‘தி போஸ்ட்’ – நடுங்க வைக்கும் கணங்களிலும் நியாயம் பேசுவது எப்படி?


‘ இன்றைய இதழியல் நாளைய வரலாற்றின் முதல் வரைவு’
(திரைப்படத்தை முழுமையாக ரசிக்க விரும்புவர்கள் தவிர்த்து விடவும். Spoilers Ahead)

‘ஒரு மோசமான கட்டுரையை  வெளியிட்டதற்காக  அடித்து நொறுக்கப்பட்டால் தவறொன்றுமில்லை. ஆனால், இந்தக் கட்டுரையை வெளியிட்டால் அழித்து ஒழித்து விடுவார்களோ என அஞ்சிக்கொண்டு இருப்பதை ஏற்கவே முடியாது’ – வாஷிங்டன் போஸ்ட் மேனாள் ஆசிரியர் பென் பிராட்லி

Image result for the post

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில், மெரில் ஸ்ட்ரீப், தாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘தி போஸ்ட்’ திரைப்படத்தைக் கண்டேன். வியட்நாம் போர்க்களத்தில் அமெரிக்க வீரர்கள் சிக்கிக்கொண்டு இறப்பதோடு திரைப்படம் துவங்குகிறது. வியட்நாமில் அமெரிக்கா வெல்ல ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என வெளியுறவுத்துறை அமைச்சர் மெக்னாராவால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அது சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்கிறது. இந்த உண்மை நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தாலும், போரில் வெற்றி பெற்று விடுவோம், இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று போரை தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. ரகசிய அறிக்கையான அதை நியூ யார்க் டைம்ஸ் இதழ் நிருபர் பெறுகிறார்.
இதே காலகட்டத்தில், வாஷிங்க்டன் போஸ்ட் செய்தித்தாள் பங்குச்சந்தைக்குள் நுழைய முடிவெடுக்கிறது. தன்னுடைய கணவரின் தற்கொலைக்குப் பிறகு நிறுவனத்தின் தலைமை பொறுப்பைக் கட்டாயத்தால் ஏற்றுக்கொண்ட கேத்தரின் கிரகாம் பங்குகள் எந்தளவுக்கு லாபம் பெற்றுத்தரும் எனத் தவிக்கிறார். தரமான இதழியலின் மூலம் லாபம் ஈட்டலாம் என்று அவர் நம்புகிறார். நிக்ஸனின் குடும்ப நிகழ்வு குறித்த வாஷிங்டன் போஸ்ட் செய்தியால் கோபமுற்று, வேறொரு நிருபரை அனுப்புங்கள், இல்லையேல் செய்திதாளுக்கு வெள்ளை மாளிகையில் அனுமதியில்லை என்று தகவல் அவரிடம் சொல்லப்படுகிறது. அதை ஆசிரியர் பென் பிராட்லியிடம் சொல்கிறார் கேத். அவரோ ‘நீங்கள் வாஷிங்டன் போஸ்ட்டின் வெளியீட்டாளர் மட்டுமே. முதலாளி இல்லை’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.

Related image

 

பங்குச்சந்தையில் வாஷிங்டன் போஸ்ட் நுழைந்த கணத்தில், நியூயார்க் டைம்ஸ் இதழ் முதல் செய்திக்கட்டுரையை வெளியிடுகிறது. நாடே அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்கிறது. அந்த அறிக்கையை எப்படியாவது கைப்பற்றி விட வாஷிங்டன் போஸ்ட் ஆசிரியர் துடிக்கிறார். அறிக்கையின் சில பக்கங்கள் எப்படியோ அவரின் இருக்கைக்கு வந்து சேர்கிறது. ஆனால், அதே பக்கங்கள் நியூயார்க் டை  ம்ஸிடமும் இருப்பது தெரிந்து ஏமாறுகிறார்.
தேசப்பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நியூயார்க் டைம்ஸ் செயல்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டோடு நிக்சன் அரசு நீதிமன்ற படியேறுகிறது. நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிக்கிறது. இதே கட்டத்தில், அந்த ரகசிய அறிக்கை வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளுக்குக் கிடைக்கிறது. இருப்பது ஏழே மணிநேரம் தான், நாற்பத்தி ஏழு பகுதிகள் கொண்ட அறிக்கையின் நான்காயிரம் பக்கங்கள் பக்க  எண்கள் இல்லாமல் ஆசிரியர்கள் கைக்குக் கிடைக்கிறது. நாளை செய்தித்தாள் இந்த அறிக்கையை  பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று முடிவு செய்கிறது ஆசிரியர் குழு.

 

ஆனால், செய்திதாளின் வழக்கறிஞர்கள் இது தற்கொலைக்குச் சமமானது என்கிறார்கள். இன்னொரு செய்தித்தாளுக்குத் தடை உத்தரவு இருக்கிற போது, அதே அறிக்கையை நாம் வெளியிட்டால் நம்முடைய செய்தித்தாள் தடை செய்யப்படலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், பங்குச்சந்தையில் நுழைய இருக்கிற காலத்தில் இந்த முடிவு முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்க செய்து நிறுவனத்தை மூடவைக்கலாம் எனவும் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருக்கும் நபர்கள் பயப்படுகிறார்கள்.

Image result for the post
மென்மையான அணுகுமுறை கொண்டவராக அறியப்படும் கேத்தரினிடம் இந்த அறிக்கை குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று இதர நிர்வாகிகள் சொல்கிறார்கள். பங்குச்சந்தையில் நிறுவனம் நுழைய இருக்கும் கணத்தில், தன்னுடைய கணவர், தந்தை ஆகியோர் கட்டிக்காத்த நிறுவனத்தை நிர்மூலமாக்கிய பழி தன்னைச் சேர வேண்டுமா என்று அவர் தவிக்கிறார். செய்தித்தாளின் ஆசிரியரான பென் ‘இந்த  அறிக்கை கிடைத்தும் வாஷிங்டன் போஸ்ட்  அரசாங்கத்துக்குப் பயந்து கொண்டு வெளியிடாமல் போனது என்று தெரிந்தால் ஊர் நம்மைக் கேவலமாகப் பார்க்காதா? நம்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அழிந்து போகும்’ என்று சொல்கிறார்.

Image result for the post

 

 

 

அரை மனதோடு, கேத்தரின் ‘தயவு செய்து  வெளியிடுங்கள்’ என்று குரல் நடுங்க சொல்கிறார். அந்தக் கணத்தில் இன்னொரு அதிர்ச்சியான எச்சரிக்கை வந்து சேர்கிறது. நியூயார்க் டைம்ஸ் அறிக்கையைப் பெற்ற அதே நபரிடம் இருந்து, வாஷிங்டன் போஸ்ட்டும் அறிக்கையைப் பெற்றிருந்தால் கிரிமினல் குற்றத்துக்காகக் கேத்தரின் சிறைக்குப் போக நேரிடும் என்பதே அந்த எச்சரிக்கை.
அதே சமயம், தேசத்துக்காக, அதன் பல கோடி மக்களுக்கு எப்போதும் நேர்மையோடு இருப்பதும், இதழியல் அறத்தை காப்பதும் தங்களுடைய லட்சியம் என்பதும் கண்முன் நிழலாடுகிறது. ‘கட்டுரைகளை வெளியிடுங்கள். மற்றதை பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்கிறார் கேத்தரின். இதழின் இதர நிர்வாகிகள் உறைந்து போகிறார்கள். அடுத்த நாள் செய்தித்தாள் முழுக்கப் ‘பெண்டகன் பேப்பர்ஸ்’ என்று பல ஆயிரம் பக்க அறிக்கையின் சாரத்தை வெளியிடுகிறார்கள். நீதிமன்ற வாசலுக்கு இழுக்கப்படுகிறது வாஷிங்டன் போஸ்ட். அடுத்த நாள் எல்லாச் செய்தித்தாள்களும் அதே செய்தியை தாங்களும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக மறுபதிப்புச் செய்கின்றன.
நீதிமன்றத்தில் வியட்நாம் போரில் உறவுகளை நிற்கவைத்துவிட்டு தவிக்கும் அரசாங்கத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கேத்தரினிடம் சொல்கிறார், ‘இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை. இந்த வழக்கில் நீங்கள் வெல்ல வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’ என்று நன்றியோடு சொல்கிறார். நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகையில் அறிக்கையை முதலில் கண்டுபிடித்த நியூயார்க் டைம்ஸ் அங்கத்தினர் பேட்டி தருகிறார்கள். அறத்தின் பக்கமும், பேச்சுரிமையின் பக்கமும் நின்ற கம்பீரத்தோடு அமைதியாகக் கேத்தரின் நடக்கிறார். அவரின் கண்களில் தெரியும் நிம்மதியும், சுற்றியிருப்பவர்களின் வாஞ்சை மிகுந்த பார்வையும் நெகிழவைக்கும் பெருங்கணம்.

Related image
உச்சநீதிமன்றம் 6-3 என்று கருத்துரிமையைத் தூக்கிப்பிடிக்கிறது. என் தந்தை சொல்வார், ‘இன்றைய இதழியல் என்பது நாளைய வரலாற்றின் முதல் வரைவு’ என்று கேத்தரின் ஆசிரியர் பென்னிடம் சொல்வதோடு திரைப்படம் முடிகிறது. இதழியல் என்பது எளிய மக்களின் குரலை எதிரொலிப்பதாக, அதிகார பீடங்களுக்கு அடங்கிப் போகாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைத் திரைப்படம் கம்பீரமாகக் கடத்துகிறது. வெளிச்சத்தில் வீரர்களாகவும், இருட்டில் அதிகாரத்தோடு உறவாடுபவர்களாக இருப்பதில்லை உண்மையான ஊடக அறம் என்று சொல்லாமல் சொல்கிறது ‘The Post’. திரையில் கண்டிப்பாகப் பாருங்கள்.

 

(இதழாசிரியர் பென் பிராட்லி, உரிமையாளர் கேத்தரீன் உச்சநீதிமன்ற தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக வந்துள்ளது என்கிற செய்தியை ஆனந்தமாக படிக்கிறார்கள். புகைப்பட நன்றி:  Getty Images)

 

கருத்துரிமை நெரிப்பின் கலங்க வைக்கும் வரலாறு – 2



ஆபாசம், அவமதிப்பு, அரசியலமைப்பு:
இந்தியாவில் காலனிய காலம் துவங்கி இன்று வரை கருத்துரிமை எப்படி கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறித்த அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் அறிமுகத்தின் கடைசிப் பாகம் இது.எது ஆபாசம்?:
ஆபாசத்துக்கு உரிய ஒன்று கருத்துரிமையின் கீழ் வராது. எது ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் காலனிய காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தின. இந்தச் சோதனை ஒழுக்கமற்ற மனதானது எப்படி ஒரு படைப்பை காணும் என்பதைக் கணக்கில் கொண்டு ஆபாசம் எது என்பதை வரையறுத்தது. இதனால், ஒரு படைப்பில் ஏதேனும் ஒரு வரியோ, இல்லை பத்தியோ உடலுறவு, பாலியல் வர்ணனை சார்ந்து இருந்தால் நூலே ஆபாசம் என்று முடிவு கட்டப்பட்டது. காலனிய நீதிமன்றங்களில் ஆசன் என்கிற வார்த்தை இடம்பெற்றது, உடலுறவு கொள்ளச் சத்தான உணவு உண்ணுவது, கண்ணன் ராதையின் மார்பை அழுத்தியது, உடலுறவுக்கு அழைத்தது, வீதி நாடகம் எனும் தெலுங்கு படைப்பில் பெண்ணின் பாலுறுப்புகள் துன்புறுத்தப்பட்டது குறித்த விவரணை எனப் பலவற்றை ஆபாசம் என அறிவிக்கச் சொல்லி வழக்குகள் தொடரப்பட்டன. நபகோவின் லோலிதா நாவல் பதினொன்று அல்லது பதிமூன்று வயது பெண்ணோடு உடலுறுவு கொள்ளும் ஆண் குறித்த நாவல் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கராக்கா என்பவர் மொரார்ஜி தேசாய்க்குக் கடிதம் எழுதினார். நேரு தலையிட்டு நூலை வெளியிட வைத்தார்.

