தமிழ்த்தாய் வாழ்த்து ‘மாநிலப் பாடலான’ வரலாறு.


‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின்  பாயிரத்தில் உள்ளது .  பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர்.  கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார்.    தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக  நூலிற்கு  ஆங்கிலம், தமிழ்  என்று  இரு  மொழிகளிலும்  முன்னுரை எழுதியுள்ளார்.   


தன்னுடைய  முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது”  என்று  வருந்துகிறார்.  

ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை


பாயிரத்தில்  ‘தமிழ் தெய்வ  வணக்கம்’ என்று  தமிழை  தெய்வமாக  போற்றிப் பரவுகிறார்.  கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில்  தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு  என்று பலவாறு  போற்றுகிறார். இப்பாடலில்  வழங்கி வரும் முதன்மையான கருத்துகள்  என்று சிலவற்றைப்  பேராசிரியர் கைலாசபதி  அடையாளப்படுத்துகிறார். அவை,

  (அ) இந்திய நாட்டில்  தெக்கணம்  திலகமாகத்  திகழும்  பகுதி. 

(ஆ) திராவிடம் முதன்மையான  சிறப்புமிக்கதாகும் 

(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும்  புகழும், பெருமையும் மிக்கது

(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை  போன்றது தமிழ்

(உ) தமிழே  திராவிட  மொழிகளுக்கு  தாய்

(ஊ) ஆரியம்  போல்  வழக்கழியாமல்  சீரிளமை  மிக்க  மொழியாகத்  தமிழ்  திகழ்கிறது 


“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்  எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்   கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்  உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”


‘நீராருங்  கடலுடுத்த’ எனும்  துவங்கும்  இப்பாடல்  முந்தைய தமிழ்  படைப்புகளில்  இருந்து பல வகைகளில்  வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில்  புதிய பாய்ச்சலுக்கு  அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின்  பார்வையில்  தமிழ்த்தேசியத்திற்கான  முன்னோடிப்  பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர்  பிரேர்னா  சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர்  நலனும்  கைகோர்க்கும்  இடம் என்கிறார். தமிழ்த்தாயின்  உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று  சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர்   சுமதி  ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார்   கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற  மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.

அவ்வரிகள்,  


வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள் 

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி 

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள

 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.


இப்பாடலுக்கு  பிறகே  தமிழைத் தாயாக, தெய்வமாக  போற்றிப்பரவுவது  பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக  போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில்  எண்ணற்ற  பாடல்கள்  தமிழன்னையை  போற்றி  பாடப்பட்டன. இவற்றுக்கான  முதல்  வித்து  ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’ ஆகும். 

நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்


கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய  மூன்றாம்     ஆண்டறிக்கையை  1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப்  பற்றி  பேசுகிறது:

பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’  என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை  ஆய்வாளர்  கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார். 

1913-ம் ஆண்டறிக்கை


இப்பாடல் படிகளை  கரந்தை  தமிழ்ச்சங்கத்தை  சேர்ந்த  உமாமகேசுவரனார்  பல நூறு  பிரதிகள்  அச்சிட்டு  கொண்டு  சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும்  பாடப்பட்டது. பல்வேறு  தமிழ்ச்சங்க  கூட்டங்களில்  இப்பாடல்  ஒலித்தது. தனித்தமிழ்  மாநாடுகளில்  தவறாமல்  இடம்பெற்றது.  .தனித்தமிழ் மாநாடுகள்,  பாடநூல்களில்  இடம்பெற்றது. தனிநாயகம்  அடிகள் “இப்பாடலின்  வரிகள் கடந்த  அறுபது  ஆண்டுகளாக  எதிரொலித்துக்  கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான  பாடல்  எனும்  அதன்  பெருமையை  விஞ்சும்  படைப்பு  எதுவுமில்லை”  என்று  1963-ல் புகழ்ந்தார். 

இப்பாடலை  தமிழக  அரசு  அனைவரும்  பாடும்வண்ணம்  வழிவகை  செய்ய  வேண்டும்  என்கிற  கோரிக்கைகள்  அறிஞர் அண்ணா  ஆட்சிக்காலத்தில்  வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா  இயற்கை  எய்திவிட, கலைஞர்  கருணாநிதி  அப்பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கரந்தைத்  தமிழ்ச்சங்க  விழாக்களிலேயே  முதல்  ஆறு  வரிகள்  மட்டுமே  பாடப்பட்டு  வந்தன  என்பதை  சுட்டிக்காட்டுகிறார் கரந்தை  ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான  விருதளிப்பு  விழாவில்  தமிழ்நாட்டின் வழிபாட்டுப்  பாடலாக   ‘நீராருங் கடலுடுத்த’ அமையும்  என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

புகைப்பட நன்றி: kalaignar.dmk.in

 பிற  மொழிகளை  தாழ்த்திப்  பேசும்  வரிகளைத்  தவிர்த்து  பாடலை  அமைத்துக்  கொண்டதாக  அவர் குறிப்பிட்டார். ஆரியம்  போல்  வழக்கழிந்து  முதலிய  வரிகளும்  சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத்  தமிழ்ச்சங்கத்தின்  வழக்கத்தை  அடியொற்றியே  இப்பாடல் வரிகள்  அமைந்திருப்பதையும் கவனத்தில்  கொள்ள  வேண்டியிருக்கிறது.  மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை  தமிழ்நாட்டின்  வழிபாட்டுப்  பாடலாக  ஆக்கிய  அரசாணையை  கூர்ந்து  நோக்கினால்  இன்னொன்றும்  புலப்படும்.

 ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை  எண்  1393-ல் தமிழ்நாடு  முழுமைக்கும்  பொதுவாக  வழிபாட்டுப்  பாடல்  அமையும்  வண்ணமே  ‘நீராருங்  கடலுடுத்த ‘  இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட  நம்பிக்கையோடு’  தொடர்புடையதாக    இல்லாத  வண்ணம்  இப்பாடல் இருக்குமாறு  அமைந்திருப்பதாகவும்  அரசாணையில்  சொல்லப்பட்டு  இருந்தது.  பல்வேறு  தமிழ்நாட்டு  நிகழ்ச்சிகளில்  இந்து  மதப்  பாடல்களும்,  வடமொழி,தெலுங்கு  பாடல்களும்  ஆதிக்கம்  செலுத்திக்கொண்டிருந்த  போது  இந்த  அறிவிப்பு அவற்றை  மாற்றியது. மேலும், பாயிரத்தில்  உள்ள  சிவனைப்பற்றிய  குறிப்பு இடம்பெறாமல்   போனதையும், ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’  ஆனது  ‘தமிழ்த்தாய்  வாழ்த்தாக’ மாறியதையும்  மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ்  அடையாளத்தை  முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது.  (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )


மேற்சொன்ன  அரசாணையை  ஒட்டி 23 நவம்பர்  1970-ல்  அரசாணை  ஒன்று  வெளியிடப்பட்டது.  அதில்  ‘நீராருங் கடலுடுத்த ….’  வழிபாட்டுப்பாடலாக  விழாக்களின்  துவக்கத்தில்  பாடப்பட  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி  நிறுவனங்கள், உள்ளாட்சி  அமைப்புகள்  நடத்தும் நிகழ்ச்சிகளில்  இப்பாடல்  மோகன  ராகத்தில், திஸ்ர  தாளத்தில்  இசைக்கப்பட  வேண்டும்  என்றும் கூறப்பட்டு  இருந்தது.

Memo no. 3584/70-4

காஞ்சி  மடாதிபதி  விஜேயந்திரர்  கலந்து   கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ இசைக்கப்பட்ட  போது  கண்மூடி அமர்ந்து  இருந்தார். இதனையடுத்து  கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில்  உள்ள காஞ்சி  மடத்தின் கிளையில்  நுழைந்தார். அதற்கு  மட  மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை  கண் இளங்கோ  மிரட்டியதாக  .  மடத்தின்  மேலாளர்  காவல் துறையில்  புகார்  அளித்து  இருந்தார்.  இது தொடர்பாக  தன்மீது  பதியப்பட்ட   முதல் தகவல்  அறிக்கையை ரத்து  செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை  கண்  இளங்கோ  நாடினார். 


இவ்வழக்கில்  நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்  மேற்குறிப்பிட்ட இரண்டு  அரசாணைகள்  1393,  3584/70-4  ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ வழிபாட்டுப்  பாடலாகவே  இந்த  அரசாணைகள்  வரையறுத்து  இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய்  வாழ்த்து  வழிபாட்டுப்பாடல், அது, கீதம்  அன்று”. என்று குறிப்பிட்டார்.  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படும்  போது   எழுந்து நிற்க  வேண்டும்  என்று எந்தச் சட்டமும், அரசாணையும்  இல்லை என்பதையும்  அத்தீர்ப்பில்  கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய்  வாழ்த்திற்கு  உச்சபட்ச  மரியாதையும், மதிப்பும்  தரவேண்டும். தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும்  போது  கூட்டத்தினர் எழுந்து நிற்பது  மரபாக  இருக்கிறது  என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில்  தான்  மரியாதை  செலுத்த வேண்டும் என்று   கேள்வி எழுப்பிக்கொள்ள  வேண்டும்.   பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும்  நாம் கொண்டாடும்  போது, ஒரே வழியில்  தான் மரியாதை செலுத்த  வேண்டும்  என்று வலியுறுத்துவது போலித்தனமானது.  …..  
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு  ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு  எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி  எளிய  வாழ்வினையே   வாழ்கிறார்.அவர்  வழிபாட்டில்   ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான  நிலையில் இருப்பார். தமிழ்த்தாய்  வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால்  சந்நியாசி  தியான  நிலையில் அமர்ந்து இருப்பது  நிச்சயம்  நியாயமானது. இந்த  நிகழ்வில், மடாதிபதி தியான  நிலையில்  அமர்ந்து  கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும்   செலுத்தும் விதமாகும்.”  என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி


இதனையடுத்து, தமிழ்நாடு  அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய்  வாழ்த்தின்  தோற்றம், வளர்ச்சி,  அதனை அரசு  நிகழ்ச்சிகளில்  விழாவின்  துவக்கத்தில்  பாடவேண்டும் என்று ஆணையிட்ட  அரசாணைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக  அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில்  அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு  அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள் உள்ளிட்ட பொது  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு  முன்பு தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாயம்  பாடப்பட  வேண்டும் என்றும், தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும் போது  அனைவரும்  தவறாமல் எழுந்து  நிற்க  வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல்  பாடப்படும்  போது  எழுந்து  நிற்பதில்  இருந்து மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணித்  தாய்மார்கள்  ஆகியோருக்கு விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

 சான்றுகள்/ உதவியவை :

1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm

2. மனோன்மணியம்  சுந்தரனாரின்  இன்னொரு  பக்கம் – பேராசிரியர்   அ  கா பெருமாள் 

3. நீராருங் கடலுடுத்த –  கரந்தை ஜெயக்குமார்

 4.   ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture  Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam

 5.  ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy 

6. தமிழ்நாடு அரசாணை  நிலை எண் 1393, பொதுத்  (அரசியல்) துறை, 17.06.1970

7. தமிழ்நாடு அரசாணை   எண் 3584/70-4, 23.11.1970 

8. தமிழ்நாடு  அரசாணை  நிலை  எண் 1037, 17.12.2021 

 9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296

10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy

11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy  Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725

12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123

13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021

தமிழ் விருப்பப்பாடம் விடைத்தாள்கள், குறிப்புகள்


குடிமைப்பணித் தேர்வுக்கான தமிழ் விருப்பப்பாடத்திற்கான குறிப்புகள் இணையத்தில் அரிதாகவே கிடைக்கின்றன. தமிழ்க்கல்வி தளம் , tamilvu விதிவிலக்கு.

தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விடைத்தாள்கள் எப்படி பதில்களை எழுதலாம் என்பதைக் குறித்து ஓரளவிற்கு புரிதலை வழங்கும். இவை திசைகாட்டியே அன்றி, முற்றுமுடிவான ஆகச்சிறந்த விடைகளல்ல. இன்னமும் சிறப்பான விடைகளை எழுதவும், செறிவான குறிப்புகளைத் தேடிக்கண்டிடவும் இவை உதவுமென நம்புகிறேன். கையெழுத்து சற்று கிறுக்கலாக இருக்கும். பொறுத்தருள்க. தேர்விற்குத் தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். நன்றி!

https://drive.google.com/folderview?id=1eiYXSoc1WScTHkzTiu6cJTUwgUacnTsU

தமிழ்க்கல்வி தளத்தின் குறிப்புகள்:

✍UPSC தமிழ் விருப்ப பாடம்✍

🌾 அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு 🌾

🌾தமிழ் விருப்ப பாடத்திற்குத் தேவையான கட்டுரைகள்.🌾

https://www.tamilkalvi.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/

🌾 திரு. நாகு அய்யா அவர்களின் ஒலிப்பதிவு

தமிழ் தேர்வுத் தாள் ஒலிப்பதிவு

🌾CSE Mains- Tamil Optional Previous Year Question Papers

CSE Mains- Optional Previous Year Question Papers

👑முதன்மைத் தேர்வு👑

👑தமிழ்க் கல்வி👑

Tamilvu தளம்: http://www.tamilvu.org/ta/content/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

தமிழ் விருப்பப்பாடத்தை அணுகுவது எப்படி- உரை: https://m.soundcloud.com/user-894951643/preparing-for-upsc-literature-of-tamil-optional-without-fear (Headset அணிந்து கேட்கவும்)

தமிழ்ப்பற்றும், மொழி அரசியலும்


பேராசியர் சுமதி ராமசுவாமி தமிழ்ப்பற்றின் நவீன வரலாற்றை ‘Passions of the tongue’ என்கிற தலைப்பில் எழுதினார். அந்நூலை மொழிபெயர்க்க முயன்று சில காரணங்களால் நின்று போனது. அந்நூலின் முன்னுரை மொழி அரசியலின் ஆழ அகலங்களை கண்முன் நிறுத்த முனைகிறது. வாசித்துப் பாருங்கள். ஆங்கில மூலத்தினை இங்கு படிக்கலாம்: https://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7&brand=ucpress
 
இல்லங்களுக்கு இடையில், மொழிகளுக்கு இடையில்:
 
மொழிப்பற்றைக் குறித்த இந்தப் புத்தகத்தை மொழிகளின் மீதான என் காதலைப் பற்றிய ஒரு வாக்குமூலத்தோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும். இன்னமும் நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்வதென்றால் எனக்கு எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் மீது மட்டும் தனித்த பற்றில்லை. புதுத் தில்லியில் பல்வேறு மொழிகள், லயம் மிக்க ஒலிக்குறிப்புகள் இவற்றால் சூழப்பட்ட வீட்டில் வளர்ந்தேன். மொழியியல் ரீதியாக என்னுடைய வீடு பலதரப்பட்ட மொழிகளின் சங்கமமாக இருந்தது. என்னுடைய வீடு தற்கால பாணியில் சொல்வது என்றால், மொழியளவில் மட்டுமேனும் நவநாகரீகப் பண்புடையதாகத் திகழ்ந்தது. என் தாய் தமிழ் பேசுவதைக் கேட்டபடி வளர்ந்தேன். வழக்கப்படி, தந்தையும் தமிழிலேயே பேசினார். என் தந்தை கன்னட மொழியில் சரளமாகத் தன்னுடைய உடன்பிறந்தவர்களோடு உரையாடுபவராக இருந்தார். பெங்களூரில் இருந்த அவரின் நிறுவனத்தைக் கன்னட மொழியைக் கொண்டே அவர் நிர்வகித்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு பிறந்து பெங்களூரில் வளர்ந்த என் தந்தை கன்னடத்திலேயே தான் கணக்குப் போடுவதாக, ஏன் கனவு கூடக் காண்பதாக வலியுறுத்தி சொல்வார். பெரும்பாலான பிராமணர்கள் வீட்டில் நடப்பதை போல, ஆறுவயது முதல் வீட்டில் இறை வழிபாட்டிற்காக எனக்குப் போதிக்கப்பட்ட மந்திரங்களின் மூலம் சம்ஸ்கிருத அறிமுகமும் கிட்டியது. பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் வளர்ந்த இளம் பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் நடப்பதை போல, நானும் ‘இந்திய கலாசாரத்தை’ காத்தபடியே, நவீனமானவளாக, மேற்கத்திய தாக்கம் கொண்டவளாக மாறவேண்டிய சுமைக்கு ஆளானேன்.
Image result for சுமதி ராமஸ்வாமி
 
ஏழு வயது இருக்கும் பொழுது, இந்திய பாரம்பரிய இசை வகைகளில் ஒன்றான கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டேன். இவ்வாறு தெலுங்கு மொழியின் ஒலிக்குறிப்புகளுக்கு அறிமுகப்படுதப்பட்ட நான் பொருள் புரியாமலே அப்பாடல்களைக் கற்றுக் கொண்டேன். இன்றுவரை என்னுடைய இசைத்தட்டுக்களில் தெலுங்கு பாடல்களை இழைய விட்டுக் கசிகிற கணங்கள் உண்டு. என்னுடைய பள்ளிக்கல்வியின் மொழியாகவும், தனிப்பட்ட வாசிப்பு இன்பத்தின் மூலமாகவும், குடும்பத்தினர், நண்பர்களோடு இயல்பாக உரையாடும் மொழியாகவும் இந்திய ஆங்கிலம் திகழ்ந்தது. டெல்லியின் கடைகளில் பேரம் பேசவும், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை ரசிக்கவும் இந்தி உதவியது. இந்திப் பாடல்கள், திரைப்படங்களைக் கண்டு களிப்பது முன்னைப் போல இல்லாவிட்டாலும் இன்னமும் தொடரவே செய்கிறது. இந்த இந்திப் படங்களைப் பார்த்ததும், டெல்லியின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்ததும் ஒரு பயனைத் தந்தது. இந்தி மொழி பேசுபவர்களோடு நெருங்கிய, இணக்கமான கடந்தகாலத் தொடர்பு கொண்ட உருது மொழியோடு அறிமுகத்தை என்னை அறியாமலே நான் பெற்றதை பின்னரே உணர்ந்தேன்.
 
