டாடா குழுமத்திடம் இருந்து தன்னம்பிக்கை தரும் கதைகள்


 கல்லூரி மூத்தவர் ஒருவரின் பிறந்தநாளுக்காக என்ன புத்தகத்தை வாங்கலாம் என்று அவரிடமே கேட்டேன். ‘#Tata Stories- 40 Timeless Tales to Inspire You’ என்கிற ஹரிஷ் பட் எழுதிய நூலினை தேர்வு செய்தார். டாடா குழுமத்தின் ‘பிராண்ட் பாதுகாவலராக’ திகழும் நூலாசிரியர் டாடா தொடர்புடைய விறுவிறுப்பான, சுவையான நாற்பது நிகழ்வுகளை அடுக்கிச் செல்கிறார். உத்வேகமூட்டும் கதைகள் என்கிற வரையறை என்பதால் பெருமிதமிக்க, உற்சாகமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார். 

டாடா  சுமோ என்கிற பெயரை அடிக்கடி உச்சரித்திருப்போம். சுமோ என்பது என்ன? வெகுகாலமாக ஜப்பானிய தற்காப்பு கலையின் தாக்கத்தில் வைக்கப்பட்ட பெயர் என்றே எண்ணிக்கொண்டு இருந்தேன். சுமந்த் மோல்காவ்கர் எனும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவரின் நினைவாகவே அப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. லாபம் என்பதை சந்தையில் கிட்டியவரை அடிப்போம் என்பதாக இல்லாமல், நல்ல தரமான வண்டிகளை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து பெற வேண்டும் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. எதிலும் ஆகச்சிறந்த ஒன்றை எட்ட வேண்டும் என்கிற சிந்தனையே  அவரை செலுத்தியிருக்கிறது. புனேவில் டாடா மோட்டார்ஸ் ஆலையை துவக்கிய போது 15 இலட்ச ரூபாய்  செலவில் பெரிய ஏரி  ஒன்றையும் உருவாக்கினார் மிஸ்டர். சுமோ. இன்றைக்கு அது 245 ஏக்கர் ஈரநிலமாக விரிந்து நிற்கிறது. 

ரத்தன் டாடா  ஒரு கனவு கண்டார், “ஜென் கார் அளவில், அம்பாசிடர் போன்ற உள் வசதிகளோடு, மாருதி 800-ன் விலையில் ஒரு காரினை உருவாக்க வேண்டும்”. புதிதாக ஒரு ஆலையை இத்தகைய கார்களை உற்பத்தி செய்ய வைக்க வேண்டுமென்றால் 2 பில்லியன் டாலர் செலவாகும் என்று தெரிந்தது. அது மலைப்பைத் தரும் முதலீடு. சாத்தியமற்றதும் கூட. தீர்வு? ஆஸ்திரேலியாவில் செயலிழந்து போன நிஸான் கார் உற்பத்தி ஆலை ஒன்றை முழுதாக பிரித்தெடுத்து அப்படியே இந்தியாவிற்கு கொண்டு வந்து ஆலையை உருவாக்கினார்கள். ஐந்தில் ஒரு பங்கு செலவில் இண்டிகா இந்தியாவிற்கு கிடைத்தது. 


ஓசூரில் இயங்கும் டைட்டன் நிறுவனத்தை உருவாக்கியவர்  ஸெர்ஸேஸ்  தேசாய். தமிழ்நாடு அரசோடு இணைந்து வர வெறும் கைக்கடிகார நிறுவனம் ஒன்றை உருவாக்கவில்லை. பல நூறு தொழிலாளர்களின் எதிர்காலத்தை உருவாக்கினார். நாமக்கல், கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து உள்ளூரிலேயே தமக்குத் தேவையான தொழிலாளர்களை திறனோடு தயார்படுத்தினார். வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக டைட்டன் பள்ளியையும் உருவாக்கினார். எங்கிருந்தோ ஓசூர் வந்த அவர், அங்கேயே மரணித்தார். தங்களுடைய மைந்தராக அவரை தத்தெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு கண்ணீர்விடை கொடுத்தார்கள். 


கோஹினூர் வைரத்தை போல இரு மடங்கு அளவில் பெரிய ஜூப்ளி  வைரத்தினை ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் டோரப்ஜி டாடா  தன்னுடைய மனைவி  மெஹெர்பாய்க்கு பரிசாக கொடுத்தார். உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு டாடா குழுமத்தின் உருக்காலைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலை 1924-ல் வந்தது. தன்னுடைய சொத்துக்கள், விலை மதிக்க முடியாத காதற்பரிசு அனைத்தையும் அடமானம் வைத்து நிலைமையை சமாளித்தார்கள்  தம்பதிகள். விரைவில் நிலைமை சீரானதும் அனைத்தையும் மீட்டார்கள். 1930, 1932-ல் முறையே மனைவி, கணவன் இறந்து போனார்கள். தங்களுடைய சொத்துக்களை முழுவதும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருந்தார் டோரப்ஜி டாடா. அந்த ஜூப்ளி வைரம் விற்கப்பட்டு அதில் கிடைத்த வருமானத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனை கட்டப்பட்டது. 


ஏர் இந்தியாவை டாடா  நடத்திய காலத்தில் உலகத்தின் தலைசிறந்த வானூர்தி  சேவை நிறுவனம் என்கிற பெருமிதத்தை பெற்றது. விமான இருக்கைகள் வசதியாக இருக்கிறதா, பரிமாறப்படும் தேநீர் சுவை தரமாக இருக்கிறதா என்று ஒவ்வொன்றையும் ஜே.ஆர்.டி. டாடா  கண்காணித்து ‘நீலக்குறிப்புகளாக’ தன் குழுவினருக்கு வழங்கியது இந்த வெற்றிக்கான முதன்மையான காரணம். மேலும், வானூர்தியின் உள்ளே உள்ள திரைச்சீலைகள் வெளுத்து போகாமல் இருக்கிறதா? இடுக்குகளில் தூசி இல்லாமல் முழுமையான சுத்தம் பேணப்படுகிறதா? கழிப்பறையில் திசு பேப்பர் சரியாக வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அனைத்தையும் தானே அவ்வப்போது ஆய்வு செய்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். சேவை என்பது சொல்லில் இருப்பதல்ல, அது செயல்பாடு சார்ந்தது. 


IISC, TIFR என்று பெரும் பொருட்செலவில் பல்வேறு அறிவியல் அமைப்புகளை உருவாக்கி, அவற்றை கட்டியெழுப்பி பின்னர் தேசத்திற்கு அர்ப்பணித்த பெருமைமிக்க வரலாறும் டாடா குழுமத்திற்கு உரியது. இந்தியாவின் அணுசக்தி திட்டங்கள் துவங்கி முதல் சூப்பர் கணினி வரை பலவற்றில் டாடாவின் அழுத்தமான பங்களிப்பு உண்டு. 


இந்தியாவின் முதல் சூப்பர் கணினி ‘ஏகா’வை உருவாக்குவது என்று டாடா குழுமம் திட்டமிட்டது. குறித்த காலத்திற்குள் பெரும் சவால்களுக்கு இடையே அக்கணினி தயாராகி 20 அக்டோபர் 2007-ல் நின்றது. அந்நேரம் அக்கணினி 97 டெர்ராஃபிளாப்கள்  வேகம் கொண்டதாக இருந்தது. உலகின் டாப் 100 சூப்பர் கணினிகளில் ஒன்றாக மாற இந்த வேகத்தை 100 டெர்ராஃபிளாப்களாக கூட்ட வேண்டும். ரஷ்ய அறிவியல் அறிஞர்களின் உதவியை நாடினார்கள். சார்மினார் சிகரெட்கள், கிங் பிஷர் மதுவகைகள் பரிசுகளாக அவர்களுக்கு சென்றன. தங்களின் நிறுவனங்களின் அனுமதியோடு, அவர்கள் பத்து நாட்களுக்குள் கணினியின் வேகத்தை 118 டெர்ராஃபிளாப்களாக மாற்றி சாதித்தார்கள். இந்தியாவின் முதல் சூப்பர் கணினி கனவு சாத்தியமானது. அக்கணினி சந்திரயான் திட்டத்தில் பெரும் பங்காற்றியது.  


டாடா குழுமத்தை தோற்றுவித்த ஜாம்ஷெட்ஜி டாடா பெருங்கனவுகள் கொண்டவராக இருந்தார். உருக்காலை உருவாக்குவதற்காக அமெரிக்கா சென்றது  ஒருபுறம், மிகப்பெரிய அளவிலான நீர்மின் திட்ட உருவாக்கத்துக்காக நயாகரா அருவி நோக்கி பயணம் என்று இன்னொரு புறம் அவர் சுற்றிச் சுழன்றார். அவர் ஏன் தாஜ் ஹோட்டலை கட்டினார். அவரை நிறத்தை கொண்டு பாகுபடுத்தி ஹோட்டலுக்குள் விடவில்லை என்கிற கதைக்கு எந்த சான்றுமில்லை. தன்னுடைய வியாபாரத்தை பெருக்க இந்த ஹோட்டலை அவர் பார்க்கவில்லை. ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடம் குத்தகை விடலாம் என்றே அவர் விரும்பினார். பெரும் வருமானம் ஈட்டும் ஒன்றாக இந்த ஹோட்டலை பார்த்தாரா? இதற்கும் பதில், ‘இல்லை!’ என்பது தான். அவர் லண்டன், பெர்லின், பாரீஸ்  என்று உலகம் முழுக்க அலைந்து, திரிந்து தன்னுடைய தாஜ் ஹோட்டலை இழைத்து, இழைத்து உருவாக்கினார். 26 லட்ச ரூபாய் செலவில் எழுந்த அந்த மாளிகைக்கு அன்றைய தேதியில் பிற தங்குமிடங்களை போன்றே ஆறு ரூபாய் வாடகையை தான் அவரும் வைத்தார். 
வேறென்ன காரணம்? அவரின் உதவியாளர் பிலிமோரியாவின் குறிப்புகளில் அதற்கான விடை இருக்கிறது, “பம்பாய் நகரத்தின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் முன்னேறிய ஹோட்டல் ஒன்று தவிர்க்க முடியாத தேவை என்று அவர் நம்பினார். வேறெந்த தொழிலதிபரும் இதனுள் நுழையவில்லை என்பதால் தான் செய்து முடிக்க வேண்டிய கடமை என்று அவர் செயல்பட்டார்’. பம்பாயில் உலகததரத்திலான ஒரு ஹோட்டலை எழுப்பினால் உலகமெங்கும் உள்ள மக்கள் இந்நகரத்தை நோக்கி பெருமளவில் வருவார்கள் என்கிற பெருங்கனவு அவரை செலுத்தியது. 

