வாக்களிப்பதும், அடித்தட்டு மக்களுக்கு உழைப்பதும் நம் நாட்டின் கடமை!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கறுப்பின மாணவர்கள் நிரம்பிய ஹோவார்ட் பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கமான எழுத்து வடிவம்:
மேன்மைதாங்கிய அவையினரோடு இந்த நாளை கொண்டாட வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். இந்த வருடம் பட்டம் பெறும் மாணவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நான்கு வருடங்களுக்கு முன்னால் நான் மறுபடியும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரவில் நீங்கள் என் வீட்டுக்கு அருகே வந்து கொண்டாடித் தீர்த்தீர்கள். அதற்குக் கைம்மாறு செலுத்தவே நான் இன்றைக்கு இங்கே வந்துள்ளேன்.
உங்களுடைய குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என்று உங்களை ஊக்குவித்த, உதவிசெய்த அனைவருக்கும் உரிய நன்னாள் இது. அவர்களுக்குக் கரவொலி எழுப்பி உற்சாகம் ஊட்டுவோம்.
நீங்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறீர்கள் என்று நான் அறிவேன். சிலர் களைத்துப் போயிருப்பீர்கள். சிலர் உங்கள் சான்றிதழ்கள் சரியாக இருக்கிறதா எனப் பரிசோதிப்பீர்கள்… எப்படியிருந்தாலும், நீங்கள் இந்த உன்னதக் கணத்தை அடைந்திருக்கிறீர்கள். அதற்குக் கடுமையான உழைப்பினை நீங்கள் செலுத்தியதை நினைவுகூர்கிறேன். சவால்மிகுந்த வகுப்புகள், உற்சாகம் தரும் ஆடுகளங்களில் அடித்து ஆடுவது, சமூகசேவைகள் செய்வது, பயிற்சிப்பணிகளில் சேர்வது, ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வேலைகளைப் பெறுவது, வாழ்நாளுக்கும் வரும் நண்பர்களைப் பெறுவது, எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் யார் என்பதைக் கண்டடையும் அற்புதம் எந்த ஹோவார்ட் பல்கலையில் நிகழ்ந்திருக்கிறது.
ஹோவார்ட் பல்கலையின் நீண்ட நெடும் பட்டதாரிகள் பட்டியலில் இணைந்திருக்கிறீர்கள்., சில பட்டதாரிகள் மேடையிலும், சிலர் கீழேயும் இருக்கிறார்கள். அடிமைமுறை ஒழிப்புச் சாசனம் அறிவிக்கப்பட்ட நான்கு வருடத்தில் ப்ரீட்மான் தலைமையிலான துறை இந்த ஹோவார்ட் பல்கலை உருவாக்கப்பட்டது. அது உள்நாட்டுப் போர் நிகழ்ந்து இரண்டு வருடங்களே ஆகியிருந்த சூழலில் எழுந்து நின்றது. இந்தப் பல்கலையை அடித்தட்டு மக்களைத் தலைநிமிரச் செய்யும் தலைநோக்கோடு உருவாக்கினார்கள். இங்கே அமெரிக்காவின் குடிமகன்களின் தலையெழுத்தை அவர்களின் இனம், பாலினம், மதம், மொழி ஆகியவற்றால் நிர்ணயிக்காமல் அமெரிக்கர்கள் எல்லா வகையிலும் விடுதலை ததும்பும், தங்களின் தனிப்பட்ட, கூட்டுக்கனவுகளைத் துரத்தும் மகத்தான தொலைநோக்கோடு இந்தப் பல்கலை ஏற்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் வரலாறு, ஆப்ரிக்க அமெரிக்க அறிவுலக வாழ்க்கையின் மையப்புள்ளியாக ஹோவார்டை மாற்றியது இந்த உன்னதத் தொலைநோக்கே ஆகும். முதல் கறுப்பின நோபல் பரிசு பெற்றவர், முதல் கறுப்பின உச்சநீதிமன்ற நீதிபதி ஆகிய பலர் இங்கே இருந்தே வந்திருக்கிறார்கள். இந்த முதல் சாதனையாளர்களோடு அந்த வெற்றிக்கதைகள் முடிந்துவிடக்கூடாது என்கிற தீர்க்கமான இலக்கு அதற்கு உண்டு. எண்ணற்ற அறிஞர்கள், வல்லுனர்கள், கலைஞர்கள், தலைவர்கள் பலர் இங்கே தான் தங்களைச் செதுக்கி, சீரமைத்துக்கொண்டு வெளிப்பட்டார்கள். இங்கே இந்தப் பாதையில் நடந்த பல தலைமுறை ஆண்களும், பெண்களும் அரசை சீர்திருத்தினார்கள்,சமூக உரிமைகளை முன்னெடுத்தார்கள், நம்முடைய கலாசாரத்தை வடிவமைத்தார்கள். நம்முடைய மாற்றத்துக்கான விதை இங்கே விதைக்கப்பட்டது. அந்தப் பெருங்கதையை நான் நினைவுகூர விரும்புகிறேன்…
