நிகழ்முகம்- இவர்கள் இருக்கிறார்கள்!


நிகழ்முகம் என்கிற பெயரில் வெளிவந்திருக்கும் அ.வெண்ணிலாவின் நூல் அவர் நேர்காணல் செய்த பதினான்கு ஆளுமைகளின் பேட்டிகளோடு வந்துள்ளது. எழுத்தாளர் அம்பையுடனான நேர்காணலில் காணப்படும் யதார்த்தம், உண்மை அற்புதமானது. ராஜம் கிருஷ்ணன் தன்னுடைய நாவல்களுக்காக மேற்கொள்ளும் உழைப்பு, பெண்ணியம் என்பது பிரச்சாரம் போல எழுத்தில் இருக்கக்கூடாது, தமிழின் நிலையைப் பற்றிய நம்பிக்கை மிகுந்த பார்வை என்று அசரடிக்கிறார். சசி தேஷ்பாண்டே குறிப்பிடும், ‘இலக்கியம் என்பது என்ன பொதுக் கழிப்பறையா…ஆண்,பெண் என் வேறுபடுத்த? விருதுகள் என்பதைப் பெண் என்பதற்காகக் கொடுப்பது அவமானப்படுத்துவதாகவே நினைக்கிறேன்’ என்று தெளிவாகப் பேசுகிறார்.

எழுத்தாளர் பாமா கிறிஸ்துவ மடத்தில் கண்ணியாஸ்திரியாகப் போய் அங்கே இறைவனின் ஊழியர்களாக அவர்கள் சற்றுமில்லை என உணர்ந்து விலகிய கதையைச் சொல்கிறார். அவரின் நாவல் அந்தத் துன்பங்களை ‘கருக்கு’ எனும் தலைப்பில் பேச ஊர்க்காரர்கள் பலரும் அவரைத் திட்டவே, அடுத்த நாவலில் உண்மையைப் புனைவாக்கும் திறத்தை செம்மைப்படுத்தியுள்ளார்.

பெண்களுக்குப் புனிதம் என்று கருதப்படும் தாலி, திருமணம் ஆகியவற்றின் மீது மிகக்கூர்மையான விமர்சனங்களைப் பதிகிறார். தலித்துகளின் ஆதி தெய்வங்கள் அவர்களின் போராட்ட குணத்தைப் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக அருந்ததியர்கள் வழிபடும் வெறியன் என்கிற தெய்வம் செருப்பு போட்டுத் தெருவில் போகக்கூடாது என்கிற ஆதிக்க ஜாதி கட்டுப்பாட்டை எதிர்த்து உயிர்நீத்த ஒடுக்கப்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த வீரனின் கதை. தனியாக இருப்பதால் மாலை வீட்டுக்கு வந்தபின்பு அருகில் இருப்பவர்களிடம் சில மணிநேரமாவது அருகில் இருப்பவர்களுடன் உரையாடி அவதூறாகப் பேசுவதைத் தவிர்ப்பதை சொல்கிறார். அப்படியும் தொடர்ந்து எழுத்தில் தன்னை நிறைத்துக்கொள்கிற சாதனையைச் செய்கிறார்.

எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் குடும்பம் என்கிற அமைப்புக்குள் ஜனநாயக ரீதியாகச் செயல்படுவது சாத்தியம் என்றும், உலகமயமாக்கல் முழுக்க வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்றல்ல அது நுட்பமான பன்முகச்சார்புநிலை, சோவியத் ரஷ்யாவுக்கு வால்பிடித்த காலம் போய் எல்லாருடனும் இணைந்து போகிற தருணம் என்று வர்ணிக்கிறார்.

கலாசாரம் என்கிற பெயரில் தலித்துகள், பெண்கள், திருநங்கைகள் ஒடுக்கப்படுவதாக ஷோபா சக்தி முகத்தில் அறைவதைப் போலச் சொல்கிறார். இந்தியாவுக்கு ஒரு அண்ணல் அம்பேத்கரும், தமிழகத்துக்கு ஒரு தந்தை பெரியாரும் கிடைத்ததைப் போல ஈழத்து தலித் மக்களுக்கு விடுதலை சாத்தியமாகவில்லை என்று வலியோடு சொல்லும் அவர் இதுவரை மூன்றே எம்.பிக்கள் தான் தலித்துகளில் இருந்து வந்துள்ளார்கள் என்பதையும், தமிழகத்தில் இருக்கும் இட ஒதுக்கீட்டின் சாயல்கூட இல்லாமல் ஈழத்து ஜாதியம் பார்த்துக்கொள்கிறது. புலிகளிடம் கூட இந்த அணுகுமுறை இருந்ததில்லை என்கிறார். வெள்ளாள ஆதிக்கம் தான் பிரதானம் என்றாலும் அது பார்ப்பனியத்தையே பின்பற்றுகிறது என்கிறார் இவர்.

ஓஷோ நூல்களை மொழிபெயர்க்கும் இடதுசாரியான கவிஞர் புவியரசு நாத்திகம் பேசிய ஆன்மீகவாதி என்றும் ஓஷோவைப் புகழ்கிறார். காஸி நஸ்ருல் இஸ்லாம் எனும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கவிஞர் பெரும் புரட்சிக்காரர். ‘ உழைப்பவர் காலடி மண்ணெடுத்து திருநீறாகப் பூசிக்கொள்ள வேண்டும்.’ என்று அவர் பாடிச் சென்றிருக்கிறார். அவரின் நூலை மொழிபெயர்த்து சாகித்திய அகாதமி விருது பெற்றார் கவிஞர் புவியரசு.


எழுத்தாளர் ஜீவகாருண்யன் ஜெயகாந்தன் முற்போக்காக எழுதினாலும், ரயில்வே ஊழியர்களின் போராட்டத்தை ‘சக்கரங்கள் நிற்பதில்லை’ எனச் சிறுகதை எழுதி எதிர்க்கிற அவரின் பிற்போக்கு போக்கையும் சுட்டுகிறார். இடதுசாரி இயக்கத்தின் இலக்கியப் பங்களிப்பு குறைந்து விட்டதையும், திராவிட இயக்கங்களில் இலக்கியமே தோன்றுவதில்லை என்பதையும், பிஜேபி மதம் சார்ந்த இலக்கியத்தை முன்வைப்பதையும் சொல்லி எழுதுவதையும், முறையாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதையும் சாதித்தால் வெறுப்பு சக்திகளிடம் இருந்து மக்களின் சிந்தனையை மீட்க முடியும் என முடிக்கிறார்.

நரிக்குறவ மாணவனைப் பள்ளியில் சேர்த்தது, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தது, மதுரையில் புத்தகக் கண்காட்சி நடத்தி சாதித்தது, அறிவொளி இயக்கத்தோடு இணைந்து இயங்கியது, கல்விக்கடன்களை விரைவாக வழங்கியது என்று உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் குறிப்பிடும் நெகிழவைக்கும் கதைகள் ஏராளம்.
திராவிட இயக்க பின்புலம் கொண்ட முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் பல்முக ஆளுமை, ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. கல்வெட்டுகளைப் படித்தல், நாணயங்களைப் பற்றி ஆய்தல், வரலாற்றில் தீராத ஆர்வம், வைணவ இலக்கியங்களில் புலமை, பறவைகளை நோக்குதல் என்று அசரடிக்கிறார். நூலகங்களை மாற்ற அவர் எடுத்த முன்முயற்சிகளைப் பேசுகிறார். அவை இப்பொழுது தேங்கிப் போய்விட்டதை நினைத்து வருந்தவே முடிகிறது.

ஆதிக்க ஜாதியில் இருந்து வந்திருப்பினும் பெரியார் இயலுக்குப் பெருந்தொண்டாற்றி இருக்கும் வ.கீதா அவர்களின் நேர்முகம் பிரமிப்பானது. நிலப் பகிர்வு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தல், பொது வெளியில் இருந்து ஜாதியை வெளியேற்றல் ஆகியவற்றைச் சாதிக்காமல் போனதால் தலித்துகள் ஒடுக்கப்படுவது தொடர்வதால் பெரியார் அவர்களின் தாக்குதல் இலக்காகிப் போனதை சொல்கிறார். பச்சாதாபமோ, மேம்போக்கான உரிமைப் பேச்சு என்கிற அளவிலேயே தீண்டாமை, அந்நியமாதல் ஆகியவற்றை எதிர்கொள்கிறோம் என்கிறார். பெண்ணியம் சார்ந்து பலரை இணைத்துக்கொண்ட செயல்பட்ட, செயல்படும் அவர் எந்த இயக்கங்களும் பெண்களின் சிக்கல்களுக்குப் பெரும்பாலும் கவனம் தராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

வைதீகப் பின்னணியைக் கொண்ட அவரின் அப்பா குஜராத் படுகொலைகளுக்கு எதிராக நடந்த கூட்டத்தில் தானும் பங்குகொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார். நாமம் அணிந்து காட்சியளிக்கும் தான் விழாவுக்கு வந்தால் உறுத்தலாக இருக்குமோ என்கிற ஐயம் அவருக்கு. பெண்களுக்கு எதிரான வன்முறை, அடக்குமுறையை ஜாதி, வர்க்கம் ஆகியவற்றைத் தாக்காமல் ஒழிக்க முடியாது என்கிறார்.

தன்னுடைய தலைவனைத் தெருவில் தேடுவதாகச் சொல்லும் கமல்ஹாசன் இயேசு, ராமானுஜர் நாத்திகர்கள் தான். பெரியார் தனக்கு முந்தைய பல்வேறு கருத்துக்களை உள்வாங்கி இன்னமும் பலபடிகள் முன்னே சென்றதால் அவரை மிகவும் பிடிக்கும் என்கிறார். திராவிட வேதம் என்று சொல்லி நாலாயிர திவ்ய பிரபந்தமும், விவிலியக் கதைகள் தேம்பாவணி மூலம் மக்களைச் சென்றடைய முயன்றதும் மதம் பரப்பும் சூழ்ச்சியே என்று போட்டு உடைக்கிறார். தான் இளம்வயதில் கிறிஸ்துவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதையும் சொல்கிறார். 376 டேக்குகள் எடுத்த சார்லி சாப்ளின் தன்னுடைய ஓயாத முயற்சிகளுக்கு உத்வேகம் என்று சொல்கிறார் கமல்.

சிவாஜியை தொடர்ந்து விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தாலும் கமல் தன்னுடைய ஞானகுரு என்பது மக்களுக்காகத் தானே என்கிற கேள்விக்கு அவர் தரும் நெடிய பதில் அற்புதமானது. ‘பிசைவுக்கு இசைதல் என்பதைச் சிவாஜி மேற்கொண்டார்; அவர் சிந்திக்கலை என்று சொல்லமுடியாது. உள்ளே என்ன நினைச்சாரோ? வெளியே சொல்லாமல் இருந்தார். அவரைச் சுற்றி வழிபடும் பக்தர்களாக நிறைந்து போனார்கள். தங்கச் சுரங்கம் என்கிற படத்தில் எம்ஜிஆர் போலக் கண்ணாடி போட்டு ஆடிப்பாடி அவர் நடித்ததை, ‘இந்தக் கிணற்றில் நீங்க ஏன் விழுந்தீங்க?’ என்று கேட்டதற்குப் பொறுத்துக்கொண்டு, ‘அந்த மாதிரி கெணறு வரும், நீயும் விழுவே’ என்றார் சிவாஜி. அப்படி நான் விழுந்த கிணறுதான் சகலகலாவல்லவன்.’ என்கிறார்.

உஷா சுப்ரமணியன் அடையாளம் தொலைத்து, நகரங்களை நோக்கி தலித்துகள் நகரவேண்டும், அவர்கள் கல்வி கற்க வேண்டும் என்று சொன்னாலும் இட ஒதுக்கீடு, தொழிலாளர் போராட்டங்கள், பெண்ணியம் ஆகியவற்றுக்கு எதிரான எழுத்துக்களை இயல்பான ஒன்றைப் பதிகிறேன் என்று பதிந்திருப்பது புலனாகிறது. காஞ்சி பெரியவரைப் பற்றி அவர் சொல்பவை அதிர்ச்சி ரகம். கைம்பெண் ஆன தன்னுடைய பாட்டியை முடி வைத்திருக்கிறார் என்று பார்க்க மறுத்தவர் அவர் என்று போட்டு உடைக்கிறார். ஒரு அமைச்சர் தலித் என்பதற்காக அவருக்கும் இவருக்கும் இடையே தொட்டி வைத்து மாட்டை அருந்தச் செய்து பரிகாரம் செய்து பார்த்தார் என்பது கடும் கோபத்தை மதப் பீடங்களின் மீது உண்டாக்குகிறது.

மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் மொழி வெறுப்பு என்பது தேவையில்லை, எல்லா மொழிகளையும் கற்கலாம் என்று சொல்லி தானும் ஏழு மொழிகளைக் கற்றிருப்பதைக் குறிக்கிறார். எனினும் மலையாள மக்களின் எழுத்தை மட்டும் மொழிபெயர்க்க காரணம் கேட்டதற்கு, அவர்களின் பண்பாடு, வாழ்க்கை தனக்குத் தெளிவாகத் தெரிவதால் அவர்களின் எழுத்தை மொழிபெயர்ப்பது நியாயம் செய்வது என்கிறார். தகழியின் எழுத்துக்காகக் குட்ட்நாடன் பகுதி வட்டார வழக்கையும், விஷக்கன்னி மொழிபெயர்ப்புக்கு வயநாடு மக்களின் வட்டார வழக்கையும் தெளிந்திருக்கிறார்.

கேரளாவில் முப்பது சதவிகிதம் அளவுக்கு அரையம் (ராயல்டி) வழங்கப்படுகிறது என்பதையும், அங்கே பல்வேறு வகையான நூல்கள் பெரும் வரவேற்பை பெறுவதாகவும் கூறுகிறார். நாற்பத்தி நான்கு வருடங்களில் முப்பத்தி நான்கே நூல்களை மொழிபெயர்த்திருக்கும் அவர் தனக்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்த பொழுது மாட்டுக்கு வைத்தியம் பார்க்க வந்த விவசாயியின் கரங்களைக் குலுக்கிக் கொண்டது நெகிழ்வோடு சொல்கிறார்.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் தன்னுடைய காவல் கோட்டம் நாவல் ஜாதியம், பழம்பெருமை ஆகியவற்றை மீட்டெடுக்கிறது என்பதை மறுதலிக்கிறார். குடிக்காவலும், கோட்டையும் நிறைந்த ஒரே ஊர் மதுரை, அப்பகுதி மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறையான குற்றப்பரம்பரை சட்டத்தைப் பற்றிப் பதிந்திருப்பதாகவும், கள்ளம் பற்றி எக்கச்சக்கமானவற்றைப் பேசாமல் விட்டிருப்பதைச் சொல்கிறார். திருச்செங்கோட்டில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு இருந்த இரண்டு பங்கு நிலத்தை இந்துத்வா சக்திகள் கைப்பற்ற முனைந்திருக்கின்றன. அப்பொழுது இடதுசாரிகள் எளிய மக்களோடு கைகோர்த்தார்கள். குன்னக்குடி அடிகளார், ‘பட்டையும், கொட்டையும் போட்ட எல்லாரையும் சேர்த்துக்கோ’ என்று சொல்லி ஆதரவுக்கரம் நீட்டி மதவாத சக்திகளைப் பல்லாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு விரட்டியிருக்கிறார்கள்.
நிறைவான நூல் இது.

