‘அம்பேத்கரும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கமும்’ – கிறிஸ்தோஃபி ஜாப்ரிலா’


‘நல்ல உயரம், கட்டுகோப்பான உடல், கரிய நிறம். லாவகமாகவும், துரிதமாகவும் இயங்கும் மூளைக்குச் சொந்தக்காரர். அவர் அறிவின் பேருரு. வெளியே கரடுமுரடாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மானுடம் மிகைத்த பண்பாளர். இன்னல்கள் இடைவிடாது துரத்தினாலும், எப்போதும் வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடுக்காத தீரம் மிக்கவர். ஒரு காலத்தில் சமூகத்தில் மேல்தட்டினர் வாழும் பகுதியில் அவர் கீழ்சாதி என்பதால் தங்க கூட இடம் தரப்படவில்லை. அவரின் மனவுறுதியின் தீரம் அவரை மகத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்றது.’ (ஹரி ஷரண் சப்ரா (தொகுப்பாசிரியர்) Opposition in the Parliament, Delhi, New Publishers, 1952, பக்கம் 142)

மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பத்தி ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு பிராமண எழுத்தாளரால் எழுதப்பட்டதாகும். இது அப்போது அம்பேத்கர் தன்னுடைய அரசியல் வாழ்வின் உச்சத்தில் இருந்தார் என்பதைத் தெளிவாக நிறுவுகிறது. இப்படிப்பட்ட அங்கீகாரம் அம்பேத்கருக்கு கிடைத்தற்கு அவர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்புக்கு உரிய ‘வரைவுக்குழு’வின் தலைவராக அம்பேத்கர் திகழ்ந்ததும் காரணம். அந்த வரைவுக்குழுவில் சட்ட நிபுணரான அம்பேத்கர் உன்னதமான உச்சத்தை எட்டினார். அதுவே அம்பேத்கரின் வாழ்வின் பெருமைமிகு காலமாகும். இறுக்கமான சூட், டை, வட்ட வடிவிலான கண்ணாடி, கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி, கையில் அரசியலமைப்புச் சட்டம் என்கிற அம்பேத்கரின் உருவமே பொதுமக்களின் மனக்கண்ணில் இன்றும் அகலாமல் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இப்படி அம்பேத்கரை சிலையாகச் செதுக்குவதும் வழக்கமானது. 1

தீண்டப்படாத சாதியை சேர்ந்த ஒருவர் தேசிய அரசியலில் மாபெரும் தாக்கம் செலுத்துகிற நிலையை அடைந்தார் என்பதே உயர் சாதி இந்துக்களிடமிருந்து கசப்பான விமர்சனங்களை ஊற்றெடுக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார் என்பதையே நிராகரிக்கிற அளவிற்குச் சிலர் சென்றார்கள்.

அம்பேத்கர் ‘போலி மனுவா’?

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவிற்கு அம்பேத்கர் நியமிக்கப்பட்டதால், அவருக்கு ‘நவீன மனு’ என்கிற பட்டம் சூட்டப்பட்டது. இப்பட்டம் மனுநீதியை இயற்றிய புரதான மனுவை நினைவுபடுத்தியது. மனுநீதியை 1927-ல் நடைபெற்ற மகத் சத்தியாகிரகத்தின் போது அம்பேத்கர் எரித்தார் என்பதை நினைவுகூர்ந்தால் இந்தப்பட்டம் வேடிக்கையான ஒன்றாகத் தெரியும்.
அம்பேத்கர் குறித்த தன்னுடைய குற்றப்பத்திரிகையில் அருண் ஷோரி, அம்பேத்கரை ‘போலி மனு’ என்று முத்திரை குத்துகிறார். அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் பல்வேறு துணை குழுக்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளைச் செப்பனிடும் பொறுப்பு மட்டுமே வரைவுக்குழுவிற்கு இருந்தது. வரைவுக்குழுவின் பரிந்துரைகளையும் கூட அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முழு அமர்வு விவாதித்தே முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால், அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் அம்பேத்கர் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தவில்லை என்பது அருண் ஷோரியின் வாதம். மேலும் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை. அக்கட்சியினருக்குள் தான் ஒவ்வொரு சட்டப்பிரிவின் முக்கியமான அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டன என்பது அருண் ஷோரியின் வாதம்.2 அம்பேத்கர் துணை குழுக்கள், வரைவு குழு, முழு அமர்வு ஆகிய பல இடங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் தோற்கிற பக்கமே இருந்தார் என்று ஷோரி வாதிடுகிறார். அருண் ஷோரியின் இக்கருத்துகள் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் அம்பேத்கரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகின்றன என்பதே என்னுடைய வாதமாகும். காங்கிரஸ் தலைவர்கள் முன்னரே பேசி வைத்துக்கொண்டு சில சட்டப்பிரிவுகளை வேகமாக நிறைவேற்ற முயன்றார்கள் என்று அம்பேத்கர் அவ்வப்போது குறைபட்டுக்கொண்டார் என்றாலும், அம்பேத்கர் மற்றவர்கள் உருவாக்கிய சட்டப்பிரிவுகளை வெறுமனே செப்பனிடுவதொடு மட்டும் நின்றுவிடவில்லை. 3

அருண் ஷோரி அம்பேத்கரை சித்தரிக்கும் விதத்தில் இருந்து அறிஞர்கள் ஹெச்.எஸ்.வர்மா, நீதா வர்மா முற்றிலும் முரண்படுகிறார்கள். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவரின் ஆட்சி நிர்வாகத்திறனும், அரசியல் தாக்கமும் தான் காரணம் என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.4 அம்பேத்கரை வரைவுக்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் காரணமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 1946-ல் சபையில் விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, அம்பேத்கரின் தலையீடு பலரையும் கவர்ந்தது. நேரு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன் அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களைப் பட்டியலிட்டார். சபையின் இன்னொரு உறுப்பினராக ஜெயகர் ஒரு பிரச்சினையை எழுப்பினார் பாகிஸ்தானா, இந்தியாவா என்று இன்னமும் ஊசலாடிக்கொண்டிருந்த முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் சபையில் இணைவதா, வேண்டாமா என்று முடிவெடுக்காத நிலையில் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றார் ஜெயகர். அடுத்து எழுந்த அம்பேத்கர், மிகவும் அற்புதமானதொரு ஒரு உரையை நிகழ்த்தினார். அந்த உரை நடுநிலைமையோடு திகழ்ந்ததோடு, அம்பேத்கருக்கு இருந்த கச்சிதமான, ஆழ்ந்த சட்ட அறிவையும் புலப்படுத்தியது. அம்பேத்கர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சமரசத்தீர்வை முன்வைத்தார். ஆகவே, அம்பேத்கரின் திறமையினால் தான் அவரை அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவராக நியமித்தார்கள் என்று வர்மாக்கள் வாதிடுகிறார்கள்.

அடுத்ததாக, நாம் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. இக்குழு அடிப்படையான சட்டங்களை இயற்றுகிற பணியில் ஈடுபடவில்லை. பல்வேறு துணைக்குழுக்கள் பரிந்துரைத்த சட்டப்பிரிவுகளை, செம்மைப்படுத்தி, செப்பனிட்டு அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையின் முன்னால் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பே வரைவுக்குழுவுக்கு உரியது. சபையானது பல்வேறு வரைவுகளை வாசிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் சட்டப்பிரிவுகள் குறித்து நிகழ்ந்த விவாதங்களை நெறிப்படுத்தி, வழிநடத்தும் பணியில் வரைவுக்குழுவின் உறுப்பினர்கள், அதிலும் அடிக்கடி அம்பேத்கரே ஈடுபட்டார். மேலும், அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் வரைவுக்குழுவின் உறுப்பினராகவும், பதினைந்து குழுக்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினராகவும் திகழ்ந்த வெகு சில உறுப்பினர்களில் அம்பேத்கரும் ஒருவர்.5 ஆகவே, அம்பேத்கரால் அனைத்து சட்டப்பிரிவுகள் சார்ந்து நடைபெற்ற விவாதங்களையும் கவனிக்க முடிந்தது. சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்ட மிக முக்கியமான சட்டப்பிரிவுகள் சார்ந்த விவாதங்களையும் கூர்ந்து நோக்க முடிந்தது.

பல்வேறு குழுக்களின் பரிந்துரைகள் வரைவுக்குழுவின் தலைவர் என்கிற முறையில் அம்பேத்கருக்கும், குழுக்களின் செயலாளராகத் திகழ்ந்த எஸ்.என்.முகர்ஜிக்கும் (இவருக்கு இறுதியாக அம்பேத்கர் நெகிழவைக்கும் புகழாரத்தைச் சூட்டினார்) அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள் சட்டப்பிரிவுகளைத் திருத்தியமைப்பதோடு,பல சட்டப்பிரிவுகளுக்கு விளக்கங்கள் தேவைப்படுகிற போது அவற்றைப் பல்வேறு குழுக்களிடம் இருந்து பெறுகிற பொறுப்பும் இருவருக்கும் உரியதாக இருந்தது. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளவே இல்லை. இதனால், இந்தத் திருத்தியமைக்கும் பணிச்சுமைகள் பெரும்பாலும் அம்பேத்கரின் தோளிலேயே விழுந்தன. இந்த வரைவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி நவம்பர் 1948-ல் சபையின் முன்னால் இப்படிப் பேசினார்:

‘நீங்கள் வரைவுக்குழுவிற்கு நியமித்த ஏழு உறுப்பினர்களில் ஒருவர் பதவியை விட்டு விலகியதால், அந்த இடத்துக்கு வேறொரு நபரை நியமனம் செய்தீர்கள். ஒரு உறுப்பினர் காலமானார். அவரின் இடம் நிரப்பப்படவில்லை. இன்னொரு உறுப்பினரோ அமெரிக்காவில் இருந்தார். அவரின் இடத்திற்கும் யாரும் கொண்டுவரப்படவில்லை. இன்னொரு நபரோ அரசாங்க அலுவல்களில் மும்முரமாக மூழ்கிவிட்டார். ஓரிரு உறுப்பினர்கள் டெல்லியில் இருந்து வெகுதூரம் தள்ளியிருந்தார்கள். அவர்களின் உடல்நலக்குறைவால் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இறுதியாக, அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் ஒட்டுமொத்த பொறுப்பும் டாக்டர்.அம்பேத்கரின் தலைமேல் விழுந்தது. இப்பணியை மெச்சத்தக்க வகையில் சிறப்பாகச் செய்து முடித்திருக்கும் டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.’ 6
அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தை எழுதவில்லை என்றாலும், அதன் உருவாக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் அவரின் கைவண்ணம் இருந்து கொண்டே இருந்தது. அவர் குழுக்களின் பரிந்துரைகளைத் திருத்தியமைப்பதோடு நிம்மதியடையவில்லை. சபையின் முழு அமர்வில் கலந்து கொண்டு, பொறி பறக்கும் விவாதங்களில் சட்டப்பிரிவின் ஒரு வரைவு ஏன் மற்றொன்றை விட மேம்பட்டது என விளக்கினார். விவாதங்களின் போக்கையே தொடர்ந்து திசைமாற்றும் பணியிலும் அவர் அயராது ஈடுபட்டார். ஆகவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கத்தில் அம்பேத்கர் மிக முக்கியமான பங்காற்றினார். இதுவே, ஏன் அருண் ஷோரி அவர் மீது இத்தனை வன்மமிகுந்த விமர்சனங்களை வைக்கிறார் என்பதை விளக்குகிறது. அருண் ஷோரியின் இன்னொரு வாதமான, காந்திய சிந்தனைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார் என்பதில் ஓரளவிற்கு நியாயம் இருக்கிறது.

