இந்தி முதல் இன்றுவரை – வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவது !


வரலாறு என்றாலே வருடங்களும், கடுப்பேற்றும் பெயர்களும் என்று நம் மனதில் பதிந்து போயிருக்கிறது இல்லையா? வரலாறு என்பது விறுவிறுப்பான ஒன்று என நம்ப முடிகிறதா? எதுக்காக வரலாறு எல்லாம் தெரிஞ்சுக்கணும் என்று கடுப்பாக கேட்டிருக்கிறீர்களா? ஒரு மூன்று மணி நேரத்தை மட்டும் கடன் கொடுங்கள். அப்புறம் பாருங்கள்:


Bored of textbook history? Ever wondered why history is important? Why history cannot be left unexplored? Fascinating, riveting journey guaranteed. Do lend your ears.

வரலாறு குறித்த மிக எளிய, வசீகரிக்கும் உரை இது என என்னால் சொல்ல முடியும். ஏன் இந்தித்திணிப்பை தமிழகம் எதிர்க்கிறது? அடையாள அரசியல் வரலாற்றில் எப்படி இருக்கிறது? வன்முறையும், அடையாளமும் குறித்து எப்படிப் புரிந்து கொள்வது? கடந்த கால வரலாற்றைக் கொண்டு நிகழ்காலத்தைத் தீர்மானிப்பது ஏன் ஆபத்தானது? ஔரங்கசீப் எப்படிப்பட்டவர்? மொகலாயர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்களா? வரலாறைப் புரிந்து கொள்ள சில நூல்கள் போதுமா? இந்தி முதல் இன்றுவரை ஒரு பிரமிக்க வைக்கும் பயணம். வாருங்கள். 🙂
Image result for வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோம்
Why TN opposes Hindi imposition? What is the Link between identity and violence? What are the problems in dealing with today’s problems by taking inspiration from past? How to view legacy of Aurangzeb, Mughals? From medieval to modern times a magisterial journey. Lets hear 🙂

ராமர் பாலம் என்பது ராமர் கட்டியதா? இதிகாசங்களை வரலாறாகக் கருதலாமா? ஹிட்லர் கொண்டாடப்பட வேண்டியவரா? போஸ் மகத்தான தலைவரா? காந்தி போஸுக்கு துரோகம் செய்தாரா? ஏன் இஸ்ரேல் மத்திய கிழக்கில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது? வரலாற்றின் வழியாக விடை தேடுவோம்.

Did Rama built Ram Sethu bridge? Can epics be treated as history? Why some people celebrate Hitler? Would we have been better had Bose succeeded? Did Gandhi betray Bose? Why Israel reigns supreme in middle east? Lets explore through the lens of history.

 
மதச்சார்பின்மைக்கும் மன்னர்களுக்கும் என்ன தொடர்பு? நேரு, அம்பேத்கர், பெரியார் சந்திக்கும் நெகிழவைக்கும் வரலாற்றுத் தருணம் எது? சாதியமைப்பு குறித்த அம்பேத்கரின் பார்வை என்ன? பெண்ணியமும் பெரியாரும் – ஒரு வரலாற்றுப் பார்வை. ஏன் காந்தி இன்றைக்கும் தேவை? ஏன் ராணுவ ஆட்சி ஆபத்தானது? வாஜ்பாயி நேரு குறித்து என்ன நினைத்தார்? விறுவிறுவென ஒரு பயணத்திற்குக் காதுகொடுங்கள்.

Are our kings truly secular? There was a moment when Nehru, Ambedkar and Periyar met in making history. What was that momentous occasion? What are Ambedkar’s views on caste? Why is Gandhi’s non-violence still needed? Why military rule won’t suit India? What is the link between Periyar and Feminism? Vajpayee had something interesting to say about Nehru. What is that? A riveting, surprising travel through the pages of Indian history. Do hear.

 
அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வைக்கொண்டு பொதுவாழ்வை அணுகலாமா? வ உ சியின் சாதனைக்கடலின் ஒரு துளியை உணர்வோமா? எம்ஜிஆர் எப்படி ஆட்சி புரிந்தார்? அது என்ன ‘Idea of India’? வரிசைகட்டும் வினாக்கள், அசரவைக்கும் பதில்கள். செவிமடுங்கள்.
 