நான் கல்லூரியை விட்டு வெளியேறி 33 வருடங்கள் ஆகிவிட்டது. அந்தக்காலத்தில் நியூயார்க் நகரம் குற்றங்களால், சீரழிவால், திவாலாகும் சூழலில் சிக்கிக்கொண்டு தவித்தது. பல நகரங்கள் அதே நிலையில் இருந்தன. பொருளாதாரத் தேக்கம், வெளிநாட்டு கச்சா எண்ணெயின் கொடுங்கரம், பொருளாதார மந்தநிலை ஆகியவை 11% வேலைவாய்ப்பை காலி செய்தன. வாகனத்துறை முழுக்க வெளிநாட்டு நிறுவனங்களால் துடைக்கப்பட்டன. நான் கல்லூரியை விட்டு வெளியேறிய வருடத்தில் இருந்து ஏழ்மை சதவிகிதம் வீழ்ந்து இருக்கிறது, கல்லூரிகளில் பட்டம் பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, நகரங்கள் மறுமலர்ச்சியைக் கண்டன, குற்றங்கள் குறைந்தன. அதிகளவில் பெண்கள் பணிகளில் இணைந்தார்கள். அவர்கள் அதிகமான ஊதியமும் பெற ஆரம்பித்தார்கள். பள்ளியைவிட்டு வெளியேறும் ஆப்ரோ-அமெரிக்கர்களின் எண்ணிக்கை 6௦% அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. நான் கல்லூரியை விட்டு வெளியேறிய காலத்தில் ஆப்ரோ-அமெரிக்கர்களில் பத்தில் ஒருவரே கல்லூரியில் பட்டம் பெற்றார்கள். இப்பொழுது அந்த எண்ணிக்கை இருபது சதவிகிதமாக மாறியிருக்கிறது. தற்போது இருக்கும் கறுப்பினத்தவர்களில் பாதிப் பேர் தங்களின் பெற்றோர்களை விட மேலான வாழ்க்கை வாழ்கிறார்கள்,. அவர்களின் பிள்ளைகள் இன்னமும் மேலான வாழ்க்கையைப் பெறுவார்கள் என அவர்கள் உறுதியாக எண்ணுகிறார்கள்.
ஆகவே, அமெரிக்காவும், உலகமும் மேம்பட்டு இருக்கிறது. பெர்லின் சுவர் விழுந்திருக்கிறது. இரும்புத்திரை கிழித்து எறியப்பட்டுள்ளது. அருவருப்பைத் தரும் நிறவெறி தென் ஆப்ரிக்காவில் ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு தலைமுறை அமைதியை மட்டுமே கண்டு வளர்ந்தது. மண உரிமையை ஒரே பாலினத்தில் உள்ளவர்களுக்கும் வழங்கிய நாடுகளின் எண்ணிக்கை ஒன்றில் இருந்து இருபத்தி நான்காகக் கூடியிருக்கிறது. அதிக மக்கள் ஜனநாயக நாடுகளில் வாழ்கிறார்கள். நூறு கோடி மக்கள் கொடிய வறுமையைவிட்டு மீட்டெடுக்கப்பட்டு உள்ளார்கள். குழந்தைகள் மரண விகிதம் உலகம் முழுக்கப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மேம்பட்டுள்ளது. உலகம் செம்மையாக மாறியிருக்கிறது. நான் பட்டம் பெற்ற காலத்தைவிட இன உறவுகள் மேம்பட்டு இருக்கிறது. அதுவே உண்மை. என்னுடைய வெற்றி நிறவெறிக்கு பிந்தைய சமூகத்தைத் தலைகீழாக மாறியதாகச் சொல்லப்படுவது உண்மையில்லை. அப்படிச் சொல்பவர்கள் தவறான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வெற்றி நம்முடைய மனப்போக்கு எப்படி மாறியிருக்கிறது என்பதைப் புலப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமே ஆகும்.
நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற உடன் ஆற்றிய உரையில், அறுபது வருடங்களுக்கு முன்னால் வாஷிங்கடனில் என்னுடைய தந்தைக்கு எந்த உணவகத்திலும் உணவு பரிமாறப்பட்டு இருக்காது என்பதை நினைவுபடுத்தினேன். டாப் ஐநூறு நிறுவனங்களின் சி.இ.ஓவாக எந்தக் கருப்பினததவரும் அப்பொழுது இருக்கவில்லை. மிகக்குறைவான கறுப்பினத்தவரே நீதிபதிகளாக இருந்தார்கள்… ஆனால், இப்பொழுது மைக்கேல் ஜோர்டான் வெறுமனே உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரராக மட்டும் ஜொலிக்கவில்லை. அவர் ஒரு அணியின் உரிமையாளராக உள்ளார். அரிதிலும் அரிதாகக் கறுப்பின நாயகர்கள் திரையில் தோன்றினார்கள். ஹிப் ஹாப், ராப் ஓரமாக எழும்பிய சலனங்களாகப் பார்க்கப்பட்டன. இப்பொழுது நாங்கள் உங்களை மகிழ்விப்பவர்கள் மட்டுமல்ல, நாங்கள் தயாரிப்பாளர்கள். ஸ்டுடியோ முதலாளிகள். நாங்கள் சி.இஓக்கள், மேயர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமெரிக்காவின் ஜனாதிபதிகள்.