காந்தியை பழிதீர்த்த மேற்கத்திய ஜனநாயகவாதி:

அம்பேத்கர் இளவயதில் வெளிநாட்டில் படித்த போது தான் உள்வாங்கிக்கொண்ட விழுமியங்களையும், அரசியல் மாதிரிகளையும் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் நியாயப்படுத்தினார். அவர் தாராளவாத ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டப்பிரிவில், இந்தியாவைச் ‘சோசியலிஸ்ட்’ என அறிவிப்பதில் துவங்கி, இந்திய குடியரசை முழுவதும் மாற்றியமைக்க முயன்ற இடதுசாரிகளை அம்பேத்கர் எதிர்த்தார். அப்படி, இந்தியக்குடியரசை சோசியலிஸ்ட் என்று அறிவித்து விட்டால், ‘அது ஜனநாயகத்தை எளிதாக அழித்துவிடும்’ என்று அவர் எண்ணினார்.7 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசே எது மிகச்சிறந்த சமூக அமைப்பு என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனை, அவர் நவம்பர் 19, 1948 அன்று கீழ்கண்டவாறு விளக்கினார்:

‘ நாம் நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசியல் ஜனநாயகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம். எந்த வகையிலும் எந்த ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவும் தொடர்ந்து சர்வாதிகாரத்தோடு கோலோச்ச கூடாது என்கிற காரணத்துக்காகவே அரசியல் ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளோம். நாம் அரசியல் ஜனநாயகத்தை நிறுவி விட்டோம் என்பதால், லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்… […] [இப்போது], பொருளாதார ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு மக்கள் பல்வேறு வழிகளைக் கைக்கொள்ளலாம் என்று நம்புவார்கள். தனி உரிமை கோட்பாடே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று சிலர் நம்புகிறார்கள்; வேறு சிலரோ சோசியலிச அரசே மிகச்சிறந்த பொருளாதார ஜனநாயகம் என்று கருதுகிறார்கள்; இன்னும் சிலர், கம்யூனிச சிந்தனைகளே மிகக் கச்சிதமான பொருளாதார ஜனநாயக வடிவம் என்று எண்ணுகிறார்கள் […] [இப்படிப்பட்ட சூழல்களில்] வழிகாட்டு நெறிமுறைகளில் நாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி திட்டமிட்டே இறுக்கமானதாக, நிலையானதாக எழுதப்படவில்லை. பல்வேறு வகையான சிந்தனைகள் கொண்ட பல்வேறு மக்களுக்குப் போதுமான இடத்தை வழங்கியுள்ளோம். லட்சியவாதமிக்க பொருளாதார ஜனநாயகத்தை அடைய அவரவரும் அவர்களின் சொந்த வழியில் முயற்சிக்கலாம். அவர்களின் வழியே பொருளாதார ஜனநாயகத்தை எட்டுவதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்று பொதுமக்களை நம்பவைக்க அவர்கள் முயலட்டும்.’8

இந்த வாதத்திற்குத் தன்னை உளமார ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக, இயற்கை வளங்கள் அனைத்தையும் தேசியமயமாக்க வேண்டும் என்கிற அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அவர் எதிர்த்தார். அந்தச் சட்டத்திருத்தம் வாக்களிப்பிற்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது அம்பேத்கர் அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் எத்தகைய அறரீதியான வல்லமை மிக்கவராக திகழ்ந்தார் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது.9 அம்பேத்கர் தாராளவாத ஜனநாயகத்தின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. எப்போதும், வரைவுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட சட்ட வடிவத்தை நியாயப்படுத்துவதையே அம்பேத்கர் செய்வார். ஆனால், ஒருமுறை அவ்வாறு சட்ட வடிவத்தைத் தாக்கல் செய்த போது, அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்று முழு அமர்வை கேட்டுக்கொண்டார். அவர் தாக்கல் செய்த சட்டவடிவத்தைத் திருத்தி, அரசு நிர்வாக அதிகாரத்தையும் , நீதித்துறையையும் முழுமையாகப் பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.10 சில உறுப்பினர்கள், அரசின் அதிகாரத்துக்கு ஆதரவாக வாதிடுவதாகச் சொல்லிக்கொண்டு, நீதித்துறையின் மிகக்கடுமையான கட்டுப்பாடு அரசை பலவீனப்படுத்தும் என்றார்கள். நிற்க கூட நேரமின்றிப் பிரதமராக பல்வேறு பொறுப்புகளோடு இயங்கிக்கொண்டு இருந்த நேரு கூட, அம்பேத்கரின் சட்ட திருத்தத்தை ஆதரிக்கும் பொருட்டு விவாதத்தில் கலந்து கொண்டார்.11 இதன் விளைவாக, அம்பேத்கரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, இந்த முழுமையான அதிகாரப் பிரிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் சட்டப்பிரிவு 50 ஆனது. பிரிட்டிஷ் நீதித்துறையின் தாக்கத்தில் ஒரு நீதிபரிபாலன முறையை ஏற்படுத்தி இருப்பதை அம்பேத்கர் பின்னர் நியாயப்படுத்திப் பேசினார்.12 அதிகாரங்களைப் பிரித்து வைப்பது, எந்த வகையிலும் அரசை பலவீனப்படுத்தி விடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

கூட்டாட்சி முறையினால் ஏற்படும் அதீதமான அதிகாரப்பரவலாக்கம், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு பொதுவான அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவதைப் பாதிக்கும் என்பதால் அம்பேத்கர் வலிமைமிக்க மத்திய அரசையே ஆதரித்தார். எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்குக் கூடுதலான சுயாட்சி கிடைத்தால், தீண்டாமை ஒழிப்பை கட்டாயமாக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரி அமல்படுத்தாமல் போகக்கூடும் என்று வாதிட்டார்.13 காந்தியவாதிகள் கிராமத்தில் இருந்து துவங்கி எல்லா மட்டத்திலும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்கிற பார்வை கொண்டிருந்தார்கள். இதனால், அதிகாரத்தை மையப்படுத்த வேண்டும் என்கிற முடிவு, இயல்பாகவே காந்தியின் ஆதரவாளர்களைக் காயப்படுத்தியது. மிகவும் தீவிரமான காந்தியவாதிகளின் பரிந்துரைகளை அம்பேத்கர் புறந்தள்ளினார், அல்லது அவற்றின் தாக்கத்தை மட்டுப்படுத்தினார். இவ்வாறு அம்பேத்கர், மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு அவரைப் பழிதீர்த்துக் கொண்டார்.

அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு, அரசியலமைப்புச் சட்டத்தை எழுத உபயோகப்படுத்திய எழுத்துக்கள் பெரும்பாலும் காந்திய பார்வை கொண்டவையாக இருக்கவில்லை. நேரு கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்கள் குறித்த தீர்மானத்தில் மகாத்மா காந்தியின் தாக்கம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தென்பட்டது. பல்வேறு குழுக்கள், துணைக்குழுக்களின் அறிக்கைகள் (இவற்றில் முக்கியமான குழுக்கள், துணைக்குழுக்களுக்கு நேரு, படேல் தலைமை தாங்கினார்கள்) காந்தி குறித்து மூச்சே விடவில்லை. இவற்றால் மட்டுமே, நவம்பர் 1948-ல் அம்பேத்கர் சமர்ப்பித்த அரசியலமைப்புச் சட்டத்தில் காந்தியத்தின் முத்திரை இல்லாமல் போனது என்பதற்கு இல்லை. அம்பேத்கர் தாக்கல் செய்த சட்ட வடிவத்தில், மலைப்பை ஏற்படுத்தும் வகையில் 315 சட்டப்பிரிவுகள் இருந்தன. இதனால் தான், அம்பேத்கர் அப்பட்டமான நிறைவோடு, ‘உலகத்தின் வேறு எந்த அரசியலமைப்பு சட்டமும் இத்தனை பெரிதில்லை.’ என்றார்.14 அதற்குப் பின்னர், அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தில் கிராமங்களுக்கு இடமில்லை என்கிற காந்தியவாதிகளின் விமர்சனத்தைக் கீழ்கண்டவாறு தவிடுபொடியாக்கினார்:

‘வரைவு அரசியலமைப்பு சட்டத்தின் மீது வைக்கப்படும் இன்னுமொரு குற்றச்சாட்டு உண்டு. அது பண்டைய இந்திய ஆட்சியமைப்பை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பண்டைய இந்து அரசை மாதிரியாகக் கொண்டு உருவாக்கியிருக்க வேண்டும் என்கிறார்கள். மேற்கின் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக, புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கிராம, மாவட்ட பஞ்சாயத்துகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பி இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், இன்னமும் தீவிரமான காந்தியப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மத்திய, மாநில அரசுகளும் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான கிராம அரசுகள் மட்டும் இருந்தால் போதுமானது. அறிவார்ந்த இந்தியர்கள் கிராம சமூகத்தின் மீது கொண்டிருக்கும் காதல் பரிதாபப்படும்படியாக இல்லாவிடினும், அளவில்லாததாக இருக்கிறது. […] கிராமம் என்னவாக இருக்கிறது? உள்ளூர் பெருமிதம் ஊற்றெடுக்கும் சாக்கடையாக, அறியாமை, குறுகிய மனப்பான்மை, வகுப்புவாதத்தின் கிடங்காக அல்லவா இருக்கிறது. வரைவு அரசியலமைப்புச் சட்டம் கிராமத்தை தூக்கி எறிந்துவிட்டு, தன்னுடைய அடிப்படையாகத் தனிமனிதனை ஏற்றிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.’15

தமிழில்: பூ.கொ.சரவணன்

(இப்பகுதிகள் ‘அம்பேத்கரும், சாதி ஒழிப்பும்’ எனும் மொழியாக்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நூலை வாங்க: https://www.amazon.in/Ambedkarum-Saathi-Ozhippum-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/dp/9386737663/ref=mp_s_a_1_1?keywords=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&qid=1574734728&sprefix=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87&sr=8-1#mediaMatrix_secondary_view_div_1574734735906)

தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன?


தண்ணீரும், விடுதலையும்- அம்பேத்கரின் மகத் போராட்டமும், காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் நமக்குச் சொல்வது என்ன? – பேராசிரியர் சுனில் அம்ரித்

இன்று மகத் சத்தியாகிரகம் நிகழ்ந்த நாள். (மார்ச் 20, 1927)

தண்ணீரை அறுவடை செய்வது என்பது இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைச் சீர்செய்வது. அது எல்லாப் பகுதிகளுக்கும் சமமாகப் பொழியாத பருவமழையைச் சீராகப் பங்கிட்டு வழங்க முயல்வது. மேலும், மழைக்காக வானம் பார்த்திருக்கும் பகுதிகளில் காலந்தப்பிப் பெய்யும் மழையின் நம்பகத்தன்மையற்ற போக்கில் இருந்து பாதுகாக்க முனைவதும் ஆகும். அதேவேளையில், தண்ணீரானது ஏற்றத்தாழ்வை வளர்த்தெடுக்கும் இயந்திரமாகவும் திகழ்கிறது. மக்களிடையே, வர்க்கங்கள் மற்றும் சாதிகள் இடையே, நகரத்துக்கும் -கிராமத்துக்கும் இடையே, பகுதிகளுக்கு இடையே என்று தண்ணீரால் நிகழ்த்தப்படும் பாகுபடுத்தல் கவனத்துக்கு உரியது. தண்ணீரை கட்டுப்படுத்துவது என்பதற்கு அதிகாரத்தின் ஊற்று. தண்ணீரின்றித் தவிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒதுக்கி வைப்பின் அடிப்படையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தண்ணீரானது பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் மைய நாதமாகத் திகழ்ந்தது. ஆனால், இந்த விடுதலை உண்மையில் யாருக்கான விடுதலை?

