தேசியம்-ஒரு உரையாடல்


#விடுதலை தினத்தைப் புறக்கணிக்க வேண்டும், இது கருப்பு தினம் என்றெல்லாம் பகிர்கிறார்கள். அரசுக்கும், தேசத்திற்கும் வேறுபாடு உண்டு. அது முக்கியமானது. நம் அனைவருக்கும் உரிய நாடு இது. இதன் பெருமைகளும், சிறுமைகளும் நமக்குரியவை. ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ எனக் கேட்டார் வரலாற்றாசிரியர் முகுல் கேசவன். நம் அனைவருக்குமான கேள்வி அது.#
 
இப்படியொரு பதிவை விடுதலை திருநாள் அன்று எழுதினேன். இந்தியா ஒரு நாடா? இந்தத் தேசியத்தை ஏற்கனவே பெரும்பான்மைவாதமாக மாற்றிவிட்டார்கள், பின் என்ன செய்வது? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள். இவற்றுக்கு முழுமையாகச் சில பத்திகளில் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. எனினும், வரலாற்று ஆசிரியர்கள் முகுல் கேசவன், ஸ்ரீநாத் ராகவன், அரசியல் அறிஞர் சுனில் கில்னானி ஆகியோரின் வாதங்களை இணைத்து எழுதுகிறேன். த. பெனடிக்ட் ஆண்டர்சன் தேசியம் குறித்துச் செய்த ஆய்வுகள், முன்வைத்த கருத்துக்கள் தேசியம் என்பதே தீங்கானது என்கிற பார்வையைக் கேள்விக்கு உட்படுத்துகிறது. பதிவை நீள வைத்துவிடும் என்பதால் அது இன்னொரு நாள். ற்காலம் குறித்து நான் விரிவாக எழுத முடியாது என்றாலும், இந்தப் பதிவின் மூலம் தேசியம் குறித்த அசூயை குறைந்து, அதில் நமக்கான பங்கை, உரிமையை உணர்ந்து உரையாடுவதன் அவசியம் புரியும் என நம்புகிறேன்
 
தற்போதைய இந்தியா எக்காலத்திலும் ஒரே தேசமாக இருந்தது கிடையாது என்பது பலரின் வாதம். முழுக்க உண்மை. இந்தியாவை அரசியல் அறிஞர்கள் ‘உருவாகி கொண்டிருக்கும் தேசம் ‘ என்பார்கள். தேசியம் என்பது பன்னெடுங்காலமாக இருப்பது என்கிற வாதத்தை நவீன அரசியல் அறிவியல் ஏற்பது இல்லை. வரலாற்று ஆசிரியர்களும் அதனோடு ஒப்புகிறார்கள். தேசியங்கள் என்பவை கட்டமைக்கப்படுபவை. ஐரோப்பாவின் தேசியங்கள் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நாடு என்கிற ரீதியில் கட்டமைக்கப்பட்டன. மாஜினி. கரிபால்டி, பிஸ்மார்க் எனப் பல்வேறு ஆளுமைகள் ஐரோப்பாவில் உருவாக்கிய தேசியங்கள் வேற்றுமைகளைத் துடைத்து எறிந்து விட்டு, ஒற்றைப்படையாக மக்களை ஒன்று சேர்க்க முயன்றன.
 
