தமிழ்த்தாய் வாழ்த்து ‘மாநிலப் பாடலான’ வரலாறு.


‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின்  பாயிரத்தில் உள்ளது .  பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர்.  கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார்.    தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக  நூலிற்கு  ஆங்கிலம், தமிழ்  என்று  இரு  மொழிகளிலும்  முன்னுரை எழுதியுள்ளார்.   


தன்னுடைய  முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது”  என்று  வருந்துகிறார்.  

ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை


பாயிரத்தில்  ‘தமிழ் தெய்வ  வணக்கம்’ என்று  தமிழை  தெய்வமாக  போற்றிப் பரவுகிறார்.  கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில்  தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு  என்று பலவாறு  போற்றுகிறார். இப்பாடலில்  வழங்கி வரும் முதன்மையான கருத்துகள்  என்று சிலவற்றைப்  பேராசிரியர் கைலாசபதி  அடையாளப்படுத்துகிறார். அவை,

  (அ) இந்திய நாட்டில்  தெக்கணம்  திலகமாகத்  திகழும்  பகுதி. 

(ஆ) திராவிடம் முதன்மையான  சிறப்புமிக்கதாகும் 

(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும்  புகழும், பெருமையும் மிக்கது

(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை  போன்றது தமிழ்

(உ) தமிழே  திராவிட  மொழிகளுக்கு  தாய்

(ஊ) ஆரியம்  போல்  வழக்கழியாமல்  சீரிளமை  மிக்க  மொழியாகத்  தமிழ்  திகழ்கிறது 


“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்  எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்   கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்  உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”


‘நீராருங்  கடலுடுத்த’ எனும்  துவங்கும்  இப்பாடல்  முந்தைய தமிழ்  படைப்புகளில்  இருந்து பல வகைகளில்  வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில்  புதிய பாய்ச்சலுக்கு  அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின்  பார்வையில்  தமிழ்த்தேசியத்திற்கான  முன்னோடிப்  பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர்  பிரேர்னா  சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர்  நலனும்  கைகோர்க்கும்  இடம் என்கிறார். தமிழ்த்தாயின்  உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று  சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர்   சுமதி  ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார்   கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற  மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.

அவ்வரிகள்,  


வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள் 

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி 

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள

 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.


இப்பாடலுக்கு  பிறகே  தமிழைத் தாயாக, தெய்வமாக  போற்றிப்பரவுவது  பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக  போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில்  எண்ணற்ற  பாடல்கள்  தமிழன்னையை  போற்றி  பாடப்பட்டன. இவற்றுக்கான  முதல்  வித்து  ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’ ஆகும். 

நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்


கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய  மூன்றாம்     ஆண்டறிக்கையை  1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப்  பற்றி  பேசுகிறது:

பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’  என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை  ஆய்வாளர்  கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார். 

1913-ம் ஆண்டறிக்கை


இப்பாடல் படிகளை  கரந்தை  தமிழ்ச்சங்கத்தை  சேர்ந்த  உமாமகேசுவரனார்  பல நூறு  பிரதிகள்  அச்சிட்டு  கொண்டு  சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும்  பாடப்பட்டது. பல்வேறு  தமிழ்ச்சங்க  கூட்டங்களில்  இப்பாடல்  ஒலித்தது. தனித்தமிழ்  மாநாடுகளில்  தவறாமல்  இடம்பெற்றது.  .தனித்தமிழ் மாநாடுகள்,  பாடநூல்களில்  இடம்பெற்றது. தனிநாயகம்  அடிகள் “இப்பாடலின்  வரிகள் கடந்த  அறுபது  ஆண்டுகளாக  எதிரொலித்துக்  கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான  பாடல்  எனும்  அதன்  பெருமையை  விஞ்சும்  படைப்பு  எதுவுமில்லை”  என்று  1963-ல் புகழ்ந்தார். 

இப்பாடலை  தமிழக  அரசு  அனைவரும்  பாடும்வண்ணம்  வழிவகை  செய்ய  வேண்டும்  என்கிற  கோரிக்கைகள்  அறிஞர் அண்ணா  ஆட்சிக்காலத்தில்  வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா  இயற்கை  எய்திவிட, கலைஞர்  கருணாநிதி  அப்பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கரந்தைத்  தமிழ்ச்சங்க  விழாக்களிலேயே  முதல்  ஆறு  வரிகள்  மட்டுமே  பாடப்பட்டு  வந்தன  என்பதை  சுட்டிக்காட்டுகிறார் கரந்தை  ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான  விருதளிப்பு  விழாவில்  தமிழ்நாட்டின் வழிபாட்டுப்  பாடலாக   ‘நீராருங் கடலுடுத்த’ அமையும்  என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

புகைப்பட நன்றி: kalaignar.dmk.in

 பிற  மொழிகளை  தாழ்த்திப்  பேசும்  வரிகளைத்  தவிர்த்து  பாடலை  அமைத்துக்  கொண்டதாக  அவர் குறிப்பிட்டார். ஆரியம்  போல்  வழக்கழிந்து  முதலிய  வரிகளும்  சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத்  தமிழ்ச்சங்கத்தின்  வழக்கத்தை  அடியொற்றியே  இப்பாடல் வரிகள்  அமைந்திருப்பதையும் கவனத்தில்  கொள்ள  வேண்டியிருக்கிறது.  மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை  தமிழ்நாட்டின்  வழிபாட்டுப்  பாடலாக  ஆக்கிய  அரசாணையை  கூர்ந்து  நோக்கினால்  இன்னொன்றும்  புலப்படும்.

 ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை  எண்  1393-ல் தமிழ்நாடு  முழுமைக்கும்  பொதுவாக  வழிபாட்டுப்  பாடல்  அமையும்  வண்ணமே  ‘நீராருங்  கடலுடுத்த ‘  இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட  நம்பிக்கையோடு’  தொடர்புடையதாக    இல்லாத  வண்ணம்  இப்பாடல் இருக்குமாறு  அமைந்திருப்பதாகவும்  அரசாணையில்  சொல்லப்பட்டு  இருந்தது.  பல்வேறு  தமிழ்நாட்டு  நிகழ்ச்சிகளில்  இந்து  மதப்  பாடல்களும்,  வடமொழி,தெலுங்கு  பாடல்களும்  ஆதிக்கம்  செலுத்திக்கொண்டிருந்த  போது  இந்த  அறிவிப்பு அவற்றை  மாற்றியது. மேலும், பாயிரத்தில்  உள்ள  சிவனைப்பற்றிய  குறிப்பு இடம்பெறாமல்   போனதையும், ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’  ஆனது  ‘தமிழ்த்தாய்  வாழ்த்தாக’ மாறியதையும்  மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ்  அடையாளத்தை  முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது.  (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )


மேற்சொன்ன  அரசாணையை  ஒட்டி 23 நவம்பர்  1970-ல்  அரசாணை  ஒன்று  வெளியிடப்பட்டது.  அதில்  ‘நீராருங் கடலுடுத்த ….’  வழிபாட்டுப்பாடலாக  விழாக்களின்  துவக்கத்தில்  பாடப்பட  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி  நிறுவனங்கள், உள்ளாட்சி  அமைப்புகள்  நடத்தும் நிகழ்ச்சிகளில்  இப்பாடல்  மோகன  ராகத்தில், திஸ்ர  தாளத்தில்  இசைக்கப்பட  வேண்டும்  என்றும் கூறப்பட்டு  இருந்தது.

Memo no. 3584/70-4

காஞ்சி  மடாதிபதி  விஜேயந்திரர்  கலந்து   கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ இசைக்கப்பட்ட  போது  கண்மூடி அமர்ந்து  இருந்தார். இதனையடுத்து  கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில்  உள்ள காஞ்சி  மடத்தின் கிளையில்  நுழைந்தார். அதற்கு  மட  மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை  கண் இளங்கோ  மிரட்டியதாக  .  மடத்தின்  மேலாளர்  காவல் துறையில்  புகார்  அளித்து  இருந்தார்.  இது தொடர்பாக  தன்மீது  பதியப்பட்ட   முதல் தகவல்  அறிக்கையை ரத்து  செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை  கண்  இளங்கோ  நாடினார். 


இவ்வழக்கில்  நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்  மேற்குறிப்பிட்ட இரண்டு  அரசாணைகள்  1393,  3584/70-4  ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ வழிபாட்டுப்  பாடலாகவே  இந்த  அரசாணைகள்  வரையறுத்து  இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய்  வாழ்த்து  வழிபாட்டுப்பாடல், அது, கீதம்  அன்று”. என்று குறிப்பிட்டார்.  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படும்  போது   எழுந்து நிற்க  வேண்டும்  என்று எந்தச் சட்டமும், அரசாணையும்  இல்லை என்பதையும்  அத்தீர்ப்பில்  கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய்  வாழ்த்திற்கு  உச்சபட்ச  மரியாதையும், மதிப்பும்  தரவேண்டும். தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும்  போது  கூட்டத்தினர் எழுந்து நிற்பது  மரபாக  இருக்கிறது  என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில்  தான்  மரியாதை  செலுத்த வேண்டும் என்று   கேள்வி எழுப்பிக்கொள்ள  வேண்டும்.   பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும்  நாம் கொண்டாடும்  போது, ஒரே வழியில்  தான் மரியாதை செலுத்த  வேண்டும்  என்று வலியுறுத்துவது போலித்தனமானது.  …..  
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு  ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு  எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி  எளிய  வாழ்வினையே   வாழ்கிறார்.அவர்  வழிபாட்டில்   ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான  நிலையில் இருப்பார். தமிழ்த்தாய்  வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால்  சந்நியாசி  தியான  நிலையில் அமர்ந்து இருப்பது  நிச்சயம்  நியாயமானது. இந்த  நிகழ்வில், மடாதிபதி தியான  நிலையில்  அமர்ந்து  கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும்   செலுத்தும் விதமாகும்.”  என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி


இதனையடுத்து, தமிழ்நாடு  அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய்  வாழ்த்தின்  தோற்றம், வளர்ச்சி,  அதனை அரசு  நிகழ்ச்சிகளில்  விழாவின்  துவக்கத்தில்  பாடவேண்டும் என்று ஆணையிட்ட  அரசாணைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக  அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில்  அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு  அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள் உள்ளிட்ட பொது  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு  முன்பு தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாயம்  பாடப்பட  வேண்டும் என்றும், தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும் போது  அனைவரும்  தவறாமல் எழுந்து  நிற்க  வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல்  பாடப்படும்  போது  எழுந்து  நிற்பதில்  இருந்து மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணித்  தாய்மார்கள்  ஆகியோருக்கு விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

 சான்றுகள்/ உதவியவை :

1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm

2. மனோன்மணியம்  சுந்தரனாரின்  இன்னொரு  பக்கம் – பேராசிரியர்   அ  கா பெருமாள் 

3. நீராருங் கடலுடுத்த –  கரந்தை ஜெயக்குமார்

 4.   ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture  Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam

 5.  ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy 

6. தமிழ்நாடு அரசாணை  நிலை எண் 1393, பொதுத்  (அரசியல்) துறை, 17.06.1970

7. தமிழ்நாடு அரசாணை   எண் 3584/70-4, 23.11.1970 

8. தமிழ்நாடு  அரசாணை  நிலை  எண் 1037, 17.12.2021 

 9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296

10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy

11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy  Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725

12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123

13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021

டி.என்.சேஷன் – வாழ்வும், பணியும்


டி.என்.சேஷன் 10-11-2019 ல் காலமானார். கேரளாவின் திருநெல்லை நகரில் பிறந்த சேஷன் பொறியியல் படிக்கிற அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்தும் அண்ணனின் வழியில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்  என்று  உறுதி பூண்டார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார்.  காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற அவர் அப்பணிக்கு செல்லாமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் மதுரை ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது போராட்டங்களை மிக கடுமையாக அவர் அடக்கினார் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும் முதல்வர் பக்தவச்சலம் அதற்கு செவி சாய்க்கவில்லை.  பின்னாளில் சேஷனின் நினைவலைகள் கோவிந்தன் குட்டி எழுத்தில் நூலான போது, ‘மதுரை ஆட்சியராக இருந்த காலத்தில்  கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அண்ணா சி.ஐ.ஏ கைக்கூலி என்று எனக்கு தெரிய வந்தது. அவர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அவர் முன்னின்று நடத்தினார்’ என்கிற தொனியில் பேசியிருந்தார். இத்தகைய கூற்றுக்கு சேஷன் எந்த ஆதாரத்தையும் தரவில்லை. நூல் வெளிவருவதற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியாக மேற்சொன்ன கருத்து இதழ்களில் வெளிவந்தது. திமுக, அஇஅதிமுக ஆகியவை அவர் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தன.

திரிபுரா தலைமை செயலாளர், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவரும், இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் டெல்லியில் இருந்து அதனை கண்காணித்தவர்களில் ஒருவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ப.ஸ்ரீ.இராகவன்  அண்ணா குறித்த சேஷனின் கூற்று ‘அபாண்டமான குற்றச்சாட்டு, ஒன்று, அறிந்து சொல்லிய பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வீண் வம்பு பேசுகிறவர்கள் இவர் காதில் போட்ட வதந்தியாக இருக்க வேண்டும்.  அல்லது வேறெதாவது மறைமுக உள்நோக்கத்தில் பிறந்த குசும்பாக இருக்க வேண்டும்’ என்று ‘நேரு முதல் நேற்று வரை’ நூலில் பதிவு செய்கிறார். 

புகைப்பட நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சேஷனின் நூலிற்கு  நீதிமன்றங்கள் தடை விதித்தன. ப.ஸ்ரீ.ராகவன் சேஷனின் அண்ணா பற்றிய கருத்துக்கு வெளியிட்ட மறுப்பு அறிக்கை குறித்து சேஷன் அமைதி காக்கவே செய்தார். நூல் வெளிவந்த போது அண்ணா குறித்த பகுதிகளை அவர் நீக்கியிருந்தார்.

சேஷன் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் செயலலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் போபார்ஸ் பீரங்கி வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது பாதுகாப்புத் துறை செயலாளராக சேஷன் திகழ்ந்தார். போபர்ஸ் ஆயுத பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று அடித்து பேசினார். இது அவரை கேபினட் செயலாளராக ஆக்கி அழகு பார்க்கும் அளவுக்கு ராஜீவ் காந்தியின் நம்பிக்கையை பெற்றுத்தந்தது. வி.பி.சிங் பிரதமர் ஆனதும் சேஷனை திட்ட கமிஷன் உறுப்பினராக கட்டம் கட்டினார்.

அடுத்து சந்திரசேகர் பிரதமர் ஆன போது சுப்பிரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக இருந்தார். ஹார்வர்டில் சேஷன் படித்த போது அங்கு பணியாற்றிய சுவாமி சேஷனை தலைமை தேர்தல் ஆணையராக ஆக்க பரிந்துரைத்தார்.  அடுத்த ஆறு ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராக சேஷன் நிகழ்த்தியது இந்திய ஜனநாயகத்தின் போக்கையே மாற்றியது. தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் குறித்ததை போல தேர்தல் ஆணையத்தின் வரலாற்றை சேஷனுக்கு முன், சேஷனுக்கு பின் என்று பகுக்கலாம் என்கிற அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கியிருந்தது. சேஷன் அதற்கு முன்பு தேர்தலை எப்போதும் நடத்திய முன் அனுபவம் கொண்டவரில்லை. ‘சற்றும் தாமதமோ, குறைபாடோ இல்லாமல் இயங்க வேண்டும்’ என்று மட்டும் முடிவு செய்து கொண்டதாக பின்னாளில் தெரிவித்தார். முதல் வேலையாக தேர்தல் காலங்களில் நடக்கும் குற்றங்களை பட்டியலிட்டார். அவற்றின் எண்ணிக்கையே நூறுக்கு மேலே நீண்டது. அடுத்தது மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்த முனைந்தார்.

மாதிரி நடத்தை விதிகள் தேர்தல் காலத்தில் அமலுக்கு வருபவை. அவை சட்டங்கள் இல்லை என்றாலும் அவற்றை பொதுவாக பின்பற்ற வேண்டும் என்பது எழுதப்படாத உடன்படிக்கை. கேரளாவில் அறுபதுகளில் குடிமைச் சமூகத்தின் முயற்சியால் நடத்தை விதிகள் முதல்முறை உருப்பெற்றன. அவை அவசர நிலை அட்டூழியங்களுக்கு பிறகு புதிய, வலுவான வடிவத்தில் அனைத்து கட்சிகளால் வடிவைமைக்கப்பட்டன. எனினும், நடைமுறையில் அவை அரிதாகவே பின்பற்றப்பட்டன.

சேஷன் எங்கே சிக்கல் என்று பார்த்தார். தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மீது முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்திற்கே வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அதற்குண்டு என்று அவர் கேட்டார். சிலர் முரண்டுபிடித்தார்கள், சிலர் நீதிமன்ற படியேறினார்கள். சேஷன் உறுதியாக நின்றார்.  தேர்தலை நிறுத்தி வைக்கும், தள்ளிப்போடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு என்கிற சவுக்கை எடுத்துக் கொண்டார்.  சரத் பவார் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலத்தில் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் காலத்தில் எல்லைமீறும் அதிகாரிகளை வகையாக கவனித்து கொள்வதாக பொதுவெளியில் மிரட்டல் விடுத்தது இருந்தார். வாக்கு எண்ணிக்கையை நடத்த மாட்டேன் என்று சேஷன் தொடை தட்டியதும் பவார் இறங்கி வந்தார்.