Image result for republic of rhetoric
Lady Chatterley’s Lover என்கிற டி.ஹெச்.லாரன்ஸ் நாவல் ஆபாசமாக இருக்கிறது எனச் சொல்லி அதைப் பம்பாயில் விற்ற ரஞ்சித் உதேஷி கைது செய்யப்பட்டார். அந்தக் கைது செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹிதயத்துல்லா கலை, இலக்கியத்தில் இருக்கும் காமம், நிர்வாணம் என்பது ஒட்டுமொத்தமாக மோசம் கிடையாது. காமம் என்பதே மோசமானதோ, மனிதரை பாழ்படுத்துவதோ இல்லை. அதே சமயம் அந்தப் படைப்பு பொது நன்மைக்குப் பயன்படுகிறதா என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பொது நன்மையை உறுதி செய்யும் படைப்பா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்று தீர்ப்பில் எழுதினார். ஹிக்லின் சோதனையைப் பயன்படுத்தி அந்நாவல் ஆபாசமானது ஆகவே அதை விற்றது குற்றம், காம விருப்புடைய மனங்களைக் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் அறிவித்தார். இந்தத் தீர்ப்பு எது ஆபாசம் என்பதைத் தீர்மானித்தாலும், காமத்தை பேசும் எல்லாப் படைப்புகளும் ஆபாசம் இல்லை என்று அறிவித்தது.
        அதே சமயம், உச்சநீதிமன்றம் தேவிதாஸ் ராமச்சந்திர துலிஜாபுர்கர் வழக்கில் காந்தி முதலிய தேசத்தலைவர்கள் குறித்து ஆபாசமாக எழுத கூடாது என்று தீர்ப்பு எழுதியது.  அவீக் சர்க்கார் தன்னுடைய செய்தித்தாளில் போரிஸ் பெக்கர் தன்னுடைய காதலியோடு நிற்கும் அரை நிர்வாண படத்தை நிறவெறிக்கு எதிரான அடையாளமாக வெளியிட்டார். அதை ஆபாசம் என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. ஒரு படைப்பை முழுமையாகக் கணக்கில் கொண்டே அது ஆபாச உணர்வுகளைத் தூண்டுகிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு எழுதியதன் மூலம் உச்சநீதிமன்றம் ஹிக்லின் சோதனையில் இருந்து ஓரளவிற்கு நகர்ந்து வந்தது.
Image result for boris becker aveek sarkar
   குஷ்பு கற்பு சார்ந்து கருத்து தெரிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,’காம உணர்ச்சியை, மோக சிந்தனைகளைத் தூண்டிவிடுவது ஆபாசமானது. அவர் பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய எதையும் சொல்லிவிடவில்லை….திருமணம் என்பது சமூக அமைப்பு தான். எனினும், இந்தியாவில் பல்வேறு பூர்வகுடிகள் திருமண அமைப்புக்கு வெளியே உடலுறவு கொள்வது வழக்கமாக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.’ என்று விவரித்துக் குஷ்பு பேசியது ஆபாசமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.
Image result for khusboo and supreme court
ராஜாஜி இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போது 1930-ல் நடந்த சிட்டாகாங் ஆயுத புரட்சியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஒன்று வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். அந்தத் திரைப்படம் ‘அரை வேக்காட்டுக் கல்வி கொண்ட மக்களைக் குற்றம் செய்வதற்குத் தூண்டி விடும்’ என்று அவர் பயந்தார். அதனைத் தொடர்ந்து தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ் கபூர் வழக்கில் உச்சநீதிமன்றம் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய பின்னரும் ஒரு திரைப்படம் ஆபாசமாக இருக்கிறது என வழக்கு தொடர முடியும் என்று தீர்ப்பு எழுதியது. அதைத் தொடர்ந்து எண்பத்தி மூன்றில் திரைப்படச் சட்டம் திருத்தப்பட்டுத் தணிக்கை வாரியம் சான்றிதழ் தந்த பிறகு ஒரு திரைப்படம் ஆபாசம் என வழக்கு தொடர முடியாது என்று ஆக்கப்பட்டது.

        கேபிள் தொலைக்காட்சி விதிகள் தொலைக்காட்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. நல்ல ரசனை இல்லாதவற்றைக் காட்டக்கூடாது. எந்த இனக்குழு, மொழிக்குழுவையும் மோசமாகக் காட்டக்கூடாது. மூடநம்பிக்கைகளை வளர்க்க கூடாது. பொதுப் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் (இதனால் தான் தொலைக்காட்சிகள் தாங்களே பல படங்களைத் தணிக்கை செய்து ஒளிபரப்புகின்றன) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. மேலும், செய்தித்தாள்கள் போல அல்லாமல் தொலைக்காட்சிகளுக்கு உரிமம் தேவைப்படுவதால் அவை இவற்றுக்குக் கட்டுப்படுகின்றன. வானொலி நிலையங்கள் அனைத்திந்திய வானொலி எந்த விளம்பர, செய்தி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதோ அதை அனைத்து வானொலி நிலையங்களும் பின்பற்ற வேண்டும். இன்னும் மோசமாக, அரசு ஒப்புதல் பெற்ற அரசியல் செய்திகளையே அவை அலைபரப்ப முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு:
நீதிமன்ற அவமதிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக இங்கிலாந்தில் இருந்தாலும் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. . நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேர்க்கப்படாமல் கட்டுப்படுத்தப்படச் சில காரணங்களை அபினவ் முன்வைக்கிறார். நீதிபதிகள் தங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக வாதிடவோ, பதில் சொல்லவோ இயலாது. அப்படியே வழக்குத் தொடர்ந்தாலும் அது வெகுநாட்களுக்கு இழுத்துக் கொண்டே இருக்கும். மேலும், நீதிபதிகள் நீதிமன்றத்தை நடத்த விடாமல் தொல்லை கொடுப்பவர்களைக் கட்டுப்படுத்தவும், நீதிமன்றத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை எச்சரிக்கவும் நீதிமன்ற அவமதிப்புத் தேவைப்படுகிறது. எனினும், இது கருத்துரிமையை நெரிப்பதாக, கட்டற்றதாக இருக்க வேண்டியதில்லை என்பது ஆசிரியரின் பார்வை.

Image result for contempt of court india

நேரு செய்த நீதிமன்ற அவமதிப்பு:
எல்.ஐ.சி. முந்த்ரா என்பவரிடம் சந்தை விலையை விடக் கூடுதல் விலைக்குப் பங்குகளை வாங்கியது. இது சார்ந்து எல்.ஐ.சி. நிர்வாகிகள், நிதித்துறை செயலர், நிதி அமைச்சர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். விவியன் போஸ் என்கிற வங்கத்தைச் சேர்ந்த நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அவர் நிதித்துறை செயலாளர், எல்.ஐ.சி. தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தார். இது குறித்து நேருவிடம் கேட்ட போது, ‘அருமையான அனுமானம்… விவியன் போஸ் அறிவற்றவர்’ என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

            இது நீதிமன்ற அவமதிப்பு என்பதற்காக நேரு மீது வழக்கு போட யோசிக்கப்பட்டது. நேருவே அதற்குள் விவியன் போஸ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மன்னிப்பு கேட்டுக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடவும் நேரு ஒப்பினார். நேருவின் மன்னிப்பு ஏற்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பிரிவுபாசார விழாவில் நேரு கலந்து கொண்டார். டால்மியா-ஜெயின் நிறுவனங்கள் மீதான விசாரணை பொறுப்பை விவியன் போஸிடமே நேரு ஒப்படைத்தார்.
மான நஷ்ட வழக்கு:
இந்தியாவில் மானநஷ்ட சட்டப்பிரிவை இன்னமும் கடுமையாக மெக்காலே வரையறுத்தார். இங்கிலாந்தில் எழுத்தில் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே மான நஷ்ட குற்றத்துக்கு உரியது. இந்தியாவில் பேச்சளவில் வெளிப்படும் கருத்துக்களும் மான நஷ்ட வழக்குக்கு உரிய குற்றமாகக் கருதப்படுகிறது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தால் மட்டுமே இச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை .
நக்கீரன் ராஜகோபால் நடத்திய நக்கீரன் இதழில் ஆட்டோ சங்கர் எழுதிய தொடர் இடம்பெற்றது. அதில் பல்வேறு அரசு அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டார் ஆட்டோ சங்கர். இது அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற ஒன்று என்று மான நஷ்ட வழக்குப் போடப்பட்டது. நீதிமன்றம் அரசு அதிகாரிகள் குறித்த கருத்துக்களுக்காக மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. அதே சமயம், அந்தக் கருத்துக்கள் முழுக்க உண்மைக்குப் புறம்பானதாக, மோசமான உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் தண்டனைக்கு உரியது என்று அமெரிக்காவின் சுல்லிவன் வழக்கை மேற்கோள் காட்டி தீர்ப்பு எழுதப்பட்டது. ஆனால், அரசு அதிகாரிகள் மட்டுமே இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு மான நஷ்ட வழக்கு தொடர முடியாது. இதில் நீதிபதிகள் அடங்க மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

Image result for nakheeran rajagopal auto shankar

வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் கருத்துரிமையில் சேராது. இது சார்ந்த கடுமையான சட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்டன. இந்தியா போன்ற பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட நாட்டில் அமைதியை நிலைநாட்ட வெறுப்பு மிக்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று அரசு கருதியது. லேக் ராம் என்கிற ஆரிய சமாஜ உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து வெறுப்பைக் கக்கினார். அதனால் அவர் ஆறு வருடங்களுக்குள் இறந்து விடுவார் என்று அகமதியா பிரிவை சேர்ந்த மிர்ஸா குலாம் முகமது தெரிவித்தார். லேக் ராம் கொல்லப்பட்டார். இதற்குப் பிறகே பல்வேறு குழுக்களிடையே குழப்பத்தை உண்டு செய்யும் பேச்சுகள் தடை செய்யப்படும் வகையில் 153A குற்ற சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இப்படிப்பட்ட சட்டங்கள் மதங்களைச் சீர்திருத்தும் நோக்கில் விமர்சிக்கும் கருத்துகளையும் வெளிப்பட விடாமல் தடுக்கும். உருவ வழிபாடு ஒழிப்பு இயக்கம், பிரம்ம சமாஜ இயக்கம், பிரார்த்தன சமாஜ இயக்கம் ஆகியவையும் இயங்காமல் போகக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

         மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டப்பிரிவும் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னணியில் ‘ரங்கீலா ரசூல்’ எனும் பிரசுரம் இருந்தது. வண்ணமயமான நபிகள் என்கிற பொருள் தரும் இந்த நூல் நபிகள் நாயகத்தின் அக வாழ்வு சார்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தது. இது பண்டித சமுபதியால் எழுதப்பட்டது. இதைத் தடை செய்யக்கோரி தலிப் சிங் என்கிற நீதிபதி முன் வழக்குச் சென்றது. அந்நூல் மோசமானது என்றாலும் அது பகை, வெறுப்பை வளர்க்கவில்லை என்று தடை விதிக்க மறுத்தார் நீதிபதி. இருக்கிற சட்டமானது இறந்து போன மதத்தலைவர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும், வரலாற்று பார்வையுள்ள நூல்களும் இப்படிச் சட்டத்தைப் பயன்படுத்தினால் வராமல் போகும் என்று தீர்ப்பு எழுதினார். பல்வேறு கலவரங்கள் அந்நூலால் வெடித்தன.
Image result for rangeela rasool           

               ரிசலா-இ-வர்தமான் என்கிற உருது இதழ் ‘நரகப் பயணம்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட படைப்பில் நபிகள் நாயகம் நரகத்தில் துயரப்படுவதாக எழுதியது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய குற்றவியல் சட்ட அமர்வு தண்டனைக்குரிய குற்றமாக அக்கட்டுரையை அறிவித்து, அக்கட்டுரையின் ஆசிரியர் தேவி சரண் சர்மாவுக்கு ஒரு ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் நீதிபதி பிராட்வே இன்னும் சில கருத்துக்களைப் பதிவு செய்தார்: ‘ மதம், மதத்தை நிறுவியவர் மீதான அறிவார்ந்த, கூர்மையான, வலிமையான விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டியதில்லை. இழிவுபடுத்தும், அவதூறான கருத்துக்களே தண்டனைக்கு உரியவை’ என்று தீர்ப்பு எழுதினார்.

இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு புதிதாகச் சட்டப்பிரிவு 295A ஐ சேர்த்தது. இது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதைக் குற்றத்துக்கு உரிய தண்டனையாக அறிவித்தது. இந்தச் சட்டப்பிரிவு இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தார். மேலும், ஜின்னா இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றால் ஜாமீன் பெற முடியாது எனச் சட்ட திருத்தத்தைச் சாதித்தார். குற்றவியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

விடுதலைக்குப் பின்னால் 153A சட்டப்பிரிவு இன்னமும் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றது. இதன்படி, மதம், இனம், பிறந்த ஊர், வசிக்கும் இடம், மொழி, சாதி, சமூகம் சார்ந்து ஊறு, பகை, வெறுப்பு, மோசமான சிந்தனைகளை விதைத்தால் அவையும் தண்டனைக்கு உரியவை என்று திருத்தப்பட்டது. இன்னமும் மோசமாக, இந்திரா காந்தி காலத்தில் இந்த இரு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒருவரை கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

கருத்துரிமை பெரும்பான்மையினரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டதா?:
பல்வந்த் சிங் என்கிற அரசு அதிகாரி இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை விடுவித்தது. பொது அமைதிக்கு எந்தத் தீங்கையும் அவரின் செயல் விளைவிக்கவில்லை. வன்முறையையும் அது தூண்டவில்லை என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. ஜாவலி எதிர் கர்நாடகா அரசு வழக்கில், ‘கன்னட மொழிக்கே முன்னுரிமை, இந்தி அதற்கு அடுத்த இடத்தையே கர்நாடகாவில் பெறவேண்டும்’ என்று கருத்து தெரிவித்த அரசு அதிகாரியின் கருத்து வெறுப்பைத் தூண்டும் பேச்சல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எவ்வளவு பிரபலமற்ற கருத்தாக இருந்தாலும் அதை விவாதிப்பதோ, ஆதரிப்பதோ தண்டனைக்கு உரியது அல்ல என்று அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

பெரியாரின் ராமாயணம் குறித்த நூல் இந்தியில் லலாய் சிங் யாதவால் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு உத்தரப் பிரதேச அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ண ஐயர் இப்படித் தீர்ப்பு எழுதினார்:
‘எது ஆதிவாசிகளைக் காயப்படுத்துகிறதோ அது நவீன சமூகங்களுக்குச் சிரிப்பை வரவைக்கக் கூடியதாக இருக்கலாம். ஒரு மதம், பிரிவு, நாடு, காலம் ஆகியவற்றுக்கு எதிரானதாக, நிந்தனையாகத் தோன்றும் ஒன்று இன்னொரு தரப்புக்கு கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதமாக இருக்கலாம்…கலிலியோ, டார்வின் துவங்கி தோரோ, ரஸ்கின், காரல் மார்க்ஸ், ஹெச்.ஜி.வெல்ஸ், பெர்னார்ட் ஷா, ரஸ்ஸல் முதலிய பல்வேறு தலைசிறந்த சிந்தனையாளர்களின் கருத்துகள், பார்வைகள் மக்களால் எதிர்க்கப்பட்டுள்ளன. ஏன் மனு முதல் நேரு வரை தலைசிறந்த இந்தியர்களின் கருத்துகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன. இப்போதும் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிலர் இந்தக் கருத்துக்களால் காயப்படுவார்கள். அதற்காக இந்த மகத்தான எழுத்துக்களைத் தங்களுடைய மூர்க்கமான பார்வையால் சில வெறியர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக எந்த அரசும் பழங்கால அரசுகளைப் போல அந்த நூலை கைப்பற்றாது’ என்று தடையை நீக்கினார்.

          ஒரே ஒரு கிராமத்திலே என்கிற இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ரங்கராஜன் எதிர் ஜெகஜீவன் ராம் வழக்கில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பார்கள்,. வன்முறை நிகழும் என்றெல்லாம் அஞ்சி தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப்படத்தை வெளியிடாமல் விட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு படைப்பின் எதோ ஒரு கருத்துக் காயப்படுத்துகிறது என்பதற்காக அதனைத் தடை செய்ய முடியாது, அப்படைப்பின் மைய நோக்கத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

Image result for periyar  ramayana

அதே சமயம், பரகூர் ராமச்சந்திரப்பா வழக்கில் நீதிமன்றம் பசவர் குறித்த ஆசிரியரின் கருத்துக்களுக்காக நூலை தடை செய்ததோடு, ‘மிகப்பெரிய மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் பலவீனமான மக்களின் மனங்கள் காயப்படாமல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் கவனமும், கரிசனமும் வேண்டும்’ என்று அறிவுறுத்தியது. பல்வேறு புத்தகத் தடைகளை, திரைப்படத் தணிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
சிவாஜி குறித்த லெய்ன் நூலில் சிவாஜியின் தந்தை வேறொருவர் என்றும், அவரின் அப்சல் கான் மீதான தாக்குதல் இருக்கிற பிராமணிய அடுக்கை காப்பாற்றும் முயற்சியே ஆகும் என்றெல்லாம் கருத்துகள் நிலவியதால் அந்நூல் மகாராஷ்டிராவில் வன்முறைக்குக் களமானது. அந்நூலில் குறிப்பிடப்பட்ட நூலகம் தீக்கிரையானது. நூல் தடைக்கு ஆளானது. உச்சநீதிமன்றம் தடையை நீக்கியது. 

பத்திரிகைகளின் கழுத்தை நெரித்தல்:
இந்திய விடுதலைக்குப் பிறகு நேரு கொண்டு வந்த Press Act ஆங்கிலேயர் காலத்துப் பத்திரிகை அவசரநிலை சட்டத்தை விடக் கடுமையானதாக இருந்தது என்கிற அபினவ். மத்திய அரசு செய்தித்தாள்களின் பக்கங்கள், விளம்பரங்கள் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்றது. சிறிய இதழ்களுக்கு வாய்ப்பு தரவும், ஒரு பத்திரிகை ஆதிக்கம் செலுத்தாமல் தடுக்கவும் இம்முயற்சி என்று காரணம் சொல்லப்பட்டது. நீதிமன்றம் நேரடியாக இது கருத்துரிமையைப் பாதிக்கா விட்டாலும் இது செய்தி நிறுவனத்துக்கு வருமான இழப்பை உண்டாக்கி, கருத்துகள் சென்று சேராமல் தடுப்பதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அரசின் கட்டுப்பாடுகளை நீக்கியது. பத்திரிக்கையாளர்கள் சம்பளத்தைத் தீர்மானிக்க அரசு முயன்ற போது அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றது. எத்தனை தாள்களை ஒரு செய்திதாளுக்கு ஒதுக்கலாம் என்பதை அரசு கட்டுப்படுத்த முயன்ற போது, நீதிமன்றம் மீண்டும் அதைக் கருத்துரிமையை நெரிக்கும் முயற்சி என்று ரத்து செய்தது. எனினும், அதில் பெரும்பான்மையோடு உடன்படாத நீதிபதி மாத்யூவின் தீர்ப்பு கவனத்துக்கு உரியது. ‘வெகு சிலரின் ஆதிக்கம் சந்தையை ஆளக்கூடாது. அது கருத்துரிமைக்குக் கேடானது’ என்றது இன்று ரிலையன்ஸ் முதலிய பெருநிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை நடத்தும் காலத்தில் பொருந்துவது என்கிறார் அபினவ். அதே சமயம், மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அதை மட்டுப்படுத்துமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார் ஆசிரியர். சிறைத்தண்டனை கைதிகள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி அவர்களைப்பற்றிச் செய்தியாளர்கள் கருத்துரிமை என்று சொல்லி பதிவு செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதியுள்ளது.
லஹிரி அடிப்படை உரிமைகள் சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற போது, ‘இச்சட்டங்கள் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பார்வையில் எழுதப்பட்டவை போல இருக்கின்றன’ என்றார். அபினவ் சந்திரசூடின் நூலை படிக்கிற போதும் அதுவே தோன்றியது. வெறும் வாய்ப்பந்தல் போட்டுவிட்டுக் கருத்துரிமைகள் விடுதலைக்குப் பிந்தைய காலத்திலும் காற்றில் பறக்க விடப்பட்டது நூலில் தெளிவாக வெளிப்படுகிறது. அதே சமயத்தில், ஏன் இந்தச் சட்டங்களுக்குத் தேவை இருக்கிறது, அவை ஏன் எழுந்தன என்பதைப் புரிந்து கொள்ள நூல் உதவுகிறது. நூலின் மிக முக்கியமான விடுபடல் அவசரநிலை காலம், அது எப்படிக் கருத்துரிமை சார்ந்த சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொள்ளவில்லை. ஒருவேளை ஆசிரியரின் தாத்தா சந்திரசூட் கருத்துரிமையைக் காக்க தவறிய ஜபல்பூர் வழக்கை விமர்சிக்க நேரிடுமோ என்று தவிர்த்திருக்கிறாரோ ஆசிரியர் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. எனினும், மிக முக்கியமான நூல்.

Continue reading

கருத்துரிமை நெரிப்பின் கலங்கவைக்கும் வரலாறு-ஒன்று!


காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா கருத்துரிமையைக் காப்பதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் ஆய்வு செய்கிறது. கௌதம் பாட்டியாவின் கருத்துரிமை குறித்த நூல் அரசியல், சமூகச் சூழ்நிலைகளைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விமர்சனத்துக்கு இடையே இந்நூல் அந்த இடைவெளியை பெருமளவில் நிரப்புகிறது.
இந்திய விடுதலை மன்னர்கள், ஆதிக்கச் சாதியினர், நிலச்சுவான்தார் ஆகியோரின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதை ஓரளவுக்குச் செய்தது. இந்தச் சாதனை ஆங்கிலேயர் காலத்து அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தது. கருத்துரிமை சார்ந்து அப்படிச் சொல்ல முடியாது என்பதை இந்தியாவின் கருத்துரிமை சார்ந்த சட்டங்கள், கட்டுப்பாடுகள் உணர்த்துகின்றன. அரசியலமைப்பு சட்ட விவாதங்களில் ஹனுமந்தையா சொன்னதைப் போல, ‘நாம் வீணை, சிதார் இசைக்கு ஆசைப்பட்டோம். ஆங்கிலேயே வாத்தியக்குழுவின் இசை தான் கிட்டியுள்ளது’. அபினவ் இந்த நூலில் நிரூபிப்பதை போலச் சமயங்களில் ஆங்கிலேயரின் சட்டங்களை விடக் கடுமையான கட்டுப்பாடுகளை விடுதலைக்குப் பிந்தைய சட்டங்கள் விதித்து இருக்கின்றன. 

