விசாவுக்காக காத்திருக்கிறேன் – அண்ணல் அம்பேத்கரின் நினைவலைகள்


‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ எனும் இரு சொற்களின் அடர்த்தி, வலி அபரிமிதமானது. எது தனக்கான நாடு? சமத்துவம், சம உரிமைகள், சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு பிறப்பின் அடிப்படையில் அந்நியரைப் போல நடத்தப்படுவது தகுமா? நீதி, நியாயம், நம்பிக்கை, ஆதரவு, பாதுகாப்பை உறுதியளிக்கும் அந்த சமத்துவ விசாவுக்கான காத்திருப்பு எப்போது கைகூடும்? இப்படி பற்பல வினாக்களை முப்பதிற்கும் குறைவான பக்கங்களில் பாபாசாகேபின் தன் வரலாறு எழுப்புகிறது.

ஏராளமான நூல்களை எழுத வேண்டும் என்கிற கனவுகள் கைகூடுமுன்னே அண்ணல் நம்மை விட்டுப்பிரிந்தார். அரசமைப்புச் சட்ட உருவாக்கம், கட்சிப் பணிகள், இந்து சட்ட மசோதா வரைவினை எழுதுதல், சித்தார்த்தா கல்லூரி உள்ளிட்ட கல்வித்தலம் எழுப்பல், மக்கள் பணி, இதழில் என ஓய்வு அலைச்சல் இல்லாமல் இயங்கியவரை வறுமை, ஏளனம், அவமதிப்பு, புறக்கணிப்பு வீழ்த்தவில்லை. அத்தனைக்கு நடுவிலும் அவர் எழுதினார், இயங்கினார். டாக்டர் அம்பேத்கரின் அகவுலகினை கண்முன் நிறுத்தும் எழுத்து இப்போது தமிழில். இந்நூலின் முதல் பதிப்பினை வெளியிட்ட நீலம் பதிப்பகத்திற்கு நன்றிகள்.

இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 158,159-ல் கிடைக்கும்.
நன்செய் வெளியீடு
ஓவியம்: சந்தோஷ் நாராயணன்
விலை: 20

தமிழில்: பூ.கொ.சரவணன்.

காந்தியும், மதச்சார்பின்மையும்


காந்தியும், மதச்சார்பின்மையும் – அனில் நௌரியா

(மதச்சார்பின்மை என்கிற சொல்லை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலதுசாரிகள் குரல் எழுப்பிக்கொண்டுள்ள சூழலில், காந்திக்கும் மதச்சார்பின்மைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இக்கட்டுரையை அவசியம் வாசியுங்கள்… )

மதச்சார்பின்மை என்கிற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு முன்னர் வரை ஒரு அவமதிப்புக்குரிய சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதே காலத்தில் சார்ல்ஸ் பிராட்லா, ஹோலியேக் ஆகியோர் இச்சொல்லை அரசியல் பயன்பாட்டில் பிரபலப்படுத்த முயன்றனர். லிங்கன் கூட இச்சொல்லை ஒரே ஒரு இடத்தில் அரசியலோடு தொடர்பில்லாத சூழலோடு இணைத்தே
உபயோகப்படுத்துகிறார். தேசங்கள் உருவான வேகத்துக்கு இச்சொல் வேகமாகப் புழக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. மேலும்,மேலும் ஜனநாயக அரசுகள் எழுந்தது இச்சொல்லை அரசியல் தளத்தில் அடிக்கடி பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப்பற்றிய மோதிலால் நேரு கமிட்டி அறிக்கை (1928) முழுக்க முழுக்க மதச்சார்பின்மை பண்பு கொண்டதாக இருந்தாலும் அதில் ஓரிடத்தில் கூட இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. காந்தி,ஜவகர்லால் நேரு,மவுலானா ஆசாத் மார்ச் 1931 ல் வெளியிட்ட கராச்சி அறிக்கை அரசு எம்மதச்சார்பும் கொண்டிருக்கக் கூடாது என்று வலியுறுத்தியது. மதச்சார்பின்மையே இதன் முக்கிய அங்கம் என்றாலும் அச்சொல் இந்தத் தீர்மானத்திலும் பயன்படுத்தப்படவில்லை. 1933 இல் காந்தியின்
எழுத்துக்கள் பேச்சில் தொடர்ந்து மதச்சார்பின்மை என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. மத்திய சட்டசபையில் இரண்டு மசோதாக்கள் சட்டமாகக் காத்திருந்தன. அவற்றுள் ஒன்று தீண்டாமையோடு தொடர்புடையது. காந்தி இந்த மசோதாவை ஆதரித்து எழுதினார். மனித குலத்தைப் பிரித்துப்பார்க்கும் ஒரு பாரம்பரியத்தை முறையாக நீக்கும் இந்த மதச்சார்பற்ற சட்டத்தைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார். மே 6, 1933 இல் தீண்டாமையை ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தின் சட்டமானது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்.

மேலும் நவம்பர் 1933 இல் இச்சட்டம் மத ரீதியான செயல்களில் தலையிடுகிறது என்று குரல்கள் எழுந்த பொழுது மதத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட்ட தருணங்கள் ஏராளமாக உள்ளன என்று குறிப்பிட்டார். தேவையில்லாமல் அரசு மத ரீதியான செயல்களில்,நம்பிக்கைகளில் தலையிடுவது தான் தவறு இங்கே சூழல் அப்படியில்லை என்றும் காந்தி வாதாடினார்.

ஜனவரி 27, 1935 அன்று காந்தி மத்திய சட்டசபையின் சில உறுப்பினர்கள் முன் உரையாற்றினார். அப்போது “ஒட்டுமொத்த இந்துக்களின் கருத்தும் தீண்டாமையை ஒழிப்பதற்கு எதிராக இருக்குமென்றாலும் சட்டசபை போன்ற மதச்சார்பற்ற அமைப்புகள் இப்படிப்பட்ட எண்ணப்போக்கை ஏற்றுக்கொள்ளவே கூடாது” என்று வாதாடினார் (காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகள் )

ஜனவரி 20, 1942 அன்று பாகிஸ்தான் கோரிக்கையைப் பற்றிக் காந்தி பேசுகிற பொழுது இப்படிச் சொன்னார். : வரி,சுகாதாரம்,காவல்,நீதி மற்றும் பொதுப் பயன்பாட்டு அம்சங்களைப் பயன்படுத்துவதில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே என்ன முரண்பாடு ஏற்பட்டு விடப்போகிறது ? மதரீதியான நம்பிக்கைகளில் மட்டுமே வேறுபாடுகள் ஏற்படும் ; ஒரு மதச்சார்பற்ற அரசில் இவை கவலைப்பட வேண்டிய அம்சமாக இருக்காது. அவரவர்கள் அவரவரின் நம்பிக்கையைப் பின்பற்றலாம்.” என்று அழுத்திச்சொன்னார். காந்தியின் மதச்சார்பின்மை என்கிற சொல்லை பயன்படுத்தியதை தற்கால அரசியல் வாதங்களில் நேருவியம் என்று விவரிக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நேருவுக்கு ஒப்புமை இல்லாத / நேருவால் ஏற்றுக்கொள்ள முடியாத மதச்சார்பின்மைக்கான எந்த அர்த்தத்தையும் காந்தி அச்சொல்லுக்கு வழங்கவில்லை என்பதே ஆகும்.

இதே கருத்து விடுதலை நெருங்கிய பொழுதும்,அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் துவங்கிய பொழுதும் வலியுறுத்தப்பட்டது.

”நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும்,அரசும் பிரிந்தே இருக்கும். என் மதத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் ; அதற்காக நான் என்னுயிரையும் தருவேன். அதே என் சொந்த விஷயம். இதோடு அரசுக்கு எந்த வேலையுமில்லை. அரசு மதச்சார்பின்மை,சுகாதாரம் ,தகவல் தொடர்பு,அயலுறவு,நிதி ஆகியவற்றையே கவனித்துக்கொள்ளும். என் மதம் அல்லது உங்கள் மதத்தின் செயல்பாடுகளில் அது தலையிடாது. அது அவரவரின் தனிப்பட்ட கவலை. “ என்று செப்டம்பர் 1946 இல் ஒரு கிறிஸ்துவ மிஷனரியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது காந்தி குறிப்பிட்டார் காந்தி கல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியின் கெல்லாஸ் பாதிரியாருடன் ஆகஸ்ட் 16 இல் பேசியதை ஹரிஜன் ஆகஸ்ட் 24 அன்று இவ்வாறு பதிவு செய்தது. “ காந்தி அரசாங்கம் கண்டிப்பாக மதச்சார்பற்ற இருக்க வேண்டும் என்கிற தன் கருத்தை வெளிப்படுத்தினார். மதக்கல்வியை அரசாங்க பணத்திலிருந்து அது வளர்க்க கூடாது என்றும் அவர் சொன்னார்.நாட்டின் பொதுச்சட்டத்தை ஒரு குடிமகன் ஒப்பி நடக்கும் வரை அவரின் மத நம்பிக்கைகளில் அரசு தலையிடக்கூடாது ; மிஷனரியின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. அதே சமயம் அரசு மிஷனரிக்கு எந்தப் புரவலும் ஆங்கில அரசு செய்தது போலத் தராது என்றும் சொன்னார். இந்தப் புரிதலே சட்டத்தின் 25, 26 ,27 பிரிவுகளில் வெளிப்படுகிறது

இந்தச் சந்திப்புக்கு அடுத்த நாளே தன்னுடைய இதே கருத்தை நர்கேல்தேங்கா எனும் இடத்தில் காந்தி அழுத்திச்சொன்னார். அதை இவ்வாறு ஹரிஜன் இதழ் குறிக்கிறது,”தன்னுடைய வாழ்நாள் முழுக்க எல்லா மக்களும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமஉரிமை பெற வேண்டும் என்பதற்காகவே தான்
பாடுபட்டதாகக் காந்தி குறிப்பிட்டார். அரசு முழுமையாக மதச்சார்பற்று இருப்பது அவசியம் என்றும் சொன்னார். எந்த மத அமைப்பும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாது என்றும் அவர் சொன்னார். எல்லாரும் சட்டத்தின் பார்வையில் சமம் என்றும் குறிப்பிட்டார். “ ஐந்து நாட்கள் கழித்துத் தேசபந்து பூங்காவில் அவர் பேசுகிற பொழுது ,” மதம் என்பது தனிப்பட்ட சமாசாரம் ,அதை அவரவரின் தனிவாழ்க்கை வெளியோடு குறுக்கிக்கொண்டால் அரசியல் வாழ்க்கையில்
எல்லாமும் சிறப்பாக இருக்கும் . அரசாங்கத்தின் அதிகாரிகளும்,பொதுமக்களும் மனதில் கொண்டு மதச்சார்பற்ற அரசை உருவாக்க முழு மனதோடும்,பொறுப்போடும் பாடுபடுவார்கள் என்றால் உலகத்துக்கே பெருமை தருகிற ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைக்க இயலும்.” என்றார்

நவம்பர் 15, 1947 இல் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அகதிகளின் மறுவாழ்வு சார்ந்து எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. எல்லாக் குடிமக்களும் சம உரிமைகளை அனுபவிக்கிற ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை அமைப்பதே காங்கிரசின் நோக்கம் என்றும் குறிக்கப்பட்டது. காந்தி இந்தத் தீர்மானங்களை மனதார வரவேற்றார். “இந்தத்தீர்மானங்கள் மிகமுக்கியமானவை ; இவற்றை நான் ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்குவேன்” என்று அப்பொழுது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் சொன்னார்.

குருநானக்கின் பிறந்தநாள் அன்று பேசிய காந்தி (நவம்பர் 28, 1947 ) அரசுப்பணத்தைக் கொண்டு சோமநாதர் ஆலயத்தைப் புனரமைப்பதை கடுமையாக எதிர்த்தார். : “நாம் எல்லாருக்குமான அரசை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு மதநம்பிக்கை கொண்ட அரசில்லை. இது எம்மதத்தையும் சார்ந்து செயல்படும் அரசுமில்லை. ஆகவே அரசுப்பணத்தை மதம் சார்ந்து அரசாங்கம் செலவிடக்கூடாது.” என்பதே அவரின் தெளிவான வாதமாக இருந்தது. காந்தி மதச்சார்பற்ற ஒரு அரசை ஆதரித்த பொழுது ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை அக்காலச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று புரிந்துணர்வு கொண்டிருந்தார். இந்தப் புரிந்துணர்வு 1969க்கு பின்னர்
கண்டுகொள்ளப்படாமல் போனதால் ஹிந்துத்வா சக்திகள் நாட்டில் மீண்டும் வளர்ச்சி பெற்றன.

காந்தி சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இப்படி எழுதினார் “ நன்கு கட்டமைப்பக்பட்ட, ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றும் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மக்களுக்குச் சேவை செய்வதே அவர்களின் குறிக்கோளாகவும்,சாசனமாகவும் இருக்கும். அமைச்சர்கள் இவர்களிடம் இருந்து ஊக்கம், வழிகாட்டுதல் பெற்று செயலாற்ற வேண்டும். இந்தப் பணியாளர்கள் மதச்சார்பற்ற அரசுக்கு வழி காட்டுவார்கள். “

காந்தி-நேரு உறவில் படைப்பாக்க அழுத்தங்கள் இருக்கவே செய்தது. அவர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தன. காந்தியின் மதம் பற்றிய பார்வை நேரு பகிர்ந்துகொள்ளவில்லை. தங்களின் கருத்து முரண்பாடுகளைப் பொதுவெளியில்,தங்களுக்குள் நிகழ்ந்த கடிதப்பரிமாற்றங்களில்,நேரு தன்னுடைய நாட்குறிப்புகளில் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவற்றை மட்டுமே பெரிதுபடுத்தியும்,அல்லது இவற்றை மட்டுமே கவனத்தில் கொண்டும் சில எழுத்தாளர்கள் இயங்கினார்கள். இந்தியா மதச்சார்பின்மையைத் தன் பண்பாகக் கொண்ட தேசம் என்கிற குறிக்கோளிலும், இந்திய தேசம் என்பது பலதரப்பு மக்களை ஒன்றாக இணைத்து நகரும் அமைப்பு என்பதிலும் காந்தி, நேரு இருவரும் ஒரே பார்வையை,அழுத்தமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள். இதனை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வகையில் அவர்கள் அன்றைய ஹிந்து மகாசபா,முஸ்லீம் லீக்,விடுதலைக்கு முந்திய சி பி ஐ ஆகியன தேசம் என்பதை மதம் சார்ந்த ஒரு பகுப்பாகப் பார்த்ததை விடுத்து எல்லாத்தரப்பு மக்களையும் உள்ளடக்கிய
பிராந்திய தேசியத்தைக் காந்தி மற்றும் நேரு வலியுறுத்தினார்கள் என்பதே உண்மை. ஒத்துச்செல்லும் கருத்துகளை விட முரண்பாடுகள் ஆழமாக இருந்திருந்தால் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்க முடியாது என்பதே யதார்த்தம். காந்தியும் நேருவும் இணைந்து வெகுகாலம் ஒன்றாகச் செயல்பட்டார்கள் என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நேருவை நான்கு முறை காந்தி பரிந்துரைத்திருக்கிறார் (1929, 1935 (1936 தலைவர் பதவிக்காக ), 1938-39 (மார்க்சிய சோசியலிஸ்ட் நரேந்திர தேவா பெயரோடு இணைத்து பரிந்துரைத்தார் ) இறுதியாக 1946 இல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பல்வேறு கருத்தியல் தளங்களில் இருந்து காந்தி-நேரு பிரிவு என்கிற ஒன்றை பெரிதுபடுத்திக் காட்டி அப்பிரிவினையை அதிகப்படுத்தும் செயல்களில் சில சக்திகள் ஈடுபட்டன. காந்தியின் ரத்தம் தோய்ந்த கரங்களோடு இருந்த ஹிந்துத்துவ சக்திகள் இதை முக்கியப்பணியாகச் செய்தன. இப்படிக் காந்தி,நேரு இருவரையும் பிரித்துக் காண்பிப்பதன் மூலம் நேருவை சுலபமாகக் காந்தியிடம் இருந்து பிரித்துக்காண்பித்துக் கருத்தியல் ரீதியாகத் தாக்கமுடியும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் 1969க்கு பின்னர் இரண்டாக உடைந்த பின் இந்தக் காந்தி-நேரு பிரிப்பு அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு அதைக்கொண்டு எந்தப்பக்கம் யார் என்பதைப் பகுக்கப்பயன்படுத்தபட்டது . இதில் பெரிய கேலிக்கூத்தாக வசந்த் சத்தே முதலிய ஆர்.எஸ்.எஸ் சில் இருந்த (1939-41 வரை ) தலைவர்கள் கூடத் தங்களை நேருவியவாதிகள் என்று காட்டிக்கொண்டார்கள் .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தோடு 1940களில் இணைந்து இருந்த பலர் (இவர்கள் தற்காலக் கம்யூனிச இயக்கத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை ) இந்த நேரு-காந்தி பிரிவினையை அழுத்தமாக வலியுறுத்தினார்கள். அதில் சிலர் தங்களை நேருவியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அதே சமயம் தேசம் சார்ந்த பார்வையில் அல்லது முஸ்லிம் அடையாளத்தை முன்னிலைப்படுத்திய முஸ்லீம் லீகின் இரு நாட்டுக்கொள்கை ஆகியவற்றில் நேரு-காந்தி இருவரில் ஒருவரின் பார்வையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வந்த பொழுது அவர்கள் நேருவின் பார்வையை நேருவியவாதிகள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கொண்டிருக்கவில்லை. காந்தியவாதிகளும் காந்தியிடம் இருந்து நேருவை பிரிப்பதை அதிகப்படுத்தினார்கள். காந்திக்கும்,நேருவுக்கும் இருந்த குறிப்பிட்ட வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி அக்காலத்தில் நடந்த சமகால மாற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொண்டு நின்றார்கள். இவை எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

(இக்கட்டுரை அனில் நௌரியாவின் Gandhi on secular law and state எனும்
கட்டுரையின் மொழியாக்கம். அவரின் அனுமதிபெற்று இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது )

புகைப்படம்: மதக்கலவரத்தால் சிதறுண்ட பீகார் மாநில வீடொன்றில் காந்தி

நன்றி: நவ்ஜீவன் அறக்கட்டளை

தமிழில்: பூ.கொ. சரவணன்

தலித் விடுதலையை சீர்குலைத்த பூனா ஒப்பந்தம்: 


பூனா ஒப்பந்தம் கையெழுத்தான தினம் இன்று.


