கூட்டணி கூத்துக்களின் வரலாறு!


இந்தியாவில் கூட்டணி அரசியல் என்கிற அறிமுக நூலை வாசித்து முடித்தேன். கூட்டணி ஆட்சிகள் மத்தியில் நிலையற்ற ஆட்சியைத் தருகின்றன என்றும், அவை நிர்வாகத்தைச் சீர்குலைக்கின்றன எனவும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. இந்த நூல் கூட்டணி அரசியலின் நீள,அகலங்களைத் தொட்டுக்காட்டுகிறது.

விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் கட்சியாகவே இருந்தது. அதைவிட்டு ஏழைகள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் அன்னியப்பட்டு நிற்கிறார்கள் என்பதை உணர்ந்த காந்தி வானவில் கூட்டமைப்பை போலக் காங்கிரசை உருவாக்கினார். பலதரப்பட்டவர்கள் காங்கிரசில் இருந்தபடியே இயங்க முடியும் என்கிற சூழலை விடுதலைக்கு முந்தைய காங்கிரஸ் இயக்கம் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தது. காந்தி, நேரு ஆகியோர் தேசியம் என்கிற சொல்லாடலை அதிகமாகவோ, அழுத்தியோ சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் ஐரோப்பிய பாணியில் இந்தியா என்கிற தேசத்தை ஒற்றைப்படையான தேசியத்தைக் கொண்டு கட்டமைத்து விடமுடியாது என்கிற புரிதல் இருந்ததே ஆகும்.

இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்திலும் பல்வேறு தரப்பினரின் விருப்பங்கள், கவலைகள், கோரிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இந்திய அரசமைப்புச் சட்டம் எழுந்தது..
கூட்டாட்சி என்பது வெறுமனே அதிகார அதிகரிப்பு என்பதை மட்டும் இலக்காகக் கொண்டு அமைகின்றனவா, அல்லது கருத்தியல் காரணங்களும் உண்டா என்று இந்திய அளவில் பார்த்தால் சிக்கலான ஒரு பதிலே கிடைக்கிறது. சோசியலிச பாதையில் சென்றதாகச் சொல்லிக்கொண்ட காங்கிரஸ் இடதுசாரிகளோடு தன்னை இணைத்துக் காட்டிக்கொண்டதில்லை என்பதையும், இந்துத்வா என்று கோஷமிட்டாலும் ஆட்சியமைக்கக் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் அதனைத் தள்ளிவைக்கப் பாஜக தயங்கியதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இடதுசாரிகள் மட்டும் மேற்கு வங்கத்தில் மார்க்சியம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இணைந்திருந்தார்கள் எனலாம்.

ராம் மனோகர் லோகியா தான் காங்கிரசுக்கு எதிரான பலரையும் இணைத்துக் கொள்ளும் கூட்டணியை அமைக்க அடித்தளமிட்டார். எப்படி இடதுசாரிகளான சோசியலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் ஆகியோரோடு ஜனசங்கத்தினர் இணைந்து பணியாற்ற முடியும் என்கிற வினா எழுப்பப்பட்ட பொழுது, ‘தீவிர இடதுசாரியான கிருஷ்ண மேனன், தீவிர வலதுசாரியான எஸ்.கே.பாட்டீல் ஆகிய இருவரும் ஒரே காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கின்ற பொழுது இது ஏன் சாத்தியப்படக்கூடாது?’ என்று அவர் வினவினார்.

லோகியாவின் முயற்சிகள் பலனைத் தந்தன. 67-க்கு பிந்தைய தேர்தல்கள் காங்கிரஸ் பல்வேறு மக்களின் விருப்பங்களைப் பெரும்பாலும் பிரதிபலிக்கும் கட்சி என்கிற இடத்தை இழந்து கொண்டிருந்தது என்பதைக் காட்டின. அந்தாண்டு மிகவும் மெல்லிய பெரும்பான்மையை மத்தியில் காங்கிரஸ் பெற்றது என்றாலும் ஒன்பது மாநிலங்களில் ஆட்சியை இழந்திருந்தது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்த ஆட்சிகள் நிலைக்கவில்லை என்பது தனிக்கதை.

லோகியாவின் அடியொற்றி ஜெயபிரகாஷ் நாராயணன் ஆண் பெண் சமத்துவம், நிற, ஜாதி ரீதியான வேறுபாட்டை ஒழித்தல், அழிவைத் தரும் ஆயுதங்கள் எதிர்ப்பு, காலனியாதிக்கம்,. அந்நிய ஆட்சி எதிர்ப்பு முதலிய ஏழு கொள்கைகளைக் கொண்டு சப்தக்ரந்தி என்கிற பெயரில் தன்னுடைய செயல்திட்டத்தை முன்மொழிந்தார். நெருக்கடி நிலைக்குப் பின்னர்ப் பல்வேறு தரப்பினரும் இந்திரா எதிர்ப்பு என்கிற புள்ளியிலும், ஜனநாயக மீட்பு ஆகியவற்றுக்காகவும் ஜனதா கட்சியின் கீழ் ஒன்றுசேர்ந்தார்கள். ஆட்சி அமைத்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். ஜனதா கட்சி இரண்டிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்கிற சிக்கலில் ஆட்சியை மொரார்ஜி தேசாய் இழக்க நேரிட்டது.