தேசத்துரோக சட்டத்தின் திகில் வரலாறு:
மெக்காலே இந்திய குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய போது தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவையும் உருவாக்கினார். எனினும், குற்றவியல் சட்டம் 1860-ல் நடைமுறைக்கு வந்த போது வரைவில் இருந்த தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவான 113 அமலுக்கு வரவில்லை. பத்தாண்டுகள் கழித்தே அந்தச் சட்டத்தைச் சீரமைத்து சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தில் தேசத்துரோக சட்டத்தின் எல்லைகள் பெரிது என்றாலும், நடைமுறையில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. மெக்காலே அரசின் மீது ‘disaffection’ காட்டினால் ஒருவர் மீது இச்சட்டத்தைப் பாய்ச்சலாம் என்று வரையறுத்து இருந்தார். அரசின் மீது நல்ல நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் இதில் வராது என்பது அவரின் பார்வையாக இருந்தது. பர்னேஸ் பீகாக் என்கிற சட்டத்துறை வல்லுநர் வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதாகக் கருத்துகள் இருந்தால் மட்டுமே தேசத்துரோக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாற்றியமைத்தார். அவரின் சட்டம் பிரிட்டனின் தேசத்துரோக சட்டத்தை ஒத்திருந்தது. ஆனால், ஸ்டீவன் என்கிறவர் உருவாக்கிய இறுதி வடிவத்தில் சட்டம் கடுமையானதாக ஆக்கப்பட்டது. அப்போது இஸ்லாமிய வாகாபிக்கள் கிறிஸ்துவர்களான ஆங்கிலேயருக்கு எதிராகப் புனிதப்போரை நடத்தக்கூடும் என்கிற அச்சத்தில் இச்சட்டம் தேவைப்படுவதாக அறிவித்தார்.
உடலுறவுக்கான விருப்ப வயதை பத்தில் இருந்து பன்னிரெண்டுக்கு உயர்த்திய ஆங்கிலேய அரசின் நடவடிக்கையை விமர்சித்துப் பங்கோபாசி என்கிற செய்தித்தாள் எழுதிய கட்டுரைகள் சார்ந்தே முதல் தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டது. எனினும், இந்த வழக்கு சீக்கிரமே விலக்கி கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என்கிற அச்சத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம், இந்து தேசியவாதியான திலகர் மீது பாய்ச்சப்பட்டது. திலகரின் சிவாஜி குறித்த உரை மக்களைத் தூண்டிவிடுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில் ஜூரி தீர்ப்பளிக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் ஜூரி ஒரு மனதாகத் தீர்ப்பு வழங்கினாலே இரண்டாண்டு தண்டனை. இந்தியாவிலோ அதற்கு மாறாகப் பெரும்பான்மை போதும். கூடுதலாக, நாடு கடத்தல் இந்தியர்களுக்குத் தண்டனை. இந்தியர் அல்லாத ஐரோப்பியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மட்டுமே. இதனால் திலகர் மீது சுமத்தப்பட்ட ராஜதுரோக குற்றங்களில் இந்திய உறுப்பினர்கள் அவரைத் தண்டிப்பதை எதிர்த்து வாக்களித்தாலும் பெரும்பான்மை ஆங்கிலேய உறுப்பினர்களின் வாக்குகளால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், திலகர் மராத்தி மொழியில் எழுதிய கட்டுரைகள் படிப்பறிவு இல்லாத, முட்டாள் மக்களுக்காக எழுதப்பட்டது. அவை வாசித்துக் காட்டப்பட்டு அவர்களைத் தவறான பாதையில் செலுத்துகிறது என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருதிப்பகுதிக்குள் மெக்காலேவின் குறுகலான குற்றங்களை மட்டுமே தண்டிக்கும் ராஜதுரோக சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தண்டனையை வழங்கின. இதை அடுத்து, தேசத்துரோக சட்டத்தை விரிவாக்கி ‘அரசு மீதான வெறுப்பு, அவமதிப்பு, பகை’ ஆகியவற்றை வளர்ப்பதையும் தேசத்துரோக குற்றம் என வரையறுத்துச் சட்டம் 1898-ல் அமலுக்கு வந்தது. காந்தி மீது இச்சட்டம் பயன்படுத்தப்பட்ட போது வரலாற்றில் முதன்முறையாக அந்தச் சட்டத்தின்படி தான் குற்றவாளி என்று காந்தி ஏற்றுக்கொண்டு அதிரவைத்தார். வன்முறைக்குத் தூண்டாத வரை அரசுக்கு எதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்துவது குற்றமில்லை என்றும், தான் தோன்றித்தனமான ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களின் தலை மீது இறங்க தயாராக் இருக்கும் வாளே இச்சட்டம் என்று கடுமையாகக் காந்தி சாடினார்.
Gwyer என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டினால் மட்டுமே இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உலகப்போர் சமயத்தில் தீர்ப்பு எழுதினார். மஜூம்தார் என்கிற சட்டசபை உறுப்பினர் நாற்பத்தி ஒன்றில் டாக்காவில் மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது எனத் தொடரப்பட்ட வழக்கில் இப்படி அவர் தீர்ப்பு எழுதினார். அரசாங்கங்களின் கர்வத்தைக் காயப்படுத்துகிற கருத்துக்களுக்கு மருந்து போட்டுக்கொள்ள இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றார். ஆனால், அவரின் கருத்தை பலேராவ் வழக்கில் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சில் ஏற்க மறுத்தது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஆயுள்தண்டனை தேசத்துரோக குற்றத்துக்கு விதிக்கப்பட்டது. 1974-ல் கைது உத்தரவு இல்லாமலே தேசத்துரோக குற்றங்களுக்குக் கைது செய்யலாம் என்று இந்திரா காந்தி அரசால் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
Image result for republic of rhetoric
கருத்துரிமை காவலர் கே.எம்.முன்ஷி:
கே.எம்.முன்ஷியை கிரான்வில் ஆஸ்டின் உரிமைகளை மட்டுப்படுத்துகிற செயலில் ஈடுபட்டவர் என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரோடு இணைத்து குறிப்பிடுகிறார். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது என்பதை அபினவ் சந்திரசூட் நிறுவுகிறார். கே.எம்.முன்ஷி பத்திரிக்கைகளை முன் தணிக்கை செய்கிற பணியில் உலகப்போர் சமயத்தில் ஈடுபட்டிருந்தார். அவரே கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் வரைவை தயாரித்த குழுவின் தலைவராக இருந்தார். அதில், பொது அமைதி, நன்னெறி, தேசத்துரோகம், ஆபாசம், அவதூறு, தெய்வ நிந்தனை என்று பல்வேறு கருத்துரிமையை மறுக்கும் பிரிவுகள் அடுக்கப்பட்டன. கே.டி.ஷா, ‘ஒரு வலது கை தந்ததை மூன்று, நான்கு இடது கைகள் பறித்துக் கொள்வதைப் போல’ இது இருப்பதாகக் குறைபட்டார். அம்பேத்கர் இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திப் பேசினார். டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் கருத்துரிமை கட்டுப்பாடுகள் அற்றதாக இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

அம்பேத்கர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பேச்சுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். வகுப்புவாத வெறியை தூண்டிவிடும் பேச்சு கருத்துரிமையின் கீழ் வரக்கூடாது என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் வாதிட்டார். இது அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் என்று கவலை தெரிவித்தார் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. கே.எம்.முன்ஷி வன்முறையைத் தூண்டிவிடாத பேச்சை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றார். தெளிவாக, ஆபத்தை விளைவிக்கும் பேச்சுக்களையே கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். அவரின் வாதங்களால் அம்பேத்கர், அல்லாடி ஆகியோரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தேசத்துரோகம் சார்ந்த பேச்சுக்களையும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் பிரிவுக்குள் கொண்டுவருவதையும் முன்ஷி நீக்க திருத்தம் கொண்டு வந்தார். அது ஏற்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு முடிவு செய்தது. நீதிபதிகள் காலனிய ஆட்சிக்கு நன்றியோடு இருந்துவிட்டு இன்னமும் பதவியில் தொடர்கிறார்கள், அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு என்று பி.தாஸ் என்கிற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று முடிவு செய்யப்பட்டது. நியாயமான கட்டுப்படுகளையே கருத்துரிமைக்கு விதிக்க வேண்டும் என்கிற பார்கவாவின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.

முதல் சட்ட திருத்தத்துக்கு வழி வகுத்த பிரசாத், முகர்ஜி:
கருத்துரிமைக்குக் கட்டுப்பாடுகள் ஓரளவுக்கே விதிக்கப்படுவதை அரசியலமைப்பு சட்ட குழுவின் விவாதங்கள் உறுதி செய்தாலும் சீக்கிரமே சிக்கல்கள் எழுந்தன. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு வெறுப்பைத் தூண்டும், வகுப்பு வாதத்தை வளர்க்கும் பேச்சுக்களை, எழுத்துக்களைத் தடை செய்ய அரசுகள் முயன்ற போது அது கருத்துரிமைக்கு எதிரானது என நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. ரொமேஷ் தாப்பர் என்கிற இடதுசாரியின் ‘CrossRoads’ செய்தித்தாள், ப்ரிஜ் பூஷன் என்கிற வலதுசாரியின் ‘Organiser’ செய்தித்தாள்களை அரசு கட்டுப்படுத்தியது. அவை கருத்துரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இருக்கும் மதச் சிறுபான்மையினரின் நலனை காக்க லியாகத் அலிகான் உடன் நேரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது சார்ந்தும் பிரிவினை, காஷ்மீர் சிக்கல்கள் சார்ந்தும் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி கடுமையாகப் பேசினார். பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று தொடர்ந்து பேசினார். இது படேல், நேரு ஆகியோரை கவலைக்கு உள்ளாக்கியது.

இன்னமும் மோசமாக, சார்ஜூ பிரசாத் என்கிற நீதிபதி, சங்க்ராம் என்கிற துண்டு பிரசுரத்தில், ‘நான் ரத்தவெறிக் கொண்ட காளி…. நான் தாகம் கொண்டிருக்கிறேன், எனக்குப் புரட்சி வேண்டும், போராட்டத்தின் மீது நம்பிக்கை வேண்டும்., அநீதியின் சங்கிலிகளைக் கிழித்து, கிழித்து எறியுங்கள்.’ என்று எழுதப்பட்டதை எதிர்த்துத் தொடர்ப்பட்ட வழக்கில், ‘கொலை செய்யத் தூண்டினாலும் அதுவும் கருத்துரிமை. அதற்கான தண்டனையைத் தூண்டியவர் அனுபவிக்க வேண்டும், ஆனால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியாது’ எனத் தீர்ப்பு தர அதிர்ந்து போனது அரசு. முதல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் ‘பொது அமைதி’, ‘அயல்நாடுகளோடு நட்புறவு’, ‘குற்றத்துக்குத் தூண்டுவது’ ஆகியன சார்ந்து கருத்துரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று திருத்தும் கொண்டு வந்தார். அயல்நாடுகளோடு நட்புறவை ஒரு தனிக் குடிமகனின் கருத்துகள் சீர்குலைக்குமா என்று நஸ்ரூதின் ஷா என்கிற உறுப்பினர் ஆச்சரியப்பட்டார்.