தனித்தொகுதி முறையை அம்பேத்கர் வென்றெடுத்த நிலையில், உண்ணாவிரதம் இருந்து காந்தி அதனைத் தட்டிப் பறித்தார். இதைக்குறித்து ஓரிரு கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணம். முதலாவதாக ரோஹித் வெமுலாவின் மரணத்தை அடுத்து சோயப் தானியல் எழுதிய கட்டுரையில் இருந்து தனித்தொகுதி முறை, தற்போதைய தேர்தல் முறை குறித்த பத்திகள் மட்டும் வாசிப்புக்காக:

தேர்தல் முறை குறித்த அம்பேத்கரின் விமர்சனம்: … அம்பேத்கர் காலம் தொடங்கித் தலித் இயக்கமானது தேர்தலில் தலித்துகளுக்கு இடங்களை ஒதுக்கும் முறையானது பயனளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்த வண்ணம் உள்ளது.

1931-ல் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டில், இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பு சட்ட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அம்பேத்கர் தலித்துகளுக்குத் தனித்தொகுதிகள் வழங்கப்பட வேண்டுமென வாதிட்டார். இந்த முறையில் தங்களுக்கான தலித் பிரதிநிதிகளைத் தலித் வாக்காளர்களே தேர்வு செய்வார்கள். காங்கிரசின் தலைவரான காந்தி இதனை எதிர்த்தார். இதற்கு மாறாக, சாதி அடிப்படையில் தேர்தல் தொகுதிகள் அமையக்கூடாது என்று எதிர்த்தார் (தற்போதைய முறையின் முன்னோடி). இதைக்குறித்து, 1955-ல் அம்பேத்கர் பேசிய போது, அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையானது “இந்துக்களுக்கு அடிமையாக இருக்கும், சுதந்திரத்திறமற்ற ஆட்களையே” தலித் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கும் என்று நேரடியாகச் சாடினார். 

காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததால், அம்பேத்கர் வேறு வழியின்றி ஒப்புக்குள்ளும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். அவர் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி, தலித் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. அம்பேத்கருக்கு ஒரே ஒரு சிறிய சலுகையாக, முதல்கட்டத் தேர்தலில் ஒவ்வொரு தலித் தொகுதியிலும் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முதல் கட்டத் தேர்தலில் வெற்றி பெறும் நான்கு வேட்பாளர்களுக்கு இறுதியாக அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பார்கள். 

அம்பேத்கர் சரியாகக் கணித்ததைப் போலவே, இத்தகைய கூட்டு வாக்களிப்பு முறை அவருடைய கட்சிக்கு பேரிடராகவும், காங்கிரசிற்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. காங்கிரஸ் கட்சின் தலைமைப் பொறுப்பில் முழுக்க முழுக்க மேல்சாதியினரே ஆதிக்கம் செலுத்தினாலும் இத்தகைய கூட்டுத் தொகுதி முறை அதற்கே பயனளித்தது. பூனா ஒப்பந்தத்திற்குப் பின்னர் நடைபெற்ற 1937-ம் ஆண்டுத் தேர்தலில் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிப் பெற்றது. அம்பேத்கர் தோற்றுவித்து இருந்த விடுதலை தொழிலாளர் கட்சி வெறும் 12 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அடுத்து நடந்த 1946 தேர்தலில் காங்கிரசின் வெற்றியும், அம்பேத்கரின் தோல்வியும் இன்னமும் அதிகரிக்கவே செய்தது. காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட 151 தொகுதிகளில் 123 இடங்களில் வெற்றிப் பெற்றது. அம்பேத்கரின் கட்சி இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது,

”மோசடியான பிரதிநிதித்துவ முறை’:

இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பேத்கரை கடுமையாகக் கோபப்படுத்தியது. கூட்டு வாக்களிப்பு முறையே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று அம்பேத்கர் குற்றஞ்சாட்டினார். 1946 -ம் ஆண்டுத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களித்த நிலையில், தன்னுடைய கட்சி 26% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 29% வாக்குகளையும் பெற்றதை அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். ஆனால், அனைத்து சாதிகளும் வாக்களித்த இறுதித் தேர்தல் முடிவுகளில் அறுபது மடங்கு இடங்களைக் காங்கிரஸ் கட்சி வென்றது. ஆகவே, இந்தத் தேர்தலில் இறுதியாக வென்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் உண்மையான தலித் பிரதிநிதிகள் இல்லையென்று அம்பேத்கர் வாதிட்டார். 1946-ம் ஆண்டின் இறுதியில் அம்பேத்கர் இப்படிப் பேசினார்:

‘பட்டியல் சாதியினரின் உரிமைகளுக்கு எப்போதும் சட்டமன்றத்தில் போராடக்கூடிய நம்பகமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பட்டியல் சாதியினரே தேர்ந்தெடுப்பதைத் தனித்தொகுதி முறை மட்டுமே உறுதி செய்யும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தீண்டப்படாத மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை ஒழித்துக் கட்ட முயன்றால் அவற்றை எதிர்க்கவும் தனித்தொகுதிகள் தேவைப்படுகின்றன. வெவ்வேறு மாகாணங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பட்டியல் சாதி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறவைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றி பெற்ற வேட்பாளர்களில் எவரும் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை, பட்டியல் சாதியினரின் வலிகளை வலிமையாகக் கொட்டித் தீர்ப்பதற்காக ஒரே ஒரு வெட்டுத் தீர்மானத்தைக் கூடக் கொண்டுவரவில்லை […] இப்படிப்பட்ட பட்டியல் சாதி உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்புகிற மோசடிக்கு பதிலாகப் பட்டியல் சாதியினருக்குச் சட்டமன்றத்தில் இடமே தராமல் இருந்துவிடலாம்’

இத்தகைய கவலை அம்பேத்கரை மட்டுமே அரித்துக் கொண்டிருக்கவில்லை. ஆய்வாளர்கள் ஆலிவர் மென்டெல்சொஹ்ன் & மரிக்கா விக்ஸியன்யாண்ட் ஆகிய இருவரும் எம்.சி.ராஜா அவர்களை ‘விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் அம்பேத்கருக்கு அடுத்தபடியாக ஆகப்பெரிய தீண்டப்படாதவர்களில் இருந்து எழுந்த அரசியல்வாதி’ என்று வர்ணிக்கிறார்கள். அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் “காங்கிரஸ் தலைமையில் கூட்டு வாக்களிப்பு முறையால் சாதி இந்துக்களோடு இணைந்து கொண்டு நுழைகிற தலித்துகள், எங்களுக்கு அரணாக இருப்பதைவிட, சாதி இந்துக்களின் தலைமையில் எங்களுடைய சுதந்திரத்தை அழிக்கவும், எங்கள் கழுத்துகளை வெட்டி சாய்க்கவும் காங்கிரசிற்குத் துணை போகிறார்கள் என்று எண்ணுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்’ என்று கசப்போடு எழுதினார்.

விடுதலைக்குப் பிறகு:

விடுதலைக்குப் பிறகு தலித்துகளுக்குத் தனித்தொகுதி என்கிற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விட்டது. முதலாவதாக முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறைய பிரிவினைக்கு அடிகோலிய முதன்மையான காரணம் என்று பரவலாகக் கருதப்பட்டது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. பிரிவினை ஏற்படாமல் போயிருந்தாலும் தன்னுடைய இருபதாண்டு கால நிலைப்பாட்டைக் காங்கிரஸ் மாற்றிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் வெகு சொற்பம். உண்மையில், இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் தலித்துகளுக்குப் பூனா ஒப்பந்தத்தில் தரப்பட்டிருந்த உரிமைகளை இன்னமும் குறைத்தது. முந்தைய முறையில் முதல் கட்டத் தேர்தலில் தலித்துகள் மட்டுமே வாக்களிப்பார்கள் என்றிருந்ததை அடியோடு கைகழுவியது. செய்வதறியாமல் திகைத்து நின்ற அம்பேத்கர், கடைசி முயற்சியாகத் தலித்துகளுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் குறைந்தபட்சம் 35% தலித் ஓட்டுக்களையாவது பெற வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவந்தார்.

இதன்மூலம், தலித் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சமுகத்தின் உண்மையான பிரதிநிதிகளாகத் திகழ்வதை உறுதி செய்ய முடியும் என்று கருதினார். வல்லபாய் படேல் அதனை முழுமையாக நிராகரித்தார். “இதனை நான் எதிர்ப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? பெரும்பான்மையான இந்துக்கள் உங்களுடைய (தலித்துகளின்) நலத்தையே நாடுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே செல்ல முடியும்? அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பட்டியல் சாதியை சேர்ந்தவர் என்பதை மறந்து விடுங்கள்…இத்தகைய தாழ்வு மனப்பான்மையைத் தாங்கிக் கொண்டு இருந்தால், அவர்களால் சமூகத்திற்குச் சேவையாற்ற முடியாது.”

விடுதலை இந்தியாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் அம்பேத்கரின் கட்சி இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அனைவரும் வாக்களித்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையானது பேரிடராக மாறியது என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தடைந்தார். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலித் நலன்களை முன்னிறுத்தவில்லை என்பது ஒரு புறம். மறுபுறம், இத்தகைய தொகுதி ஒதுக்கீட்டு முறையால், பிற சமூகக் குழுக்களோடு தலித்துகளால் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்ள இயலாமல் போனது. 1955-ல் அம்பேத்கரின் கட்சியானது தலித்துகளுக்கு என்று தொகுதிகளைத் தேர்தல்களில் ஒதுக்குவதைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.

அம்பேத்கரின் கருத்து 1932-ல் புறக்கணிக்கப்பட்டதைப் போன்று, 1955-லும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்டது. இந்திய நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு அப்படியே தொடர்கிறது. தலித்துகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து கிளர்ந்து எழும் “உயர் சாதி” குழுக்கள் நாடாளுமன்றத்தில் தலித்துகளுக்குத் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சட்டை செய்வதே இல்லை. இந்த முறை அதிகார அமைப்பினில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது தெளிவாக்குகிறது. இதனால், இம்முறை “மோசடியான பிரதிநிதித்துவம்” என்று தெளிவாகிறது. கிறிஸ்தோப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுவதைப் போல, விடுதலையடைந்த காலத்தில், “தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டு காங்கிரஸ் தலித் அல்லாதோர் வாக்குகளைக் கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதில் தேர்ச்சி மிக்கதாக மாறியிருந்தது”. இம்முறையைப் பாரதி ஜனதா கட்சி தற்போது கைக்கொண்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச தலித் எம்பிக்களைக் கொண்டுள்ள கட்சியாக அது திகழ்ந்தாலும், ரோஹித் வெமுலாவின் தற்கொலையைப் போன்ற பெரும் தலித் துயரத்தை எதிர்கொள்வது எப்படி என்று புரியாமல் அக்கட்சி திகைத்து நிற்கிறது.

மூலம்:  https://scroll.in/article/802377/despite-having-40-dalit-mps-why-has-the-bjp-ignored-dalit-complaints-dr-ambedkar-has-the-answer

தமிழில்: பூ.கொ.சரவணன்

அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல்


அண்ணல் அம்பேத்கரை மே தினத்தில் நினைவுகூர்தல் -முனைவர் சுமீத் மஹஸ்கர்
கடந்த சில ஆண்டுகளில் டாக்டர் அம்பேத்கரை ‘மையநீரோட்டப்படுத்தும்’ முயற்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. வலதுசாரிகள், இடதுசாரிகள் என்று பல தரப்பிலும் உள்ள அரசியல் கட்சிகள் அண்ணல் அம்பேத்கரை தன்வயப்படுத்த அரும்பாடுபடுகிறார்கள். ஆய்வுலகிலும் அண்ணல் அம்பேத்கர் குறித்து எழுதுவது வாடிக்கையாகி விட்டது . முன்முடிவோடு கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணலின் எழுத்துகளை மறைப்பதோடு, அவரின் சமூக, அரசியல் தலையீடுகளையும் கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நிகழ்ந்தது. இதனை மேற்சொன்ன முயற்சிகள் கேள்விகேட்கவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ தவறின.
தொழிலாளர் பிரச்சனையை அம்பேத்கர் எப்படி அணுகினார் என்பது இதற்குச் சான்று பகர்கிறது. பல அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் அம்பேத்கர் “சாதி பிரச்சனையை” மட்டுமே கருத்தில் கொண்டு அதனை எதிர்கொண்டார். அவர் “பெரும்” முக்கியத்துவம் மிக்க “வர்க்க பிரச்சனையை” கண்டுகொள்ளவில்லை என்று வாதிடுவதைக் கண்டிருக்கலாம். இத்தகைய பார்வை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் பம்பாய் நகரத்தில் எழுந்த கம்யூனிச அரசியலையும், அம்பேத்கரின் தலைமையில் சாதி ஒழிப்புக்காக அணிதிரண்ட புரட்சிகரமான தலித் அரசியலையும் கணக்கில் கொள்ளத் தவறுகின்றன. இவ்விரு அரசியல் இயக்கங்களும் களத்தில் “தொழிலாளர் பிரச்சனைகளில்” தீவிரமாக மோதிக்கொண்டன. அவை அரிதாக ஒன்றிணைந்தும் இயங்கின. இவ்விரு இயக்கங்களிடையே நிகழ்ந்த பலதரப்பட்ட ஊடாட்டங்கள் “உழைக்கும் வர்க்க ஒற்றுமையின்” போதாமைகளையும், இணைந்து இயங்குவதற்கான சாத்தியங்களையும் ஒருங்கே முன்னிலைப்படுத்தின.

ஜவுளி ஆலைப் போராட்டங்கள்

அம்பேத்கரின் ஆரம்ப கால தொழிலாளர் இயக்க செயல்பாடுகள் பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் யூனியனில் இணைந்து இயங்குவதாக இருந்து. இந்த தொழிலாளர் அமைப்பை N.M. ஜோஷி,R.R.பக்ஹலே ஆகியோர் துவங்கினார்கள். இந்த ஆலைகளில் நெசவு நிகழும் துறைகளில் அதிகபட்ச கூலி வழங்கப்பட்டு வந்தது. இந்த வேலைகளில் தலித்துகள் ஈடுபட்டால் “தீட்டாகி”விடும் என்று சொல்லி புறக்கணிக்கப்பட்டார்கள். ஆடை இழையை நெய்வதற்கு உதவும் பாபினை மாற்ற வேண்டும் என்றால், நூலை தங்கள் எச்சிலால் தொழிலாளர்கள் ஈரப்படுத்தி முடிச்சிட வேண்டும். மராத்தா சாதியை சேர்ந்த தொழிலாளர்கள் இப்பணியில் தலித்துகள் ஈடுபட்டால் அது தங்களுக்கு தீட்டாகி விடும் என்று வாதிட்டார்கள். இதைக்காரணம் காட்டி தலித்துகளை நெசவுப் பணிகளில் ஈடுபடுத்த மறுத்தார்கள்.
அண்ணல் அம்பேத்கர் இப்பிரச்சனையை புகழ்பெற்ற 1928 பம்பாய் ஜவுளி தொழிலாளர் போராட்டத்தின் போது கவனப்படுத்தினார். அவர் முன்வைத்த உரிமைகளுக்கான கோரிக்கைகளில் ஆலையின் எல்லா தொழில்களிலும் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என்பதும் இருந்தது. அதனை கம்யூனிச தலைவர்கள் ஏற்க மறுத்தால் தலித் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டாமென தான் தடுக்கப்போவதாகவும் அம்பேத்கர் அச்சுறுத்தினார். பெரும் தயக்கத்தோடு அம்பேத்கரின் உரிமைக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அம்பேத்கர் மேற்சொன்ன போராட்டத்தை ஆதரித்தார் என்றாலும், 1929-ல் நடந்த ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை எதிர்த்தார். இப்போராட்டத்தின் போது தலித் தொழிலாளர்கள் ஆலைகளுக்குள் பணியாற்ற போவதற்கான வசதிகளை அவரே முன்னின்று ஏற்படுத்திக் கொடுத்தார்.