இந்த நூலில் இன்னும் பற்பல சுவையான கதைகளும், ஆளுமைகள் குறித்த எழுத்தோவியங்களும் உண்டு. ஒரே ஒரு கடிதத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு இக்கதை மழையில் இருந்து விடைபெறலாம். ஜே.ஆர்.டி.டாடாவின் வாழ்க்கையை செலுத்தும் விழுமியங்கள் யாவை என்று 06-08-1965-ல் பன்சாலி எனும் ஆசிரியர் கேட்டிருந்தார்.
13-09-1965-ல் இக்கடிதத்திற்கு ஜே.ஆர்.டி.டாடா பதில் எழுதினார். அதில், தன்னை ஒரு எளிய மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் கீழ்கண்ட விழுமியங்களை பட்டியலிடுகிறார்,


ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு இரண்டுமில்லாமல் மதிப்புமிக்க எதையும் வாழ்க்கையில் வென்றிட இயலாது. முகத்தின் முன் சொல்லப்படும் துதிகள், கவர்ச்சிமிக்க சொற்களில் ஒருவர் ஏமாந்து விடக்கூடாது. தன்னுடைய சுய அறிவை பயன்படுத்தி தனக்காக தானே சிந்திக்க வேண்டும். 

எடுத்துக்கொண்ட செயல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதில் மகத்துவத்திற்கும், கச்சிதத்திற்காகவும் ஒருவர் அயராது உழைக்க வேண்டும். சிறந்ததை விட சற்றே தரங்குறைந்த இரண்டாம் தரம் எதையும் பெற்றுவிட்டதற்காக திருப்தியடையக்கூடாது. 

தாய்நாட்டின் நலன்கள், அதன் மக்களுக்கு பயன்படும் வகையில் இல்லாத சாதனை, வெற்றிகள் பொருளற்றவை. இவை நேர்மையான, முறையான வழியில் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். 

சக மனிதர்களிடம் நல்லுறவை பேணுவது தனிப்பட்ட வெற்றிகளை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் வெற்றிக்கும் இன்றியமையாதது ஆகும்.”

கொரோனாவை எதிர்கொள்ள வரலாற்றிலிருந்து சில பாடங்கள் – முனைவர் ஸ்ரீநாத் ராகவன்


நான் இன்றைக்கு இந்தியா தன்னுடைய வரலாற்றில் இருந்து கொரோனா வைரஸ் கொள்ளை நோயை எப்படி எதிர்கொள்வது எனப் பாடம் படிக்கலாம் என்று உரையாற்ற இருக்கிறேன். இந்தியா பேரிடர் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது. இந்நோயை அரிதான ஒன்று, நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் ஒன்று என்றெல்லாம் வர்ணிப்பதை கண்டோம். இந்த நோயை பதினான்காம் நூற்றாண்டின் கருப்பு மரணங்கள், ஸ்பானிஷ் ப்ளூ, முதலாம் உலகப்போருக்கு அடுத்து தாக்கிய இன்ப்ளூயன்சா நோய்த் தொற்று ஆகியவற்றோடு ஒப்பிடுகிறார்கள். இந்தியாவும் 1918-19 ஆண்டுகாலத்தில் பாதிக்கப்பட்டது.

எனினும், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றில் இருந்து எளிமையான படிப்பினைகளை எடுத்துக் கொள்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. எங்களுடைய வரலாற்று ஆய்வு முறைகள், இரு வேறு நிகழ்வுகளை ஒப்பிடும் போது அவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி மட்டும் கவனம் செலுத்தாமல், அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருகின்றன. இந்த எச்சரிக்கையை மனதில் வைத்துக் கொண்டு, கடந்த காலங்களில் இந்தியா இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள், தேசிய அவசரநிலைகளை எதிர்கொண்ட விதத்தில் இருந்து பாடங்கள் படிக்க இயலும்.

நான் குறிப்பாக மூன்று வெவ்வேறு முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கவனப்படுத்த உள்ளேன். இவை ஒவ்வொன்றுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும், இவற்றில் இருந்து நாம் வெவ்வேறு படிப்பினைகளைப் பெற முடிகிறது. முதலாவதாக 1896-ல் இந்தியாவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்த பிளேக் நோய் அடுத்த இருபதாண்டுகளுக்குத் தொடர்ந்ததைப்பற்றிப் பேசுவோம். அதற்கடுத்து 1918-19 காலத்தில் நிகழ்ந்த இன்ப்ளூயன்சா கொள்ளை நோய், இறுதியாக இரண்டாம் உலகப்போர் காலத்தை இந்தியா அணுகிய விதம், பல்வேறு விஷயங்களை அணிதிரட்டிய பாங்கு என்று பயணிப்போம்.

(புகைப்பட நன்றி: விகடன்)

முதலாவதாகப் பிளேக் நோயை எடுத்துக் கொள்வோம். இந்நோய் 1896 கடல் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. இரண்டாண்டுகள் கழித்து, இந்நோயின் வீரியத்தைப் பிரிட்டீஷ் அரசாங்கம் உலகெங்கும் பரவியிருந்த தன்னுடைய வியாபாரத்தை அசைத்துப் பார்க்க ஆரம்பித்த போதுதான் உணர்ந்து கொண்டது. இந்தியாவின் பம்பாய் நகரங்களில் இருந்து கல்கத்தா, கராச்சி என்று பிளேக் நோய் படிப்படியாகப் பரவ ஆரம்பித்தது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அது பல்வேறு சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் என்று கிளை பரப்பிக் கொண்டே சென்றது. 1901-ல் பிரிட்டிஷ் இந்திய அரசின் கணக்குப்படி இரண்டரை லட்சம் மக்கள் இந்நோயால் மடிந்து போயிருந்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் பேர் பிளேக் நோயால் இறந்தார்கள். இன்னும் இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பிளே காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டிருந்தது.

இந்தத் தொற்றுநோயின் வேகத்தைக் கண்டு திகைத்த பிரிட்டிஷ் அரசாங்கம் நோய் பரவ ஆரம்பித்த இரண்டாம் ஆண்டில் இருந்தே கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. நோயாளிகள், கப்பல்கள், தொடர்வண்டிகளைச் சோதிப்பது, சிறைப்பிடிப்பது என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிளேக் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார்கள். வீடுகள், பொதுச் சொத்துக்களைப் பிளேக் பாதிப்புக்கு ஆளான போது அழித்தார்கள். எல்லா வகையான யாத்திரைகள், திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் பெருந்திரளாகக் கூடுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய கடுமையான, தீவிரமான நடவடிக்கைகள் இந்திய மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பின. குறிப்பாகப் பத்திரிகைகள் அரசின் போக்கை கடுமையாகச் சாடி எழுதின.

கட்டாயப்படுத்தித் தனிமைப்படுத்துவது, வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்ப்பது, இன்னபிற தடுப்பு நடவடிக்கைகளை தேசிய தலைவர் திலகர் கண்டித்தார். புனேவில் இருந்து வெளிவந்த அவரின் கேசரி இதழில் அரசின் போக்கு விமர்சிக்கப்பட்டது. திலகர் உள்ளிட்ட தலைவர்கள் பிளேக் நோயை அரசு அறிவியல்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். அதேவேளையில், சர்வாதிகாரப்போக்கோடு, தான்தோன்றித்தனமாக எடுக்கப்படும் முடிவுகள் மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தி விடும் என்று கருதினார்கள். அவர்களின் அச்சம் சரியென்பதை நிறுவும் விதமாக நோய் ஏற்பட்ட 1896-ல் இருந்து அடுத்தடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவமனைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. பிளேக் நோய்க்காக மக்களைப் பரிசோதிக்க வந்த மருத்துவர்கள் தாக்கப்பட்டார்கள், கல்கத்தா, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. பிளேக் நோய் குறித்துப் பலதரப்பட்ட வதந்திகள் உலவ ஆரம்பித்தன. அரசின் அடக்குமுறையும், இந்த வதந்திகளும் கைகோர்த்துக் கொண்டன.

பிரிட்டீஷ் அரசாங்கம் பிளேக் நோய்த்தொற்றை எதிர்கொண்ட விதம் அரசாங்க அதிகாரம், பலம், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி ஆகியவற்றின் போதாமைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு வழியாகப் பிரிட்டிஷ் அரசு மக்களுக்குப் பெரும் இன்னல்களைத் தரும் தவிர்க்க முடியாத நடவடிக்கைகளை எடுக்கும் போது உள்ளூர் தலைவர்களின் உதவியை நாடினார்கள். அவர்களின் ஒத்துழைப்பு மக்களுக்கு இடரைத் தரும் நடவடிக்கைகளை அமல்படுத்தி அதன்மூலம் பெருமளவில் பிளேக் நோயை எதிர்க்க உதவியது.

நாம் பார்க்க இருப்பது 1918-ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய இன்ப்ளூயன்சா கொள்ளை நோய். இந்தக் கொள்ளை நோய் தான் பல்வேறு வகைகளில் தற்போதைய COVID-19 நோய்ப் பரவலோடு ஒப்பிடத்தக்கது. இரண்டு தொற்றுகளும் உலகம் முழுக்கப் பரவின என்பதோடு இரண்டுமே ப்ளூ வகை நோய்த்தொற்றாகும். மேற்சொன்ன இன்ப்ளூயன்சா காய்ச்சலால் உலகம் முழுக்க ஐந்து கோடி மக்கள் இறந்தார்கள். இந்தியாவின் 1921 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இதில் 1.2 -1.3 கோடி மக்கள் இந்தியாவில் இறந்து போனார்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்பில் மரணங்களின் எண்ணிக்கை குறைத்தே மதிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர் மக்கள் தொகை ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள் ஒரு கோடியே எழுபது லட்சம் முதல் 1 கோடியே எண்பது லட்சம் மக்கள் இந்தியாவில் மட்டும் ப்ளூ கொள்ளைநோயால் இறந்து போனார்கள் என்கிறது. அதாவது உலகத்தில் நிகழ்ந்த மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டது.

இந்தக் கொள்ளை நோய் இந்தியாவை என்ன செய்தது என்பது குறித்துக் காத்திரமான வரலாற்று ஆய்வுக்காக இப்பேரிடர் காத்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து நாம் பெறுவதற்குப் பல்வேறு பாடங்கள் உள்ளன என்றாலும் நான் ஒன்றே ஒன்றை தொட்டுக்காட்ட விரும்புகிறேன். இதனைக் குறித்து நம்மிடம் போதுமான தரவுகள் இருக்கின்றன. இந்த நோய் எப்படி வெவ்வேறு பகுதிகள், தரப்பினரை வெவ்வேறு விதமாகப் பாதித்தது என்பதைக் காண்போம். முதல் உலகப்போரில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இறந்து போனவர்களை விட அதிகமாக 1.7-1.8 கோடி மக்கள் இந்நோயால் இந்தியாவில் இறந்து போனார்கள். இதில் பெரும்பாலான மரணங்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்கு, மத்திய பகுதிகளில் நிகழ்ந்தன. அதிலும், இன்னும் நுணுகி பார்த்தால் உள்ளூர் அளவிலும் நோயின் தாக்கம் வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ப மாறுபட்டிருந்தது.