நியாயமான கட்டுப்பாடுகள் (reasonable restrictions) விதிக்கப்பட வேண்டும் என்கிற திருத்தத்தை அம்பேத்கர் கொண்டு வந்ததை உள்துறை அமைச்சர் ராஜாஜி பெரும் விவாதத்திற்குப் பிறகே ஏற்றுக்கொண்டார். குற்றத்துக்குத் தூண்டுவது என்கிற பிரிவு இருக்க வேண்டுமா என்கிற விவாதம் எழுந்த போது, ‘மதுவிலக்கு இருக்கும் ஊரில் மற்றவர்கள் கால்சட்டை பையில் சாராயம் சுமந்து செல்ல தூண்டுவது குற்றமில்லையா?’ என்று கேட்டார் ராஜாஜி. அம்பேத்கர், ‘வயல்களுக்கும், விறகு பொறுக்கக் காடுகளுக்கும் பட்டியலின சாதியினர் போகக்கூடாது எனச் சமூக விலக்கை சாதி இந்துக்கள் விதித்தால் அவற்றை ஏற்க முடியாது.’ என்று வாதிட்டார். பிளிட்ஸ் இதழில் கரஞ்சியா இந்தச் சட்ட திருத்தத்தைக் கருப்பு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்தை வன்புணர்வு செய்வது என்றெல்லாம் சாடினார். சட்டதிருத்தங்கள் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.
எதிர்ப்புக்குரியவற்றைப் பதிப்பிப்பது சார்ந்து 1951, 1971-ல் நேரு, இந்திரா அரசுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன. இவை காலனிய சட்டத்தை விடக் கடுமையாகப் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின என்கிறார் சந்திரசூட். எவ்வளவு முன்பணத்தை அச்சகம் செலுத்த வேண்டும் என்கிற வரையறையை விதிக்காமல் இந்தச் சட்டங்கள் அதை அரசை தீர்மானிக்க விட்டன, ஆங்கிலேயர் காலத்தில் வரையறை விதிக்கப்பட்டு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

திமுகவை பிரிவினை முழக்கத்தைக் கைவிட வைத்த சட்ட திருத்தம்:
திமுக அறுபதுகள் வரை திராவிட நாடு/தமிழ்நாடு கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்தது. சீனப்போர், நாகா, பஞ்சாப் பிரிவினை முழக்கங்கள் எல்லாம் சேர்ந்து கொள்ளப் பதினாறாவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் ‘தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை’ சார்ந்து கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம் என்கிற சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்ட சீர்திருத்தத்தைச் செய்யுமாறு சி.பி.ராமசுவாமி ஐயர், காமராஜர் முதலியோர் அடங்கிய தேசிய ஒற்றுமை கமிட்டி பரிந்துரை செய்தது. மேலும், பதவி ஏற்றுக்கொள்ளும் சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையைக் காக்கும் வகையில் இயங்குவேன் என்று உறுதிமொழி ஏற்பதும் கட்டாயமானது. நீதிபதிகளும் இவ்வாறு பதவி பிரமாணம் எடுக்க வேண்டியது கட்டாயமானது. இதன்மூலம் நீதிபதிகள் பிரிவினையை ஆதரிக்கும் பேச்சுகளைக் காப்பாற்ற முடியாமல் தடுக்கப்பட்டது. நரசிம்ம ரெட்டி எனும் உறுப்பினர் முந்தைய தேர்தலில் திமுகத் தந்த கடும் எதிர்ப்பை தாங்க முடியாமல் காங்கிரஸ் அதைப் பழிவாங்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார். சட்ட அமைச்சர் சென் நாகா, பஞ்சாப் பிரிவினை, தெற்கின் போராட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். பூபேஷ் குப்தா என்கிற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அப்போது அமலில் இருந்த அவசரநிலை சட்டத்தைச் சுட்டிக்காட்டி கருத்துரிமை உறைந்து போயிருக்கும் காலத்தில் அது குறித்து விவாதிக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார். மக்களவையில் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அண்ணா ஏழு திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தது கணக்கில் கொள்ளப்படவில்லை என்றார். மாநிலங்களவையில் அண்ணா மட்டுமே சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார். செழியன் சட்டத்தை எதிர்த்துப் பேசுகையில்:

‘தயவு செய்து எங்களோடு வாதிடுங்கள், போட்டி போடுங்கள், எங்களைச் சம்மதிக்க வையுங்கள். நாங்கள் மாறவே மாட்டோம் என்று தெரிந்தால் எங்களை விட்டுவிடுங்கள், மக்களிடம் போய் அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். இதை நீங்கள் செய்தால் தான், அது உண்மையான ஜனநாயகம். வேறு ஏதேனும் செய்வீர்கள் என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகம் இல்லை. அது வேறொன்று.’

என்றார்.
Image result for anna with era sezhiyan
         மேலும் அமெரிக்க உச்சநீதிமன்றம், ‘கருத்துக்களைக் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பது என்பது கல்லறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒற்றுமையை மட்டுமே சாதிக்கிறது.’ என்று அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசினார் செழியன். ஹெச்.என்.முகர்ஜி இறையாண்மை, ஒற்றுமை முதலிய வார்த்தைகள் தெளிவாக இல்லை, அவற்றைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்று கவலை தெரிவித்தார். காமத் ஸ்காட்டிஷ் ஹோம் ரூல் கட்சியைப் போல வன்முறையைத் தூண்டாமல் பிரிவினை பேசி, தேர்தலில் பங்கு கொண்டால் ஏற்பதில் ஒன்றும் தவறில்லை என்றார். வடக்கிற்கும், தெற்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் கோப்ரகடே, பிபுதேந்திர மிஸ்ரா முதலியோர் சுட்டிக்காட்டி பேசினார்கள்.

(ஆபாசம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்ற அவமதிப்பு குறித்த கருத்துரிமை விவாதங்கள் நாளை விரிவாக பேசப்படும்)


……………………………

நீயா, நானா, பெண்ணியம், கருத்துரிமை


முன்குறிப்பு:இப்பதிவு நீயா, நானா நிகழ்வு தடை செய்யப்படுவதற்கு முன்பு எழுதப்பட்டது.  இறுதிப்பத்தியில் அது குறித்த பார்வையைச் சேர்த்திருக்கிறேன்)

யார் அழகு -தமிழ்நாட்டு பெண்களா? கேரளத்து  பெண்களா என்கிற தலைப்பில் ஒரு விவாதத்தை நீயா, நானா ஒளிபரப்புவதாக முன்னோட்டம் வெளியிட்டது. இது சார்ந்து எதிர்ப்புகள் எழுந்தன. பெண்ணுடைய அழகென்பதை வெறும் உடல்ரீதியாக அணுகுவதை எதிர்ப்பது பிற்போக்குவாதம் எனவும், துய்ப்பைத் தடுக்கிற ஒன்று எனவும் நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். இது என்ன விஜய் தொலைக்காட்சி மட்டுமா செய்கிறது என்றொரு கேள்வி வேறு. ஆதி முதல் அப்படித்தானே என நீட்டுகிறார்கள். எந்த வகையிலும் பாலியல் குறித்து வெளியே பேசக்கூடாது என்றும் அழகை கொண்டாட கூடாது என்றும் பேசினால் பிற்போக்கானது எனலாம். பெண்ணை வர்ணிக்கையில் மீண்டும் மீண்டும் கலவிக்கான, புற அழகால் மட்டுமே எடைபோடப்பட வேண்டிய ஒருவராகப் பண்டைய இலக்கியங்கள் துவங்கி தற்காலப் பாடல்கள் வரை பலவும் பேசுகின்றன. பெண் என்றால் தெரியாத இடை, பாய்ந்தோடும் கண்கள், பெருத்த மார்பகம் எனக் கவிஞர்களின் கற்பனை மிக அதீதமாகக் குடி கொண்ட இடம் என்று பெண்ணின் உடலைச் சொல்லலாம். பெண்ணுடல் மீதான கவர்ச்சி ஒரு தரப்பு என்றால் பெண்ணுடல் வெறுப்பு பல்வேறு மதங்கள், பக்தி இயக்கங்களில் கலந்திருந்தன.

Image result for neeya naana

பெண்ணின் உணர்வுகள், சிந்தனைகள், கருத்துகள் ஆகியவற்றால் அணுகுவது அரிதாகவே இருக்கிறது. பெண் மீதான வன்முறையின் மையம் ஆண் என்பவன் பெண்ணை ஆளப்பிறந்தவன் என்கிற எண்ணத்திலும், பொண்ணுன்னா போடணும் மச்சி என்கிற உசுப்பேற்றல்களிலும் ஒளிந்திருக்கிறது. ஒரு பெண்ணை அவளுடைய புற அழகைத் தாண்டி தரிசிக்க முடியாத ஆணின் தட்டையான பார்வை பெரிதாக மாறிவிடவில்லை. ஏற்கனவே சமூகம் அப்படித்தான் இருக்கிறது, அதை வைத்து நாங்களும் கேளிக்கையை வளர்த்து எடுக்கிறோம் என்பார்கள். தாராளமாகச் செய்யுங்கள். கலை, கருத்துச் சுதந்திரம் கட்டற்ற வடிவமாக இருப்பதால் அது பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என நுகர்பவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படியெல்லாம் நிகழ்ச்சி நடத்த விடாமல் தடை செய்வோம் என்றால் அது பிற்போக்குவாதம். இது சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கிறது, பெண்ணை உடைமைப்பொருளாக மாற்றுகிறது, அழகென்பது உடல் சார்ந்ததாக முன்வைத்து சமூகத்தின் நெடுங்கால முன்முடிவுகளை, அபத்தமான பார்வையை மீண்டும் வேரூன்ற வைக்கிறது என்பது கருத்தியல் தளத்திலான எதிர்ப்பு.

பக்கத்து மாநிலத்தோடு போட்டி போட அநேகம் உண்டு. அன்றாடச் செய்தித்தாள் வாசிப்பில் அவர்களைவிட நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப்பரவல் அசர வைப்பது. ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நிலம் சார்ந்த அதிகாரம் மட்டுமே இருக்கும் அதிசய மாநிலம் கேரளா. இன்னமும் பொதுநலத்தில் கேரளாவை விடப் பின்தங்கியே இருக்கிறோம். மாணவர்கள் அரசியல்மயமாவதிலும் தான்.

வெள்ளை நிறத்தில் அழகு பொதிந்திருக்கிறது என்று சொல்கிற விளம்பரங்கள் தங்கள் விற்பனைக்காக அந்த நிறவெறியை முன்வைக்கின்றன. விளம்பரமும், வருமானமும் பெருக வேண்டும் என்பதற்காக இன்னமும் நாசூக்காக அழகு என்பது உடலியல் ரீதியாகக் கட்டமைக்கிற இழிவான நிகழ்வு இது. இதில் தங்களைச் சுரண்டும், மீண்டும் உடல் சார்ந்து மட்டுமே அணுகும் ஆணின் ஜொள்ளிற்குப் பலியாகிறோம் என்பதே பெண்களுக்குப் புரியப்போவதில்லை. பெண்களின் அழகை ஒப்பிடுவதாகச் சொல்லிக்கொண்டு ஒரு நிகழ்வு,அதில் தங்களுடைய சுயமரியாதைக்குச் சற்றும் இடமில்லை என்பதோ, (objectification’ நடக்கிறது எனப்புரியாமலே இந்த அழகைக் கொண்டாடும் அரசியலின் வர்த்தகத்தைக் கொண்டாடுகிறார்கள். ‘எங்களை இப்படி எடை போடறதுக்கு நீங்க யாருடா’ எனக்கேள்வி கேட்டால் அது ‘போலிப்பெண்ணியமா’? ‘ஜாலியா இருக்கோம். இதுக்கு இவ்வளவு அக்கப்போரா’ என்கிறவர்கள் சமூகப் பொறுப்பற்ற செயலை தாராளவாத முகமூடியால் மறைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். தாராளவாதம் ஆதிகாலப் பெண்ணுடல் சார்ந்த பார்வைகள் இப்போதும் முன்வைப்பது அல்ல. பெண் விடுதலை பாலியல் சார்ந்தது மட்டுமல்ல அது சிந்தனை, பொருளாதாரம், செயல்பாடு சார்ந்து
சாதியமைப்பு, ஆணாதிக்க, மதக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இயங்குவதிலும் இருக்கிறது. பெண்களின் விடுதலையைப் பாலியல் ரீதியாகக் கட்டுப்படுத்துபவர்களை எதிர்கொள்ளும் தளம் அவர்களின் ஆயுதத்தையே ஏந்திக்கொள்வதல்ல. அதைத்தாண்டி சமூகத்தை முன்செலுத்த முயல்வது.