1878-ல் டெல்லியில் லிட்டனால் தர்பார் கூட்டப்பட்டது. அதில் பல்வேறு சுதேச சமஸ்தானங்களைச் சேர்ந்த மன்னர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டார்கள். இந்தியா என்கிற வனவிலங்கு சரணாலயத்தின் பல்வேறு விலங்குகளும் அங்கே இருந்தன என்று முகுல் கேசவன் குறிப்பிடுகிறார். இதே பாணியில், ஆனால் , ஆங்கிலேயருக்கு வந்தனம் என்று சொல்லாத ஒரு இந்திய வனவிலங்கு கூட்டத்தைக் காங்கிரஸ் நடத்த முயன்றது. காங்கிரசில் ஆதிக்க ஜாதியினரே ஆரம்பக் காலங்களில் நிரம்பி இருந்தார்கள். அது தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் என அழைத்துக் கொண்டது. இந்தியாவுக்கே பேசுகிறேன் என்று எப்படி நிரூபிப்பது? நோவாவின் கதை தெரியும் இல்லையா? உலகை இறைவன் அழிக்க எண்ணிய போது, ஒரு பெரிய கப்பலை படைத்து அதில் ஒவ்வொரு உயிரினத்தின் ஜோடிகளை மட்டும் ஏற்றுக்கொண்டார் நோவா என்கிறது விவிலியம். அப்படி இந்தியாவின் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பிய காங்கிரஸ், எல்லாரையும் பெயரளவில் ஆவது தன்னுடைய உறுப்பினராக ஆக்கிக்கொண்டது. இப்படி நோவாவின் மிதவையைப் போல அனைவரையும் உள்ளடக்கக் காங்கிரசின் தேசியம் முயன்றது. இதையே முகுல் கேசவன், ‘Noah’s Ark of Nationalism’ என்கிறார்.
Image result for முகுல் கேசவன்
 
இந்தத் தேசியம் எல்லாருக்குமான தேசியம் இல்லை என்பது உண்மை. ஒரு குடையின் கீழ் எல்லா இனங்கள், மொழியினரையும் கொண்டு வர இது முயன்றது. இந்தக் குடையில் ஒதுங்க முடியாது என்று வெவ்வேறு தரப்பினர் குரல் கொடுத்தார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், தலித்துகள் என்று பலரும் தங்களுடைய தேசியம் இதுவல்ல என்று எண்ணினார்கள், போராடினார்கள்.
 
காங்கிரசின் இந்தத் தேசியத்தை எப்படி வர்ணிப்பது? இதை முகுல் கேசவன், ‘சந்தர்ப்பவாதம், திட்டமிடல், லட்சியவாதம் ஆகியவற்றின் கலவை. ஆங்கிலக் காதல் கொண்ட மக்கள் வருடத்திற்கு ஒருமுறை கூடிய படித்த மேல்தட்டினர் ஆரம்பக் காலத்தில் சமைத்த தேசியம்.’ என்கிறார். இந்தத் தேசியம் அடுத்தக் கட்டத்துக்குத் தாதாபாய் நவ்ரோஜி, ஆர்.சி.தத் முதலியோரால் நகர்ந்தது. இந்தியா என்கிற எங்கள் கனவில் அனைவருக்கும் இடம் என்று மட்டும் சொன்னால் போதுமா? ஆங்கிலேய அரசை எதிர்ப்பது எப்படி? எல்லா இந்தியர்களையும் ஒரே மதம் என்று சொல்லி சேர்க்க முடியாது. அனைவருக்கும் பொதுவான வரலாறு என்று ஒன்றில்லை. மொழி ரீதியாகவும் ஐரோப்பாவை போல ஒன்று திரட்ட முடியாது. தலை சுற்றியிருக்கும் இல்லையா?
 
மொழி, மதம், வர்க்கம் என்றெல்லாம் கிளம்பினால் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்குப் புரிந்தது. எல்லா இந்தியர்களையும் பாதிக்கும் ஒன்றை முன்னிறுத்த எண்ணினார்கள். இஸ்லாமிய வியாபாரிகள், ஜாட் விவசாயிகள், பார்சி முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்று அனைவரையும் பாதித்தது காலனியம். ஆங்கிலேய அரசு எப்படித் தன்னுடைய காலனிய ஆட்சியின் மூலம் சுரண்டுகிறது என்பதை எடுத்துரைத்தும், பரப்புரை செய்தும் மக்களை ஒன்று திரட்டினார்கள். காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தைப் பேசியதே அன்றிக் கலாசார தேசியத்தைப் பேசவில்லை. உழைக்கும் மக்கள், தொழிலாளிகள், விவசாயிகள் ஆகிய அனைவர்க்கும் அது குரல் கொடுத்தது. வரி விதிப்பு, கட்டணங்கள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் என்று பலவற்றைச் சாடி மக்களை ஒன்று சேர்த்தது.
 
