Gully Boy – ‘தெருவோர கீதங்களின் நாயகன்’


 

Gully boy​ திரைப்படம் தேவதைக்கதை தான். மும்பையின் குடிசைப்பகுதியில் பிறந்து வளரும் இஸ்லாமிய இளைஞர் ஒருவரின் இசைக்கனவுகள் என்னாகின என்பதை ‘rap’ பின்னணியில் சொல்லியிருக்கிறார் Zoya Akhtar​. கவித்துவ வரிகளும், ‘rap’ இசையும் படம் முழுக்க வந்து நம்மை துல்லியமாக விவரிக்க முடியாத அனுபவத்திற்குள் தள்ளுகின்றது.

ரன்வீர், ஆலியா இருவரும் வெவ்வேறு வகையில் திரையில் நம்மை ஆட்கொள்கிறார்கள். கனவுக்கும், உண்மைக்கும் இடையே அல்லாடும் பாத்திரத்தில் தயங்கி, தயங்கி ரன்வீர் பொருந்தி கொள்கிறார். வேகமும், மிகைத்த பிரியமும் மிக்க அவருடைய காதலியாக ஆலியா ரசிக்க வைக்கிறார். அவரின் அசட்டையான நடிப்பும், அதட்டும் உடல்மொழியும் அத்தனை அழகு.

‘குனிந்தே இருப்பது தான் நம்முடைய விதி’ என்கிற தந்தையும், அதனை இல்லையென்று மறுதலிக்கிற மகனும் உரையாடிக்கொள்ளும் காட்சி திரைப்படத்தின் உச்சம் எனலாம். அது கனவுக்கும், வீட்டின் நிலைக்கும் இடையே அல்லாடும் இளைஞர்களின் உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது.

இசையால் மட்டுமே இப்படத்தில் போர்கள் நடக்கின்றன. வன்முறை என்பதைக் குடும்பம் மட்டுமே இதில் கையாள்கிறது. இக்கதையில் வரும் பெண்கள் தங்களின் ஆதங்கத்தை, ஆற்றாமையை வெளிப்படுத்துகிற கணங்கள் சிறப்பானவை. ‘உடலுறவில் என்னை நீ திருப்திப்படுத்தல. அதான் இன்னொருத்தி’ என்கிற கணவனிடம், ‘ஆமாம் உனக்கு என்னைக்குத்தான் எப்படி என்ன தொடணும்னு தெரிஞ்சுருக்கு’ என்று மனைவி இரைகிறாள். கணவன் மிரண்டுபோய் நிற்கிறான்.

Image may contain: 1 person, text

குடிசைக்கும், கோபுரத்திற்கும் இடையே உள்ள தூரத்தை அடையவே முடியாது என்று நம்புகிறவர்கள் தங்களுடைய பிள்ளைகள் எத்தனிக்கிற போது பலநூறு அஸ்தமனங்களைக் கண்ணுற்ற அவநம்பிக்கையோடு வாழத்த மறுக்கிறார்கள். திருமணமும், வயிற்றுப்பாடும் அச்சுறுத்தும் இஸ்லாமிய பெண்ணும், ஆணும் அமைதியாகவே இவற்றை எப்படி வெல்கிறார்கள் என்பதைத் திரைக்கதை சுவாரசியமாக விவரிக்கிறது. அதிலும் முக்கியமாக உன்னுடைய வாழ்க்கையை நீயே எழுதிப்பாடு என்கிற வரிகளும், ‘உன் உணர்வுகளை நீ பாட அஞ்சுகிறாய் என்றால் நான் மட்டும் ஏன் அதனை உச்சரிக்க வேண்டும் நண்பனே.’ எனும் கேள்வியும் எதிரொலித்த வண்ணம் இருக்கிறது.

இந்தக் கதையின் இசையும், அசலான ‘rap’ கலைஞர்களும் பெரும்பலம் என்றால், இந்திக்கே உரிய கமர்ஷியல் கதை சொல்லல் பின்னடைவு. தற்காலத்தின் வன்முறை, ஒதுக்கல், வெறுப்பு ஆகியவற்றையும், ஏற்றத்தாழ்வுகள் எப்படிச் சக மனிதரின் கண்ணீரை துடைக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் இசையோடு இழைத்துத் தந்திருக்கிறார் ஜோயா அக்தர். ‘நமக்கான காலம் வரும்’ என்கிற வரி தான் படத்தின் கருப்பொருளும், கதை சொல்லலும். ‘நீ ஒரு கலைஞன்’ என்று கண்கள் நிறையச் சொல்லும் பெண்ணின் லட்சியவாதம் நம்மையும் சற்றே வருடும் படம் ‘gully boy’.

இந்தி முதல் இன்றுவரை – வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவது !


வரலாறு என்றாலே வருடங்களும், கடுப்பேற்றும் பெயர்களும் என்று நம் மனதில் பதிந்து போயிருக்கிறது இல்லையா? வரலாறு என்பது விறுவிறுப்பான ஒன்று என நம்ப முடிகிறதா? எதுக்காக வரலாறு எல்லாம் தெரிஞ்சுக்கணும் என்று கடுப்பாக கேட்டிருக்கிறீர்களா? ஒரு மூன்று மணி நேரத்தை மட்டும் கடன் கொடுங்கள். அப்புறம் பாருங்கள்:


Bored of textbook history? Ever wondered why history is important? Why history cannot be left unexplored? Fascinating, riveting journey guaranteed. Do lend your ears.

வரலாறு குறித்த மிக எளிய, வசீகரிக்கும் உரை இது என என்னால் சொல்ல முடியும். ஏன் இந்தித்திணிப்பை தமிழகம் எதிர்க்கிறது? அடையாள அரசியல் வரலாற்றில் எப்படி இருக்கிறது? வன்முறையும், அடையாளமும் குறித்து எப்படிப் புரிந்து கொள்வது? கடந்த கால வரலாற்றைக் கொண்டு நிகழ்காலத்தைத் தீர்மானிப்பது ஏன் ஆபத்தானது? ஔரங்கசீப் எப்படிப்பட்டவர்? மொகலாயர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்களா? வரலாறைப் புரிந்து கொள்ள சில நூல்கள் போதுமா? இந்தி முதல் இன்றுவரை ஒரு பிரமிக்க வைக்கும் பயணம். வாருங்கள். 🙂
Image result for வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோம்
Why TN opposes Hindi imposition? What is the Link between identity and violence? What are the problems in dealing with today’s problems by taking inspiration from past? How to view legacy of Aurangzeb, Mughals? From medieval to modern times a magisterial journey. Lets hear 🙂

ராமர் பாலம் என்பது ராமர் கட்டியதா? இதிகாசங்களை வரலாறாகக் கருதலாமா? ஹிட்லர் கொண்டாடப்பட வேண்டியவரா? போஸ் மகத்தான தலைவரா? காந்தி போஸுக்கு துரோகம் செய்தாரா? ஏன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது? வரலாற்றின் வழியாக விடை தேடுவோம்.

Did Rama built Ram Sethu bridge? Can epics be treated as history? Why some people celebrate Hitler? Would we have been better had Bose succeeded? Did Gandhi betray Bose? Why Israel reigns supreme in middle east? Lets explore through the lens of history.

 
மதச்சார்பின்மைக்கும் மன்னர்களுக்கும் என்ன தொடர்பு? நேரு, அம்பேத்கர், பெரியார் சந்திக்கும் நெகிழவைக்கும் வரலாற்றுத் தருணம் எது? சாதியமைப்பு குறித்த அம்பேத்கரின் பார்வை என்ன? பெண்ணியமும் பெரியாரும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஏன் காந்தி இன்றைக்கும் தேவை? ஏன் ராணுவ ஆட்சி ஆபத்தானது? வாஜ்பாயி நேரு குறித்து என்ன நினைத்தார்? விறுவிறுவென ஒரு பயணத்திற்குக் காதுகொடுங்கள்.

Are our kings truly secular? There was a moment when Nehru, Ambedkar and Periyar met in making history. What was that momentous occasion? What are Ambedkar’s views on caste? Why is Gandhi’s non-violence still needed? Why military rule won’t suit India? What is the link between Periyar and Feminism? Vajpayee had something interesting to say about Nehru. What is that? A riveting, surprising travel through the pages of Indian history. Do hear.

 
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வைக்கொண்டு பொதுவாழ்வை அணுகலாமா? வ உ சியின் சாதனைக்கடலின் ஒரு துளியை உணர்வோமா? எம்ஜிஆர் எப்படி ஆட்சி புரிந்தார்? அது என்ன ‘Idea of India’? வரிசைகட்டும் வினாக்கள், அசரவைக்கும் பதில்கள். செவிமடுங்கள்.
 
 
 
 
அவசியம் வாசிக்க வேண்டிய சில வரலாற்று நூல்கள் என்ன? அமர்த்தியா சென் சொல்லும் ‘Country of First Boys’ யார்? இன்னும் இன்னும்… பள்ளிக்காலத்திற்குப் பிந்தைய புத்தக வாசிப்புப் பயணம் குறித்த ஒரு ஐந்து நிமிட சிற்றுரையும் உண்டு.

பெண் குழந்தையைப் பொத்தி வளர்ப்பவரா நீங்கள்? ‘தங்கல்’ திரைப்படத்தைப் பாருங்கள்!


ஹரியானாவின் கதை இந்தியாவின் பெரும்பான்மை பெண்களின் கதையும் உண்டு. ஹரியானாவில் ஆண்:பெண் விகிதாசாரம் இந்தியாவிலேயே குறைவான ஒன்று. குழந்தைத் திருமணங்கள் அங்கு அன்றாட யதார்த்தம். காப் பஞ்சாயத்துகள் எனப்படும் வடநாட்டு கட்டப் பஞ்சாயத்துகள் நவ நாகரீக ஆடை அணிகிற பெண்களைத் தண்டிப்பது, சாதி அமைப்பை வலுவாகத் தூக்கிப் பிடிப்பது, ஆணவப் படுகொலைகளைக் கூட்டாகச் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்கிறவை. ‘முட்டிக்குக் கீழ்தான் மூளை’ என அந்த மாநில ஆட்களை எள்ளி நகையாடுகிற அளவுக்கு நிலைமை மோசம். அப்படிப்பட்ட ஊரில் இருந்து தன்னுடைய மகள்களை மகத்தான சாதனைகளை நோக்கி நகர்த்தும் ஒரு தந்தையின் நிஜக்கதைதான் தங்கல்.

(கதையின் நெகிழ்வான தருணங்கள் இங்கே பேசப்பட இருக்கிறது. படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் படிப்பதை தவிர்க்கலாம்.)

ஒரு பெண்ணை எப்படி வளர்ப்பது? கண்ணின் மணியாக, கோழி தன்னுடைய குஞ்சை அடைகாப்பது போல வளர்ப்பது தான் பெரும்பாலான குடும்பங்களின் மனப்போக்கு. “ஐயே பொட்டப்பொண்ணு!” எனப் பல குடும்பங்கள் கதறுவது ஊரக இந்தியாவின் உண்மை முகம். காரணம் வரதட்சணை கொடுத்துப் பெண்ணை எப்படியேனும் கட்டிக் கொடுப்பது என்பதே அந்தப் பெண்ணுக்குத் தாங்கள் செய்யக்கூடிய மகத்தான சேவை என்று பதிய வைக்கப்பட்டு இருக்கிறது.
தன்னளவில் நிராசையான இந்தியாவிற்குச் சர்வதேச பதக்க கனவை தன் மகள்களின் வழியாகச் சாதிக்க நினைக்கும் மகாவீர் சிங்கிடம் அவரின் மனைவி கேட்கிறார்,
“இப்படிக் கிராப் வெட்டி ஆண் பிள்ளைகள் போல ஷார்ட்ஸ் போட்டு வளர்த்தால் எந்தப் பையன் கட்டிப்பான்?”

Image may contain: 5 people, people standing

“என் பொண்ணுங்களுக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு அலைய மாட்டேன். அவங்களைத் தைரியமா, நம்பிக்கையுள்ளவங்களா வளர்ப்பேன். அவங்களுக்கான மாப்பிளைகளை அவங்களே தேடிப்பாங்க.” என்று அந்த மல்யுத்த நாயகன் சொல்கையில் சிலிர்க்கிறது.

பெண்கள் வெளியிடங்களில் புழங்குவதே பெரும்பாலும் தடுக்கப்பட்ட மாநிலத்தில் ஆண்களுடன் மகளை மல்யுத்தம் செய்ய வைக்கிறார். ஊரே எள்ளி நகையாடுகிறது. வகுப்பில் ஆண் பிள்ளைகள் சீண்டுகிறார்கள். ஆனால், தேசியளவில் தங்கப் பதக்கத்தை ஜெயித்து வருகையில் ஊரே திரண்டு தங்களின் மகளாக வாரியணைத்துக் கொள்கிறது.
பெண்களை அழகுக்காக மட்டுமே ஆண்கள் ரசிப்பார்கள் என்பது பொதுபுத்தி. சமீபத்தில் பி.சாய்நாத்தின் ‘PARI’ தளத்துக்காகப் பருத்தி வயல்களில் இருந்து பாராலிம்பிக்ஸ் நோக்கி என்கிற கட்டுரையை மொழிபெயர்த்தேன். அதில் வளர்சிக் குறைபாடு உள்ள அம்பிகாபதி எனும் பெண் தேசிய அளவில் சாதித்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்படிப் பதிவு செய்திருந்தார்: “எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே ஊரில் இருக்கிறது. ஒவ்வொருமுறை வெற்றியோடு அவர் திரும்புகிற பொழுது எண்ணற்ற கட்டவுட்களுடன் எங்க ஊரின் ரசிகர்கள் (பெரும்பாலும் ஆண்பிள்ளைகள்) வரவேற்கிறார்கள். “ புற அழகைத் தாண்டி அளப்பரிய சாதனைகள் சார்ந்தும் சமூகம் கொண்டாடும் என நம்பிக்கை தரும் தருணங்கள் அவை.