உத்திர பிரதேசம் அப்போது ஐக்கிய மாகாணங்கள் என்று அறியப்பட்டிருந்தது. இப்பகுதியில் ஆயிரத்துக்கு இருபது பேர் நோயால் பீடிக்கப்பாட்டார்கள். ஆக்ராவில் மட்டும் பத்திற்கு ஏழு பேர் ப்ளூ தாக்குதலுக்கு ஆளானார்கள். வயதை அளவுகோலாக வைத்துக் கொண்டு பார்த்தால் பம்பாய் மாகாணத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானவர்கள் இருபது முதல் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் (42%). கரோனா நோய்த்தொற்று வயதானவர்களிடம் அதிகம் காணப்படுவதில் இருந்து இது மாறுபட்டு நிற்கிறது. அன்றைய ப்ளூ தொற்றில் பம்பாய் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 20% மட்டுமே. பொதுவாக இன்ப்ளூயன்சா நோயால் முதியவர்களே அதிகம் பாதிக்கப்படும் போது, ஏன் இந்தத் தடவை மட்டும் இளையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள் என்கிற கேள்விக்கு விடைதர முடியாமல் ஆய்வாளர்கள் இன்றுவரை திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நோயின் தாக்கம் பாலின அடிப்படையிலும் மாறுபட்டது. பம்பாய் மாகாணத்தில் அதிகமான இறப்புகள் நிகழ்ந்த இருபது -நாற்பது வயதினரில் ஆண்களை விடப் பெண்களின் மரண அளவு 12-14% கூடுதலாக இருந்தது. கொள்ளை நோய்க்காலங்களில் கூடப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்யத் தலைப்பட்டதோடு, குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கும் ஆளாக்கப்பட்டார்கள். இதனால் அவர்கள் கூடுதலாக இறந்து போனார்கள். வர்க்க, சாதி அடிப்படையிலும் மரண அளவுகள் மாறுபட்டன. ஏழைகளும், கீழ் சாதியினர் எனக் கருதப்பட்டவர்களும் அதிகளவில் இறந்து போனார்கள். அவர்களின் வாழிடங்கள் போதுமான சுகாதாரம் இன்றி இருந்தன என்பதோடு அவர்கள் சிறிய இடத்திற்குள் பல பேர் நெருக்கமாக வாழ வேண்டிய நிலையில் இருந்தார்கள். பலர் திறந்தவெளியில் தூங்க வேண்டிய அளவுக்கு வறுமை ஆட்டிப்படைத்தது. அவர்களிடையே மனித தொடர்பு அதிகமாக இருந்தது நோயை வேகமாகப் பரப்பியது.

இது போதாது என்று பம்பாய் மாகாணத்தில் ப்ளூ நோயோடு பஞ்சமும் கைகோர்த்துக் கொண்டது. கொள்ளை நோயால் விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. தொழிலாளர் தட்டுப்பாட்டால் உணவு உற்பத்தியானது 1917-ஐ ஒப்பிடும் போது அடுத்தாண்டு இருபது சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பம்பாய் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பஞ்சம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்க வேண்டியிருந்தது. இதனால் உணவுத் தட்டுப்பாட்டோடு ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இது நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தி மேற்சொன்ன மரணங்களுக்கு வழிவகுத்தது. இந்நோயை போலவே கொரோனா வைரஸ் கொள்ளைநோயின் தாக்கமும் பல தரப்பட்ட மக்களிடையே வெவ்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனைக் கணக்கில் கொண்டு அரசாங்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

இறுதியாக, இன்னொரு நோய்த்தொற்று/கொள்ளை நோய் குறித்து நான் பேசப்போவதில்லை. இரண்டாம் உலகப்போர் காலத்துக்குச் செல்ல இருக்கிறோம். கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் போரோடு உருவகப்படுத்தப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராகப் போரில் இருக்கும் நாம் மக்களை, நம்முடைய ஆற்றல் வளங்களைத் திரட்டி அதற்கு எதிராகப் போரிட வேண்டும் என்று பேசப்படுகிறது.

இந்தியா இரண்டாம் உலகப்போரின் போது எப்படிப் பல தளங்களில் அணி திரட்டியது என்பது நமக்கு வழிகாட்டியாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல் சில எச்சரிக்கைகளையும் வழங்குகிறது. இடர் சூழ்ந்த காலத்தில் அப்போதைய அரசு இந்தியாவின் வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பல்துறை வல்லுநர்களோடு கைகோர்த்துக் கொண்டு இயங்கியது. எப்படி அரசு அணிதிட்டியது என்பதற்கு மோசமான பக்கமும் உண்டு. அது ஒரு புறம் என்றால், ஜப்பானுடன் போர் வலுத்த 1942 ஐ ஒட்டிய காலத்தில் இந்திய அரசு அமைப்புரீதியாகப் பல்வேறு புதுமைகளைப் புரிந்தது. பல்வேறு கமிட்டிகள், குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் சில அறிவுரை வழங்குவதாக இருந்தன. வேறு சில அதிகாரமிக்கவையாகவும் திகழ்ந்தன. இந்தக் குழுக்களில் வர்த்தகத் தலைவர்கள், குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், பல்துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தக் குழுக்களில் இடம் பிடித்தார்கள். இந்தக் கமிட்டிகள், குழுக்கள் அரசாங்கத்தின் வெவ்வேறு உறுப்புகளோடு இணைந்து இயங்கின. இந்த அரசாங்க உறுப்புகள் போர்க்காலத்தில் இந்திய பொருளாதாரத்தைத் துடிப்போடும்,முனைப்பாகவும் வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன.

குறிப்பாக, இன்றைக்குக் கிட்டத்தட்ட களத்தில் தென்படாத ஒரு முயற்சி அப்போது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலகப்போர் துவங்கிய இரண்டு ஆண்டுகள் வரை கூட இந்தியாவிடம் மெஷின் கருவிகளை உற்பத்தி செய்யும் திறன் இருக்கவில்லை. அதற்குமுன்பு வரை எல்லா மெஷின் கருவிகளையும் வெளியில் இருந்தே இறக்குமதி செய்து கொண்டிருந்தோம், உலகப்போர் வேகமெடுத்த காலத்தில் அரசு வெவ்வேறு குழுக்கள், கமிட்டிகளோடு சேர்ந்து இயங்கி ஐந்து நிறுவனங்களை மெஷின் கருவிகள் தயாரிக்கக் கண்டறிந்தது. அவற்றிற்கு நிதியுதவி, தர வழிகாட்டுதல், விலை நிர்ணயம் ஆகியவற்றில் வழிகாட்டப்பட்டது. மேலும், அவற்றிடம் இருந்து அரசு கருவிகளைக் கொள்முதல் செய்யும் என்றும் உறுதி தரப்பட்டது.

எண்ணி பதினான்கே மாதங்களில் 1942-43 காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மெஷின் கருவிகள் உற்பத்தியில் இந்தியாவில் ஈடுபடத் துவங்கியிருந்தன. இது போர்க்காலத்தில் மட்டுமல்லாமல் அதற்கடுத்த காலத்திலும் இந்திய தொழில் நிறுவனங்கள், தொழில்மயமாக்கலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், போர்க்காலத்தில் அரசு எப்படிப் போக்குவரத்தை முறையாக ஒருங்கிணைத்து அத்தியாவசிய சேவைகள் சென்று சேர்வதை உறுதி செய்தது என்பதும் நம்மை ஈர்க்கிற ஒன்று. பல்வேறு நீர்வழி போக்குவரத்துகள் ஏற்படுத்தப்பட்டன. சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் இணைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தனியார்வசம் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்க முயற்சிகள் தனியாரோடு ஒருங்கிணைந்து முனைப்பாகச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் இங்கிருந்து பெற இயலும்.

இப்போது உலகப்போரின் எச்சரிக்கையூட்டும் பக்கத்திற்குச் செல்வோம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வங்கத்தில் பெரும்பஞ்சம் ஏற்பட்டதைப் பலரும் அறிவோம். அதிகம் அறியப்படாத இன்னொரு பஞ்சம் திருவிதாங்கூர் பகுதியில் ஏற்பட்டது. அன்றும், இன்றும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பெருமளவில் இடம்பெயர்கிற சூழலில் நமக்கான படிப்பினைகள் இப்பஞ்சங்களில் பொதிந்து இருக்கின்றன. இந்த இரண்டு பஞ்சங்களிலும் உணவுத் தட்டுப்பாடு என்பது பஞ்சத்திற்கு முதன்மையான காரணம் அல்ல. உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் வகையில் பல்வேறு விநியோக சங்கிலிகள் அறுந்து போயின என்பது உண்மை. ஆனால், அடிப்படையான பிரச்சனை இந்திய ஏழைகளின் வாங்கும் திறன் பெருமளவில் வீழ்ந்தது என்பதிலேயே இருந்தது. அதுவும் போர்க்காலத்தில் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்த பின்னணியில் இதனைப் பொருத்தி பார்க்க வேண்டும்.

நாம் இன்று வேறுபட்ட சூழலில் இருக்கிறோம். உலகப்போர் காலத்தில் மக்களைத்திரட்டிபோர் புரிய முயன்றது அரசு. இப்போது மக்களை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வைத்து அதன்மூலம் நோய் பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளால், ஏழைகளின் வாங்கும் திறன் குறைந்திருக்கிறது, குறையும், வங்க, திருவிதாங்கூர் பஞ்சங்களில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது தான். போர், பேரிடர் காலத்து நடவடிக்கைகள், அணிதிரட்டல்களால் ஏழை எளியவர்களின் வாங்கும் திறன் வீழ்ச்சியடையும். அத்தகைய சூழலில் அவர்களின் வாங்கும் திறனை பேணிப்பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படவேண்டும். பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சொல்வதைப் போல அவர்களுக்கு உரிய கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இவற்றின் மூலமே இந்தப் பேரிடரில் இருந்து பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் நாம் வெளியேற இயலும்.