வி.பி.சிங் காலத்தில் ஒருபுறம் இடதுசாரிகள், இன்னொருபக்கம் பாஜக ஆகிய இருவரும் வெளியில் இருந்து ஆதரவு தர அவர் ஆட்சியமைத்தார். அடுத்துக் காங்கிரஸ் ஆதரவில் தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர் ஆனார்கள். இந்த இரண்டு ஆட்சிகளும் காங்கிரசின் ஆதரவு விலக்கலால் கவிழ்ந்தன. பல்வேறு கட்சியினரை இணைத்துக் கொண்டு பாஜக தன்னுடைய தீவிர வலதுசாரி முகத்தைத் துறந்து தேர்தலை எதிர்கொண்டு வென்றது. அடுத்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் இடதுசாரிகளின் ‘மதவெறி சக்திகளை’ ஆட்சிக்கு வராமல் தடுக்கும் இலக்கால் காங்கிரஸ் ஆட்சிக்கட்டில் ஏறியது. அடுத்தத் தேர்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணியினர் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெற்றது நிகழ்ந்தது.


1967 தேர்தலில் தான் எண்ணற்ற கூட்டணி ஆட்சிகள் மாநில அளவில் சாத்தியமானது. தமிழகத்தில் மட்டும் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றதால் கூட்டணி ஆட்சி இங்கே ஏற்படவில்லை. முக்கியமான சில மாநிலங்களில் எப்படிக் கூட்டணி ஆட்சி இயங்கியது என்று காண்பது சுவையாக இருக்கக்கூடும்.

மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி என்கிற பெயரில் சிபிஐ(எம்) கருத்தியல் ரீதியாக வேறுபட்டவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியமைத்தார்கள். சிபிஐ, பார்வர்ட் ப்ளாக், புரட்சிகரச் சோசியலிச கட்சி ஆகியவற்றோடு காங்கிரஸ் கட்சியை விட்டு விளங்கி பங்ளா கட்சியைத் துவக்கிய எம்.எல்.ஏக்கள் என்று கலவையான கூட்டணியாக அந்த ஆட்சி இருந்தது. அஜோய் முகர்ஜி தலைமையிலான அரசு சிறப்பான நீர்ப்பாசனம், நிலப்பகிர்வு, கல்லூரிகளில் இடப்பெருக்கம், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்தல் என்று பல தளங்களில் சிறப்பாக இயங்கினாலும் எண்ணற்ற உட்கட்சி பூசல்களும், கூட்டணிப் பிளவுகளும் இருந்தன. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பிரிந்து போய்ப் பி.சி.கோஷ் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியமைத்தார். மூன்றே மாதத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது.

உத்திர பிரதேசம்:
காங்கிரசின் வீழ்ச்சியைச் சோசியலிஸ்ட்கள், ஜனசங்கத்தினர் இங்கே பயன்படுத்திக்கொண்டனர். ஆனால், அறுதிப்பெரும்பான்மைக்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. ஆரம்பத்தில் ஒத்துவராதே எனத் தயங்கினாலும் பீகாரில் இடதுசாரிகள், ஜனசங்கம் இணைந்து மகாமாயா பிரசாத் சிங்கை முதல்வர் ஆக்கியதைப் போல உத்திர பிரதேசத்தில் காலம் கனிந்தது.

காங்கிரசை பிளவுபடுத்திக் கொண்டு ஜன் காங்கிரஸ் என்கிற கட்சியைத் துவங்கிய சரண் சிங் அதனோடு ஜனசங்கம், சம்யுக்தா சோசியலிச கட்சி, சுதந்திரா, இடதுசாரிகள், ஜனநாயக கட்சி, சுயேட்சைகள் என்று அனைவரையும் இணைத்து சம்யுக்தா வித்யாக் தளம் என்கிற பெயரில் கூட்டணி அமைத்தார். உத்திர பிரதேசத்தின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர் ஆனார். கூட்டணி என்பதன் உண்மையான பொருள் இங்கேதான் வெளிப்பட்டது. பிற கட்சியினரையும் ஆட்சியில் இணைத்துக்கொண்டதோடு, அக்கட்சியின் தலைவர்களே யார் அமைச்சராக வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையையும் தந்தார்.

19 அம்ச குறைந்தபட்ச செயல்திட்டத்தை அறிவித்தார்கள். நில வரியை நீக்குவது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், உணவு தானியங்கள், நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது என்று பட்டியல் நீண்டது. நில வரியை நீக்க வேண்டும் என்கிற லோகியாவின் அழுதத்தை நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று சரண் சிங் ஏற்க மறுத்தார். அதனோடு இந்துத்வா அரசியலை முன்னெடுப்பதாக ஜனசங்கத்தைக் கூட்டணியின் பிறகட்சியினர் விமர்சித்தார்கள். எல்லாமும் முட்டிக்கொண்டு சரண்சிங்கின் ஆட்சி சீக்கிரமே கவிழ்ந்தது.

 

மத்திய பிரதேசம்:
மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் மூன்று வெவ்வேறு வடிவங்களில் கூட்டணி ஆட்சிகள் ஏற்பட்டு ஐந்தாண்டை இங்கே நிறைவு செய்தன. முதல் இரண்டும் சம்யுக்தா வித்யாக் தளம் தலைமையிலும், மூன்றாவது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியாக அமைந்தது.