பெண்கள் புற அழகில் கவனம் செலுத்தக்கூடாது, கிராப் வெட்டினால் காசு தருகிறேன், உண்மையான விடுதலையை ஆண் அழகென வகுத்தவைகளைக் கொண்டு அடைய முடியாது எனப் பேசிய பெரியார் இதையெல்லாம் பார்த்திருந்தால் ‘ஒன்றுக்கும் உதவாத வெங்காயம்’ என்று தட்டியிருப்பார். சமூகத்தில் பாலியல் வறட்சி நிலவுகிறது என்றால் அதைக்குறித்துக் காத்திரமாகப் பேச வேண்டும், உரையாட வேண்டும், முறையான வழிகாட்டுதல்களை முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து அதே உடலியல் சார்ந்த மிகையுணர்ச்சிகளில் சமூகத்தைத் தோய்ப்பது ஆபத்தானது.

Image result for பெரியார் கிராப்

 

கருத்து எத்தனை அபத்தமானதாக, ஆதிக்கப்பார்வை மிக்கதாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் உரிமையை மறுப்பது தவறானது. உரையாடலுக்கான வெளி அங்கு மறுதலிக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தைக் கருத்துரிமையின் கழுத்தை பிடிப்பதால் நிறுத்திவிட முடியாது. நிகழ்ச்சி முடிந்த பிறகு முற்போக்குவாதிகளின் கருத்துக்களை விட ‘objectify’ செய்யப்பட்ட பார்வைகளே பெருத்த கவனத்தைப் பெற்றிருக்கும். ஆளுமை சார்ந்தும் நிகழ்ச்சியில் உரையாடல் அமைந்ததாக ‘நீயா நானா குழு’ சொல்கிறது. பார்க்காமலே தீர்ப்பெழுதுவதற்கு இரு நிமிட முன்னோட்டமும் ஒரு காரணம்.

Image result for neeya naanaஅதே சமயம், இதற்கு மட்டும் போராட வந்துவிட்டீர்கள், மற்றதற்கு எல்லாம் எங்கே இருந்தீர்கள் என்று கேட்பதும் ஆபத்தானது. பல்வேறு பெண்ணிய அமைப்புகள் பல்வேறு அடித்தட்டு, விளிம்புநிலை பெண்கள் சார்ந்த போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆண்களும் இணைந்து பெண்ணியம் பேசுவது அவசியமாகிறது. ஏனெனில், பெண்ணியம் என்பது ஒரு தரப்பின் ஆதிக்கத்தை நாடுவது அல்ல. அது சமத்துவத்தை நோக்கிய நெடும் பயணம். நம்மிடையே இருக்கும் ஆதிக்க உணர்வை கேள்வி கேட்பதை ஒரு தரப்பு மட்டும் செய்ய முடியாது, கூடாது. ‘நீ எங்கே போயிருந்தே’ என்பதற்குப் பதிலாக நாம் எதாவது செய்யலாமே என்பதாக உரையாடல், சிந்தனை நகர்வதே சமூகத்தை முன்னோக்கி எடுத்து செல்லும்.

#NeeyaaNaanaa #KeralaVsTamilnadu #StopObjectifying #VijayTv #FreedomofExpression

தயாநிதி கொண்டு வந்த 66A! ஆடித்தீர்த்த அரசியல்வாதிகள்… – 360° பார்வை


தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66A பிரிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சொல்லி அதை நீக்கியிருக்கிறது உச்சநீதி மன்றம். அப்படி என்னதான் இந்த சட்டத்தில் பிரச்சனை என்கிறீர்களா?

2008-ல் இந்த சட்டப்பிரிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த பொழுது அதை அப்படியே ஆதரித்த இன்னொரு நல்ல கட்சி எது தெரியுமா? பாஜக தான்..

இணையத்தில் நீங்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள பயன்படுத்தும் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக காயப்படுத்துவதாக இருந்தால் உங்களை சிறைக்கு அனுப்பலாம் என்பதே அச்சட்டம். இந்தச் சட்டத்தில் அச்சுறுத்துகிற, கடுப்பை உண்டாக்குகிற இணையப் பதிவுகளுக்கு எல்லாம் கம்பி எண்ண வைக்கலாம் என்றது தான் அரசியல்வாதிகள், காவல்துறை ஆகியோருக்கு கொண்டாட்டமாக போய்விட்டது.
ஒரு பத்து நிகழ்வுகளை எடுத்துக்காட்டினால் போதும்:

1. பால்தாக்கரே மரண ஊர்வலத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்டதைப் பற்றி ஷாஹீன் தாதா, ரேணு ஸ்ரீனிவாசன் என்று இரு பெண்கள் “பலபேர் ஒவ்வொரு நாளும் இறக்கிறார்கள். உலகம் நகர்கிறது. ஒரு அரசியல்வாதி இறந்து போனதும் ஊரே ஸ்தம்பித்து விட்டது. நாம் இன்றைக்கு விடுதலையாக இருப்பதற்கு காரணமாக பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தியிருக்கிறோமா?. மரியாதை தானாக வரவேண்டும். அது கட்டாயத்தில் வரக்கூடாது. இன்றைக்கு மக்கள் திரளாக கூடியதற்கு காரணம் மரியாதை அல்ல! பயமே!.” என முகநூலில் பதிவிட்டார்கள். இதற்கு கைது!

2. ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகபத்ரா மம்தா பானர்ஜி பற்றிய கேலிச்சித்திரங்களை பார்வர்ட் செய்ததற்கு கைது செய்யப்பட்டார். “நீங்கள் இதனால் காயப்பட்டீர்களா?” என்று அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்து கலக்கியது காவல்துறை

3. அசீம் திரிவேதி வெவ்வேறு கார்ட்டூன்களின் மூலம் இந்திய அரசை காட்டமாக விமர்சித்ததற்கு கைது செய்யப்பட்டார். தேசிய சின்னங்களை தவறாக கார்ட்டூனில் பயன்படுத்தி பிரிவினைவாதத்தை தூண்டினார் (?!) என்றும் அவர் கைதுக்கு உள்ளானார்.

4. வங்கதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் ட்வீட்டரில் மத உணர்வுகளை புண்படுத்துகிற வகையில் எழுதினார் என்று இஸ்லாமிய மதகுரு ஒருவரின் புகாரின் பெயரில் முதல் தகவல் அறிக்கை அவர் மீது இதே பிரிவின் கீழ் பதியப்பட்டது.

5. கேரளாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜேஷ் பிரதமர் மோடி பற்றி காயப்படுத்தும் வகையில் கமென்ட் செய்ததற்காக ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவரின் புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்.

6. ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் ஊழல்வாதி என்று இந்தியா ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் அப்பொழுதைய ஆர்வலரும், தற்போது ஆம் ஆத்மியின் புதுவை பொதுச்செயலாளரும் ஆன  ரவி சீனிவாசன் ட்வீட் செய்ய கார்த்திக் சிதம்பரத்தின் மின்னஞ்சல் புகாரில்  அவரையும் இதே சட்டத்தில் ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.

7. ஆசம்கான் எனும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உத்திர பிரதேசத்தின் நகர்ப்புற வளர்ச்சியின் அமைச்சரைப் பற்றி காயப்படுத்தும் வகையில் பதிவு போட்டதற்காக ஒரு பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டு பதினான்கு நாள் நீதிமன்றக்காவலில் வைத்தார்கள். ஆசம்கான் வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவதில் விற்பன்னர். தன்னுடைய எருமை மாடுகளைத் தேட காவல்துறையை பயன்படுத்தும் பெரும்புள்ளி என்று ஏனோ சொல்லாமல் இருக்க முடியவில்லை.

8. உபியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மதநம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் காட்சிப்படம் போட்டது, கமென்ட் செய்தது ஆகியவற்றுக்காக கைதுசெய்யப்பட்டு நாற்பது நாள் சிறைத்தண்டனைக்கு உள்ளானார்கள்.
9. கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பினராயி விஜயனின் ஆடம்பர மேன்ஷன் என்றொரு படத்தை மின்னஞ்சலில் பார்வர்ட் செய்ததற்காக இரண்டு கேரள இளைஞர்கள் கார்த்திக், மனோஜ் கைது செய்யப்பட்டார்கள்

10. தங்களுடைய க்ரூப்பில் அரசியல்வாதிகள் பற்றி காயப்படுத்தும் வகையில் பதிவு போட்ட மாயன்க் ஷர்மா, கே.வி.ராவ் எனும் ஏர் இந்தியா பணியாளர்கள், சமாஜ்வாதி கட்சியின் தலைவர், உபி முதல்வர் ஆகியோர் பற்றி ஆட்சேபகரமான படத்தைப் போட்ட வாரனாசி சுற்றுலா அதிகாரி என்று பலரையும் சிறைக்கு அனுப்பினார்கள். குறுக்கெழுத்து போட்டியில் NaMo என்கிற மோடியின் பட்டப்பெயரை விடையாக வைத்ததற்காக எல்லாம் திரிசூரில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர் ஆகியோர் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்தார்கள்.
சண்டிகரில் மட்டும் இரண்டு ஆண்டுகளில் எழுபத்தி ஐந்து வழக்குகள் இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்ஆப்பில் சீக்கியத் தலைவரை கிண்டலடித்தற்கு கூட வழக்கு! மம்தாவின் மேற்கு வங்கத்தில் மட்டும் நூறு வழக்குகள். உத்திர பிரதேசத்தில் நாற்பத்தி ஆறு மாவட்டங்களில் இரண்டு வருடங்களில் நானூறு வழக்குகளை பதிந்திருக்கிறார்கள்.

உண்மையில் முதலில் இயற்றப்பட்ட ஐ.டி. சட்டத்தில் இந்த உட்பிரிவே இல்லை. இந்த சட்டம் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டது தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் தான். பின்னர் இது ஆ.ராசா தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஆய்வதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியில் ஒரு உறுப்பினர் தற்போது இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்திருப்பதை வரவேற்று இருக்கும் ரவிசங்கர் பிரசாத். ப.சிதம்பரமும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இருக்கிறார். அவரின் மகன் இந்த சட்டத்தின் கீழ்தான் புகார் கொடுத்தார் என்பதை மறந்து விடுங்கள்.

அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 19(1) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக தருகிறது. அடுத்த உட்பிரிவான
19(2) கருத்துரிமையின் மீது தேவையான கட்டுப்பாடுகளை பொது ஒழுங்கு, நாகரீகம், அவதூறு கிளப்புதல் போன்ற தருணங்களில் விதிக்கலாம் என்கிறது.
அரசு இரண்டாவது உட்பிரிவை காட்டித்தான் இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் நியாயப்படுத்த முயன்றது. இணையத்தின் கருத்துரிமையை கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது என்றால் எப்படி அந்த கட்டுப்பாடு பொது ஒழுங்கை காப்பாற்றும் என்று நிரூபிக்க வேண்டும் என்றது. சட்டப் பிரிவு 69A வின் கீழ் ஆன்லைன் தளங்களை ப்ளாக் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. இதையும் நீக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அதற்கு ஒப்ப உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் ஒரு தளத்தை அரசு முடக்கினால் அதற்கு எழுத்துப் பூர்வமாக நியாயமான காரணங்களை பதிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.