வரலாற்றாசிரியர் A.J.P. டெய்லர் வரலாற்றில் இருந்து நாம் எப்படிப் புதிதாகத் தவறுகள் செய்யலாம் என்று மட்டுமே கற்றுக்கொள்ள இயலும் என்று சொன்னார். இந்தளவிற்கு வரலாற்றை அவநம்பிக்கையோடு அணுக வேண்டியதில்லை. வரலாற்றில் இருந்து அதுவும் குறிப்பாக இந்தியா வரலாற்றில் இருந்து நல்ல, மோசமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள இயலும். இத்தகைய சவாலான காலங்களில் எப்படி அரசின் கொள்கைகள், செயல்முடிவுகள் எச்சரிக்கையாக இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் வரலாறு திகழக்கூடும்.

வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். நேரு காலத்து இந்தியா, வங்கப்போர், இரண்டாம் உலகப்போரின் வரலாறு என அவரின் ஆய்வுகள் பரந்துபட்டவை. இந்த உரை Carnegie Endowment க்காக நிகழ்த்தப்பட்டது.

புகைப்பட நன்றி: தி இந்து

தமிழில்: பூ.கொ.சரவணன்

கொரோனா காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள…


என்னுடைய ஆசிரியர் மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்கள் இல்லையென்கிற எண்ணம் வாட்டுகிறது. அவருடைய வகுப்புகளில் நான் நேரடியாகப் பயிலவில்லை என்றாலும், பயிற்சி மருத்துவர் காலத்திலிருந்து அவரோடு நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவருடைய வீட்டிற்குச் சென்று காரசாரமாக விவாதிப்பது வழக்கம். மதியம் சூடான அறுசுவை உணவு எல்லையற்ற அன்போடு மேடத்தால் பரிமாறப்படுகையில் கதகதப்புக் கவிந்திருப்பதாக உணர்வேன்.

சி.என்.டியிடம் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். கவனம் செலுத்தி படிப்பது, கற்றதை மனங்கொள்ளும் வகையில் கற்பிப்பது, நோயாளிகளை அக்கறையோடு கவனித்துக் கொள்வது, ஆகச்சிறந்த பராமரிப்பைத் தருவது எனப்பல. அவர் தவறெனக் கருதிய அணு ஆயுதம், அதிகார மையங்கள் என அனைத்தையும் தொடர்ந்து எதிர்த்து இயங்கினார். மேலும் உலகச் சுகாதார நிறுவனம் காசநோய்க்கு அறிவுறுத்திய DOT சிகிச்சை முறையையும் எதிர்த்தார். அவரின் இத்தகைய போராட்டங்களில் நானும் தோள் கொடுத்திருக்கிறேன். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை அருவருப்போடு ஒதுக்கி, அவர்களுக்குச் சிகிச்சை மறுக்கப்பட்ட காலத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்ளப் பெரும் மையமொன்றை இந்தியாவில் உருவாக்கினார். ஒவ்வொரு ஹெச்ஐவி நோயாளியையும் அரவணைத்து, ஆறுதல்படுத்துவார். அவர் அடிப்படையில் ஹெச்ஐவி நிபுணர் கிடையாது. ஹெச்ஐவியில் தேர்ச்சிமிக்க “சிறப்பு மருத்துவர்கள்” நோயாளிகளை வெறுத்தொதுக்கிய போது, தானே முயன்று ஹெச்ஐவி சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். அவர் நோயாளிகளைப் பரிசோதித்து, நோயை அறியும் பாங்கின் கச்சிதத்தை நான் இன்னும் எட்டவில்லை.

நான் திசைமாறி எதைஎதையோ பேசுகிறேன். மிகச்சிறந்த மருத்துவ மாணவராக அவர் எந்தத் துறையை வேண்டுமானாலும் மேற்படிப்புக்குத் தேர்வு செய்திருக்கலாம் (அப்போது பலரும் இருதயவியல் மருத்துவராக முண்டியடித்தார்கள்). ஆனால், இவரோ பல லட்சம் மக்களின் உயிர் குடித்துக்கொண்டிருந்த காசநோயினை எதிர்த்துப் போராட முடிவெடுத்தார். அப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் வண்ணம் நுரையீரல் மருத்துவம் பயின்றார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆகச்சிறந்த மருத்துவமனைகளுக்கு அவர் பணியாற்றப் போயிருக்கலாம். அவர் இந்தியாவிற்குத் திரும்ப வந்து, அரசு மருத்துவராக இயங்கினார்.

அவருக்கே காசநோய் ஏற்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ள நேர்ந்தது. ஒரு முறை கடுமையான காசநோய் தாக்குதலால் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். இப்படி அவருக்குக் காசநோய் வருவதைக் குறித்து அக்கறையோடு உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டினேன். தான் ஒப்புக்கொடுத்துக் கொண்ட சேவையில் இப்படிப்பட்ட ஆபத்துகள் இருக்குமென நன்றாகத்தெரியும் என ஒன்றும் நடக்காததைப் போலப் பேசினார். அவர் இத்தனைக்கும் பிறகும், தன் நோயாளிகளின் மீதான அக்கறையை விடுத்ததே இல்லை. அவர் மீண்டெழுந்து ஏழை காசநோயாளிகள்/ஹெச்ஐவி நோயாளிகளை அதே வேகத்தோடு கவனித்துக்கொண்டார். நோய்த்தொற்றுகள் அவரின் ஊக்கத்தைக் குலைக்க இயலவில்லை.

நான் ஏராளமான இளைய சி.என்.தெய்வநாயகங்களைக் காண்கிறேன். பெரும் தீரம், உத்வேகத்தோடு அவர்கள் கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராடுகிறார்கள். தங்களிடம் பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டுப் பெண் மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கிறார்கள். இத்தனை இளைய சி.என்.டிக்களுக்கும் தலைவணங்குகிறேன். நாம் துவளாமல் போராடுவோம். உங்களின் பணியே நம் பெருஞ்சொத்து. இந்த உலகின் அத்தனை புதிய சி.என்.தெய்வநாயகங்களுக்கும் என் மனம்நிறைந்த வாழ்த்துகள். – மருத்துவர். அமலோற்பவநாதன் ஜோசப்

முதன்மைப் பதிவு: https://www.facebook.com/1486394836/posts/10216832061182282/?app=fbl

தமிழில்: பூ.கொ.சரவணன்.

கொரோனாவிற்கு ஹைட்ராக்ஸி குளோராகுயின் மருந்தா?


ஹைட்ராக்ஸி குளோராகுயினைக் கொரோனாவை எதிர்கொள்ளும் Prophylaxis ஆக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்துள்ளது. எளிய மொழியில் சொல்வதென்றால், Prophylaxis என்பது அடிப்படை நோய்த்தடுப்பு முறையாகும். இதுவரை நோயால் பாதிக்கப்படாதவர்கள் இதனை உட்கொள்ள வேண்டும். ஆனால், மிக முக்கியமாக ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த Prophylaxis ஐ நோய்த்தொற்று/நோய்க்கு ஆளாகக் கூடிய ஆபத்து/அதிக ஆபத்து உள்ளவர்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். தடுப்பூசி ஒரு வகை prophylaxis எனலாம்.

இன்னொரு வகையான prophylaxis உண்டு. அதனை chemo-prophylaxis என்போம்.
இந்த முறையில், நோய் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய ஆபத்துள்ளவர்களுக்குக் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள்/மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட அளவில் செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு நல்ல எடுத்துக்காட்டு வாராவாரம் குழந்தைகள், பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை தருவது. மலேரியா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு doxycycline தருவது இன்னொரு எடுத்துக்காட்டாகும்.

தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கொரோனாவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை chemo- prophylaxis ஆகப் பரிந்துரைத்துள்ளது. அது மிகத்தெளிவாக யார் இம்மருந்தை உட்கொள்ள வேண்டும் என வரையறுக்கிறது:

1. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்த்தொற்று இருப்பதாகச் சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதாரப்பணியாளர்கள் இதை உட்கொள்ளலாம்.

2. கொரோனா நோய் இருப்பதாக உறுதியான நபரின் குடும்ப உறுப்பினர்கள் (அவர்களோடு தொடர்புக்கு ஆளானவர்கள்) இதனை உண்ணலாம்.மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது ‘இந்த வேதிப்பொருளை பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்’.

இந்த மருந்தை மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் வாங்கக் கூடாது. இப்படிச்சொல்ல காரணம் என்ன? இந்த மருந்து மோசமான பின்விளைவுகளை உண்டாக்கக் கூடும். அதனால் உயிருக்கு ஆபத்தான நிலை வரலாம்.ஆகவே, ஹைட்ராக்ஸி குளோரோகுயினை தேடி அலையாதீர்கள். மருந்துக்கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு இம்மருந்தை முறையான மருத்துவரின் பரிந்துரையின்றி வழங்க வேண்டாம். – அரவிந்த் காந்தி பெரியசாமி, மூத்த உள்ளுறை மருத்துவர், சமூக மற்றும் நோய்த்தடுப்புத்துறை, PGIMER, சண்டிகர்.தமிழில்: பூ.கொ.சரவணன்

கொரோனா வைரஸ் குறித்து அச்சமா?


கொரோனா வைரஸ் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வி-பதில்கள் : ஜாக்வின் சாம் பால், மூத்த உறைவிட மருத்துவர், சி.எம்.சி., வேலூர்

1. கொரோனா வைரஸ் எந்தளவிற்கு உயிர்கொல்லி நோய்?
கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 3% பேர் இறக்கிறார்கள். எனினும், கரோனாவால் பாதிக்கப்படும் முதியோர்களில் இந்த மரண விகிதம் 15% வரை உள்ளது.

2.எவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவும்?
சராசரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூன்று பேருக்கு நோய்த்தொற்றை பரப்புகிறார். எனினும், கொரோனா வைரஸ் அதி விரைவாக பல்கிப் பெருகுவதால், கொரோனா வைரஸ் நம்மை தொற்றியிருக்கிறது என்று தெரிவதற்குள் பலருக்கும் நோயை பரப்பி இருப்போம்.

3. மேலே சொன்னதை எல்லாம் பார்த்தால், கொரோனா ஒன்றும் அத்தனை மோசமான வைரஸ் போல தெரியவில்லையே?

நம் நாட்டில் குறிப்பிட்ட அளவு மருத்துவ வசதிகளும், சுகாதார வளங்களும் மட்டுமே உள்ளன. இதனை நம்பியே பல கோடி மக்கள் இருக்கிறார்கள். நம்முடைய மருத்துவமனைகளை நோயாளிகளால் நிரப்பிக் கொண்டிருந்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் கூடிவிடும்.

4. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்னென்ன?
*காய்ச்சல்
*இருமல்/ஜலதோஷம்
*மூச்சு விட திணறுதல்
*அசதி
*அரிதாக வயிற்றுப்போக்கு

5. மேற்சொன்ன அறிகுறிகள் உள்ள அனைவரும் மருத்துவனைக்கு ஓட வேண்டுமா?