மகாவீர் சிங் பெண்ணியவாதி இல்லை. அவரின் மனைவியை வீட்டு வேலைகளே செய்ய வைக்கிறார். போயும், போயும் பெண் குழந்தை பிறந்ததே என்று முதலில் வருந்துகிறார். “எதுனாலும் தங்கம் தங்கம் தான்” எனத் தெருச்சண்டையில் மகள்கள் ஈடுபடும் பொழுது உணர்கிறார். எதிர்த்து ஆட பெண்கள் இல்லாத களத்தில்,, ஆண்களோடு மோதவிட்டு வார்த்து எடுக்கிறார். வாய்ப்புகள் இல்லை, வீட்டை விட்டு எப்படி வெளியே அனுப்புவது என அஞ்சும் பெற்றோர்கள் அந்தக் காட்சியில் விழித்துக் கொள்ளலாம்.

தந்தைக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மகாவீர் சிங் ‘எந்தத் தேர்வும் எனக்கு இல்லை.’ என்று வயிற்றைக் கழுவ வேலையில் தன்னுடைய மல்யுத்த கனவுகள் மலர்ந்த காலத்தில் தங்கிவிட்டார். அவரின் சர்வதேச கனவுகள் சாம்பலானது. மகள் சாதிக்கிறாள் என்று தெரிந்ததும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு மல்யுத்தம் செய்கிறார்.

இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது. போதுமான வாய்ப்புகள் இன்மை, ஏளனம், வறுமை என்று பலவற்றை ஆண் வீரர்களைப் போல அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் இவை அனைத்துக்கும் மேலே மகாவீர் சிங் சொல்வதைப் போல, “கேவலம் பொண்ணு” என்று பார்க்கும் சமூகத்தின், ஆண்களின் அன்றாடப் போரை எதிர்த்து கத்தி சுழற்றிய தங்கங்கள் அவர்கள்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கறிக்கடை பாய் கோழிக் கறியை குறைந்த விலையில் மகாவீர் சிங்கின் மகள்களுக்குத் தருகிறார். உச்சபட்ச காட்சிக்கு முன்னால் தன்னுடைய மகள்கள், “அப்பா அக்கா ஆடுறதை பாக்கணும்!” என்று கேட்டுக் கொண்டதற்காகப் பாய் அவர்களை வண்டியேற்றி அழைத்து வருகிறார். மகாவீர் சிங் சொல்கிறார், ‘மகளே! நீ நாளைக்கு நன்றாக ஆடவேண்டும்., உன்னை யாரும் மறக்கவே முடியாதபடி ஆடவேண்டும். உன் தங்கம் பல பெண்களை
அடக்குமுறைகளை, அடுப்படியைத் தாண்டி அடித்து ஆட உற்சாகப்படுத்தும்.’

Image result for dangal

சீதையைப் போல இரு, தமயந்தியைப் போல இரு, பெண்ணாய் இரு.” என்றெல்லாம் சொல்லாமல், ‘பி.டி. உஷாவைப் போல வா, அஞ்சு பாபி ஜார்ஜ் போல அசத்து, தீபிகா போல அடித்து ஆடு, சிந்து போல பெருமை தேடித் தா, சானியா போல சரித்திரம் படை.’ என ஊக்குவிக்க படம் சொல்லித் தருகிறது.

நிஜ நாயகன் மகாவீர் சிங்குக்கும், கீதா, பபிதா எனும் தங்கத் தாரகைகளுக்கும், அமீர் கானுக்கும், இந்தப் படக்குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விளையாட்டுகளின் மீதும், பெண்களைப் பொத்தி வளர்க்கும் போக்கை மாற்றிக் கொள்ளவும் இந்தப் படம் ஊக்கப்படுத்தும்.

எளிமையான வாழ்க்கையைக் கேட்காதீர்கள், எதிர்த்து போராட மகள்களுக்குச் சொல்லித் தாருங்கள். பஞ்சு மெத்தையில் மடியில் படுக்க வைக்காதீர்கள். மண்ணில் மிருகங்களோடு வாழவேண்டிய நிலையில் நம்பிக்கை தாருங்கள். ஆடைகளிலும், முடியிலும், பெண்ணின் ஆடம்பரத் திருமணத்திலும் இல்லை குடும்பத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கிறது இந்தப் படம்.

மொழி அரசியல் பகுதி-5 மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள்


மொழி அரசியல் இயக்கங்கள், உருது சார்ந்த உறுத்தல்கள் :

மதம், மொழி என்பதைச் சார்ந்து அரசியல் அணியாகப் பல்வேறு குழுக்கள் திரள்கிறார்கள். இந்தியாவில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் மொழிச் சிக்கல்கள் இருந்தாலும் ஆங்கிலேய அரசு மதம் சார்ந்த அடையாளங்களைக் கொண்டே அதிகாரப் பிரிப்பை மேற்கொண்டதால் மத அரசியல் மொழி அரசியலை பின்னுக்குத் தள்ளியது. விடுதலைக்குப் பின்னால் நாற்பத்தி ஏழு வழக்கு மொழிகள், வட்டார வழக்குகள் எல்லாவாற்றையும் இணைத்து கரிபோலி என்கிற இந்தி வடிவத்தின் ஆதிக்கத்துக்குள் ஆட்படுத்தும் அரசியல் நடைபெற்றது. இந்த இந்தி சம்ஸ்கிருதமயமாக ஆக்கப்பட்டது.

விடுதலைக்கு முன்னால் உருதை முன்னெடுக்கும் அரசியலை மேற்கு ஐக்கிய மாகாணத்தில் (தற்போதைய உத்திர பிரதேசம்) பலமாக வேரூன்றி இருந்த இஸ்லாமிய இயக்கமான தியோபந்த்தும், அதன் அரசியல்-கலாசார இயக்கமான ஜமாத்-இ-உலமா-இ-ஹிந்த் அமைப்பும் மேற்கொண்டன. எனினும், இவை இரண்டும் தேசிய இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவையாக, காங்கிரஸ் சார்பாக இருந்ததால் உருது மொழியைப் பிரிவினையோடு இணைப்பது முழுக்கச் சரியல்ல.

பனராஸ் இந்து பல்கலையை உருவாக்கிய மதன் மோகன் மாளவியா ஹிந்தி சாஹித்திய சம்மேளனத்தை நிறுவினார். இந்து மதம், அதன் நூல்கள் ஆகியவற்றைப் பிரபலப்படுத்தும் நோக்கம் ஒருபுறம் என்றால், பாரசீகம்-அரேபிய மொழிகளால் அசுத்தமானதாக அவர்கள் கருதிய இந்தியை சம்ஸ்கிருதமயத்தின் மூலம் தூய்மைப்படுத்தினர். இந்தி-உருது சிக்கல் இந்து-முஸ்லீம் பிரச்சனையாக வடக்கில் கட்டமைக்கப்பட்டது. தெற்கில் நிலைமை வேறாக இருந்தது. மொழி அந்நியர்கள் என்று உருது மொழியை வடக்கில் சொன்ன பிராமணர்கள் தெற்கில் அந்நியர்கள் என்றும், அவர்களின் வடமொழி அன்னியம் என்றும் திராவிட இயக்கத்தால் வலியுறுத்தப்பட்டது. பார்ப்பனிய, சம்ஸ்கிருத கலாசாரம் அந்நியமானது என்று இங்கே அடையாளப்படுத்தப்பட்டது.

வடநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட இந்தியைக் கொண்டு இந்து-முஸ்லீம் தொடர்பு கொள்ளலில் இருந்ததாகத் தூய்மைவாதிகள் சொல்லிக்கொண்ட தடையை வட்டார வழக்குகள், பிற பேசு மொழிகள் ஆகியவற்றை இணைத்து நிலைநிறுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ இந்தியின் மூலம் சரி செய்ய முயன்றார்கள். எனினும், இந்து-முஸ்லீம் வேற்றுமை இப்படிப்பட்ட முயற்சிகளால் அதிகப்படவே செய்தது. இதைவிட மோசமாக, இஸ்லாமியர்களின் மொழியாக மட்டுமல்லாமல் எண்ணற்ற இந்துக்களின் மொழியாகவும் இருந்த உருது மொழியைக் காலங்காலமாக உருது மொழியைப் பேசாத பிற பகுதி இஸ்லாமியர்கள் தங்களின் மொழி என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியும் காரியம் நிகழ்ந்தேறியது. உருது மொழியை இஸ்லாமியர்களோடு தொடர்பு படுத்தும் செயல் இப்படி உச்சத்தைக் கவலைக்குரிய வகையில் எட்டியது.

ஒரு மொழியைப் பிடிக்கவில்லை என்றால் என்ன சிக்கல் என்று சிலர் கேட்கலாம். தமிழகத்தின் முதல்வராக இருந்த பக்தவத்சலம் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற பொழுது பேசியது நகைமுரணாக இதற்குப் பதில் தரும், ‘ஒரு மொழியை ஒருவர் வெறுக்கிறேன் என்று சொன்னால் அதைப் பேசுகிறவர்களை வெறுப்பதாகவே பொருள். இது ஒரு மொழி, அதைப் பேசுபவர்கள் மீதான வெறுப்பை நாசூக்காக வெளிப்படுத்துவது ஆகும். அதிலும் இந்தியில் வளமை இல்லை என்று மறைமுகமாகக் கருதுவதன் வெளிப்பாடு இது.’ என்று அவர் சொன்னார். வடநாட்டின் மொழி இயக்கம் மதங்களைக் கொண்டு பிளவுபடுத்திய பொழுது, தெற்கில் நடைபெற்ற மொழி இயக்கம் தாங்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் என்று பெருமைகொண்ட எல்லா மதத்தவரையும் இணைத்துக் கொண்டு செயலாற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது.
தெற்கில் அதிகாரத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பிராமணர்களைப் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் சுலபமாக அந்த இடங்களை விட்டு நகர்த்தியதால், வடக்கைப் போல வன்முறைகள் எதுவும் அவர்கள் மீது நடக்கவில்லை.

பால் பிராஸ் ஒரு மொழிக்காக மக்கள் தங்கள் உயிரைக் கொடுப்பார்கள் என்பதை தான் நம்பவில்லை என்று சொல்கிறார். எண்ணற்ற காரணிகள் இணைந்து அவற்றை மொழியின் பெயரால் எதிர்ப்பதே நடப்பதாக அவர் கருதுகிறார். மொழியியல் அறிஞரான அண்ணாமலை தமிழகத்தில் தாய்மொழிக்காக வேறு எதையும் எதிர்நோக்காமல் உயிரைவிட்ட எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லி மொழிக்காக அப்படிப்பட்ட தியாகங்கள் நிகழ்வது சாத்தியம் என்று பதில் தருகிறார்.

சம்ஸ்கிருதத்தை மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொல்லப்படுவதைப் போல நிச்சயம் ஐம்பாதாயிரம் பேர் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. மேலும், அம்மொழியைத் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாகவே இருக்கும். எனினும், மேட்டுக்குடி இந்தியாவின் இந்து கலாசாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றின் அடையாளமாக அது திகழ்வதால் எட்டாவது அட்டவணையில் அதற்கு இடம் தரப்பட்டது.

அதே போலப் பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த சிந்திக்கள் சிந்தி மொழியைப் பேசினார்கள். இவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களாக, அதிகக் கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தார்கள். சிந்திக்கள் தங்களின் பிழைப்புக்கு இந்தி, ஆங்கிலம் கற்றாலும் தங்களுக்கு என்று தனியான ஒரு பகுதியை கேட்டுப் போராட்டம் செய்யாவிட்டாலும் எட்டாவது அட்டவணையில் ஒரு மொழியாகத் தங்கள் மொழியைச் சேர்க்க வேண்டும் என்று போராடினார்கள். அது தங்களைத் தனித்து அடையாளப்படுத்தும் ஒரு செயலாக அவர்கள் உணர்ந்தார்கள். அதனால் அரசுக்கு எந்தச் செலவும் இல்லை என்பது ஒருபுறம், இன்னொருபுறம் சிந்த் மாகாணத்தை இந்தியாவை விட்டுப் பிரித்தது தவறு என்பதைச் சூசகமாக உணர்த்தும் அரசியல் லாபம் இந்திய அரசுக்கு இருந்தது.

மூன்றாவதாக மைதிலி மொழியை எட்டாவது பட்டியலில் சேர்க்க ஒரு காலத்தில் போராட்டம் நடந்து பிசுபிசுத்துப் போனது. ஆனால். பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பொழுது பீகாரில் உள்ள பிராமணர்கள் பேசும் மொழியை மைதிலியை எந்த வேண்டுகோளும் இல்லாமலே எட்டாவது அட்டவணை மொழியாகச் சேர்த்தார்கள். பீகார், உத்திர பிரதேசத்தில் உருது மொழி சார்ந்து நடந்த அரசியல் காய் நகர்த்தல்கள் அடுத்தடுத்த பத்திகளில் இப்பொழுது காண்போம்.

இந்தியாவில் எட்டாவது பட்டியலில் மொழியாக உருது சேர்க்கப்பட்டு இருந்தாலும், அது பீகார், உத்திர பிரதேச பகுதிகளில் பரவலாகப் பேசப்பட்டாலும் அதை அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக அரசுகள் அறிவிக்கவில்லை. ஜனதா அரசின் ஆட்சி கவிழ்ந்த பிறகு வந்த பீகார், உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் உருது மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிப்பதாகக் காங்கிரஸ் (இ) வாக்குக் கொடுத்தது. இது குறித்துச் சமர்பிக்கப்பட்டு இருந்த குஜ்ரால் அறிக்கையைச் செயல்படுத்துவதாகக் கோடிட்டிருந்தது. இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெறப் போடப்பட்ட கணக்கு என்று சொல்லவேண்டியதில்லை.

