ஹர்ஷா போக்லே காட்டும் விளையாட்டு வழி வாழ்க்கை


அனிதா போக்லேவும் அவருடைய கணவரான ஹர்ஷா போக்லேவும் இணைந்து எழுதிய ‘The Winning Way’ நூல் குறித்துச் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு அறிமுகம் எழுதினேன். அதன் பிரதியை எங்கும் நான் பாதுகாத்து வைக்கவில்லை. இப்போது அதே நூலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வாசித்தேன். விளையாட்டின் வழியாக மேலாண்மை என்பது தான் நூலின் மையம். அதைக் கடத்துவது இந்தப் பதிவின் நோக்கமில்லை. நூலின் சுவையான சிதறல்கள் மட்டும் இங்கே:

வீரம் என்பது அச்சப்படாததை போல நடிப்பது:

ஆடுகளத்தில் எதிராளிக்கு கிலி கொடுத்துக் கொண்டிருப்பது முக்கியமானது. ஜெப்ரி பாய்காட் எதிரணி வீரர்கள் ஆடுகளத்துக்குள் நுழைந்த அடுத்தக் கணம் களத்தில் இருப்பார். ‘பயந்துட்டான் மாப்ளே’ என்று எதிரணி நினைத்து விட்டால் இன்னமும் வேகமாகப் பாய்வார்கள்.

அது மேற்கிந்திய அணியுடனான போட்டி. எதிரணி பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் கவாஸ்கரின் மண்டையைப் பதம் பார்த்தது. எதிரில் இருந்து மொகிந்தர் அமர்நாத்துக்கே வலிக்கிற அளவுக்குச் சத்தம் கேட்டது. ‘ஒன்றுமில்லை. பந்தை போடு’ என்று சைகை காட்டினர் கவாஸ்கர். தண்ணீர் கொண்டு வந்த கிரண் மோரே, தலையைத் தடவி ‘ரொம்ப வலிக்கலையே’ எனக்கேட்டார். அப்படி ஒரு முறை முறைத்தார் சுனில் கவாஸ்கர். வலிக்கிறது என்று காட்டுவது எதிராளிக்கு வல்லமை தந்துவிடும் என்பது அவரின் பார்வை. 

Image may contain: 2 people, people smiling, text

ராகுல் திராவிட் 1998-99 காலத்தில் கென்யா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பந்துகளை விரட்ட கே பார்க்க கூடத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தார். சதங்களை விரட்டுவது என்கிற சூத்திரம் அவர் முன்னால் நின்றது. ஆனால், திராவிட் அதை நிராகரித்தார். ‘Result Goals ஐ விட performance Goals முக்கியம்.’ என்று முடிவு கட்டினார். அதாவது ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக ஆடவேண்டும். சதங்களைத் துரத்துகிற பாணி வேண்டாம். அது இந்தியாவின் மிகச்சிறந்த பினிஷராகத் திராவிடை மாற்றியது. எலிப்பந்தயங்களில் ஓடுகிறவர்கள் கவனிக்க வேண்டியது இது.

ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்குத் திராவிட் சரிப்பட மாட்டார் என்று பலர் கருதினார்கள். அவரின் தடுப்பாட்டம் செல்லாது என்பது பலரின் கணிப்பாக இருந்தது. திராவிட் துவக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறங்குவார். விக்கெட்கள் விழாமல் பார்த்து கொள்வார். ஓரளவுக்கு அடித்தளம் இடப்பட்டதும் விக்கெட்டை தாரைவார்த்து விட்டு நடையைக் கட்டுவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கலக்கி எடுத்தது. 

Image result for dravid first test match

எதைக்கண்டும் பிரமிக்காதே:

1976-ம் வருடம். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 403 என்கிற இலக்கு குறிக்கப்பட்டு இருந்தது. அதை இந்திய அணி துரத்தினால் துவம்சம் என்றே பலர் எண்ணினார்கள். நான்கே விக்கெட்களை இழந்து அணி அந்த இமாலய இலக்கை எட்டியது. எப்படி எனச் சுனில் கவாஸ்கரிடம் கேட்டார்கள். ‘அவ்வளவு பெரிய இலக்கை எல்லாம் கண்முன் கொண்டுவரவில்லை. ஆட்டம் ஆரம்பிக்கிற போது இப்போதைக்கு அவுட் ஆகாமல் ஆடுவோம் என்று முடிவு செய்து கொண்டோம். காலை வேளை கடந்ததும், எப்படியோ தப்பித்து விட்டோம், முட்டாள்தனமாக ஆடாமல் மட்டும் இன்னும் கொஞ்ச நேரத்துக்குப் பார்த்துக் கொள்வோம் எண்பது அடுத்த இலக்கு. அன்றைய ஆட்டம் முடிகிற நிலைமை வந்ததும், நாளைக்கு ஆடுவதே முக்கியம் என்று தடுப்பாட்டம். இப்படித்தான் வெற்றி பெற்றோம்.’ என்றார். 

Image result for sunil gavaskar

ஹோப்பார்ட் நகரில் ஒருநாள் போட்டி. இந்திய அணிக்கு நாற்பது ஓவர்களில் 321 இலக்கு. தலை மேல் கைவைத்து உட்கார்ந்து இருக்க வேண்டிய அணி. இப்படிக் கோலி யோசித்தார், ‘இரண்டாகப் பிரித்துக் கொண்டால் 160 ரன்களை ஒவ்வொரு இருபது ஓவருக்கும் அடிக்க வேண்டும். இதைத்தானே ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் செய்து கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.’ அப்படியே ஆடி அன்று அணி இலக்கை எட்டி இருந்தது.

ஆஸ்திரேலிய அணி 434 ரன்களை அடித்து இருந்தது. காலிஸ் அறைக்குள் வந்தார். ‘இந்தப் பிட்ச், தட்வெட்பத்தில் இவர்கள் அடித்திருக்கும் ரன்கள் போதாது. என்னைக்கேட்டால் அவர்களால் இன்னமும் 15 ரன்களை அடித்திருக்க முடியும். ஸோ, ஈஸி பாய்ஸ்.’ என்று இயல்பாகப் பேசினார். அணி அடித்து நொறுக்கியது. பிரமிப்பவர்கள் பின்தங்கி விடுகிறார்கள்.