இல்லை. கூட்டம், கூட்டமாக மருத்துவமனையில் போய் நின்றால் எளிதாக நோய்த் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ள முதியோர், ஏழைகள், நோய் எதிர்ப்பு சக்தியற்றோர் முதலியோருக்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவிவிடும்.

6. பின் யாரெல்லாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

கீழ்க்கண்டவர்கள் மருத்துவமனைக்கு செல்லலாம்:
*மூச்சு விட முடியாதவர்கள்
*நெஞ்சு வலி உள்ளவர்கள்
*கடும் சுரம் அடிப்பவர்கள்
*அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள்
*நெடுங்காலமாக இதய/சிறுநீரக/நுரையீரல்/கல்லீரல் நோயால் அவதிப்படுபவர்கள்

7. கொரோனாவில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

*கைகளை நன்றாக கழுவ வேண்டும். பிற நபர்களுக்கு அருகே போவதற்கு முன்போ, அவர்களை தொட நேர்ந்ததற்கு பின்போ கண்டிப்பாக முறையாக கைகளை கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை தேய்த்து கழுவவும்.
* ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தபட்சம் மூன்றடி இடைவெளி இருக்கட்டும்.
* தும்மலோ, இருமலோ வந்தால் உங்கள் தோள்பட்டை அல்லது முழங்கையில் இருமுங்கள். இது உங்களுக்கு வசதியாக இல்லையென்றால் டிஷு பேப்பரை பயன்படுத்தவும்.

நாம் பீதியடைய வேண்டுமா? இல்லை.
நாம் கவனமாக இருக்க வேண்டுமா? மிக மிக கவனமாக இருந்தே ஆகவேண்டும்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் அரிய பணிகள்


:
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’ என்கிற குறுநூலை எழுதியுள்ளார். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த பெ.சு நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். அவர் மொத்தமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவை 650 பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றின் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
தன்னுடைய மனோன்மணியம் நாடக நூலில் தன்னை, ‘அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்’ என்று அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்த்த பெ.சு. தன்னுடைய தமிழார்வத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து மாட்டுவண்டி ஏறி செங்கோட்டை அடைந்து அங்கிருந்து சென்னை வரை பயணம் செய்து தமிழறிஞர்களைக் கண்டு, அறிவுப்பசி ஆற்றிக்கொண்டார். அன்றைய சமஸ்தான மன்னரின் உதவியோடு லண்டனில் இருந்து ஆங்கில நூல்களை வரவைத்து வாசித்து இருக்கிறார்.

களக்காட்டில் இருந்து ஆலப்புழைக்குக் குடிபெயர்ந்த வேளாளர் குடும்பம் என்றாலும் தமிழையும், சைவத்தையும் பெ.சுவின் குடும்பம் மறக்கவில்லை. திருவிதாங்கூர் அரசர்களின் மொழி வெறுப்பற்ற தன்மை இதற்குக் காரணம் என்று ஆதாரங்களோடு கவனப்படுத்துகிறார் அ.கா.பெருமாள். பெ.சு வரலாறு, தத்துவம் பயின்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்றாலும் அப்படிப்பை அவர் முடிக்கவில்லை. பெ.சு. அவர்கள் திருநெல்வேலி ம.தி.தா. இந்துப்பள்ளியின் தலைமைப்பொறுப்பில் இருந்த போது தமிழை முறையாகக் கற்றதோடு, ஸ்ரீ கோடகநல்லூர் சுவாமிகளிடம் சித்தாந்த சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு தானே சுயமாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ளார். திருவனந்தபுரம் கல்லூரியில் பயின்ற போது தமிழ்த்துறைக்குப் புத்தகங்களை வாங்கியுள்ளார்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் தத்துவத்துறை பேராசிரியராக இருந்த முனைவர் ராபர்ட் ஹார்வி இங்கிலாந்து போக வேண்டி இருந்த போது தன்னுடைய இடத்திற்குப் பெ.சுவை பரிந்துரை செய்தார். 1878-1882 வரை தத்துவ ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மூன்றாண்டுகள் சமஸ்தான மன்னரால் பிறவகைச் சிரஸ்தார் என்னும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இது அரசு நிர்வாகம் தொடர்புடையது. இப்பணி காலத்தில் தான் பல்வேறு கோவில்களுக்குப் பயணம் செய்து, கல்வெட்டுகள், ஆவணங்களைப் பெ.சு. ஆய்வு செய்துள்ளார். 1885-1897 வரை ஹார்வியின் பரிந்துரையால் மகாராஜா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். நன்றி மறவாமல் தன்னுடைய வீட்டிற்கு ஹார்விபுரம் என்று பெயரிட்டதோடு, தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தை அவருக்கே சமர்ப்பித்தார்.

நாடகாசிரியர்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தமிழ் நாடகங்கள் எழுந்தன. தமிழகத்தில் அக்காலத்தில் 327 நாடகங்கள் வெளிவந்ததாக ஒரு ஆய்வுக்குறிப்புண்டு. பெ.சு இத்தகைய நாடகங்களைப் படித்துள்ளார். லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி கதையின் தழுவலாகத் தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தைப் பெ.சு எழுதினார். பெ.சுவின் நாடகம் எளிமை, விறுவிறுப்பு, அமைப்பிற்காகப் பரவலாகப் படிக்கப்பட்டது. இந்நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடு பெ.சு எழுதவில்லை, வாசிப்பின்பத்திற்காகவே அதனை இயற்றியதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

வெண்பா, கலிப்பா, குறள் வெண்செந்துறை, வஞ்சிப்பா என்று பல்வேறு பாவினங்கள் விரவிவர இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலை தத்துவப் பின்னணியோடு பெ.சு படைத்தார். ‘இல்லறம், துறவறம், பக்தி ஞானம் முதலிய மோட்ச சாதனங்கள்’ பாத்திரங்களின் மூலம் உருவகப்படுத்தி இந்நாடகம் அமைந்தது.

Image result for சுந்தரம் பிள்ளை ncbh
இந்நாடகத்தில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி’ என்கிற வரி நூலில் இடம்பெறுகிறது. ‘பத்துப்பாட்டில் மனம் பற்றியவர் பிற நூற்களைப் பற்றமாட்டார்’ என்று பெ.சு சிலிர்க்கிறார். மனோன்மணியம் நாடகம் பல்வேறு பல்கலைகழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புக்கு உரியது.

ஆய்வறிஞர்:
கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப் பெ.சு. படியெடுத்து உள்ளார். ஆங்கிலத்தில் பத்துப்பாட்டு, திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார். பத்துப்பாட்டின் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ.சு மொழிபெயர்த்துள்ளார்.

திருவிதாங்கூர் வரலாறு கட்டுரையில் கொல்லம் ஆண்டு என்கிற வழக்கம் எப்படி வந்தது என்பதைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்து புதியதொரு பார்வையை முன்வைக்கிறார். அக்கட்டுரையில் சமூக நோக்கோடும் பெ.சு எழுதியுள்ளார். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆரியப்பண்பாடும், ஆரியருக்கு முந்தைய திராவிடப்பண்பாடும் இணைந்தே உள்ளன என்கிற பெ.சு கன்னியாகுமரி முதல் பறவூர் வரை பயணிக்கும் ஒருவன் பழம் திராவிட மரபைக் காணமுடியும் என்கிறார். திருவிதாங்கூர் பகுதியின் வேணாட்டு மன்னர்களின் காலத்தைப் பெருமளவில் துல்லியமாக முதலில் கணித்தவர் பெ.சு. சம்பந்தர் காலம் கட்டுரையில் அவரின் காலத்தைச் சமூகச்சூழல், சமூக வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெ.சு கண்டறிந்துள்ளார். ஆதி சங்கரரின் நூல்கள், மத்தவிலாச பிரகசனம் ஆகியவற்றைக்கொண்டு சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். ராஜராஜன் காலமே நம்பியாண்டார் நம்பி காலம் என்றும் வாதிடுகிறார்.

ராமாயணத்தின் சாதி குறித்துக் கூர்ந்து நோக்கிய பெ.சு. அது குறித்து வெ.சு. முதலியாரிடம் பேசினார். அதைக்குறித்து எழுதவுள்ளதாகச் சொன்னாலும் அதற்குள் அமரரானார். ஆகவே, பெ.சுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறித்துக் கட்டுரை வரைந்தார் வெ.சு.முதலியார். ‘அதில் ராமாயணம் ஆரியச்சார்புடையது. ஆரியர் என்பவர் தமிழ் பிராமணர், வட இந்திய சாதியர் சிலரைக் குறிக்கும் சொல். ஆரியர் அல்லாத அநாரியர் தென்னிந்தியக் குடிகள் ஆவர்.’ என்றதோடு, ‘பெண்ணைச் சிறைப்பிடித்தும் ராவணன் கொல்லவில்லை, திராவிடப்பெண்ணான சூர்ப்பநகையை லட்சுமணன் துரோகம் செய்தவன். விபீஷணன் என்ற திராவிடன் துரோகம் செய்தவன்; அதற்காக ஆழ்வார் பட்டம் பெற்றவன். ஆரியர்கள் திராவிடர்களை இழிவானவர்கள் எனச் சொல்லி நம்பும்படி ஆக்கிவிட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

உரைநடையாசிரியர்:
உரைநடையில், ‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற ஒரே நூலை எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு. இதைக்குறித்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில். ‘….சுந்தரம்பிள்ளை தன் நூலில் தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்களைத் தந்திருக்கிறார். வடசொற்களை விலக்கும் கருத்தே இவரிடம் கிடையாது. தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டுவன செய்தவர்களில் சுந்தரம் பிள்ளை தலைசிறந்தவர்’ என்று புகழாரம் சூட்டுகிறார்.

கவிஞர்,கட்டுரையாசிரியர்:
பெ.சு. ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார். ஒரு நற்றாயின் புலம்பல் மணமாக வேண்டிய தினத்தன்று இறந்து போன மகள் குறித்து அரற்றும் அன்னையின் அழுகுரல். பொதுப்பள்ளி எழுச்சி தத்துவ நோக்கோடு அறியாமைத் துயிலில் இருந்து எழுப்பிய இறைவனை நோக்கி பாடப்பட்டது. அன்பின் அகநிலை விவிலியத்தின் புனித பவுல் கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் பெ.சு எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Hobbes, the father of English ethics’. ‘Bentham, The Juristic Moralist’, ‘A scene from A Tamil play’, H.T.Wills முதலிய கட்டுரைகள் எழுதினார்.

தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தின் துவக்கத்தில்’தமிழ் மொழியின் இலக்கியங்களை அழியாமல் பாதுகாத்த திருச் சி.வை.தாமதோரன் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் ஆகிய இருவரையும் வணங்குகிறேன். கல்வி, கேள்வி, அறிவு முதலியவற்றால் சிறியவனாகிய நான் மனோன்மணியம் என்னும் நாடகத்தைப் படித்திருக்கிறேன்.’ என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார். உ.வே.சா மனோன்மணியத்தைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்படைப்பில் குறைகள் உண்டு என்றதை பெ.சு அறிந்தார். கடிதம் எழுதி குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்கவும் செய்தார். மேலும், திருவிதாங்கூர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வருமாறு உ.வே.சாவிற்கு அன்போடு அழைப்பு விடுத்தார்.

தமிழக அரசு அவரின் தமிழ்த்தெய்வ வாழ்த்தை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கியது. அவரின் மூலப்பாடலில், ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை’ என்கிற வரி வடமொழி வெறி நிலவிவந்த காலத்தில் எதிர்க்குரலாக ஒலித்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் உருவான போது, நாஞ்சில்நாடு தமிழர்க்கு உரியது என்று தன்னுடைய மனோன்மணியம் நூலில் பெ.சுந்தரனார் குறிப்பிட்டு இருந்தது கவிமணி, ஜீவா, ம.பொ.சிவஞானம் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டு இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

நாற்பத்தி இரண்டு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பெ.சுந்தரனாருக்கு அஞ்சலியாக அவர் உ.வே.சாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளே அமையக்கூடும்: ‘நம்மனையார் தேகநிலையைக் கருதும்போது இருதலைக்கொள்ளியினுள் எறும்பு என்றே உண்மையாய் எண்ண வேண்டியதாக இருக்கிறது. உழைத்தால் சரீர உபாதை துணிபாக நிற்கிறது. உழைக்காவிட்டால் சரீரமிருந்து என்ன பயனென்ற சோகமும் அப்படியே ஏது செய்ய? கடவுள் இச்சைபோல நடக்கட்டும்’

மிக முக்கியமான ஆளுமையின் பன்முகத்தன்மையை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது அறிஞர் அ.கா.பெருமாளின் இக்குறுநூல்.

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் -அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள்: 82
விலை: 70

கோவிந்தப்பா வெங்கடசாமி எனும் கண்ணொளி காத்த செம்மல்!


கோவிந்தப்பா வெங்கடசாமி அவர்களுக்கு இது நூற்றாண்டு..இளம் வயதில் அவருடைய மூன்று ஒன்று விட்ட சகோதரிகள் பிரசவத்தின் போது இறந்து போயிருந்தார்கள். மகப்பேறு மருத்துவராக ஆகிவிட வேண்டும் என்கிற கனவு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற பிறகு, ராணுவத்தில் சேர்ந்து மகப்பேறு துறையில் மேற்படிப்பை படித்துக்கொண்டிருந்தார். கடுமையான மூட்டுவலி (rheumatoid arthritis) அவரைத் தாக்கியது. இரண்டாண்டுகள் எழவே முடியாத நிலைமை. அப்படி மீண்டு வந்த போது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாண்டுகள் படுத்த படுக்கையாக இருக்க வைத்த மூட்டுவலியால் இனிமேல் கத்தி பிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்கிற நிலைமை.

துவண்டு போக வேண்டிய நிலைமை. டாக்டர் வெங்கடசாமி மனந்தளர்கிற ஆளில்லை. நீண்ட நேரம் கருவிகளைப் பிடிக்க வேண்டிய தேவையில்லாத கண் மருத்துவராக முடிவு செய்தார். கண் மருத்துவம் பயின்று முடித்த பிறகு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். அது விடுதலைக்குப் பிந்தைய ஆரம்பக் காலம். ஒருவருக்குக் கண் பார்வை மங்கினாலோ, கண்புரை ஏற்பட்டாலோ கிட்டத்தட்ட அது நடைப்பிண நிலைமை தான். அழைத்துச்செல்லும் அளவுக்கு ஏழைகளுக்கு ஏற்ற மருத்துவமனைகள் கிடையாது. வீட்டில் கண்பார்வை தெரியாமல் ஒரு ஓரமாக முடங்கிட வேண்டும். சாப்பாட்டை எடுத்துப்போட்ட தர ஆளிருக்க மாட்டார்கள். இப்படிப் பலர் கண்பார்வை போனதற்குப் பிறகு சீக்கிரமே உடல் நலிந்து, இறந்து போவதை வெங்கடசுவாமி கண்ணுற்றார்.

(இனிமேல் டாக்டர் வெங்கடசாமியை, ‘டாக்டர் வி’ என்றே அழைப்போம். ) நம்மைத்தேடி வர முடியாத ஏழைகளைத் தேடிப்போவோம் என்று முடிவு கட்டிக்கொண்டார் டாக்டர் வி. அப்படித் துவங்கியது தான் இலவச கண் சிகிச்சை முகாம்கள். ஊர் ஊராகப் போய்ப் பல பேரின் பார்வையை மீட்டுத்தந்தார்கள். அப்படி ஓயாமல் உழைத்தும் கையளவு பேரையே காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர் வி கண்டுகொண்டார். விலை குறைவான அனைவருக்குமான கண் மருத்துவமனையைத் துவங்கினால் என்ன என்கிற எண்ணம் ஓய்வு பெற்ற ஐம்பத்தி எட்டு வயதில் உருவெடுத்தது.

ஹார்வார்டில் இருந்த தங்கை நாச்சியார், அவருடைய கணவரை தோள் கொடுக்க அழைத்தார். வங்கிகள், நண்பர்களிடம் கடன் கேட்டார்கள். ‘சேவை செய்வதற்கு இந்த வயதான காலத்தில் கடனா?’ என்று ஏளனம் செய்தார்கள். கைவிரித்தார்கள். வீட்டில் இருந்த நகைகளை, வீட்டை எல்லாம் அடமானம் வைத்து சில கருவிகளோடு சகோதரர் ஸ்ரீனிவாசன் வீட்டையே மருத்துவமனை ஆக்கி பதினொரு படுக்கைகளோடு பயணத்தைத் துவங்கினார்கள். கட்டணம் தரக்கூடிய நோயாளிகளிடம் பணம் பெற்று ஏழைகளுக்கு மிகக்குறைவான செலவில் மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்கள். சீக்கிரமே நாச்சியாரின் கணவரும், சகோதரியும் குழுவில் இணைந்து கொண்டார்கள். அரவிந்த் கண் மருத்துவமனை கிளை பரப்ப ஆரம்பித்தது.

அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் போயிருந்த போது மெக்டொனால்ட் உணவகங்களை டாக்டர் வி கண்டார். அவருக்குள் அமெரிக்கப் பெருநிறுவனங்களின் பாய்ச்சல் ஒரு கேள்வியை எழுப்பியது. “மெக்டொனால்ட் பல கோடி பர்கர்களை விற்றுத் தீர்க்கிறது. கோககோலா பல கோடி குளிர்பானங்களை விற்பனை செய்கிறது. இவர்களால் முடியும் என்றால் என்னால் சில லட்சம் கண் பார்வை அறுவை சிகிச்சைகளைச் சாதிக்க முடியாதா?”. மெக்டொனால்ட்டின் ‘assembly line’ முறையை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தினார்.

ஒரே அறையில் வரிசையாகப் பல்வேறு மருத்துவர்கள் கண் நோயாளிக்குச் சிகிச்சை தந்தார்கள். கண் என்பது உள்ளே இருக்கும் உறுப்பு என்பதால் நோய் தொற்றுக்கான வாய்ப்புக் குறைவு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு சுகாதாரமான நடைமுறைகளோடு அதி விரைவாக அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்தார்கள். ஆண்டுக்கு நானூறு அறுவை சிகிச்சைகள் வரை செய்து கொண்டிருந்த மருத்துவர் இதனால் இரண்டாயிரம் அறுவை சிகிச்சைகள் வரை செய்வது சாத்தியமானது.

Image result for venkataswamy

இன்னொரு முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டது. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் மட்டுமே செவிலியர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்கிற நடைமுறையை மாற்றினார்கள். பத்தாவது முடித்திருந்தால் போதும். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நேர்முகம் நடத்தி பயிற்சிக்கு சேர்த்துக்கொள்வார்கள். இரண்டாண்டுகள் தீவிர பயிற்சிக்கு பிறகு ‘நடைமுறை அறிவு’ மிக்கச் செவிலியர்கள் தயார். இவர்களுக்குக் கை நிறையச் சம்பளம் தர முடியாது என்றாலும் கிடைக்கிற நிறைவு சொற்களில் அடங்காதது. ‘கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியை விட வேலை நிறைய, சம்பளம் கம்மி தான். ஆனா பஸ்ல போறப்ப எல்லாரும் அடையாளம் கண்டுப்பாங்க. அவ்ளோ மரியாதை கிடைக்கும். அன்பை பொழிவாங்க. எழுந்து நின்னு உக்காருமானு சொல்வாங்க. வேறென்ன வேணும்’ என்று பேராசிரியர் சி.கே.பிரகலாத்திடம் ஒரு செவிலியர் தெரிவித்தார்.

அடிப்படையான சோதனைகள், கவனிப்புகள் ஆகியவற்றைச் செவிலியர் வேகமாக முடித்து விடுவார்கள். பின்னர்த் துரிதமாக மருத்துவர்கள் இயங்கி அறுவை சிகிச்சையை முடிப்பார்கள். தற்சார்புள்ள நிறுவனமாக அரவிந்த் கண் மருத்துவமனை திகழ்கிறது. கையுறை, கருவிகள், மருந்துகள் என்று கிட்டத்தட்ட அனைத்துமே தானே தயாரித்துக் கொள்கிறது. 30% பணமுள்ள நோயாளிகளிடம் இருந்து பெறும் பணத்தைக் கொண்டு மிச்சமுள்ள சிகிச்சைகளை இலவசமாகவோ, மிகவும் மலிவாகவோ செய்ய முடிகிறது.

எடுத்துக்காட்டாகக் கண் அறுவை சிகிச்சைக்குப் பின்னர்ப் பொருத்தப்படும் Intraocular lens. இதன் விலை சில ஆயிரங்களில் இருந்தது. சில தொண்டு நிறுவனங்கள் கை கொடுத்தன. தானே தயாரித்து இருநூறு ரூபாயில் நோயாளிகளுக்குச் சிறந்த தரத்தோடு அரவிந்த் கண் மருத்துவமனை தர ஆரம்பித்தது.இன்றைக்கு மிகக்குறைந்த விலையில் இந்த லென்ஸ்கள் உலகின் 160 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதும் டாக்டர் வியின் வழியாக இருந்தது. வருகையாளர் அறை, மருத்துவர் அறைகள், வரவேற்பு அறை ஆகிய அனைத்தும் மிக எளிமையாக இருக்கும். ஆடம்பர அலங்காரங்கள் அறவே கிடையாது. ஆனால், மருத்துவச் சேவையில் துளியும் சமரசம் இல்லை. நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த தேவையான லாபத்தையும் தொடர்ந்து ஈட்டிக்கொண்டே இருக்கிறது.