அகநி வெளியீடு
பக்கங்கள்: 240
விலை: ரூபாய். 150
அ.வெண்ணிலா

‘பேசாத பேச்செல்லாம்’-பெண்களின் பேருலகம்!


ஒரு நல்ல கட்டுரைத்தொகுப்பை வாசிக்கிற பொழுது உருவாகும் வகைவகையான உணர்ச்சிகளை எப்படி விவரிப்பது? பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பாகவே அமையும் என்பது பொதுப்புத்தியில் பதிந்து விட்ட சூழலில் ‘பேசாத பேச்செல்லாம்’ இணைந்து ஒரு உரையாடலை நிகழ்த்தும் அசாத்தியமான சவாலை பெருமளவில் சாதித்திருக்கிறது.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சொல்வது போல இந்நூலில் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை எனும் மூன்று கதவுகளின் ஊடாகவும் ப்ரியா தம்பி சலிப்பே தராமல் அழைத்துப் போகிறார். ஆறு நாட்களுக்குப் பின் விடுமுறை நாள் மற்றவர்களுக்குக் கொண்டாட்ட நாளாக இருக்கிறது…இல்லத்தரசி(?)களுக்கு… குடும்பத்தில் எல்லாரின் உடல்நலத்திலும் அக்கறை செலுத்தும் அவளின் ‘அந்த மூன்று நாட்களை’ தீண்டத்தகாததாகவே காண்கிறோம். மெனோபாஸ் காலத்தில் பெண்ணின் சிடுசிடுப்பின் காரணம் புரிகிறதா நமக்கு?

வீட்டில் கடந்த தலைமுறை பெண்களுக்கு அவர்களுக்கான உணவு முதல் சகலத்தையும் குடும்பமே தேர்வு செய்தது. மீன் சாப்பிடவும், முட்டை சாப்பிடவும் ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கனவும், கனிவோடு யாரேனும் தலை கோதினாலோ, அனுசரணையாகப் பேசினாலோ காதல் என்று பெண்களின் உள்ளம் துடிப்பதற்குப் பின் வீட்டில் ‘இதைச் செய்யாதே,அதைச் செய்யாதே’ என எப்பொழுதும் கைபிடித்து எதையுமே செய்யக் கிடைக்காத வெளியின் கனவுகள் உள்ளன இல்லையா?

ஒரு சைக்கிள் ஓட்டுவதும், ஒரு ஸ்கூட்டியும் பெண்களுக்குத் தரும் விடுதலை ஆண்மனதின் கற்பனைகளில் எட்டாதது. குடும்பத்தின் சிக்கல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள வண்டியெடுத்துக் கொண்டு வெளியேறும் ஆண்களைப் போல அல்லாமல் ஒரு பெரிய உலகம் இருக்கிறது என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடாகப் பல பெண்களின் சொந்தப் பயணங்கள் அமைகின்றன. பெண்கள் வண்டி ஓட்டும்பொழுது விபத்துக்கள் குறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, பெண்களின் வண்டியின் பின்னரே உட்கார பெரும்பாலும் மறுத்து நாங்கள் ஓட்டுகிறோம் என்று சாவியைப் பறித்துக் கொள்ளும் பெருங்கருணை நம்மிடம் இருக்கிறது!

குறைந்த சம்பளத்தில் குடும்பத்தின் செலவுகளைக் கவனிக்க வேலைக்கு வரும் பெண்கள் அதை வீட்டுக்கே கொடுப்பதால் அவர்கள் வெளியே சாப்பிட அழைக்கும் பொழுது வருவதில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? காலை எட்டு மணிக்குத் தொடர்வண்டியில் ஏறும் பெண்கள் வீட்டில் அதிகாலை வெகுசீக்கிரம் எழுந்து தங்களின் குடும்பத்தினரின் வேலைகளை முடித்துவிட்டு வந்து சேர்கையில் அவர்கள் முகத்தின் சோர்வை விட ஒப்பனை அல்லவா கண்களை உறுத்துகிறது? ஒரு பாவாடைக்காக இறுதி வரை காத்திருந்தே கரைந்துவிடும் இலட்சுமணப் பெருமாள் கதை நாயகி போலத்தான் பல பெண்களின் கனவுகளும்…

காதல் கற்பனைகளாலும், பைத்தியக்காரத் தனங்களாலும் நிறைந்த ஒன்று. காதல் மலரும் நொடியைப் புரிந்து கொள்வது போல விலகும் கணத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளப் பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. போன காதலை நினைத்துக்கொண்டே உண்மையாகவே நேசத்தை நீட்டும் கணவனின் அன்பைத் தவறவிடும் பெண்கள் எத்தனை பேர்? நேசிப்பவனிடம் நான் உன்னை நேசிக்கிறேன் என்று எத்தனை பெண்களால் மனம் விட்டு சொல்ல முடிகிறது? பெண்கள் வெகு விரைவாகக் காதலின் தோல்வியைக் கடக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டும் ஆண்கள் பலரும் அவர்களுக்குத் தங்களின் வலியை வெளிப்படுத்தக்கூட உரிமை இல்லாத வெறுமை தந்த பெருங்கொடுமை அது எனப் புரிவதில்லை. பெண்கள் ஆண்களைப் பொறுத்தவரை பல சமயங்களில் உடைமை, அப்படியொரு உணர்வைப் பெறாத பெண்கள் அப்படியொரு பதற்றத்துக்கு உள்ளாவதில்லை!

பெண்களையும், ஆண்களையும் வேற்றுலக வாசிகள் போலப் பேச அனுமதிக்காமல் கொடும் காவல் புரியும் நம் கல்விமுறை, சமூகம் ஆகியவற்றால் கள்ளத்தனமும், சாகசமும் கலந்து எதிர் பாலினத்தவரோடு பேசிக்கொள்கிறார்கள். அதுவே காதல் என்று தப்பர்த்தமும் கொள்கிறார்கள். பலர் ஓடிப்போகிறார்கள். அவர்களுக்கிடையே இயல்பான உரையாடலை பெற்றோரும், ஆசிரியரும் அனுமதிக்கிற பொழுது இத்தகு அபத்தங்கள் பெருமளவில் குறையும்.

குழந்தைகளின் மீதான வன்முறை தரும் மனவலி, உடல்வலியை எப்படிக் கடந்து அவர்கள் நீதி பெறுவார்கள்? வன்புணர்வில் பெரும் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் முடங்கிப்போகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களே இவள் இறந்து போயிருந்தாலே பரவாயில்லை என்று எண்ணுகிற அளவுக்குச் சூழல் நிலவுகிறது. அந்தப் பாதகத்தைச் செய்தவன் இறுமாந்து திரிய, ‘வன்புணர்வுக்கு உள்ளானவள்’ என்று பட்டம் சுமந்து போராடும் வெகுசிலரைப் போலப் பலர் எழ வேண்டும். அடரிருட்டில் சிறு ஒளி தரும் சுடர் மேலானது இல்லையா?

‘முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடியும் தாம்பத்தியம் எத்தனை பேருக்கு வாய்க்கிறது/’ எனும் வெண்ணிலாவின் கவிதை பெண்களின் இல்லற வாழ்க்கையின் வெம்மையைச் சொல்லும். அறுபது சதவிகித பாலியல் வன்முறைகள் திருமண உறவில் நிகழும் வன்புணர்வுகள் என்பது அதிர்ச்சி தரவேண்டியதில்லை. படுக்கையில் கொடும்பசி கொண்ட மிருகம் போலக் குதறி, புணர்ந்த பின்னர் அப்படியே குறட்டை விட்டு தூங்கிப் போகும் ஆண்களிடம் கனிவான பேச்சையும், மென்மையான முத்தமும், பிணைதலுக்குப் பிந்தைய அணைப்பையும் பெண்கள் விரும்புகிறார்கள். அது இன்னுமொரு வன்முறை களமாக ஆவதாலேயே ஒதுங்குகிறார்கள், இது பெரும்பாலும் புரியாமல், ‘அவளுக்கு ஆர்வமே இல்லை!’ என ஆண்கள் கடுகடுக்கிறார்கள். எத்தனை நிமிடங்கள் தாங்குகிறான் என்பதில் இல்லை ஆண்மை, எவ்வளவு இதத்தைத் தருகிறான் என்பதில் இருக்கிறது முழு ஆண்மை.

திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தங்கள் நட்பு, உறவுகள் சார்ந்தோ அல்லது விரும்பியதற்கு ஓடவோ குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. அனுமதிக்கிற குடும்பத்திலும் அதைக் குற்ற உணர்ச்சியோடு பெண்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறுகிறார்கள். பெண்களின் சொந்த வாழ்க்கைப் பற்றியும், அவர்களின் கம்பீரமான ஆளுமையைத் திமிர் என்றும் சமூகம் பேசினாலும் அதைக்கண்டு கொள்ளாமல் தன்னுடைய துறையில் தனி முத்திரை படைப்பது சாத்தியம் என்பதை நயன்தாரா, ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிச் சொல்லிக்கொண்டே
இருக்கிறது.

ஆடைகள் அணிவதில் தங்களுக்குச் சவுகரியமானதை பெண்கள் தேர்வு செய்வதை ஆண்கள் பாதுகாப்பு என்கிற பெயரில் தொடர்ந்து நிராகரிக்கிரார்கள். முழுக்கப் போர்த்தி ஆடை அணியும் பள்ளி மாணவிகள், பால் மணம் மாறாத குழந்தைகள் மீது பாயும் காமுகர்கள் ஆடையால் தான் கிளர்ந்து எழுந்தார்களா? சுதந்திரம் என்று பேசும் பல பெண்கள், தங்களின் எல்லாத் தேவைகளுக்கும் ஆண்களையே சார்ந்திருக்கும் பொழுது எப்படி விடுதலை சாத்தியம். அடிமைத்தனம் வெளியே இருந்து மட்டுமல்ல உள்ளிருந்தும் ஏற்படும்.

தனி அம்மாவாகப் பிள்ளையை வளர்க்கும் அம்மாக்களை ,’எனக்கு அப்பா இல்லை. நீதானே எல்லாமே!’ என்று உணர்ச்சி மிரட்டலால் தகாத பலவற்றையும் பிள்ளைகள் சாதிக்கிறார்கள். ‘பத்து மாசம் சுமந்து பெத்தது சும்மாவா?’ என்று கேட்டு மிரட்டுவது தவறு என்றால் ‘எனக்காக இதைக்கூடச் செய்யலைனா என்ன அம்மா நீ!’ என்பதும் தான். பெண்கள் தனித்துப் பயணம் செய்கிற பொழுதும், குடும்பத்துடன் சுற்றுலா போகும் பொழுதும் அனுபவிக்கிற அவஸ்தைகள் ஏராளம். பேருந்தில் ஒரு கழிப்பறை என்று யோசிக்கிறோமா? அங்கங்கே பெண்கள் மீது நிகழும் வன்முறைகளால் ‘இதனால் தான் பொண்ணுங்க தனியாப் போகக்கூடாது’ என்கிற குரல்கள் எழுகின்றன. கணவன் கண் முன்னரே பெண்களை இழுத்துக்கொண்டு போன கதைகளும் உண்டு. ‘இதுக்குத் தான் புருஷனோட வெளியே போகாதேன்னு சொல்றோம்.’ என்று எதிர் குதர்க்கம் பேசலாம் இல்லையா?

ஆறு மாதக் குழந்தையோடு உணவருந்த பேருந்தில் இருந்து இறங்கி மழையில் சிக்கிக்கொண்ட பொழுது பேருந்தை அருகே கொண்டுவந்து அப்படியே ஏற்றிக்கொண்ட ஓட்டுனர், பல மைல்தூரம் தீவட்டி ஏந்தி கைபிடித்து நகர்கொண்டுவந்து சேர்த்த ஆதிவாசி ஆண் என்று பல நம்பிக்கைத் தீப்பந்தங்களும் பெண்களுக்கு இருக்கவே செய்கின்றன.

சினிமாக்கள் பெண்களைச் சித்தரிக்கும் விதமும், அதில் காணப்படும் பெண் வெறுப்பும் ‘வெறும் சினிமாதானே’ என்று கடந்து விடுவதற்கில்லை. தமிழ்ச்சமூகத்தின் அன்றாட ஒப்பீடுகள் முதல் ரசனைவரை சினிமாவின் தாக்கம் விசலாமானது. நூலாசிரியரின் ஆசிரியர் சேதுலட்சுமி சொல்வதைப் போல ‘தமிழ் சினிமாக்கள் பெண்களின் கற்பின் மீது காட்டிய அக்கறையை அவர்களின் கணவன் கூடக் காட்டியிப்பானா என்று சந்தேகமே!’ காதல் என்கிற பெயர்கள் நாயகர்கள் திரையில் செய்யும் ஈவ் டீசிங், பெண் காதலை ஏற்கவில்லை என்றால் ஆசிட் அடிப்பது, மிரட்டி வதைப்பது துவங்கி வன்புணர்வுக்கு உள்ளான நாயகி தானே சாவது முதல் நாயகனே கொல்லவேண்டும் என்று வேண்டுவது வரை எத்தனை அசிங்கங்கள்?

பல லட்சம் சம்பாதித்தாலும், எந்தத் தொந்தரவும் தராவிட்டாலும் தனியாகப் பெண்களுக்கு வீடு தருவது என்பது பெருநகரத்தில் இன்னமும் கொடுங்கனவுதான். இருபது-முப்பது வருடம் வரை கடன் கட்டி சொந்த வீடு கனவை அடையும் பலருக்குப் பின்னால் இப்படிச் சந்தித்த அவமானங்கள் அநேகம் இருக்கும். திரையில் ப்ளேக் டிக்கெட் விற்கும் இளைஞன் மெட்ராஸ் தம்பியாக மாறுவது, பீஸ் கட்ட வழியில்லாமல் பேருந்தில் ஏறத் தயங்கி அழும் பெண்ணுக்குப் பீஸ் கட்டும் அன்னியர் என்று அங்கங்கே நேசத்தால் நம் துயரை மறக்கடிக்கும் உறவுகள் உண்டு. பீஸ் கட்டிய உடனே அவரோடு அவள் அப்பெண் காதல் பூண்டாள் எனும் நம்முடைய கற்பனைச் சிறகுகளுக்குக் கத்தரிபோடும் தருணம் அசத்தல்.

அப்பாக்கள் தங்கள் மகள்களுக்கு வயதாக வயதாக விலக ஆரம்பிக்கிறார்கள். எப்பொழுதும் தங்கள் தோளிலேயே இருக்கட்டும், தான் சுமக்கிறேன் என்று பால்யத்திலும், இனி கட்டி வைத்தால் போதும் எனப் பருவ வயதிலும் இரு முனைகளை எடுக்காமல் கவனமான சுதந்திரத்தை தருவதும், உரையாடலை கனிவோடு சாத்தியப்படுத்துவதும் காலத்தின் தேவை.
பருவ வயது எய்தும் எண்ணற்ற பெண்களுக்குத் தேவை பூப்புனித நீராட்டு விழாக்கள் இல்லை. சுகாதாரமான டாய்லெட்; நாப்கின்.’வயசுக்கு வந்துட்ட…வெட்கப்படு’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘இது இயல்பானது…எந்தக் குற்றவுணர்வும் தேவையில்லை.’ என்பதே தேவை. விஸ்பர் விளம்பரங்களைப் பற்றிக் கேள்வி கேட்கும் மகனை தட்டாமல் விளக்குவதும் தேவை.

