பிரிதலின் பருவகாலம்


அந்திவேளையில் மேகம் தூறுகையில்  விடைபெறல்கள் அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும். 

சொற்கள் அருகி விக்கி நிற்கையில் பிரிதல்கள் நிகழ்கின்றன. 

அலைபேசியின் ஊடாக அழுது அயர்ந்து போன முகங்கள் உடைந்து மறைகின்றன. 

புன்னகைத்தபடி கையசைத்து விலகுகையில் சன்னலோரம் பிரியமிக்க உறவொன்று  எட்டிப்பார்க்கையில் கேவல்கள் மின்னி அறைகின்றன. 

துயர்மிக்க காலங்களை கடக்கும் வண்ணம் விழாவொன்று நிகழ்கிறது. 

உடைந்தபடி உருகி வழியும் இசைச்சரம் ஒன்றின் தொடர்பறுந்து செவி துடிக்கையில் பிரிவுக்காலத்தின் வெம்மை இளைப்பாறுகிறது.

 ஒவ்வொரு பிரிதலின் கணத்தினிலும் புதிய நடுக்கங்கள் கரம் சேரும். 

ஆயினும், பிரிவைக் கடக்கும் பயணத்தில் புதிதாய் பூக்கும் தழும்பொன்றின் நேசம் மட்டும் எப்போதும்  உடனிருக்கும். – பூ கொ சரவணன்

பேரழகிகள் உலகம்


பேரழகிகள் நிரம்பிய உலகில்
குதிப்பது எளிதல்ல

அவர்கள் சில சமயம் அழுவார்கள்
சொல்லாத சொற்களில் வாழ்வின் கதைகளை
பாடம் பண்ணிக்குமைவார்கள்

வாளேந்தி வருபவர்களை
கனிவால் கையறு நிலைக்கு தள்ளுவார்கள்

உருண்டோடும் கண்ணீரில் உலகுக்கே அழுவார்கள்

எல்லாருக்கும் கவலைப்பட்டு
சிலருக்காக உழைத்து
ஊருக்காக அன்பு செய்து
பேருக்காக வாழ்ந்து

சுருக்கங்கள் தேக்கி
கதைகளின் முள்நீக்கி
வெறித்த பார்வை ஒன்றைப்பார்க்கும்
அத்தனை பேரழகிகளுக்கும் சொல்வதற்கு
ஆயிரம் கதைகள் உண்டு

சமையல் கட்டு,
அலுவலக ஒப்பனை அறை,
பேருந்து இருக்கைகள்
படுக்கையறை
என்றே வரையறுக்கப்பட்ட
பேரழகிகள் உலகத்தை
தப்பியும் எட்டாத
தாளாத வெம்மை சுடும்
அவர்கள்
வியர்வைத்துளிகள்
தெறித்த இடமெங்கும்
கருகி உதிர்கின்றன கதைகளின் சுவடுகள்
கொஞ்சம் கரிசனத்தோடு

நாளை வரை சாகாமல் இரு!


நீங்களும் தவறுகள் செய்கிறவராக இருக்கிறீர்கள்.
அதனால் தான் நாம் சமமானவர்கள்.
யாரேனும் உடைகையில்
யாரோ சிலர் நொறுக்கி விலகுகையில்
கரங்குவித்து சிரித்துவிட்டு
வெளியேறும் நமக்குப் பின்னால் பொத்தான்கள் பிய்யும் சப்தம்…
அலமாரியில் மரணத்துக்கான மலர்கள்
சாளரம் திறக்கையில் முத்தங்கள் ஏந்தியபடி
எதிர்வீட்டுப் பூனை
அதன் கைநகம் தடவி கீறல் ஒன்றைப் பெறுகையில்
எவரெவரோ நிமிர்ந்துச் சிரித்தார்கள்.
கத்தரிக்கும் வேலைகளில் கூட தெரியும்
கொலைத்தொழில் புரிவதைவிட
கோபம்கொண்டு ரசித்தபடி
ஒரு கண்ணாடியை காயப்படாமல் பொறுக்குவதாக
எச்சில் படாமல் முத்தம் தருவதாய்
வாகன நெருக்கத்தில் ஒரு மழலையின் அழுகையை கண்டுபிடிப்பதாய்
பிரியம் காட்டுகிறீர்கள் நீங்கள்..
எதனால் நாம் சமமென்று தெரியவில்லை.
அதனால்,
அதையே அடிக்கடிச் சொல்லி
நீங்கள் அழுகையில் ஒரு பேருந்தில் ஏறிப்போகிறேன் நான்.
நாளை வரை சாகாமல் இருங்கள்!

