ஒரு கிராமத்து பிள்ளையின் கடிதம்


இதை ஒரு ரெண்டு வருஷமா எழுதணும்னு உள்ளே நினைப்பு ஓடிக்கிட்டே இருக்கும். நிறையக் கிராமத்து பிள்ளைங்க தமிழ்நாட்டோட முதன்மையான பொறியியல்/மருத்துவக் கல்லூரிகளுக்குள்ள நுழையறாங்க. அவங்க சீமான் வீட்டு பிள்ளைங்க இல்லை. அணியுற உடுப்பு சொல்லிக்கறாப்ல இருக்காது. உங்க அளவுகோல்படி நாகரிகம் குறைஞ்சவங்களா நடந்துப்பாங்க. எப்படி ‘socialise’ ஆகணும்னு தெரியாதவங்க. எளிமையா சொல்லணும்னா ‘பட்டிக்காட்டு பசங்க’. ஆனா, அவங்களுக்கும் மனசிருக்கு, காது கொடுத்து கேக்க சில தோழர்கள் கிடைக்க மாட்டாங்களான்னு ஏங்குறாங்க, ‘உன்னால முடியும்டா/முடியும்டீ’ ன்னு ஊக்கப்படுத்த யாராச்சும் இருக்க மாட்டாங்களான்னு சமயத்தில தவிப்பாங்க. கல்லூரிக்குள்ள வந்தவுடனே முதல் ஒரு வருஷம் முக்கியமானது. அழுறத நிறுத்திட்டு, ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா. ஒரு கை பாத்துடலாம்’ன்னு இறங்கினா போதும். எவ்ளோ கஷ்டத்துக்கு நடுவில நிறையக் கிராமத்து பிள்ளைங்க ‘dream companies’ ல வேலைக்குச் சேருறாங்க,கல்லூரியில பல்வேறு அமைப்புகளை அழகா நடத்துறாங்க, சக தோழர்கள் பார்வையை மாத்துற ஒரு நெருப்போட இருக்காங்க, பல பேர் அபாரமான மருத்துவர்களா சாதிக்கிறாங்க. திருவிழா குழந்தை போல முழிக்காம மத்தவங்களோட பழகுங்க. நல்ல நண்பர்களைக் கண்டடைங்க. அறிவாளி இங்கிலீஷ் மீடிய சிட்டி பசங்கள விடத் தினமும் கூடச் சில மணிநேரம் உழைங்க. அறிவுக்கு அளவுகோல் மொழியில்லை. என் கல்லூரியில் இருந்து GATE தேர்வில அகில இந்திய அளவில 4-வது இடம் பிடிச்ச சீனியரை நேர்முகம் பண்ணினேன். ‘என் கிராமத்து பேரை மறக்காம போடுங்க. பலபேரு பக்கத்து டவுனைச் சொல்லித்தான் என்னைப்பத்தி எழுதியிருக்காங்க.’ என்றார். என் பள்ளிக்கூடத்துல தமிழ் வழியில் படிச்ச நண்பன் ஒருத்தன் MMCல சீட் போட்டான். ‘ஏதோ அதிர்ஷ்டம். கடம் அடிக்கிற கேஸ்’ அப்படின்னுலாம் பேசுனாங்க. அந்தப் பயபுள்ள மேற்படிப்புக்கான AIIMS தேர்வில டாப்பரா வந்தப்ப ஒருத்தரும் வாயைத் திறக்கல. இன்னைக்குப் பொன்பத்தின்னா பூ கொ சரவணன்னு பலர் அடையாளங் கண்டுகிறப்ப இருக்கச் சந்தோஷமே தனித் தான். உங்களால உங்க கிராமத்துக்கே பெருமை கிடைக்கும். இங்க மகிழ்ச்சியா விளையாடுங்க, எவ்வளவோ துயரத்தையெல்லாம் துடைச்சு போட்டுட்டு தான் இங்க வந்திருக்கீங்க. நீங்க கண்டிப்பா சாதிப்பீங்க. உங்களுக்குக் கிடைக்கப் போற நண்பர்கள், ஊக்கப்படுத்த போற உன்னத மனுஷங்களுக்கு நன்றி 🙂 ஒரு மொழியைக் கத்துக்கிறது பெரிய மலைலாம் இல்ல. அதேசமயம் அது தான் அறிவோட அடையாளம்னு அசந்துறாதீங்க. உயிரக் கொடுத்து உழைங்க, வியர்க்க விறுவிறுக்கப் போராடுங்க, தேடிக்கிட்டே இருங்க, திக்கெட்டும் வெற்றி கிட்டட்டும்.
Feel #proud to hail from rural background #feelproudmachis 🙂 அசத்தி எடுங்க 😀 சென்னை பையன் சாதிச்சா அது ஒரு நாள் செய்தி , நீங்க சாதிச்சா அது உங்க ஊருக்கே தலைப்பு செய்தி 🙂

 

ஆங்கில மூலம்:

I wanted to post this status badly for two years. Many village students or those who hail from not-so-affluent backgrounds enter top engineering/medical colleges. Their dressing sense is not upto the mark,they are not so polite as per your standards, they don’t know how to mingle socially. They are typical village guys. Yet they have heart, they want few friends to hear them, few to cheer them up. That one yr period is very very crucial, you need to stop crying and have a lets face this problem and hit it back attitude . Inspite of all these odds many have got placed in dream companies,lead many top clubs,enlightened many fellow friends thoughts, emerged as remarkable doctors. Just you need to mingle and find good friends,work few hours more than so called intellectual english speaking urban guys. Intellect is not defined by language. I still remember the day when I was interviewing all India 4th ranker in GATE from our campus,he stressed that his village name should be mentioned clearly in article as many identified him through the nearby town. One of my school friends who studied in tamil medium when got a seat into MMC it was termed as fluke and rote memorizing. When he emerged as topper in AIIMS entrance for PG exam people hardly spoke up. My village Ponpathi is identified by me today. You great souls will also do that. Enjoy being over here, you have braved many odds and came here. You will win 🙂 Thanks to all those friends and wonderful souls who are going to cheer them. Learning a language is not a tough deal,just you need to know its alone not the mark of knowledge. Sweat,dream,explore,conquer 🙂 #proud to hail from rural background #feelproudmachis 🙂 make a mark 😀 சென்னை பையன் சாதிச்சா அது ஒரு நாள் செய்தி , நீங்க சாதிச்சா அது உங்க ஊருக்கே தலைப்பு செய்தி 🙂

மொழி அரசியல் பகுதி-5 மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள்


மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள் :

மதம், மொழி என்பதைச் சார்ந்து அரசியல் அணியாகப் பல்வேறு குழுக்கள் திரள்கிறார்கள். இந்தியாவில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் மொழிச் சிக்கல்கள் இருந்தாலும் ஆங்கிலேய அரசு மதம் சார்ந்த அடையாளங்களைக் கொண்டே அதிகாரப் பிரிப்பை மேற்கொண்டதால் மத அரசியல் மொழி அரசியலை பின்னுக்குத் தள்ளியது. விடுதலைக்குப் பின்னால் நாற்பத்தி ஏழு வழக்கு மொழிகள், வட்டார வழக்குகள் எல்லாவாற்றையும் இணைத்து கரிபோலி என்கிற இந்தி வடிவத்தின் ஆதிக்கத்துக்குள் ஆட்படுத்தும் அரசியல் நடைபெற்றது. இந்த இந்தி சம்ஸ்கிருதமயமாக ஆக்கப்பட்டது.