இரண்டாவதாக மணம் செய்கிற ஆணுக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் திருமண உறவை மேற்கொள்ள முடிகிறது. ஆனால், அப்படிப்பட்ட சவுகரியமும், பேரன்பும் பெண்ணுக்கு கிடைக்கிறதா? அப்படிக் கிடைத்த மூக்கன் என்பவரின் மனைவி அவரின் மரணத்தின் பொழுது தன் கணவரின் உடலைத் தரையில் வைக்கவும் விடவில்லை. முத்தங்களால் இறுதி யாத்திரை வரை நிறைத்துக் கொண்டே இருந்தாள். இன்னொரு புறம், ‘இறந்து போனானே உயிரெடுத்த புருஷன்’ என்று பெண்கள் உள்ளுக்குள் ஆனந்தப்படுகிற அளவுக்கும் பல மண உறவுகள் அமைந்து விடுகின்றன!

தாய்மை குறித்த பெருமிதங்களைச் சடசடவென்று உடைத்து நொறுக்கும் கட்டுரையின் இறுதியில் ஷாஜகான் பதிமூன்று கர்ப்பங்களைத் தந்ததால் அவனை மனைவி மும்தாஜ் சபித்ததாக வழங்கும் நாடோடிக்கதை நிஜமோ என மனம் பதைக்கிறது.
‘பிரச்சினைன்னு குடிக்கிறானாம்…டெய்லி குடிச்சுட்டு வர இந்த ஆளைவிடப் பெரிய பிரச்சனை இருக்க முடியுமா? இதையே நான் சமாளிக்கலையா? நாமலாம் குடிக்க ஆரம்பிச்சா என்னாகும்?’ எனக்கேட்கும் பெண்ணின் குரல் தான் ‘குடி உயர் தமிழ்நாட்டின் அவலம். அம்மாக்கள் வீட்டோடு வேலை செய்தபடி இருப்பது பலருக்கும் கவுரவக் குறைவாக இருக்கிறது. தங்களுக்காக அம்மா எப்பொழுதும் உடனிருக்க வேண்டும் என்று இளமைப் பருவம் முழுக்க அவர்களைத் தங்களுக்காய் தேய்த்துவிட்டு இப்படியும் யோசித்தால் எப்படி? அம்மாக்கள் பெண்களின், மகன்களின் பரந்த கனவுகளுக்கு, காதலுக்குத் தடை சொல்கிற பொழுது ‘வெளியுலகமே தெரியவில்லை’ என்று சலிக்கிற நாம் அவர்களுக்கு வெளியுலகத்தைக் காட்ட முயலவே இல்லை என்கிற குற்ற உணர்ச்சியைச் சற்றேனும் அடைகிறோமா? எதிர்ப்பார்ப்பின்றி நேசிக்கும் அம்மாக்களை’ நாம்தான் புரிந்துகொள்ள மறுக்கிறோம். அவர்கள் நம்மை மன்னித்தவண்ணம் உள்ளார்கள்.

குழந்தை வகுப்புச் செல்ல மறுத்தால் என்ன சிக்கலென்று கேட்காமல் வன்முறையையே கையாள்கிறோம். மனப்பாடத்தால் நிறைத்து அதனைக் குழந்தைமையை விட்டுத் துரத்துகிறோம். ‘என்ன சிக்கல் உனக்கு?’ என்று கனிவாகக் கேட்கவே மறுதலிக்கிறோம். குழந்தைகளின் கண்களில் தெரியும் ஏக்கத்தைப் புரிந்து கொள்ளவே மாட்டோமா? பேசுவதற்காகவும், துருதுருவேன்றும் இருப்பதற்காகவும் குழந்தைகளைத் தண்டித்துவிட்டு அவர்கள் குழந்தைகளாக இல்லையென்றால் எப்படி?

பெண்கள் ஜாதிமாறி திருமணம் செய்துகொண்டாலும் கணவனின் ஜாதி ஒட்டிக்கொள்கிறது. கடவுள் நம்பிக்கையின்மையைத் தன்னுடைய மனைவியின் மீது திணிப்பது எப்படிப் பகுத்தறிவாகும்? உரையாடலுக்கும், அழுத்தத்துக்கும் வேறுபாடுகள் உண்டு இல்லையா? பெண்கள் பேசாத பேச்செல்லாம் எழுத்தாக ஆகியிருக்கிறது. பெண் மனத்தின் ஆழ அகலங்கள் புரிய அவசியம் படிக்க வேண்டிய நூல்.
ஆசிரியர்: ப்ரியா தம்பி
பக்கங்கள்: 288
விலை: 170
விகடன் பிரசுரம்

குட்டி இளவரசன்-Little Prince <3


அந்த்வான் து செந்த்- எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன் எனும் குழந்தைமையை இழந்த பெரியவர்களுக்கான நாவலை வாசித்து முடித்தேன். விமானத்தில் இருந்து சகாரா பாலைவனத்தில் சிக்கிக்கொள்ளும் கதாசிரியர் அங்கே குட்டி இளவரசனை சந்திக்கிறார். வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவனாக அவன் இருக்கிறான்.

தன் கிரகத்தைப் பற்றியும், தான் சந்தித்த பல்வேறு நபர்களைப் பற்றியும் அவன் சொல்கிறான். அவனுடைய கிரகம் மிகச்சிறியது என்றும், அதில் ஒரு மலர் நான்கு முட்களோடு இருப்பதையும், அதனை விட்டு நீங்கியதையும் வருத்ததோடு சொல்கிறான். இளம்வயதில் ஓவியராக இருந்த கதாசிரியரை ஒரு ஆட்டை வரைந்து தர சொல்கிறான்.ஆசிரியர் இப்படி எழுதுகிறார்,’மனிதர்களான நமக்கு இவை எல்லாம் சுவாரசியம் தருவதில்லை. ஜெரேனியம் மலர்கள், புறாக்கள் ஆகியவற்றை நான் கண்டேன் என்றால் யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு லட்சம் மதிப்புள்ள வீட்டைக் கண்டேன் என்று ஆவலோடு கவனிப்பார்கள்..’ என்கிறார்.

பாலைவனத்தில் ஒரு வேற்று கிரக இளவரசன் தனியே அன்போடு பேசிக்கொண்டு இருக்கையில் பழுதடைந்த தன்னுடைய விமானத்திலேயே ஆசிரியரின் கவனம் இருக்கிறது. ‘முக்கியமான சிந்தனையில் இருக்கிறேன்!’ என்கிறார். ‘நீயும் பெரியவர்களைப் போலப் பேச ஆரம்பித்துவிட்டாய்! குழப்புகிறாய்…கலப்படம் செய்துவிட்டாய்’ என்று சலித்துக்கொள்கிறான் இளவரசன்.

இளவரசனின் கிரகத்தில் ஒரே ஒரு மலர் அழகாய் தன்னுடைய முடியை கலைத்துக்கொண்டு பூத்தது. வெளியில் ஏகத்துக்கும் ஆர்ப்பாட்டம் செய்வதாகவும், இளவரசனை உருட்டுவது போலவும் பேசிக்கொண்டு இருந்த அந்த மலர் இளவரசனை நேசித்தது. இளவரசன் அதன் உருட்டலில் கோபமுற்று அதனை நீங்கினான்.சகாரா பாலைவனத்தில் இருந்தபடி, ‘அவளுடைய சொற்களைக் கொண்டு எடைபோடாமல் அவளின் செயலால் எடைபோட்டிருக்க வேண்டும். அற்ப போலித்தனத்துக்குப் பின் இருந்த பரிவை நான் புரிந்துகொள்ளவில்லை.’ என்கிறான்.
அவனை இதைச் செய், அதைச் செய் என்ற மலர் அவன் போகிற பொழுது அழுகிறாள். அவனைப் பத்திரமாக இருக்கச் சொல்வதோடு, தனக்குக் குளிர், விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டாம் என்றும் சொல்கிறாள். அவளை ஆடு தின்றுவிடக்கூடும் என்று ஒரு வாய்ப்பூட்டை வரைந்து தரச்சொல்கிறான்.

ஒவ்வொரு கிரகமாக இளவரசனின் பயணம் ஆரம்பிக்கிறது. முதலில் ஆணைகள் போடும் ஒரு அரசனைக் காண்கிறான். அவன் தன்னுடைய ஆணைகளால் எதுவும் மாறுவதில்லை என்று உணர்ந்திருந்தும் மக்களின் செயல்களுக்கு ஏற்றவாறு ஆணைகளை மாற்றி வெற்று அதிகாரத்தில் மகிழ்கிறான். தான் சொன்னவுடன் நடக்கும் என்று கட்டுப்படுத்த முடியாதவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதாய் போலி கம்பீரம் காட்டுகிறான். எலிக்கு நீதியின் பெயரால் மரணத் தண்டனை மதித்து மன்னித்து விடவேண்டும் என்று அவன் சொல்வது உலகத்தின் நீதிமுறைகளின் மீதான சாடலாகவே தோன்றுகிறது.

அடுத்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லாரும் தனக்கு ரசிகர்கள் என்றும் எண்ணும் தற்பெருமைக் காரனை சந்திக்கிறான். அடுத்துக் குடிப்பதில் தன்னையும், வெட்கத்தையும் மறக்க முனையும் குடிகாரனை வேறொரு கிரகத்தில் காண்கிறான். விண்மீன்களை எண்ணி அதன் எண்ணிக்கையை எழுதி பெட்டியில் பூட்டி தான் செல்வம் சேர்த்திருப்பதாய் நாற்பது ஆண்டுகளாக விண்மீன்களை எண்ணிக்கொண்டு இருக்கும் பிஸினஸ்மேன் சொல்கிறான். அவனிடம் ‘அதைவிட நான் நிஜமாகக் காணும் மலர் மேலானது!’ என்று சொல்கிறான் இளவரசன்.

அடுத்துத் தனக்கிடப்பட்ட பணியான விளக்கை ஏற்றுவதையும், அணைப்பதையும் ஓயாமல் செய்யும் விளக்கு எற்றுபவனை வேறொரு கிரகத்தில் கண்டு நெகிழ்கிறான் இளவரசன். அடுத்து உலகைச் சுற்றிப் பார்க்காமல், பிறர் தரும் தகவலின் உண்மைத் தன்மைக்கு ஆதாரம் கேட்டு அலையும் ஒரு வயதான புவியியல் ஆய்வாளரைக் காண்கிறான். அவர் கவனம் இளவரசனின் கிரக எரிமலைகளிலேயே இருக்கிறது. அவரை விட்டு நீங்கி பூமியை அடைகிறான். பூமியை இப்படி வர்ணிக்கிறான் இளவரசன்:
நூற்றி பதினோரு அரசர்கள், ஏழாயிரம் புவியியலாளர்கள், ஒன்பது லட்சம் வியாபாரிகள், எழுபதைந்து லட்சம் குடிகாரர்கள், முப்பத்தொரு கோடியே பத்து லட்சம் தற்பெருமைக்காரர்கள் இருக்கிறார்கள் என்கிறான். அங்கே பல ரோஜாக்களைக் காண்கிறான். தான் ஒரு சாதாரண மலரையே நட்பு பூண்டு இருந்ததாக வருந்துகிறான். அடுத்து அவன் ஒரு நரியைக் காண்கிறான்.

அந்த நரி அவன் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள் (உறவு ஏற்படுத்திக்கொள்) என்று வேண்டுகிறது. தான் ஒரு மலரை பழக்கப்படுத்திக் கொண்டதாகச் சொல்கிறான். ‘லட்சம் பேர் இருந்தாலும் நீ பழக்கப்படுத்திக் கொண்டே உறவு தனியானது. உனக்கே அது. அதற்கே நீ!’ என்கிறது நரி.
தான் சீக்கிரம் செல்லவேண்டும், மேலும் பல நண்பர்களைக் காண வேண்டும், உலகைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறான் இளவரசன். ‘பழக்கப்படுத்தப்பட்ட பொருட்களைத் தான் தெரிந்து கொள்ள முடியும். மனிதர்களுக்கு இப்பொழுது எதையும் புரிந்து
கொள்ள நேரமில்லை.,,மனிதர்களுக்கு நண்பர்களே இல்லை!’என்கிறது நரி

அவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். அவனுடைய ரோஜாவை அவன் தனியாகக் கவனித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது. அதற்காகச் செலவிட்ட நேரம் மனதை நிறைக்கிறது. நரி சொல்கிறது, ‘உலகின் முக்கியமான விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது. இதயத்துக்குத் தான் அவை புலப்படும்..’ என்று அவனுக்கு விடை கொடுக்கிறது.

தொடர்வண்டிகளைச் சரி செய்யும் பாய்ண்ட்ஸ்மேன் சொல்கிறார், ‘மனிதர்கள் எதைத் தேடுகிறோம் என்று அறிவதில்லை. யாரும் இருக்கிற இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பதேயில்லை!’ என்கிறார். இளவரசனிடம் குழந்தைகள் மட்டுமே எதைத் தேடுகிறோம் என்று அறிந்தவர்கள் என்கிற ரகசியத்தை அவர் சொல்கிறார். அதைப் பிடுங்கிக்கொள்கிற பொழுது அழும் அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் என்றும் அவனுக்குச் சொல்லப்படுகிறது.

அவன் இறுதியாக ஒரு வியாபாரியிடம் வந்து சேர்ந்தான். அவன் தாகம் போக்கும் மாத்திரை பற்றிச் சொல்கிறார். அதைச் சாப்பிட்டால் ஒரு நாளைக்குத் தண்ணீர் குடிக்கும் ஐம்பத்தி மூன்று நிமிடங்களைச் சேமிக்கலாம் என்கிறார். ‘அதைச் சேமித்து என்ன செய்வீர்கள்?’ என அவனிடம் கேட்க, ‘எதை வேண்டுமானாலும் செய்யலாம்!’ என்கிறான். ‘நான் ஒரு ஊற்றை நோக்கி நடந்து வருவேன்.’என்கிறான் இளவரசன்.

இறுதியில் பாலைவனத்தில் ஆசிரியரோடு இருக்கிறான். ஆசிரியரின் தாகம் போக்க அவர்கள் கிணறைத் தேடி அலைகிறார்கள். இளவரசன் சொல்கிறான்”’இந்த பாலைவனத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது தான் கிணற்றின் அழகு!’. ஆசிரியரை விட்டு நீங்குகிற பொழுது,’நான் எதோ ஒரு கண்டறிய முடியாத விண்மீனில் சிரித்தபடி வசித்துக்கொண்டிருப்பேன். நான் எந்த விண்மீனில் இருக்கிறேன் என்று தெரியாமல் எல்லா விண்மீன்களும் சிரிக்கின்ற விண்மீன்களாகத் தெரியும். இதுவே நான் உங்களுக்குத் தரும் பரிசு!’ என்று சொல்லி அவரை விட்டு நீங்குகிறான்.