வெள்ளையின-கறுப்பின மக்களிடையே வேறுபாடுகளே இல்லை என்று சொல்லமாட்டேன். அவை நிச்சயம் உள்ளன. சமத்துவமின்மை இன்னமும் உள்ளது. அதைக்குறித்து நான் நிச்சயம் பேசுவேன். அதே சமயம், நாம் எத்தகு மகத்தான தருணத்தில் நிற்கின்றோம் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். நீங்கள் கடந்த நூறு ஆண்டுகளில் எந்தப் பகுதியில் வாழ விரும்புகிறீர்கள் என்கிற வாய்ப்பே அது. உங்களின் நிறம், இனம், தேசம், பாலினம், பாலுறவு பண்பு ஆகியவை எப்படி இருக்கும் எனத்தெரியாமலே வாழ்வதற்கு ஒரு மகத்தான கணத்தைத் தேர்வு செய்ய விரும்பினால் அவை நூறு வருடங்களுக்கு முன்னாலோ, ஐம்பது, அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னாலோ நிச்சயம் இல்லை. லோரைன் ஹான்ஸ்பெரி வார்த்தைகளில்,’ இளமைத்துடிப்பு, வாய்ப்புகள், கருப்பு நிறம்’ கொண்டவராக நீங்கள் வாழ உகந்த தருணம் இதுவே.
இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம் மாற்றத்தை நாம் உணரவேண்டும். நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை மறுதலிப்பது நீதியின் வெற்றிக்கு உதவாது, நமக்காகப் போராடிய மகத்தான மக்களின் நினைவுக்கு அது பெருமையல்ல. நாம் கொண்டாடித்தீர்க்கும் மகத்தான தலைவர்கள் மட்டுமல்ல, உங்களின் அப்பா, அம்மா, பாட்டன், முப்பாட்டன் என நீதியை நோக்கி நடைபோட்டு, துயருற்று, பாரம் சுமந்து, அவற்றைக் கடந்து இந்தக் கணத்துக்கு அழைத்து வந்திருக்கும் அவர்களும் மெச்சத்தகுந்தவர்கள். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று அகமகிழ்வதற்கு இதை நிச்சயம் சொல்லவில்லை. நீங்கள் களத்தில் இறங்கி செயலாற்ற வேண்டும் என்பதற்காக இதனைச் சொல்கிறேன். இந்தத் தேசம் இந்தப் பாணியை நீங்கள் உற்சாகமும், உத்வேகமும் ததும்ப எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. இன்றைய தினத்தைக் கொண்டாடுங்கள், நீங்கள் கடக்க வேண்டிய தூரமும், செய்ய வேண்டிய பணிகளும் நெடியவை.
நம் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என்பது உண்மைதான். என்றாலும், நம் மக்களில் பலர் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சி நிலவுகிற சம்பாதிக்க முடியாமல் அல்லல் படுகிறார்கள். பலர் ஓய்வுக்குப் பிறகு கவலையின்றி வாழ சேமிக்கப் பணமின்றித் தவிக்கிறார்கள். பொருளாதார வாய்ப்புகளில் இரண்டு இனங்களுக்கு இடையேவும் பெருத்த இடைவெளி உள்ளது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை 5%, கறுப்பினத்தவர்களிடையே இது 9%. வெள்ளையின பிள்ளைகள், பெண்களை விடக் கறுப்பின பிள்ளைகள், பெண்கள் பள்ளி, கல்லூரியைவிட்டு குறைவாகவே தேர்வு பெறுகிறார்கள். ஒரு வெள்ளையின ஆண் பெறுகிற சம்பளத்தில் 66% சதவிகிதம் மட்டுமே அவருக்கு இணையாக உழைக்கும் கறுப்பின பெண் பெறுகிறாள்.
நீதி பரிபாலனத்திலும் பெரும் இடைவெளி இருக்கிறது. கறுப்பின ஆண், பெண் குழந்தைகள் குறைவாக நிதி பெறும் பள்ளிகளில் துவங்கி நிரம்பி வழியும் சிறைகளைக் கடக்கிற கொடிய சூழலை எதிர்கொள்கிறார்கள். நான் கல்லூரி படிக்கிற காலத்தில் ஐந்து லட்சம் அமெரிக்கர்கள் சிறையில் இருந்தார்கள். இப்பொழுது 22 லட்சம் மக்கள் சிறைச்சாலைகளில் உள்ளார்கள். நீங்கள் கருப்பினத்தைச் சேர்ந்தவராக இருந்தால் நீங்கள் கம்பி எண்ணும் வாய்ப்பு ஒரு வெள்ளையின ஆணைவிட ஆறுமடங்கு அதிகம்.
உலகம் முழுக்க நோய், போர்கள், தீவிரவாதம், பருவநிலை மாற்றம் என்று பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்றன. ஆகவே, அன்புமிக்க என் செல்வங்களே, நீங்கள் பெரும்பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இவை மிகக்கடுமையானதாக, அடைய முடியாததாகத் தோன்றினாலும் இவற்றை எதிர்கொள்ள மற்ற எந்தத் தலைமுறையைவிடவும் மேலான இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். வரலாற்றைப் புரட்டிப்போட உங்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.