 
 
 
அவசியம் வாசிக்க வேண்டிய சில வரலாற்று நூல்கள் என்ன? அமர்த்தியா சென் சொல்லும் ‘Country of First Boys’ யார்? இன்னும் இன்னும்… பள்ளிக்காலத்திற்குப் பிந்தைய புத்தக வாசிப்புப் பயணம் குறித்த ஒரு ஐந்து நிமிட சிற்றுரையும் உண்டு.

‘ராமச்சந்திர குஹா’வின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் -1


ராமச்சந்திர குஹாவுக்குத் தனிப்பட்ட அறிமுகம் தேவையில்லை. அவரின் ‘Democrats and Dissenters’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். வாரத்துக்கு அவரின் இரண்டு கட்டுரைகளைக் குறைந்தபட்சம் படித்துவிடுவதாலும், ஏற்கனவே வெளிவந்த நூலின் கருத்துக்களின் நீட்சியாகச் சில கட்டுரைகள் அமைவதாலும் நூல் சற்றே சலிப்பைத் தந்தது. எனினும், நூல் சுவையான வாசிப்பு அனுபவமாக நிறைய இடங்களில் இருந்தது. இரு பகுதிகளாக நூல் அறிமுகம் அமையும். முதல் பாகத்தில் அரசியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பும், இரண்டாவது பகுதியில் ஆளுமைகள் குறித்த அறிமுகங்களும் இடம்பெறும்.

Image result for ramachandra guha democrats and dissenters

காங்கிரஸ் பேரியக்கத்துக்கு அஞ்சலி:

காங்கிரஸ் இயக்கம் காந்தியின் வருகைக்கு முன்னரே இந்தியா முழுக்க இருந்து ஆளுமைகளைத் தனதாக்கி கொண்டது. அதே சமயம் நகரங்களில் அது இயங்கியது. ஆங்கிலமே அதன் அலுவல் மொழியாக இருந்தது. காந்தி காங்கிரசில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்தார். கட்சியின் அலுவல்கள் உள்ளூர் மொழிகளில் நிகழ்த்தப்பட்டன. மூன்றாவதாகப் பெண்களுக்கான உரிமைகள், தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றுக்குப் பாடுபட்டார். இதன் மூலம் கட்சி காயஸ்தர்கள், பனியாக்கள், பிரமணர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஆன கட்சி என்கிற அவப்பெயரை துடைக்க முயன்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரை உருவாக்கினார். காந்தி மூன்றாவது இலக்கில் பெருமளவில் வெற்றியை பெற முடியவில்லை.

விடுதலைக்குப் பிந்தைய காங்கிரஸ் அறுபதுகள் வரை நம்பிக்கையை, பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு தேசத்தை இணைக்க முயன்றது. வெறுப்பினால் ஒரு புதிய தேசத்தை அது எழுப்ப முனையவில்லை. மதச்சார்பின்மை, சகல குடிமக்களுக்கும் சம உரிமைகள் ஆகியவற்றை அது முழக்கமாகக் கொண்டிருந்தது. ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை சுயமாக, வலிமை மிக்கவையாக மாறுவதை நேருவின் காலம் உறுதி செய்தது.

Image result for CONGRESS NEHRU INDIRA RAJIV

நேருவுக்குப் பிந்தைய இந்திராவின் காலத்தில் நாகலாந்து, மிசோரம் பகுதிகளில் கிளர்ச்சிகள் எழுந்தன. தமிழகம் இந்தி திணிப்பில் குமைந்து கொண்டிருந்தது. நக்சலைட் இயக்கம் உருப்பெற்று இருந்தது. பொருளாதாரம் பெருமளவு அடிவாங்கி இருந்தது. இரண்டு போர்களின் காயங்களில் இருந்து இந்தியா மீண்டிருக்கவில்லை. அறுபத்தி ஏழு தேர்தல்களில் கேரளா, தமிழகம், வங்கம், ஒரிசாவில் ஆட்சி பறிப் போயிருந்தது. பீகார், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் கட்சி தாவி காங்கிரஸ் ஆட்சிக்கு உலை வைக்கப்பட்டது. இந்திராவை ஊமை பொம்மையாகக் கருதி பதவிக்குக் கொண்டு வந்த சிண்டிகேட் வேறு தலைக்கு மேலே கத்தி போல இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்திரா அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டார். கட்சியைப் பிளந்து தனக்குத் தலைவணங்கி, துதிபாடுபவர்களை வளர்த்தார்கள். காஷ்மீரி பண்டிட்கள் நான்கு பேரை கொண்டு தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மிக முக்கியமான முடிவுகளை எடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலே அவசரநிலையின் மூலம் ஜனநாயகத்தைக் கல்லறைக்கு அனுப்பினார். அவரின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டு எழுவது போலத் தோன்றினாலும் அடுத்து வந்த தேர்தலில் நாற்பது சதவிகித அளவு வாக்குகளைப் பெற்றது. சமீபத்திய தேர்தலில் அது 20% க்கும் கீழே போய்விட்டது.