A BR Ambedkar statue

இடதுசாரி விமர்சகர்கள் மேற்சொன்ன போராட்டத்தில் அம்பேத்கர் “தொழிலாளர் ஒற்றுமையை” ‘சாதியைக்’ கொண்டு தகர்த்தெறிந்ததோடு நில்லாமல், தொழிலாளர் போராட்டத்தை பிசுபிசுக்க வைக்கும் வண்ணம் ஆலைகளுக்குள் கருங்காலிகளை அனுப்பி வைத்தார் என்று சாடுகிறார்கள். 1928-ல் நடந்த போராட்டம் தலித் தொழிலாளர்களை கடன் சுமைக்கு ஆட்படுத்தியதோடு, அவர்கள் பெரும் அவமானங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. தலித் அல்லாத தொழிலாளர்களை போல நெடுங்காலம் போராட்டங்கள் தொடர்ந்தால் தங்களை ஜீவித்துக் கொள்வதற்கு என்று விவசாய நிலங்கள் எதுவும் தலித்துகளிடம் இல்லை. ஆகவே, இன்னொரு நீண்ட போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் தலித்துகள் இல்லை என்பது அம்பேத்கரின் கருத்தாக இருந்தது.

இதே காரணங்களுக்காக 1934-ல் கம்யூனிஸ்ட்கள் நடத்திய பம்பாய் ஜவுளி ஆலைத் தொழிலாளர் போராட்டத்தையும் அம்பேத்கர் எதிர்த்தார். அதே வேளையில், நீதிமன்றங்களில் இப்போராட்டத்தின் தலைவர்களுக்காக அம்பேத்கர் வாதாடவும் செய்தார். இப்போராட்டங்களில் ஈடுபட்டதற்காக வழக்குகள் பாய்ச்சப்பட்ட நிலையில், ஒரு தொழிற்சங்க தலைவருக்காக அம்பேத்கர் திறம்பட வாதிட்டதால் அவர் விடுதலையானதோடு பிற கம்யூனிச தலைவர்களின் விடுதலைக்கும் அதுவே வழிவகுத்தது.

‘கட்டாய ஊழியத்தை ’ எதிர்ப்பது

உழைக்கும் வர்க்கத்தின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காக பாடுபடுவதற்காக அம்பேத்கர் 1936-ல் சுதந்திர தொழிலாளர் கட்சியை தோற்றுவித்தார். இக்கட்சி எந்த ஒரு ஒற்றை மதம், சாதியையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று அறிவித்தது. மேலும் தீண்டப்படுபவர்-தீண்டப்படாதோர், பிராமணர்-பிராமணரல்லாதோர், இந்து-முஸ்லிம் இடையே எந்த பாகுபாடும் இல்லை என்று முழங்கியது. அடுத்தாண்டு நிகழ்ந்த தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தொழிற்சாலை சச்சரவுகள் சட்டம்,1938 ஐ எதிர்ப்பதில் அக்கட்சி முதன்மையான பங்காற்றியது. இச்சட்டமானது, சமரசத்தை கட்டாயமாக்கியதோடு சட்டத்துக்கு புறம்பான போராட்டங்களில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கியது.
இந்த மசோதாவை எதிர்த்து பம்பாய் சட்டமன்றத்தில் உரையாற்றிய அண்ணல் அம்பேத்கர், போராட்டங்களில் கலந்து கொள்வதற்காக தொழிலாளர்களை தண்டிப்பது என்பது “தொழிலாளரை அடிமையாக்குவது அன்றி வேறொன்றுமில்லை” என்று வாதிட்டார்.

மேலும், அடிமைமுறை என்பது “கட்டாய ஊழியமே ஆகும்.” என்றும் முழங்கினார். மேலும், சட்டமன்றத்துக்கு வெளியே இந்த மசோதாவிற்கு எதிராக ஒரு நாள் போராட்டத்தை நவம்பர் 7, 1938-ல் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். இம்மசோதா நிறைவேறாமல் தடுக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட்கள், சோசியலிஸ்ட்கள் வழங்கிய ஆதரவையும் அம்பேத்கர் வரவேற்றார்.

கிராமப்புறத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பை மாற்றுவது:

கம்யூனிஸ்ட்கள் முன்னின்று நடத்திய தொழிலாளர் அரசியல் எல்லாம் நகர்ப்புற தொழிற்சாலைகள் சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தன. அம்பேத்கரோ கிராமப்புறத்தில் வழக்கத்தில் இருந்த மகர் வட்டன் முறையை எதிர்த்து போரிட்டார். இதன்மூலம் சாதி அடிப்படையில் தொழில்களை வகுத்து பாகுபடுத்தும் படிநிலையை கிடுகிடுக்க வைத்தார். மகர் வட்டன் என்பது கிராமத்தின் சமூக-பொருளாதார அமைப்பினில் மகர்களுக்கு வழங்கப்படும் நிலமாகும். இந்த நிலத்திற்கு பதிலாக மகர்கள் பலதரப்பட்ட கடுமையான வேலைகளை செய்ய வேண்டும் என்பதோடு, கடும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார்கள்.

இவ்வாறு கிராமப்புறத்தின் பொருளாதார அமைப்புகளின் உழைப்பை சுரண்டும் முறைகள் சாதி அமைப்போடு ஆழமாக பின்னிப்பிணைந்து இருந்தன. அம்பேத்கர் இவற்றை அறவே அழித்தொழிக்க பாடுபட்டார். அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிரான போரானது இத்தகைய அடிமைப்படுத்தும் அமைப்புகளை எதிர்த்து போர் தொடுக்காமல் முழுமையடையாது என்று அறிவித்தார். அம்பேத்கர் 1928-ல் பம்பாய் சட்ட மேலவையில் மகர் வட்டன் முறையை ஒழிப்பதற்கான மசோதாவை , தாக்கல் செய்தார். மேலும், அரசானது மகர் வட்டன்தாரர்களை அரசாங்க ஊழியர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கான உழைப்புக்கான ஊதியத்தை கிராமத்தினர் வழங்க அடிகோல வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆரம்பத்தில் பிராமணர் அல்லாதோர் இம்மசோதாவை ஆதரித்தாலும், பின்னர் படிப்படியாக இதனை எதிர்த்தனர். மகர்கள் செய்து கொண்டிருந்த இழிவாக கருதப்பட்ட, வெறுத்தொதுக்கப்பட்ட தொழில்களை இனிமேல் யார் செய்வார் என்கிற கவலை அவர்களை ஆட்கொண்டுவிட்டது.
அம்பேத்கரின் நெருங்கிய சகாவான A.V. சித்ரே ஷெட்காரி சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு கொங்கன் பகுதியில் நிலவி வந்த கோட்டி எனும் நில வரி வருவாய் முறையை ஒழிக்க பாடுபட்டது. இம்முறையானது சிறு, குறு விவசாயிகளை சுரண்டியதோடு, அவர்களை கொத்தடிமைத்தனத்தில் உழல வைத்தது. ஆங்கிலேயே அரசு வசூலித்த வரியை போல நான்கு மடங்கு கூடுதல் வரியை இம்முறையில் செலுத்த வேண்டியிருந்தது. இம்முறையில் நிலச்சுவான்தார்களாக சித்பவன பிராமணர்கள், சில உயர்சாதி இந்து மராத்தாக்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். இம்முறையால் சுரண்டப்பட்ட பயிரிடுபவர்களாக மராத்தாக்கள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரான குன்பிக்கள், பண்டாரிக்கள், அக்ரிக்கள், தலித்துகளில் சில மகர்கள் இருந்தனர்.
பழமைவாத தேசியவாதியான பால கங்காதர திலகர் காலனிய அரசு கோட்டி முறையை ஒழிக்க முயன்ற போது கடுமையாக அதனை எதிர்த்தார். இம்முறைக்கு எதிராக கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் அம்பேத்கர் போராட்டங்கள், மாநாடுகளை நடத்தினார். அவர் பம்பாய் சட்டமன்றத்தில் கோட்டி ஒழிப்பு மசோதாவை 17 செப்டம்பர் 1937-ல் அறிமுகப்படுத்தினார். மாகாண அவைகளில், முதன்முறையாக விவசாயிகளை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பதற்கான சட்ட மசோதாவை முன்னெடுத்த சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்கரே ஆவார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வைஸ்ராயின் செயற்குழுவில் தொழிலாளர் உறுப்பினராக அம்பேத்கர் பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவை விடுதலைக்கு பிந்தைய இந்தியாவில் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியது.

பிராமணியம் எனும் இன்னொரு பெரும் பகை:

முதலாளித்துவம் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி என்கிற பார்வையில் கம்யூனிஸ்ட்களோடு உடன்பட்ட அம்பேத்கர், அதற்கு இணையான எதிரி பிராமணியம் என்று வாதிட்டார். மேலும், கம்யூனிஸ்ட்களைப் போல முதலாளித்துவ அமைப்பினை அழித்தொழித்து விட்டால் தானாகவே சாதி முறையினால் உண்டாகும் இன்னல்கள் காணாமல் போய்விடும் என்று அவர் கருதவில்லை. அண்ணல் அம்பேத்கரை பொருத்தவரை, சமூகப் பாகுபாட்டைக் களைவது என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போரில் இன்றியமையாத ஒன்றாகும். அம்பேத்கர், உழைப்பாளர் சந்தையில் தலித்துகளுக்கும் சமமான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே முதலாளித்துவத்துக்கு எதிரான போர் சாத்தியப்படும் என்று வாதிட்டார். இதனைச் சாதிக்க, சாதி அடிப்படையில் பணிக்கு ஆட்களை எடுக்கும் பிராமணிய தாக்கத்தை விடுத்து, அதனைப் புறந்தள்ளும் சந்தைப் பொருளாதார அடிப்படைகளின்படி இயங்கலாம். இது தொழிலாளர்கள் இடையே உள்ள சாதி, மத வெறுப்பைப் போக்குவதோடு, உழைப்பாளர் ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவற்றைத் தகர்த்தெறியும்.

அம்பேத்கர் “வர்க்கம்” என்பதைப் பொருள் ரீதியான உறவுகள், பொருளாதாரச் சுரண்டல் சார்ந்து மட்டும் குறுகலாக அணுகுவதை ஏற்க மறுத்தார். மூலதனம்-தொழிலாளர் இடையே உள்ள உறவை நிர்மாணிப்பதில் பொருளாதாரக் காரணிகளோடு, பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், சுரண்டல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் வாதிட்டார். மேலும், இத்தகைய பொருளாதார அடிப்படையில் அமையாத அடக்குமுறைகள், மக்கள் சுயமரியாதை மிக்க வாழ்க்கை வாழவும், பரஸ்பர மதிப்பை பெற்று வாழ்வும், பொதுச் செயல்பாடுகளில் பங்குபெறவும் விடாமல் தடுக்கின்றன. இந்தியாவில் தனிமனிதர்களின் வாழ்க்கை தேர்வுகளில் சாதி, பாலினம், மதம் பெரும் தாக்கம் செலுத்தி வரும் சூழலில் தொழிலாளர் பிரச்சனையில் அம்பேத்கரின் செயல்பாடுகள், தலையீடுகள் கருத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன.

Sumeet Mhaskar (@sumeetmhaskar) | Twitter
முனைவர் சுமீத் மஹஸ்கர் O.P.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர்.
தமிழில்: பூ.கொ.சரவணன்
கட்டுரை மூலம்: https://theprint.in/opinion/ambedkars-fight-wasnt-just-against-caste-scholars-have-overlooked-his-labour-activism/401133/

மகாத்மா ஜோதிபாய் புலேவும், இந்தியாவில் சமூகப் புரட்சியும்


பேராசிரியர் கெயில் ஆம்வேட் அவர்கள் 1971-ல் EPW-ல் எழுதிய கட்டுரையை Critical Quest பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது. இக்கட்டுரை புலே குறித்து கவனப்படுத்துபவை முக்கியமான வாதங்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மண்ணில் களமாடிய மற்ற சமூக சீர்திருத்தவாதிகளின் வரிசையில் புலே அவர்களை வைத்து பார்க்க கூடாது. அவரின் சிந்தனைகள், பார்வைகள், ஆர்வங்கள் அக்காலத்தில் இயங்கிய மேல்சாதி சமூக சீர்திருத்தவாதிகளிடம் இருந்து முற்றாக வேறுபட்டதாக இருந்தது. உயர்சாதியினரின் ‘தேசிய புரட்சி’ என்பது மேட்டுக்குடி, உயர்சாதி பாரம்பரியத்தை தேசியம் என்று இணைத்து கொண்டு முன்னிறுத்தியது. இதற்கு மாறாக விவசாயிகளின் நலன், சாதி ஒழிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான சமூக புரட்சியை ஜோதிபாய் புலே முன்மொழிந்தார்.

இந்தியாவின் இந்து கலாசாரம், சாதி அமைப்பை பிராமணியத்தை சார்ந்திருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய மரபில் நீக்கமற கலந்து விட்ட சாதி அமைப்பு, மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை வேரறுக்க கனவு கண்ட வகையில் புலே அவர்களே இந்திய மறுமலர்ச்சியின் முதன்மையான ஆளுமையாக கொண்டாடப்பட வேண்டும். அவரின் சிந்தனைகளே இந்தியாவின் சமூக புரட்சிக்கான முதல் எதிர்க்குரல்.

புலே எந்த அளவுக்கு தீர்க்கமான பார்வை கொண்டிருந்தார் என்பதை ஒரே ஒரு எடுத்துக்காட்டின் மூலம் உணரவைக்கலாம். அவரின் எழுத்துக்களில் ‘இந்து’ என்கிற பதத்தை அவர் பயன்படுத்துவதே இல்லை. இந்து கலாசாரத்தின் பகுதியாக தன்னை கருதிக்கொண்டு தன்னுடைய வாதங்களை முன்வைக்காமல் ஒட்டுமொத்த மரபையும் பகுத்தறிவு, சமத்துவ தராசுகளில் நிறுத்தி பார்த்து கூராய்வு செய்தார் புலே. இதனால் அவர் கள நிலைமை உணராத ஒருவர் என்று எண்ணிவிடக் கூடாது. அவர் எளிய மக்களின் மொழியிலேயே பேசினார். அவர்களின் பிரச்சினைகளில் தன்னுடைய கவனத்தை குவித்தார். அவர் சமூகத்திற்கு வெளியே நின்றபடி கனவுலகில் உலவிக்கொண்டு உரையாடவில்லை. பிரமாணிய கலாசார மரபிற்கு வெளியே இருந்து தன்னுடைய போரை முன்னெடுத்தார்.

ஒட்டுமொத்த சாதி அமைப்பும், அடக்குமுறை நிரம்பியிருக்கும் குடும்ப அமைப்பும் சமத்துவத்திற்கு எதிரானது. ஆகவே அவற்றை நிராகரிக்க வேண்டும். ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளும், மத பாரம்பரியங்களும் பகுத்தறிவோடு நோக்கப்படுகையில் தூக்கி எறியப்பட வேண்டியவை. மத எழுத்துக்களை ஏற்க வேண்டியதில்லை. அவற்றின் அதிகார அரசியலை துடைத்து எறிய வேண்டும். புலேவின் பார்வையில் இந்து மத நூல்கள் எல்லாம் கடந்த கால இந்திய வரலாறு குறித்து மிகக் குறைந்த புரிதலை தரும் கர்ண பரம்பரை கதைகள். அதைத்தாண்டி அவற்றால் பயன் எதுவும் இல்லை. அவை மக்களின் மனங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஆரியர்கள், பிராமணர்கள் திணித்தவை.