தேர்தலில் ஆள் மாறாட்டங்கள், கள்ள வாக்குகள் மலிந்திருந்த காலம் அது. புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அட்டை வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கேட்டார் சேஷன். பதினெட்டு மாதங்கள் அரசாங்கம் சட்டை செய்யாமல் இருந்தது. சேஷன் ஒன்றே ஒன்றுதான் சொன்னார், ‘ஜனவரி 1,1995 முதல் புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்த தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தாது. அவ்வளவே!’. அலறியடித்து கொண்டு இயந்திரம் இயங்கியது.  உச்சநீதிமன்றம், வாக்குரிமை என்பது குடிமக்களின் உள்ளார்ந்த உரிமை, அவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை என்கிற காரணத்துக்காக தேர்தல்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று தீர்ப்பு எழுதியது. எனினும், சேஷன் ஓய்வு பெறுவதற்குள் இருபது லட்சம் அடையாள அட்டைகள் புழக்கத்திற்கு வந்திருந்தன.

அடுத்தது வாரி இறைக்கப்படும் பணம். தண்ணீர் போல தேர்தல் காலத்தில் பணம் செலவிடப்பட்டு கொண்டிருந்தது. எல்லா கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் வரவு, செலவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேஷன் உத்தரவு போட்டார். பூச்சாண்டி காட்டுகிறார் என்றே பலர் அசட்டையாக இருந்தார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்கிற முறையை அறிமுகப்படுத்தினார். தேர்தல் செலவுகள் 1991 நாடாளுமன்ற தேர்தலின் போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. கணக்குகளை ஒழுங்காக தாக்கல் செய்திருக்காத 1,488 வேட்பாளர்களை சேஷன் மூன்றாண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77 அவருக்கு கைகொடுத்து இருந்தது. வேட்பாளர்களின் செலவுக்கு கட்டுப்பாடுகளையும் வெற்றிகரமாக விதித்தார். 

அதோடு நிற்காமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிற காலத்தை மாற்றியமைக்க முடிவு செய்தார். சேஷனின் வருகைக்கு முன்புவரை தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது பொதுவாக தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பே நிகழும். அதற்கு பதிலாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் நாளில் இருந்தே விதிகள் நடைமுறைக்கு வரும் என்று தடாலடி காட்டினார். 

அடுத்தது சுவர்களை ஆக்கிரமித்து கொள்ளும் தேர்தல் சின்னங்கள், விளம்பரங்கள், காதை கிழிக்கும் ஒலிப்பெருக்கிகள் பக்கம் கவனம் திரும்பியது. காங்கிரஸ் கட்சி பெருமளவில் பிளவுண்டு சின்னங்கள் சார்ந்து பல்வேறு மோதல்கள் வெடித்த காலத்தில் அதனை விசாரிக்கும் பொருட்டு சின்னங்கள் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் 1968 -ல் இருந்து பயன்படுத்த ஆரம்பித்து இருந்தது. அதனை தனக்கு ஏற்றார் போல் வசதியாக பொருள் கொண்ட சேஷன்  அனுமதி இல்லாத ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டன. கிராமங்கள், நகரங்களில் முறையே இரவு 11 மணி, 10 மணியோடு பரப்புரை முடிந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டினார்.  ஒரு படி மேலே போய், பொது இடங்களில் தேர்தல் விளம்பரங்கள் என்பதே இருக்க கூடாது என்று உத்தரவிட்டதோடு, முடிந்தால் தனியார் வீடுகளில் தேர்தல் காலத்தில் விளம்பரங்கள் செய்பவர்கள் முடிந்தபிறகு தாங்களே வெள்ளையடித்து தரவேண்டும் என்றும் கண்டிப்பு காட்டினார். தேர்தலின் வண்ணமய பொழுதுகள், பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் பறிபோகிறதே என்று சிலர் சேஷனிடம் குறைபட்டுக் கொண்டார்கள். ‘பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் வேண்டுமென்றால் திரையரங்குக்கு போய் உட்காருங்கள். தேர்தல் தான் கிடைத்ததா?’ என்று அவர் பதிலளித்தார்.

சேஷன் கையில் தேர்தல் நிறுத்த ஆயுதம் சிக்கிக்கொண்டு படாத பாடு பட்டது என்றால் மிகையில்லை. வி.பி.சிங் கட்சியின் கோட்டைகளாக திகழ்ந்த பகுதிகளில் அவர் தேர்தலை உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி சேஷன் நிறுத்தினார் என்பதை பேராசிரியர்  கிறிஸ்தோஃப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுகிறார். பஞ்சாபின் கல்கா இடைத்தேர்தலின் போது சாலைகளை அடைப்பது, வாகனங்களை மொத்தமாக தடை செய்வது என்று சேஷன் எல்லை மீறினார். மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது என்று செய்தித்தாள்கள் கவனப்படுத்தின. பஞ்சாபில் வாக்குப்பதிவிற்கு நடக்க சில மணி நேரங்களே இருந்த போது தடாலடியாக சேஷன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தலை  நிறுத்த ஆளுநர் மனம் நொந்து பதவியை விட்டு விலகினார்.

தேர்தல் சமயத்தில் சாதி, மதம் என்றோ, இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்றோ வாக்குறுதிகள் தருவது கூடாது, அதன் மூலம் வாக்காளர்களை ஈர்த்தால் தேர்தலை ரத்து செய்வேன், வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று சேஷன் கண்டிப்பு காட்டினார். இது தேர்தல் அரசியலுக்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு வகையில் எதிரானது கூட. தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்காமல் எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என்று பேராசிரியர் கில்மார்ட்டின் வினா எழுப்புகிறார். இத்தகைய சேஷனின் அணுகுமுறைக்கு அவர் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருந்த பார்வையும் ஒரு காரணம் . ‘இந்தியாவின் இருநூறு அரசியல் தலைவர்கள் – மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று இவர்களில் எத்தனை பெற தனிப்பட்ட அல்லது கொள்கை ரீதியான ஊசலாட்டங்களில் தெளிவு பெற அணுக முடியும்? ஒருவரைக்கூட அணுக முடியாது…. இவர்கள் எல்லாம் சித்திரக்குள்ளர்கள்’ என்று சேஷன் எழுதினார்.

சேஷன் இப்படி மனம் போன போக்கில் தேர்தல்களை   நிறுத்திக் கொண்டிருந்தது இடதுசாரிகளை கடுப்பேற்றியது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். தனக்கு உதவிகரமாக இருப்பார் என்று தப்புக்கணக்கு போட்ட நரசிம்ம ராவ் சேஷனை காப்பாற்றினார். சேஷன் மகனுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஆளுநரின் செயலால் தேர்தலை நிறுத்தினார். பீகார் தான் சேஷனின் சோதனையின் உச்சம். வன்முறை, படுகொலைகள், பூத் கைப்பற்றல்களுக்கு பெயர் பெற்ற அந்த மாநிலத்தில் 650 கம்பெனி துணை ராணுவப்படையை இறக்கினார். நான்கு கட்டங்களாக தேர்தலை நடத்தினார். அதற்கு பிறகும் நான்கு முறை தேர்தலை தள்ளி வைத்தார். இந்த புள்ளிவிவரம் எவ்வளவு காலம் எடுத்தது என்கிற தெளிவைத் தரலாம்: தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 8, 1994 -ல் செய்யப்பட்டது. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்தது மார்ச் 28, 1995.
சேஷனின் தீவிரமான முயற்சிகளால் வன்முறைகள் பெருமளவில் தேர்தலில் குறைந்தன. உத்திர பிரதேசத்தில் 1991 பூத் கைப்பற்றல்கள் 873, 1993-ல் இந்த எண்ணிக்கை 255 ஆக குறைந்திருந்தது. 1996 பொதுத் தேர்தலில் 1500 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தியா முழுக்க அனுப்பப்பட்டார்கள். மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் முறையே 59,000 பேர் , 1,25,000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். மத்திய பிரதேசத்தில் மட்டும்   87,000 வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. பூத் கைப்பற்றல்கள் இந்திய அளவில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2614 ஆக இருந்தது இப்போது 1056 ஆக குறைந்திருந்தது. தேர்தல் வன்முறைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை 272-ல் இருந்து ஏழே வருடத்தில் 60 ஆக குறைந்திருந்தது.

சேஷன் தேர்தலில் வாக்களிக்க தைரியத்தோடு வரலாம் என்கிற நம்பிக்கையை தன்னுடைய நடவடிக்கைகளால் தந்ததால் வன்முறை சூழல், மதப்பிணக்குகள் என்று பல தரப்பட்ட சவால்களுக்கு இடையேவும் உத்திர பிரதேசத்தில் 1993-ல் வாக்களித்தவர்களின் அளவு 10% அளவு உயர்ந்தது. இதனை ‘சேஷன் விளைவு’ என்று பேராசிரியர் கிறிஸ்தோப் ஜாப்ரிலா புகழ்கிறார். தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்தலில் அச்சமில்லாமல் வாக்களிக்க இந்நடவடிக்கைகள் உதவின என்கிறார்.

சேஷன் தேர்தல் பரப்புரையில் விதிமுறைகளை மீறியதாக சொல்லி இரண்டு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று நரசிம்ம ராவிடம் அழுத்தம் கொடுத்தார். பல்வேறு வகைகளில் அவரின் செயல்பாடுகள் அரசுக்கு தலைவலி கொடுப்பதாக இருந்தன. சேஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்னும் இரண்டு தேர்தல் ஆணையர்களை அரசு நியமித்தது. ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட நியமனம் ஒன்றை முன்னெடுத்தவர் சேஷன். இப்போது தன்னுடைய கழுத்திலேயே கத்தி வைக்கப்பட்ட போது அவர் உச்சநீதிமன்ற படியேறினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டே மத்திய அரசு அவர்களை நியமித்து இருந்தது. நீதிமன்றம் அரசின் முடிவுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை என்றாலும் சேஷன் இரு ஆணையர்களுக்கும் எந்த பணியையும் ஒதுக்க வெகுகாலம் மறுத்து சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். நீதிமன்றம் ‘தன்னுடைய சொந்த பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்தி கொள்ள முனைகிறார்’ என்கிற அளவுக்கு காட்டம் காட்டிய பிறகே இறங்கி வந்தார். மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒரே அளவு அதிகாரம் படைத்தவர்கள், முரண்பாடுகள் வரும் போது பெரும்பான்மை வாக்கின் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

சேஷன் தன்னுடைய பதவிக்காலம் முடிந்ததும் குடியரசு தலைவர் தேர்தலில் சுயேட்சையாக நின்றார். அவர் சிவசேனா, பாஜக கட்சிகளிடம் ஆதரவு கோரினார். பால் தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரினார். ‘சாதி, மத, ஊழல் வேறுபாடுகளை கடந்த ஒருவரே ஜனாதிபதி ஆகவேண்டும்’ என்று அவருக்கு ஆதரவு நல்குவதாக சிவசேனா அறிவித்தது. ஐ.கே.குஜ்ரால் சிவசேனையின் இந்த முடிவு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்கோத்ராவிடம் கேட்டார், ‘அது வேறொன்றுமில்லை. ஒரு தலித் குடியரசுத் தலைவர் ஆகிவிடக்கூடாது என்பதே சிவசேனாவின் எண்ணம்’ என்றார். இதனை தன்னுடைய சுய சரிதையில் குஜ்ரால் பதிவு செய்துள்ளார். கே.ஆர்.நாராயணன் அந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். மனசாட்சியின் படி வாக்களியுங்கள் என்று குரல் கொடுத்த சேஷன் 5% வாக்குகளை மட்டும் பெற்று டெபாசிட்டை இழந்தார். வெகு சீக்கிரமே காந்தி நகரில் அத்வானியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நின்று சேஷன் இரண்டு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று தோற்றுப்போனார்.

‘உங்களுடைய சிறகுகளை அரசு வெட்டி எறிந்து விடும் போல் இருக்கிறதே?’ என்று சேஷனை பார்த்து கேட்டதும் இப்படி பதில் சொன்னார், ‘நான் அப்போதும் நெருப்புக் கோழியை போல மின்னல் வேகத்தில் இலக்கு நோக்கி ஓடுவேன்’. தேர்தல்களில் தோற்றவர் என்றாலும், தேர்தல் அரசியலில் கடைக்கோடி குடிமக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பெரும் முயற்சியை முன்னெடுத்த அரிய அதிகாரி என்று அவர் நினைவுகூரப்படுவார்.

சான்றுகள்:
1) One day’s sultan:T.N. Seshan and Indian democracy-David Gilmartin


2) The Great March of Democracy Edited  by S.Y.Quraishi
3) https://www.indiatoday.in/india/story/tn-seshan-no-nonsense-man-tn-seshan-cleaned-up-india-electoral-system-1617702-2019-11
4) Elections Model Code of Conduct: A Reference Handbook – K.C.Saha
5) A Tumultuous and Glorious Seventy Years – T.N.Seshan
6) T.N.Seshan – An intimate Story – Konark Publishers
7) நேரு முதல் நேற்று வரை – ப.ஸ்ரீ.இராகவன் 
8) T.N. Seshan CEC Vs Union of India & Ors, 14, July 1995
9) Matters of Discretion- An Autobiography- I.K.Gujral
10)https://www.thequint.com/voices/blogs/tn-seshan-a-life-of-integrity-dedicated-to-public-service
11) https://www.business-standard.com/article/beyond-business/-the-more-you-kick-me-112051

12) https://www.thehindu.com/todays-paper/tp-national/the-man-who-cleaned-up-the-indian-electoral-system/article29940502.ece

தனிப்பட்ட நீட் வெற்றிகளை கொண்டாடாமல் விமர்சிக்கலாமா?


ஜீவித் குமார் அவர்களின் நீட் வெற்றி பெருமைக்குரியது. வாழ்த்தும், பேரன்பும். எளிய பின்னணி கொண்ட அரசுப்பள்ளி மாணவர் மருத்துவராகும் தருணம் மகிழ்ச்சிக்குரியது.

இப்போது சிலவற்றைத் தெளிவாக உரையாடுவோம். குடிமைப்பணித் தேர்வில் முதலிடத்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் பெறுகிற போது கொண்டாடித் தீர்ப்போம். அது நிச்சயம் கொண்டாட்டத்திற்கு உரியது. ஊக்கமும், உத்வேகமும் தருவது. ஆனால், முதல் 50 அல்லது 500 இடங்களைப் பார்த்தால் மேற்சொன்ன பிரிவுகள்/பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வெகு சொற்பமான இடங்களையே பிடித்திருப்பார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிப்பட்ட நபரின் வெற்றியை இந்த சிக்கலான பின்புலத்தில் பொருத்திப்பேச வேண்டும். அந்த சமூகமே முன்னேறிவிட்டது, எதற்கு இட ஒதுக்கீடு என ஒரு தரப்பு பேசும். இன்னொரு தரப்பு முயன்றால் வெல்ல முடியும், தாழ்வு மனப்பான்மை விட்டொழியுங்கள் என உத்வேக சொற்பொழிவு ஆற்றும்.

கள உண்மை என்ன? எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்தார்கள்? நீட் வருகைக்கு முன்னால் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது ஒற்றை இலக்கத்திற்கு மாறியிருக்கிறது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மேற்சொன்ன மாணவர் ஓராண்டு தனியார் மையத்தில் பயிற்சி பெற்றே வென்றிருக்கிறார். அவருக்கான பயிற்சிச் செலவை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு மருத்துவர் கனவுமிக்க ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ன?

நீட் தேர்வில் வெற்றி பெறுவதும், அரசு/தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. ப்ளஸ் 2 வில் வெற்றி பெற்றேன். எம்.எம்.சி.யில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. மேலும், ஒப்பீட்டளவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் தனியார் கல்லூரியில் சேருவது கடினம். நீட் வருகைக்குப் பின்னர் இன்னமும் கட்டணங்கள் எகிறியிருக்கின்றன.

நீட் வருகைக்குப் பின்னால் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் மருத்துவக்கல்லூரிகளில் விழுந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதிய, கோச்சிங் பெற்ற, ஆண் மாணவர்களே அதிகமாக வெல்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கூட மருத்துவக்கல்லூரி வாசல்களை மிதிக்க முடியவில்லை. 7.5% இட ஒதுக்கீட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.

தனிப்பட்ட வெற்றிகள் பாராட்டுக்குரியவை. அது அடிப்படையான சிக்கல்கள், பிரச்சனைகள், முரண்பாடுகளில் இருந்து திசை திருப்பும் செயல்பாடாக மாறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பிருந்த நிலை கச்சிதமான ஒன்றில்லை. நீட் இன்னமும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. அதை சீர்செய்ய கொண்டாட்டங்களைத் தாண்டிய செயல்பாடு, உரையாடல் தேவை.

அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல்


அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல் -முனைவர் சுமீத் மஹஸ்கர்
கடந்த சில ஆண்டுகளில் டாக்டர் அம்பேத்கரை ‘மையநீரோட்டப்படுத்தும்’ முயற்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. வலதுசாரிகள், இடதுசாரிகள் என்று பல தரப்பிலும் உள்ள அரசியல் கட்சிகள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்த அரும்பாடுபடுகிறார்கள். ஆய்வுலகிலும் அண்ணல் அம்பேத்கர் குறித்து எழுதுவது வாடிக்கையாகி விட்டது . முன்முடிவோடு கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணலின் எழுத்துகளை மறைப்பதோடு, அவரின் சமூக, அரசியல் தலையீடுகளையும் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நிகழ்ந்தது. இதனை மேற்சொன்ன முயற்சிகள் கேள்விகேட்கவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ தவறின.
தொழிலாளர் பிரச்சனையை அம்பேத்கர் எப்படி அணுகினார் என்பது இதற்குச் சான்று பகர்கிறது. பல அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் அம்பேத்கர் “சாதி பிரச்சனையை” மட்டுமே கருத்தில் கொண்டு அதனை எதிர்கொண்டார். அவர் “பெரும்” முக்கியத்துவம் மிக்க “வர்க்க பிரச்சனையை” கண்டுகொள்ளவில்லை என்று வாதிடுவதைக் கண்டிருக்கலாம். இத்தகைய பார்வை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் பம்பாய் நகரத்தில் எழுந்த கம்யூனிச அரசியலையும், அம்பேத்கரின் தலைமையில் சாதி ஒழிப்புக்காக அணிதிரண்ட புரட்சிகரமான தலித் அரசியலையும் கணக்கில் கொள்ளத் தவறுகின்றன. இவ்விரு அரசியல் இயக்கங்களும் களத்தில் “தொழிலாளர் பிரச்சனைகளில்” தீவிரமாக மோதிக்கொண்டன. அவை அரிதாக ஒன்றிணைந்தும் இயங்கின. இவ்விரு இயக்கங்களிடையே நிகழ்ந்த பலதரப்பட்ட ஊடாட்டங்கள் “உழைக்கும் வர்க்க ஒற்றுமையின்” போதாமைகளையும், இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்களையும் ஒருங்கே முன்னிலைப்படுத்தின.

ஜவுளி ஆலைப் போராட்டங்கள்

அம்பேத்கரின் ஆரம்ப கால தொழிலாளர் இயக்க செயல்பாடுகள் பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் யூனியனில் இணைந்து இயங்குவதாக இருந்து. இந்த தொழிலாளர் அமைப்பை N.M. ஜோஷி,R.R.பக்ஹலே ஆகியோர் துவங்கினார்கள். இந்த ஆலைகளில் நெசவு நிகழும் துறைகளில் அதிகபட்ச கூலி வழங்கப்பட்டு வந்தது. இந்த வேலைகளில் தலித்துகள் ஈடுபட்டால் “தீட்டாகி”விடும் என்று சொல்லி புறக்கணிக்கப்பட்டார்கள். ஆடை இழையை நெய்வதற்கு உதவும் பாபினை மாற்ற வேண்டும் என்றால், நூலை தங்கள் எச்சிலால் தொழிலாளர்கள் ஈரப்படுத்தி முடிச்சிட வேண்டும். மராத்தா சாதியை சேர்ந்த தொழிலாளர்கள் இப்பணியில் தலித்துகள் ஈடுபட்டால் அது தங்களுக்கு தீட்டாகி விடும் என்று வாதிட்டார்கள். இதைக்காரணம் காட்டி தலித்துகளை நெசவுப் பணிகளில் ஈடுபடுத்த மறுத்தார்கள்.
அண்ணல் அம்பேத்கர் இப்பிரச்சனையை புகழ்பெற்ற 1928 பம்பாய் ஜவுளி தொழிலாளர் போராட்டத்தின் போது கவனப்படுத்தினார். அவர் முன்வைத்த உரிமைகளுக்கான கோரிக்கைகளில் ஆலையின் எல்லா தொழில்களிலும் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என்பதும் இருந்தது. அதனை கம்யூனிச தலைவர்கள் ஏற்க மறுத்தால் தலித் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டாமென தான் தடுக்கப்போவதாகவும் அம்பேத்கர் அச்சுறுத்தினார். பெரும் தயக்கத்தோடு அம்பேத்கரின் உரிமைக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அம்பேத்கர் மேற்சொன்ன போராட்டத்தை ஆதரித்தார் என்றாலும், 1929-ல் நடந்த ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை எதிர்த்தார். இப்போராட்டத்தின் போது தலித் தொழிலாளர்கள் ஆலைகளுக்குள் பணியாற்ற போவதற்கான வசதிகளை அவரே முன்னின்று ஏற்படுத்திக் கொடுத்தார்.

A BR Ambedkar statue

இடதுசாரி விமர்சகர்கள் மேற்சொன்ன போராட்டத்தில் அம்பேத்கர் “தொழிலாளர் ஒற்றுமையை” ‘சாதியைக்’ கொண்டு தகர்த்தெறிந்ததோடு நில்லாமல், தொழிலாளர் போராட்டத்தை பிசுபிசுக்க வைக்கும் வண்ணம் ஆலைகளுக்குள் கருங்காலிகளை அனுப்பி வைத்தார் என்று சாடுகிறார்கள். 1928-ல் நடந்த போராட்டம் தலித் தொழிலாளர்களை கடன் சுமைக்கு ஆட்படுத்தியதோடு, அவர்கள் பெரும் அவமானங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. தலித் அல்லாத தொழிலாளர்களை போல நெடுங்காலம் போராட்டங்கள் தொடர்ந்தால் தங்களை ஜீவித்துக் கொள்வதற்கு என்று விவசாய நிலங்கள் எதுவும் தலித்துகளிடம் இல்லை. ஆகவே, இன்னொரு நீண்ட போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் தலித்துகள் இல்லை என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது.

இதே காரணங்களுக்காக 1934-ல் கம்யூனிஸ்ட்கள் நடத்திய பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் போராட்டத்தையும் அம்பேத்கர் எதிர்த்தார். அதே வேளையில், நீதிமன்றங்களில் இப்போராட்டத்தின் தலைவர்களுக்காக அம்பேத்கர் வாதாடவும் செய்தார். இப்போராட்டங்களில் ஈடுபட்டதற்காக வழக்குகள் பாய்ச்சப்பட்ட நிலையில், ஒரு தொழிற்சங்க தலைவருக்காக அம்பேத்கர் திறம்பட வாதிட்டதால் அவர் விடுதலையானதோடு பிற கம்யூனிச தலைவர்களின் விடுதலைக்கும் அதுவே வழிவகுத்தது.

‘கட்டாய ஊழியத்தை ’ எதிர்ப்பது

உழைக்கும் வர்க்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காக பாடுபடுவதற்காக அம்பேத்கர் 1936-ல் சுதந்திர தொழிலாளர் கட்சியை தோற்றுவித்தார். இக்கட்சி எந்த ஒரு ஒற்றை மதம், சாதியையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அறிவித்தது. மேலும் தீண்டப்படுபவர்-தீண்டப்படாதோர், பிராமணர்-பிராமணரல்லாதோர், இந்து-முஸ்லிம் இடையே எந்த பாகுபாடும் இல்லை என்று முழங்கியது. அடுத்தாண்டு நிகழ்ந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தொழிற்சாலை சச்சரவுகள் சட்டம்,1938 ஐ எதிர்ப்பதில் அக்கட்சி முதன்மையான பங்காற்றியது. இச்சட்டமானது, சமரசத்தை கட்டாயமாக்கியதோடு சட்டத்துக்கு புறம்பான போராட்டங்களில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கியது.
இந்த மசோதாவை எதிர்த்து பம்பாய் சட்டமன்றத்தில் உரையாற்றிய அண்ணல் அம்பேத்கர், போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர்களை தண்டிப்பது என்பது “தொழிலாளரை அடிமையாக்குவது அன்றி வேறொன்றுமில்லை” என்று வாதிட்டார்.

மேலும், அடிமைமுறை என்பது “கட்டாய ஊழியமே ஆகும்.” என்றும் முழங்கினார். மேலும், சட்டமன்றத்துக்கு வெளியே இந்த மசோதாவிற்கு எதிராக ஒரு நாள் போராட்டத்தை நவம்பர் 7, 1938-ல் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். இம்மசோதா நிறைவேறாமல் தடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட்கள், சோசியலிஸ்ட்கள் வழங்கிய ஆதரவையும் அம்பேத்கர் வரவேற்றார்.

கிராமப்புறத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மாற்றுவது:

கம்யூனிஸ்ட்கள் முன்னின்று நடத்திய தொழிலாளர் அரசியல் எல்லாம் நகர்ப்புற தொழிற்சாலைகள் சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தன. அம்பேத்கரோ கிராமப்புறத்தில் வழக்கத்தில் இருந்த மகர் வட்டன் முறையை எதிர்த்து போரிட்டார். இதன்மூலம் சாதி அடிப்படையில் தொழில்களை வகுத்து பாகுபடுத்தும் படிநிலையை கிடுகிடுக்க வைத்தார். மகர் வட்டன் என்பது கிராமத்தின் சமூக-பொருளாதார அமைப்பினில் மகர்களுக்கு வழங்கப்படும் நிலமாகும். இந்த நிலத்திற்கு பதிலாக மகர்கள் பலதரப்பட்ட கடுமையான வேலைகளை செய்ய வேண்டும் என்பதோடு, கடும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

இவ்வாறு கிராமப்புறத்தின் பொருளாதார அமைப்புகளின் உழைப்பை சுரண்டும் முறைகள் சாதி அமைப்போடு ஆழமாக பின்னிப்பிணைந்து இருந்தன. அம்பேத்கர் இவற்றை அறவே அழித்தொழிக்க பாடுபட்டார். அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிரான போரானது இத்தகைய அடிமைப்படுத்தும் அமைப்புகளை எதிர்த்து போர் தொடுக்காமல் முழுமையடையாது என்று அறிவித்தார். அம்பேத்கர் 1928-ல் பம்பாய் சட்ட மேலவையில் மகர் வட்டன் முறையை ஒழிப்பதற்கான மசோதாவை , தாக்கல் செய்தார். மேலும், அரசானது மகர் வட்டன்தாரர்களை அரசாங்க ஊழியர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கான உழைப்புக்கான ஊதியத்தை கிராமத்தினர் வழங்க அடிகோல வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆரம்பத்தில் பிராமணர் அல்லாதோர் இம்மசோதாவை ஆதரித்தாலும், பின்னர் படிப்படியாக இதனை எதிர்த்தனர். மகர்கள் செய்து கொண்டிருந்த இழிவாக கருதப்பட்ட, வெறுத்தொதுக்கப்பட்ட தொழில்களை இனிமேல் யார் செய்வார் என்கிற கவலை அவர்களை ஆட்கொண்டுவிட்டது.
அம்பேத்கரின் நெருங்கிய சகாவான A.V. சித்ரே ஷெட்காரி சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு கொங்கன் பகுதியில் நிலவி வந்த கோட்டி எனும் நில வரி வருவாய் முறையை ஒழிக்க பாடுபட்டது. இம்முறையானது சிறு, குறு விவசாயிகளை சுரண்டியதோடு, அவர்களை கொத்தடிமைத்தனத்தில் உழல வைத்தது. ஆங்கிலேயே அரசு வசூலித்த வரியை போல நான்கு மடங்கு கூடுதல் வரியை இம்முறையில் செலுத்த வேண்டியிருந்தது. இம்முறையில் நிலச்சுவான்தார்களாக சித்பவன பிராமணர்கள், சில உயர்சாதி இந்து மராத்தாக்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். இம்முறையால் சுரண்டப்பட்ட பயிரிடுபவர்களாக மராத்தாக்கள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரான குன்பிக்கள், பண்டாரிக்கள், அக்ரிக்கள், தலித்துகளில் சில மகர்கள் இருந்தனர்.
பழமைவாத தேசியவாதியான பால கங்காதர திலகர் காலனிய அரசு கோட்டி முறையை ஒழிக்க முயன்ற போது கடுமையாக அதனை எதிர்த்தார். இம்முறைக்கு எதிராக கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் அம்பேத்கர் போராட்டங்கள், மாநாடுகளை நடத்தினார். அவர் பம்பாய் சட்டமன்றத்தில் கோட்டி ஒழிப்பு மசோதாவை 17 செப்டம்பர் 1937-ல் அறிமுகப்படுத்தினார். மாகாண அவைகளில், முதன்முறையாக விவசாயிகளை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்கான சட்ட மசோதாவை முன்னெடுத்த சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கரே ஆவார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வைஸ்ராயின் செயற்குழுவில் தொழிலாளர் உறுப்பினராக அம்பேத்கர் பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவை விடுதலைக்கு பிந்தைய இந்தியாவில் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியது.

பிராமணியம் எனும் இன்னொரு பெரும் பகை:

முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி என்கிற பார்வையில் கம்யூனிஸ்ட்களோடு உடன்பட்ட அம்பேத்கர், அதற்கு இணையான எதிரி பிராமணியம் என்று வாதிட்டார். மேலும், கம்யூனிஸ்ட்களைப் போல முதலாளித்துவ அமைப்பினை அழித்தொழித்து விட்டால் தானாகவே சாதி முறையினால் உண்டாகும் இன்னல்கள் காணாமல் போய்விடும் என்று அவர் கருதவில்லை. அண்ணல் அம்பேத்கரை பொருத்தவரை, சமூகப் பாகுபாட்டைக் களைவது என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் இன்றியமையாத ஒன்றாகும். அம்பேத்கர், உழைப்பாளர் சந்தையில் தலித்துகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முதலாளித்துவத்துக்கு எதிரான போர் சாத்தியப்படும் என்று வாதிட்டார். இதனைச் சாதிக்க, சாதி அடிப்படையில் பணிக்கு ஆட்களை எடுக்கும் பிராமணிய தாக்கத்தை விடுத்து, அதனைப் புறந்தள்ளும் சந்தைப் பொருளாதார அடிப்படைகளின்படி இயங்கலாம். இது தொழிலாளர்கள் இடையே உள்ள சாதி, மத வெறுப்பைப் போக்குவதோடு, உழைப்பாளர் ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்தெறியும்.

அம்பேத்கர் “வர்க்கம்” என்பதைப் பொருள் ரீதியான உறவுகள், பொருளாதாரச் சுரண்டல் சார்ந்து மட்டும் குறுகலாக அணுகுவதை ஏற்க மறுத்தார். மூலதனம்-தொழிலாளர் இடையே உள்ள உறவை நிர்மாணிப்பதில் பொருளாதாரக் காரணிகளோடு, பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், சுரண்டல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார். மேலும், இத்தகைய பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், மக்கள் சுயமரியாதை மிக்க வாழ்க்கை வாழவும், பரஸ்பர மதிப்பை பெற்று வாழ்வும், பொதுச் செயல்பாடுகளில் பங்குபெறவும் விடாமல் தடுக்கின்றன. இந்தியாவில் தனிமனிதர்களின் வாழ்க்கை தேர்வுகளில் சாதி, பாலினம், மதம் பெரும் தாக்கம் செலுத்தி வரும் சூழலில் தொழிலாளர் பிரச்சனையில் அம்பேத்கரின் செயல்பாடுகள், தலையீடுகள் கருத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன.

Sumeet Mhaskar (@sumeetmhaskar) | Twitter
முனைவர் சுமீத் மஹஸ்கர் O.P.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர்.
தமிழில்: பூ.கொ.சரவணன்
கட்டுரை மூலம்: https://theprint.in/opinion/ambedkars-fight-wasnt-just-against-caste-scholars-have-overlooked-his-labour-activism/401133/

”Pornstar என அழைப்பது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.” – மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்


BBC Hard Talk நிகழ்வில் மியா காலிஃபா தன்னுடைய கடந்த காலம், தொடரும் பயணம், அடிப்படைவாதிகளிடம் இருந்து வந்த மிரட்டல்கள், கலவையான உணர்ச்சிகள் என்று பலவற்றைப் பேசினார். (https://www.youtube.com/watch?v=i2qplvJ6SLs) உரையாடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உரையின் மூலத்தை தட்டச்சு செய்து கொடுத்த தோழர் Nivaas Sudhan -க்கு நன்றி !

நேர்முகம் செய்பவர்:

வணக்கம் நான் ஸ்டீபன் சேக்குர். இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளப்போகும் விருந்தினர் மியா காலிஃபா. 16 மில்லியன் followers உடன் instagram -ல் உலா வருகிறார். அவருடைய பெயரை கூகுள் செய்தால் அளவற்ற தேடல் முடிவுகள் தோன்றும். இப்படி உலகப்புகழ் பெற்ற ஒருவராகத் திகழ்வதைக் குறித்து மியா பெருமைப்படவில்லை. இந்தப் புகழ் 2014-ல் ஃபோர்ன் துறையில் பணியாற்ற அவர் செய்து கொண்ட மூன்று மாத ஒப்பந்தத்தால் கிட்டிய ஒன்று.

