில் சாவித்திரிபாய் தான் இத்தகைய மதச்சடங்குகள் ஒழித்த புரட்சிகரமான திருமணத்திற்கு காரணம் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்கக் கடுமையான ப்ளேக் சட்டங்களைப் போட்டுப் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து
ராணுவத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை
ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படி ஊருக்கு வெளிப்புறம் மகர் குடியிருப்பில் வசித்து வந்த பாண்டுரங் பாபாஜி கெய்க்வாட்டின் பத்து வயது சிறுவன் காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்தச் சிறுவன் பிழைத்துக்கொண்டான். வாழ்க்கையையே சேவையால் நிறைத்த அவரை ‘இந்தியக்கல்வியின் தாய்’ என்று போற்றுகிறோம். .

சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை,சமூகம்,வரலாறு,கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன அவரின் கவிதை கீழே :

போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,சோராமல் உழை-ஞானத்தை,செல்வத்தைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய்க் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக
பிராமண நூல்களை வேகமாகத் தூக்கி எறிக !

‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்


‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்.

‘நீ வேதங்களுக்கு முன்பே இங்கிருந்தாய்’

 

நீ வேதம் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய்

இறைவன் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய்

அச்சுறுத்தும் பொருள்சார் உலகினை

பெருவலியோடும், பதற்றத்தோடும் பார்த்துக்கொண்டே இருந்தாய்

உன் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்தாய்

அந்தத் துதிகள் வேத வரிகள் ஆகின

நீயே எல்லாத் தெய்வங்களின் பிறப்பையும் கொண்டாடி, அவர்களுக்குப் பெயரிட்டாய் …. ‘

-பாபுராவ் பாகுல்

‘தலித் இலக்கியம் என்பது பழிவாங்கல் இலக்கியம் அல்ல. அது வெறுப்பைப் பரப்பவில்லை. அது மானுட மேன்மையை, மனிதகுல விடுதலையை வளர்த்தெடுக்கிறது. ஆகவே. தலித் இலக்கியம் வரலாற்றுத் தேவை’ – 1973ல் பாபுராவ் பாகுல்.

பாபுராவ் பாகுல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு போர் மகாராஷ்டிராவில் உச்சம் பெறத்துவங்கிய காலத்தில் பிறந்தார். அவர் வாழ்ந்த மாதுங்கா காலனியில் சாக்கடை நீர் தேங்கி நிற்கும். ஒதுங்க கூட இல்லாமல் மக்கள் நெருக்கிக்கொண்டு வாழவேண்டிய அளவுக்கு இடப்பற்றாக்குறை. அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத கொடிய அவநம்பிக்கை தரும் வாழ்க்கை. இருளும், நிச்சயமின்மையும் மட்டுமே அம்பேத்கரின் இயக்க அலுவலகமும், இடதுசாரிகளின் தொடர்பும் பாபுராவ் பாகுலை இலக்கியப் பெருநெருப்பாக உருமாற்றின.

தலித் மக்கள், குரலற்றவர்கள், பெண்கள், வேசிகள், குற்றவாளிகள் எனப் பலரின் அக உலகையும், சாதியும், வன்மமும் தரும் பதைபதைப்பும் அவரின் எழுத்துக்களில் இலக்கியமாகின. அவருடைய ‘When I Hid My Caste’ என்கிற மராத்தி சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை படித்து முடித்தேன். அவரின் ஆரம்பக் காலக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. நுண்மையான விவரிப்புகள், உரையாடல்கள் வழியாக மாந்தர்களைக் கண்முன் நிறுத்துவது, அவ்வப்போது எழுத்தில் இழையும் அமைதி பலவற்றைக் கடத்துவது என்று ஒரு தனித்த அனுபவமாக இந்தக் கதைகளோடு வாழ முடிந்தது.