ஆக, நான் புழங்கிய இந்த மொழிக் குடும்பத்தில் என்னுடைய ‘தாய் மொழியாக’ கருதப்பட்ட தமிழின் இடம் என்ன? தமிழைப் பள்ளியில் நான் கற்கவில்லை. எனக்குத் தமிழை வாசிக்கவும் தெரியாது. தமிழைப் பொது இடத்தில் பேசவோ, பிறர் பேசி கேட்கவோ இல்லை. வீட்டில் தமிழைத் தொடர்ந்து பயன்படுத்தினோம் என்றாலும் ஆங்கிலமும், இந்தியும் அவ்வப்பொழுது உள்ளே நுழைந்து கொள்ளும். தமிழ் குறித்து இன்றைக்குத் தேர்ந்த அறிவிருப்பதால் நாங்கள் வீட்டில் பேசிய தமிழ்மொழி பெருமளவுக்குச் சம்ஸ்கிருதமயமானதாக இருந்தது எனச் சொல்ல முடியும்.
Image may contain: 1 person
.
ஒற்றை மொழி ஆதிக்கம் செலுத்திய சுற்றுப்புறங்களில் பன்மொழி புலமை கொண்ட வினோத ஜந்துவாக நான் வளர்ந்ததாக உங்களுக்குத் தோன்றலாம். எனினும், இந்தியாவின் நகரப்புறங்களில் வாழும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இது போன்றே பல மொழிகளைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்துவதை உணர்வார்கள். பயன்படுத்துகிற மொழிகள் நபருக்கு, நபர் வேறுபடும் என்றாலும் பலமொழிகளை எதிர்கொள்ளும் அனுபவம் எல்லாருக்கும் உரியது என அழுத்திச் சொல்வேன். என்னுடைய பன்மொழித் திறன்கள் இந்திய துணைக்கண்டத்தில் பன்மொழிகளின் ஆழமான வரலாற்றின் பிரதிபலிப்பு எனலாம். இந்த வரலாறு இடம்பெயர்ந்து, வெவ்வேறு ஊர்களில் குடிபெயர்ந்த குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்திற்குள், வீட்டுக்குள் மட்டும் தங்களுடைய மொழியைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடாகும். தாறுமாறாக அமல்படுத்தப்பட்டாலும் தேசிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய குடிமகனையும் குறைந்த பட்சம் மூன்று மொழிகளை (தாய்மொழி/வட்டார மொழி, இந்தி, ஆங்கிலம்) கற்கவேண்டும் என எதிர்பார்ப்பதன் விளைவுமே எனக்குக் கிடைத்த இத்தனை மொழி அறிமுகம். எனினும், என்னுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் துல்லியமாகக் காட்டுவதைப் போல மொழிக்கொள்கை மூன்று மொழிகளை வளர்க்கும் என்கிற அரசின் நம்பிக்கைக்கு மாறாக வெவ்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டது.
 
அடுக்கிக்கொண்டே போகும் அந்தச் சிக்கல்களில் சில: எப்படித் தாய் மொழியை வரையறுப்பது? ஆங்கிலமும், இந்தியும் மரியாதை, வருமானம், அதிகாரம் ஆகியவற்றின் மொழிகளாகத் திகழும் சூழலில் எப்படித் தாய் மொழியை வளர்ப்பது? ஆங்கிலத்தைக் காலனிய மேற்கின் நீட்சியாகப் பார்க்கும் தேசியவாத சக்திகளை மீறி எப்படி வளர்த்து எடுப்பது? இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தி, ஒரு பகுதியின் மொழியை ஒட்டுமொத்த இந்தியாவின் மீது திணிக்கும் உள்நோக்கம் கொண்டது என்று எழுந்த எதிர்ப்புகளை எப்படித் தணிப்பது? இந்த மொழிப்போர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன என்பது நவீன இந்தியாவின் மொழிகளின் கலாசார அரசியல் குறித்த என் ஆர்வத்தைக் கூட்டின.
என்னைப்போன்ற வர்க்கம், ஜாதி, கல்விப் பின்புலத்தில் இருந்து எழும் இந்தியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி கொண்டவர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
 
என்னுடைய அதிகாரப் பூர்வ தாய்மொழியாகத் திகழ்ந்தாலும் தமிழானது நான் இயங்கிய மொழிப் பொருளாதாரத்தின் ஓரத்திலேயே இருந்தது. தமிழ் குறித்து ஆய்வு செய்ய என்னுடைய அறிவுசார் தேடல் திரும்பியதே ஆச்சரியம் தருகிற திருப்பமாகும். இந்தியும், ஆங்கிலமும் பேசும் என்னுடைய பள்ளியிலிருந்து நான் வீட்டிற்கு ஐந்தாவது படிக்கும் பொழுது வந்து சேர்ந்தேன். அப்பொழுது, “நாம்பலாம் தமிழா?” என என் அன்னையிடம் மழலைத் தமிழில் நான் கேட்ட தருணத்தில் தான் என்னுடைய வருங்கால அறிவுலகின் வளர்ச்சிக்கான விதைகள் ஊன்றப்பட்டதாக என்னுடைய அன்னை ஆணித்தரமாகப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். என் நினைவோ வேறொன்றைச் சுட்டுகிறது. மெட்ராஸில் இருந்த என்னுடைய பாட்டி ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்துக்கும் எழுதிய கடிதத்தைப் புரிந்து கொள்ளும் பதின்பருவத்து வேட்கையில் என்னுடைய தமிழ் சார்ந்த தேடல் துவங்கியது. ஆங்கிலம், தமிழ் கலந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் எனக்குப் புரிபடாத புதிராகவே இருந்தது. கடிதத்தின் துவக்கத்தில் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான
உடல்நலம் சார்ந்த விசாரிப்புகளுக்குப் பின்னர்த் தமிழ் மொழிக்கு மாறிவிடும். சுவாரசியம் மிகுந்த, குடும்ப ரகசியங்கள், மகிழ்ச்சிகள் என்று அமைந்த குடும்ப வாழ்க்கையின் முக்கியமான தகவல்கள் தமிழில் அமைந்திருக்கும். இது என்னுடைய மொழியறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. கவர்ச்சிமிகுந்த குடும்ப அரசியலின் கூறுகளை நான் புரிந்து கொள்ள முடியாதவாறு சாதுரியமாகத் தடுத்த மொழி அரசியலை தாண்டுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டேன். பதினைந்து வயதில் தமிழை எழுதக் கற்றுக் கொண்டேன். மெதுவாக, ஆனால், உறுதியாக நான் தமிழில் வாசிக்கப் பழகிக் கொண்டேன். என்னுடைய உடன்பிறந்தவர்களுக்கு ஆர்வமூட்டும் அந்தக் கடிதங்களைப் படித்துக் காட்டும் பணியை நானே செய்தேன். இன்றுவரை அவர்களுக்குத் தமிழைப் படிக்கத் தெரியாது.
 
நான் இப்பொழுது கோட்பாட்டு ரீதியாக விளக்கக் கூடிய மொழி அரசியலின் நேரடி அனுபவத்தை அப்பொழுதுதான் பெற்றேன். பல்வேறு மொழிகள் குடும்பத்திலோ, நாட்டிலோ பெருகுகையில் மொழி மூலங்களைப் பயன்படுத்தித் தங்களுக்கு நெருக்கமான அரசியலை அரசியலை தங்களுக்கு மட்டும் புரியும் மொழியில் மேற்கொள்வதன் மூலம் பரிச்சயம் இல்லாத மற்ற மொழிக்காரர்களை அந்நியப்படுத்தும் அரசியலின் அறிமுகம் வீட்டிலேயே கிட்டியது.
என்னுடைய இளங்கலை படிப்பை டெல்லி பல்கலையிலும், மேற்படிப்பை ஜவகர்லால் நேரு பல்கலையிலும் படிக்கையில் என் அறிவுசார் ஆர்வம் தமிழ் பேசும் இந்தியாவின் வரலாறுகள், பண்பாடுகள் மீது அதிகரித்தது. இந்தியாவின் தலைசிறந்த இரு பல்கலையிலும், மிகச் சிறந்த சில வரலாற்றாசிரியர்களுடன் வரலாற்றைக் கற்றேன். அது இன்றுவரை எனக்குப் பெருமளவில் உதவுகிறது. இந்தியத் தலைநகரில் இந்தியாவின் புவியியல், அரசியல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு போலத் தென்னிந்தியா சார்ந்த வரலாற்றுத் துறை ஆர்வம் பெருமளவில் இல்லாமல் இருந்தது என்னைச் சஞ்சலப்படுத்தியது. தமிழகத்தில் வலிமைமிகுந்த பிராமண எதிர்ப்பு இயக்கத்துக்குப் பின்னால், பிறப்பால் பிராமணப் பெண்ணான என்னுடய தமிழ் சார்ந்த ஆர்வத்தை எனது தாய்வீடாக நான் கருதிய தமிழ்நாடு வரவேற்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து என்னைப் பெனிசிலுவேனியா பல்கலையின் மானுடவியல் துறைக்கும், பின்னர்ப் பெர்க்லியில் உள்ள கலிபோர்னிய பல்கலையின் வரலாற்றுத் துறைக்கும் கொண்டு சென்றது. நான் தட்டுத்தடுமாறிய என் “தாய்மொழி”யை என் வீடு, தாய் ஆகியோரை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்த நாட்டில் முறையாகக் கற்றுக்கொண்டேன் என்பது தமிழுடனான என்னுடைய நம்பிக்கையற்ற காதலின் வரலாற்றுக்குப் பொருத்தமான முடிவாகும்.
 
நான் ஒரு மொழியைப்பேசி அதைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒற்றை அடையாளத்தோடு வளரவில்லை. பலதரப்பட்ட, சமயங்களில் முழுமையற்ற வெவ்வேறு சூழல்களில் நான் பயன்படுத்திக் கொள்ளும் வசதியான (சுமையான?) அடையாளங்களோடு வளர்ந்தேன். ஒருபுறம், இதனால் பல மொழிகளுக்கும், பல வீடுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டதாக அடிக்கடி மோசமாக உணர்ந்தேன். இதற்கு நேர்மாறாக, பல மொழிகள், பல இடங்கள், பல மனிதர்களிடையே இருத்தல் ஆகியவற்றின் ஆனந்தங்கள், சாத்தியங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றையும் சிறப்பாக அனுபவித்தேன். இந்த வாழ்க்கை எனக்குப் பெண்ணியத் தத்துவவியல் அறிஞர் ரோசி ப்ராய்டோட்டியின் கருத்தாக்கத்தை நினைவுபடுத்துகிறது.
 
இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த அவர் பிரெஞ்சு மொழியில் கல்வி கற்றார். இப்படிப்பட்ட பல்வேறு அடையாளங்கள் தாங்கிய வாழ்க்கையை அவர், ‘நாடோடி உணர்வு நிலை’ என்கிறார். இது என்னுடைய அடையாளங்களுக்கு இடையேயான வாழ்க்கையை எதிரொலிப்பது போல உள்ளது. 1994-ல் ‘Nomadic Subjects’ எனும் தனிக்கட்டுரையில் இப்படிப்பட்ட உணர்வுநிலை, ‘மையம், அது சார்ந்த குறிப்பிட்ட இடங்கள், குறிப்பிட்ட வகையான அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எனும் கருதுகோள்களை முழுமையாக மூழ்கடிக்கிற ஒன்றாக உள்ளது’ எனக் கருதுகிறார். மேலும், இந்த உணர்வுநிலை சமூகம் வரையறுத்து இருக்கும் சிந்தனை, செயல்பாடுகளோடு பொருந்திப் போவதை தன்னளவில் எதிர்க்கிறது, மேலும், ஒருவரை அடையாளப்படுத்தும் பெரும்பான்மை வழிமுறைகளின் ஆதிக்கத்தில் கரைந்துவிடாமல் தன்னை இந்த உணர்வுநிலை காத்துக் கொள்கிறது என்கிறார்.
 
நாடு கடத்தப்பட்ட, இடம் பெயர்ந்த மக்களின் உணர்வுநிலையில் காணப்படும் பிரிவு, இழப்பு, தாய்வீடு திரும்புதல் முதலிய உணர்வு நிலைகளுக்கு மாறாக, ஒரு நாடோடி தன்னுடைய உலகத்தோடு கொண்டிருக்கும் உறவானது, ரோசி ப்ராய்டோட்டியின் பார்வையில் ‘தோன்றி மறையும் பிணைப்பு’ மற்றும் ‘சுழற்சியில் அடிக்கடி தோன்றும்’ உறவாகும். இந்த நாடோடி பாணியானது, கடந்த காலத்தின் நிலை, பெருமிதம், ஒற்றைத்தன்மை ஆகியவற்றில் மனதை பறிகொடுத்து நிலைத்து நிற்பதில்லை. இந்த நாடோடித்தன்மை பன்மொழிப்புலமையோடு கைகோர்த்துப் பயணிக்கிறது. நிலையான அடையாளங்கள், தாய் மொழிகள் குறித்து ஆரோக்கியமான சந்தேகம் கொள்கிறது. நாடோடியான பன்மொழிப் புலமையாளர் பல்வேறு மொழி அடிப்படைகளிடம் மென்மையான நெருக்கம் கொண்டிருப்பதால் எந்த வகையான மொழி அல்லது இனத் தூய்மையை நாடுவதில்லையோ? என ரோசி ப்ராய்டோட்டி வினா எழுப்புகிறார். (Braidotti 1994: 8, 28).
 
இந்த ஆயிரம் ஆண்டுகளின் கேள்விகேட்கும் சிந்தனையின் முன்னுதாரணமான வடிவமாக நாடோடித்தன்மையைக் கருதும் ப்ராய்டோட்டி யின் எல்லாக் கருத்துக்களோடும் நான் ஒப்ப வேண்டியதில்லை. அவருடைய ஆர்வமூட்டும் பரிந்துரைகளின் தத்துவத் தாக்கங்கள் குறித்து நுண்ணாய்வு செய்யப்போவதில்லை. பின்காலனிய காலத்தில் பல்வேறு மொழிகள், வீடுகளுக்கு இடையே வாழும் நாடுகளைக் கடந்த நாடோடி மக்களின் வாழ்க்கை முடக்கிப்போடும் பயனற்றவைகளின் தொகுப்பாக அல்லாமல், பல முக்கியமான வாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகக் காண முடியும் என எனக்கு எச்சரித்த படைப்பாகவே காண்கிறேன். புதுப்பித்துக் கொள்ளும், மோசமாகிக் கொண்டே இருக்கும் தேசியம், பிரிவினைவாதம், இடப்பற்று சார்ந்த உணர்வுநிலைகள் மிகுந்த இந்த வரலாற்றின் குறிப்பிட்ட தருணத்தில் அவற்றைக் கவனத்தோடு அணுக இந்த நாடோடி உணர்வுநிலை உதவுகிறது. இதனால் ப்ராய்டோட்டி சொல்வதைப்போல ‘ஏற்படுத்தப்பட்ட பகுப்புகளிடையேவும், அனுபவத் தளங்களின் ஊடாகவும் சிந்திக்கவும், பயணிக்கவும் முடிகிற, எல்லைகளை மழுப்பி, பாலங்களை எரிக்காமல் செயல்படவும் முடிகிறது’ (1994: 4, 12).
 