ஹரியானா:
இடைநிலை சாதியினர் குறிப்பிடத்தகுந்த சக்தியாக மாறிவருகிறார்கள் என்பதன் அடையாளமாக ஹரியானாவின் அரசியல் போக்கு இருந்தது. பகத் தயாள் சர்மா, ராவ் பிரேந்திர சிங் என்கிற இரு கோஷ்டியாகக் காங்கிரஸ் பிரிந்து கிடந்தது. இருவரும் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள். சர்மா முதல்வராக ஆன அடுத்த நாளே தன்னுடைய ஆதரவாளர்கள் பலர் தோற்க அவரே காரணம் என்று கறுவிக்கொண்டு பதினான்கு எம்.எல்.ஏக்களோடு கட்சியைவிட்டு வெளியேறினார் பிரேந்திர சிங். ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தது.

காங்கிரஸ் கட்சியில் ஜாட் வகுப்பை சேர்ந்த பன்சி லால் சர்மாவுக்குப் பதிலாகக் கட்சியின் முகமாக முன்னிறுத்தப்பட்டார். பன்சி லால் ஆதரவோடு சர்மா காங்கிரஸ் தலைவராகவாது ஆகலாம் எனப் பார்த்தார். அதற்கும் வழியில்லை எனக் கைவிரித்தார் பன்சிலால். ஆதிக்க ஜாதியினர், இடைநிலை ஜாதியினர் இருவரையும் இணைத்துக் கூட்டணி அமைத்த பன்சிலால் முதல்வர் ஆனார். அவருக்கு ஜனசங்கம் வெளியில் இருந்து ஆதரவு தந்தது.

கேரளா:
கேரளாவில் முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஈழவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், நாயர்கள் என்று நான்கு பிரிவினரும் குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியோடு இருந்தார்கள். சிபிஐ, முஸ்லீம் லீக் ஆகியோரோடு கூட்டணி அமைத்து அறுபத்தி எழில் நம்பூதிர்பாட் ஆட்சி நடத்தினார். கூட்டுக் கலந்தாலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பங்கள், பல்வேறு கட்சிகளின் விருப்பங்கள், சமூகக் குழுக்களின் விருப்பங்கள் மோதிக்கொள்ளச் சிக்கலானது.ஒரு பல்கலையை முஸ்லீம்கள் அதிகமுள்ள கோழிகோடில் முஸ்லீம் லீக் பெற்றதோடு, தனியான மாவட்டமாக முஸ்லீம்கள் அதிகமுள்ள மலப்புரத்தை பெற்றது. இதை அயோக்கியமான அரசியல் என்று சிபிஐ விமர்சித்தது.

நிர்வாகம் என்பதில் கவனம் செலுத்த முடியாத அளவுக்குச் சீர்கேடும், சண்டையும் ஊழலும் பெருகிற்று. ஊழல்வாதிகளான அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று நம்பூதிரிபாட்டுக்கு அழுத்தம் தந்தது முஸ்லீம் லீக். ‘முடியாது, வேண்டுமென்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து கொள்ளுங்கள்!’ என நம்பூதிரிபாட் சொன்னதைச் செய்து காண்பித்தார்கள் எதிர்க்கட்சிகள். ஏழு கட்சிகளோடு கூட்டணி அமைத்து அடுத்தத் தேர்தலை அவர் சந்தித்தார் என்றாலும் ஏற்கனவே சிறப்பாக ஆட்சி செய்த வரலாற்றைக் கொண்டிருந்த உள்ளூர் காங்கிரஸ் கட்சி 111 இடங்களில் வென்று அசத்தியது.

எண்பதுகளில் இருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி இரண்டுமே முறைய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி என்கிற பெயரில் கூட்டணிகள் அமைத்து தேர்தலை கேரளாவில் எதிர்கொண்டன. இன்னுமொரு முக்கியமான விஷயம் எண்பதுகளில் இருந்து மதவாத கட்சி என்று சொல்லி முஸ்லீம் லீகை தன்னுடைய கூட்டணியில் சேர்க்க மார்க்சிஸ்ட் கட்சி மறுத்துவிட்டது.

இந்த 67-70 வரையிலான காலத்தில் இந்தியாவில் சுமார் எண்ணூறு எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவினார்கள். அவர்களில் 155 பேர் அமைச்சர்களாக ஆனார்கள் என்பது எப்படிப்பட்ட கொதிப்பான அரசியல் களமாக இக்காலம் இருந்தது என்பதைக் காட்டும். எப்படியேனும் பதவியில் இருக்கவேண்டும் என்று தாவிக்கொண்டே இருக்கும் ஆட்களைக் குறிக்க ‘ஆயா ராம், காயா ராம்’ என்கிற நையாண்டி சொல்லாடல் உண்டானது.

மூன்றாவது அணி:
பாஜகவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து அமைத்த மாற்று அணியை மூன்றாவது அணி என்று குறிக்கலாம். எண்பத்தி எட்டில் காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் தேசிய முன்னணி என்கிற பெயரில் ஒன்று சேர்ந்தன. இந்த முன்னணி மூன்று படிகளில் வளர்ச்சி அடைந்தது என்கிறார் பிபன் சந்திரா. முதல் கட்டத்தில் இடது, வலது என்று அல்லாமல் ‘சென்டர்’ வகையைச் சேர்ந்த காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டணிக்குள் வந்தன. அதற்குப் பிறகு இடதுசாரிகள் அல்லாத கட்சிகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.