விடுதலைக்கு முன்னால் உருதை முன்னெடுக்கும் அரசியலை மேற்கு ஐக்கிய மாகாணத்தில் (தற்போதைய உத்திர பிரதேசம்) பலமாக வேரூன்றி இருந்த இஸ்லாமிய இயக்கமான தியோபந்த்தும், அதன் அரசியல்-கலாசார இயக்கமான ஜமாத்-இ-உலமா-இ-ஹிந்த் அமைப்பும் மேற்கொண்டன. எனினும், இவை இரண்டும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவையாக, காங்கிரஸ் சார்பாக இருந்ததால் உருது மொழியைப் பிரிவினையோடு இணைப்பது முழுக்கச் சரியல்ல.

பனராஸ் இந்து பல்கலையை உருவாக்கிய மதன் மோகன் மாளவியா ஹிந்தி சாஹித்திய சம்மேளனத்தை நிறுவினார். இந்து மதம், அதன் நூல்கள் ஆகியவற்றைப் பிரபலப்படுத்தும் நோக்கம் ஒருபுறம் என்றால், பாரசீகம்-அரேபிய மொழிகளால் அசுத்தமானதாக அவர்கள் கருதிய இந்தியை சம்ஸ்கிருதமயத்தின் மூலம் தூய்மைப்படுத்தினர். இந்தி-உருது சிக்கல் இந்து-முஸ்லீம் பிரச்சனையாக வடக்கில் கட்டமைக்கப்பட்டது. தெற்கில் நிலைமை வேறாக இருந்தது. மொழி அந்நியர்கள் என்று உருது மொழியை வடக்கில் சொன்ன பிராமணர்கள் தெற்கில் அந்நியர்கள் என்றும், அவர்களின் வடமொழி அன்னியம் என்றும் திராவிட இயக்கத்தால் வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனிய, சம்ஸ்கிருத கலாசாரம் அந்நியமானது என்று இங்கே அடையாளப்படுத்தப்பட்டது.

வடநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட இந்தியைக் கொண்டு இந்து-முஸ்லீம் தொடர்பு கொள்ளலில் இருந்ததாகத் தூய்மைவாதிகள் சொல்லிக்கொண்ட தடையை வட்டார வழக்குகள், பிற பேசு மொழிகள் ஆகியவற்றை இணைத்து நிலைநிறுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ இந்தியின் மூலம் சரி செய்ய முயன்றார்கள். எனினும், இந்து-முஸ்லீம் வேற்றுமை இப்படிப்பட்ட முயற்சிகளால் அதிகப்படவே செய்தது. இதைவிட மோசமாக, இஸ்லாமியர்களின் மொழியாக மட்டுமல்லாமல் எண்ணற்ற இந்துக்களின் மொழியாகவும் இருந்த உருது மொழியைக் காலங்காலமாக உருது மொழியைப் பேசாத பிற பகுதி இஸ்லாமியர்கள் தங்களின் மொழி என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியும் காரியம் நிகழ்ந்தேறியது. உருது மொழியை இஸ்லாமியர்களோடு தொடர்பு படுத்தும் செயல் இப்படி உச்சத்தைக் கவலைக்குரிய வகையில் எட்டியது.

ஒரு மொழியைப் பிடிக்கவில்லை என்றால் என்ன சிக்கல் என்று சிலர் கேட்கலாம். தமிழகத்தின் முதல்வராக இருந்த பக்தவத்சலம் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற பொழுது பேசியது நகைமுரணாக இதற்குப் பதில் தரும், ‘ஒரு மொழியை ஒருவர் வெறுக்கிறேன் என்று சொன்னால் அதைப் பேசுகிறவர்களை வெறுப்பதாகவே பொருள். இது ஒரு மொழி, அதைப் பேசுபவர்கள் மீதான வெறுப்பை நாசூக்காக வெளிப்படுத்துவது ஆகும். அதிலும் இந்தியில் வளமை இல்லை என்று மறைமுகமாகக் கருதுவதன் வெளிப்பாடு இது.’ என்று அவர் சொன்னார். வடநாட்டின் மொழி இயக்கம் மதங்களைக் கொண்டு பிளவுபடுத்திய பொழுது, தெற்கில் நடைபெற்ற மொழி இயக்கம் தாங்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பெருமைகொண்ட எல்லா மதத்தவரையும் இணைத்துக் கொண்டு செயலாற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது.
தெற்கில் அதிகாரத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பிராமணர்களைப் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் சுலபமாக அந்த இடங்களை விட்டு நகர்த்தியதால், வடக்கைப் போல வன்முறைகள் எதுவும் அவர்கள் மீது நடக்கவில்லை.

பால் பிராஸ் ஒரு மொழிக்காக மக்கள் தங்கள் உயிரைக் கொடுப்பார்கள் என்பதை தான் நம்பவில்லை என்று சொல்கிறார். எண்ணற்ற காரணிகள் இணைந்து அவற்றை மொழியின் பெயரால் எதிர்ப்பதே நடப்பதாக அவர் கருதுகிறார். மொழியியல் அறிஞரான அண்ணாமலை தமிழகத்தில் தாய்மொழிக்காக வேறு எதையும் எதிர்நோக்காமல் உயிரைவிட்ட எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லி மொழிக்காக அப்படிப்பட்ட தியாகங்கள் நிகழ்வது சாத்தியம் என்று பதில் தருகிறார்.

சம்ஸ்கிருதத்தை மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொல்லப்படுவதைப் போல நிச்சயம் ஐம்பாதாயிரம் பேர் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. மேலும், அம்மொழியைத் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாகவே இருக்கும். எனினும், மேட்டுக்குடி இந்தியாவின் இந்து கலாசாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் அடையாளமாக அது திகழ்வதால் எட்டாவது அட்டவணையில் அதற்கு இடம் தரப்பட்டது.

அதே போலப் பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த சிந்திக்கள் சிந்தி மொழியைப் பேசினார்கள். இவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாக, அதிகக் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்கள் தங்களின் பிழைப்புக்கு இந்தி, ஆங்கிலம் கற்றாலும் தங்களுக்கு என்று தனியான ஒரு பகுதியை கேட்டுப் போராட்டம் செய்யாவிட்டாலும் எட்டாவது அட்டவணையில் ஒரு மொழியாகத் தங்கள் மொழியைச் சேர்க்க வேண்டும் என்று போராடினார்கள். அது தங்களைத் தனித்து அடையாளப்படுத்தும் ஒரு செயலாக அவர்கள் உணர்ந்தார்கள். அதனால் அரசுக்கு எந்தச் செலவும் இல்லை என்பது ஒருபுறம், இன்னொருபுறம் சிந்த் மாகாணத்தை இந்தியாவை விட்டுப் பிரித்தது தவறு என்பதைச் சூசகமாக உணர்த்தும் அரசியல் லாபம் இந்திய அரசுக்கு இருந்தது.