காங்கிரஸ் மீண்டு எழுவதற்குப் வாய்ப்பே இல்லை என்கிறார் ராமச்சந்திர குஹா. அது படிப்படியாக மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிற அவர் நேரு குடும்பத்தை விட்டு அது விலக வேண்டும் என்று எப்பொழுதும் சொல்வதை மீண்டும் சொல்கிறார். எனினும், காங்கிரஸ் கட்சி எப்படி அதனுடைய அஸ்தமனத்துக்குப் பின்னர் நினைவுகூரப்பட வேண்டும்? இந்திய விடுதலை காலத்தில் காங்கிரஸ் பல்வேறு மத, மொழிக்குழுக்களை உள்ளடக்கி, பல கட்சிகள் பங்குகொள்ளும் தேர்தல் ஜனநாயகத்தை, மதசார்பின்மையைச் சாதித்தது. வயது வந்த எல்லாருக்கும் வாக்குரிமை தந்தது. ஜாதி, பாலின பாகுபாடுகளைப் போக்க ஆரம்பக் காலத்தில் பெருமளவில் முயன்றது. இதை மதச்சிறுபான்மையினருக்கு சம உரிமைகள், இடம் தராமல் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற இந்துத்வவாதிகள், சர்வாதிகார போக்குக் கொண்ட ஆட்சியை நிறுவ பார்த்த இடதுசாரிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள் தரக்கூடாது என்று இயங்கிய பிராமணியர்கள், பெண்களுக்கு உரிமைகளை மறுத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கு நடுவே இவற்றை முன்னெடுத்தார்கள். இந்தத் தேசம் முன்னைவிட ஒன்றுபட்டதாக, வன்முறை குறைந்ததாக அவர்கள் காலத்தில் மாறியது. சமூகத்தின் ஆணாதிக்கப் போக்கு குறைவதிலும், சகிப்பின்மை அறுபதுகள் வரை இருந்த காங்கிரசால் மட்டுப்படுவது நிகழ்ந்தது. சமூகத்தின் சமத்துவமின்மை, கட்டுப்பாடுகள் குறைந்தது. இவற்றைக் காங்கிரஸ் தன்னுடைய குறைகளோடு சாதித்தது. இவ்வாறே நினைவுக்கூரப்பட வேண்டும் என்கிறார்.

கருத்துரிமைக்கு எதிரான எட்டு ஆபத்துகள்:

காந்தியின் ‘இந்து சுயராஜ்யம்’ நூல் வெளிவந்த பொழுதே அதை ஆங்கிலேய அரசு இந்தியாவில் தடை செய்தது. அப்பொழுது காந்தி, ‘ஒருவர் சிந்திக்கவும், தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவும் முழு உரிமை உண்டு. அவர் வன்முறையைப் பயன்படுத்தாதவரை அவரின் கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு.’ என்று எழுதினார். வன்முறையைத் தூண்டிவிடவும் கூடாது என்று சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார் குஹா.