தசரா கொண்டாட்டத்தின் போது எருமை வேட்டை ஒன்று நிகழ்கிறது. அதில் அத்தனை போராட்டம், வேதனை, உயிரிழப்பும் தலித்துகளுக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வெற்றியும், மாலையும் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவருக்குப் போய்ச் சேருகிறது. Sacrifice என்று தலைப்பிடப்பட்ட இக்கதையைத் தமிழில் பலி என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகளில் மனுவை நோக்கி எதிர்க்குரல்கள் எழுப்பப்படுகின்றன. அவையே தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளாக அமைவது விபத்தில்லை. ‘என் சாதியை மறைத்துக் கொண்ட போது’ கதையின் நாயகன் கவிஞன். ‘தீண்டப்படாதவன் என்கிறீர்கள். சூரியன் தீண்டப்படாதவன். அக்னியும் தீண்டப்படாதவன்’ என்று அவன் பெருக்கெடுத்துப் பேசுகிறான். தன்னுடைய சாதியை மறைத்துக்கொண்டு வாழ்கிறார். அவரின் சாதி தெரியவருகிற போது, அடித்துத் துவைக்கிறார்கள். துளிக்கண்ணீர் சொட்டவில்லை. அவருடைய நிலையைப் பார்த்து, இழைக்கப்படும் அநீதியால் உறைந்து போய் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பெண்ணின் கண்ணீர் துளிகள் அவர் பாதங்களைத் தொடுகின்றன. மனுதானே என்னை அடிக்கிறான் என்று நாயகன் எண்ணிக்கொண்டு அழாமல் நிற்கிறான். சொல்லாமல் பலவற்றைச் சொல்கிற தருணம் அது.

போஹடா என்கிற பண்டிகையின் போது தானே நரசிம்ம வேடம் பூண்டு தாண்டவம் புரிவேன் என்று மகர் ஒருவர் கேட்கிறார். பல நூறு ரூபாய் தொகை தேவைப்படும் என்கிறார்கள். ஏலம் நடக்கிறது. அந்த இளைஞரே ஏலத்தில் வெற்றி பெறுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்தாண்டு முதல் இந்த விழாவே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது. அடையாளங்களுக்குள் சமத்துவத்துக்கான தேடல் எப்படி முடிகிறது என்பதை முகத்தில் அறையாமல் அறைந்து சொல்கிறது.

பாலியல் தொழில் புரிய நேரிடும் மராட்டா சாதியை சேர்ந்த பெண் மீது அளவற்ற அன்பை ஒரு இளைஞன் பொழிகிறான். வினாக்கள் இல்லாமல் அவளோடு உடன் நிற்கிறான். திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவன் கேட்கிற போது, ‘நீ என்ன சாதி’ என்று நாயகி கேட்கிறாள். ‘நான் அன்பை தானே அளவில்லாமல் தந்தேன். கேட்ட போதெல்லாம் எந்த வினாக்களும் இன்றிப் பணம் தந்தேன். என்னுடைய செயல்களைக் கொண்டு என்னை அறிய முனையாமல் என் சாதியை ஏன் தேடுகிறாய்?’ என்று வேதனையோடு கேட்டு அந்நாயகன் மறைகிறான். சாதியின் கொடுவாள் தீண்டலில் மரிக்கும் அன்பு தான் எத்தனை எத்தனை?

தேவதாசியாகச் சமூகத்தால் மாற்றப்படும் தலித் பெண்கள் குறித்து ஆதிக்கச் சாதிப் பெண்கள் கூட அக்கறை செலுத்த மறுப்பதை ‘இருளின் கைதிகள்’ கதை இயல்பாகச் சொல்லிச்செல்கிறது. பாலினத்தை விடச் சாதி அரசியலே வெல்கிறது என்பதன் சாட்சியம் அக்கதை. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் உருவத்தின் குறைகளுக்காகக் கொடுமைப்படுத்தப்படும் பெண்ணின் வலியை, கண்ணீரை, துயரை ‘pesuk’ என்கிற கதையில் மயக்கும் கதை சொல்லல் முறையில் கடத்தப்படுகிறது.

துளி கூட இரக்கம், அன்பு மறுக்கப்பட்டு பாலியல் தொழிலாளியாக வாழத்ததலைப்பட்ட  பெண். அவளின் மகன், பிணந்தின்னியாக சுற்றும் ஆண்கள், ஊற்றெடுக்கும் தாய்மை, பின்னி எடுக்கும் உடற்பிணி, இறுதி வரை சமூகம் கேட்க மறுக்கும் அவளின் அழுகுரல் உலுக்கி எடுக்கிறது.

மலமள்ளும் தொழில் செய்ய மறுத்து கல்வியைப் பற்றிக்கொள்ள முயலும் நாயகனின் கதையான ‘revolt’ இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை. நாயகன் கல்லூரி போய்ப் படிக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறான். குடும்பத்தைக் காப்பாற்ற மலம் அள்ளப்போ என்று அப்பாவும், அம்மாவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

“நான் ஏன் மலம் அள்ள வேண்டும்? என் படிப்பை விட்டுவிட்டு இந்த ஊரின் அழுக்கை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டுமா? இவர்களின் கழிசடைகளை என் தலையில் தூக்கி சும்மக்க வேண்டுமா/ இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றால் என்னை ஏன் படிக்க வைத்தீர்கள்? என் இதயத்தில் விடுதலை, அறிவு, மானுடச்சுடர்களை ஏன் பற்றி எரிய வைத்தீர்கள்” என்று கதறுகிறான்.