இந்தக் கேள்வி இந்தியாவின் மேற்குப்பகுதியில் பூனாவிற்கு அருகில் உள்ள மகத் நகரில் தீவிரமாக மார்ச், 1927-ல் எதிரொலித்தது. அந்தப்பகுதியின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – இந்து சாதி அமைப்பில் இருந்தில் விலக்கி வைக்கப்பட்டவர்கள், முற்காலத்தில் தீண்டப்படாதவர்கள் என்று அறியப்பட்டவர்கள். ஆதிக்க சாதி இந்துக்களால் தொழில் சார்ந்து பாகுபடுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கை அனுதினமும் நரக வேதனைக்கு ஆளாகிற ஒன்றாக இருந்தது. மேல் சாதி இந்துக்கள் அவர்களை வன்முறை,
பொருளாதார வளங்களைப் பிடுங்கிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் கொடுமைக்கு ஆட்படுத்தினார்கள். மகத் நகரில் உள்ளூர் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேல்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டது. இப்படிக் குளத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைப்பது சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், அந்த அநீதி தொடர்ந்தது. இன்றும் இத்தகைய அநீதி எண்ணற்ற இந்திய நகரங்கள், கிராமங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தலித் தலைவரான பீமாராவ் அம்பேத்கர் – மேற்கு இந்தியாவின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் அறிவுத்திறமிக்க வழக்கறிஞர். லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ், கொலம்பியா பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற அந்த ஆளுமை மகத் குளம் நோக்கி மக்களை அணிவகுத்தார். அந்தக் குளத்தில் இருந்து ஒரு குவளை தண்ணீரை அடையாளப்பூர்வமாக அள்ளிக் குடித்தார். தங்களுடைய சமூக ஆதிக்கத்துக்கு ஊறு நேர்ந்து விட்டதாக அஞ்சிய உள்ளூர் சாதி இந்துக்கள் உடனடியாக மிருகத்தனமாக வன்முறை வெறியாட்டம் ஆடினார்கள். தலித்துகள் தாக்கப்பட்டார்கள்; பலரின் வேலை பறிபோனது. “பிறரைப் போல நாங்களும் மனிதர்கள் தான் என்று நிறுவவே குளம் நோக்கி நடைபோடுகிறோம்” என்று அம்பேத்கர் அறிவித்தார். நான்காயிரம் தன்னார்வமிக்க மக்களோடு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடைசி நிமிடத்தில், நீதிமன்றங்கள் தன்னுடைய சமூகத்திற்கு நியாயம் வழங்கும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைத் தள்ளிவைத்தார். அம்பேத்கரின் நம்பிக்கை சரி தான் என்று நிரூபணமாகப் பத்தாண்டு ஆகிற்று. சாதி இந்துக்கள் அக்குளம் தனியார் சொத்து, ஆகவே, குளத்தின் நீரை யார் அருந்தலாம், யார் பருகக்கூடாது என்று விலக்கி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்கிற சாதி இந்துக்களின் வாதத்தை ஏற்க மறுத்து, அக்குளத்தைப் பயன்படுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விரிவான தளத்தில் அணுகினால், இந்திய தேசிய இயக்கத்தின் மையமாக ஒரு பதற்றம் திகழ்ந்தது. ஒரு அரசியல் கருத்தியலாளர் (சுதீப்தா கவிராஜ்) விவரிப்பதை போல, அது எந்த விடுதலையை உடனே அடைந்திட வேண்டும் என்கிற பதற்றம் ஆகும். ஒரு பக்கம், “சாதி ஆதிக்கத்தில் இருந்து சமூக விடுதலை” என்கிற பார்வையும்,
இன்னொருபுறம், “காலனிய ஆட்சியில் இருந்து அரசியல் விடுதலை”யே உடனடி அவசரத்தேவை என்கிற பார்வையும் மோதிக்கொண்டன. இந்த விவாதத்தின் எதிரெதிர் பக்கங்களில் அம்பேத்கரும், காந்தியும் நின்றார்கள். இந்திய முஸ்லீம்களைப் போலப் பிரிட்டிஷ் சட்ட அவைகளில் தலித்துகளுக்கும் தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவப்பட வேண்டுமா என்கிற விஷயத்தில் மோதிக்கொண்டார்கள். இருவருமே தண்ணீரை அடையாளரீதியாகவும், அதனுடைய பொருளாதாரப் பலத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பது வெறும் விபத்தல்ல. 1930-ல் தண்டி கடற்கரை நோக்கி காந்தி மேற்கொண்ட “உப்பு யாத்திரை” அவரின் பெரும்வெற்றி பெற்ற, மனதைவிட்டு அகலாத போராட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தன்னுடைய சத்தியாகிரகத்தின் அடையாளப்புள்ளியாக அவர் ஆங்கிலேயரின் உப்பு வரியை தேர்ந்தெடுத்தார். “காற்று, தண்ணீருக்கு அடுத்தபடியாக உப்பே வாழ்க்கைக்கு மிகவும் இன்றையமையாதது ஆகும்’ . உப்பின் முக்கியப் பண்புகள் கடற்கரைசார் சூழல் மண்டலத்தை நாட்டின் உட்பகுதியில் வாழும் பல லட்சம் மக்களோடு இணைக்கிறது. காந்தியின் பார்வையில், கொடும் வறுமையில் உழலும், வெயிலில் அயராது பாடுபடும் ஏழைகளுக்கே உப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது. இது பருவநிலை, சமூகம் சார்ந்த வாதமாகும். அம்பேத்கரின் மகத் நோக்கிய பயணம் தண்ணீர் என்பது முகத்தில் அறையும் சமூக ஏற்றத்தாழ்வின் குறியீடாகத் தண்ணீர் திகழ்வதைக் கவனப்படுத்தியது. காந்தி தண்ணீரை ஒற்றுமைக்கான அடையாளமாகப் பயன்படுத்தினார். முப்பதுகளில் தண்ணீர், தண்ணீர் வளங்களைச் சுற்றி வேறுபட்ட உரிமை கோரல்கள் இந்தியாவிலும், உலகம் முழுக்கவும் அரங்கேறியது.

(ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுத்துறை பேராசிரியராகத் திகழ்கிறார் சுனில் அம்ரித். அவரின் ‘Unruly Waters- How Rains, Rivers, Coasts and Seas have developed Asia’s history’ நூலின் ஆறாவது அதிகாரத்தில் இருந்து மேற்கண்ட பத்தி மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. )

தமிழில்: பூ.கொ.சரவணன்

இலவசங்கள் எல்லாம் வெகுமக்கள் மயக்குத் திட்டங்களா?


இலவசங்களை வெகுமக்கள் மயக்கு திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக்காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும் தான் அறிவுத்தேடலில் ஈடுபட முடிந்தது. மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க வலிக்க பொறியியல் பாடங்களை கையால் எழுதி மொழிபெயர்த்த வலிகளை நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினி தான் போக்கியது. அதில் அத்தனை பாடங்கள், நூல்களை சேகரம் செய்து தந்திருந்தார்கள். அதன் உதவியோடு தான் என் குடிமைப்பணித்தேர்வு முயற்சிகள் சாத்தியமானது.
**************
இலவச மருத்துவக்கல்வி பெண்களுக்கு சென்னை மருத்துவக்கல்லூரி தான் தந்தது. அது இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது என மனநல மருத்துவத்தில் மகத்தான சாதனைகள் புரிந்த சாரதா மேனன் வாக்குமூலம் தந்தார்.
*********
இலவச மிதிவண்டிகள் பெண்களின் பொருளாதார விடுதலை, வேலைவாய்ப்பை எப்படியெல்லாம் அதிகரித்தன என்பது குறித்த தீர்க்கமான ஆய்வுகள் உண்டு. மட்டையடி அடிப்பவர்களுக்கு இவையெல்லாம் கண்ணில் படாது. அவை இலவசங்கள் அல்ல. சமூகக்கடமை. ஆண்களை ஒவ்வொரு நகர்விற்கும் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். உச்சிவெயில் தெரியாமல் உல்லாச மகிழுந்துகளில் வலம் வருகிறவர்களுக்கு இவை வெகுமக்கள் மயக்குத்திட்டங்களாக மட்டும் தெரிவதில் ஆச்சரியமென்ன.
***************
சமூகத்தேர்வு எனப் பேராசிரியர் அமர்த்தியா சென் குறிப்பிடும் மக்களுக்கான சரியான தேர்வுகள் தமிழ்நாட்டில் செயல்திறத்தோடு கொண்டு சேர்க்கப்படுவது ஒன்றும் விபத்தில்லை. பிரச்சினைகள் சார்ந்த தமிழக மக்களின் அணிதிரட்டல்கள் மிக முக்கியமான காரணம் என நரேந்திர சுப்ரமணியன், விவேக் சீனிவாசன் ஆய்வுகள் நிறுவுகின்றன. இவற்றை ‘ஓசி’ எனக்கொச்சைப்படு
த்துபவர்கள் தட்டையான பார்வை கொண்டவர்கள்.
******
பத்தாம் வகுப்பு முடித்தால் திருமண உதவித்தொகை என்பதால் கல்வி பெற்ற பெண்கள் பலருண்டு. வயிறு காயாமல் இருக்க பள்ளி நோக்கி வரவைத்தது இலவச மதிய உணவுத்திட்டம் தான். அதை சத்துணவு, முட்டை, வாழைப்பழம் என விரிவாக்கிய உணவில் சமூக நீதி இம்மண்ணின் ஆச்சரியம். முட்டை போட்டால் எங்கள் மதப்புனிதம் கெடும் என்ற அடிப்படைவாதிகளுக்காக பழங்குடியின, ஏழைப்பிள்ளைகள் அல்லலுறும் மாநிலங்களையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
**********
இலவசங்கள் எல்லாம் இலவசங்கள் அல்ல. அவற்றின் அமலாக்கம், பயனாளிகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஊழல், கேடு என்கிற அளவிற்கு பேசுபவர்கள் எம் கடந்த காலம் அறியாதவர்கள். ஒரு சீரியல் பார்க்க நவீனத்தீண்டாமையோடு யார் வீட்டு வாசலிலோ நின்ற வலி தெரியாது. பேருந்துக்கட்டணம் கட்ட காசில்லாமல் நடந்தே பல மைல்தூரம் கடந்து படித்தோரின் கால்களின் தேம்பல்கள் அறியார். கவுன்சிலிங்கிற்கு கட்ட ஐயாயிரமா என வாய்பிளந்த குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் எழுவது ஏன் என அறிவீர்களா? ஊழல் ஒழிப்பு என்கிற ஜிகினாத்தாளில் சுற்றி ‘நீங்கள் பிச்சைக்காரர்கள்’ என தரப்படும் மசாலா அரைவேக்காடானது, அருவருப்பானது.
இக்கட்டுரையை இந்து தமிழ் திசை நடுப்பக்கத்தில் பதிப்பித்தது. ஆசிரியர் குழுவிற்கு நன்றி:

எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?


எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

(“என்னால் எம்.ஜி.ஆராக ஆக முடியாது; ஆனால், எம்ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்” என்று அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் ஆட்சி உண்மையில் எப்படிப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இங்கே பிரசுரிக்கப்படுகிறது. பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதியுள்ள ‘Image Trap’ நூலிலிருந்து எடுத்தாளப்படும் கட்டுரை இது. )

எம்.ஜி.ஆரின் மீது அடித்தட்டு வர்க்கம்கொண்ட அரசியல் பக்திக்கான காரணம் தன்னுடைய 11 வருடகால ஆட்சியில் அவர் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றியதால் அல்ல என்பது புரியாத புதிராகும். அவருடைய ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் எந்த முக்கியமான கட்டமைப்பு மாற்றமோ, ஏழைகளின் துயரங்கள் பெருமளவில் குறைவதோ நிகழவில்லை. தமிழ்நாடு அரசு எப்படித் தன்னுடைய நிதி மூலங்களைத் திரட்டியது, அவற்றை எப்படிச் செலவிட்டது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வு, எம்.ஜி.ஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசு ஏழைகள் (மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்) மீது வரி போட்டுப் பணக்காரர்கள், கிராமப்புறச் செல்வந்தர்கள் பயன்பெறுமாறு செயல்பட்டது என்பதை விளக்குகிறது. (1)

ஏழைகளின் மீது சுமத்தப்பட்ட வரி

1975-85 வருடகாலத்தில் அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவிகிதம் விற்பனை வரியிலிருந்தே பெறப்பட்டது. இதில் பெரும்பான்மையான விற்பனை வரி நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் நுகர்வோர் பொருள்களான பருத்தி, இழைகள், மருந்துகள், பருப்பு வகைகள் தேயிலை, கரும்பு, மின்னணுப் பொருள்கள் மற்றும் சோப் மீதான வரிவிதிப்பு மூலமே பெறப்பட்டது. ஏழைகள் அதிலும் கொடிய வறுமைக்கு உள்ளான ஏழைகள் தங்களுடைய பயன்பாட்டை உணவு, அடிப்படைத் தேவைகளோடு நிறுத்திக்கொண்டதால் விற்பனை வரிவிதிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. 1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது. மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது. இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதற்கு நேர்மாறாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பணக்கார வர்க்கத்தினர் பெருமளவில் வரிவிதிப்புக்கு உள்ளாகாமல் தப்பிக்க அனுமதித்தது. நேரடி வரிகளான நில வரி, விவசாய வருமான வரி, நகர்ப்புற நில வரி முதலிய செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானமானது 1975-80 வருட காலத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் வெறும் 4.6 சதவிகிதம் மட்டுமே ஆகும். அடுத்த 1980-85 வருட காலத்தில் இந்த வரிகளின் மூலம் பெறப்பட்ட வருமானம் வெறும் 1.9 சதவிகிதத்துக்கு வீழ்ந்துவிட்டது. மேலும், 1960-65 வருட காலத்தில் நேரடி வரியின் மூலம் பெறப்பட்ட வரி வருமானமானது ஒட்டுமொத்த வரி வருமானத்தில் 15.5 சதவிகிதம் என்கிற பெரிய அளவைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டுச் செல்வந்தர்களின் சொத்துகளின் மீதும், வருமானத்தின் மீதும் நேரடி வரிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் செலுத்திய தாக்கம் வெகு சொற்பமானது.

… ஒட்டுமொத்த விவசாயத்திலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் நேரடி வரிவிதிப்பின் மூலம் பெறப்பட்ட வருமானம் 2 சதவிகிதத்துக்கும் குறைவான அளவிலேயே இக்காலத்தில் இருந்துவந்துள்ளது. உண்மையில் 1960களில் இருந்த 1.9 சதவிகிதத்திலிருந்து 1970களில் 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. விவசாய வருமானத்தின் மீதான நேரடி வரிவிதிப்பு முக்கியத்துவம் அற்றதாக மாறியது. விவசாய வருமானம் புதிய தொழில்நுட்பங்கள், பம்ப் செட்கள் வளர்ச்சியால் பெரிய விவசாயிகள் பலனடைந்த அக்காலத்தில் நேரடி வரிவிதிப்பு மேலும் குறையவே செய்தது. 1980களில் இந்தக் கதையில் எந்த மாற்றமும் இல்லை.

பணக்காரர்களுக்குப் பலன் தந்த ஆட்சி

எம்.ஜி.ஆர் ஆட்சி ஏழைகள் மீது வரிவிதித்து வாழ்ந்தது என்றால், அது பணக்காரர்களுக்குப் பலன் தந்தது, குறிப்பாக நிலவளம் மிகுந்த கிராமப்புறப் பணக்காரர்கள் பொதுச் செலவுகளின் மூலம் பலன் பெற்றார்கள். விவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மானிய மின்சாரம் ஓர் எடுத்துக்காட்டாகும். விவசாயப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணத்தை எம்.ஜி.ஆர் அரசு 1979 வருடத்திலிருந்து படிப்படியாகக் குறைத்தது. இந்தப் பெரிய அளவிலான மானியத்தால் தமிழக மின்சார வாரியத்துக்கு ‘சராசரியாக 1980-85 காலத்தில் 150 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது. இதே காலத்தில் இந்த இழப்பீட்டு அளவு இரு மடங்கு அளவுக்கு அதிகரித்தது.’ இதேபோல, அரசு பெருமளவில் பொதுமக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்திருந்த பொது நீர்ப்பாசன வசதிகளை மிகக் குறைந்த கட்டணங்களில் விவசாயத் துறை பயன்பாட்டுக்கு விட்டது.

ஒட்டுமொத்தமாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயத் துறைக்கு மாநில அரசு வழங்கிய மானியம் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு வருடமும் 200 கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில் போராட்ட அரசியலைத் தேவைப்படுகிறபோது பம்ப் செட் உரிமையாளர்களான பணக்கார விவசாயிகள் மேற்கொண்டார்கள். பலம் பொருந்திய அழுத்தக் குழுவாகத் திகழ்ந்த இவர்களுக்கே இந்தச் சலுகைகள் பெருமளவில் பயன் தந்தன.

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது என்று பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள். சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள். அஇஅதிமுக அரசின் முறையற்ற தனித்துவமான மதுக் கொள்கையானது தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ளும் டாஸ்மாக் அமைப்புக்கு இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களையே விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது. சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன. (2) லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. (3)

ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள்

பட்ஜெட் செயல்பாடுகளில் மட்டும் அஇஅதிமுக அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகள் நின்றுவிடவில்லை. மற்ற கொள்கை சார்ந்த விஷயங்களிலும் ஏழை மக்களின் சிக்கல்களை அணுகுவதிலும் இரக்கமும் அறிவும் அற்றதாக அது நடந்துகொண்டது. 1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது. (4) 1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது. (5)

இப்படி ஒருபக்கச் சார்பான பொருளாதாரக் குறுக்கீடுகளால் ஏற்பட்ட கட்டமைப்பு சார்ந்த விளைவுகள் கண்ணைக் கூசும் அளவுக்கு வெளிப்பட்டன. அதிகாரபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை. (6) மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது. 1972-73 & 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது. இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும். நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது. (7)

இப்படிப்பட்ட சமத்துவமின்மைகளோடு எண்ணற்ற மக்களை ஈர்க்கும் வகையில் 1982இல் பெருத்த ஆரவாரத்தோடு தொடங்கப்பட முதலமைச்சரின் சத்துணவுத் திட்டம் முதலிய புகழ்பெற்ற பொருளாதாரத் திட்டங்களும் இணைந்தே இயங்கின.

ஜூலை 1982 முதல் பால்வாடி, நர்சரிகளில் பதிவு செய்துகொண்ட பள்ளிக்குச் செல்வதற்கு முந்தைய நிலையில் உள்ள இரண்டு வயதிலிருந்து இருக்கும் கிராமப்புறக் குழந்தைகள், பத்து வயதுக்கு உட்பட்ட பள்ளிக்குச் செல்லும் 38 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒருவேளை என்கிற அளவில் வருடம் முழுக்கச் சத்துணவு வழங்கப்பட்டது. 56 லட்சம் பேர் திட்டம் தொடங்கப்பட்டபோது பங்கேற்றார்கள். செப்டம்பர் 1982இல் நகர்ப்புற குழந்தைகளுக்கும், மெட்ராஸ், மதுரை, கோவை பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 6.5 லட்சம் குழந்தைகள் இணைக்கப்பட்டார்கள். இரு மாதங்களுக்குப் பிறகு ஏற்கெனவே இருந்த கட்டமைப்பைக்கொண்டு மாதமொரு முறை பல்பொடி விநியோகிப்பட்டது.

… ஜனவரி 1983இல் முதியோர் ஓய்வுநிதி பெறுபவர்களும் சேர்க்கப்பட்டார்கள் இவர்களால் இன்னுமொரு 1.9 லட்சம் நபர்கள் கூடுதலாக இணைந்தார்கள். ஒரு வருடம் கழித்து முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் இலவச உணவு பெறத் தகுதி உடையவர்கள் ஆனார்கள். (8)

இதுவும், இதைப் போன்ற அளவில் சிறிய அரசியல் முதலீடுகளும் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. அவை பொருளாதாரத்தின் கட்டமைப்பில் எந்த வகையான பெரிய மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. இவற்றுக்கான நிதி மூலங்கள் ஏழைகளிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தின் மூலமே சாத்தியமானது, இவை வருமானம், சொத்து ஆகியவற்றைப் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளிப்பதில் மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தின.

சுருக்கமாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால், பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஒன்றாகும்.

அடிக் குறிப்புகள்:

1. இப்பகுதியின் விவரங்கள், வாசகங்கள் உட்படப் பெரும்பாலானவை எஸ்.குகன் (1988) தமிழ்நாட்டின் மாநில நிதிகள்: 1960-85: போக்குகள், கொள்கை பற்றிய மறுஆய்வு. செயற்தாள் 77, மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்டல் ஸ்டடிஸ், மெட்ராஸ்.

2. இந்தியா டுடே, 31 மார்ச் 1989; அசைட் 15, மார்ச் 1989

3. அசைட் 15 மார்ச் 1989; அசைட் ஜூன் 16, 1988.

4. துக்ளக் 1 மார்ச் 1987

5. இந்தியன் எக்ஸ்பிரஸ், 3 பிப்ரவரி 1987

6. மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட்டல் ஸ்டடிஸ், 1988: 345

7. மேலே குறிப்பிட்டுள்ள அதே புத்தகம்

8. பார்பரா ஹாரிஸ், (1988) தென்னிந்தியாவில் உணவு, மதிய உணவு: உணவு, தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற உணவு பொருளாதாரத்தில் ஊட்டச்சத்துக் கொள்கை. விவாதத்தாள் 31, வளர்ச்சி ஆய்வுப்பள்ளி, கிழக்கு ஆங்க்லியா

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1958-2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துகளையும் தமிழகத்துக்கு வெளியே காத்திரமான முறையில் விரிவாக முன்வைத்தவர் இவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சினைகள், சாதியச் சிக்கல்கள், தமிழ்த் திரைப்படங்கள் எனப் பல துறைகளிலும் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்களிடம் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞர். தமிழின் நவீன சிந்தனையாளர்களில் ஒருவர். தமிழகத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைத் தமக்கே உரிய கண்ணோட்டத்திலிருந்து பகுத்தாய்வும் மதிப்பீடும் செய்துவந்தவர்.)

 

(இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய ‘Image Trap’ நூலின் தமிழாக்கமான ‘பிம்பச் சிறை’ நூலின் (பிரக்ஞை பதிப்பக வெளியீடு) இரண்டாம் அத்தியாயத்திலிருந்துவெளியிடப்படுகிறது. தமிழில்: பூ.கொ.சரவணன். )

ஆணவப்படுகொலையை ஆவணப்படுத்துவது…


அல்ஜசீரா தொலைக்காட்சிக்காக சாதனா சுப்ரமணியம் சங்கரின் ஆணவப் படுகொலை அதையொட்டி நிகழ்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளை ஆவணப்படம் ஆக்கியிருக்கிறார்.