முடியாது எனச் சொல்லாதே:

ஸ்டீவ் வாக் தன்னுடைய அணியைப் பார்த்தார். இந்த அணி அடுத்தப் பத்து ஆண்டுகள் உலகக் கிரிக்கெட்டையே ஆட்டிப்படைக்கும் என்றால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஸ்டீவ் வாக் எளிமையான இலக்கு ஒன்றை வைத்துக் கொண்டார். உலககோப்பைக்குச் சில மாதங்களே இருந்த சூழலில் அதற்கு முந்தைய தொடரை ‘NO REGRETS TOUR’ எனப்பெயரிட்டார். அணியின் அத்தனை வீரர்களும் செய்கிற அனைத்தையும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். அணியின் கூட்டத்தில் கூடத் தங்களின் முழுப் பங்களிப்பை தரவேண்டும். தோற்றாலும் பரவாயில்லை, நான் இன்னமும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று யாரும் வருத்தப்படக்கூடாது. இவ்வளவுதான் அவர் அணிக்கு போட்டுகொடுத்த பாதை. அணி உலககோப்பையைத் தூக்கியது, கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.

ஆஸ்திரேலிய அணி இந்திய தொடருக்கு வந்திருந்தது. பயிற்சி போட்டியில் வார்னே around the wicket வரவில்லை என்பதைச் சச்சின் கவனித்தார். அந்தப் பாணியில் பல நூறு பந்துகளை வீச செய்து
அடித்துப் பயிற்சி செய்தார். டெஸ்ட் போட்டியில் வார்னே வீசிய முதல் பந்தே around the wicket. எல்லைகோட்டுக்குப் பறந்தது. சச்சின் எவ்வளவு எளிமையாக அடித்து விட்டார் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள் 🙂

இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி மோதுகிற ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடர் 1989-ல் நடைபெற்றது. இம்ரான் கான் தொடர்ந்து தன்னுடைய அணியினரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஒரு இடத்தில் கூட இந்திய அணியைப் பற்றிப் பெருமையாக ஒரு வார்த்தை பேசவில்லை. மீண்டும், மீண்டும் உற்சாகபடுத்தியே எதிரணியை அசரடித்தார்.

தியாகங்கள் செய்தாலே சிகரங்கள் கிட்டும்:

அது 2014. சாய்னா பாட்மிட்டன் விளையாட்டுக்கு ஒரு கும்பிடு போட்டு விடலாம் என்கிற அளவுக்குத் தோல்விகளும், சோர்வும் துரத்தியது. அப்போது இறுதியாக ஒரு முறை என்று முடிவு செய்து கொண்டார். சொகுசான ஹைதராபாத் வாழ்க்கையை விட முடிவு செய்தார். பயிற்சியாளரை மாற்றினார். ஒரு எளிய அறையில் பெங்களூரில் தங்கிக்கொண்டு பிசாசை போலப் பயிற்சி செய்தார். உலக நம்பர் 1 ஆனார். இந்திய ஓபன், ஆல் இங்கிலாந்து ஓபன் என்று வெற்றிகள் குவிந்தன. உலகச் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை எட்டினார். 

Image result for saina nehwal

வெற்றிகள் வெகுசீக்கிரம் வேண்டாம்:
அப்போது பீட் சாம்பர்ஸ்க்கு வயது 19. யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். உலகமே திரும்பி பார்த்தது. அடுத்த வருடம் மண்ணைக் கவ்வினார். கண்ணீர்விட்டு அழுவார் என்று பார்த்தால், ‘இது நன்மைக்கே’ என்றார் அவர். காரணம் எளிமையானது, வெகு சீக்கிரமே வெல்ல ஆரம்பித்தால் தலைக்கனம் கூடும், தவறுகள் புரியாது, தனித்து வெகுகாலம் ஜொலிக்க முடியாது. ஒரு அதிர்ச்சி ஓராயிரம் நன்மைகளைத் தரும். 

Image result for pete sampras

சாதாரணமானவை சாதிப்பதை சாய்க்கலாம்:

ஆஸ்திரேலிய அணி வெற்றியின் கோட்டில் நின்று கொண்டிருந்தது. ஆனால், லக்ஷ்மன்-இஷாந்த் ஜோடியை தாக்கி பிரிக்காமல், தற்காப்பின் மூலம் தகர்க்கலாம் எனக் கனவு கண்டது. ஒன்பதாவது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த அவர்கள் இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துப் போனார்கள்.

உலகக் கோப்பைக்கான அணியை வார்த்துக் கொண்டிருந்தார் இம்ரான்கான். ஒரு வீரரை அதிரடியாக ஆடிவிட்டு வா என்று அனுப்பியிருந்தார். அவரோ விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தினார். பெவிலியனுக்குத் திரும்பியதும், இம்ரான்கான் எல்லாருக்கும் விழும்படி சொன்னார், ‘இனிமேல் நீ எப்போதே பாகிஸ்தான் அணிக்குள் இடம் பிடிக்க மாட்டாய்.’ நான் சொல்வதைக் கேட்காவிட்டால் பேக்கப் என்பதை அந்த ஒற்றை நிகழ்வு அணிக்கு உணர்த்தியது.

தோல்விகள் பெருகினாலும் தனித்த வெற்றிகளே தேவை:

எக்கச்சக்க வெற்றிகள் வேண்டும் என்று நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. உண்மையில் பல்வேறு தோல்விகளுக்கு நடுவேயே சிற்சில வெற்றிகள் சாத்தியம். அந்த வெற்றிகள் மகத்தானதாக இருக்க வேண்டும். திராவிட் சச்சின் இணைந்து 615 முறை பார்ட்னர்ஷிப் போட்டு இருக்கிறார்கள். ஐம்பது ரன்களைக் கடந்த போட்டிகளே நல்ல போட்டிகள் என்று அளவுகோல் வைத்துக் கொண்டால் இந்த இணை அதைச் சாதிக்கத் தவறிய போட்டிகள் 397. ஆனால், 218 போட்டிகளில் ஐம்பது ரன்களைக் கடந்த போதெல்லாம் கலக்கி எடுத்து காலத்துக்கும் நினைவில் நிற்கிற வெற்றிகளைப் பெற்றார்கள். 

