சாவித்திரிபாய் பூலே – கல்விக்கண் திறந்த ஆளுமை


சாவித்திரிபாய் பூலேவின் 125 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்பில் இருந்து..

‘வணக்கம். நலமா? என் பெயர் சாவித்திரிபாய் பூலே. என் கதையைச் சொல்கிறேன். இது பல்லாயிரம் பெண்களின் கதை.

என்னுடைய ஊர் சத்தாரா. இப்பகுதியின் அரசர் மூன்றாம் பேஷ்வா பாஜிராவ். ஊர் முழுக்கக் கட்டுப்பாடுகள். கல்வி என்பது பிராமணர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெண்கள் நிலைமை மோசம். குழந்தையாக இருக்கும் போதே திருமணம். கணவர் இறந்தால் மொட்டையடித்து ஒதுக்கிவிடுவார்கள். நெருப்பில் தள்ளும் வழக்கமும் உண்டு. படிப்பெல்லாம் சுத்தம். நாங்கள் படித்தால் உருப்பட மாட்டோம் எனச்சொன்னார்கள். ஊரில் பலருக்கும் கடிதம் எழுதுவோம் என்றார்கள். படிக்கிற பெண்ணுடைய கணவரின் சாப்பாட்டில் புழுக்கள் நெளியும். சீக்கிரம் அவர் செத்துடுவார் என்றுகூடச் சொல்வார்கள். நான் சிரித்துக்கொள்கிறேன். எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

அதை விடுங்கள். என்னுடைய ஊருக்கு போவோம். என்னுடையது விவசாயக் குடும்பம். நான் குளிர்மிகுந்த ஜனவரி மாதத்தில் பிறந்தேன். இளம் வயதில் பள்ளிக்கூடத்தைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. 9 வயதில் ஜோதிபாய்யோடு திருமணம். புனேவிற்குக் குடிபெயர்ந்தேன்.

அவர் மிஷனரி பள்ளிகளில் கல்வி பயின்றார். எனக்கும் எழுத, படிக்க உதவினார். பல்வேறு கதைகள், அனுபவங்கள். ஒருநாள் பிராமணர் வீட்டுக் கல்யாணம். போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். ‘நாமல்லாம் சூத்திரனுங்களாம். தீட்டாயிடுச்சாம். விரட்டிவிட்டுட்டாங்க’ எனப் புலம்பினார். எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என அவருக்குக் கனவு. சாதிப்பாகுபாடுகள் படிப்பாலும், விழிப்புணர்வாலும் தான் ஒழியும். நான் மேலும் படித்தேன். ஜோதிபாய் உடனிருந்தார், உற்சாகப்படுத்தினார். அவருடைய நண்பர்களும் பாடம் சொல்லிக்கொடுத்தனர். எனக்குப் படிப்பது சுகமானதாக இருந்தது. இன்னமும் கற்க வேண்டுமென ஆசையாக இருந்தது. ஃபராரி, மிட்செல் எனும் இரண்டு ஆங்கிலேய ஆசிரியைகள் அன்போடு உதவினார்கள். நான் படித்ததைப் பலருக்கும் சொல்லித்தரும் நேரம் எப்போது வரும்?

ஜோதிபாய் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். ஒரே எதிர்ப்பு. பள்ளிக்கூடத்திற்கு வெளியே ‘ஒழிஞ்சு போங்க’னு கோஷம் போடுவார்கள். என் மாமனாரை தூண்டி விட்டார்கள். ‘நீ எக்கேடோ கெட்டுப்போ. இவளை ஏன் படிக்க வைக்கிறே’ எனக்கேட்டார். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நடுத்தெரு என்றார். நானும், ஜோதிபாயும் நடுத்தெருவை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்குள் கல்விக்கனல் எரிகிறது. அது ஒரு வீட்டிற்குள்ளேயே அணைந்து விடலாமா? ஆகாது.

எங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஒரே ஆசிரியரையும் மிரட்டினார்கள். வேறு வழியில்லை. என்னையே பாடம் நடத்தச் சொன்னார் ஜோதிபாய். பள்ளிக்கு நடந்து போவேன். என் மீது சாணி, அழுகிய காய்கறிகளை வீசுவார்கள். சில நாட்கள் வெற்றிலைப் போட்ட எச்சில் கூடப் பரிசாகக் கிடைத்தது. முதலில் பயமாக இருந்தது. பள்ளியின் பெண் குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பயமெல்லாம் பாசத்தின் முன் பறந்தது. அழுக்குகளை வீசியவர்களிடம் சொன்னேன், “என்னுடைய தங்கைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்போகிறேன். இந்தக் குப்பைகள் எல்லாம் எனக்கான வாழ்த்து மலர்கள். இறைவன் உங்களை ரட்சிக்கட்டும்’.

என் அண்ணன் என்னைக் கடிந்து கொண்டான். ஏன் இந்த வேண்டாத வேலை என்றான். நான் சொன்னேன்,
“படிக்காமல் இருப்பது முழு மிருகத்தனம். அறிவைப் பெறுவதாலே பிராமணர்கள் மேல்நிலையில் உள்ளார்கள். கல்வியும், அறிவும் அற்புதமானது. கற்றவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் எனப்பட்டாலும் அவரே உயர்ந்தவர். நாங்கள் தீண்டப்படாதோர் கற்க வேண்டும் என உழைக்கிறோம். அதன்வழியே விடுதலை கிட்டும். என் கணவர் பிராமணர்களை எதிர்த்துக்கொண்டு ஏன் தீண்டப்படாதவர்களுக்குக் கற்பிக்கிறார்? அவர்களும் சமமான மனிதர்கள். மானமிகு வாழ்க்கை எல்லாருக்கும் ஆனது. அதற்குக் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே நானும் கற்பிக்கிறேன். இதிலென்ன தவறு ? நாங்கள் சிறுமிகள், பெண்கள், மகர்கள், மங்குகள் என அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்போம்’ என்றேன்.

ஆரம்பத்தில் பெரிதாகப் பெண்கள் படிக்ற வரவில்லை. இத்தனைக்கும் எங்கள் பள்ளியே இந்தியர்கள் நடத்தும் முதல் பெண்கள் பள்ளி. நானும், ஜோதிபாயும் ஊர் ஊராகச் சுற்றினோம். படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பரிசுப்பணம் தந்தோம். கிராமம், கிராமமாகப் படிப்பின் அவசியம், நன்மைகளை எடுத்துச் சொன்னோம். கல்வியோடு விளையாட்டுகள், கலைகளைப் பேரன்போடு பகிர்ந்தோம். கூட்டம் பெருகியது.

9 ஆசிரியர்கள், 132 மாணவர்கள், 3 பள்ளிகள். அது கனவின் தொடக்கம். 1851, 1852 காலத்தில் தேர்வுகளை நடத்தினோம். கிட்டத்தட்ட திருவிழா தான். பெண்கள் படித்து, தேர்வில் அசத்துவதைப் பார்க்க 3,000 பேர் கூட்டம். அலையில் எழும் சூரியனாய் எங்கள் பெண்கள் மின்னினார்கள்.

‘பூனா அப்சர்வர்’ எனும் பத்திரிகை 1852 -ல் என்ன எழுதியது? ‘ஜோதிபாய்- சாவித்திரிபாயின் பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களை விடப் பத்து மடங்கு அதிகப் பெண்கள் படிக்கிறார்கள். மிக உயர்ந்த கல்வித்தரம். விரைவில் இப்பெண்கள் பெரும் சாதனைகள் புரிவார்கள்’. 50 க்கும் மேற்பட்ட பெண்கள், அனைவருக்குமான பள்ளிகளை நடத்தினோம்.

எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஜோதிபாயை இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘குழந்தை பிறக்கலைனா பொண்ணு தான் மலடியா? ஆம்பிள கிட்டயும் பிரச்சனை இருக்கலாமே. பிள்ளை பொறக்கலைனு பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனுக்கு எப்படியிருக்கும்? என்னால சாவித்திரியை விட்டுட்டு இருக்க முடியாது’ என்றார்.

பல கைம்பெண்கள் நிலைமை கண்ணீரை வரவைத்தது. சொந்தக்கார ஆண்கள் வதைத்தார்கள். பரிதாபமாகக் கைம்பெண்கள் கர்ப்பமானார்கள். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களைக் காப்பாற்றினோம். 1853-ல் அப்பெண்களை அரவணைக்க இல்லம் துவங்கினோம்.

கையால் நெய்த ஆடைகளை அணிவது வழக்கம். அவை எளிமையான, ஆனால், கம்பீரமான ஆடைகள். இல்லத்தரசிகளுக்கு ஆடை நெய்யக் கற்றுக்கொடுத்தேன். பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் அமைப்பைத் துவங்கினேன். மாமியார், மருமகள், அம்மா, மகள் என அனைவரும் வந்தனர். ஒன்றாக அமர்ந்து சொந்தக்காலில் நிற்கப் பழகினோம்.

கைவிடப்பட்ட கைம்பெண் ஒருவரின் மகனை தத்தெடுத்துக் கொண்டோம். யஷ்வந்த் எனப் பெயரிட்டு வளர்த்தோம். மருத்துவம் படித்தபின் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குச் சேவை செய்தான் யஷ்வந்த்.

கண்முன் இன்னொரு அநீதி தெரிந்தது. கணவன் இறந்ததும் கைம்பெண்களுக்கு மொட்டையடித்தார்கள். மனைவி இறந்தால் கணவனுக்கு மொட்டையடிக்கிறோமா? ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்தக் கொடுமை? சவரம் செய்பவர்களை நாடினோம். வேலை நிறுத்தம் செய்யக் கோரினோம். கூடுதல் கூலி வேண்டியோ, சலுகைகள் நாடியோ அல்ல. கைம்பெண்களின் சமத்துவம் நாடி போராட்டம் நிகழ்ந்தது. சவரக்கத்திகள் ஓய்வெடுத்தன. பல கைம்பெண்களின் கண்ணீர் காணாமல் போனது. அந்தச் சவரத்தொழிலாளர்களை நினைக்கும் போதே பெருமிதம் பூக்கிறது.

1877-ம் ஆண்டு. பெரும் பஞ்சம். மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள். விலங்குகள் இறந்து தரையில் விழுந்தன. பெரும் உணவுப்பஞ்சம். மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள். ஆறு, குட்டை, குளம் எல்லாம் வற்றின. தவித்த வாய்க்கு தண்ணீரில்லை. மரங்களில் இலையே தென்படவில்லை. வறண்ட நிலம் பாளம், பாளமாய்ப் பிளந்தது. விஷப்பழங்களை உண்டார்கள், சிலர் சிறுநீரை குடித்தார்கள். மக்கள் உணவுக்காக, தண்ணீருக்காக அழுதார்கள், பின், பரிதாபமாக இறந்தார்கள்.

நாங்கள் கிராமம், கிராமமாகச் சுற்றினோம். இயன்றவரை நீரும், சோறும் தந்தோம். கந்துவட்டிக்கார கொடுமைகளைத் தட்டிக்கேட்டோம். ஏழைப்பிள்ளைகள் தங்கவும், கற்கவும் 52 விடுதியோடு கூடிய பள்ளிகள் திறந்தோம்.

1890-ல் ஜோதிபாய் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஆணும், பெண்ணும் சமம் எனும் தாமஸ் பெய்னின் ‘Rights of Man’ னின் வரிகளை ஜோதிபாய்ச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை எண்ணிக்கொண்டு நானே அவரின் உடலுக்குத் தீமூட்டினேன்.

1897 பெரும் பிளேக் நோய். லட்சக்கணக்கான மரணங்கள். மருத்துவர்கள் சாதி பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் யாருமின்றி இறந்தார்கள். நானும், யஷ்வந்தும் அசரவில்லை. எங்கள் சத்தியசோதக் அமைப்பினரோடு உழைத்தோம். மருத்துவமனைகள் நடத்தினோம். உயிரைப் பணயம் வைத்து போராடினோம். பிளேக் நோயுற்ற மகர் சிறுவன் ஒருவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நானே தொட்டுத் தூக்கினேன். அவன் உயிரை காப்பாற்றி விட்டோம். களைப்பாக இருக்கிறது. பிறிதொரு நாள் இன்னமும் சொல்கிறேன். ‘

சாவித்திரிபாய் பிளேக் நோய்க்கு எதிரான போரின் போதே வீர மரணம் எய்தினார். ‘கல்வித்தாய்’, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ எனும் பல்வேறு பெருமைகளுக்கு உரியவர். ‘மாசற்ற ரத்தினங்களின் பெருங்கடல்’ எனும் கவிதை நூல் இயற்றினார். அவரின் கவிதை ஒன்று:

உனக்கு நீயே துணை, ஓயாமல் உழை.
கல்வியும், பொருளும் கொண்டு சேர்.
அறிவிழந்தால் அனைத்தும் அழியும்.
கல்விச்செல்வமின்றிக் கால்நடை விலங்கு நாம்.
சோம்பி அமராதே, எழு, கல்வி கற்றிடுக.
ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் துயர்துடை.
கற்கும் பொன் வாய்ப்பினை பற்றிக்கொள்.
ஆகவே, கற்றிடுக, சாதிச்சங்கிலிகளை உடைத்தெறிக.
பிராமணர்களின் புனித நூல்களை வேகமாகத் தூக்கியெறிக.

‘Fullbright Scholar’  ஆனந்த் தட்சிணாமூர்த்தியின் கல்விக்கனவிற்கு கைகொடுங்கள் !


அனைவருக்கும்  அன்பு கலந்த வணக்கம், 

    உங்களிடம் ஒரு பேருதவியை  எதிர்நோக்கி எழுதுகிறேன். தமிழ்நாட்டில் புனைவு, அல்புனைவில் வெளிவரும் ஆக்கங்கள் அற்புதமானதாக இருந்தாலும் எப்போதும் ஒரு குறை உண்டு. அவை பிற மொழிகளிலோ, ஆங்கிலத்திலோ  முறையான  மொழியாக்கம், செம்மையாக்கம்  இல்லாததால் சென்று சேர்வதே இல்லை. இப்போது எதற்கு இதெல்லாம்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன்.

அமெரிக்க-இந்திய அரசுகள் இணைந்து  Fulbright-Nehru  Fellowship ஒன்றை உருவாக்கின. இதன் நோக்கம் ஒன்று தான். அமெரிக்காவின்  தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்தியாவை  சேர்ந்தவர்கள் மேற்படிப்பு  படிப்பதற்கான உதவியை நல்கும்  திட்டமாகும். பல்வேறு கட்டத்  தேர்வுகள், நேர்முகத்திற்கு  தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகள்  அமெரிக்காவில்  மேற்படிப்பு படிக்க அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு என்று J1 விசா வழங்கப்படும். இந்த விசா  சற்று வேறுபட்ட ஒன்று. இந்த விசாவில்  அமெரிக்கா  செல்லும் மாணவர்கள் படிப்பு  முடிந்ததும்   இந்தியாவிற்கு திரும்பி விடவேண்டும்.  கல்விக்காலம்  முடிந்த  பிறகு  அங்கே வேலை  பார்த்து கல்விக்கடன், செலவுகளை  ஈடுகட்டும்  வாய்ப்பு அறவே இல்லை. Fullbright Fellowship  கல்விக்காலம்  முடியும் வரை, குறிப்பிட்ட  உதவித்தொகையை  மாதாமாதம்  வழங்கும். இந்த உதவித்தொகை பாதி கல்விக்கட்டணத்திற்கு தான் போதுமானது. மீதமுள்ள தொகையை  கற்கப்போகும் மாணவரே திரட்ட வேண்டும். Inlaks Scholarship, JN Tata Endowment loan scholarship என்று  சிற்சில  உதவித்திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாருக்கும்  உதவுவதில்லை. 

இப்போது ஆனந்த் தட்சிணாமூர்த்தியை  சந்திப்போம். அவரின்  சொற்களிலேயே ,

“என் பெயர்  ஆனந்த் தட்சிணாமூர்த்தி.  நியூயார்க் பல்கலைக்கழகத்தின்,  ‘Centre for Publishing’ ஆனது  ‘Publishing: Digital and Print Media’ -ல் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. இக்கனவை  எட்டுவதற்கு இப்படிப்பிற்கு  செலுத்த  வேண்டிய  கட்டணமே தடையாக கண்முன்  நிற்கிறது. 

பெருமைமிகு Fulbright-Nehru  Fellowship எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தரப்படவுள்ள உதவித்தொகைமேற்படிப்பினை  முடிக்க  போதுமானதில்லை. பாதிக்கு பாதி கட்டணத்தை  கட்ட  முடியாத  நிலையில் உள்ளேன். இக்கட்டணத்தை  செலுத்த  உங்களின் மேலான உதவியை  நாடுகிறேன். 