இவற்றை எப்படிச் செய்வீர்கள், எப்படி இந்தச் சவால்களைச் சந்திப்பீர்கள், எப்படி மாற்றத்தை சாதிப்பீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். என்னுடைய தலைமுறை மற்ற எந்தத் தலைமுறையைப் போலவும் தன்னுடைய சொந்த அனுபவத்தில் உழல்கிறது தன்னுடைய சொந்த மனச்சாய்வுகளுக்கு ஏற்ப எங்களின் முதலீடுகளை மேற்கொள்கிறோம். எங்களுடைய வழிமுறைகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறோம். ஆனால், முந்தைய தலைவர்களான நாங்கள் கற்றுக்கொண்ட சில பாடங்கள் உங்கள் பயணத்தில் பயன்தரக்கூடும். உங்களின் தலைவிதியை, கூட்டு எதிர்காலத்தை எப்படி நீதி, சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றால் நிரம்பிய ஒன்றாக மாற்றமுடியும் என்பதற்குச் சில வழிகளைப் பரிந்துரைக்கிறேன்.
முதலாவதாக உங்களின் பாரம்பரியத்தில் அவமானம் கொள்ளாதீர்கள். அதைப்பற்றிப் பெருமைப்படுங்கள். உங்கள் கருப்பு நிறத்தில் ஊக்கமுடையவராக இருங்கள். என் காலத்தில் இருந்து இந்தக் காலத்துக்குள் நம் நாடு கருப்பாய் இருப்பது ஒன்றும் குற்றமில்லை என்பதை உணர்ந்திருக்கிறது. நான் உலகின் தலைவர்களோடு உணவருந்த நேரிடுகிறான் பொழுது என்னுடைய அடையாளங்கள் சார்ந்து தடைகள், இடர்ப்பாடுகள், முன்முடிவுகள் அவர்களிடம் துளியும் தென்படுவதில்லை.
இந்த ஹோவார்ட் பல்கலையை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பல்கலை எவ்வளவு பன்மைத்தன்மையால் நிரம்பியது என் நீங்கள் அறியமாட்டீர்கள். சிலருக்கு ஐயோவாவிலும் கறுப்பின மக்கள் இருக்கிறார்கள் என்பதே அதிசயமாக இருந்திருக்கும். உங்களின் நண்பர்கள் பெருநகரங்கள், ஊரகச் சமூகங்கள், ஏன் கடல் கடந்து கற்க வந்திருக்கிறார்கள். உங்களைப்பற்றிய சகல கற்பிதங்களையும் அடித்து நொறுக்குகிறீர்கள். நன்றாகக் கற்ற குடும்பங்களில் இருந்து சிலர் வந்திருக்கிறீர்கள். சிலர் உங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாகச் சாதித்து இருக்கிறீர்கள். நீங்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறீர்கள். வெவ்வேறு வகையில் உடுத்துகிறீர்கள். உங்கள் ரசனைகள் வேறுபட்டவை.
நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கலாம் , ஒரு கம்பெனியை ஆரம்பிக்கலாம். அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கலாம், அரசியல்வாதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்புகளை நடத்தலாம். புத்தகங்கள் எழுதி தேசிய விருதுகளை அள்ளலாம். உங்களுடைய தனித்த பாணியை, தனித்த அழகின் அளவுகோலை, உங்களுக்குப் பிடித்த வகையில் உங்களின் பாலினத்தை அமைத்துக்கொள்ளலாம்.
உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்யுங்கள். என் மகள்கள் என்னிடம் சொல்வதைப் போல. ‘நீங்கள் நீங்களாகவே இருங்கள், அப்பா!’. சமயங்களில் என் மகள் ஷாஷா வேறு வகையில், ‘நீங்கள் செய்வதைச் செய்யுங்கள் அப்பா’ என்கிறாள். நீங்கள் கருப்பினத்தவர் என்பதால் நீங்கள் சாதிக்கிற ஒவ்வொன்றும் கறுப்பின சாதனையாக ஆகிறது. பெருமிதப்படுங்கள்.
நம்முடைய கருப்பின அடையாளத்தின் அழகு, தனித்தன்மை, அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றிக்கொள்கிற அதேசமயம் இதே நிறத்தைக் கொண்டு நமக்கு இழைக்கப்படும் அநீதி, காட்டப்படும் பாரபட்சம், எதிர்கொள்ளும் போராட்டங்களை மறந்துவிடக்கூடாது. எனவே கண்ணை மூடிக்கொண்டு கவலையில்லாமல் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துவிட முடியாது. நீங்கள் வரலாற்றை அறிவற்றவராக இருக்கக் கூடாது. இந்த உலகமே உங்களுக்கு உரியது என்று நீங்கள் இந்த உலகை எதிர்கொள்ள முடியாது. நீங்கள் ஒரு வீடற்ற மனிதனை கடக்கிற பொழுது இவ்வளவு செல்வவளம் மிக்க நம்முடைய சமூகம் இப்படிப்பட்ட சூழலில் அவனை ஏன் வைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பாமல் இருக்கக்கூடாது. ஒரு தவறான தொழிலில் ஈடுபடும் ஒரு பதின்ம வயது சிறுவனைச் சிறையில் அடைக்கிற நீங்கள், பால்யகாலத்தைக் கடந்த அவனுக்கு ஏன் வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை என்று கேட்க வேண்டும். நம்மளவுக்குத் திறமை மிக்க நம்முடைய உறவினர்கள், சக சகோதரர்கள், சகோதரிகள் ஏன் இந்த அநீதி, பாரபட்சம்மிக்க அமைப்புகளால் சிதைக்கப்பட்டார்கள் என்று யோசிக்க வேண்டும்.