இப்படி பிராமணிய மரபை முற்றாக நிராகரித்த புலே அதன் இடத்தில் புரட்சிகர கலாசாரம் ஒன்றை முன்மொழிந்தார். அதனை சர்வஜனிக் சத்திய தர்மம் என்று அழைத்தார். (சமூகத்தின் உண்மையான தர்மம்). இந்த தர்மம் ஆனது அனைவருக்கும் ஆனது. சமூகத்தின் அற அடிப்படை வாய்மை, பகுத்தறிவில் பிணைந்திருக்க வேண்டும். தன்னுடைய மக்கள் அனைவரையும் சமமாக நடத்தாமல், பிரித்து அணுகும் மரபு அருவருப்பானது. சமத்துவத்தை விரும்புவனே நமக்கான இறைவனாக இருக்க இயலும். ஆகவே, இறைவனுக்கும், நமக்கும் இடையே தரகர்/அர்ச்சகர் தேவை கிடையாது.

புலேவை கிறிஸ்துவ மிஷனரிக்களின் கைக்கூலி என்று வசைபாடினார்கள். ஆனால், அவர் உயர்சாதி சமூக சீர்திருத்தவாதிகள் அளவுக்கு கூட இயேசு குறித்து அக்கறை காட்டவில்லை. அவர் கிறிஸ்துவ மதத்திற்கும் மாறவில்லை. மதம் குறித்த மரபான கேள்விகளில் அவர் தன் மனதை செலுத்தவில்லை. புலேவின் காலத்தில் பிராமணர் அல்லாத மராத்தி சமூகத்தில், குன்பிக்கள் எனும் நிலத்தை உழுபவர்களும், மராத்தாக்கள் என்பது அவர்களை சுரண்டுபவர்கள், அடக்கி ஆள்பவர்களையும் குறித்தது. இத்தகைய மராத்தாக்களை தெறிக்கும் அங்கதத்தோடு புலே எள்ளி நகையாடுகிறார்.
கடைக்கோடி மனிதனையே சமூகத்தின் மையமாக மாற்ற வேண்டும் என்று புலே வாதிட்டார். அவர் குலம்கிரி நூலில் பிராமணிய மரபு சமத்துவத்திற்கு எதிரானது என்று கூர்மையாக பேசுகிறார். சமூகத்தில் பிராமணிய கலாசாரம் மிகக் கடையவர்கள் என்று கருதிய தீண்டப்படாதோர், பெண்கள் குறித்தே புலே அக்கறை செலுத்தினார் என்பது விபத்தில்லை. அவரின் சிந்தனை எதோ அரவணைப்புவாதம் கொண்ட மேல்தட்டு பார்வையில்லை. விவசாய தொழிலாளர்கள், தீண்டப்படாதோர் ஆகிய இருவரையும் பிராமணிய அடிமைத்தனத்தில் சிக்கி பாடுபடுபவர்களாக அவர் கருதினார். அவரின் சத்தியசோதக் இயக்கம் அவரின் காலத்திற்கு பிறகு அவரை பின்பற்றியவர்களாக சொல்லிக்கொண்டவர்கள் தங்களை சாதி இந்துக்கள் என்று அழைத்து கொண்ட காலத்தில் தான் தலித்துகளின் எழுச்சி அம்பேத்கரின் வழிகாட்டுதலில் வேறு திசையில் தீவிரமாக பயணித்தது எனலாம்.

புலே பெண் விடுதலையை தன்னுடைய மூச்சாக கொண்டிருந்தார். அவரின் தோள் சேர்ந்து பணியாற்றியவர் கிருஷ்ணராவ் பாலேகர் . பெண் விடுதலையை ஆதரித்து ஆண்-பெண் வேறுபாடுகளை விமர்சித்து தாராபாய் ஷிண்டே எழுதிய நூலை கூர்மையாக பாலேகர் தாக்கி எழுதினார். தன்னுடைய தளபதி என்று கூட பார்க்காமல் அவரின் விமர்சனத்தை கடுமையாக புலே தாக்கி எழுதினார். அத்தாக்குதல் பிராமணர்கள் மீதான அவரின் எழுத்தை விட கோபத்தோடு வெளிப்பட்டது.பாலேகர் பண்டைய, அடக்குமுறையின் உருவமாக திகழ்கிற குடும்ப முறையின் குரலாக வெளிப்படுகிறார், வீட்டோடு பெண் கட்டிப்போட பட்டுள்ளார். கணவன்-மனைவி உறவானது புதிய பாதையில் சமத்துவம் மிக்கதாக பயணிக்க வேண்டும் என்று எழுதினார் புலே. இந்த கருத்து மோதல்களை தாண்டி தன்னுடைய மரணம் வரை புலேவின் இயக்கத்தில் பங்காற்றினார் பாலேகர் என்பது கவனத்துக்கு உரியது. குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை சமூக சமத்துவம் என்பது சாத்தியமே இல்லை என்று புலே தெளிவாக உணர்ந்திருந்தார்.

ஆரியர்களும், ஆரியர் அல்லாதோரும்:

ஒரு முழுமையான கருத்தியல் என்பது அடிப்படை விழுமியங்கள் கொண்டதாக மட்டும் தேங்கி விடாது. அது சமூகத்தின் தற்கால நிலை குறித்து அக்கறை காட்டி, அதனை மாற்ற முனையும். அதையே புலேவும் செய்தார். எப்படி சாதி அமைப்பு தோன்றியது என்பது குறித்து தன்னுடைய கருதுகோளை புலே முன்வைத்தார். புலேவின் பார்வையில் பிராமணர், பிராமணர் அல்லாதோர் நலன்கள் என்பதை சமரசப்படுத்தி கொள்ள வாய்ப்பே இல்லை. ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். புலே ‘பிராமண வெறுப்பு’ கொண்டிருந்தார் என்பது , சுரண்டிக்கொண்டிருந்த முதலாளிகள் மீது மார்க்சியர்கள் வெறுப்பு கொண்டிருந்தது என்பதை ஒத்ததே ஆகும் என்கிறார் கெயில் ஆம்வேட்.

புலேவின் ஆரியர் அல்லாதோர் குறித்த கருத்துகள் கலாசார, இன கூறுகளில் தான் கவனம் செலுத்தியது. பொருளாதார, அரசியல் கூறுகள் பெரிதாக கவனித்தில் கொலப்படவில்லை. அவர் காலத்தில் காலனியத்தின் பொருளாதார போக்குகள், அரசியல் தீர்வுகள் குறித்து அறிவது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனவேதான், அவரின் அக்கறை கலாசார, இன விஷயங்களில் நிலைபெற்றது. சாதி அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இருந்த பிராமணர்கள் அறிவை தங்களின் தனிச்சொத்தாக ஆக்கி கொண்டார்கள். இவர்களை அந்நியர்கள், படை எடுத்து வந்த ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்று புலே கருதினார். இவர்கள் சாதி அமைப்பை கொண்டு இம்மண்ணின் பூர்வ குடிகளை அடிமைப்படுத்தி விட்டார்கள். இவர்களிடம் தேங்கியிருக்கும் அதிகாரம், அறிவு அனைவர்க்கும் உரியதாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.

எது தேசிய கலாசாரம் என்கிற கேள்வி எழுந்த போது மேல்சாதியினர், மேல்தட்டு வர்க்கத்தினர் பிரிட்டிஷார் இந்தியா என வரையறுத்ததை இந்தியா என்று ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் கலாசாரம் என்பது இந்து கலாசாரம். அது வேத காலத்தில் ஆரிய மக்களின் படைப்பில் எழுந்தது என்றார்கள். இந்த மரபின் பிரிக்க முடியாத பண்பாக வர்ணாசிரம தர்மத்தை கருதினார்கள். ஆரியர் அல்லாதோர், இஸ்லாமியர், பழங்குடியினர், கீழ் சாதியினர், விவசாயிகள் ஆகியோரின் மரபுகளை இழிவான ஒன்றாக கருதினார்கள், தரம் தாழ்த்தி அணுகினார்கள்.

ஆரிய இனம் குறித்த கருதுகோள்கள் ஜெர்மனியில் ஒப்பீட்டு ஆய்வாளர்களின் மத்தியில் தோன்றியதை, இந்துக்களும்-பிரிட்டிஷாரும் ரத்த உறவுகள் கொண்டவர்கள் என்று மாக்ஸ் முல்லர் பிரபலப்படுத்துவதில் போய் நின்றது. இதை அப்படியே எடுத்துக்கொண்டு, ஆரிய இனம், கலாசாரமே உயர்ந்தது, உன்னதமானது. அதன் ஆன்மீக பண்பை மேற்கின் இந்தோ ஐரோப்பியர்கள் தொலைத்து விட்டார்கள் என்றார்கள். காட்டுமிராண்டிகளாக இருந்த ஆரியர் அல்லாதோர் ஆரிய பண்பாட்டின் காற்று பட்டே பண்பட்டார்கள். பிளந்து கிடந்த இந்திய சமூகத்தை சாதியே பிணைத்து என்பது அவர்களின் பார்வை. மேற்கின் பகுத்தறிவு சாதி அமைப்பை கேள்வி கேட்டது என்றால், மேற்கின் இனவெறி சாதி அமைப்பிற்கு வலிமை சேர்த்தது.

இரு பிறப்பாளர்கள் ஆன பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோர் மட்டுமே ஆரியர்கள் என அழைக்கப்பட்டார்கள். சூத்திரர்கள், தீண்டப்படாதோர், பழங்குடியினர் ஆரியர் அல்லாதோரின் வழித்தோன்றல்கள் எனப்பட்டார்கள். ஆரிய இனம் என்கிற கருதுகோளை அப்படியே ஏற்காத தயானந்தர் முதலியோர் கூட திராவிடர்கள், சூத்திரர்கள், பழங்குடியினர், இஸ்லாமியர் ஆகியோர் கலாசார, அற, அறிவுக்கூறுகளில் ஆரியர்களை விட கீழானவர்கள் என்றே கருதினார்கள். திலகர் இப்படி எழுதினார்:

ஆரியர்கள் வட துருவத்தில் இருந்து புதிய நிலங்களை தேடி நிலநடுக்கோட்டை நோக்கி பயணித்தார்கள். ஆரியர் அல்லாத இனங்களை ஆரியர்கள் வென்றது, கொன்றது, செரித்துக் கொண்டது ஆகியவை ஆரியர்களே உயர்ந்த, அவசியமான இனம் என்பதை வெளிப்படுத்துகிறது

இந்திய தேசியத்தின் அடிப்படையாக ஆரிய, வடமொழி மரபை முன்னிறுத்தியதன் மூலம் மேல்சாதி இந்துக்களின் குரல், கலாசாரமே வலுப்படுத்தப்பட்டது. வங்க அறிவுஜீவிகள் காளியை தங்களுடைய போராட்ட அடையாளமாக முன்னிறுத்தி வெகுமக்கள் மரபுகளை தூற்றினார்கள். திலகர் சித்பவன பிராமணர்களின் தெய்வமான கணபதியை சுற்றி இந்து தேசியத்தை பின்னினார். சிவாஜியை தனதாக்கி கொண்ட திலகர் அவரை பிராமணர்களின் பேச்சின் கேட்டு ஆண்டவராக, இஸ்லாமியர்களின் எதிரியாக முன்னிறுத்தினார். காந்தியின் ராம ராஜ்யம் இந்தியாவில் பெருமளவில் கவனம் பெற்றாலும், தமிழ் மண்ணில் திராவிடர்களை கொன்றொழித்த ஆரியனாக இராமன் அணுகப்பட்டான். சம்புகன் என்கிற சூத்திர பிள்ளை பிராமண நெறியை பின்பற்ற முயன்றதற்காக கொன்ற ஆதிக்க சாதி வெறி கொண்ட ஒருவனாக இராமன் பெரும்பான்மை மகாராஷ்டிர மக்களுக்கு திகழ்ந்ததை கெயில் ஆம்வேட் சுட்டிக்காட்டுகிறார்.

ஆரிய கலாசாரமே உயர்ந்தது. அந்த இனம் தந்த பங்களிப்பே வேதங்கள், வர்ணாசிரமம் என்கிற வாதத்தை மகாத்மா புலே நேருக்கு நேர் எதிர்கொண்டார். எதை பண்டைய நாகரிகத்தின் துவக்கம் என்று வாதிட்டார்களோ அதனையே அடிமை முறையின் துவக்கம் என்று சாடினார் புலே. பிரிட்டிஷார், இஸ்லாமிய ஆட்சி அந்நியர் ஆட்சி என்பதை தாண்டி அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்த ‘இரானி-ஆரிய-பட்’கள் குறிப்பாக பிராமணர்கள் அந்நியர்களே. உயர்சாதியினர், பழமைவாத மதம், வேதங்கள், புராணங்கள் முதலிய அனைத்தும் மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல, அவை இந்த நிலத்திற்கு அந்நியமானவை. அவை ஆதிக்கத்தின் ஆயுதங்கள்.
புராணங்கள் புலேவின் சிந்தனையில் மறுவாசிப்புக்கு ஆட்பட்டன. தசாவதாரம் மண்ணின் மைந்தர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்திய கதைகள் என்று புலே நிறுவினார். நரசிம்ம அவதாரம் ஒரு அப்பாவி இளவரசனின் மனதை நஞ்சாக்கி தன்னுடைய தந்தையையே கொல்லத்தூண்டிய கதை என்றார். உச்சமாக வாமன அவதாரம் இம்மண்ணின் எளியவர்கள், விவசாயிகள் ஆகியோரின் தலைவரான பலியை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் ஆவணம் என்று புலே கருத்துரைத்தார். பலி வந்திட இன்பம் பெருகும் என்கிற மகாராஷ்டிரா பழமொழியும் இந்த வாசிப்பும் ஒன்றிணைந்து கொண்டன. இதனால் மதத்தை நோக்கி மக்களை புலே திருப்பினார் என்று தவறாக எண்ணிக்கொள்ள கூடாது.
பிராமணியத்தின் கதையாடலை வேறொரு கதையாடலின் மூலம் எதிர்கொள்ளும் எதிர்ச்செயல்பாடே இது. மேலும், கீழ் சாதியினரின் தெய்வங்களான காண்டோபா, ஜோதிபா, மார்த்தாண்ட், கல்பாஹிரி ஆகியோரை நெகிழ்வான பார்வையோடு அணுகிய அவர் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட தெய்வங்களை புறந்தள்ளினார்.

புலேவின் காலத்திற்கு பிறகு இந்த ஆரியர் அல்லாதோர் அடையாளத்தை சூத்திரர்கள் ஆகிய பெரும்பான்மை மராத்தியர்கள் புறந்தள்ளினார்கள். இந்து தேசிய ஒற்றுமைக்கு இனப்போர் என்கிற கருத்தாக்கம் தடையாக இருந்தது ஒருபுறம், இடைநிலை சாதியினர் இருபதாம் நூற்றாண்டில் தங்களை சத்திரியர்கள் என்று அழைத்துக்கொண்டார்கள். புலேவும் சத்திரியர்கள் பூர்வகுடிகள் என்று எழுதினார். ஆனால், அவர் அந்த அடையாளத்தை உயர்த்திப்பிடிக்கவில்லை. இவர்களோ ஆரியர்களின் வழித்தோன்றல்கள் ஆகிய சத்திரியர்கள் என்று அறிவித்துக்கொண்டார்கள். அடிமைத்தனம், சூத்திரர்கள், ஆரியர் அல்லாதோர் முதலியவை திமுகவின் இனவாத கருத்துகள் என்கிற வட இந்தியாவின் குரலையே இவர்களும் வழிமொழிந்தார்கள் என்று கெயில் ஆம்வேட் கவனப்படுத்துகிறார்.

புலே வெறுமனே மகாராஷ்டிராவோடு தன்னுடைய மாற்று அரசியலை குறுக்கிக்கொண்டவர் இல்லை. அதற்கு மாறாக குலம்கிரி நூலை அமெரிக்காவில் அரங்கேறிக்கொண்டிருந்த அடிமை முறை ஒழிப்பிற்கு அர்ப்பணித்தார் என்பது அவரின் உலகளாவிய பார்வையை காட்டுகிறது. பண்ணையார்கள், செல்வந்தர்கள், மேல்சாதியினர் ஆகியோரின் பக்கம் நிற்காமல் கீழ்சாதியினர், விவசாயிகள், பழங்குடியினர் பக்கம் குரல் கொடுத்து புலே தனித்த ஆளுமையாக உயர்ந்து நிற்கிறார். அவரின் கருதுகோள் சாதி அமைப்பை இந்தியாவிற்கு அந்நியமானது என்று தாக்கி, ஒரு ‘ஜனநாயகமயமான தேசிய கலாசாரத்திற்கு’ ஆன அடிப்படையை தந்தது. அதன் மீது சமத்துவ கோபுரத்தை அவரின் வழித்தோன்றல்கள் கட்டி எழுப்பாமல் போனாலும் அடித்தளம் வலுவாகவே இருக்கிறது என்கிறார் ஆம்வேட்.