பதிப்புத்துறையில்  மேற்படிப்பில் கால்பதிக்கப் போகும் முதல் Fullbright  Scholar  நானாகவே  இருப்பேன். பதிப்புத்துறையில்  புதியன விரும்பும் ஒருவனாக இக்கனவை  துரத்துகிறேன். 

அம்மாவை இளம்வயதிலேயே  பறிகொடுத்துவிட்ட  என்னை  என் அப்பா தான் தனியொருவராக  வளர்த்தெடுத்தார்.  அப்பா தமிழ்  இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். (சட்டம், பொருளாதாரம் என்று அவரின் கல்வித்தாகம்  விரிந்து கொண்டே இருந்தது ).  அப்பா, சங்க இலக்கியத்தை நிலாச்சோறுடன்   ஊட்டி வளர்த்தார். என்னை பகுத்தறிவாளனாக  வளர்த்தெடுத்தார். பக்தி இலக்கியத்தின் கவிதைகளை ஆழமாக  அறிந்துகொள்ள மட்டுமே ஆலயங்களை நோக்கி பயணித்தோம். தீவிர இலக்கிய கூட்டங்களின் வழியாக தமிழ் இலக்கியத்தில் மனதைப்  பறிகொடுத்தேன். பெரும்பாலான  மாணவர்களை  போல பொறியியல் படித்து முடித்தேன். இருந்தாலும் மனதெல்லாம் கலை, இலக்கியத்தை சுற்றியே சுழன்றது. 

‘Young India Fellowship’ (YIF) எனும்  இலக்கியம், வரலாறு  உள்ளிட்ட பல்கலை பயிற்சியினை வழங்கும் படிப்பினில்  இணைந்தேன். இப்படிப்பிற்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாணவர்களில் முழு  உதவித்தொகை பெற்ற  வெகு சிலரில் நானும் ஒருவன். அங்கே வழங்கப்பட்ட எழுத்துப்பயிற்சி, கடுமையான பாடம் சார்ந்த தேடல்கள் எழுதுவதற்கான  ஊக்கமாக அமைந்தது. தமிழிலக்கியத்தினை உலக அரங்கிற்கு  கொண்டு சேர்க்கும் என் கனவுகள் அங்கேயே துலக்கம்  பெற்றன. தயங்கி தயங்கி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த நான் நம்பிக்கை மிளிர பேசவும், எழுதவும் ஆரம்பித்தேன். என் வாழ்க்கையும், இலக்கும்  தெளிவானது. எனக்கான  திசை புலப்பட்டது. 

What have I done so far?

YIF-ல் வாசிப்பின் மீது தீராக்காதல்  பெருக்கெடுத்தது. பல்வேறு  எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை  சந்தித்தேன். எப்படி  மைய நீரோட்ட பதிப்பாளர்கள்  இந்திய மொழிகளில் வெளிவரும் ஆக்கங்களை கண்டும் காணாமல்  இருக்கிறார்கள் என்று கண்முன்னே பார்த்தேன். ராயல்டி என்று  சொற்பத்தொகை மட்டுமே படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவதை கண்டேன். மேற்கத்திய  நாடுகளில் எப்படி படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஏலம்  விடப்படுகின்றன, நம்ப முடியாத அளவுக்கு படைப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுவதையும்  அறிந்து கொள்ள முடிந்தது. பதிப்பாளரால் தான் பதிப்புத்துறையின்  போக்கை மாற்றி, உள்ளூர் மொழிகளில் இயங்கும் எழுத்தாளர்களை  உலகமெங்கும் கொண்டு சேர்க்க முடியும் என்று  புரிந்தது. 

இதே  காலகட்டத்தில் இதழியல், படைப்புகளை சந்தைப்படுத்தல், பலரிடம் படைப்புகளை சென்று சேர்த்தல்  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். இந்தியாவின்  முன்னணி இதழியலாளர்களில்  ஒருவரான   சேகர் குப்தாவுடன் இணைந்து ThePrint  எனும்  செய்தித்தளத்தை  வளர்த்தெடுப்பதில் ஈடுபட்டேன். அங்கே அரசியல் கட்டுரைகள், ஆளுமைகள்  குறித்த ஆக்கங்கள், நெடுங்கட்டுரைகள் ஆகியவற்றை  இடைவிடாமல்  எழுதினேன்.    

You can find all the articles under my byline here – https://theprint.in/author/aananth-daksnamurthy/

இப்பணிக்கு பிறகு, தமிழ்நாட்டின்  கலைப்படிப்புகளுக்காக உருவான முதல் தனியார் பல்கலைக்கழகத்தினை  வளர்த்தெடுப்பதில்  பங்காற்றினேன். தமிழ்நாடு அரசின் தொழிற்துறையில்  ‘ Content & brand communications’-னை  தலைமையேற்று  நடத்தினேன். 70 பக்க அளவில் வெளிவரும் தொழிற்துறையின்  காலாண்டிதழினை தொகுப்பது, எடிட் செய்வதில் ஈடுபட்டேன். முதலமைச்சரின் உரைக்கான  கருத்துகளை  வடிவமைப்பதிலும்  பங்காற்றினேன்.  

 
https://investingintamilnadu.com/DIGIGOV/TN-pages/enewsletters.jsp?pagedisp=static
 இவை போக  வெவ்வேறு ஆவணப்படங்களின் மொழியாக்கத்திலும்  ஈடுபட்டேன்.  My work for Race to Feed the World Docuseries

 CNA Insider docuseries-ல் வெளிவந்த  ‘Race to feed the world’ ஆசியாவின் உணவுப்பாதுகாப்பு குறித்து பேசுகிறது. 
https://www.channelnewsasia.com/watch/race-feed-world/question-space-1925316My work for The Longest Day Docuseries

‘The Longest Day’ எனும் ஆவணப்படம் பருவநிலை  மாற்றத்தினால்  ஆசியா  எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறது  என்பதை  விவசாயிகள், மக்கள் நலப்பணியாளர்கள், இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்கள்  ஆகியோரின்  குரல்களின் வழியாக ஆவணப்படுத்தியது. 

https://www.channelnewsasia.com/watch/longest-day/water-1463951

அண்மையில், அல்புனைவு தமிழ் நூலொன்றின் சில பகுதிகளை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம்  செய்தேன்.  தமிழ் இலக்கிய  ஆர்வலராக  இருந்ததில்  இருந்து பதிப்புத்துறையின்  ஆழ, அகலங்களை அறியும் இடத்திற்கு  வந்து நிற்கிறேன். 

என்னுடைய  கனவு அயலகத்திற்கும், தமிழகத்திற்கும் பாலம் அமைக்கும்  ஒன்றாகும். நம் நாட்டின்  எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்களை  அமெரிக்காவின்  புகழ் மிக்க  பதிப்புத்திட்டங்களுக்கு  அறிமுகப்படுத்துவது ஒரு கனவு.  உலகமெங்கும்  பரவிக்கிடக்கும் ஆகச்சிறந்த  சிந்தனைகள், திறன்கள்,  வளங்களை இந்திய மொழிகளுக்கான பதிப்புத்துறைக்குள் கொண்டு  சேர்ப்பது மற்றொரு கனவு.   இதனை இப்பட்டப்படிப்பு  சாத்தியப்படுத்தும்.  


மேற்படிப்புக்கு ஆகும் செலவு: 
 

NYUஇரண்டாண்டு படிப்பு 
முதலாண்டு (12 மாதங்கள் )இறுதியாண்டு  (10 மாதங்கள் )
tuition $42,462$44,797
கல்விக்கட்டணம் $2,346$2,475
காப்பீடு $3,845$4,056
விடுதிக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் $26,220$21,850
புத்தகங்கள் $1,200$1,000
மொத்தம் $76,073$74,178
Fulbright Award$39,995$44,056
பற்றாக்குறை $36,078$30,122

 
ஏறத்தாழ 66,190 $ பற்றாக்குறை  உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான  வாய்ப்பினை  வேண்டாம்  என்று  சொல்கிற மனநிலைக்கு வந்து விட்டேன். எனக்கான கல்விக்கான  வாசல் கதவுகளை  திறக்க  தமிழ்ச்சமூகம்  உதவும்  என்கிற நம்பிக்கையில்  உங்களிடம் உதவி கேட்கிறேன். நியூயார்க் பல்கலையில்  படிக்கும் வாய்ப்பினை பெறுவதற்கு  தாராளமாக  உதவிடுங்கள். 

Milaap தளத்தில்  ஆனந்தின் மேற்படிப்புக்கு உதவுவதற்காக சுட்டி:  https://milaap.org/fundraisers/support-aananth-daksnamurthy

 உங்களின்  நேரத்திற்கும், பேரன்பிற்கும் நன்றிகள், 
அன்புடன், ஆனந்த்  தட்சிணாமூர்த்தி 

வங்கிக்கணக்கு  விவரம்: 

Account holder name: Aananth D

Account number: 002001001623067

Bank name: City Union Bank

IFSC code: CIUB0000153

Swift Code: CIUBIN5M


மேலதிக விவரங்களுக்கு: 


 aananth95@gmail.com எனும் மின்னஞ்சல்  முகவரியில்  என்னைத் தொடர்பு  கொள்ளலாம்

வங்கிக்கடன் முதலியவற்றை  முயன்று  பார்க்கலாமே?:

என்  தந்தை  ஓய்வு பெற்ற  அரசு  ஊழியர். ஓய்வூதியத்தை  சார்ந்து  வாழும் அவரால் இவ்வளவு பெரிய தொகைக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. எப்படியாவது இந்த கட்டணத்தை கட்ட நான் முயன்று பார்த்து விட்டேன். வேறெந்த  வழியும் இல்லாத நிலையில் தான், உங்களின்  உதவியை வேண்டுகிறேன்.  

இப்படிப்பிற்கு பின்பு என்ன திட்டம் ? 

படிப்பு  முடிந்ததும், இந்தியாவிற்கு  திரும்பி இந்திய மொழிகளில்  பதிப்புத்துறையில் உடனடியாக இயக்குவேன். சிறிய அளவிலான பதிப்பகம்  ஒன்றை  துவங்கி  நடத்தும்  திட்டம் உள்ளது. வளர்ந்து வரும்  எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்  ஆகியோர் பயன்பெறும் வண்ணம் உள்ளுறை உதவித் திட்டங்களை  எடுத்து நடத்தும்  திட்டமும்  உள்ளது.

தலித் அடையாளமே என்னைச் செதுக்கியிருக்கிறது. – சட்ட அறிஞர் அனுராக் பாஸ்கர் நேர்முகம்



பல கோடி விளிம்புநிலை மக்களின் கனவுகளின் அடையாளமாக என்னுடைய ஹார்வர்ட் டிகிரி திகழ்கிறது.”- அனுராக் பாஸ்கர்

அனுராக் பாஸ்கர் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து தன்னுடைய LL.M. பட்டத்தை 2019-ல் பெற்றிருக்கிறார். அவர் ஏன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தார், நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக  வேலை பார்த்த அனுபவம், ஹார்வர்ட் நோக்கிய பயணம், ஹார்வர்ட் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை, அவரின் எதிர்காலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாடினோம்.

அனுராக் பாஸ்கர் தன்னுடைய LL.M. பட்டத்தை ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிடம் இருந்து பெற்றிருக்கிறார். இவர் லக்னோவில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ( RMLNLU) B.A. LL.B பட்டங்களை 2012-17 காலத்தில் பெற்றார். பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராக ஜூலை 2017-18 காலத்தில் பணியாற்றினார். அனுராக் கூர்மையான அறிவுத்திறமிக்கப் படைப்புகளுக்குச் சொந்தக்காரர். பல்வேறு ஆய்விதழ்களில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. செய்தித்தாள்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்தோவியங்களைத் தீட்டிய வண்ணம் உள்ளார். அவருடைய கட்டுரைகள் The Wire, LiveLaw, The Print, EPW முதலிய பல்வேறு இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இனி அவரின் பயணம் குறித்து உரையாடுவோம்.

கேள்வி: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இருந்து LL.M. பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள். எப்படி உணர்கிறீர்கள்?

அனுராக் : திக்குமுக்காடிப் போயிருப்பதாக உணர்கிறேன். என்னுடைய பட்டமளிப்பு விழா மே 30, 2019 ல் நடைபெற்றது. நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டேன் என்பதை நம்பவே ஒரு வாரம் ஆனது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை, நான் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில்வேன் என்று கனவுகூடக் கண்டதில்லை. அமெரிக்காவை எட்டிப் பார்க்க வேண்டும் என்று கூட எனக்குப் பட்டதில்லை. எண்பதுகளில் எங்கள் வீட்டிற்குச் சவால்மிக்கக் காலம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தின் குக்கிராமத்தில் இருந்து வேலை தேடி லக்னோவிற்கு என் அப்பா அடிக்கடி நாற்பது கிலோமீட்டர்கள் கால் வலிக்க, வலிக்கச் சைக்கிள் மிதிப்பார். என் அப்பாவை பொறுத்தவரை லக்னோ சென்று வருவது என்பது வெளிநாட்டிற்குப் போய்வருவதாகும். நான் லக்னோவில் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருந்த போது, வேலையின் பொருட்டு டெல்லிக்கு இடம்பெயர வேண்டும் என்பது எனக்கு வெளிநாட்டிற்குப் போகிற ஒன்றாகவே தோன்றியது. அந்தச் சைக்கிள் பயணத்தில் இருந்து ஹார்வர்ட் வரையிலான இப்பயணத்தை வந்தடைய என் குடும்பம் நெடுந்தூரம் நடந்திருக்கிறது. தற்போது நான் கலவையான உணர்வுகளில் ஆட்பட்டுள்ளேன்.

கேள்வி: நீங்கள் ஏன் சட்டம் பயில முடிவு செய்தீர்கள்? உங்கள் குடும்பத்தில் யாரேனும் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்களா?

அனுராக்: இல்லை ! நான் முதல் தலைமுறை வழக்கறிஞர்.

நான் சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்கிற முடிவெடுக்க ஒரு வரலாற்று ஆளுமையே முதன்மையான காரணம். அவர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். பள்ளிக்காலங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் படைத்தளித்த தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கர் என்கிற மனப்பிம்பம் என்னைப் பெருமளவில் ஊக்கப்படுத்தியது. அவரின் வாழ்வானது சட்டம் பயின்று அதன்மூலம் சமூகத்தில் மாற்றத்திற்கான கருவியாக மாறவேண்டும் என்கிற கனவினை விதைத்தது. ஆனால், சட்டப்படிப்பை தேர்ந்தெடுப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. என்னுடைய பெற்றோர் நான் பொறியியல் பயில வேண்டும் என்று விரும்பினார்கள். அடிக்கடி, நடுத்தர வர்க்க/அடித்தட்டு நடுத்தர வர்க்க மற்றும் பொருளாதாரத்திலோ, சமூகத்திலோ பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபர்களின் முதல் போராட்டம் தங்களுடைய குடும்பங்களிலேயே துவங்குகிறது. நாம் விரும்பிய பாடத்தைப் படிக்கப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கிறது. என்னுடைய பெற்றோர் நான் விரும்பிய வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

கேள்வி: ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் (RMLNLU) உங்களுடைய எத்தகைய அனுபவம் கிட்டியது?

அனுராக்: செறிவான அனுபவம்! சமூக நீதியின் முன்னோடியான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகள், வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள இப்பல்கலைக்கழகம் உதவியது. மேலும், எனக்குள் இருந்த ஆற்றலை வெளிக்கொணரவும் RMLNLU பெருமளவில் கைகொடுத்தது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டமைப்புக் கொண்ட பல்கலைக்கழகங்களில் என் கல்விக்கூடமும் ஒன்று. அங்கே உள்ள நூலகத்தில் குவிந்துள்ள நூல்கள் அறிவின் ஊற்று. எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் மகத்தானவர்கள். எனினும், RMLNLU கல்வி நிறுவனமாக இன்னமும் தன்னுடைய முழு ஆற்றலை வெளிப்படுத்தவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அங்குக் கிட்டிய சில நல்ல நண்பர்கள் எனக்கு உற்ற துணையாக இத்தனை ஆண்டுகாலம் ஆதரவளித்து வருகிறார்கள்.

கேள்வி: RMLNLU-ல் வகுப்பறை பாடங்களைத் தாண்டி வேறென்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

அனுராக்: பொதுவாகச் சட்டக்கல்லூரி மாணவர்கள் வழக்காடுவது, விவாதம் புரிவது ஆகியவற்றில் மின்னுவார்கள். நான் இந்தி பேசும் பின்னணியில் இருந்து வந்தமையால், எனக்குச் சரளமான ஆங்கிலம் கைவரவில்லை. இதனால், பேச்சுப்போட்டிகளில் பங்கெடுக்கவோ, பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய அவசியமிருக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவோ எனக்குத் தயக்கமாக இருக்கும். இதைக்கண்டு திகைத்து போய் நிற்காமல், என்னுடைய பிற திறன்களைப் பட்டை தீட்டிக்கொண்டேன்.