இத்துறையை விட்டு வெளியேற முடிவு செய்வதற்கு முன்பு வரை 12 காணொளிகளில் மட்டுமே அவர் பங்களித்து இருந்தார். அதில் ஒன்று உலகளவில் அதிர்வலைகளைக் கிளப்பியது. இஸ்லாமிய ஹிஜாப் அணிந்தபடி அவர் உடலுறவில் ஈடுபடுவதாக ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அது பலத்த கண்டனங்கள், கொந்தளிப்பை சம்பாதித்துக் கொடுத்தது. ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

லெபனான் நாட்டில் கிறிஸ்துவப் பெற்றோருக்கு பிறந்த மியா சிறுமியாக இருக்கும் போது குடும்பத்தோடு அமெரிக்காவின் மேரி லாண்ட் பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார். இளம்வயதில் பாதுகாப்பின்மையால் சூழப்பட்டவராக, கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுப்பவராகத் திகழ்ந்த மியா தனக்கு நேர்ந்தவை குறித்து மனம்திறந்து உரையாட இருக்கிறார்

நே: எப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிகவும் புகழ்பெற்ற பெண்மணி. 16 மில்லியன் பேர் உங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ஆனால் , இந்தப் புகழிற்கு நீங்கள் போர்ன் துறையில் குறுகிய காலம் ஈடுபட்டதே காரணம். இதை எதிர்கொள்வது உங்களுக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதா?

மியா : ஆமாம். நான் அத்துறையை விட்டு வெளியேறியதும் என்னுடைய இன்ஸ்டா கணக்கை அழித்தேன். இல்லை. சரியாகச் சொல்வது என்றால், ஐ எஸ் ஐ எஸ் ஆதரவாளர்கள் என்னுடைய கணக்கை கைப்பற்றி, அதில் தங்களுடைய பரப்புரைகளைப் பதிந்து கொண்டே இருந்தார்கள். இன்ஸ்டாகிராம் அந்தக் கணக்கை தூக்கிவிட்டது. இன்னொரு கணக்கை ஓராண்டிற்கு நான் உருவாக்கவில்லை. உலகம் ஏளனமாகப் பார்க்கும் ஒரு போர்ன் நட்சத்திரம் என்கிற என்னுடைய தலைவிதியை ஏற்றுக்கொண்டேன். என்னைப்பற்றி நிலவும் பார்வையை மாற்ற முயற்சி செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு இன்ஸ்டா கணக்கை மீண்டும் துவக்கி, வேறு நல்ல வார்த்தை தோன்றவில்லை என்பதால் influencer ஆக முயன்றேன் எனச் சொல்லலாம்.

நே: உங்கள் பெயரை வேலை நிமித்தமாகக் கூகுள் செய்தால் “போர்ன்ஸ்டார்’” என்று தான் உடனே வருகிறது. இதனை எவ்வளவு முயன்றாலும் உங்களால் கடந்துவிட முடியாத இல்லையா? எவ்வளவு மெனக்கிட்டாலும்

மியா: இது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

நே: நீங்கள் அப்படித்தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லவில்லை. அப்படிதான் இணையம், தொழில்நுட்பம் இயங்குகிறது என்கிறேன்

மியா : கூகுளுக்கு எனக்கும் நல்ல உறவு இல்லை என்பது உண்மை தான். அதனை மாற்ற முயன்று கொண்டே இருக்கிறோம். நான் நடத்துவதாக அறிவித்துக் கொள்ளும் ஒரு தளத்தோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதனை எந்த வகையிலும் நான் கட்டுப்படுத்தவில்லை. என்னைக் குறித்த விக்கிபீடியா பக்கத்திலும் மியாவின் அதிகாரப்பூர்வ தளம் அது என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தத் தளத்தை முடக்கச் சட்டப்படி பலமுறை முயன்று பார்த்தாகிவிட்டது. பலமுறை தளத்தை மூட அவர்கள் கேட்பதை தருவதாகப் பேசியும் ஆகிவிட்டது. ஒன்றும் மாறவில்லை.

நே: ஒவ்வொன்றாகப் பேசுவோம். எப்படி லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து நன்றாகப் படித்து டெக்ஸாஸ் பல்கலைக்குள் நுழைந்த நீங்கள் போர்ன் துறைக்குள் அகப்பட்டுக் கொண்டீர்கள்?

மியா: தாழ்வு மனப்பான்மை பாகுபாடு பார்க்காமல் எல்லாரையும் ஆட்கொள்கிறது என்று நினைக்கிறேன். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தீர்களா, பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தீர்களா என்பதை எல்லாம் பார்த்துத் தாழ்வுமனப்பான்மை வருவதில்லை. நான் குழந்தையாக இருக்கும்போது பருமனாக மட்டுமே இருந்தேன். கவர்ச்சிமிக்கவளாக அல்லது ஆண்களை வசீகரிக்கும் தகுதி கொண்டவளாக உணர்ந்ததே இல்லை. சிறு சிறு மாற்றங்களைச் செய்த போது, கல்லூரி முதல் ஆண்டில் நான் எடை இழக்க ஆரம்பித்தேன். பட்டப்படிப்பை முடித்த போது ஆளே மாறியிருந்தேன். கிட்டத்தட்ட 50 பவுண்ட் எடை குறைந்த போதும், என் மார்பகங்கள் குறித்தே அதீதமாகக் கவனம் செலுத்தினேன். இந்த எடையை எப்படிக் கிலோகிராம் கணக்கில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை

நே: அது உங்களின் உடற்தோற்றத்தையே மாற்றியிருக்கும் இல்லையா?

மியா: ஆமாம். என்னுடைய மார்பகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதே மிகப்பெரிய கவலையாக அரித்துக் கொண்டிருந்தது. எது இயல்பான அளவோ அந்தளவுக்கு என்னுடைய மார்பகத்தை மாற்ற முயன்றேன். அது ஒருவழியாக நடந்ததும், ஆண்களின் எல்லாக் கவனமும் என் மீது குவிந்தது. இதை எல்லாம் அதற்குமுன்பு எதிர்கொண்டதே இல்லை. இப்படித் தாழ்வுணர்ச்சியில் உழன்று கொண்டிருந்துவிட்டு முதன்முறையாகக் கிடைத்த அங்கீகாரம், புகழ் மொழிகள் என்னைப் பரவசம் கொள்ள வைத்தன. அதனை இழந்துவிடக்கூடாது என்று விரும்ப ஆரம்பித்தேன்.

நே: முதன்முறை சாலையில் யாரோ கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த உங்களைப் பார்த்து “போர்ன் தொழிலில் ஈடுபட விருப்பமா” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லாமல் எது இதற்குள் நுழைய உங்களை உந்தித்தள்ளியது?

மியா: அப்படி யாரும் கேட்கவில்லை. அதற்கு மாறாக, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. மாடலிங் பண்ண விருப்பமா. உங்க உடல்வாகு அப்படி அசத்தலா இருக்கு. நீங்க nude modeling பண்ணா பிரமாதமா இருக்கும்” என்று பேசினார்கள். நான் ஸ்டூடியோவிற்கு வந்தேன். மியாமியில் அந்த இடம் இருந்தது. அது பார்வைக்கு அவ்வளவு அழகாகக் காட்சியளித்தது. அவ்வளவு சுத்தமாக இருந்தது. வேலை பார்த்தவர்கள் எல்லாரும் அவ்வளவு கனிவாக நடந்து .கொண்டார்கள். அவர்களின் அறைகளில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் காணப்பட்டன. எனக்குச் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் எதுவுமே இல்லை. எதுவும் என்னைச் சங்கடப்படுத்தவில்லை. முதல் முறை போர்ன் படம் எடுக்கவைக்கவில்லை. “இந்த ஒப்பந்தத்தில் இங்கே கையெழுத்து போடு இன்னும் பிற” என்றே நகர்ந்தது. இரண்டாவது முறை தான் படம் பிடித்தார்கள்

நே: உலக அனுபவம் இல்லாத இளம்பெண்களை வேட்டையாடும் நபர்கள் பற்றிக் குறிப்பிட்டதால்கேட்கிறேன். மேற்சொன்னவை நடந்த போது உங்களுக்கு 21 . இப்போது உங்களுக்கு 26 வயதாகிறது. வயது. இந்தக் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கையில் ‘நான் இப்படிப் போய்ப் பலியானேனே’ என்கிற உணர்வு ஏற்படுகிறதா? அந்த 21 வயது பெண்ணை அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டாரகள், அவள் பாதிக்கப்பட்டவள் என்று தோன்றுகிறதா?

மியா: தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் கருவிகள் அப்போது அவள் வசம் இல்லை என்றே உணர்கிறேன். அவளிடம் பொய்களை அள்ளி வீசுகிறார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. பொய்கள் என்பதைவிட அவர்களுக்கு ஏற்றவாறு அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களுக்கு வேண்டியதை அவளைக்கொண்டு முடித்துக் கொண்டார்கள். உண்மையில் என்னைப் பாதிக்கப்பட்டவள் என்று கருதவில்லை. அந்த வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை. நான் எடுத்த முடிவுகள் மோசமான முடிவுகள் என்றாலும் அம்முடிவுகளை நான் தான் எடுத்தேன். பெண்கள் அணுகப்படுகிற விதம் மாறவேண்டும் என்று எண்ணுகிறேன்.

நே: பல கோடிகள் புரளும் துறை. இதன் உயிர்நாடியாகக் கேமிராவின் முன்னால் கலவியில் ஈடுபட வேண்டுமென்று பணிக்கப்பட்ட, அதற்கு ஒப்புக்கொண்ட இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் இருக்கிறார்கள். பல கோடி பேரால் பார்க்கப்படும் இந்தக் காணொளிகளின் உருவாக்கத்தை எந்தளவிற்கு உங்களால் கட்டுப்படுத்த இயலும்?

மியா : கிட்டத்தட்ட எதுவுமே இல்லை. அதிகபட்சம் இந்த மேலாடையை அணிய மாட்டேன் என்றுசொல்லலாம். எதைப் படம் பிடிக்கிறார்கள், அதன் உள்ளடக்கம், பேசுபொருள், எங்குப் படம்பிடிக்கப்படும் என்று எதையும் நாங்கள் முடிவு செய்ய முடியாது.

நே: இவற்றைப் பார்க்கும் வெளியாளாக இதில் ஈடுபடுபவரின் ஒப்புதல் அடிப்படையான, முக்கியமான கொள்கையாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பாத பாலியல் செயலை உங்களை அவர்கள் செய்யச் சொன்னால் ….

மியா: இல்லை. அவர்களால் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. இல்லவே இல்லை.

நே: சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுவாரசியமாகப் பேசியிருந்தீர்கள். இந்தப் பாலியல் காணொளிகளுக்காக இயங்குகையில், மொத்தமாக எல்லாமே இருண்டு போனதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்றும், திரும்பி பார்க்கையில் பல விஷயங்களைத் தெளிவாக நினைவுகூர முடியவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். இந்தத் துறைக்குள் ஆழமாகக் கால் பதிக்க ஆரம்பித்த போது உங்கள் மண்டையில் என்ன ஓடிக்கொண்டிருந்தது

மியா: அந்தப் பேட்டியின் போது எனக்கு அகப்படாமல் போன சொல்- அட்ரினலின். என்னுடைய அட்ரினலின் சுரப்பி அதீதமாகச் சுரந்து எனக்கு என்ன நடக்கிறது என்பதோ, நான் என்னவெல்லாம் செய்வேன் என்று கற்பனை செய்தேனோ அதனைத் தாண்டி என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன் என்று எண்ணுகிறேன். தலைக்கு ஏறிய அட்ரினலினால் எதையும் திரும்பிப்பார்க்கையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக நினைவுகூர முடியவில்லை.

நே: இதைப்பற்றியெல்லாம் இப்போது பேசுவது சங்கடமாக இருக்கிறதா?

மியா: ஆமாம் ஓரளவிற்கு

நே: நீங்கள் அரேபிய வம்சாவளியில், லெபனானில் பிறந்தவர். அரேபிய கலாசாரம் ஒட்டுமொத்தமாகப் பழமைவாதத்தில்ஆழமாகத் தோய்ந்து போன ஒன்று. அந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த படலத்தை உரித்து எறிந்து விட்டு இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டியிருந்ததா?

மியா: இருக்கலாம். இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதி எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு, என்னுடைய எல்லைகளை, பண்புகளைத் தாண்டி எதையேனும் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தில் என்னையே நான் அதிரவைக்கிற செயல்களில் ஈடுபட்டேன் என்று எண்ணுகிறேன்.

நே: இது உங்கள் குடும்பத்துக்குத் தெரியாதில்லையா?

மியா: நான் என்ன செய்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்ததும் என்னை மகளே இல்லை என்று தலைமுழுகி விட்டார்கள்.

நே: அது பெருந்துயரமாக இருந்திருக்கும் இல்லையா

மியா: இந்த உலகம் மட்டுமல்ல என்னுடைய குடும்பம், என்னைச் சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இந்தத் துறையை விட்டு வெளியேறிய பின்னர்த் தான் நான் இன்னமும் தனிமையானவளாக உணர்ந்தேன். சில தவறுகளை மன்னிக்க முடியாது என்று உணர்ந்துகொண்டேன் என்கிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.

நே: இந்தத் துறையின் இன்னொரு வகையான இயங்கியல் குறித்துச் சொல்லுங்கள். இந்த அதிகாரம், ஆதிக்கம், பணம். ஆபாசமான ஆண்கள், பெண்கள் குறித்துப் பேசினோம். உங்களுக்குத் தெரிந்தவரை இந்தத் தொழிலில் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பெண்கள் இருக்கிறார்களா?

மியா: நிச்சயமாக. இத்துறைக்குள் வருபவர்கள் நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர் இனிமையானவர், மரியாதைமிக்கவர், கண்ணியமானவர… விற்பனை, வரிப் பக்கம் பல பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எப்படி இந்தவேளைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று கேட்பேன். வாய்வழி செய்தியா? இல்லை நண்பர்களின் மூலமா என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

நே: இந்தத் துறையின் பணம் கொழிக்கும் பக்கம் அசாதாரணமானது இல்லையா? நீங்கள் இஸ்லாமிய ஆடையான ஹிஜாப் அணிந்து கொண்டு தோன்றும் காணொளி pornhub ல் வெளிவந்தது. அதன்மூலம் நீங்கள் நம்பர் 1 போர்ன் நடிகையாக ஆனீர்கள். நீங்கள் நடித்த காணொளிகளைப் பல கோடி பேர் கண்டார்கள். அந்த 12 காணொளிகளுக்கும் உங்களுக்கு மொத்தமாக 12,000 டாலர் மட்டுமே தரப்பட்டது. ஆனால், நீங்கள் பணியாற்றிய Bang Bros நிறுவனம் மற்றும் pornhub இரண்டும் கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டின. ஏன் இப்படி?

மியா: அது அப்படித்தான். எனக்கு மட்டும் இப்படிச் செய்தார்கள் என்றில்லை. எனக்கு மட்டும் மோசமான ஒப்பந்தமோ, மேலாளரோ கிடைத்தார் என்றில்லை. எனக்கு என்று மேலாளர், ஏஜென்ட் இருந்தார்கள். ஆலோசகர்கள் யாருமில்லை. யாருமே இல்லை.

நே: இல்லையா? உங்களுக்கு 21 வயது தான் ஆகியிருந்தது. குழந்தைப்பருவத்தைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு கடந்த உங்களுக்கு ஆலோசனை சொல்ல யாருமில்லையா?

மியா : இல்லை. மனித மூளை முழுமையாக வளர்ச்சியடைய 25 வயதாகும். என்னுடைய மூளையில் இருந்த முடிவெடுக்கும் பகுதி முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும், எது தவறு என்றெல்லாம் சொல்ல யாருமே இல்லை.

நே: இது போர்ன் தொழிலின் பண்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஒரு காணொளியில் தோன்றுவீர்கள். அது சாசுவதமாக இருக்கும். பல லட்சம் பேர் காண்பார்கள். எவ்வளவு நீங்கள் பிரபலம் ஆனாலும், நம்பர் 1 நாயகி என்று ஆனாலும் எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது. எகிறிக்கொண்டிருக்கும் உங்கள் புகழால் உங்களுக்கு ஒரு பயனுமில்லை.

மியா : ஆமாம். ஒன்றுமே கிடைக்காது. இன்றுவரை இந்த ஒப்பந்தங்கள் இப்படித்தான் போடப்படுகின்றன.

நே: இதைப்பற்றிப் பேசியே ஆகவேண்டும். நான் முதலிலேயே நீங்கள் ஹிஜாப் அணிந்து தோன்றிய காணொளி குறித்துப் பேசினேன். அதில் உங்களைத்தவிர மூன்று இளைஞர்களும் தோன்றினார்கள். அது பின்னர்க் கலவி காட்சியாக மாறுகிறது. அது உசுப்பேற்றக் கூடிய ஒன்று என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

மியா: “நீங்க என்னைக் கொல்ல பாக்குறீங்க” என்று நான் சொன்னேன். அவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.

நே: நீங்கள் ஏன் இதில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை..

மியா: அச்சுறுத்தல். நான் பயந்து போயிருந்தேன். நான் முடியாது என்று சொன்னால் அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்த போவது கிடையாது என்று எனக்குத் தெரியும். அப்படி அவர்கள் கட்டாயப்படுத்தினால் அது வன்புணர்வு. என்னை யாரும் கட்டாயப்படுத்திப் புணரப்போவதில்லை. ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது … மனந்திறந்து பேச படபடப்பாக இருந்தது. நீங்கள் ஒரு உணவகத்துக்குப் போகிறீர்கள். சிப்பந்தி “எப்படி இருக்கு சாப்பாடு எல்லாம்?” என்று கேட்கிறார். “சாப்பாடு நல்லாவே இல்லை” என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்ல யோசிப்பீர்கள் இல்லையா. நான் பயந்து போயிருந்தேன். பதற்றமாக உணர்ந்தேன்.

