‘ஜெய் பீம்’ இதழிற்காக அண்ணல் அம்பேத்கர் வழங்கிய செய்தி


தந்தை என்.சிவராஜ் அவர்கள் ஆசிரியராக நடத்திய ‘ஜெய் பீம்’ இதழ் ஏப்ரல் 13 1946ல்   பாபாசாகேப் அம்பேத்கரின் அண்ணலின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. பாபாசாகேப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கீழ்கண்ட சிறப்புச்செய்தியை வழங்கினார் :


என்னுடைய 55-வது பிறந்த நாளையொட்டிய சிறப்பிதழிற்கு நான் பங்களித்து என் கருத்துகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டீர்கள். வெளிநாடுகளில் மக்கள் தங்களுடைய இறைத்தூதர்களின் பிறந்தநாட்களையே கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். கெடுவாய்ப்பாக, இந்தியாவில் மட்டுமே இறைத்தூதர்களுக்கு நிகராக அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப்படுகின்றன. இப்படித்தான் நிலைமை இருக்கிறது என்பது பரிதாபகரமானது. தனிப்பட்ட முறையில் என் பிறந்த நாளை கொண்டாடுவது எனக்கு உவப்புடைய ஒன்றல்ல. உச்சபட்ச ஜனநாயகவாதியான நான், நாயக வழிபாடானது ஜனநாயகத்திற்குப் பெருங்கேடு விளைவிக்கிறது எனக்கருதுகிறேன். ஒரு தகுதிமிக்கத் தலைவன் மீது நேசம், அன்பு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றைச் செலுத்துவது ஏற்புடைய ஒன்றுதான். அதுவே அத்தலைவனுக்கும் அவர் தொண்டர்களுக்கும் போதுமானது. ஆனால், தலைவர்களை வழிபடுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது. அது இருதரப்பினரின் ஒழுக்கச்சிதைவிற்கு வழிவகுக்கும். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். எப்போது ஒரு அரசியல் தலைவரை இறைத்தூதர்களுக்கு நிகராக முன்னிறுத்துகிறோமோ, அப்போது அவர் இறைத்தூதரைப் போல நடந்து கொண்டு தன்னைப் பின்பற்றுபவர்களுக்குச் செய்தி வழங்க வேண்டும்.

புகைப்பட நன்றி : அம்பேத்கர் அம்பேத் தளம்


நான் உங்களுக்கு என்ன செய்தியை வழங்குவது? அதற்குகுப் பதிலாக ஒரு கிரேக்க புராணக் கதையைச் சொல்லி அதன் நீதியை தங்களுக்குச் சுட்டிக்காட்ட முனைகிறேன். ஹோமர் கிரேக்க இறைவி டெமிடருக்கு இயற்றிய பாடலில் இக்கதை காணக்கிடைக்கிறது. டெமிடர் தன்னுடைய மகளைத் தேடி கேலியோஸ் மன்னனின் அவைக்கு வருகிறார். எளிய செவிலித்தாய் உருவத்தில் வந்திருந்த இறைவியை யாராலும் கண்டுகொள்ள இயலவில்லை. இராணி மெட்டோநிய்ரா அண்மையில் தான் பெற்றெடுத்திருந்த பச்சிளம் குழந்தை டெமோஃபூனை (பிற்காலத்தில் ட்ரைப்ட்டோலமஸ் என அறியப்பட்டவன்) டெமிடரிடம் வளர்த்தெடுக்கக் கொடுக்கிறார்.மொத்த மாளிகையும் உறங்கிய பிறகு, ஒவ்வொரு இரவும், தொட்டிலில் இருந்து மழலையை வாரியெடுத்து, மின்னுகிற தீக்கங்குகளால் ஆன படுக்கையில் கிடத்தி வந்தார். பார்ப்பதற்குக் கொடூரமானதாகத் தோன்றினாலும், உண்மையில் அக்குழந்தையை தெய்வத்தன்மை உடையவனாக ஆக்கும் பேரன்பு, வேட்கையினால் தான் டெமிடர் அப்படிச் செய்தார். தீக்கங்கின் வெம்மையில் சிக்கி படாதபாடுபட்ட மழலை டெமோஃபூன் கொஞ்சம் கொஞ்சமாகப் பலம் பெற்று வளர்ந்து வந்தான். படிபடிப்படியாகச் சற்று தெய்வத்தன்மையும், சற்று கட்டுரமும், சற்று நம்புதற்கரிய மகிமையோடும் அவன் வளர்த்தெடுக்கப்பட்டான்.

இராணி மெட்டோநிய்ரா மாலை வேளை ஒன்றில் பரபரப்புடன் சோதனை நடக்கும் அவ்வறையின் கதவை திறந்து, தேவையற்ற அச்சத்தால் உந்தப்பட்டு வளர்ப்புத்தாயை தள்ளிவிட்டு, பேராளுமையாக மாறிக்கொண்டிருந்த குழந்தையைத் தீக்கங்குகளிலான தொட்டிலில் இருந்து மீட்கிறார். குழந்தை காப்பாற்றப்பட்டாலும் அதன் பேராளுமையையும், தெய்வத்தன்மையையும் இழக்கிறது.


இக்கதை நமக்கு என்ன நீதியைக் கூறுகிறது? என்னைப் பொருத்தவரை , வாழ்வினில் மேன்மையை இன்னல்களையும் தியாகங்களையும் சந்தித்தால் மட்டுமே எட்டமுடியும் எனக்கற்பிக்கிறது. மானுடப்பண்போ, தெய்வத்தன்மையோ அக்னிப்பரீட்சைக்கு ஆளாகாமல் கிட்டுவதில்லை. நெருப்புப் பரிசுத்தப்படுத்துகிறது, உரமேற்றுகிறது. அதேபோல் தான் போராட்டங்களும், துயரங்களும் வலிமை கூட்டும். ஒடுக்கப்பட்ட எந்த மனிதனும் போராட்டங்களும் இன்னல்களும் இன்றி மேன்மையை அடைய இயலாது. அவன் தன் சுகதுக்கங்களையும், தற்போதைய உடனடித் தேவைகளையும் தியாகம் செய்தால்தான் ஓர் நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும். விவிலியத்தின் மொழியில் சொல்வதென்றால் வாழ்வின் ஓட்டப்பந்தயத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ சிலர். ஏன்? அதற்கான காரணம் தெள்ளத்தெளிவானது. பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கைப்பந்தயத்தில் நிகழ்காலத்தின் இன்பங்களை எதிர்காலத்தேவைகளுக்காகத் தியாகம் செய்யும் தைரியமோ, மன உறுதியோ இல்லாததால் மேன்மையை எட்ட இயலவில்லை.


இக்கதையில் உள்ளதைவிட மேலான,உயர்ந்த அறிவுரை உள்ளதா? எனக்குத் தெரிந்தவரை இதுவே தீண்டப்படாதவர்களுக்கு வழங்கும் சிறந்த, உகந்த அறிவுரையாகும். அவர்களின் போராட்டங்கள், அவர்களின் வேதனைகளை அறிந்தே உள்ளேன். விடுதலைக்கான அவர்களின் போராட்டத்தில் என்னைவிடப் பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என நன்கறிவேன். இத்தனைக்குப் பிறகும், அவர்களுக்கு வழங்க என்னிடம் ஒரே செய்தி தான் உள்ளது. என்னுடைய செய்தி இதுதான்: போராடுங்கள், இன்னமும் போராடுங்கள், தியாகம் செய்யுங்கள், இன்னமும் தியாகம் புரியுங்கள். தியாகங்களுக்கும், துயரங்களுக்கும் துவளாத போராட்டங்கள், இடையறாத போராட்டங்கள் மட்டுமேவிடுதலை அளிக்கும். வேறெதுவும் நமக்கான விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை.

தீண்டப்படாதவர்கள் ஒன்றுபட்டு எழுந்து,எதிர்க்கத் துணிய வேண்டும். தாங்கள் ஒப்புக்கொடுத்திருக்கும் அரும்பணியின் புனிதத்தை உணர்ந்து , உத்வேகத்தோடு ஒருங்கே உறுதிபூண்டு தங்களின் இலக்கை அடைய முயலவேண்டும். அவர்கள் காரியத்தின் மகத்துவத்தையும் உன்னத நோக்கத்தையும் மனதில் நிறுத்தி பிரார்த்தனையாக இதனைக் கூட்டாக உச்சரிக்க வேண்டும் :


தங்களோடு பிறந்தவர்களை வளர்ப்பதற்கான கடமைக்காகக் களம் கண்டு உயிர்வாழ்பவர்கள் பேறு பெற்றோர். தங்கள் காலத்தின் மலர்களை, உடல்,பொருள், ஆவியின் வலிமையை, தீரத்தை எல்லாம் தங்களின் அடிமைத்தளையை அறுக்க அர்ப்பணித்தவர்கள் பேறு பெற்றொர். நன்மை வரட்டும், தீமை வரட்டும், கோடை சுடட்டும், கடுங்குளிர் வாட்டட்டும், புகழ் பெருகினாலும், அவமானங்கள் அடைந்தாலும் தீண்டப்படாதவர்கள் தங்களுடைய ஆண்மையை மீட்கும் வரை துவளமாட்டோம் என உறுதியோடு உழைப்பவர்கள் பேறுபெற்றோர்”

தமிழில்: பூ.கொ.சரவணன்

தண்ணீர் மத்தன் தினங்கள்


ஏன் இந்த நாள் இப்படி முடிய வேண்டும்? Sethupathi Nedumaran தம்பி சொல்லித்தான் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்திற்கு சென்றேன். கொண்டாட்டம், தர்பூசணி நிறைந்த குவளைகள், துள்ளல், பெருகிக்கொண்டே இருக்கும் வெடிச்சிரிப்பு என இத்தனை நெருக்கமான, சினிமாத்தனம் இல்லாத ஒரு திரைப்படத்தை பார்த்து பல நாளாகிறது.
 
சப்டைட்டில் இல்லாமல் அருகிருந்த நண்பனின் உதவியோடு முதல் பாதியைக் கடந்த நாங்கள் இரண்டாம் பாதியில் வசனங்கள் புரியாமலே திரைமொழியில், ஆடிப்பெருக்கன்று அடித்துச் செல்லும் நீர்ச்சுழல் போல கலந்து விட்டோம். பள்ளி மாணவன் ஜேசன், அவன் ஆசிரியர் பிற நண்பர்கள், செவ்வி துளிர்க்கும் பிரியங்கள் இதற்குள் இப்படியொரு படையலைத்தர முடியுமா என இன்னமும் நம்பமுடியவில்லை.
Image result for thanneer mathan dinangal;
 
அந்த பதின்பருவ நாயகனும், நாயகியும். நடிக்கவா செய்கிறார்கள். நம் வாழ்வின் திரும்பாத பொழுதுகளை கண்முன் தங்களின் உடல்மொழியில், அடர்த்தியான மௌனத்தில், பேரன்பில் நிறைக்கிறார்கள்.
 