‘கண்ணொளியின் மூலம் மக்களைப் பசி, பயம், வறுமையில் இருந்து விடுவிக்க இயலும். உடம்பை உறுதி செய்து, சிந்தனை, ஆத்மாவை முழுமையடைய வைக்க இயலும். கண் பார்வை மக்களின் சிந்தனை, செயல்பாட்டை உயர்த்த வல்லது’ என்றொரு பேட்டியில் நம்பிக்கை நிறையப் பேசினார் டாக்டர் வி. அவரின் விழி வேள்விக்காக இறுதி வரை அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. இந்தியாவில் கண் சிகிச்சை தேவைப்படுபவர்களில் 10% பேரே மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். மீதமுள்ளவர்களைக் கொண்டுவரும் கனவுப்பயணத்தைத் தொடர்ந்திட இன்னும் ஆயிரமாயிரம் அரவிந்த் கண் மருத்துவமனைகளும், சில நூறு டாக்டர் விக்களும் தேவை.

இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா?


சிறப்புக் கட்டுரை: இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா?

இளம் பெண்களின் தற்கொலைகளைத் தவிர்க்க முடியாதா

புதுக்கோட்டை துணை ஆட்சியர் சரயு மோகனசந்திரன்

நான் இங்குத் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. அப்போதிலிருந்து ஒவ்வொரு வரதட்சணை சாவும், ஆய்வும், விசாரணையும் ஏற்படுத்தும் வலி என் இதயத்தை ஓயாமல் ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இங்கே பொறுப்பேற்ற முதல் பத்து நாட்களில் மட்டும் ஐந்து சந்தேகத்துக்குரிய மரணங்கள்.

எந்தப் பெண்ணாவது தனக்குத் திருமணமான முதல் ஏழு வருடங்களுக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணம் அடைந்தால் அதனை விசாரித்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட துணை ஆட்சியருக்கு உண்டு. இப்படி ஒவ்வொரு முறை விசாரணை நடத்துகிற போதும், நான் உணர்ச்சிப் பெருக்கில் தத்தளிக்கிறேன். இந்தப் பணியில் ஈடுபடக் கிளம்புவதற்கு முன்பு, என் காதில் விழுந்த அறிவுரைகள் எல்லாம், ‘நீ ஒரு அதிகாரியாக உன் கடமையை நிறைவேற்றுகிறாய். அதனால் உணர்ச்சிவசப்படாமல் இரு.’ என்று நீண்டன. ஆனாலும், ஒவ்வொரு முறையும் ஒரு பிணவறையின் கதவருகே நிற்கையிலும் எனக்குள் பல்வேறு எண்ணங்கள் அலையடிக்கின்றன.

என்ன ஆயிற்று இந்தப் பெண்களுக்கு?

நான் நிம்மதியாகத் தூங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. காயத்ரியின் மரணம் IPC 174இன் கீழ் பதியப்படும் 12ஆவது வழக்கு. அவளுடைய வாழ்க்கை குறித்தும், அதன் நினைவுகள் ஏன் என்னைக் கலங்க வைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதைக் குறித்தும் பிறகொரு நாள் விரிவாகச் சொல்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டு, எனக்கு இந்த வழக்குகளில் தூண் போல உறுதுணை புரியும் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.ராம்குமாரை அழைத்தேன்.

மனதளவில் உடைந்துபோய், குரல் கம்ம அவரிடம், “இந்தப் பொண்ணுங்களுக்கு என்னதான் ஆச்சு டாக்டர்?” எனக்கேட்டேன்.

“எனக்குத் தெரியலை மேடம். உங்களைப் போலத் தான் நானும் திகைச்சு நிக்கிறேன்” என்றார் அவர்

நாங்கள் காயத்ரியின் மரணம் குறித்தும், அவளின் சாவை சுற்றிச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் குறித்தும் விரிவாகப் பேசினோம்.

“இதுக்கெல்லாம் எதாச்சும் பண்ண முடியுமா? கவுன்சிலிங் இல்லைனா விழிப்புணர்வு முகாம்கள் எதாச்சும்…” என்று இறுதியாகக் கேட்டேன்

என் கண் முன்னே அந்தப் பெண்களின் முகங்கள் நிழலாடின. இப்பெண்கள் என்னைவிட வயதில் இளையவர்கள். திருமணமாகி, பால் மணம் மாறாத பிஞ்சுகளின் அம்மாக்கள். இப்போது வாழ்க்கையை முடித்துக்கொண்டு விட்டார்கள். பிணவறையில் ஃபார்மலின் வாசனைக்கு இடையே நான் நடக்கிறேன். என் காதுகளுக்குள் வேறு யாருக்கும் கேட்காத குரல்கள் ஒலிக்கின்றன. அவை தங்களுக்கான நீதிக்கு இறைஞ்சும் கெளரி, ரேவதியின் குரல்கள். என் கனவுகளில் இவர்களின் மழலைகள் தங்களுடைய அம்மா இனி திரும்ப வரவே மாட்டார் என்று தெரியாமல் ஓலமிட்டு அழுகின்றன.

“நீங்க கவனிச்சீங்களானு தெரியலை மேடம். நாம பாத்த பெரும்பாலான கேஸ்களில் தற்கொலை முடிவை மாதவிடாய் (பீரியட்) சமயத்திலதான் பெண்கள் எடுத்திருக்காங்க” என்றார் டாக்டர்.

நான் விக்கித்து நின்றேன்.

“நான் பாத்த 90% கேஸ்களில், எந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டாங்களோ, அவங்க எல்லாரும் மாதவிடாய் காலத்தில் தான் இருந்திருக்காங்க. இப்படிப்பட்ட நேரத்தில அந்தப் பொண்ணுங்களுக்கு என்னலாம் ஆகுதுன்னு யாருக்காச்சும் புரியுது, தெரியுதுன்னு எனக்குத் தோணலை. இந்த நேரத்தில் எல்லாம், கோபம் ரொம்பப் பொத்துகிட்டு வரும், அது போக ஒரே விரக்தியா இருக்கும். இது எல்லாத்தை விடக் கொடுமை என்ன தெரியுமா? அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க இது எதையும் புரிஞ்சுக்காம உயிரை எடுப்பாங்க. இதனால் மனசு உடைஞ்சு போயிடும். நாம பாத்த பெரும்பாலான தற்கொலைகளில் அப்போதான் அவங்களுக்குக் குழந்தையே பிறந்திருக்கு. பிரசவத்துக்குப் பின் ஏற்படுற மனச்சோர்வு பத்தி நமக்கு யாருக்கும் புரிஞ்சுருக்கானே தெரியல.” என்றார் டாக்டர்.

மாதவிடாய் தரும் மனச்சுமைகள்

இங்கே தான் நம் அனைவரும் தோற்றுப்போயிருக்கிறோம். நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும், கட்டுப்பாடுகளும் மாதவிடாய், அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம், புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது. இதனால், எதைக் குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ, அது குறித்துப் பேச மறுக்கிறோம். இந்த மாதவிடாய் நாட்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் வேதனை சொல்லி மாளாது. மாதவிடாய் நெருங்கும்போது, மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள் குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை. பள்ளிக் காலத்தில் எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், மாதவிடாய் தலைப்பை எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்தார். வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று ஒரு பெரிய பாடப்புத்தகத்தின் இன்னுமொரு பக்கமாக முடிந்து போனது.

இதைப் புரிந்துகொள்ளாமல் போனதற்காக எல்லா ஆண்களையும் நான் நிச்சயம் குறை சொல்ல மாட்டேன். தங்களுடைய அம்மாக்கள், தங்கைகள், தோழிகள் என்று பலரின் சீற்றத்தை இந்த மாதவிடாய் நாட்களில் எதிர்கொள்கிறார்கள். அப்பெண்களால் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை எதிர்கொள்ள ஆண்களாலும் முடியாமல் போகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று அந்த ஆண்கள் கேள்வி கேட்கிறபோது, நம்முடைய மனமும், உடலும் என்ன பாடுபடுகிறது என்று சொல்லாமல் அவர்களைக் கடுமையாகப் புறக்கணிக்கிறோம். இப்படி அதீதமான சிக்கல்கள் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், அப்படி ஏற்படுகிற போது அது குறித்து மனந்திறந்து பேசுவது முக்கியமானது. அப்போது தான் நம்மை இன்னமும் முதிர்ச்சியோடு நடத்தும் சமூகத்தைக் கட்டமைக்க முடியும். என்னுடைய குடிமைப்பணி தேர்வு தயாரிப்புக் காலங்களில் தான், இந்தக் காலங்கள் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்து கொண்டேன்.

உங்களுடைய அன்னையை, சகோதரியை, தோழியை இன்னமும் ஆழமாக, தெளிவாகப் புரிந்துகொள்கிறபோது அவர்களை மென்மேலும் நேசிக்க முடியும். அவர்களின் இயல்பான நடத்தை மாறி, அவர்கள் அடக்க முடியாத கோபத்தைக் கொட்டும்போது அவர்களின் ஹார்மோன்கள் உயிரை வதைக்கின்றன என உணர்ந்துகொள்ளுங்கள். நாம் மனந்திறந்து, “நான் மாதவிடாய் காலத்தில (பீரியட்ஸ்ல) இருக்கேன். எனக்குச் சட்டுன்னு கோபம் வருது, பட்டுன்னு சோகமாயிடுறேன்” என்று சொல்வதால் நம்மை யாரும் துளிக்கூட மரியாதைக் குறைவாக நடத்தப்போவதில்லை.

கருப்பையில் பல கட்டிகள் தோன்றுவது, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மனசிதைவுகள் குறித்துப் போதுமான விழிப்புணர்வை ஆண்கள், பெண்கள் இருவரிடமும் ஏற்படுத்த வேண்டும். நம் அனைவருக்குமான சமூகத்தை அப்படித்தான் வளர்த்தெடுக்க முடியும். பெண்களாக, இந்த ஆண்களிடம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கூச்சப்பட வேண்டாம். என்னை நம்புங்கள். ஒவ்வொரு ஆணும்- தகப்பனும், தமையனும், தோழனும் அளவற்ற அன்போடு உங்களுக்குத் தோள்தரவே விரும்புவார்கள்.