கலாசார அடிப்படைகள், நம்பிக்கைகள் சார்ந்த கட்டமைப்புகள் அதிகாரம் மறுக்கப்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வலிமை பெறும் முக்கியமான வழிமுறைகளாக உள்ளன. பின்னோக்கி சொல்வதைச் சாராமாகக் கொண்ட இந்தக் கலாசார நம்பிக்கைகளுக்கு யார் அங்கீகாரம் தருவது என என்னுடைய நாடோடி உணர்வுநிலை கேள்வி கேட்கிறது. எந்தச் சூழல்களில் இது நிகழும்? மிக முக்கியமாக, ஏன், எப்படிக் கலாசாரச் சொத்துக்களான மொழி, மதம் அல்லது எல்லாவற்றை விடவும் புனிதமான உடமையாகக் கருதப்படும் தேசம் ஆகியவை மிகப்பெரும் உருவம் கொண்டதாக, அழியாத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன? இதன்மூலம் எப்படி இவை ஆட்கொள்பவர்களை ஆட்கொள்கின்றன?
(இந்நூலின் முதல் பக்கம்: )
figure
 
இந்தப் புத்தகமும், என்னுடைய வாழ்க்கையைப் போல நாடோடித் தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி இந்த நூல் உருவாக்கத்தில் பயன்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் கண்டங்கள், கலாசாரங்களைக் கடந்து செய்தேன். புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராசில் எழுதப்பட்டது, பிற பகுதிகள் அமெரிக்காவில் இருந்தாலும் மிகவும் வேறுபட்ட கலசார, அறிவார்ந்த இடங்களான பெர்க்லே, சிகாகோ, பிலடெல்பியா ஆகியவற்றில் எழுந்தன. என்னுடைய வாழ்வின் இந்திய பக்கங்கள் அமெரிக்க ஆய்வுப்புலத்தில் அரிதாகி வரும் என்னுடைய இருப்பில் ஒரு வேகத்தையும், வேட்கையையும் செலுத்துகின்றன. அதேசமயம், நான் பணியாற்றும் இடத்தில் நான் பெற்று இருக்கும் நிலையே பகுத்தாயும், மையமற்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய நாடோடி வாழ்க்கையை வசதியாகத் தொடர உதவுகிறது. வரலாற்றை எழுதுதல் என்பது சமீப வருடங்களில் நாட்டைப் பற்றி எழுதுவதோடு சிக்கலான செயல்பாடாகப் பிணைந்துள்ளது என்று பலமுறை சொல்லப்பட்டு விட்டது.
Image result for passions of the tongue
 
அதிகாரப்பூர்வ வரலாறுகள் பெரும்பாலும் நாடு என்கிற வெளிக்குள் இருந்தே எழுதப்பட்டுள்ளன. எனினும், இந்த வரலாற்று நூல் நாடுகளைக் கடந்து, மொழிகளை, இருப்பிடங்களைக் கடந்து பயணிக்கிறது. இதன் இறுதி உருவாக்கம் அது பேசும் மக்கள், அந்த மக்களைக் குடிகளாகக் கொண்ட நாடு ஆகியவற்றை விட்டு வெகுதூரம் தள்ளிய ஒரு இடத்திலேயே நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட படைப்பின் உள்ளடக்கத்தால் ஏற்படக்கூடிய வரவேற்பு, வாசிப்பு சார்ந்த சிக்கலான விளைவுகளை நான் அறிந்திருந்திருக்கிறேன். எனினும், சல்மான் ருஷ்டியுடன் இணைந்து ‘பகுத்தாய்வு சிந்தனை யின் நோக்கம் புதிய கோணங்களில் வரலாற்று உண்மைகளைத் திறந்து விடுவதும், கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளை நிலைகுலைப்பது’ என்றே சிந்திக்க விரும்புகிறேன். என்னுடைய நாட்டைவிட்டு நிகழ்ந்த நகர்வு, பகுத்தாயும் நாடோடி வாழ்க்கை எனக்கு உறுதியான வாய்ப்பை தருகிறது. இல்லையேல், ரூஷ்டி எள்ளல் ததும்பச் சொல்வதைப் போல, இப்படி எண்ணிக்கொள்வது தான் என்னுடைய பணியைச் செவ்வனே செய்ய உதவும்.
 
தமிழில் – பூ.கொ.சரவணன்

மெய்ப்பொய்கை – பேசப்படாத பாலியல் பெண்களின் துயரம்!


ருச்சிரா குப்தா தொகுத்த ‘River Of Flesh’நூலை வாசித்து  முடித்தேன். இந்நூல் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும், அதில் ஈடுபடும் பெண்களின் உலகத்தைப் பன்னிரெண்டு மொழிகளில் வெளிவந்த 21 சிறுகதைகளின் மூலம் கண்முன் நிறுத்துகிறது. முன்னுரையில் பேராசிரியர் ருச்சிரா எழுப்பும் கேள்விகள் மனதை உலுக்குபவை. பாலியல் தொழில் என்பது கல்லூரி பெண்கள் நுகர்வு வெறிக்காக மேற்கொள்வது என்றும், அதுவும் ரத்தத்தை உறிஞ்சும் தொழில்கள், கொடுமைக்கார திருமணங்கள் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு தரவும் பாலியல் தொழில் பயன்படுகிறது என்கிற தொனியில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், கள நிலவரம் வேறானது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அடிப்படைத்தேவைகளுக்கே அல்லாடுகிறார்கள். கடனில் சிக்கி இறுதிவரை வெளிவர முடியாமலே இறந்து போகிற பெண்கள் பலர். ஆனால், அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர்கள், உறவுக்காரர்கள் பெரும்பணம் ஈட்டுகிறார்கள். 9-13 வயதுக்குள் பெண்கள் இதற்குள் தள்ளப்படுகிறார்கள். கண்ணில் ரத்தம் வரவைக்கும் முறைகளைக்கொண்டு அவர்களைப் பருவம் எய்த வைக்கிறார்கள். அடித்தும், பட்டினி போட்டும், போதை மருந்துகள் கொடுத்தும் அவர்கள் காலத்துக்கும் பாலியல் தொழிலேயெ உழல வைக்கப்படுகிறார்கள்.

தூக்கமின்மை, உடற்பிணி அவர்களைப் பிடுங்கி தின்கிறது. சமீபத்திய ஆய்வுகள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையால் ஏற்படும் உடல், மனரீதியான பாதிப்புகள் போர்க்களத்தில் வீரர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை விட மோசமானவை என நிறுவுகின்றன. இவர்களின் உலகை வெவ்வேறு சிறுகதைகளின் மூலம் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளும் முயற்சியே இத்தொகுப்பு என்கிறார் ருச்சிரா குப்தா.

கமலா தாஸின் கதையில் பலதரப்பட்ட பெண்களும், ஆண்களும்,குழந்தைகளும் நடமாடுகிறார்கள். பாலியல் வேட்கை மிகுந்த ஆணுக்குள் எட்டிப்பார்க்கும் தந்தையின் பிரியம் சில வரிகளில் கடத்தப்படுகிறது. மோகத்தின் வெம்மையில் போலி வாக்குறுதி தந்து பெண்ணின் மனதை உருக்குலைக்கும் இளைஞன் ஒருவன் கடந்து வந்த பல முகங்களை நினைவுபடுத்துகிறான். 

Image may contain: text

பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் தாய்மார்களின் பதைபதைக்க வைக்கும் வாழ்க்கையை இரு கதைகள் கண்முன் நிறுத்துகின்றன. அதிலும் நாயனா அட்டர்கரின் கொங்கனி கதையில் குழந்தை காலடியில் அழுது கொண்டிருக்க, ஆடவன் ஒருவன் அக்குழந்தையின் அன்னையோடு புணர்ந்தபடி இருக்கிறான். அவனின் மோகத்திற்கும், குழந்தையின் கதறலுக்கும் இடையே தவிக்கும் அந்தத் தாயை போல எத்தனை அன்னைகள்?

ஆண் வெறுப்பு மட்டுமே கதைகளின் மையமில்லை. அப்பெண்களின் உலகின் அன்பும், கனிவும், தயக்கங்களும், துயர்களும் அழகியலோடு கடத்தப்படும் கதைகள் அநேகம். பிபூதிபுஷன் பண்டோபாத்தியாயா கதையில் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் சூழல் எந்தப் பரப்புரையும் இல்லாமல் புரிய வைக்கப்படுகிறது. ஒரு பிராமணச் சிறுவனுக்கு அன்போடு தீண்டாமைக்கும், சாதி கட்டுப்பாடுகளுக்கும் பயந்து கொண்டே தின்பண்டங்கள் கொடுத்து அன்பை பொழியும் பெண்கள் நெகிழ வைக்கிறார்கள். முப்பது வருடங்கள் கழித்து அவர்களைச் சந்திக்கும் கணத்தை இப்படிக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்:

‘எனக்கு ஞாபகம் இருக்கு. அந்தப் பைத்தியக்கார வாண்டு பிராமணப் பையன் தானே நீ. எப்படி வளந்துட்டே? அம்மா அப்பாலாம் உயிரோட இருக்காங்களா?’
‘யாரும் உயிரோட இல்லை’
‘எத்தனை பசங்க’
‘அஞ்சு பேரு’
‘உட்காரு ஐயா. இங்கே உக்காரு. இந்தா வந்துடறேன்.’

அந்தப் பெண் திரும்புகையில் என்ன தந்தாள், அவனின் முகம் மறந்து போயிருந்தாலும் பேரன்பை எப்படிப் பத்திரப்படுத்தித் தந்தாள் என்பவை எல்லாம் அற்புத கணங்கள்.

மான்டோவின் கதையில் வரும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்ணின் கெஞ்சலும், அவள் தலைக்கு மேலே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் நூறு மெழுகுவர்த்தி வெளிச்சமும் பரிதாபத்தைக் கோரவில்லை. தூக்கம் தொலைத்து தரகர்களுக்குப் பணம் ஈட்டித்தரும் அடிமையாக மாற்றப்பட்டாலும் தன்னைப் பார்த்து யாரும் இரக்கப்படுவதற்கு அவள் அனுமதிக்கவில்லை. தூக்கத்திற்காக, நிம்மதிக்காக அலையும் அவள் கதையின் இறுதியில் செய்யும் செயலும், கொள்ளும் பேருறக்கமும் அதிர வைக்கும்.

கமலேஸ்வரின் இந்தி கதையில் வருகிற நாயகி தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய மருத்துவச் செலவுகளுக்காக வாங்கிய கடனை எப்படியாவது அடைத்து விடுவது என உறுதியோடு இருக்கிறாள். உயிரை எடுக்கும் வலியிலும் தன்னை நாடிவரும் தோழனுக்கு இன்பம் தர முயலும் அவளின் கரிசனம் கலங்க வைக்கிறது. அக்கதையின் இவ்வரிகள் எத்தனை ஆழமானவை?:

ஆயிரம் ஆண்கள் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால், தன்னுடைய மிச்ச வாழ்க்கை முழுக்க அடைக்கலம் தரும் நிழலுடையவர்களாக அவர்கள் யாரும் இருக்கவில்லை.

அவளுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் கடன் வாங்கினாள், ஆனால், அங்கேயும் நம்பிக்கை இல்லை. என்றோ ஒருநாள் காணாமல் போகப்போகும் அவர்களை எப்படி அவளால் நம்ப முடியும்? முதுமை அவளைத் தீண்டியதும் ஆண்கள் அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அவர்களின் குழந்தைகள் வளர்ந்ததும் அவளிடம் வருவதை நிறுத்திக்கொள்வார்கள்….அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கடன் கொடுத்தவர்கள் அவளைக் காண வருவது தான். 

Image result for river of flesh
ருச்சிரா குப்தா, படம் நன்றி: http://speakingtigerbooks.com/books/river-of-flesh-and-other-stories-the-prostituted-women-in-indian-short-fiction/

பிரேம் சந்தின் கதையின் கவித்துவமும், அதில் நிரம்பி வழியும் பேரன்பும், வன்மமும் சொற்களில் அடங்காதவை. ஆண் தன்னுடைய தாபங்களுக்கு ஏற்ப பெண்களை நாடுவது போல, அவனுடைய காதலியும் நாடினால் என்னாகும் எனத் துரிதமாக விவரிக்கும் இக்கதையில் நின்று தரிசிப்பதற்குள் காட்சிகள் கடந்து விடுகின்றன.

குர்அதுல்ஐன் ஹைதரின் கதை முழுக்கப் பழம்பெருமை மிக்க ஒரு பெண்ணே நிறைந்திருக்கிறாள். கதையின் இறுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் இறை நம்பிக்கையுள்ள பெண்ணின் குரல் அத்தனை வலிமிக்கதாக ஒலிக்கிறது:

நம்முடைய செயல்கள் எல்லாம் நியாயத் தீர்ப்பு நாளில் நம்மைப் படைத்தவனால் தீர்ப்பளிக்கப்படும். இந்த மும்பையில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள், எல்லா வகையான விஷயங்கள் இங்கேயும் நடக்கின்றன. …குரானை ஓதி நியாயத்தீர்ப்பு நாளில் எங்களுக்குக் கருணை காட்ட பிரார்த்தனை செய்.

சித்திக் ஆலமின் கதை மாய யதார்த்தவாத பாணியில் பயணித்துக் கிளர்ச்சியாக வாசிப்பு அனுபவத்தைப் பரிசளிக்கிறது. இஸ்மத் சுக்தாயின் கதையில் வரும் நாயகி லஜ்ஜோ கொண்டாட்டத்தின் திரு உரு. அவள் விதிகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டள்ளவள். அவளின் கசடுகளை விட அவளின் விடுதலையும், இன்ப நாட்டமும், குறும்புமே நம்மை நிறைக்கிறது. திருமணத் தளை அவளைக் கட்டிப்போட முயல்கையில் அவள் புரிபவை சுவையானவை. வெறும் ஒப்பாரித்தன்மையோடு தான் அவர்களின் வாழ்க்கை அணுகப்படும் என்கிற பொதுப்பார்வையை உடைத்துப்போடும் மகத்தான உருது சிறுகதை அது.

நபேந்து கோஷின் கதையின் இறுதி வரிகள் பெண்களின் நம்பிக்கையைத் தங்களின் வேட்கைகளுக்காகப் பலியிடும் ஆண்களின் உலகையும், பெண்ணின் வாழ்க்கையையும் சில வரிகளில் நம்முன் நிறுத்தி நகர்கிறது:

அவனைச் சைய்யா சுலபமாக மறக்க மாட்டாள். தீன்காரி தாஸ் என்கிற பல்ராம் சௌத்ரி அவளை அர்ஜுனனாக மயங்கினான். அந்த மயக்கம் அவள் வயிற்றினில் நாளும் வளர்கிறது. அது அவள் கருப்பையை விட்டு வெளிவந்த பின்பும் நாளும் வளரும். அது வளர்ந்து கொண்டே இருக்கும், அவளுடைய இறுதி மூச்சுவரை அவளின் ஆன்மாவை கடித்துக் குதறிக்கொண்டே இருக்கும். பல்ராம் சைய்யாவை மறந்தாலும், அவளால் அவனை மறக்கவே முடியாது.

மனிஷா குல்ஷரேஷ்தாவின் கதை மகன், தாய் ஆகிய இருவரின் குரல்களில் ஒலிக்கிறது. அவனைப் பெற்று, தனியாளாகத் துரோகத்தின் நிழலில் வளர்த்த அன்னையைப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவள் என்பதால் அம்மா என்று அழைக்க மறுத்து மகன் தான் கண்டதை விவரிக்கிறான். அன்னையின் குரல் அவனுக்கு உண்மையைச் சொல்ல மறுக்கிறது. அவனுடைய கேள்விகளுக்கும், முன்முடிவான போலி அறத்துக்கும் அவளின் ஆன்மா அடிபணிய மறுக்கிறது. இக்கதையின் ரகசியத்தை விடவும் அதன் நெருக்கமும், நேர்மையும் மொழிபெயர்ப்பிலும் அப்படியே கடத்தப்பட்டு இருக்கிறது.

மாதுரிமா சின்ஹாவின் கதை நெஞ்சில் அறம் இன்றி, போலித்தன்மை மிக்க மனிதர்கள் பிரியத்தின் சிறு நிழலையாவது கண்டு விட மாட்டோமா எனக் கொடிய வாழ்க்கைக்கு இடையே பரிதவிக்கும் பாலியல் தொழிலில் சிக்குண்டு நிற்கும் பெண்களை ‘மோசமானவர்கள்’ என்கிற அபத்தத்தை எளிய கதையமைப்பில் சாடி செல்கிறார்.

கடிதங்களால் ஆன இரு கதைகள் தொகுப்பை அலங்கரிக்கின்றன. புரியாத மொழியில் இருவரும் எழுதிக்கொள்ளும் கடிதங்களை வாசித்து, பேரன்பை சுவாசித்து, மீண்டும் அவற்றை எழுதியவர்களே எடுத்துச் செல்லும் வலி கண்களைக் கசிய வைக்கிறது. தந்தையின் காதலியை தேடிச்செல்லும் மகளுக்குக் கிடைக்கும் அன்னையின் வாசனை நம் நாசியையும் நிறைக்கிறது.