79 வது உட்பிரிவில் இந்த பதிவுகள் இடப்படும் ஆன்லைன் தளங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ட்வீட்டரில் எதோ வன்முறையைத் தூண்டும் வகையில் ஒன்றை ஒருவர் எழுதிவிட்டால் அதற்காக ட்வீட்டரின் அதிகாரிகளை கைது செய்ய முடியாது. ஆனால், அதிலும் ஒரு செக் இருக்கிறது. 79(3) ன் படி ஒரு சட்டத்துக்கு புறம்பான கருத்தோ, படமோ ஆன்லைனில் இருக்கும் என்கிற தகவல் தளத்துக்கு கிடைத்ததும் அது செயல்பட வேண்டும். அதுவும் ஒன்றரை நாட்களுக்குள் செயல்படாவிட்டால் சட்டம் தன்னுடைய கடமையை செய்யும். இந்த தகவல் என்கிற வார்த்தையை உச்ச நீதிமன்றம் விரித்து பொருள் கொண்டிருக்கிறது. அரசோ, நீதிமன்ற ஆணையோ சம்பந்தப்பட்ட தளத்துக்கு வழங்கப்படுவதையே தகவல் என்பதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதனால் போகிற போக்கில் தளத்தின் மீது நடவடிக்கை எடுப்பது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொழுது காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்கள் என்று சகலரும் இதனை ஏற்றுக்கொண்டு ஓட்டு போட்டார்கள். மூன்றே மூன்று எம்.பி.க்கள் மட்டுமே இதற்கு எதிராக குரல் கொடுத்தார்கள். இப்பொழுது என்னமோ தாங்கள் எல்லாம் கருத்து சுதந்திரத்தை காக்கவே வந்தவர்கள் போல இரு கட்சியினரும் அறிக்கைகள் விட்டுக்கொள்கிறார்கள்.
ஸ்ரேயா சிங்கால் என்கிற இருபத்தி நான்கு வயது சட்டக்கல்லூரி மாணவி தான் இந்த சட்டப்பிரிவுக்கு எதிரான முதல் வழக்கைப் பதிந்தார். அவரோடு எண்ணற்ற குடிமக்கள் நீதிமன்றத்தை நாடியதற்கு பொருள் ஏற்பட்டு இருக்கிறது.


மக்களின் கருத்துரிமையை காக்க வேண்டிய நாடாளுமன்றத்தின் அங்கமான எம்.பி.க்கள் விமர்சனங்களை பொறுக்க முடியாமல் பொது மக்களை அச்சுறுத்த இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே கசப்பான உண்மை. ஆனால், ‘என்னைக்கூட விட்டு வைக்காதீர்கள் சங்கர்!” என்று கருத்துரிமையை மதித்து ஒரு மாதிரியை உருவாக்கிய நேருவிய தாராளவாதத்தை நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.

இந்து மத வரலாற்றை இந்துத்வவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது எப்படி?


Wendy Doniger ‘ஏன் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து மதத்தைப் பற்றி எழுத வேண்டும்’ என்கிற தலைப்பில் எழுதிய The Times of India கட்டுரை:

வில்லியம் டால்ரிம்பிள் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்திக்கொண்டிருந்த என்னுடைய லண்டன் உரையின் பொழுது என் மீது யாரோ ஒரு முட்டையை வீசினார்கள். ஆனால், சில முறை முயற்சித்தும் என் மீது சரியாக அவர்களால் முட்டையை எறிய முடியவில்லை. இந்தச் சம்பவத்தைத் தன்னுடைய இந்திய வரலாறு பற்றிய கட்டுரையில் விவரித்த டால்ரிம்பிள், “இந்தியாவுக்குள் இந்து வலதுசாரிகளால் கூட்டப்பட்ட கூட்டங்கள் அவ்வப்பொழுது கலைக்கண்காட்சிகள், நூலகங்கள், வெளியீட்டாளர்கள், திரைப்பட நிறுவனங்கள் ஆகியவற்றை அவர்களின் தேசபக்தியற்ற, இந்து எதிர்ப்பு செயல்பாடுகளுக்காகத் தாக்குவதாகச் சொல்லிக்கொண்டு செயல்படுவார்கள். தற்பொழுது இந்த மாதிரியான செயல்பாடுகள் உலகம் முழுக்க இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. உலகின் பெரிய அறிவுச்சமூகத்தில் அமெரிக்க அறிஞர்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உள்ளார்கள். ஆனாலும், எங்களுக்கும் சிக்கல்கள் உள்ளன. அமெரிக்க அறிஞர்களான ஜெப்ரி க்ரிபால், பால் கோர்ட்ரைட், ஜிம் லேயின் ஆகியோரின் புத்தகங்கள் இந்தியாவில் தாக்கப்பட்ட பொழுது அவற்றின் இந்தியப் பிரதிகள் ஒடுக்கப்பட்டன. அமெரிக்காவிலும் இவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன/

நான் முன்பெல்லாம் இந்து மதத்தைப் பற்றி உரையாற்றினால் அந்த உரையின் முடிவில் ஒரு மூத்த இந்து ஆண் (எப்பொழுதும் ஆண் தான்) எழுந்து, என்னைப் பெரிய அளவில் புகழ்ந்த பின்னர், ஒரு மினி-லெக்சரை நிகழ்த்துவார். பல சமயங்களில் கற்றறிந்த ஒன்றாகவும், சில சமயம் தலைப்புக்கு பொருந்துவதாகவும் அது அமைந்திருக்கும். அவை இந்த அமெரிக்கப் பெண்ணுக்கு தெரியாத விஷயங்கள் எனக்குத் தெரிந்திருக்கின்றன என்று காட்டும் பாணியில் இருக்கும். அதில் எந்தத் தவறும் இல்லை. தன்னுடைய இந்து மதத்தின் மீது தன்னுடைய அறிவும், ஆளுமையும் அதிகப்படியானது என்று அவர்கள் நிறுவ முயல்கிறார்கள். தங்களுடைய இந்து மதத்தை, இந்துக்களைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் முனைகிறார்கள். அவர் மதிக்கத்தக்க, ஆர்வம் தரும் ஒன்றை சேர்க்கிற பொழுது, உரைக்குப் பின்னரும் ரிசப்சனில் இருவரும் உரையாடிக்கொண்டு இருப்போம். சமயங்களில் அது வெறும் சடங்காகவே, தொடர்பில்லாத ஒரு உரையாடலாக இடத்தை அடைத்துக்கொள்ளும் ஒன்றாக அமைந்திருக்கும். சமீபத்திய குறிக்கீடுகள் இவற்றில் இருந்து மாறுபட்டு தீய நோக்கம் கொண்டவையாக உள்ளன. இணையத்தில் உள்ள நபர்கள் அந்த மூத்த ஆண்களைப் போலக் கற்றவர்கலகவோ, நாகரீகம் கொண்டவர்களாகவோ இருப்பதில்லை. அந்த மூத்தோரை இப்படி மிஸ் செய்வேன் என்று அப்பொழுது எண்ணியதில்லை. அவர்களில் சிலர் என்னுடைய உரைகளில் தென்படுகிற பொழுது சற்றே நிம்மதியாக இருக்கிறது.

இந்து மதத்தைப் பற்றிய இந்துக்கள் அல்லாதவர்கள் எழுதும் புத்தகங்களை எதிர்க்கும் இந்துக்கள் மூன்று அடிப்படையான சிக்கல்களில் கவலை கொண்டு இருக்கிறார்கள்:

1. இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள் அல்லாதவர்களே பெரும்பாலும் எழுதுகிறார்கள் ;

2. இந்துக்கள் அல்லாதவர்கள், சமயங்களில் இந்துக்களும் கூடத் தவறான இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள்;
3. முக்கியமான அறிஞர்கள் (இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள்) ஆய்வுப் பார்வையிலேயே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்களே அன்றி நம்பிக்கையின் பார்வையில் எழுதுவதில்லை.

இந்த மூன்று சிக்கல்களும் பல சமயங்களில் தவறாகப் பூதாகரம் ஆக்கப்பட்டும், உண்மையான சிக்கலை மழுங்கடித்து, ஏற்கனவே குழம்பிய குட்டையை இன்னமும் குழப்புகிறது. ஒவ்வொரு சிக்கலாக இங்கே பேசுவோம்.

Non-Hindus rather than Hindus are writing about Hinduism.
என் மீது முட்டை எறியப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு
டார்லம்பில் இப்படிச் சொன்னார், “அந்த உரைக்குப் பிந்தையைக் கேள்வி நேரத்தில் முட்டை எறிபவனோடு வந்திருந்த குழு வென்டி டோனிங்கரை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள். தொடர்ந்து இந்து அல்லாத ஒருவர் தங்களுடைய மதத்தைப் பற்றிக் கருத்து சொல்ல தகுதியவற்றவர் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது.” இந்துக்கள் மட்டுமே இந்து மதத்தைப் பேச வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கிறிஸ்துவர்களும், யூதர்களும் கிறிஸ்துவம், யூத மதம் ஆகியவற்றின் எழுத்துக்களைப் பெரும்பாலும் கட்டுப்படுத்துவதாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டின் தொடர்ச்சியாகத் தங்கள் மதத்தைப் பற்றிய கருத்துக்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். (கிறிஸ்துவர்கள் மட்டுமே தங்கள் மதத்தைப் பற்றிய கருத்துக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது உண்மையில்லை. பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு இந்துக்கள் குறிப்பாக ராம் மோகன் ராய், சுவாமி தயானந்தர் முதலியோர் கிறிஸ்துவத்தின் மீது தீவிரமான விமர்சனங்களை வைத்துள்ளார்கள். (அவற்றில் பெரும்பாலானவை உண்மையானவை.) இவர்களின் இந்தக் கவலையை நாம் கரிசனத்தோடு அது ஒரு அரசியல் கவலை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

முதல் எதிர்ப்புக்கு பதில்:

இந்துக்கள் அல்லாதவரே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள் என்பது உண்மையல்ல. இரு குழுக்களும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன. இந்துக்கள் இந்து மதத்தைப் பற்றி Iபுத்தகங்கள் எழுதுவதில் பல்வேறு அனுகூலங்கள் உள்ளன. இந்துக்களுக்கு மட்டுமே தெரிந்த இந்து மதம் பற்றிய விஷயங்கள் இந்த நூல்களில் இடம்பெறும். என்னைப் போல இந்து மதத்தைப் பற்றிக் கற்பவர்களும், அதைக் கற்பிக்கும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து மதத்தின் பண்டைய மூலங்கள், இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் எழுதிய அற்புதமான நூல்களைப் படித்து எழுதவும், பாடம் நடத்தவும் செய்கிறோம். சில இந்துக்கள் இதற்கு எதிராக இந்துக்கள் அல்லாத அறிஞர்கள் எழுதிய நூல்கள் மட்டுமே மூடிய குழுவாக இயங்கும் பதிப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆதரிக்கிறார்கள். இவற்றை இந்து அறிஞர்கள் உடைக்க முடியாது என்று அவர்கள் சொல்லக்கூடும். அதில் ஒரளவுக்கு உண்மை கடந்த காலத்தில் இருந்தது என்றாலும், தற்பொழுது அது பெருமளவில் குறைந்துவிட்டது. மேலும், மேலும் அற்புதமான பல நூல்களை இந்து அறிஞர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றை நாடு முழுக்க வகுப்புகளில் பயன்படுத்தவும் செய்கிறோம். .

சில இந்துக்கள் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளில் தங்களுடைய கல்வியை முடித்து இந்திய ஆய்வுமுறைகள், மற்றநாட்டு ஆய்வுமுறைகள் இரண்டிலும் தேர்ச்சி பெறுகிறார்கள். இவர்கள் இரட்டை நோக்கு கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். ஏ.கே.ராமானுஜன் வார்த்தைகளில் இந்த இந்தோ-அமெரிக்கர்கள் இந்திய, இந்தியர் அல்லாத அறிவுஜீவி உலகினில் வாழ்கிறார்கள். இரண்டு உலகங்களைச் சேர்ந்த அறிவு ஜீவிக்களாலும் நிச்சயம் எழுத முடியாத புத்தகங்களை இவர்கள் எழுதுகிறார்கள். இந்தியாவில் கருத்துரிமைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை ராமாயணம் பற்றி ஏ.கே.ராமனுஜன் எழுதிய முக்கியமான கட்டுரையைப் பாடப்புத்தகங்கள், ஆக்ஸ்போர்ட் தொகுப்பு ஆகியவற்றில் இருந்து நீக்க நடந்த முயற்சிகளும், அந்த எதிர்ப்புகள் ஆற்றல், வெற்றி ஆகியவற்றை மீறியும் அந்தக் கட்டுரை காப்பற்றப்பட்டது இந்திய ஜனநாயகம் உயிர்த்திருப்பதன் மீதான நம்பிக்கையின் அடையாளம்.