Image result for sachin

புல்லேலா கோபிசந்த் சீனர்களைப் பாட்மிட்டன் போட்டியில் சந்திக்கிறார். அவர்களை எதிர்ப்பது கடினம். காட்டுமிராண்டிகள், நம்மைவிடச் சில அடிகள் கூடுதல் உயரம். நான்கு முதல் ஏழு புள்ளிகள் அவரையே உன்னால் பெற முடியும் என்றெல்லாம் பலரும் அச்சுறுத்தினார்கள். கோபிசந்த் எளிமையாக இப்படிப் பார்த்தார், ‘எப்படியும் ஏழு புள்ளிகள் தான் பெற முடியும் என்கிறீர்கள். நான் முழுதாக அடித்து ஆடிவிடுகிறேன். தோற்றாலும் துவண்டுபோய்த் தோற்க கூடாது.’ அந்தக் கோப்பையைத் தன்வசமாக்கி கொண்டு தான் அந்தப் போராட்டக்காரர் இந்தியா திரும்பினார். தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண்களிடம் அவர் சொல்வது, ‘நீங்களாக உங்கள் இயல்புக்கு ஆடுங்கள். எப்போதாவது தலையிடுகிறேன். பயிற்சிகள் உங்களின் போரட்டகுணத்தை மழுங்கடிக்கக் கூடாது.’ போர்க்குணம் மறந்து போர்க்கலை புத்தகங்களைப் புரட்டுவது பயன்தராது.

தலைவா நீ தனித்து நட:

அணித் தலைவருக்குச் சொகுசான பிசினஸ் கிளாஸ் இருக்கை தரப்படும். அதிகமாகக் களைத்துப் போயிருக்கும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த இடத்தைத் தருவது தோனியின் வழக்கம். சேர்ந்து பயணிக்கிறோம் என்பதை உணர்த்தும் வெளிப்பாடு அது.

அது உலககோப்பை முதல் சுற்று. பாகிஸ்தான் தோல்விகளை மட்டுமே பெற்றுக்கொண்டு இருந்தது. அடுத்தப் போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் நடையைக் கட்ட வேண்டும். அணியின் மேலாளர் இன்திகாப் ஆலம் பாகிஸ்தான் போவதற்குப் பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டார். இம்ரான் சொன்னார், ‘உலககோப்பையை நாம் ஜெயிக்கிறோம். என்னைக் கேட்காமல் எதையாவது செய்தீர்கள் அவ்வளவுதான்.’ அடுத்தடுத்த போட்டிகளில் வென்றார்கள்.

அரையிறுதிக்கு முந்தைய நாள். இன்சமாம் உல் ஹக் ‘நான் ஊருக்கே போறேன். எனக்கு விளையாடவே வரலை.’ என்று கதறினார். இத்தனைக்கும் உலககோப்பைக்கு முன்னால் இம்ரான் கான், ‘இந்த உலககோப்பையில் மற்ற அணியினரின் பந்து வீச்சை இன்சி பதம் பார்ப்பார்.’ என்று அத்தனை நம்பிக்கையாகப் பேசியிருந்தார். அவர் இன்சமாமை பார்த்து இப்படிச் சொன்னார், ‘உன்னை முல்தானில் இருந்து ஆக்லாந்து அழைத்து வந்தது நன்றாக ஆடுவாய் என்று தான். நாளை என் நம்பிக்கையைக் காப்பாற்றுவாய். போ.’ அப்படித்தான் நடந்தது. அணி உலககோப்பையை முத்தமிட்டது. 

Image result for imran khan

கங்குலிக்கு இந்திய அணி பூனைக்குட்டிகள் போலப் பதுங்காமல் புலி போலப் பாயவேண்டும் என்கிற ஆக்ரோஷம் இருந்தது. யுவராஜ், ஹர்பஜன், பதான் என்று பல புதியவர்களைக் கண்டெடுத்து வளர்த்து அணியைத் திடப்படுத்தினார். ஒரு முக்கியமான போட்டியில் முதலில் பந்து பதானிடம் தரப்பட்டது.. தாறுமாறாகப் பந்தை அவர் வீசுகிறார். கங்குலி ஓடிவந்தார். திட்டுவார் என எதிர்பார்த்தால், ‘நான் உன்னை வெகுவாக நம்புகிறேன். நீ இயல்பாக இரு. இத்தனை பதற்றம் தேவையே இல்லை நண்பா!’ என்று தட்டிக்கொடுத்து விட்டுப் போனார். அடுத்து நடந்ததெல்லாம் வரலாறு.

The Winning Way 2.0: Learnings From Sport for Managers

304 பக்கங்கள்
விலை: 299

 — with Harsha Bhogle.

பெண் குழந்தையைப் பொத்தி வளர்ப்பவரா நீங்கள்? ‘தங்கல்’ திரைப்படத்தைப் பாருங்கள்!


ஹரியானாவின் கதை இந்தியாவின் பெரும்பான்மை பெண்களின் கதையும் உண்டு. ஹரியானாவில் ஆண்:பெண் விகிதாசாரம் இந்தியாவிலேயே குறைவான ஒன்று. குழந்தைத் திருமணங்கள் அங்கு அன்றாட யதார்த்தம். காப் பஞ்சாயத்துகள் எனப்படும் வடநாட்டு கட்டப் பஞ்சாயத்துகள் நவ நாகரீக ஆடை அணிகிற பெண்களைத் தண்டிப்பது, சாதி அமைப்பை வலுவாகத் தூக்கிப் பிடிப்பது, ஆணவப் படுகொலைகளைக் கூட்டாகச் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்கிறவை. ‘முட்டிக்குக் கீழ்தான் மூளை’ என அந்த மாநில ஆட்களை எள்ளி நகையாடுகிற அளவுக்கு நிலைமை மோசம். அப்படிப்பட்ட ஊரில் இருந்து தன்னுடைய மகள்களை மகத்தான சாதனைகளை நோக்கி நகர்த்தும் ஒரு தந்தையின் நிஜக்கதைதான் தங்கல்.

(கதையின் நெகிழ்வான தருணங்கள் இங்கே பேசப்பட இருக்கிறது. படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் படிப்பதை தவிர்க்கலாம்.)