கிஷன் சந்தரின் கதை பிரிவினை காலத்தில் ஒரு பாலியல் தொழிலாளி ஜின்னா, நேரு இருவருக்கும் எழுதும் கடிதமாக நீள்கிறது. மத வெறி எப்படி இளம் சிறுமிகளின், பெண்களின், குடும்பங்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போடுகிறது என்பதை விட அந்தப் பாலியல் தொழிலாளியின் கடிதத்தின் இரு பத்திகள் சூடுபவை. அவற்றோடு நம்மை உலுக்கும், இன்னமும் கரிசனத்தோடு, கவலையோடு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்களை அணுகும் இந்தச் சிறுகதை தொகுப்பின் அறிமுகத்தை முடிக்கலாம்:

“கொடுமைக்கார முஸ்லீம்கள் பேலாவின் அம்மாவுடைய மார்பகங்களை அறுத்து எறிந்தார்கள். ஒரு அன்னையின் மார்பகங்கள் தன்னுடைய பிள்ளை இந்துவா,முஸ்லீமா, சீக்கியனா, யூதனா எனப்பார்க்காமல் பசி தீர்க்க பாலூட்டுகிறது. உலகத்தின் அகன்ற பரப்பினில் படைப்பின் புதிய அத்தியாயத்தை அது கொண்டு வருகிறது. இந்தப் பால் கசியும் மார்பகங்களை அல்லா உ அக்பர் என உச்சரிக்கும் மக்களே வெட்டினார்கள். அறியாமை அவர்களின் ஆன்மாவை கருத்த நஞ்சால் நிறைத்து விட்டது. நான் புனித குரானை வாசித்து இருக்கிறேன். பேலாவின் பெற்றோருக்கு ராவல்பிண்டியில் நிகழ்த்தப்பட்டவற்றை இஸ்லாம் ஒன்றும் கற்பிக்கவில்லை என எனக்குத் தெரியும். அது மனிதமும் இல்லை, பகைமையும் இல்லை, பழிவாங்கலும் இல்லை. அது மிருகத்தனமான, கோழைத்தனமான, கொடூரமிகுந்த, சாத்தானை ஒத்த செயல். அது இருளின் நெஞ்சத்தில் இருந்து வெளிப்பட்டுக் கடைசிக் கீற்று நம்பிக்கையையும் கறைப்படுத்தி விட்டது.’
———————————————————————————————————-
ரெஹனா, மர்ஜானா, சூசன் பேகம் அவர்களின் தந்தையின் பிணத்தின் முன்னால் ஒவ்வொருவராக வன்புணர்வு செய்யப்பட்டார்கள். தங்களுக்குத் தாலாட்டு பாடிய, கண்ணியம், பக்தி, வெட்கத்தோடு தங்கள் முன் தலைகுனிந்து நடந்த அம்மாக்களை, சகோதரிகளை வன்புணர்வு செய்தார்கள் அந்த ஆண்கள்.

இந்து மதத்தின் புனிதம் பறிபோனது. அதன் அறங்கள், நம்பிக்கைகள் அழிக்கப்பட்டன. இப்போது அமைதி மட்டுமே நிலவுகிறது. க்ராந்த் சாஹிபின் ஒவ்வொரு வரியும் அவமானப்பட்டு இருக்கிறது. கீதையின் ஒவ்வொரு வரியும் காயப்பட்டு இருக்கிறது. அஜந்தாவின் கலையழகு குறித்து என்னிடம் யார் பேச முடியும்? அசோகரின் எழுத்துக்கள் குறித்து யார் என்னிடம் சொல்ல முடியும்? எல்லோராவின் சிற்பி குறித்து யார் கீதமிசைக்க முடியும். அந்த ஆதரவற்ற பட்டுல் சிறுமியின் கடித்துக் குதறப்பட்ட உதடுகளில், மிருகங்கள்,அரக்கர்களின் பல்தடங்கள் இருக்கும் அவளின் கரங்களில் உங்கள் அஜந்தாவின் மரணம் தெரிகிறது, உங்கள் எல்லோராவின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, உங்கள் நாகரீக சமூகம் பிண ஆடை போர்த்திக்கொண்டு நகர்கிறது…

அவர்களை என் தொழிலுக்குள் நான் தள்ளமுடியும். ஆனால், ராவல்பிண்டியும், ஜலந்தரும் அவர்களுக்குப் புரிந்ததை நான் செய்ய மாட்டேன். 

Image result for மெய்ப்பொய்கை

River Of Flesh
தொகுப்பாசிரியர்: ருச்சிரா குப்தா
Speaking Tiger
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350

(இத்தொகுப்பின் ஒரு முக்கியமான குறை பல்வேறு மொழிகளின் சொற்களுக்கு பொருள் இறுதியில் கூட தரப்படவில்லை. இது வாசிப்பை சமயங்களில் தடைப்படுத்துகிறது. இந்நூல் தமிழில் மெய்ப்பொய்கை என்கிற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. நான் ஆங்கிலத்திலேயே நூலை வாசித்தேன். )

 

பெரியார் – நூல்கள், கட்டுரைகள், புத்தகங்கள்


 பெரியாரின் பிறந்தநாள் இன்று.
தமிழகத்தின் சமூக, அரசியல் பரப்பை மாற்றிப்போட்ட தந்தை பெரியார் எனும் பேராளுமையை புரிந்து கொள்ள, அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தாக்கம் குறித்து உணர இந்த பட்டியல் உதவும். இதில் மின்னூல்கள், ஆங்கில கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என அனைத்தும் அடக்கம்.

*பெரியாரைப் புரிந்துகொள்வோம்*
Image may contain: 1 person, sitting
*Understanding Periyar*

————————–

*நூல்கள்*

பெரியார் இன்றும் என்றும் – விடியல்
https://goo.gl/jrKQRT

பெரியார்: சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா – விடியல்
https://goo.gl/gKbDoS

பெரியார் – அ.மார்க்ஸ்
https://goo.gl/pGHfyU

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு – http://dvkperiyar.com/?page_id=17544

பெரியார் மின்னூல்கள் பெருந்தொகுப்பு:http://dvkperiyar.com/?page_id=17518

இதில் சில நூல்களின் சுட்டிகள் கிடைக்கும்
https://goo.gl/KuyrRA

————————–

*எளிய அறிமுகத்திற்கு சில கட்டுரைகள்*

பெரியார் என்றொரு கலகக்காரர் – கே.ஏ. அப்பாஸ்
https://goo.gl/m1f3Ci

ஏனெனில், அவர் பெரியார்! – ப.திருமாவேலன்
https://goo.gl/x23CQ8

பெரியார் எனும் கல்வியாளர்! – பூ. மணிமாறன்
https://goo.gl/fkH6V5

பெரியார் களஞ்சியம் – https://goo.gl/JZFP6C

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! (Translation of Sunil Khilnani’s ‘Sniper Of Sacred Cows’)
https://goo.gl/BKDYfX

Sniper Of Sacred Cows – Sunil Khilnani
https://goo.gl/bg5zEj

‘Periyar was against Brahminism, not Brahmins’ – Gnana Rajasekharan IAS
https://goo.gl/RGdujg

Why Periyar would have led today’s ‘anti-nationals’ – Manu S Pillai
https://goo.gl/JboJq9

Ambedkar and Periyar’s intellectual comradeship – V. Geetha
https://goo.gl/3vRHRE

A Lesson from Periyar on the Tension Between Elections and Social Transformation – A.R. Venkatachalapathy
https://goo.gl/oFjgsu

Footprints Of The Original ‘Anti-Nationals’ – A.R. Venkatachalapathy
https://goo.gl/5QhTZ9

Iconoclast, Or Lost Idol? – S. Anand
https://goo.gl/rBgKN4

*Interview with S.V. Rajadurai and V. Geetha:*

Part 1: Periyar’s ideals and today’s Tamil Nadu
https://goo.gl/mKowXz

Part 2: Periyar and Dalits
https://goo.gl/r684rn

Part 3: Ambedkar and Gandhi in Periyar’s mind
https://goo.gl/QdDLKX

———————————–

*பரந்துபட்ட புரிதலுக்கு*

காந்தியின் மறைவு குறித்து பெரியார்
http://on.fb.me/1eOPGj5

பெரியார் – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
http://on.fb.me/19xGD97

சினிமா, நாடகம் – பெரியார்
http://on.fb.me/16sdQ3w

பெரியார் – ஜெயகாந்தன்
http://on.fb.me/1cSbvS1

Periyar on the Constitution
http://on.fb.me/19xMefv

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
http://on.fb.me/1b8vE2V

குடிஅரசு தொகுப்பு 1925- 1938
http://bit.ly/1cKzbJ4

பெரியார் களஞ்சியம் பெரியார் சிந்தனைகள்
http://bit.ly/14SBkMY

பெரியார் – போஸ்
http://on.fb.me/1ackNaq

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்
http://on.fb.me/14n5wwe

பெரியாரின் மரண சாசனம்
http://on.fb.me/1b8vE2V

பெரியார்: கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்
http://on.fb.me/14IGbfx

காமராசர் – பெரியார்
http://on.fb.me/16VAq2T

பெரியார் பெயர் வந்தது எப்படி?
http://on.fb.me/1cUfzBk

பெரியார் பிற மதங்களை விமர்சிக்கவில்லையா?
http://on.fb.me/15lCcFU

புத்தர் – பெரியார்
http://on.fb.me/17TJVwL

குருகுலப் போராட்டம்
http://on.fb.me/12cB9uT

நேரு – பெரியார் கார்ட்டூன்
http://on.fb.me/17TKczA

சூத்திரர்கள்
http://on.fb.me/1eRmRm1

இலங்கை உபன்யாசம் குடி அரசு 20.11.1932
http://on.fb.me/14Y2WQX

வன்னியர் சங்க மாநாட்டில் பெரியார்
http://on.fb.me/16ZZ9TH

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
http://on.fb.me/16CXsx9

சாதி ஒழிப்புக்கு பெரியார் தரும் திட்டங்கள்
http://on.fb.me/1cUh9UQ

பட்டியல் சாதி – பெரியார்
http://on.fb.me/17Y5XhJ

Ambedkar’s Resignation
http://on.fb.me/16WQM9w

பெரியாரும் – மதுவிலக்கும்
http://on.fb.me/13UzJD9

கீழவெண்மணி
http://on.fb.me/1dxmUFL

முதுகுளத்தூர் கலவரம் – பெரியார்
http://on.fb.me/13UAnjT

விநாயகர்சதுர்த்தி – பெரியார்
http://on.fb.me/1atyG5m

பறைச்சி-ரவிக்கை
http://on.fb.me/15QEbaa

மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்குதல்
http://on.fb.me/15odTsq

காந்தியின் கடவுள்
http://on.fb.me/18Rx5Vx

இந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்
http://on.fb.me/18myzTN

ஜகதீச சந்திரபோஸ் காந்தியின் விரோதியா?
http://on.fb.me/18myBLl

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
http://on.fb.me/18RxKpU

ஜெயலலிதா-புனைவில் புலப்படும் அரசியின் வாழ்க்கை!


சமகால அரசியல் கதைகள் பெரும்பாலும் புனைவு வடிவம் பெறுவதில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை நாவலாக அரிதிலும், அரிதாகவே வந்திருக்கின்றன. சினிமாவுக்குப் போன சித்தாளு எம்ஜிஆரை குறிப்பிடுவது என்பார்கள். வெட்டுப்புலி நாவலில் திராவிட இயக்க அரசியல் இழைந்து நகரும். சமகாலத் தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் பெரும்பாலும் புகழ் பரணிகளாகவே அமைகின்றன. ஆங்கிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் மிகச் சொற்பம். அண்ணா குறித்து ஒரு நூல், மறைமலையடிகள் குறித்து ஒரு நூல் ஆகியவை நினைவுக்கு வருகின்றன. இருவர் படத்தை எக்கச்சக்க நண்பர்கள் சிலிர்ப்போடு புகழ்வதைக் கண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் ஜெயலலிதா இறந்த பின்பு வாஸந்தியின் சிறுநூல் வெளிவந்தது. அவருடைய வாழ்நாளில் நீதிமன்ற தடையை அவர் பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.

இந்தச் சூழலில் ஆங்கிலத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அனிதா சிவக்குமரன் ‘The Queen’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்னரே எழுதிய நாவலை தற்போது தான் வெளியிட்டு உள்ளார். நாவல் முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி என்றுவிட முடியாது.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

கலையரசி என்கிற நாயகி தமிழ் வேர்கள் கொண்டவராகக் காட்டப்படுகிறார். அவரின் மேற்படிப்புக் கனவுகள் பொசுங்குகிற கணத்திலும், தாத்தா என்று வாட்ச்மான் நெஞ்சில் சாய்ந்து அழ மருகுகிற அன்புக்கு ஏங்கும் இளம் நடிகையாகப் பதிய வைக்கப்படுகிறார் கலையரசி. ‘பின்க்கியை தவிர எனக்குத் தோழிகள் இல்லை’ என்கிற கலையரசியின் மனக்குரல் ஜெயலலிதாவின் தனிமை மிகுந்த வாழ்க்கையை நினைவூட்டுகிறது.

முழுக்கப் பி.கே.பி என்கிற எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தின் நிழலில் வளர்கிற ஒருவராகக் கலையரசி இல்லை. அவரின் திரைப்படங்களை அவரின் முகத்துக்கு நேராக விமர்சிக்கிறார்.’வசனம் பேசியே வில்லன்களைத் திருத்துறீங்க. அவங்க உடனே திருந்தி உங்க காலில விழறாங்க. ..நீங்க ஒரு சாக்கடை பக்கமா வரீங்க. நீங்க அதில கால் வைக்கக் கூடாதுனு ஒருத்தன் நீட்டுவாக்கில விழறான். என்ன சினிமா இது?’ என்கிற கணத்தில் தனித்த ஆளுமை வெளிப்படுகிறது.

கதை நேர்க்கோட்டில் பயணிக்காமல் முன்பின்னாகப் பயணித்து வாசிப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. புனைவு என்கிற வெளியின் சுதந்திரத்தோடு ஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றியும் கதைப்போக்கை அமைக்கிறார் அனிதா. ஆகவே, தெரிந்த கதை தானே என்கிற சலிப்போடு நூலை வாசிக்க முடியாது.

விமர்சனங்கள் பெரும்பாலும் இல்லாமல் ரத்தமும், சதையுமாகக் கலையரசியின் வாழ்க்கை கதையாக விரிந்தாலும் தருணங்களில் கூர்மையான வரிகள் கவனிக்க வைக்கின்றன. ‘இந்த ஆடம்பரமான கல்யாணத்தைப் பத்திய இந்தக் கட்டுரையை எடிட்டர் வெளியிட மாட்டார். அவர் ஒன்னும் மோசமான மனுஷனில்லை. ஆனா, அவர் அலுவலகத்தைக் கட்சி குண்டர்கள் உடைக்கிறதை விரும்ப மாட்டார். அவமதிப்பு வழக்குல உள்ள போய் மிதிபட அவர் தயாரில்லை. அவர் மனைவி முகத்தில் ஆசிட் அடிக்கிறதை அவர் எப்படித் தாங்க முடியும்?’

ஆண்களால் மட்டுமே சூழப்பட்ட அரசியலில் தனக்கு என்று ஒரு இரும்பு கூண்டை கட்டிக்கொண்ட கலையரசியின் வாழ்க்கைக்குள் வீடியோ கடை நடத்தும் செல்வி நுழைந்த பின்பு எப்படி ஊழல்மயமாகி போகிறது வாழ்க்கை என்பது எளிய, விறுவிறுப்பான நடையில் புலப்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு ஒன்று, ‘அதிகாரப்பூர்வமாக அவரின் சம்பளம் ஒரு ரூபாய் ..ஆனால், அவரால் எதையும் தனதாக்கி கொள்ள முடியும். விரலைக் கூடத் தூக்க வேண்டியதில்லை. பண மழை பொழிந்தது. ஒரு நோயுற்ற மனிதன் பல்வேறு நோய்களைச் சேர்ப்பது போல அதிகாரத்தில் இருந்தபடி அவர் சொத்துக்களைக் குவித்தார்.’

எனினும், இறுதியில் கலையரசி கைது செய்யப்பட்ட பின்பு வரும் விவரிப்பில்
கலையரசி மீது அனுதாபம் ஏற்படுகிற தொனியிலேயே ஆசிரியரின் நடை அமைகிறது. கருணாநிதியின் அரசியல் ஓரிரு கணங்களில் கூர்மையாக விமர்சிக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளின் மூலம் நடத்தப்படும் அரசியல், சூப்பர் ஸ்டாரின் வாய்ஸ் படலம் ஆகியவையும் உண்டு.

படிப்படியாக அரசியலின் ஆழ அகலங்கள் புரிந்து கொள்ளும் கலையரசி எப்படி அரசி ஆகிறார் என்பதைச் சில கணங்களில் இயல்பாக நாவல் புரிய வைக்கிறது. குறிப்பாக மேடைப்பேச்சில் எப்படித் தனக்கான பாணியைக் கண்டடைகிறார் என்பது கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பகுதி. சர்வாதிகாரியாக உருமாறும் கலையரசியின் வாழ்க்கை பக்கங்கள் 2005-யோடு முடிந்துவிடுவது வாசகருக்கு சற்று ஏமாற்றத்தை தரலாம்.