இந்தப் பெரியவர்களுக்கான நாவலை நேரடி பிரெஞ்சு மொழியில் இருந்து வெ.ஸ்ரீராம்,ச.மதனகல்யாணி அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். நூலில் ஆங்காங்கே வரும் வரைபடங்கள் பால்யத்துக்கே கூட்டிச்செல்லும்
பக்கங்கள்:118
விலை: 110
க்ரியா வெளியீடு

பாதி வென்ற போர்கள்- இந்தியாவின் நிகழ்தற்கரிய ஜனநாயகம்’


அஷுடோஷ் வர்ஷேனே எனும் அரசியல் அறிவியலாளர் எழுதிய ‘பாதி வென்ற போர்கள்- இந்தியாவின் நிகழ்தற்கரிய ஜனநாயகம்’ எனும் நூலை வாசித்து முடித்தேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடாக எப்படி உயிர்த்திருக்கிறது? இந்த நாட்டின் வெற்றிகள், தோல்விகள் என்ன என்பதை அரசியல் அறிவியல் அறிஞர்களின் கோட்பாடுகள், இந்திய சூழல், தரவுகள் ஆகியன கொண்டு ஆய்வு செய்யும் வர்ஷேனே பத்து அத்தியாயங்களில் ஒரு பிரமிப்பான பயணத்துக்குள் அழைத்துப் போகிறார். அரசியல் அறிவியல் கோட்பாடுகள் சமயங்களில் ஓவர் டோஸ் போலத் தோன்றினாலும் நூலை ஒரே மூச்சில் வாசித்து விடலாம்.


நேரு இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததும், ‘Tryst With Destiny’ என நிகழ்த்திய உரையில் கடைக்கோடி மனிதனுக்கும் விடுதலை, வாய்ப்புகள்; வறுமை, அறியாமை, நோய்களை எதிர்த்து போராடுதல், அவற்றை முடிவுக்குக் கொண்டுவருதல்; வளமிகுந்த ஜனநாயக, முன்னேறிய தேசத்தை உருவாக்கல், சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புகளை உருவாக்கி நீதி, முழுமையான வாழ்க்கை ஆகியவற்றை எல்லா ஆண்கள், பெண்களுக்கும் தருதல் ஆகியவற்றைத் தன்னுடைய கனவாகக் குறிப்பிட்டார்.

காரல் மார்க்ஸ் துவங்கி தேர்தல், தேர்தல் அமைப்புகள், பிரதிநிதியை தேர்ந்தெடுக்கச் சுதந்திரம் ஆகியவை கடுமையான விமர்சனங்களுக்கும், விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அறுபதுக்கும் மேற்பட்ட வருடங்கள் கழித்துப் பார்க்கையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடே இல்லை-இங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிகுந்திருக்கின்றன. தேர்தல்கள் நடப்பது மட்டுமே ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது என்பதன் அடையாளம் இல்லை என்று பாகிஸ்தானிய வரலாற்று ஆசிரியர் ஆயிஷா ஜலால் குறிக்கிறார்.

இந்தக் கருத்தை வர்ஷேனே இரண்டு எதிர்க்கருத்துக்களால் மறுக்கிறார். அதிகச் சமத்துவம் ஜனநாயகத்தை ஆழப்படுத்துகிறது, சமத்துவமின்மை ஜனநாயகம் என்பதைச் சாத்தியமே இல்லாத ஒன்றாகச் செய்துவிடுவதில்லை. ராஜஸ்தானிலும் ஜனநாயகம் இருக்கிறது, கேரளாவிலும் ஜனநாயகம் இருக்கிறது. சமத்துவமின்மை குறைவாக இருக்கிற கேரளாவில் ஜனநாயகம் இன்னமும் ஆழமாக இருக்கிறது.
தேர்தல் கோட்பாடு என்பதை விடுத்து, முக்கிய இலக்குகளை மட்டும் நிர்ணயித்துக்கொண்டு ஒரு அரசு முன்னேறினால் போதும் என்பது ஆபத்தானது. எது மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து கொள்ள ஒரு தேர்தல் அவசியமாகிறது. விடுதலை, சமத்துவம், சுய மரியாதை என்று ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தேர்வுகள் இருக்கலாம். அவற்றை வெளிப்படுத்த ஒரு வழியாகத் தேர்தல்கள் திகழ்கின்றன. சிங்கப்பூர் மகத்தான பொருளாதார வெற்றியை பெற்றிருக்கிறது, ஆனால், லீ க்வான் க்யூவின் இலக்குகள் விவாதிக்கப்படவில்லை, தீவிரமான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஜனநாயகம் என்பதைத் தால் என்கிற அரசியல் அறிஞர் போட்டி, பங்கேற்பு இரண்டும் கலந்த ஒன்று என்கிறார். இவை பெரும்பாலும் மேற்கு சமூகங்களில் தான் சாத்தியப்பட்டன என்கிற தால், இந்தியா எனும் கல்லாமை மிக்க, விவசாயத்தைப் பெரிதும் சார்ந்துள்ள, பழமைவாதம் மிக்க, நம்பிக்கைகள், செயல்பாடுகள் ஆகியவற்றில் மரபார்ந்த விதிகளைப் பின்பற்றும் ஒரு நாடும் ஜனநாயகத்தைக் கொண்டிருப்பது முன்னணியான சமகால விதிவிலக்கு என்கிறார்.

ப்ரழேவோர்ஸ்கி (Przeworski) எனும் அறிஞரின் ஆய்வுகள் எந்தெந்த நாடுகளில் ஜனநாயகம் இயங்கும் என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டது. மதம், காலனிய ஆட்சி, இனப்பன்மை, உலக அரசியல் சூழல், கல்வி என்று பல்வேறு அம்சங்களைக் கொண்டு ஒரு நாடு ஜனநாயகத்தைக் கொண்டிருக்குமா இல்லையா என்று ஆய்வு செய்து பார்க்கையில், ஒரு நாட்டின் வருமானமே 77.5% சமயங்களில் சரியாக ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவக்கூடிய சாத்தியத்தைச் சரியாகக் கணிக்கிறது. அதிக வருமானம் இருக்கிற நாடுகளில் ஜனநாயகம் இருக்க வாய்ப்பு அதிகம். 141 நாடுகளைக்கொண்டு நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வில் அதிக வருமானம் இருந்தும் ஜனநாயகம் இல்லாத அதிர்ச்சி விதிவிலக்காகச் சிங்கப்பூரும், குறைந்த வருமானம் இருந்தும் ஜனநாயகம் நீடித்திருக்கும் இன்னொரு விதிவிலக்காக இந்தியாவும் திகழ்கின்றன என்கிற ப்ரழேவோர்ஸ்கி. வர்ஷேனே அதனால் இந்தியாவை ‘சாத்தியமில்லாத ஜனநாயகம்’ என்பதற்கு மாறாக ‘நிகழ்தற்கரிய ஜனநாயகம்’ என்கிறார்.

வருமானம் எப்படி ஒரு நாடு ஜனநாயகத்தைக் கொண்டிருக்குமா என்பதைக் காட்டும் என்கிற கேள்வி எழலாம், ஒரு நாட்டில் வெவ்வேறு முறைகளில் ஜனநாயகம் எழுந்து இருந்தாலும் ஜனநாயகம் நீடித்து நிற்க மக்களின் வருமானம் உயர்வது அவசியமாகிறது என்பது நாற்பது ஆண்டுகால வருமானத் தரவுகள் சொல்லும் செய்தி ஆகும்.

ஏன் இந்தியாவில் ஜனநாயகம் உயிர்த்திருக்கிறது என்கிற கேள்விக்கு அதன் குறுக்கு வெட்டாகக் காணப்படும் பலதரப்பட்ட வேறுபாடுகள் முக்கியக் காரணம் எனலாம். வெவ்வேறு மொழிகள், ஜாதிகள், மதங்கள் என்று பலதரப்பட்ட வேறுபாடுகள் மக்களைப் பிரித்து வைத்திருப்பதால் இந்தியா என்கிற கருத்தாக்கத்துக்கு ஒரே சமயத்தில் ஒருங்கிணைந்த எதிர்ப்பு என்பது ஏற்பட்டது இல்லை.

வறுமை மிகுந்த சமூகங்களில் அரசுகள் பொருளாதரத்தில் மக்கள் நலன் சார்ந்து தாங்களே ஈடுபட வேண்டியிருக்கும். இதனால் குறிப்பிட்ட சிலர் ஒரு காலத்தில் பயன்பெறுவதும், ஆட்சி மாறியதும் பயன்பெற்றவர்கள் சிறை செல்வதும் நடைபெறும். இப்படிப்பட்ட ஏழை அரசுகளில் கூட்டாக மக்கள் கொல்லப்படுவதும் அடிக்கடி நிகழும். ஆதிக்க சக்திகள் தாங்கள் எதை ஜனனயாகம் என்று கருதுகிறதோ அவற்றைக் கொண்டு தாராளவாத போக்கை மழுங்கடித்து, சிறுபான்மையினர், எதிர்க்கும் பிரிவினர், ஆளுமைகள் ஆகியோரை தாக்குவார்கள், கொல்வார்கள். வளம்மிகுந்த ஜனநாயகங்களில் இவை சாத்தியமே இல்லை என்று அர்த்தமில்லை என்றாலும், அங்கே மீடியாக்கள், நீதிமன்றங்கள் பெரும்பான்மை ஆதிக்கத்துக்குத் தடையாகத் திகழ வாய்ப்புகள் அதிகம்.

கியோஹானே எனும் அரசியல் அறிஞர் இந்தியா ஏன் உயிர்த்திருக்கிறது என்பதை அறிய சமூக-பொருளாதாரக் காரணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் எப்படிச் சமூகத்தில் அதிகாரப்பரவல் மீண்டும் மீண்டும் சமரசம் செய்துகொள்ளப்பட்டது என்பதைக் காண வேண்டும் என்கிறார். தலைவர்களின் செயல்பாடுகள், அரசியல் அமைப்புகளின் வடிவம், வெவ்வேறு சமூகக் குழுக்களின் அரசியல் பங்களிப்பு ஆகியவை கணக்கில் கொள்ளப்படவேண்டும் என்பது அவரின் பார்வை.

இந்தியாவில் மண்ணின் மைந்தர் போராட்டங்கள் அசாம், மும்பை, தெலங்கானா பகுதிகளிலும், சீக்கிய-இந்து சிக்கல் பஞ்சாபிலும் ஏற்பட்டன என்றாலும் அவை முழு இந்தியாவையும் பாதிக்கவில்லை. எல்லாவற்றையும் விடக் காஷ்மீர சிக்கலுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்திய முஸ்லீம்களும் இந்திய அரசுக்கு எதிராக எழுந்துவிடவில்லை. ஏற்கனவே குறிப்பிட்ட பல்வேறு வகையான வேறுபாடுகள் இதற்கு முக்கியக் காரணமாகும்.
ஜான் ஸ்டூவர்ட் மில் எனும் தாராளவாதத்தின் தந்தை தேசம் என்கிற கருத்தாக்கத்தை ஏற்றுக்கொள்ளும் மக்களும், அவர்கள் இருக்கும் எல்லைகளும் ஒத்துப்போனால் மட்டுமே ஜனநாயகம் சாத்தியம் என்கிறார். அதாவது நாம் ஒரே நாட்டினர் என்கிற எண்ணத்தோடு மக்கள் தேர்தலில் பங்குகொண்டால் தான் அங்கே ஜனநாயகம் சாத்தியம் ஆகும். யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வதாக இல்லாமல், யார் நாட்டைவிட்டு ஓடவேண்டும் என்பதை முடிவு செய்வதாகத் தேர்தல்கள் பார்க்கப்பட்டால் அது ஆபத்தானது. இந்த வகையில் பல்வேறு மொழிகள் ஒரே நாட்டில் இருப்பது அந்நாட்டுக்கு ஆபத்து என்று மில் கருதினார்.

இந்தியா என்கிற கலாசார அமைப்பு பல நூற்றாண்டுகளாக இருந்தது என்றே ஏற்றுக்கொண்டாலும், ஒரு நாடாக இந்தியா உருப்பெற்றது காந்தியின் வருகைக்குப் பிறகுதான் என்பது அரசியல் அறிஞர்களின் கருத்து. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வட இந்தியா, மத்திய இந்தியா கிளர்ந்து எழுந்த பொழுது மற்ற பகுதிகள் அதில் பங்குகொள்ளவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். காந்தி பழமையானவர் என்பது பொதுப்பார்வையாக இருந்தாலும் அவர் உருவாக்கிய கட்சியமைப்பு நவீன அரசியல் நோக்கர்கள் கண்டு வியக்கும் ஒன்றாகும். அதுவரை மேல்தட்டினர் கூடும் கூட்டமாக இருந்த காங்கிரஸ் அமைப்பை பொதுமக்களின் இயக்கமாக அவர் மாற்றி எடுத்தார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் தேசம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகத் தன்னுடைய அரசியல் முறைகளால் காந்தி சாதித்தார். இந்தியா என்பது எல்லா மதத்தவருக்குமான நாடு என்றும், அதில், இந்துக்களுக்கு மட்டுமே இடம் என்று எண்ணுபவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள் என்று இந்திய அரசியல் களத்துக்குள் நுழைவதற்கு முன்பே காந்தி தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தையும் கூட இந்திய மொழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். ‘இந்தியாவைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயரும் இந்தியர்களே’ என்று காந்தியால் ஆங்கிலேயரையும் வெறுக்க வைக்காத அரசியலை முன்னிறுத்த முடிந்தது. இவை எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ளும் கொதிக்கும் பானையாக இந்தியாவை மாற்றாமல், தங்களுடைய தனித்துவத்தை இழக்காத சாலட் கோப்பையாகப் பல்வேறு இன, மொழி, மதக்குழுக்களை மாற்றியது.

பெரும்பாலான மக்களின் நம்பிக்கையைப் பெற்ற காங்கிரஸ் கட்சியால் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற முடியாமல் போனதும், எண்ணற்ற மற்ற காரணங்களும் பிரிவினைக்கு வழிவகுத்தது. எனினும், அதற்குப் பிறகு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நேரு காந்தியின் வழியில் இந்தியாவை எல்லாருக்குமான தேசமாகக் கட்டமைத்தார்.
நீதிமன்றங்கள் பல்வேறு அரசின் சமூக நலத்திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்குத் தடை போட்ட பொழுது தனக்குச் சாதகமான நீதிபதிகளைக் கொண்டு நீதிமன்றங்களை நிரப்பாமல் நேரு சிறப்புப் பெரும்பான்மையோடு பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் ஒப்புதலோடு அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை நிறைவேற்றினார். தேர்தல்களை விடாமல் தொடர்ந்து நடத்தினார்.

பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்பட்டு அதனை அரசியலாக்கி இந்தியாவில் ஆட்சியைப் பிடித்து இந்து தேசமாக மாற்றலாம் என்று ஆசைப்பட்ட இந்துத்வவாதிகளின் கனவுக்குப் பெருந்தடையாக நேரு நின்றார். பாகிஸ்தான் எப்படித் தன்னுடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரை நடத்துகிறது என்பதைப் பொறுத்து இந்தியா தன்னுடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரை எப்பொழுதும் நடத்தாது என்று உறுதிபடச்சொன்ன நேரு, இந்து, முஸ்லீம்கள் இடையே வெறுப்பை வளர்ப்பது என்பது சீழ் வடியும் காயமாகி, ஒட்டுமொத்த அரசியலையும் நஞ்சாக்கி நாட்டை அழித்துவிடும் என்று அழுத்தமாக எச்சரித்தார். காந்தியின் படுகொலை மக்களிடையே இந்துத்வ அமைப்புகள் ஆதரவை இழப்பதை வேகப்படுத்துகிற தருணமாகிப் போனது.