புலேவின் பொருளாதார, சமூக தடுமாற்றங்கள்:

புலே அறிவுச்சுடராக எழுந்த காலத்தில் பிராமணர் அல்லாதோரில் இருந்து மாற்றுச்சிந்தனையை முன்வைப்பவர்களே பெரிதாக எழுந்திருக்கவில்லை. அப்படி புலே போன்றவர்கள் எழுந்தாலும் நுண்மையான மாற்று கலாசார கருத்தாக்கத்தை ஆழமாக, நுண்மையாக வைக்க காலம் கைகூடியிருக்கவில்லை. கடைக்கோடி மக்களோடு உடனடி உரையாடல் மேற்கொண்டு அவர்களை முன்னோக்கி அழைத்து செல்வதே அவசரத்தேவை என்கிற ரீதியில் தன்னுடைய ‘சர்வஜனிக் சத்திய தர்மம்’ நூலில் புலே எழுதுகிறார். எனினும், அவரின் எழுத்துகள் விவசாயக்கூலிகளின் வறுமையை பேசியது. கவிதையும், பரப்புரையும் இணைந்து கொண்டு பிரச்சினைகளின் வேர்களை, அவற்றுக்கான தீர்வுகளை கவனப்படுத்தியது.

இந்தியாவின் மேல்சாதி அறிவுஜீவிகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இந்தியர்கள் சுரண்டப்படுவதாக சொன்ன போது, புலே மிகச்சரியாக இந்திய விவசாயி பிரமாண மேட்டுக்குடியினர், காலனிய ஆட்சியாளர்கள் என்று இருதரப்பாலும் சுரண்டப்படுவதை கவனப்படுத்தினார். தொழில்மயமாக்கல் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்க்கும் என்ற காலத்தில் விவசாயத்தின் பிரச்சினைகள், உழுபவர்கள் எதிர்கொள்ளும் பாடுகள் குறித்து புலே பேசினார்.

புலே ஆங்கிலேயரை எதிர்த்த மேல்சாதி அறிவுஜீவிகளை போலவே ஆங்கிலேய ஆட்சியை விமர்சனப்பார்வையோடு அணுகினார். இந்தியாவின் வளங்களை சுரண்டிக்கொண்டு போவதையும், தேசத்தை வறுமையில் உழலவிட்டு, உள்ளூர் கலைகள், தொழில்களை நசிய விட்டதையும் கவனத்தில் கொண்டார். ஆங்கிலேய அதிகார வர்க்கத்தை சாடிய அவர், அந்த அதிகாரத்தை கீழ்நிலையில் சுவைத்து, சுரண்டுபவர்களாக பிராமணர்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டார். மேல்சாதியினர் ஆங்கிலேயரை மட்டும் தாக்கிய போது, ஆங்கிலேயரின் ஆட்சியின் கனிகளை சுவைக்கும் மேல்சாதியினரையும் இணைத்து புலே சாடினார். ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பான்மையை மேல்சாதியினர் தங்களுடைய கல்விக்கு பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் வறுமையில், வேதனையில் உழல்வதை கவனப்படுத்தினார் புலே.

புலே மார்க்சியர்களை போல விவசாயிகள், தொழிலாளிகளுக்குள் நிலவிய வர்க்க பேதங்களை கருத்தில் கொள்ளவில்லை. தொழிற்சாலைகளில் பாடுபடும் தொழிலாளர்கள் குறித்தும் அவர் பேசவில்லை. அவரின் காலத்தில் பொருளாதார புரட்சி முதலிய சிந்தனைகள் வளர்ந்திருக்கவில்லை தொழில்மயமாக்கம் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்த்து விடாது, விவசாயத்தில் அக்கறை காட்ட வேண்டும். நீர்நிலைகள் விரிவாக்கம், அறிவியல் முறையில் கால்நடை வளர்ப்பு, மண் பாதுகாப்பு திட்டங்கள் என்று புலேவின் கனவுகள் விரிந்தன. நவீன தொழில்நுட்பங்கள் கிராமங்களை வந்தடைய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஆனால், அவர் விவசாயத்தில் பலன்கள் விளைந்தாலும் அதையும் ஒரு மேட்டுக்குடி கைப்பற்றிக்கொள்ளும் என்பதை கருத்தில் கொள்ள தவறினார்.
வைஸ்ராய் வருகைக்கு ஆயிரம் ரூபாயை வாரி இறைப்பதை எதிர்க்கிறவராக இருந்தாலும், புலே ஆங்கிலேயரிடம் அடித்தட்டு மக்களின் கல்வி, முன்னேற்றத்துக்காக உதவி கேட்டு நின்றார். தங்களுக்கான அடிமை பாபுக்களை உருவாக்கி வேலை வாங்கிக்கொண்டிருந்த ஆங்கிலேயரிடமே கல்வியின் கதவுகளை திறக்க உதவுங்கள் என்று புலே கேட்க நேர்ந்தது. அதற்கான மனமும், நிதி ஒதுக்கீடும் ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை. மேலே இருந்து மேற்கொள்ளப்படும் முன்னேற்ற செயல்பாடுகள் பலன் தராது என்று தெளிவாக பேசிய புலே, அனைவர்க்கும் கல்வியை வழங்க வேண்டும் என்று கோரினார்.

புலே வட்டன், குல்கர்னி முதலிய சாதி முறையை கட்டிக்காக்கும் முறைகளை ஒழிப்பது, அப்பதவிகளை அனைவர்க்கும் திறந்து விடுவது ஆகியவற்றுக்கு தீவிரமாக குரல் கொடுத்தார். பல தார மணம், குழந்தை திருமணம், விபசாரம் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படவும் முழங்கினார்.

புலே சமூக மாற்றத்துக்காக ஆங்கிலேயரை நம்பியிருந்தது அவரின் போதாமை. அவர் பிராமணர் அல்லாதோர் அதிகார பீடங்களை கைப்பற்றிக் கொள்ளும் போது மாற்றங்கள் நிகழும் என்று நம்பினார். பிராமணர்களின் மக்கள் தொகைக்கு ஏற்பவே அவர்களுக்கு அதிகாரத்தில் இடம் தரப்பட வேண்டும் என்று அவர் எழுதினார். இது முடிவல்ல, துவக்கம் என்கிற தெளிவு அவருக்கு இருந்தது. புலே பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை சமூக மாற்றத்துக்கான கருவியாக மாற்றிக் காட்டினார். அதே வேளையில் அவருக்கு பின் வந்தவர்கள் அதனை பொருளாதார, அரசியல் தளங்களில் மாற்று சக்தியாக மாற்ற தவறி விட்டார்கள். ஆங்கிலேய அரசு சமூக மாற்றத்துக்கு தயாராக இல்லை, மேல்சாதி தேசியவாதிகள் போராட்டங்கள் கைமீறிப் போகாமல் பார்த்து கொண்டார்கள் (வரி கொடாத போராட்டம், குத்தகை மறுப்பு போராட்டமாக மாற அவர்கள் அனுமதிக்கவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு). அதிகாரத்தின் கனிகளை பிராமணர் அல்லாதோர் சுவைத்தார்கள், ஆனால், கிராமங்களின் ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் சமப்படுத்தவில்லை.
குல்கர்னி முதலிய இடங்களை தாங்களும் பங்கிட்டு கொண்டார்கள், கிராம வழிபாட்டு உரிமைகளை பெற்றார்கள். ஆனால், பாட்டீல் மாநாடுகளுக்கு ஆதரவி தந்து கொண்டே, மகர்களை அடிமைப்படுத்தும் வட்டன் முறையை அம்பேத்கர் எதிர்த்த போது அவருக்கு ஆதரவு தர மறுத்தார்கள்.

ஆண்-பெண், பல்வேறு சாதியினர், கிராமம்-குடும்பம் என்று பல தளங்களில் மாற்றமும், சமத்துவமும் ஏற்பட வேண்டும் என்கிற புலேவின் கனவு புறந்தள்ளப்பட்டது. புரட்சிகர மனப்பான்மை கொண்ட சத்திய சோதக் சமாஜ இளைஞர்கள் தங்களுடைய மூத்தவர்கள் அதிகாரத்தை பிடித்து கொண்டிருப்பதை கண்டார்கள். அவர்கள் அந்நிய ஆட்சியில் இருந்து உடைத்து வெளியேறும் விடுதலை போராட்டத்தை விட்டு முன்னோடிகள் விலகியிருப்பதாக எண்ணிக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்தார்கள். புலேவின் சமூகப் புரட்சி கனவு அப்படியே இருக்கிறது.

புலே ஆரியர் அல்லாதோர் கருத்தாக்கத்தை கூர்மையாக, செறிவாக முன்வைத்தார். ஆரிய இனத்தவர்கள் வெள்ளையர்களோடு தொடர்புடையவர்கள் எனப்பட்ட காலத்தில் ஆரியர் அல்லாதோரை கறுப்பின மக்களை தொடர்புபடுத்தி கொண்டு சமத்துவக்குரலை அவர் எழுப்பினார். உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி குழுவினரை அதிகாரத்தை விட்டு அகற்றினாலே ஒடுக்கப்படும் மக்கள் முன்னேற முடியும் என்கிற சிந்தனையை முதலில் முன்மொழிந்தவர் என்கிற வகையில் இந்திய சமூக சிந்தனை மரபில் புலே மிக முக்கியமான இடத்தை பெறுகிறார்.

Jotirao Phule and The ideology of Social Revolution in India- Gail Omvedt
Critical Quest
பக்கங்கள் நாற்பது
விலை 30

தமிழ்ப்பற்றும், மொழி அரசியலும்


பேராசியர் சுமதி ராமசுவாமி தமிழ்ப்பற்றின் நவீன வரலாற்றை ‘Passions of the tongue’ என்கிற தலைப்பில் எழுதினார். அந்நூலை மொழிபெயர்க்க முயன்று சில காரணங்களால் நின்று போனது. அந்நூலின் முன்னுரை மொழி அரசியலின் ஆழ அகலங்களை கண்முன் நிறுத்த முனைகிறது. வாசித்துப் பாருங்கள். ஆங்கில மூலத்தினை இங்கு படிக்கலாம்: https://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7&brand=ucpress
 
இல்லங்களுக்கு இடையில், மொழிகளுக்கு இடையில்:
 
மொழிப்பற்றைக் குறித்த இந்தப் புத்தகத்தை மொழிகளின் மீதான என் காதலைப் பற்றிய ஒரு வாக்குமூலத்தோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும். இன்னமும் நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்வதென்றால் எனக்கு எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் மீது மட்டும் தனித்த பற்றில்லை. புதுத் தில்லியில் பல்வேறு மொழிகள், லயம் மிக்க ஒலிக்குறிப்புகள் இவற்றால் சூழப்பட்ட வீட்டில் வளர்ந்தேன். மொழியியல் ரீதியாக என்னுடைய வீடு பலதரப்பட்ட மொழிகளின் சங்கமமாக இருந்தது. என்னுடைய வீடு தற்கால பாணியில் சொல்வது என்றால், மொழியளவில் மட்டுமேனும் நவநாகரீகப் பண்புடையதாகத் திகழ்ந்தது. என் தாய் தமிழ் பேசுவதைக் கேட்டபடி வளர்ந்தேன். வழக்கப்படி, தந்தையும் தமிழிலேயே பேசினார். என் தந்தை கன்னட மொழியில் சரளமாகத் தன்னுடைய உடன்பிறந்தவர்களோடு உரையாடுபவராக இருந்தார். பெங்களூரில் இருந்த அவரின் நிறுவனத்தைக் கன்னட மொழியைக் கொண்டே அவர் நிர்வகித்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு பிறந்து பெங்களூரில் வளர்ந்த என் தந்தை கன்னடத்திலேயே தான் கணக்குப் போடுவதாக, ஏன் கனவு கூடக் காண்பதாக வலியுறுத்தி சொல்வார். பெரும்பாலான பிராமணர்கள் வீட்டில் நடப்பதை போல, ஆறுவயது முதல் வீட்டில் இறை வழிபாட்டிற்காக எனக்குப் போதிக்கப்பட்ட மந்திரங்களின் மூலம் சம்ஸ்கிருத அறிமுகமும் கிட்டியது. பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் வளர்ந்த இளம் பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் நடப்பதை போல, நானும் ‘இந்திய கலாசாரத்தை’ காத்தபடியே, நவீனமானவளாக, மேற்கத்திய தாக்கம் கொண்டவளாக மாறவேண்டிய சுமைக்கு ஆளானேன்.
Image result for சுமதி ராமஸ்வாமி
 
ஏழு வயது இருக்கும் பொழுது, இந்திய பாரம்பரிய இசை வகைகளில் ஒன்றான கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டேன். இவ்வாறு தெலுங்கு மொழியின் ஒலிக்குறிப்புகளுக்கு அறிமுகப்படுதப்பட்ட நான் பொருள் புரியாமலே அப்பாடல்களைக் கற்றுக் கொண்டேன். இன்றுவரை என்னுடைய இசைத்தட்டுக்களில் தெலுங்கு பாடல்களை இழைய விட்டுக் கசிகிற கணங்கள் உண்டு. என்னுடைய பள்ளிக்கல்வியின் மொழியாகவும், தனிப்பட்ட வாசிப்பு இன்பத்தின் மூலமாகவும், குடும்பத்தினர், நண்பர்களோடு இயல்பாக உரையாடும் மொழியாகவும் இந்திய ஆங்கிலம் திகழ்ந்தது. டெல்லியின் கடைகளில் பேரம் பேசவும், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை ரசிக்கவும் இந்தி உதவியது. இந்திப் பாடல்கள், திரைப்படங்களைக் கண்டு களிப்பது முன்னைப் போல இல்லாவிட்டாலும் இன்னமும் தொடரவே செய்கிறது. இந்த இந்திப் படங்களைப் பார்த்ததும், டெல்லியின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்ததும் ஒரு பயனைத் தந்தது. இந்தி மொழி பேசுபவர்களோடு நெருங்கிய, இணக்கமான கடந்தகாலத் தொடர்பு கொண்ட உருது மொழியோடு அறிமுகத்தை என்னை அறியாமலே நான் பெற்றதை பின்னரே உணர்ந்தேன்.
 
ஆக, நான் புழங்கிய இந்த மொழிக் குடும்பத்தில் என்னுடைய ‘தாய் மொழியாக’ கருதப்பட்ட தமிழின் இடம் என்ன? தமிழைப் பள்ளியில் நான் கற்கவில்லை. எனக்குத் தமிழை வாசிக்கவும் தெரியாது. தமிழைப் பொது இடத்தில் பேசவோ, பிறர் பேசி கேட்கவோ இல்லை. வீட்டில் தமிழைத் தொடர்ந்து பயன்படுத்தினோம் என்றாலும் ஆங்கிலமும், இந்தியும் அவ்வப்பொழுது உள்ளே நுழைந்து கொள்ளும். தமிழ் குறித்து இன்றைக்குத் தேர்ந்த அறிவிருப்பதால் நாங்கள் வீட்டில் பேசிய தமிழ்மொழி பெருமளவுக்குச் சம்ஸ்கிருதமயமானதாக இருந்தது எனச் சொல்ல முடியும்.
Image may contain: 1 person
.
ஒற்றை மொழி ஆதிக்கம் செலுத்திய சுற்றுப்புறங்களில் பன்மொழி புலமை கொண்ட வினோத ஜந்துவாக நான் வளர்ந்ததாக உங்களுக்குத் தோன்றலாம். எனினும், இந்தியாவின் நகரப்புறங்களில் வாழும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இது போன்றே பல மொழிகளைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்துவதை உணர்வார்கள். பயன்படுத்துகிற மொழிகள் நபருக்கு, நபர் வேறுபடும் என்றாலும் பலமொழிகளை எதிர்கொள்ளும் அனுபவம் எல்லாருக்கும் உரியது என அழுத்திச் சொல்வேன். என்னுடைய பன்மொழித் திறன்கள் இந்திய துணைக்கண்டத்தில் பன்மொழிகளின் ஆழமான வரலாற்றின் பிரதிபலிப்பு எனலாம். இந்த வரலாறு இடம்பெயர்ந்து, வெவ்வேறு ஊர்களில் குடிபெயர்ந்த குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்திற்குள், வீட்டுக்குள் மட்டும் தங்களுடைய மொழியைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடாகும். தாறுமாறாக அமல்படுத்தப்பட்டாலும் தேசிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய குடிமகனையும் குறைந்த பட்சம் மூன்று மொழிகளை (தாய்மொழி/வட்டார மொழி, இந்தி, ஆங்கிலம்) கற்கவேண்டும் என எதிர்பார்ப்பதன் விளைவுமே எனக்குக் கிடைத்த இத்தனை மொழி அறிமுகம். எனினும், என்னுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் துல்லியமாகக் காட்டுவதைப் போல மொழிக்கொள்கை மூன்று மொழிகளை வளர்க்கும் என்கிற அரசின் நம்பிக்கைக்கு மாறாக வெவ்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டது.
 