இசையும், படத்தொகுப்பும் புரிகிற மாயத்தில் திக்குமுக்காடுவது ஒரு புறம் என்றால் ஜேசனின் வாழ்வின் தோல்விகள், கசப்புகள், நிராகரிப்புகள் ஊடாக வெள்ளந்தியான தெருச்சண்டைகளும், மயிலிறகு குட்டி போட்டது போன்ற பிரியங்களும், வெகுளித்தன்மை மாறாத குழந்தைமையும், ஊடலுவகையும் நம் இருளினை ஒளிரச்செய்கின்றன. ஒரு வரி கூட மிகையாக எழுதப்பட்டதில்லை. அந்த தர்பூசணித் தினங்களில் சேறு அப்பி, கடிபட்ட பழத்துணுக்குகளின் சாறு ஆடையில் வழிந்து, காத்திருப்பின் கனிவு பெருகி வானில் சற்றே மிதந்தபடி வெளியே வருவீர்கள். கலையின் வெற்றியும், உண்மையின் கதகதப்பும் அதுதானே?

சொல்லித்தீராத சுட்டி விகடன்  நினைவுகள் 


சுட்டி விகடன் ‘பிரிந்து செல்கிறார் ஸ்பைடர்மேன்’ என்கிற தலைப்போடு தன்னுடைய இறுதி அச்சிதழை வெளியிட்டுள்ளது. தமிழ் படிக்க ஆரம்பித்த காலத்தில் தங்கமலர், சுட்டி விகடன், கோகுலம், அம்புலி மாமா என்றே எங்களுடைய உலகம் செழித்து இருந்தது. அதுவும் சுட்டி விகடனின் கிரியேசன்ஸ் செய்வதற்காகவே அதனைப் போட்டி போட்டுகொண்டு வாங்குகிறவர்களாக நண்பர்கள் பலர் இருந்தோம்.

Image result for சுட்டி விகடன் 

வழ வழ தாளில் காமிக்ஸ், அறிவியல், கதைகள், பொது அறிவு என்று வண்ணங்களில் எங்கள் பால்யத்தை அது நிறைத்தது. அதில் எழுதிய பலரின் பெயரை தலைகீழாகத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இன்றுவரை சொல்ல இயலும். ‘மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்’ எழுதிய வள்ளி டீச்சர் யார்? அறிவியலை சுவாரசியமாகத் தரும் கார்த்திகா குமாரி அக்கா எப்படி இருப்பார்? கையளவு களஞ்சியம் எழுதித் தள்ளுகிற சங்கரச் சரவணன் சார் என்று ஒருவர் உண்மையாகவே இருக்கிறாரா? மின்னியைக் கொன்றுவிடு என்று மாதாமாதம் மாயக்கதை சொல்லும் ரமேஷ் வைத்யா யார் என்றே எனக்கான வினாக்கள் இருந்திருக்கின்றன. முதல்முறையாக வெற்றியின் பரவசமும், தோல்வியின் கசப்பும் ஒருங்கே விகடன் நடத்திய போட்டிகளிலேயே கிடைத்தன.

எப்படி எழுதுவது என்று எனக்குக் கல்லூரி வரும் வரை தெரியாது. ராகுல் காந்தி கல்லூரிக்கு வருகிறார், அவரோடு உரையாட வகுப்புவாரியாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவலை விகடன் வேல்ஸ் சாரிடம் சொன்னேன். அவர் அங்கே நடப்பதை கட்டுரையாக்கி தரச்சொன்னார். எதோ காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு, இருபத்தி ஐந்து பக்கத்தில் நடந்ததைத் தள்ளாடுகிற மொழிநடையில் எழுதிக் கொடுத்தது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும். எனினும், என்னை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அரைப் பக்கத்தில் ராகுல் காந்தி சந்திப்பு குறித்த கட்டுரை சுட்டி விகடனில் வெளிவந்தது. அச்சில் என் பெயரை வெகு நாட்களுக்குப் பின்னர்ப் பார்த்த அந்தப் பரவசத்தைச் சுட்டி விகடன் பல நூறு குழந்தைகளுக்கு இறுதி வரை பரிசளித்த வண்ணம் இருந்தது.

நான் எழுதப் பழகுவதற்குக் கற்றுத் தந்த கண்டிப்புகள் இல்லாத பள்ளியாகச் சுட்டி விகடனே இருந்தது. திரைப்படம், ஆளுமைகள், வரலாறு, விளையாட்டு, மொழியாக்கம் என்று எதையெல்லாம் செய்ய விரும்பினேனோ அத்தனையையும் செய் என்று ஊக்குவிக்கிற களமாகச் சுட்டி விகடன் இருந்தது. என் எழுத்துகளை ஒலிக்கோர்வையாக இரண்டாண்டுகள் ஒலிக்க விட்டு அழகு பார்த்த அன்னை மடியும் சுட்டி விகடனே. மேற்கோள்கள் வேண்டும், ஆளுமைகள் குறித்த சிறு குறிப்புகள் வேண்டும் என்று எதைக்கேட்டாலும் எழுதித் தருகிற ஒரே இதழாகச் சுட்டி விகடன் மட்டுமே இருந்தது. அதன் லேஅவுட்களில் கட்டப்பட்ட சிரத்தை பலரின் கண்களில் படாமல் போயிருக்கும். புதிது புதிதாகப் பல்வேறு முயற்சிகளை அது எடுத்த வண்ணம் இருந்தாலும் அச்சு விற்பனையும், லாப நோக்கமும் அதன் ஆயுளை முடித்து வைப்பது கசப்பைத் தருகிறது.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அதிலும் கணேசன் சார், யுவராஜன் சார், சரா அண்ணன், விஷ்ணுபுரம் சரவணன் அண்ணன் ஆகியோர் பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்து பார்த்தார்கள். FA பக்கங்கள் கல்வியோடு கூடிய கலகலப்பான வகுப்பறைக் கனவை நெருங்க முயற்சித்தது. பல்வேறு அரசுப்பள்ளிகளின் அன்புத் தோழனாகச் சுட்டி விகடன் இருந்தது என்பது மிகையில்லை. இன்றைய அதிவேக உலகத்தில் வளரிளம் பருவத்தினரை தமிழ் கொண்டு கட்டிப்போடுவதில் உள்ள சவால் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் ஒரு காலத்திற்குப் பிறகு செய்தித் தாள்களின் இணைப்பிதழ்கள், சிறிய குழுக்களின் முயற்சிகள் தவிர்த்துப் பெரிதாக எதுவும் மிஞ்சியிருக்கப் போவதில்லை என்பது பெருந்துயர்.

திடீரென்று எப்போதோ படித்த சுட்டி விகடனின் கதைகள் கனவுகளில் சிரிக்கும். குட்டன் பாட்ரிஸ் அக்லினாவை தேடிக்கொண்டு சமீபத்தில் யுவராஜன் சாரை அலைபேசியில் அழைத்தேன். அதனைத் தேடிக்கொண்டு போன பயணம் ஏறத்தாழ பத்தாண்டு காலச் சுட்டி விகடனின் பக்கங்களைப் புரட்ட வைத்தது. ஒரு ஆறு மணிநேரத்தை அரைக்கணம் போலத் தொலைக்கிற பயணத்தை அந்தத் தேடல் பரிசளித்தது. சார்லியும், சாக்லேட் பாக்டரியும் எனும் பாஸ்கர் சக்தி அண்ணனின் மொழியாக்கத்தின் எளிமையும், கொண்டாட்டமும் நாவின் நுனியில் தேங்கி நிற்கிறது. ஆயிஷா நடராசனின் அறிவியல் எழுத்து துவங்கி மருதன் அண்ணனின் புனைவு போன்ற வரலாற்று எழுத்துகள் வரை எல்லாமே இனி நினைவலைகள் மட்டும் தான்.

கோகுலம் நின்றுபோன சில மாதங்களுக்குள் சுட்டி விகடனும் விடைபெறுவது தமிழ் சார்ந்த குழந்தைகள் வாசிப்பின் பேரிழப்பு எனலாம். தொடுதிரைகள் மிகுந்துவிட்ட நம் காலத்தில் குழந்தைகளுக்குக் காணொளிகளும், வீடியோ கேம்சும் தரும் பரவசத்தை வாசிப்பின் மூலம் ஊட்ட முடியாமல் போகிறது என்பது கசப்பான உண்மை. தன்னுடைய எல்லைகளுக்குள் வாசிப்பின்பத்தை வாரி வழங்கிய இரு சிறுவர் சுடர்கள் அணைந்து போவது அரைப்பக்க அஞ்சலியாகக் கூட இல்லாமல் போகும் அவலத்துக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.
படபடப்பும், குறைகளும், அவசரமும் மிகுந்த ஒரு கிராமத்து சிறுவனை அடைகாத்து, அவனுக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்த பெரும் நம்பிக்கையின் மரணம் என்னென்னவோ செய்கிறது.

சுட்டி விகடனின் முகப்பு வாசகமாக இருந்த ‘உயிர்த்தமிழ் பயிர் செய்வோம்’ என்பதையே எம் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் முகப்பு வாசகமாகத் தேர்வு செய்தோம். உயிர்த்தமிழை பயிர் செய்யக் குழந்தைகளின் உலகை வாசிப்பால் நிறைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

Does ‘Shamefully 2’ deserves all this attention & hype…


Watched ‘yours shamefully 2’ short film. I liked the theme and issue which it had touched upon. In this world of instant shares and immediate shaming, it gives a mirror to introspect and be more restrained. All said, now i will record my issues with this film.

Why the movie got such a mileage and views? It is not only because it emotionally as well as poignantly attacks social media warriors. But, what does it also does? It points that elite or non-victimised women may play the victim card. I don’t deny that there had been such instances of fake victimisation and harassing of innocent men as well as teenage guys.

Image may contain: 1 person

Let’s now come to some reality check. Which gender is sexually harassed, abused, stalked for born in that gender? It is mostly women. Who face acid attacks or has to bear the brick bats of society for speaking against sexual predators? It is again women.

Who does more polygamy in India? Men. Married women outnumber married men by 66 lakhs. That is at least 66 lakh men married more than one women. Who owns most of the land, powerful positions across India? Men.

If a woman comes out against a powerful man what is the initial reaction? Slut shaming or endless questions about her character. The video’s narrative focuses on unheard voices of victimised men and it almost exclusively sounds aloud that men are affected by social media frenziness.

Marital rape, domestic violence, sexual abuse, everyday stalking, fighting it out amidst inequal power structures is an everyday crusade for millions of ‘working’ women across India. (Almost all women across India work).

We as a society express our immediate condolences for those videos which question our sheepishness without affecting existing prejudices as well as biases. Many will say that the short film touches upon unheard voices of men or those suffering from shares. How about the girls who committed suicide for the share of morphed images of them? Or those whose private videos made it into pornographic sites? Or those who came out boldly for crusading against the sexual predators who re exploiting them using their positions? Whose side majority took? The gender to which they belonged or the patriarchy for which they re loyal. Women had been made to bear the brunt in almost all the cases as chastity and protection of culture is almost the responsibility of women alone.

