வீரம் என்பது அச்சப்படாததை போல நடிப்பது:
ஆடுகளத்தில் எதிராளிக்கு கிலி கொடுத்துக் கொண்டிருப்பது முக்கியமானது. ஜெப்ரி பாய்காட் எதிரணி வீரர்கள் ஆடுகளத்துக்குள் நுழைந்த அடுத்தக் கணம் களத்தில் இருப்பார். ‘பயந்துட்டான் மாப்ளே’ என்று எதிரணி நினைத்து விட்டால் இன்னமும் வேகமாகப் பாய்வார்கள்.
அது மேற்கிந்திய அணியுடனான போட்டி. எதிரணி பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் கவாஸ்கரின் மண்டையைப் பதம் பார்த்தது. எதிரில் இருந்து மொகிந்தர் அமர்நாத்துக்கே வலிக்கிற அளவுக்குச் சத்தம் கேட்டது. ‘ஒன்றுமில்லை. பந்தை போடு’ என்று சைகை காட்டினர் கவாஸ்கர். தண்ணீர் கொண்டு வந்த கிரண் மோரே, தலையைத் தடவி ‘ரொம்ப வலிக்கலையே’ எனக்கேட்டார். அப்படி ஒரு முறை முறைத்தார் சுனில் கவாஸ்கர். வலிக்கிறது என்று காட்டுவது எதிராளிக்கு வல்லமை தந்துவிடும் என்பது அவரின் பார்வை.

ராகுல் திராவிட் 1998-99 காலத்தில் கென்யா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பந்துகளை விரட்ட கே பார்க்க கூடத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தார். சதங்களை விரட்டுவது என்கிற சூத்திரம் அவர் முன்னால் நின்றது. ஆனால், திராவிட் அதை நிராகரித்தார். ‘Result Goals ஐ விட performance Goals முக்கியம்.’ என்று முடிவு கட்டினார். அதாவது ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக ஆடவேண்டும். சதங்களைத் துரத்துகிற பாணி வேண்டாம். அது இந்தியாவின் மிகச்சிறந்த பினிஷராகத் திராவிடை மாற்றியது. எலிப்பந்தயங்களில் ஓடுகிறவர்கள் கவனிக்க வேண்டியது இது.
ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்குத் திராவிட் சரிப்பட மாட்டார் என்று பலர் கருதினார்கள். அவரின் தடுப்பாட்டம் செல்லாது என்பது பலரின் கணிப்பாக இருந்தது. திராவிட் துவக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறங்குவார். விக்கெட்கள் விழாமல் பார்த்து கொள்வார். ஓரளவுக்கு அடித்தளம் இடப்பட்டதும் விக்கெட்டை தாரைவார்த்து விட்டு நடையைக் கட்டுவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கலக்கி எடுத்தது.

எதைக்கண்டும் பிரமிக்காதே:
1976-ம் வருடம். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 403 என்கிற இலக்கு குறிக்கப்பட்டு இருந்தது. அதை இந்திய அணி துரத்தினால் துவம்சம் என்றே பலர் எண்ணினார்கள். நான்கே விக்கெட்களை இழந்து அணி அந்த இமாலய இலக்கை எட்டியது. எப்படி எனச் சுனில் கவாஸ்கரிடம் கேட்டார்கள். ‘அவ்வளவு பெரிய இலக்கை எல்லாம் கண்முன் கொண்டுவரவில்லை. ஆட்டம் ஆரம்பிக்கிற போது இப்போதைக்கு அவுட் ஆகாமல் ஆடுவோம் என்று முடிவு செய்து கொண்டோம். காலை வேளை கடந்ததும், எப்படியோ தப்பித்து விட்டோம், முட்டாள்தனமாக ஆடாமல் மட்டும் இன்னும் கொஞ்ச நேரத்துக்குப் பார்த்துக் கொள்வோம் எண்பது அடுத்த இலக்கு. அன்றைய ஆட்டம் முடிகிற நிலைமை வந்ததும், நாளைக்கு ஆடுவதே முக்கியம் என்று தடுப்பாட்டம். இப்படித்தான் வெற்றி பெற்றோம்.’ என்றார்.