Image result for eight threats to freedom of expression

இந்தியாவில் கருத்துரிமைக்குப் பெரும் சவாலாக ஆங்கிலேயர் கால IPC சட்டங்களான 153, 153A, 295, 295A , 499, 500, 505 ஆகியவை திகழ்கின்றன, எல்லாவற்றுக்கும் மேலாகக் காந்தி ஆங்கிலேயர் சட்டம் என்கிற பெயரில் செய்யும் வன்புணர்வு என்று வர்ணித்த 124A கருத்துரிமையைப் பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டுகிறார். விடுதலைக்குப் பின்னால் இடது, வலது இரண்டும் இந்திய அரசுக்கு எதிராக வன்முறை வழியைக் கைக்கொண்ட பொழுது இந்துத்துவ இதழான Organiser, இடதுசாரி இதழான Crossroads ஆகியவை தடை செய்யப்பட்டன. பிரிவினை, அகதிகள் சிக்கல், காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றில் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளுக்கு அரசு பயந்து முதலாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதற்கு நேரு, அம்பேத்கர் மீது கருத்துரிமையைக் கட்டுப்படுத்துகிற கடுமையான செயலை செய்தார்கள் என்கிறார் குஹா. ஒரு வரலாற்று ஆசிரியராக அவர் சறுக்கும் இடம் அது. முதலாவது சட்டத்திருத்தத்தில் மதவாதத்தை எதிர்கொள்ளப் பேச்சுரிமையைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தாலும், அதில் கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் செயல்பாட்டையும் இருவரும் செய்தார்கள். மேலும், முதலாவது சட்டதிருத்தத்துக்கு முன்னே பேச்சுரிமைக்குக் கட்டுப்பாடுகள் இருந்தது. எப்படி என்று விரிவாகத் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள்: https://indconlawphil.wordpress.com/…/on-reasonable-restri…/

இந்தியாவில் நீதித்துறை மிகவும் மெத்தனமாக இயங்குவதும், நீண்டு கொண்டே போகும் வழக்குகளும் கருத்துரிமைக்குச் சவாலாக அமைகின்றன என்கிறார் குஹா. அடையாள அரசியலும் கருத்துரிமைக்கு ஆபத்தாக இருக்கிறது; Satanic Verses எனும் சல்மான் ரூஷ்டியின் நூலை வாசிக்காமல், ஈரானுக்கு முன்னால் முந்திக்கொண்டு ராஜீவ் காந்தி அரசு தடை செய்தது. சிவாஜியின் பிறப்பு பற்றிய பல்வேறு கதைகளைத் தொகுத்த லென் அவர்களின் நூல் வராமல் இந்துத்வவாதிகள் பார்த்துக் கொண்டார்கள். மேற்கு வங்க இடதுசாரி அரசு தஸ்லீமா நஸ்ரினின் நாவலை தடை செய்தது. கருத்துரிமையை நீதிமன்றங்கள் காக்க முயன்றாலும் காவல் துறை கைகட்டி நிற்பதும் நிகழ்கிறது. சட்டம், ஒழுங்கு முக்கியம் என்று சொல்லியபடி கருத்துரிமையைக் காவு கொடுப்பது நிகழ்கிறது. ஹுசைன்-தோஷி இருவரும் இணைந்து ஓவிய கண்காட்சி நிகழ்த்திய பொழுது அது முழுவதும் தாக்கப்படுவதைக் காவல்துறை வேடிக்கை பார்த்தது. சிவாஜி குறித்த லேனின் புத்தகத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் காவல் துறை பதிப்பகத்துக்குப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது.