மூன்றாவதாக மைதிலி மொழியை எட்டாவது பட்டியலில் சேர்க்க ஒரு காலத்தில் போராட்டம் நடந்து பிசுபிசுத்துப் போனது. ஆனால். பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பொழுது பீகாரில் உள்ள பிராமணர்கள் பேசும் மொழியை மைதிலியை எந்த வேண்டுகோளும் இல்லாமலே எட்டாவது அட்டவணை மொழியாகச் சேர்த்தார்கள். பீகார், உத்திர பிரதேசத்தில் உருது மொழி சார்ந்து நடந்த அரசியல் காய் நகர்த்தல்கள் அடுத்தடுத்த பத்திகளில் இப்பொழுது காண்போம்.

இந்தியாவில் எட்டாவது பட்டியலில் மொழியாக உருது சேர்க்கப்பட்டு இருந்தாலும், அது பீகார், உத்திர பிரதேச பகுதிகளில் பரவலாகப் பேசப்பட்டாலும் அதை அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அரசுகள் அறிவிக்கவில்லை. ஜனதா அரசின் ஆட்சி கவிழ்ந்த பிறகு வந்த பீகார், உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பதாகக் காங்கிரஸ் (இ) வாக்குக் கொடுத்தது. இது குறித்துச் சமர்பிக்கப்பட்டு இருந்த குஜ்ரால் அறிக்கையைச் செயல்படுத்துவதாகக் கோடிட்டிருந்தது. இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெறப் போடப்பட்ட கணக்கு என்று சொல்லவேண்டியதில்லை.

பீகாரில் ஜெகந்நாத் மிஷ்ரா முதல்வராக இருந்தார். மைதிலி பிரமாணரான அவர் தன்னுடைய ஜாதியினரை உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்குவதை எதிர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மைதிலி மொழியினருக்குச் சலுகைகள் வழங்கி இரண்டு மாங்காய்களைப் பறித்தார். இதற்கு முன்னர் உருதை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற முயன்ற பொழுது ஜனசங்கம் பீகாரில் போர்க்கோலம் பூண்டது என்றாலும்,தற்போது பாஜக வேடிக்கை பார்த்தது. உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்க 67-ல் முயன்ற பொழுது 15௦ பேர் கலவரங்களில் இறந்தார்கள். உருதுக்கு எதிராகப் போராட்டங்கள் எண்பதில் ஓரளவுக்கு வெடித்த பொழுது பத்து பேர் இறந்தார்கள். அன்ஜூமன்-தாரீக்-இ-உருது அமைப்பு உருதை அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்குவதில் தீவிரமாக இயங்கியது.

உத்திர பிரதேசத்தில் இப்படிப்பட்ட உருதை அதிகாரப்பூர்வ இரண்டாவது மொழியாக ஆக்கும் முயற்சி வெற்றிபெறவே இல்லை. எண்பத்தி ஒன்றின் டிசம்பர் மாதத்தில் தன்னுடைய கட்சி சகாக்கள், பிரதமர் ஆகியோரின் அனுமதியில்லாமல் உருதை வி.பி.சிங் அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்க முயன்று கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். அதிகாரப்பூர்வ என்கிற சொல்லை நீக்கி இரண்டாவது மொழி என்றாவது ஆக்கலாம் என்று முயன்றார். அவர் கொண்டுவந்த அவசரச்சட்டம் லக்னோ உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் முதல்வர் ஸ்ரீபதி மிஸ்ராவும் வி.பி.சிங் வழியில் இரண்டாவது மொழியாக மட்டும் உருது மொழியை மாற்ற அவசரச்சட்டம் கொண்டு வர கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது.

அதற்கு அடுத்து என்.டி.திவாரி முதல்வரானார். ராஜீவ் காந்தியின் இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்தும் போக்குக்கு வலுசேர்க்க அவர் பழைய ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவரும் அதே இரண்டாவது மொழி முயற்சியை மேற்கொண்டார். இந்தமுறை நிலைமை மோசமானது. உருதை ஆதரித்து ஒரு கல்லூரி மாணவர்களும், எதிர்த்து இன்னொரு கல்லூரி மாணவர்களும் பதவுன் நகரத்தில் ஊர்வலம் போய்ச் சந்தித்துக் கொள்ள அரசு கணக்கின்படி 26 பேர் இறந்து போனார்கள். இன்னமும் உருது அதிக மக்களால் பேசப்பட்டும் மாநில அரசால் அங்கீகரிக்கப்படாமல் உத்திர பிரதேசத்தில் இருக்கிறது.

முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச முதல்வர் ஆனபொழுது விபி சிங்கின் ஜனதா அரசை மூன்று காரணங்களுக்காக வெறுப்பதாகச் சொன்னார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது, ஆங்கிலத்தை ஆதரித்துச் செயல்பட்டது, தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் காப்பி அடித்துத் தேர்ச்சி பெறுவதற்கு எதிரான விபி சிங்கின் பார்வையே என்று அவர் சொன்னார். அவர் ‘அங்க்ரேஸி ஹட்டாவ்’ (ஆங்கிலமே வெளியேறு) என்கிற முழக்கத்தைத் தந்தார். ஆங்கிலம் ஆதிக்க சக்திகளின் மொழி என்றும், அது மாநிலத்தை விட்டு வெளியேறி அந்த இடத்தை இந்தி பெறவேண்டும் என்றும், வெவ்வேறு மாநில அரசுகள் தங்களுக்குள் தத்தமது மொழியில் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பது அவரின் பார்வை.

லாலு இதற்கு மாறான பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆங்கிலம் கற்பதன் மூலமே முன்னேற முடியும் என்று அவர் ஆங்கிலம் கற்பித்தலை அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கினார். அதைப் போல இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெற பாகல்பூரில் யாதவர்கள் இஸ்லாமியர்களைக் கலவரத்தில் கொன்றது போல இனிமேல் நடைபெறாது என்று உறுதி தந்தார். உருதும் அதன் இடத்தைப் பீகாரில் தொடர்ந்து பெற்றது. மைதிலி பிராமணர்களின் மொழியான மைதிலி அரசுப்பணிகளுக்குத் தேர்வு எழுதும் பட்டியலில் இருந்து லாலு அரசால் நீக்கப்பட்டது.