ஹோப்பார்ட் நகரில் ஒருநாள் போட்டி. இந்திய அணிக்கு நாற்பது ஓவர்களில் 321 இலக்கு. தலை மேல் கைவைத்து உட்கார்ந்து இருக்க வேண்டிய அணி. இப்படிக் கோலி யோசித்தார், ‘இரண்டாகப் பிரித்துக் கொண்டால் 160 ரன்களை ஒவ்வொரு இருபது ஓவருக்கும் அடிக்க வேண்டும். இதைத்தானே ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் செய்து கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.’ அப்படியே ஆடி அன்று அணி இலக்கை எட்டி இருந்தது.
ஆஸ்திரேலிய அணி 434 ரன்களை அடித்து இருந்தது. காலிஸ் அறைக்குள் வந்தார். ‘இந்தப் பிட்ச், தட்வெட்பத்தில் இவர்கள் அடித்திருக்கும் ரன்கள் போதாது. என்னைக்கேட்டால் அவர்களால் இன்னமும் 15 ரன்களை அடித்திருக்க முடியும். ஸோ, ஈஸி பாய்ஸ்.’ என்று இயல்பாகப் பேசினார். அணி அடித்து நொறுக்கியது. பிரமிப்பவர்கள் பின்தங்கி விடுகிறார்கள்.
முடியாது எனச் சொல்லாதே:
ஸ்டீவ் வாக் தன்னுடைய அணியைப் பார்த்தார். இந்த அணி அடுத்தப் பத்து ஆண்டுகள் உலகக் கிரிக்கெட்டையே ஆட்டிப்படைக்கும் என்றால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஸ்டீவ் வாக் எளிமையான இலக்கு ஒன்றை வைத்துக் கொண்டார். உலககோப்பைக்குச் சில மாதங்களே இருந்த சூழலில் அதற்கு முந்தைய தொடரை ‘NO REGRETS TOUR’ எனப்பெயரிட்டார். அணியின் அத்தனை வீரர்களும் செய்கிற அனைத்தையும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். அணியின் கூட்டத்தில் கூடத் தங்களின் முழுப் பங்களிப்பை தரவேண்டும். தோற்றாலும் பரவாயில்லை, நான் இன்னமும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று யாரும் வருத்தப்படக்கூடாது. இவ்வளவுதான் அவர் அணிக்கு போட்டுகொடுத்த பாதை. அணி உலககோப்பையைத் தூக்கியது, கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.
ஆஸ்திரேலிய அணி இந்திய தொடருக்கு வந்திருந்தது. பயிற்சி போட்டியில் வார்னே around the wicket வரவில்லை என்பதைச் சச்சின் கவனித்தார். அந்தப் பாணியில் பல நூறு பந்துகளை வீச செய்து
அடித்துப் பயிற்சி செய்தார். டெஸ்ட் போட்டியில் வார்னே வீசிய முதல் பந்தே around the wicket. எல்லைகோட்டுக்குப் பறந்தது. சச்சின் எவ்வளவு எளிமையாக அடித்து விட்டார் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள் 🙂
இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி மோதுகிற ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடர் 1989-ல் நடைபெற்றது. இம்ரான் கான் தொடர்ந்து தன்னுடைய அணியினரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஒரு இடத்தில் கூட இந்திய அணியைப் பற்றிப் பெருமையாக ஒரு வார்த்தை பேசவில்லை. மீண்டும், மீண்டும் உற்சாகபடுத்தியே எதிரணியை அசரடித்தார்.
தியாகங்கள் செய்தாலே சிகரங்கள் கிட்டும்:
அது 2014. சாய்னா பாட்மிட்டன் விளையாட்டுக்கு ஒரு கும்பிடு போட்டு விடலாம் என்கிற அளவுக்குத் தோல்விகளும், சோர்வும் துரத்தியது. அப்போது இறுதியாக ஒரு முறை என்று முடிவு செய்து கொண்டார். சொகுசான ஹைதராபாத் வாழ்க்கையை விட முடிவு செய்தார். பயிற்சியாளரை மாற்றினார். ஒரு எளிய அறையில் பெங்களூரில் தங்கிக்கொண்டு பிசாசை போலப் பயிற்சி செய்தார். உலக நம்பர் 1 ஆனார். இந்திய ஓபன், ஆல் இங்கிலாந்து ஓபன் என்று வெற்றிகள் குவிந்தன. உலகச் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை எட்டினார்.