கௌசல்யாவின் தம்பி பெற்றோருடன் பிள்ளைகள் இருக்கிற புகைப்படத்தை வெறித்தபடி, கௌசல்யாவை கைகளால் மறைத்தபடி  ‘மூணு பேருதான் குடும்பத்துல’ என்கிறார்.
அவரின் பாட்டியோ, ‘பொம்பள பொண்ணலாம் பத்தாவது மேல படிக்க வைக்க வேணாம். எனபானம் கழுவ விடுங்கன்னு சொன்னேன் …காலேஜீ படிக்க போய் சுயபுத்தி போயிடுச்சு ….மேடை மேடையா ஏறிப்பேசுறா. பேசக்கூடாதது எல்லாம் பேசுறா.  இன்னொரு மேடையில பேசினா வெஷங்குடிச்சு செத்துருவேன்…  நாங்கல்லாம் அவிஞ்சு போகணும்…’ என்கிறார்
சங்கர் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர், ‘உசிலம்பட்டில பிறமலைக்கள்ளர் சமூகத்தில பொம்பளை புள்ளயலாம் பிறந்தன்னிக்கே கொன்னுருவாங்க…எங்க ஆளுங்க அப்படிலாம் பண்ணல… முதிர்ச்சியில்லாம கண்டிப்பா வளர்த்தத தப்பா எடுத்துகிட்டு பழிபழிவாங்க பாக்குது’ என நீட்டுகிறார்
கௌசல்யா பேருந்தில் துவங்கிய பிரியம் வளர்ந்ததை மென்னகையோடு நினைவுகூர்கிறார். ‘சங்கர் அவ்ளோ பாசம் காட்டுவான்…அவனளவுக்கு யாருகிட்டவும் அத்தனை அன்பை பாத்ததில்ல’ என நெகிழ்கிறார்.
கௌசல்யாவை பெற்ற அன்னலட்சுமி, தீர்ப்பிற்கு பிறகு விடுதலையான பின்பு பேசுகையில், மகளுக்கு ஒரு தோசை கூட ஒழுங்காக
வாக்கத்தெரியாது என்கிறார். ‘கல்யாணம் இப்ப வேணாம், பொண்ணு படிச்சு வேலை வாங்கட்டும். பிறகு பாத்துக்கலாம்னு நான்தான் சொன்னேன்… லவ் பண்ணலேன்னு சத்தியம் பண்ணா. அப்படி பண்ணா உன்ன கொலை பண்ணிருவேன்னு சொன்னேன்..
சொந்தக்காரங்க இன்னும் ஏன் இரண்டு பேரும்  வெக்கமில்லாம உயிரோட இருக்கீங்கன்னு கேட்டாங்க. ஏன் இப்படி இருக்கா? இவ ஒருத்தியால சாதி ஒழிஞ்சுருமா? எவ்வளவோ பேரு முயற்சி பண்ணியும் போகாத ஒன்னு இவ முயற்சி  பண்ணி வெடிஞ்சிருமா. மாத்திட முடியுமா. நாமதான் மாறிக்கணும்’ என படபடக்கிறார்.
Image result for al jazeera kausalya documentary
கௌசல்யா சங்கர் இல்லாத வாழ்க்கையில் புன்னகைத்தபடி வாழ முனைவதை, ‘நாள் முழுக்க சிறை வளாகத்தில் சுற்றித்திரிந்து சந்தோஷமா இருந்துட்டு நைட்டு  ஜெயிலுக்குள்ள அடையுற கைதி போல தான் என் நிலைமையும்’ என்கிறார்.
அப்பாவியாக மணமான ஆனந்தம் நிறைய சிரிக்கும் புகைப்படத்தை நம்பமுடியாமல் வருடுகிறார். பெற்றோர் மணமான பின்னும் விடுத்த கொலை மிரட்டல்களை நினைவுகூர்கிறார். சாதி ஒழிப்பு லட்சியம் என கண்கள் விரிய முழங்குகிறார்.
தாய் விடுதலை என்கிற செய்தியை பார்த்துவிட்டு ‘தாய்…வாவ்!!! அன்னலட்சுமின்னு போடச்சொல்லுங்க’ என்கிறார் சலனமில்லாமல். ‘என் வழக்கில வர்ற தீர்ப்பை வச்சு ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான சட்டம் வேணும்னு போராடுவேன்’ என தெளிவாக பேசுகிறார்.
தீர்ப்பு வந்தததும்,
‘தேவர் சாதிக்கு பாதுகாப்பு இல்லை’ என குமுறுகிறது ஒரு குரல். படுகொலைக்கான சிறு குற்றவுணர்ச்சியும் யாரிடமும் இல்லை.
‘நீ ஓடிப்போனே. உனக்கு இது தேவைதான்னு நடந்துகிட்டாங்க.
…நான் முன்ன போவேன். நான் இருக்கிறதுலயே பெருசா நினைக்கிறது சாதி ஒழிப்புக்கான என்   பயணம் தான். வெற்றியடைஞ்சுட்டேன்னு நினைக்கல. அதுக்கான அடிக்கல் தான் இது’ என கௌசல்யாவின் நம்பிக்கை மிகுந்த குரல் சாதியத்தின் கொடுங்கரங்களை ஒழிக்கும் பயணத்தில் நம்மையும் உடன் அழைக்கும் தட்ட முடியாத குரல்.
ஆவணப்பட சுட்டி:
ஆவணப்பட இயக்குனர் சாதனா- புகைப்பட நன்றி: தி இந்து
Image result for al jazeera kausalya documentary sadhana

இந்தியா என்கிற கருத்தாக்கம்


ஆங்கிலத்தில் நூல்களை வாசிக்கப் பழகிய ஆரம்பக் காலத்தில் எனக்குத் தற்கால இந்தியாவைப் புரிந்து கொள்ள உதவிய நூல்கள் என்று இரண்டை சொல்ல முடியும். ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’, இன்னொன்று ‘Idea of India’. சுனில் கில்நானியின் கவித்துவமான, பல்வேறு அடுக்குகள் கொண்ட எழுத்து நடையில் வெளிவந்த இரண்டாவது நூலை பல முறை வாசித்து வியந்திருக்கிறேன்.

அரசியல் அறிவியல் நூல் என்றாலும் அது மான்டோ, ஏ.கே.ராமனுஜன் என்று இலக்கியமயமாகி இளக வைக்கும். அணு குண்டு வெடிப்புக்கும், கொடிய வறுமைக்கும் இடையே சிக்கிக்கொண்டு நிற்கும் இந்தியாவைப் பல்வேறு குரல்களோடு முன்னிறுத்தும். திடீரென்று சண்டிகார் நகரின் முன்னால் நிறுத்தி நவீன இந்தியா எழும்புவதைக் கண்முன் நிறுத்தும். 

Image result for சுனில் கில்னானி

மேற்கை போலச் சர்வ வல்லமை கொண்ட அரசுகள் இந்தியாவில் ஏன் நிரந்தரமாக எழ முடியவில்லை என்கிற கேள்விக்குச் சுனில் கில்நானி தரும் பதில் முக்கியமானது. ஏன் பொருளாதார ரீதியான, ஆன்மீக ரீதியான விடுதலையை முன்னெடுக்காமல் அரசியல் ரீதியான விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது? ஒற்றை மத நாடாகவோ, சர்வ வல்லமை பொருந்திய கம்யூனிச அரசாகவோ இந்தியா மாறாமல் போனது ஒன்றும் விபத்தில்லை என்பது நூலை வாசிக்கையில் புலப்படும். இந்தியா பொருளாதாரத்தில் தவறவிட்ட தருணங்கள் ஆதாரங்கள், மேற்கோள்களின் வழியாக நம்முடைய முன்முடிவுகளைத் தகர்க்கும். 

(பேராசிரியர் சுனில் கில்நானி)

Image result for சுனில் கில்னானி
இந்தியா என்கிற கலாசாரப் பகுதியை 1899-ல் ஒரு சட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதிக்கான அடையாளமாக ஆங்கிலேயர்கள் மாற்றினார்கள். நவீன இந்தியாவில் யார் தான் இந்தியர்கள்? இந்து அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட சவார்க்கரின் இந்து தேசியம் ஒரு குரல் என்றால், பன்மைத்துவமும், மதச்சார்பின்மையும் கொண்டிருந்த மதத்தைக் கைவிடாத காந்தியின் இந்தியா வேறொரு குரலாக இருந்தது. நேருவின் கனவோ மதத்தைத் தூர வைத்து, கடந்த கால வரலாற்றின் கலாசாரக் கலப்பில் இருந்து ஒற்றுமைக்கான அடிப்படையை விதைக்க முயன்றது. ஆங்கிலேயர் அகன்று அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும் யார் இந்தியர் என்கிற கேள்விக்கான போராட்டம் நீண்டு கொண்டே இருக்கிறது.

இந்தியர்கள் முன் இரு வகையான தேர்வுகள் இருக்கின்றன: தூய்மையற்ற, தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய, பன்மைத்துவ இந்தியா ஒன்று. இன்னொன்று தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படும், பிறரை தூய தேசியத்தின் பெயரால் ஒதுக்கி வைக்கும் கருத்தாக்கம். எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற பொறுப்பைச் சுமக்கிற தலைமுறையாகத் தற்போதைய தலைமுறை இருக்கிறது.

நானூறு பக்கங்களில் விரிந்திருக்கும் இந்நூல் வலதுசாரி, இடதுசாரி பார்வை கொண்ட நூல் என்கிற வகைமைகளுக்குள் அடைக்க முடியாத ஒன்று. இது பொருளாதாரம் துவங்கி சமூகம் வரை எல்லாவற்றைக் குறித்தும் தீவிரமான விமர்சனங்களையும், ஆழபற்றிக் கொள்ள வேண்டிய நம்பிக்கைகளையும் வெளிச்சமிட்டு நகர்கிறது. இந்தியா என்கிற கருத்தாக்கம் கடந்த காலக் கதைகளில் இல்லை, அது நிகழ்காலத்தில் கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று இந்தப் பிரமிக்க வைக்கும் நூல் புரிய வைக்கிறது. பயணங்கள் போவதற்கு இறுதி அத்தியாயம் ஊக்குவிக்கும். பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பப்பட வேண்டிய அடிப்படைவாதிகள் குறித்து ரசனையாகக் கேலி செய்யும். 

Image result for இந்தியா என்கிற கருத்தாக்கம்

கைவிட்டு விடக்கூடாத ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ பெருமளவில் சிக்கலானது, எப்போதும் நிறைவைத் தராத ஒன்று, ஆனால், நம் இருப்பிற்கு அது இன்றியமையாதது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் உயிர்த்திருப்பதே நமக்கான நம்பிக்கை ஒளி என்று உணர வைக்கும் உன்னதம் இந்நூல். அனைவருக்குமான இந்தியா என்கிற கருத்தாக்கம் தோற்றுப்போனால் அதற்கு அதை எதிர்ப்பவர்கள் மட்டுமே காரணமில்லை. இந்தியா என்கிற அற்புத கருத்தாக்கத்தை மக்களிடம் இன்னமும் உரக்க சொல்லாத, அதை இன்னமும் தீவிரமாக முன்னெடுக்கத் தவறிய அனைவரும் அந்தக் குற்றத்துக்குக் காரணமாகத் திகழ்வார்கள் என்று நூலின் இருபதாவது ஆண்டுப் பதிப்புக்கான முன்னுரையில் சுனில் கில்நானி குறித்திருப்பது எத்தனை சத்தியமானது?

இந்த நூலை தமிழில் மூலத்தின் ஆன்மா சிதையாமல் கொண்டுவரும் முயற்சியில் அக்களூர் ரவி அவர்கள் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறார். செறிவான இந்நூலை சற்றே முயற்சித்து வாசித்தால், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளும், புரிபடாத தேசத்தின் செயல்பாடுகளும் பளிச்செனத் துலங்கும். புதிய கோணத்தில் இந்தியாவும், சமூகமும் புரியும். 

இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
தமிழில்: அக்களூர் ரவி
சந்தியா பதிப்பகம்
380 பக்கங்கள்
315 ரூபாய்

 

‘தி போஸ்ட்’ – நடுங்க வைக்கும் கணங்களிலும் நியாயம் பேசுவது எப்படி?