காங்கிரஸ் கனவு கண்ட இந்திய தேசியத்தை இந்துத்வர்கள் மேற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பார்கள். ஆனால், காங்கிரஸ் கனவு கண்ட, பெருமளவில் சாதித்த இந்திய தேசியம் அசலானது. அதற்கு முன் எங்கும் முன்மாதிரி இல்லாதது. ஆச்சரியம் தருவது. இந்துத்வமே உண்மையில் ஐரோப்பிய தேசியத்தின் இறக்குமதி ஆகும். இந்திய தேசியம் ஏன் வளர்ந்தது? அது யாரையும் நீ தேசியவாதி என நிரூபிக்கச் சொல்லவில்லை. ‘தேசபக்தன் என நிரூபிக்க வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப்படுத்தாமலே வளர்ந்த அற்புதம் அது.’ என்பார் சுனில் கில்னானி. எளிமையாகச் சொல்வது என்றால், எது ‘Idea of India?’, ‘No idea/Not one idea’. செக் தேசியவாதி ஜான் மஸர்யக் தேசியம் என்பதில் தேசமே உச்சமான அரசியல் விழுமியம் என்றார். ஆனால், எண்ணற்ற இந்திய தேசியவாதிகள் தேசம் உச்சமான அரசியல் விழுமியம் என்று பேச மறுத்தார்கள். தேசியம் என்கிற வார்த்தையை வரையறை செய்யாமல் காங்கிரஸ் சாமர்த்தியமாக நடந்து கொண்டது.
Image result for srinath raghavan mukul kesavan
 
இந்தத் தேசியம் இஸ்லாமியர்களை இணைத்துக் கொள்ள விடுதலைக்கு முன்னர்த் தவறியது. அது ஆதிக்க ஜாதியினர் பெரும்பாலும் கோலோச்சும் ஒன்றாக இருந்தது. எனினும், இவற்றைத் தாண்டி இந்தத் தேசியம் இந்தியாவை விடுதலைக்குப் பிறகு மதச்சார்பற்ற தேசமாகக் கட்டமைத்தது. தாராளவாதம் மிகுந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்தைப் பரிசளித்தது. இட ஒதுக்கீடு, சமத்துவம், அனைவருக்கும் வாக்குரிமை என்று பலவற்றை அது கட்டமைத்தது. காங்கிரசின் தேசியத்தின் ஆதிக்க ஜாதி பண்பு, பல்வேறு தரப்பின் கவலைகளைக் கவனிக்காமல் இருந்தது, அதன் போதாமைகளைத் தாண்டி இந்தச் சாதனைகளை அது செய்தது. பல தரப்பையும் ஓரளவுக்காவது அது இணைப்பதை சாதித்தது.
 
ஆங்கிலேயருக்கு எதிரான பொருளாதார தேசியத்தின் மூலம் மக்களைத் திரட்டிய காங்கிரஸ் அவர்கள் நாட்டை விட்டு விலகியதும் சவால்களை எதிர்கொண்டது. மக்களை ஒன்றிணைத்த ஆங்கிலேய எதிர்ப்பு விடுதலையோடு முடிந்து போயிருந்தது. எல்லா மக்களுக்கும் பயன் தரும் ஆரம்பக்கல்வியைப் பற்றியோ, விவசாயிகளுக்கு உதவக்கூடிய நில சீர்திருத்தங்கள் குறித்தோ காங்கிரஸ் கவலை கொள்ளவில்லை. அதன் கனவுகள் மேலிருந்து கீழ்நோக்கி பாய்வதாக இருந்தது. சோட்டு ராம், சரண் சிங் முதலியோர் எப்படி இந்தியா நகர்ப்புற இந்தியா, கிராமங்களின் இந்தியா என்று பிளவுபட்டு நிற்கிறது எனச் சுட்டிக்காட்டி போராடினார்கள்.
 