பாஜக, இடதுசாரிகளோடு தேர்தல் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொண்டதோடு, பாஜகவோடு எண்பத்தி ஐந்து சதவிகித இடங்களில் நேரடிப் போட்டியை தேசிய முன்னணியினர் தவிர்த்தார்கள். அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போனாலும் இடது, வலது என்று இருதரப்பின் ஆதரவோடு ஆட்சி அமைத்து, வாராவாரம் இருசாராரையும் சந்தித்து ஆட்சியை நடத்தினார் வி.பி.சிங். பாஜகவை தேசிய முன்னணிக்குள் கொண்டு வராதது, இடதுசாரிகள், பாஜக இரண்டையும் அமைச்சரவையில் சேர்க்காதது ஆகியன வி.பி.சிங் செய்த தவறுகள் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னாளில் தெரிவித்தார். தேவி லாலின் மகன் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டுப் பதவி துறக்க அவரும் ராஜினாமா செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. சந்திரசேகர் தனக்கு ஆட்சிக்கட்டில் வந்து சேராதா என ஏங்கினார். அத்வானியின் ரத யாத்திரை வி.பி.சிங்கின் ஆட்சியை முடித்துவைத்தது.

வி.பி.சிங் கூட்டணியினர் யாரையும் கலந்தாலோசிக்காமல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினார். அதற்குப் பின் வெவ்வேறு கணக்குகள் இருந்தன. ஆதிக்க ஜாதியினரே அதிகாரப் புள்ளிகளாக இருக்கும் காங்கிரஸ், பாஜக இரண்டும் மண்டல் கமிஷனை விரும்பாவிட்டாலும் அப்பட்டமாக எதிர்க்க மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். இந்துத்வா அரசியலை முன்னெடுத்து சொல்லும் அத்வானியை எதிர்கொள்வது, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுக்களை அள்ளுவது, கிராமவாசிகள்-நகரவாசிகள் என்கிற அரசியலை கலவரமாக்க முயன்றுகொண்டிருந்த தேவிலாலின் திட்டத்தைப் பிசுபிசுக்க வைப்பது ஆகியவே அக்கணக்குகள்.

மேலும், ஆதிக்க ஜாதியினர் வசமிருக்கும் ஜனநாயக மையங்களின் கட்டுப்பாட்டை நகர்த்தும் பணியைச் செய்யும் காலம் வந்துவிட்டது என்றும் வி.பி.சிங்குக்குத் தெரியும். தேசிய அளவிலான எழுச்சி என்று சொல்லாவிட்டாலும் அது பல்வேறு இடங்களில் பல்வேறு வகைகளில் இடைநிலை ஜாதியினரை வலுப்படுத்தியதோடு ஆட்சிப்பீடம் நோக்கி செலுத்தியது. மேலும், தேசிய வளர்ச்சி கவுன்சில், அனைத்து மாநில கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டன.

ஆறு வருடத்துக்குப் பிறகு மீண்டும் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டதாகச் சொல்லிக்கொண்ட ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. அதிகம் பிரபலமாக இல்லாத தேவ கவுடாவை பிரதமர் ஆக்கியது அக்கூட்டணி. காங்கிரசின் அழுத்தமும் காரணம். இடதுசாரிகள் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்கும் பொருட்டுப் பெரும்பாலும் எதிர்த்துவந்த காங்கிரசுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணிக்கு ஆதரவு தந்தார்கள்.

அடுத்தத் தேர்தலில் அதுவரை தன்னோடு கருத்தியல் ரீதியாக ஒத்துப்போன சிவசேனா முதலிய கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்பதில் இருந்து இறங்கி வந்து திமுக, தெலுங்கு தேசம் முதலிய பல்வேறு கட்சிகளோடு கூட்டணி அமைத்த பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. எந்தச் சிக்கலுமில்லாமல் ஆட்சி நடக்கத் தன்னுடைய தீவிர இந்துத்வ கொள்கைகளை அக்கட்சி ஓரமாக வைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடன் ஒத்துழைத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய வழிகோலியது.

குஜராத் படுகொலைகளுக்குப் பிறகு வந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆறு வருடங்களுக்கு முன்னர்ப் பஞ்ச்மாரியில் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற தன்னுடைய தீர்மானத்தைத் தூக்கி வீசிவிட்டு கூட்டணி ஆட்சிக்கு தயார் என அறிவித்தது காங்கிரஸ். அதிமுக, காங்கிரஸ் பேச்சுவார்த்தை முறிந்து திமுகவோடு அது கைகோர்த்தது. ஆந்திராவில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்ததோடு, தமிழகத்தில் கிடைத்த முழு வெற்றி காங்கிரசை இடதுசாரிகளின் மதவெறி சக்தி எதிர்ப்புக் கொள்கையால் கிடைத்த ஆதரவு ஆட்சிக்கட்டில் ஏற்றியது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரிகள் ஆதரவை விளக்கிக் கொள்ளக் காரணமானாலும், நல்ல ஒரு ஆட்சியைத் தருவதற்கு இடதுசாரிகளின் மேற்பார்வை, ஆலோசனைகள், வழிகாட்டுதல் ஆகியன பயன்பட்டன.