Sharing responsibly is need of the hour. No doubt. Social media activism should be more sensible. Totally agreed. But, that should not make us blind to the fact that majority of hapless victims are from one gender. If they re born in suppressed or depressed castes as well as in poor economic conditions life is much much horrible. Let’s not assume the moral high ground of speaking for suppressed minority among dominant gender and lose sight of our perverted, misogynistic behavior which affects women more.

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் -மானுடம் ததும்பும் உலகம்


ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ எனும் மானுடம் ததும்பும், அன்பு மிகைத்த, வெறுப்புகள் அற்றதொரு உலகினில் வசித்து விட்டு வருகிறேன். நாவலில் வருகிற ஹென்றி அடையாளங்கள் அற்றவன். அல்லது இன்னமும் சரியாகச் சொல்வதென்றால் அடையாளங்களைப் பொருட்படுத்தாதவன். ‘முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புகள் இல்லாத, சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத, அன்பு மட்டுமே’ தழைத்த உலகம் அது.

ஹென்றியின் பப்பாவும், அவனும் உரையாடிக்கொள்ளும் கணங்களில் வழியும் பிரியமும், வன்மங்கள் அற்ற நெருக்கமும், அவ்வப்போது இயல்பாகக் கசிந்து பெருக்கெடுக்கும் கண்ணீரும் நம் கரங்களிலும் ஒட்டிக்கொள்கிறது. ‘என் மதம் எவ்வளவு உசத்தினாலும் அதை என் பிள்ளை மேலே திணிக்கக் கூடாது’ என்கிற பப்பா ‘பிரார்த்தனை என்பது வேண்டுவது அல்ல, விரும்புவது’ என்று நெகிழவைக்கிறார். பப்பா என்கிற சபாபதி, ‘யாரும் யாரையும் அடிக்கக் கூடாது. சண்டையே வேண்டாம்.’ என்று வன்முறையற்ற ஒரு புத்துலகை விரும்புகிறார். கடுமையான அடக்குமுறையால், பூவரச மரத்தின் குச்சியால் மட்டுமே பேசும் கொடுமைக்கார தந்தைக்குள் இருக்கும் மெல்லிய மனிதத்தை நாவல் புலப்படுத்துகிற போது பால்யகால அடிகளின் நினைவுகள் எட்டிப்பார்த்தன.

இந்தக் கதையில் வரும் மனிதர்கள் சொத்துக்களை விடத் தர்மத்தை பெரிதென்று நம்புகிறார்கள். தியாகத்தைச் செய்வதில் தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள். அவர்கள் அறத்தின் உச்சங்களை மானுட கசடுகளிடையே வெகு இயல்பாக அடைகிறார்கள். தனக்குப் பிரியமான வேறொருவரோடு வெளியேறுகிற மனைவியைக் கொல்ல சொல்லும் கவுரவங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுக்கிறார்கள். சமயங்களில் உறவுகளின் உன்னதம் காக்க தீங்கில்லாத பொய்களைச் சொல்கிறார்கள். காயப்பட்டு நிற்கும் முன்பின் தெரியாத மனிதர்களுக்கு மனம் கரைய கண்ணீர் வடிக்கிறார்கள். சொந்த காயங்களைத் தாண்டி துரோகம் இழைத்தவர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகக் கவலைப்படுகிறார்கள், அவற்றைக் கடந்து நேசிக்கக் கற்றுத்தருகிறார்கள். 

Image may contain: one or more people and text

கதையின் நாயகன் ஹென்றி கிழங்கு வைக்கிற பெண் துவங்கி, சிறுவர்கள் வரை அனைவரையும் சமமாக மதித்துக் கைகூப்பி வணக்கம் செலுத்துகிறான். அழுதும், பயந்தும் படிக்கிற கல்வி என் மகனுக்கு வேண்டாம் என்கிற பப்பாவின் பேரன்பின் நிழலில் மனிதர்களை அவர்களின் குறைகளோடு ஏற்று அன்பு செலுத்துபவனாக வளர்கிறான். தந்தையின் வேர்கள் தேடி செல்கையிலும், சக மனிதர்களின் துயர்களுக்குச் செவிமடுக்கிறான். கொள்கைகள் என்று தனக்கொன்றும் இல்லை என்று மனிதர்களின் மனதிற்கு முக்கியத்துவம் தருகிறான். அவன் கண்களுக்கு மரத்தில் குதித்தோடும் மந்திகளும், மலையின் பேரழகும், குளிக்கிற பெண்ணும் ஒரே அழகியலோடு ரசிப்பதற்கு உரியவர்கள் ஆகிறார்கள். அந்தப் பார்வையில் மனச்சாய்வுகள் இல்லை. சந்தேகங்கள் சுவடின்றி மனிதர்களை நம்புகிறான். மனதை மட்டும் ரம்மியமாகச் செலுத்தியபடி, வாழ்க்கை இழுக்கும் போக்கினால் புகார்கள் இன்றிப் பயணிக்கிறான். புதிய அனுபவங்களைக் கண்டடைகிறான். 

Image result for ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலில் தனிமனிதர்களின் விடுதலைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூகத்தின் கட்டுப்பாடுகள், போலித்தனங்கள், அடக்குமுறைகளில் இருந்து விலகி தங்களுக்கான வாழ்க்கையை வாழ முயல்பவர்கள் இயல்பாகக் கண்முன் நடமாடுகிறார்கள். ‘நான் திருமணங்களுக்கோ, ஆண் பெண் உறவுகளுக்கோ எதிரியில்ல…எதற்குமே எதிரியாக இருப்பது சரியல்ல… ஆனால்..ஆனால் எனக்குத் திருமணம் அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். எனக்குக் கூழ் மட்டும் போதும். எல்லாரும் கூழே குடிக்க வேண்டும் என்றா சொல்லுகிறேன்? நீங்கள் சொல்கிற மாதிரி இந்தக் கிராமங்களும், இங்கே வாழ்கிற மக்களும் நகர்வாழ்க்கையோடு பேதமற கலந்து போகிற நாள் வரலாம். வரட்டுமே. அதற்கு நானும் ஏன் ஆசைப்பட வேண்டும்?’ என்கிற ஹென்றியின் குரல் எல்லாக் காலத்திலும் விடுதலை நாடும் மனங்களில் ஒலிக்க வேண்டியது. மந்தைத்தனங்கள் தாண்டி மானுடம் நாடுபவர்களை வழிநடத்தக்கூடிய, மனதின் வன்மங்களை, கசடுகளைக் கரைக்கிற அற்புதத்தைப் புரியும் ஆரவாரமற்ற முக்கியமான நாவல் இது.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
ஜெயகாந்தன்
பக்கங்கள் 316
விலை : 325
காலச்சுவடு பதிப்பகம்

மருத்துவராக மிளிர விரும்புகிறீர்களா? இதோ சில விதிகள்


‘மருத்துவர்கள் யார்? தங்களுக்குத் தெரியவே தெரியாத மனிதர்களுக்கு ஓரளவுக்குத் தங்களுக்குத் தெரிந்த மருந்துகளைப் பரிந்துரைப்பவர்கள், ஓரளவுக்குத் தங்களுக்குத் தெரிந்த மனிதர்களின் வியாதிகளைக் குணப்படுத்துபவர்கள்.’ –வால்ட்டர்.

‘The Laws of Medicine’ எனும் சித்தார்த்த முகர்ஜியின் TED உரையில் அடிப்படையில் அமைந்த நூலை வாசித்து முடித்தேன். பொறியியல் பட்டதாரியான நான் எழுதும் இந்நூல் அறிமுகம் மருத்துவத் துறை சார்ந்தது என்பதால் சற்றுக் கடினமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், சுவாரசியமான பல கருத்துக்களைச் சித்தார்த்த முன்வைக்கிறார்.

 

Image result for siddhartha mukherjee

மருத்துவம் குறித்துப் பல்வேறு தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. தகவல்களுக்குப் பஞ்சமில்லாத காலத்தில் ஒரு பெரிய சவால் மருத்துவர்களுக்கு இருக்கிறது. எக்கச்சக்க தகவல்கள் என்பதில் இல்லை சவால். போதுமான தகவல்கள் இல்லாத பொழுது என்ன செய்வது என்பதுதான் சவால். உறுதியாகத் தெரிந்த, கச்சிதமான, முடிவுகட்டப்பட்ட புத்தகங்கள் தரும் அறிவையும், உறுதியற்ற, கச்சிதமற்ற, புரிந்துகொள்ள முடியாத, மாறிக்கொண்டே இருக்கும் மருத்துவப் பட்டறிவையும் கச்சிதமாக எப்படிக் கலப்பது என்பது ஒவ்வொரு மருத்துவ மாணவனுக்குமான சவால்.

மருத்துவம் என்பது மிகவும் வளர்ந்த துறை என்று பரவலாகச் சொல்ல கேட்டிருக்கலாம். லூயிஸ் தாமஸ் எனும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் முப்பதுகளில் பட்டம் பெற்ற மருத்துவர் ஒரு மருத்துவம் குறித்த நூலை எழுதினார். அந்நூலில் மருத்துவத்தை ‘YOUNGEST SCIENCE’ என்று அவர் அழைத்தார்.

காரணம் மிக எளிமையானது. மருத்துவம் ஆனது இயற்பியல், வேதியியல் போலப் பன்னெடுங்காலமாக நன்றாக வளர்ந்த துறை இல்லை. இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர்வரை மருத்துவம் அடைந்த வளர்ச்சிகளை மூன்று P-க்களில் அடக்கி விடலாம். PLACEBO, PALLIATION, PLUMBING.

PLACEBO எனப்படுபவை மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு டானிக் தருவது, நோஞ்சானாக இருப்பவர்களுக்குச் சர்வ ரோக நிவாரணி என்று ஒரே மருந்தை தருவது. இதன் மூலம் மனதில் நோய் குணமாகி விடும் என்கிற நம்பிக்கையை உண்டு செய்து நோயாளியை குணப்படுத்த முயன்றது முதல் வகை.

Palliation எனும் இரண்டாவது வகையில் மார்பைன், கோகைன், கஞ்சா முதலிய வஸ்துக்களைக் கொடுத்து வலி, அரிப்பு ஆகியவற்றைப் போக்கடிப்பது.

Plumbing எனும் மூன்றாவது பகுப்பில் மலமிளக்கிகள், பேதி மருந்துகள், எனிமாக்கள், வாந்தி எடுக்க வைப்பவை ஆகியவையும் இதில் அடங்கும். மலச்சிக்கலை எதிர்கொள்ள, நஞ்சை எடுக்க இவை பயன்பட்டன.