ஒரு பெண்ணை எப்படி வளர்ப்பது? கண்ணின் மணியாக, கோழி தன்னுடைய குஞ்சை அடைகாப்பது போல வளர்ப்பது தான் பெரும்பாலான குடும்பங்களின் மனப்போக்கு. “ஐயே பொட்டப்பொண்ணு!” எனப் பல குடும்பங்கள் கதறுவது ஊரக இந்தியாவின் உண்மை முகம். காரணம் வரதட்சணை கொடுத்துப் பெண்ணை எப்படியேனும் கட்டிக் கொடுப்பது என்பதே அந்தப் பெண்ணுக்குத் தாங்கள் செய்யக்கூடிய மகத்தான சேவை என்று பதிய வைக்கப்பட்டு இருக்கிறது.
தன்னளவில் நிராசையான இந்தியாவிற்குச் சர்வதேச பதக்க கனவை தன் மகள்களின் வழியாகச் சாதிக்க நினைக்கும் மகாவீர் சிங்கிடம் அவரின் மனைவி கேட்கிறார்,
“இப்படிக் கிராப் வெட்டி ஆண் பிள்ளைகள் போல ஷார்ட்ஸ் போட்டு வளர்த்தால் எந்தப் பையன் கட்டிப்பான்?”

Image may contain: 5 people, people standing

“என் பொண்ணுங்களுக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு அலைய மாட்டேன். அவங்களைத் தைரியமா, நம்பிக்கையுள்ளவங்களா வளர்ப்பேன். அவங்களுக்கான மாப்பிளைகளை அவங்களே தேடிப்பாங்க.” என்று அந்த மல்யுத்த நாயகன் சொல்கையில் சிலிர்க்கிறது.

பெண்கள் வெளியிடங்களில் புழங்குவதே பெரும்பாலும் தடுக்கப்பட்ட மாநிலத்தில் ஆண்களுடன் மகளை மல்யுத்தம் செய்ய வைக்கிறார். ஊரே எள்ளி நகையாடுகிறது. வகுப்பில் ஆண் பிள்ளைகள் சீண்டுகிறார்கள். ஆனால், தேசியளவில் தங்கப் பதக்கத்தை ஜெயித்து வருகையில் ஊரே திரண்டு தங்களின் மகளாக வாரியணைத்துக் கொள்கிறது.
பெண்களை அழகுக்காக மட்டுமே ஆண்கள் ரசிப்பார்கள் என்பது பொதுபுத்தி. சமீபத்தில் பி.சாய்நாத்தின் ‘PARI’ தளத்துக்காகப் பருத்தி வயல்களில் இருந்து பாராலிம்பிக்ஸ் நோக்கி என்கிற கட்டுரையை மொழிபெயர்த்தேன். அதில் வளர்சிக் குறைபாடு உள்ள அம்பிகாபதி எனும் பெண் தேசிய அளவில் சாதித்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்படிப் பதிவு செய்திருந்தார்: “எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே ஊரில் இருக்கிறது. ஒவ்வொருமுறை வெற்றியோடு அவர் திரும்புகிற பொழுது எண்ணற்ற கட்டவுட்களுடன் எங்க ஊரின் ரசிகர்கள் (பெரும்பாலும் ஆண்பிள்ளைகள்) வரவேற்கிறார்கள். “ புற அழகைத் தாண்டி அளப்பரிய சாதனைகள் சார்ந்தும் சமூகம் கொண்டாடும் என நம்பிக்கை தரும் தருணங்கள் அவை.

மகாவீர் சிங் பெண்ணியவாதி இல்லை. அவரின் மனைவியை வீட்டு வேலைகளே செய்ய வைக்கிறார். போயும், போயும் பெண் குழந்தை பிறந்ததே என்று முதலில் வருந்துகிறார். “எதுனாலும் தங்கம் தங்கம் தான்” எனத் தெருச்சண்டையில் மகள்கள் ஈடுபடும் பொழுது உணர்கிறார். எதிர்த்து ஆட பெண்கள் இல்லாத களத்தில்,, ஆண்களோடு மோதவிட்டு வார்த்து எடுக்கிறார். வாய்ப்புகள் இல்லை, வீட்டை விட்டு எப்படி வெளியே அனுப்புவது என அஞ்சும் பெற்றோர்கள் அந்தக் காட்சியில் விழித்துக் கொள்ளலாம்.

தந்தைக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மகாவீர் சிங் ‘எந்தத் தேர்வும் எனக்கு இல்லை.’ என்று வயிற்றைக் கழுவ வேலையில் தன்னுடைய மல்யுத்த கனவுகள் மலர்ந்த காலத்தில் தங்கிவிட்டார். அவரின் சர்வதேச கனவுகள் சாம்பலானது. மகள் சாதிக்கிறாள் என்று தெரிந்ததும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு மல்யுத்தம் செய்கிறார்.

இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது. போதுமான வாய்ப்புகள் இன்மை, ஏளனம், வறுமை என்று பலவற்றை ஆண் வீரர்களைப் போல அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் இவை அனைத்துக்கும் மேலே மகாவீர் சிங் சொல்வதைப் போல, “கேவலம் பொண்ணு” என்று பார்க்கும் சமூகத்தின், ஆண்களின் அன்றாடப் போரை எதிர்த்து கத்தி சுழற்றிய தங்கங்கள் அவர்கள்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கறிக்கடை பாய் கோழிக் கறியை குறைந்த விலையில் மகாவீர் சிங்கின் மகள்களுக்குத் தருகிறார். உச்சபட்ச காட்சிக்கு முன்னால் தன்னுடைய மகள்கள், “அப்பா அக்கா ஆடுறதை பாக்கணும்!” என்று கேட்டுக் கொண்டதற்காகப் பாய் அவர்களை வண்டியேற்றி அழைத்து வருகிறார். மகாவீர் சிங் சொல்கிறார், ‘மகளே! நீ நாளைக்கு நன்றாக ஆடவேண்டும்., உன்னை யாரும் மறக்கவே முடியாதபடி ஆடவேண்டும். உன் தங்கம் பல பெண்களை
அடக்குமுறைகளை, அடுப்படியைத் தாண்டி அடித்து ஆட உற்சாகப்படுத்தும்.’

Image result for dangal

சீதையைப் போல இரு, தமயந்தியைப் போல இரு, பெண்ணாய் இரு.” என்றெல்லாம் சொல்லாமல், ‘பி.டி. உஷாவைப் போல வா, அஞ்சு பாபி ஜார்ஜ் போல அசத்து, தீபிகா போல அடித்து ஆடு, சிந்து போல பெருமை தேடித் தா, சானியா போல சரித்திரம் படை.’ என ஊக்குவிக்க படம் சொல்லித் தருகிறது.