இந்தியா என்கிற தேசம் செயற்கையாக எழுப்பப்பட்டது என்கிற வாதத்தை முன்வைப்பவர்கள் அது உலகின் நாடுகள் பலவற்றுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சமூகவியல் மேதை வெப்பர் எப்படிக் கான்ஸ்க்ரிப்ஷன் படைகள், பொதுப்பள்ளி திட்டம் ஆகியவை பிரான்ஸ் என்கிற நாட்டை உருவாக்கின என்பதைக் காட்டுகிறார். கோலே கத்தோலிக்கப் பிரான்ஸ் எனும் எதிரி, ப்ரோட்டஸ்டன்ட் மதம், வர்த்தக வாய்ப்புகளுக்கான தேடல், மன்னரால் ஆன அரசு ஆகியன பிரிட்டன் என்கிற தேச உருவாக்கத்துக்கு வழிவகுத்தது என்பதை வலுவான ஆதாரங்களோடு நிறுவியுள்ளார்.

இந்தியாவின் வெற்றி, தோல்விகளை தேசிய ஒற்றுமை, மக்களுக்குச் சுயமரியாதை, சமூக நீதி, வறுமை நீக்கம், தேர்தல்கள்-மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்புகள் கொண்டவர்களாக அரசியல் கட்சியினர் திகழ்கிறார்களா முதலிய கேள்விகளை எடுத்துக்கொள்கிறார்.
தேசிய ஒற்றுமை என்பதைப் பொறுத்தவரை ஐம்பது, அறுபதுகளில் இந்தியா சந்தித்த மிகப்பெரிய சவால் பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதே ஆகும். அதை மொழிவாரி மாநிலங்களைக் கொண்டு வெற்றிகரமாகச் சமாளித்த இந்தியா தற்போது எழும் பிரிவினை கோஷங்களை மூன்று வகைகளிலோ அல்லது மூன்றையும் கலந்தோ எதிர்கொள்கிறது. போராட்டக்குழுவோடு அமைதி பேச்சுவார்த்தை நிகழ்த்தி அவர்கள் ஒப்புக்கொண்டால் தேர்தல் அரசியலில் பங்குபெறச் செய்து தேர்தலில் அவர்கள் வென்றால் மாநிலத்தை ஆள அனுமதிப்பது. வளர்ச்சி திட்டங்களுக்கு எண்ணற்ற நிதி தருவது, ராணுவத்தைக் கொண்டு எதிர்ப்பை நசுக்குவது என்று மூன்றையும் கலந்துகட்டி இந்திய அரசு செயல்படுகிறது.

Ashutosh Varshney அவர்கள் Pratap Bhanu Mehta துவங்கி எண்ணற்ற அரசியல் அறிஞர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வைக்கும் கருத்துக்களைத் தரவுகள் மூலமும், அரசியல் அறிவியலின் தர்க்கத்தின் மூலமும் தகர்க்கிறார். இந்தியாவின் மக்கள் தொகையில் இருபது சதவிகிதம் பேர் மட்டும் வாழும் தெற்கில் சாதி முறை இறுக்கம் குறைந்ததாக உள்ளது என்பதையும், இங்கே தொழில் நிறுவனங்களுக்குப் பலதரப்பட்ட ஜாதியினர் சொந்தக்காரர்களாக இருப்பது வடக்கை விட 2.77, 2.07 மடங்கு அதிகமாகக் கடந்த நாற்பது வருட காலங்களில் இருந்திருப்பதைப் பல்வேறு தரவுகளின் மூலம் சுட்டிக்காட்டுகிறார். கேரளாவில் எழுந்த ஈழவர்கள் முதலிய ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் எழுச்சி, தமிழகத்தில் நிகழ்ந்த திராவிட இயக்கத்தின் இட ஒதுக்கீட்டு முன்னெடுப்புகள், கர்நாடகா, ஆந்திராவிலும் நடைபெற்ற இடைநிலை ஜாதிகளின் எழுச்சி ஆகியவை சாதியமைப்பை வடக்கை விடப் பல மடங்கு வலிமை குறைந்ததாக மாற்றியிருக்கிறது என்று நிறுவுகிறார்.

அதே சமயம், Affirmative action என்பது நிர்வாகத்திறனை குறைத்துவிடும் என்கிற வாதத்தைத் தென்னகத்தில் பெரும்பாலான நிர்வாகப் பதவிகளில் இடைநிலை சாதியினரே பொறுப்பில் இருந்தும் இந்தியாவிலேயே சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்களாக இவையே திகழ்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழகத்தின் மிக மோசமான நிர்வாகக் காலம் என்று சொல்லக்கூடிய எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலச் சமயத்தில் ஐம்பது ஆதிக்க ஜாதியை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழகம் நோக்கி மீண்டும் வந்ததை Wikileaksகேபிள் சுட்டுவதை இதோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம். இன்னமும் தலித் மக்கள் தெற்கில் பெரிய விடுதலையைப் பெற்றுவிடவில்லை என்கிற கசப்பான அனுபவம் கண் முன் விரிந்திருக்கிறது அதனைச் சரி செய்ய அவர்கள் சந்தைப் பொருளாதாரத்தில் முதலாளிகள் ஆவதும், அவர்களுக்கான நலத்திட்டங்கள் சரியாகக் கொண்டு சேர்க்கப்படுவதும் இணைந்தே நடக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.


ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்குப் பலம், அதிகாரம் எல்லாம் கிடைக்கிற பொழுது அவர்கள் ஆதிக்க ஜாதியினரை பழிவாங்குவார்கள் என்கிற பிரதாப் பானு மேத்தாவின் வாதத்தை இரு தளங்களில் வர்ஷேனே மறுதலிக்கிறார்.

அற ரீதியாக இப்படிப்பட்ட செயல்களைச் செய்வது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனினும், சமத்துவம் என்பது தரப்படும் பொழுது தான் ஒடுக்கப்பட்ட மானுடகுல சிந்தனைகள், படைப்புத்திறன் வெளிப்பட்டுச் சமூகத்தை மேம்படுத்துவதைச் செய்யும் என்பதை எல்லாவகையிலும் ஒன்றுபட்டும் அடிமை முறையால் ஓஹியோ மாகாணத்தை விட வளர்ச்சியில் பின்தங்கியிருந்த கென்டுகியை Alexis de Tocqueville அவர்களின் எடுத்துக்காட்டைக் கொண்டு சுட்டுகிறார். தென்னகத்தில் ஆதிக்க ஜாதி அல்லாதோர் அதிகாரம் பெற்றதும் அவர்களின் பழிவாங்கும் உணர்வு குறைந்ததோடு ஜனநாயக ஓட்டத்தில் இணைவது அதிகரிக்கச் செய்தது என்பதையும் சுட்டி உளவியல் ரீதியாகப் பழிவாங்கல் நடைபெறாமல் தடுக்க இந்த முறைகள் உதவியிருக்கின்றன என்கிறார். மேலும், அரசு வேலைகளில் ஆதிக்கம் செலுத்திய பிராமணர் முதலியோர் தொழில்முனைவோராக மாறியதும், ஐ.டி. வேலைகளில் எண்ணற்ற இடங்களைப் பெற்றதும் ஜனநாயக நகர்வாக மாறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

மதக்கலவரங்கள் ஏன் சிலபகுதிகளில் தொடர்ந்தும், சில பகுதிகளில் குறைவாகவும் நடக்கிறது என்பதை ஒரே அளவு இந்து, முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட உத்திரப்ரதேச, கேரளா நகரங்களை எடுத்துக்\கொண்டு அவர் விளக்குகிறார். தொழிலாளர் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், குடியிருப்போர் சங்கங்கள், நகரக் குடிமகன்கள் அமைப்பு என்று பல்வேறு அமைப்புகள் வீரியமுடன் செயல்படும் கேரளாவில் இப்படிப்பட்ட மதக்கலவரங்கள் ஏற்படும் சூழல் உண்டாகிற பொழுது இருதரப்பினரும் வேகமாகச் செயல்பட்டுப் பதற்றத்தை தணிக்கிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட போக்கு உத்திர பிரதேசத்தில் நிலவவில்லை, மேலும். உள்ளூர் செய்தித்தாள்கள் உறுதி செய்துகொள்ளாமல் வதந்திகளைப் பரப்புகின்றன என்பதாலும் கலவரங்கள் அதிகரிக்கின்றன என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்.

அரசியல் அறிவியல் சேர்ந்த ஆசிரியர் எழுதிய நூல் என்றாலும் எளிய வாசகனுக்கும் புரிய வேண்டும் என்கிற உழைப்பை நூலில் நீங்கள் கண்டுகொண்டே இருக்கலாம்.
எக்கச்சக்க உழைப்பில், இந்தியா என்கிற பரந்துபட்ட தேசத்தின் பல்வேறு வெற்றி, தோல்விகளை ஒற்றைப் புத்தகத்தில் அடைக்க முயலும் பெரும் முயற்சி இந்நூல்!

‘பாரதி: கவிஞனும், காப்புரிமையும்’ !


பாரதி இயலுக்குப் பெரும் தொண்டாற்றி வரும் வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதிய ‘பாரதி: கவிஞனும், காப்புரிமையும்’ நூலை வாசித்து முடித்தேன். பாரதியாரின் பாடல்கள் நாட்டுடமையானதைப் பற்றி இருக்கும் பல்வேறு வாய்மொழிக் கதைகளைத் தகர்க்கும் வகையில் வரலாற்றின் வெளிச்சத்தில் துல்லியமான தரவுகளைக் கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.
பாரதியின் காலத்தில் வெகுகுறைவான அவரின் படைப்புகளே பிரசுரம் ஆகின. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பை தவிர்த்து ஏனைய நூல்கள் ஓரணா, இரண்டணா என்கிற அளவில் விற்கப்பட்டன. அவரின் மறைவுக்குப் பின்னர்ச் செல்லம்மா தன் அண்ணன் அப்பாத்துரை ஐயருடன் இணைந்து பாரதி ஆச்ரமம் என்கிற பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் சுதேச கீதங்கள் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. கடும் பொருள் விரயத்தை இந்த நூல் வெளியீடு உண்டு செய்தது. ஹரிஹர சர்மா எனும் இந்தி பிரச்சாரச் சபை பிரமுகர் புத்தக விற்பனைக்கு உதவ முன்வந்தார்.

இருபத்தி நான்கில் மகளின் திருமணத்துக்காகப் பணம் தேவைப்பட்ட பொழுது, பாரதியின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனான விஸ்வநாத ஐயர் பாரதியின் எழுத்துக்களைக் கொண்டு பணம் பெற்று இரண்டாயிரம் ரூபாயில் திருமணம் நடப்பதை உறுதி செய்தார். ஹரிஹர சர்மா, பாரதியின் இளைய மருமகன் ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்டு பாரதி பிரசுராலயம் எனும் பதிப்பகத்தைத் துவங்கி பாரதி நூல்களைப் பதிப்பித்தார். அரசாங்கம் நூல் விற்பனைக்குத் தடை விதித்தது அதற்கான ஆதரவைக் கூட்டியது. ‘அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டது’ என்று முத்திரையிட்டுப் பிரதிகள் விற்கப்பட்டன.
பாரதி பிரசுராலயம் பாரதியின் முழுப் பதிப்புரிமையை நான்காயிரம் ரூபாயை தவணையில் செலுத்தி செல்லம்மாளிடம் இருந்து பெற்றுக்கொண்டது. போலீஸ், அரசாங்க கெடுபிடிகளை மீறி பாரதியின் பல்வேறு நூல்களைத் தேடி விஸ்வநாத ஐயர் பதிப்பித்தார். மற்ற இரு பங்குதாரர்களும் பதிப்பகத்தை விட்டு விலகி விட முழுக் காப்புரிமையும் விஸ்வநாதரிடமே வந்து சேர்ந்தது. இந்த நிறுவனம் ஸுரஜ்மால் லல்லுபாய் கம்பெனிக்கு ‘இசைத்தட்டுகள், பேசியும் படங்கள், பிற ஒலிப்பதிவுக் கருவிவழிப் பதிவுகளைச் செய்யும் உரிமையை நானூற்றி ஐம்பது ரூபாய்க்கு கைமாற்றியது. ‘நாம் இருவர்’ திரைப்படத்தில் பாரதியின் பாடல்களைப் பயன்படுத்த ஒட்டுமொத்த ஒலிபரப்பு உரிமையையும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 9,5௦௦ ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டார்.
பாரதி நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்கிற கோரிக்கை அவ்வப்பொழுது எழுந்தது. பாரதியின் மணிமண்டபத் திறப்பு விழாவில் பேசிய ஜீவா அவர்கள்,’பாரதி இலக்கியம் மக்களின் பொது உடைமை…பாரதி நூல்களை விஸ்வநாத ஐயர் பொதுவுடைமை ஆக்கவேண்டும். அவ்வாறு அவர் முன்வந்தால் தமிழ்மக்களின் நன்றி அவருக்கு என்றும் உரியதாகும்.’ என்று சொன்னார். இதே கருத்தை பாரதியின் தம்பி போலத் திகழ்ந்த பரலி சு.நெல்லையப்பரும் அதே விழாவில் பிரதிபலித்தார்.
ஒரு வக்கீல் நோட்டீஸ் பாரதியின் நூல்களை நாட்டுடைமை ஆக்கும் பணியை முடுக்கிவிட்டது. டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப்படமாக்க முனைந்த பொழுது, கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப் போல-வெளியே சுடர் விளக்கினைப் போல…’ எனும் பாடலை திரைப்படத்தில் இணைத்து இருந்தார். ஒலிபரப்பு உரிமையைத் தன்வசம் வைத்திருந்த ஏ/.வி.எம். தன்னுடைய வசமிருக்கும் பாடல் உரிமையைப் பயன்படுத்தினால் இழப்பீடாக ஐம்பாதாயிரம் தரவேண்டும் என்று அந்த நோட்டீஸ் சொல்லியது.
ஒரே நாளில் பாரதியின் பாடல்கள் தனிநபரின் சொத்தாக இருக்கலாமா என்று அவ்வை சண்முகம் அவர்கள் முதல்வர் ஓமந்தூரார், உணவு-சுகாதார அமைச்சர் ராஜன் ஆகியோருக்குக் கடிதம் வரைந்தார். தமிழ்நாட்டின் அமரகவியைப் பெட்டியில் பூட்டிவைத்து வியாபாரம் நடத்த முயலும் வேடிக்கையை அனுமதிக்கக் கூடாது என்று குமுறினார். மேலும் பாரதி விடுதலைக் கழகத்தின் முதல் கூட்டத்தை நாரண. துரைக்கண்ணனை தலைவராகக் கொண்டு நடத்தினார்கள். நெல்லையில் இவர்களோடு, பரலி. சு.நெல்லையப்பர், பேராசிரியர் அ.சீனிவாசராகவன் ஆகியோர் பாரதியின் மனைவி,மகள் ஆகியோரை சந்தித்துப் பாரதியின் எழுத்துக்கள் பொதுச்சொத்தாவதில் தங்களுக்குத் தடையில்லை என்று எழுத்துப் பூர்வமாக அனுமதி பெற்றார்கள். தாங்கள் வறுமையில் வாடிவருவதால், அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரினார்கள். சட்டப்பூர்வமான உரிமை அவர்களிடம் இல்லையென்றாலும் அவர்களின் ஒப்புதலும், நிலைமையும் தார்மீக பலமாகப் பாரதி நாட்டுடைமைக்குப் பயன்பட்டன.
நாரண.துரைக்கண்ணன் பாரதி யாத்திரைக்காகப் புறப்பட்ட வேளையில் நலிவுற்று இருந்த அவரின் நான்கு வயது மகன் அவர் திரும்பி வருவதற்குள் மரணமுற்று அவனின் இறுதிச்சடங்குகள் நிகழ்ந்திருந்தன. இது மேலும் ஒரு உணர்வுப்பூர்வமான உத்வேகத்தை இயக்கத்துக்குத் தந்தது. பில்ஹணன் தயாரிப்பில் தொடர்புடைய பிறரையும் எதிர்வாதிகளாக இணைத்துக் கொண்டு ஏ.வி.எம். கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கிடை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். தனக்கு உரிமை இருப்பதைக் காட்டும் ஆவணங்களையும் அவர் இணைத்து இருந்தார்.
சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்ட நிலையில், ஓமந்தூரார் சட்டத்துறை செயலாளர், கல்வி மந்திரி ஆகியோரை செயல்படுமாறு அறிவுறுத்தினார். கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் பாரதி நாட்டுடைமையாக்கதில் தனி ஈடுபாடு காட்டினார். ‘பாரதியின் எழுத்துக்களின் சட்ட உரிமைகளைப் பொதுவுடைமை ஆக்க கிளர்ச்சி நடக்கிறது. இதைக் கையகப்படுத்த இயலுமா என்று பரிசீலிக்க வேண்டும்.’ என்று குறிப்பு எழுதினார். அரசுத்துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவே இயங்கினார்கள். கோவை ஆட்சியரிடம் ஏ.வி.எம். தொடுத்த வழக்கின் நிலவரங்கள் கோரப்பட்டன. அவ்வை சண்முகம் அரசுக்கு பல்வேறு ஆவணங்களை அனுப்பி வைத்தார்.
ஏ.வி.எம். தான் ‘தூண்டில் புழுவைப் போல’ பாடலை பாதாள உலகம் படத்தில் பயன்படுத்துவதால் அதைப் பயன்படுத்த முயலும் சண்முகம் சகோதரர்கள் தனக்குப் பதினோராயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். இதற்கு முன் வெவ்வேறு படங்களில் பாரதி பாடல்கள் பயன்படுத்தப்பட்ட பொழுது ஏ.வி.எம். எதிர்ப்பு தெரிவிக்காததைச் சண்முகம் தரப்பு எடுத்துக்காட்டியது.
ஓராண்டுக்கு மேல் ஒலிபரப்பு உரிமையைத் தக்க வைக்கப் போராட்டம் நடத்தியும் முதல்வரை சந்தித்த பிறகு அரசு நாட்டுடைமை ஆக்குவதில் தீவிரமாக இருப்பதைக் கண்டுகொண்டார் ஏ.வி.எம். பாரதியின் நூல்கள், பாடல்கள் ஆகியவற்றின் நாட்டுடமையாக்கத்துக்குப் பெரும் போராட்டம் ஏற்பட்ட நிலையில் 2-6-1948-ல் தானே முன்வந்து ஒலிபரப்பு உரிமையை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தார். பாரதியின் பாடல்கள் சிலவற்றைத் தமிழகம் முழுக்க ஒலிக்கச்செய்யவே ஒலிபரப்பு உரிமையை வாங்கியதாகச் சொன்ன ஏ.வி.எம். பாரதியின் பாடல்களை உயர்தரக் கலைஞர்களைக் கொண்டே பாடுவிக்க வேண்டும் என்றார். வெகுமக்களால் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயம், பாடப்படும் முறை குறை கூற முடியாததாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எந்தப் பணமும் பெறாமல் பாரதியின் ஒலிபரப்பு உரிமையைப் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்தச் செயலின் மூலம் அவர் ஏற்படுத்தினார்.