 

உருது மொழி உத்திர பிரதேசத்தில் தனக்குரிய இடத்தைப் பெறமுடியாமல் நிற்பது ஒரு முரண் என்றால், காஷ்மீரில் பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இல்லாத உருது அங்கே அதிகாரப்பூர்வ மொழியாக ஆதிக்கம் செலுத்துவது இன்னொரு கதை. காஷ்மீரில் மக்களால் பேசப்படும் மொழிகள் என்று கணக்கு போட்டால் காஷ்மீரி, டோக்ரி, கோஜ்ரி, மேற்கு பஹரி, இந்துஸ்தானி, பொத்வாரி, பால்ட்டி, லடாக்கி., ஷினா, புருஷாஸ்கி என்று பட்டியல் இறங்குவரிசையில் நீளும். இதில் காணப்படாத உருது தான் ஆனால் காஷ்மீர் அரசால் வளர்க்கப்படுகிறது.

ஒரு வினோதமான அம்சம் என்னவென்றால் பஞ்சாபில் இந்துக்கள் பஞ்சாபியை மொழியைப் பேசிய பொழுதும், தாங்கள் இந்தி மொழி பேசுவதாகக் கணக்கெடுப்புகளில் கூறினார்கள். கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் முஸ்லீம்கள் உருது மொழியில் பேசுவதாகக் கணக்கை கூட்ட பொய் சொல்வது நடந்தது. காஷ்மீரிலோ இஸ்லாமியர்கள் தங்களுடைய தாய் மொழியான காஷ்மீரை நேர்மையோடு பதிவது நிகழ்கிறது. ஷேக் அப்துல்லா நாற்பத்தி நான்கில் காஷ்மிரி, பால்டி, டார்டி, டோக்ரி, பஞ்சாபி, பஹரி, லடாக்கி முதலிய மொழிகளைக் காஷ்மீரின் தேசிய மொழிகளாகவும், உருதுவை இணைப்பு மொழியாகவும் ஆட்சிக்கு வந்தால் மாற்றுவதாக அறிவித்தார்.

காஷ்மீரில் உயர்கல்வியில் காஷ்மீரி மொழிக்கு இடமில்லை. பாடப்புத்தகங்கள் கூடக் காஷ்மீரி மொழியில் கிடைப்பதில்லை. காஷ்மீரி மொழியிலோ, இன்னபிற சிறுபான்மை மொழிகளிலோ செய்தித்தாள்கள் வருவதும் அரிதான ஒன்றாகவே உள்ளது. காஷ்மீரி மொழி சாரதா வரிவடிவத்தில் எழுதப்படுவது, அதைக் காஷ்மீரி பண்டிட்கள் நாகரி வரிவடிவத்தில் எழுதுவார்கள். இரண்டு வரிவடிவங்களையும் காஷ்மீர் அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அதோடு, எல்லா முக்கியத் தகவல் தொடர்பும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகியவற்றிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரி மொழிக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைவாகவோ, செலவு செய்யப்படாமலோ இருக்கிறது. எட்டாம் வகுப்புவரை காஷ்மீரி மொழியைக் கட்டாயமாக்கும் முயற்சியும் ஓரளவுக்கே வெற்றி பெற்றுள்ளது.

திபெத்திய மொழியின் கிளையான லடாக்கி மொழிக்கு வரிவடிவம் இருந்தும் லடாக் பகுதியில் உருது பயிற்றுமொழியாகத் திணிக்கப்பட்டது. திபெத்திய மொழியின் ஒரு பிரிவான பல்டி மொழியும் இந்தியாவின் வசமுள்ள காஷ்மீர், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் இரண்டு பக்கமும் உருது மொழியால் ஆதிக்கத்துக்கு உள்ளாகி காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. பூன்ச், ரஜவுரி மாவட்டங்களில் நான்காம் வகுப்பு வரை கோஜ்ரி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. பஹரி மொழிக்கும் காஷ்மீர் அரசுகள் சில சலுகைகளை வழங்குகின்றன. இந்தக் கொள்கையை வரிக்கூ எனும் பேராசிரியர் காஷ்மீரை இஸ்லாம் மயமாக்கும் வேலையே என்று கருதுகிறார். அரசியல் அறிவியல் அறிஞர் பால் பிராஸ் இதற்கு மாறாக வேலைவாய்ப்புகள் அருகியும், இந்தியாவில் இருந்தும் துண்டிக்கப்பட்டதாக உணரும் காஷ்மீரிக்களை மேலும் தகுதியுள்ளவர்கள் ஆக்கவும், இந்திய அரசுடனான தொடர்பு சுமுகமாக இருக்கவும் இந்த இந்தி, ஆங்கிலம், உருது எனும் மும்மொழிக்கொள்கை உதவுவதாகக் கருதுகிறார்.

ஹிந்தித் திணிப்பால் ஹிந்தி வளருமா?- யோகேந்திர யாதவ்


ஹிந்தித் திணிப்பால் ஹிந்தி வளருமா?:

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளரும்,அரசியல் விஞ்ஞானியுமான யோகேந்திர யாதவ்ஹிந்தி திவாஸ் நாள் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் எனச்சொல்லி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது :
செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்படும் ஹிந்தி திவாஸ் நாள் வருடாவருடம் நடக்கும் ஆன்மாவற்ற அரசாங்க சடங்கு. ஒரு ஹிந்தி திவாஸ் விழாவை நீங்கள் இரங்கல் கூட்டமோ என்று எண்ணிக்கொண்டால் உங்களை மன்னித்துவிடலாம்.
அந்த இரண்டு வாரங்கள் கடமை தவறாமல் வருடம் முழுக்க இந்தி நமக்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை நினைவுபடுத்தும்.

இந்திய அரசாங்கம் ராஜ்பாஷாவான ஹிந்தியை வளர்க்கிறேன் என்று எடுத்த முன்னெடுப்புகள் மாண்டரின்,ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கு அடுத்து பெரிய மொழியாகத் திகழும் ஹிந்தியை ஒரு அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக மாற்றியிருக்கிறது. ஹிந்தி திவாஸ் நம் நாட்டின் மொழிக்கொள்கையில் என்னவெல்லாம் தவறாக இருக்கிறதோ அது எல்லாவற்றின் அடையாளமாக திகழ்கிறது. இந்த தவறுகளை சரி செய்வதன் துவக்கமாக ஹிந்தி திவாஸ் விழாக்கொண்டாட்டத்தை நீக்கலாம்.