அரசியல்வாதிகள் எப்படிக் கருத்துரிமைக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. குஜராத்தில் சாயஜிராவ் பல்கலையை இந்துத்வர்கள் தாக்கிய பொழுது அப்பொழுதைய மோடி அரசு வேடிக்கை பார்க்கவே செய்தது. இந்தியாவின் மிகச்சிறந்த கலை சார்ந்த படைப்பகம் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் பெருமாள் முருகனின் கருத்துரிமைக்கு அதிமுக, திமுக இரண்டுமே ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்று குஹா சுட்டிக்காட்டுகிறார். அரசாங்க விளம்பரங்களை நம்பிக்கொண்டு இருக்கும் ஊடகங்கள் மறந்தும் எதிர்க்குரல் எழுப்புவது இல்லை. ஊடகத்தினர் எதோ ஒரு கருத்தால் காயப்பட்டதாகச் சொல்லிக்கொண்டு தாக்க கிளம்பும் குண்டர்கள் குழு தங்களுக்குத் தகவலை தெரிவித்ததும் அதைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தாமல் பிரேக்கிங் நியூஸ், exclusive என்று கல்லா கட்டுவதைக் கவனப்படுத்துகிறார். தாராளமயம் காலத்திற்கு முன்பு பல்வேறு இதழ்களில் தனியாகச் சுற்றுசூழலுக்கு என்று நிருபர்கள் இருந்தார்கள். அவர்களின் பொருளாதாரப் பாய்ச்சலின் பொழுது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். விளம்பரம் தரும் நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொழுது கண்டும், காணாமல் ஊடகங்கள் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களால் பல்வேறு ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் வெகுசில நிறுவனங்கள் பெரும்பான்மை ஊடகத்தைக் கட்டுப்படுத்துவது நிகழ்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இதழ்கள் எழுதினால் டாட்டா நிறுவனம் செய்தது போல விளம்பரத்தை நிறுத்துவது நிகழ்கிறது. அரசியல் சார்புநிலைகள் எடுத்துக்கொண்டு படைப்பாளிகள் கருத்துரிமை சார்ந்தும் சார்புநிலைகள் குரல் கொடுப்பதும் கருத்துரிமைக்கு ஆபத்தாக அமைகிறது என்று சுட்டுகிறார் குஹா.

எங்கே போனது ஆழமான அரசியல் உரையாடல்?:
இந்தியாவின் அரசியலில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிக் கொண்டு இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் தேர்தல் அரசியலை விடுத்துச் சேவைகளில் ஈடுபட்டு வந்தார். எனினும் இரண்டாவது பொதுத் தேர்தல் காலத்தில் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ஒரு கட்சித்தலைவராகச் செயல்படுவதை விட தேசிய தலைவராகச் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் இடதுசாரியான தனக்கு லேபர் கட்சியை நெருக்கமானது என்றாலும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கன்சர்வேடிவ் கட்சி வலிமை பெறவே விரும்புவேன். ஒரு கட்சி சகல அதிகாரத்தையும் பெறுவதை விட, விரும்பத்தகாத எதிர்கட்சிகள் கொஞ்சம் கூடுதல் வலிமை பெறுவது தவறில்லை. நாடாளுமன்ற முறை தோற்றுவிட்டது. வேறு வகையான அரசியல் முறைகள் குறித்து யோசிக்க வேண்டும்’ என்றெல்லாம் குறிப்பிட்டார்.

நேரு போர்க்காலங்களில் இப்படிப்பட்ட பொதுவான அரசுகள் சாத்தியம் என்றாலும், வெவ்வேறு இலக்குகள்,தொலைநோக்குகள் கொண்டவர்கள் இணைந்து செயல்படுவது சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில், அயலுறவில் உகந்ததாக இருக்காது என்றார். தேர்தலில் நிற்பது, கருத்துக்களைப் பரப்புவதன் மூலம் மக்களின் மனதை மாற்றுவது முதலிய முறைகளை மற்ற கட்சிகள் செய்ய எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 150 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கையில் இன்னமும் வலிமைப்படுத்துவதை எப்படித் தான் செய்ய முடியும் என்று புரியவில்லை நேரு எழுதினார். அப்படி எதிர்க்கட்சிகளைப் பாதுகாத்து, பராமரித்து வளர்க்க முனைந்தால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும். நாடாளுமன்ற முறை பல்வேறு தோல்விகளால் ஆனது. எனினும் இருப்பதில் அதுவே சிறந்த முறை என்று நேரு பதில் தந்ததோடு மாற்று முறையைப் பரிந்துரைக்கும்படி ஜெபியிடம் கேட்டார். அவர் ‘ Plea for the Reconstruction of the Indian Polity’ என்கிற கட்டுரையில் இன்றைய பஞ்சாயத்து ஆட்சிமுறைக்கான விதையை ஊன்றினார்.