பாரதியின் எழுத்துக்களின் உரிமையை விஸ்வநாத ஐயரிடம் இருந்து பெறும் முயற்சிகள் துவங்கின. அவர் பாரதியின் எழுத்துக்களைப் பிழைகளோடு அச்சிட்டதோடு, கொள்ளை லாபம் பார்ப்பதாகத் தூற்றினார்கள். தன்னுடைய ஆரம்பகட்ட பதிப்புகள் பிழைகள் இருந்தாலும் அவை போகப்போகச் சரி செய்யப்பட்டதையும், இரண்டு ரூபாய் சொச்சத்துக்குப் பல நூறு பக்க பாரதி நூல்களை விற்றதையும் அவர் நினைவு கூர்ந்தார். பதினைந்தாயிரம் ரூபாய்க்கு பாரதியின் எழுத்துக்களைப் பள்ளிக்கூட ஆசிரியரான அவர் விட்டுக்கொடுத்ததோடு, பாரதியின் கையெழுத்துப் பிரதிகளை இலவசமாக அரசுக்கு ஒப்புவித்தார்..

1949-ம் வருடம் மார்ச் மாதத்தில் பாரதியின் எழுத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டதாக அவினாசிலிங்கம் சட்டசபையில் அறிவித்தார். பாரதியின் மனைவி, மகள்களுக்குப் பதினைந்தாயிரம் தரப்பட்டதும் மே 1 அன்று எழுத்துப்பூர்வமாகத் தங்களின் உரிமையை விட்டுக்கொடுத்தார்கள். விஸ்வநாத ஐயர் ஏற்கனவே விற்காமல் இருக்கும் பாரதியின் பிரதிகளை விற்க ஓராண்டு அனுமதி பெற்றார், பின்னர் மேலும் சிலகாலம் நீட்டிப்பிற்குப் பிறகு விற்க முடியாத நூல்களை முப்பது சதவிகித கழிவில் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு அரசிடமே விற்றார்.
பாரதியின் எழுத்துக்களை அச்சிட அரசு மு.வ., ரா.பி.சேதுப்பிள்ளை பரலி.சு.நெல்லையப்பர், கி.வா.ஜ முதலியோரைக் கொண்ட குழுவை அரசு அமைத்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து ஏழரை ரூபாய் என்கிற அதிக விலையில் முதல் தொகுப்பு வெளிவந்தது. இதற்குக் கடும் கண்டனம் வெளிப்பட்டது. இதனைத் தொடர்ந்து காமராஜர் காலத்தில் அரசுடமையாக இருந்த பாரதியின் பாடல்கள் நாட்டுடைமை ஆகின. பாரதியின் உரைநடை முழுவதும் வெளிவந்து நாட்டுடைமை ஆக மேலும் எட்டு ஆண்டுகள் பிடித்தன.
இந்த நாட்டுடைமை முயற்சியால் பாரதியின் எழுத்துக்கள் பொதுமக்களை அவர் ஆசைப்பட்டது போல ஜப்பானிய தீப்பெட்டி போலப் பரவலாகச் சென்று சேர்ந்தன. அவரைப்பற்றிய வெவ்வேறு புதிய ஆக்கங்கள் வெளிவந்தன. பாரதி நூல்கள் மலிவு விலையில் மக்களைச் சென்றடைந்தன. திமுக அரசு பாரதிதாசன் எழுத்துக்களை நாட்டுடமையாக்கியது.

பாரதிக்குப் பிறகு அதிமுக அரசு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , அண்ணா ஆகியோரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவதில் குளறுபடிகளும் உண்டு. ஆனந்த விகடனில் கல்கி எழுதிய எழுத்துக்களின் காப்புரிமை வாசன் வசமே இருந்தது. கல்கியின் மறைவுக்குப் பின்னரே அதை வாசன் விட்டுக்கொடுத்தார். அகிலனும் பெரும் உரிமைப் போராட்டம் நடத்தியே தன்னுடைய காப்புரிமையை ஆனந்த விகடனிடம் இருந்து மீட்டார். அதற்குப் பின்னரே எழுத்தாளர்களுக்கே எழுத்துரிமை என்று தன்னுடைய நிலையை விகடன் மாற்றிக்கொண்டது. சைவ சித்தாந்த கழகம் பல லட்சம் பிரதிகள் திருக்குறள் உரையை விற்ற பொழுதும் மு.வ.வுக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. அதனால் தானே பதிப்பகம் துவங்கி நூல்களை விற்றார். அவரின் வாரிசுகளின் அனுமதி இல்லாமல் நூல்களை அரசு நாட்டுடைமை ஆக்கி பின்னர் அதனைத் திரும்பப்பெற்றது. புதுமைப்பித்தன், கண்ணதாசன் நூல்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டது. புதுமைப்பித்தனுக்கு ஐந்து லட்சம், சக்தி கோவிந்தனுக்கு ஐந்து லட்சம் என்று அரசு ஒரே தராசைக் கையாள்வதும் கேள்விக்குரியது.
நேருவின் மறைவுக்கு அறுபது வருடங்களுக்குப் பிறகும் சோனியா காந்தி வசமே நூல்களின் காப்புரிமை இருக்கிறது. காந்தியின் நூல்களின் காப்புரிமை நவஜீவன் அமைப்பிடம் இருந்து சமீபத்தில் தான் பொதுவெளிக்கு வந்தது. தாகூரின் நூல்களுக்கான காப்புரிமையைச் சிறப்பு விதிவிலக்காக விஸ்வபாரதிக்கு உதவும் வண்ணம் காங்கிரஸ் அரசு பத்து ஆண்டுகள் நீட்டித்தது. நம்பூதிரிபாட்டின் எழுத்துக்களை இன்னமும் தங்கள் வசமே வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள் அதை ஆதரித்தார்கள் என்று பதிகிற ஆசிரியர் தாகூரின் எழுத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதையும் இணைத்துப் பதிந்திருக்கலாம். அதோடு விஸ்வநாத ஐயரின்,’தொண்டா, லாப வணிகமா’ அறிக்கையை மொழிபெயர்க்கையில் ‘மிளகாய் பானையில்’- ‘ஊறுகாய் பானையாக’ மாறிப்போயிருக்கிறது. பக்கம் 61-ன் முதல் பத்தியில் இறுதி வாக்கியம் முடிவுறாமல் போயிருக்கிறது. மற்றபடி பாரதி இயலுக்கு மகத்தான பங்களிப்பு இந்நூல்.

ஆசிரியர்: ஆ.இரா.வேங்கடாசலபதி
பக்கங்கள் : 152
விலை: 12௦
காலச்சுவடு பதிப்பகம்

‘மதுவிலக்கு அரசியலும் வரலாறும்’


‘தரவுகள் தரப்படுகிற பொழுது நான் என்னுடைய கருத்துக்களை மாற்றிக்கொள்கிறேன். நீங்கள் எப்படி?’ – மெய்னார்ட் கெய்ன்ஸ்
மதுவிலக்குச் சமீபத்தில் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்ததைக் கண்டோம். அதிலும் காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்துக்குப் பிறகு இன்னமும் அந்தக் கோரிக்கை வலுப்பெற்றதையும் காண முடிந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை மதுவிலக்கின் வரலாறு என்பது எப்படி இருந்தது என்பதை அண்ணன் ஆர்.முத்துக்குமார் தன்னுடைய ‘மதுவிலக்கு அரசியலும் வரலாறும்’ நூலின் மூலம் விறுவிறுவென்று விவரித்து இருக்கிறார்.
மதுவிலக்கு என்பது காங்கிரசின் முக்கிய அரசியல் முன்னெடுப்பாக விடுதலைக்கு முந்தைய காலத்தில் இருந்தது. தமிழகத்தில் கள்ளுக்கடை போராட்டத்தை நடத்துவது என்கிற முடிவு பெரியாரின் வீட்டில் காந்தியடிகளால் எடுக்கப்பட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களைப் பெரியார் வெட்டி வீழ்த்தினார்.
கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் தேர்தல் அரசியலில் பங்கேற்கலாமா வேண்டாமா என்கிற விஷயத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்தது. சுயராஜ்யக் கட்சி எனும் பெயரில் மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், சத்தியமூர்த்தி முதலியோர் தேர்தலில் பங்குபெறுவது என்று முடிவு செய்து களம் புகுந்தார்கள். நீதிக்கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்வதை முடிவுக்குக் கொண்டுவருவது சத்தியமூர்த்தியின் பிரதான இலக்காக இருந்தது. ராஜாஜிக்கு மதுவிலக்கு என்பது பிரதான பிரச்சனையாகத் தெரிந்தது. சத்தியமூர்த்தியோ ‘நான் குடிகாரர்கள் நிரம்பிய நாட்டின் பிரஜையாக இருப்பேனே ஒழிய, குடிகாரர்கள் இல்லாத அடிமை நாட்டின் பிரஜையாக இருக்கமாட்டேன்.’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
தேசிய அளவில் மதுவிலக்குப் பிரச்சாரத்தை ராஜாஜி காந்தியுடன் ஒத்துழைப்போடு முடுக்கினார்.

மதுவிலக்குக்கான ராஜாஜியின் செயல்திட்டத்தைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டு அதனைச் செயல்படுத்த அன்சாரி, படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோரைக்கொண்ட குழு அமைக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் அப்பொழுது 11034 சாராயக்கடைகள் 6352 கள்ளுக்கடைகளில் 11 கோடி காலன் கள்ளும், 16,75,000 காலன் சாராயமும் அப்பொழுது விற்பனையாகின. தேர்தலில் வென்று சட்டசபைகளில் ஆங்கிலேய அரசுக்கு முட்டுக்கட்டை உண்டு செய்வோம் என்கிற கொள்கை கொண்டிருந்த சுயராஜ்யக்கட்சி மதுவிலக்கை தீவிரமாக முன்னெடுத்தால் தேர்தல் களத்தில் ஆதரவு தருவோம் என்று காங்கிரசின் ராஜாஜி உத்வேகப்படுத்தினார். சுயராஜ்ய கட்சியின் ஒத்துழைப்போடு சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சியை வீழ்த்துவதையும் சாதித்தார்கள்.
சென்னை மாகாண அரசு மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு என்று ஐந்து லட்சம் ஒதுக்கியது. ராஜாஜி திருச்செங்கோட்டுக்கு அருகில் காந்தி ஆசிரமத்தை நிறுவி மதுவிலக்குப் பிரச்சாரத்தைத் தன்னுடைய prohibition, விமோசனம் முதலிய இதழ்களின் மூலம் பிரபலப்படுத்தினார். 1929-ல் காட்டெரல் எனும் சென்னை மாகாண கலால் ஆணையர் இத்தகு செயல்பாடுகளால் பெரிதும் கவரப்பட்டார். திருச்செங்கோட்டை சுற்றியுள்ள 31 கடைகளில் மட்டும் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தி அதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற பகுதிகளுக்கு நீட்டிப்பதை பற்றி யோசிக்கலாம் என்று பரிந்துரைத்தார். அது அமலுக்கு வந்தது, அடுத்து ராசிபுரம் பகுதியின் 22 மதுக்கடைகள் மூடப்பட்டன.