RMLNLU-வில் படித்த காலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்தினேன். இது எனக்குள் தலைமைப்பண்பை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களோடு தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. களத்தில் அரும்பெரும்  சேவைகளைப் புரிந்து கொண்டிருக்கும் செயல்பாட்டாளர்கள், அரசுப்பதவி வகிப்பவர்களைத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிட்டியது. பின்தங்கிய குழந்தைகளின் கல்வி உரிமைகளுக்காகப் பாடுபடும் டாக்டர். சந்தீப் பாண்டே (ராமன் மகசேசே விருதினை 2002-ல் பெற்றவர்), உத்திர பிரதேச குழந்தை உரிமைப்பாதுகாப்பு ஆணையத்தின் மேனாள் தலைவர் திருமதி. ஜூஹி சிங் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியதை நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். மனித உரிமைகள் வழக்கறிஞரான ஆதித்யா ஸ்ரீவத்ஸவா வழிகாட்டுதலில் களத்தில் பயிற்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. அவருடைய உதவியோடு புந்தேல்கண்ட் பகுதியில் விவசாயத் தற்கொலைகளைக் கவனப்படுத்தவும், அதற்குப் பின்னுள்ள காரணங்களை ஆவணப்படுத்தவும் முடிந்ததைப் பெரும் பேறாக எண்ணுகிறேன். என்னுடைய பல்கலையின் இணைப் பேராசிரியரான முனைவர். KA பாண்டேவுடன் இணைந்து இந்தியாவின் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களைச் சமூகத் தணிக்கை புரியும் செயல்பாட்டை இந்தியாவிலேயே முதன்முறையாக செய்து முடித்தோம். மேற்சொன்ன அமைப்பு ரீதியான திறன்களைத் தாண்டி, ஆய்வுத்திறன், எழுத்தாற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினேன். என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டில் பெருமைமிக்க Economic & Political Weekly இதழில் நான் எழுதிய நான்கு கட்டுரைகள் வெளிவந்தன.

கேள்வி: நீங்கள் RMLNLU-வில் சட்டம் பயின்ற போது ஏழு வெவ்வேறு நீதிபதிகளுடன் பணியாற்றினீர்கள். எது இத்தனை நீதிபதிகளிடம் பயிற்சி பெற உங்களைத் தூண்டியது?

அனுராக்: என்னுடைய மூன்றாவது செமஸ்டரின் போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) இம்தியாஸ் முர்டாசாவிடம் பயிற்சி பெற்றேன். அவருடன் நிகழ்த்திய உரையாடல்கள் நீதிபதிகள் பணியாற்றும் முறையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எப்போது, எவ்வளவு முடியுமோ அப்போதெல்லாம் பல்வேறு நீதிபதிகளிடம் பயிற்சி பெறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர்களுடைய ஆக்கங்களுக்கு என்னாலான பங்களிப்பினை புரிந்தேன்.’Philadelphia’ திரைப்படத்தில் வரும் வசனம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன், “ அடிக்கடி அது அமைவதில்லை. எங்காவது, எப்போதாவது அரிதாகத்தான் நீதி வழங்குவதில் நீ பங்கேற்க இயலும். அது நிகழும் போது ஏற்படும் பரவசம் அதியற்புதமானது.” அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நான் வெவ்வேறு துறை வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளின் கீழ் பணியாற்ற விண்ணப்பித்தேன். இதன்மூலம் பலதரப்பட்ட வழக்குகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, நான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி DY சந்திரசூட் வழிகாட்டுதலில் பணியாற்றியதும், லக்னோ உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் தேவேந்திர உபத்யாயா, ராஜன் ராய், AR மஸூதி ஆகியோரிடம் பணியாற்றியதும் சுவாரசியம் கூட்டுபவையாக இருந்தன.

கேள்வி: இதே காரணத்தினால் தான் உச்சநீதிமன்றத்தில் ஓராண்டு சட்ட உதவியாளராக பணிபுரிந்தீர்களா?

அனுராக்: நவம்பர் 2013-ல் எங்கள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அலகாபாத் தலைமை நீதிபதியாக DY சந்திரசூட் பங்கேற்றார். அவர் பேசியதை கேட்டது முதல் அவர் ஊக்கமூட்டும் ஆளுமையாக எனக்கு ஆனார். அவரிடம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன பணிக்கு விண்ணப்பித்தேன். அவரிடம் நேரடியாகக் கற்றுத்தேறும் வாய்ப்பில்லாமல் போயிருந்தால் வேறேதேனும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன்.

கேள்வி : நீதிபதி D.Y.சந்திரசூடிடம் சட்ட உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் எப்படிப்பட்டதாக இருந்தது ?

அனுராக்: அது அசாதாரணமான ஒன்றாக இருந்தது என்று எண்ணுகிறேன். சட்ட உதவியாளர்களில் நான் பெரும் நல்வாய்ப்பு பெற்றவன் என்றே உணர்கிறேன். அவர் செவிமடுத்த பல்வேறு புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட வழக்குகளில் ஜூலை 2017-18 காலத்தில் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிட்டியது. நீதிபதி சந்திரசூடின் அனுபவங்களை அவர் அடிக்கடி தன்னுடைய சட்ட உதவியாளர்களிடம்  பகிர்ந்து கொள்வார். அதிலிருந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதனைப் பதிவு செய்வதற்காக நீதிபதி சந்திரசூட் கோபித்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணுகிறேன்.

நீதிபதி சந்திரசூட் ஒருமுறை தன்னுடைய தந்தையும், காலஞ்சென்ற நீதிபதியுமான YV சந்திரசூட் குறித்த தன்னுடைய நினைவலைகளில் மூழ்கினார். அவருடைய தந்தை அப்போது இளம் வழக்கறிஞராக இருந்தார். அவர் பம்பாயில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி செல்வார். (அனேகமாகக் காலா கோடா கஃபே/வேஸைட் இன்). அங்கே நண்பகல் வேளையில் ஒரு மனிதர் எப்போதும் அமர்ந்திருப்பதைக் காண்பார். அம்மனிதர் தனக்குள்  தோன்றும் கருத்துகளைச் சளைக்காமல் எழுதிக்கொண்டும், குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பார். அந்த மாமனிதர் டாக்டர். அம்பேத்கர். நீதிபதி YV சந்திரசூட் தான் டாக்டர் அம்பேத்கர் வாதாடிய வழக்கில் அவருக்கு எதிர்தரப்பில் நின்று வாதாடிய நினைவுகளை ஆசையோடு அசைபோடுவாராம்.

கேள்வி: கடந்த செப்டம்பர் 2018-ல் விஞ்ஞான் பவனில் உரையாற்றும் போது நீதிபதி சந்திரசூட் உங்களைக்குறித்துக் குறிப்பிட்டார். அவர் உங்களுடைய சமூகப் பின்னணி குறித்தும் பேசினார். உங்களுக்குத் தயக்கமில்லை என்றால், அதைக்குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அனுராக்: “ஆம். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பல்வேறு அடையாளங்களில் அதுவும் ஒன்று. எனினும், என்னுடைய வாழ்க்கையின் பெரும்பாலான தேர்வுகளைத் தலித் அடையாளமே செதுக்கியிருக்கிறது. ஹார்வர்டில் பட்டம் பெற்றது என்பது என்னைப்பற்றிய ஒன்று என்பதையும் தாண்டியது. இந்தப் பல்கலைக்கழகத்தில் எனக்குத் தனிப்பட்ட அளவிலும், வழக்கறிஞராகவும் கிட்டிய அனுபவங்கள் முக்கியமானவை என்பதோடு என்னுடைய ஹார்வர்ட் நோக்கிய இந்தப் பயணமானது இன்னமும் சமூகத்தின் கடைக்கோடியில் வாழவேண்டிய நிலைக்கு இன்றுவரை தள்ளப்பட்டிருக்கிற பல கோடி மக்களின் கனவுகளின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த ஹார்வர்டில் பெற்ற LL.M. பட்டமானது, மருத்துவ மேற்படிப்பை முடிக்கும் முன்பே தற்கொலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர். பாயல் தட்விக்குச் சமர்ப்பணம். இந்தப் பட்டமானது ரோஹித் வெமுலாவிற்கான என்னுடைய அஞ்சலி. அவருடைய இறுதிக்கடிதம் அறவுணர்வுமிக்கதாகத் திகழவேண்டிய தேசத்தினுடைய மனசாட்சியை நோக்கி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் முன்முடிவுகளை அறவே அழிக்க வேண்டியதை தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கும். குதிரையில் ஏறி சவாரி செய்ததற்காகவும், மீசை வைத்துக் கொண்டதற்காகவும் கொல்லப்பட்ட, இது போன்ற எண்ணற்ற அநீதிகளை அன்றாடம் சந்திக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த எம்மக்களுக்கான பட்டம் இது. பஞ்சம் தாக்கிய பகுதிகளில் நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்ட தலித்துகளுக்காக இப்பட்டம். இது ஒடிசாவில் ஃபனி புயலில் பாதிக்கப்பட்டும், புயற்காலப் பாதுகாப்பு உறைவிடங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டும், நிவாரண உதவிகள் தரப்படாமலும் அல்லல்படுத்தப்படும் தலித்துகளுக்கான பட்டம். நான் ஹார்வர்டில் பட்டம் பெற்றது எண்ணற்றோரை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். என்டிடிவியில் தோன்றிய பதினான்கு வயது சிறுமி சுனைனா உள்ளிட்ட பெருங்கனவுகள் கொண்ட அனைவருக்கும் எட்டாததாகத் தோன்றும் எல்லைகளையும் தொட்டுவிட இது உத்வேகம் தரும் என்று நம்புகிறேன்.”

கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் LL.M. பட்டம் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாகச் சொல்லுங்கள்.

அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் சேர்வதற்கான தேவைகள், இடம் பிடிப்பதற்கான தகுதிகள் இந்தத் தளத்தில் காணக்கிடைக்கும்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions/https://hls.harvard.edu/dept/graduate-program/llm-admissions
பல்வேறு கட்டத் தேர்வுகளுக்கான காலக்கெடு, பாடப்பொருட்களைக் கீழ்கண்ட சுட்டியில் காணலாம்: https://hls.harvard.edu/dept/graduate-program/llm-application-deadlines-and-materials/

. மேலும் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் ஒருவர் : தற்குறிப்பு (CV/Résumé); தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை ( Personal statement question); மதிப்பெண் பட்டியல்கள், குறைந்தபட்சம் இரண்டு பேரின் பரிந்துரை கடிதங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். தன்னைக்குறித்த வினாக்களுக்கு விரிவான அறிக்கை A, B என்று இருபிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில், விண்ணப்பிப்பவர் தனக்குப் பிடித்த துறையில் காணப்படும் முக்கியமான பிரச்சனை ஒன்றையோ, ஒரு நாடு/பகுதி/உலகம் எதிர்கொள்ளும் சட்டச்சிக்கல் ஒன்று குறித்து விவரிக்க வேண்டும். பின்னர் இது சார்ந்து தத்துவார்த்த வரைவு ஒன்றையோ, அச்சிக்கலை எதிர்கொள்ளும் அணுகுமுறையையோ பரிந்துரைக்க வேண்டும். இந்தச் சட்டக்கட்டுரையானது முழுக்க முழுக்க விவரணையாக அமையாமல் பகுத்தாய்வது, ஒழுங்குமுறைகளை (normative) அணுகுவதில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையானது நீங்கள் எடுத்துக்கொண்ட சட்டச்சிக்கல் குறித்து அசலான, ஆழமான புரிதலை வெளிக்கொணர வேண்டும். தேவையான மேற்கோள்கள், தேவையென்றால் விளக்கத்தோடு கூடிய அடிக்குறிப்புகள் இடம்பெறலாம். பகுதி B ஆனது ‘தன்னைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கை’ பிற LL.M பட்டங்களில் அமைவதை ஒத்திருக்கும். இதில் விண்ணப்பிப்பவர் ஏன் ஹார்வர்டில்  LL.M பட்டம் பெற விரும்புகிறார் என்பதையும், இப்பட்டம் பெறுவது அவர்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்களை எப்படி இணைக்கிறது என்றும் பேச வேண்டும். மேலும், மனதைக்கவரும் தனிப்பட்ட கதையொன்றையும் இப்பகுதியில் எழுத வேண்டும். ஹார்வர்ட் சட்டக்கல்லூரிக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறரும், நானும் சட்டத்தின் குறிப்பிட்ட கூறுகளோடும், எங்களுடைய பணி அனுபவங்களையும் இணைத்து இப்பகுதியை எழுதியிருந்தோம். விண்ணப்பிப்பவர் அடிப்படையில் கீழ்கண்டவற்றை விளக்கி எழுத வேண்டும்: (1) ஏன் LL.M பட்டம் பயில விரும்புகிறார், (2) என்னென்ன பாடங்களைப் பயில விருப்பம், ஏன்?, (3) பிற போட்டியாளர்களை ஒப்பிடும் பொது நீங்கள் எப்படி வேறுபட்டவர்/தனித்துவமானவர், (4) நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/நிறுவனங்கள் ஏன் உங்களுக்கு இடமளிக்க வேண்டும் , மற்றும் (5) நீங்கள் பெற விரும்பும் கல்வியானது உங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பயனளிக்கும் ஒன்றாக எப்படித் திகழும்?. விண்ணப்பிப்பவர் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பேராசிரியரிடம் பயில விரும்பினால் அதனை முறையாகக் கவனப்படுத்த வேண்டும், அல்லது மேற்சொன்ன அறிக்கையோடு அந்த விருப்பத்தைத் தனியே இணைக்க வேண்டும். மேற்சொன்ன இரு பகுதிகளும் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹார்வர்ட் LLM விண்ணப்ப படிவத்தில் இன்னும் இரண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். பலதரப்பட்ட சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்ட துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும், அவற்றை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கீழ்கண்டவாறு விளக்க வேண்டும்: “இந்தத் துறைகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் என்று தயவுசெய்து தெரிவியுங்கள், மேலும், இவை எப்படித் தொழில்சார்ந்த இலக்குகளோடு தொடர்புடையவை என்றும் குறிக்கவும்.” (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.) அடுத்தக் கேள்வி: “உங்களுடைய திட்டங்கள் குறித்து விரிவாகக் கூறவும். உங்களுடைய வருங்காலப் பணிகளை எந்த நாடு/நாடுகளில் மேற்கொள்ள விரும்புகிறீர்கள்? ( (குறிப்பு: உங்களுடைய பதிலை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களைக்குறித்த வினாக்களுக்கான விரிவான அறிக்கையை மேற்கோள் காட்ட வேண்டாம்.)

கேள்வி : ஹார்வர்டில் பயில்வதற்கான வழிமுறைகள் குறித்தும், உங்களுடைய பார்வையையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஹார்வர்ட் சட்டக் கல்லூரி இந்திய மாணவர்களுக்கு ஏதேனும் உதவித்தொகைகளை வழங்கி உதவுகிறதா?

அனுராக் : ஹார்வர்ட் சட்டக் கல்லூரி ஹார்வர்டில் படிக்கப் போதுமான வசதி இல்லாத மாணவர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப நிதியுதவி வழங்குகிறது. எனக்கு $52000 டாலர் நிதியுதவி கிட்டியது (இந்திய மதிப்பில் ஏறத்தாழ 36 லட்சம்). இதைக்கொண்டு கல்விக்கட்டணத்தில் 80% செலுத்த முடிந்தது மீதமிருந்த கட்டணத்தை வங்கிக்கடனை கொண்டு செலுத்தினேன் ஹார்வர்ட் வழங்கும் நிதியுதவி போக இன்லாக்ஸ் உதவித்தொகை, ஃபுல்ப்ரைட் உதவித்தொகை ஆகியவை உள்ளன. மேலும், வட்டியில்லா கடனாக உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளும் உண்டு (டாடா அறக்கட்டளை போன்றவை).

கேள்வி: ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்

அனுராக்: ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது எனக்குள் கனன்று கொண்டிருந்த கனவு. நம்முடைய கனவுலகில் நிஜமாகவே சஞ்சரிப்பது என்பது உலகத்தின் அற்புதமான உணர்ச்சிகளில் ஒன்று.