ஹிந்தியை தொடர்ந்து தூக்கிப்பிடிக்கும் நானே இப்படியொரு பரிந்துரையை தருவது வினோதமானதாக இருக்கலாம். என்னுடைய நண்பர்கள் இதை எதிர்க்கலாம். அவர்கள் ஹிந்தியில் அதிக பொருள் மற்றும் உயிர்ப்பை கொண்டு வந்து அதை வளர்ப்பதை விட்டுவிட்டு அரசாங்கம் ஹிந்திக்கு கொடுத்திருக்கும் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் விடுவதா என்று எதிர்க்குரல் கொடுக்கலாம்.
நான் முரண்படுகிறேன். ஹிந்தியை சூழ்ந்திருக்கும் அதிகார கருவிகள் ஆங்கிலத்துக்கு ஹிந்தி அடிமைப்பட்டு இருப்பதை உறுதி செய்திருக்கிறது. மற்ற இந்திய மொழிகளோடு ஹிந்திக்கு இருக்கும் தொடர்பையும் அது துண்டித்து விட்டது இன்னமும் மோசமான ஒன்றாகும். அதன் ‘வட்டார வழக்குகளோடு’ம்,அதன் ஆற்றல் மற்றும் படைப்புத்திறனோடும் ஹிந்தி இன்னமும் உயிர்த்திருக்கிறது. இந்த பழைய நடைமுறைகளை உடைத்தால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும்
நான் எப்படி மற்றும் ஏன் என்று விளக்குகிறேன். அதிகாரப்பூர்வ ராஜ்பாஷா பட்டம் ஹிந்தியின் உண்மையான நிலையை மறைக்கிறது. சுற்றிப்பார்த்தால் தான் உண்மையை பதிவு செய்ய முடியும். எங்கெங்கும் நிரம்பி இருக்கும் ஆங்கிலத்தில் சீக்கிரமாக பேச உதவும் கோர்ஸ்களுக்கான விளம்பரங்கள் காளான்கள் போல முளைத்துக்கொண்டு இருக்கும் ஆங்கில வழிக்கல்வி தரும் ‘கான்வென்ட்’கள் ,தன்னை அரைகுறை ஆங்கிலத்தில் வெளிப்படுத்திக்கொள்ள முயலும் பரிதாபத்துக்குரிய சூழல் எல்லாமும் எப்படிப்பட்ட அடுக்குநிலையில் மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

கனவுகளின் மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. வேறெந்த தேர்வும் இல்லாதவர்களின் மொழியே ஹிந்தி. csat சிக்கலில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நிரூபணமானது. ஒரு சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவனின் திறனை ஆங்கில மூலத்தில் இருந்து வரும் மொழிபெயர்ப்பின் மூலம் சோதிப்பது காலனிய மனோபாவமே அன்றி வேறில்லை. என்றாலும்,அரசாங்கம் தேர்வுகளை நடத்தியது. ஆங்கிலமே அதிகாரத்தின் மொழி. இந்த வகையில் மற்ற இந்திய மொழிகளின் நிலையே இந்தியின் நிலையம் ஆகும். அதன் சிறப்பு நிலை மற்ற மொழிகளுடனான அதன் உறவை பாழ்படுத்தியிருக்கிறது . எங்கேயும் இந்தியை தேசிய மொழி என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லாத பொழுதும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். அதை பிற மொழியினர் எதிர்க்கிறார்கள். இந்தி இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்றாலும் அது இந்தியாவின் பழமையான மற்றும் வளமான மொழியில்லை.

ஒவ்வொரு இந்தி பேசாத பிற மக்கள் ஓரளவுக்கேனும் இந்தியை பள்ளிகளில் கற்க வேண்டியிருக்கிறது. இந்தி பேசுபவர்கள் வேறெந்த நவீன இந்திய மொழியையும் கற்பதில்லை. உண்மையில் அரசாங்க ஹிந்தி அதன் கலாசார மற்றும் மொழியியல் பாரம்பரியம் மற்றும் அதன் பன்னிரெண்டு ‘வட்டார’ வழக்குகளை விட்டும் தள்ளி நிற்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஹிந்தி மற்றும் உருது ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவினை திட்டமிட்டே வளர்க்கப்பட்டது. ஹிந்தி இறந்து விட்டது என்றோ அது இறந்து கொண்டிருக்கிறது என்றோ அர்த்தமில்லை. அது உண்மையில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. பம்பாய் சினிமா,கிரிக்கெட் வர்ணனை,வேகமாக வளரும் ஹிந்தி மீடியா அதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. சமகால ஹிந்தி இலக்கியம் மற்ற நவீன மொழிகளின் இலக்கியங்களோடு ஒப்பிடும் வண்ணம் சிறந்திருக்கிறது. ஹிந்தியில் அற்புதமான இலக்கிய விமர்சன பாரம்பரியம் இருக்கிறது மற்றும் சமூக அறிவியலில் பல்வேறு ஆக்கங்கள் அரசாங்க ஹிந்தி வளர்ப்பைத் தாண்டி நடந்திருக்கின்றன. er,
ஆகவே ஹிந்தி திவாஸ் நிகழ்வுக்கு பதிலாக பாஷா திவாஸ் என்கிற நிகழ்வை மாற்றாக நடத்த நான் பரிந்துரைக்கிறேன். அந்நாளை இந்த நாட்டின் மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் வளத்தை குறிக்க பயன்படுத்தலாம். பல்வேறு மொழிகளுக்கு இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் அது ஒரு அடையாளம் ஆகும். அரசாங்கம் அதை செய்யாது. ஹிந்தியை உண்மையில் காதலிப்பவர்கள் இந்த போலித்தனத்தை உடைக்க முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.
அதற்கு பதிலாக அவர்கள் என்ன செய்ய வேண்டும் ? ஹிந்திக்கு செய்யக்கூடிய பெரிய சேவை அதை பயன்படுத்துவது தான். முதலில் பயன்படுத்தக்கூடிய,செயல்பாட்டுத்தன்மை கொண்ட ஹிந்தி அகராதிகளை உருவாக்க வேண்டும்.

சமஸ்கிருதமயமக்கப்பாட்ட அரசாங்க ஹிந்தியை விட்டு நகரவேண்டும். ஹிந்தி தன்னுடைய கதவுகள்,ஜன்னல்களை அதன் வட்டார வழக்குகள்,ஆங்கிலம் முதலிய பிற மொழிகளுக்காக திறந்து வைத்து அதை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். இளந்தலைமுறையை நாம் ஹிந்தி சார்ந்து ஈடுபடுத்த வேண்டுமென்றால் நாம் அவர்களை ஈர்க்கும் இலக்கியம் படைக்க வேண்டு. குல்சாரின் பாஸ்கி கா பஞ்சதந்த்ரா அல்லது சுகுமார் ரெவின் அபோல் தபோல் ஆகியன இதற்கு மாதிரியாக பயன்படலாம். உயரிய தரம் வாய்ந்த பாடப்புத்தகங்களை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஹிந்தி மாணவர்களுக்காக எழுத வேண்டும்

மேலும் சீனம் மற்றும் ஜப்பானிய மொழியைப்போல ஹிந்தியும் இணைய பயன்பாட்டுக்கு உகந்ததாக மாறவேண்டும். மேலும் அதிகத்தரம் வாய்ந்த மொழிபெயர்ப்பு திட்டத்தை தேசிய அளவில் முன்னெடுத்து ஆங்கிலம் உட்பட வெவ்வேறு மொழிகளில் இருந்து நூல்களை ஹிந்திக்கு மொழிபெயர்க்க வேண்டும். ஹிந்தி உருதுவில் இருந்து ஷஹ்யரி வகைக்கவிதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதன் சட்டமொழியையும்,தமிழின் செம்மையான பாரம்பரியத்தையும்,மலையாளத்தின் அச்சு கலாசாரத்தையும்,கன்னடத்தின் சமகால இலக்கியங்களையும்,மராத்தியின் எதிர்ப்பிலக்கியதையும், வங்கத்தின் அறிவுசார்ந்த எழுத்துக்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஹிந்தியை வளர்க்க அதை பரப்புவதை விட அது மற்ற மொழிகளோடும்,மொழிகளோடும் ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலங்களை அப்படியே இருக்கிறபடியே இருக்க விடுவதுமே சிறந்த வழி

இந்திய குடியரசின் டாப் 10 தருணங்கள் !