அடுக்கிக்கொண்டே போகும் அந்தச் சிக்கல்களில் சில: எப்படித் தாய் மொழியை வரையறுப்பது? ஆங்கிலமும், இந்தியும் மரியாதை, வருமானம், அதிகாரம் ஆகியவற்றின் மொழிகளாகத் திகழும் சூழலில் எப்படித் தாய் மொழியை வளர்ப்பது? ஆங்கிலத்தைக் காலனிய மேற்கின் நீட்சியாகப் பார்க்கும் தேசியவாத சக்திகளை மீறி எப்படி வளர்த்து எடுப்பது? இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தி, ஒரு பகுதியின் மொழியை ஒட்டுமொத்த இந்தியாவின் மீது திணிக்கும் உள்நோக்கம் கொண்டது என்று எழுந்த எதிர்ப்புகளை எப்படித் தணிப்பது? இந்த மொழிப்போர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன என்பது நவீன இந்தியாவின் மொழிகளின் கலாசார அரசியல் குறித்த என் ஆர்வத்தைக் கூட்டின.
என்னைப்போன்ற வர்க்கம், ஜாதி, கல்விப் பின்புலத்தில் இருந்து எழும் இந்தியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி கொண்டவர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
 
என்னுடைய அதிகாரப் பூர்வ தாய்மொழியாகத் திகழ்ந்தாலும் தமிழானது நான் இயங்கிய மொழிப் பொருளாதாரத்தின் ஓரத்திலேயே இருந்தது. தமிழ் குறித்து ஆய்வு செய்ய என்னுடைய அறிவுசார் தேடல் திரும்பியதே ஆச்சரியம் தருகிற திருப்பமாகும். இந்தியும், ஆங்கிலமும் பேசும் என்னுடைய பள்ளியிலிருந்து நான் வீட்டிற்கு ஐந்தாவது படிக்கும் பொழுது வந்து சேர்ந்தேன். அப்பொழுது, “நாம்பலாம் தமிழா?” என என் அன்னையிடம் மழலைத் தமிழில் நான் கேட்ட தருணத்தில் தான் என்னுடைய வருங்கால அறிவுலகின் வளர்ச்சிக்கான விதைகள் ஊன்றப்பட்டதாக என்னுடைய அன்னை ஆணித்தரமாகப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். என் நினைவோ வேறொன்றைச் சுட்டுகிறது. மெட்ராஸில் இருந்த என்னுடைய பாட்டி ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்துக்கும் எழுதிய கடிதத்தைப் புரிந்து கொள்ளும் பதின்பருவத்து வேட்கையில் என்னுடைய தமிழ் சார்ந்த தேடல் துவங்கியது. ஆங்கிலம், தமிழ் கலந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் எனக்குப் புரிபடாத புதிராகவே இருந்தது. கடிதத்தின் துவக்கத்தில் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான
உடல்நலம் சார்ந்த விசாரிப்புகளுக்குப் பின்னர்த் தமிழ் மொழிக்கு மாறிவிடும். சுவாரசியம் மிகுந்த, குடும்ப ரகசியங்கள், மகிழ்ச்சிகள் என்று அமைந்த குடும்ப வாழ்க்கையின் முக்கியமான தகவல்கள் தமிழில் அமைந்திருக்கும். இது என்னுடைய மொழியறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. கவர்ச்சிமிகுந்த குடும்ப அரசியலின் கூறுகளை நான் புரிந்து கொள்ள முடியாதவாறு சாதுரியமாகத் தடுத்த மொழி அரசியலை தாண்டுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டேன். பதினைந்து வயதில் தமிழை எழுதக் கற்றுக் கொண்டேன். மெதுவாக, ஆனால், உறுதியாக நான் தமிழில் வாசிக்கப் பழகிக் கொண்டேன். என்னுடைய உடன்பிறந்தவர்களுக்கு ஆர்வமூட்டும் அந்தக் கடிதங்களைப் படித்துக் காட்டும் பணியை நானே செய்தேன். இன்றுவரை அவர்களுக்குத் தமிழைப் படிக்கத் தெரியாது.
 
நான் இப்பொழுது கோட்பாட்டு ரீதியாக விளக்கக் கூடிய மொழி அரசியலின் நேரடி அனுபவத்தை அப்பொழுதுதான் பெற்றேன். பல்வேறு மொழிகள் குடும்பத்திலோ, நாட்டிலோ பெருகுகையில் மொழி மூலங்களைப் பயன்படுத்தித் தங்களுக்கு நெருக்கமான அரசியலை அரசியலை தங்களுக்கு மட்டும் புரியும் மொழியில் மேற்கொள்வதன் மூலம் பரிச்சயம் இல்லாத மற்ற மொழிக்காரர்களை அந்நியப்படுத்தும் அரசியலின் அறிமுகம் வீட்டிலேயே கிட்டியது.
என்னுடைய இளங்கலை படிப்பை டெல்லி பல்கலையிலும், மேற்படிப்பை ஜவகர்லால் நேரு பல்கலையிலும் படிக்கையில் என் அறிவுசார் ஆர்வம் தமிழ் பேசும் இந்தியாவின் வரலாறுகள், பண்பாடுகள் மீது அதிகரித்தது. இந்தியாவின் தலைசிறந்த இரு பல்கலையிலும், மிகச் சிறந்த சில வரலாற்றாசிரியர்களுடன் வரலாற்றைக் கற்றேன். அது இன்றுவரை எனக்குப் பெருமளவில் உதவுகிறது. இந்தியத் தலைநகரில் இந்தியாவின் புவியியல், அரசியல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு போலத் தென்னிந்தியா சார்ந்த வரலாற்றுத் துறை ஆர்வம் பெருமளவில் இல்லாமல் இருந்தது என்னைச் சஞ்சலப்படுத்தியது. தமிழகத்தில் வலிமைமிகுந்த பிராமண எதிர்ப்பு இயக்கத்துக்குப் பின்னால், பிறப்பால் பிராமணப் பெண்ணான என்னுடய தமிழ் சார்ந்த ஆர்வத்தை எனது தாய்வீடாக நான் கருதிய தமிழ்நாடு வரவேற்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து என்னைப் பெனிசிலுவேனியா பல்கலையின் மானுடவியல் துறைக்கும், பின்னர்ப் பெர்க்லியில் உள்ள கலிபோர்னிய பல்கலையின் வரலாற்றுத் துறைக்கும் கொண்டு சென்றது. நான் தட்டுத்தடுமாறிய என் “தாய்மொழி”யை என் வீடு, தாய் ஆகியோரை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்த நாட்டில் முறையாகக் கற்றுக்கொண்டேன் என்பது தமிழுடனான என்னுடைய நம்பிக்கையற்ற காதலின் வரலாற்றுக்குப் பொருத்தமான முடிவாகும்.
 
நான் ஒரு மொழியைப்பேசி அதைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒற்றை அடையாளத்தோடு வளரவில்லை. பலதரப்பட்ட, சமயங்களில் முழுமையற்ற வெவ்வேறு சூழல்களில் நான் பயன்படுத்திக் கொள்ளும் வசதியான (சுமையான?) அடையாளங்களோடு வளர்ந்தேன். ஒருபுறம், இதனால் பல மொழிகளுக்கும், பல வீடுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டதாக அடிக்கடி மோசமாக உணர்ந்தேன். இதற்கு நேர்மாறாக, பல மொழிகள், பல இடங்கள், பல மனிதர்களிடையே இருத்தல் ஆகியவற்றின் ஆனந்தங்கள், சாத்தியங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றையும் சிறப்பாக அனுபவித்தேன். இந்த வாழ்க்கை எனக்குப் பெண்ணியத் தத்துவவியல் அறிஞர் ரோசி ப்ராய்டோட்டியின் கருத்தாக்கத்தை நினைவுபடுத்துகிறது.
 
இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த அவர் பிரெஞ்சு மொழியில் கல்வி கற்றார். இப்படிப்பட்ட பல்வேறு அடையாளங்கள் தாங்கிய வாழ்க்கையை அவர், ‘நாடோடி உணர்வு நிலை’ என்கிறார். இது என்னுடைய அடையாளங்களுக்கு இடையேயான வாழ்க்கையை எதிரொலிப்பது போல உள்ளது. 1994-ல் ‘Nomadic Subjects’ எனும் தனிக்கட்டுரையில் இப்படிப்பட்ட உணர்வுநிலை, ‘மையம், அது சார்ந்த குறிப்பிட்ட இடங்கள், குறிப்பிட்ட வகையான அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எனும் கருதுகோள்களை முழுமையாக மூழ்கடிக்கிற ஒன்றாக உள்ளது’ எனக் கருதுகிறார். மேலும், இந்த உணர்வுநிலை சமூகம் வரையறுத்து இருக்கும் சிந்தனை, செயல்பாடுகளோடு பொருந்திப் போவதை தன்னளவில் எதிர்க்கிறது, மேலும், ஒருவரை அடையாளப்படுத்தும் பெரும்பான்மை வழிமுறைகளின் ஆதிக்கத்தில் கரைந்துவிடாமல் தன்னை இந்த உணர்வுநிலை காத்துக் கொள்கிறது என்கிறார்.
 
நாடு கடத்தப்பட்ட, இடம் பெயர்ந்த மக்களின் உணர்வுநிலையில் காணப்படும் பிரிவு, இழப்பு, தாய்வீடு திரும்புதல் முதலிய உணர்வு நிலைகளுக்கு மாறாக, ஒரு நாடோடி தன்னுடைய உலகத்தோடு கொண்டிருக்கும் உறவானது, ரோசி ப்ராய்டோட்டியின் பார்வையில் ‘தோன்றி மறையும் பிணைப்பு’ மற்றும் ‘சுழற்சியில் அடிக்கடி தோன்றும்’ உறவாகும். இந்த நாடோடி பாணியானது, கடந்த காலத்தின் நிலை, பெருமிதம், ஒற்றைத்தன்மை ஆகியவற்றில் மனதை பறிகொடுத்து நிலைத்து நிற்பதில்லை. இந்த நாடோடித்தன்மை பன்மொழிப்புலமையோடு கைகோர்த்துப் பயணிக்கிறது. நிலையான அடையாளங்கள், தாய் மொழிகள் குறித்து ஆரோக்கியமான சந்தேகம் கொள்கிறது. நாடோடியான பன்மொழிப் புலமையாளர் பல்வேறு மொழி அடிப்படைகளிடம் மென்மையான நெருக்கம் கொண்டிருப்பதால் எந்த வகையான மொழி அல்லது இனத் தூய்மையை நாடுவதில்லையோ? என ரோசி ப்ராய்டோட்டி வினா எழுப்புகிறார். (Braidotti 1994: 8, 28).
 
இந்த ஆயிரம் ஆண்டுகளின் கேள்விகேட்கும் சிந்தனையின் முன்னுதாரணமான வடிவமாக நாடோடித்தன்மையைக் கருதும் ப்ராய்டோட்டி யின் எல்லாக் கருத்துக்களோடும் நான் ஒப்ப வேண்டியதில்லை. அவருடைய ஆர்வமூட்டும் பரிந்துரைகளின் தத்துவத் தாக்கங்கள் குறித்து நுண்ணாய்வு செய்யப்போவதில்லை. பின்காலனிய காலத்தில் பல்வேறு மொழிகள், வீடுகளுக்கு இடையே வாழும் நாடுகளைக் கடந்த நாடோடி மக்களின் வாழ்க்கை முடக்கிப்போடும் பயனற்றவைகளின் தொகுப்பாக அல்லாமல், பல முக்கியமான வாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகக் காண முடியும் என எனக்கு எச்சரித்த படைப்பாகவே காண்கிறேன். புதுப்பித்துக் கொள்ளும், மோசமாகிக் கொண்டே இருக்கும் தேசியம், பிரிவினைவாதம், இடப்பற்று சார்ந்த உணர்வுநிலைகள் மிகுந்த இந்த வரலாற்றின் குறிப்பிட்ட தருணத்தில் அவற்றைக் கவனத்தோடு அணுக இந்த நாடோடி உணர்வுநிலை உதவுகிறது. இதனால் ப்ராய்டோட்டி சொல்வதைப்போல ‘ஏற்படுத்தப்பட்ட பகுப்புகளிடையேவும், அனுபவத் தளங்களின் ஊடாகவும் சிந்திக்கவும், பயணிக்கவும் முடிகிற, எல்லைகளை மழுப்பி, பாலங்களை எரிக்காமல் செயல்படவும் முடிகிறது’ (1994: 4, 12).
 
கலாசார அடிப்படைகள், நம்பிக்கைகள் சார்ந்த கட்டமைப்புகள் அதிகாரம் மறுக்கப்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வலிமை பெறும் முக்கியமான வழிமுறைகளாக உள்ளன. பின்னோக்கி சொல்வதைச் சாராமாகக் கொண்ட இந்தக் கலாசார நம்பிக்கைகளுக்கு யார் அங்கீகாரம் தருவது என என்னுடைய நாடோடி உணர்வுநிலை கேள்வி கேட்கிறது. எந்தச் சூழல்களில் இது நிகழும்? மிக முக்கியமாக, ஏன், எப்படிக் கலாசாரச் சொத்துக்களான மொழி, மதம் அல்லது எல்லாவற்றை விடவும் புனிதமான உடமையாகக் கருதப்படும் தேசம் ஆகியவை மிகப்பெரும் உருவம் கொண்டதாக, அழியாத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன? இதன்மூலம் எப்படி இவை ஆட்கொள்பவர்களை ஆட்கொள்கின்றன?
(இந்நூலின் முதல் பக்கம்: )
figure
 
இந்தப் புத்தகமும், என்னுடைய வாழ்க்கையைப் போல நாடோடித் தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி இந்த நூல் உருவாக்கத்தில் பயன்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் கண்டங்கள், கலாசாரங்களைக் கடந்து செய்தேன். புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராசில் எழுதப்பட்டது, பிற பகுதிகள் அமெரிக்காவில் இருந்தாலும் மிகவும் வேறுபட்ட கலசார, அறிவார்ந்த இடங்களான பெர்க்லே, சிகாகோ, பிலடெல்பியா ஆகியவற்றில் எழுந்தன. என்னுடைய வாழ்வின் இந்திய பக்கங்கள் அமெரிக்க ஆய்வுப்புலத்தில் அரிதாகி வரும் என்னுடைய இருப்பில் ஒரு வேகத்தையும், வேட்கையையும் செலுத்துகின்றன. அதேசமயம், நான் பணியாற்றும் இடத்தில் நான் பெற்று இருக்கும் நிலையே பகுத்தாயும், மையமற்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய நாடோடி வாழ்க்கையை வசதியாகத் தொடர உதவுகிறது. வரலாற்றை எழுதுதல் என்பது சமீப வருடங்களில் நாட்டைப் பற்றி எழுதுவதோடு சிக்கலான செயல்பாடாகப் பிணைந்துள்ளது என்று பலமுறை சொல்லப்பட்டு விட்டது.
Image result for passions of the tongue
 
அதிகாரப்பூர்வ வரலாறுகள் பெரும்பாலும் நாடு என்கிற வெளிக்குள் இருந்தே எழுதப்பட்டுள்ளன. எனினும், இந்த வரலாற்று நூல் நாடுகளைக் கடந்து, மொழிகளை, இருப்பிடங்களைக் கடந்து பயணிக்கிறது. இதன் இறுதி உருவாக்கம் அது பேசும் மக்கள், அந்த மக்களைக் குடிகளாகக் கொண்ட நாடு ஆகியவற்றை விட்டு வெகுதூரம் தள்ளிய ஒரு இடத்திலேயே நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட படைப்பின் உள்ளடக்கத்தால் ஏற்படக்கூடிய வரவேற்பு, வாசிப்பு சார்ந்த சிக்கலான விளைவுகளை நான் அறிந்திருந்திருக்கிறேன். எனினும், சல்மான் ருஷ்டியுடன் இணைந்து ‘பகுத்தாய்வு சிந்தனை யின் நோக்கம் புதிய கோணங்களில் வரலாற்று உண்மைகளைத் திறந்து விடுவதும், கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளை நிலைகுலைப்பது’ என்றே சிந்திக்க விரும்புகிறேன். என்னுடைய நாட்டைவிட்டு நிகழ்ந்த நகர்வு, பகுத்தாயும் நாடோடி வாழ்க்கை எனக்கு உறுதியான வாய்ப்பை தருகிறது. இல்லையேல், ரூஷ்டி எள்ளல் ததும்பச் சொல்வதைப் போல, இப்படி எண்ணிக்கொள்வது தான் என்னுடைய பணியைச் செவ்வனே செய்ய உதவும்.
 