இப்படிப்பட்ட மருத்துவத் தலையீடுகள் நோயாளிகளின் துயரத்தை, நோயை தீர்ப்பதில் பெரும்பாலும் தோல்வியே கண்டன, அதனால், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய வில்லியம் ஆஸ்லரும், அவரின் சகாக்கள், மாணவர்கள் ஆகியோர் நோய்களைக் கண்டறிவது, பகுப்பது, வரையறுப்பது, கவனிப்பது ஆகியவற்றில் ஈடுபட்டார்கள். ஆஸ்லர் பால்டிமோரில் நோயாளிகளை அனுமதித்து அவர்களுக்கு எந்தச் சிகிச்சையும் தராமல் அவர்களைக் கவனித்தார். சிகிச்சை என்று ஒன்று அவர்கள் வசம் இல்லை என்பதே அதற்கு முதன்மையான காரணம். இதயம், நுரையீரல் எப்படி இயங்குகிறது, உயரம், எடை, உறுப்புகளின் செயல்பாடு எனப் பலவற்றைக் கூர்மையாகக் கவனித்துக் குறிப்புகள் எடுத்தார்கள். ஹிப்போகிரேட்ஸ் உறுதிமொழியின் சூளுரையான, ‘முதலில் தீங்கு எதுவும் செய்யாதே’ என்பதை மாற்றி, ‘முதலில் எதுவும் செய்யாதே’ என்று இயங்கினார்கள்.

இந்தக் கவனிப்பு மருத்துவத் துறையை மாற்றிப்போட்டது. நீரிழிவு நோயின் காரணம் உடம்பால் ஒழுங்காகச் சர்க்கரையை உடலில் சேமிக்க முடியாததால் ஏற்படுகிறது எனப் புரிந்தது. இன்ப்ளுயன்சாவுக்குப் பிறகு ஸ்ட்ரேப்டோகாக்கல் பாக்டீரியா உண்டு செய்யும் நிமோனியா வருவது கண்டறியப்பட்டது. ப்ளூவில் இருந்து குணமாகும் நோயாளிகள் விட்டு விட்டு வரும் காய்ச்சல், ரத்தம் சுரக்கும் இருமல் கொண்டிருப்பார்கள் என்பதும், இலையுதிர் கால இலைகள் மீது மனிதன் நடப்பதைப் பொண்ட சத்தத்தை நுரையீரல் எழுப்பும் என்று உணர்ந்தார்கள்.

இந்தக் கவனிப்புகள் மிகவும் இளமையான மருத்துவத் துறையை மாற்றி அமைத்தன என லூயிஸ் தாமஸ் குறிப்பிட்டார். இதயம் ஏன் செயல்படவில்லை என்று புரிந்ததும் நாளங்களைச் சீர் செய்து காப்பது நடந்தது. ஸ்ட்ரேப்டோகாக்கல் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சிலர் அதிலிருந்து மீள்வது அவர்களின் உடம்பின் நோய் எதிர்ப்பால் என்கிற புரிதல் உண்டானதும் அவர்களின் உடம்பில் இருந்து பெறப்பட்ட திரவமான சீரம் நோயாளிகளின் உடம்பில் செலுத்தப்பட்டு உயிர்கள் காக்கப்பட்டன. இப்படிப்பட்ட அண்மைக்காலத்தில் நவீனமான மருத்துவத் துறைக்கு என்று தன்னுடைய அனுபவத்தில் இருந்து சில மருத்துவச் சட்டங்களைச் சித்தார்த்தா முன்வைக்கிறார்.

 

Image result for siddhartha mukherjee

ஆழமான உள்ளுணர்வின் குரலுக்குச் செவிமடுங்கள். பரிசோதனைகள் சறுக்கிவிடக்கூடும்:

Baye’s Theorem என்று கணிதத்தில் ஒரு நிகழ்தகவு (probability) பல்வேறு காரணிகளால் மாறுபடும் என விளக்கம் உண்டு. புரியாதது போல இருக்கிறதா? ஒன்றுமில்லை. ஒரு நாணயத்தைத் திருவிழாவில் கடைக்காரன் சுண்டுகிறான். ஒன்று, இரண்டு என்று பன்னிரண்டு முறை சுண்டுகிற பொழுதும் தலையே விழுகிறது. நிகழ்தகவை அறிந்த எவரும், அடுத்த முறை நாணயத்தைச் சுண்டும் பொழுது பூ விழுமா எனக் கேட்டால், ‘பாதிக்கு பாதி வாய்ப்பு’ என்பார்கள். ஆனால், ஒரு குழந்தையைக் கேட்டால், ‘ஐயே! அவன் ஏமாத்துறான்’ என்று சரியாகச் சொல்லிவிடும். ஒரு நிகழ்வை தீர்மானிக்கும் வெவ்வேறு காரணிகள் குறித்த கவனம் தேவை என்பதே நாம் பெறவேண்டிய பாடம்.’

‘உலகம் முழுக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் நோய் இல்லாத ஒருவருக்கு நோய் இருக்கிறது என்றும், நோய்த்தொற்றுக் கொண்ட ஒருவருக்கு நோய் இல்லை என்றும் முடிவுகள் வரும் வாய்ப்புகள் பல உண்டு. ஆய்வு செய்வதற்கான காலமும், ஆற்றலும் குறிப்பிட்ட அளவே இருப்பதால் மீண்டும், மீண்டும் பரிசோதனைகள் செய்து மட்டுமே எல்லாவற்றையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி விட முடியாது.

ஒரு எடுத்துக்காட்டைக் காண்போம்: நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் புற்றுநோய் மருத்துவர் சோதித்தார். . சோதனைகள் முடிந்ததாகச் சொல்லிவிட்டு இயல்பாக அந்தப் பெண்மணியோடு கதைத்தார். அப்பொழுது மருந்து எழுதும் தாளில் “இன்னைக்குத் தேதி பத்து தானே” என்றபடி தவறாகத் தேதியை எழுதினார். அப்பெண்மணி சிரித்துக் கொண்டே அவரைத் திருத்தினார். கடைசியாகத் தோழிகளோடு எப்பொழுது வெளியே போனார் என்று கேட்டார். அவரின் கையெழுத்து மாறியிருக்கிறதா? அவர் ஒரே காலில் ரெண்டு சாக்ஸ் அணிந்திருக்கிறாரா? முதலிய தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டுவிட்டு அனுப்பி வைத்தார்.

அவர் அப்பெண்ணுக்கு மனப்பிறழ்வு, தூக்கமின்மை, படபடப்பு, பாலியல் செயல்திறன் குறைபாடு, நரம்பு இயக்க்த்தடை (neuropathy) முதலியவை இருக்கின்றனவா என்பதை இந்தக் கேள்விகள், கவனிப்புகள் மூலம் அவர் அறிந்து கொண்டார். இது தொடர்ந்து வெகுகாலம் நோயாளிகளைக் கவனிப்பதன் மூலமும், தன்னைக் கூர்மைப்படுத்திக் கொள்வதன் மூலமுமே சாத்தியம் ஆனது. ஓயாமல் பரிசோதனைகளை மட்டும் நம்பிக்கொண்டு இருக்காமல், மருத்துவர்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது முதல் சட்டம்.

சட்டம் 2:

இயல்பான நோயாளிகள் விதிகளைக் கற்பிக்கிறார்கள், வினோதமான நோயாளிகள் சட்டங்களைக் கற்பிக்கிறார்கள்:

மீண்டும் ஒரு கதை. பூமியை சூரியன், கோள்கள் முதலியவை சுற்றுவதாகத் தாலமி சொன்னதை வெகுகாலம் உலகம் அப்படியே நம்பியது. அவர் காலத்தில் கோபர்னிக்கஸ்எனும் அறிஞர் பூமி முதலிய கோள்கள் சூரியனை சுற்றுகின்றன என்று விளக்கினார். அவற்றின் சுற்றுப்பாதை வட்டவடிவில் இருந்ததாக அவர் சொன்னார். ஆனால், அவர் சொன்னது பொய்யோ என்று கருதும் வண்ணம் பெரும் சிக்கல்கள் எழுந்தன. அவரின் விதியைக் கொண்டு கிரகங்கள் எப்பொழுது எங்கிருக்கும் எனக் கணக்கிட்டால் அது சரியாகத் தவறானது. இவர் சொன்னது சுத்த கதை என்று இழுத்து மூடிவிட்டார்கள்.

டைகோ பூமியை சுற்றி சூரியன் சுற்றுவதாகவும், சூரியனை மற்ற கோள்கள் சுற்றுவதாகவும் ஒரு கலப்பு மாதிரியை முன்மொழிந்தார்.

அந்த மாதிரி உண்மையா எனத் தெரிய வேண்டும் இல்லையா? அதைக் கணக்கிட்டு உறுதிப்படுத்தும் வேலையைத் தன்னுடைய மாணவன் கெப்ளரிடம் தந்தார். அவரின் விதி எல்லாக் கோள்களின் இடத்தையும் சரியாகச் சொன்னது. அவ்வளவுதான் வெற்றி எனக் கொக்கரிப்பதற்குச் செவ்வாய் மட்டும் தடையாக நின்றது. இந்தக் கிரகம் மட்டும் முன்னாடி பயணித்துவிட்டு திடீரென்று ரிவர்ஸ் கியர் போட்டு பின்னோக்கி பயணித்தது. அது எதோ விதிவிலக்கு என்று கெப்ளர் விட்டிருக்கலாம். பல வருடங்கள் அந்தச் சிக்கலோடு மல்லு கட்டினார். மேலும், நாற்பதுக்கும் மேற்பட்ட மாதிரிகளை முயன்று பார்த்தார். இறுதியில் எல்லாக் கோள்களும் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன என்று அவர் கண்டறிந்தார். மேலும், செவ்வாய் பூமிக்கு அருகில் இருப்பதால் எப்படி இரண்டு வெவ்வேறு வேகமாகப் பயணிக்கும் தொடர்வண்டிகள் சந்திக்கிற பொழுது இன்னொரு தொடர்வண்டி பின்னோக்கி நகர்வதைப் போலத் தோன்றுமோ அப்படிச் செவ்வாய் பூமிக்கு அருகே வரும் பொழுது தோன்றுகிறது எனக் கண்டறிந்தார். விதிவிலக்கு என விலக்கப்பட்டிருக்க வேண்டியது தான் புதிய திறப்புகளைச் சாத்தியப்படுத்தியது.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், சில குழந்தைகள் எல்லாரை விட்டு விலகி, தனிமையில் இருப்பவர்களாக, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருப்பதையும், செய்ததையே திரும்பச் செய்யும் பண்போடு இருப்பதையும் மருத்துவர்கள் கண்டார்கள். இதை ஆட்டிசம் எனப் பெயரிட்டார்கள். ஏன் குழந்தைகளுக்கு இந்தக் கற்றல் குறைபாடு ஏற்படுகிறது எனத் தீவிரமாக ஆய்வுகளில் ஈடுபட்டார்கள்.