 

மூன்று ஆண்டுகள் அமலுக்கு இருந்த மதுவிலக்கை செயல்படுத்த அதிகச் செலவு ஆனதும்,. பக்கத்துத் தாலுக்காகளில் மதுவிலக்கு இல்லாததும் அத்தோடு மதுவிலக்கை கைவிட வைத்தது. சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கள்ளுக்கடை மறியலில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மது வருமானம் குறைந்ததும் கடைகளைக் கூடுதல் நேரம் திறந்து இழப்பை ஈடுகட்டியது அரசு.
1935-ன் இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பெருவெற்றியைப் பெற்று இருந்தது. சென்னை மாகாணத்தில் முதல்வர் ஆன ராஜாஜி மதுவிலக்கை எல்லா இடத்திலும் உடனே அமல்படுத்தவில்லை. பீகார்,மும்பை ஆகியவற்றோடு சென்னை மாகாணத்திலும் படிப்படியாக மதுவிலக்கை அறிமுகப்படுத்தி அதற்குக் கிடைக்கும் ஆதரவு, எதிர்ப்பு, பலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அதனை விரிவுபடுத்துவதைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

 

சென்னை மாகாணத்தின் இருபத்தி ஐந்து மாவட்டங்களில் சேலத்தில் முதலில் மதுவிலக்கை ராஜாஜி அமல்படுத்தினார். ‘சொந்த மாவட்டத்தில் மட்டும் ராஜாஜி மதுவிலக்கை அமல்படுத்த காரணம் என்ன?’ என்று கேட்கப்பட்ட பொழுது, ‘ராவணன் அசோக மரத்தின் கீழ் சீதையைச் சிறைவைத்தற்குக் காரணம் அவனுக்கு அசோக மர புஷ்பம் பிடிக்கும் என்பதா?’. மதுவிலக்கை அமல்படுத்த டிக்ஸன், தாம்சன் ஆகிய ஆங்கிலேய அதிகாரிகளை ராஜாஜி நியமித்தார். கேளிக்கை விடுதிகள், உணவு விடுதிகள் ஆகியவற்றோடு கிறிஸ்துவ மதச்சடங்குகளில் மதுப்பயன்பாடு தடை செய்யப்படவில்லை. அனுமதியை மீறிக்குடிப்பவர்களுக்கு அபராதம் ஐநூறில் இருந்து ஐந்து ரூபாயாகக் குறைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க ராஜாஜி விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்து சித்தூர், கடப்பா, வட ஆற்காடு மாவட்டங்கள் மதுவிலக்கு வட்டத்துக்கு வந்தன. என்றாலும், பூரண மதுவிலக்கை ராஜாஜி அமல்படுத்தவில்லை. வருவாய் இழப்பு, நிதி நெருக்கடியை சமாளிக்கப் பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாக எழுந்த விமர்சனங்கள், கள்ளச்சாராயச் சாவுகள் ஆகியவை இருப்பினும் மதுவிலக்கு தொடர்ந்து கொண்டிருந்தது.

உலகப்போரில் இந்தியர்களைக் காங்கிரஸ் விருப்பமின்றிப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் மாகாண அரசுகள் பதவி விலகின.மதுவிலக்கு ராஜாஜியின் ஆட்சி போனதோடு ஒழிந்து போனது. மீண்டும் மது விற்பனை களைகட்டியது. பூரண மதுவிலக்கு விடுதலைக்குப் பின் சாத்தியமாகும் தருணமும் வந்தது.
சென்னை மாகாணத்தின் முதல்வராக விடுதலைக்குப் பின்னர்ப் பதவியேற்ற பழுத்த காந்தியவாதி ஓமந்தூரார் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்,. அறநிலையத் துறை சீர்திருத்தம், கட்சி சிபாரிசு நிராகரிப்பு ஆகியவற்றில் தீவிரம் காட்டியதோடு பூரண மதுவிலக்கை அக்டோபர் 2,1948-ல் அமல்படுத்தினார். அவரைக் கட்சியினரே ஆட்சியைவிட்டு அனுப்பினார்கள்./அடுத்து வந்த குமாரசாமி ராஜாவும் சாராயம் காய்ச்சும் தொழிலை கைவிட்டவர்களுக்கு மாற்றுத்தொழிலுக்கு வழிகள் செய்தார்.
முதல் சட்டசபைத் தேர்தலில் அரிசிப் பஞ்சம் முதலிய பல்வேறு காரணங்களால் அறுதிப் பெரும்பான்மைக்கு நாற்பது இடங்கள் குறைவாக இருந்தும் ராஜாஜியின் கீழ் ஆட்சியைக் காங்கிரஸ் பிடித்தது. ராஜாஜி மதுவிலக்கை சென்னை மாகாணம், மும்பை ஆகியவற்றோடு நிறுத்தாமல் இந்தியா முழுக்கச் செயல்படுத்த வேண்டுகோள் விடுத்தார். நேருவின் அரசு ஸ்ரீமன் நாராயணன் கமிட்டியை இதற்காக அமைத்தது. பூரண மதுவிலக்கை இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் இணைக்க வேண்டும், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும் என்பது முதலிய பல்வேறு பரிந்துரைகள் அக்குழுவால் வைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்களவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மதுக்கடைகள் குறைப்பு, ஆரோக்கியமான குளிர்பானங்கள் தயாரிப்பு முதலிய எட்டு கூடுதல் புள்ளிகளை இணைத்துக்கொண்டது. மதுவிலக்கை அமல்படுத்தும் விதத்தைக் கண்காணிக்க மத்திய மதுவிலக்கு கமிட்டி அமைக்கப்பட்டது. அதற்கு ஆலோசனைகளைத் தயாரித்துத் தர டேக் சந்த் கமிட்டி அமைக்கப்பட்டது.
இதே காலத்தில் தியாகி சங்கரலிங்கனார் இந்தியா முழுவதுக்கும் மதுவிலக்கு, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் முதலிய கோரிக்கைகளை வைத்து உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்தார். இந்தியாவின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு பகுதியில் ஓரளவுக்கு மதுவிலக்கு அமலில் இருந்தது. இந்த நிலையை மாற்ற மிகக்கடுமையான பரிந்துரைகளை முன்வைத்தது டேக் சந்த் கமிட்டி. மதுவிலக்கை மீறுபவர்களைப் பிணையில் வெளிவரமுடியாத வகையில் கைதுசெய்வது, சொத்துப் பறிமுதல், அரசுப் பணிகளை விட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் ஆகிய பரிந்துரைகளோடு காந்தி நூற்றாண்டு வருடத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும் அது அரசுக்கு அறிவுறுத்தியது. வருமான இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு முன்வர வேண்டும் என்பதை மத்திய அரசுகள் சட்டை செய்யவேயில்லை.
பூரண மதுவிலக்கு என்று சொல்லப்பட்டாலும் மருத்துவர்கள் மதுவைக் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்குப் பெர்மிட் தரப்பட்டு இருந்தது. அதைப் பலரும் தவறாகப் பயன்படுத்துவது தொடர்ந்தது, மதுவிலக்கு ஒழுங்காக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேறு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றார். மதுவிலக்கை பற்றித் திமுகத் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லாத நிலையில் மதுவிலக்கு தொடரும் என்று அறிவித்தது எதிர்க்கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காமராஜர் முதல் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டுப் பத்திரங்கள் வாசித்தார்கள். பெரியாரோ வேறுவகையாக இதைப் பார்த்தார். ராஜாஜி 2600 பள்ளிகளைக் கிராமப்புறத்தில் மதுவிலக்கால் ஏற்பட்ட இழப்பைச் சரிகட்ட மூடினார் என்றும், மது உற்பத்தித் தொழில் நாட்டில் அயோக்கியர்கள், நாணயம் இல்லாதவர்களைப் பெருக்கி வருகிறது எனவும், தேவைப்பட்டவர்களுக்கு மது கிடைக்கும்படியும், அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கவும் வழி செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அண்ணாவோ மதுவிலக்கில் உறுதியாக இருந்தார். மதுவிலக்கை நீக்கினால் பதினொரு கோடி வருமானம் வருமென்று சற்றே சபலம் தட்டினாலும், அழுகின்ற தாய்மார்கள், கவனிப்பாரற்று இருக்கும் குழந்தைகள், நலிந்துபோன குடும்பம் நினைவுக்குவர அதை அமல்படுத்தவில்லை என்றும், மத்திய அரசு அதனை ஈடுகட்ட வேண்டும் என்றும் கோரினார்.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதி பதவியேற்றதும் மதுவிலக்குச் சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று பரவலாகக் கருதப்பட்டது. காமராஜர் அமைச்சர்கள் இருவர் விழாவில் மது அருந்தியதாகப் பிரச்சனையை எழுப்பினார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நடத்திய விழா அது என்று சொல்லப்பட்ட சூழலில், பெர்மிட் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் கண்ணதாசன், ஜெயகாந்தன் குறித்துக் காமராஜர் ஏன் குரல் கொடுக்கவில்லை, தன்னுடைய சுயகவுரவம் இதனால் பாதிக்கப்பட்டது என்று எதிர்க்குரல் எழுப்பினார். காமராஜர் அப்படிப் பேசவில்லை என்று வக்கீல் சொன்னதோடு சிக்கல் முடிவுக்கு வந்தது. இதே ‘காந்தியவாதி’யான மகாலிங்கத்தின் வாரிசுகள் மது தயாரிக்கும் தொழிலில் அமோகமாக ஈடுபட்டு வருவது ஏனோ இதை வாசித்ததும் நினைவுக்கு வந்தது.
13/9/69 அன்று திமுகப் பொருளாளர் எம்ஜிஆர் வெளியிட்ட அறிக்கை திமுகவின் போக்கு மாறுகிறது என்பது கோடிட்டுக்காட்டியது. மதுவிலக்கினால் ஏற்கனவே இருக்கும் மதுத்தீமை குறையாமல் அதிகரித்தே உள்ளது; சுற்றியுள்ள மாநிலங்கள் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டிய பொழுதிலும் லட்சியப்பூர்வமாகத் தமிழகம் இருந்தும் அது பூரணமாக நிறைவேறவில்லை என்கிற போக்கில் சென்றது அந்த அறிக்கை. இந்திரா காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்துச் சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற திமுகத் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இப்படி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்: நான்கு பக்கமும் வேடர்களால் சூழப்பட்ட மான் போலத் தமிழகம் இருக்கிறது. இதனால் ஏற்படும் நட்டத்தில் இருந்து காக்க மத்திய அரசு உதவ வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த பொழுது அதன்கீழ் உதவிக் கேட்ட பொழுது, ‘ஏற்கனவே மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களுக்கு இச்சலுகை இல்லை!’ என்று கறாராகக் கைவிரித்து விட்டது மத்திய அரசு.
மதுரையில் நடந்த திமுகவின் பொதுக்குழுத் தீர்மானம் மதுவிலக்கு நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ராஜாஜி, காயிதே மில்லத் ஆகிய இருவரும் இப்படிப்பட்ட முடிவை அரசு எடுக்கக்கூடாது என்று தீவிரமாகக் குரல் கொடுத்தனர். கோவையில் மதுவிலக்கு நீக்கம் என்று திமுகத் தீர்மானம் கொண்டுவந்த பொழுது தன்னளவில் ஆரம்பத்தில் மதுவிலக்கு நீக்கத்தில் விருப்பமில்லாமல் இருந்தாலும் ஆதரவு தெரிவித்தார் எம்ஜிஆர். நிதிநிலைச்சிக்கல், தற்காலிக ஏற்பாடுதான் ஆகிய காரணங்கள் அவர் அதனை ஆதரிக்கக் காரணம் என்று சொல்லப்பட்டது. கோவை சிதம்பரம் பூங்காவில் பேசிய எம்ஜிஆர் மத்திய அரசு துப்பாக்கி, கத்தி தங்களை நோக்கிப் பாயக் காத்திருக்கும் பொழுது உதவாமல் இருக்கலாமா என்றும், மதுவிலக்கு தொடரலாமா என்று தாய்மார்கள் வாக்களித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் பேசினார்

.
ராஜாஜி கொட்டும் மழையில் தள்ளாடும் வயதில் சென்று கோரிக்கை வைத்தும், காயிதே மில்லத் வேண்டிக்கேட்டுக் கொண்ட பின்னும் ஆகஸ்ட் 3௦,1971 அன்று மதுவிலக்குச் சட்டம் செயல்படாது என்று அறிவிப்பு வெளியானது. அதே வருடம் ஜூன் மாதத்தில் அறுபதுகளின் ஆரம்பத்தில் தொடங்கி மது சார்ந்த குற்றங்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக்கொண்டு போவதை எம்ஜிஆர் தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டார். தமிழகத்தில் மது அருந்தும் ஆசை அதிகரிக்கப்பட்டுவிட்டது என்று இது காட்டுகிறது என்று அவர் ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் பதிந்தார்.
கோர்ட் படியேறி இந்தச் சட்டத்தைத் தவிர்க்க முயற்சிகள் ஹண்டே முதலியோரால் எடுக்கப்பட்ட பொழுதும், அவசரச்சட்டத்தின் மூலம் மதுவிலக்கை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 12 அன்று எம்ஜிஆர் அவர்களே மதுவின் தீமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்யும் குழுவின் தலைவர் ஆக்கப்பட்டார். மாணவர்கள் மதுவிலக்குப் போராட்டத்தில் பங்குபெற வேண்டும் என்று ஊக்குவித்தார் எம்ஜிஆர். ஆகஸ்ட் இறுதியில் மதுவிலக்கு ஒத்திவைப்பு அமலுக்கு வந்ததும் 7395 கள்ளுக்கடைகளும் 3512 சாராயக்கடைகளும் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டன. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் மதுவை வாங்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