தமிழில் – பூ.கொ.சரவணன்

மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் அரிய பணிகள்


:
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’ என்கிற குறுநூலை எழுதியுள்ளார். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த பெ.சு நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். அவர் மொத்தமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவை 650 பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றின் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
தன்னுடைய மனோன்மணியம் நாடக நூலில் தன்னை, ‘அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்’ என்று அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்த்த பெ.சு. தன்னுடைய தமிழார்வத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து மாட்டுவண்டி ஏறி செங்கோட்டை அடைந்து அங்கிருந்து சென்னை வரை பயணம் செய்து தமிழறிஞர்களைக் கண்டு, அறிவுப்பசி ஆற்றிக்கொண்டார். அன்றைய சமஸ்தான மன்னரின் உதவியோடு லண்டனில் இருந்து ஆங்கில நூல்களை வரவைத்து வாசித்து இருக்கிறார்.

களக்காட்டில் இருந்து ஆலப்புழைக்குக் குடிபெயர்ந்த வேளாளர் குடும்பம் என்றாலும் தமிழையும், சைவத்தையும் பெ.சுவின் குடும்பம் மறக்கவில்லை. திருவிதாங்கூர் அரசர்களின் மொழி வெறுப்பற்ற தன்மை இதற்குக் காரணம் என்று ஆதாரங்களோடு கவனப்படுத்துகிறார் அ.கா.பெருமாள். பெ.சு வரலாறு, தத்துவம் பயின்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்றாலும் அப்படிப்பை அவர் முடிக்கவில்லை. பெ.சு. அவர்கள் திருநெல்வேலி ம.தி.தா. இந்துப்பள்ளியின் தலைமைப்பொறுப்பில் இருந்த போது தமிழை முறையாகக் கற்றதோடு, ஸ்ரீ கோடகநல்லூர் சுவாமிகளிடம் சித்தாந்த சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு தானே சுயமாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ளார். திருவனந்தபுரம் கல்லூரியில் பயின்ற போது தமிழ்த்துறைக்குப் புத்தகங்களை வாங்கியுள்ளார்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் தத்துவத்துறை பேராசிரியராக இருந்த முனைவர் ராபர்ட் ஹார்வி இங்கிலாந்து போக வேண்டி இருந்த போது தன்னுடைய இடத்திற்குப் பெ.சுவை பரிந்துரை செய்தார். 1878-1882 வரை தத்துவ ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மூன்றாண்டுகள் சமஸ்தான மன்னரால் பிறவகைச் சிரஸ்தார் என்னும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இது அரசு நிர்வாகம் தொடர்புடையது. இப்பணி காலத்தில் தான் பல்வேறு கோவில்களுக்குப் பயணம் செய்து, கல்வெட்டுகள், ஆவணங்களைப் பெ.சு. ஆய்வு செய்துள்ளார். 1885-1897 வரை ஹார்வியின் பரிந்துரையால் மகாராஜா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். நன்றி மறவாமல் தன்னுடைய வீட்டிற்கு ஹார்விபுரம் என்று பெயரிட்டதோடு, தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தை அவருக்கே சமர்ப்பித்தார்.

நாடகாசிரியர்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தமிழ் நாடகங்கள் எழுந்தன. தமிழகத்தில் அக்காலத்தில் 327 நாடகங்கள் வெளிவந்ததாக ஒரு ஆய்வுக்குறிப்புண்டு. பெ.சு இத்தகைய நாடகங்களைப் படித்துள்ளார். லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி கதையின் தழுவலாகத் தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தைப் பெ.சு எழுதினார். பெ.சுவின் நாடகம் எளிமை, விறுவிறுப்பு, அமைப்பிற்காகப் பரவலாகப் படிக்கப்பட்டது. இந்நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடு பெ.சு எழுதவில்லை, வாசிப்பின்பத்திற்காகவே அதனை இயற்றியதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

வெண்பா, கலிப்பா, குறள் வெண்செந்துறை, வஞ்சிப்பா என்று பல்வேறு பாவினங்கள் விரவிவர இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலை தத்துவப் பின்னணியோடு பெ.சு படைத்தார். ‘இல்லறம், துறவறம், பக்தி ஞானம் முதலிய மோட்ச சாதனங்கள்’ பாத்திரங்களின் மூலம் உருவகப்படுத்தி இந்நாடகம் அமைந்தது.

Image result for சுந்தரம் பிள்ளை ncbh
இந்நாடகத்தில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி’ என்கிற வரி நூலில் இடம்பெறுகிறது. ‘பத்துப்பாட்டில் மனம் பற்றியவர் பிற நூற்களைப் பற்றமாட்டார்’ என்று பெ.சு சிலிர்க்கிறார். மனோன்மணியம் நாடகம் பல்வேறு பல்கலைகழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புக்கு உரியது.

ஆய்வறிஞர்:
கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப் பெ.சு. படியெடுத்து உள்ளார். ஆங்கிலத்தில் பத்துப்பாட்டு, திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார். பத்துப்பாட்டின் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ.சு மொழிபெயர்த்துள்ளார்.

திருவிதாங்கூர் வரலாறு கட்டுரையில் கொல்லம் ஆண்டு என்கிற வழக்கம் எப்படி வந்தது என்பதைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்து புதியதொரு பார்வையை முன்வைக்கிறார். அக்கட்டுரையில் சமூக நோக்கோடும் பெ.சு எழுதியுள்ளார். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆரியப்பண்பாடும், ஆரியருக்கு முந்தைய திராவிடப்பண்பாடும் இணைந்தே உள்ளன என்கிற பெ.சு கன்னியாகுமரி முதல் பறவூர் வரை பயணிக்கும் ஒருவன் பழம் திராவிட மரபைக் காணமுடியும் என்கிறார். திருவிதாங்கூர் பகுதியின் வேணாட்டு மன்னர்களின் காலத்தைப் பெருமளவில் துல்லியமாக முதலில் கணித்தவர் பெ.சு. சம்பந்தர் காலம் கட்டுரையில் அவரின் காலத்தைச் சமூகச்சூழல், சமூக வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெ.சு கண்டறிந்துள்ளார். ஆதி சங்கரரின் நூல்கள், மத்தவிலாச பிரகசனம் ஆகியவற்றைக்கொண்டு சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். ராஜராஜன் காலமே நம்பியாண்டார் நம்பி காலம் என்றும் வாதிடுகிறார்.

ராமாயணத்தின் சாதி குறித்துக் கூர்ந்து நோக்கிய பெ.சு. அது குறித்து வெ.சு. முதலியாரிடம் பேசினார். அதைக்குறித்து எழுதவுள்ளதாகச் சொன்னாலும் அதற்குள் அமரரானார். ஆகவே, பெ.சுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறித்துக் கட்டுரை வரைந்தார் வெ.சு.முதலியார். ‘அதில் ராமாயணம் ஆரியச்சார்புடையது. ஆரியர் என்பவர் தமிழ் பிராமணர், வட இந்திய சாதியர் சிலரைக் குறிக்கும் சொல். ஆரியர் அல்லாத அநாரியர் தென்னிந்தியக் குடிகள் ஆவர்.’ என்றதோடு, ‘பெண்ணைச் சிறைப்பிடித்தும் ராவணன் கொல்லவில்லை, திராவிடப்பெண்ணான சூர்ப்பநகையை லட்சுமணன் துரோகம் செய்தவன். விபீஷணன் என்ற திராவிடன் துரோகம் செய்தவன்; அதற்காக ஆழ்வார் பட்டம் பெற்றவன். ஆரியர்கள் திராவிடர்களை இழிவானவர்கள் எனச் சொல்லி நம்பும்படி ஆக்கிவிட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

உரைநடையாசிரியர்:
உரைநடையில், ‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற ஒரே நூலை எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு. இதைக்குறித்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில். ‘….சுந்தரம்பிள்ளை தன் நூலில் தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்களைத் தந்திருக்கிறார். வடசொற்களை விலக்கும் கருத்தே இவரிடம் கிடையாது. தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டுவன செய்தவர்களில் சுந்தரம் பிள்ளை தலைசிறந்தவர்’ என்று புகழாரம் சூட்டுகிறார்.

கவிஞர்,கட்டுரையாசிரியர்:
பெ.சு. ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார். ஒரு நற்றாயின் புலம்பல் மணமாக வேண்டிய தினத்தன்று இறந்து போன மகள் குறித்து அரற்றும் அன்னையின் அழுகுரல். பொதுப்பள்ளி எழுச்சி தத்துவ நோக்கோடு அறியாமைத் துயிலில் இருந்து எழுப்பிய இறைவனை நோக்கி பாடப்பட்டது. அன்பின் அகநிலை விவிலியத்தின் புனித பவுல் கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் பெ.சு எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Hobbes, the father of English ethics’. ‘Bentham, The Juristic Moralist’, ‘A scene from A Tamil play’, H.T.Wills முதலிய கட்டுரைகள் எழுதினார்.

தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தின் துவக்கத்தில்’தமிழ் மொழியின் இலக்கியங்களை அழியாமல் பாதுகாத்த திருச் சி.வை.தாமதோரன் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் ஆகிய இருவரையும் வணங்குகிறேன். கல்வி, கேள்வி, அறிவு முதலியவற்றால் சிறியவனாகிய நான் மனோன்மணியம் என்னும் நாடகத்தைப் படித்திருக்கிறேன்.’ என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார். உ.வே.சா மனோன்மணியத்தைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்படைப்பில் குறைகள் உண்டு என்றதை பெ.சு அறிந்தார். கடிதம் எழுதி குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்கவும் செய்தார். மேலும், திருவிதாங்கூர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வருமாறு உ.வே.சாவிற்கு அன்போடு அழைப்பு விடுத்தார்.

தமிழக அரசு அவரின் தமிழ்த்தெய்வ வாழ்த்தை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கியது. அவரின் மூலப்பாடலில், ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை’ என்கிற வரி வடமொழி வெறி நிலவிவந்த காலத்தில் எதிர்க்குரலாக ஒலித்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் உருவான போது, நாஞ்சில்நாடு தமிழர்க்கு உரியது என்று தன்னுடைய மனோன்மணியம் நூலில் பெ.சுந்தரனார் குறிப்பிட்டு இருந்தது கவிமணி, ஜீவா, ம.பொ.சிவஞானம் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டு இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

நாற்பத்தி இரண்டு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பெ.சுந்தரனாருக்கு அஞ்சலியாக அவர் உ.வே.சாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளே அமையக்கூடும்: ‘நம்மனையார் தேகநிலையைக் கருதும்போது இருதலைக்கொள்ளியினுள் எறும்பு என்றே உண்மையாய் எண்ண வேண்டியதாக இருக்கிறது. உழைத்தால் சரீர உபாதை துணிபாக நிற்கிறது. உழைக்காவிட்டால் சரீரமிருந்து என்ன பயனென்ற சோகமும் அப்படியே ஏது செய்ய? கடவுள் இச்சைபோல நடக்கட்டும்’

மிக முக்கியமான ஆளுமையின் பன்முகத்தன்மையை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது அறிஞர் அ.கா.பெருமாளின் இக்குறுநூல்.

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் -அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள்: 82
விலை: 70

‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்


‘நான் என் சாதியை மறைத்துக் கொண்ட போது’- பாபுராவ் பாகுல்.

‘நீ வேதங்களுக்கு முன்பே இங்கிருந்தாய்’

 

நீ வேதம் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய்

இறைவன் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தாய்

அச்சுறுத்தும் பொருள்சார் உலகினை

பெருவலியோடும், பதற்றத்தோடும் பார்த்துக்கொண்டே இருந்தாய்

உன் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்தாய்

அந்தத் துதிகள் வேத வரிகள் ஆகின

நீயே எல்லாத் தெய்வங்களின் பிறப்பையும் கொண்டாடி, அவர்களுக்குப் பெயரிட்டாய் …. ‘

-பாபுராவ் பாகுல்

‘தலித் இலக்கியம் என்பது பழிவாங்கல் இலக்கியம் அல்ல. அது வெறுப்பைப் பரப்பவில்லை. அது மானுட மேன்மையை, மனிதகுல விடுதலையை வளர்த்தெடுக்கிறது. ஆகவே. தலித் இலக்கியம் வரலாற்றுத் தேவை’ – 1973ல் பாபுராவ் பாகுல்.

பாபுராவ் பாகுல் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு போர் மகாராஷ்டிராவில் உச்சம் பெறத்துவங்கிய காலத்தில் பிறந்தார். அவர் வாழ்ந்த மாதுங்கா காலனியில் சாக்கடை நீர் தேங்கி நிற்கும். ஒதுங்க கூட இல்லாமல் மக்கள் நெருக்கிக்கொண்டு வாழவேண்டிய அளவுக்கு இடப்பற்றாக்குறை. அடிப்படை வசதிகள் எட்டிப்பார்க்காத கொடிய அவநம்பிக்கை தரும் வாழ்க்கை. இருளும், நிச்சயமின்மையும் மட்டுமே அம்பேத்கரின் இயக்க அலுவலகமும், இடதுசாரிகளின் தொடர்பும் பாபுராவ் பாகுலை இலக்கியப் பெருநெருப்பாக உருமாற்றின.

தலித் மக்கள், குரலற்றவர்கள், பெண்கள், வேசிகள், குற்றவாளிகள் எனப் பலரின் அக உலகையும், சாதியும், வன்மமும் தரும் பதைபதைப்பும் அவரின் எழுத்துக்களில் இலக்கியமாகின. அவருடைய ‘When I Hid My Caste’ என்கிற மராத்தி சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை படித்து முடித்தேன். அவரின் ஆரம்பக் காலக் கதைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது. நுண்மையான விவரிப்புகள், உரையாடல்கள் வழியாக மாந்தர்களைக் கண்முன் நிறுத்துவது, அவ்வப்போது எழுத்தில் இழையும் அமைதி பலவற்றைக் கடத்துவது என்று ஒரு தனித்த அனுபவமாக இந்தக் கதைகளோடு வாழ முடிந்தது.

தசரா கொண்டாட்டத்தின் போது எருமை வேட்டை ஒன்று நிகழ்கிறது. அதில் அத்தனை போராட்டம், வேதனை, உயிரிழப்பும் தலித்துகளுக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வெற்றியும், மாலையும் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவருக்குப் போய்ச் சேருகிறது. Sacrifice என்று தலைப்பிடப்பட்ட இக்கதையைத் தமிழில் பலி என்று அழைப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகளில் மனுவை நோக்கி எதிர்க்குரல்கள் எழுப்பப்படுகின்றன. அவையே தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளாக அமைவது விபத்தில்லை. ‘என் சாதியை மறைத்துக் கொண்ட போது’ கதையின் நாயகன் கவிஞன். ‘தீண்டப்படாதவன் என்கிறீர்கள். சூரியன் தீண்டப்படாதவன். அக்னியும் தீண்டப்படாதவன்’ என்று அவன் பெருக்கெடுத்துப் பேசுகிறான். தன்னுடைய சாதியை மறைத்துக்கொண்டு வாழ்கிறார். அவரின் சாதி தெரியவருகிற போது, அடித்துத் துவைக்கிறார்கள். துளிக்கண்ணீர் சொட்டவில்லை. அவருடைய நிலையைப் பார்த்து, இழைக்கப்படும் அநீதியால் உறைந்து போய் ஆதிக்கச் சாதியை சேர்ந்த பெண்ணின் கண்ணீர் துளிகள் அவர் பாதங்களைத் தொடுகின்றன. மனுதானே என்னை அடிக்கிறான் என்று நாயகன் எண்ணிக்கொண்டு அழாமல் நிற்கிறான். சொல்லாமல் பலவற்றைச் சொல்கிற தருணம் அது.

போஹடா என்கிற பண்டிகையின் போது தானே நரசிம்ம வேடம் பூண்டு தாண்டவம் புரிவேன் என்று மகர் ஒருவர் கேட்கிறார். பல நூறு ரூபாய் தொகை தேவைப்படும் என்கிறார்கள். ஏலம் நடக்கிறது. அந்த இளைஞரே ஏலத்தில் வெற்றி பெறுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்தாண்டு முதல் இந்த விழாவே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள் என்பதாகக் கதை முடிகிறது. அடையாளங்களுக்குள் சமத்துவத்துக்கான தேடல் எப்படி முடிகிறது என்பதை முகத்தில் அறையாமல் அறைந்து சொல்கிறது.