இந்தியாவை செலுத்துவது, ஒன்றாக இணைத்து வைத்திருப்பது என்று கேட்டால் எண்ணற்ற பதில்கள் வரலாம். ஆனால், இந்தியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான வழிகாட்டுதல் அரசியல் சட்டத்தின் வழியாகவே நமக்கு கிடைக்கிறது. அதன் விதை முதல்  விருட்சமாக விரிந்தவரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் :

சேர்ந்து உருவான அற்புதம் :

காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் சட்ட உருவாக்கத்தில் பங்குபெற்றார்கள். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள்,அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை . மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள்,அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள் ;பல்வேறு விவாதங்களுக்கு பிறகு,மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது .

117,369 வார்த்தைகளோடு மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் உருவாகி முடிந்ததும் “அரசியலமைப்பு சட்டம் செயல்படுவதற்கு ஏற்றது என்றே எண்ணுகிறேன். அது நெகிழும் தன்மை கொண்டிருந்தாலும் இந்தியாவை இது பிணைத்திருக்கிற அளவுக்கு வலிமையானது. ஏதேனும் புதிய அரசியலமைப்பின் கீழே தவறாக போகுமென்றால் அதற்கு அரசியலமைப்பு சட்டம் காரணமாக இருக்குமென்று நான் சொல்ல மாட்டேன்.  மனிதர்கள் இழிவான வகையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டி இருக்கும் !”

வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் :

உலகின் எந்த நாட்டிலும் அதற்கு முன் நடந்திருந்த ஒரு செயலை இந்தியர்கள் முன்னெடுத்தார்கள். வயது வந்த எல்லா குடிமக்களுக்கும் முதல் தேர்தலிலேயே எந்த அரசும் அதற்கு முன்னர் வாக்குரிமை தந்ததில்லை. அதிலும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்த சூழலில் அது வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் என்றே வர்ணித்தார்கள். மக்களுக்கு அறிமுகமான சின்னங்கள், தனித்தனி வண்ண பெட்டிகள் ஆகியவற்றின்
மூலம் நடந்த தேர்தலில் 4,500க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள்  முடிவு செய்யப்பட்டார்கள். சூதாட்டம் சூப்பராகவே முடிந்தது !

பொது இந்து சிவில் சட்டம்-அம்பேத்கரின் கனவு நேருவாக்கிய நினைவு :

இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று காங்கிரஸும், காந்தி மற்றும் நேருவும் மிகத்தெளிவாக இருந்தார்கள். காந்தியின் மறைவு அந்த எண்ணத்தை இன்னமும் வலுப்படுத்தவே செய்தது.   குடியரசான ஒரு வருடத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை,பல தார திருமணத்துக்கு தடை,ஜீவனாம்சம்,விவாகரத்து ஆகியவற்றுக்கு உரிமை ஆகியவற்றை சாதிக்க முனைந்தார்கள். வலதுசாரிகளின் எதிர்ப்பு தடுக்கவே நான்கு வருடங்கள் கழித்து தனித்தனி சட்டங்களாக பிரித்து அவற்றை நிறைவேற்றினார் நேரு. அம்பேத்கர்  நேரு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று எண்ணி  பிரிந்து சென்று எதிர்க்கட்சி பக்கமிருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தார். !

மொழிவாரி மாநிலங்கள்-எஸ் ! தேசிய மொழி-நோ நோ  :

மொழிவாரியாகவே காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிராந்திய அமைப்புகளை நடத்தியது. மொழிவாரியான மாநிலங்கள் கட்டாயம் தருவோம் என்று வாக்குறுதி தந்திருந்தார்கள். மதரீதியாக நாடு பிளவுபட்டதால் அந்த யோசனையை கிடப்பில்
போட்டார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் மீண்டும் மொழிவாரி மாநில கோரிக்கையை எரிய விட்டது. அவரின் மரணம் அதை பெருந்தீயாக ஆக்கியது. முதலில் நேரு முரண்பட்டாலும் பின்னர் பெருவாரி மக்களின் கோரிக்கையை ஏற்று மொழிவாரி மாநிலங்களுக்கு ஒத்துக்கொண்டார். அது எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு என்பதை மொழி அடிப்படையில் மாற்றந்தாய் மனோபாவம் காட்டப்பட்டு தனி நாடாக பிரிந்த வங்கதேசம் நிரூபித்தது. இந்தியா அப்படியே உயிர்த்து நிற்கிறது.

அதே போல தேசிய மொழியாக இந்தி என்று எழுந்த கோரிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பால் ஏற்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ மொழிகள் மட்டுமே இன்னமும் இந்தியாவில் உண்டு. தேசிய மொழி இந்தி என்று யாராவது சொன்னால் “சட்டமும்,வரலாறும் தெரியுமா உனக்கு ?” என்று கேட்டு பின்னுங்கள்

இந்திராவின் எமெர்ஜென்சி, கோமாவுக்கு போன ஜனநாயகம் :

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டீர்கள் ; பிரதமர் நாற்காலியை காலி செய்யுங்கள் என்கிற ரீதியாக ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கோர்ட் சொல்லியிருந்தது. கேசவாநந்தா பாரதி வாழ்க்கை அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் சொல்லவே தலை கிறுகிறுத்தது இந்திராவுக்கு ! மன்னர் மானியம் நீக்கியதும் தவறு என்று கோர்ட் சொல்லியது ஒரு பக்கமென்றால் ஜெபி மற்றும் மாணவர்கள் நாடுமுழுக்க போராட்டங்களை முன்னெடுக்க உள்நாட்டு கலகம் இருந்தால் எமெர்ஜென்சி அறிவிக்கலாம் என்பதை பயன்படுத்தி எல்லா உரிமைகளையும்  பறித்தார். அமைச்சரவையை கூட கலந்து ஆலோசிக்காமல் நடந்த அநியாயம் அது.

பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாமும் போனது. கோர்ட்கள்,அதிகாரிகள்  மவுனம் சாதித்தனர் ; எதிர்த்த நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை போனார்கள்.  இந்தியாவின் இருண்ட பக்கங்கள் அவை. பிரதமர் முதலிய முக்கிய பதவிகளில்  கோர்ட் விசாரிக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் திருத்தப்பட்டன. பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது

மீட்கப்பட்ட மாட்சிமை :

தேர்தல்கள் வந்ததும் மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். முப்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை காலி செய்திருந்தார்கள். இந்திராவே தோற்றுப்போனார். இந்திரா செய்த திருத்தங்கள் திரும்பபெறப்பட்டன. உள்நாட்டு கலகம்,ஆயுத புரட்சி ஏற்பட்டால் மட்டுமே எமெர்ஜென்சி என்று ஆனது. கேபினட் அனுமதி வேண்டும்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இரண்டும் அவசியம் என்றும் மாற்றினார்கள். ஒரு வருட எமெர்ஜென்சி நீட்டிப்பு ஆறு மாத கால நீட்டிப்பு என்று குறைக்கப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரம் காப்பற்றப்பட்டது. பிரதமர் முதலிய பதவிகளை எந்த வகையான விசாரணையில் இருந்தும்  காத்த சட்டங்கள் கழித்துக்கட்டப்பட்டன

நியாயம் காக்கும் நீதிமன்றம் :

எண்பதுகளுக்கு முன்னர்வரை பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே தனக்கு நீதிவேண்டி கோர்ட் வாசலை தொட முடியும். பீகாரில் கைதிகள் சரியாக நடத்தப்படவில்லை என்று அவர்களின் சார்பாக கோர்ட் வாசல் ஏறினார் ஹூஸ்னாரா எனும் வழக்கறிஞர். பொது நலன் மனு என்கிற கருத்தாக்கம் எழுந்தது அப்பொழுது தான்.  பொது மக்களின் நலன் பாதிக்கப்படுகிற பொழுதோ,அல்லது நியாயம் கேட்டு கோர்ட் படியேற பாதிக்கப்பட்ட எளியவர்களால் முடியாத பொழுதெல்லாம் பொது நல வழக்குகள் தான் ஒரே ஆறுதல்

உள்ளாட்சியின் மூலம் சுயாட்சி :

காந்தியின் கிராம சுய ராஜ்யத்தை அது சாதியத்தை வளர்க்க கூடும் என்று அப்பொழுது அமல்படுத்தாமல் நேரு நகர்ந்தார். மேற்கு வங்கமும், கேரளாவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி அதிகார பரவலாக்கலை சாதித்தன. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை மாற்றி கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தரும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை தொன்னூறுகளின் ஆரம்பத்தில் மாற்றியது இன்னுமொரு முக்கிய தருணம்.
எளியவர்கள் அதிகாரத்தின் கரங்களை கொடுப்பதை சாதித்தது.

சமூக நீதி காத்த வி.பி.சிங் :

முந்தைய ஜனதா அரசு கொண்டு வந்திருந்த மண்டல் கமிசனின் இருபத்தி ஏழு சதவிகித இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார் வி.பி.சிங். பல்வேறு உயர்சாதியினர் போராட்டத்தில் குதித்தார்கள். தீக்குளிப்புகள் நடந்தன. ஆனாலும்,சமூக நீதிக்கான முன்னெடுப்பு சட்டமாகி சாதித்தது. அரசுகள் பல மாறினாலும் அச்சட்டத்தை மாற்ற யோசிக்கவே செய்கின்றன. க்ரீமி லேயர் என்று கோர்ட் மட்டும் அதிக வருமானம் ஈட்டுபவர்களை தள்ளியே வைத்திருக்கிறது.

இரும்புத்திரைகளை கிழித்திடும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் :

“ஏண்டா கொண்டு வந்தோம் !” என்று காங்கிரசே கதிகலங்கி இருக்கும். நிர்வாகத்தில் ஒழுங்கை கொண்டு வர அது மக்களுக்காக இயங்க ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம். அதை சாதிக்க வெகுகாலம் கழித்து நிறைவேற்றப்பட்டது இந்த அற்புதம். எளியவர்களின் ஆயுதமானது இது. மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்,கால தாமதங்கள்,ஊழல்கள் எல்லாமும் வெளியே வந்து தலைக்கு மேலே இருக்கும் சட்டத்தின் கத்தியானது இச்சட்டம்

மகன் மனிதனாவது எப்படி ?-கிப்ளிங்


ரூட்யார்ட் கிப்ளிங்கின் IF கவிதை தோல்விகளால்,காயங்களால் வீழ்ந்த பொழுதெல்லாம் உரமிட்ட உன்னதம். இன்று தான் மொழிபெயர்த்தேன் : 

எல்லாரும் தோற்கையில் 
தோல்விக்கு நீதான் காரணம் என்று விமர்சனங்கள் 
உன்னை நோக்கி வீசப்படுகையில் 
தலை நிமிர்த்தி நீ நடப்பாய் என்றால் ; 
எல்லாரும் உன்னை சந்தேகிக்கையில்
நீ உன்னை நம்புவாய் என்றால் ; 
அவர்களின் அச்சங்களை ஆமோதிப்பாய் என்றால் 
காத்திருக்க உன்னால் முடியுமென்றால் ; 
காத்திருப்பதால் களைப்படைய மாட்டாயானால் 
பொய்கள் உன்னிடம் சொல்லப்பட்டாலும் 
நீ பொய்யால் எதிர்கொள்ள மாட்டாயெனில்
வெறுக்கப்பட்டாலும் வெறுப்பு உன்னை வெல்ல முடியாதெனில் 
நீ நல்லவனாக தெரியாவிடினும்,புத்திசாலியாக பேசாவிட்டாலும் 

நீ கனவுகள் கண்டால்,கனவுகள் உன் எஜமானன் ஆகவிட விட்டால் 
நீ சிந்தித்தால்,சிந்தனைகள் மட்டுமே குறிக்கோளாகவிடின் 
பெருவெற்றியை,பெருந்தோல்வியை சந்தித்தாலும் 
இரண்டையும் ஒன்றாக நடத்த முடியுமென்றால் 
நீ பேசிய உண்மையை 
பொய்யர்கள் திரித்து முட்டாள்களுக்கு
வலை விரிப்பதை தாங்குவாய் என்றால் ;
அத்தனையும் அர்ப்பணித்தவை கண்முன்னால் காணாமல் போகையில் 
இடிபாடுகளில் இருந்து மீண்டும் சேர்த்து,தேய்ந்த கருவிகளோடு கட்டுவிப்பாய் கனவுகளை என்றால் 

வெற்றிகளையெல்லாம் குவித்து 
புது சூதாட்டம் ஒன்றினில் முயன்று 
வீழ்வாயெனில்; வீழ்ந்த பின் முதலில் இருந்து முயல்வாய் எனின் 
தோல்வி பற்றி ஒரு மூச்சும் விடமாட்டாய் என்றால் 
உன் தருணங்கள் போய் வெகுகாலம் ஆனபின்னும் 
எல்லாமும் போனபின்னர் எதுவும் உன்னிடம் இல்லையென்றாலும் 
“விடாமல் இரு” எனும் இதயக்குரல் மட்டும் கேட்டு 
கொண்ட கனவுக்காக நன்னெஞ்சு,நரம்பு,நாடி செலுத்தி 
ஓயாமல் உழைப்பாய் எனின் 

கூட்டங்களோடு பேசினாலும் ; உன் குணநலனை காப்பாய் என்றால் 
அரசர்களோடு நடந்தாலும் எளிமைக்குணம் இழக்க மாட்டாய் எனின் 
எல்லா மனிதரும் முக்கியம் என்றாலும் யாரும் அதிமுக்கியமில்லை எனின் 
மன்னிக்க முடியா ஒரு நிமிடத்தை 
வேறெங்கோ ஓடிப்போகும் அறுபது நொடியால் நிறைப்பாய் எனின் 
உலகமும் அதில் உள்ளவையும் உன்னுடையவை 
வேறென்ன வேண்டும் நீ மனிதனனாய் மகனே ! 
மூலம் : 
www.kipling.org.uk/poems_if.htm
தமிழில் : பூ.கொ.சரவணன் 

பார்வை போனாலும் பாடிய மில்டன் !