அடுத்தத் தேர்தலில் தன்னுடைய பாரம்பரிய ஓட்டு வங்கியான நடுத்தர வர்க்கத்தினர், ஆதிக்க ஜாதியினர், நகர்ப்புற மக்கள் ஆகியோரிடம் தன்னுடைய செல்வாக்கை பாஜக காக்கத் தவறியது, ஏற்கனவே சிறப்பாக ஆட்சி செய்த ஐந்து வருடங்கள் ஆகியன காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தன. இடதுசாரிகள் தான் பலத்த அடி வாங்கியிருந்தார்கள். கூட்டணி ஆட்சி தான் இனிமேல் இந்தியாவின் தலைவிதி என்று கருதப்பட்ட சூழலில் வளர்ச்சி, புது நம்பிக்கை, மிதவாத மதவாதம் ஆகியவற்றை இணைத்து மோடி தனிப்பெரும்பான்மையை முப்பது வருடங்கள் கழித்துப் பெற்றுக் காட்டினார். கூட்டணி அரசியல் இன்னமும் புரிபடாத புதிர்தான்!

இந்தக் கூட்டணி ஆட்சிகள் முழுக்க இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவை என்கிற வாதம் சரியல்ல. காங்கிரஸ் பல்வேறு மொழியினர், ஜாதியினர் ஆகியோரின் அச்சங்கள், தேவைகள் குறித்துப் பெரிதாகச் செவிமடுக்காத சூழலில் தான் பிராந்தியக் கட்சிகள் செல்வாக்கு பெற்றன. கூட்டாட்சி தத்துவம் இவற்றால் பெருமளவில் பலம் பெற்றது என்பதும், 356 சட்டப்பிரிவு கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவது குறைந்ததும், பிரிவினைவாதிகள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் நிர்வாகத்தில் செம்மையாக ஈடுபடும் ஜனநாயக பரவலும் சாத்தியமானது என்பதிலேயே இந்தியா மாதிரியான பன்முகத்தன்மையும், வேறுபாடுகளும் நிரம்பிய நாட்டுக்கு கூட்டணி ஆட்சியின் அவசியத்தை, தேவையை உணரலாம்.

ஆசிரியர்: BIDYUT CHAKRABARTY
OUP வெளியீடு
விலை: 295
பக்கங்கள்: 214

இந்திய குடியரசின் டாப் 10 தருணங்கள் !


இந்தியாவை செலுத்துவது, ஒன்றாக இணைத்து வைத்திருப்பது என்று கேட்டால் எண்ணற்ற பதில்கள் வரலாம். ஆனால், இந்தியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து இருப்பதற்கான வழிகாட்டுதல் அரசியல் சட்டத்தின் வழியாகவே நமக்கு கிடைக்கிறது. அதன் விதை முதல்  விருட்சமாக விரிந்தவரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகள் :

சேர்ந்து உருவான அற்புதம் :

காங்கிரசை எதிர்த்த அம்பேத்கர், சர்தார் ஹுக்கம் சிங், கம்யூனிஸ்ட் கட்சியின் லஹிரி ஆகியோரும் சட்ட உருவாக்கத்தில் பங்குபெற்றார்கள். பல்வேறு அம்சங்களை விவாதித்து சட்டத்தை வரையறுத்த அவர்கள்,அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை . மக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றார்கள்,அதைக்கொண்டே அதிலிருந்து கருத்துக்களை ஏற்று அதை திருத்தினார்கள் ;பல்வேறு விவாதங்களுக்கு பிறகு,மாற்றங்களுக்கு உள்ளாகி ஜனநாயக முறையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் உருவாகி இருந்தது .

117,369 வார்த்தைகளோடு மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது. அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டம் உருவாகி முடிந்ததும் “அரசியலமைப்பு சட்டம் செயல்படுவதற்கு ஏற்றது என்றே எண்ணுகிறேன். அது நெகிழும் தன்மை கொண்டிருந்தாலும் இந்தியாவை இது பிணைத்திருக்கிற அளவுக்கு வலிமையானது. ஏதேனும் புதிய அரசியலமைப்பின் கீழே தவறாக போகுமென்றால் அதற்கு அரசியலமைப்பு சட்டம் காரணமாக இருக்குமென்று நான் சொல்ல மாட்டேன்.  மனிதர்கள் இழிவான வகையில் நடந்து கொண்டார்கள் என்றே சொல்லவேண்டி இருக்கும் !”

வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் :

உலகின் எந்த நாட்டிலும் அதற்கு முன் நடந்திருந்த ஒரு செயலை இந்தியர்கள் முன்னெடுத்தார்கள். வயது வந்த எல்லா குடிமக்களுக்கும் முதல் தேர்தலிலேயே எந்த அரசும் அதற்கு முன்னர் வாக்குரிமை தந்ததில்லை. அதிலும் பதினைந்து கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்த சூழலில் அது வரலாற்றின் மிகப்பெரிய சூதாட்டம் என்றே வர்ணித்தார்கள். மக்களுக்கு அறிமுகமான சின்னங்கள், தனித்தனி வண்ண பெட்டிகள் ஆகியவற்றின்
மூலம் நடந்த தேர்தலில் 4,500க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள்  முடிவு செய்யப்பட்டார்கள். சூதாட்டம் சூப்பராகவே முடிந்தது !