நிஜ நாயகன் மகாவீர் சிங்குக்கும், கீதா, பபிதா எனும் தங்கத் தாரகைகளுக்கும், அமீர் கானுக்கும், இந்தப் படக்குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விளையாட்டுகளின் மீதும், பெண்களைப் பொத்தி வளர்க்கும் போக்கை மாற்றிக் கொள்ளவும் இந்தப் படம் ஊக்கப்படுத்தும்.

எளிமையான வாழ்க்கையைக் கேட்காதீர்கள், எதிர்த்து போராட மகள்களுக்குச் சொல்லித் தாருங்கள். பஞ்சு மெத்தையில் மடியில் படுக்க வைக்காதீர்கள். மண்ணில் மிருகங்களோடு வாழவேண்டிய நிலையில் நம்பிக்கை தாருங்கள். ஆடைகளிலும், முடியிலும், பெண்ணின் ஆடம்பரத் திருமணத்திலும் இல்லை குடும்பத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கிறது இந்தப் படம்.

விவேகானந்தர் பொன்மொழிகள்


இந்துமதத் துறவியாக மட்டுமே இன்று சிலரால் முன்னிறுத்தப்படும் விவேகானந்தரின் சிந்தனையும், எண்ணப்போக்கும், தொலைநோக்கும், புரட்சிக்குரலும் பிரமிக்க வைப்பவை. அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மொழிகள் 25

வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.

இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். … தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள்.

முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும்.

ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி.


உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள்.

நாம் ‘என்னைத் தீண்டாதே’ என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,’நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே’ என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம்.

எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும்.

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, ‘நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!’ என்று ஆராவரியுங்கள்.

நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள்.

கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன்.

வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். “நான் பெருங்கடலைப் பருகுவேன்’ என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; “என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!’ அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.

பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி – கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும்.

யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

கோழையும், மூடனுமே ‘இது என்னுடைய விதி’ என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று ‘என் விதியை நான் தீர்மானிப்பேன்’ என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை.

கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்

‘கடவுளை நம்பாதவனை நாத்திகன் என்றது பழைய மதம்,தன்னை
நம்பாதவனை நாத்திகன் என்கிறது புதிய மதம் !

மனதார தங்களை ஒப்புவித்துக்கொண்ட, நேர்மையான, ஆற்றல் மிகுந்த சில இளைஞர்கள் நூறு வருடங்களாகப் பெருங்கூட்டம் செய்ய முடியாதவற்றை ஒரே வருடத்தில் செய்து முடிப்பார்கள்.

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்

எப்பொழுதும் நாயகனாக இருங்கள். எப்பொழுதும் ‘எனக்கு எந்த அச்சமுமில்லை.’ என்று சொல்லுங்கள். ‘அச்சப்படாதீர்கள்’ என்று அனைவர்க்கும் சொல்லுங்கள்.

நம்மை யார் அறிவற்றவர்கள் ஆக்கியது? நாமே தான். நாம் கண்களை மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று அழுகிறோம்.

உங்கள் மூளை அளவில்லா ஆர்வத்தோடு இருக்கும் என்றால் எதையும் சாதிக்க முடியும். மலைகள் அணுக்களாக இடிந்து விழும்.

பாறையைப் போல உறுதியாக நில்லுங்கள். நீ அழிவில்லாதவன். நீயே சுயம், பிரபஞ்சத்தின் கடவுள் நீ.

‘ஒரு விதவையின் கண்ணீரைத்
துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத
கடவுளிடத்திலோ,சமயத் திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது’

இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

நீ ஒன்றை பெறுவதற்குத் தகுதியுடையவனாக இருக்கிறாய் என்றால் அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்தச் சக்தியாலும் முடியாது.

டாப் 200 வரலாற்று மனிதர்கள் – முன்னுரை


டாப் 200 வரலாற்று மனிதர்கள் நூலுக்கு எழுதிய முன்னுரை:

மேடைகளில் பேச ஆரம்பித்த பால்ய காலத்தில் இருந்து
வரலாறும், இலக்கியமும், விளையாட்டும், அறிவியலும் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டே இருக்கின்றன. மேடைப்பேச்சுக்கான குறிப்புகளைக் காற்றில் பறக்க விடுவதே பழக்கம். வாசிப்பதில் தனித்த சுகம் கண்டுகொண்டே இருந்தாலும் எழுத வேண்டும் என்று தோன்றியது இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்புவரை ஒரு பக்கத்துக்கு மேல் எழுதியது கிடையாது.

சிக்கலான விஷயங்களைச் சுவைபடச் சொல்வதற்குப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதைத் தமிழில் பொறியியல் புத்தகங்களை மொழிபெயர்த்த பொழுது கிடைத்த ஆதரவின் மூலம் உணர முடிந்தது. வாசித்ததை, ரசித்ததைத் தொடர்ந்து பதிவோம் என்று அப்பொழுது அறிமுகமான முகநூலில் இரண்டு, மூன்று பத்திகளில் அன்றைய சிறப்பைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்.

ஆறு மாதகாலம் வரை மனதில் இருந்து வாசித்தவற்றை எழுதிக்கொண்டிருந்த சூழலில், நியூட்டன் பற்றிய கட்டுரையைச் சுட்டி விகடனின் முகநூல் பக்கத்தில் சரா (Saraa Subramaniam) அண்ணன் கேட்டு வெளியிட்டார். அதற்குக் கிடைத்த உடனடி ஆதரவு பொறுப்பை அதிகப்படுத்தியது. ஒரு தினத்துக்கு ஒரு கட்டுரை என்று வாரம் முழுக்க எழுத ஆரம்பித்தேன். எண்ணற்ற புத்தகங்களை வாசிப்பது, அவை தொடர்பான பேட்டிகளைக் காண்பது, ஆவணப்படங்களைப் பார்ப்பது என்று கட்டுரையின் சரித்தன்மைக்கு நிறையப் பாடுபடப் பழகினேன்.

சுட்டி விகடனில் எழுதிய ‘என் 10’ தொடர் ஆளுமைகளைப் பற்றிச் சுவைபடச் சொல்வதைச் சாத்தியப்படுத்தியது. பொதுவாக ஆளுமைகள் பற்றி எழுதப்படுவதில் இருந்து சற்று விலகி அவர்களின் கவிதைகள், பேச்சுக்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கட்டுரைகளில் எழுதினேன். அரசியல் ஆளுமைகள் பற்றி எழுதிய பொழுது மிகத்தீவிரமாகப் பல்வேறு கோணங்களை உள்வாங்கி இன்றைக்கு இருக்கும் விவாதங்களுக்கு ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தரும் பொறுப்பை உணர்ந்தே செயல்பட்டேன்.