பாலியல் தொழில் புரிய நேரிடும் மராட்டா சாதியை சேர்ந்த பெண் மீது அளவற்ற அன்பை ஒரு இளைஞன் பொழிகிறான். வினாக்கள் இல்லாமல் அவளோடு உடன் நிற்கிறான். திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவன் கேட்கிற போது, ‘நீ என்ன சாதி’ என்று நாயகி கேட்கிறாள். ‘நான் அன்பை தானே அளவில்லாமல் தந்தேன். கேட்ட போதெல்லாம் எந்த வினாக்களும் இன்றிப் பணம் தந்தேன். என்னுடைய செயல்களைக் கொண்டு என்னை அறிய முனையாமல் என் சாதியை ஏன் தேடுகிறாய்?’ என்று வேதனையோடு கேட்டு அந்நாயகன் மறைகிறான். சாதியின் கொடுவாள் தீண்டலில் மரிக்கும் அன்பு தான் எத்தனை எத்தனை?

தேவதாசியாகச் சமூகத்தால் மாற்றப்படும் தலித் பெண்கள் குறித்து ஆதிக்கச் சாதிப் பெண்கள் கூட அக்கறை செலுத்த மறுப்பதை ‘இருளின் கைதிகள்’ கதை இயல்பாகச் சொல்லிச்செல்கிறது. பாலினத்தை விடச் சாதி அரசியலே வெல்கிறது என்பதன் சாட்சியம் அக்கதை. ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் உருவத்தின் குறைகளுக்காகக் கொடுமைப்படுத்தப்படும் பெண்ணின் வலியை, கண்ணீரை, துயரை ‘pesuk’ என்கிற கதையில் மயக்கும் கதை சொல்லல் முறையில் கடத்தப்படுகிறது.

துளி கூட இரக்கம், அன்பு மறுக்கப்பட்டு பாலியல் தொழிலாளியாக வாழத்ததலைப்பட்ட  பெண். அவளின் மகன், பிணந்தின்னியாக சுற்றும் ஆண்கள், ஊற்றெடுக்கும் தாய்மை, பின்னி எடுக்கும் உடற்பிணி, இறுதி வரை சமூகம் கேட்க மறுக்கும் அவளின் அழுகுரல் உலுக்கி எடுக்கிறது.

மலமள்ளும் தொழில் செய்ய மறுத்து கல்வியைப் பற்றிக்கொள்ள முயலும் நாயகனின் கதையான ‘revolt’ இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை. நாயகன் கல்லூரி போய்ப் படிக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறான். குடும்பத்தைக் காப்பாற்ற மலம் அள்ளப்போ என்று அப்பாவும், அம்மாவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

“நான் ஏன் மலம் அள்ள வேண்டும்? என் படிப்பை விட்டுவிட்டு இந்த ஊரின் அழுக்கை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டுமா? இவர்களின் கழிசடைகளை என் தலையில் தூக்கி சும்மக்க வேண்டுமா/ இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என்றால் என்னை ஏன் படிக்க வைத்தீர்கள்? என் இதயத்தில் விடுதலை, அறிவு, மானுடச்சுடர்களை ஏன் பற்றி எரிய வைத்தீர்கள்” என்று கதறுகிறான்.

“எங்கே ஒரு மலம் அள்ளுபவனின் மகனே மலம் அள்ள வேண்டும் என்று எங்கே விதித்து இருக்கிறது?” எனக்கேட்கிறான்.

“நம்முடைய வறுமையில் விதித்து இருக்கிறது. நம்முடைய தர்மத்தில் விதித்து இருக்கிறது. நம் நாட்டில் விதித்து இருக்கிறது” என்கிறார் அம்மா.

“எது தர்மம்? ஒரு மனிதனை நொறுக்கிப்போட்டு, அவனை மிருகமாக மாற்றுவதுதான் தர்மமா? மனிதனை மறந்து வெறும் சிலைகளைக் கொண்டாடித் தீர்க்கும் நாட்டின் தர்மம் தானே இது? இந்தத் தர்மத்திற்கு நான் கட்டுப்பட மாட்டேன். வறுமை, கொடுமை ஆகியவற்றை மட்டுமே தரும் இந்தத் தர்மத்தை நிராகரிக்கிறேன்…”என்கிறான்

“என் விரல்களை உடையுங்கள். என் கரங்களை முறித்துப் போடுங்கள். என் உடலை கிழித்துப் போடுங்கள். நான் இந்த வேலையைச் செய்ய மாட்டேன் ” என்கிற கதறல் கண்டுகொள்ளப்படாமல் அவன் மலம் அள்ள அனுப்பப்படுகிறான்.

அங்கே இவனுக்கும், இன்னொரு தலித்துக்கும் சண்டை முற்றுகிறது. அடித்துப் புரள்கிறார்கள். ஊரின் மலத்தையே அள்ளும் இவர்களின் துயரம் தட்டிப்போன உடம்பை தொடக்கூட விரும்பாமல் ஊரே தள்ளி நிற்கிறது. மனு சிரித்தபடி நிற்கிறான்.

சாதியை மறைத்துக் கொண்ட போது நமக்குள் இறுகிப்போயிருக்கும் சாதிய வன்மத்தை, கேடுகளை உலுக்குகிறது. கதைகளின் மூலம் கசடுகளைக் கடக்கத் தூண்டுகிறது.

When I Hid My Caste, Baburao Bagul

ஆங்கிலத்தில்: ஜெர்ரி பின்ட்டோ

Speaking Tiger Books.

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?


எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

(“என்னால் எம்.ஜி.ஆராக ஆக முடியாது; ஆனால், எம்ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்” என்று அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் ஆட்சி உண்மையில் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இங்கே பிரசுரிக்கப்படுகிறது. பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ள ‘Image Trap’ நூலிலிருந்து எடுத்தாளப்படும் கட்டுரை இது. )

எம்.ஜி.ஆரின் மீது அடித்தட்டு வர்க்கம்கொண்ட அரசியல் பக்திக்கான காரணம் தன்னுடைய 11 வருடகால ஆட்சியில் அவர் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அல்ல என்பது புரியாத புதிராகும். அவருடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் எந்த முக்கியமான கட்டமைப்பு மாற்றமோ, ஏழைகளின் துயரங்கள் பெருமளவில் குறைவதோ நிகழவில்லை. தமிழ்நாடு அரசு எப்படித் தன்னுடைய நிதி மூலங்களைத் திரட்டியது, அவற்றை எப்படிச் செலவிட்டது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு, எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசு ஏழைகள் (மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்) மீது வரி போட்டுப் பணக்காரர்கள், கிராமப்புறச் செல்வந்தர்கள் பயன்பெறுமாறு செயல்பட்டது என்பதை விளக்குகிறது. (1)

ஏழைகளின் மீது சுமத்தப்பட்ட வரி

1975-85 வருடகாலத்தில் அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவிகிதம் விற்பனை வரியிலிருந்தே பெறப்பட்டது. இதில் பெரும்பான்மையான விற்பனை வரி நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் நுகர்வோர் பொருள்களான பருத்தி, இழைகள், மருந்துகள், பருப்பு வகைகள் தேயிலை, கரும்பு, மின்னணுப் பொருள்கள் மற்றும் சோப் மீதான வரிவிதிப்பு மூலமே பெறப்பட்டது. ஏழைகள் அதிலும் கொடிய வறுமைக்கு உள்ளான ஏழைகள் தங்களுடைய பயன்பாட்டை உணவு, அடிப்படைத் தேவைகளோடு நிறுத்திக்கொண்டதால் விற்பனை வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. 1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது. இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதற்கு நேர்மாறாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பணக்கார வர்க்கத்தினர் பெருமளவில் வரிவிதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிக்க அனுமதித்தது. நேரடி வரிகளான நில வரி, விவசாய வருமான வரி, நகர்ப்புற நில வரி முதலிய செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானமானது 1975-80 வருட காலத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் வெறும் 4.6 சதவிகிதம் மட்டுமே ஆகும். அடுத்த 1980-85 வருட காலத்தில் இந்த வரிகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் வெறும் 1.9 சதவிகிதத்துக்கு வீழ்ந்துவிட்டது. மேலும், 1960-65 வருட காலத்தில் நேரடி வரியின் மூலம் பெறப்பட்ட வரி வருமானமானது ஒட்டுமொத்த வரி வருமானத்தில் 15.5 சதவிகிதம் என்கிற பெரிய அளவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுச் செல்வந்தர்களின் சொத்துகளின் மீதும், வருமானத்தின் மீதும் நேரடி வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் செலுத்திய தாக்கம் வெகு சொற்பமானது.

… ஒட்டுமொத்த விவசாயத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் நேரடி வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே இக்காலத்தில் இருந்துவந்துள்ளது. உண்மையில் 1960களில் இருந்த 1.9 சதவிகிதத்திலிருந்து 1970களில் 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. விவசாய வருமானத்தின் மீதான நேரடி வரிவிதிப்பு முக்கியத்துவம் அற்றதாக மாறியது. விவசாய வருமானம் புதிய தொழில்நுட்பங்கள், பம்ப் செட்கள் வளர்ச்சியால் பெரிய விவசாயிகள் பலனடைந்த அக்காலத்தில் நேரடி வரிவிதிப்பு மேலும் குறையவே செய்தது. 1980களில் இந்தக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.

பணக்காரர்களுக்குப் பலன் தந்த ஆட்சி

எம்.ஜி.ஆர் ஆட்சி ஏழைகள் மீது வரிவிதித்து வாழ்ந்தது என்றால், அது பணக்காரர்களுக்குப் பலன் தந்தது, குறிப்பாக நிலவளம் மிகுந்த கிராமப்புறப் பணக்காரர்கள் பொதுச் செலவுகளின் மூலம் பலன் பெற்றார்கள். விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மானிய மின்சாரம் ஓர் எடுத்துக்காட்டாகும். விவசாயப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை எம்.ஜி.ஆர் அரசு 1979 வருடத்திலிருந்து படிப்படியாகக் குறைத்தது. இந்தப் பெரிய அளவிலான மானியத்தால் தமிழக மின்சார வாரியத்துக்கு ‘சராசரியாக 1980-85 காலத்தில் 150 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது. இதே காலத்தில் இந்த இழப்பீட்டு அளவு இரு மடங்கு அளவுக்கு அதிகரித்தது.’ இதேபோல, அரசு பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்திருந்த பொது நீர்ப்பாசன வசதிகளை மிகக் குறைந்த கட்டணங்களில் விவசாயத் துறை பயன்பாட்டுக்கு விட்டது.

ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயத் துறைக்கு மாநில அரசு வழங்கிய மானியம் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு வருடமும் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் போராட்ட அரசியலைத் தேவைப்படுகிறபோது பம்ப் செட் உரிமையாளர்களான பணக்கார விவசாயிகள் மேற்கொண்டார்கள். பலம் பொருந்திய அழுத்தக் குழுவாகத் திகழ்ந்த இவர்களுக்கே இந்தச் சலுகைகள் பெருமளவில் பயன் தந்தன.

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது என்று பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள். சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள். அஇஅதிமுக அரசின் முறையற்ற தனித்துவமான மதுக் கொள்கையானது தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ளும் டாஸ்மாக் அமைப்புக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களையே விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது. சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன. (2) லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. (3)

ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள்

பட்ஜெட் செயல்பாடுகளில் மட்டும் அஇஅதிமுக அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள் நின்றுவிடவில்லை. மற்ற கொள்கை சார்ந்த விஷயங்களிலும் ஏழை மக்களின் சிக்கல்களை அணுகுவதிலும் இரக்கமும் அறிவும் அற்றதாக அது நடந்துகொண்டது. 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது. (4) 1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது. (5)

இப்படி ஒருபக்கச் சார்பான பொருளாதாரக் குறுக்கீடுகளால் ஏற்பட்ட கட்டமைப்பு சார்ந்த விளைவுகள் கண்ணைக் கூசும் அளவுக்கு வெளிப்பட்டன. அதிகாரபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை. (6) மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது. 1972-73 & 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது. இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது. (7)

இப்படிப்பட்ட சமத்துவமின்மைகளோடு எண்ணற்ற மக்களை ஈர்க்கும் வகையில் 1982இல் பெருத்த ஆரவாரத்தோடு தொடங்கப்பட முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் முதலிய புகழ்பெற்ற பொருளாதாரத் திட்டங்களும் இணைந்தே இயங்கின.

ஜூலை 1982 முதல் பால்வாடி, நர்சரிகளில் பதிவு செய்துகொண்ட பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள இரண்டு வயதிலிருந்து இருக்கும் கிராமப்புறக் குழந்தைகள், பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளிக்குச் செல்லும் 38 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை என்கிற அளவில் வருடம் முழுக்கச் சத்துணவு வழங்கப்பட்டது. 56 லட்சம் பேர் திட்டம் தொடங்கப்பட்டபோது பங்கேற்றார்கள். செப்டம்பர் 1982இல் நகர்ப்புற குழந்தைகளுக்கும், மெட்ராஸ், மதுரை, கோவை பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 6.5 லட்சம் குழந்தைகள் இணைக்கப்பட்டார்கள். இரு மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே இருந்த கட்டமைப்பைக்கொண்டு மாதமொரு முறை பல்பொடி விநியோகிப்பட்டது.

… ஜனவரி 1983இல் முதியோர் ஓய்வுநிதி பெறுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள் இவர்களால் இன்னுமொரு 1.9 லட்சம் நபர்கள் கூடுதலாக இணைந்தார்கள். ஒரு வருடம் கழித்து முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் இலவச உணவு பெறத் தகுதி உடையவர்கள் ஆனார்கள். (8)

இதுவும், இதைப் போன்ற அளவில் சிறிய அரசியல் முதலீடுகளும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. அவை பொருளாதாரத்தின் கட்டமைப்பில் எந்த வகையான பெரிய மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. இவற்றுக்கான நிதி மூலங்கள் ஏழைகளிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தின் மூலமே சாத்தியமானது, இவை வருமானம், சொத்து ஆகியவற்றைப் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதில் மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தின.

சுருக்கமாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால், பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஒன்றாகும்.

அடிக் குறிப்புகள்:

1. இப்பகுதியின் விவரங்கள், வாசகங்கள் உட்படப் பெரும்பாலானவை எஸ்.குகன் (1988) தமிழ்நாட்டின் மாநில நிதிகள்: 1960-85: போக்குகள், கொள்கை பற்றிய மறுஆய்வு. செயற்தாள் 77, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்டல் ஸ்டடிஸ், மெட்ராஸ்.

2. இந்தியா டுடே, 31 மார்ச் 1989; அசைட் 15, மார்ச் 1989

3. அசைட் 15 மார்ச் 1989; அசைட் ஜூன் 16, 1988.

4. துக்ளக் 1 மார்ச் 1987

5. இந்தியன் எக்ஸ்பிரஸ், 3 பிப்ரவரி 1987

6. மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட்டல் ஸ்டடிஸ், 1988: 345

7. மேலே குறிப்பிட்டுள்ள அதே புத்தகம்

8. பார்பரா ஹாரிஸ், (1988) தென்னிந்தியாவில் உணவு, மதிய உணவு: உணவு, தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற உணவு பொருளாதாரத்தில் ஊட்டச்சத்துக் கொள்கை. விவாதத்தாள் 31, வளர்ச்சி ஆய்வுப்பள்ளி, கிழக்கு ஆங்க்லியா

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1958-2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துகளையும் தமிழகத்துக்கு வெளியே காத்திரமான முறையில் விரிவாக முன்வைத்தவர் இவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சினைகள், சாதியச் சிக்கல்கள், தமிழ்த் திரைப்படங்கள் எனப் பல துறைகளிலும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களிடம் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர். தமிழின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்தவர்.)

 

(இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய ‘Image Trap’ நூலின் தமிழாக்கமான ‘பிம்பச் சிறை’ நூலின் (பிரக்ஞை பதிப்பக வெளியீடு) இரண்டாம் அத்தியாயத்திலிருந்துவெளியிடப்படுகிறது. தமிழில்: பூ.கொ.சரவணன். )

இந்தியா என்கிற கருத்தாக்கம்


ஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.

அரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும். 

Image result for சுனில் கில்னானி

மேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது? ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும். 

(பேராசிரியர் சுனில் கில்நானி)

Image result for சுனில் கில்னானி
இந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள்? இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.

நானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும். 

Image result for இந்தியா என்கிற கருத்தாக்கம்

கைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிரமாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது?

இந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும். 

இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
தமிழில்: அக்களூர் ரவி
சந்தியா பதிப்பகம்
380 பக்கங்கள்
315 ரூபாய்