நே: ஆண்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிற இத்துறையில் அந்த ஆண்களுக்கும், 21 வயது இளம் நடிகைக்கும் இடையேயான அதிகார இயங்கியலில் விருப்பம் என்கிற கருத்தாக்கத்துக்கு அர்த்தமே இல்லை என்கிறீர்களா.

மியா : அதேதான் நான்கு ஆண் தயாரிப்பாளர்கள் இருக்கிற அறையில் நீங்கள் ‘என்னைக் கொல்ல பார்க்கிறீங்க’ என்கிற ரீதியில் எதையோ சொல்கிறேன். அவர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். அது எதோ ஒரு வகையில் உலுக்கிவிடுகிறது. அதற்குப்பிறகு பேசவோ, மீண்டும் எதையாவது சொல்லவோ வாயே வராது. நிறுவனத்தின் தலைவர், CEO எல்லாம் உட்கார்ந்து கொண்டு ஒப்பந்தத்தைப் படிக்கச் சொல்வார்கள். அவர்கள் முன்னே உட்கார்ந்து கொண்டு படிக்கையில் ஒன்றுமே மண்டைக்கு ஏறாது. யாரோ நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணமே பதற்றத்தை எகிற வைக்கும்.

நே: நீங்கள் படத்தளத்தை விட்டு வெளியேறியதும் இது பேரிடராக மாறப்போகிறது என்று மனம் எச்சரித்ததா?

மியா: அட்ரினல் தலைக்கேறி இருந்ததால் எனக்கு அப்போது ஒன்றுமே தோன்றவில்லை. அது வெளிவந்த நாள் என் மொத்த உலகமும் சின்னாபின்னம் ஆகியிருந்தது. நான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறேன் என்று என்னை அறிந்தவர்கள் யாருக்கும் தெரியாது என்பதால் தான் இதில் இயங்கிக்கொண்டு இருந்தேன். பலலட்சம் பெண்கள் தாங்கள் கலவியில் ஈடுபடுவதைப் படமாக எடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வெளியே வருவதே இல்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டு கொள்வதுமில்லை. அவர்கள் யாரென்று யாருக்கும் தெரிவதில்லை. என்னுடைய அசுத்தமான சிறு ரகசியம் என்னோடு மட்டுமே இருக்கும் என்பதாலேயே இதில் இருந்தேன். இந்தக் காணொளி எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது.

நே: அது படத்தைத் தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள் பார்வையில் பெரும் வெற்றி. எடுத்த உடனே லட்சக்கணக்கான பேர் பார்த்திருந்தார்கள்.

மியா: என்னை “குடுவைக்குள் ஒளிரும் மின்னல்” என்று அழைத்தார்கள்.

நே: உங்கள் வாழ்க்கையின் யதார்த்தமோ வேறு. ஹிஜாப் அணிந்த போர்ன் நட்சத்திரத்தின் முகம் உலகத்துக்கே தெரிந்திருந்தது.

மியா: ஆமாம் . நிறையக் கொலை மிரட்டல்கள் ஐ எஸ் ஐ எஸ் அனுதாபிகள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் இருந்து குவிந்தது. நான் தலை துண்டித்துக் கிடப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, ‘அடுத்து நீ தான்டி’ என்று நாள் குறித்தார்கள்.

நே: தனியாளாக இதை எதிர்கொண்டிருப்பீர்கள். உங்கள் குடும்பத்தோடு கூட இதைப்பற்றிப் பேச முடியாது என்பது உங்களை வெலவெலத்து போக வைத்திருக்கும் அல்லவா?

மியா : இல்லையில்லை. பயமாகத்தான் இருந்தது. ஆனால், அதனை நகைச்சுவையோடு தான் எதிர்கொண்டேன். அந்த மிரட்டலுக்கு வேடிக்கையாக இப்படிப் பதில் சொன்னேன், “என் மார்பகங்களை வெட்டாதவரை ஒன்றும் பிரச்சினையில்லை. அவை விலை மதிப்பில்லாதவை” .

நே: இது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் வாழ்க்கையே சின்னாபின்னம் ஆகியிருந்தது என்று சொன்னீர்கள். நீங்கள் செய்ததற்கு எந்தளவுக்குத் தனிப்பட்ட அளவில் பொறுப்பெடுத்துக் கொள்வீர்கள்.

மியா: 100 % நான் தான் பொறுப்பு. நான் எடுத்த முடிவு. அந்தத் துறை குறைகளால் ஆனது பெண்கள் இந்தக் குழிக்குள் விழாமல் தடுக்க நாம் எதையாவது செய்ய வேண்டும். ஆனால், இறுதியாக அந்த முடிவு என்னுடைய முடிவு.

நே: உங்களைப் பணம் கொட்டுகிற இயந்திரமாகத் தான் பார்த்தார்கள் இல்லையா. உங்களுக்கு என்று ஆலோசகர்கள், வழக்கறிஞர் என்று யாருமே இல்லையா?

மியா: அப்படித்தான் பார்த்தார்கள். 21 வயதில் எந்தப் பெண்ணுக்கு ஆலோசகர், வழக்கறிஞர் எல்லாம் இருக்கிறார் சொல்லுங்கள்.

நே: இது எவ்வளவு மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவே கேட்கிறேன். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் இப்போது சலனமில்லாமல் காணப்படுகிறார்கள். அதனைக் கடந்து வந்திருப்பீர்கள். ஆனாலும், அந்த மன உளைச்சலில் ரணங்கள் இன்னமும் இருக்கின்றனவா

மியா: ஆமாம். குறிப்பாகப் பொது இடங்களுக்குப் போகிற போது அந்த உளைச்சல் என்னை நெரிக்கிறது. என்னை அப்படியே மக்கள் வெறித்துப் பார்க்கிறார்கள். என்னுடைய ஆடைக்குள் துளைத்துக் கொண்டு பார்ப்பதாக உணர்கிறேன். எனக்குள் ஆழமான அவமானத்தை அது உண்டாக்குகிறது. நான் எப்படி உணர்கிறேன் தெரியுமா? எனக்கென்று இருந்த அக உரிமை (privacy) எதுவும் கிடையாது. நான் இவர்களுக்கு ஒரு கூகுள் தேடல் தூரம் மட்டுமே..

நே: இந்தப் புகைப்படங்களை நீங்கள் இணையத்தில் இருந்து அகற்ற முடியாது. அது உங்களுடைய மனதுக்கு உளைச்சலை தரும் ஒன்று என்றாலும் யாருடைய பார்வையில் இருந்தும் அவற்றைக் காணடிக்க முடியாது. இதே நிலைமைதான் பிற போர்ன் நடிகர்களுக்கும் இல்லையா?

மியா: நான் கண்முன் இதனைக் காண்கிறேன். சமீபத்திய நேர்முகத்திற்குப் பின்பு பலர் தொடர்பு கொள்கிறார்கள். பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண்கள், போர்ன் துறைக்குள் இழுத்து வரப்பட்டவர்களின் கேவல்கள் அவை. எப்படி இந்தப் பெண்களின் வாழ்க்கை சீரழிந்துபோயிருக்கிறது என்றும், இந்த ஒப்பந்தங்களால் ஆண்கள் மட்டும் எப்படிக் கொழிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவருகிறது. இவையெல்லாம் “நாம வெளிப்படையா பேசுனதால என்னைப்போலவே உணருற மத்த பொண்ணுங்க கூடப் பேச முடியுது” என்று தோன்றவைக்கிறது. என்னளவிற்கு ஆழமாகக் காயப்படாவிட்டாலும், பாதுகாப்புணர்வு இல்லாமல் தவிப்பது, தாங்கள் விரும்பாத ஒன்றை கட்டாயத்தின் பேரில் செய்வதைப் புரிந்து கொள்கிறார்கள்.

நே: உங்களுக்கு இந்தத் தளம் கிடைத்து இதைக்குறித்து எல்லாம் பேசுகிறீர்கள். கடந்த காலத்தில் இருந்து வேறுபட்டுச் சமூகம் எப்படிப் போர்னோகிராபியை பார்க்கிறது என்பதையும், அதில் ஈடுபடுபவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் மாற்ற முனைகிறீர்கள் எனக்கருதலாமா ?

மியா : பெண்கள் எப்படிப் போர்ன் துறைக்குள் இழுத்து வரப்படுகிறார்கள் என்பது மாற்றப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். பெண்களாகவே விரும்பினால் மட்டுமே உள்ளே வர முடியும், அவர்களை யாரும் அழுத்தம் தந்து இழுத்து வரமுடியாது என்று நிலைமை மாற வேண்டும். அங்கேயே, அதே இடத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று கட்டாயப்படுத்த இயலாது. அதனை ஒரு வழக்கறிஞர் படித்துப் பார்க்க வேண்டும், பொறுமையாக வீட்டில் சில நாட்கள் படித்துப் பார்த்துவிட்டு ஒப்புக்கொள்ள வசதி வேண்டும்.

நே: உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகள் ‘போர்ன்மயமாக்த்தில்’ சிக்குண்டு கிடக்கின்றன. அதுவும் குறிப்பாக இளைஞர்கள் இவற்றில் மூழ்கிப்போவது ஆண், பெண் இருதரப்புக்கும் இடையேயான உறவை, அணுகும் விதத்தைப் பெருமளவில் அரித்து அழிக்கிறது என்கிற பார்வை ஒரு தரப்பிடம் நிலவுகிறது . உங்களின் பார்வை என்ன ?

மியா : நிச்சயமாகப் போர்ன் உறவுகளைச் சீர்குலைக்கிறது. போர்ன் வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதனையே தங்கள் வாழ்வினில் வரும் பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பது அபத்தமானது. காணொளியில் காண்பிக்கப்படுவது உண்மையில்லை. அவ்வளவு கச்சிதமானவர் யாருமில்லை. ஒரு புதன்கிழமை இரவு இத்தகைய நம்ப முடியாத செயல்களைக் காதலிக்கும் ஒருவரிடம் யாராலும் செய்ய முடியாது.

நே: நாம் நிறையப் பேசிவிட்டோம். கரடுமுரடான பயணமாக இருந்திருக்கும். மிகக் குறுகிய காலம் இருந்த ஒரு துறையில் இயங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்னமும் உலா வருவதைக் கடந்து வேறுபட்ட வாழ்க்கையை, உங்களைப் போர்னில் ஈடுபட்டவர் என்கிற கோணத்தில் இருந்து பார்க்காத உறவுகளை அடைந்திருக்கிறீர்கள் அல்லவா?

மியா: என்னைப்பற்றி எதுவுமே கேள்விப்பட்டிருக்காத ஒரு ஆணை கண்டடைந்தது பெரும்பேறு. அது அற்புதமானது. நாங்கள் பேச ஆரம்பித்த பிறகு, இதைக்குறித்துச் சொன்னேன். “நாம் பேச ஆரம்பித்த பிறகு உன்னைப்பற்றித் தேடினேன். 5 மில்லியன் பேர் பின்தொடரும் உன்னைப்பற்றிக் கூகுள் செய்யாமல் இருக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை” என்று அவர் சொன்னார். என்னுடைய கடந்த காலத்திற்குப் பிறகு டேட்டிங் செய்வது கடினமானதாக இருந்தது. ஆண்கள் யாரும் கிடைக்கவில்லை என்றல்ல பொருள். அதற்குள் மூழ்கிப்போய் இருக்காத ஒருவரை கண்டடைவது சவாலானதாக இருந்தது. புரியும் என்று எண்ணுகிறேன்.

நே: 21 வயது மியாவை ஃபுளோரிடா நகரத்தில் நிறுத்தி ‘நீங்கள் அழகாக இருக்கீங்க நீங்க அட்டகாசமா தெரியுறீங்க. எங்ககூடச் சேர்ந்து வேலை செய்வீங்களா’ என்று ஒரு இளைஞன் நிறுத்தி பேசுகையில், மியாவிடம் நீங்கள் பேச முடியும் என்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்வீர்கள்?

மியா: உன்னுடைய பர்ஸில் இருக்கும் ஆயுதம் காத்துக்கொண்டிருக்கிறது. அதனை உபயோகப்படுத்து. அங்கிருந்து ஓடிவிடு மியா

நே: மியா காலிஃபா, hardtalk நிகழ்வில் உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல.

மியா : என்னை அழைத்தமைக்கு நன்றி!

தமிழில் : பூ.கொ.சரவணன்

Are Feminists lazy and unwilling to Work?


I had seen many of friends sharing some post which went on to state that Feminism is also about criticising women who are lazy enough and eating on their Husband’s Income. It had a so called Sympathetic statement towards women before that. These Kind of posts which try to be neutral does utter disservice on the quest towards equality. For most of working means it is a reference to white collar jobs or men in informal sector. But, what is unaccounted or not voiced out is unpaid labour of women which drives the household. It is simply made as part of motherhood and doing things out of love.

The agriculture sector which employs most of India’s population is characterised by feminisation and fragmentation of agriculture. Working women across various informal sectors hardly catches our imagination and lopsided views. You can go through this for an idea:

https://ruralindiaonline.org/articles/sainath-womens-work-exhibition/

Further, let’s take this lazy women conception. Almost 4/5ths of of Indian women get married and move out to their Husband’s home. For most of them staying idle is never a choice. There is close to 10% drop in women working in formal sector over last decade in India. Most of them dropped out due to the reason they have children to pamper and family to take care. The nuclear families and burden of motherhood hardly offers a choice for women of India.

The urban, elite, non working maid dependent Women would hardly be .05 % of population. The Women are paid less or close to nothing not because they work less, but, because they are born as Women. The glaring dominant, all pervasive exploitation of labour of mothers and maids is a deeper point of concern. And Please dont jump here in comment box with golden quotes like, ‘I know men who work like anything and build their family’ and anecdotes. Men are economically or at least on a societal/cultural level are recognised for their work. For women they re denied or attributed to their motherhood

இந்தியாவிற்கான பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவிற்கு தாரைவார்த்து துரோகம் செய்தாரா நேரு?


நேரு காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்தது. சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் தராமல் இந்தியா அதில் இணைவது என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று நேரு அடம்பிடித்ததாக ஒரு கருத்து பரவலாகப் பரப்பப்படுகிறது.

 

மெய்ப்பொருள்:

சீனாவின் ஐநா நுழைவு வரலாறு இடியாப்ப சிக்கலானது. சீனாவில் உள்நாட்டுப் போர் ஒன்று நடைபெற்றது. சியாங் ஷேக் தலைமையிலான சீனக்குடியரசு அமெரிக்க ஆதரவோடு உலகப்போருக்கு பின்னர் ஆண்டுக் கொண்டிருந்தது. அதனை எதிர்த்து மாவோ தலைமையிலான கம்யூனிச கட்சியினர் போராடி வென்றார்கள். அவர்கள் தைவான் தவிர்த்த ஒட்டுமொத்த சீனாவையும் தங்கள் வசப்படுத்தினார்கள். இவர்களுக்குச் சோவியத் ரஷ்யாவின் ஆதரவு இருந்தது. ஆனால், தைவானில் தஞ்சம் புகுந்த சீனக்குடியரசு தான் ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவாக இருந்தது. மேலும், பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாகவும் இருந்தது. அதன் இடத்திற்கு மாவோ தலைமையிலான சீன மக்கள் குடியரசை கொண்டுவர வேண்டும் என்கிற சோவியத் ரஷ்யாவின் முயற்சிகள் அமெரிக்காவால் முறியடிக்கப்பட்டது.

Image result for nehru and mao

வீட்டோ எனப்படும் ஒரு எதிர் வாக்கு ஒட்டுமொத்த தீர்மானத்தையும் தோற்கடிக்கும் என்கிற வினோதமான வாக்கு முறையைப் பாதுகாப்புக் கவுன்சில் பின்பற்றியது இதற்கு முக்கியக் காரணம். கடும்கோபத்தோடு 1950 ல் ஐநாவை விட்டு சோவியத் ரஷ்யா சிறிது காலத்திற்கு விலகியது. ஒரு வழியாக, ரிச்சர்ட் நிக்சனின் காலத்தில் அமெரிக்கா சீன மக்கள் குடியரசோடு நல்லுறவு பாராட்டியது. இதனையடுத்து ஐநாவில் அதிகாரப்பூர்வ சீனாவின் இடத்தை 1971-ல் சீன மக்கள் குடியரசு பெற்றுக்கொண்டது.

இப்போது நேரு பாதுகாப்புக் கவுன்சிலில் சீனாவிற்கு இடமில்லாமல் நிரந்தர இடத்தைப் பெற மறுத்தார் என்கிற கூற்றை எடுத்துக்கொள்வோம். இந்தக் கருத்தை பாஜகவினர் மட்டும் எடுத்துரைக்கவில்லை. சசி தரூர் தன்னுடைய ‘Nehru-The invention of India’ நூலில் இதே கருத்தை முன்வைக்கிறார். இந்திய அயலுறவு அதிகாரிகள் ஆகஸ்ட் 1950-ல் இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் இடத்தைச் சீனாவிற்குப் பதிலாக எடுத்துக்கொள்ளலாம் என்று மறைமுகமாக அமெரிக்கா அழைத்தது. அதனை நேரு ஏற்க மறுத்தார், இது பெரும்பிழை என்று கோப்புகளைப் பார்த்த அயலுறவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சசி தரூர் எழுதுகிறார்.