ராஜாஜி கொதித்துப்போய்க் கல்கியில் ‘சாராயச் சகாப்தம்’ என்கிற பெயரில் கவிதை எழுதி அரசைச் சாடினார். எண்ணற்ற மக்களின் கண்ணீரை சிந்திக்காமல் செயல்படலாமா என்கிற தொனியில் அக்கவிதை முடிந்திருந்தது. இதற்குப் பதில் சொல்லும் வகையில், ‘கிழ பிராமணா, உன் வாக்குப் பலித்தது’ எனக் கவிதை தீட்டிய கருணாநிதி ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரிசாவில் ஏன் மதுவிலக்கு அமலுக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்தியா முழுமைக்கும் மதுவிலக்கு வருமென்றால் தான் சிரந்தாழ்த்தி அதை ஏற்பதாகவும் சொன்னார். கொழுந்து விட்டு எரியும் தீக்கு நடுவில் கற்பூரமாகத் தமிழகம் இருக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
திமுகவின் இப்படிப்பட்ட இருமுனைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா முழுக்க மதுவிலக்கு கொண்டுவரும் திட்டம் இருப்பதாக இந்திரா காந்தி அறிவித்திருக்கிறார் என்று எம்ஜிஆர் சொன்னார். இது அரசுக்கும், தான் முன்னின்று நடத்திய பிரச்சாரத்துக்கும் கிடைத்த தார்மீக வெற்றி என்று அவர் சொன்னார். அண்ணாவின் பிறந்தநாள் முதல் மதுவிலக்குப் பிரச்சாரத்தில் எம்ஜிஆர் தீவிரமாக ஈடுபட இருப்பதாக அறிவித்தார். இவை அரசுக்கு எதிரான கருத்தை மக்களிடம் கொண்டு போகின்றன என்று கட்சியிலேயே முணுமுணுப்பு எழுந்த சூழலில் பல்வேறு காரணங்களுக்காக எம்ஜிஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இரண்டே வருடத்துக்குள் மீண்டும் மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவந்தது. கள்ளுக்கடைகள், சாராயக்கடைகளை அடுத்ததடுத்த ஆண்டுகளில் மூட இருப்பதால் முப்பது கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும், அதை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவின் தலைவர் பிரம்மானந்த ரெட்டிக்குக் கடிதம் எழுதினார் கருணாநிதி. எப்பொழுதும் போல் மத்திய அரசிடம் கனத்த மவுனம்.
பூரண மதுவிலக்கின் மூலம் அரசுக்கு 56 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்ற சூழலிலும் அதைச் செயல்படுத்துவதாகக் கருணாநிதி அறிவித்தார். எமெர்ஜென்சி ஏற்பட்டு திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனந்த விகடனிலும், தாய் இதழில் பத்து அத்தியாயங்களுக்கு மேல் மதுவிலக்கை ஒத்தி வைக்க வேண்டியதன் அவசியத்தை அழுத்திப் பேசிய எம்ஜிஆர் எமெர்ஜென்சி காலத்தில் மதுவிலக்கு ஆளுனரால் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட பொழுது ‘என் இறுதிமூச்சு வரை மதுவிலக்கை நிறைவேற்றுவேன் என்று என்னைப்பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக்கொள்கிறேன்.’ என்று பேசினார்.
ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்குச் சட்டங்களை மேலும் கடுமையாக்கினார். முதல் முறை பிடிபட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அடுத்தடுத்த முறைகள் ஏழு ஆண்டுகள் தண்டனை, நாடு கடத்தல் என்று சட்டங்கள் நீண்டன. அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் – ஒரு வருடம் தண்டனை என்று அறிவித்த அவர் அமைச்சர்களும் அதில் சேர்க்கப்படுவர் என்று சொன்னாலும் சட்டமாக வந்த பொழுது நேரடியாக அமைச்சர்கள் அதில் சேர்க்கப்படவில்லை. அரசு ஊழியர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டதைத் திமுக விமர்சிக்க, மதுவிலக்கை காப்பவர்கள் அனைவரையுமே அது குறிக்கும் என்றது அதிமுக அரசு.
இந்தச் சட்டத்திருத்தம் அமலுக்கு வர இருந்த பொழுது நீதிபதி ராம பிரசாத் ராவ் ‘இது லஞ்சம், ஊழலை அதிகப்படுத்தும்!’ என்று கவலை தெரிவித்தார். முன்னர் மதுவிலக்கை திமுகத் திரும்பப்பெற்ற பொழுது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கல்யாணசுந்தரம் அதை வரவேற்றார். அதைப்போலவே இப்பொழுது இந்தச் சட்டத்திருத்தத்தை ‘கொடுங்கோன்மையானது’ என்று ஆரம்பகட்டத்திலேயே என்.சங்கரய்யா எதிர்த்தார். தாய்மார்களின் கண்ணீர் துடைக்க இப்படிச் சட்டம் இயற்றுவதாக எம்ஜிஆர் சொன்னார்.
தீவிரமான சட்டத்தை நிறைவேற்றினாலும், இருதய நோயாளிகள் இருபத்தைந்து ரூபாய் செலுத்தி பெர்மிட் பெறலாம் என்று விதியை தளர்த்தியது. 2௦/9/79 அன்று எம்ஜிஆர் மது அருந்திய குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும்,. மது அருந்துபவர்கள் இனிமேல் கைது செய்யப்படமாட்டார்கள் எனவும் அறிவித்தார். சட்டத்தை ஒரே அறிக்கையின் மூலம் மாற்றிக்கொள்ள முடியுமா என்று எதிர்க்கட்சிகள் வியந்தன. மக்களவைத் தேர்தலில் இரண்டே தொகுதிகளில் 1980-ல் அதிமுக வென்றது. பெர்மிட் வயது நாற்பதில் இருந்து முப்பதாகக் குறைக்கப்பட்டது. மருத்துவச் சான்றிதழ் தேவை என்கிற விதியும் நீக்கப்பட்டது. இது ஏன் என வினவப்பட்ட பொழுது, ‘தாய்மார்களின் கண்ணீர்த் துடைக்கவே இதைச் செய்கிறேன்!’ என்று எம்ஜிஆர் குறிப்பிட்டார். விஷச்சாராயம், கள்ளச்சாராயம் குடித்துவிட்டு மக்கள் இறந்தும், உடல்நலம் கெட்டும் போகிறார்கள். அதனாலே இப்படியொரு முடிவு என்று விளக்கம் கொடுத்தார்.
எண்பத்தி ஒன்றில் மதுவிலக்கை பெருமளவில் தமிழக அரசு ‘தண்ணீருக்குள் விளக்குக் கொண்டு தேடுவதைப் போல மதுவிலக்கு’ என்று வள்ளுவரை மேற்கோள் காட்டி திரும்பப்பெற்றுக்கொண்டது. தளர்த்திக்கொண்டதாக அரசு சொன்னது. திமுக அரசு ஒத்திவைப்பதாகச் சொன்னது. தாய்மீது செய்த ஆணையை எப்படி எம்ஜிஆர் கைகழுவினார் என்று எதிர்க்கட்சிகள் சாடித்தீர்த்தன. இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளும் விற்பனைக்கு வந்தன. பல்வேறு அவசரச்சட்டங்களின் மூலம் மதுவிலக்குத் தமிழகத்தை விட்டு எம்ஜிஆர் அரசால் காணடிக்கப்பட்டது.

கள்ளுக்கடைகளுக்கு ஏலம், சாராயக்கடைகளுக்கு டெண்டர், ஏலம் என்று ஆரம்பித்த அரசு அடுத்து டாஸ்மாக்கை துவக்கியது. ஓரிரு சாராய வியாபாரிகளுக்குப் பெருத்த வருமானம் செல்கிறது என்கிற திமுகவின் குற்றசாட்டை எதிர்கொள்ளவே இப்படியொரு ஏற்பாடு உருவானது. தனியாரிடம் இருந்து சாராயத்தை மொத்தமாக வாங்கிச் சில்லறை விற்பனை செய்யும் வேலையை டாஸ்மாக் மேற்கொண்டது. நாமினேசன் முறை அமலுக்கு வந்து, முகவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அரசுக்கு சாதகமானவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதிகள் தரப்படுவதாக உச்சநீதிமன்றம் வரை வழக்குப் போகவே, பழையபடி ஏலம் மற்றும் டெண்டர் முறையை அரசு கொண்டுவந்தது. எம்ஜிஆர் மதுவிலக்கு விரைவில் அமல் என்று ஒரு போடுபோட்டார். தலைமைச்செயலாளர் மாலை ஆறு மணிக்கு மேல் மதுக்கடைகள் திறந்திருக்காது என்று காலையில் சொல்லிவிட்டு, மாலையே அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றுக்கு அருகில் பல்வேறு மதுக்கடைகள் திறக்கப்பட்டதாக எதிர்ப்புக்குரல்கள் மக்களிடம் இருந்து எழுந்த பொழுதுகோயில்கள் என்பது அறநிலையத்துறை கோயில்களையும், பள்ளிகள் என்பது அரசு நடத்தும் பள்ளிகளையுமே குறிக்கும். மற்ற பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றுக்கு இவ்விதி செல்லாது என்றது அரசு. விஷச்சாராயச் சாவுகளும் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. சாராயக்கடைகளில் ஆபாசப்படங்கள் காட்டப்பட்டும் கூட்டம் சேர்க்கப்பட்டது.
மதுவிலக்கை அமல்படுத்துகிறேன் என்று சொன்னாலும் அரசு ஏல முறையை ரத்து செய்துவிட்டு மீண்டும் நாமினேஷன் முறையை அமலுக்குக் கொண்டு வந்தது. உள்ளாட்சி தேர்தல்கள் பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட பொழுது, தேர்தலுக்கான விளம்பரத்தில்,‘எண்பத்தி ஏழில் மதுக்கடைகளை மூடுவதாக இருந்தால், கருணாநிதி அரசியலைவிட்டு விலகத் தயாரா?’ என்று அதிமுகக் கேட்டது. உடனே மதுவிலக்கை அமல்படுத்தினால் (பிப்ரவரி, 1986) ஓராண்டுக்கு அரசியல் பேசுவதில்லை என்றார் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலில் தோற்ற பின்பு எம்ஜிஆர் அரசு டெண்டர் மற்றும் முகவர் முறையை மீண்டும் சட்டரீதியாகக் கொண்டுவந்தது. கள் மற்றும் சாராயக்கடைகள் அடுத்தாண்டு ஜனவரி முதல் மூடப்பட்டன. ஆனால், பீர், விஸ்கி, ரம் விற்கும் கடைகள் தொடர்ந்து திறக்கப்பட்டன. அதே வருடத்தில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுவகைகளை விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. எம்ஜிஆர் மரணமடைந்து அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது.
மதுவிலக்கை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்ததும் அது சார்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆளுநர் உரை மதுவின் மூலம் பெறும் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்தது. சாராயச் சாம்ராஜ்ஜியத்தைத் தகர்த்து எறிவதாகச் சொல்லி திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.. எரிசாராயத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட ஆயத்தீர்வை விலக்கு நீக்கப்பட்டது, பீர்,ரம் ஆகியவற்றை விற்க புதிய உரிமங்கள் இல்லை என்று கையை விரித்தது, மேலும், இந்த ரக மதுவகைகளைத் தயாரிக்கும் பொறுப்பு டாஸ்மாக் வசம் போனது. மதுவின் விலையைத் தயாரிக்கும் நிறுவனங்களே முடிவு செய்துகொண்டிருந்த முறையும் முடிவுக்கு வந்தது. மதுவிலக்கு ஆணையரைக் கொண்டு மதுக்கடை விற்பனையை முறைப்படுத்தவும் திமுக அரசு முயன்றது. பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டாலும் சாராயச்சாவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. விஷச்சாராயச் சாவுகளை எதிர்கொள்ளத் திமுக அரசு மலிவு விலை மதுவைக் கொண்டு வந்தது.
டாஸ்கோ என்கிற நிறுவனத்தை உருவாக்கி கள்ளச்சாராயத்தை நாடிப்போகும் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் மது தயாரித்து அதை டாஸ்மாக் மூலம் சில்லறை விற்பனை செய்வது என்று அரசு முடிவெடுத்தது. சாராயச் சாம்ராஜ்யத்தை ஒழித்தாகச் சொன்ன அரசு சிற்றரசர்களை ஒழிக்க முடியவில்லை என்று சமாளித்தது. மலிவு விலை மதுவை முடிவுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லி அமோக ஆதரவுடன் அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைப் பிடித்தது. அனைத்துச் சாராயக் கடைகளும் மூடப்படும் என்று துணிச்சலாக முதல் கூட்டத்திலேயே முதல்வராக முடிவெடுத்தார். கள்ளச்சாராயம் பெருகிய பொழுது, அதைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிரமாக இயங்காவிட்டால் அப்பகுதி அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார். சாராயக்கடைகளை மூடினாலும் பீர்,ரம் கடைகள் தொடர்ந்தன. அதேபோலப் பார்கள் வேறு திறக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டது. பல லட்சங்களில் மதுவிலக்குப் பிரச்சாரப் படங்கள் தயாரிக்கப்பட்டன.
அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி மதுவிலக்குப் படிப்படியாக அமலுக்கு வரும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்திருந்தாலும் அதைச் செயல்படுத்தவில்லை. சிறிய புட்டிகளில் மதுவை அடைத்து விற்பது என்று முடிவு செய்தது. மீண்டும் பிரச்சாரம் ஒருபக்கம், மது வருமானப் பெருக்கம் இன்னொருபுறம் என்று நகர்ந்தது. 2௦௦1-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தனியாரை மது விற்பனையில் இருந்து நீக்கி, அதற்கான முழுப் பொறுப்பையும் டாஸ்மாக் வசம் ஒப்படைத்தார். டாஸ்மாக்கை உருவாக்கி அரசே மதுவை விற்பனை செய்யலாம் என்கிற கொள்கையைத் துவங்கி வைத்தவர் எம்ஜிஆர் என்றாலும் பழியைத் திமுக மீது போட்டார் ஜெயலலிதா. மிடாஸ் என்றொரு புதிய நிறுவனம் மது உற்பத்தியில் பங்குபெற்றது. மது மூலமான வருமானம் வருடாவருடம் பல நூறு கோடிகள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.
மீண்டும் தேர்தல் வந்த பொழுது, மதுவிலக்கு வாக்குறுதியை கருணாநிதி மீண்டும் ஒரு முறை தந்தார். ஆட்சிக்கு வந்ததும் எஸ்.என்.ஜே., கால்ஸ், ஏலைட் டிஸ்டில்லரிஸ் முதலிய பல்வேறு நிறுவனங்கள் அனுமதி பெற்றன. ஏழாயிரம் கோடி வருமானத்தை மது விற்பனை தொட்ட பொழுது ராமதாஸ் தலைமையில் நாற்பத்தி நான்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மதுவிலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக மதுவிலக்கை பாமக பேசிக்கொண்டே இருக்கிறது. கட்சி ஆரம்பித்த காலத்தில் மகளிர் அணியைக்கொண்டு போராட்டம், மலிவு விலை மதுவந்த பொழுது ஒப்பாரி வைத்துப் போராட்டம், அடுத்தத் தேர்தலில் அன்புமணி முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து மது ஒழிப்புக்கே என்று அறிவிப்பு என்று நீள்கிறது அதன் சாகசம்.

மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோவும் மதுவிலக்குக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி களம் கண்டுள்ளார். மேட்டுக்காடு எனும் ஊரைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள் மதுவுக்கு எதிராக ஜந்தர் மந்தர் துவங்கி தமிழகம் வரை பல்வேறு இடங்களில் தீவிர உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்தார். டெலிபோன் டவரில் ஏறி அவர் அடைந்த மரணம் பலரின் மனசாட்சியை உலுக்கியது. எண்ணற்ற மக்கள் மதுவிலக்குக்காகக் களம் கண்டார்கள். திமுக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று மூன்றாவது முறையாகச் சொல்கிறது. ஜெயலலிதா எப்பொழுது வேண்டுமானாலும் மதுவிலக்கை கொண்டுவரலாம் என்று கிசுகிசுக்கிறார்கள். மதுவிலக்கு தமிழகத்தின் மாயவிளக்கு!
ஒரு துப்பறியும் நாவலைப் புரட்டுவது போல இந்த நூலினை நீங்கள் முடித்துவிடலாம். காய்த்தல், உவத்தல் இன்றி எழுதப்பட்ட இந்த நூல் மதுவிலக்கை இந்தியாவிலேயே அமல்படுத்த முயன்ற சில மாநிலங்களில் ஒன்றான தமிழகம் எப்படி அதில் வெற்றியும், தோல்வியும் கலந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறது என்பதை அசாத்தியமான உழைப்பில் பதிவு செய்கிறது. மதுவிலக்கு பற்றிய முழுமையான, முதன்மையான நூல் இது.
சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு
ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார்
பக்கங்கள்: 2௦௦
விலை: 15௦