வெற்றிகள் வெகுசீக்கிரம் வேண்டாம்:
அப்போது பீட் சாம்பர்ஸ்க்கு வயது 19. யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். உலகமே திரும்பி பார்த்தது. அடுத்த வருடம் மண்ணைக் கவ்வினார். கண்ணீர்விட்டு அழுவார் என்று பார்த்தால், ‘இது நன்மைக்கே’ என்றார் அவர். காரணம் எளிமையானது, வெகு சீக்கிரமே வெல்ல ஆரம்பித்தால் தலைக்கனம் கூடும், தவறுகள் புரியாது, தனித்து வெகுகாலம் ஜொலிக்க முடியாது. ஒரு அதிர்ச்சி ஓராயிரம் நன்மைகளைத் தரும்.

சாதாரணமானவை சாதிப்பதை சாய்க்கலாம்:
ஆஸ்திரேலிய அணி வெற்றியின் கோட்டில் நின்று கொண்டிருந்தது. ஆனால், லக்ஷ்மன்-இஷாந்த் ஜோடியை தாக்கி பிரிக்காமல், தற்காப்பின் மூலம் தகர்க்கலாம் எனக் கனவு கண்டது. ஒன்பதாவது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த அவர்கள் இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துப் போனார்கள்.
உலகக் கோப்பைக்கான அணியை வார்த்துக் கொண்டிருந்தார் இம்ரான்கான். ஒரு வீரரை அதிரடியாக ஆடிவிட்டு வா என்று அனுப்பியிருந்தார். அவரோ விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தினார். பெவிலியனுக்குத் திரும்பியதும், இம்ரான்கான் எல்லாருக்கும் விழும்படி சொன்னார், ‘இனிமேல் நீ எப்போதே பாகிஸ்தான் அணிக்குள் இடம் பிடிக்க மாட்டாய்.’ நான் சொல்வதைக் கேட்காவிட்டால் பேக்கப் என்பதை அந்த ஒற்றை நிகழ்வு அணிக்கு உணர்த்தியது.
தோல்விகள் பெருகினாலும் தனித்த வெற்றிகளே தேவை:
எக்கச்சக்க வெற்றிகள் வேண்டும் என்று நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. உண்மையில் பல்வேறு தோல்விகளுக்கு நடுவேயே சிற்சில வெற்றிகள் சாத்தியம். அந்த வெற்றிகள் மகத்தானதாக இருக்க வேண்டும். திராவிட் சச்சின் இணைந்து 615 முறை பார்ட்னர்ஷிப் போட்டு இருக்கிறார்கள். ஐம்பது ரன்களைக் கடந்த போட்டிகளே நல்ல போட்டிகள் என்று அளவுகோல் வைத்துக் கொண்டால் இந்த இணை அதைச் சாதிக்கத் தவறிய போட்டிகள் 397. ஆனால், 218 போட்டிகளில் ஐம்பது ரன்களைக் கடந்த போதெல்லாம் கலக்கி எடுத்து காலத்துக்கும் நினைவில் நிற்கிற வெற்றிகளைப் பெற்றார்கள்.