நாவலின் பெரிய பலவீனம் கோட்பாட்டுத் தளத்தில் பயணிக்க மறப்பது. ஏன் பல்லாயிரம் பேர் கடவுளாக வழிபடுகிறார்கள் என்பதை இன்னமும் செறிவாக நம்ப வைக்காமல் கடப்பது. ஜெயலலிதாவின் வாழ்க்கையின் பிரதி அல்ல இந்த நாவல். அதன் தாக்கம் வெவ்வேறு இடங்களில் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாகக் கலையரசியின் ஆழ்மனப்போராட்டங்கள் இன்னமும் நெருக்கமாகப் பதியப்பட்டு இருக்கலாம். எனினும், முக்கியமான முயற்சி.

Image result for THE QUEEN ANITA SIVAKUMARAN

The Queen
Anita SIvakumaran
Juggernaut Books
பக்கங்கள்: 280
விலை: 350

எப்பொழுது விழிக்கும் நம் மனசாட்சி?-கடைக்கோடி குடிமக்களின் கதைகள்


எதுவும் நடக்காததைப் போலத் தலையைத் திருப்பிக் கொள்ளலாம். எத்தனை முறை?
உடைந்து அழுகிற மக்களின் கேவல் கேட்பதற்கு எத்தனை காதுகள் வேண்டும்?
சரிந்து விழுகிற மக்களின் மரணங்களை உணர எத்தனை பிணங்கள் இங்கே விழ வேண்டும்?’ – பாப் டைலான்

நம்மைச்சுற்றி இருக்கும் குரலற்ற, முகமற்ற மக்களின் வலிகள், போராட்டங்கள், கண்ணீர் ஆகியவற்றைக் கவனித்து இருக்கிறோமா? ஒருவரின் பிறப்பே அவரின் வாழ்க்கையின் சாபமாக மாறுவதை என்ன என்பது? தங்களால் தேர்வு செய்ய முடியாத அடையாளங்களுக்காகக் கொல்லப்படுபவர்களின் மரணங்கள் நம்மை உறுத்துகிறதா? அடித்து நொறுக்கும் வாழ்க்கையில் ஒரு சிறு நம்பிக்கை கீற்று கூட இல்லாமல் உறைந்து போயிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்?

இந்திய ஆட்சிப்பணியில் இருந்து பின்னர்ப் பதவி விலகி சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ஹரீஷ் மந்திரின் ‘FATAL ACCIDENTS OF DEATH’ நூல் இவற்றுக்குப் பதில் தர முயல்கிறது. பல்வேறு சமூக அநீதிகளில் குலைந்து போன பதினேழு மனிதர்களின் வாழ்க்கையின் வழியாகச் சமூகத்தின் கசடுகள், உண்மைகள், அவலங்கள் ஆகியவற்றை முகத்தில் அறைந்தது போல எந்தப் பிரச்சாரத் தொனியும் இல்லாமல் நூல் கடத்துகிறது.


Image result for fatal accidents of birth
குஜராத் கலவரங்களில் குடும்பத்தின் இருபத்தி ஆறு உறவுகளையும்
மதவெறிக்கு பலிகொடுத்து விட்டு நசீப் எனும் இஸ்லாமிய பெண் நீதிக்காக [போராடுகிறார். அன்பு, அமைதி, நீதி, ஒற்றுமை நமக்கு வேண்டும் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். அவர் பர்தா அணியாமல் வெளியே சுற்றக்கூடாது என்று இஸ்லாமிய குருமார்கள் சொல்வதை மீறித் தீவிரமாக இயங்கி மாற்றங்களை விதைக்கிறார். மதங்கள் மகளிரை அடக்கவே முயல்கின்றன என்று தோன்றுகிறது.

நிமோடா எனும் ராஜஸ்தானின் கிராமத்தில் பல வருட வருமானத்தைக் கொட்டி அனுமானுக்குச் சிலை எழுப்பிய பன்வாரிலால் எனும் தலித் அந்தக் கோயிலை திறக்க ஆதிக்க ஜாதியினர் விட மறுக்கிறார்கள். புரோகிதர் கிடைக்காமல் திணறுகிறார். அல்லலுற்று, அவமானப்பட்டுக் கோயிலை துவங்கினாலும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார்கள். நீதி கேட்டுப் போராடியும் சமரசம் செய்து கொண்டே ஊருக்குள் குடும்பம் அனுமதிக்கப்படுகிறது. தன்னுடைய இறைவனின் சந்நிதிக்குள் யாருமே நுழையாமல் தன்னைப் போல அவரும் தீண்டப்படாதவராக இருக்கிற வெம்மையோடு இறந்தும் போகிறார் அவர்.

சென்னையில் பிச்சைக்காரர்களைக் கைது செய்து தங்கவைக்கும் இல்லம் எப்படியிருக்கிறது என்பதை மாரியப்பன் என்பவரின் வாழ்க்கையின் மூலம் காட்டுகிறார் ஹரீஷ். சுற்றி காம்பவுண்ட் இல்லாததால் அடைத்துவைக்கப்பட்டுப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். மல வாசனை மூக்கை எப்பொழுதும் துளைக்கிறது, தண்ணீர் பச்சை நிறத்தில் வந்து வயிற்றைக் குமட்டுகிறது. கைத்தொழில் சொல்லித்தர எந்த ஆசிரியரும் இல்லை. ஒழுங்கான உணவு என்பது வெறுங்கனவு மட்டுமே. மருத்துவ வசதிகள்கை இருப்பதே இல்லை. கையேந்தி பிழைப்பது அவமானம் என்று கைது செய்யப்பட்ட இடத்திலும் சற்றும் கருணையில்லாமல் கழியும் கொடிய வாழ்க்கை கண்முன் வந்து கனக்கிறது.

தன்னுடைய உடல்நலம் முற்றிலும் குன்றிப்போன கணவனைக் காப்பாற்ற வாங்கிய கடனுக்குத் தன்னுடைய மகளைத் தத்தாகக் கொடுக்கிறார் லலிதா எனும் ஓடியாவை சேர்ந்த பெண்மணி. நல்ல சோறு சாப்பிட்டு, நல்ல வாழ்க்கையை மகள் வாழட்டும் என்கிற எண்ணம். ஆனால், அதிகாரிகளுக்கு விஷயம் தெரிந்து கடன் கொடுத்தவர் கைது செய்யப்படுகிறார். மகள் திரும்பவும் ஒப்படைக்கப்படுகிறார். அவரும் நோய்வாய்ப்பட்டு மருந்து வாங்க காசில்லாமல் இறந்து போகிறார். காசுக்கு விற்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட பொழுது ஓடிவந்த யாரும் மகள் இறந்து போன பொழுது வரவே இல்லையே என்று அரற்றுகிறார் லலிதா.

Image result for fatal accidents of birth

தனம் என்கிற தண்டபாணி திருநங்கையாக வாழும் தங்களின் வலி மிகுந்த வாழ்க்கையை இயல்பாகச் சொல்கிறார். ஒன்று புணர்ந்து விலகும் மாமிசப் பிண்டமாக ஆண்கள் காண்கிறார்கள், இல்லை அருவருப்புக்கும், அவமானத்துக்கும் உரியவர்களாக விலகி செல்கிறார்கள். நாங்கள் உணர்வும், அன்பும், கனவுகளும் மிகுந்த மனிதர்கள் என்று யாரும் எண்ணவே மாட்டார்களா என்று அவர் கேட்டுவிட்டு மவுனம் கொள்கிறார். . தனம் தன்னுடைய அப்பாவின் மரணத்தின் பொழுது கூட அருகில் செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். தனியே குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு திரும்பி விடுகிறார். ‘பானையைச் செய்ஞ்சு வெய்யில வைக்கிறப்ப சிலது உடைஞ்சு போயிரும். யாரை அதுக்குக் குறை சொல்ல. உடைஞ்சது உடைஞ்சது தான்.’ என்கிறார் தனம் ஹரீஷ் எழுதுகிறார் “அங்கே எதுவும் உடைந்திருக்கவில்லை.”என்றே நான் உணர்ந்தேன்.

நிர்பயா வன்புணர்வில் ஈடுபட்ட மைனர் சிறுவன் மறுவாழ்வு மையத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது அவனைத் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சட்டங்கள் திருத்தப்பட்டன. மருத்துவ நிபுணர்களின் எதிர்ப்பை மீறி பதினாறு வயது சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கும் பெரியவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளை ஆய்வுக்குப் பிறகு தரலாம் என்று திருத்தும் கொண்டுவரப்பட்டது. அந்தச் சிறுவனின் கதை பேசப்படவே இல்லை.

Image result for fatal accidents of birth

பதிமூன்று வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவனுடைய அம்மா வறுமை, அடி, உதை ஆகியவற்றோடு நோய்வாய்ப்பட்ட கணவனிடம் சிக்கி வெந்து நொந்து மகனை பதினோரு வயதில் நகரத்துக்கு வேலை தேடி அனுப்புகிறார். சமூகத்தில் எந்தக் கணத்திலும் வாய்ப்புகளோ, கனிவோ, வழிகாட்டுதலோ கிடைக்காமல் போன அவன் இந்தக் கொடுங்குற்றத்தை செய்கிறான். அவனைத் தூக்கில் ஏற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தாண்டி நீதிபதி சட்டப்படி மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கிறார். அவன் பக்திமானாக மாறுகிறான். நன்றாகச் சமையல் செய்யக் கற்றுக்கொள்கிறான். அழகான ஓவியங்கள் வரைகிறான். அவனைக் கொன்று விடலாம். அவனை உருவாக்கும் சமூகத்தின் கொடுமைகளை?

Image result for fatal accidents of birth

ரோஹித் வெமுலாவின் வாழ்க்கையின் மூலம் ஆசிரியர் சமூகத்தை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. வாழ்வதற்கும், கார்ல் சேகனை போலப் பிரபஞ்சத்தைத் தொட கனவு கண்ட ஒரு பேரறிஞனை உதவிப்பணத்துக்குக் கையேந்து விட்டு கொல்லும் அவலம் நெஞ்சை சுடுகிறது. சாவிலும் கடனை திருப்பிக் கொடுங்கள் என்று அவர் எழுதும் கடிதம் என்னவோ செய்கிறது.

ஹரீஷ் மந்தர்
பக்கங்கள்: 203
விலை: 399
SPEAKING TIGER வெளியீடு

 

தெய்வம் என்பதோர்-தொ.பரமசிவன்


தொ.பரமசிவன் அவர்களின் ‘தெய்வம் என்பதோர்’ நூலை படித்து முடித்தேன். பெரும்பாலான கட்டுரைகள் சிறு தெய்வங்கள் குறித்ததாகவும், பிற பக்தி இயக்கம், பாரதி, பெரியார் என்றும் நீள்கின்றன.

Image result for தெய்வம் என்பதோர்பழந்தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாடு அரசுகள் உருவான பொழுது கொற்றவை என்று மாறியது. கொல் என்பதே கொற்றவைக்கு வேர்ச்சொல்லாகும். இந்தக் கோயில்களின் பூசாரிகளாகப் பிராமணர் அல்லாதாரான பண்டாரம், வேளார், உவச்சர் ஆகியோர் திகழ்ந்தார்கள்.தாய் தெய்வங்களை வைதீகம் தனதாக்கி அம்மன், தாயார் என்று அமரவைக்க முயன்றாலும் தன்னுடைய தொன்மையின் எச்சங்களை அப்படியே தாய்த்தெய்வங்கள் காக்கவே செய்கின்றன. பொங்கல், முளைப்பாரி, சாமியாட்டம், ரத்தப்பலி ஆகியன நடைபெறும் பெருந்தெய்வங்கள் தாய்த்தெய்வங்களே ஆகும்.

தந்தை தெய்வம் இல்லாமல் தனித்த தாய் தெய்வமாகக் குமரி தெய்வத்தைத் தமிழர்கள் கொண்டாடி இருப்பது கல்வெட்டுக்களின் மூலம் தெரிகிறது. கடல்கெழு செல்வியாக, பிற்காலத்தில் மணிமேகலை தெய்வமாக இவளே நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் தொ.ப.

மதுரை மீனாட்சி அம்மன் பாண்டியரின் குலதெய்வம் என்பதை உணர்த்தும் வண்ணம் வேப்பம்பூமாலையைச் சூடுவது வேறு எங்கும் தமிழகத்தில் அறியாத சடங்காகத் திகழ்கிறது. பெண்ணுக்கு மட்டுமே அரசாட்சி உரிமை என்பதை இக்கோயிலின் சடங்குகள் சுட்டுகின்றன.

திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில் பூசாரி புடவை சுற்றிக்கொண்டு பூசை செய்வது நிகழ்கிறது. தலையை அறுத்து பலிகொடுக்கும் நவகண்டம் பூசைகள் இருந்ததைச் சிற்பங்கள் காட்டுகின்றன. இது நரபலி கொடுக்கும் உக்கிரமான தாய்த்தெய்வ கோயிலாக இருந்திருக்க வேண்டும்.

பங்காரு காமாட்சி என்பது தெலுங்கு பேசும் பொற்கொல்லர்களின் தெய்வமாகும். வைதீகத்தின் கட்டுப்பாட்டுக்குள் போவதற்கு முன்பு காஞ்சி காமாட்சி கோயில் விஸ்வகருமாக்கள் வசமே இருந்திருக்கிறது என வாய்மொழிக் கதைகள் உண்டு. காமகோட்டம் எனும் தாய்த்தெய்வ இடத்தையே காமகோடி என மாற்றிக் கொண்டது வைதீகம்.

Related image

பத்திரகாளி என்கிற பெயரில் பெரும்பாலும் வழிபடுவது நாடார்கள். உலகம்மை, உலகம்மாள் எனும் தெய்வங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட்டதாக இருக்க வேண்டும். கத்தோலிக்கம் இங்கு வேரூன்றிய பொழுது வீரமாமுனிவர் இயேசுவின் அன்னையை உலகநாயகி எனப் பெயர் சூட்டி கோயில்களை உருவாக்கினார். இயேசுவே ஆலயத்தின் மையம் என்றாலும், தாய்த்தெய்வ வழிபாட்டில் மூழ்கிப்போன கிறிஸ்துவர்கள் அல்லாத தமிழர்கள் ‘மாதா கோயில்’ என்றே அழைப்பதை கவனிக்க வேண்டும். அம்பிகா யட்சி எனும் சமண தெய்வமே இசக்கியம்மன், பகவதியம்மன் என வழிபடப்படுகிறது. பொன்னியம்மன் என்பதும் ஜ்வாலா மாலினி எனும் சமணச் சமய பெண் தெய்வமே ஆகும்.

நீலி என்கிற பெண்ணை வணிகக் குலத்தைச் சேர்ந்த கணவன் கொலை செய்கிறான். வேறொரு திருமணம் செய்துகொண்ட பின்னர்ப் பேயான அவள் மனைவி போலத் தோன்றுகிறாள். கையில் கரிக்கட்டையைக் குழந்தையாக்கி கொண்டு மாயம் செய்கிறாள். அப்பா என்கிறது குழந்தை. அவனோ உடன் செல்ல மாட்டேன் என்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். பழையனூர் வேளாளர்கள் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்கிறார்கள். ஒருவேளை அவன் அவன் பேய் என்று சந்தேகிக்கும் பெண்ணால் கொல்லப்பட்டால் தாங்கள் தீக்குளிப்போம் என்கிறார்கள். அவனை நீலி கொள்ள அவர்கள் தீப்பாய்கிறார்கள். இங்கிருந்து தான் நீலிக்கண்ணீர் எனும் பதம் வருகிறது.

நீலி தன்னைக் கொன்ற கணவனைப் பழி வாங்கினாலும் அது வசைக்குரிய ஒன்றாக மாறியிருப்பதைக் காண வேண்டியிருக்கிறது. அதேசமயம் வாணிகர்-வெள்ளாளர் முரண்பாடும் வெளிப்படுகிறது. காப்பியங்கள் வணிகர்களைப் போற்றியதையும், பக்திக்காலத்தில் பெரும்பாலும் நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும் இணைத்துக் கவனிக்க வேண்டும்.

முருகு வழிபாடு, வள்ளி வழிபாடு தனித்தனியே தமிழகத்தில் வழங்கி வ்வந்திருக்கின்றன. நாவுக்கரசர் முருகனின் இணையாக வள்ளியை குறிப்பிடுகிறார். மற்ற பக்தி இயக்க முன்னோடிகள் முருகனுக்கு இணையாக யாரையும் சொல்லவில்லை. அதேசமயம், தெய்வானையைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் வைதீகத்தில் முருகன் கார்த்திகேயனோடு இணைந்து வள்ளி-தெய்வானை என இருவருக்குக் கணவனாக மாறுகிறார். இந்த நெடிய பண்பாட்டு வரலாற்றைக் கணக்கில் கொள்ளாமல் கமில் சுவலபில் முதலிய தேர்ந்த அறிஞர்களே முருகனின் முதல் மனைவி தெய்வானை என்கிறார்கள்.

காயஸ்தர்கள் முதலிய வடநாட்டு கணக்கு எழுதும் சாதியினரின் கடவுளாக இருந்த சித்திர குப்தன் தமிழகத்தில் தெய்வமாக மாறிய பொழுது பிறப்பு-இறப்பு சார்ந்து நியாயக் கணக்கு பார்க்கும் பொறுப்புக்கு உரியவராக மாற்றப்பட்டு இருப்பது சுவையானது.