Image result for NEHRU AND JAYAPRAKASH NARAYAN

இப்படிப்பட்ட தேர்ந்த உரையாடல்கள் இந்திய அரசியலில் பல்வேறு தளங்களில் அப்பொழுது நிகழ்ந்தது. ராஜ ராம் மோகன் ராய், கிறிஸ்துவ மிஷனரிகள் இந்து மதம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுமா என உரையாடினார்கள். மேற்கை பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று தாகூர், காந்தி உரையாடினார்கள். ஜாதியை எப்படி அற, அரசியல் தளங்களில் எதிர்கொள்வது என்று காந்தி, அம்பேத்கர் உரையாடினார்கள். இந்துக்கள், முஸ்லீம்கள் ஒரு தேசமாக இணைந்து இருக்க முடியுமா என்று காந்தி, ஜின்னா பேசினார்கள். பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் முதலாளிகளின் பங்கு என்ன என்று நேரு, ராஜாஜியும், அடிமைப்படுத்தியவர்களின் மொழியான ஆங்கிலத்துக்கு இந்தியாவில் என்ன இடம் என்று ராஜாஜி, லோகியாவும் உரையாடினார்கள். இப்படிப்பட்ட உரையாடல்கள் இல்லாமல் இன்றைய அரசியல் இருக்கிறது.

சீனா, பாகிஸ்தானை புரிந்து கொள்வது:
சீனாவில் மாண்டரின் மொழியும் ஹன் இனமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அங்கே திபெத்திய மொழியோ, யூகுர் மொழியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. அரசில் இணைந்து பணியாற்ற சீன மொழியைக் கற்பது கட்டாயம். காலனியம், ஜப்பானிய தாக்குதல், கம்யூனிச புரட்சி ஆகியவற்றால் நாட்டைப் பிணைக்க மொழியைச் சீனா பயன்படுத்துகிறது. தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தால் போலீஸ் வந்து நிற்கும். சீனாவில் பெண்கள் இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் வேலை செய்யும் பெண்களின் சதவிகிதம் 30%, சீனாவில் 70%. இந்தியாவில் 25 வயது நிறைந்த பெண்களில் பள்ளிக்கல்வியை முழுமையாக முடித்தவர்கள் 27% சீனாவில் 54%. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் பெண்களின் பங்கு 12% அங்கே 21%. இங்கே பிரசவத்தின் பொழுது மரணிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 37/1 லட்சம், 174/1 லட்சம். இந்தியா சீனாவுக்குப் போட்டி என்று பலவற்றில் தன்னைக் கருதிக் கொள்கிறது. பெண்கள் விஷயத்தில் அதைக்கருத்தில் கொள்ளலாம்.

பழங்குடியினர் குறித்த குஹாவின் கட்டுரை பெருமளவில் இந்த உரையில் அடங்கி இருக்கிறது: https://saravananagathan.wordpress.com/…/%E0%AE%AA%E0%AE%B…/

பாகிஸ்தான் தன்னுடைய அரசியல் தலைவர்களில் ஊக்கம் தேட முடியாமல், அக்பர், பாபர் என்று பெருமை கொள்கிறது. அதற்கு மாறாக இந்தியாவில் எண்ணற்ற அரசியல் தலைவர்கள் உத்வேகம் தருவதற்குக் கடந்த காலங்களில் இருக்கிறார்கள். லாகூர் நகரத்தில் இந்து, சீக்கிய, இஸ்லாமிய, பார்சி கலாசாரங்கள் இணைந்து இருந்தாலும் லாகூர் குறித்த நூல்களில் இஸ்லாமிய முகத்துக்கு மட்டுமே கவனம் தரப்படுகிறது. இப்படிப்பட்ட ஒற்றைப்படையான வரலாற்று எழுதியல் இந்தியாவிலும் நிகழலாம் என்கிறார் குஹா. பாகிஸ்தான் என்கிற தேசம் குறித்த முழக்கத்தை முதன்முதலில் மின்டோ பார்க்கில் ஜின்னா வைத்தார். அங்கே ஒரு கோபுரத்தை கட்ட மக்கள் நிதி தராமல் போகவே திரைப்பட நுழைவுச்சீட்டு, குதிரைப்பந்தய நுழைவுச்சீட்டு ஆகியவற்றின் மீது வரி போட்டு அதைப் பாகிஸ்தானிய அரசு கட்டியது.