தகவல்களின் தொகுப்பாகப் பல கட்டுரைகளை எழுதியவாறே, இந்தியாவை, உலகை உலுக்கிய சம்பவங்கள் பற்றிக் குறுக்குவெட்டுத் தோற்றம் தர தூக்கம் மறந்து தேடி எழுதிய காலங்கள் பரவசமானவை. என்னுடைய அர்ப்பணிப்பை மிஞ்சும் வகையில் பிரிட்டோ அண்ணன் ( Britto Brits ) வடிவமைப்புச் செய்து தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அரவிந்தன் அண்ணன் ( Ara Vindan )சினிமா ஆளுமைகள், அறிவியல் ஆளுமைகள் பற்றிக் கட்டுரைகள் எழுத வைத்து அழகு பார்த்தார்.

இந்தக் கட்டுரைகளை ஒலிப்பதிவாக ஆக்கி அனுதினமும் ‘ஒரு தேதி, ஒரு சேதி’ என்கிற தலைப்பில் வருடம் முழுக்கப் பேசலாம் என்று முடிவு செய்யப்பட்ட பொழுது எப்பொழுதும் வழிகாட்டும் கணேசன் சார் Ganesan Kothandaraman) தந்த உத்வேகம் இன்னமும் பல புதிய கட்டுரைகளை எழுதத் தூண்டியது. எல்லாமும் சேர்ந்து நானூறு கட்டுரைகளைத் தாண்டின. அவற்றில் பலவற்றை நீக்கி, இந்தப் புத்தகம் வருவது என்றானதும் மேலும் ஒரு நாற்பது கட்டுரைகளை மூன்று மாதத்தில் எழுதிச் சேர்த்தேன்.

எந்தத்தொகுப்பும் முழுமையான ஒன்றாக முடியாது. அதே சமயம் தேடலின், அறிவு வானின் பரந்த பரப்பில் அகல் விளக்கு அளவு வெளிச்சமேனும் தர வேண்டும் என்கிற ஆவலில் எழுந்தவையே இக்கட்டுரைகள். ‘ஒரு தேதி ஒரு சேதி’யை ஒலிப்பதிவாக, ஒளிப்பதிவாக வருவதைச் சாத்தியப்படுத்திய நியூட்டன், ரகுவீர், ஹசன் ஹபீழ் ( Mgnewton Mgn, Raghuveer RaoHassan Hafeezh) அண்ணன்கள் பல்வேறு உதவிகள் புரிந்தார்கள். நெஞ்செல்லாம் நிறைத்து வைத்திருக்கும் உறவுகள், நேசர்கள் அளித்த ஊக்கம், உற்சாகம் மறக்க முடியாதவை.

ஆனந்த விகடன் ஆசிரியர் அண்ணன் ரா.கண்ணன், என் எழுத்துலக ஆசான் ப.திருமாவேலன் ஆகியோர் இல்லாவிட்டால் இப்படி ஒரு புத்தகம் சாத்தியம் ஆகியிருக்காது. இவர்கள் அனைவருக்கும் சொல்லித்தீராத நன்றிகள்… வாசகர்கள் நூலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தாருங்கள், தேடல்களைத் தொடருங்கள்.

அன்புடன்,
பூ.கொ.சரவணன்
pu.ko.saravanan@gmail.com
புத்தகத்தை இணையத்தில் வாங்க :
http://books.vikatan.com/index.php?bid=2278

வானைத்தொட்ட பெண்களின் கதை !


ராஷ்மி பன்சாலின் எழுத்தில் உருவான ,”FOLLOW EVERY RAINBOW” நூலை வாசித்து முடித்தேன். வெற்றிகரமான இருபத்தி ஐந்து பெண் தொழில் முனைவோர் பற்றிய நூல் இது. அதிலிருந்து நெஞ்சை நிறைத்த சில பெண்மணிகள் பற்றிய தொகுப்பு மட்டும் இங்கே !
வசூலி என்கிற அமைப்பின் மூலம் பெண்களை கொண்டே 

மென்மையாக பேசி கடன்களை திரும்பப்பெறும் கதையில் நிமிர்ந்து உட்கார்ந்தால் மார்வாரி குடும்பத்தில் பிறந்து ராஜஸ்தானின் சேரிகளில் வாழும் மக்களுக்கு உதவபோய் அவர்களின் நீல பானை செய்யும் முறையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்ற பிரான்சுக்கு சில பொருட்களை ஏற்றுமதி செய்யும் லீலா போர்டியா அது தோற்றதும் மெக்சிகோ வரைப்போய் தரமான பானைகள் தயாரிக்கும் முறையை கற்றுவந்து அம்மக்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறார். 

எவரெஸ்ட் சிகரத்தை ஏற பெண்களுக்கு முப்பத்தி ஐந்து வயது வரை மட்டுமே அனுமதி என்று சொல்லப்பட்டு இருக்கும் நாற்பத்தி ஏழு வயது பிரேமலதா அகர்வால் தனக்கு முப்பத்தி ஐந்து வயது என்று சொல்லி எவரெஸ்ட் நோக்கி போகிறார். உச்சியை தொட கொஞ்சம் உயரம் இருக்கும் பொழுது நீரிழப்பு அதிகமாகி விடுகிறது. பசி வேறு ; மரணத்தின் வாசலில் நிற்பது போல உணர்கிறார். தன் கணவருக்கு போனில் அழைக்க ,”என்றாவது சாகத்தான் போகிறோம் ; நாளைக்கே கூட சாலை விபத்தில் மரணம் உண்டாகலாம் ! சாதித்துவிட்டு செத்துப்போ !” என்று சொல்ல உத்வேகம் பொங்க எவரெஸ்டை தொட்டு சாதித்தார் அவர் 

ஜாசு சில்பி எனும் பெண் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை அவர் யாருமற்றவர் என்று தெரிந்தும் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார். அவருடன் பத்தொன்பது ஆண்டுகள் நிறைவான வாழ்வு. ஒரு சிறிய சண்டை கூட இல்லை. அவர் இவருக்காக மதம் மாறியிருக்கிறார். இவர் வெண்கல சிற்பங்கள் வடித்து முடித்துவிட்டு வந்த பெண் வெந்நீர் வைத்து கால்களில் ஒத்தடம் கொடுப்பார் அவர். ஒருநாள் கேன்சரால் அவர் இறந்து போக தானே தைரியமாக நின்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கல சிலைகள் செய்கிற ஆர்டரை எல்லாம் ஒற்றை ஆளாக பிடித்து தன் கணவர் தான் எப்படி சிறகடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அப்படியே பரந்த ஜாசு இந்த நூல் அச்சுக்கு போவதற்கு இருநாட்கள் முன் மாரடைப்பால் இறந்து போனார் ! 