“எங்கே ஒரு மலம் அள்ளுபவனின் மகனே மலம் அள்ள வேண்டும் என்று எங்கே விதித்து இருக்கிறது?” எனக்கேட்கிறான்.

“நம்முடைய வறுமையில் விதித்து இருக்கிறது. நம்முடைய தர்மத்தில் விதித்து இருக்கிறது. நம் நாட்டில் விதித்து இருக்கிறது” என்கிறார் அம்மா.

“எது தர்மம்? ஒரு மனிதனை நொறுக்கிப்போட்டு, அவனை மிருகமாக மாற்றுவதுதான் தர்மமா? மனிதனை மறந்து வெறும் சிலைகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாட்டின் தர்மம் தானே இது? இந்தத் தர்மத்திற்கு நான் கட்டுப்பட மாட்டேன். வறுமை, கொடுமை ஆகியவற்றை மட்டுமே தரும் இந்தத் தர்மத்தை நிராகரிக்கிறேன்…”என்கிறான்

“என் விரல்களை உடையுங்கள். என் கரங்களை முறித்துப் போடுங்கள். என் உடலை கிழித்துப் போடுங்கள். நான் இந்த வேலையைச் செய்ய மாட்டேன் ” என்கிற கதறல் கண்டுகொள்ளப்படாமல் அவன் மலம் அள்ள அனுப்பப்படுகிறான்.

அங்கே இவனுக்கும், இன்னொரு தலித்துக்கும் சண்டை முற்றுகிறது. அடித்துப் புரள்கிறார்கள். ஊரின் மலத்தையே அள்ளும் இவர்களின் துயரம் தட்டிப்போன உடம்பை தொடக்கூட விரும்பாமல் ஊரே தள்ளி நிற்கிறது. மனு சிரித்தபடி நிற்கிறான்.

சாதியை மறைத்துக் கொண்ட போது நமக்குள் இறுகிப்போயிருக்கும் சாதிய வன்மத்தை, கேடுகளை உலுக்குகிறது. கதைகளின் மூலம் கசடுகளைக் கடக்கத் தூண்டுகிறது.

When I Hid My Caste, Baburao Bagul

ஆங்கிலத்தில்: ஜெர்ரி பின்ட்டோ

Speaking Tiger Books.

எல்லா எல்லைகளும் கடந்து எழுக – மகாகவி குவேம்பு


மகாகவி குவேம்பு கன்னடத்தின் பெருங்கவிஞர். அடையாளங்கள் கடந்து மானுடம் பேசியவர். அவருடைய எட்டாண்டு உழைப்பினில் எழுந்த ஶ்ரீ ராமாயணத் தரிசனம் ராமனையும் தீக்குளிக்க வைத்தது. குவேம்புவின் கண்களுக்கு ரோஜா மலர்கள் மன்மதன் முத்தமிட்டு ரதியின் இதழில் இருந்து வழிந்த குருதியாகக் காட்சியளித்தது. சொர்க்கத்தின் கதவுகள் ஹேமியின் காதலன் என்ற போதே எனக்குத் திறக்கும் எனத் தன் மனைவியின் மீதான பேரன்பு மேலிட எழுதினார். ஞானபீடம் முதலிய விருதுகளை வென்ற அவரின் ‘O nanna chetana’ கவிதை தமிழில்

என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும்  கடந்து எழுக!

எல்லா வடிவங்களையும் கடந்து எழுக
ஆயிரம் நாமங்களும், அடையாளங்களையும் கடந்து எழுக
என் உணர்வுகள்  இதயத்தைக் குத்திக்கிழிக்கிறது என்றாலும்
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

ஒரு நூறு சாதிகளின் பதர்களை ஊதி தள்ளுக

தத்துவங்களின் போதாமைகளைக் கடந்து எழுக
என் ஆன்மாவே !
தொடுவானம் தாண்டியும் எழுக
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்தெழுக
Kuppali Venkatappa Puttappa's 113th birthday

முடிவுறாத சாலையில் எங்கும் சோர்ந்து சுணங்கி உறங்காதே
கூடுகள் எழுப்பிக் கட்டுண்டு கலங்காதே
இயன்றதை அடைந்து விட்டு இன்புற்று நிற்காதே
அழியாமல் இரு
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