ராம் மனோகர் லோகியா, பெரியார் ஆகியோர் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோருக்கு குரல் கொடுத்தார்கள். லோகியா பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கனவு கண்டார்.
எமெர்ஜென்சி இந்துத்துவர்களை அரசியல் மையத்துக்குக் கொண்டு வந்தது. அந்தப் பிளவுபடுத்தும் தேசியத்திற்கான மாற்றான காங்கிரஸ் தேசியம் நேருவுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் அரித்துக்கொண்டே போனது. முகுல் கேசவன் வரியில் சொல்வது என்றால், முன்னையது பட்டவர்த்தனமாக மதவாதம் போற்றுவது, காங்கிரஸோ சமயம், சந்தர்ப்பம் பார்த்து மதவாதத்தைப் பற்றிக்கொள்வது.
Image result for periyar lohia
 
இவற்றுக்கு மாற்றாக எழுந்திருக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டவர்கள் குரல்கள் வடக்கில் வெற்றி பெறவேவில்லை. ஸ்ரீநாத் ராகவன் தெற்கில் காங்கிரஸ், பாஜக அல்லாத வெற்றியை திமுக, அதிமுகச் சாதித்ததன் காரணம் அவை ஆட்சியில் இருந்த போது மக்கள் நலனுக்குத் தங்களால் ஆனதை செய்து காட்டியும் உள்ளன, இது வடக்கில் நிகழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
 
காங்கிரஸ் கனவு கண்ட தேசியம் தன்னிடம் பதில் இல்லாத கேள்விகளைத் தள்ளிப்போட்டது. எது தேசிய மொழி என்கிற கேள்விக்கு விடுதலைக்கு முன்னால் இந்துஸ்தானி மொழி என்றது தேசியம். அதுவும் பாரசீக, தேவநாகரி வரிவடிவங்கள் என இரண்டிலும் இடம்பெறும் என வாக்குத் தந்தது. விடுதலைக்குப் பின்னால் பிரிவினையைக் காரணம் காட்டி பாரசீக வரிவடிவத்தைக் கைவிட்டது. அதோடு நில்லாமல் உருது மொழியைக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டது. இந்தியை பின்னர் வந்தவர்கள் திணிப்பதற்கான வேர்கள் சமரசம் என்கிற பெயரில் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஊன்றப்பட்டன.
Image result for symbols of indian nationalism'
தேசிய கொடி கிட்டத்தட்ட விடுதலைக்குப் போராடிய காங்கிரசின் கொடி. அதில் அசோக சக்கரத்தை பதித்து அதற்குப் புதுப் பொருள் தரப்பட்டது. தேசிய கீதத்தை பெரும்பான்மைவாதிகள்
விடுதலைக்கு முன்னர்க் கடுமையாக எதிர்த்தார்கள். விடுதலைப்போரில் அவர்களுக்குத் தொடர்பே இல்லை. எனினும், இன்று தேசியத்தை உரிமை கொண்டாடுகிறார்கள். அவர்களின் பிளவுபடுத்தும் கனவுகளை நிராகரித்த தலைவர்களை உரிமை கொண்டாடுகிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய கனவுகளின் மீது எழுந்த தேசியத்தை ஒற்றைப்படையான பார்வை தனதாக்க பார்க்கிறது. போதுமான அளவில் இல்லை என்றாலும், தன்னளவில் அனைவரையும் இணைத்துக் கொள்ள முயன்ற தேசியம் குறித்துப் பேசுவோர் இல்லை. இப்போது முகுல் கேசவனின் வரிகளை மீண்டும் படியுங்கள், ‘ ‘தேசியத்தைப் பெரும்பான்மைவாதிகளிடம் ஒப்புக்கொடுத்து விட்டீர்கள். தேசியக்கொடியைக் கூட அவர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறார்கள். தேசியம், இந்தியா நம் எல்லாருக்குமானது. அவர்களின் வெறுப்பரசியலை நிராகரிக்கப் போய் ஒட்டுமொத்த தேசியத்தின் உரிமையை அவர்களுக்கு ஏன் தாரை வார்க்கிறோம்?’ தேசியத்தைப் பெரும்பான்மைவாதத்தோடு தொடர்புபடுத்திகொள்வதால் நிகழ்வது அதுவே தேசியம் என அங்கீகரிப்பது தான்!
 
உதவியவை:
 
Secular Common Sense
 
Mukul Kesavan’s writings on Nationalism
 
Idea of India