அடுத்து இன்னொரு முறை, 1955-ல் சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் செய்த போது (கவனிக்க அமெரிக்கா இல்லை) இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் ஆறாவது நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று யோசனை இருப்பதாகத் தெரிவித்தது. இதனையும் இந்தியா ஏற்கவில்லை. ஏன் என்று விரிவாகப் பார்ப்போம்.

முதலில் அமெரிக்கா சீனாவின் இடத்தைப் பாதுகாப்புக் கவுன்சிலில் எடுத்துக் கொள்ள வழங்கிய வாய்ப்பு. இது பரிந்துரைக்கப்பட்டது 1950-ல். அதாவது காஷ்மீர் பிரச்சினை ஐநாவில் இந்தியாவின் உள்நாட்டு சிக்கலாக அணுகப்படாமல், இந்திய-பாகிஸ்தான் பிரச்சினையாகப் பிரிட்டன், அமெரிக்காவால் மாற்றப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வு. ஆகஸ்ட் 24 1950-ல் சீனாவின் இடத்தை இந்தியா எடுத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சிலர் பரிந்துரைப்பதை அமெரிக்காவின் தூதுவராக இருந்த விஜயலட்சுமி பண்டிட் நேருவிற்குத் தெரியப்படுத்துகிறார்.

இது இந்தியாவிற்கும்-சீனாவிற்கும் இடையே மோதலை மூட்டிவிடும், மேலும், ஐநா சபையை விட்டு சோவியத் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வெளியேறுவதும், ஐநா சபையே கலைவதற்கும் இது வழிகோலும் என்றும் நேரு அஞ்சினார். இந்தியாவிற்கு ஐநாவில் நிரந்தர இடம் வேண்டும், ஆனால், இப்படி அமெரிக்காவின் காய் நகர்த்தல் ஐநா சபைக்கும், உலக அமைதிக்கும் கேடாக முடியும் என்கிற அச்சம் நேருவிற்கு இருந்தது.

பேராசிரியர் நபரூன் ராய் வேறு சிலவற்றைக் கவனப்படுத்துகிறார். எகிப்திய தலைவர் நாசருடன் நேரு பேசுகிற போது, ‘சீனா பல லட்சம் மக்களை இழப்பதை குறித்து எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்னோடு உரையாடிக்கொண்டிருந்த மாவோ வெகு சாவகசமாகச் சில கோடி மக்களை இழப்பதற்கு நாங்கள் தயார்’ என நினைவுகூர்வதைக் கவனப்படுத்துகிறார். பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும், உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதும் சீனாவின் ஆக்ரோஷத்திற்குக் காரணம் என்று நேரு கருதினார்.

சீனா இந்தியாவின் அயலுறவு கொள்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும், அதனோடு உரையாடல், நல்லுறவு, அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிப்பதன் மூலமே ஐநா இயங்க முடியும் என்று நேரு கருதினார் என்கிறார் 1949-1962 காலத்தைய இந்திய சீன உறவுகள் குறித்து ஆய்வு செய்த ஆண்டன் ஹார்டர்.

மேலும், ஒருவேளை இந்தியா அமெரிக்கா வழங்குவதாகச் சொன்ன பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை ஏற்றிருந்தாலும் இதனைச் சோவியத் ரஷ்யா வீட்டோ செய்திருக்கக் கூடும். (ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்குள் வந்து விட்டது)

ஜவகர்லால் நேரு லண்டனில் 1960-ல் நிகழ்த்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், ‘உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீன மக்கள் குடியரசு ஐநாவின் பகுதியானால் உலகின் பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் எளிதாகிவிடும்’ என்றார். தன்னுடைய முதலமைச்சர்களுக்கு நேரு 1950-ல் எழுதிய கடிதத்தில், ‘….உலகின் அதிகாரச்சமநிலை புதிய சீனாவின் வருகைக்குப் பிறகு கிழக்கில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் மாறியிருக்கிறது. இதனை மேற்கத்திய நாடுகள் உணர ஆரம்பித்துள்ளன. இந்த உண்மையை உணர்வது துரிதமாக நடப்பது பேரிழப்புகளைத் தவிர்க்கும்’ என்று அக்கறையோடு எழுதினார்.

Image result for nehru and china security council

ஜனவரி 1950-ல் சீன மக்கள் குடியரசை ஐநாவில் சேர்க்காத போக்கை கண்டித்துச் சோவியத் ரஷ்யா ஐநாவை விட்டு வெளியேறி இருந்தது. இதே காலகட்டத்தில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா பங்குகொண்ட கொரியப்போரில் ஆரம்பத்தில் இந்தியா அமெரிக்காவிற்குச் சாதகமாக இயங்கியது. போக, போக நிலைமைக்கு ஏற்ப தன்னுடைய அமெரிக்க ஆதரவை இந்தியா குறைத்துக்கொண்டது. கொரியப்போர் குறித்த ஐநாவின் மூன்றாவது தீர்மானம் முழுக்க, முழுக்க அமெரிக்காவிற்குச் சாதகமாக இருந்த போது அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ரஷ்யா மீண்டும் ஐநாவிற்கு வந்து சேர்ந்திருந்தது. இத்தகைய நிலையில் இந்தியா அமெரிக்காவின் அழைப்பை ஏற்றிருந்தால் அது முழுக்க அமெரிக்காவின் கையாளாக மாறியிருக்க வேண்டியிருக்கும். மேலும், சோவியத் ரஷ்யா, சீனாவின் பகையை ஒருங்கே பெற்றுக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். சர்வதேச அமைதியை குலைக்கிற செயலில் இந்தியா ஈடுபடாது என்று நேரு உறுதியாக இருந்தார்.

இதே காலகட்டத்தில் தான் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்க்க அமெரிக்கா அழைத்தது. காஷ்மீர் பிரச்சினை ஐநாவிற்குச் சென்ற போது, விஜயலட்சுமி பண்டிட் ‘இந்தியா ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்றால் காஷ்மீரை கைகழுவ வேண்டியிருக்கும் போல’ என்று 2 செப்டம்பர் , 1949-ல் எழுதியிருந்தார். (விஜயலட்சுமி பண்டிட் தாள்கள் கோப்பு எண். 59, 47, NMML). ராணுவ ரீதியாகத் தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருப்பது புதிதாக உதித்த ஒரு நாட்டிற்கு உகந்தது அல்ல என்பது நேருவின் அக்கறையாக இருந்தது என்பது ராணுவ, அயலுறவு வரலாற்று ஆய்வாளர்களின் பார்வை.

சமீபத்தில் வந்த தி இந்து செய்தித்தாளின் பழைய கட்டுரையொன்றை மாலன் மேற்கோள் காட்டி நேரு பொய் சொல்லியிருக்கிறார் என்று எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நேருவிடம் உறுப்பினர் பரேக் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதற்கு ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா? என்கிற கேள்விக்கு ‘அப்படி எந்த அழைப்பும் வரவில்லை’ என்று நேரு செப்டம்பர் 1955-ல் உறுதிபட மறுத்திருக்கிறார். இதனைத்தான் ஏ.ஜி.நூரனி விஜயலட்சுமி பண்டிட் தாள்களை வாசித்து எழுதிய கட்டுரையைக் கொண்டு பொய்யர் நேரு என்கிற ரீதியில் மாலன் எழுதிச் செல்கிறார். (The Nehruvian approach)

என்ன நிகழ்ந்தது 1955-ல்?

சோவியத் ரஷ்யாவிற்கு நேரு பயணம் போயிருந்த போது அந்நாட்டின் பிரீமியர் புல்கானின் இந்தியாவை ஐநாவின் ஆறாவது பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராகச் சேர்க்க எண்ணம் என்கிறார். நேரு அதனை ஏற்க மறுக்கிறார். இதற்குப் பிந்தைய நாடாளுமன்ற விவாதத்தின் போது இதை அப்படியே நேரு மறைத்துவிட்டார் என்பது மாலன் முன்வைக்கிற பார்வை.

அந்த உரையாடலின் சில பகுதிகளை மட்டும் மாலன் பதிவு செய்கிறார். ஆனால், சோவியத் ரஷ்யா எப்படிச் சாதுரியமாக இந்தியாவைக் குழப்ப பார்த்தது என்பதையும், அதில் இருந்து நேரு எப்படிச் சாமர்த்தியமாகத் தப்பினார் என்பதையும் விளக்கும் உரையாடலின் பகுதியை மாலன் அறியாமல் விட்டுவிட்டார். சர்வபள்ளி கோபால் எழுதியிருக்கும் Jawaharlal Nehru; எனும் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றின் Volume II; பக்கம் 248-ல் வரும் “He (Jawaharlal Nehru) rejected the Soviet offer to propose India as the sixth permanent member of the Security Council and insisted that priority be given to China’s admission to the United Nations” என்கிற வரியை பிடித்துக் கொள்கிறார். சீனாவிற்காக இந்தியா ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்தது என்கிற பார்வையை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார் மாலன்.

Image result for nehru bulganin

இப்போது புல்கானின், நேரு இடையே நடந்த உரையாடலை பார்ப்போம்:

புல்கானின்: “நான்கு சக்திகள் மாநாடு குறித்த உங்களுடைய பரிந்துரையைக் கணக்கில் கொண்டு தேவையான நடவடிக்கையை எடுப்போம்.உலகளவில் நிலவி வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், பதற்றத்தை தணிக்கும் பொருட்டும், பிற்காலத்தில் இந்தியாவைப் பாதுகாப்பு கவுன்சிலின் ஆறாவது உறுப்பினராகச் சேர்க்கலாம் என்று எண்ணுகிறோம்…

நேரு: அமெரிக்காவில் சிலர் ஏற்கனவே சீனாவிற்குப் பதிலாக இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்று பரிந்துரைத்ததைப் புல்கானின் அறிந்திருக்கலாம். அது எங்களுக்கும், சீனாவுக்கும் இடையே பகையைத் தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டது. அதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். அதேபோல, சில இடங்களைப் பிடிப்பதற்க வேகமாக முந்திக்கொண்டு செல்லவும் விரும்பவில்லை. அது பிரச்சினைகளை உண்டு செய்வதோடு, இந்தியாவையே சர்ச்சைக்கான பேசுபொருளாக மாற்றக்கூடும். இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் இணைக்க வேண்டுமென்றால், ஐநாவின் சாசனத்தைத் திருத்தி எழுத வேண்டும். அதற்கு முன்பு சீனாவை அனுமதிப்பது குறித்த சிக்கலை முதலில் தீர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். முதலில் சீனாவை சேர்ப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். சாசனத்தைத் திருத்துவது குறித்துப் புல்கானின் அவர்களின் கருது என்ன? அதனைத் திருத்த இது சரியான நேரம் இதுவல்ல என்று நாங்கள் எண்ணுகிறோம்.

புல்கானின்: நாங்கள் இந்தியாவைப் பாதுகாப்புக் கவுன்சிலில் சேர்ப்பது குறித்து உங்களின் கருத்துக்களை அறியவே இப்படிப்பட்ட பரிந்துரையை முன்வைத்தோம். இது அதற்கான நேரமில்லை, காலம் கனிந்து வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதற்கு ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொன்றாகக் காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

மேற்சொன்ன உரையாடலில் சீனாவை நேரு அதிகமாக முன்னிறுத்துவது நமக்கு உறுத்தலை தரலாம். ஆனால், சாசனத்தைத் திருத்துவது கவனத்துக்கு உரியது. சாசனத்தைத் திருத்த ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து உறுப்பினர்களோடு பொதுக்குழுவின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இது சாத்தியமில்லை என்பது நேருவுக்கு நன்றாகவே தெரியும். சோவியத் ரஷ்யா இந்தியா அமெரிக்கா பக்கம் சாய உள்ளதா? அது பாதுகாப்புக் கவுன்சிலில் தான் மட்டும் இடம்பெற கணக்கு போடுகிறதா என்று ஆழம் பார்த்தது. நேரு கச்சிதமாகச் சிக்காமல் தப்பினார். நேரு அயலுறவு சார்ந்த விஷயங்களை உள்நாட்டு பிரச்சினையாக்கி வாக்குச் சேகரிப்பதில் ஈடுபடாத மகத்தான தலைவர் என்று அதே கட்டுரையில் நூரனி புகழாரம் சூட்டுகிறார். இதை மாலன் வசதியாக மறந்துவிடுகிறார்.

உரையாடலின் போது வருகிற ஒரு பரிந்துரை ஏற்கப்படாத போது, அது நம் நாட்டை ஆழம் பார்க்கிற ஒன்றாக இருக்கிற போது அதனைப் பொதுச்சபையில் வைப்பது தேசத்தின் நலனிற்கும், அயலுறவு கொள்கைக்கும் மாறானதாக முடியக்கூடும் என்பது இந்திய அயலுறவு கொள்கையின் தந்தையான நேருவுக்கு நன்றாகத் தெரியும். நேருவுக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பு அமெரிக்காவின் நலனிற்கு உகந்ததாக இருந்திருக்கும். அதனால் சீனா, ரஷ்யாவின் பகைமையோடு வீட்டோவால் பாதுகாப்புக் கவுன்சில் இடமும் இந்தியாவிற்குக் கிடைக்காமல் போயிருக்கும். இன்னொரு முறை ரஷ்யா வாய்ப்பை வழங்கிய போது, அது கண்துடைப்பாகவே இருந்தது என்பதையும், அதை நிறைவேற்றுவது அப்போதைக்குச் சாத்தியமில்லை என்பதையும் இந்தியா நன்றாகவே உணர்ந்திருந்தது.

இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்கிற அக்கறை நேருவிற்கு இருந்தது. அதே வேளையில், ஐநாவை கூறுபோட்டு, தன்னுடைய சீன, ரஷ்ய உறவுகளைக் கெடுத்துக்கொண்டு இன்னொரு போருக்கான சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்கிற தீர்க்கமும் நேருவிற்கு இருந்தது. இந்தச் சிக்கலான வரலாற்றை ‘நேரு பொய்யர்’, ‘சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சில் இடத்தை நேரு தாரைவார்த்து விட்டார்’ முதலிய அரைகுறை வரிகளால் விளங்கிக்கொள்ள முடியாது. ஐநாவில் சீனா அதன் தோற்றத்தில் இருந்தே இடம்பெற்று இருந்தது. எந்தச் சீனா என்பது தான் சிக்கலாக இருந்தது. சீனாவை தூக்கி எறிய வேண்டும் என்கிற அமெரிக்காவின் கணக்கிற்கு இந்தியா பலியாகாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டது. சோவியத் ரஷ்யா சொன்னதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை இந்தியா தெளிவாக உணர்ந்திருந்தது. சாசனத்தைத் திருத்த தான் தயார் என்று புல்கானின் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், பிற்காலத்தில் இந்தியாவை ஆறாவது உறுப்பினராக ஆக்குகிறோம் என்கிற வரியின் ராஜதந்திர சதுரங்கத்தில் நேரு வெட்டுப்படாமல் தப்பினார். நேரு காஷ்மீர், சீனாவில் பிழைகள் புரிந்தார், அவர் அவற்றில் சரியாகவும் காய்களை நகர்த்திய தருணங்கள் உண்டு. வரலாறு சிக்கலானது மட்டுமல்ல, வெறுப்பினால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றல்ல.

காண்க:

Not at the Cost of China: India and the United Nations Security Council, 1950

In the Shadow of Great Power Politics: Why Nehru Supported PRC’s Admission to the Security Council

The Nehruvian approach

UN seat: Nehru clarifies

சமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி


‘சமையல்கட்டு சமத்துவத்திற்கான ஆரம்பப் பள்ளி’ .
 
பெண்ணைத் தாண்டி வருவாயா?!’
நினைவுகள் எங்கெங்கோ அலைமோதி நிற்கின்றன. பெண்களைத் தாண்டுவது என்பதை விட, பெண்களோடு இணைந்து பயணிப்பதே சரியான சொல்லாடல் என எண்ணுகிறேன்.
 
பெண்ணியம் என்பதை அந்நியமான, அவதூறு செய்யும் சொல்லாகவே இங்கே பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்துவதைக் காண நேரிடுகிறது. பெண்ணியம் என்ன என்பதை ஆண்களே இங்கே வரித்துக் கொள்கிறோம். பெண்களின் குரல்களைக் கூடக் கேட்க விரும்பாத நாம், எப்படி நம் குழந்தைகளுக்கு நம்பிக்கை மிக்க எதிர்காலத்தைப் பரிசளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.
 
பெண்ணியம் என்பது ஆண்களைப் பற்றியது அல்ல. அது ஆண்களை வெறுப்பதோ, அவர்களைத் துன்புறுத்துவதோ அல்ல. அது ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் அல்ல. அது ஆண்களின் கருத்துகளை மூடி மறைப்பதோ, அவர்களின் தேவைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே இல்லை. மேற்சொன்ன அநீதிகள் பெண்களுக்கு இழைக்கப்படாமல் இருப்பதற்கான தேடலும், பயணமுமே அது. பெண்ணியவாதிகள் ஏன் ஆண்களை வெறுக்கிறார்கள் என்று கேள்விகளைப் பல முறை யோசித்து இருக்கிறேன்.
 