அழிவற்றது எப்போதும் அழியாது
யோகி அழிவற்றவன் ஆகிறான்
நீ அழிவற்றவன், எப்போதும் அழிவற்றிரு
அழிவற்று இரு இரு இரு இரு
என் ஆன்மாவே
எல்லா எல்லைகளும் கடந்து எழுக

தமிழில்: பூ.கொ.சரவணன்

தாஜ்மகால்-தாகூர்


உனக்குத் தெரியும் ஷாஜகானே
வாழ்வு, வாலிபம்
செல்வம், புகழ்
எல்லாம் காலவெள்ளத்தில் கடந்து போகும என
அதனால் தானே உன் இதயத்துத் துயரத்தை மட்டும் உலகுள்ளவரை
உயிர்த்திருக்கப் போராடினாய்
வைரம், முத்து, மாணிக்கத்தின் பேரழகு
வானவில்லின் பளபளப்பு போல மின்னி மறையட்டும்
தாஜ்மகாலெனும் கண்ணீர்த்துளி காலத்தின் கன்னத்தில் காலத்துக்கும் ஒளிரட்டும்.
Image may contain: outdoor
 
ஓ வேந்தனே நீ உயிரோடு இல்லை
கனவைப்போல உன் பேரரசு காணாமல் போனது
உன் அரியாசனம் சிதறிப்போய்க் கிடக்கிறது
உன் கந்தர்வர்கள் கானம் இசைப்பதில்லை
உன் இசைவாணர்களின் கீதங்கள் சலசலக்கும் யமுனையோடு கலப்பதில்லை
ஆனாலும் உன் காதல் தூதஞ்சல் காலத்தால் கிழிபடாமல்
தேயாமல்
பேரரசுகளின் எழுச்சியிலும், எழுச்சியிலும் அசராமல் நிற்கிறது
பிறப்பு, மரணம் என எம்பி விழும் வாழ்வலைகளில் வசப்படாமல் நிற்கிறது
காலங்காலமாக உன் காதலின் செய்தியை காக்கிறது:
உன்னை இமைப்பொழுதும் மறவேன் ஆருயிரே. எப்போதும் மறவேன்!
வங்கமொழி மூலம்: தாகூர்
ஆங்கில மொழியாக்கம்: Kshithish Roy
தமிழில்: பூ.கொ.சரவணன்
 
புகைப்பட நன்றி: சந்தீபா சேத்தன் (http://sandeepachetan.com/taj-mahal-photography-tips/)

இப்போதே என் அருகில் இரு


இப்போதே என் அருகில் இரு,
என்னை வதைப்பவனே, என் காதலே, என் அருகில் இரு
இரவு கீழிறங்கும் இந்த வேளையில் அருகில் இரு
சூரிய அஸ்தமனத்தின் வெட்டுக்காயங்களைப் பருகியபடி இருள் படர்கிறது
அதன் கரங்களில் வாசனைத் தைலங்கள், அதன் வைர ஈட்டிகள் 
அது புலம்பல்களின் அழுகையோடு வருகையில்,
அது பாடல்களின் புன்னகையோடு வருகை புரிகையில்,
அதன் ஒவ்வொரு அடியிலும், வேதனையின் நீலச்சாம்பல் கொலுசுகள் கலகலக்கையில்
தங்கள் ஆழமான மறைவிடங்களில்
இதயங்கள் இன்னுமொரு முறை நம்ப ஆரம்பிக்கையில்,
இதயங்கள் தங்களுடைய கண்காணிப்பை துவங்குகையில்,
சட்டைப்பைக்குள் கரங்கள் சப்தமற்று மறைந்து கிடக்கையில்
நெஞ்சுருக முயன்று பார்த்தாலும், அமைதியாகாத
ஆற்றுப்படுத்த முடியாத குழந்தைகளைப் போலச் சிணுங்கல்கள் எழுப்பியபடி
ஒயின் ஊற்றப்படுகையில்
நீ செய்ய நினைப்பவை எதையுமே செய்ய முடியாமல் தவிக்கையில்
எதுவுமே பயனற்று நிற்கையில்
இரவு கீழிறங்கும் இந்தக் கணத்தில்
தன்னுடைய சோக முகத்தை இழுத்தபடி, இரங்கல் ஆடை அணிந்து இரவு வருகையில்
என் அருகே இரு
என்னை வதைப்பவனே, என் காதலே, என் அருகில் இரு – Faiz Ahmed Faiz 
ஆங்கிலத்தில் : Naomi Lazard
தமிழில்: பூ.கொ. சரவணன்

Image may contain: 2 people