பீகாரில் ஜெகந்நாத் மிஷ்ரா முதல்வராக இருந்தார். மைதிலி பிரமாணரான அவர் தன்னுடைய ஜாதியினரை உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்குவதை எதிர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மைதிலி மொழியினருக்குச் சலுகைகள் வழங்கி இரண்டு மாங்காய்களைப் பறித்தார். இதற்கு முன்னர் உருதை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற முயன்ற பொழுது ஜனசங்கம் பீகாரில் போர்க்கோலம் பூண்டது என்றாலும்,தற்போது பாஜக வேடிக்கை பார்த்தது. உருதை அதிகாரப்பூர்வ மொழியாக்க 67-ல் முயன்ற பொழுது 15௦ பேர் கலவரங்களில் இறந்தார்கள். உருதுக்கு எதிராகப் போராட்டங்கள் எண்பதில் ஓரளவுக்கு வெடித்த பொழுது பத்து பேர் இறந்தார்கள். அன்ஜூமன்-தாரீக்-இ-உருது அமைப்பு உருதை அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்குவதில் தீவிரமாக இயங்கியது.

உத்திர பிரதேசத்தில் இப்படிப்பட்ட உருதை அதிகாரப்பூர்வ இரண்டாவது மொழியாக ஆக்கும் முயற்சி வெற்றிபெறவே இல்லை. எண்பத்தி ஒன்றின் டிசம்பர் மாதத்தில் தன்னுடைய கட்சி சகாக்கள், பிரதமர் ஆகியோரின் அனுமதியில்லாமல் உருதை வி.பி.சிங் அதிகாரப்பூர்வ மொழியாக ஆக்க முயன்று கடும் எதிர்ப்பை சம்பாதித்தார். அதிகாரப்பூர்வ என்கிற சொல்லை நீக்கி இரண்டாவது மொழி என்றாவது ஆக்கலாம் என்று முயன்றார். அவர் கொண்டுவந்த அவசரச்சட்டம் லக்னோ உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் முதல்வர் ஸ்ரீபதி மிஸ்ராவும் வி.பி.சிங் வழியில் இரண்டாவது மொழியாக மட்டும் உருது மொழியை மாற்ற அவசரச்சட்டம் கொண்டு வர கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது.

அதற்கு அடுத்து என்.டி.திவாரி முதல்வரானார். ராஜீவ் காந்தியின் இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்தும் போக்குக்கு வலுசேர்க்க அவர் பழைய ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவரும் அதே இரண்டாவது மொழி முயற்சியை மேற்கொண்டார். இந்தமுறை நிலைமை மோசமானது. உருதை ஆதரித்து ஒரு கல்லூரி மாணவர்களும், எதிர்த்து இன்னொரு கல்லூரி மாணவர்களும் பதவுன் நகரத்தில் ஊர்வலம் போய்ச் சந்தித்துக் கொள்ள அரசு கணக்கின்படி 26 பேர் இறந்து போனார்கள். இன்னமும் உருது அதிக மக்களால் பேசப்பட்டும் மாநில அரசால் அங்கீகரிக்கப்படாமல் உத்திர பிரதேசத்தில் இருக்கிறது.

முலாயம் சிங் யாதவ் உத்திர பிரதேச முதல்வர் ஆனபொழுது விபி சிங்கின் ஜனதா அரசை மூன்று காரணங்களுக்காக வெறுப்பதாகச் சொன்னார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது, ஆங்கிலத்தை ஆதரித்துச் செயல்பட்டது, தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் காப்பி அடித்துத் தேர்ச்சி பெறுவதற்கு எதிரான விபி சிங்கின் பார்வையே என்று அவர் சொன்னார். அவர் ‘அங்க்ரேஸி ஹட்டாவ்’ (ஆங்கிலமே வெளியேறு) என்கிற முழக்கத்தைத் தந்தார். ஆங்கிலம் ஆதிக்க சக்திகளின் மொழி என்றும், அது மாநிலத்தை விட்டு வெளியேறி அந்த இடத்தை இந்தி பெறவேண்டும் என்றும், வெவ்வேறு மாநில அரசுகள் தங்களுக்குள் தத்தமது மொழியில் தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பது அவரின் பார்வை.

லாலு இதற்கு மாறான பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆங்கிலம் கற்பதன் மூலமே முன்னேற முடியும் என்று அவர் ஆங்கிலம் கற்பித்தலை அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கினார். அதைப் போல இஸ்லாமியர்களின் ஓட்டுக்களைப் பெற பாகல்பூரில் யாதவர்கள் இஸ்லாமியர்களைக் கலவரத்தில் கொன்றது போல இனிமேல் நடைபெறாது என்று உறுதி தந்தார். உருதும் அதன் இடத்தைப் பீகாரில் தொடர்ந்து பெற்றது. மைதிலி பிராமணர்களின் மொழியான மைதிலி அரசுப்பணிகளுக்குத் தேர்வு எழுதும் பட்டியலில் இருந்து லாலு அரசால் நீக்கப்பட்டது.

 

உருது மொழி உத்திர பிரதேசத்தில் தனக்குரிய இடத்தைப் பெறமுடியாமல் நிற்பது ஒரு முரண் என்றால், காஷ்மீரில் பெரும்பான்மை மக்களின் தாய்மொழியாக இல்லாத உருது அங்கே அதிகாரப்பூர்வ மொழியாக ஆதிக்கம் செலுத்துவது இன்னொரு கதை. காஷ்மீரில் மக்களால் பேசப்படும் மொழிகள் என்று கணக்கு போட்டால் காஷ்மீரி, டோக்ரி, கோஜ்ரி, மேற்கு பஹரி, இந்துஸ்தானி, பொத்வாரி, பால்ட்டி, லடாக்கி., ஷினா, புருஷாஸ்கி என்று பட்டியல் இறங்குவரிசையில் நீளும். இதில் காணப்படாத உருது தான் ஆனால் காஷ்மீர் அரசால் வளர்க்கப்படுகிறது.

ஒரு வினோதமான அம்சம் என்னவென்றால் பஞ்சாபில் இந்துக்கள் பஞ்சாபியை மொழியைப் பேசிய பொழுதும், தாங்கள் இந்தி மொழி பேசுவதாகக் கணக்கெடுப்புகளில் கூறினார்கள். கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் முஸ்லீம்கள் உருது மொழியில் பேசுவதாகக் கணக்கை கூட்ட பொய் சொல்வது நடந்தது. காஷ்மீரிலோ இஸ்லாமியர்கள் தங்களுடைய தாய் மொழியான காஷ்மீரை நேர்மையோடு பதிவது நிகழ்கிறது. ஷேக் அப்துல்லா நாற்பத்தி நான்கில் காஷ்மிரி, பால்டி, டார்டி, டோக்ரி, பஞ்சாபி, பஹரி, லடாக்கி முதலிய மொழிகளைக் காஷ்மீரின் தேசிய மொழிகளாகவும், உருதுவை இணைப்பு மொழியாகவும் ஆட்சிக்கு வந்தால் மாற்றுவதாக அறிவித்தார்.

காஷ்மீரில் உயர்கல்வியில் காஷ்மீரி மொழிக்கு இடமில்லை. பாடப்புத்தகங்கள் கூடக் காஷ்மீரி மொழியில் கிடைப்பதில்லை. காஷ்மீரி மொழியிலோ, இன்னபிற சிறுபான்மை மொழிகளிலோ செய்தித்தாள்கள் வருவதும் அரிதான ஒன்றாகவே உள்ளது. காஷ்மீரி மொழி சாரதா வரிவடிவத்தில் எழுதப்படுவது, அதைக் காஷ்மீரி பண்டிட்கள் நாகரி வரிவடிவத்தில் எழுதுவார்கள். இரண்டு வரிவடிவங்களையும் காஷ்மீர் அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அதோடு, எல்லா முக்கியத் தகவல் தொடர்பும் இந்தி, ஆங்கிலம், உருது ஆகியவற்றிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரி மொழிக்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைவாகவோ, செலவு செய்யப்படாமலோ இருக்கிறது. எட்டாம் வகுப்புவரை காஷ்மீரி மொழியைக் கட்டாயமாக்கும் முயற்சியும் ஓரளவுக்கே வெற்றி பெற்றுள்ளது.

திபெத்திய மொழியின் கிளையான லடாக்கி மொழிக்கு வரிவடிவம் இருந்தும் லடாக் பகுதியில் உருது பயிற்றுமொழியாகத் திணிக்கப்பட்டது. திபெத்திய மொழியின் ஒரு பிரிவான பல்டி மொழியும் இந்தியாவின் வசமுள்ள காஷ்மீர், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் இரண்டு பக்கமும் உருது மொழியால் ஆதிக்கத்துக்கு உள்ளாகி காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. பூன்ச், ரஜவுரி மாவட்டங்களில் நான்காம் வகுப்பு வரை கோஜ்ரி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. பஹரி மொழிக்கும் காஷ்மீர் அரசுகள் சில சலுகைகளை வழங்குகின்றன. இந்தக் கொள்கையை வரிக்கூ எனும் பேராசிரியர் காஷ்மீரை இஸ்லாம் மயமாக்கும் வேலையே என்று கருதுகிறார். அரசியல் அறிவியல் அறிஞர் பால் பிராஸ் இதற்கு மாறாக வேலைவாய்ப்புகள் அருகியும், இந்தியாவில் இருந்தும் துண்டிக்கப்பட்டதாக உணரும் காஷ்மீரிக்களை மேலும் தகுதியுள்ளவர்கள் ஆக்கவும், இந்திய அரசுடனான தொடர்பு சுமுகமாக இருக்கவும் இந்த இந்தி, ஆங்கிலம், உருது எனும் மும்மொழிக்கொள்கை உதவுவதாகக் கருதுகிறார்.

மொழி அரசியல் பகுதி-2 ஏன் இந்தி தேசிய மொழி ஆகவில்லை?


இந்தியாவில் மொழி அரசியல் பகுதி 2:

மொழியும், அரசமைப்புச் சட்டமும்- அரை-மனதான சமரசம்!
கிரான்வில் ஆஸ்டின் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்படி அரை மனதான சமரசத்தை மொழிக்கொள்கையில் மேற்கொண்டது என்பதை விரிவாகப் பேசுகிறார். விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் இந்தி, உருது, பஞ்சாபி முதலிய பல்வேறு மொழிகளை இணைத்துப் பேசப்பட்ட ‘பஜார் மொழி’யான இந்துஸ்தானி கூட 45% மக்களாலேயே பேசப்பட்டது.

இந்தியா என்கிற தேசக் கருத்தாக்கத்துக்கு விடுதலைக்குப் பின்னர் ஒரு தேசிய மொழி வேண்டும் என்கிற கருத்தாக்கம் பலரிடம் நிலவியது. அதே சமயம், அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே ஒரு மொழியை இந்தியாவுக்கான மொழியாக்கும் அதீத முடிவை எடுக்கவில்லை.
சாமர்த்தியமாக இந்தியை ‘இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி’ என்று அறிவித்தார்கள். ஆங்கிலத்தை இணை அதிகாரப்பூர்வ மொழியாகப் பதினைந்து ஆண்டுகள் தொடரலாம். அதற்குப் பிறகு இந்தி அதன் இடத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும் அல்லது முந்தைய நிலையை நாடாளுமன்றம் தொடரலாம் என்றும் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆங்கிலம் நீதிமன்றம், அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை அடைவதற்கு முன்னர் நிகழ்ந்த போராட்டங்கள், விவாதங்கள், எதிர்ப்புகள் முக்கியமானவை.

இந்தி/இந்துஸ்தானி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலும் ஆங்கிலம் எத்தனை ஆண்டுகளுக்கு அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வது, மற்ற மொழிகளுக்கு என்ன இடத்தைக் கொடுப்பது என்பதில் பலத்த கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில் மூன்று சாரார் இருந்தார்கள். இந்தித் தீவிரவாதிகள் என ஆஸ்டின் அழைக்கும் முதல் பிரிவினர், பெரும்பாலும் இந்து தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்.

இவர்கள் பனராஸ், அலகாபாத்தில் உள்ள இந்து கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்கள். கோவிந்த தாஸ், தாண்டன், பாலகிருஷ்ண சர்மா ஆகியவர்கள் பண்டைய இந்து மன்னர்களின் ஆட்சியைப் போல வருங்காலம் அமையவேண்டும் என்று கனவு கண்டார்கள். தாண்டன் இந்து சீர்திருத்த சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜி.எஸ்.குப்தா ஆரிய சமாஜத்தில் தொடர்ந்து இயங்கிய இஸ்லாமிய வெறுப்பை விதைத்தவர். ரகுவீரா பிற்காலத்தில் மதவாத ஜனசங்கத்தின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டவர். எனினும் அளகுராய் சாஸ்திரி, வி.டி.திரிபாதி, எஸ்.எல்.சக்சேனா ஆகியோர் மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மட்டுமே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் அனைவரும் முழங்கினார்கள். மிதவாதிகள் இந்தி இந்தியாவின் முதன்மை மொழியாக இருந்தாலும், மற்ற மொழிகளும் சமமான இடத்தைப் பெறவேண்டும் என்று வாதாடினார்கள். நேரு இந்தப் பிரிவை சார்ந்திருந்தார், இதில் தான் வங்கம், மெட்ராஸ், பம்பாய் முதலிய பகுதிகளைச் சேர்ந்த ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகக் கொண்ட உறுப்பினர்களும் இருந்தார்கள்.

இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழி என அழுத்தி வாதிட்டு இந்தியாவைப் பிளவுபடுத்தினாலும் பரவாயில்லை என்பது போன்ற பார்வையையே இந்திவாலாக்கள் பிரதிபலித்தார்கள். இவர்கள் ஆங்கிலம் இந்திய தேச விடுதலைக்கு எதிரானது என்பதால் அதனைத் தேசிய மொழியாகக் கொள்ளவே முடியாது என்று வாதிட்டார்கள். அதனதன் தளத்தில் அந்தந்த மொழியைப் பயன்படுத்துவோம் என்றார்கள் மிதவாதிகள். இந்தியை தேசிய மொழியாக ஆக்காவிட்டாலும், உருது மொழியால் வளப்பட்டிருந்த இந்தி மொழியை அரசு பயன்படுத்துகிற பொழுது சம்ஸ்கிருத சொற்களையே பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் பிரிவை சேர்த்தார்கள். மிதவாதிகள் இந்தியாவின் பன்மையான கலாசாரம், இந்துஸ்தானியில் காணப்படும் வடிவங்கள், பாணி, வெளிப்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இந்தி அமையவேண்டும் என்கிற வரியை சேர்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்கள்.

பாகிஸ்தான், கனடா, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்திலும் பல்வேறு மொழிகள் புழக்கத்தில் உள்ளன என்றாலும் அங்கே நிலவரம் இவ்வளவு சிக்கலானது இல்லை. பாகிஸ்தான் பெரும்பான்மை மொழிகளை விடுத்து உருது மொழியை தேசிய மொழியாகத் திணித்தது. கனடா, தென் ஆப்ரிக்காவில் மக்கள் தொகையும் , மொழிகள் எண்ணிக்கையும் இந்தியாவோடு ஒப்பிடும் பொழுது குறைவே! இவ்விரண்டு நாடுகளிலும் இரண்டு மொழிகளே பிரதான மொழிகள். சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்று மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

காந்தி இந்திய விடுதலைக் களத்துக்குள் வந்த பொழுதே, ‘இந்தியை தேசிய மொழிக்கான இடத்தையும் , மற்ற பிராந்திய மொழிகளை அவற்றுக்கான இடத்தை மக்களின் வாழ்வில் தராவிட்டால் சுயராஜ்யம் என்பது முழுமையடையாது என்பது என்னுடைய அடக்கமான, ஆனால், உறுதியான கருத்தாகும்.’ என்றார். காந்தியின் தலைமையில் மக்களின் மொழிகளைத் தன்னுடைய கூட்டங்களின் அலுவல் மொழியாகக் காங்கிரஸ் மாற்றியது. காக்கிநாடா காங்கிரசில் இந்துஸ்தானியிலேயே கட்சியின் அலுவல்கள் முடிந்தவரை நடைபெற வேண்டும் என்று கட்சிச்சட்டம் மாற்றப்பட்டாலும் ஆங்கிலத்தைப்
பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

மோதிலால் நேருவின் அறிக்கை இந்தியாவின் பொது மொழியாக இந்துஸ்தானி ஆகவேண்டும் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டது. நேரு காந்தியைப் போலவே அந்தந்த பகுதி மக்களின் வளர்ச்சி தங்களின் தாய்மொழியால் கற்பதன் மூலமே சாத்தியம் என்று சொன்னார். ஆங்கிலத்தின் முந்தைய தொடர்புகள், தற்போதைய தேவையால் அதனைத் தவிர்க்க முடியாது என்று நேரு நடைமுறை உணர்ந்து கருதினார். இந்துஸ்தானி இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று காந்தி நூறு முறை சொல்லியிருப்பார். நேருவும் அதுவே இந்தியாவின் தேசிய மொழியாகும் என்று கருதினார். ஏன் அப்படி? இந்துஸ்தானி சம்ஸ்கிருதமயமாக்கப்படாமல்,பாரசீகமயமாக்கப்பட்ட உருதுவாகவும் இல்லாமல் எல்லாப் பிராந்திய மொழிகளிலும் இருந்து வார்த்தைகளைப் பெற்று அம்மொழி வளரவே அவர்கள் கனவு கண்டார்கள்.

ராஜாஜி இந்துஸ்தானிய பிராந்திய மொழிகளின் வரிவடிவங்களில் எழுதுவதன் மூலம் அம்மொழியை வளர்க்க முடியும் என்று கருதினார். இந்திவாலாக்கள் இந்தி மொழியானது உருது, ஆங்கிலத்தை முழுக்க விலக்கி எழவேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். ஆனால், நேரு உட்படப் பல இந்துக்கள் உருதுவை தங்களின் தாய்மொழியாகக் கொண்டிருந்தார்கள். காந்தி தொடர்ந்து இந்துஸ்தானி மொழியே இந்துக்கள், இஸ்லாமியர்களை இணைக்கும் என்று கருதினார். நாற்பத்தி ஐந்தில் தாண்டன் இந்தி சாஹித்திய சம்மேளனத்தில் நாகரி வடிவத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதைத் தொடர்ந்தால் தான் அவ்வமைப்பில் இருந்து விலகுவதாக எச்சரித்தார். தாண்டன் ஆங்கிலத்தைத் துரத்திவிட்டு பிராந்திய மொழிகளைப் பேசுபவர்கள் இந்திக்கு மாற்றப்பட வேண்டும் என்றார். காந்தி பதவி விலகினார். முப்பத்தி ஏழில் ராஜாஜி, சுப்பராயன் இந்துஸ்தானியை உயர்கல்வியின் மூன்று ஃபார்ம்களில் திணிக்க, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக. சுப்பராயன் ஒழிக! ராஜாஜி ஒழிக!’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மொழிப்போர்:
விதிமுறைகள் கமிட்டியில் தான் முதல் சிக்கல் ஆரம்பமானது. அரசியலமைப்பு சட்ட விவாதங்கள் இந்துஸ்தானி அல்லது ஆங்கிலத்தில் நடக்கலாம் என்று ராஜேந்திர பிரசாத் அறிவிக்க, சேத் கோவிந் தாஸ் ‘இருபத்தி ஐந்து வருடங்கள் காந்தியடிகள் போராடியும் இந்துஸ்தானியை தெற்கைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலம் இந்தச் சபையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை எங்களின் பொறுமையை முழுவதும் சோதிக்கிறது.’ என முழங்க, ‘ஒட்டுமொத்த சபையின் அலுவலும் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்’ என்று கே.சந்தானம் தீர்மானம் கொண்டுவந்தார். எனினும், இரண்டு மொழிகளுமே தொடரும் என்றே முடிவு செய்யப்பட்டது.
.
மத்திய அரசமைப்புச் சட்ட கமிட்டியில் இருந்த பனகல் நரசிங்க ராவ் பிராந்திய மொழிகளுக்கு எந்த இடத்தையும் அரசமைப்புச் சட்டத்தில் தர முடியாது என்றும், சட்டசபைகளில் கூட இந்துஸ்தானியோ, ஆங்கிலமோ தான் பயன்பாட்டு மொழியாக இருக்கும் என்று அவர் மாதிரியை வகுத்தார். இந்துஸ்தானியின் இடத்தை இந்திக்கு வழங்கியும், சட்டசபையில் இந்தியும், பிராந்திய மொழியும் தொடரும் என்றும் திருத்தங்கள் படேல் அறிமுகப்படுத்திய சட்ட வரைவில் கொண்டுவரப்பட்டன. இந்தச் சூழலில் பிரிவினை ஏற்பட்டு இந்துஸ்தானி மொழியை ஆதரிப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கும்,, பிரிவினைக்கும் ஆதரவானவர்கள் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்றது. இந்தச் சிக்கலால் இந்துஸ்தானி என்கிற சொல்லுக்குப் பதிலாக நேரு, காந்தி முதலியவர்களே ‘பரவலான இந்தி’ என்று பயன்படுத்தினார்கள். விடுதலைக்குப் பிறகு மீண்டும் மொழிச்சிக்கல் களத்துக்கு வந்தது. இந்தியை ஏற்க இஸ்லாமியர்கள் தங்களின் தேசபக்தி பரிசோதனையில் வெற்றிபெற சம்மதித்தார்கள், தெற்கைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலமும் இணைந்து பயன்பாட்டில் பதினைந்து வருடம் இருக்க வேண்டும் என்று கோரினார்கள். வெறும் இந்தி மட்டுமே வேண்டும் என்று முரண்டுபிடித்தார்கள் இந்திவாலாக்கள்.

பீரார், மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அரசியலமைப்பு குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த திருத்தம் நிலைமையைச் சூடாக்கியது. மத்திய அரசுப்பணி தேர்வுகளில் ஒருவர் வெற்றி பெற இந்தி அறிவு கட்டாயம் தேவை என்றும், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ வடிவம் இந்தியிலேயே இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இது இந்தி பேசாத பகுதி உறுப்பினர்களைக் கவலைகொள்ள வைத்தது. டிடிகே ‘ஏற்கனவே பிரிவினையைத் தென்னகத்தில் சில சக்திகள் பேசிக்கொண்டிருக்கையில், இந்த ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் ‘இந்தி சர்வாதிகாரம்’ அவர்களை வலுப்படுத்தும்.’ என்று கவலைப்பட்டார்.

ராஜேந்திர பிரசாத் ஏற்கனவே ஹிந்துஸ்தானி, உருது, இந்தி ஆகிய மொழியைப் பயன்படுத்த அலுவலில் அனுமதித்தாலும், ஆங்கிலச் சொற்களை இணைத்துக் கொள்ளவும், ஆங்கில மொழியை அலுவலில் பயன்படுத்தவும், தெற்கைச் சேர்ந்த பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் ஆக உதவியிருந்த அவரே அதிகாரப்பூர்வ அரசமைப்புச் சட்டமாக இந்தி வடிவமே கொள்ளப்பட வேண்டும் என்று அடம்பிடித்தார். நேரு ஆங்கில வடிவமே தொடரவேண்டும் என்றும், பலகாலம் கழித்து வேண்டுமானால் இந்திக்கு அந்த இடம் தரப்படலாம் என்றும் சொன்னார்.

சிறுபான்மையினர் தங்களின் மொழியை, கலாசாரத்தைக் காத்துக்கொள்ள உரிமை தந்த அதே சமயம், அரசு சிறுபான்மையினருக்கான கல்விக்கூடங்களை அமைப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் அம்பேத்கர், முன்ஷி கருதினார்கள். அதாவது அரசு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லும் அதே சமயம், இதையெல்லாம் செய்க என்று சிறுபான்மையினர் சார்ந்து சொல்லக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள். அரசுக்கு அறக்கடமையாக அது அமையலாமே அன்றிக் கட்டாயம் என்று அழுத்தம் தர அவர்கள் விரும்பவில்லை. மொழிச் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மை மொழியைத் திணிக்கக் கூடாது என்றும் அத்தீர்மானம் சொன்னது.

நாற்பத்தி எட்டாம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் ஓரிசா மாகாணத்தில் ஒரியா, தெலுங்கு இரண்டும் அதிகாரப்பூர்வ மொழி என்ற பொழுதும் கஞ்சம், கோராபுட் முதலிய தெலுங்கு பெரும்பான்மை மாவட்டங்களில் ஒரியா திணிக்கப்பட்டது. பீகாரின் மன்பாம் மாவட்டத்தில் வங்க மொழியினர் பெரும்பான்மையினராக இருந்த சூழலில் அங்கே இந்தி மொழி பள்ளிகளில் திணிக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் நாக்பூரில் மராத்தி பேசுபவர்கள் இந்தி பேசுபவர்களைப் போல் இருமடங்கு இருந்தும் நாக்பூர் பல்கலை இந்தியை பயிற்றுமொழியாக அறிவித்தது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் செயற்குழு ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய பகுதியில் பயன்படுத்த வேண்டிய மொழியை அதுவே தேர்வு செய்யலாம். நீதிமன்ற, அலுவல் மொழியாக அதனையே பயன்படுத்தலாம் என்றும், இருபது சதவிகிதம் வரை ஒரே மொழிச் சிறுபான்மையினர் இருந்தால் அரசின் கோப்புகள் அந்த மொழியிலும் அமைய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தொடர்பு கொள்ளும் மொழி மத்திய அரசு பயன்படுத்தும் ஒரு மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 7 1949-ல் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தாண்டன் யாரெல்லாம் இந்தியை நாகரி வரிவடிவத்தில் தேசிய மொழி ஆவதை எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள், மதவாத சக்திகளுக்குத் துணை போவதையும் செய்கிறார்கள் என்றார். அரசமைப்பு வரைவுக் குழு கூடிய பொழுது நாடாளுமன்றம் ஆங்கிலம் அல்லது/மற்றும் இந்தி ஆகிய இரண்டையும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் பத்து வருடங்கள் பயன்படுத்தலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உள்ள ஓட்டையைப் பலர் எதிர்த்தார்கள். சந்தானம் தலைமையிலான குழு பதினைந்து ஆண்டுகள் என்று இதனை விரிவுபடுத்த கோரியது. அதோடு நில்லாமல் பொதுப் பயன்பாட்டுக்கு அரேபிய எண் முறையைப் பயன்படுத்தலாம் என்றும் அது பரிந்துரைத்தது.