ஹார்வர்ட் பல்வேறு அரிய  வாய்ப்புகளை வாரி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் கொட்டிக்கிடக்கும் அனைத்து வாய்ப்புகளையும் LL.M. பட்டப்படிப்பிற்கான ஒன்பதரை மாதத்தில் பயன்படுத்துவதும், அறிவுக்கடலில் முத்துக் குளிப்பதும் மலைப்பூட்டுகிற ஒன்று. என்னுடைய சகா ஒருவர் குறிப்பிட்டதைபோன்று “ஹார்வர்ட்டின் ஒட்டுமொத்த எல்லையைத் தொட்டுணரவும், அதன் அனுபவங்களை முழுமையாக அள்ளிக்கொள்ளவும் ஆக்டோபஸாகத் தான் இருக்க வேண்டும்”. மகத்தான சில பேராசிரியர்களிடம் படிக்க நேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டம். வகுப்புகளைத் தாண்டி என்னுடன் உடன் பயின்ற மாணவர்கள் பலதரப்பட்ட கலாசாரங்கள், சமூகப் பின்புலங்களில் இருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். துல்லியமாகச் சொல்வதென்றால், என்னுடன் 65 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றார்கள். இவர்கள் சட்டக்கல்வி, சட்டத்துறை ஆய்வு, அரசாங்க பணி, நீதித்துறை, சர்வதேச அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், தனியார் துறையினர் என்று பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்.

எடுத்துக்காட்டாக நான் அஷுடோஷ் சலீல் (மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முனைப்பான  அரசு அதிகாரி), ஷீலா செய்ல் (ஐம்பது வயதாகும் மகாராஷ்டிரா மாநில காவல்துறை அதிகாரி) உள்ளிட்ட ஊக்கமூட்டும் ஆளுமைகளுடன் இணைந்து வகுப்புகளில் பங்கெடுப்பேன், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பரிமாறிக்கொள்வேன் என்றோ எப்போதும் எண்ணியதில்லை. மேலும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகளிலும் (கென்னடி கல்லூரி போன்றவை), பிளெட்சர் கல்லூரியிலும் இணைந்து பயிலும் வாய்ப்பும் உண்டு. இதனால் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளில் வெவ்வேறு பாடங்களைப் பயிலும் மாணவர்களோடு தொடர்புகொள்ள இயலும். அமெரிக்கா வந்ததால் நான் வெகுவாக மதிக்கும், நெருக்கமாகப் பின்பற்றும் பேராசிரியர் மைக்கேல் சாண்டெல் (நம் காலத்தின் கற்றறிந்த தத்துவ அறிஞர்), டாக்டர் ரகுராம் ராஜன் (ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர்) ஆகியோரை சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.

கேள்வி : நீங்கள் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் என்னென்ன பாடங்களைக் கற்றுத்தேர்ந்தீர்கள்?

அனுராக் : 2018 செப்டம்பர்-டிசம்பர் காலத்தில் பேராசிரியர் டேவிட் வில்கின்ஸ் நடத்திய ‘சட்டத் தொழில்’ பாடம், ஜென்னி ஸுக் ஜெர்சனின், ‘அரசியலமைப்புச் சட்டம்: அதிகாரப் பகுப்பு, கூட்டாட்சி மற்றும் பதினான்காவது சட்டதிருத்தம்’, பேராசிரியர் லூஸி வைட்டின், ‘வறுமை, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி’, பேராசிரியர் ஸ்டீபனி ராபின்சனின் , ‘நிறப்பாகுபாட்டில் இருந்து நிறக்குருட்டுத் தன்மை, அதிலிருந்து நிறத்தை மறுவரையறை செய்வது : மாறிக்கொண்டே இருக்கும் இனம் குறித்த கருதுகோள்களோடு அமெரிக்காவின் போராட்டங்கள்’ முதலிய பாடங்களைப் பயின்றேன். :. 2019-ன் பிப்ரவரி – ஏப்ரல் காலத்தில் மைக்கேல் க்ளார்மேனின் ‘அரசியலமைப்பு சட்ட வரலாறு II: அமெரிக்காவின் புனரமைப்புக் காலத்தில் இருந்து சிவில் உரிமைகள் இயக்கம் வரை’ , பேரசிரியர் லாரன்ஸ் லெஸ்ஸிக்கின், ‘அரசியலமைப்பு சட்டங்களின் ஒப்பீடு’, பேராசிரியர் டயானா ரோசென்ஃபீல்டின் ’பாலின வன்முறை, சட்டம் மற்றும் சமூக நீதி’ ஆகிய பாடங்களைக் கற்றுத் தேர்ந்தேன். மேலும், தத்துவம் சார்ந்து பேராசிரியர்கள் ராபர்டோ உங்கெர், மைக்கேல் பொயட் ஆகியோர் நடத்திய, ‘மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவங்களில் வாழ்வியல் ஒழுக்கங்கள்’ எனும் பாடத்தையும் கற்றறிந்தேன்.

கேள்வி : ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் உங்களால் மறக்க முடியாத நினைவு என்று ஏதேனும் உண்டா?

அனுராக் : ஒட்டுமொத்த ஹார்வர்ட் அனுபவமே மறக்க முடியாத ஒன்று தான். எனினும், சில தருணங்கள் இன்னமும் உரமேற்றுவதாக, ஊக்கப்படுத்துவதாக அமைந்தன. குறிப்பாக மூன்று தருணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது அனுபவம் இது:

2018-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட வகுப்பின் இறுதி வகுப்பு பேராசிரியர் ஜென்னி ஸுக்ஜெர்சன் தன்னுடைய வலிமையான உரையோடு வகுப்பை முடித்துவைத்தார். அவர் நம் சமகாலத்தின் அரசியலமைப்பு சட்ட நெருக்கடிகள் குறித்தும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் கைக்கொள்ள வேண்டிய பாத்திரத்தை குறித்தும் விரிவாக உரையாற்றினார் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் பேசிக்கொண்டே இருக்கையில் உணர்ச்சிவசப்பட்டவராகத் தென்பட்டார். அவர் தன்னுடைய வகுப்பை, “நமக்கும், கொடுங்கோன்மைக்கும் இடையேயான தடுப்புச்சுவராக அரசியலமைப்பு சட்டமே உள்ளது” என்று சொல்லியவாறு நிறைவுசெய்த போது கிட்டத்தட்ட அழுதுவிட்டார். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்க பற்றுறுதியும், பிணைப்பும் கொண்ட அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும், இப்பெரும்பணிக்கு நம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டுள்ளோம் என்கிற உணர்வும் மெய்சிலிர்க்க வைத்தது.

இரண்டாவது, பட்டமேற்பு விழாவிற்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு நிகழ்த்தப்படும் பேராசிரியர் மைக்கேல் க்ளார்மேனின் ‘இறுதி சொற்பொழிவு’. இது ஏப்ரல் 2019-ல் நிகழ்ந்தது. அந்த உரையில் பேராசிரியர் க்ளார்மேன் தற்போதைய தலைமுறை அரசியல், சமூக நிலப்பரப்பில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், கடந்த காலத்தில் சிவில் உரிமைகளுக்காக அயராது போராடிய வழக்கறிஞர்களின் வாழ்க்கை நம்பிக்கையையும், மீண்டெழும் வலிமையையும் நமக்கு வழங்குவதைக் கவனப்படுத்தினார். சிவில் உரிமைகள் சார்ந்த பேராசிரியரின் ஆய்வுகள் பிரமிக்க வைப்பவை.

மனதுக்கு நெருக்கமான மூன்றாவது நினைவு என்பது அமெரிக்காவின் மேனாள் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மீது எனக்கு இருக்கும் ஈர்ப்பு. 1990களில் ஹார்வர்ட் சட்ட கல்லூரியில் இருந்து ஒபாமா பட்டம் பெற்றார் என்பதால், அவரோடு நெருங்கிப் பழகிய பேராசிரியர்களிடம் இருந்து அவர் குறித்த கதைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவா எனக்குள் கனன்று கொண்டிருந்தது. பேராசிரியர் வில்கின்ஸ் ஒபாமா குறித்துச் சொல்லும் போது, தன்னுடைய சட்டப்படிப்பிற்குப் பின்பு சமூகத்திற்காகப் பாடுபடவேண்டும் என்கிற சிந்தனைத் தெளிவு ஒபாமாவிற்கு அப்போதே இருந்தது என்றார். ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் டீனாக இருந்த பேராசிரியை மார்த்தா மினோவ் பராக் ஒபாமா வகுப்பில் அடிக்கடி பேசமாட்டார், ஆனால், அவர் பேச எழுந்தால் அதில் தொனிக்கும் உறுதி அனைவரையும் அவர் குரலுக்குச் செவிமடுக்க வைக்கும் என்று நினைவுகூர்ந்தார். இவை போக, எனக்குப் பிடித்த பேராசிரியர்களோடு மத்திய உணவிற்கு வெளியே போவது என் ஞாபக அடுக்கினால் நீங்காத நினைவாக ஆழப்பதிந்திருக்கிறது.

கேள்வி: உங்களுடைய ராம் மனோகர் லோகியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஹார்வர்ட் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்த முதல் மாணவர் நீங்கள் தான். அனேகமாக, ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்று L.L.M பட்டம் பெற்ற முதல் தலித் ஆளுமையும் தாங்களாக இருக்கக்கூடும். எப்படி உணர்கிறீர்கள்?

அனுராக் : இந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதில் சொல்ல டோபி மக்வொயர் நடிப்பில் வெளிவந்த ஸ்பைடர் மேன் படத்தில் எனக்குப் பிடித்த வசனம் உதவும்.. அதில் பீட்டர் பார்க்கர், “வாழ்க்கை எனக்காக எதை என்ன வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், ‘பேராற்றலோடு பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது.’ என்கிற வார்த்தைளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்பான். என்னுடைய வெற்றி, சாதனைகளுக்கும் மேற்சொன்ன வசனம் பொருந்தும் என்றே எண்ணுகிறேன்.

ஒவ்வொரு வெற்றியோடும், பெரும் பொறுப்பும் வந்து சேர்கிறது. இந்தப் பொறுப்பானது கிட்டிய பாடங்களை மேம்பட்ட எதிர்காலத்தை அனைவருக்கும் கட்டியெழுப்புவது மட்டுமல்ல. எப்போது எல்லாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மிடையே உள்ள விரிசல்கள், வேறுபாடுகளை (Fault-lines) பகுத்தாய்ந்து அவற்றை ஏற்றுக்கொள்வதும் பொறுப்பில் அடங்கும். இதே நேரத்தில், இத்தனை காலம் எனக்கு ஆதரவாக இருந்த மனிதர்களை நன்றியோடு நினைவுகூர்வது அவசியமாகிறது. குறிப்பாக எனக்கு எப்போதும் உற்ற வழிகாட்டியாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களாகவும் திகழ்ந்த முனைவர் பூனம் ஜெயந்த் சிங், முனைவர் பூஜா அவஸ்தி, திவ்யா திரிபாதி, அபூர்வா விஸ்வநாத், ஸ்ரீ அக்னிஹோத்ரி, சவிதா தேவி ஆகிய ஆறு பெண்களை நினைவுகூர்ந்து நன்றிகூற விரும்புகிறேன்.

கேள்வி: உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

அனுராக் : அன்றாடம் பாதாள சக்கடைகளையும், மலக்குழிகளையும் சுத்தம் செய்யும் போது இறந்துபோகும் நம்முடைய குடிமக்கள் குறித்த செய்திகளைப் படித்துக்கொண்டே இருக்கிறோம். பசியால் குடிமக்கள் இறப்பது குறித்து வாசிக்கிறோம். வெவ்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் இயைந்து இயங்க வேண்டிய இத்தகைய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. ஆகவே, நான் அறிவுத்துறை, சட்டப்போராட்டம், செயல்திட்டத்திற்கான கொள்கைகளைத் திட்டமிடல், அரசியல் ஆகியவற்றில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். நான்கு தளங்களிலும் தீவிரமாக இயங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்திருக்கிறேன். என் தொழில் சார்ந்த புத்தம் புதிய மைல்கற்களைக் கண்டடைவதன் மூலம், இத்துறைகளில் பரவலாகப் பங்களிக்க முனைய வேண்டும். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின். 2019-ம் ஆண்டின் வகுப்பறை நாள் விழாவில் மே 29 அன்று தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் ரிச்சர்ட் லாசரஸ், “உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் பெற்ற ஹார்வர்ட் சட்டக் கல்லூரியின் பட்டத்தைக் கொண்டு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம். இந்தப் பட்டத்தைக் கொண்டு வாழ்வில் என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதிலேயே வாழ்வின் உண்மையான மதிப்பு பொதிந்திருக்கிறது.” என்றார். ஆகவே, இந்தியாவிற்குத் திரும்பி இயங்க ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.

உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

அனுராக்: நன்றி

இக்கட்டுரை ‘நீலம்’ டிசம்பர் 2020 இதழில் வெளிவந்தது. ஆசிரியர் குழுவிற்கு மனம்நிறைந்த நன்றிகள்.

நன்றி: livelaw இணைய  இதழ் 
தமிழில்: பூ.கொ.சரவணன்

அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்


அண்ணல் அம்பேத்கர் தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்:

ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா.

இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய உரைகள் நன்றாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்ததாகச் செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. அதற்கு முன்னால், இந்த மாநாட்டில் என்னுடைய பங்கு என்ன எனப் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் முகங்கள் கண்முன் நின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வலியிலும், துயரத்திலும் உழன்று அல்லல்படுகிறார்கள். தங்களுடைய துயரங்களுக்கு முடிவோ, விடிவோ இல்லையென்று நம்புகிறார்கள். நான் அதிர்ந்து போனேன் என்றாலும், இந்தத் தீமைக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும் அறிவுறுதியை பெற்றவனாக உணர்கிறேன். என்னுடைய மனதில் பல சிந்தனைகள் நிழலாடுகின்றன. இதயம் பல வகையான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.

நான் நம் வீட்டையும், உங்கள் எல்லாரையும் காணத்துடிக்கிறேன். உன்னை எண்ணி பிரிவுழல்கிறேன். யஷ்வந்தின் நினைவு வாட்டியெடுக்கிறது. என்னை வழியனுப்ப கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும், எனக்குப் பிரியாவிடை கொடுக்க ஓடோடி வந்தாய். சுற்றியிருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழியனுப்பி வைப்பதை கண்கூடாகப் பார்த்தாய். நீ நன்றியுணர்வால் நிறைக்கப்பட்டவளாக, உணர்ச்சிவயப்பட்டவளாகக் காட்சியளித்தாய். உன்னுடைய உணர்வுகளைச் சொற்களைக்கொண்டு வெளிப்படுத்த இயலாமல் நின்றாய். நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விழிகள் தெரியப்படுத்திவிட்டன. நீ உதிர்க்கும் சொற்களைவிட உன்னுடைய மௌனம் பலவற்றைப் பேசியது. உன் நாவினில் சொற்கள் பூத்தன,எனினும், உன் விழித்துளிகளே அச்சொற்களின் முழுப்பொருளாகும். அந்தக் கண்ணீர்த்துளிகள் வாய்மொழி வெளிப்படுத்த இயலாதவற்றையெல்லாம் பேசின.

லண்டனின் காலை வேளையில் இந்த எண்ணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது, அழுதுத்தீர்த்து விட வேண்டும் என்றிருக்கிறது. நான் கிடந்து தவிக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய் ரமா? நம் யஷ்வந்த் நலமா? அவன் அப்பா எங்கே என்று கேட்கிறானா? அவனுடைய மூட்டுவலி மட்டுப்பட்டிருக்கிறதா? நம்முடைய நான்கு குழந்தைகளை இழந்து நிற்கிறோம். யஷ்வந்த் மட்டுமே நமக்காக உயிர்த்திருக்கிறான். அவனே உன் தாய்மையின் முகம். அவனை நாம் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள் ரமா. யஷ்வந்திற்கு நிறையக் கற்பி. இரவு அவனை எழுப்பிப் படிக்க வை. என் தந்தை என்னை இரவில் எழுப்பிப் படிக்க வைப்பார். என்னைத் தவறாமல் எழுப்ப வேண்டுமென்பதற்காக அவர் தூக்கந்தொலைந்து விழித்திருப்பார். அவர்தான் எனக்கு இந்த ஒழுக்கத்தைப் பயிற்றுவித்தார். நான் படிக்க எழுந்ததும் அவர் உறங்கப்போய் விடுவார். இரவு போயும் போயும் எழ வேண்டுமா என எனக்கு ஆரம்பத்தில் சோம்பேறித்தனமாக இருக்கும். படிப்பதைவிடத் தூங்குவதே சுகமானது இல்லையா. ஆனால், இப்போது திரும்பிப்பார்க்கையில், உறக்கத்தை விடவும் கல்வியே வாழ்க்கைக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது. இதற்கான பெரும்பாலான பாராட்டுகள் என் தந்தையைச் சேர வேண்டும். நான் படிப்பில் ஆர்வமிக்கவனாக இருக்க வேண்டும் என்பதற்காக என் தந்தை எண்ணற்ற தியாகங்கள் புரிந்தார். என் வாழ்வில் விடியல் மலர்வதற்காக அவர் அல்லும், பகலும் ஓயாமல் உழைத்தார். அவரின் உழைப்பின் கனிகள் தற்போது காய்த்துக்குலுங்குவதைக் காண்கிறேன். இன்று அதைக்குறித்து நான் பேருவகைக் கொள்கிறேன் ரமா.