பல்வேறு தருணங்களில் அது அவர்களின் வலியில் இருந்தும், தன்னைப்போன்ற இன்னொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்த எதையும் செய்ய முடியவில்லையே என்கிற ஆற்றாமையின் வெளிப்பாடு. மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதன் அடையாளம் அது. பெண்களின் பேசாத பேச்சுக்களை நாம் கேட்க முயன்று இருக்கிறோமா? பாலியல் வன்முறை நிகழ்த்தப்படும் பெண்ணுக்கு தானே அதன் பெரும்பான்மை குற்றவுணர்ச்சியைத் தருகிறோம்? எதோ ஒரு பெண் காதலை ஏற்க மறுத்ததற்கு வெட்டிக் கொல்லப்பட்டால் ஏன் பெண்களைப் பார்த்து ஒழுங்கா இரு, பத்திரமாகப் போ என்று மட்டும் சொல்கிறோம். என் போன்ற ஆண் பிள்ளைகளை நோக்கி, ‘உன்னைப்போல ஒரு பையன்தான் இப்படிப் பண்ணினான். நீ அப்படிப் பண்ணாம இரு’ என்று சொல்ல நமக்கு வாய் வருவதே இல்லையே ஏன்?

Image may contain: 3 people, including பூ.கொ. சரவணன், people smiling, text

மீசை என்பது ஆண்மையின் அடையாளமாகப் பலரால் இங்கே பார்க்கப்படுகிறது. ஆண்மை என்பது என்ன முகத்தில் முறுக்கி விட்டுக்கொள்ளும் மீசையில் தான் வந்து விடுகிறதா என்ன ? பிள்ளையைப் பெற்று விட்டால் அவன் ஆண் மகன். இது இன்னுமொரு வரையறை. பெண்ணை அடக்கி வைத்திருந்தால் அவனும் ஆண் மகன். அப்படியே உடம்பின் தசைகளை முறுக்கி கலக்கினால் அவனும் ஆண்மை உள்ளவன். ஆண்மை என்பதை ஆணாதிக்கத்தின் அளவுகோலாகக் கொண்டிருக்கிறோம் இல்லையா நாம் ?
 
பொம்பிள பொண்ணு போல அழாதே/வெட்கப்படாதே/பயப்படாதே போன்ற பதங்கள் என் காதுகளில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அழுகை, வெட்கம், பயம் எல்லாம் மானுட உணர்ச்சிகள் தானே? அவற்றை ஏன் ஒரு பாலினத்தின் பண்பாக, இழிவான அடையாளங்களாக மாற்ற முனைகிறோம்? ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என்று வகுப்பறைகளைக் கூறு போட்டுக்கொண்டு இருக்கும் வரை புரிதலும், இணக்கமும் சாத்தியமே இல்லை.
 
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பணிக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை 10% அளவுக்கு வீழ்ந்து இருக்கிறது. வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்ளப் பெரும்பாலான சமயங்களில் ஆண்களாகிய நாம் முன்வருவதே இல்லை. நம்முடைய அழுக்கான ஆடைகள், உண்ட தட்டின் எச்சில் சுவடுகள், பெற்ற பிள்ளையின் கழிவுகள் அனைத்தும் பெண்களுக்கு உரியவை. குடும்பத்தலைவன் என்கிற பட்டம் மட்டும் ஆணுக்கு உரியவையா? இந்தியாவில் 90% க்கும் மேற்பட்ட குடும்பக் கட்டுப்பாடுகளைச் செய்து கொள்வது பெண்கள் தான். ஆண்கள் ஏன் அறுவை சிகிச்சை கத்தியின் சுவடு கூடப் படாமல் தள்ளி நின்று கொள்கிறோம்? பயமா? இல்லை, பொண்ணே பாத்துப்பா என்கிற விட்டேத்தி மனமா?
 
சமையல்கட்டு என்பது சமத்துவத்திற்கான ஆரம்பப் புள்ளி என்பதை என் தந்தையே புரிய வைத்தார். வீட்டுப்பணிகளைப் பகிர்ந்து கொள்வதால் ஒன்றும் ஆணுக்கு இழுக்கு வந்து விடுவதில்லை. அது ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான பண்பு என்கிற புரிதல் நமக்கு ஏற்பட வேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மையப்படுத்தியே நம்முடைய பார்வைகள், பிம்பங்கள் இருக்கின்றன. வன்புணர்வு, பாலியல் சீண்டல், சம சொத்துரிமை மறுப்பு, கற்பு எனும் கற்பிதம் கொண்டு கட்டுப்படுத்தல், கல்வி மறுப்பு, உரையாடல் துறப்பு என்று பல தளங்களில் பெண்களின் உரிமைகளை, நியாயங்களை மறுக்கிறோம். அவர்களின் கதைகளை, பக்கத்தை நெரிக்கிறோம். செவிமடுத்து கேட்க மறுக்கிறோம். இதை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் செய்கிறார்கள்.
 
பெண்ணை வர்ணிக்கையில் மீண்டும் மீண்டும் கலவிக்கான, புற அழகால் மட்டுமே எடைபோடப்பட வேண்டிய ஒருவராகப் பண்டைய இலக்கியங்கள் துவங்கி தற்காலப் பாடல்கள் வரை பலவும் பேசுகின்றன. பெண் என்றால் தெரியாத இடை, பாய்ந்தோடும் கண்கள், பெருத்த மார்பகம் எனக் கவிஞர்களின் கற்பனை மிக அதீதமாகக் குடி கொண்ட இடம் என்று பெண்ணின் உடலைச் சொல்லலாம். பெண்ணுடல் மீதான கவர்ச்சி ஒரு தரப்பு என்றால் பெண்ணுடல் வெறுப்பு பல்வேறு மதங்கள், பக்தி இயக்கங்களில் கலந்திருந்தன.
 
பெண்ணின் உணர்வுகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றால் அணுகுவது அரிதாகவே இருக்கிறது. பெண் மீதான வன்முறையின் மையம் ஆண் என்பவன் பெண்ணை ஆளப்பிறந்தவன் என்கிற எண்ணத்திலும், பொண்ணுன்னா போடணும் மச்சி என்கிற உசுப்பேற்றல்களிலும் ஒளிந்திருக்கிறது. ஒரு பெண்ணை அவளுடைய புற அழகைத் தாண்டி தரிசிக்க முடியாத ஆணின் தட்டையான பார்வை பெரிதாக மாறிவிடவில்லை.
 

Image may contain: 3 people, people smiling, text

பெண்களை அழகு சார்ந்து அணுகுவதும், பெண்ணியவாதிகள் என்றோ, பொண்ணுங்கனாவே இப்படித்தான் என்றோ வெறுப்பதும் சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கிறது. பெண்ணை உடைமைப்பொருளாக மாற்றுகிறது. பொருளாதார, சமூக விடுதலையைப் பெண்கள் சாதிக்கும் இக்காலத்தில் இப்பார்வைகள் கேள்விக்கும், அக்னி பரீட்சைக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது.
 
பெண் விடுதலை பாலியல் சார்ந்தது மட்டுமல்ல அது சிந்தனை, பொருளாதாரம், செயல்பாடு சார்ந்த ஒன்று. அது சார்ந்து இயங்கும் பலர் மஞ்சள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. உண்மையான மானுட விடுதலை சாதியமைப்பு, ஆணாதிக்க, மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இயங்குவதிலும் இருக்கிறது. பெண்ணியம் என்பது பெண்களால், பெண்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக பள்ளி அல்ல. அது ஆண்களின் இருப்பையும், செயல்பாட்டையும் கோருவது.
 
பெண்கள், ஆண்கள் இருதரப்பிடமும் சொல்லிக்கொள்ளவும், பரிமாறிக்கொள்ளவும் பல்வேறு கதைகளும், நெகிழ்ச்சியான உணர்வுகளும், கண்ணீரும், கசப்பும் உண்டு. மீண்டும், மீண்டும் உரையாட மறுப்பது; கொண்டாடி தீர்ப்பது அல்லது வெறுத்து ஒதுக்குவது என்கிற இருமைகள் நம்முடைய உலகத்தை இருளடைய வைக்கின்றன. மனித உறவில், அதன் பிணக்குகளில், நாற்றத்தில், நறுமணத்தில் ஆணும், பெண்ணும் ஒருங்கே இணைவது, மனம் விட்டு பேசுவது இன்றைய தேவையும், நியாயமும் ஆகும். ஐயம், அசூயை நிறைந்த கண்களால் பெண்களின் உலகை அணுகும் ஆண்களும், அச்சம், வெறுப்பு மல்க ஆண்களின் உலகை சாடும் பெண்களும் கண்ணுக்குக் கண் பார்த்து உரையாட வேண்டிய காலம் இது
நன்றி புதிய தலைமுறை ஜனவரி 24 இதழ்

தமிழ்ப்பற்றும், மொழி அரசியலும்


பேராசியர் சுமதி ராமசுவாமி தமிழ்ப்பற்றின் நவீன வரலாற்றை ‘Passions of the tongue’ என்கிற தலைப்பில் எழுதினார். அந்நூலை மொழிபெயர்க்க முயன்று சில காரணங்களால் நின்று போனது. அந்நூலின் முன்னுரை மொழி அரசியலின் ஆழ அகலங்களை கண்முன் நிறுத்த முனைகிறது. வாசித்துப் பாருங்கள். ஆங்கில மூலத்தினை இங்கு படிக்கலாம்: https://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7&brand=ucpress
 
இல்லங்களுக்கு இடையில், மொழிகளுக்கு இடையில்:
 
மொழிப்பற்றைக் குறித்த இந்தப் புத்தகத்தை மொழிகளின் மீதான என் காதலைப் பற்றிய ஒரு வாக்குமூலத்தோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும். இன்னமும் நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்வதென்றால் எனக்கு எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் மீது மட்டும் தனித்த பற்றில்லை. புதுத் தில்லியில் பல்வேறு மொழிகள், லயம் மிக்க ஒலிக்குறிப்புகள் இவற்றால் சூழப்பட்ட வீட்டில் வளர்ந்தேன். மொழியியல் ரீதியாக என்னுடைய வீடு பலதரப்பட்ட மொழிகளின் சங்கமமாக இருந்தது. என்னுடைய வீடு தற்கால பாணியில் சொல்வது என்றால், மொழியளவில் மட்டுமேனும் நவநாகரீகப் பண்புடையதாகத் திகழ்ந்தது. என் தாய் தமிழ் பேசுவதைக் கேட்டபடி வளர்ந்தேன். வழக்கப்படி, தந்தையும் தமிழிலேயே பேசினார். என் தந்தை கன்னட மொழியில் சரளமாகத் தன்னுடைய உடன்பிறந்தவர்களோடு உரையாடுபவராக இருந்தார். பெங்களூரில் இருந்த அவரின் நிறுவனத்தைக் கன்னட மொழியைக் கொண்டே அவர் நிர்வகித்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு பிறந்து பெங்களூரில் வளர்ந்த என் தந்தை கன்னடத்திலேயே தான் கணக்குப் போடுவதாக, ஏன் கனவு கூடக் காண்பதாக வலியுறுத்தி சொல்வார். பெரும்பாலான பிராமணர்கள் வீட்டில் நடப்பதை போல, ஆறுவயது முதல் வீட்டில் இறை வழிபாட்டிற்காக எனக்குப் போதிக்கப்பட்ட மந்திரங்களின் மூலம் சம்ஸ்கிருத அறிமுகமும் கிட்டியது. பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் வளர்ந்த இளம் பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் நடப்பதை போல, நானும் ‘இந்திய கலாசாரத்தை’ காத்தபடியே, நவீனமானவளாக, மேற்கத்திய தாக்கம் கொண்டவளாக மாறவேண்டிய சுமைக்கு ஆளானேன்.
Image result for சுமதி ராமஸ்வாமி
 
ஏழு வயது இருக்கும் பொழுது, இந்திய பாரம்பரிய இசை வகைகளில் ஒன்றான கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டேன். இவ்வாறு தெலுங்கு மொழியின் ஒலிக்குறிப்புகளுக்கு அறிமுகப்படுதப்பட்ட நான் பொருள் புரியாமலே அப்பாடல்களைக் கற்றுக் கொண்டேன். இன்றுவரை என்னுடைய இசைத்தட்டுக்களில் தெலுங்கு பாடல்களை இழைய விட்டுக் கசிகிற கணங்கள் உண்டு. என்னுடைய பள்ளிக்கல்வியின் மொழியாகவும், தனிப்பட்ட வாசிப்பு இன்பத்தின் மூலமாகவும், குடும்பத்தினர், நண்பர்களோடு இயல்பாக உரையாடும் மொழியாகவும் இந்திய ஆங்கிலம் திகழ்ந்தது. டெல்லியின் கடைகளில் பேரம் பேசவும், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை ரசிக்கவும் இந்தி உதவியது. இந்திப் பாடல்கள், திரைப்படங்களைக் கண்டு களிப்பது முன்னைப் போல இல்லாவிட்டாலும் இன்னமும் தொடரவே செய்கிறது. இந்த இந்திப் படங்களைப் பார்த்ததும், டெல்லியின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்ததும் ஒரு பயனைத் தந்தது. இந்தி மொழி பேசுபவர்களோடு நெருங்கிய, இணக்கமான கடந்தகாலத் தொடர்பு கொண்ட உருது மொழியோடு அறிமுகத்தை என்னை அறியாமலே நான் பெற்றதை பின்னரே உணர்ந்தேன்.
 
ஆக, நான் புழங்கிய இந்த மொழிக் குடும்பத்தில் என்னுடைய ‘தாய் மொழியாக’ கருதப்பட்ட தமிழின் இடம் என்ன? தமிழைப் பள்ளியில் நான் கற்கவில்லை. எனக்குத் தமிழை வாசிக்கவும் தெரியாது. தமிழைப் பொது இடத்தில் பேசவோ, பிறர் பேசி கேட்கவோ இல்லை. வீட்டில் தமிழைத் தொடர்ந்து பயன்படுத்தினோம் என்றாலும் ஆங்கிலமும், இந்தியும் அவ்வப்பொழுது உள்ளே நுழைந்து கொள்ளும். தமிழ் குறித்து இன்றைக்குத் தேர்ந்த அறிவிருப்பதால் நாங்கள் வீட்டில் பேசிய தமிழ்மொழி பெருமளவுக்குச் சம்ஸ்கிருதமயமானதாக இருந்தது எனச் சொல்ல முடியும்.
Image may contain: 1 person
.
ஒற்றை மொழி ஆதிக்கம் செலுத்திய சுற்றுப்புறங்களில் பன்மொழி புலமை கொண்ட வினோத ஜந்துவாக நான் வளர்ந்ததாக உங்களுக்குத் தோன்றலாம். எனினும், இந்தியாவின் நகரப்புறங்களில் வாழும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இது போன்றே பல மொழிகளைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்துவதை உணர்வார்கள். பயன்படுத்துகிற மொழிகள் நபருக்கு, நபர் வேறுபடும் என்றாலும் பலமொழிகளை எதிர்கொள்ளும் அனுபவம் எல்லாருக்கும் உரியது என அழுத்திச் சொல்வேன். என்னுடைய பன்மொழித் திறன்கள் இந்திய துணைக்கண்டத்தில் பன்மொழிகளின் ஆழமான வரலாற்றின் பிரதிபலிப்பு எனலாம். இந்த வரலாறு இடம்பெயர்ந்து, வெவ்வேறு ஊர்களில் குடிபெயர்ந்த குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்திற்குள், வீட்டுக்குள் மட்டும் தங்களுடைய மொழியைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடாகும். தாறுமாறாக அமல்படுத்தப்பட்டாலும் தேசிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய குடிமகனையும் குறைந்த பட்சம் மூன்று மொழிகளை (தாய்மொழி/வட்டார மொழி, இந்தி, ஆங்கிலம்) கற்கவேண்டும் என எதிர்பார்ப்பதன் விளைவுமே எனக்குக் கிடைத்த இத்தனை மொழி அறிமுகம். எனினும், என்னுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் துல்லியமாகக் காட்டுவதைப் போல மொழிக்கொள்கை மூன்று மொழிகளை வளர்க்கும் என்கிற அரசின் நம்பிக்கைக்கு மாறாக வெவ்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டது.
 