இந்தியை தேசிய மொழியாக்கவும், இந்தியாவுக்குப் பாரத் எனப் பெயர் சூட்டவும் ஒரு பெண் துறவி உண்ணாவிரதம் இருந்தார். அவரை நேரு முதலியோர் சந்தித்துச் சமாதானப்படுத்தினார்கள். அரேபிய எண்கள் என்றால் எதிர்ப்பு வரும் என்று உணர்ந்து அதை ‘சர்வதேச எண்கள்’ என மாற்றினார்கள். இவை அனைத்தும் ஓட்டெடுப்புக்கு வந்தது. எழுபத்தி நான்கு-எழுபத்தி நான்கு என்று அரேபிய எண்கள், நாகரி எண்கள் இரண்டுக்கும் ஓட்டுக்கள் கிடைத்தன. மேலும், இந்தி பேசும் மாகாணங்கள் அரசோடு தொடர்பு கொள்ள இந்தியைப் பயன்படுத்தலாம் என்றும், எட்டாவது அட்டவணையில் ஆங்கிலம் சேர்க்கப்படாது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தப் பதினைந்து வருடத்தைக் குறைக்கவும், நாகரி எண்களைப் பயன்படுத்தவும், அரசுப்பணிகளில் இந்தியை கட்டாயமாக்கவும் இந்திவாலாக்கள் போராடினார்கள். இறுதியில் நாகரி எண்கள், இந்தி எண்கள், சர்வதேச எண்கள் இணைந்து பயன்படும் என்றும், உச்ச, உயர் நீதிமன்றங்களில், சட்டங்கள், அவசரச்சட்டங்கள் ஆகியற்றில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே பதினைந்து வருட காலத்துக்கு இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியை இந்தியா முழுக்க வளர்ப்பதன் வேகத்தைக் கண்டறிய இந்தி கமிஷன்கள் அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிற மொழிகள் எட்டாவது பட்டியலில் இடம் அளிக்கப்பட்டதோடு, அரசுப் பணித் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதவும் அனுமதிக்கப்பட்டது. அந்தப் பிற மொழிகளைப் பிராந்திய மொழிகள் என்று சொல்லாமல், ‘அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்’ என்று அறிவிக்க நேரு சொன்னார். ஆர்.எஸ்.சுக்லா இப்படிப் பட்டியலில் பிற மொழிகளைச் சேர்ப்பது தேவையில்லாதது என்றார். இந்து மகாசபையின் முன்னாள் தலைவரும், வங்காளியுமான ஷ்யாம் பிரசாத் முகர்ஜி இந்தப் பட்டியலிடுதலை வரவேற்று இது இந்திக்கு இணையாகப் பிற மொழிக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்கிற சூழலை சரி செய்யும்.’ என்றார்.

ஓட்டெடுப்பில் இவை பெரும்பாலும் ஏற்கப்பட்டு இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக இந்துஸ்தானியை ஒரு ஓட்டில் முந்தி வென்றது. அம்பேத்கர் உட்பட இருபத்தி எட்டு பேர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்க தீர்மானம் கொண்டுவந்தார்கள். எல்.கே.மைத்ரா என்பவர் யாருக்கும் வடமொழி தெரியாது என்பதால் அனைவர்க்கும் சமமான வாய்ப்பை அது வழங்கும் என்றார். எனினும் அது ஏற்கப்படவில்லை. நேரு இந்திவாலாக்களின் தொனியில் இருந்த அதிகார மமதையைக் கண்டித்தார். மக்களின் மொழிதான் தேசிய மொழியாக வேண்டுமே அன்றி, கற்ற சிலரின் மொழியல்ல என்றார்.

தாண்டன் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது நம்மைப் பின்னோக்கி தள்ளிவிடும் என்றும், நாகரி வடிவத்தில் மட்டும் எண்களைப் பயன்படுத்துவது நம் பண்டைய பாரம்பரியத்தின் அடையாளம் என்றும், உடனடியாக ஆங்கிலத்தின் இடத்தை முழுமையாக இந்திக்குத் தரலாம், அதிகபட்சம் ஐந்து வருடங்கள் வேண்டுமானால் ஆங்கிலம் அமலில் இருக்கலாம் என்று கொதித்துப் பேச, மவுலானா அபுல் கலாம் ஆசாத், இந்தி படிப்படியாகவே தென்னகத்தை அடைய வேண்டும் என்றும், வடக்கு-தெற்கு இரண்டையும் இணைக்கும் புள்ளியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டால் அந்த இணைப்பு அறுந்துவிடும் என்று எச்சரித்தார்.

இறுதியாக முன்ஷி-அய்யங்கார் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நாகரி, ஆங்கில எண் பயன்பாடு குறித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றும். உயர்நீதிமன்றங்களில் ஜனாதிபதி அனுமதித்தால் இந்தி அலுவல் மொழியாகப் பயன்படலாம், சட்டங்கள், அவசரச்சட்டங்கள், மசோதாக்கள் அந்தந்த மாநில மொழியில் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழியாக்கத்தோடு பதிப்பிக்கப்படலாம் என ஒத்துக்கொள்ளப்பட்டது. சம்ஸ்கிருதம் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்தியின் பயன்பாடு அரசு அலுவல்களில் குறையவே செய்தது. காங்கிரஸ் கட்சியே ஆங்கிலத்தில் தன்னுடைய அலுவல்களை நடத்தியது. மொழி ஆதிக்கத்தைச் செலுத்த முயன்ற இந்தி வாலாக்களின் போக்கு அதற்குப் பலத்த எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. அரைமனதான ஒரு சமரசமே எட்டப்பட்டது என்றாலும், அடுத்தடுத்து வந்த 1963-ன் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் ஆங்கிலத்தை இந்தியோடு அரசின் அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வதை உறுதி செய்தது. ஆங்கிலம் பேசுவது இந்தியத் தன்மைக்கு எதிரானது இல்லை என்கிற புரிதல் உண்டானது.

இந்தியாவில் மொழி அரசியல் பகுதி -1


இந்தியாவில் மொழி அரசியல் பகுதி -1

`LANGUAGE AND POLITICS IN INDIA’ என்கிற ஆஷா சாரங்கி தொகுத்த நூல் மொழி அரசியல், அரசியலின் மொழி ஆகிய இரண்டைக் குறித்தும் வெவ்வேறு அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள பல்வேறு கட்டுரைகள் தனித்தனியாக விவரிக்கப்பட வேண்டியிருப்பதால் ஆறு பாகங்களாக இந்த நூல் தொடும் பேசுபொருட்களை எழுதுகிறேன்.
மொழி அரசியல், அரசியலின் மொழி ஆகிய இரண்டையும் ஏன் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆஷா சாரங்கியின் அறிமுகம் விரிவாகப் பேசுகிறது.

மொழி என்பதை வெறும் தகவல்தொடர்பு கருவி எனச் சிலர் சொன்னாலும், மொழிக்கும் சமூகத்துக்கும், வரலாற்றுக்கும், தத்துவத்துக்கும், புலனுணர்வுக்கும், மானுடவியலுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராயும் பிரிவுகள் உலகெங்கும் ஏற்பட்டுள்ளன. ஷெல்டன் போலாக்,’மொழி என்பது ஒரு தேசத்தின் அடையாளமாக மாறுகிறது என்றால் அதற்கு மொழியைத் தேசத்தின் தனித்த அடையாளமாக மாற்றும் செயல்பாடும் ஒரு முக்கியக் காரணம்’ என்று கருதுகிறார். ஐரோப்பியாவில் தேசிய அரசுகள் எழுந்ததை மொழியை எப்படி அவர்கள் தேச உருவாக்கத்தின் தனித்த அடையாளமாக மாற்றினார்கள் என்று அறியாமல் உணர முடியாது. திட்டமிட்டு பல்வேறு சமூக, கலாசார, அரசியல் வேறுபாடுகளை உருவாக்க பல்வேறு மொழியியல் நடைமுறைகள் பரிந்துரைக்கப்பட்டு, கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இந்தத் தேசங்கள் கட்டமைக்கப்பட்டன.

ஹாப்ஸ்பர்க், ஓட்டோமான், பிரெஞ்சு, ஆங்கிலேய, ஸ்பானிய அரசுகள் தங்களுடைய மொழியை உலகம் முழுக்கப் பரப்பியதோடு, தங்களின் மொழியை ஒரு உடைமையாக எண்ணித் தீவிரமாகக் காத்தார்கள். எல்லா மொழிகளும் ஒரு காலனிய அரசின் மொழியாகவோ, அல்லது காலனிகளில் பரவலான மொழியாகவோ மாறுவதில்லை. ராணுவ வெற்றிகள், முதலாளித்துவ விரிவாக்கம், மதப் போர்கள், மத மாற்றங்கள், கல்வி பரவலாக்கம் முதலிய பல்வேறு கூறுகள் இதில் பங்காற்றுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை சாதியப் பாகுபாடுகள்
மொழியின் தூய்மை, அசுத்தம், படிநிலை ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உண்டு. சம்ஸ்கிருதம் என்பதை இரட்டை பிறப்பாளர்களே கற்க வேண்டும் என்கிற பார்வை வெகுகாலம் நிலவி வந்ததும், மைதிலி என்கிற மொழியை ஒடுக்கப்பட்ட ஜாதியினர் பரவலாகப் பேசிவந்த சூழலில் அதனை ‘சுத்தப்படுத்தி’,, வரையறுத்து பிராமணர்களின் அடையாள மொழியாக வெற்றிகரமாக மாற்றி ‘மைதிலி’ எனக் குறிப்பதே மிதிலை பகுதியை சேர்ந்த பிராமணர்களைத் தான் என்கிற சூழலை உண்டாக்கினார்கள் பிராமணர்கள்.

இந்தியாவில் எண்ணற்ற மொழிகள், வட்டார வழக்குகள், பேசு தாய்மொழிகள் ஆகியன வழங்கி வருவதால் இவை அனைத்தையும் கணக்கிடுவது என்பது முடியாத காரியம். மொழியை இனத்தோடு இணைத்து ஆங்கிலேயர் காலத்தில் கணக்கெடுப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஜார்ஜ் கிரியர்சன் இந்தியாவின் மொழியியல் கணக்கெடுப்பை நிகழ்த்தி இருபது வருடங்களில் இந்தியாவில் 179 மொழிகள், 544 வட்டார வழக்குகள் உள்ளதாகப் பன்னிரெண்டு பகுதி தொகுப்பில் தெரிவித்தார். அறுபத்தி ஒன்றில் வெளிவந்த கணக்கெடுப்பு 1,652 பேசு தாய்மொழிகள் இருப்பதாக அறிவித்தது. இதனை முப்பது ஆண்டுகள் கழித்து வந்த கணக்கெடுப்பு 114 மொழிகளுக்குள் பிரித்தது.

அன்விதா அப்பி நாற்பத்தி ஏழு மொழிகளை இந்தி என்கிற பெயரில் வகைப்படுத்தி இருப்பதாக அதிரவைக்கிறார். உதாரணமாக மைதிலி மொழி விடுதலைக்குப் பிந்தைய முதல் இரு கணக்கெடுப்புகளில் இந்திக்குள் அடக்கப்பட்டது. பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் மொழிகளையும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விட்டது.

இந்திய மானுடவியல் ஆய்வுக் கழகம் ‘இந்திய மக்கள்’ என்கிற கணக்கெடுப்பை பெருமளவில் மேற்கொண்டு எழுநூறு மொழிகள் நான்கு இந்திய மொழிக்குடும்பங்களைச் சார்ந்திருப்பதாக அறிவித்தார்கள். இந்திய வீடுகளில் பயன்படுத்தப்படும் 325 மொழிகளில் 75 பிராதன மொழிகள் என்று அது சொன்னது. மேலும் இந்தக் கணக்கெடுப்பு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு பல்வேறு தாய்மொழிகளைப் பிராதன மொழியோடு சேர்க்கும் வழக்கத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதால் பல்வேறு தாய்மொழிகள் காணாமல் போகச் செய்யப்படுகின்றன எனக் கவலை தெரிவிக்கிறது. 1951 கணக்கெடுப்பில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை நாற்பத்தி இரண்டு சதவிகிதமாக அவாதி, போஜ்புரி, சதீஸ்கரி, பந்தல்கண்டி, கார்வாலி, ஹராவ்தி, ஹரியான்வி, காங்ரி, குமாவ்னி, மகதி, மைதிலி, மேவாரி, பஹாரி, ராஜஸ்தானி மொழிகளை உள்ளடக்கி காட்டப்பட்டது. அடுத்த 1961 கணக்கெடுப்பில் பஞ்சாபி, உருது, இந்துஸ்தானி, மைதிலி, மகதி, போஜ்புரி ஆகிய மொழிகள் தனியாகப் பட்டியலிடப்பட்டதால் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை முப்பது சதவிகிதமாகக் குறைந்தது. கலாசார ரீதியாக ஒன்றாகும் இருக்கும் குழுக்களிடையே கூடப் பல்வேறு மொழிகள் வழங்கி வருவது ‘இந்திய மக்கள்’ திட்டத்தின் மூலம் தெளிவானது.

அனைத்திந்திய வானொலி நூற்றி நான்கு மொழிகளில் தன்னுடைய செயல்பாட்டை மேற்கொள்வது ஒருபுறம், அரசுகள் இருபத்தி இரண்டு மொழிகளில் தங்களுடைய தகவல் தொடர்பை மேற்கொள்கின்றன. ஆதிக்கம் செலுத்துகிற மொழிகளுக்கு வெவ்வேறு மொழிக்குழுவினர் மாறுவது விருப்பதாலோ, சுயமாகவோ நிகழ்வதில்லை., அரசியல் தேவைகள், சமூக மதிப்பு, அடையாளம், பாதுகாப்பு ஆகிய பல்வேறு கூறுகள் இதில் கலந்துள்ளன. இந்தியை தேசத்துக்கான மொழியாக மாற்றுகிற முயற்சி அனைத்திந்திய வானொலியில் அதைக் கட்டாயமாக்குவதன் மூலம் சாதிக்கப்பட்டது. மேலும், திட்டமிட்டு ஹிந்துஸ்தானியின் பாரசீக, அரேபிய சொல்லாக்கங்களைத் துறந்து ‘புனிதப்படுத்தப்பட்டதாக’ சொல்லப்பட்ட சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியையே வானொலி பயன்படுத்தியது.