பிரியத்தை முறித்தல் சுலபம்!


ஒரு பிரியத்தை முறித்தல்
அத்தனை சுலபமாய் இருப்பதாக சொல்கிறார்கள்.
அழுகையை அடக்கியபடி ஒருவர் பிரிவது தெரியும் உனக்கு…
மரணத்தின் மவுனம் தவறவிடப்படுவது
புரியும் நமக்கு…
கடவுளின் ஆயுதங்கள் சாத்தானுக்கு கைமாறுவது
அறிந்தும் கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது…
முத்தங்கள் கொடுத்துக்கொண்ட இதழ்களில்
“இனி பார்க்க முடியாது!” என்கிற சப்தங்கள் எழுவது
கால்டாக்ஸி ஒலியில் ஒளிந்து கொள்ள பிரார்த்திக்க மட்டுமே முடிகிறது…
பரிசுப் பொருட்கள் மீண்டும் வந்து சேரும் நாளில்
முகவரி மாறியிருப்பது சொல்ல நாய்க்குட்டி மட்டுமே இருக்கும்..
ஊருக்காக வாழ்தல் என்றபடி சோறள்ளிப் பிசைகையில் கை எப்பொழுதும் போல் அலைபேசியை அனிச்சையாய் வருடுகிறது…
ஆமாம்! எத்தனை முறை முறித்தாலும் காயாமல்
கசியும் ரணத்தின் திரவத்தை
அன்பு ஏன் பசிகொண்டு கேட்கிறது?

நட்பின் காதலோடு நட்பாய் இருத்தல் !


நண்பர்களின் முன்னாள் காதலோடு நட்பாய் இருப்பது சுலபமில்லை;
பிரிந்த கதை கேட்டல் கூடாது.
தூர்ந்து போன நினைவுகளை கிளறக்கூடாது..
மீண்டும் சேருவீர்களா என்று அடிக்கடி துளைத்தல் தவிர்த்தல் நலம்…
கண்ணீர் விடுகையில், ‘அவன்/அவள் தானே காரணம்!’ என்று கொதித்தல் தவிர்க்கப் பழக வேண்டும்.
பைத்தியக்கார விடுதியின் புது இருக்கையில் அமர்ந்தபடி
தேநீர் அருந்துகையில் கத்தி ஒன்று ஏந்தி கையறுக்கிறேன் என்று அவர் சொல்கையிலும் புன்னகைக்க வேண்டும்.
‘நீ தான் என் ஒரே நண்பன்.’ என்கிற பொய்களை
உண்மையென்று நம்பி ரசிக்க வேண்டும்
கையருகே அலைபேசி வைத்துக்கொண்டு அழைப்பு வருகையில்
அலறிச் செல்ல வேண்டும்…
‘இத்தனை பாடுபடுகிறேன்’ என்று எங்கும் புலம்பாமல் பூத்தவாறே
சிரிக்கப் பழகிவிட்டால் இன்னும் சில நண்பர்களின் முன்னாள் காதலர்கள் உங்களை நாடிவரலாம்.
அல்லது காவலர் காலைத்தூக்கம் கெடுத்து குற்றப்பத்திரிக்கையில்
உங்களை இணைக்க எத்தனிக்கலாம்.

கவிக்குயில் சரோஜினி நாயுடு !