அம்மா சிடுமூஞ்சியாக இருந்தால் பிள்ளை இப்படி ஆகிறது என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதை உறுதிப்படுத்துவது போலவே ஆட்டிசம் கொண்டிருந்த பிள்ளைகளின் அம்மாக்கள் கடுகடுவென்று இருந்தார்கள் என ஆய்வுகள் காட்டின. இதனால் இந்த அம்மாக்களைப் பிள்ளைகளிடம் இருந்து தனிமைப்படுத்தி மாற்றவேண்டும், ஆட்டிசம் கொண்ட குழந்தைகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து மீட்க வேண்டும் என்று வழிமுறைகளை ஜோராக அமல்படுத்தினார்கள்.

இப்படியே கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகள் ஓடின. ஓரிரு கேள்விகள் மட்டும் இந்த அம்மாவால் ஆட்டிசம் ஏற்படுகிறது எனும் விதியை மீறுவதாக இருந்தன. ஆட்டிசம் தலைமுறைகள், தலைமுறைகளாகத் தொடர்ந்தது. ஒரு பரம்பரையின் எல்லா அம்மாக்களுமா கருணை இல்லாதவர்களாக இருப்பார்கள்? அதே போல வயதான காலத்தில் பிள்ளை பெறும் தந்தைகளின் மகன்கள் ஆட்டிசத்தால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.

இந்த விதிமீறல்கள் குறித்து ஆராயப் போனால் மனிதனின் ஜீன்கள் தான் இவற்றுக்குக் காரணம் என்பதும், ஆட்டிசத்தை உண்டாக்கும் ஜீன்கள் பல்வேறு தலைமுறைகளின் வழியாகக் கடத்தப்படுவது புலனானது. அந்தச் சிடுமூஞ்சி அம்மா கதை? அது காரணம் அல்ல. மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே எனும் அதிர்ச்சியின் விளைவு அது என்று புரிந்தது. அதற்குள் கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஓடிவிட்டன.

இதில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய சட்டம் இதுதான். இன்னமும் மருத்துவத் துறையில் பல்வேறு விஷயங்கள் தெளிவாகவில்லை. தொடர்ந்து ஆய்வுகளும், தேடலும் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கேன்சரை சில வேகமாக வளரும் ஜீன்கள் உண்டாக்குகின்றன எனத் தெரியும். அவற்றைத் தடைப்படுத்தும் கச்சிதமான மருந்துகளைப் பயன்படுத்தியும் ஏன் கேன்சர் வேகமாகப் பரவுகிறது? டைப் 2 நீரிழிவு நோய் இன்சுலின் தரும் சிக்னலை ஒழுங்காக உள்வாங்காத திசுக்களால் ஏற்படுகிறது என்றால், இன்சுலினை ஒழுங்காகத் தந்தும் ஏன் அந்த நோயின் கூறுகள் முழுமையாக நீங்க மறுக்கிறது? பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் பெரும்பாலும் கேன்சர் ஏற்படுவதில்லை? இப்படிப் பல்வேறு கேள்விகள் கொட்டிக் கிடக்கின்றன.

புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுச் சோதனைகளில் வெற்றிகரமாகச் செயல்படும். எனினும், அவை களத்தில் சோதிக்கப்படும் பொழுது சிலரிடம் முற்றாக வேலை செய்யாது. சிலரிடம் அபாரமாக வேலை செய்யும். முற்றாக வேலை செய்யாத இடங்களைக் கொண்டு இப்படிப்பட்ட சூழலை, ‘மரணத்தின் பள்ளத்தாக்கு’ என வர்ணிப்பார்கள். சிலர் மட்டும் பிழைப்பது எதோ அரிதிலும் அரிதான ஒன்று, குருட்டு அதிர்ஷ்டம் என்றெல்லாம் மருத்துவர்கள் அழைத்தார்கள். எனினும், ஸோலிட் எனும் மருத்துவ ஆய்வாளர் இதை நம்ப மறுத்தார்.

சிறுநீர்ப்பையில் புற்றுநோய் தொற்றுக் கொண்ட நாற்பத்தி நான்கு நபர்களை எடுத்துக்கொண்டார்கள். EVEROLIMUS எனும் மருந்தை அவர்களுக்குக் கொடுத்து பார்த்தார்கள். பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்தப் பயனையும் அது தரவில்லை. எனினும், சில நோயாளிகள் மட்டும் அதிசயிக்கத்தக்க வகையில் குணமானார்கள். TSC1 என்கிற குறிப்பிட்ட ஜீன் மட்டும் இந்த நோயாளிகளில் மாற்றம் அடைந்திருந்தது. இப்படிப்பட்ட மாற்றமே அவர்களைச் சிகிச்சையில் முன்னேற்றத்தை காண உதவியது எனத் தெரிய வந்தது. இப்படி, விதிமீறல்களாக இருப்பவர்களைக் குறித்து இன்னமும் ஆழமாக ஆய்வது புதிய புரிதல்களை, மருத்துவத்தை மேம்படுத்துவதைச் சாதிக்கும். கார்ல் பாப்பர் சொல்வதைப் போல, ‘எந்தவொரு அறிவியல் தேற்றமும் அது தவறு என நிருபிக்கப்படுவதற்கான சாத்தியத்தைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கிறது.’ மருத்துவ உண்மைகளும் தான்!

Image result for siddhartha mukherjee laws of medicine

3.) சட்டம் மூன்று: எந்த ஒரு கச்சிதமான ஆய்வுக்கும் இணையாகக் கச்சிதமான மனச்சாய்வு கொண்ட மனிதர்கள் இருப்பார்கள்:

மருத்துவர்களும் மனிதர்கள் தானே? அவர்களின் மனச்சாய்வுக்கு ஏற்ப முடிவுகள் மாறுபட்டு சமூகத்தையே புரட்டிப்போட கூடும். அப்படிப்பட்ட ஒரு கதை தான் HALSTED எனும் மருத்துவரின் மனச்சாய்வால் ஏற்பட்டது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் செல் பகுதிகளை மருத்துவர்கள் அகற்றுவது வழக்கமாக இருந்தது. முழுமையாக அந்தச் செல் பகுதிகளை அகற்றாமல் பாதிக்கப்பட்ட மார்பகப் பகுதிகளை மட்டும் வெட்டி எடுப்பது வழக்கமாக இருந்தது. இப்படி விடுவது அசுத்தமானது, முழுமையாக வெட்டி எடுக்காமல் விட்டதால் தான் பெண்களுக்கு மீண்டும் கேன்சர் வருகிறது என்றார் HALSTED. அவர் சொல்வது நியாயம் போலத் தோன்றினாலும், உண்மை வேறாக இருந்தது. கேன்சர் செல்களை அகற்றிய பின்பு, மீண்டும் கேன்சர் ஏற்பட்டதற்குக் காரணம் பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட செல்களை முழுமையாக அகற்றாமல் போனது அல்ல. கேன்சர் வேறு பகுதிகளுக்கு முன்னமே நகர்ந்திருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கவில்லை.

HALSTED இந்த அறுவை சிகிச்சையையே சுத்தமில்லாத ஒன்று என்று

மனச்சாய்வு கொண்டவராக இருந்ததால் மார்பகம், கை, தோள்பட்டை, நெஞ்சுப்பகுதி ஆகியவற்றின் தசைகளையும் துண்டித்துத் தள்ளினார். இந்தச் செயல்பாடு மீண்டும் கேன்சர் வராமல் தடுக்கும் என்று நம்பப்பட்டது. இதை அப்படியே மருத்துவ உலகம் கேள்விகள் கேட்காமல், ‘புரட்சிகரமான செயல்முறை’ என்றதால் வாரியணைத்துக் கொண்டது. நாற்பது வருடங்கள் கழித்துப் பார்க்கையில் இந்த அறுவை சிகிச்சையால் கேன்சர் மட்டுப்படவே இல்லை என்பதும், நிலைமை மோசமாக மட்டுமே மாறியது என்றும் புலப்பட்டது. அதற்குள் ஒன்றரை லட்சம் பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டு இருந்தனர்.

இப்படிச் சித்தார்த்தா முகர்ஜி தன்னுடைய உரையை முடிக்கிறார்: ‘

“உடம்பில் மணக்கும் ப்ளீச்சிங் மணம், சாராய மணத்தைத் துடையுங்கள். மருத்துவமனையின் இருக்கைகள். வார்ட் எண்கள், பளபளக்கும் கிரானைட் தளங்கள் ஆகியவற்றை மறந்துவிடுங்கள், உடல் அளவில் நீல உடை தரித்த அந்த நோயாளி அனுபவிக்கும் சொல்லொண்ணா துயரங்களை, அதைக் குணப்படுத்த முயலும் மருத்துவரின் முகத்தை ஒரு கணம் மறந்திடுங்கள். சுத்தமான அறிவையும், உண்மையான அறிவையும் பிணைக்கும் ஒரு துறையில் நீங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். மிக இளமையான அறிவியல் மிகவும் மனிதம் மிகுந்த அறிவியல் துறையும் ஆகும். நாம் செய்கிற மிக அழகான, தாங்குவதற்குக் கடினமான பணி இந்தப் பிணைப்பை தொடர்வதே ஆகும்.

THE LAWS of MEDICINES

SIDDHARTHA MUKHERJEE

TED எழுபது பக்கங்கள்

299 ரூபாய்

ஆதிவாசி நடனம் ஆடப்போவதில்லை


ஜார்கண்டில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் ஹன்சா சௌவேந்திர  சேகரின் ‘The Adivasi will not dance’ சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் என்றாலும் மிக எளிய மொழியில் பெரும்பாலான கதைகள் மனதை நெகிழ வைக்கின்றன. இந்த கதைகள் பேசும் அரசியல், வெளிப்படுத்தும் ஆதிவாசி மக்களின் நுண்ணர்வுகள் கவனத்துக்கு உரியவை.