ஆகவே, நாம் இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்பதோடு, நம்மளவுக்கு வாய்ப்புகள் இல்லாத சக ஆப்ரிக்க அமெரிக்கர்ளுக்காகப் போராட வேண்டும். நீங்கள் கடுமையாக உழைத்தீர்கள் என்பதோடு, உங்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது என்பதை நீங்கள் உணரவேண்டும். நீங்கள் வெற்றி பெற்றதில் அதிர்ஷ்டம் உள்ளது, அல்லது கடவுளின் ஆசீர்வாதம் உள்ளது எனச்சொல்வதால் உங்களின் உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆகவே, நீங்கள் மேலானவர்கள் என்று எண்ணிக்கழிக்க வேண்டாம். உங்களின் அறச்சிந்தனையின் பரப்பை விரிவுபடுத்துங்கள். துயரத்தில் உழல்கிற மக்களின் பாடுகளை உங்களுடையதையாக உணருங்கள். வெறுமனே கறுப்பின மக்கள் மட்டும் துன்பப்படுவதாக உணராதீர்கள். அகதி, புலம் பெயர்ந்து வந்த அயல்நாட்டவர், கிராமப்புற ஏழை ஆகியோரைப் பற்றியும் கவலைகொள்ளுங்கள். உங்களுக்கு இல்லாத வாய்ப்புகளைப் பெற்ற நடுத்தர வயது வெள்ளையின ஆண், கடந்த சிலபத்தாண்டுகளின் பொருளாதார, கலாசார, தொழில்நுட்ப மாற்றத்தால் தன்னுடைய வாழ்க்கை தலைகீழாக மாறி இருப்பதாக, அதை மாற்ற வழியின்றித் தவிக்கிறான். அவன் என்ன யோசிக்கிறான் என்றும் நீங்கள் உணரவேண்டும்.
இந்தச் சவால்மிகுந்த வாழ்க்கைக்குள் நுழைகிற உங்களுக்குத் தீரா வேட்கை மட்டுமில்லாமல் அதைச் செயல்படுத்த செயல்திட்டம் இருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன். உங்களுக்கு வேட்கையோடு செயல்திட்டம் இருக்கவேண்டும். வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது, செயல்பாடு முக்கியம். வெறும் hashtags போதாது, ஓட்டுக்கள் தேவை.
மாற்றம் ஏற்பட ரௌத்திரத்தை விட மேலான ஒன்று தேவைப்படுகிறது. அதற்கொரு திட்டம், கட்டமைப்புத் தேவைப்படுகிறது. 1964-ல் ஜனநாயக மாநாட்டில் ஐந்து அடி நான்கு அங்குலம் கொண்ட பெண்மணி லோ ஹேமார் ஒரு கிளர்ச்சி ஊட்டும் பேச்சால் அசத்தினார். அதற்குப் பின் மிஸிஸிபி மாகாணத்தில் பருத்தி பொறுக்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராடினார். ஒரு கணத்தில் கூட்டத்தில் ஒருங்கிணைக்கும் கருவிகள், தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் வீடாக வீடாகப் போய் மக்களைத் திரட்டினார். தற்காலக் கறுப்பினத் தலைவர்கள் இது உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனக்கு உவகைத் தருகிறது.உங்களைப்போன்ற எண்ணற்ற இளைஞர்களின் செயல்பாடே பலரின் பார்வையை மாற்றியுள்ளது. உங்களின் தொடர் முயற்சியால் வெள்ளையினத்தவர்கள், கருப்பினத்தவர், ஜனநாயக, குடியரசு கட்சியினர் ஆகியோர் கிரிமினல் சட்ட பரிபாலனத்தில் உள்ள நிஜமான சிக்கல்களைக் கவனத்தில் கொள்ள உதவியது.
அமைப்புமுறையில் மாற்றத்தைக் கொண்டு வர, வெறும் விழிப்புணர்வு மட்டும் போதாது. சட்டத்தில் மாற்றம் தேவைப்படுகிறது, நம்முடைய வழக்கமான அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. பல அப்பாவிகள் சிறையில் அடைக்கப்படுவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் உங்களிடம் ஒரு கேள்வி எழுப்புகிறேன். கிரிமினல் சட்ட சீரமைப்பு மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற என்ன முயற்சிகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள் ? சிறப்பான காவல் கண்காணிப்பு தேவை என்றால் உங்கள் மாவட்ட அரசு வழக்கறிஞர் யாரென்று தெரியுமா? உங்கள் மாநில தலைமை அரசு வழக்கறிஞர் யார் எனத் தெரியுமா? யார் அவர்களை நியமனம் செய்கிறார், அவர்களுக்குள் என்ன பாகுபாடு எனத் தெரியுமா. அவர்கள் யார், அவர்களின் பொறுப்புகள் என்னென்ன என்று கண்டறியுங்கள். உங்களுடைய மக்களை அணிதிரட்டுங்கள். அவர்களுக்கு ஒரு திட்டத்தை ஒரு கையளியுங்கள், மாற்றத்துக்கு இணைந்து செயல்படுங்கள், அவர்கள் செயல்படாமல் போனால் அவர்கள் அதற்குப் பதில் சொல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேட்கை அவசியம், அதைவிடச் செயல்திட்டம் மிகமுக்கியம்.