நாம் இந்த வகையான அறிஞர்களைப் புகழ்வதால் வெறுமனே இரு கலாசாரக் கல்வி கொண்ட இந்துக்கள் மட்டுமே நூல்களை எழுத வேண்டும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. உள்ளிருந்து ஒரு விஷயத்தை அனுகுபவரின் எழுத்தில் உள்ள நியாயத்தை நான் நிச்சயம் மறுக்க மாட்டேன். ஆனால், அதனுடன் கூடுதலாக வேறு ஆக்கங்களும் எழவேண்டும் என்பேன். இந்துக்கள் தங்களின் மதத்தைப் பற்றி வெளிப்படுத்துவது கட்டாயமான அடிப்படை; அதே சமயம் அவர்களின் கருத்தை மட்டுமே ஏற்க வேண்டும் என்பது மதத்தைப் பற்றிய ஆய்வுப்பூர்வமான வாசிப்பின் அடிப்படைக்கூறுகளைச் சேதப்படுத்தும்.

இந்து மதத்தைப் பற்றி இந்து அல்லாதவர் எழுதும் நூலிலும் சாதகங்கள் உள்ளன. அவர்கள் இந்து மதத்தைப் பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி மார்க்ஸ், ப்ராய்ட், டெர்ரிடா, எட்வர்ட் செட் முதலியோர் பார்வையில் பார்க்க முனைகிறார்கள். இது பயன்மிக்க ஒரு இடைவெளியை சாதிக்கிறது. எந்த இந்துவும் முழுமையாக எல்லா வகையான இந்து மதங்களையும் தெரிந்திருக்கவோ, அவை அனைத்துக்கும் தானே பிரதிநிதியாகவோ திகழ முடியாது. இந்துக்களின் மதம் பற்றிய மாறுபட்ட அறிவு சார்ந்த ஆய்வு, புரிதல் ஆகியவற்றை இந்துக்கள் அல்லாத அறிஞர்கள் திறக்க முடியும். இவை இரண்டிலும் சாய்வான நிலைப்பாடுகள் நிச்சயம் உள்ளன. இரண்டு சாய்வான ஆய்வுகளும் ஒன்றுகொன்று ஏற்படுத்தும் தாக்கத்தைச் சரிசெய்து கொள்ளும். ஆனால், அடுத்தக் குற்றச்சாட்டு உள்ளது

சில இந்துக்கள் அல்லாதவர்கள் (சமயங்களில் இந்துக்களும்) தவறான இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்கள்.

இந்துத்வவாதிகள் பேச மட்டும் விரும்பவில்லை. அவர்கள் தாங்கள் சொல்வதைக் கேட்க வைக்கவும் விரும்புகிறார்கள். இந்து மதத்தைப் பற்றிக் கேட்க விருப்பமில்லை என்பவர்களை அமைதிப்படுத்தவும் அவர்கள் இயங்குகிறார்கள். அமெரிக்கர்கள் (சில அமெரிக்க இந்துக்கள் உட்பட) தங்களின் மதத்தைப் பற்றிச் சொல்லும் குறிப்புகளைத் தங்கள் பார்வையில் இந்து மதத்தைத் தொடர்ந்து அவமதிக்க வெளியிடுவதாகக் கருதுகிறார்கள். ஆகவே, அவற்றை அவர்கள் தவிர்க்க செயல்படுகிறார்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவுக்கு நியாயம் இருக்கவே செய்கிறது. பல்வேறு அமெரிக்கக் கல்ட்கள் தங்களை இந்து மதத்தின் அடிப்படையில் ஆனவை என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை மலிவான ஒன்றாக, தவறான ஒன்றாகக் காட்டியுள்ளன. தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்ளும் இவை பெரும்பாலும் தாந்த்ரீக ரீதியிலானவை மட்டுமே.

டேவிட் கார்டன் வைட்டின் வரிகளில். ” இந்த அமெரிக்கர்கள் புது யுக தாந்த்ரீக செக்சை மிக மோசமான முறையில் இந்திய பாலியல் கூறுகள், பாலியல் கலைகள், மசாஜ் முறைகள், ஆயுர்வேதம், யோகா ஆகியவற்றை இணைத்து ஒரே பாரம்பரியமாகக் கட்டமைக்கிறார்கள்” . “ஆகவே, இடைக்காலத் தாந்த்ரீகம் புது யுக தாந்த்ரீகத்துக்கு அடிப்படை என்பது கைரேகைப் பதிவு எப்படி நவீன ஓவியத்துக்கு அடிப்படை என்பது எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு உண்மை”

“கேளிக்கைக் கூடாரமாகத் திகழும் நவீன காலத் தாந்த்ரீகத்தை இந்தியாவைச் சேர்ந்த குருக்கள், பயிற்றுநர்கள் மேற்கின் அறிஞர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டு மேற்கைச் சேர்ந்த தாகம் மிகுந்த சீடர்களுக்குக் கிழக்கின் மாயங்களைக் காட்டுவதாகச் சொல்லி விற்கிறார்கள்.” என்று வைட் பொரிந்து தள்ளுகிறார். இந்த மாதிரியான சிதைக்கப்பட்ட பார்வையை ஏன் இந்துக்கள் எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

பெரிய முரண் என்னவெனில் இந்தியாவே இந்தியாவைப் பற்றிய மேற்கின் தவறான பார்வைக்கான மூலமாக இருப்பது தான். இந்துத்வவாதிகள் சிருங்கார ரசம் இல்லாத இந்துமதத்தை வரலாற்றில் தேடி எடுக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக உபநிஷதங்களில் இருக்கும் சன்யாசம் பற்றிய குறிப்புகள், பதினோராம் நூற்றாண்டில் அபிநவகுப்தர் தாந்த்ரீகம் பற்றி அளித்த விளக்கம், விக்டோரியா ராணி காலத்தில் பதினோராம் நூற்றாண்டு இந்து மதம் மீது ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் இந்து மதத்தில் பாலியல் வேட்கைக்கு இடமில்லை என்று நிறுவ முயல்கிறார்கள். இந்துத்வவாதிகள் காமத்தை, பிராய்டை (அவரைக் காமம் பற்றி மட்டுமே பேசியவர் என்று தவறாக எண்ணிக்கொண்டு) எதிர்க்கிறார்கள். கூடவே காமசூத்திரம், இந்து மதத்தின் பாலியல் பக்கங்களை, அதனுடைய உணர்ச்சிகரமான பகுதிகளை எழுதும் என்னைப் போன்ற எண்ணற்ற அறிஞர்களை நிராகரிக்கிறார்கள். தங்களுடைய மதத்தில் இருக்கும் சிருங்கார ரசம் சார்ந்த கூறுகளை இந்துக்களே மறுதலிக்கிற அளவுக்குச் சிக்கலான உளவியல், வரலாற்றுக்காரணிகள் வளர்ந்துள்ளன. இது அவர்களின் நகைச்சுவை உணர்வை அற்றுப்போகச் செய்துள்ளது. சமஸ்க்ருத இலக்கியத்தில் இருக்கும் நகைச்சுவை, அங்கதம் ஆகியவற்றை ரசிக்காமல் அவற்றை இந்து மதத்தை அவமதிப்பதாகப் புறக்கணிக்கிறார்கள். இந்து மதத்தின் மகத்தான பண்பே தன்னுடைய கடவுள்களையே கேலி செய்யும் அதன் திறன் தான். அதனையே இவர்களின் செயல்களால் இழப்பது அவமானமான ஒன்றாகும்.

இரண்டாவது எதிர்ப்புக்குப் பதில்:
இந்து மதத்தை ஒற்றையான, குறுகலான ( அதன் சிருங்கார ரசத்தை நீக்கிய ) மதமாக வாசிப்பது என்பது கிறிஸ்துவத்தைப் பற்றி ஒரு நூலை எழுதி அதில் எல்லாக் கிறிஸ்துவர்களும் டார்வின் சொன்னது தவறு என்று முழுமையாக நம்புகிறார்கள். இறைவன் ஏழே நாளில் உலகத்தைப் படைத்ததே உண்மை என்று அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள் என்பது போலத்தான்.

இந்த மாதிரியான தவறான இந்துமதத்தின் மீதான கருத்தியல் சாய்வு இந்துக்கள் அல்லாதவர்கள் மீதான இனவெறியை விட மோசமானது. இந்தக் கருத்தியல் சாய்வு சம்பந்தப்பட்ட அறிஞர் தங்கள் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதோடு தங்களின் கருத்தையே மீண்டும் ஓத வேண்டும் என்று விரும்புகிறது. இதனால் தான் பக்தி மிகுந்த இந்துவாகத் திகழ்ந்தாலும் ஆய்வுப் பார்வையை மாற்றிக்கொள்ளாமல் இயங்கும் இந்து மதத்தைச் சேர்ந்த அறிஞர்களையும் இந்துத்வவாதிகள் இனவெறியோடு செயல்படுவதாக நிராகரிக்கிறார்கள்.

மூன்றாவது எதிர்ப்பு:
முக்கியமான அமெரிக்க அறிஞர்கள், இந்துக்கள் (அ) இந்துக்கள் அல்லாதவர்கள் அறிவுப்புலத்தில் இருந்தே இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறார்களே அன்றி நம்பிக்கை சார்ந்து இந்து மதம் பற்றி எழுதுவதில்லை:

இது உண்மையே. அது நல்ல விஷயமும் கூட. ஒரு மதத்தைப் பற்றி எழுதக் கிளம்பி உள்ள ஒரு ஆசிரியர் அதனைப் பற்றி நேரிடையாகத் தெரிந்து கொள்வது தெளிவு பெறும் திட்டத்தின் அடிப்படையான, அவசியமான கூறை மீறுவதாகும். ஒரு மதத்தைப் பற்றி வேறொரு மதத்தில் நேரடி அனுபவமுள்ள ஒருவராகவும் எழுதக்கூடாது. ப்ரோட்டஸ்டன்ட் பார்வையில் இந்து மதத்தை எழுதுவதைச் செய்யக்கூடாது. இது வெகுகாலமாக நடந்து வந்துள்ளது. அதுவே இணையத்தில் இந்துக்களிடையே கடும் கோபத்தைக் கிளப்பியுள்ளது. இந்துவின் பார்வையில் இந்து மதத்தை எழுதக்கூடாது. இந்து மதத்தை ஆய்வுப்பார்வையில், அறிவுத்தளத்தில் நோக்கி எழுத வேண்டும். இந்து மதத்தின் பல்வேறு வகையான உருவங்கள் உயிர்த்து உள்ளன. உலகம் முழுக்க அவை பரவியுள்ளன. அவற்றில் வெகு சிலவே அறிஞர்களுக்குத் தெரிந்துள்ளன. சில பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக உள்ளது. இவை இரண்டும் அவ்வப்பொழுது சந்திக்கவும் செய்கின்றன. ஆனால், ஒரு அறிஞர் பக்தரும் கூட, ஆனால், எழுதுகிற பொழுது அறிஞர் என்கிற ஆடையை அணிந்துகொள்பவர் அவர்.

இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு எனும் ஆசிரியரின் நூல் வலதுசாரிகள் எதிர்ப்பால் பென்குயின் நிறுவனத்தால் இந்தியாவில் இருந்து திரும்பப் பெறப்பட்டது.
மூலம்: http://timesofindia.indiatimes.com/…/articlesh…/46571491.cms

WENDY DONIGER Mircea Eliade Distinguished Service Professor of the History of Religions; also in the Department of South Asian Languages and Civilizations, the Committee on Social Thought, and the College

மொழிபெயர்ப்பு: பூ.கொ. சரவணன்