திருநெல்வேலியின் சிங்கிகுளத்தில் ஒரு சமணக் கோயில் உள்ளது. சமணம் திருநெல்வேலியை விட்டு வெளியேறி எழுநூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. நேமிநாதர் எனும் 23வது தீர்த்தங்கரர், அவரின் இணையான அம்பிகா யட்சி ஆகியோர் முனீஸ்வரர், இசக்கியம்மன் என்று இங்கே மாறியுள்ளார்கள். பலி முதலியவை இந்தக் கோயிலில் இல்லை. நேமிநாதர் பின்னுக்குத் தள்ளப்பட்டு அம்மன் வழிபாடு முன்னணி பெற்றிருக்கிறது. வைதீகம் பிற மதங்களின் இடங்களை நொறுக்குவதைச் செய்திருக்கையில், நாட்டார் மரபு அந்தத் தெய்வங்களைத் தனதாகக் காண்பதை, ‘மதச்சகிப்பின்மை என்று ஒன்று இல்லை.’ எனும் பணிக்கரின் வரிகளோடு ஒப்பிட்டு தொ.ப புரிய வைக்கிறார்.

வள்ளலார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயங்கினார். சிதம்பரத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் வடலூர் சபையை உருவாக்கி உருவம் அற்ற வழிபாட்டை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் சிதம்பத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் இருந்தது. சைவ மடங்களும் சாதி மரபைப் பேணுபவையாக இருந்தன. இந்தக் காலத்தில் வள்ளலார் சாதி வேறுபாடுகள் அற்ற வடலூர் சத்திய ஞானச் சபையை நிறுவினார். பிராமணர்களுக்கு மட்டுமே அன்னதானங்கள் பெருமளவில் தமிழகத்தில் வழங்குவது பொதுவழக்காக இருந்தது. கடுமையான பஞ்சங்கள் தமிழகத்தைச் சூழ்ந்த நிலையில், ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்று எழுதியதோடு நில்லாமல் எல்லா மக்களின் பசியைப் போக்கும் பெரும்பணியைச் செய்தார் என்பது நோக்கத்தக்கது.

 

Related image

ஆழ்வார் பாசுரங்களில் கண்ணன் பற்றிய குறிப்புகளே அநேகம் வருகின்றன. கீதை பற்றிய குறிப்பே இல்லாததைக் கவனிக்க வேண்டும், கண்ணன் என்பவனைப் பெருந்தெய்வமாக அவர்கள் பாடினாலும், சௌலப்பியம் மிக்க எளியவனாக அவனின் லீலைகளைப் பாடுகிறார்கள். ராதை எனும் அத்தை வடக்கில் அவனின் துணையாக இருக்க, தமிழகத்தில் முறைப்பெண்ணான நப்பின்னை அவனின் துணை என்று கதைகள் அமைகிறது. இந்த முறைப்பெண் உறவு திராவிடப் பகுதிக்கே உரியது என்பார் ஹட்டன்.

பாரதி சைவ மரபில் ஊறி வளர்ந்தவர். அவரின் மாமா கூடச் சிவ பூசை செய்பவராகப் பாரதி குறிப்பிடுகிறார். கண்ணன் பாட்டில் கூட மூன்று இடங்களில் சிவ யோகம் எனும் வரி வருகிறது. பின்னர் ஏன் வைணவ கண்ணன் குறித்துப் பாரதி பாடினான்? மதக்கொலைகள், கோத்த பொய் வேதங்கள் என்று பலவற்றைப் பாரதி சாடுகிறான்.
கண்ணன் என் காதலி என்று புரட்சி செய்கிறான். இறைவனை ஆண்டானாக, வேலையாளாக மாற்றி விளிம்பு நிலை மனிதனின் குரலை பதிகிறான். பாரதிக்கு மையத்தைக் கலைத்துப்போடும் பெரும் கனவு இருந்திருக்கிறது. அதிகார பீடங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பிரதியாக ஜனநாயக தன்மையைக் கண்ணனைக் கொண்டு அவர் முயற்சிக்கிறார். ‘வேண்டுமடி எப்பொழுதும் விடுதலை’ எனப்பாடிய பாரதி அதிகார மையம் அழித்தல் என்பதையே கண்ணன் பாட்டின் மூலம் நிகழ்த்துகிறார் என்கிறார் தொ.ப.

Image result for kannan paattu

ஆண்டாள் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இடையர் குலத்தைத் தன்னுடைய பாடல்களில் வடமதுரை, இடைச்சேரி, விருந்தாவனம் என்று பல்வேறு பிற்புலங்களைக் குறிப்பிடுகிறாள். எளிய மக்களின் மொழியில் இன்றும் வழங்கிவரும் சுள்ளி, மேலாப்பு, கட்டி அரிசி, பரக்கழி முதலிய சொற்கள் ஆண்டாளின் பாடல்களில் விரவி வருகின்றன. நாத்தனார் மாலை சூட்டுதல், தலையில் பொரி அள்ளிப்போடுதல் எனப் பார்ப்பனர்கள் பின்பற்றாத மணச்சடங்குகளைத் தன்னுடைய பாடல்களில் பதிகிறாள் ஆண்டாள். புராணங்களில் பெரும் தேர்ச்சி உள்ளவள் ஆண்டாள் என்பது, ‘வினதை சிறுவன்’ எனக் கருடனை குறிப்பதில் இருந்தே புலப்படுகிறது என்கிறார் தொ.ப.

தமிழகத்தில் பார்ப்பனர்கள் பல்வேறு ஜாதியினரியின் சடங்கியல் நடைமுறைகளைத் தங்களுடைய தலைமைக்குக் கீழ் கொண்டுவந்ததே ஆகும். மருத்துவர், பறையர், வள்ளுவர், வண்ணார் எனத் தங்களின் இடத்தைப் பறிகொடுத்தவர்கள் ஏராளம். திருமணத்தின் பொழுது காப்புக் கயிறை அறுக்கும் செயலை வண்ணார்,மருத்துவர் முதலியோர் தட்சணை பெற்றுக்கொண்டு செய்கிறார்கள். ஒருகாலத்தில் திருமணத்தை அவர்களே நடத்தினார்கள் என்கிறார் தொ.ப. சில சமூகங்களில் பார்ப்பன குருக்களுக்குத் திருமணச் சடங்குகளில் உதவி செய்பவர் மருத்துவர் என்பதையும் கவனிக்க வேண்டும்,,

நாட்டார் தெய்வங்களின் அருள் வரம்பு மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அதன் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். திருவிழா களங்களைச் சுத்தம் செய்வது, ஊர் சாட்டுதல், தேர்க்கால்களுக்குக் கட்டை இடுதல் என இவை நீளும். 1830 ல் கிறிஸ்துவர்களாக மாறிய தலித்துகள் கோயில் எடுபிடி வேலைகளைச் செய்ய மறுத்ததை எதிர்த்து லட்சுமி நரசு என்பவர் பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்ததைக் கவனிக்க வேண்டும். எல்லா வேலையும் செய்யும் தாங்கள், தேர் வடத்தை இழுக்க உரிமை வேண்டும் என 1989-ல் கண்டதேவியில் தலித்துகள் போராடினார்கள்.

கோவில்பட்டில் தேருக்குக் கட்டை போடும் தலித்துகள் திருவிழாவில் தாங்களும் பங்குகொள்ள உரிமை கேட்க கலவரமானது. முளைப்பாரி எடுக்க ஆதிக்க ஜாதிகளுக்கே உரிமை என்றாலும், அவை சென்ற தெருவை தலித்துகள் சுத்தப்படுத்த வேண்டும், துத்திகுளத்தில் தாங்களும் முளைப்பாரி எடுப்போம் எனத் தலித்துகள் கேட்க விழாவே நடக்காமல் போனது. உஞ்சனையில் கோயில் நுழைவு செய்ய முயன்று ஐந்து தலித்துகள் கொல்லப்பட்டார்கள். குதிரை எடுக்க முயன்று நாடார்களின் தடையை மீறியதால் சித்தனூர் பூச்சி எனும் தலித் கொல்லப்பட்டார். இவ்வாறு நாட்டார் கோயில்களிலும் பழமைக்கும், சமத்துவத்துக்கு இடையேயான போராட்டம் தொடர்கிறது.

பெரியாரியம் பேசுபவர்கள் நாட்டார் தெய்வத்தை ஆதரிப்பது எப்படி என்கிற கேள்விக்குத் தொ.ப. விரிவாகப் பதில் சொல்கிறார். புனித நூல்கள், விதிகள், புனித இருப்பிடங்கள் ஆகியவற்றைக் கொண்டு அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்பும் மதபீடங்கள் செயல்படுகின்றன. நாட்டார் தெய்வங்கள் நிறுவனமயமானவை அல்ல. அவை ஒருவழிபாட்டு முறைமை கொண்டவை அல்ல. ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் தெய்வங்களைப் பிறரும் வழிபடுவது தமிழகத்தில் உண்டு. ஒரு ஜாதியினர் மட்டுமே வழிபடும் தெய்வங்கள் உண்டு என்றாலும் பிறர் வழிபட்டாலும் பெரும்பாலும் தடுப்பது இல்லை. சாமியாடி, பூசாரி ஆகியோருக்குத் தரப்படும் புனிதம் திருவிழா அன்று மட்டுமே இங்கே நிலவும், பிறகு அனைவரும் சமமே. ஊர்த்தெய்வங்களைக் கொண்டு தங்களின் சாதி இருப்பை ஆதிக்க ஜாதியினர் நிறுவ பார்ப்பது உண்மை என்றாலும், நாட்டார் தெய்வங்களின் பிடிமண்ணை எடுத்து வந்து தனி ஆலயங்கள் நிர்ணயிப்பது உண்டு. மக்களின் உற்பத்தி உறவோடு தொடர்புடையவை அவை. கள்ளும், கறியும் இயல்பான தெய்வங்கள் இவை. 90% சிறுதெய்வங்கள் பெண் தெய்வங்கள் தான் ஆகும். சடங்கியல் போர்வையில் இதை வைதீகத்துக்குள் இழுக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. பெண்களைத் தீட்டில்லாதவர்களாக நாட்டார் மரபு காண்கிறது. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என நிராகரிக்காமல் நாட்டார் வழக்கின் தேவையை அதன் குறைகளோடு இணைத்தே காண்பது அவசியம் என்கிறார் தொ.ப.

Image result for periyar

பக்கங்கள்: 112
விலை: 100
தெய்வம் என்பதோர்
காலச்சுவடு
தொ.பரமசிவன்

இயக்குனர் மகேந்திரனும், சினிமாவும்


சினிமாவும் நானும்’ என்கிற இயக்குனர் மகேந்திரன் அவர்களின் நூலை வாசித்து முடித்தேன். விகடனில் மாணவ நிருபராக இருந்த பொழுது அவரை நேர்முகம் செய்ய ஆசைப்பட்டேன். அலைபேசியில் அவரை அழைத்துப் பேசிய கணத்தில் அந்தக் குரலில் இருந்த தணிவும், நெருக்கமும் இந்த நூலிலும் பரவியிருக்கிறது. இத்தனை நேர்மையும், கரிசனமும் ததும்ப எழுத முடியுமா என வியக்கிற இடங்கள் நூலில் ஏராளம்.

ஏழு மாதத்தில் குறைப்பிரசவ குழந்தையாகப் பிறந்தார் மகேந்திரன். குறைப்பிரசவ குழந்தைகள் பிறந்தால் பிழைக்காது எனக்கருதி கொண்டுபோய்ப் புதைப்பதே வழக்கம். அதையே மகேந்திரனின் அப்பாயியும் செய்யச் சொல்லியிருக்கிறார். மகேந்திரனை தன்னுடைய அடிவயிற்றின் கதகதப்பில் மூன்று மாதம் தன்னுடைய பிள்ளையைப் போலக் காத்த மருத்துவர் சாரா அம்மாவால் தான் நமக்கு அவர் கிடைத்தார்.

இளம்வயதில் நோஞ்சானாக இருந்த மகேந்திரன், ‘வாத்துக்கால்’ என்று நையாண்டி செய்யப்பட்டார். கல்லூரியில் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்று இருட்டிய பின்பு ஆடுகளத்தில் ஓடி தலைசிறந்த தடகள வீரராகப் பெயர் எடுத்தார். எம்.ஜி.ஆர். ‘நாடோடி மன்னன்’ திரைப்பட வெற்றி விழாவில் கலந்து கொள்ள மதுரைக்கு வந்திருந்தார். அவரை அப்படியே மகேந்திரனின் கல்லூரிக்கு அழைத்து வந்தார்கள்.

எம்.ஜி.ஆர் தான் பேசமாட்டேன் என்றும், மாணவர்களைப் பார்க்க வருகிறேன் என்று நிபந்தனையோடு வந்தார். மகேந்திரனுக்கு முன்னால் பேசிய மாணவர்கள் ரசிகர்களால் கூச்சலிட்டு இறக்கப்பட்டார்கள். அடுத்து மகேந்திரனின் முறை. அன்றைக்குச் சில நாட்களுக்கு முன்னர்த் தான் கல்லூரியில் வரம்புமீறி பழகியதற்காகக் காதல் ஜோடி மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதைக் குறிப்பிட்டு, ‘சினிமாவில் டூயட் பாடிக்கொண்டு ஊரே பார்க்கிற மாதிரி காதல் செய்கிற எம்ஜிஆரை மட்டும்தான் யாரும் கண்டுகொள்வதில்லை…’ என்கிற ரீதியில் பேச ஆரம்பிக்கக் கைதட்டல் பறந்தது. ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட மகேந்திரன் தமிழ் திரைப்பட உலகின் நாடகப்போக்கை கிழித்துத் தொங்கவிட்டார். நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் எம்ஜிஆரையும் ரசிகர் ஆக்கி பேசி முடித்தார் அவர். அது பிற்காலத்தில் அவரைப் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை எம்ஜிஆர் வழங்கும் அளவுக்குத் தாக்கம் செலுத்திய பேச்சாக இருந்தது.

 

Image may contain: 1 person

சினிமா மோகத்தில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களை நோக்கி மகேந்திரன் தோழமை நிறைந்த குரலில் மீட்க பலவற்றைப் பேசுகிறார். தன்னுடைய வீட்டுக்கதவை யாரேனும் தட்டும் பொழுது மகேந்திரனே திறப்பார். அதைக்கண்டு பலரும் அதிர்ச்சி அடைவார்கள். “என் வீட்டு கதவை நான் திறக்காமல் யார் திறக்க வேண்டும்?” எனக்கேட்கிற மகேந்திரன், ‘சினிமா ஜோடனைகளின் மீது எழுப்பப்பட்டு இருக்கிறது. சினிமா உலகம் தேவலோகமும் இல்லை, இங்கே நடிப்பவர்கள் தேவதூதர்களும் இல்லை…நம் நாட்டில் விவசாயி, அன்றாடங்காய்ச்சி எனப்பலரும் பட்டினி கிடக்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கை. ஆனால், நடிகன் பட்டினி கிடந்த கதையைச் சொல்லி பின்னர் முன்னேறியதை பேசுகையில் தேவையில்லாத கவர்ச்சி ஏற்படுகிறது. பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று சினிமாவில் ஜெயிக்க வருகிறீர்கள். விலைமதிப்பற்ற இளமை, ஆரோக்கியம் ஆகியவற்றை அடமானம் வைத்து ஜெயிக்க முடியாது. பட்டினியில் கவர்ச்சி கொள்ளாமல், அவர்களின் வெற்றிக்கான அடிப்படைகள், காரணங்கள் நாடி பயணியுங்கள்’ என்கிறார்.

திறமை, தன்னம்பிக்கை ததும்ப இதில் தான் இயங்குவேன் என்று இலக்கு வைத்துக்கொண்டு செயல்பட இளைஞர்களை அறிவுறுத்துகிறார். அதேசமயம், வாழ்க்கையில் பாதுகாப்பான வேலையில் ஈடுபட்டுக்கொண்டே தன்னுடைய கதைகளை வாழ்க்கையில் கண்டெடுத்து செதுக்க இயலும் என்று நம்பிக்கை தருகிறார். உலகத் திரைப்படங்களைப் பார்த்து பிரதி எடுக்காமல், அவற்றின் மூலம் கற்றலின் பரப்பை விரிவுபடுத்த வழிகாட்டுகிறார்.

‘சினிமாவில் பிரபலமாவதும், பெரிய ஆளாவதும் பெரிய விஷயமே. அப்படி ஆகமுடியாது போனால் ஒன்றும் குறைபாடு இல்லை. சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது, பெருமையுடையது. பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை. வீணாகாத வாழ்க்கை வாழ்ந்தால் போதும்.’ என்று அறிவுறுத்துகிறார்.