 

பிப்ரவரி 13: இந்தியாவின் கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த தின சிறப்பு பகிர்வு
 
Posted Date : 08:02 (13/02/2014)Last updated : 08:02 (13/02/2014)

சரோஜினி நாயுடு எனும் இந்தியாவின் கவிக்குயில் பிறந்த தினம் இன்று . ஆந்திராவில் வாசித்த வங்காள குடும்பத்தில் பிறந்தார் இவர்.இவரின் அப்பா ஒரு கல்லூரியை உருவாக்கி ஹைதரபாத் நகரத்தில் முதல்வராக இருந்தார் . இவரை ஒரு அறிவியல் மேதையாக்க அவர் விரும்பினார் . இவரின் உள்ளமோ கவிபாடுதலில் திளைத்தது .

மிகச்சிறிய வயதில் 1300 வரிகள் கொண்ட ஏரியின் அழகி எனும் கவிதையை இயற்றினார் அதை படித்து பார்த்து பிரமித்த ஹைதராபாத் நிஜாம் இவரை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பினார் . இங்கிலாந்திற்கு கணிதம் படிக்க போனவர் அங்கேயிருந்த இயற்கையின் வனப்பு இவரை ஆட்கொள்ள அற்புதமான் கவிதைகள் எழுதினார் ; அதைப்படித்து பார்த்த ஆர்தர் சைமன்ஸ், எட்மண்ட் கோஸ் முதலிய ஆங்கிலேய எழுத்தாளர்கள் வியந்தார்கள் . ஆங்கில மொழி தாய்மொழியாக இல்லாத அவரின் கவித்துவம் அவர்களை பிரமிக்க வைத்தது .

உடல்நிலை சரியில்லாமல் போக கணிதத்தை கைகழுவி நாடு திரும்பினார் . ஏற்கனவே வேறு சாதியை சேர்ந்த கோவிந்தசாமி நாயுடுவுடன் காதல் அரும்பி இருந்தது இவருக்கு ;வீட்டின் எதிர்ப்பை சமாளித்து அவரை கரம் பிடித்தார் . இவரின் கவிதைகளை பார்த்து அரசு கெய்சரி ஹிந்த் எனும் பட்டத்தை தந்தது . கோகலேவின் அழைப்பை ஏற்று விடுதலைப்போரில் பங்கு கொண்டார் . ஜாலியன்வாலா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன் பட்டத்தை திரும்ப தந்தார்

1925 இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார் . இந்திய பெண் ஒருவர் காங்கிரசின் தலைவரானது அதுவே முதல் முறை . அவரை காந்தி இந்தியாவின் கவிக்குயில் என அழைத்தார் . நேரு இந்திய தேசியத்தின் உதயத்தாரகை என புகழ்ந்தார் .

ஆங்கிலேய அரசை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களில் பங்குகொண்டு சிறைசென்றார் . கவிதைகள் மூலம் எழுச்சி ஏற்படுத்தினார் . “கவிஞர் என்பவனும் இந்நாட்டின் ஒரு குடிமகன் தான், அவனும் மக்களில் ஓர் அங்கம்தான், நல்லதைக் கண்டால் போற்றிப் பாடும் கவிஞன், தீமையைக் கண்டால் தீப்பந்தத்துடன் அநீதியை அழிக்க அவன் கொதித்தெழுவதை யாராலும் தடுத்துவிட முடியாது” என சொன்னவர் அவர் .

இலையுதிர்கால கீதம்

இதயத்தில் இன்பம் தேங்குதலைப்போல
மேகங்களைப் பற்றித் தொங்கி ஆடுகிறது அஸ்தமனம்
பொற்புயல் போல மேகக்குஞ்சங்கள் மினுங்க,
உருகிய அழகிய இலைகள் படபடத்து நடுங்க,
மேகத்தை காற்று வன்மையாக உலுக்குகிறது
உற்றுக் கேட்ட இதயத்துக்குப் புரிகிறது
காற்றின் மென்குரலின் நாதம்
என் இதயம் கனவுகளால் களைப்பால் கவலையால் தனிமையால் படபடத்து உதிர்கிறது இலைகளாய்
எதற்காகக் கடந்ததை எண்ணித் துயருற வேண்டும் நான்?