பொது இந்து சிவில் சட்டம்-அம்பேத்கரின் கனவு நேருவாக்கிய நினைவு :

இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று காங்கிரஸும், காந்தி மற்றும் நேருவும் மிகத்தெளிவாக இருந்தார்கள். காந்தியின் மறைவு அந்த எண்ணத்தை இன்னமும் வலுப்படுத்தவே செய்தது.   குடியரசான ஒரு வருடத்திலேயே பெண்களுக்கு சொத்துரிமை,பல தார திருமணத்துக்கு தடை,ஜீவனாம்சம்,விவாகரத்து ஆகியவற்றுக்கு உரிமை ஆகியவற்றை சாதிக்க முனைந்தார்கள். வலதுசாரிகளின் எதிர்ப்பு தடுக்கவே நான்கு வருடங்கள் கழித்து தனித்தனி சட்டங்களாக பிரித்து அவற்றை நிறைவேற்றினார் நேரு. அம்பேத்கர்  நேரு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று எண்ணி  பிரிந்து சென்று எதிர்க்கட்சி பக்கமிருந்து அதை பார்த்துக்கொண்டு இருந்தார். !

மொழிவாரி மாநிலங்கள்-எஸ் ! தேசிய மொழி-நோ நோ  :

மொழிவாரியாகவே காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிராந்திய அமைப்புகளை நடத்தியது. மொழிவாரியான மாநிலங்கள் கட்டாயம் தருவோம் என்று வாக்குறுதி தந்திருந்தார்கள். மதரீதியாக நாடு பிளவுபட்டதால் அந்த யோசனையை கிடப்பில்
போட்டார்கள். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் மீண்டும் மொழிவாரி மாநில கோரிக்கையை எரிய விட்டது. அவரின் மரணம் அதை பெருந்தீயாக ஆக்கியது. முதலில் நேரு முரண்பட்டாலும் பின்னர் பெருவாரி மக்களின் கோரிக்கையை ஏற்று மொழிவாரி மாநிலங்களுக்கு ஒத்துக்கொண்டார். அது எவ்வளவு புத்திசாலித்தனமான முடிவு என்பதை மொழி அடிப்படையில் மாற்றந்தாய் மனோபாவம் காட்டப்பட்டு தனி நாடாக பிரிந்த வங்கதேசம் நிரூபித்தது. இந்தியா அப்படியே உயிர்த்து நிற்கிறது.

அதே போல தேசிய மொழியாக இந்தி என்று எழுந்த கோரிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் எதிர்ப்பால் ஏற்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ மொழிகள் மட்டுமே இன்னமும் இந்தியாவில் உண்டு. தேசிய மொழி இந்தி என்று யாராவது சொன்னால் “சட்டமும்,வரலாறும் தெரியுமா உனக்கு ?” என்று கேட்டு பின்னுங்கள்

இந்திராவின் எமெர்ஜென்சி, கோமாவுக்கு போன ஜனநாயகம் :

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டீர்கள் ; பிரதமர் நாற்காலியை காலி செய்யுங்கள் என்கிற ரீதியாக ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கோர்ட் சொல்லியிருந்தது. கேசவாநந்தா பாரதி வாழ்க்கை அரசியலமைப்பின் அடிப்படையை மாற்றக்கூடாது என்று  உச்சநீதிமன்றம் சொல்லவே தலை கிறுகிறுத்தது இந்திராவுக்கு ! மன்னர் மானியம் நீக்கியதும் தவறு என்று கோர்ட் சொல்லியது ஒரு பக்கமென்றால் ஜெபி மற்றும் மாணவர்கள் நாடுமுழுக்க போராட்டங்களை முன்னெடுக்க உள்நாட்டு கலகம் இருந்தால் எமெர்ஜென்சி அறிவிக்கலாம் என்பதை பயன்படுத்தி எல்லா உரிமைகளையும்  பறித்தார். அமைச்சரவையை கூட கலந்து ஆலோசிக்காமல் நடந்த அநியாயம் அது.

பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாமும் போனது. கோர்ட்கள்,அதிகாரிகள்  மவுனம் சாதித்தனர் ; எதிர்த்த நீதிபதிகள் தூக்கி அடிக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறை போனார்கள்.  இந்தியாவின் இருண்ட பக்கங்கள் அவை. பிரதமர் முதலிய முக்கிய பதவிகளில்  கோர்ட் விசாரிக்க முடியாது என்றெல்லாம் சட்டங்கள் திருத்தப்பட்டன. பாராளுமன்றம் தான் இருப்பதிலேயே பெரிய தாதா  என்கிறவாறு அரசியலமைப்பு அலங்கோலமானது

மீட்கப்பட்ட மாட்சிமை :

தேர்தல்கள் வந்ததும் மக்கள் மவுனப்புரட்சி செய்தார்கள். முப்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை காலி செய்திருந்தார்கள். இந்திராவே தோற்றுப்போனார். இந்திரா செய்த திருத்தங்கள் திரும்பபெறப்பட்டன. உள்நாட்டு கலகம்,ஆயுத புரட்சி ஏற்பட்டால் மட்டுமே எமெர்ஜென்சி என்று ஆனது. கேபினட் அனுமதி வேண்டும்,மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி இரண்டும் அவசியம் என்றும் மாற்றினார்கள். ஒரு வருட எமெர்ஜென்சி நீட்டிப்பு ஆறு மாத கால நீட்டிப்பு என்று குறைக்கப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரம் காப்பற்றப்பட்டது. பிரதமர் முதலிய பதவிகளை எந்த வகையான விசாரணையில் இருந்தும்  காத்த சட்டங்கள் கழித்துக்கட்டப்பட்டன