‘ இன்றைய இதழியல் நாளைய வரலாற்றின் முதல் வரைவு’
(திரைப்படத்தை முழுமையாக ரசிக்க விரும்புவர்கள் தவிர்த்து விடவும். Spoilers Ahead)

‘ஒரு மோசமான கட்டுரையை  வெளியிட்டதற்காக  அடித்து நொறுக்கப்பட்டால் தவறொன்றுமில்லை. ஆனால், இந்தக் கட்டுரையை வெளியிட்டால் அழித்து ஒழித்து விடுவார்களோ என அஞ்சிக்கொண்டு இருப்பதை ஏற்கவே முடியாது’ – வாஷிங்டன் போஸ்ட் மேனாள் ஆசிரியர் பென் பிராட்லி

Image result for the post

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில், மெரில் ஸ்ட்ரீப், தாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘தி போஸ்ட்’ திரைப்படத்தைக் கண்டேன். வியட்நாம் போர்க்களத்தில் அமெரிக்க வீரர்கள் சிக்கிக்கொண்டு இறப்பதோடு திரைப்படம் துவங்குகிறது. வியட்நாமில் அமெரிக்கா வெல்ல ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்னாராவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அது சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்கிறது. இந்த உண்மை நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தாலும், போரில் வெற்றி பெற்று விடுவோம், இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று போரை தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. ரகசிய அறிக்கையான அதை நியூ யார்க் டைம்ஸ் இதழ் நிருபர் பெறுகிறார்.
இதே காலகட்டத்தில், வாஷிங்க்டன் போஸ்ட் செய்தித்தாள் பங்குச்சந்தைக்குள் நுழைய முடிவெடுக்கிறது. தன்னுடைய கணவரின் தற்கொலைக்குப் பிறகு நிறுவனத்தின் தலைமை பொறுப்பைக் கட்டாயத்தால் ஏற்றுக்கொண்ட கேத்தரின் கிரகாம் பங்குகள் எந்தளவுக்கு லாபம் பெற்றுத்தரும் எனத் தவிக்கிறார். தரமான இதழியலின் மூலம் லாபம் ஈட்டலாம் என்று அவர் நம்புகிறார். நிக்ஸனின் குடும்ப நிகழ்வு குறித்த வாஷிங்டன் போஸ்ட் செய்தியால் கோபமுற்று, வேறொரு நிருபரை அனுப்புங்கள், இல்லையேல் செய்திதாளுக்கு வெள்ளை மாளிகையில் அனுமதியில்லை என்று தகவல் அவரிடம் சொல்லப்படுகிறது. அதை ஆசிரியர் பென் பிராட்லியிடம் சொல்கிறார் கேத். அவரோ ‘நீங்கள் வாஷிங்டன் போஸ்ட்டின் வெளியீட்டாளர் மட்டுமே. முதலாளி இல்லை’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.

Related image

 

பங்குச்சந்தையில் வாஷிங்டன் போஸ்ட் நுழைந்த கணத்தில், நியூயார்க் டைம்ஸ் இதழ் முதல் செய்திக்கட்டுரையை வெளியிடுகிறது. நாடே அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்கிறது. அந்த அறிக்கையை எப்படியாவது கைப்பற்றி விட வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் துடிக்கிறார். அறிக்கையின் சில பக்கங்கள் எப்படியோ அவரின் இருக்கைக்கு வந்து சேர்கிறது. ஆனால், அதே பக்கங்கள் நியூயார்க் டை  ம்ஸிடமும் இருப்பது தெரிந்து ஏமாறுகிறார்.
தேசப்பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் செயல்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டோடு நிக்சன் அரசு நீதிமன்ற படியேறுகிறது. நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிக்கிறது. இதே கட்டத்தில், அந்த ரகசிய அறிக்கை வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளுக்குக் கிடைக்கிறது. இருப்பது ஏழே மணிநேரம் தான், நாற்பத்தி ஏழு பகுதிகள் கொண்ட அறிக்கையின் நான்காயிரம் பக்கங்கள் பக்க  எண்கள் இல்லாமல் ஆசிரியர்கள் கைக்குக் கிடைக்கிறது. நாளை செய்தித்தாள் இந்த அறிக்கையை  பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று முடிவு செய்கிறது ஆசிரியர் குழு.

 

ஆனால், செய்திதாளின் வழக்கறிஞர்கள் இது தற்கொலைக்குச் சமமானது என்கிறார்கள். இன்னொரு செய்தித்தாளுக்குத் தடை உத்தரவு இருக்கிற போது, அதே அறிக்கையை நாம் வெளியிட்டால் நம்முடைய செய்தித்தாள் தடை செய்யப்படலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், பங்குச்சந்தையில் நுழைய இருக்கிற காலத்தில் இந்த முடிவு முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்க செய்து நிறுவனத்தை மூடவைக்கலாம் எனவும் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருக்கும் நபர்கள் பயப்படுகிறார்கள்.

Image result for the post
மென்மையான அணுகுமுறை கொண்டவராக அறியப்படும் கேத்தரினிடம் இந்த அறிக்கை குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று இதர நிர்வாகிகள் சொல்கிறார்கள். பங்குச்சந்தையில் நிறுவனம் நுழைய இருக்கும் கணத்தில், தன்னுடைய கணவர், தந்தை ஆகியோர் கட்டிக்காத்த நிறுவனத்தை நிர்மூலமாக்கிய பழி தன்னைச் சேர வேண்டுமா என்று அவர் தவிக்கிறார். செய்தித்தாளின் ஆசிரியரான பென் ‘இந்த  அறிக்கை கிடைத்தும் வாஷிங்டன் போஸ்ட்  அரசாங்கத்துக்குப் பயந்து கொண்டு வெளியிடாமல் போனது என்று தெரிந்தால் ஊர் நம்மைக் கேவலமாகப் பார்க்காதா? நம்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அழிந்து போகும்’ என்று சொல்கிறார்.

Image result for the post

 

 

 

அரை மனதோடு, கேத்தரின் ‘தயவு செய்து  வெளியிடுங்கள்’ என்று குரல் நடுங்க சொல்கிறார். அந்தக் கணத்தில் இன்னொரு அதிர்ச்சியான எச்சரிக்கை வந்து சேர்கிறது. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையைப் பெற்ற அதே நபரிடம் இருந்து, வாஷிங்டன் போஸ்ட்டும் அறிக்கையைப் பெற்றிருந்தால் கிரிமினல் குற்றத்துக்காகக் கேத்தரின் சிறைக்குப் போக நேரிடும் என்பதே அந்த எச்சரிக்கை.
அதே சமயம், தேசத்துக்காக, அதன் பல கோடி மக்களுக்கு எப்போதும் நேர்மையோடு இருப்பதும், இதழியல் அறத்தை காப்பதும் தங்களுடைய லட்சியம் என்பதும் கண்முன் நிழலாடுகிறது. ‘கட்டுரைகளை வெளியிடுங்கள். மற்றதை பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்கிறார் கேத்தரின். இதழின் இதர நிர்வாகிகள் உறைந்து போகிறார்கள். அடுத்த நாள் செய்தித்தாள் முழுக்கப் ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்று பல ஆயிரம் பக்க அறிக்கையின் சாரத்தை வெளியிடுகிறார்கள். நீதிமன்ற வாசலுக்கு இழுக்கப்படுகிறது வாஷிங்டன் போஸ்ட். அடுத்த நாள் எல்லாச் செய்தித்தாள்களும் அதே செய்தியை தாங்களும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக மறுபதிப்புச் செய்கின்றன.
நீதிமன்றத்தில் வியட்நாம் போரில் உறவுகளை நிற்கவைத்துவிட்டு தவிக்கும் அரசாங்கத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கேத்தரினிடம் சொல்கிறார், ‘இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை. இந்த வழக்கில் நீங்கள் வெல்ல வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’ என்று நன்றியோடு சொல்கிறார். நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகையில் அறிக்கையை முதலில் கண்டுபிடித்த நியூயார்க் டைம்ஸ் அங்கத்தினர் பேட்டி தருகிறார்கள். அறத்தின் பக்கமும், பேச்சுரிமையின் பக்கமும் நின்ற கம்பீரத்தோடு அமைதியாகக் கேத்தரின் நடக்கிறார். அவரின் கண்களில் தெரியும் நிம்மதியும், சுற்றியிருப்பவர்களின் வாஞ்சை மிகுந்த பார்வையும் நெகிழவைக்கும் பெருங்கணம்.

Related image
உச்சநீதிமன்றம் 6-3 என்று கருத்துரிமையைத் தூக்கிப்பிடிக்கிறது. என் தந்தை சொல்வார், ‘இன்றைய இதழியல் என்பது நாளைய வரலாற்றின் முதல் வரைவு’ என்று கேத்தரின் ஆசிரியர் பென்னிடம் சொல்வதோடு திரைப்படம் முடிகிறது. இதழியல் என்பது எளிய மக்களின் குரலை எதிரொலிப்பதாக, அதிகார பீடங்களுக்கு அடங்கிப் போகாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைத் திரைப்படம் கம்பீரமாகக் கடத்துகிறது. வெளிச்சத்தில் வீரர்களாகவும், இருட்டில் அதிகாரத்தோடு உறவாடுபவர்களாக இருப்பதில்லை உண்மையான ஊடக அறம் என்று சொல்லாமல் சொல்கிறது ‘The Post’. திரையில் கண்டிப்பாகப் பாருங்கள்.

 

(இதழாசிரியர் பென் பிராட்லி, உரிமையாளர் கேத்தரீன் உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக வந்துள்ளது என்கிற செய்தியை ஆனந்தமாக படிக்கிறார்கள். புகைப்பட நன்றி:  Getty Images)

 

அறம் திரைப்படம் பேசும் அரசியல்


அறம் திரைப்படத்தின் அதிர்வுகள் அகல்வதற்கு முன்பு இப்பதிவை எழுதுகிறேன். அரசியலமைப்பின் அறம் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் என்று அம்பேத்கர் கனவு கண்டார். (‘Constitutional morality’ குறித்த அறிமுகத்திற்குக் காண்க http://www.india-seminar.com/2010/615/615_pratap_bhanu_mehta.htm) ஆனால், அரசும், ஆள்வோரும், அதிகாரிகளும் கடைக்கோடி மக்களின் கண்ணீரை துடைப்பதை எந்தளவுக்குச் சாதித்திருக்கிறார்கள் என்பதைக் கூராய்வு செய்கிறது அறம் திரைப்படம்.
சமீபத்தில் பணமதிப்பு நீக்கம் குறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் கேபினட் செயலாளர் T.S.R.சுப்ரமணியம் இந்தியாவில் உயிர்கள் போவது இயல்பான ஒன்று, நீண்ட காலத்தில் பணமதிப்பு நீக்கத்தால் வரும் பயன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனப் பேட்டி தந்திருந்தார். மனித உயிர்கள் இந்த நாட்டில் எத்தனை மலிவானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்படத்தைக் காண்கையில் உணர்ந்து உறைந்து போவோம். போர்வெல் மரணங்கள் திரையில் ஏற்படுத்தும் பதைபதைப்புச் செய்தித்தாளில் மலக்குழியில் விழுந்து இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் மரணங்கள் ஏன் நமக்கு ஏற்படுவதில்லை எனப் படம் பார்க்கையில் தோன்றியது.
மக்களிடம் வாக்கு கேட்க வருகையிலே தெரியாத தூரம் ஏன் அவர்களின் கண்ணீரை போக்க முனையும் போது தப்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சட்டங்கள் மக்களின் நலன் சார்ந்ததாக, அரசியலமைப்பின் கனவுகளைக் காப்பதாக இல்லாமல் ஏன் வழி தவறுகின்றன? மக்களின் வலிகளைப் போக்க தடையாகச் சட்டத்தையே ஆயுதமாக்கும் வழிதவறல் குறித்த சுயபரிசோதனை எப்போது ஏற்படும்? அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், தொழில்நுட்பங்கள் தொலைதூரக்கனவுகளைத் துரத்தும் என்றால் அதன் கௌரவம் யாருக்கானது? தங்களைத் தவிக்க விடும் தேசத்தின் மீது பக்தி கொள்ளக் கடைக்கோடி மக்களுக்கு என்ன தேவை?
Image result for அறம்
சொகுசு வாகனங்களில் செல்வோரின் பிள்ளைகளின் கல்வி குறித்தும், அன்றாட வாழ்க்கை குறித்தும் பெரிதும் கவலைப்படும் அதிகார வர்க்கம் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகளுக்கும் வாழ்வும், கனவுகளும் உண்டென உணராமலேயே ஏன் காலந்தள்ளுகிறது? அரசியல் என்பது தேர்தல் வெற்றிகளோடு முடிந்து விடுகிறதா? வெற்றிகளைப் பெற்றுத்தருபவர்களைக் காப்பது தான் அரசியலை செலுத்தும் அச்சு என்றால் அறம் எங்கே? சமத்துவமின்மையின் வன்முறையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இப்படிப் பல கேள்விகளைப் பதைபதைப்பு மிக்கக் கதை சொல்லலின் மூலம் அறம் சாதித்திருக்கிறது. இயக்குனர் கோபிக்கு வாழ்த்துகள். இப்படிப்பட்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாராவுக்குப் பூங்கொத்து.
அதிகாரிகளை முழுக்க நல்லவர்கள் போலவும், அரசியல்வாதிகள் தவறுகளின் முழு உருவம் போலவும் இருமை இந்தக் கதை சொல்லலில் கடத்தப்படுகிறது. அது அப்படியில்லை என்பதை உணர வைக்காமல் போகையில் அரசியல் சார்ந்த அணிதிரட்டல், சக மனிதருக்கான சம மதிப்பு, மரியாதை என்கிற கனவு பொன்னுலகக் கனவாகவே நின்று விடும். அரசியலில் தான் ஆழமான மாற்றங்களுக்கான வித்து இருக்கிறது என உணர வைக்கிற அறம் அனைவரும் காணவேண்டிய படம்.