பாசி முடிக்கற்றையும்,சிறுநீர் கழிக்கும் சிறுவனும் !


அறுந்துவிழும் அத்தனை 
சொல்லிலும் ஞாபகக்கயிற்றின் இழை 
தெரிகிறது. 
செய்து முடிக்கப்பட்ட துரோகங்களை துடைத்த 
இடங்களில் படர்ந்திருக்கும் பாசியை 
அலையும் முடிக்கற்றை போல 
தள்ளிவிட்டு முத்தங்கள் பரிமாறிக்கொள்கையில்
பேருந்து விளக்குகளின் முகங்களில் இருந்து 
கத்திகள் உயிரறுத்து
மவுனம் சுவைத்து சிரிக்கின்றன 
கோப்பை வன்மத்தை 
தரையில் ஊற்றிவிட்டு நடக்கத்தான் முடியவில்லை 
மருகி கரையும் நகரக்காகங்களோடு
நாய்களும் சேர்ந்து சப்தவெளி கிழிக்கையில் 
புரட்சிகள் முடிந்து நிறைகிறது இரவு !
சோற்றுத்தட்டில் சிறுநீர் பொழியும் சிறுவனின் அப்பாவித்தனமாய்
யாவும் தெரிவதை என்னவென்று சொல்ல 

ஒரு தேவதையும் சில மரணங்களும்


அது அனேகமாக ஒரு இலையுதிர் காலம்
அம்மா இலைகளை சன்னமாக சறுக்கி தள்ளினாள்
அவளின் கரங்களில் வெடிப்புகளில்
கந்தக பூமி மழை
போல பாய்கிறது
வியர்வையின்
துளிகள்
நீர்க்கும் வலிகளை சற்றே நீவிப்பாருங்கள்
நீங்கள் பிரசவ வேதனையை உணர்வீர்கள்
கடக்கட்டும்
அக்காவின் சமையல் வேலைகளுக்கு
இடையே அவள் கண்கள்
கலர்கலராக பறக்கும் பட்டத்தை காதலிப்பதை
என்றாவது அவதானித்து
அந்த நூலை கொடுத்து இருக்கிறீர்களா’
அதை கொடுக்காமல் போனதால்
தான் அந்நூல் அவளின் கனவின் தூக்கு
கயிறானது என அவளின் தேய்ந்த கொலுசு முணுமுணுக்கிறது

அழகான செல்ல மகளின்
சுவர் ஓவியங்களை கிறுக்கல் என திட்டி
தார்க்குச்சியால்
நீங்கள் விளாசிய தருணத்தில்
தான் ப்ரீடா மரணித்து போனாள் அவளுள்

எதிர் வீட்டு அம்மாளின் கோலத்தை
வண்டியேற்றி அழிக்கிற  தருணத்தில்
அவளின் அத்தனை முன்னெடுப்புகளும்
முடுக்கென்று முறிந்துப்போகிறது

மனைவி ஆசையாக வாங்கிய புடவையை
சற்றும் ஆர்வம் இல்லாமல் செய்தித்தாளை பார்க்கிற
ஏளனத்தோடு பார்க்கிற பார்வையில்
அவளின் புன்னகை  மகிழ்வற்று மரணிக்கிறது

தெருவில் சேலையின் கிழிசலை மறைத்து
காமக்கழுகுகளின்
உணவாக எத்தனிக்கும் கொக்கிப்புழு
வாழ்வு வாழும்
யுவதியின் கனவுகள்
வண்ணமயமானவை
அவற்றில் சேறள்ளி
எவ்வளவு இயல்பாக
வேசி என்கிற ஒற்றைசொல்லில்
தெளிக்கிறோம் நாம்

ஒற்றை பார்வை,
ஒரு சொல் ,
ஒரு வேக முடுக்கம்,
ஒரு விளாசல்
எல்லாவற்றையும் ஒரே நொடியில் முடித்துவிடும் உங்களுக்கு தெரியுமா அங்கே ஒரு உயிர்ப்பு
ஒரு பெண்ணின் மென்மை மரணிக்கிறது என்று ?