‘அவர்கள் கறி  சாப்பிடுகிறார்கள்’ சிறுகதை சைவ உணவு உண்பவர்கள் நிறைந்த 2002-க்கு முந்தைய குஜராத்தை களமாக  கொண்டது. அங்கே வசிக்க  வரும் பழங்குடியினர் படும் பாடு பெரும்பான்மைவாதத்தின் அடக்குமுறையை இலக்கிய வடிவில் உணர்த்துகிறது. வெவ்வேறு மதத்தினர் தனித்தனி காலனிகளில் வாழ்வது, ஒரு முட்டையை சமைத்து உண்டு விட்டு அந்த வாசனையை போக்கவும், ஓடுகளை பத்திரமாக குப்பை வண்டியில் சேர்க்கவும் படுகிற பாடுகள் தரும் நரக  வேதனையை வாசித்து உணர வேண்டும். அந்த  மாநிலத்தை  விட்டு நீங்கியதும், ‘நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று பிறரும், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று நாமும் கவலைப்படப்போவதில்லை.’ என்கிற வரி எல்லாருக்குமானது.
சந்தாலி பழங்குடியின பெண்களின் மீதான பாலியல் வன்முறையை படபடப்பும், வெம்மையும் குறையாமல் நான்கே பக்கங்களில் ‘நவம்பர் என்பது இடப்பெயர்வுகளின்  மாதம்’ கதை கடத்துகிறது. ‘உங்களைப்போன்ற சந்தாலி பெண்கள் இதற்காகவே படைக்கப்பட்டவர்கள்.’ என்றபடி இடப்பெயர்வுக்கு போகும் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் காவல்துறை அதிகாரி பேசுகிறான். அதிகாரத்தின் வன்முறை வர்ணனையில் பொதிக்கப்பட்டு  வாசிக்க கிடைக்கிறது.  ‘இறுதியில் ஒரு ஆறிப்போன பிரெட் பக்கோரா, ஐம்பது ரூபாயை திணித்தான். அவள் பக்கோராவை தின்றாள், தன்னுடைய உள்ளாடைக்குள் ஐம்பது ரூபாயை பத்திரப்படுத்தினாள். லுங்கியை சரி செய்து கட்டிக்கொண்டு தன்னுடைய குழு நோக்கி நடந்தாள்’ என்று கதை முடிகிறது.
பழங்குடியினர் பகுதியில் நடக்கும் பல்வேறு அநீதிகளை, ‘அதற்குள் பல    சந்தாலி பெண்கள் விற்கப்பட்டு இருப்பார்கள். பல சந்தாலி ஆண்கள் போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். மோதிக்கொள்ளும் குழுக்கள் தங்களிடையே உள்ள பகையை தீர்த்துக்கொள்ள பல்வேறு வழக்குகளை ஜோடித்து இருப்பார்கள்’ எனும் சில வரிகள் சாவகாசமாக கடத்துகிறது.
The Adivasi Will Not Dance
விருப்பத்தை மீறிய திருமணத்துக்கு முந்தைய நாள் தான் காதலிப்பவனை  சந்திக்கும் பெண்ணைப்பற்றிய கதையின் வர்ணனை இது
‘நான் எப்பவும் உனக்காக மட்டும் தான். என்னோட எப்பவும் இருப்பேன்னு சொல்லுடா’. அவன் அவளை காதலித்ததால் எதுவும் சொல்லவில்லை. அவன் அவளை காதலிக்கவில்லை என்பதால் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று நின்றான்.
இனிமேல் எப்போதும் சந்திக்கவே முடியாது என்கிற முகத்தில் அறையும் உண்மை, தள்ளியே இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் அவர்களை நெருக்கமாக்கியது.’
நாட்டார் தெய்வங்களை நினைவுபடுத்தும் கதை ஒன்றும், பழங்குடியின பெண்களான சக இல்லத்திகள் இருவரின் அன்னியோன்னியம் நிறைந்த மோதல், அன்பு ததும்பும் கதை ஒன்றும், வேசையாக  அளவற்ற அன்போடு திகழும் சோனாவின் செறிவு மிகுந்த கதையும் நூலில் இடம் பெறும்  வேறு சில கதைகள்.
‘ஆதிவாசி நடனம் ஆடப்போவதில்லை ‘ கதை நூலின் மிக முக்கியமான கதை. எப்படி ஆதிவாசிகளின் வாழ்க்கையை, வேர்களை வளர்ச்சி என்கிற பெயரில் பெயர்த்து எடுக்கிறோம் என்பதை ஆதிவாசி நாட்டியக்கலைஞனின் தேர்ந்த நினைவலைகளில் கடத்துகிறார் சேகர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், முதலாளிகள், அரசுகள் என்று சகலரின் மீதும் படபடக்கும் இந்த ஒரு கதையெனும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். பிடுங்கப்பட்ட நிலத்தின் மீது எழும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் நாட்டியமாடும் ஆதிவாசிகள் எத்தனையோ சொல்லாத சங்கதிகளை சொல்லுகிறார்கள். எளிய நடையில் அமைந்த, வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் சிறுகதை நூல்
Hansda Sowvendra Shekhar
The Adivasi will not dance
Speaking Tiger
ஹன்சா சௌவேந்திர  சேகர்
விலை: 245
பக்கங்கள்: 140

ஜெயலலிதா-புனைவில் புலப்படும் அரசியின் வாழ்க்கை!


சமகால அரசியல் கதைகள் பெரும்பாலும் புனைவு வடிவம் பெறுவதில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை நாவலாக அரிதிலும், அரிதாகவே வந்திருக்கின்றன. சினிமாவுக்குப் போன சித்தாளு எம்ஜிஆரை குறிப்பிடுவது என்பார்கள். வெட்டுப்புலி நாவலில் திராவிட இயக்க அரசியல் இழைந்து நகரும். சமகாலத் தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ் பரணிகளாகவே அமைகின்றன. ஆங்கிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் மிகச் சொற்பம். அண்ணா குறித்து ஒரு நூல், மறைமலையடிகள் குறித்து ஒரு நூல் ஆகியவை நினைவுக்கு வருகின்றன. இருவர் படத்தை எக்கச்சக்க நண்பர்கள் சிலிர்ப்போடு புகழ்வதைக் கண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் ஜெயலலிதா இறந்த பின்பு வாஸந்தியின் சிறுநூல் வெளிவந்தது. அவருடைய வாழ்நாளில் நீதிமன்ற தடையை அவர் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தச் சூழலில் ஆங்கிலத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அனிதா சிவக்குமரன் ‘The Queen’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னரே எழுதிய நாவலை தற்போது தான் வெளியிட்டு உள்ளார். நாவல் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி என்றுவிட முடியாது.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

கலையரசி என்கிற நாயகி தமிழ் வேர்கள் கொண்டவராகக் காட்டப்படுகிறார். அவரின் மேற்படிப்புக் கனவுகள் பொசுங்குகிற கணத்திலும், தாத்தா என்று வாட்ச்மான் நெஞ்சில் சாய்ந்து அழ மருகுகிற அன்புக்கு ஏங்கும் இளம் நடிகையாகப் பதிய வைக்கப்படுகிறார் கலையரசி. ‘பின்க்கியை தவிர எனக்குத் தோழிகள் இல்லை’ என்கிற கலையரசியின் மனக்குரல் ஜெயலலிதாவின் தனிமை மிகுந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது.

முழுக்கப் பி.கே.பி என்கிற எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தின் நிழலில் வளர்கிற ஒருவராகக் கலையரசி இல்லை. அவரின் திரைப்படங்களை அவரின் முகத்துக்கு நேராக விமர்சிக்கிறார்.’வசனம் பேசியே வில்லன்களைத் திருத்துறீங்க. அவங்க உடனே திருந்தி உங்க காலில விழறாங்க. ..நீங்க ஒரு சாக்கடை பக்கமா வரீங்க. நீங்க அதில கால் வைக்கக் கூடாதுனு ஒருத்தன் நீட்டுவாக்கில விழறான். என்ன சினிமா இது?’ என்கிற கணத்தில் தனித்த ஆளுமை வெளிப்படுகிறது.

கதை நேர்க்கோட்டில் பயணிக்காமல் முன்பின்னாகப் பயணித்து வாசிப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. புனைவு என்கிற வெளியின் சுதந்திரத்தோடு ஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றியும் கதைப்போக்கை அமைக்கிறார் அனிதா. ஆகவே, தெரிந்த கதை தானே என்கிற சலிப்போடு நூலை வாசிக்க முடியாது.

விமர்சனங்கள் பெரும்பாலும் இல்லாமல் ரத்தமும், சதையுமாகக் கலையரசியின் வாழ்க்கை கதையாக விரிந்தாலும் தருணங்களில் கூர்மையான வரிகள் கவனிக்க வைக்கின்றன. ‘இந்த ஆடம்பரமான கல்யாணத்தைப் பத்திய இந்தக் கட்டுரையை எடிட்டர் வெளியிட மாட்டார். அவர் ஒன்னும் மோசமான மனுஷனில்லை. ஆனா, அவர் அலுவலகத்தைக் கட்சி குண்டர்கள் உடைக்கிறதை விரும்ப மாட்டார். அவமதிப்பு வழக்குல உள்ள போய் மிதிபட அவர் தயாரில்லை. அவர் மனைவி முகத்தில் ஆசிட் அடிக்கிறதை அவர் எப்படித் தாங்க முடியும்?’

ஆண்களால் மட்டுமே சூழப்பட்ட அரசியலில் தனக்கு என்று ஒரு இரும்பு கூண்டை கட்டிக்கொண்ட கலையரசியின் வாழ்க்கைக்குள் வீடியோ கடை நடத்தும் செல்வி நுழைந்த பின்பு எப்படி ஊழல்மயமாகி போகிறது வாழ்க்கை என்பது எளிய, விறுவிறுப்பான நடையில் புலப்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு ஒன்று, ‘அதிகாரப்பூர்வமாக அவரின் சம்பளம் ஒரு ரூபாய் ..ஆனால், அவரால் எதையும் தனதாக்கி கொள்ள முடியும். விரலைக் கூடத் தூக்க வேண்டியதில்லை. பண மழை பொழிந்தது. ஒரு நோயுற்ற மனிதன் பல்வேறு நோய்களைச் சேர்ப்பது போல அதிகாரத்தில் இருந்தபடி அவர் சொத்துக்களைக் குவித்தார்.’

எனினும், இறுதியில் கலையரசி கைது செய்யப்பட்ட பின்பு வரும் விவரிப்பில்
கலையரசி மீது அனுதாபம் ஏற்படுகிற தொனியிலேயே ஆசிரியரின் நடை அமைகிறது. கருணாநிதியின் அரசியல் ஓரிரு கணங்களில் கூர்மையாக விமர்சிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளின் மூலம் நடத்தப்படும் அரசியல், சூப்பர் ஸ்டாரின் வாய்ஸ் படலம் ஆகியவையும் உண்டு.

படிப்படியாக அரசியலின் ஆழ அகலங்கள் புரிந்து கொள்ளும் கலையரசி எப்படி அரசி ஆகிறார் என்பதைச் சில கணங்களில் இயல்பாக நாவல் புரிய வைக்கிறது. குறிப்பாக மேடைப்பேச்சில் எப்படித் தனக்கான பாணியைக் கண்டடைகிறார் என்பது கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பகுதி. சர்வாதிகாரியாக உருமாறும் கலையரசியின் வாழ்க்கை பக்கங்கள் 2005-யோடு முடிந்துவிடுவது வாசகருக்கு சற்று ஏமாற்றத்தை தரலாம்.