நியாயம் காக்கும் நீதிமன்றம் :

எண்பதுகளுக்கு முன்னர்வரை பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே தனக்கு நீதிவேண்டி கோர்ட் வாசலை தொட முடியும். பீகாரில் கைதிகள் சரியாக நடத்தப்படவில்லை என்று அவர்களின் சார்பாக கோர்ட் வாசல் ஏறினார் ஹூஸ்னாரா எனும் வழக்கறிஞர். பொது நலன் மனு என்கிற கருத்தாக்கம் எழுந்தது அப்பொழுது தான்.  பொது மக்களின் நலன் பாதிக்கப்படுகிற பொழுதோ,அல்லது நியாயம் கேட்டு கோர்ட் படியேற பாதிக்கப்பட்ட எளியவர்களால் முடியாத பொழுதெல்லாம் பொது நல வழக்குகள் தான் ஒரே ஆறுதல்

உள்ளாட்சியின் மூலம் சுயாட்சி :

காந்தியின் கிராம சுய ராஜ்யத்தை அது சாதியத்தை வளர்க்க கூடும் என்று அப்பொழுது அமல்படுத்தாமல் நேரு நகர்ந்தார். மேற்கு வங்கமும், கேரளாவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி அதிகார பரவலாக்கலை சாதித்தன. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை மாற்றி கிராம மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் தரும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை தொன்னூறுகளின் ஆரம்பத்தில் மாற்றியது இன்னுமொரு முக்கிய தருணம்.
எளியவர்கள் அதிகாரத்தின் கரங்களை கொடுப்பதை சாதித்தது.

சமூக நீதி காத்த வி.பி.சிங் :

முந்தைய ஜனதா அரசு கொண்டு வந்திருந்த மண்டல் கமிசனின் இருபத்தி ஏழு சதவிகித இடஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார் வி.பி.சிங். பல்வேறு உயர்சாதியினர் போராட்டத்தில் குதித்தார்கள். தீக்குளிப்புகள் நடந்தன. ஆனாலும்,சமூக நீதிக்கான முன்னெடுப்பு சட்டமாகி சாதித்தது. அரசுகள் பல மாறினாலும் அச்சட்டத்தை மாற்ற யோசிக்கவே செய்கின்றன. க்ரீமி லேயர் என்று கோர்ட் மட்டும் அதிக வருமானம் ஈட்டுபவர்களை தள்ளியே வைத்திருக்கிறது.

இரும்புத்திரைகளை கிழித்திடும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் :

“ஏண்டா கொண்டு வந்தோம் !” என்று காங்கிரசே கதிகலங்கி இருக்கும். நிர்வாகத்தில் ஒழுங்கை கொண்டு வர அது மக்களுக்காக இயங்க ஒளிவுமறைவற்ற தன்மை அவசியம். அதை சாதிக்க வெகுகாலம் கழித்து நிறைவேற்றப்பட்டது இந்த அற்புதம். எளியவர்களின் ஆயுதமானது இது. மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள்,கால தாமதங்கள்,ஊழல்கள் எல்லாமும் வெளியே வந்து தலைக்கு மேலே இருக்கும் சட்டத்தின் கத்தியானது இச்சட்டம்

ஹிந்தி எதிர்ப்பா,திணிப்பா ?


ஆர்.முத்துக்குமார் அவர்களின் மொழிப்போர் நூலை வாசித்து முடித்தேன். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்று இன்று நக்கல் செய்யப்படுகிற போராட்டம் உண்மையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரானது என்பதை ஆதாரங்களோடு விறுவிறுப்பாக சொல்லும் நூல் இது. மொழிவாரியாக காங்கிரஸ் கமிட்டிகளை பிரித்த பின்னர் இந்தியாவின் மக்கள் அனைவரையும் இணைக்கும் மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்திவரும் போக்கை விட்டு ஹிந்துஸ்தானி மொழியை தேசிய மொழியாக கொள்ள வேண்டும் என்று காந்தி விரும்பினார். பெரும்பான்மை மக்களின் மொழியை சிறுபான்மையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் அவர். ஹிந்துஸ்தானி ஹிந்து மற்றும் முஸ்லீம்களுக்கு பொதுவான மொழி என்று காந்தி அப்படி சொன்னார். ஆனால்,ஹிந்தியை தான் காலப்போக்கில் தூக்கிப்பிடித்தது காங்கிரஸ் 

1937 தேர்தலில் வென்று முதல்வர் ஆனதும் ராஜாஜி ஹிந்தியை பள்ளிகளில் கட்டாயமாக்கினார். குழந்தைக்கு தாய் கட்டாயப்படுத்தி தான் பாலூட்ட வேண்டும் என்று விளக்கம் தந்தார். ஹிந்தி ரயில் வண்டி என்றும் சொன்னார். எண்ணற்றோர் போராடத்திரண்ட பொழுது இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலேய அரசு போலவே கிரிமினல் சட்டத்தை தாகூர் மற்றும் ஜின்னாவின் எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமலே பயன்படுத்தினார் ராஜாஜி. கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்று இரண்டு உயிர்கள் போன பின்னும் மனசாட்சியே இல்லாமல் சொன்னார் அவர். அப்பொழுது உலகப்போரால் காங்கிரஸ் கட்சி பதவியை விட்டு விலகியதால் அந்த முதல் கட்ட ஹிந்தி எதிர்ப்பு முடிவுக்கு வந்தது. 