இந்திய அரசியலமைப்புச் சபை ஆறு வாரங்களுக்கு எது இந்தியாவின் தேசிய/அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்று விவாதித்து வாக்களித்தது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது. மேலும் இந்த இந்தி தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்படும் என்பதோடு, பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் துணை மொழியாகத் தகவல் தொடர்புக்கும், பயன்பாட்டுக்கும் தொடரலாம் என்று முன்ஷி-அய்யங்கார் திட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டப்பிரிவுகள் 343-351 மொழிச்சிக்கலை விரிவாக
எதிர்கொள்கின்றன. ஒரு மொழியை மாநில அரசு அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க அம்மொழி பதினைந்து சதவிகித மாநில மக்களால் குறைந்தபட்சம் பேசப்படவேண்டும் எனச் சட்டப்பிரிவு 345வரையறுப்பதைப் பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்கள் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தன. ஜனாதிபதி விரும்பினால் ஒரு மொழியை மாநில அரசு அங்கீகரிக்க வழி செய்யலாம் என்று சட்டப்பிரிவு 347 கூறுகிறது. அதே சட்டப்பிரிவு ஒரு மாநிலத்தில் எழுபது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே மொழியைப் பேசினால் மட்டுமே அது ஒரு மொழி பயன்படுத்தும் மாநிலமாக அறிவிக்கப்படலாம் என்று கூறுகிறது.

மாநில அரசின் எல்லைக்குள் பயன்படுத்தப்படும் எந்த மொழியிலும், இந்தியாவில் பேசப்படும் எந்த மொழியிலும் தன்னுடைய விண்ணப்பத்தை ஒரு குடிமகன் சமர்ப்பிக்கலாம் என்று சட்டப்பிரிவு 350 கூறுகிறது. மொழிச்சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க 350(A), 350 (B), 29(1), 30, 347, 350 சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

எட்டாவது பட்டியலில் ஆங்கிலத்தை 1959-ல் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பொழுது அது இந்திய மொழியில்லை என்று அது தடுக்கப்பட்டது. இந்தப் பட்டியல் என்ன அடிப்படைகளைக் கொண்டு மொழிகளை உள்ளடக்கியுள்ளது என்பதில் தெளிவில்லை. ஒரு பகுதியில் பயன்படுத்தப்படும் தனித்துவம், எண்ணிக்கை அளவிலான பெரும்பான்மை, வளம்மிகுந்த கடந்தகாலப் பண்பாட்டு வரலாறு,
திருந்திய மொழி ஆகியன கூறுகள் என்று கொண்டால் நம்மால் முறையே ராஜஸ்தானி, பிரஜ், போஜ்புரி ஆகிய மொழிகள் இப்பட்டியலில் இடம் பெறாததையோ, சிந்தி, கொங்கணி, சம்ஸ்கிருதம் ஆகியன இப்பட்டியலில் இடம்பிடிப்பதையோ விளக்க முடியாது.

பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களால் பேசப்படும் பழங்குடியின மொழிகளைப் பற்றித் தெளிவாக அரிய எமானோ சொல்வதைப் போல அவர்களின் இனக்குழு வரலாறு, ஜாதி, பழங்குடியினம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவு ஆகியவற்றை உணரவேண்டும். ஜார்கண்ட், நாகா, மிசோ, காசி இயக்கங்கள் தங்களுடைய இன அடையாளத்தைத் தீவிரமாக மொழியைக்கொண்டே கட்டமைக்கின்றன. பில், புயான், பூமிஜ், முரியா, கோண்டு, மல்பஹரியா, லோதா முதலிய பழங்குடியினர் தங்களின் மொழியை ஒன்று இழந்தோ, அல்லது வேறு மொழிக்கு மாறும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். குவி எனும் திராவிட மொழி பேசும் மத்திய பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கத்தில் பரவியுள்ள மக்கள் அந்தந்த பகுதியின் ஆதிக்க மொழிக்கு நகர்ந்துள்ளனர்.

வரிவடிவத்தில் கூட எண்ணற்ற சிக்கல்கள், போரட்டங்கள் நிகழ்ந்துள்ளன. போடோ மொழியினர் வங்காளி, அசாமி மொழிகளின் வரிவடிவத்தை முதலில் பயன்படுத்தினார்கள். அசாமியர்கள் போராட்டம் நிகழ்த்தி தங்களை முன்னிறுத்திக் கொள்ள முயன்ற பொழுது அசாமிய ஆதிக்கத்துக்கு எதிராக அந்த வரிவடிவத்தைப் போடோக்கள் துறந்தார்கள். ரோமானிய வரிவடிவத்துக்கு அவர்கள் மாற முயன்றதை அசாமியர்கள் கடுமையாக எதிர்க்க, மத்திய அரசின் தலையீட்டில் அவர்கள் தேவநாகரி மொழிக்கு மாறினார்கள். கொங்கணி, சந்தாலி மொழிகள் ஐந்து வரிவடிவங்களில் எழுதப்படுகின்றன, சௌராஷ்டிரா, படகா ஆகிய மொழிகள் தமிழ் வரிவடிவத்தில் எழுதப்படலாமா என்கிற விவாதமும் உள்ளது.

இந்திய அரசின் மும்மொழிக்கொள்கையும் குறிப்பிட்ட மொழிகள் வளர்வதற்கு மட்டுமே வழிவகைச் செய்கிறது. இந்தி மொழி பிராதனமாக வழங்கும் பகுதிகளில் ஆங்கிலம், இந்தி ஆகியவற்றொரு ஒரு தென்னிந்திய மொழி கற்பது கட்டாயமாக உள்ளது. பிற பகுதிகளில் இந்தி, அவரவரின் தாய்மொழி எட்டாவது பட்டியலில் உள்ள மொழியாக இருந்தால் அதைக்கற்பது, ஆங்கிலம் என்று பட்டியல் சற்றே மாறுபடும். இந்தப் பட்டியலுக்குள் வராமல் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் உள்ளன. அவற்றைப் பேசும் மொழிச்சிறுபான்மையினர் சமயங்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு மொழிக்கும் உள்ளார்கள். அன்விதா அப்பி எனும் மொழியியல் அறிஞர் இந்திய அரசு இந்த மொழிகளையும் கற்க நான்கு மொழிக்கொள்கையைக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார்.

ஜாதி, மொழிகளுக்கிடையே தொடர்பும் சிக்கலானது. பல்வேறு தனித்த எழுத்துக்கள் தலித்துகளின் பக்கமிருந்து பல்வேறு மொழிகளில் எழுவது ஒருபுறம் என்றால், தலித்துகளில் பலர் ஆங்கிலத்தை அடக்குமுறையில் இருந்து விடுபடும் மொழியாகவும், வாழ்க்கையில் முன்னேறும் வழியாகவும் காண்கிறார்கள்.

டி.கே.ஓமென் தன்னுடைய, ‘தேசம், மக்கள் சமுதாய, சமூக இயக்கங்கள்’ நூலில் பல்வேறு தேசக்குழுக்களை உள்ளடக்கிய இந்தியாவில் கலாசார மறுமலர்ச்சிக்கு மொழியை உகந்த அடிப்படை என்கிறார். மேலும், தமிழோடு திராவிட இந்து மதத்தை, சம்ஸ்கிருதத்தோடு வடக்கின் இந்து மதத்தை, பஞ்சாபிய மொழியோடு சீக்கிய மதத்தை, உருதுவோடு இஸ்லாமிய மதத்தை, பாலியோடு புத்த மதத்தை, ஆங்கிலத்தோடு கிறிஸ்துவ மதத்தைத் தொடர்புபடுத்தி ஒற்றைப்படையாகக் காண்பது தவறாகும்.இந்தியா மாதிரியான வண்ணமயமான, வேற்றுமை மிகுந்த சமூகங்கள் மிக்க நாட்டில் இப்படி ஒரு மதத்தை ஒரு மொழியோடு அடையாளப்படுத்துவது சமூக உறவுகள், அடையாளங்கள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை மறுதலிக்கும் செயல்பாடாகும். மொழி அரசியலும், அரசியலின் மொழியும் ஒன்றுக்கொன்று நெருங்கி பிணைந்த ஒன்றாகும். ஆங்கிலம், இந்தியாவை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆக்குவதைச் சார்ந்து எண்ணற்ற வன்முறை சம்பவங்கள், போராட்டங்கள், கலவரங்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தச் சிக்கலான பரப்பைப் பற்றி விரிவாக அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.

தமிழன் இருக்கானே மச்சி! – ஒலிப்பதிவு


‘தமிழன் இருக்கானே மச்சி!’ என்கிற உரை பல்வேறு காரணங்களுக்காக மறக்க முடியாத ஒன்று. SSN College Of Engineering கல்லூரியில் இதோடு மூன்றாவது முறையாக நான் தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்குகொள்கிறேன். முதலில் நடுவராக, அடுத்து கடந்த ஆண்டு சாரல் தமிழ் மன்றம் துவக்க விழா smile emoticon இன்றைக்கு Instincts கலைத்திருவிழாவின் தமிழ் நிகழ்வுகளை துவங்கி வைத்தேன்.

ஐம்பது நிமிடங்கள் நீண்ட அந்த உரையில் தமிழர்கள் இந்தி பேசாததால் இந்தியர்கள் இல்லை, தமிழர்கள் வியாபாரத்தில் திறன் குறைந்தவர்கள், சினிமா நடிகர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள், பிரிவினைவாதிகள், விடுதலைப் போரில் பெரிய பங்களிப்பு தராதவர்கள், உணர்ச்சிகரமானவர்கள்,விளம்பரப் பிரியர்கள், தன்மானம் இழந்து காலில் விழுபவர்கள், தமிழ்க்கலாசாரத்தில் காதலுக்கு இடமில்லை, சங்ககாலத்தில் மது அருந்தும் பழக்கம் இல்லை, தமிழ்நாடு ஊழலின் உச்சம், தமிழர்கள் இந்திய தேசியத்துக்கு எதிரானவர்கள் முதலிய கருத்துக்களுக்கு மாற்றுப்பார்வைகளை தந்தேன். திராவிடக் கட்சிகளால் வீழ்ந்தோம், மதவாதம் ஏன் தமிழ் நாட்டில் வேரூன்ற முடியவில்லை என்பதை சொல்ல நினைத்து தவறவிட்டு விட்டேன். மற்றபடி பெரும்பாலும் நிறைவைத் தந்த உரை. அதிலும் கிட்டத்தட்ட முப்பது முறை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்திய அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நெகிழ வைத்தார்கள் என்றால், விழா முடிந்த பிறகு நாற்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனித்தனியாகவும் , இளைஞிகள் குழுவாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

கனத்த விஷயங்கள், நாற்பது ஆண்டுகால அரசியல், சங்ககால அம்சங்கள், வரலாறு, புவியியல் சார்ந்த பார்வைகளை நகைச்சுவை கலந்து ஐம்பது நிமிடங்களில் பதினெட்டு-இருபத்தி ஒரு வயது நண்பர்களுக்கு தந்தது தைரியமான முயற்சி. சில போதாமைகள் இருந்தாலும், என்னுடைய மிகச்சிறந்த பேச்சுக்களில் ஒன்று smile emoticon

Vishnu Varatharajan, Vignesh Kr, Thamil Thedal ஆகியோருக்கும் ஏனைய SSN – Institutions அன்பர்களுக்கும் நெகிழ்வான நன்றிகள். ஈரோட்டில் இருந்து என் பேச்சைக் கேட்க வந்து முடிந்த பின்பு பாராட்டிய அந்த தோழருக்கும் நன்றி.

Here it is :This speech tries to debunk myths on Tamil, Tamilians, Tamilnadu. A fifty minute delight in a college boy language coupled with history, language, sociology, political science perspectives…

ஐம்பது நிமிடங்களில் கல்லூரி மாணவர்களின் மொழியில் நிகழ்த்தப்பட்ட ‘தமிழன் இருக்கானே மச்சி!’ உரையின் ஒலிப்பதிவு…

ஆணி, சிலுவை, அம்மா, திராவிடம், அரசியல் – குழப்ப கொத்து பரோட்டா!


ஜெயலலிதா மக்களின் முதல்வர் பட்டத்தில் இருந்து மீண்டும் முதல்வர் பதவிக்குத் திரும்பே வேண்டும் என்று சிலுவையில் கைகளில் ஆணி அடித்துக்கொண்டது பெருத்த நகைப்பு மற்றும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டிய அதே சூழலில் சில கேள்விகளையும் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில பொதுமைப்படுத்தல்களுக்கும் பதில் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்பதிவு திராவிட இயக்கத்தை அதன் வெகுஜன அரசியலில் அதனால் பரவலாக்கப்பட்ட வாரிசு அரசியல், ஊழல், தனி மனித வழிபாடு ஆகியவற்றில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது இல்லை. அதே சமயம் போகிற போக்கில் வைக்கப்படும் வாதங்கள் முழுமையானவையா என்கிற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இப்பதிவு.

சினிமாவால் தமிழகம் சீரழிந்தது என்பது முழுக்கச் சரியான வாதமாக இருக்க முடியாது. தமிழகம் பல்வேறு துறைகளிலும், மனிதவளக் குறியீட்டிலும் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. காமராஜர் ஆட்சி என்று மட்டுமே சொல்லிப்பழகிவிட்ட நமக்கு (அந்தச் சொல்லாடல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ் கொண்டு வந்த கோஷம் என்கிற புரிதல் இல்லாமலே உச்சரிக்கிற நமக்கு) காமராஜரை தமிழக மக்கள் கைவிட்டது போலப் பேசுகிறோம். காமராஜர் தான் சீனப்போருக்கு பின்னர் விழுந்திருந்த நேருவின் இமேஜை சரிக்கட்டவும், நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் கட்சி பெற்ற தோல்வியால் துணுக்குற்றும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசியலுக்குள் புகுந்தார்.