புல்லேலா கோபிசந்த் சீனர்களைப் பாட்மிட்டன் போட்டியில் சந்திக்கிறார். அவர்களை எதிர்ப்பது கடினம். காட்டுமிராண்டிகள், நம்மைவிடச் சில அடிகள் கூடுதல் உயரம். நான்கு முதல் ஏழு புள்ளிகள் அவரையே உன்னால் பெற முடியும் என்றெல்லாம் பலரும் அச்சுறுத்தினார்கள். கோபிசந்த் எளிமையாக இப்படிப் பார்த்தார், ‘எப்படியும் ஏழு புள்ளிகள் தான் பெற முடியும் என்கிறீர்கள். நான் முழுதாக அடித்து ஆடிவிடுகிறேன். தோற்றாலும் துவண்டுபோய்த் தோற்க கூடாது.’ அந்தக் கோப்பையைத் தன்வசமாக்கி கொண்டு தான் அந்தப் போராட்டக்காரர் இந்தியா திரும்பினார். தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண்களிடம் அவர் சொல்வது, ‘நீங்களாக உங்கள் இயல்புக்கு ஆடுங்கள். எப்போதாவது தலையிடுகிறேன். பயிற்சிகள் உங்களின் போரட்டகுணத்தை மழுங்கடிக்கக் கூடாது.’ போர்க்குணம் மறந்து போர்க்கலை புத்தகங்களைப் புரட்டுவது பயன்தராது.
தலைவா நீ தனித்து நட:
அணித் தலைவருக்குச் சொகுசான பிசினஸ் கிளாஸ் இருக்கை தரப்படும். அதிகமாகக் களைத்துப் போயிருக்கும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த இடத்தைத் தருவது தோனியின் வழக்கம். சேர்ந்து பயணிக்கிறோம் என்பதை உணர்த்தும் வெளிப்பாடு அது.
அது உலககோப்பை முதல் சுற்று. பாகிஸ்தான் தோல்விகளை மட்டுமே பெற்றுக்கொண்டு இருந்தது. அடுத்தப் போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் நடையைக் கட்ட வேண்டும். அணியின் மேலாளர் இன்திகாப் ஆலம் பாகிஸ்தான் போவதற்குப் பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டார். இம்ரான் சொன்னார், ‘உலககோப்பையை நாம் ஜெயிக்கிறோம். என்னைக் கேட்காமல் எதையாவது செய்தீர்கள் அவ்வளவுதான்.’ அடுத்தடுத்த போட்டிகளில் வென்றார்கள்.
அரையிறுதிக்கு முந்தைய நாள். இன்சமாம் உல் ஹக் ‘நான் ஊருக்கே போறேன். எனக்கு விளையாடவே வரலை.’ என்று கதறினார். இத்தனைக்கும் உலககோப்பைக்கு முன்னால் இம்ரான் கான், ‘இந்த உலககோப்பையில் மற்ற அணியினரின் பந்து வீச்சை இன்சி பதம் பார்ப்பார்.’ என்று அத்தனை நம்பிக்கையாகப் பேசியிருந்தார். அவர் இன்சமாமை பார்த்து இப்படிச் சொன்னார், ‘உன்னை முல்தானில் இருந்து ஆக்லாந்து அழைத்து வந்தது நன்றாக ஆடுவாய் என்று தான். நாளை என் நம்பிக்கையைக் காப்பாற்றுவாய். போ.’ அப்படித்தான் நடந்தது. அணி உலககோப்பையை முத்தமிட்டது.
கங்குலிக்கு இந்திய அணி பூனைக்குட்டிகள் போலப் பதுங்காமல் புலி போலப் பாயவேண்டும் என்கிற ஆக்ரோஷம் இருந்தது. யுவராஜ், ஹர்பஜன், பதான் என்று பல புதியவர்களைக் கண்டெடுத்து வளர்த்து அணியைத் திடப்படுத்தினார். ஒரு முக்கியமான போட்டியில் முதலில் பந்து பதானிடம் தரப்பட்டது.. தாறுமாறாகப் பந்தை அவர் வீசுகிறார். கங்குலி ஓடிவந்தார். திட்டுவார் என எதிர்பார்த்தால், ‘நான் உன்னை வெகுவாக நம்புகிறேன். நீ இயல்பாக இரு. இத்தனை பதற்றம் தேவையே இல்லை நண்பா!’ என்று தட்டிக்கொடுத்து விட்டுப் போனார். அடுத்து நடந்ததெல்லாம் வரலாறு.
The Winning Way 2.0: Learnings From Sport for Managers
304 பக்கங்கள்
விலை: 299
— with Harsha Bhogle.