கருத்துரிமை நெரிப்பின் கலங்க வைக்கும் வரலாறு – 2



ஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:
இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்?:
ஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொன்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.

Image result for republic of rhetoric
Lady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.
        அதே சமயம், உச்சநீதிமன்றம் தேவிதாஸ் ராமச்சந்திர துலிஜாபுர்கர் வழக்கில் காந்தி முதலிய தேசத்தலைவர்கள் குறித்து ஆபாசமாக எழுத கூடாது என்று தீர்ப்பு எழுதியது.  அவீக் சர்க்கார் தன்னுடைய செய்தித்தாளில் போரிஸ் பெக்கர் தன்னுடைய காதலியோடு நிற்கும் அரை நிர்வாண படத்தை நிறவெறிக்கு எதிரான அடையாளமாக வெளியிட்டார். அதை ஆபாசம் என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஒரு படைப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டே அது ஆபாச உணர்வுகளைத் தூண்டுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதியதன் மூலம் உச்சநீதிமன்றம் ஹிக்லின் சோதனையில் இருந்து ஓரளவிற்கு நகர்ந்து வந்தது.
Image result for boris becker aveek sarkar
   குஷ்பு கற்பு சார்ந்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,’காம உணர்ச்சியை, மோக சிந்தனைகளைத் தூண்டிவிடுவது ஆபாசமானது. அவர் பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய எதையும் சொல்லிவிடவில்லை….திருமணம் என்பது சமூக அமைப்பு தான். எனினும், இந்தியாவில் பல்வேறு பூர்வகுடிகள் திருமண அமைப்புக்கு வெளியே உடலுறவு கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ என்று விவரித்துக் குஷ்பு பேசியது ஆபாசமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
Image result for khusboo and supreme court
ராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.

        கேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.

Image result for contempt of court india

நேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:
எல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

            இது நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக நேரு மீது வழக்கு போட யோசிக்கப்பட்டது. நேருவே அதற்குள் விவியன் போஸ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவும் நேரு ஒப்பினார். நேருவின் மன்னிப்பு ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பிரிவுபாசார விழாவில் நேரு கலந்து கொண்டார். டால்மியா-ஜெயின் நிறுவனங்கள் மீதான விசாரணை பொறுப்பை விவியன் போஸிடமே நேரு ஒப்படைத்தார்.
மான நஷ்ட வழக்கு:
இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .
நக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்கர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

Image result for nakheeran rajagopal auto shankar

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

         மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டப்பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னணியில் ‘ரங்கீலா ரசூல்’ எனும் பிரசுரம் இருந்தது. வண்ணமயமான நபிகள் என்கிற பொருள் தரும் இந்த நூல் நபிகள் நாயகத்தின் அக வாழ்வு சார்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது. இது பண்டித சமுபதியால் எழுதப்பட்டது. இதைத் தடை செய்யக்கோரி தலிப் சிங் என்கிற நீதிபதி முன் வழக்குச் சென்றது. அந்நூல் மோசமானது என்றாலும் அது பகை, வெறுப்பை வளர்க்கவில்லை என்று தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருக்கிற சட்டமானது இறந்து போன மதத்தலைவர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும், வரலாற்று பார்வையுள்ள நூல்களும் இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்தினால் வராமல் போகும் என்று தீர்ப்பு எழுதினார். பல்வேறு கலவரங்கள் அந்நூலால் வெடித்தன.
Image result for rangeela rasool           

               ரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.

இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

விடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா?:
பல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

பெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:
‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.

          ஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் காயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

Image result for periyar  ramayana

அதே சமயம், பரகூர் ராமச்சந்திரப்பா வழக்கில் நீதிமன்றம் பசவர் குறித்த ஆசிரியரின் கருத்துக்களுக்காக நூலை தடை செய்ததோடு, ‘மிகப்பெரிய மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பலவீனமான மக்களின் மனங்கள் காயப்படாமல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கவனமும், கரிசனமும் வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. பல்வேறு புத்தகத் தடைகளை, திரைப்படத் தணிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது. 

பத்திரிகைகளின் கழுத்தை நெரித்தல்:
இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.

Continue reading

கருத்துரிமை நெரிப்பின் கலங்கவைக்கும் வரலாறு-ஒன்று!


காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா கருத்துரிமையைக் காப்பதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் ஆய்வு செய்கிறது. கௌதம் பாட்டியாவின் கருத்துரிமை குறித்த நூல் அரசியல், சமூகச் சூழ்நிலைகளைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விமர்சனத்துக்கு இடையே இந்நூல் அந்த இடைவெளியை பெருமளவில் நிரப்புகிறது.
இந்திய விடுதலை மன்னர்கள், ஆதிக்கச் சாதியினர், நிலச்சுவான்தார் ஆகியோரின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதை ஓரளவுக்குச் செய்தது. இந்தச் சாதனை ஆங்கிலேயர் காலத்து அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தது. கருத்துரிமை சார்ந்து அப்படிச் சொல்ல முடியாது என்பதை இந்தியாவின் கருத்துரிமை சார்ந்த சட்டங்கள், கட்டுப்பாடுகள் உணர்த்துகின்றன. அரசியலமைப்பு சட்ட விவாதங்களில் ஹனுமந்தையா சொன்னதைப் போல, ‘நாம் வீணை, சிதார் இசைக்கு ஆசைப்பட்டோம். ஆங்கிலேயே வாத்தியக்குழுவின் இசை தான் கிட்டியுள்ளது’. அபினவ் இந்த நூலில் நிரூபிப்பதை போலச் சமயங்களில் ஆங்கிலேயரின் சட்டங்களை விடக் கடுமையான கட்டுப்பாடுகளை விடுதலைக்குப் பிந்தைய சட்டங்கள் விதித்து இருக்கின்றன. 

தேசத்துரோக சட்டத்தின் திகில் வரலாறு:
மெக்காலே இந்திய குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய போது தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவையும் உருவாக்கினார். எனினும், குற்றவியல் சட்டம் 1860-ல் நடைமுறைக்கு வந்த போது வரைவில் இருந்த தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவான 113 அமலுக்கு வரவில்லை. பத்தாண்டுகள் கழித்தே அந்தச் சட்டத்தைச் சீரமைத்து சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தில் தேசத்துரோக சட்டத்தின் எல்லைகள் பெரிது என்றாலும், நடைமுறையில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. மெக்காலே அரசின் மீது ‘disaffection’ காட்டினால் ஒருவர் மீது இச்சட்டத்தைப் பாய்ச்சலாம் என்று வரையறுத்து இருந்தார். அரசின் மீது நல்ல நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் இதில் வராது என்பது அவரின் பார்வையாக இருந்தது. பர்னேஸ் பீகாக் என்கிற சட்டத்துறை வல்லுநர் வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதாகக் கருத்துகள் இருந்தால் மட்டுமே தேசத்துரோக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாற்றியமைத்தார். அவரின் சட்டம் பிரிட்டனின் தேசத்துரோக சட்டத்தை ஒத்திருந்தது. ஆனால், ஸ்டீவன் என்கிறவர் உருவாக்கிய இறுதி வடிவத்தில் சட்டம் கடுமையானதாக ஆக்கப்பட்டது. அப்போது இஸ்லாமிய வாகாபிக்கள் கிறிஸ்துவர்களான ஆங்கிலேயருக்கு எதிராகப் புனிதப்போரை நடத்தக்கூடும் என்கிற அச்சத்தில் இச்சட்டம் தேவைப்படுவதாக அறிவித்தார்.
உடலுறவுக்கான விருப்ப வயதை பத்தில் இருந்து பன்னிரெண்டுக்கு உயர்த்திய ஆங்கிலேய அரசின் நடவடிக்கையை விமர்சித்துப் பங்கோபாசி என்கிற செய்தித்தாள் எழுதிய கட்டுரைகள் சார்ந்தே முதல் தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டது. எனினும், இந்த வழக்கு சீக்கிரமே விலக்கி கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என்கிற அச்சத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம், இந்து தேசியவாதியான திலகர் மீது பாய்ச்சப்பட்டது. திலகரின் சிவாஜி குறித்த உரை மக்களைத் தூண்டிவிடுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில் ஜூரி தீர்ப்பளிக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் ஜூரி ஒரு மனதாகத் தீர்ப்பு வழங்கினாலே இரண்டாண்டு தண்டனை. இந்தியாவிலோ அதற்கு மாறாகப் பெரும்பான்மை போதும். கூடுதலாக, நாடு கடத்தல் இந்தியர்களுக்குத் தண்டனை. இந்தியர் அல்லாத ஐரோப்பியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மட்டுமே. இதனால் திலகர் மீது சுமத்தப்பட்ட ராஜதுரோக குற்றங்களில் இந்திய உறுப்பினர்கள் அவரைத் தண்டிப்பதை எதிர்த்து வாக்களித்தாலும் பெரும்பான்மை ஆங்கிலேய உறுப்பினர்களின் வாக்குகளால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், திலகர் மராத்தி மொழியில் எழுதிய கட்டுரைகள் படிப்பறிவு இல்லாத, முட்டாள் மக்களுக்காக எழுதப்பட்டது. அவை வாசித்துக் காட்டப்பட்டு அவர்களைத் தவறான பாதையில் செலுத்துகிறது என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருதிப்பகுதிக்குள் மெக்காலேவின் குறுகலான குற்றங்களை மட்டுமே தண்டிக்கும் ராஜதுரோக சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தண்டனையை வழங்கின. இதை அடுத்து, தேசத்துரோக சட்டத்தை விரிவாக்கி ‘அரசு மீதான வெறுப்பு, அவமதிப்பு, பகை’ ஆகியவற்றை வளர்ப்பதையும் தேசத்துரோக குற்றம் என வரையறுத்துச் சட்டம் 1898-ல் அமலுக்கு வந்தது. காந்தி மீது இச்சட்டம் பயன்படுத்தப்பட்ட போது வரலாற்றில் முதன்முறையாக அந்தச் சட்டத்தின்படி தான் குற்றவாளி என்று காந்தி ஏற்றுக்கொண்டு அதிரவைத்தார். வன்முறைக்குத் தூண்டாத வரை அரசுக்கு எதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்துவது குற்றமில்லை என்றும், தான் தோன்றித்தனமான ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களின் தலை மீது இறங்க தயாராக் இருக்கும் வாளே இச்சட்டம் என்று கடுமையாகக் காந்தி சாடினார்.
Gwyer என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டினால் மட்டுமே இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உலகப்போர் சமயத்தில் தீர்ப்பு எழுதினார். மஜூம்தார் என்கிற சட்டசபை உறுப்பினர் நாற்பத்தி ஒன்றில் டாக்காவில் மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது எனத் தொடரப்பட்ட வழக்கில் இப்படி அவர் தீர்ப்பு எழுதினார். அரசாங்கங்களின் கர்வத்தைக் காயப்படுத்துகிற கருத்துக்களுக்கு மருந்து போட்டுக்கொள்ள இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றார். ஆனால், அவரின் கருத்தை பலேராவ் வழக்கில் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சில் ஏற்க மறுத்தது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஆயுள்தண்டனை தேசத்துரோக குற்றத்துக்கு விதிக்கப்பட்டது. 1974-ல் கைது உத்தரவு இல்லாமலே தேசத்துரோக குற்றங்களுக்குக் கைது செய்யலாம் என்று இந்திரா காந்தி அரசால் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
Image result for republic of rhetoric
கருத்துரிமை காவலர் கே.எம்.முன்ஷி:
கே.எம்.முன்ஷியை கிரான்வில் ஆஸ்டின் உரிமைகளை மட்டுப்படுத்துகிற செயலில் ஈடுபட்டவர் என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரோடு இணைத்து குறிப்பிடுகிறார். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது என்பதை அபினவ் சந்திரசூட் நிறுவுகிறார். கே.எம்.முன்ஷி பத்திரிக்கைகளை முன் தணிக்கை செய்கிற பணியில் உலகப்போர் சமயத்தில் ஈடுபட்டிருந்தார். அவரே கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் வரைவை தயாரித்த குழுவின் தலைவராக இருந்தார். அதில், பொது அமைதி, நன்னெறி, தேசத்துரோகம், ஆபாசம், அவதூறு, தெய்வ நிந்தனை என்று பல்வேறு கருத்துரிமையை மறுக்கும் பிரிவுகள் அடுக்கப்பட்டன. கே.டி.ஷா, ‘ஒரு வலது கை தந்ததை மூன்று, நான்கு இடது கைகள் பறித்துக் கொள்வதைப் போல’ இது இருப்பதாகக் குறைபட்டார். அம்பேத்கர் இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திப் பேசினார். டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் கருத்துரிமை கட்டுப்பாடுகள் அற்றதாக இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