ரமா, அதற்கு இணையாக யஷ்வந்தும் கல்வியில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். அவன் உள்ளம் புத்தகங்கள் மீது தீராத் தாகத்தைக் கொண்டிருக்குமாறு தூண்டிவிட வேண்டும். ரமா, பணம், ஆடம்பரம் ஆகியவற்றால் பயனொன்றுமில்லை. உன்னைச்சுற்றி அவற்றைக் கட்டாயம் கண்ணுற்றுக் கொண்டே இருப்பாய். இத்தகைய சுகங்களை நாடி மக்கள் ஓயாமல் அலைகிறார்கள். இந்த ஒற்றை இலக்கில் மட்டுமே இம்மக்களின் வாழ்க்கை தேங்கி விடுகிறது. அவர்கள் வேறு எந்த முன்னேற்றம், வளர்ச்சியையும் நாடுவதில்லை. இத்தகைய வாழ்க்கையில் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது ரமா. நம்மைச்சுற்றி வேதனையைத் தவிர வேறொன்றுமில்லை. வறுமை மட்டுமே நம்முடைய துணைவனாக இருக்கிறது. பிரச்சினைகள் நம்மைவிட்டு விலகுவதேயில்லை. அவமானம், வஞ்சிப்பு, ஏளனம் நம் நிழலைப்போலப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம்மை இருட்டும், துயரக்கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன.

நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த வெற்றி நோக்கிய பாதையில் நாமே நடை போடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நம் நிலைமை இப்படியிருப்பதால், யஷ்வந்த்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன். அவன் முறையாக ஆடையணிவதை உறுதிசெய்வதோடு, சமூகத்தில் பண்புநலன்களோடு பழகவும் பயிற்றுவிக்கவும். நீ அவன் மூளையில் லட்சியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால்,நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது. அறிவைத் தேடியடைய வேண்டும் எனும் என்னுடைய சபதம்.

வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் அறிவுத்தேடலில் என்னை மூழ்கடித்துக்கொண்டு விட்டேன். என்னைத்தாங்கும் வலிமைமிக்கத் தூணாக நீயே இருக்கிறாய். என்னுடைய உலகத்தைக் கவனித்துக்கொள்கிறாய். உன் கண்ணீரைக்கொண்டு என் மனவுறுதியை வளர்த்தெடுக்கிறாய். இதனால்தான் எல்லையற்ற அறிவுப்பெருங்கடலில் எந்தத் தடையுமின்றி நான் ஊறித்திளைக்க முடிகிறது. நான் சத்தியமாகக் கொடுமைக்காரன் இல்லை ரமா. என் அறிவு வேட்கையைச் சளைக்காத தேடலின் மூலம் தணித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து திசைதிருப்பும் எதுவும் என்னைக் காயப்படுத்துகிறது. என் அமைதியை சீர்குலைத்து, கோபம்கொள்ள வைக்கிறது. எனக்கும் இதயம் உள்ளது ரமா, நான் பரிதவிக்கிறேன், ஆனாலும், புரட்சிக்கு என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இந்த உயரிய லட்சியத்திற்காக என் உணர்ச்சிகளைத் தீயிட்டு பொசுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இதனால், நீயும், யஷ்வந்தும் கூடச் சமயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், இந்த மடலை ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கரத்தால் உன் கண்ணீரைத் துடைக்கிறேன். நம்ம செல்ல “பட்லே”வை (யஷ்வந்த்) பார்த்துக்கொள் ரமா. அவனை அடிக்காதே. நான் அவனை அடித்திருக்கிறேன். அதை ஒருக்காலும் அவனுக்கு நினைவுபடுத்தாதே. அவன் உன்னுடைய பிரிக்கமுடியாத பகுதி.

இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மத, உளரீதியான பக்கச்சார்புகள், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே வேரறுக்கும் வழியைக் கண்டடைய வேண்டும். இவை அன்றாட வாழ்வில் ஆழமாக ஊறிப்போயிருக்கின்றன. இவற்றை மொத்தமாக எரித்திட வேண்டும். மீண்டுவர முடியாதவகையில் புதைத்திட வேண்டும். இவற்றைச் சமூகத்தின் ஞாபகம், கலாச்சாரத்தில் இருந்தும் கூட அறவே அகற்ற வேண்டுமென விரும்புகிறேன்.

ரமா, இந்த மடலை படித்துக்கொண்டிருக்கும் போதே உன் விழிகளில் வழியும் நீரின் ஈரத்தை உணர்கிறேன். நீ திக்குமுக்காடிப் போயிருக்கிறாய் என எண்ணுகிறேன். உன் இதயம் கனத்துப்போயிருக்கும். உன் உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தாலும், உன் உணர்ச்சிகளுக்கு நீ சொல்ல முயல்பவற்றைக் கடத்தும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நீ அத்தகைய உடைந்துவிடக்கூடிய உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறாய்.

ரமா, நீ என் வாழ்க்கையில் இல்லையென்றால் என்னாகி இருக்கும்? நீ என் துணையாக உடன்வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்? வாழ்க்கையில் சொத்து சுகமே முக்கியம் என எண்ணுபவளாக இருந்திருந்தால், என்னைத் தனியே தவிக்கவிட்டு போயிருப்பாள். யாராவது எப்போதும் பசியால் வாடவும், பம்பாயில் பசுமாட்டின் சாணியைத் தேடியலையவும், அதை வறட்டியாக்கி அடுப்பெரிக்கவும் யாராவது விரும்புவார்களா? வீட்டில் கிழிந்து போன துணிகளை ஒட்டுப்போட்டுக் கொண்டும், வறுமைக்கொடுமையில் நான் கொட்டும், ‘ஒரே ஒரு வத்திப்பெட்டி தான் மாதம் முழுவதற்கும்’ அல்லது ‘இருக்கிற அரிசி,பருப்பு, உப்பை வச்சு மாசக்கடைசி வரை ஓட்டித்தான் ஆகணும்’ முதலிய சொற்களைத் தாங்கிக்கொள்வார்கள்?

என்னுடைய ஆணைகளை நீ கடைபிடிக்காமல் முரண்டுபிடித்திருந்தால் என்னாகி இருக்கும்? நான் உடைந்து போன உள்ளத்தோடு, என் சபதத்தைக் காப்பாற்ற முடியாதவனாகப் போயிருப்பேன். முற்றிலும் நிலைகுலைந்து, எண்ணிப்பார்க்க கூட முடியாத அளவுக்கு என் கனவுகள் சுக்குநூறாகியிருக்கும். ரமா, என் வாழ்வில் நான் தேடுவதையெல்லாம் தொலைத்திருப்பேன். எல்லாமும், என்னுடைய எல்லா உள்ளக்கிடக்கைகளும் நிறைவேறாமல், காயப்பட்டுப் போயிருப்பேன். சிறு பதரைப்போலப் பொருளற்றவனாக இருந்திருப்பேன்.

உன்னையும், என்னையும் பார்த்துக்கொள். சீக்கிரம் ஊர் திரும்பிவிடுவேன். கவலைப்படாதே.

என்னுடைய நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.

உன்னுடைய,
பீமாராவ்,
லண்டன்,
30 டிசம்பர் 1930

(அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய மனைவி ரமாபாய்க்கு எழுதிய இக்கடிதம் மூன்று மொழிகளைக் கடந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கரியர் யஷ்வந்த் மனோகர் எழுதிய ‘ரமாய்’ எனும் ரமாபாய் குறித்த வரலாற்று நூலில் மராத்தி மூலம் காணக்கிடைக்கிறது.இம்மடலை பரத் யாதவ் இந்தியில் மொழியாக்கம் புரிந்தார். அதனைத் தோஷ் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றினார்.)

தமிழில்: பூ.கொ.சரவணன்

இலவசங்கள் எல்லாம் வெகுமக்கள் மயக்குத் திட்டங்களா?


இலவசங்களை வெகுமக்கள் மயக்கு திட்டங்கள் என வசைபாடுகிறார்கள். கல்விக்கடனில் படித்த எனக்கெல்லாம் கல்லூரிக்காலத்தில் ஒரு மடிக்கணினி எல்லாம் பெருங்கனவு. கணினி மையத்திலும், நண்பர்களிடம் கையேந்தியும் தான் அறிவுத்தேடலில் ஈடுபட முடிந்தது. மடிக்கணினி இல்லாமல் கைவலிக்க வலிக்க பொறியியல் பாடங்களை கையால் எழுதி மொழிபெயர்த்த வலிகளை நீங்கள் இலவசம் என நகையாடுகிற அரசாங்க மடிக்கணினி தான் போக்கியது. அதில் அத்தனை பாடங்கள், நூல்களை சேகரம் செய்து தந்திருந்தார்கள். அதன் உதவியோடு தான் என் குடிமைப்பணித்தேர்வு முயற்சிகள் சாத்தியமானது.
**************
இலவச மருத்துவக்கல்வி பெண்களுக்கு சென்னை மருத்துவக்கல்லூரி தான் தந்தது. அது இல்லாமல் போயிருந்தால் நானெல்லாம் மருத்துவமே படிக்க முடிந்திருக்காது என மனநல மருத்துவத்தில் மகத்தான சாதனைகள் புரிந்த சாரதா மேனன் வாக்குமூலம் தந்தார்.
*********
இலவச மிதிவண்டிகள் பெண்களின் பொருளாதார விடுதலை, வேலைவாய்ப்பை எப்படியெல்லாம் அதிகரித்தன என்பது குறித்த தீர்க்கமான ஆய்வுகள் உண்டு. மட்டையடி அடிப்பவர்களுக்கு இவையெல்லாம் கண்ணில் படாது. அவை இலவசங்கள் அல்ல. சமூகக்கடமை. ஆண்களை ஒவ்வொரு நகர்விற்கும் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய வேதனையிலிருந்து விடுதலை தந்த அரிய முன்னெடுப்பு மிதிவண்டிகள். உச்சிவெயில் தெரியாமல் உல்லாச மகிழுந்துகளில் வலம் வருகிறவர்களுக்கு இவை வெகுமக்கள் மயக்குத்திட்டங்களாக மட்டும் தெரிவதில் ஆச்சரியமென்ன.
***************
சமூகத்தேர்வு எனப் பேராசிரியர் அமர்த்தியா சென் குறிப்பிடும் மக்களுக்கான சரியான தேர்வுகள் தமிழ்நாட்டில் செயல்திறத்தோடு கொண்டு சேர்க்கப்படுவது ஒன்றும் விபத்தில்லை. பிரச்சினைகள் சார்ந்த தமிழக மக்களின் அணிதிரட்டல்கள் மிக முக்கியமான காரணம் என நரேந்திர சுப்ரமணியன், விவேக் சீனிவாசன் ஆய்வுகள் நிறுவுகின்றன. இவற்றை ‘ஓசி’ எனக்கொச்சைப்படு
த்துபவர்கள் தட்டையான பார்வை கொண்டவர்கள்.
******
பத்தாம் வகுப்பு முடித்தால் திருமண உதவித்தொகை என்பதால் கல்வி பெற்ற பெண்கள் பலருண்டு. வயிறு காயாமல் இருக்க பள்ளி நோக்கி வரவைத்தது இலவச மதிய உணவுத்திட்டம் தான். அதை சத்துணவு, முட்டை, வாழைப்பழம் என விரிவாக்கிய உணவில் சமூக நீதி இம்மண்ணின் ஆச்சரியம். முட்டை போட்டால் எங்கள் மதப்புனிதம் கெடும் என்ற அடிப்படைவாதிகளுக்காக பழங்குடியின, ஏழைப்பிள்ளைகள் அல்லலுறும் மாநிலங்களையும் தமிழகத்தையும் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.
**********
இலவசங்கள் எல்லாம் இலவசங்கள் அல்ல. அவற்றின் அமலாக்கம், பயனாளிகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஊழல், கேடு என்கிற அளவிற்கு பேசுபவர்கள் எம் கடந்த காலம் அறியாதவர்கள். ஒரு சீரியல் பார்க்க நவீனத்தீண்டாமையோடு யார் வீட்டு வாசலிலோ நின்ற வலி தெரியாது. பேருந்துக்கட்டணம் கட்ட காசில்லாமல் நடந்தே பல மைல்தூரம் கடந்து படித்தோரின் கால்களின் தேம்பல்கள் அறியார். கவுன்சிலிங்கிற்கு கட்ட ஐயாயிரமா என வாய்பிளந்த குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் எழுவது ஏன் என அறிவீர்களா? ஊழல் ஒழிப்பு என்கிற ஜிகினாத்தாளில் சுற்றி ‘நீங்கள் பிச்சைக்காரர்கள்’ என தரப்படும் மசாலா அரைவேக்காடானது, அருவருப்பானது.
இக்கட்டுரையை இந்து தமிழ் திசை நடுப்பக்கத்தில் பதிப்பித்தது. ஆசிரியர் குழுவிற்கு நன்றி:

நீட் தேர்விற்கு வெளியூர் சென்று வர என்ன கேடு எனக்கேட்டவர்களுக்கு ஒரு கடிதம்…


மாடமாளிகைகளில் இருந்து கொண்டு வெளியூருக்கு சென்றுவர என்ன கேடு என்று கேட்காதீர்கள். உங்கள் மேட்டிமைப்பார்வைகளுக்கு ஆயிரமாயிரம் வந்தனங்கள். எத்தனையோ தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்றிருக்கிறேன். பாதிக்கு பாதி மருத்துவ மாணவிகள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். கேரளா மட்டுமே நம்மைவிட அதிகப் பெண் மருத்துவர்களை விகிதாசாரப்படி கொண்டிருக்கிறது.

ஐஐடி தேர்வுகளை நிறையப் பெண்கள் எழுத முடியாமல் போகத் தேர்வு மையங்கள் வெகுதூரம் தள்ளியிருப்பது காரணம் என ஆய்வுகள் நிறுவுகின்றன. அண்ணா பல்கலை கலந்தாய்வுக்கு வர காசில்லாமல் தன் மகனை வண்டியேற்றி தனியாக அனுப்பும் குடும்பங்களை நான் கண்டிருக்கிறேன். தனியாகச் சென்னை வரை அனுப்ப வேண்டுமா என அஞ்சிக்கொண்டு ஊர் பக்கமாகவே பெண்களைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பலர் இங்குண்டு. வீட்டின் ஒட்டுமொத்த வருமானத்தையும் தங்கள் மகள்/மகனின் கல்வியில் மட்டுமே கொட்டிவிட்டுக் காத்திருக்கும் ஆயிரம் குடும்பங்கள் இங்குண்டு. திருமணம் தவிர்த்து பிள்ளையின் படிப்புக்காக அடமானம் போகும் தங்க நகைகள் எங்கள் அன்னைகளின் கழுத்தை மீண்டும் ஏறாத கதைகள் ஆயிரம் உண்டு.

சென்னையில் சேர வந்த காலத்தில் ஒரு நாள் கூடுதலாகத் தங்க எங்கே போவது என அஞ்சி கொசுக்கடிகள் இடையே அண்ணா பல்கலை வளாகத்திலேயே அச்சத்தோடு அப்பாவோடு தூங்கிய மாணவன் நான். என்னைப்போல இங்கே வெளியே சொல்லாதவர்கள் பலருண்டு. கல்வி என்கிற ஒரே பற்றுக்கோல் மட்டுமே இந்தத் தமிழ்ச்சமூகத்தின் பெரும்பான்மைக்கான சொத்து, நம்பிக்கை. அதைத்தகர்க்கும் முயற்சிகளை இச்சமூகம் ஒருங்கே எதிர்கொள்ளும். மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்காத செம்பகம் துரைராஜனும், அரசமைப்புச் சட்டம் இயற்றிய குழுவின் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமியும் மருத்துவப்படிப்புக்கான கதவுகளை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மூட முயன்ற வரலாறு அரங்கேறி 65 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது.

பல்வேறு வகையான உளவியல் தாக்குதல்கள். எதிர்காலம் குறித்த கவலைகள். வெளியூர் போய் நீட் எழுதியே ஆக வேண்டுமா எனத் தேர்வு எழுதுவதைக் கைவிட்ட பிள்ளைகளை அறிவேன். யாரிடமும் உதவி பெற தயங்குபவர்களும் இங்கு இருக்கிறார்கள். சம வாய்ப்புள்ள தேர்வாக இது எங்கே நடக்கிறது. மாதவிடாய் காலங்களில் தேர்வெழுத இத்தனை தூரம் போகிற பெண்களின் அவலக்குரல்கள் யார் காதுகளிலும் விழுமா? புது ஊரில் பயமும், நடுக்கமும் தாண்டி எழுதுவது சாத்தியப்படுமா? எம் பெண்களின் பயணம் ஒற்றை ஆளாகச் சென்னை மருத்துவக்கல்லூரியில் பழமைவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராகச் சமராடிய முத்துலட்சுமியில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டது. அது ஓயாது.

ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் சேவை இட ஒதுக்கீடு மறுப்பால் 31% காலியிடங்கள் அதிகரித்துள்ளன. காத்திரமான, பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய மக்களுக்கான மருத்துவக்கட்டமைப்பு உடைகிறது. என்னவோ.

இச்சமூகம் இதைக்கடந்து வரும் என இரு நாட்களில் நம்பிக்கை ஊற்றெடுக்கிறது. எம் தமிழ்ச்சமூகம் கல்வி என வருகிற போது எல்லா வேறுபாடுகளையும் கடந்து ஒன்று திரள்கிறது. கண்ணீர் துடைக்க, தோள் கொடுக்கச் சித்தமாக இருக்கிறது. அன்புத்தம்பி, தங்கைகள் அஞ்சாமல் இந்த இன்னல்களை எதிர்கொள்ளப் பெற்றோரும், உற்றோரும் துணையாய் இருங்கள்.

பிரபஞ்சனின் கதை மழை


பிரபஞ்சனின் கதை மழை நூலை வாசித்து முடித்தேன். ஜூனியர் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளும், மேலும் சில படைப்புகளும் இணைந்த கட்டுரைத் தொகுப்பு இது. வெவ்வேறு கதைகளின் வழியாகப் பிரபஞ்சன் பல்வேறு உலகங்களுக்கும், உணர்வுகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறார்.
கதை 1
அதிகார வர்க்கத்தில் தனக்கு மேலே இருக்கும் அதிகாரிகளுக்கு அஞ்சி, அஞ்சி வாழ்ந்து முதுகு ஒடிந்து போகும் பலர் இருக்கிறார்கள். செகாவின் ‘ஒரு குமாஸ்தாவின் மரணம்’ கதை இதை அங்கதமும், வலியும் கலந்து தொட்டுச் செல்கிறது. திரையரங்கில் குமாஸ்தா தும்முகிறார். முன்னால் மேலதிகாரி இருந்து அவர் மீது தும்மல் தெறித்து விட்டதாக உணர்கிறார். திரைப்பட அரங்கு, வண்டியேறும் இடம். அதிகாரியின் வீடு என்று நாள் முழுக்க மீண்டும், மீண்டும் பார்த்துத் தெரியாமல் தும்மியதற்கு மன்னிப்புக் கோருகிறார். இறுதியில் பயத்தில் வெளிறிப் போய் இறந்து போகிறார். பலர் அனுதினமும் செத்து செத்து பிழைக்கிறார்கள். அவ்வளவு தான் வேறுபாடு.

கதை 2

‘மணியன் பிள்ளை’ எனும் திருடனின் சுயசரிதை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாமர்த்தியமான திருடனான மணியன் பிள்ளை தானே தன்னுடைய வழக்குகளை நடத்துவது வழக்கம். ஒரு சிறுமியின் வாட்சை திருடி விட்ட வழக்கில் தன்னுடைய சாமர்த்தியத்தால் தான் திருடவில்லை என நிறுவுகிறார். அந்தச் சிறுமி உடைந்து அழுகிறாள். மணியன் பிள்ளைக்கு மனம் பதைபதைக்கிறது. ஒரு கடிதத்தை அந்தச் சிறுமிக்கு எழுதுகிறார்:’மகளே உன்னை இனிமேல் நீதிமன்றத்துக்கு இழுக்கமாட்டேன். நீ அழக்கூடாது மகளே. உன்னுடைய வாட்ச் உன்னை வந்து சேரும்’ என்று மனிதத்தோடு அதை மீண்டும் ஒப்புவிக்கிறார்.Image result for மணியன் பிள்ளை

மூன்று திருடர்கள்:
சங்குத்தேவன் தர்மம் எனும் புதுமைப்பித்தன் கதையில் வரும் திருடனும் பணக்காரர்களிடம் கொள்ளையடிப்பவனாகப் பதற வைப்பவனாகத் தோன்றும் சங்குத்தேவை ஏழைப்பெண் ஒருத்தியின் திருமணத்துக்கு மரத்தில் இருந்து பணத்தைத் தூக்கிப் போடுகிறான். சங்குத்தேவன் போன்ற தர்மவான்கள் கதைகளின் மூலம் சாகாவரம் பெறுகிறார்கள். ரோல்தாலின் சிறுகதை ஒன்றில் வரும் ‘விரல் வித்தகன்’ இமைக்குக் கணத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமலேயே அவரின் வாட்ச். பெல்ட். ஷூ லேஸ் என்று அனைத்தையும் பறிக்கிறான். அவனும் ஏழைகளிடம் திருடுவதில்லை. குதிரைப்பந்தயத்தில் யார் வெல்கிறார்களோ அவர்களிடமே கைவரிசை. அவனைக் கைது செய்யக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட போலீஸ்காரரிடம் இருந்து எப்படித் தப்பினான் என்பதைச் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் தெரிந்து கொள்ளுங்கள். மூன்று வெவ்வேறு நாட்டின் கதைகளிலும் திருடர்கள் தங்களுக்கு உரிய தர்மத்தோடு இருப்பது புலப்படுகிறது.

Image may contain: sky and outdoor

வாழ்க்கை வேடிக்கையானது:

சோபி எனும் இளைஞன் கடும் பசியில் இருக்கிறான். அவனுக்கு வேலையுமில்லை. மொத்தமாகச் சிறைச்சாலை போய்விட்டால் வேளாவேளைக்குச் சாப்பாடு கிடைக்கும் எனத் திட்டம். ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் இருந்தால் சிறைக்கு அனுப்புவார்கள் என்று உள்ளே நுழைகிறான். அவனின் கிழிந்த ஆடைகளைப் பார்த்து உள்ளேயே விடவில்லை. இன்னொரு உணவகத்தில் அதையே முயல்கிறான். அவனை அடித்துத் துவைக்கிறார்கள். ஒரு கடையின் கண்ணாடியை உடைக்கிறான். வந்த காவல்துறை அதிகாரியிடம், ‘நான்தான் உடைத்தேன்’ என்கிறான். கிண்டல் என்று நேசத்தோடு சிரித்துவிட்டு நகர்கிறார். ஒருவனிடம் குடையைக் களவாடுகிறான். அவனிடம், ‘குடையைத் திருடிவிட்டேன். என்னைக் காவல்நிலையம் அழைத்துப் போ’ என்கிறான். அவனோ, ‘நான் தான் குடையைத் திருடினேன். நீங்கள் தான் அந்தக் குடைக்குச் சொந்தக்காரர் போல. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.’ எனப் பெரிய கும்பிடு போட்டுவிட்டு நகர்கிறான்.

குடிகாரன் போல நடித்து வம்பு செய்கிறான். ‘இவர்களைக் கண்டுகொள்ளக் கூடாது. அப்படியே போய்விடுவார்கள்.’ என்று காவலர் கடக்கிறார். சர்ச் வருகிறது. குயிலோசை கேட்கிறது. கீதங்கள் இசைக்கின்றன.நிலவொளி பாய்கிறது. நாள் முழுக்க நடந்த நிகழ்வுகளும், மனிதமும், நம்பிக்கை காட்டியவர்கள் முகங்களும் அலையடிக்கின்றன. இனிமேல் உழைத்து வாழலாம் என நினைக்கிறேன். ‘ஒழுங்கா ஜெயிலுக்கு நட. இங்கே என்ன திருட வந்திருக்கியா?’ என ஒரு முரட்டுக்கரம் அவனைத் தள்ளிக்கொண்டு நடக்கிறது.

ஆண்களின் அநீதிகளுக்குப் பெண்களே முள் கிரீடங்கள் சுமக்கிறார்கள்:

மாதவியை விட்டு நீங்கிய கோவலன் பொருள் ஈட்ட மதுரை நோக்கி செல்கிறான். மாதவியின் கடிதம் வருகிறது: ‘என் பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்.’ என்று மன்னிப்பு கோருகிறாள். உயர்ந்த குலத்தவள் கண்ணகி என்று போற்றுகிறாள். உள்ளே நான் உனக்கு நேர்மையாக இருந்தும் பிறப்பால் தாழ்ந்த குலத்தவள் தானே என்கிற குரல் கேட்கிறது. நீ பொய்கள் நீங்கிய ஒழுக்கவாதி என்கிறாள். கைகூப்பி வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு கைவாளோடு நிற்கிறாள். ‘நீயாக நாடாமல் வந்தாய். எதையோ அனுமானித்துக் கொண்டு நீங்கினாய். ஒழுக்கவாதி ‘ என்கிற எள்ளல் தொனிக்கிறது என்கிறார் பிரபஞ்சன்.

‘நடிகை’ எனும் செகாவின் கதை நெகிழ்த்துகிறது. ஒரு ஆடவன் ஒரு நடிகையிடம் உறவு கொள்ளப் போகிறான். கதவு தட்டப்படுகிறது. அவனுடைய மனைவி நிற்கிறாள். தன்னுடைய பிள்ளைகளைப் பசியால் வாடவிட்டு இருவரும் சிக்கன் சாப்பிடுவதாகச் சத்தம் போடுகிறாள். தன்னுடைய நகைகளைப் பிடுங்கி கொண்டு வந்துவிட்டதாகக் கூப்பாடு போடுகிறாள். நடிகை அணிந்திருக்கும் நகைகள் தன்னுடையது இல்லை என்றாலும் எடுத்துக் கொள்கிறாள். கண்டமேனிக்கு ஏசிவிட்டு அவள் நீங்குகிறாள். நடிகை நிற்கிறாள். மெதுவாக ஆடவனிடம் கேட்கிறாள், ‘நீ என்றைக்காவது எனக்கு எதாவது பணமோ, நகைகளோ கொடுத்திருப்பாயா?’. இவன் தலைகுனிந்து, ‘இல்லை’ என்கிறான். அவன் அப்பொழுது ஒன்று சொல்கிறான். “என் மனைவி உத்தமி. அவள் இப்படித் தெருவில் வந்து நின்று போயும், போயும் உன்னிடம் யாசகம் பெறவேண்டி வந்ததே. பாவி.’ என்றுவிட்டு நகர்கிறான்.

Image result for செகாவ்

பரிபாடலில் ஒரு காட்சி. தலைவியின் வளையலும், மாலையும் பரத்தையிடம் இருக்கிறது. தோழிகள் அவள் திருடிவந்தால் என்று எண்ணிக்கொண்டு பலவாறு ஏசுகிறார்கள். ‘வஞ்சனையும், பொய்யும் மிகுந்து இழிவாழ்வு வாழ்பவளே. பன்றிகள் வாய் வைத்து உண்ணும் தொடியே. பலர் படிந்து குளிக்கும் படித்துறையே….’ என்று பலவாறு வசைகள் நீள்கிறது. தலைவன் வருகிறான். தான் தான் அவற்றைக் கொடுத்ததாகச் சொல்கிறான். ‘நீ அணிந்திருக்கும் சிலம்பும் என்னுடையதாகும்.’ என்று பரத்தை சொல்கிறாள். தலைவன் அவன் தந்தது என்று சொன்னதும் தலைவியைத் தலைவனோடு அனுசரித்துப் போகத் தோழிகள் அறிவுறுத்துகிறார்கள். வசை நின்று போகிறது. ஆண்கள் குற்ற உணர்ச்சியைப் பெண்களுக்கே கடத்திவிடுகிறார்கள் என்று காட்டும் மூன்று இலக்கியக் காட்சிகள். இன்றும் பல இடங்களில் இவற்றை நினைவுபடுத்தும் காட்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

இசையும், இலக்கியமும்:

சிதம்பர சுப்ரமணியமின் இதயநாதம் கடையில் வரும் இசையாசிரியரான கிருஷ்ணனிடம் ஒரு பெண் இசை கற்க வருகிறாள். இசை கற்கையில் தன் இதயத்தை இழக்கிறாள். இசை என்கிற தெய்வீக அனுபவத்தைப் பெறாமல் என் மீது இச்சை கொண்டாளே எனத் துணுக்குற்று இசையே கற்பிக்காமல் நாயகன் மவுனியாகிறான். தி.ஜாவின் ஒரு கதையில் வரும் இசைப்பற்றிய ஞானாம்பாளின் வரிகள் எல்லாக் கலைகளுக்கும் பொருந்தும்:
‘என் காதை ரொப்புறது தான் பாட்டு. பாட்டு என் மனசை, காதை ரொப்பணும். என் பிராணனைப் போய்க் கவ்வணும். இந்தத் தேகம், உயிர் எல்லாம் மறந்து போகணும்.”

பஷீரின் பேருலகு :

பஷீரின் தேன் மாம்பழம் கதையில் யூசுப் சித்திக் எனும் பக்கீர் வருகிறார். உயிர் போகிற அளவுக்குத் தண்ணீர் தாகம். தண்ணீர் கேட்கிறார். ஒரு இளைஞன் தண்ணீரை ஓடிப்போய்ப் பெற்று வருகிறான். அதில் பாதியை அங்கே துளிர்த்து இருந்து மாங்கன்றுக்கு ஊற்றுகிறார். மீதிப்பாதியை குடிக்கிறார். உயிர்விடுகிறார். சாவிலும் ஒப்புரவு பேணுபவர்கள் எத்தகையவர்கள்?

 

Image result for பிரபஞ்சன்

பிரபஞ்சன் ஒரு கட்டுரையில் எழுதுவது ஏன் கதைகளை வாசிக்க வேண்டும் என்பதை அழகாகக் கடத்துகிறது. அதுவே இந்த நூல் அறிமுகத்தை முடிவாகவும் இருக்கும்: ‘மயிலிறகு குட்டிப்போடாது என்று தெரிகையில் ஒரு குழந்தை தன்னுடைய குழந்தைமையை இழக்கிறது… அது குழந்தைக்கு நிச்சயம் இழப்பு தான்…. அந்த இழப்பின் இடத்தில கலைகளின் இனிமையை வைக்க வேண்டும். பாடலின் சுவையை உணர்த்த வேண்டும். கதைகளின் இன்பத்தை ஊட்ட வேண்டும். இயற்கையோடு உறவாட அவர்களுக்கு நேரத்தையும், சூழ்நிலையையும் உருவாக்கித் தரவேண்டும். ..ஆனால் , நாம் என்ன செய்கிறோம்? வீட்டுப்பாடம், டியூஷன், கல்விச்சுமை என்று குழந்தைகளின் மாலைக்காலத்தைக் களவாடுகிறோம். அமெரிக்காவை நோக்கிய ஒட்டப்பந்தயத்துக்குக் குழந்தைகளைத் தயார்படுத்துகிறோம்.’

கதை மழை
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்: 96
விலை: 80

நீட் தேர்வு சவால்களும், பயிற்றுமொழி சிக்கல்களும்


நீட் தேர்வு சவால்களும், பயிற்றுமொழி சிக்கல்களும் குறித்த அகரம் அறக்கட்டளை வெளியீட்டை படித்து முடித்தேன். பேராசிரியர். பிரபா கல்விமணி பல்வேறு ஆளுமைகள் எழுதிய நீட் குறித்த கட்டுரைகளையும், பயிற்றுமொழி சார்ந்த விவாதங்களையும் தொகுத்து இருக்கிறார்.

நீட் சார்ந்து நம் முன்வைக்கப்படும் விவாதங்களுக்குள் போவதற்கு முன்னால் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டின் வரலாற்றை நீதியரசர் சந்துரு தொட்டுக் காண்பிக்கிறார். இந்தியா குடியரசு ஆனதற்குப் பிந்தைய முதல் அரசமைப்பு சட்ட சிக்கலே மருத்துவக் கல்வியின் அடிப்படையில் தான் எழுந்தது. மருத்துக்கல்விக்கே விண்ணப்பிக்காத சம்பகம் துரைராஜன் எனும் பெண்மணி தமிழகத்தில் உள்ள COMMUNAL G.O எனப்படும் இட வகுப்புவாரி இட ஒதுக்கீட்டால் தனக்குரிய நியாயமான இடம் மறுக்கப்படுவதாக நீதிமன்ற படியேறினார். அந்த வழக்கை நடத்தியவர் அரசமைப்பு சட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். உச்சநீதிமன்றம் தமிழகத்தின் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு தந்ததற்குப் பின்னால் எழுந்த போராட்டங்களால் முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.

 

Image result for நீட்

தமிழகத்தில் படிப்படியாக இட ஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டுத் தற்போது 69% என்கிற அளவில் உள்ளது. இந்திரா சகானி வழக்குக்குப் பின்னால் 50% தான் இடஒதுக்கீடு தரமுடியும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதால் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு முறை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளானது. 1993-ல் தனிச்சட்டம் இயற்றி அதை ஒன்பதாவது அட்டவணையில் வைத்தாலும் தமிழகத்தின் இட ஒதுக்கீடு செல்லுமா எனும் வழக்கு 22 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டப்படி மருத்துவக் கல்லூரியில் இடங்களை மத்திய அரசே பிரிவு 10A ன் படி அதிகரிக்க முடியும். உச்சநீதிமன்றம் 69% இட ஒதுக்கீட்டில் பாதிக்கப்படும் மாணவர்களுக்குத் தன்னிச்சையாகக் கூடுதல் இடங்களை இடைக்கால உத்தரவின் மூலம் வழங்கி கொண்டு இருக்கிறது.