ஜான் மில்டன் எனும் மகாகவிஞனின் பிறந்தநாள் இன்று. ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் கவித்துவம் கொண்டவர் அவர். மில்டன் இளம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை,மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார்.

நாட்டில் சிவில் போருக்கான சூழல் இருந்தது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் மற்றும் மன்னர் ப்ரோட்டஸ்டன்ட் மக்களை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவர்களை படுகொலை செய்து தள்ளினார்கள். மில்டன் கொதித்துப்போனார். அன்பு செய்ய வேண்டிய மதபீடங்கள் வன்முறையை தூண்டிவிடுவதை கண்டித்து கவிதைகள் எழுதினார். அவரை நாத்திகவாதி என்று வசைபாடினார்கள்.

சொர்க்க நீக்கம் என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள் இழைத்து,இழைத்து உருவாக்கினார். அன்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான் நாயகனாக நிமிர்ந்து நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும். அவனின் நியாயங்களை அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி செய்த சாத்தான் உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான். இதன் மூலம் மக்களை கடவுள் போல கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி தூண்டினார் மில்டன். அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம் பிரதிகள் விற்கவே வழியில்லாமல் நூல் நின்றது.

நூல்களை தணிக்கை செய்தபின்னரே வெளியிடுவோம் என்று அரசு சொன்னது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய எரோபேஜிடிகா நூலை அவர் துண்டு பிரசுரமாக வெளியிட்டார். மில்டனின் இந்த செயல்கள் அவரின் முதல் மணவாழ்வை பாதித்தது. இவரைவிட்டு அவரின் மனைவி நீங்கினார். இவரோ கண்டுகொள்ளவே இல்லை. மூன்று வருடங்கள் கழித்து திரும்பி வந்த அவர் மரணமடைந்தார். அடுத்த திருமணம் நிகழ்ந்தது. அந்த மனைவியும் சீக்கிரம் இறந்து போனார். கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது மில்டனுக்கு. அடுத்த திருமணத்தை வயதான காலத்தில் இவர் செய்து கொண்டது இவரின் மகள்களை கடுப்பேற்றியது. வெறுப்பை கொட்டினார்கள்.

“பருவங்கள் வருடத்தோடு வந்து போகின்றன ; எனக்கோ வசந்தத்தின் மோட்டோ,கோடையின் ரோஜாவோ வருவதே இல்லை. விலங்கு மந்தைகள்,மங்காத ஒளி ததும்பும் மனிதர்களின் முகங்கள் எதுவுமே எனக்கு தெரியவில்லையே ! என்னை மேகங்கள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்கின்றன. எங்கும் இருட்டு,இருட்டு,இருட்டு மட்டுமே !” என்று பார்வையை இழந்த மில்டன் எழுதினார். அவரின் புது மனைவி அன்பை பொழிந்தார்.

இருளில் மூழ்கி போயிருந்த அவர் எப்படி அதைப்பார்த்தார் என்று ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.
“வாழ்வின் பாதிப்பொழுது பேரிருளில் போனது எனக்கு
என் வெளிச்சத்தை எப்படி வெளியிட்டேன் நான் ?
என் அறிவை அழிக்க வருகிறது மரணம்
பயனற்று,பொலிவிழந்து வளைந்து நிற்கும் ஆன்மாவோடு
“எனக்கான வெளிச்சம் மறுக்கப்பட்டதா இறைவனே ?” என்று கேட்கிறேன் நான்
முணுமுணுப்போடு
பதில் வருகிறது
“இறைவன் இதை செய்யவில்லை.
மனிதனின் செயல்கள் மகத்தானதை தருகின்றன.
சிறுசுமையை சுமப்பவர்கள் பேறு பெறுகிறார்கள்.
எவன் நிலத்திலும்,நீரிலும் ஓயாமல் உழைக்கிறானோ,காத்திருந்து,பொறுத்திருந்து போராடுகிறானோ பேருலகே கொண்டாடும் அவனை !”

“நரகம் சொர்க்கமாவதும்,சொர்க்கம் நரகமாவதும் நன்னெஞ்சின் நளினச்செயலே !” என்று எழுதினார் மில்டன். வாழ்க்கையை பார்வை போனபின் கொண்டாடினார் மில்டன். மீண்ட சொர்க்கம் என்று இறைவனைப்புகழ்ந்து பாடல்கள் எழுதினார். அவரின் கவிதைகளை உலகமே கொண்டாட ஆரம்பித்தது. மில்டனின் தாக்கம் அவரின் காலங்களை கடந்தும் சென்றது. அவருக்கு முன்னூறு ஆண்டுகள் கழித்து செவித்திறன்,பார்வை,பேச்சு என எவையும் இல்லாத நிலையிலும் சாதிக்க முனைந்த ஹெலன் கெல்லருக்கு மில்டனே வெளிச்சம் ஆனார். ஜான் மில்டன் அமைப்பு ஒன்றைத்தொடங்கினார் கெல்லர்.

மில்டனின் காதல் ததும்பும் கவிதை ஒன்று :

அறுபது வருடங்களில் காதலை
கதைத்துவிட முடியாது என கற்றுக்கொண்டேன்

பிரியம் சொல்லும் பெருஞ்சொற்கள் பிரிந்தே ஏமாற்றம் தருகின்றன

எது அது எனும் கேள்விகள் தவிர்த்து

மலர்வனத்தின் ரோஜா நறுமணம் போல பொழிகிறது அது…

நீ போய்விட்டாய்

பெருங்கடலும்,கண்டமும் நடுவில்
நின்று நகைக்கின்றன

நாம் இணைந்து பார்த்த எல்லாவற்றில் இருந்து
எதோ சில ஏனோ திரும்பவருகின்றன

வென்ற ஒரு புது படைப்பை பின்னுகிறோம் நாம்
விசித்திரமான,விரகம் தரும் ஒன்று நடக்கிறது

எதிர்த்தும்,வாதிட்டும் வதைந்த
வாழ்க்கையின் சிக்கல்கள் உடைத்து விடுதலை வருகிறது

பெருவாழ்வின் புதுகீதம் பாடுவோம் நாம் :
கடவுள் பின்னும் இழைகளில் பிணைந்த
புத்துலகு பிறந்தது,அதன் பிரிக்க முடியா அங்கம் நாம் !