தமிழில்: பூ.கொ.சரவணன்

அறம் திரைப்படம் பேசும் அரசியல்


அறம் திரைப்படத்தின் அதிர்வுகள் அகல்வதற்கு முன்பு இப்பதிவை எழுதுகிறேன். அரசியலமைப்பின் அறம் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் என்று அம்பேத்கர் கனவு கண்டார். (‘Constitutional morality’ குறித்த அறிமுகத்திற்குக் காண்க http://www.india-seminar.com/2010/615/615_pratap_bhanu_mehta.htm) ஆனால், அரசும், ஆள்வோரும், அதிகாரிகளும் கடைக்கோடி மக்களின் கண்ணீரை துடைப்பதை எந்தளவுக்குச் சாதித்திருக்கிறார்கள் என்பதைக் கூராய்வு செய்கிறது அறம் திரைப்படம்.
சமீபத்தில் பணமதிப்பு நீக்கம் குறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் கேபினட் செயலாளர் T.S.R.சுப்ரமணியம் இந்தியாவில் உயிர்கள் போவது இயல்பான ஒன்று, நீண்ட காலத்தில் பணமதிப்பு நீக்கத்தால் வரும் பயன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனப் பேட்டி தந்திருந்தார். மனித உயிர்கள் இந்த நாட்டில் எத்தனை மலிவானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்படத்தைக் காண்கையில் உணர்ந்து உறைந்து போவோம். போர்வெல் மரணங்கள் திரையில் ஏற்படுத்தும் பதைபதைப்புச் செய்தித்தாளில் மலக்குழியில் விழுந்து இறக்கும் துப்புரவு தொழிலாளர்களின் மரணங்கள் ஏன் நமக்கு ஏற்படுவதில்லை எனப் படம் பார்க்கையில் தோன்றியது.
மக்களிடம் வாக்கு கேட்க வருகையிலே தெரியாத தூரம் ஏன் அவர்களின் கண்ணீரை போக்க முனையும் போது தப்பிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சட்டங்கள் மக்களின் நலன் சார்ந்ததாக, அரசியலமைப்பின் கனவுகளைக் காப்பதாக இல்லாமல் ஏன் வழி தவறுகின்றன? மக்களின் வலிகளைப் போக்க தடையாகச் சட்டத்தையே ஆயுதமாக்கும் வழிதவறல் குறித்த சுயபரிசோதனை எப்போது ஏற்படும்? அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமல், தொழில்நுட்பங்கள் தொலைதூரக்கனவுகளைத் துரத்தும் என்றால் அதன் கௌரவம் யாருக்கானது? தங்களைத் தவிக்க விடும் தேசத்தின் மீது பக்தி கொள்ளக் கடைக்கோடி மக்களுக்கு என்ன தேவை?
Image result for அறம்
சொகுசு வாகனங்களில் செல்வோரின் பிள்ளைகளின் கல்வி குறித்தும், அன்றாட வாழ்க்கை குறித்தும் பெரிதும் கவலைப்படும் அதிகார வர்க்கம் விளிம்புநிலை மக்களின் பிள்ளைகளுக்கும் வாழ்வும், கனவுகளும் உண்டென உணராமலேயே ஏன் காலந்தள்ளுகிறது? அரசியல் என்பது தேர்தல் வெற்றிகளோடு முடிந்து விடுகிறதா? வெற்றிகளைப் பெற்றுத்தருபவர்களைக் காப்பது தான் அரசியலை செலுத்தும் அச்சு என்றால் அறம் எங்கே? சமத்துவமின்மையின் வன்முறையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இப்படிப் பல கேள்விகளைப் பதைபதைப்பு மிக்கக் கதை சொல்லலின் மூலம் அறம் சாதித்திருக்கிறது. இயக்குனர் கோபிக்கு வாழ்த்துகள். இப்படிப்பட்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாராவுக்குப் பூங்கொத்து.
அதிகாரிகளை முழுக்க நல்லவர்கள் போலவும், அரசியல்வாதிகள் தவறுகளின் முழு உருவம் போலவும் இருமை இந்தக் கதை சொல்லலில் கடத்தப்படுகிறது. அது அப்படியில்லை என்பதை உணர வைக்காமல் போகையில் அரசியல் சார்ந்த அணிதிரட்டல், சக மனிதருக்கான சம மதிப்பு, மரியாதை என்கிற கனவு பொன்னுலகக் கனவாகவே நின்று விடும். அரசியலில் தான் ஆழமான மாற்றங்களுக்கான வித்து இருக்கிறது என உணர வைக்கிற அறம் அனைவரும் காணவேண்டிய படம்.

பெரியார் – நூல்கள், கட்டுரைகள், புத்தகங்கள்


 பெரியாரின் பிறந்தநாள் இன்று.
தமிழகத்தின் சமூக, அரசியல் பரப்பை மாற்றிப்போட்ட தந்தை பெரியார் எனும் பேராளுமையை புரிந்து கொள்ள, அவரின் சிந்தனைகள், செயல்பாடுகள், தாக்கம் குறித்து உணர இந்த பட்டியல் உதவும். இதில் மின்னூல்கள், ஆங்கில கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என அனைத்தும் அடக்கம்.

*பெரியாரைப் புரிந்துகொள்வோம்*
Image may contain: 1 person, sitting
*Understanding Periyar*

————————–

*நூல்கள்*

பெரியார் இன்றும் என்றும் – விடியல்
https://goo.gl/jrKQRT

பெரியார்: சுயமரியாதை சமதர்மம் – எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா – விடியல்
https://goo.gl/gKbDoS

பெரியார் – அ.மார்க்ஸ்
https://goo.gl/pGHfyU

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- ஆனைமுத்து தொகுப்பு – http://dvkperiyar.com/?page_id=17544

பெரியார் மின்னூல்கள் பெருந்தொகுப்பு:http://dvkperiyar.com/?page_id=17518

இதில் சில நூல்களின் சுட்டிகள் கிடைக்கும்
https://goo.gl/KuyrRA

————————–

*எளிய அறிமுகத்திற்கு சில கட்டுரைகள்*

பெரியார் என்றொரு கலகக்காரர் – கே.ஏ. அப்பாஸ்
https://goo.gl/m1f3Ci

ஏனெனில், அவர் பெரியார்! – ப.திருமாவேலன்
https://goo.gl/x23CQ8

பெரியார் எனும் கல்வியாளர்! – பூ. மணிமாறன்
https://goo.gl/fkH6V5

பெரியார் களஞ்சியம் – https://goo.gl/JZFP6C

புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்! (Translation of Sunil Khilnani’s ‘Sniper Of Sacred Cows’)
https://goo.gl/BKDYfX

Sniper Of Sacred Cows – Sunil Khilnani
https://goo.gl/bg5zEj

‘Periyar was against Brahminism, not Brahmins’ – Gnana Rajasekharan IAS
https://goo.gl/RGdujg

Why Periyar would have led today’s ‘anti-nationals’ – Manu S Pillai
https://goo.gl/JboJq9

Ambedkar and Periyar’s intellectual comradeship – V. Geetha
https://goo.gl/3vRHRE

A Lesson from Periyar on the Tension Between Elections and Social Transformation – A.R. Venkatachalapathy
https://goo.gl/oFjgsu

Footprints Of The Original ‘Anti-Nationals’ – A.R. Venkatachalapathy
https://goo.gl/5QhTZ9

Iconoclast, Or Lost Idol? – S. Anand
https://goo.gl/rBgKN4

*Interview with S.V. Rajadurai and V. Geetha:*

Part 1: Periyar’s ideals and today’s Tamil Nadu
https://goo.gl/mKowXz

Part 2: Periyar and Dalits
https://goo.gl/r684rn

Part 3: Ambedkar and Gandhi in Periyar’s mind
https://goo.gl/QdDLKX

———————————–

*பரந்துபட்ட புரிதலுக்கு*

காந்தியின் மறைவு குறித்து பெரியார்
http://on.fb.me/1eOPGj5

பெரியார் – தமிழ் எழுத்து சீர்திருத்தம்
http://on.fb.me/19xGD97

சினிமா, நாடகம் – பெரியார்
http://on.fb.me/16sdQ3w

பெரியார் – ஜெயகாந்தன்
http://on.fb.me/1cSbvS1

Periyar on the Constitution
http://on.fb.me/19xMefv

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
http://on.fb.me/1b8vE2V

குடிஅரசு தொகுப்பு 1925- 1938
http://bit.ly/1cKzbJ4

பெரியார் களஞ்சியம் பெரியார் சிந்தனைகள்
http://bit.ly/14SBkMY

பெரியார் – போஸ்
http://on.fb.me/1ackNaq

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள்
http://on.fb.me/14n5wwe

பெரியாரின் மரண சாசனம்
http://on.fb.me/1b8vE2V

பெரியார்: கடவுள் மறுப்பு ஒரு விளக்கம்
http://on.fb.me/14IGbfx

காமராசர் – பெரியார்
http://on.fb.me/16VAq2T

பெரியார் பெயர் வந்தது எப்படி?
http://on.fb.me/1cUfzBk

பெரியார் பிற மதங்களை விமர்சிக்கவில்லையா?
http://on.fb.me/15lCcFU

புத்தர் – பெரியார்
http://on.fb.me/17TJVwL

குருகுலப் போராட்டம்
http://on.fb.me/12cB9uT

நேரு – பெரியார் கார்ட்டூன்
http://on.fb.me/17TKczA

சூத்திரர்கள்
http://on.fb.me/1eRmRm1

இலங்கை உபன்யாசம் குடி அரசு 20.11.1932
http://on.fb.me/14Y2WQX

வன்னியர் சங்க மாநாட்டில் பெரியார்
http://on.fb.me/16ZZ9TH

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
http://on.fb.me/16CXsx9

சாதி ஒழிப்புக்கு பெரியார் தரும் திட்டங்கள்
http://on.fb.me/1cUh9UQ

பட்டியல் சாதி – பெரியார்
http://on.fb.me/17Y5XhJ

Ambedkar’s Resignation
http://on.fb.me/16WQM9w

பெரியாரும் – மதுவிலக்கும்
http://on.fb.me/13UzJD9

கீழவெண்மணி
http://on.fb.me/1dxmUFL

முதுகுளத்தூர் கலவரம் – பெரியார்
http://on.fb.me/13UAnjT

விநாயகர்சதுர்த்தி – பெரியார்
http://on.fb.me/1atyG5m

பறைச்சி-ரவிக்கை
http://on.fb.me/15QEbaa

மகாத்மா என்கின்ற பட்டத்தை நீக்குதல்
http://on.fb.me/15odTsq

காந்தியின் கடவுள்
http://on.fb.me/18Rx5Vx

இந்திய அரசியல் சட்டத்தின் ‘முதல்’ – திருத்தம்
http://on.fb.me/18myzTN

ஜகதீச சந்திரபோஸ் காந்தியின் விரோதியா?
http://on.fb.me/18myBLl

காரைக்குடி ஜில்லா முதலாவது அரசியல் மகாநாடு
http://on.fb.me/18RxKpU