அம்பேத்கர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பேச்சுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். வகுப்புவாத வெறியை தூண்டிவிடும் பேச்சு கருத்துரிமையின் கீழ் வரக்கூடாது என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் வாதிட்டார். இது அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் என்று கவலை தெரிவித்தார் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. கே.எம்.முன்ஷி வன்முறையைத் தூண்டிவிடாத பேச்சை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றார். தெளிவாக, ஆபத்தை விளைவிக்கும் பேச்சுக்களையே கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். அவரின் வாதங்களால் அம்பேத்கர், அல்லாடி ஆகியோரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தேசத்துரோகம் சார்ந்த பேச்சுக்களையும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் பிரிவுக்குள் கொண்டுவருவதையும் முன்ஷி நீக்க திருத்தம் கொண்டு வந்தார். அது ஏற்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு முடிவு செய்தது. நீதிபதிகள் காலனிய ஆட்சிக்கு நன்றியோடு இருந்துவிட்டு இன்னமும் பதவியில் தொடர்கிறார்கள், அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு என்று பி.தாஸ் என்கிற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று முடிவு செய்யப்பட்டது. நியாயமான கட்டுப்படுகளையே கருத்துரிமைக்கு விதிக்க வேண்டும் என்கிற பார்கவாவின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.

முதல் சட்ட திருத்தத்துக்கு வழி வகுத்த பிரசாத், முகர்ஜி:
கருத்துரிமைக்குக் கட்டுப்பாடுகள் ஓரளவுக்கே விதிக்கப்படுவதை அரசியலமைப்பு சட்ட குழுவின் விவாதங்கள் உறுதி செய்தாலும் சீக்கிரமே சிக்கல்கள் எழுந்தன. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு வெறுப்பைத் தூண்டும், வகுப்பு வாதத்தை வளர்க்கும் பேச்சுக்களை, எழுத்துக்களைத் தடை செய்ய அரசுகள் முயன்ற போது அது கருத்துரிமைக்கு எதிரானது என நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. ரொமேஷ் தாப்பர் என்கிற இடதுசாரியின் ‘CrossRoads’ செய்தித்தாள், ப்ரிஜ் பூஷன் என்கிற வலதுசாரியின் ‘Organiser’ செய்தித்தாள்களை அரசு கட்டுப்படுத்தியது. அவை கருத்துரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இருக்கும் மதச் சிறுபான்மையினரின் நலனை காக்க லியாகத் அலிகான் உடன் நேரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது சார்ந்தும் பிரிவினை, காஷ்மீர் சிக்கல்கள் சார்ந்தும் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி கடுமையாகப் பேசினார். பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று தொடர்ந்து பேசினார். இது படேல், நேரு ஆகியோரை கவலைக்கு உள்ளாக்கியது.

இன்னமும் மோசமாக, சார்ஜூ பிரசாத் என்கிற நீதிபதி, சங்க்ராம் என்கிற துண்டு பிரசுரத்தில், ‘நான் ரத்தவெறிக் கொண்ட காளி…. நான் தாகம் கொண்டிருக்கிறேன், எனக்குப் புரட்சி வேண்டும், போராட்டத்தின் மீது நம்பிக்கை வேண்டும்., அநீதியின் சங்கிலிகளைக் கிழித்து, கிழித்து எறியுங்கள்.’ என்று எழுதப்பட்டதை எதிர்த்துத் தொடர்ப்பட்ட வழக்கில், ‘கொலை செய்யத் தூண்டினாலும் அதுவும் கருத்துரிமை. அதற்கான தண்டனையைத் தூண்டியவர் அனுபவிக்க வேண்டும், ஆனால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியாது’ எனத் தீர்ப்பு தர அதிர்ந்து போனது அரசு. முதல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் ‘பொது அமைதி’, ‘அயல்நாடுகளோடு நட்புறவு’, ‘குற்றத்துக்குத் தூண்டுவது’ ஆகியன சார்ந்து கருத்துரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று திருத்தும் கொண்டு வந்தார். அயல்நாடுகளோடு நட்புறவை ஒரு தனிக் குடிமகனின் கருத்துகள் சீர்குலைக்குமா என்று நஸ்ரூதின் ஷா என்கிற உறுப்பினர் ஆச்சரியப்பட்டார்.

நியாயமான கட்டுப்பாடுகள் (reasonable restrictions) விதிக்கப்பட வேண்டும் என்கிற திருத்தத்தை அம்பேத்கர் கொண்டு வந்ததை உள்துறை அமைச்சர் ராஜாஜி பெரும் விவாதத்திற்குப் பிறகே ஏற்றுக்கொண்டார். குற்றத்துக்குத் தூண்டுவது என்கிற பிரிவு இருக்க வேண்டுமா என்கிற விவாதம் எழுந்த போது, ‘மதுவிலக்கு இருக்கும் ஊரில் மற்றவர்கள் கால்சட்டை பையில் சாராயம் சுமந்து செல்ல தூண்டுவது குற்றமில்லையா?’ என்று கேட்டார் ராஜாஜி. அம்பேத்கர், ‘வயல்களுக்கும், விறகு பொறுக்கக் காடுகளுக்கும் பட்டியலின சாதியினர் போகக்கூடாது எனச் சமூக விலக்கை சாதி இந்துக்கள் விதித்தால் அவற்றை ஏற்க முடியாது.’ என்று வாதிட்டார். பிளிட்ஸ் இதழில் கரஞ்சியா இந்தச் சட்ட திருத்தத்தைக் கருப்பு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்தை வன்புணர்வு செய்வது என்றெல்லாம் சாடினார். சட்டதிருத்தங்கள் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.
எதிர்ப்புக்குரியவற்றைப் பதிப்பிப்பது சார்ந்து 1951, 1971-ல் நேரு, இந்திரா அரசுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன. இவை காலனிய சட்டத்தை விடக் கடுமையாகப் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின என்கிறார் சந்திரசூட். எவ்வளவு முன்பணத்தை அச்சகம் செலுத்த வேண்டும் என்கிற வரையறையை விதிக்காமல் இந்தச் சட்டங்கள் அதை அரசை தீர்மானிக்க விட்டன, ஆங்கிலேயர் காலத்தில் வரையறை விதிக்கப்பட்டு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

திமுகவை பிரிவினை முழக்கத்தைக் கைவிட வைத்த சட்ட திருத்தம்:
திமுக அறுபதுகள் வரை திராவிட நாடு/தமிழ்நாடு கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்தது. சீனப்போர், நாகா, பஞ்சாப் பிரிவினை முழக்கங்கள் எல்லாம் சேர்ந்து கொள்ளப் பதினாறாவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் ‘தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை’ சார்ந்து கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம் என்கிற சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்ட சீர்திருத்தத்தைச் செய்யுமாறு சி.பி.ராமசுவாமி ஐயர், காமராஜர் முதலியோர் அடங்கிய தேசிய ஒற்றுமை கமிட்டி பரிந்துரை செய்தது. மேலும், பதவி ஏற்றுக்கொள்ளும் சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையைக் காக்கும் வகையில் இயங்குவேன் என்று உறுதிமொழி ஏற்பதும் கட்டாயமானது. நீதிபதிகளும் இவ்வாறு பதவி பிரமாணம் எடுக்க வேண்டியது கட்டாயமானது. இதன்மூலம் நீதிபதிகள் பிரிவினையை ஆதரிக்கும் பேச்சுகளைக் காப்பாற்ற முடியாமல் தடுக்கப்பட்டது. நரசிம்ம ரெட்டி எனும் உறுப்பினர் முந்தைய தேர்தலில் திமுகத் தந்த கடும் எதிர்ப்பை தாங்க முடியாமல் காங்கிரஸ் அதைப் பழிவாங்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார். சட்ட அமைச்சர் சென் நாகா, பஞ்சாப் பிரிவினை, தெற்கின் போராட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். பூபேஷ் குப்தா என்கிற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அப்போது அமலில் இருந்த அவசரநிலை சட்டத்தைச் சுட்டிக்காட்டி கருத்துரிமை உறைந்து போயிருக்கும் காலத்தில் அது குறித்து விவாதிக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார். மக்களவையில் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அண்ணா ஏழு திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தது கணக்கில் கொள்ளப்படவில்லை என்றார். மாநிலங்களவையில் அண்ணா மட்டுமே சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார். செழியன் சட்டத்தை எதிர்த்துப் பேசுகையில்:

‘தயவு செய்து எங்களோடு வாதிடுங்கள், போட்டி போடுங்கள், எங்களைச் சம்மதிக்க வையுங்கள். நாங்கள் மாறவே மாட்டோம் என்று தெரிந்தால் எங்களை விட்டுவிடுங்கள், மக்களிடம் போய் அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். இதை நீங்கள் செய்தால் தான், அது உண்மையான ஜனநாயகம். வேறு ஏதேனும் செய்வீர்கள் என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகம் இல்லை. அது வேறொன்று.’

என்றார்.
Image result for anna with era sezhiyan
         மேலும் அமெரிக்க உச்சநீதிமன்றம், ‘கருத்துக்களைக் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பது என்பது கல்லறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒற்றுமையை மட்டுமே சாதிக்கிறது.’ என்று அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசினார் செழியன். ஹெச்.என்.முகர்ஜி இறையாண்மை, ஒற்றுமை முதலிய வார்த்தைகள் தெளிவாக இல்லை, அவற்றைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்று கவலை தெரிவித்தார். காமத் ஸ்காட்டிஷ் ஹோம் ரூல் கட்சியைப் போல வன்முறையைத் தூண்டாமல் பிரிவினை பேசி, தேர்தலில் பங்கு கொண்டால் ஏற்பதில் ஒன்றும் தவறில்லை என்றார். வடக்கிற்கும், தெற்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் கோப்ரகடே, பிபுதேந்திர மிஸ்ரா முதலியோர் சுட்டிக்காட்டி பேசினார்கள்.

(ஆபாசம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்ற அவமதிப்பு குறித்த கருத்துரிமை விவாதங்கள் நாளை விரிவாக பேசப்படும்)


……………………………