தமிழகத்தில் உணவுப்பஞ்சம் பக்தவத்சலத்தின் ஆட்சிக்காலத்தில் பெருமளவில் ஏற்பட்டது. காமராஜர் கொண்டு வந்த சாஸ்திரி இந்தியை பந்த்தின் மூலம் திணித்த பொழுது இங்கே ஒத்துழைப்பையே சத்தியமூர்த்தி நல்கினார். பல நூறு பிள்ளைகளின் பிணங்கள் விழுந்தன, அரசு இயந்திரம் சுட்டுத்தள்ளியும், தீக்குளிப்புகளுக்குப் பிறகும் அரசு இறங்கி வராத சூழலில் மத்திய அமைச்சர்களின் பதவி விலகலே அதைத் தடுத்தது. நிர்வாகச் சீர்கேடுகள், உணவுப்பஞ்சம், மக்களைக் கொன்று தீர்த்த இந்தித்திணிப்பு இத்தனையும் காங்கிரசை மண்ணைக்கவ்வ செய்தன. “படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்.” என்று காமராஜர் சொன்னாரே அன்றி நடந்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிற தொனியில் கட்சி பெரும்பாலும் செயல்படவே இல்லை.

அடுத்தது அரசியலுக்குள் சினிமாவைக் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தில் துவங்கிய ஒன்று அல்ல. தீரர் சத்தியமூர்த்தித் தான் அதைப் பெருமளவில் விடுதலைக்கு முந்தைய காலத்தில் முன்னெடுத்தவர். அதே சமயம் அவர் விடுதலைப் போருக்காக அப்படிச் செயல்பட்டார் என்று வாதிட எண்ணினாலும் மன்னிக்க. அவர் தேர்தல் அரசியலில் நீதிக்கட்சியைப் போல ஈடுபடவும் அந்த ஊடகத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அவர்கள் பாணியில் கிளம்பிய திராவிட இயக்கம் தன்னுடைய பிரச்சாரத்தை அதைக்கொண்டு கச்சிதமாகச் செய்தது.

வாரிசு அரசியல் என்பதன் சுவடுகள் இந்திராவால் எழுபதுகளில் மத்தியில் சஞ்சய் காந்தியை சூப்பர் பிரதமர் ஆக்கியதில் துவங்கியது. அண்ணா தனக்குப் பின்னர் இவர் தான் வாரிசு என்று யாரையும் குறிப்பிடவில்லை. வாரிசு அரசியலை எம்.ஜி.ஆர். எதிர்ப்பு என்பதை முன்னெடுத்த காலத்தில் மு.க.முத்துவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை தவிர்த்து பெரிய அளவில் கருணாநிதி அக்காலத்தில் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவரால் ஜனநாயகம் போனது என்று கண்ணீர் வடிக்கிற பலரும் உட்கட்சி ஜனநாயகத்தைப் பெருமளவில் தொண்ணூறுகள் வரை காப்பாற்றியவர் அவரே என்பதையும் இணைத்தே பேசவேண்டும். இந்திராவோ காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகத்தை இதே காலங்களில் துடைத்து எறிந்திருந்தார்.

நாயக வழிபாடு என்பதும், சினிமா நட்சத்திரங்களைக் கொண்டாடித் தீர்த்துத் தமிழகம் முட்டாளாகத் திகழ்கிறது என்று பலர் பேசக்கேட்டிருக்கலாம். எம்.ஜி.ஆரை ஓயாமல் தமிழகம் முதல்வராக அரியணை ஏற்றியது என்பதை மட்டும் வைத்துப் பார்த்து இந்த வாதம் நியாயம் எனத்தோன்றும். அவர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ந்ததும், அதிகாரிகள் நடத்திய ஆட்சியாக அது திகழ்ந்ததும் உண்மை. ஊழல் தலையெடுக்க ஆரம்பித்து இருந்த கருணாநிதியின் ஆட்சியின் தொடர்ச்சி போலவே அவரின் ஆட்சியும் அமைந்தது. யாரெல்லாம் மு.க.வின் ஆட்சியில் தவறு செய்தார்கள் என்று அவர் சொன்னாரோ அவர்களையே தன்னுடைய அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார். . அதே சமயம் அடித்தட்டு மக்களைப் பற்றியும் கவலை கொள்கிற மனம் அவருக்கு இருந்தது. சமூக நலத்திட்டங்களை அவர் முன்னெடுக்கவே செய்தார். கொள்கை ரீதியான எதிர்ப்பு என்பது தனிமனித எதிர்ப்பாக இவர்கள் காலத்தில் ஆனது.

தமிழகம் சினிமா நாயகர்களை எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பின்னர்க் கொண்டாடுகிறதா என்கிற கேள்வியைத் தீவிரமாக எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆருக்குப் பின்னர்க் கட்சி ஆரம்பித்த பல நடிகர்களை முகவரி இல்லாமல் மாற்றியிருக்கிறார்கள். ‘சூப்பர் ஸ்டார்’ என்று புகழப்படும் நபரின் குரலால் ஆட்சியைப் பிடித்தது திமுக என்கிற பிம்பமும் உண்டு. அப்பொழுது ஆட்சிக்கு எதிராக வீசிய எதிர்ப்பலையில் முதல்வரே தோற்றுப்போன பொழுது அதற்கு அவரின் வாய்ஸ் தான் முக்கியக் காரணம் என்றால் சிரிக்கவே வேண்டியிருக்கிறது. பின்னர் அவர் குரல் கொடுத்தும் நாற்பதிலும் வாக்காளர்கள் ஏன் அவர் ஆதரித்த கூட்டணியைத் தோற்கடித்தார்கள்? விஜயகாந்த்தை மாற்றாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கை உண்டு. அதே சமயம் அவருக்கு மகத்தான வெற்றியை கண்ணை மூடிக்கொண்டு மக்கள் தூக்கித்தரவில்லை.

ஆந்திராவில் என்.டி.ஆர். தொடர்ந்து திடீர் திடீரென்று ஆந்திர முதல்வர்கள் மாற்றப்பட்டது, ராஜீவ் காந்தியால் ஒரு ஆந்திர முதல்வர் அவமதிக்கப்பட்டது அனைத்தையும் கொண்டு முன்னெடுத்த ‘அடையாள அரசியல்’ அங்கே அவருக்கு வெற்றியைத் தரவே செய்தது. ஆந்திர மக்கள் சமீபத்தில் சிரஞ்சீவிக்கும் குறிப்பிடத் தகுந்த வெற்றியை தந்தார்கள். அவர்களுக்கும் அறிவே இல்லை என்று சொல்லிவிடலாம் இல்லையா? கர்நாடகாவில் ‘கோகக் போராட்டங்கள்’ என்று கன்னடத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்ட மொழிப் போராட்டங்கள் எண்பதுகளின் இறுதியில் நடந்த பொழுது அதற்கு ஒரு வெகுஜன ஈர்ப்பை ராஜ்குமாரின் வாய்ஸ் கொடுத்தது. அரசு அந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளைப் பெருமளவில் ஏற்கிற அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்தது. அங்கே சினிமா நடிகர்கள் தேர்தலில் நின்று வெல்வதும் நடைபெறுகிறது. சினிமாக்கவர்ச்சி தமிழகத்தில் உண்டு என்பதை மறுக்க முடியாது என்றாலும் பொதுப்படையாக அது என்னவோ தமிழகத்தின் பண்பு மட்டுமே என்று முத்திரைக் குத்துவது சரி கிடையாது. ஒழுங்கான மாற்றுகள் எதுவும் கண்ணில் தென்படாத பொழுது இருப்பவர்களில் குறைந்த தீமை எதுவென்றே தேர்வு செய்ய வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

ஊழலில் தெற்கு மட்டுமே திளைத்து நிற்பது போன்ற பிம்பமும் உண்டாக்கப்படுகிறது. இதில் வடக்கு ஒன்றும் சளைத்தது இல்லை என்பதும், பல முதல்வர்களை ஆட்சியை விட்டே 75 களில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அனுப்பும் கிளர்ச்சிகள் குஜராத், பீகாரில் நடந்தன என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்திரா ஆட்சிக்காலத்தில் ஊழல்கள் பலம் பெற ஆரம்பித்தன என்றால் மொரார்ஜி தேசாயின் மகன் செய்த முறைகேடுகள் ஜனதா ஆட்சியில் சந்தி சிரித்தன. ராஜீவின் ஆட்சியைப் பற்றி உலகறியும். நரசிம்ம ராவின் ஆட்சியின் ஊழல்கள் சர்க்கரை ஊழல், அரசுக் குடியிருப்பு ஊழல், ஹவாலா ஊழல் என்று நீண்டன.

அந்தந்த பகுதியின் விருப்பங்கள், கலாசார, மொழிப் பின்புலங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இங்கே ஆட்சியைப் பிடிக்க எண்ணிக்கொண்டு செயல்படும் தேசியக்கட்சிகள் பெருத்த தோல்வியையே சந்தித்து வருகிறார்கள். பிரிவினைவாதிகள் என்று தொடர்ந்து முத்திரைக் குத்தப்படும் தமிழகம் பல்வேறு சமயங்களில் அநியாயங்கள் இழைக்கப்பட்டாலும் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் மிசோரம்,நாகலாந்து, பஞ்சாப், காஷ்மீர் போல ஈடுபடவில்லை என்பதையும் இணைத்து கவனிக்க வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை. அது ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. வாரிசு அரசியலாக ஒரு கட்சியும், ஓரிரு குடும்பங்களில் பீடமாக இன்னொரு கட்சியும் மாறியிருக்கின்றன என்பதையோ, தனி மனித வழிபாட்டை நிகழ்த்தும் நபர்களைக் கண்டித்துக் கூடப் பேசாமல் ஊக்குவிக்கிற தொனியில் தான் இரண்டு முதல்வர்களும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கட்டாயம் கவலையோடு அணுகவேண்டும். அதே சமயம், பொதுமைப்படுத்தல்கள் மூலம் விவாதத்தின் நடுவே அவரவரின் சார்பு, முன்முடிவுகள் ஆகியவற்றை முன்னிறுத்துவதைக் கவனத்தோடு அணுக வேண்டும். கடந்த காலத்தில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதோடு, எதிரணியும் என்னென்ன தவறுகள் செய்தது என்கிற புரிதல் அவசியம். அவரவரின் கருத்துக்களை மட்டுமே நம்புவதைவிட வரலாற்றை நோக்கி நாமே தேடலை நிகழ்த்தல் அவசியம்

இந்திக்கு இணையான இடம் தமிழுக்கும் வேண்டும்!


இந்திக்கு இணையான இடம் தமிழுக்கும் வேண்டும்:

இந்த வருட குடியரசு தினம் சிறப்பானது. தென்னிந்தியாவை அதிர வைத்த, தமிழகம் முன்னின்று நடத்திய பரவலான இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களின் ஐம்பதாவது ஆண்டை அடைகிறோம்.

பல்வேறு போலீஸ் தாக்குதல்கள், மரணங்கள் ஆகியவற்றுக்கு வழிவகுத்த இந்தப் போராட்டங்கள் ஆங்கிலத்தை இந்திக்கு இணையாக அதிகாரப்பூர்வ மொழியாக மத்திய அரசு தொடரச் செய்தது. இந்தி வெறியர்கள் இந்த நாள் வரை இது ஆங்கிலம் என்கிற அந்நிய மொழியின் மீது தென்னிந்தியர்களுக்கு உள்ள காதலை இது காட்டுவதாக எண்ணிக்கொண்டு உள்ளார்கள். ஆனால், அது தவறான பார்வை. தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தை நாடவில்லை, தங்களின் சொந்த மொழியை இந்திக்கு இணையான இடத்தில் வைக்கவே விரும்புகிறார்கள். இந்தி மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது எதிர்ப்பதற்கான காரணங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இந்திய கூட்டமைப்பு உருவான சம்பவங்களைக் கவனித்தால் தென்னிந்தியா பெரிய ஆர்வமில்லாமலே அதில் பங்கேற்றதை காணமுடியும். ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிகள் பெரிய அளவில் வட இந்தியாவில் நடை பெற்றதையும் வட இந்தியாவில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களின் நீட்சியே பெரும்பாலும் தென்னிந்தியாவில் நடந்தது. இவற்றில் வடக்கு அதிக ஆர்வம், வேகம் கொண்டு செயல்பட்டது. இதற்கு என்ன காரணம் இருந்தாலும், விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தெற்கின் பங்கேற்பு இதனால் குறைவாகவே இருந்தது. இந்தக் காரணம், மற்றும் வெறும் பல காரணங்களால் தங்களின் மொழியை இந்திக்கு இணையாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று அப்பொழுது அழுத்திச் சொல்ல தவறிவிட்டது தெற்கு. ஆனால், தற்போது வேறொரு காலத்தில் வாழ்கிறோம்.

தென்னிந்திய மாநிலங்கள் தற்போது அரசு அதைச் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். நான் இதை எழுதுகிற பொழுதே, பல்லாயிரக்கணக்கான திராவிட இளைஞர் செயல்பாட்டாளர்கள் எட்டாவது பட்டியலில் இருக்கும் எல்லா மொழிகளையும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இது என்னவோ சென்னையோடு முடிந்து விடுகிற போராட்டம் என்று நினைத்தால் பெங்களூரு மக்களும் இதே மாதிரியான கோரிக்கையை வைக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். யாரெல்லாம் இந்தியே இந்தியர்களின் மொழி என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக ஏன் அதற்கும் மேலாகத் தங்களின் தாய்மொழியைத்தான் இம்மக்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் ஆங்கிலத்தையோ, அது தருகிற வாய்ப்புகளையோ நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் ரங்ககூ என்கிற ஜப்பானிய சொல்லின் பொருளான, ‘மேற்கிடம் இருந்து கற்றல்’ என்பதை விரும்புகிறார்கள். தங்களின் தாய்மொழியை ஆங்கிலத்தில் உள்ள விஷயங்களால் செம்மைப்படுத்தலை இளைஞர்கள் செய்கிறார்கள். கூட்டாகப் பலர் சேர்ந்து பங்களிக்கும் Wiktionary மாதிரி தளங்களில் இந்தியின் இருப்பை விடத் தமிழ்,கன்னடம் ஆகியவற்றின் இருப்பு அதிகமாக உள்ளது பல நூறு கோடிகளை மத்திய அரசு அநியாயமாக இந்தியை வளர்க்க செலவிட்டும் சில திராவிட இளைஞர்களின் வேகத்துக்கு அது ஈடுகொடுக்க முடியவில்லை. நன்றாகப் படித்த மக்கள் தங்களின் பிள்ளைகளைக் கூட்டாக நடத்தப்படும் தாய் மொழி வழிக்கல்வி கூடங்களுக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்து உள்ளார்கள். ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் பல்வேறு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதைவிட ஆங்கிலத்தைத் திணித்தலே ஒரு பெரிய வன்முறைதான்.