உங்களுடைய திட்டத்தில் ஓட்டளிப்பது எப்பொழுதோ நடக்கிற ஒன்றாக இருக்கக் கூடாது. எப்பொழுதும் வாக்களிப்பதில் நீங்கள் உறுதியாக இருக்கவேண்டும். ஓட்டளிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு ஐம்பது வருடங்கள் ஆனபின்னும் ஓட்டளிப்பதற்கு எண்ணற்ற தடைகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. பலர் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓட்டளிக்காமல் தடுக்கப் புதிய தடைகளை ஏற்படுத்துகிறார்கள். உலகின் வளர்ந்த ஜனநாயகம் ஒன்று தன் மக்களை ஓட்டளிக்காமல் இங்குமட்டுமே ஆகும். அதற்கொரு பூர்வகதை உண்டு.
எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டாலும் உலகிலேயே அமெரிக்காவில் மிகக்குறைந்த ஓட்டளிப்பு விகிதங்கள் உள்ளன. 2014-ல் இடைப்பருவ தேர்தல்களில் ஓட்டளிப்பு 36% மட்டுமே இருந்தது. இது இரண்டாவது மிகக்குறைந்த வாக்குப்பதிவு ஆகும். உங்களைப்போன்ற இளைஞர்கள் வெறும் 20% அளவில் மட்டுமே ஓட்டளிக்க வந்தார்கள். அதாவது உங்களில் ஐந்து பேரில் நான்கு பேர் வாக்களிக்கவில்லை. 2012-ல் மூன்றில் இரண்டு ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ஓட்டளித்தார்கள். 2014-ல் ஐந்தில் இருவர் மட்டுமே வாக்களித்தார்கள். நான் சமாளிக்கத் தடுமாறும் காங்கிரசை நான் எப்படி உங்களின் ஆதரவு இல்லாமல் எதிர்கொள்வது? இப்படிப்பட்ட சூழலில் என்னைவிட்டுவிட்டு ஏன் ஒபாமா சாதிக்கவில்லை என்று குமைகிறார்கள். உங்களின் வாக்களிப்பு அதை மாற்றியிருக்கும் என்று புரிகிறதா? நீங்கள் நாடு முழுக்க 50,60,70 சதவிகிதம் என்கிற அளவில் வாக்களிக்க வந்திருந்தால் வரலாறு மாறியிருக்காதா? மக்கள் அரசியலை சிக்கல் ஆக்குகிறார்கள். என்ன மாதிரியான சீர்திருத்தங்கள் தேவை என்று கேள்வி எழுப்புகிறார்கள்? அதை எப்படிச் சாதிப்பது? நான் ஒரே எளிய வழி சொல்கிறேன். ஓட்டளியுங்கள். அது தேவை. மற்ற எவரையும்விட அதிக ஓட்டுக்கள் உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் நினைப்பதை சாதிக்க முடியும்.
நீங்கள் ஏன் ஓட்டளிக்கவில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டாதீர்கள். உங்கள் மளிகை பெட்டியில் எவ்வளவு கடுகு இருக்கிறதோ என்றோ, சோப்பில் எவ்வளவு நுரை உள்ளதோ எனக் கணக்கிட்டால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஓட்டளிக்க நீங்கள் உயிரெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. பலர் உயிர் கொடுத்துதான் உங்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்கள். உங்களின் மூதாதையர்கள் பலர் அந்த மகத்தான வேள்வியை மேற்கொண்டு சாதித்தார்கள். அவர்கள் தற்போதும் உற்சாகமாக வாக்களிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் வாக்களிக்காத பொழுது நீங்கள் உங்களின் அதிகாரத்தைக் கைவிடுகிறீர்கள். உங்களின் வாக்குரிமையைக் கைவிடுகிறீர்கள். உங்களுக்கு இருக்கும் உரிமையை, அதிகாரத்தைத் துறந்து விடுகிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், வாக்களிக்கும் உரிமைகளை எடுக்க எண்ணுபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்காமல் உதவி செய்கிறீர்கள். முதியோர், ஏழைகள், சிறையில் உள்ளவர்கள் ஆகியோரின் வாக்களிக்கும் உரிமையை மறுதலிக்கும் செயல்கள் இங்கே நடைபெறுகின்றன.