கோத்தாரி கமிஷன் முதலிய பல்வேறு கல்வி சார்ந்த குழுக்கள் மத்திய அரசு மாநிலப்பட்டியலில் இருக்கும் கல்வியில் தலையிடக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தன. இவற்றுக்கு மாறாக இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த பொழுது கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

தமிழகத்தில் எழுபதுகளுக்கு முன்புவரை மண்டலம், மாவட்டம் என்று பலவகையில் பிரித்து நேர்முகங்கள் முறையின்றி நடத்தப்பட்டுக் கண்டபடி இடங்கள் வழங்கப்பட்டன. இவற்றை எதிர்த்து ராஜேந்திரன், பெரியகருப்பன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளால் அம்முறை நீக்கப்பட்டது.

எண்பத்தி நான்கில் இருந்து தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகளின் மூலம் மட்டும் மருத்துவக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார். 1996-ல் கிராமப்புற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இவை பயன் தந்திருக்க வேண்டும், எனினும், நாமக்கல் முதலிய பல்வேறு மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் பள்ளிகளைத் துவங்கி கோழிப்பண்ணை பள்ளிகள் மருத்துவ இடங்களை அள்ளின. அதிமுக அரசு இந்த இட ஒதுக்கீட்டை 25% அளவுக்குக் கொண்டு சென்றது. உச்சநீதிமன்றம் இது செல்லாது என்றுவிட்டது.

நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களை மருத்துவ, பொறியியல் படிப்பில் சேரவிடாமல் தடுக்கிறது என்று சொல்லி தமிழக அரசு அதனை நீக்கியது. (2005) ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் நடந்த சட்டப்போராட்டத்துக்குப் பின்னால் தமிழக அரசின் முடிவை உச்சநீதிமன்றம் செல்லும் என்றது.

 

Image result for பிரபா கல்விமணி

இப்பொழுது உண்மையில் தமிழ்வழிக்கல்வியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் இதனால் பயன்பெறுகிறார்களா என்கிற கேள்வியை எடுத்துக் கொள்வோம். கடந்த எட்டு ஆண்டுகளின் தரவு இது. கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பிற்கான 29,225 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 278 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது 0.9%. ஆக, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களே பெரும்பாலான இடங்களை அள்ளுகிறார்கள் என்பது தெளிவு.

பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்கள் பெரும்பாலான ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. பல்வேறு அரசியல்வாதிகளே இப்படிப்பட்ட பள்ளிகளை நடத்துபவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில் 42% பிள்ளைகள் ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கிறார்கள். மருத்துவக் கல்வியை மாநில அரசுகளிடம் விட்டிருந்த பொழுது எண்ணற்ற முதலாளிகளுக்கு இடங்களை வாரியிறைக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு மருத்துவக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆள் மாறினார், காட்சி மாறவில்லை என்று சுயநிதி கல்லூரிகளின் அட்டூழியம் தொடரவே செய்தது. பல லட்சம் ரூபாய்களைக் கட்டணமாக அவை வசூலித்தன. இவற்றை எதிர்த்து உச்சநீதிமன்ற படியேறியவர்களுக்கு ஆறுதல் தருவது போல நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான அமர்வு 50% இடங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம், மதிப்பெண் அடிப்படையிலான இடம், மீதத்துக்குத் தங்களுடைய விருப்பப்படி இடங்களைத் தருவது என்று தீர்ப்புத் தந்தது.

டி.எம்.ஏ.பை வழக்கில் 11 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு உன்னிகிருஷ்ணன் வழக்கு வழங்கிய தீர்ப்பை ஒன்றுமில்லாமல் செய்தது. தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்தியும், விரும்பியபடியும் ஆட்களைச் சேர்க்கலாம் என்று தீர்ப்பு வந்தது. இதனால் பணம் அதிகம் தருபவர்களுக்கு இடங்கள் வாரியிறைக்கப்பட்டன.

இவற்றைச் சரி செய்யும் முயற்சி என்று சொல்லி NEET எனும் தேர்வு கொண்டுவரப்பட்டது. இதன்படி ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச மதிப்பெண்களை இத்தேர்வில் மாணவர்கள் பெறவேண்டும். OC-50%, OBC-40% என்று நிர்ணயிக்கப்பட்ட இந்த மதிப்பெண்களைக் கடக்கும் மாணவர்களுக்குத் தரப்பட்டியல் அடிப்படையில் அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டின்படி 85% இடங்களை நிரப்பிக் கொள்ளலாம். தாய்மொழியில் படித்த மாணவர்கள் தேர்வினை ஆங்கிலம், இந்தியில் எதிர்கொள்வது சாத்தியமில்லை என்று சொல்லப்பட்ட பின்பு தமிழ் முதலிய எட்டு மொழிகளிலும் வினாத்தாள் தரப்படும் என்று உறுதி தரப்பட்டது. நீட் தேர்வில் இருந்து ஒரு வருட விலக்கை மாநிலங்கள் நடத்தும் அரசுக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அவசர சட்டத்தின் மூலம் வழங்கியது.

வரும் ஆண்டு முதல் எல்லாக் கல்லூரிகளும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டும். தனியார் கல்லூரிகளும் மாணவர்களை நீட் தேர்வின் மூலமே சேர்க்க வேண்டும் எனப்படுகிறது. ஆனால், இங்கேதான் ஒரு மிக முக்கியமான சவால் இருக்கிறது. பை வழக்கின் தீர்ப்பில் தரப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கான உரிமைகள் பெரும்பாலும் திரும்பப்பெறப் படவில்லை. நீட் தேர்வு மதிப்பெண்களின் தேறிய மாணவர்களைச் சேர்க்கிறார்கள் என்பது உறுதி என்றாலும், அதை மட்டுமே கொண்டு அவர்கள் சேர்ப்பார்களா என்பது கேள்விக்குறி. நீட் மதிப்பெண்கள் பெட்ரா மாணவர்களில் யார் அதிகப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களை 50% இடங்களில் சேர்த்துக்கொள்ள முடியும். இதைத் தடை செய்தால் உச்சநீதிமன்றம் எப்படி எதிர்வினை ஆற்றும் என்று தெரியாது.

இந்த நூலில் ஆங்கிலவழிக் கல்வி என்கிற பெயரில் தமிழகம் கண்டுள்ள பெரும் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்திய அளவில் நடக்கும் பெரும்பான்மை நுழைவுத்தேர்வில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். AIIMS தேர்வில் வெறும் ஆறு தமிழக மாணவர்களே தேர்ச்சி பெற்றார்கள் என்று பதிவு செய்கிறார்கள். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இடங்கள் ஒப்பீட்டு அளவில் நிறைய என்பதாலும், AIIMS தேர்வு பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததாலும் பல மாணவர்கள் அத்தேர்வுகளை எடுக்காமல் போயிருக்கும் வாய்ப்பை கட்டுரை கருத்தில் கொள்ள மறுக்கிறது. அதேசமயம், சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்படுவது மாநில பாடத் திட்ட மாணவர்களுக்குக் கேடு என்பவர்கள் மாநில அரசின் பாடத்திட்டம் 12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதை மறைக்கிறார்கள்.

பல்வேறு அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்களே இல்லை, நீட் தேர்வில் கோரப்படும் +1, +2 பாட அறிவுக்கு நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் தயாராவது சவாலான ஒன்று என்பதை நூல் சுட்டுகிறது. ஆந்திராவை பாருங்கள், கேரளாவை பாருங்கள் அவர்கள் எத்தனை இடங்களை அள்ளுகிறார்கள் அந்தக் கல்வித்தரம் மேம்பட்டது என்று நூலில் கொதிப்புத் தென்படுகிறது. ஒரு மிக முக்கியமான சிக்கலை இந்த நூல் தவற விடுகிறது. ஆந்திராவில் பொருளாதார அறிஞர் ஹரீஷ் தாமோதரன் சுட்டிக்காட்டுவதைப் போலப் பல்லாயிரம் கோடி நுழைவுத்தேர்வு பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது. கேரளாவும் மருத்துவ நுழைவுத் தேர்வில் அதனையே செய்கிறது. இப்படி நுழைவுத் தேர்வு தொழிற்சாலைகள் தமிழகத்தில் கல்லா கட்டும் வாய்ப்பு நீட் தேர்வால் ஏற்பட்டு இருக்கிறது. சுயநிதி பூதத்தில் இருந்து தப்பிப்பதாகக் காட்டிக்கொண்டு நுழைவுத்தேர்வு கொள்ளைக்காரர்கள் கடைபரப்புவது பேசப்படவே இல்லை.

தமிழகம் முழுக்கத் தனியார்மயமாக்கப்பட்ட கல்வியின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது. அரசுப்பள்ளிகளும் மிக மோசமான கல்வியை வழங்குகின்றன. தற்போது நீட் தேர்வுகளில் ஆங்கில வழிக்கல்வி மாணவர்கள் பெற்ற இடங்களை CBSE பாடப்பிரிவில் பயின்ற மாணவர்கள் பெறுவார்கள். இல்லையேல் நுழைவுத்தேர்வுக்குக் காசு கட்டிப் படிக்கும் திராணி உள்ளவர்கள் தேறுவார்கள்.

Image result for நீட் தேர்வு

நீட் இப்பொழுதைய யதார்த்தம். நீட் தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் நன்றாகச் செயல்படத் தனிப்பயிற்சிகளைத் தமிழக அரசு வழங்கலாம். மேலும், தமிழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது, தகுதியான ஆசிரியர், ஒழுங்கான கட்டமைப்பு, கற்றல் முறைகளில் கொண்டுவரப்பட்டு இருக்கும் CCE முதலிய மாற்றங்களைப் பெருமளவில் முன்னெடுப்பது என்று சவால்கள் ஏராளம். பயிற்றுமொழியாகத் தமிழை மேற்படிப்பில் கொண்டுவருவதை நோக்கி முழுமையான முன்னெடுப்புகள் தேவை என்று நூல் வாதிடுகிறது. பொறியியல் கல்வியைத் தமிழ்வழிப்படுத்தி என்ன பாடுபடுத்தினார்கள் என்பதை உணர்ந்தவன் என்கிற முறையில் நான் கவலையோடு தான் இதைப் பார்க்கிறேன். நீட் தேர்வால் மீண்டும் ஆங்கிலவழிக் கல்வி கற்கும் மாணவர்களே பெரும்பாலும் பயன்பெறுவார்கள். இட ஒதுக்கீடு சார்ந்தும் ஆழமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பணமுள்ளவர்களே இந்திய கல்வி முறையில் பெரும்பாலும் முந்தமுடியும் என்கிற அறையும் நிஜம் இந்த நூலின் மூலம் கடத்தப்படுகிறது.

நீட் தேர்வும் பயிற்றுமொழி சிக்கல்களும்
அகரம் அறக்கட்டளை வெளியீடு
விலை: 50
பக்கங்கள்: 104

என் தந்தை பாலையா


இந்தியக் கிராமங்கள் குடியரசுக்கு முழுக்க எதிரானவை. இவை ஆதிக்க ஜாதியினரால் ஆதிக்க ஜாதியினருக்கு நடத்தப்படும் குடியரசு. இங்கே தீண்டப்படாத மக்களுக்கு இடமில்லை. அங்கே தீண்டப்படாதோரால் காத்திருக்கவும், சேவகம் செய்யவும், அடங்கிப் போகவும் மட்டுமே முடியும். இங்கே ஜனநாயகத்துக்கு இடமில்லை. சமத்துவத்துக்கு, விடுதலைக்கு, சகோதரத்துவத்துக்கு இடமே இல்லை.’-அண்ணல் அம்பேத்கர்

‘My Father Baliah’ எனும் நூலை வாசித்து முடித்தேன்.. ‘ஒரு ஊரில் ஒரு தலித் இருந்தார்’ என்று ஒரு கதை துவங்கினால் எப்படி இருக்கும்? ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியை மூன்று தலைமுறை கதைகளின் ஊடாக சொல்லிச்செல்கிறார் Y.B.சத்தியநாராயணா. தொடர்வண்டிகள் என்பது ஆங்கிலேயரின் காலனியத்தை, பஞ்சத்தை, வறுமையை பரப்பியது என்பது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசின் கருத்தாக இருந்தது. எனினும், அது தலித்துகளின் வாழ்க்கையில் விடுதலையை, வளர்ச்சியை தருவதாக இருந்தது.

கடுமையான உடல் உழைப்பை கோரிய ரயில்வே துறை பணிகளை செய்ய ஆதிக்க சாதியினர் தயாராக இல்லாத நிலையில் தலித்துகள் அவற்றை வேலை வாய்ப்புக்கான வழியாகவும், கிராமத்தின் கொடுமையான ஜாதி அமைப்பை விட்டு வெளியேறும் வாய்ப்பாகவும் பார்த்தார்கள். அப்படி வெளியேறிய நரசய்யா குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் கல்வியால் முன்னேறிய கதை தான் இந்த நூலில் விரிகிறது.
நூலில் முதல் காட்சியே அதிர வைக்கிறது. கூட யாரும் துணைக்கு இல்லாமல் தெலங்கானாவின் வங்கபள்ளி கிராமத்தில் தன்னுடைய மனைவியின் பிணத்தை சுமந்தபடி நரசய்யா தன்னுடைய மகனோடு கண்ணீர் வழிய நடக்கிறார். மதிகா எனப்படும் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் பிணத்தை தீண்டக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். ஊரில் வீடுகளும் மனுவின் மனு சாஸ்திரம் படியே இருந்தன. மேற்கிலிருந்து கிழக்காக காற்று வீசும் என்பதால் மதிகாக்களின் வீடுகளில் வீசும் காற்று தங்கள் வீட்டை நெருங்கக்கூடாது என்று பிராமணர்களின் வீடுகள் மேற்கு திசையில் கட்டப்பட்டிருக்கும்.

வெலமா எனப்படும் இடைநிலை சாதியை சேர்ந்த நிலச்சுவான்தார்கள் மதிகா பெண்களை தோன்றும் போதெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிஜாமுக்கு வரி வசூலிக்கும் பொறுப்பில் இருந்த இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட மக்களை கசக்கிப் பிழிவதோடு தீண்டாமையை விடாமல் கடைபிடித்தார்கள்.

Image may contain: text
தன்னுடைய மனைவியின் மரணத்துக்குப் பிறகு நரசய்யா ரயில்வேவில் பாய்ண்ட்ஸ்மேன் பணியில் சேர்ந்தார். ரயில் தண்டவாளங்களில் நூறு கிலோவுக்கு மேலே இருக்கும் சங்கிலிகளை வேகமாக தூக்கிக் கொண்டு ஓடி ரயில் பெட்டிகளை இணைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டார். சில காலம் உழைப்புக்குப் பிறகு, செகந்திரபாத்துக்கு நரசையாவின் குடும்பம் மாறியது அவரின் மகன் பாலையாவுக்கு கல்வியைத் தந்தது.
பாலையாவும் ரயில்வேவில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தினார். இரவு பத்து மணிக்கு தூங்க வைத்து, அதிகாலை நான்கு மணிக்கு எழுப்பிவிட்டு அவர்களை படிக்க வைத்தார். தான் பள்ளிக்கல்வியைத் தாண்டாவிட்டாலும் மகன்கள் கல்லூரி செல்ல வேண்டும் என்று ஊக்குவித்தார். ரயில்வேவில் கால் கடுக்க, தோள் ஓய வேலை பார்த்த பின்பு வயல்வெளிகளில் வேலை பார்த்து பிள்ளைகளை படிக்க வைத்தார்.

ஒரே குடும்பத்தில் இருந்து எழுபதுகளில் மூன்று பேராசிரியர்கள் எழுந்தார்கள். முனைவர் பட்டம் பெற்று பல உயர்ந்த மாணவர்களை உருவாக்கினார்கள். மதிகா குடும்பத்தின் முதல் ஜாதி மறுப்புத் திருமணம் பாலையாவின் திறந்த மனதால் நடைபெற்றது.

தலித் என்கிற அடையாளத்தை மறைக்க வேண்டிய தருணங்கள் வலி தருபவை. கல்லூரி அறிவிப்புப் பலகையில் உதவித் தொகை பெறும் பெயர் இடம் பெற்றால் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என ஓடோடிப் போய் க்ளார்க்கிடம் கெஞ்சுவது. ஆசிரியராக பாலையாவின் மகன் வேலை பார்க்க போன ஊரில் மதிகா என சொன்னால் வீடு கிடைக்காது என்பதால் ஜாதியை மாற்றிச் சொல்வது. பெயரின் பின்னால் இருக்கும் ஐயா என்பது தலித் என்பதைக் காட்டிக் கொடுத்தபடி இருந்ததால் பெயரை ஆசிரியரே மாற்றுவது என்று சமூகத்தின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.