இந்தியை தங்களின் அரசியல் ஆர்வம், வளர்ச்சி ஆகியவற்றை அடைக்க வந்த புல்லுருவியாகவே இவர்கள் பார்க்கிறார்கள். இந்தியை இதற்கு முன் இருந்த எந்த அரசுகளைவிடவும் விட வேகமாக மோடி அரசு வளர்க்க செய்த அபத்தமான செயல்கள் இந்த எண்ணத்தைக் காட்டுத்தீ போலப் பரப்பியிருக்கிறது. எங்கெல்லாம் இந்தியை தென்னகத்தில் பார்க்கிறார்களோ அங்கெல்லாம் அதை எதிர்க்க திராவிட இளைஞர்கள் (தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல) அழைக்கப்படுகிறார்கள். சமூக வலைதளங்களில் எப்படி இந்தி திணிப்பை பொது இடங்கள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், விளம்பர நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் எதிர்கொள்வது என்று பதிவுகள் ஏராளமாக உள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக, மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு தங்களின் சொந்த சிக்கல்களைத் தாண்டி மற்றவற்றையும் கவனிக்க வைத்திருக்கிறது. அவர்கள் கர்நாடகாவில் கன்னடம் பேசுபவர்களை, தமிழகத்தில் தமிழ் பேசுகிறவர்களைக் காண்கிறார்கள். பயணம், இணையம் ஆகியனவும் உலகம் முழுக்க என்ன நிலை உள்ளது என்பதைப் புரிய வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் பல்வேறு மொழிகளின் மொழிபெயர்ப்புக்கு பல கோடி டாலர்களைச் செலவிடுவதைப் போலவே இந்திய நாடாளுமன்றமும் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முக்கிய மொழியையும் இந்திய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவிக்க வேண்டும்.

நான் முன்னரே சொன்னது போல நாம் வேறொரு காலத்தில் வாழ்கிறோம். ஒரு பக்கம் இந்தி திணிப்பே இந்தியாவை ஒன்றாக வைத்திருக்கும் ஒரே வழி என்று எண்ணுகிறவர்களும், அப்படி இந்தியை திணிக்கக் கூடாது என்று கருதுகிறவர்கள் இன்னொரு பக்கமும் நிற்கிறார்கள். இன்னமும் இந்திய ஜனநாயகத்தின் ஆரம்பக் கட்டத்தை விட்டு அவர்கள் வெளிவரவில்லை. இந்தி என்ன இடத்தை அனுபவிக்கிறதோ அதை மற்ற மொழிகளும் அனுபவித்தால் மட்டுமே இந்தியா ஒன்றிணைந்த நாடாகத் தொடரும். அது நடந்தால், ஆங்கிலத்துக்கு அதிலிருந்து நல்ல விஷயங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு அதன் வழி என்ன என்று காட்டப்படும்.

(இன்றைக்கு மொழிப்போரின் பொன்விழா ஆண்டு. கிரண் பட்னியின் கட்டுரை அதை ஒட்டி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது )

மூலம் :
http://ibnlive.in.com/blogs/kiranbatni/3707/65468/hindi-imposition-on-south-india-then-and-now.html

தமிழில் : பூ.கொ. சரவணன் 🙂

ஹிந்தித் திணிப்பால் ஹிந்தி வளருமா?- யோகேந்திர யாதவ்


ஹிந்தித் திணிப்பால் ஹிந்தி வளருமா?:

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளரும்,அரசியல் விஞ்ஞானியுமான யோகேந்திர யாதவ்ஹிந்தி திவாஸ் நாள் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் எனச்சொல்லி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது :
செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்படும் ஹிந்தி திவாஸ் நாள் வருடாவருடம் நடக்கும் ஆன்மாவற்ற அரசாங்க சடங்கு. ஒரு ஹிந்தி திவாஸ் விழாவை நீங்கள் இரங்கல் கூட்டமோ என்று எண்ணிக்கொண்டால் உங்களை மன்னித்துவிடலாம்.
அந்த இரண்டு வாரங்கள் கடமை தவறாமல் வருடம் முழுக்க இந்தி நமக்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பதை நினைவுபடுத்தும்.

இந்திய அரசாங்கம் ராஜ்பாஷாவான ஹிந்தியை வளர்க்கிறேன் என்று எடுத்த முன்னெடுப்புகள் மாண்டரின்,ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கு அடுத்து பெரிய மொழியாகத் திகழும் ஹிந்தியை ஒரு அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக மாற்றியிருக்கிறது. ஹிந்தி திவாஸ் நம் நாட்டின் மொழிக்கொள்கையில் என்னவெல்லாம் தவறாக இருக்கிறதோ அது எல்லாவற்றின் அடையாளமாக திகழ்கிறது. இந்த தவறுகளை சரி செய்வதன் துவக்கமாக ஹிந்தி திவாஸ் விழாக்கொண்டாட்டத்தை நீக்கலாம்.

ஹிந்தியை தொடர்ந்து தூக்கிப்பிடிக்கும் நானே இப்படியொரு பரிந்துரையை தருவது வினோதமானதாக இருக்கலாம். என்னுடைய நண்பர்கள் இதை எதிர்க்கலாம். அவர்கள் ஹிந்தியில் அதிக பொருள் மற்றும் உயிர்ப்பை கொண்டு வந்து அதை வளர்ப்பதை விட்டுவிட்டு அரசாங்கம் ஹிந்திக்கு கொடுத்திருக்கும் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் விடுவதா என்று எதிர்க்குரல் கொடுக்கலாம்.
நான் முரண்படுகிறேன். ஹிந்தியை சூழ்ந்திருக்கும் அதிகார கருவிகள் ஆங்கிலத்துக்கு ஹிந்தி அடிமைப்பட்டு இருப்பதை உறுதி செய்திருக்கிறது. மற்ற இந்திய மொழிகளோடு ஹிந்திக்கு இருக்கும் தொடர்பையும் அது துண்டித்து விட்டது இன்னமும் மோசமான ஒன்றாகும். அதன் ‘வட்டார வழக்குகளோடு’ம்,அதன் ஆற்றல் மற்றும் படைப்புத்திறனோடும் ஹிந்தி இன்னமும் உயிர்த்திருக்கிறது. இந்த பழைய நடைமுறைகளை உடைத்தால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும்
நான் எப்படி மற்றும் ஏன் என்று விளக்குகிறேன். அதிகாரப்பூர்வ ராஜ்பாஷா பட்டம் ஹிந்தியின் உண்மையான நிலையை மறைக்கிறது. சுற்றிப்பார்த்தால் தான் உண்மையை பதிவு செய்ய முடியும். எங்கெங்கும் நிரம்பி இருக்கும் ஆங்கிலத்தில் சீக்கிரமாக பேச உதவும் கோர்ஸ்களுக்கான விளம்பரங்கள் காளான்கள் போல முளைத்துக்கொண்டு இருக்கும் ஆங்கில வழிக்கல்வி தரும் ‘கான்வென்ட்’கள் ,தன்னை அரைகுறை ஆங்கிலத்தில் வெளிப்படுத்திக்கொள்ள முயலும் பரிதாபத்துக்குரிய சூழல் எல்லாமும் எப்படிப்பட்ட அடுக்குநிலையில் மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

கனவுகளின் மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. வேறெந்த தேர்வும் இல்லாதவர்களின் மொழியே ஹிந்தி. csat சிக்கலில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது என்பது நிரூபணமானது. ஒரு சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவனின் திறனை ஆங்கில மூலத்தில் இருந்து வரும் மொழிபெயர்ப்பின் மூலம் சோதிப்பது காலனிய மனோபாவமே அன்றி வேறில்லை. என்றாலும்,அரசாங்கம் தேர்வுகளை நடத்தியது. ஆங்கிலமே அதிகாரத்தின் மொழி. இந்த வகையில் மற்ற இந்திய மொழிகளின் நிலையே இந்தியின் நிலையம் ஆகும். அதன் சிறப்பு நிலை மற்ற மொழிகளுடனான அதன் உறவை பாழ்படுத்தியிருக்கிறது . எங்கேயும் இந்தியை தேசிய மொழி என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லாத பொழுதும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். அதை பிற மொழியினர் எதிர்க்கிறார்கள். இந்தி இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்றாலும் அது இந்தியாவின் பழமையான மற்றும் வளமான மொழியில்லை.

ஒவ்வொரு இந்தி பேசாத பிற மக்கள் ஓரளவுக்கேனும் இந்தியை பள்ளிகளில் கற்க வேண்டியிருக்கிறது. இந்தி பேசுபவர்கள் வேறெந்த நவீன இந்திய மொழியையும் கற்பதில்லை. உண்மையில் அரசாங்க ஹிந்தி அதன் கலாசார மற்றும் மொழியியல் பாரம்பரியம் மற்றும் அதன் பன்னிரெண்டு ‘வட்டார’ வழக்குகளை விட்டும் தள்ளி நிற்கிற ஒன்றாகவே இருக்கிறது. ஹிந்தி மற்றும் உருது ஆகியவற்றுக்கு இடையேயான பிரிவினை திட்டமிட்டே வளர்க்கப்பட்டது. ஹிந்தி இறந்து விட்டது என்றோ அது இறந்து கொண்டிருக்கிறது என்றோ அர்த்தமில்லை. அது உண்மையில் வளர்ந்தவண்ணம் இருக்கிறது. பம்பாய் சினிமா,கிரிக்கெட் வர்ணனை,வேகமாக வளரும் ஹிந்தி மீடியா அதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. சமகால ஹிந்தி இலக்கியம் மற்ற நவீன மொழிகளின் இலக்கியங்களோடு ஒப்பிடும் வண்ணம் சிறந்திருக்கிறது. ஹிந்தியில் அற்புதமான இலக்கிய விமர்சன பாரம்பரியம் இருக்கிறது மற்றும் சமூக அறிவியலில் பல்வேறு ஆக்கங்கள் அரசாங்க ஹிந்தி வளர்ப்பைத் தாண்டி நடந்திருக்கின்றன. er,
ஆகவே ஹிந்தி திவாஸ் நிகழ்வுக்கு பதிலாக பாஷா திவாஸ் என்கிற நிகழ்வை மாற்றாக நடத்த நான் பரிந்துரைக்கிறேன். அந்நாளை இந்த நாட்டின் மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் வளத்தை குறிக்க பயன்படுத்தலாம். பல்வேறு மொழிகளுக்கு இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் அது ஒரு அடையாளம் ஆகும். அரசாங்கம் அதை செய்யாது. ஹிந்தியை உண்மையில் காதலிப்பவர்கள் இந்த போலித்தனத்தை உடைக்க முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.
அதற்கு பதிலாக அவர்கள் என்ன செய்ய வேண்டும் ? ஹிந்திக்கு செய்யக்கூடிய பெரிய சேவை அதை பயன்படுத்துவது தான். முதலில் பயன்படுத்தக்கூடிய,செயல்பாட்டுத்தன்மை கொண்ட ஹிந்தி அகராதிகளை உருவாக்க வேண்டும்.

சமஸ்கிருதமயமக்கப்பாட்ட அரசாங்க ஹிந்தியை விட்டு நகரவேண்டும். ஹிந்தி தன்னுடைய கதவுகள்,ஜன்னல்களை அதன் வட்டார வழக்குகள்,ஆங்கிலம் முதலிய பிற மொழிகளுக்காக திறந்து வைத்து அதை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். இளந்தலைமுறையை நாம் ஹிந்தி சார்ந்து ஈடுபடுத்த வேண்டுமென்றால் நாம் அவர்களை ஈர்க்கும் இலக்கியம் படைக்க வேண்டு. குல்சாரின் பாஸ்கி கா பஞ்சதந்த்ரா அல்லது சுகுமார் ரெவின் அபோல் தபோல் ஆகியன இதற்கு மாதிரியாக பயன்படலாம். உயரிய தரம் வாய்ந்த பாடப்புத்தகங்களை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஹிந்தி மாணவர்களுக்காக எழுத வேண்டும்

மேலும் சீனம் மற்றும் ஜப்பானிய மொழியைப்போல ஹிந்தியும் இணைய பயன்பாட்டுக்கு உகந்ததாக மாறவேண்டும். மேலும் அதிகத்தரம் வாய்ந்த மொழிபெயர்ப்பு திட்டத்தை தேசிய அளவில் முன்னெடுத்து ஆங்கிலம் உட்பட வெவ்வேறு மொழிகளில் இருந்து நூல்களை ஹிந்திக்கு மொழிபெயர்க்க வேண்டும். ஹிந்தி உருதுவில் இருந்து ஷஹ்யரி வகைக்கவிதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதன் சட்டமொழியையும்,தமிழின் செம்மையான பாரம்பரியத்தையும்,மலையாளத்தின் அச்சு கலாசாரத்தையும்,கன்னடத்தின் சமகால இலக்கியங்களையும்,மராத்தியின் எதிர்ப்பிலக்கியதையும், வங்கத்தின் அறிவுசார்ந்த எழுத்துக்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஹிந்தியை வளர்க்க அதை பரப்புவதை விட அது மற்ற மொழிகளோடும்,மொழிகளோடும் ஏற்படுத்திக்கொண்டிருந்த பாலங்களை அப்படியே இருக்கிறபடியே இருக்க விடுவதுமே சிறந்த வழி