அடுக்கிக்கொண்டே போகும் அந்தச் சிக்கல்களில் சில: எப்படித் தாய் மொழியை வரையறுப்பது? ஆங்கிலமும், இந்தியும் மரியாதை, வருமானம், அதிகாரம் ஆகியவற்றின் மொழிகளாகத் திகழும் சூழலில் எப்படித் தாய் மொழியை வளர்ப்பது? ஆங்கிலத்தைக் காலனிய மேற்கின் நீட்சியாகப் பார்க்கும் தேசியவாத சக்திகளை மீறி எப்படி வளர்த்து எடுப்பது? இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தி, ஒரு பகுதியின் மொழியை ஒட்டுமொத்த இந்தியாவின் மீது திணிக்கும் உள்நோக்கம் கொண்டது என்று எழுந்த எதிர்ப்புகளை எப்படித் தணிப்பது? இந்த மொழிப்போர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன என்பது நவீன இந்தியாவின் மொழிகளின் கலாசார அரசியல் குறித்த என் ஆர்வத்தைக் கூட்டின.
என்னைப்போன்ற வர்க்கம், ஜாதி, கல்விப் பின்புலத்தில் இருந்து எழும் இந்தியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி கொண்டவர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
 
என்னுடைய அதிகாரப் பூர்வ தாய்மொழியாகத் திகழ்ந்தாலும் தமிழானது நான் இயங்கிய மொழிப் பொருளாதாரத்தின் ஓரத்திலேயே இருந்தது. தமிழ் குறித்து ஆய்வு செய்ய என்னுடைய அறிவுசார் தேடல் திரும்பியதே ஆச்சரியம் தருகிற திருப்பமாகும். இந்தியும், ஆங்கிலமும் பேசும் என்னுடைய பள்ளியிலிருந்து நான் வீட்டிற்கு ஐந்தாவது படிக்கும் பொழுது வந்து சேர்ந்தேன். அப்பொழுது, “நாம்பலாம் தமிழா?” என என் அன்னையிடம் மழலைத் தமிழில் நான் கேட்ட தருணத்தில் தான் என்னுடைய வருங்கால அறிவுலகின் வளர்ச்சிக்கான விதைகள் ஊன்றப்பட்டதாக என்னுடைய அன்னை ஆணித்தரமாகப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். என் நினைவோ வேறொன்றைச் சுட்டுகிறது. மெட்ராஸில் இருந்த என்னுடைய பாட்டி ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்துக்கும் எழுதிய கடிதத்தைப் புரிந்து கொள்ளும் பதின்பருவத்து வேட்கையில் என்னுடைய தமிழ் சார்ந்த தேடல் துவங்கியது. ஆங்கிலம், தமிழ் கலந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் எனக்குப் புரிபடாத புதிராகவே இருந்தது. கடிதத்தின் துவக்கத்தில் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான
உடல்நலம் சார்ந்த விசாரிப்புகளுக்குப் பின்னர்த் தமிழ் மொழிக்கு மாறிவிடும். சுவாரசியம் மிகுந்த, குடும்ப ரகசியங்கள், மகிழ்ச்சிகள் என்று அமைந்த குடும்ப வாழ்க்கையின் முக்கியமான தகவல்கள் தமிழில் அமைந்திருக்கும். இது என்னுடைய மொழியறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. கவர்ச்சிமிகுந்த குடும்ப அரசியலின் கூறுகளை நான் புரிந்து கொள்ள முடியாதவாறு சாதுரியமாகத் தடுத்த மொழி அரசியலை தாண்டுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டேன். பதினைந்து வயதில் தமிழை எழுதக் கற்றுக் கொண்டேன். மெதுவாக, ஆனால், உறுதியாக நான் தமிழில் வாசிக்கப் பழகிக் கொண்டேன். என்னுடைய உடன்பிறந்தவர்களுக்கு ஆர்வமூட்டும் அந்தக் கடிதங்களைப் படித்துக் காட்டும் பணியை நானே செய்தேன். இன்றுவரை அவர்களுக்குத் தமிழைப் படிக்கத் தெரியாது.
 
நான் இப்பொழுது கோட்பாட்டு ரீதியாக விளக்கக் கூடிய மொழி அரசியலின் நேரடி அனுபவத்தை அப்பொழுதுதான் பெற்றேன். பல்வேறு மொழிகள் குடும்பத்திலோ, நாட்டிலோ பெருகுகையில் மொழி மூலங்களைப் பயன்படுத்தித் தங்களுக்கு நெருக்கமான அரசியலை அரசியலை தங்களுக்கு மட்டும் புரியும் மொழியில் மேற்கொள்வதன் மூலம் பரிச்சயம் இல்லாத மற்ற மொழிக்காரர்களை அந்நியப்படுத்தும் அரசியலின் அறிமுகம் வீட்டிலேயே கிட்டியது.
என்னுடைய இளங்கலை படிப்பை டெல்லி பல்கலையிலும், மேற்படிப்பை ஜவகர்லால் நேரு பல்கலையிலும் படிக்கையில் என் அறிவுசார் ஆர்வம் தமிழ் பேசும் இந்தியாவின் வரலாறுகள், பண்பாடுகள் மீது அதிகரித்தது. இந்தியாவின் தலைசிறந்த இரு பல்கலையிலும், மிகச் சிறந்த சில வரலாற்றாசிரியர்களுடன் வரலாற்றைக் கற்றேன். அது இன்றுவரை எனக்குப் பெருமளவில் உதவுகிறது. இந்தியத் தலைநகரில் இந்தியாவின் புவியியல், அரசியல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு போலத் தென்னிந்தியா சார்ந்த வரலாற்றுத் துறை ஆர்வம் பெருமளவில் இல்லாமல் இருந்தது என்னைச் சஞ்சலப்படுத்தியது. தமிழகத்தில் வலிமைமிகுந்த பிராமண எதிர்ப்பு இயக்கத்துக்குப் பின்னால், பிறப்பால் பிராமணப் பெண்ணான என்னுடய தமிழ் சார்ந்த ஆர்வத்தை எனது தாய்வீடாக நான் கருதிய தமிழ்நாடு வரவேற்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து என்னைப் பெனிசிலுவேனியா பல்கலையின் மானுடவியல் துறைக்கும், பின்னர்ப் பெர்க்லியில் உள்ள கலிபோர்னிய பல்கலையின் வரலாற்றுத் துறைக்கும் கொண்டு சென்றது. நான் தட்டுத்தடுமாறிய என் “தாய்மொழி”யை என் வீடு, தாய் ஆகியோரை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்த நாட்டில் முறையாகக் கற்றுக்கொண்டேன் என்பது தமிழுடனான என்னுடைய நம்பிக்கையற்ற காதலின் வரலாற்றுக்குப் பொருத்தமான முடிவாகும்.
 
நான் ஒரு மொழியைப்பேசி அதைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒற்றை அடையாளத்தோடு வளரவில்லை. பலதரப்பட்ட, சமயங்களில் முழுமையற்ற வெவ்வேறு சூழல்களில் நான் பயன்படுத்திக் கொள்ளும் வசதியான (சுமையான?) அடையாளங்களோடு வளர்ந்தேன். ஒருபுறம், இதனால் பல மொழிகளுக்கும், பல வீடுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டதாக அடிக்கடி மோசமாக உணர்ந்தேன். இதற்கு நேர்மாறாக, பல மொழிகள், பல இடங்கள், பல மனிதர்களிடையே இருத்தல் ஆகியவற்றின் ஆனந்தங்கள், சாத்தியங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றையும் சிறப்பாக அனுபவித்தேன். இந்த வாழ்க்கை எனக்குப் பெண்ணியத் தத்துவவியல் அறிஞர் ரோசி ப்ராய்டோட்டியின் கருத்தாக்கத்தை நினைவுபடுத்துகிறது.
 
இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த அவர் பிரெஞ்சு மொழியில் கல்வி கற்றார். இப்படிப்பட்ட பல்வேறு அடையாளங்கள் தாங்கிய வாழ்க்கையை அவர், ‘நாடோடி உணர்வு நிலை’ என்கிறார். இது என்னுடைய அடையாளங்களுக்கு இடையேயான வாழ்க்கையை எதிரொலிப்பது போல உள்ளது. 1994-ல் ‘Nomadic Subjects’ எனும் தனிக்கட்டுரையில் இப்படிப்பட்ட உணர்வுநிலை, ‘மையம், அது சார்ந்த குறிப்பிட்ட இடங்கள், குறிப்பிட்ட வகையான அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எனும் கருதுகோள்களை முழுமையாக மூழ்கடிக்கிற ஒன்றாக உள்ளது’ எனக் கருதுகிறார். மேலும், இந்த உணர்வுநிலை சமூகம் வரையறுத்து இருக்கும் சிந்தனை, செயல்பாடுகளோடு பொருந்திப் போவதை தன்னளவில் எதிர்க்கிறது, மேலும், ஒருவரை அடையாளப்படுத்தும் பெரும்பான்மை வழிமுறைகளின் ஆதிக்கத்தில் கரைந்துவிடாமல் தன்னை இந்த உணர்வுநிலை காத்துக் கொள்கிறது என்கிறார்.
 
நாடு கடத்தப்பட்ட, இடம் பெயர்ந்த மக்களின் உணர்வுநிலையில் காணப்படும் பிரிவு, இழப்பு, தாய்வீடு திரும்புதல் முதலிய உணர்வு நிலைகளுக்கு மாறாக, ஒரு நாடோடி தன்னுடைய உலகத்தோடு கொண்டிருக்கும் உறவானது, ரோசி ப்ராய்டோட்டியின் பார்வையில் ‘தோன்றி மறையும் பிணைப்பு’ மற்றும் ‘சுழற்சியில் அடிக்கடி தோன்றும்’ உறவாகும். இந்த நாடோடி பாணியானது, கடந்த காலத்தின் நிலை, பெருமிதம், ஒற்றைத்தன்மை ஆகியவற்றில் மனதை பறிகொடுத்து நிலைத்து நிற்பதில்லை. இந்த நாடோடித்தன்மை பன்மொழிப்புலமையோடு கைகோர்த்துப் பயணிக்கிறது. நிலையான அடையாளங்கள், தாய் மொழிகள் குறித்து ஆரோக்கியமான சந்தேகம் கொள்கிறது. நாடோடியான பன்மொழிப் புலமையாளர் பல்வேறு மொழி அடிப்படைகளிடம் மென்மையான நெருக்கம் கொண்டிருப்பதால் எந்த வகையான மொழி அல்லது இனத் தூய்மையை நாடுவதில்லையோ? என ரோசி ப்ராய்டோட்டி வினா எழுப்புகிறார். (Braidotti 1994: 8, 28).
 
இந்த ஆயிரம் ஆண்டுகளின் கேள்விகேட்கும் சிந்தனையின் முன்னுதாரணமான வடிவமாக நாடோடித்தன்மையைக் கருதும் ப்ராய்டோட்டி யின் எல்லாக் கருத்துக்களோடும் நான் ஒப்ப வேண்டியதில்லை. அவருடைய ஆர்வமூட்டும் பரிந்துரைகளின் தத்துவத் தாக்கங்கள் குறித்து நுண்ணாய்வு செய்யப்போவதில்லை. பின்காலனிய காலத்தில் பல்வேறு மொழிகள், வீடுகளுக்கு இடையே வாழும் நாடுகளைக் கடந்த நாடோடி மக்களின் வாழ்க்கை முடக்கிப்போடும் பயனற்றவைகளின் தொகுப்பாக அல்லாமல், பல முக்கியமான வாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகக் காண முடியும் என எனக்கு எச்சரித்த படைப்பாகவே காண்கிறேன். புதுப்பித்துக் கொள்ளும், மோசமாகிக் கொண்டே இருக்கும் தேசியம், பிரிவினைவாதம், இடப்பற்று சார்ந்த உணர்வுநிலைகள் மிகுந்த இந்த வரலாற்றின் குறிப்பிட்ட தருணத்தில் அவற்றைக் கவனத்தோடு அணுக இந்த நாடோடி உணர்வுநிலை உதவுகிறது. இதனால் ப்ராய்டோட்டி சொல்வதைப்போல ‘ஏற்படுத்தப்பட்ட பகுப்புகளிடையேவும், அனுபவத் தளங்களின் ஊடாகவும் சிந்திக்கவும், பயணிக்கவும் முடிகிற, எல்லைகளை மழுப்பி, பாலங்களை எரிக்காமல் செயல்படவும் முடிகிறது’ (1994: 4, 12).
 
கலாசார அடிப்படைகள், நம்பிக்கைகள் சார்ந்த கட்டமைப்புகள் அதிகாரம் மறுக்கப்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வலிமை பெறும் முக்கியமான வழிமுறைகளாக உள்ளன. பின்னோக்கி சொல்வதைச் சாராமாகக் கொண்ட இந்தக் கலாசார நம்பிக்கைகளுக்கு யார் அங்கீகாரம் தருவது என என்னுடைய நாடோடி உணர்வுநிலை கேள்வி கேட்கிறது. எந்தச் சூழல்களில் இது நிகழும்? மிக முக்கியமாக, ஏன், எப்படிக் கலாசாரச் சொத்துக்களான மொழி, மதம் அல்லது எல்லாவற்றை விடவும் புனிதமான உடமையாகக் கருதப்படும் தேசம் ஆகியவை மிகப்பெரும் உருவம் கொண்டதாக, அழியாத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன? இதன்மூலம் எப்படி இவை ஆட்கொள்பவர்களை ஆட்கொள்கின்றன?
(இந்நூலின் முதல் பக்கம்: )
figure
 
இந்தப் புத்தகமும், என்னுடைய வாழ்க்கையைப் போல நாடோடித் தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி இந்த நூல் உருவாக்கத்தில் பயன்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் கண்டங்கள், கலாசாரங்களைக் கடந்து செய்தேன். புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராசில் எழுதப்பட்டது, பிற பகுதிகள் அமெரிக்காவில் இருந்தாலும் மிகவும் வேறுபட்ட கலசார, அறிவார்ந்த இடங்களான பெர்க்லே, சிகாகோ, பிலடெல்பியா ஆகியவற்றில் எழுந்தன. என்னுடைய வாழ்வின் இந்திய பக்கங்கள் அமெரிக்க ஆய்வுப்புலத்தில் அரிதாகி வரும் என்னுடைய இருப்பில் ஒரு வேகத்தையும், வேட்கையையும் செலுத்துகின்றன. அதேசமயம், நான் பணியாற்றும் இடத்தில் நான் பெற்று இருக்கும் நிலையே பகுத்தாயும், மையமற்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய நாடோடி வாழ்க்கையை வசதியாகத் தொடர உதவுகிறது. வரலாற்றை எழுதுதல் என்பது சமீப வருடங்களில் நாட்டைப் பற்றி எழுதுவதோடு சிக்கலான செயல்பாடாகப் பிணைந்துள்ளது என்று பலமுறை சொல்லப்பட்டு விட்டது.
Image result for passions of the tongue
 
அதிகாரப்பூர்வ வரலாறுகள் பெரும்பாலும் நாடு என்கிற வெளிக்குள் இருந்தே எழுதப்பட்டுள்ளன. எனினும், இந்த வரலாற்று நூல் நாடுகளைக் கடந்து, மொழிகளை, இருப்பிடங்களைக் கடந்து பயணிக்கிறது. இதன் இறுதி உருவாக்கம் அது பேசும் மக்கள், அந்த மக்களைக் குடிகளாகக் கொண்ட நாடு ஆகியவற்றை விட்டு வெகுதூரம் தள்ளிய ஒரு இடத்திலேயே நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட படைப்பின் உள்ளடக்கத்தால் ஏற்படக்கூடிய வரவேற்பு, வாசிப்பு சார்ந்த சிக்கலான விளைவுகளை நான் அறிந்திருந்திருக்கிறேன். எனினும், சல்மான் ருஷ்டியுடன் இணைந்து ‘பகுத்தாய்வு சிந்தனை யின் நோக்கம் புதிய கோணங்களில் வரலாற்று உண்மைகளைத் திறந்து விடுவதும், கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளை நிலைகுலைப்பது’ என்றே சிந்திக்க விரும்புகிறேன். என்னுடைய நாட்டைவிட்டு நிகழ்ந்த நகர்வு, பகுத்தாயும் நாடோடி வாழ்க்கை எனக்கு உறுதியான வாய்ப்பை தருகிறது. இல்லையேல், ரூஷ்டி எள்ளல் ததும்பச் சொல்வதைப் போல, இப்படி எண்ணிக்கொள்வது தான் என்னுடைய பணியைச் செவ்வனே செய்ய உதவும்.
 
தமிழில் – பூ.கொ.சரவணன்

Does ‘Shamefully 2’ deserves all this attention & hype…


Watched ‘yours shamefully 2’ short film. I liked the theme and issue which it had touched upon. In this world of instant shares and immediate shaming, it gives a mirror to introspect and be more restrained. All said, now i will record my issues with this film.

Why the movie got such a mileage and views? It is not only because it emotionally as well as poignantly attacks social media warriors. But, what does it also does? It points that elite or non-victimised women may play the victim card. I don’t deny that there had been such instances of fake victimisation and harassing of innocent men as well as teenage guys.

Image may contain: 1 person

Let’s now come to some reality check. Which gender is sexually harassed, abused, stalked for born in that gender? It is mostly women. Who face acid attacks or has to bear the brick bats of society for speaking against sexual predators? It is again women.

Who does more polygamy in India? Men. Married women outnumber married men by 66 lakhs. That is at least 66 lakh men married more than one women. Who owns most of the land, powerful positions across India? Men.

If a woman comes out against a powerful man what is the initial reaction? Slut shaming or endless questions about her character. The video’s narrative focuses on unheard voices of victimised men and it almost exclusively sounds aloud that men are affected by social media frenziness.

Marital rape, domestic violence, sexual abuse, everyday stalking, fighting it out amidst inequal power structures is an everyday crusade for millions of ‘working’ women across India. (Almost all women across India work).

We as a society express our immediate condolences for those videos which question our sheepishness without affecting existing prejudices as well as biases. Many will say that the short film touches upon unheard voices of men or those suffering from shares. How about the girls who committed suicide for the share of morphed images of them? Or those whose private videos made it into pornographic sites? Or those who came out boldly for crusading against the sexual predators who re exploiting them using their positions? Whose side majority took? The gender to which they belonged or the patriarchy for which they re loyal. Women had been made to bear the brunt in almost all the cases as chastity and protection of culture is almost the responsibility of women alone.

Sharing responsibly is need of the hour. No doubt. Social media activism should be more sensible. Totally agreed. But, that should not make us blind to the fact that majority of hapless victims are from one gender. If they re born in suppressed or depressed castes as well as in poor economic conditions life is much much horrible. Let’s not assume the moral high ground of speaking for suppressed minority among dominant gender and lose sight of our perverted, misogynistic behavior which affects women more.