Image may contain: 3 people

தமிழ் சினிமாவில் பெண்களை டூயட் பாட மட்டுமே பயன்படுத்துவதைக் கவர்ச்சி என்பதைவிட அவர்களைச் சிறுமைப்படுத்தும் காரியம் என்கிறார். பெண்கள் மோசமாகத் திரையில் காட்டுவதைக் கண்டு மோசமான படம் என்று பொருமும் பெண்கள் கூட, ‘திரையில் நடிக்கும் பெண்கள் நம்மைப் போன்றவர்கள் தானே. அவர்களை இப்படிப் படத்தில் அலங்கோலமாகக் காட்டுகின்றார்களே!’ என்று யோசிப்பதில்லை எனப் பதிகிறார். பாடல் காட்சிகள் வருந்தும்படி உள்ளன. ‘இருப்பதைத் தானே காட்டுகிறோம்.’ என்பவர்களை நோக்கி காரமாக, ‘நமது வீடுகளில் படுக்கை அறைகளுக்கும், குளியல் அறைகளுக்கும் கதவுகள் எதற்கு? திறந்தே கிடக்கட்டுமே…உண்மைகளை ஏன் மறைக்க வேண்டும்?’ எனச் சொல்ல முடியுமா?’ என வினவுகிறார்.

உமா சந்திரனின் ‘முள்ளும்,மலரும்’ எனும் ஜனரஞ்சக நாவலை முழுமையாகப் படிக்காமல் தன்னுடைய மனப்போக்குக்கு ஏற்றவாறு அதை முள்ளும் மலரும் எனப் படமாக்கினார் மகேந்திரன். முள்ளும் மலரும் எதிரெதிர் பதமாகப் பயன்படுத்தப்படவில்லை. காளி எனும் முள் போன்ற கதாபாத்திரமும் மலரும் என்கிற பொருளிலேயே ‘முள்ளும், மலரும்’ எனும் தலைப்புத் தரப்பட்டது.

படத்தின் இறுதிக்காட்சியிலும், ‘உங்களை எனக்குப் பிடிக்கலை’ என்று சரத்பாபுவிடம் ரஜினி சொல்வதாக வரும் காட்சியில் ‘எப்படி இறுதிக்காட்சியில் மாறாமல் இருப்பார்?’ என்று சரத்பாபு கோபித்துக் கொண்டு நடிக்க மறுத்தார். காட்சிகளின் மூலம் படம் சொன்ன விதத்தைப் பார்த்துவிட்டு, ‘பாவி மண்ணள்ளி என் தலையில போட்டுட்டியே’ என்று தயாரிப்பாளர் வேணு செட்டியார் கதறியிருக்கிறார். ‘செந்தாழம் பூவில்’ பாட்டின் ஆரம்பகாட்சியை எடுக்கப் பணம் தர மறுத்தார் அவர். கமலின் பேருதவியால் படம் திரைக்கு வந்தது. மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தில் பின்னணி இசையில் பெரிய அளவில் முதல்முறையாக இளையராஜா மிரட்டினார் என்கிறார் மகேந்திரன்.

‘சிற்றன்னை’ எனும் புதுமைப்பித்தனின் கதையை உள்வாங்கி உதிரிப் பூக்கள் திரைப்படமாக எடுக்க முனைந்தார் மகேந்திரன். இறந்த பொழுது போடும் உதிரிப் பூக்கள் தலைப்பா என்று விமர்சித்தனர். தலைவிரி கோலமாக, பொட்டு அழிந்த நிலையில் நாயகி காட்சியளிக்கும் போஸ்டரை ஓட்டியதையும் கிண்டல் செய்தார்கள். புதுமைப்பித்தனை காசாக்கி விட்டார் என்கிற சர்ச்சையும் எழுந்தது. அனைத்தையும் தாண்டி ஓடியது. ரஷ்ய அரசு படத்தின் தரத்தை கேள்விப்பட்டுத் தானே வாங்கி ரஷ்யாவில் மொழிபெயர்த்து மக்களுக்குப் போட்டுக்காட்டியது.

கன்னடத்தில் ராசியில்லாத நடிகை எனச் சொல்லப்பட்ட அஸ்வினியை தன்னுடைய படத்தில் தைரியமாகப் போட்ட மகேந்திரன் சொல்கிறார், ‘படத்தின் கதையும், திரைக்கதைக்கான ட்ரீட்மென்ட்டும் தான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். இவை அல்ல.’ பூட்டாத பூட்டுக்கள் படத்தில் தேவையான நடிகர்கள் கிடைக்காமல் போனது, கைகொடுக்கும் கை படத்தில் விருப்பத்துக்கு மாறாக வைக்கப்பட்ட உச்சபட்சக் காட்சி படத்தின் தோல்விக்கு வழிவகுத்தது என்று எழுதினாலும் இந்தப் படங்களின் தோல்விக்குத் தானே காரணம் என்கிறார் மகேந்திரன்.

மகேந்திரன் சட்டம் படிக்கச் சென்னை வந்தார். ஏழு மாதத்துக்கு மேல் அத்தை அனுப்ப பணமில்லை என்று சொன்னதும் திமுகச் சார்பு இன முழக்கம் இதழில் திரை விமர்சனம் எழுத அமர்ந்தார். அப்பொழுது எம்ஜிஆர் அழகப்பா கல்லூரியில் மகேந்திரன் பேசிய பேச்சை நினைவுபடுத்தி அவரைத் திரையுலகுக்குள் அழைத்து வந்தார். என்றாலும், சீக்கிரமே இதழியல் பக்கம் சென்றார் மகேந்திரன். துக்ளக் இதழில் புலனாய்வு இதழியலில் பின்னினார். கிளைவ் விடுதியில் காவல்துறை நடத்திய அத்துமீறல் கோவையில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு, சிதம்பரத்தில் உதயகுமார் என்கிற மாணவனின் மரணத்துக்கு அடிகோலிய காவல்துறை செயல்கள் என்று திமுக ஆட்சியின் பல்வேறு தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார் மகேந்திரன்.

அலுவலகத்துக்குச் சீக்கிரம்பொ வந்துவிடும்து சோ அரைமணிநேரம் தாமதமாக வந்தார். அவரைக் காண வந்த செந்தாமரை, எஸ்.ஏ.கண்ணன் மகேந்திரனை ஏற்கனவே அறிந்ததால் அவரிடம் நாடகம் கேட்டார்கள். அப்பொழுது படித்த டிட்பிட்ஸ் இதழின் தாக்கத்தில் சொன்ன கதை, விரிந்து விருட்சமாகி சிவாஜி நடிக்கும் தங்கப் பதக்கம் படமானது. சௌத்ரி என்கிற வடநாட்டு பெயரை என் சிவாஜிக்கு வைத்தார் என்று யாருமே கேட்கவில்லை.

எம்ஜிஆரின் பசியாற்றும் தன்மை, மகேந்திரனின் மகள் குணமாக மொட்டையடித்துக் கொண்ட சோவின் அன்பு, கமலின் உதவியால் இயக்குனர் ஆனது என்று பலவற்றை மகேந்திரன் பதிகிறார். சிவாஜி மிகைநடிப்பை விடுத்து வீரபாண்டியன் படத்து வசனத்தைப் பேசிக் காண்பித்து அது எடுபடாது எனப் புரிய வைத்ததைப் பதிவு செய்கிறார். தங்கப் பதக்கம் படத்தில் தான் சொன்னபடியே வசனம் குறைத்து, உணர்வால் நெகிழ வைத்த நடிகர் திலகத்தை நினைவுகூர்கிறார். குள்ளமான உருவம் கொண்ட சிவாஜி எப்படி உயரமாகத் தோன்றுகிறார் என்கிற ஐயத்தை அவரிடமே கேட்டார். ‘நான் ஹீல்ஸ் செருப்பு போடுறதில்லை. நான் பின்னங்காலை அழுத்தி உயரமாகக் காட்டிக்கலை. மனதார உணர்ந்து, வேடத்தில் கலந்து பேசுவது கதாபாத்திரத்தில் உங்களை லயிக்க வைக்கிறது. அதனால் உயரமாகத் தெரிகிறேன்.’ என்றாராம்.

சிவாஜி எத்தனையோ வேடங்களில் அர்ப்பணிப்பை செலுத்தி நடித்தார். பல்வேறு ஒப்பனைகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அதை அவர் பெரிதாகப் பேசியதில்லை. இன்றைய நடிகர்களோ மொட்டை போட்டேன், எடை குறைத்தேன் என்று அவற்றைப் பெரிதாகப் பேசுகிறார்கள். நடிப்புக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் மையகவலையாக இருக்க வேண்டும் என்கிறார் மகேந்திரன்.

சினிமா என்றால் டூயட், சண்டை என்பதைத் தாண்டி காட்சி, நடிப்பு என மாறவேண்டும் என்கிறார். பெயருக்குப் பின்னால் பட்டங்கள் போட்டுக் கொள்வதை, ‘ஆஸ்கார் வாங்கின சத்யஜித் ரே எந்தப் பட்டத்தையும் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளவில்லை. நீங்களே மாறி மாறி டார்ச் லைட் அடிச்சுக்காதிங்க.’ என்று கடிகிறார்.

Image may contain: 2 people

தமிழ் நாயகிகள் பரங்கிமலை ஜோதி பெண்களைப் போலத் திரையில் உடல் வனப்பை காட்டி போகப் பொருளாக மாற்றப்படுவதைக் கவலையோடு குறிப்பிடுகிறார். பணம் சம்பாதிக்கக் கன்னக்கோல் வைப்பது, திருடன் ஆவது, கள்ளப்பணம் அடிப்பது என்று ஆண்கள் இறங்குகிறார்கள். பெண்களுக்குச் சந்தையில் மதிப்பு குறைவான காலமே இருப்பதால் உடலை காட்டி பொருள் ஈட்ட வைக்கப்படும் நிலையைக் கவனப்படுத்துகிறார்,

சினிமாவுக்கு விருப்பமில்லாமல் வந்த மகேந்திரன் இப்படி எழுதுகிறார் : ‘ஒரே சமயத்தில் பலரைப்பார்த்துப் பேசிக்கொண்டே கைவிரல்களைக் கண்களாகப் பாவித்து அரிவாள்மனையில் காய்கறிகளைத் துண்டுபோட்டு, எதோ ஒரு அனுமானத்தில் சமையல் பண்ணும் தாய்மார்களைப் போலத்தான் என்னுடைய போக்கும்.’ என்றுவிட்டு மேலே சொன்ன எல்லாவற்றையும் அடுக்குகிறார். கட்டாயச் சமையல் என்றாலும் சுவைக்கவே செய்கிறது.
சினிமாவும், நானும்
இயக்குனர் மகேந்திரன்
மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் வெளியீடு

புகைப்படங்கள் நன்றி: இயக்குனர் மகேந்திரனின் முகநூல் பக்கம்

மொழி அரசியல் பகுதி-2 ஏன் இந்தி தேசிய மொழி ஆகவில்லை?


இந்தியாவில் மொழி அரசியல் பகுதி 2:

மொழியும், அரசமைப்புச் சட்டமும்- அரை-மனதான சமரசம்!
கிரான்வில் ஆஸ்டின் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட உருவாக்கம் எப்படி அரை மனதான சமரசத்தை மொழிக்கொள்கையில் மேற்கொண்டது என்பதை விரிவாகப் பேசுகிறார். விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் இந்தி, உருது, பஞ்சாபி முதலிய பல்வேறு மொழிகளை இணைத்துப் பேசப்பட்ட ‘பஜார் மொழி’யான இந்துஸ்தானி கூட 45% மக்களாலேயே பேசப்பட்டது.

இந்தியா என்கிற தேசக் கருத்தாக்கத்துக்கு விடுதலைக்குப் பின்னர் ஒரு தேசிய மொழி வேண்டும் என்கிற கருத்தாக்கம் பலரிடம் நிலவியது. அதே சமயம், அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே ஒரு மொழியை இந்தியாவுக்கான மொழியாக்கும் அதீத முடிவை எடுக்கவில்லை.
சாமர்த்தியமாக இந்தியை ‘இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழி’ என்று அறிவித்தார்கள். ஆங்கிலத்தை இணை அதிகாரப்பூர்வ மொழியாகப் பதினைந்து ஆண்டுகள் தொடரலாம். அதற்குப் பிறகு இந்தி அதன் இடத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும் அல்லது முந்தைய நிலையை நாடாளுமன்றம் தொடரலாம் என்றும் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆங்கிலம் நீதிமன்றம், அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை அடைவதற்கு முன்னர் நிகழ்ந்த போராட்டங்கள், விவாதங்கள், எதிர்ப்புகள் முக்கியமானவை.

இந்தி/இந்துஸ்தானி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலும் ஆங்கிலம் எத்தனை ஆண்டுகளுக்கு அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வது, மற்ற மொழிகளுக்கு என்ன இடத்தைக் கொடுப்பது என்பதில் பலத்த கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில் மூன்று சாரார் இருந்தார்கள். இந்தித் தீவிரவாதிகள் என ஆஸ்டின் அழைக்கும் முதல் பிரிவினர், பெரும்பாலும் இந்து தேசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள்.

இவர்கள் பனராஸ், அலகாபாத்தில் உள்ள இந்து கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்கள். கோவிந்த தாஸ், தாண்டன், பாலகிருஷ்ண சர்மா ஆகியவர்கள் பண்டைய இந்து மன்னர்களின் ஆட்சியைப் போல வருங்காலம் அமையவேண்டும் என்று கனவு கண்டார்கள். தாண்டன் இந்து சீர்திருத்த சட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர். ஜி.எஸ்.குப்தா ஆரிய சமாஜத்தில் தொடர்ந்து இயங்கிய இஸ்லாமிய வெறுப்பை விதைத்தவர். ரகுவீரா பிற்காலத்தில் மதவாத ஜனசங்கத்தின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டவர். எனினும் அளகுராய் சாஸ்திரி, வி.டி.திரிபாதி, எஸ்.எல்.சக்சேனா ஆகியோர் மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் இந்தி மட்டுமே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் அனைவரும் முழங்கினார்கள். மிதவாதிகள் இந்தி இந்தியாவின் முதன்மை மொழியாக இருந்தாலும், மற்ற மொழிகளும் சமமான இடத்தைப் பெறவேண்டும் என்று வாதாடினார்கள். நேரு இந்தப் பிரிவை சார்ந்திருந்தார், இதில் தான் வங்கம், மெட்ராஸ், பம்பாய் முதலிய பகுதிகளைச் சேர்ந்த ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகக் கொண்ட உறுப்பினர்களும் இருந்தார்கள்.

இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழி என அழுத்தி வாதிட்டு இந்தியாவைப் பிளவுபடுத்தினாலும் பரவாயில்லை என்பது போன்ற பார்வையையே இந்திவாலாக்கள் பிரதிபலித்தார்கள். இவர்கள் ஆங்கிலம் இந்திய தேச விடுதலைக்கு எதிரானது என்பதால் அதனைத் தேசிய மொழியாகக் கொள்ளவே முடியாது என்று வாதிட்டார்கள். அதனதன் தளத்தில் அந்தந்த மொழியைப் பயன்படுத்துவோம் என்றார்கள் மிதவாதிகள். இந்தியை தேசிய மொழியாக ஆக்காவிட்டாலும், உருது மொழியால் வளப்பட்டிருந்த இந்தி மொழியை அரசு பயன்படுத்துகிற பொழுது சம்ஸ்கிருத சொற்களையே பிரதானமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் பிரிவை சேர்த்தார்கள். மிதவாதிகள் இந்தியாவின் பன்மையான கலாசாரம், இந்துஸ்தானியில் காணப்படும் வடிவங்கள், பாணி, வெளிப்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இந்தி அமையவேண்டும் என்கிற வரியை சேர்த்து திருப்திப்பட்டுக்கொண்டார்கள்.

பாகிஸ்தான், கனடா, தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்திலும் பல்வேறு மொழிகள் புழக்கத்தில் உள்ளன என்றாலும் அங்கே நிலவரம் இவ்வளவு சிக்கலானது இல்லை. பாகிஸ்தான் பெரும்பான்மை மொழிகளை விடுத்து உருது மொழியை தேசிய மொழியாகத் திணித்தது. கனடா, தென் ஆப்ரிக்காவில் மக்கள் தொகையும் , மொழிகள் எண்ணிக்கையும் இந்தியாவோடு ஒப்பிடும் பொழுது குறைவே! இவ்விரண்டு நாடுகளிலும் இரண்டு மொழிகளே பிரதான மொழிகள். சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்று மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

காந்தி இந்திய விடுதலைக் களத்துக்குள் வந்த பொழுதே, ‘இந்தியை தேசிய மொழிக்கான இடத்தையும் , மற்ற பிராந்திய மொழிகளை அவற்றுக்கான இடத்தை மக்களின் வாழ்வில் தராவிட்டால் சுயராஜ்யம் என்பது முழுமையடையாது என்பது என்னுடைய அடக்கமான, ஆனால், உறுதியான கருத்தாகும்.’ என்றார். காந்தியின் தலைமையில் மக்களின் மொழிகளைத் தன்னுடைய கூட்டங்களின் அலுவல் மொழியாகக் காங்கிரஸ் மாற்றியது. காக்கிநாடா காங்கிரசில் இந்துஸ்தானியிலேயே கட்சியின் அலுவல்கள் முடிந்தவரை நடைபெற வேண்டும் என்று கட்சிச்சட்டம் மாற்றப்பட்டாலும் ஆங்கிலத்தைப்
பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

மோதிலால் நேருவின் அறிக்கை இந்தியாவின் பொது மொழியாக இந்துஸ்தானி ஆகவேண்டும் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டது. நேரு காந்தியைப் போலவே அந்தந்த பகுதி மக்களின் வளர்ச்சி தங்களின் தாய்மொழியால் கற்பதன் மூலமே சாத்தியம் என்று சொன்னார். ஆங்கிலத்தின் முந்தைய தொடர்புகள், தற்போதைய தேவையால் அதனைத் தவிர்க்க முடியாது என்று நேரு நடைமுறை உணர்ந்து கருதினார். இந்துஸ்தானி இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று காந்தி நூறு முறை சொல்லியிருப்பார். நேருவும் அதுவே இந்தியாவின் தேசிய மொழியாகும் என்று கருதினார். ஏன் அப்படி? இந்துஸ்தானி சம்ஸ்கிருதமயமாக்கப்படாமல்,பாரசீகமயமாக்கப்பட்ட உருதுவாகவும் இல்லாமல் எல்லாப் பிராந்திய மொழிகளிலும் இருந்து வார்த்தைகளைப் பெற்று அம்மொழி வளரவே அவர்கள் கனவு கண்டார்கள்.