நீங்கள் எல்லாச் சமயத்திலும் வாக்களிக்க வேண்டும். உங்களுக்கு வசதியாக இருக்கும் பொழுது மட்டும் வாக்களிக்கக் கூடாது. உங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் பொழுது மட்டும் திரண்டு வந்து வாக்களிக்கும் நீங்கள், உத்வேகம் பெறுகிற பொழுது மட்டும் வாக்களிக்கும் நீங்கள் எல்லாக் கணங்களிலும் வாக்களிக்க வேண்டும். ஒரு எம்பி, எம்.எல்.ஏ, வார்டு கவுன்சிலர் என்று அனைவரை தேர்ந்தெடுக்கிற பொழுதும் நீங்கள் பெருமளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும். நமக்கான மக்களை, பிரதிநிதியை, நம்முடைய வினாக்களுக்குப் பதில் தரக் கூடிய தேர்ந்தெடுக்க வேண்டும். இது சிக்கலான ஒன்று அல்ல. வாக்களிக்காமல் உங்களின் அரசியலை சிக்கலானதாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.
இறுதியாக மாற்றத்திற்கு உரக்க பேசுவதோடு, பிறர் பேசுவதைக் கேட்பதும் அவசியமாகிறது. யாரோடு நீங்கள் முரண்படுகிறீர்களோ அவர்கள் பேசுவதைக் கேட்கவும், சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கவேண்டும்… நமக்கு ஜனநாயகத்தில் கூட்டாளிகள் வேண்டும். அதுவே நமக்கான வழி. அது எரிச்சல் உண்டு செய்வதாக, மெதுவான ஒன்றாக இருக்கும். ஆனால், வரலாறு ஜனநாயகத்துக்கு மாற்று அதைவிட மோசமான ஒன்றே என்று உணர்த்துகிறது. இது நம்முடைய நாட்டில் மட்டும் உண்மையில்லை. கருப்பு, வெள்ளை என்று ஒன்றுமில்லை. பல கட்சி ஆட்சியிருந்த நாடுகளில் ஒரு கட்சி ஆட்சி ஏற்பட்ட பின்பு அந்த நாடுகள் எப்படிச் சீரழிந்தன என எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை நான் காட்டமுடியும்.
நீங்கள் 100% சரியாக இருந்தாலும் ஜனநாயகத்தில் சமரசம் தேவைப்படுகிறது. அதை விளக்குவது சமயங்களில் கடினமானதாக இருக்கிறது. நீங்கள் முழுக்கச் சரியாக இருந்தாலும் உங்களோடு முரண்படுகிறவர்களோடு நீங்கள் உரையாட வேண்டும். நீங்கள் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லாமல் இருந்தால், உங்களுக்கு ஒரு அற சுத்தம் இருக்கும், உங்களைப்பற்றிப் பெருமையாக நீங்கள் உணர்வீர்கள், ஆனால் , நீங்கள் எதையும் பெற்றுவிட முடியாது. நீங்கள் நினைத்ததைப் பெறமுடியாமல் போனால், ஒட்டுமொத்த அமைப்பே அயோக்கியமானது என்று நம்ப ஆரம்பிப்பீர்கள். அது மேலும் உங்களை அவநம்பிக்கை கொள்ள வைக்கும். குறைவான பங்கேற்பு, அநீதியை நோக்கிய அவலமான பயணம் வேகப்படும், மேலும் கோபமும், ஆற்றாமையும் கூடும். அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது. அது முன்னேற்றம் என்று ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
மார்டின் லூதர் கிங்கின் எழுச்சி ஊட்டும் உரைகளைக் கேட்டிருப்போம். பிர்மிங்காம் சிறையில் இருந்து அவர் எழுதிய கடிதங்கள், அவரின் தலைமையால் கூடிய மகத்தான கூட்டங்கள் எல்லாம் நினைவுகூரத்தக்கவை. அதேசமயம் ஓவல் அலுவலகத்தில், ஜனாதிபதி ஜான்சனுடன் உட்கார்ந்து சமஉரிமை சட்டம், வாக்களிப்பு உரிமை சட்டம் ஆகியவற்றில் கையெழுத்திட்டார். அவை விடுதலை பிரகடனத்தைப் போலவே குறைபாடுகள் கொண்டது என்பது சந்தேகமில்லை. இந்த முன்னேற்றத்தின் மைல்கற்கள் கச்சிதமானது இல்லை. நூற்றாண்டுகள் கடந்து இருந்த அடிமைமுறை, ஜிம் க்ரோவ் சட்டங்கள், இனவெறி ஆகியவற்றை முழுக்க நீக்கிவிடவில்லை. ஆனால் இந்தச் சட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தின. எது மேலானதோ அது நல்லது. உங்களுக்குக் கிடைக்கும் லாபங்களை உறுதிப்படுத்திக் கொண்டு அடுத்தப் போருக்கு வலிமையோடு தயாராகுங்கள்.
பிரிட்டானி பேக்நெட் என்கிற புரட்சிகரச் சிந்தனை கொண்ட கறுப்பின செயல்பாட்டாளர் தன்னுடைய கைகளை முறுக்கிக் கொண்டு கம்பீரமாகக் காவல்துறை சீர்திருத்தங்கள் சார்ந்த சட்ட வரைவில் பங்குகொண்டார். அவர் துரோகம் செய்ததாகச் சிலர் விமர்சித்த பொழுதும், அவர் சமரசத்துக்குத் தயாராக இருந்தார். போராட்டக் காரர்கள் கோரிய பல்வேறு மாற்றங்கள் அந்தச் சட்டங்களால் படிப்படியாக நிறைவேறின. கருத்தியல் தூய்மைக்காகச் சமரசத்துக்கு அவர் தயாராக இருக்கவில்லை என்றால், அந்த மகத்தான சிந்தனைகள் வெறும் சிந்தனைகளாக மட்டுமே இருந்திருக்கும். இப்படித்தான் மாற்றம் நிகழ்கிறது.