தென் ஆப்ரிக்காவில் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட தன் மகளை எல்லாரின் எதிர்ப்பையும் மீறி அன்போடு பார்த்துக்கொண்ட சோனா இப்படி துன்பப்படும் எண்ணற்ற பிள்ளைகள் அமருவதற்கு ஏற்ற இருக்கைகளை சோனுகுவிப் என்கிற பெயரில் வடிவமைத்து நாடு முழுக்க விற்று பலரின் வலியை போக்கியிருக்கிறார் 

வீட்டை விட்டு மாலைக்கு மேல் போகவிடாத பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த நினா லெகி மாலை ஐந்து மணிக்கு கல்லூரி முடிந்ததும் வீடு அடைந்து இரண்டு ஆண் தையல் காரர்களுடன் இணைந்து அற்புதமான பேக்குகளை BAGGIT என்கிற பெயரில் தயாரித்து அதை பலகோடி மதிப்புள்ள பிசினஸ் ஆக்கியிருக்கிறார். 

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று களமிறங்கி தென் அமெரிக்கா போகிற பொழுது ஓரிரு வாசகங்களை உச்சரிப்பு என்ன என்று கூட தெரியாமல் கற்று அற்புதமாக பதில் சொல்லி ஈர்த்த நள்ளிரவில் ஹோட்டலில் தாங்கும் பொழுது ஆண்கள் உள்ளே நுழைய முயன்ற பொழுது கணவருக்கும் போலீசுக்கும் அழைத்து தன்னை காத்துக்கொள்ளும் பெண் இன்னமும் ஆர்வம் மாறாமல் சாதிப்பது நமக்கான அற்புதமான பாடம் ! 

நீதி தாஹ் எனும் பெண் இருபத்தி ஆறு வயதிலேயே பழங்குடியின மக்களின் கைத்திறமையை பயன்படுத்தி அவர்களுக்கு வருமானம் பெருக்க அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகளை விற்கும் கடை ஆரம்பித்து அதிலிருந்து பல லட்சங்களை அவர்களுக்கு பெற வழிவகுத்திருக்கிறார். 

குடிகார கணவனின் அத்தனை தொல்லைகளுக்கு நடுவிலும் பீச்சில் காபி விற்க ஆரம்பித்து பின்னர் துறைமுகத்தில் ஹோட்டல் என்று நகர்ந்து இறுதியில் ஒரே நாளில் இரண்டு லட்சம் வருமானம் தருகிற உணவகம் நடத்துகிற அளவுக்கு நகர்ந்த தமிழகத்து பெட்ரிசியா மற்றும் பி ஜெ பி தொழிற்சாலை என்கிற பெயரில் கோத்ரேஜ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிற அளவுக்கு தன் ஒற்றை ஆளின் உழைப்பால் உயர்ந்த தமிழகத்து பெண் அமீனாவின் கதையும் அற்புதம் (அமீனாவின் கதையில் மட்டும் ஆங்கிலம் அநியாயத்துக்கு பிழையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது 
!

எலா பட்டின் கதை தான் உச்சம் ! சேவா என்கிற பெண் சுய தொழிலாளர் அமைப்பை தொடங்கி பதினேழு லட்சம் குப்பை பொறுக்கும்,காய்கறி விற்கும்,பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேலை உறுதி,சம்பள உயர்வு,சமூக பாதுகாப்பு,இன்சூரன்ஸ் என்று ஏகத்துக்கும் சாதித்திருக்கும் வாழ்க்கையில் நடுத்தெருவில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசிய பொழுது அதுவரை ஆதரித்த தொழிலாளர் சங்கம் கைவிட்ட பொழுதும் சேவாவை வெற்றிகரமாக எளிய பெண்களின் உதவியோடு நடத்தி இருக்கிறார். கணவன் உணவருந்தும் இடைவெளியில் வேலை செய்து வருமானம் ஈட்டி அடிவாங்கிய பெண் ஒரு காலத்துக்கு பிறகு அவரே மதிய உணவு கொண்டு வருகிற அளவுக்கு சாதிக்கிற பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலையில் பட்டம் பெற்ற பெண்,ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று எல்லாமும் விட்டுவிட்டு சேவாவில் சேவை செய்ய வந்தவர்களின் கதையோடு நூலை முடிக்கிற பொழுது நாமும் ஏதேனும் வானவில்லை துரத்த வேண்டும் ,அதை துரத்துகிற பெண்களுக்கு ஊக்குவிப்பை தரவேண்டும் என்றே தோன்றுகிறது 

ஆசிரியர் : ராஷ்மி பன்சால் 
பக்கங்கள் : 360 
விலை : 250
WESTLAND வெளியீடு

மாற்றம் தரும் மந்திரச்சொல் !


மந்திரச்சொல் என்கிற எஸ்.கே.முருகன் அவர்களை நூலை வாசித்து முடித்தேன். அறிந்த ஆளுமைகளின் வாழ்வை செலுத்திய மந்திரச்சொற்களை பற்றிய எளிமையான,உத்வேகமூட்டும் தொகுப்பு இந்நூல். ஓயாத பசி,அம்மாவின் மனநோய்,அப்பாவின் மரணம்,கம்யூனிஸ்ட் தீவிரவாதி என்று நாட்டை விட்டு வெளியேற்றியது என்று எண்ணற்ற துயரங்கள் தொடர்ந்து பொழுதெல்லாம் சாப்ளினை செலுத்தியது ,”இதுவும் கடந்து போகும் !” என்கிற வாசகம்

கடவுள்,மதம்,அரசு என்று எல்லாமும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை அவை புனிதமானவை என்பதை உடைத்துத்தள்ளி கேள்வி கேட்க சொல்லித்தந்தவர் அவர். சாய்ந்த நடை,குளிக்காத தேகம்,சொட்டைத்தலை என்றிருந்த அந்த சாக்ரடீஸ் பின் ஒட்டுமொத்த கிரேக்கமும் திரண்டு நடந்தது. அவரின் மந்திர வாசகம் ,”உன்னையே நீ அறிவாய் !”