அடுத்தது ஓமந்துரார் ஆட்சிக்காலத்தில் ஹிந்தி மீண்டும் கட்டாயம் என்று சொல்லப்பட்டது. முதலில் தமிழ் பேசும் பகுதியில் இன்னொரு மொழியாக தேர்வு செய்துகொண்டு படிக்க வேண்டிய பாடம் என்று பல மொழிகளை கொடுத்து அதில் ஹிந்திக்கு மட்டும் ஆசிரியர்களை அதிகமாக நியமித்து ஹிந்தி திணிப்பை மறைமுகமாக பண்ணியவர்கள் பின்னர் நேரடியாகவே ஹிந்தி கட்டாயம் என்றதோடு நில்லாமல் குறைந்தபட்ச மதிப்பெண்களை பிள்ளைகள் பெற்றால் தான் மேல்வகுப்புகளுக்கு போகமுடியும் என்றும் சொன்னார்கள். கொதித்து எழுந்தார்கள். போராட்டங்களின் விளைவாக ஹிந்தி திணிப்பு கைவிடப்பட்டது. 

மூன்றாவது கட்ட ஹிந்தி திணிப்பு தனித்துவமானது. வெறும் கல்விக்கூடங்களில் மட்டுமே திணிக்கப்பட்டுக்கொண்டு இருந்த ஹிந்தி அரசின் எல்லா அங்கங்களையும் அடைத்துக்கொள்ள தயாரானது. பத்தொன்பது வகையான ஹிந்தி மொழிகள் பேசப்பட்டுக்கொண்டு இருந்த சூழலில் 36 கோடி மக்களில் வெறும் இரண்டரை கோடி மக்கள் மட்டும் பேசிய கடீபோலி ஹிந்தியை தென்னகத்துக்கும் திணித்தார்கள். போராட்டங்களை பார்த்துவிட்டு நேரு பதினைந்து வருடங்கள் வரை ஆங்கிலம் மாற்று மொழியாகவும்,இணை ஆட்சி மொழியாகவும் இருக்கும் என்று உறுதி தந்தார். அதற்குப்பின் அந்தந்த மாநிலங்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஹிந்தி அமல்படுத்தப்படலாம் என்றும் சொன்னார் நேரு. சட்டத்திருத்தம் கொண்டுவருகிற பொழுது தான் ஹிந்தியை வளர்க்க வேண்டும்,ஹிந்தியை வளர்க்க வேண்டும் என்று சொல்கிற இடங்களில் shall be என்கிற வார்த்தையை போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக தொடரலாம் என்கிற இடத்தில் may be போட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 

சாஸ்திரி காலத்தில் அந்த காலக்கெடு முடிவுக்கு வந்தது. ஹிந்தி கட்டாயம் என்று மீண்டும் பழைய பல்லவியை பாடினார்கள். மாணவர்கள் பொங்கி எழுந்து போராடினார்கள். தீக்குளிப்புகள் நடந்தன. அரசு அசைந்து கொடுக்கவில்லை. மாணவர்களுக்கு தேர்வுகள் வந்ததால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்கள் அரசியல் தலைவர்கள். சி.சுப்பிரமணியம்,அளகேசன் ஆகிய இரு மத்திய அமைச்சர்கள் பதவி விலகிய பொழுதும் அதை ஏற்றுக்கொண்டார் சாஸ்திரி. பின்னர் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பிரிய வழி வகுக்காதீர்கள் என்று சொன்னதற்கு பிறகு ஹிந்தி திணிப்பு நின்றது. 

மொரார்ஜி தேசாய் காலத்தில் துணை கமிஷனர் அல்லது அதற்கு மேலான பதவியில் உள்ள ஹிந்தி கற்காத மாநில அதிகாரிகள் கட்டாயம் ஹிந்தி கற்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். ஆட்சி கவிழ்ந்து அது காணாமல் போனது. ராஜீவ் காந்தி காலத்தில் ஹிந்தி வாரம் கொண்டாட வேண்டும் என்று அறிக்கை வந்தது. அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் ஹிந்தியில் கையெழுத்து போடவேண்டும் என்று உத்தரவு வேறு வந்தது. என்.சி.ஆர்.இ.டி பாட புத்தகத்தில் ஹிந்தியை எதிர்த்தவர்கள் படிக்காத அறிவிலிகள் என்கிற தோற்றத்தில் வந்த கேலிச்சித்திரம் சேர்க்கப்பட்டு இருந்தது. இப்படி ஹிந்தியோடான தமிழகத்தின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

மொழிப்போரை, ஹிந்தி திணிப்பை தமிழகம் எதிர்த்த வரலாற்றை ஆதாரங்களோடு இந்த நூல் அடுக்குகிறது. ஹிந்தியை எதிர்க்க ஆரம்பித்த போராட்டம் இது என்கிற கற்பிதத்தை கொண்டவர்கள் எல்லாரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது. வரலாற்றின் நிகழ்வுகளை அன்றைய சூழலில் இருந்து பார்த்து எழுதும் படைப்புகளின் வரிசையில் இதுவும் முக்கியமானது 

மொழிப்போர் 
கிழக்கு பதிப்பகம் 
ஆர்.முத்துக்குமார் 
பக்கங்கள் : 160
விலை : 110

 — with R Muthu Kumar.