நாவலின் பெரிய பலவீனம் கோட்பாட்டுத் தளத்தில் பயணிக்க மறப்பது. ஏன் பல்லாயிரம் பேர் கடவுளாக வழிபடுகிறார்கள் என்பதை இன்னமும் செறிவாக நம்ப வைக்காமல் கடப்பது. ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி அல்ல இந்த நாவல். அதன் தாக்கம் வெவ்வேறு இடங்களில் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாகக் கலையரசியின் ஆழ்மனப்போராட்டங்கள் இன்னமும் நெருக்கமாகப் பதியப்பட்டு இருக்கலாம். எனினும், முக்கியமான முயற்சி.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

The Queen
Anita SIvakumaran
Juggernaut Books
பக்கங்கள்: 280
விலை: 350

அரசியல் பழக அழைக்கிறான் சகாவு!


நிவின் பாலியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் சகாவு திரைப்படத்தைப் பார்த்தேன். இடதுசாரி கொள்கை கொண்ட காம்ரேட் கிருஷ்ணனின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படம். பிரச்சாரத்தைக் கமர்ஷியல் கலந்து கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். ஏகாதிபத்தியம், பூர்ஷ்வா, மூலதனம், மார்க்ஸ் முதலிய பெயர்கள் படத்தில் வரவில்லை.

எத்தனை தத்துவங்கள் படித்தாலும் மக்களின் மனங்களில் இடம்பெறுவது முக்கியம். எல்லா இடங்களிலும் ஒரே போராட்ட முறை உதவாது. எதிர்ப்பின் வடிவங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்று பல்வேறு பாடங்கள் இயல்பாக எடுக்கப்படுகின்றன.

இடதுசாரி இயக்கத்தில் சாதி மறுப்பும் பிரதான இடம்பெற வேண்டும் என்பதை, ‘நான் யார் என்பதை என் பெயருக்குப் பின்னால் இருக்கும் வாலை கொண்டு தெரிந்து கொள்ள முடியாது. என் முன்பெயராலேயே நான் யார் என்பது தெரியும். சகாவு (தோழர்) கிருஷ்ணன்” என்கிற கணம் உணர்த்துகிறது. தன்னுடைய மனைவியின் கூலிப்பணத்தை, ‘உன் பணம் நீயே என்ன வேணா பண்ணு.’ என்கிற சகாவு கிருஷ்ணன் பெண்களின் விடுதலை வெளியை ஆண்கள் மதிக்க வேண்டும் என்று பாடம் நடத்துகிறார்.

அரசியல் படிக்கிற பிள்ளைங்களுக்கு எதுக்கு? என்கிற ஆசிரியையிடம், “பொறக்கிறப்பவே அரசியல்ல நாம அங்கமாகிடறோம் இல்லையா? ஏன் வகுப்பிலே பசங்க கருப்பு, நீல மையில் எழுத நீங்க சிவப்பு மையில திருத்துறீங்க? ஏன் மேலே இருக்கவங்க பச்சை மையில் கையெழுத்து போடுறாங்க. அதுவும் அரசியல் தானே? எது நல்லது, கெட்டதுனு பிரிச்சு பாக்க பழகணும். நாளைக்கு எங்கே போனாலும் சரியா செயல்பட அரசியல் புரியணும்.’ என்கிற கனம் விசிலடிக்க ஆசையாக இருந்தது.

Image may contain: 5 people, people standing, cloud, sky and text

சமீபத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது அரசியல் செயல்பாட்டாளருமான ஜெயபிரகாஷ் நாராயணன் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது, ‘அதிகாரிகள் இருக்கிற அமைப்பை அப்படியே கட்டிக்காப்பவர்கள். அரசியல்வாதிகள் தான் உண்மையான மாற்றத்தை முன்னெடுப்பவர்கள்.’ என்று சொன்னார். ஒரு அரசியல்வாதி என்பவன் உச்ச இடங்களை அடைகிற ஒருவனாக மட்டும் இருக்க வேண்டும் என்றில்லை, எளிய மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கிற,போராடுகிற ஒருவனாகவும் இருக்கலாம் என்று படம் உணரவைக்கிறது.

அரசியலில் எப்படியாவது உச்சத்தை அடைவது என இயங்கும் இளைஞனின் பார்வையில் நகரும் திரைப்படம் கலை என்பது இளைஞர்களை அரசியல்மயப்படுத்தப் பயன்படும் என்பதை நகைச்சுவை, ஆக்ஷன் ஆகியவற்றைக் கச்சிதமாகக் கலந்து கடத்துகிறது. வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ளும் தருணங்கள் விமர்சனத்துக்கு உரியவை. அரசியல் பழக அழைக்கிறான் சகாவு. அவசியம் பாருங்கள்.

— with Nivin Pauly.

தெய்வம் என்பதோர்-தொ.பரமசிவன்


தொ.பரமசிவன் அவர்களின் ‘தெய்வம் என்பதோர்’ நூலை படித்து முடித்தேன். பெரும்பாலான கட்டுரைகள் சிறு தெய்வங்கள் குறித்ததாகவும், பிற பக்தி இயக்கம், பாரதி, பெரியார் என்றும் நீள்கின்றன.

Image result for தெய்வம் என்பதோர்பழந்தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாடு அரசுகள் உருவான பொழுது கொற்றவை என்று மாறியது. கொல் என்பதே கொற்றவைக்கு வேர்ச்சொல்லாகும். இந்தக் கோயில்களின் பூசாரிகளாகப் பிராமணர் அல்லாதாரான பண்டாரம், வேளார், உவச்சர் ஆகியோர் திகழ்ந்தார்கள்.தாய் தெய்வங்களை வைதீகம் தனதாக்கி அம்மன், தாயார் என்று அமரவைக்க முயன்றாலும் தன்னுடைய தொன்மையின் எச்சங்களை அப்படியே தாய்த்தெய்வங்கள் காக்கவே செய்கின்றன. பொங்கல், முளைப்பாரி, சாமியாட்டம், ரத்தப்பலி ஆகியன நடைபெறும் பெருந்தெய்வங்கள் தாய்த்தெய்வங்களே ஆகும்.

தந்தை தெய்வம் இல்லாமல் தனித்த தாய் தெய்வமாகக் குமரி தெய்வத்தைத் தமிழர்கள் கொண்டாடி இருப்பது கல்வெட்டுக்களின் மூலம் தெரிகிறது. கடல்கெழு செல்வியாக, பிற்காலத்தில் மணிமேகலை தெய்வமாக இவளே நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் தொ.ப.

மதுரை மீனாட்சி அம்மன் பாண்டியரின் குலதெய்வம் என்பதை உணர்த்தும் வண்ணம் வேப்பம்பூமாலையைச் சூடுவது வேறு எங்கும் தமிழகத்தில் அறியாத சடங்காகத் திகழ்கிறது. பெண்ணுக்கு மட்டுமே அரசாட்சி உரிமை என்பதை இக்கோயிலின் சடங்குகள் சுட்டுகின்றன.

திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில் பூசாரி புடவை சுற்றிக்கொண்டு பூசை செய்வது நிகழ்கிறது. தலையை அறுத்து பலிகொடுக்கும் நவகண்டம் பூசைகள் இருந்ததைச் சிற்பங்கள் காட்டுகின்றன. இது நரபலி கொடுக்கும் உக்கிரமான தாய்த்தெய்வ கோயிலாக இருந்திருக்க வேண்டும்.

பங்காரு காமாட்சி என்பது தெலுங்கு பேசும் பொற்கொல்லர்களின் தெய்வமாகும். வைதீகத்தின் கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு முன்பு காஞ்சி காமாட்சி கோயில் விஸ்வகருமாக்கள் வசமே இருந்திருக்கிறது என வாய்மொழிக் கதைகள் உண்டு. காமகோட்டம் எனும் தாய்த்தெய்வ இடத்தையே காமகோடி என மாற்றிக் கொண்டது வைதீகம்.

Related image

பத்திரகாளி என்கிற பெயரில் பெரும்பாலும் வழிபடுவது நாடார்கள். உலகம்மை, உலகம்மாள் எனும் தெய்வங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட்டதாக இருக்க வேண்டும். கத்தோலிக்கம் இங்கு வேரூன்றிய பொழுது வீரமாமுனிவர் இயேசுவின் அன்னையை உலகநாயகி எனப் பெயர் சூட்டி கோயில்களை உருவாக்கினார். இயேசுவே ஆலயத்தின் மையம் என்றாலும், தாய்த்தெய்வ வழிபாட்டில் மூழ்கிப்போன கிறிஸ்துவர்கள் அல்லாத தமிழர்கள் ‘மாதா கோயில்’ என்றே அழைப்பதை கவனிக்க வேண்டும். அம்பிகா யட்சி எனும் சமண தெய்வமே இசக்கியம்மன், பகவதியம்மன் என வழிபடப்படுகிறது. பொன்னியம்மன் என்பதும் ஜ்வாலா மாலினி எனும் சமணச் சமய பெண் தெய்வமே ஆகும்.

நீலி என்கிற பெண்ணை வணிகக் குலத்தைச் சேர்ந்த கணவன் கொலை செய்கிறான். வேறொரு திருமணம் செய்துகொண்ட பின்னர்ப் பேயான அவள் மனைவி போலத் தோன்றுகிறாள். கையில் கரிக்கட்டையைக் குழந்தையாக்கி கொண்டு மாயம் செய்கிறாள். அப்பா என்கிறது குழந்தை. அவனோ உடன் செல்ல மாட்டேன் என்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். பழையனூர் வேளாளர்கள் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்கிறார்கள். ஒருவேளை அவன் அவன் பேய் என்று சந்தேகிக்கும் பெண்ணால் கொல்லப்பட்டால் தாங்கள் தீக்குளிப்போம் என்கிறார்கள். அவனை நீலி கொள்ள அவர்கள் தீப்பாய்கிறார்கள். இங்கிருந்து தான் நீலிக்கண்ணீர் எனும் பதம் வருகிறது.

நீலி தன்னைக் கொன்ற கணவனைப் பழி வாங்கினாலும் அது வசைக்குரிய ஒன்றாக மாறியிருப்பதைக் காண வேண்டியிருக்கிறது. அதேசமயம் வாணிகர்-வெள்ளாளர் முரண்பாடும் வெளிப்படுகிறது. காப்பியங்கள் வணிகர்களைப் போற்றியதையும், பக்திக்காலத்தில் பெரும்பாலும் நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும் இணைத்துக் கவனிக்க வேண்டும்.

முருகு வழிபாடு, வள்ளி வழிபாடு தனித்தனியே தமிழகத்தில் வழங்கி வ்வந்திருக்கின்றன. நாவுக்கரசர் முருகனின் இணையாக வள்ளியை குறிப்பிடுகிறார். மற்ற பக்தி இயக்க முன்னோடிகள் முருகனுக்கு இணையாக யாரையும் சொல்லவில்லை. அதேசமயம், தெய்வானையைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் வைதீகத்தில் முருகன் கார்த்திகேயனோடு இணைந்து வள்ளி-தெய்வானை என இருவருக்குக் கணவனாக மாறுகிறார். இந்த நெடிய பண்பாட்டு வரலாற்றைக் கணக்கில் கொள்ளாமல் கமில் சுவலபில் முதலிய தேர்ந்த அறிஞர்களே முருகனின் முதல் மனைவி தெய்வானை என்கிறார்கள்.