இந்திரா எமெர்ஜென்சியை கொண்டு வந்த பின்னர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை பார்த்த பொழுது ,”புலி மீது ஏறி விட்டேன் ! என்ன செய்ய ?” என்று கேட்க ,”தேவை மாற்றமில்லை ; விழிப்புணர்வு !” என்றார் அந்த ஞானி

உலகின் துன்பங்கள் தீர புறப்பட்ட புத்தன் கடந்ததை,வருங்காலதைப்பற்றி கவலைப்படாமல் “இந்த கணத்தில் வாழ்க !” என்று சொல்லி அப்படியே வாழ்ந்தான். சாகிற பொழுது கூட ,”மரணத்தோடு இந்த கணத்தில் ஆனந்தமாக வாழ்கிறேன் !” என்று சொன்னார் அவர்

நாட்டு மக்களை விழிப்பு கொள்ள செய்ய எண்ணற்ற கருத்துக்களை தந்த கண்புசியஸ் சட்டத்துறை அமைச்சராக மன்னனால் ஆக்கப்பட்டார். எதுவும் அவர் எண்ணியபடி நடக்க அரசு இயந்திரம் ஒத்துழைக்கவில்லை. ஆடம்பர வாழ்வு துறந்து தெருத்தெருவாக மக்களுக்கு அறிவு புகட்ட கிளம்பியவரை “சொகுசான வாழ்க்கையை விடுத்து போவீர்களா ?” என்று மன்னன் கேட்கிறான். “ வசதியானதை விட எது நல்லதோ அதை தேர்ந்தெடுக்கிறேன் நான் !” என்றார்

ஒரே ஒரு ஓவியத்தை மட்டுமே தன் வாழ்நாளில் கடனுக்காக விற்ற மாமேதை வான்கா சுரங்கங்களில் தீவிரமாக மதப்பிரசாரம் செய்யப்போகிறான். அப்பாவிகளின் பசியை அது போக்காது என்று தெரிந்ததும் வெளியேறி கரித்துண்டுகள் வாங்கிக்கொண்டு ஓவியம் வரையப்போகிறான். தம்பி தியோவிடம் உதவி கேட்ட பொழுது அவன் எழுதுகிற கடிதம் அவரின் வாழ்க்கையை செலுத்துகிறது ,”நான் நிறைய சம்பாதிக்கிறேன் ; என்னால் எதிலும் தீவிரமாக இருக்க முடியவில்லை. உன்னால் தீவிரமாக இயங்க முடிகிறது ! எதிலும் தீவிரமாக இரு!” என்று.
மந்திரச் சொல்!
பாப்லோ செக் நாட்டின் கவிஞர் நெருடாவின் வரிகளை வாசிக்கிறார் ,”குற்றங்களை,அநீதியைக்கண்டு குமுறி எழுகிறவனே ஜெயிக்க முடியும் !” என்கிற வரி உயிர் போகிற வரை கூட அரசுகளுக்கு எதிராக அவரை இயங்க செய்கிறது. சே இறக்கிற பொழுது அவரின் கரங்களில் இருந்த இரண்டு நூல்களில் ஒன்று நெருடாவின் நூல்

ஸ்டீபன் ஹாகிங் A.L.S சிக்கலால் பாதிக்கப்பட்டு இயங்கவே முடியாத சூழல் உண்டான பொழுதும் மிகப்பெரிய இயற்பியல் அறிஞராக தன்னுடைய உழைப்பால் உயர்ந்தார். எளிமையாக அவர் சொன்னது ,”எதை இழந்தோம் என்பது முக்கியமில்லை ; எது மிச்சமிருக்கிறது என்று பாருங்கள் !”

“சிக்கல்களை கண்டு ஓடாதீர்கள் ; அது தொடர்ந்து துரத்தும். அதோடு மோதி வெல்லுங்கள். காமத்தை கண்டு அஞ்சாதீர்கள். அதை அனுபவித்து வாழப்பழகுங்கள் !” என்றார் ஓஷோ

எக்கச்சக்கமாக பணம் சேர்த்த பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டு,உழைத்துக்கொண்டு இருந்த ராக்பெல்லர் இப்படி சொன்னார் ,”மனநிறைவு என்பது பணத்தில் இல்லை ; வெற்றி பெறுவதில் இருக்கிறது !” என்று

அரசரின் அவையில் இசை வல்லுனராக ஏற்றுக்கொள்ளப்பட்டு மேதையாக இருந்த போதிலும் சாதாரணமாக நடத்தப்படவே அப்பதவியை விட்டு மன்னரின் வற்புறுத்தலை மீறி விலகிய இசை மேதை மொசார்ட் சொன்னார் ,”இசையால் தீராத சோகமும் இல்லை ; அதனால் கிட்டாத இன்பமும் இல்லை !” வாழ்வின் காதல் தோல்விகள்,பிள்ளைகள் மரணம்,வறுமை,தனிமை என அத்தனையையும் இசையால் அறுநூறு சாகாவரம் பெற்ற இசைக்கோர்வைகளால் மறந்தார் அவர்

தொழுநோயாளிகளை தாங்கிவந்து அடைக்கலம் கொடுத்து அன்னை தெரசா கவனித்துக்கொண்ட பொழுது “அவர்கள் செய்த பாவங்களால் இப்படி ஆனது ! ஏன் உதவுகிறீர்கள் ?” எனக்கேட்ட பொழுது “எடைப்போட்டுக்கொண்டு இருந்தால் அன்பு செய்ய நேரமிருக்காது !” என்றார் அன்னை.

இன்னமும் இருபத்தி மூன்று ஆளுமைகள் பிரமிக்க வைக்க இருக்கிறார்கள் அவசியம் வாசியுங்கள்

http://books.vikatan.com/index.php?bid=1128
பக்கங்கள் : 110
விலை : அறுபத்தி ஐந்து
ஆசிரியர் : எஸ்.கே முருகன்
விகடன் பிரசுரம்