ஜனநாயகம் நம்முடைய சிக்கல்களை விவாதங்கள், கருத்துக்கள், வாக்களிப்பின் மூலமே தீர்த்துக் கொள்ளவேண்டும். வன்முறை, வெறும் அறுதிப் பெரும்பான்மை உண்மையான ஜனநாயகம் இல்லை. ஆகவே மக்களின் வாயை மூடாதீர்கள். அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். இங்கே கல்லூரிகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கும் ஆளுமைகளைப் பேச அழைக்காமல் தடுக்கும் தவறான போக்கு அதிகரித்து உள்ளது. அவர்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் முட்டாள்தனமானதாக, வேடிக்கையானதாக இருந்தாலும் அவர்களைப் பேசவிடுங்கள். ஒவ்வொருமுறை ஒரு முட்டாள் பேசுகிற பொழுதும் அவன் எவ்வளவு மோசமானவன் என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்கிறான். அவர்கள் பேசட்டும். அவர்களைப் பேசவிடவில்லை என்றால், அவர்கள் அநீதிக்கு உள்ளனாவர் ஆகி, தியாகிகளாகக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகிவிடுவார்கள்.
அதற்காக அவர்களின் கருத்தை மறுதலிக்கக் கூடாது என்று பொருளில்லை. அவர்களை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள், உங்களின் அற நேர்த்தியில் நம்பிக்கை வையுங்கள். சமயங்களில் உங்களின் மைய விழுமியங்களைச் சமரசம் செய்துகொள்ளாமல்,உங்களுடைய நேர்மையை மாற்றிக் கொள்ளாமல் அநீதியை முகத்துக்கு முகம் பார்த்து பொறுப்போடு பேசவேண்டி இருக்கும். அவசியம் செய்யுங்கள். கவனியுங்கள். உரையாடுங்கள். அவர்களிடம் ஒரு கருத்து இருந்தால், கவனித்துச் சரியென்றால் ஏற்றுகொள்ளுங்கள். அவர்கள் தவறான கருத்துக்கள் இருந்தால், அதைச் சுட்டிக்காட்டி சரி செய்யுங்கள். அவர்களுக்குக் கற்பியுங்கள். அவர்களைக் கருத்துக் களத்தில் வீழ்த்துங்கள். இதைக் கல்லூரிக் காலத்தில் இருந்தே நீங்கள் வழக்கமாக்கி கொண்டால் நீங்கள் அறியாமை, நிறவெறி, வெறுப்பரசியல், மடமை ஆகியவற்றை எப்படிச் சமாளிப்பது என்று கண்டுகொள்வீர்கள். இவற்றை உங்கள் வாழ்க்கை முழுக்க எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது முழுக்க நியாயமான வழியாகத் தோன்றாது. வாழ்க்கை மலர்ப்பாதை என்று யாரும் வாக்களிக்கவில்லை. உலகை மேலான ஒன்றாக மாற்றவேண்டும் என்றால் மாசுகளால் நிரம்பிய உலகிலேயே நீங்கள் துவங்கவேண்டும்.
இதுவே என்னுடைய அறிவுரை. மாற்றம் என்பது நான்கு, எட்டு வருடங்களில் வருவதில்லை.ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியை நம்புவதோ, கால் மேல் கால் போட்டுக் கொண்டு, ‘வெளியே போ!’ என்று அரசியல்வாதியை வெளியேற்றுவது மட்டுமே தீர்வு அல்ல. மகத்தான கொள்கைகளுக்காக ஒவ்வொரு நாளும் தீர்க்கமாகப் போராடும் குடிமகன்கள் தேவை…
ஜேம்ஸ் பால்ட்வின் இப்படி எழுதினார்: ‘நாம் எதிர்கொள்கிற எல்லாச் சவாலையும் மாற்றமுடியாது, அதே சமயம், எதையும் எதிர்கொள்ளாமல் மாற்றத்தை சாதிக்க முடியாது.’
இது உங்களின் தருணம்.நீங்கள் ஏற்கனவே அதற்குத் தயாராகி விட்டீர்கள். உங்கள் பயணம் கொடிய ஒன்றாக இருக்கிற பொழுது, அவதூறு பேசுபவர்களின் அலட்சியக் குரல்கள் உங்களை மூழ்கடிக்கிற பொழுது, ‘நீங்கள் முட்டாள், நீங்கள் நம்புவது தவறானது. நீங்கள் முயற்சியைக் கைவிடுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்.’ என்றெல்லாம் அவர்கள் சொல்கிற பொழுது என்னுடைய வாசகத்தைச் சொல்லிக் கொள்ளுங்கள், ‘ஆம்!நம்மால் முடியும்.’
வாழ்த்துகள். நல்லவை நடக்கட்டும். கடவுள் உங்களையும், இந்த மகத்தான தேசத்தையும் ஆசீர்வதிக்கட்டும். உங்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தமிழில்: பூ.கொ.சரவணன்