காயஸ்தர்கள் முதலிய வடநாட்டு கணக்கு எழுதும் சாதியினரின் கடவுளாக இருந்த சித்திர குப்தன் தமிழகத்தில் தெய்வமாக மாறிய பொழுது பிறப்பு-இறப்பு சார்ந்து நியாயக் கணக்கு பார்க்கும் பொறுப்புக்கு உரியவராக மாற்றப்பட்டு இருப்பது சுவையானது.

திருநெல்வேலியின் சிங்கிகுளத்தில் ஒரு சமணக் கோயில் உள்ளது. சமணம் திருநெல்வேலியை விட்டு வெளியேறி எழுநூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. நேமிநாதர் எனும் 23வது தீர்த்தங்கரர், அவரின் இணையான அம்பிகா யட்சி ஆகியோர் முனீஸ்வரர், இசக்கியம்மன் என்று இங்கே மாறியுள்ளார்கள். பலி முதலியவை இந்தக் கோயிலில் இல்லை. நேமிநாதர் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்மன் வழிபாடு முன்னணி பெற்றிருக்கிறது. வைதீகம் பிற மதங்களின் இடங்களை நொறுக்குவதைச் செய்திருக்கையில், நாட்டார் மரபு அந்தத் தெய்வங்களைத் தனதாகக் காண்பதை, ‘மதச்சகிப்பின்மை என்று ஒன்று இல்லை.’ எனும் பணிக்கரின் வரிகளோடு ஒப்பிட்டு தொ.ப புரிய வைக்கிறார்.

வள்ளலார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயங்கினார். சிதம்பரத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் வடலூர் சபையை உருவாக்கி உருவம் அற்ற வழிபாட்டை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் சிதம்பத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் இருந்தது. சைவ மடங்களும் சாதி மரபைப் பேணுபவையாக இருந்தன. இந்தக் காலத்தில் வள்ளலார் சாதி வேறுபாடுகள் அற்ற வடலூர் சத்திய ஞானச் சபையை நிறுவினார். பிராமணர்களுக்கு மட்டுமே அன்னதானங்கள் பெருமளவில் தமிழகத்தில் வழங்குவது பொதுவழக்காக இருந்தது. கடுமையான பஞ்சங்கள் தமிழகத்தைச் சூழ்ந்த நிலையில், ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்று எழுதியதோடு நில்லாமல் எல்லா மக்களின் பசியைப் போக்கும் பெரும்பணியைச் செய்தார் என்பது நோக்கத்தக்கது.

 

Related image

ஆழ்வார் பாசுரங்களில் கண்ணன் பற்றிய குறிப்புகளே அநேகம் வருகின்றன. கீதை பற்றிய குறிப்பே இல்லாததைக் கவனிக்க வேண்டும், கண்ணன் என்பவனைப் பெருந்தெய்வமாக அவர்கள் பாடினாலும், சௌலப்பியம் மிக்க எளியவனாக அவனின் லீலைகளைப் பாடுகிறார்கள். ராதை எனும் அத்தை வடக்கில் அவனின் துணையாக இருக்க, தமிழகத்தில் முறைப்பெண்ணான நப்பின்னை அவனின் துணை என்று கதைகள் அமைகிறது. இந்த முறைப்பெண் உறவு திராவிடப் பகுதிக்கே உரியது என்பார் ஹட்டன்.

பாரதி சைவ மரபில் ஊறி வளர்ந்தவர். அவரின் மாமா கூடச் சிவ பூசை செய்பவராகப் பாரதி குறிப்பிடுகிறார். கண்ணன் பாட்டில் கூட மூன்று இடங்களில் சிவ யோகம் எனும் வரி வருகிறது. பின்னர் ஏன் வைணவ கண்ணன் குறித்துப் பாரதி பாடினான்? மதக்கொலைகள், கோத்த பொய் வேதங்கள் என்று பலவற்றைப் பாரதி சாடுகிறான்.
கண்ணன் என் காதலி என்று புரட்சி செய்கிறான். இறைவனை ஆண்டானாக, வேலையாளாக மாற்றி விளிம்பு நிலை மனிதனின் குரலை பதிகிறான். பாரதிக்கு மையத்தைக் கலைத்துப்போடும் பெரும் கனவு இருந்திருக்கிறது. அதிகார பீடங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பிரதியாக ஜனநாயக தன்மையைக் கண்ணனைக் கொண்டு அவர் முயற்சிக்கிறார். ‘வேண்டுமடி எப்பொழுதும் விடுதலை’ எனப்பாடிய பாரதி அதிகார மையம் அழித்தல் என்பதையே கண்ணன் பாட்டின் மூலம் நிகழ்த்துகிறார் என்கிறார் தொ.ப.

Image result for kannan paattu

ஆண்டாள் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இடையர் குலத்தைத் தன்னுடைய பாடல்களில் வடமதுரை, இடைச்சேரி, விருந்தாவனம் என்று பல்வேறு பிற்புலங்களைக் குறிப்பிடுகிறாள். எளிய மக்களின் மொழியில் இன்றும் வழங்கிவரும் சுள்ளி, மேலாப்பு, கட்டி அரிசி, பரக்கழி முதலிய சொற்கள் ஆண்டாளின் பாடல்களில் விரவி வருகின்றன. நாத்தனார் மாலை சூட்டுதல், தலையில் பொரி அள்ளிப்போடுதல் எனப் பார்ப்பனர்கள் பின்பற்றாத மணச்சடங்குகளைத் தன்னுடைய பாடல்களில் பதிகிறாள் ஆண்டாள். புராணங்களில் பெரும் தேர்ச்சி உள்ளவள் ஆண்டாள் என்பது, ‘வினதை சிறுவன்’ எனக் கருடனை குறிப்பதில் இருந்தே புலப்படுகிறது என்கிறார் தொ.ப.

தமிழகத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு ஜாதியினரியின் சடங்கியல் நடைமுறைகளைத் தங்களுடைய தலைமைக்குக் கீழ் கொண்டுவந்ததே ஆகும். மருத்துவர், பறையர், வள்ளுவர், வண்ணார் எனத் தங்களின் இடத்தைப் பறிகொடுத்தவர்கள் ஏராளம். திருமணத்தின் பொழுது காப்புக் கயிறை அறுக்கும் செயலை வண்ணார்,மருத்துவர் முதலியோர் தட்சணை பெற்றுக்கொண்டு செய்கிறார்கள். ஒருகாலத்தில் திருமணத்தை அவர்களே நடத்தினார்கள் என்கிறார் தொ.ப. சில சமூகங்களில் பார்ப்பன குருக்களுக்குத் திருமணச் சடங்குகளில் உதவி செய்பவர் மருத்துவர் என்பதையும் கவனிக்க வேண்டும்,,

நாட்டார் தெய்வங்களின் அருள் வரம்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அதன் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். திருவிழா களங்களைச் சுத்தம் செய்வது, ஊர் சாட்டுதல், தேர்க்கால்களுக்குக் கட்டை இடுதல் என இவை நீளும். 1830 ல் கிறிஸ்துவர்களாக மாறிய தலித்துகள் கோயில் எடுபிடி வேலைகளைச் செய்ய மறுத்ததை எதிர்த்து லட்சுமி நரசு என்பவர் பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்ததைக் கவனிக்க வேண்டும். எல்லா வேலையும் செய்யும் தாங்கள், தேர் வடத்தை இழுக்க உரிமை வேண்டும் என 1989-ல் கண்டதேவியில் தலித்துகள் போராடினார்கள்.

கோவில்பட்டில் தேருக்குக் கட்டை போடும் தலித்துகள் திருவிழாவில் தாங்களும் பங்குகொள்ள உரிமை கேட்க கலவரமானது. முளைப்பாரி எடுக்க ஆதிக்க ஜாதிகளுக்கே உரிமை என்றாலும், அவை சென்ற தெருவை தலித்துகள் சுத்தப்படுத்த வேண்டும், துத்திகுளத்தில் தாங்களும் முளைப்பாரி எடுப்போம் எனத் தலித்துகள் கேட்க விழாவே நடக்காமல் போனது. உஞ்சனையில் கோயில் நுழைவு செய்ய முயன்று ஐந்து தலித்துகள் கொல்லப்பட்டார்கள். குதிரை எடுக்க முயன்று நாடார்களின் தடையை மீறியதால் சித்தனூர் பூச்சி எனும் தலித் கொல்லப்பட்டார். இவ்வாறு நாட்டார் கோயில்களிலும் பழமைக்கும், சமத்துவத்துக்கு இடையேயான போராட்டம் தொடர்கிறது.

பெரியாரியம் பேசுபவர்கள் நாட்டார் தெய்வத்தை ஆதரிப்பது எப்படி என்கிற கேள்விக்குத் தொ.ப. விரிவாகப் பதில் சொல்கிறார். புனித நூல்கள், விதிகள், புனித இருப்பிடங்கள் ஆகியவற்றைக் கொண்டு அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்பும் மதபீடங்கள் செயல்படுகின்றன. நாட்டார் தெய்வங்கள் நிறுவனமயமானவை அல்ல. அவை ஒருவழிபாட்டு முறைமை கொண்டவை அல்ல. ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் தெய்வங்களைப் பிறரும் வழிபடுவது தமிழகத்தில் உண்டு. ஒரு ஜாதியினர் மட்டுமே வழிபடும் தெய்வங்கள் உண்டு என்றாலும் பிறர் வழிபட்டாலும் பெரும்பாலும் தடுப்பது இல்லை. சாமியாடி, பூசாரி ஆகியோருக்குத் தரப்படும் புனிதம் திருவிழா அன்று மட்டுமே இங்கே நிலவும், பிறகு அனைவரும் சமமே. ஊர்த்தெய்வங்களைக் கொண்டு தங்களின் சாதி இருப்பை ஆதிக்க ஜாதியினர் நிறுவ பார்ப்பது உண்மை என்றாலும், நாட்டார் தெய்வங்களின் பிடிமண்ணை எடுத்து வந்து தனி ஆலயங்கள் நிர்ணயிப்பது உண்டு. மக்களின் உற்பத்தி உறவோடு தொடர்புடையவை அவை. கள்ளும், கறியும் இயல்பான தெய்வங்கள் இவை. 90% சிறுதெய்வங்கள் பெண் தெய்வங்கள் தான் ஆகும். சடங்கியல் போர்வையில் இதை வைதீகத்துக்குள் இழுக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. பெண்களைத் தீட்டில்லாதவர்களாக நாட்டார் மரபு காண்கிறது. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என நிராகரிக்காமல் நாட்டார் வழக்கின் தேவையை அதன் குறைகளோடு இணைத்தே காண்பது அவசியம் என்கிறார் தொ.ப.

Image result for periyar

பக்கங்கள்: 112
விலை: 100
தெய்வம் என்பதோர்
காலச்சுவடு
தொ.பரமசிவன்