ராஜாஜி இந்துஸ்தானிய பிராந்திய மொழிகளின் வரிவடிவங்களில் எழுதுவதன் மூலம் அம்மொழியை வளர்க்க முடியும் என்று கருதினார். இந்திவாலாக்கள் இந்தி மொழியானது உருது, ஆங்கிலத்தை முழுக்க விலக்கி எழவேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். ஆனால், நேரு உட்படப் பல இந்துக்கள் உருதுவை தங்களின் தாய்மொழியாகக் கொண்டிருந்தார்கள். காந்தி தொடர்ந்து இந்துஸ்தானி மொழியே இந்துக்கள், இஸ்லாமியர்களை இணைக்கும் என்று கருதினார். நாற்பத்தி ஐந்தில் தாண்டன் இந்தி சாஹித்திய சம்மேளனத்தில் நாகரி வடிவத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதைத் தொடர்ந்தால் தான் அவ்வமைப்பில் இருந்து விலகுவதாக எச்சரித்தார். தாண்டன் ஆங்கிலத்தைத் துரத்திவிட்டு பிராந்திய மொழிகளைப் பேசுபவர்கள் இந்திக்கு மாற்றப்பட வேண்டும் என்றார். காந்தி பதவி விலகினார். முப்பத்தி ஏழில் ராஜாஜி, சுப்பராயன் இந்துஸ்தானியை உயர்கல்வியின் மூன்று ஃபார்ம்களில் திணிக்க, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக. சுப்பராயன் ஒழிக! ராஜாஜி ஒழிக!’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அரசியலமைப்பு வரைவுக் குழுவில் மொழிப்போர்:
விதிமுறைகள் கமிட்டியில் தான் முதல் சிக்கல் ஆரம்பமானது. அரசியலமைப்பு சட்ட விவாதங்கள் இந்துஸ்தானி அல்லது ஆங்கிலத்தில் நடக்கலாம் என்று ராஜேந்திர பிரசாத் அறிவிக்க, சேத் கோவிந் தாஸ் ‘இருபத்தி ஐந்து வருடங்கள் காந்தியடிகள் போராடியும் இந்துஸ்தானியை தெற்கைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆங்கிலம் இந்தச் சபையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை எங்களின் பொறுமையை முழுவதும் சோதிக்கிறது.’ என முழங்க, ‘ஒட்டுமொத்த சபையின் அலுவலும் ஆங்கிலத்தில் நடைபெற வேண்டும்’ என்று கே.சந்தானம் தீர்மானம் கொண்டுவந்தார். எனினும், இரண்டு மொழிகளுமே தொடரும் என்றே முடிவு செய்யப்பட்டது.
.
மத்திய அரசமைப்புச் சட்ட கமிட்டியில் இருந்த பனகல் நரசிங்க ராவ் பிராந்திய மொழிகளுக்கு எந்த இடத்தையும் அரசமைப்புச் சட்டத்தில் தர முடியாது என்றும், சட்டசபைகளில் கூட இந்துஸ்தானியோ, ஆங்கிலமோ தான் பயன்பாட்டு மொழியாக இருக்கும் என்று அவர் மாதிரியை வகுத்தார். இந்துஸ்தானியின் இடத்தை இந்திக்கு வழங்கியும், சட்டசபையில் இந்தியும், பிராந்திய மொழியும் தொடரும் என்றும் திருத்தங்கள் படேல் அறிமுகப்படுத்திய சட்ட வரைவில் கொண்டுவரப்பட்டன. இந்தச் சூழலில் பிரிவினை ஏற்பட்டு இந்துஸ்தானி மொழியை ஆதரிப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கும்,, பிரிவினைக்கும் ஆதரவானவர்கள் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்றது. இந்தச் சிக்கலால் இந்துஸ்தானி என்கிற சொல்லுக்குப் பதிலாக நேரு, காந்தி முதலியவர்களே ‘பரவலான இந்தி’ என்று பயன்படுத்தினார்கள். விடுதலைக்குப் பிறகு மீண்டும் மொழிச்சிக்கல் களத்துக்கு வந்தது. இந்தியை ஏற்க இஸ்லாமியர்கள் தங்களின் தேசபக்தி பரிசோதனையில் வெற்றிபெற சம்மதித்தார்கள், தெற்கைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலமும் இணைந்து பயன்பாட்டில் பதினைந்து வருடம் இருக்க வேண்டும் என்று கோரினார்கள். வெறும் இந்தி மட்டுமே வேண்டும் என்று முரண்டுபிடித்தார்கள் இந்திவாலாக்கள்.

பீரார், மத்திய மாகாணங்களைச் சேர்ந்த அரசியலமைப்பு குழு உறுப்பினர்கள் கொண்டுவந்த திருத்தம் நிலைமையைச் சூடாக்கியது. மத்திய அரசுப்பணி தேர்வுகளில் ஒருவர் வெற்றி பெற இந்தி அறிவு கட்டாயம் தேவை என்றும், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ வடிவம் இந்தியிலேயே இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இது இந்தி பேசாத பகுதி உறுப்பினர்களைக் கவலைகொள்ள வைத்தது. டிடிகே ‘ஏற்கனவே பிரிவினையைத் தென்னகத்தில் சில சக்திகள் பேசிக்கொண்டிருக்கையில், இந்த ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் ‘இந்தி சர்வாதிகாரம்’ அவர்களை வலுப்படுத்தும்.’ என்று கவலைப்பட்டார்.

ராஜேந்திர பிரசாத் ஏற்கனவே ஹிந்துஸ்தானி, உருது, இந்தி ஆகிய மொழியைப் பயன்படுத்த அலுவலில் அனுமதித்தாலும், ஆங்கிலச் சொற்களை இணைத்துக் கொள்ளவும், ஆங்கில மொழியை அலுவலில் பயன்படுத்தவும், தெற்கைச் சேர்ந்த பட்டாபி சீதாராமையாவை காங்கிரஸ் தலைவர் ஆக உதவியிருந்த அவரே அதிகாரப்பூர்வ அரசமைப்புச் சட்டமாக இந்தி வடிவமே கொள்ளப்பட வேண்டும் என்று அடம்பிடித்தார். நேரு ஆங்கில வடிவமே தொடரவேண்டும் என்றும், பலகாலம் கழித்து வேண்டுமானால் இந்திக்கு அந்த இடம் தரப்படலாம் என்றும் சொன்னார்.

சிறுபான்மையினர் தங்களின் மொழியை, கலாசாரத்தைக் காத்துக்கொள்ள உரிமை தந்த அதே சமயம், அரசு சிறுபான்மையினருக்கான கல்விக்கூடங்களை அமைப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் அம்பேத்கர், முன்ஷி கருதினார்கள். அதாவது அரசு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லும் அதே சமயம், இதையெல்லாம் செய்க என்று சிறுபான்மையினர் சார்ந்து சொல்லக்கூடாது என்று அவர்கள் கருதினார்கள். அரசுக்கு அறக்கடமையாக அது அமையலாமே அன்றிக் கட்டாயம் என்று அழுத்தம் தர அவர்கள் விரும்பவில்லை. மொழிச் சிறுபான்மையினர் மீது பெரும்பான்மை மொழியைத் திணிக்கக் கூடாது என்றும் அத்தீர்மானம் சொன்னது.

நாற்பத்தி எட்டாம் வருடத்தின் இலையுதிர் காலத்தில் ஓரிசா மாகாணத்தில் ஒரியா, தெலுங்கு இரண்டும் அதிகாரப்பூர்வ மொழி என்ற பொழுதும் கஞ்சம், கோராபுட் முதலிய தெலுங்கு பெரும்பான்மை மாவட்டங்களில் ஒரியா திணிக்கப்பட்டது. பீகாரின் மன்பாம் மாவட்டத்தில் வங்க மொழியினர் பெரும்பான்மையினராக இருந்த சூழலில் அங்கே இந்தி மொழி பள்ளிகளில் திணிக்கப்பட்டது. மத்திய மாகாணத்தின் நாக்பூரில் மராத்தி பேசுபவர்கள் இந்தி பேசுபவர்களைப் போல் இருமடங்கு இருந்தும் நாக்பூர் பல்கலை இந்தியை பயிற்றுமொழியாக அறிவித்தது.

இந்தச் சூழலில் காங்கிரஸ் செயற்குழு ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய பகுதியில் பயன்படுத்த வேண்டிய மொழியை அதுவே தேர்வு செய்யலாம். நீதிமன்ற, அலுவல் மொழியாக அதனையே பயன்படுத்தலாம் என்றும், இருபது சதவிகிதம் வரை ஒரே மொழிச் சிறுபான்மையினர் இருந்தால் அரசின் கோப்புகள் அந்த மொழியிலும் அமைய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தொடர்பு கொள்ளும் மொழி மத்திய அரசு பயன்படுத்தும் ஒரு மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 7 1949-ல் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தாண்டன் யாரெல்லாம் இந்தியை நாகரி வரிவடிவத்தில் தேசிய மொழி ஆவதை எதிர்க்கிறார்களோ அவர்கள் தேசியத்துக்கு எதிரானவர்கள், மதவாத சக்திகளுக்குத் துணை போவதையும் செய்கிறார்கள் என்றார். அரசமைப்பு வரைவுக் குழு கூடிய பொழுது நாடாளுமன்றம் ஆங்கிலம் அல்லது/மற்றும் இந்தி ஆகிய இரண்டையும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் பத்து வருடங்கள் பயன்படுத்தலாம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உள்ள ஓட்டையைப் பலர் எதிர்த்தார்கள். சந்தானம் தலைமையிலான குழு பதினைந்து ஆண்டுகள் என்று இதனை விரிவுபடுத்த கோரியது. அதோடு நில்லாமல் பொதுப் பயன்பாட்டுக்கு அரேபிய எண் முறையைப் பயன்படுத்தலாம் என்றும் அது பரிந்துரைத்தது.

இந்தியை தேசிய மொழியாக்கவும், இந்தியாவுக்குப் பாரத் எனப் பெயர் சூட்டவும் ஒரு பெண் துறவி உண்ணாவிரதம் இருந்தார். அவரை நேரு முதலியோர் சந்தித்துச் சமாதானப்படுத்தினார்கள். அரேபிய எண்கள் என்றால் எதிர்ப்பு வரும் என்று உணர்ந்து அதை ‘சர்வதேச எண்கள்’ என மாற்றினார்கள். இவை அனைத்தும் ஓட்டெடுப்புக்கு வந்தது. எழுபத்தி நான்கு-எழுபத்தி நான்கு என்று அரேபிய எண்கள், நாகரி எண்கள் இரண்டுக்கும் ஓட்டுக்கள் கிடைத்தன. மேலும், இந்தி பேசும் மாகாணங்கள் அரசோடு தொடர்பு கொள்ள இந்தியைப் பயன்படுத்தலாம் என்றும், எட்டாவது அட்டவணையில் ஆங்கிலம் சேர்க்கப்படாது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தப் பதினைந்து வருடத்தைக் குறைக்கவும், நாகரி எண்களைப் பயன்படுத்தவும், அரசுப்பணிகளில் இந்தியை கட்டாயமாக்கவும் இந்திவாலாக்கள் போராடினார்கள். இறுதியில் நாகரி எண்கள், இந்தி எண்கள், சர்வதேச எண்கள் இணைந்து பயன்படும் என்றும், உச்ச, உயர் நீதிமன்றங்களில், சட்டங்கள், அவசரச்சட்டங்கள் ஆகியற்றில் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலமே பதினைந்து வருட காலத்துக்கு இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியை இந்தியா முழுக்க வளர்ப்பதன் வேகத்தைக் கண்டறிய இந்தி கமிஷன்கள் அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிற மொழிகள் எட்டாவது பட்டியலில் இடம் அளிக்கப்பட்டதோடு, அரசுப் பணித் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதவும் அனுமதிக்கப்பட்டது. அந்தப் பிற மொழிகளைப் பிராந்திய மொழிகள் என்று சொல்லாமல், ‘அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்’ என்று அறிவிக்க நேரு சொன்னார். ஆர்.எஸ்.சுக்லா இப்படிப் பட்டியலில் பிற மொழிகளைச் சேர்ப்பது தேவையில்லாதது என்றார். இந்து மகாசபையின் முன்னாள் தலைவரும், வங்காளியுமான ஷ்யாம் பிரசாத் முகர்ஜி இந்தப் பட்டியலிடுதலை வரவேற்று இது இந்திக்கு இணையாகப் பிற மொழிக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை என்கிற சூழலை சரி செய்யும்.’ என்றார்.

ஓட்டெடுப்பில் இவை பெரும்பாலும் ஏற்கப்பட்டு இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக இந்துஸ்தானியை ஒரு ஓட்டில் முந்தி வென்றது. அம்பேத்கர் உட்பட இருபத்தி எட்டு பேர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்க தீர்மானம் கொண்டுவந்தார்கள். எல்.கே.மைத்ரா என்பவர் யாருக்கும் வடமொழி தெரியாது என்பதால் அனைவர்க்கும் சமமான வாய்ப்பை அது வழங்கும் என்றார். எனினும் அது ஏற்கப்படவில்லை. நேரு இந்திவாலாக்களின் தொனியில் இருந்த அதிகார மமதையைக் கண்டித்தார். மக்களின் மொழிதான் தேசிய மொழியாக வேண்டுமே அன்றி, கற்ற சிலரின் மொழியல்ல என்றார்.

தாண்டன் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது நம்மைப் பின்னோக்கி தள்ளிவிடும் என்றும், நாகரி வடிவத்தில் மட்டும் எண்களைப் பயன்படுத்துவது நம் பண்டைய பாரம்பரியத்தின் அடையாளம் என்றும், உடனடியாக ஆங்கிலத்தின் இடத்தை முழுமையாக இந்திக்குத் தரலாம், அதிகபட்சம் ஐந்து வருடங்கள் வேண்டுமானால் ஆங்கிலம் அமலில் இருக்கலாம் என்று கொதித்துப் பேச, மவுலானா அபுல் கலாம் ஆசாத், இந்தி படிப்படியாகவே தென்னகத்தை அடைய வேண்டும் என்றும், வடக்கு-தெற்கு இரண்டையும் இணைக்கும் புள்ளியாக இருக்கும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டால் அந்த இணைப்பு அறுந்துவிடும் என்று எச்சரித்தார்.

இறுதியாக முன்ஷி-அய்யங்கார் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நாகரி, ஆங்கில எண் பயன்பாடு குறித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றும். உயர்நீதிமன்றங்களில் ஜனாதிபதி அனுமதித்தால் இந்தி அலுவல் மொழியாகப் பயன்படலாம், சட்டங்கள், அவசரச்சட்டங்கள், மசோதாக்கள் அந்தந்த மாநில மொழியில் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழியாக்கத்தோடு பதிப்பிக்கப்படலாம் என ஒத்துக்கொள்ளப்பட்டது. சம்ஸ்கிருதம் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு இந்தியின் பயன்பாடு அரசு அலுவல்களில் குறையவே செய்தது. காங்கிரஸ் கட்சியே ஆங்கிலத்தில் தன்னுடைய அலுவல்களை நடத்தியது. மொழி ஆதிக்கத்தைச் செலுத்த முயன்ற இந்தி வாலாக்களின் போக்கு அதற்குப் பலத்த எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. அரைமனதான ஒரு சமரசமே எட்டப்பட்டது என்றாலும், அடுத்தடுத்து வந்த 1963-ன் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் ஆங்கிலத்தை இந்தியோடு அரசின் அதிகாரப்பூர்வ மொழியாகத் தொடர்வதை உறுதி செய்தது. ஆங்கிலம் பேசுவது இந்தியத் தன்மைக்கு எதிரானது இல்லை என்கிற புரிதல் உண்டானது.