Image result for y b satyanarayana

வேதியியல் பேராசிரியராக பாலையாவின் மகன் சத்தியா உயர்கிறார். அவர் பணியாற்றிய கல்லூரியில் முப்பத்தி மூன்று வயதில் அவரின் திறனால் முதல்வர் பதவி வந்து சேர்கிறது. தன்னுடைய பெருந்தன்மை மூலமும், நிர்வாகத்திறமை மூலமும், மதிகா எனச் சொல்லித் திட்டியவர்களை கூட அரவணைத்துக் கொள்கிறார். கல்வியின் அடுக்குகளும், கடும் உழைப்பும் எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேல் எழுப்பும் என்பதற்கு பாலையா எடுத்துக்காட்டாக கல்வியை ஆயுதமாக்கி சாதித்தார்.

இந்த புத்தகத்தில் காதலும், துரோகமும் உண்டு. நெகிழ வைக்கும் தருணங்கள் உண்டு. போனவர்கள் திரும்பவே திரும்பாத பிரிவுகள் உண்டு. சாதியைக் கடந்து சக மனிதர்களாக பிள்ளைகளை பார்க்கும் நம்பிக்கை தரும் மனிதர்கள் உண்டு. உச்சத்துக்கு போனாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணரவே உணராத கற்றவர்கள் உண்டு. மதிகா மக்களின் திருமணங்கள், கலாசாரம், தெய்வங்கள், நம்பிக்கைகள் பற்றிய சுவையான குறிப்புகள் உண்டு. பாலையா எனும் ஒற்றை மனிதனின் கதை மட்டுமல்ல இது. ஒரு சமூகம் தன்னைத் தானே பிரதிபலிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்கள் உயர இட ஒதுக்கீடும், கல்வியும், நகர வாழ்வும் தரும் வாய்ப்புகளை உணரவும் வைக்கும் நூல். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

HARPER COLLINS வெளியீடு
பக்கங்கள்: 211
விலை: 35௦

“சாதனைக்காக சாபங்களைக் கடக்கத்தான் வேண்டும்!” – ஊடகவியலாளரின் நம்பிக்கை உர


சாதனை

டகத் துறையில் சாதனை படைக்க சில சாபங்களை விதைத்திருக்கிறார், சுஹாசினி ஹைதர். இவர், புகழ்பெற்ற ஊடகவியலாளர். தற்போது, ‘தி இந்து’ ஆங்கில இதழின் அயலுறவு பிரிவின் ஆசிரியர். WORLD MEDIA ASSOCIATION-ஐச் சேர்ந்த மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது:

‘‘ஊடகத் துறை மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட உரை என்றாலும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.
ஊடகத் துறையில் பட்டம் பெறப்போகும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தற்போது அந்தத் துறையில் நிலைமை சரியில்லை என்பதும், அங்கே வேலை கிடைப்பது குதிரைக் கொம்பான காரியம் என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அவை, உண்மையே என நான் அழுத்திச் சொல்வேன்.

நான், 15 வருடங்களுக்கு முன்னால் ஊடகத் துறையில் நுழைவதற்காக… பல கனவுகளோடு அதில், காலடி எடுத்து வைத்தேன். அப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது. தொலைக்காட்சியில், வேலை கிடைப்பது கஷ்டம் என்பதைவிட… வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை என்கிற சூழல் நிலவியது. என்னை ஏழு நிராகரிப்பு கடிதங்கள் வரவேற்றன. ஒரு நிறுவனம், ‘அடுத்த வருஷம் பாத்துக்கலாம் மேடம்’ என்றார்கள். இன்னொரு நிறுவனமோ, ‘இனிமேல் தயவுசெய்து அழைக்காதீர்கள்’ என்று கறார் காட்டினார்கள். எல்லாம் முடிந்துபோனது எனத் தோன்றிய நேரத்தில்… இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்துவிடலாம் என ஒரு நேர்முகத் தேர்வுக்குச்  சென்றேன். அது, செய்தி நிறுவனமில்லை. ஓர் ஆவணப்பட நிறுவனத்தில், விற்பனைத் துறையில் வேலைக்கான நேர்முகம் அது. என்னுடைய சான்றிதழ்களுக்கு இந்த வேலையாவது கிடைத்துவிடாதா என ஆவலோடு நான் அங்குச் சென்றேன்.

என்னுடைய இதழியல் பட்டத்தை… நான், பாஸ்டன் பல்கலையில் பெற்றிருந்தேன். ஐ.நா-வில், நியூயார்க் நகரில் உள்ள சி.என்.என். நிறுவனத்தில் நான் பணியாற்றி இருந்தேன். சில காலம் சி.என்.என். நிறுவனத்தின் டெல்லி தயாரிப்பாளராகப் பணியாற்றிவிட்டு, பின்பு… அந்த வேலையிலிருந்து விலகினேன். இவற்றை எல்லாம் என்னை நேர்முகம் செய்த நபரிடம் பொறுமையாகச் சொன்னேன். அவற்றை, காதுகொடுத்து கேட்டுவிட்டு அவர் சன்னமான குரலில் என்னை நோக்கிச் சொன்னார், ‘நீங்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்று நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நீங்கள் தன்னம்பிக்கையால் மிளிர்கிறீர்கள். இந்தப் பணியிலும் நீங்கள் மின்னுவீர்கள். இந்த வேலையை நேசிக்கவும் நீங்கள் பழகிக்கொள்ளலாம். நீங்கள் நெகிழ்வான தன்மை கொண்டவராக தெரிகிறீர்கள். எனினும், உங்கள் இதயத்தின் ஓர் ஓரத்தில் இந்த வேலையை உங்களுக்குக் கொடுத்ததற்காக என்னை வெறுப்பீர்கள். உங்களின் மனமெல்லாம் செய்தி ஊடகத்தின் மீதே உள்ளது. என்னை நீங்கள் வெறுப்பதை நான் விரும்பவில்லை. இந்த வேலையை உங்களுக்கு நான் தரப்போவதில்லை.’

என்னைப்போலவே நீங்களும் இப்படிப்பட்ட நிராகரிப்பைச் சந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எந்த வேலையின் மீது நம்முடைய மனம் காதல் கொண்டிருக்கிறது என உணர இப்படிப்பட்ட நிராகரிப்புகள் உதவுகின்றன. நீங்கள் விருப்பப்பட்டுச் சேரும் பணியில் அதைவிட்டு விலக 1,000 காரணங்கள் கொட்டிக் கிடக்கும். ஆனால், அதுதான் உங்களின் மனம் விரும்புகிற வேலை என்கிற ஒரே காரணம்தான், உங்களை அந்தப் பணியில் இயங்கவைக்கும்.

நான் பைத்தியக்காரி என்று நீங்கள் உள்ளுக்குள் சபிக்கக்கூடும். பட்டம் பெறுகிற நாளில் உங்களுக்கு வேலை கிடைக்காமல் போகட்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். நான் அதற்கு மட்டும் ஆசைப்படவில்லை. ‘கேட்டேன், கேட்டேன்’ என உங்களுக்காக நான் கேட்கும் வரங்கள் சில உண்டு.

1. உங்களுக்கு மோசமான பாஸ் (Boss) கிடைக்க வேண்டும். உங்களை அழவைக்கும் ஒருவராக அவர், இருக்க வேண்டும். இது மிகக் கடுமையான பணி என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அடித்துப்பிடித்து, முந்திக்கொண்டு செய்தி சேகரிக்க வேண்டிய துறை இது. கலங்காத நெஞ்சம் கொண்டவராக நீங்கள் இருந்தாலே சாதிக்க முடியும். என்னுடைய முதல் இதழியல் பணிக்கால நினைவு என்ன தெரியுமா? நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடக வெள்ளத்தில் ஓர் ஏணியைவிட்டு தலைகுப்புற தள்ளப்பட்டதுதான். என்னுடைய மைக் என் கையிலிருந்து கீழே விழுந்து, நான் எழ கஷ்டப்பட்டுக்கொண்டு நின்ற கணத்தில் என் கேமராமேன் துளிகூட கருணை காட்டவில்லை. ‘சீக்கிரம் எழுந்துவந்து வேலையை முடிம்மா…’ என்று அவர் கத்தினார். அப்போதுதான் நான் ஓர் அடிப்படை பாடத்தை கற்றுக்கொண்டேன். வேலைக்களத்திலும், அலுவலகத்திலும் உங்களை வெளியே தள்ள முயல்கையில் முண்டியடித்து உங்களுக்கான இடத்துக்காக நீங்கள் போராட வேண்டும். அன்றைய பரபரப்பான நேர்முகத்தைத் தவறவிட்டதற்காக உங்களுடைய பாஸ், கண்டமேனிக்கு வசைபாடுவது நிகழ்ந்துவிடுமோ என அஞ்சாதீர்கள். அவர் திட்டுவதை செவிமடுங்கள், கழிப்பறைக்குச் சென்று சற்று அழுதுவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு அடுத்த போராட்டத்துக்குத் தயார் ஆகுங்கள். ‘பரவாயில்லை, அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம்…’ என்கிற பாஸ் உங்களுக்குக் கிடைத்தால்… நீங்கள் முன்னேறவே மாட்டீர்கள்.  

2. உச்சி வெயிலில் அலைந்து திரியும் அவஸ்தையான நாட்கள் நிறைய உங்களுக்கு வாய்க்கட்டும். இந்தவேளையில்… யாரோ ஒருவரின் நடைபாதையிலோ, யாரோ ஒருவரின் வீட்டு முன்னாலோ… அவர் வீட்டுக்குள் போவதற்கோ, வெளியே வருவதற்கோ காத்திருக்கும் கணங்கள் பல ஏற்படும். அப்போது வேகாத வெயிலில் நிற்க வேண்டிவரும். அப்படி நிற்கிறபோது, பல நண்பர்கள் கிடைப்பார்கள். கொளுத்தும் வெயிலில் செய்ய வேறு வேலையில்லாமல் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பிறருடன் பேசுவதுதானே ஒரே ஆறுதல்? சமயங்களில் அந்த நாளின் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கும் நபருக்கே கிட்டும். கடந்த மாதம்  ஆங் சான் சூசியின் வீட்டுக்கு அதிகாலையிலேயே சென்று வெளியில் காத்திருந்தேன். எனக்கு ஃப்ளாஷ் நியூஸ் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, வெளியே உலாவ வந்த சூசியின் நாயுடன் நட்பானேன். 

3. மோசமான பல சகாக்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். இது சாபம்போலத் தோன்றும், ஆனால், அப்படித்தான் மிகச்சிறந்த பல செய்திகள் எனக்குக் கிடைத்தன. அவர்களுக்குத் தரப்படும் பணியைச் சரியாகச் செய்யாமல் போய்… அது, நம் கைக்கு வரும்போது கச்சிதமாகச் செயலாற்ற வேண்டும். தட்டிக் கழிப்பதல்ல வெற்றி, தகிப்பான சூழலில் தங்கமாக ஒளிரவேண்டும். வாய்ப்புக் கிடைக்கும் கணத்தில் அடித்து விளையாடுங்கள். 

4. கணினியும், அலைபேசிகளும் வேலை செய்யாத இடங்களில் நீங்கள் பணியாற்ற நேரிட வேண்டும் என விரும்புகிறேன். ஆளரவமற்ற ஒரு கிராமத்துக்கு நீங்கள் செய்தி சேகரிக்கச் செல்லவேண்டும். டெட்லைன் கவலைகள் இல்லாமல், மணிக்கொரு முறை நிலவரத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலையில்லாமல், ஒரு செய்திக்காக மூன்று நாட்கள் அலைய வேண்டிய ஆனந்தத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும். நான் மீனவர்களுக்கு உதவும் கணினி நிரல் ஒன்றைப்பற்றிச் செய்தி சேகரிக்க அதிகாலை மூன்று மணிக்கு கடலுக்குச் சென்றேன். மூன்று மணிநேரம் மீனவர்களுடன் உலாவி, அலைகளின் பேரொலியில் மனம் லயித்து, வலை முழுக்க மீன்களுடன் வருவதைக் காண நேரிட்ட அந்தக் கணத்தின் ஆனந்தம் சொல்லில் அடங்காதது. கோரமண்டல கடற்கரையில் தன்னந்தனியாக இயற்கையின் பிரமாண்டத்தைக் கண்ணுற்ற அந்தக் கணம் உன்மத்தம்! 

5. விசித்திரமான, அதிர்ச்சி தரும் நபர்களோடு நிறைய நேர்முகங்கள் உங்களுக்கு வாய்க்கட்டும். அரசியல் சரித்தன்மை மிக்க, கண்ணியமான, மென்மையான ஆளுமைகள் உங்களுக்கு எப்போதும் வெற்றி பெறுவதற்கான திண்மையைத் தரமாட்டார்கள். 

6. இன்னமும் அபாயகரமான என்னுடைய ஆசைகளை நீட்டிக்கொண்டே போக முடியும். எனினும், நான் அவ்வளவு மோசமானவள் இல்லை. உங்களைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்கள் உங்களுக்குக் கிடைக்கட்டும். என்னுடைய முதல் சம்பளம் போக்குவரத்துச் செலவுக்கே சரியாக இருந்தது. என்னுடைய இரண்டாவது சம்பளம் என்னுடைய அரை வயிற்று சாப்பாட்டுக்கே போதவில்லை. இங்கே கைநிறைய சம்பளத்தை உடனே வாரித்தர மாட்டார்கள். இங்கே வேலை செய்ய ஒரே காரணம், அதன்மீதான காதல்தான். உங்களின் பெற்றோர்கள் உங்களைப் பல வகைகளில் புரிந்துகொள்ள வேண்டும். 1996 ஜம்மு – காஷ்மீர் தேர்தல்கள் என் திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால் நடைபெற்றன. ‘நீ வீட்டுக்கு கல்யாணப் புடவை எடுக்க வராவிட்டால்… கல்யாணத்தை நிறுத்திவிடுவேன்’ என்று அம்மா என்னை அச்சுறுத்தினார். என்னுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்… என்னுடைய பாஸ், ஆப்கானில் அதிபர் நஜிபுல்லா தூக்கிலிடப்பட்ட நிலையில் அங்குச் சென்று
பணியாற்றச் சொன்னார். நான் அதை ஏற்கவில்லை. உங்களுக்கு வயதாக, வயதாக புரிந்துகொள்ளும் கணவன், மனைவி, குழந்தைகள் கிடைக்கட்டும். சுனாமி தினத்தன்று மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவதாக குழந்தைகளிடம் சொல்லிவிட்டுச் சென்றேன். மதிய சாப்பாட்டுக்கு 14 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தேன். 

7. ஒருவேளை நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காமல் போனாலும், உங்களுக்குக் கிடைத்த பணியை பேரன்போடு புரிவீர்கள் என விரும்புகிறேன். ஏனெனில், உங்களின் வாழ்க்கையின் மகத்தான பாடங்கள் எதிர்பாராத தருணத்தில், எண்ணமுடியாத மனிதர்களிடம் இருந்து கிட்டும். பர்வேஸ் முஷரப் ராணுவத்தில் தன்னுடைய அன்னையின் ஆசைக்காகச் சேர்ந்தார் என்று அறிந்துகொண்டேன். ‘ஏன் அப்படி’ என அவரிடம் கேட்டேன். ‘என் அம்மாவுக்கு ராணுவச் சீருடை பிடிக்கும்’ என்றார். நரேந்திர மோடியின் அம்மா, ‘தன் மகன் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அவருடன் வாழமாட்டேன்’ என்று பிடிவாதம் பிடித்தார். தன்னை மகன் பார்த்துக் கொள்ளாமல்… தான் மகனைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை வேண்டாம் என அவர் கவலைப்பட்டார். ‘மன்மோகன் சிங், இறுதியாக குடும்பத்தோடு சுற்றுலா சென்று 40 வருடங்கள் ஆகிவிட்டன’ என அவரின் மனைவி தெரிவிக்கிறார். சி.என்.என் நிறுவனத்தை உருவாக்கிய டெட் டர்னர் இன்றுவரை மின்னஞ்சலைப் பயன்படுவதுவது இல்லை. அதை கச்சிதமாகக் கையாளும் காதலியை அவர் பெற்றுள்ளார். 

இதுதான் இறுதி இலக்கு என்று எதுவுமில்லை. இங்கே நிறைய பணி உயர்வுகள் கிடைக்காது. தெளிவான பாதை என்று எதுவுமில்லை; முன்மாதிரிகள் இல்லை; ஓய்வு வயது என்று ஒன்றில்லை. இவற்றை மனதில்கொண்டு ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். இந்தப் பயணம் மட்டுமே உங்களுக்கானது. வாழ்த்துகள்!’’