வன்முறையை எப்படிப் போராட்டக்குழுக்கள் கைக்கொள்வைது?:

. தேர்தல், பல கட்சி ஆட்சிமுறை, வலுவான நீதித்துறை, வாழ, பணி செய்ய, சொத்து சேர்க்க குடிமக்களுக்கு உரிமை ஆகியவை எந்தளவுக்கு ஒரு ஜனநாயகத்தில் கிடைக்கின்றன என்பதைப் பொறுத்தே அது எவ்வளவு வலிமையான அரசு என்று அறிய முடியும். இவற்றோடு பல்வேறு மதங்கள் இணைந்து இருப்பது, தங்களுடைய மொழியில் சிந்திப்பது, எழுதுவது, பேசுவது, விரும்பியதை உண்பது, உடுத்துவது, விரும்பியவரை மணத்தல் ஆகிய அனைத்தும் ஒரு நாட்டில் சகலருக்கும் கிடைக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் உண்டு. காஷ்மீரில் தேர்தல்கள் பெரும்பாலும் நேர்மையாக நடத்தப்பட்டதில்லை. ஒடுக்குமுறைகள் மிகுந்தே இருந்திருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் அதிகாரத்தை விட்டு திட்டமிட்டு விலக்கப்பட்டதோடு, தமிழ் மொழி இரண்டாம்பட்சமான இடத்தைப் பெற்றது. திட்டமிட்ட படுகொலைகள் வன்முறை பாதைக்குத் திருப்பியது. காஷ்மீரிலும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போய் ஆயுத போராட்டங்கள் எழுந்தன. இலங்கையில் 2009-ல் போர் முடிந்து பல்வேறு இழப்புகளுக்குப் பிறகு நாடு அமைதிக்குத் திரும்பியிருக்கிறது.

எனினும், அங்கே பூரண உரிமைகளோ, நிம்மதியான வாழ்க்கையோ இன்னமும் சாத்தியமாக இல்லை. காஷ்மீர் எரிந்து கொண்டு இருக்கிறது. இதில் வன்முறையின் பங்கு என்ன? வன்முறை எதிர்க்கிற அரசு, அதிகாரிகள், மக்கள், தன் குழுவில் வேறு மதம், மொழியைச் சார்ந்தவர்கள், அரசியல் ரீதியாகத் தன்னோடு முரண்படும் தன்னுடைய குழுவினர் ஆகியோர் மீது நிகழ்த்தப்படுகிறது. முதல் இரண்டுக்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்தாலும், இறுதி மூன்று ஏற்புடையது இல்லை. அப்பாவி மக்களைக் கொல்வது ஏற்புடையது அல்ல. விடுதலைப்புலிகள் அதை இலங்கையில் செய்தார்கள். காஷ்மீர் போராளிகள் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் குடிமக்களைக் கொன்றார்கள். விடுதலைப்புலிகள் இஸ்லாமியர்களைத் தமிழர்களாக இருந்தும் கொன்றார்கள். காஷ்மீர் போராளிகள் காஷ்மீரி பண்டிட்கள் இரண்டு லட்சம் பேரை வெளியேற்றினார்கள். எந்த ஜனநாயகம், பன்மைத்தன்மைக்குப் போராடுகிறார்களோ அதைத் தங்களின் சகாக்களுக்கு மறுப்பதோடு அவர்களைக் கொல்லவும் செய்திருக்கிறார்கள். வன்முறையை எப்படித்தான் கையாள்வது? ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெகுமக்கள் மீது எப்பொழுதும் ஆயுதம் ஏந்தி போரிட்டது இல்லை.

இந்தியாவில் அமைதியாகத் தனிநாடு கேட்ட திராவிட இயக்கம் பின்னர்த் திமுகவால் தேர்தல் அரசியலில் கலந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றது. மாநில அளவில் ஆட்சி செய்யவும் செய்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆயுத கிளர்ச்சியை விடுத்து முழுமையான மன்னிப்பு பெற்றுத் தேர்தலில் நின்றது. வெற்றி பெற்று ஆட்சியில் இருந்ததோடு எதிர்க்கட்சியாகவும் அமர்ந்தது. அரசுகள் ஜனநாயக அமைப்புகளை வலிமைபப்டுத்த வேண்டும், நேர்மையான தேர்தல்களை நடத்த வேண்டும். சிறுபான்மையினரின் மொழி, கலாசாரம் ஆகியவற்றை மதிக்க வேண்டும், சட்டங்கள், கொள்கைகளில் சிறுபான்மையினர் கருத்தை கணக்கில் கொள்ள வேண்டும். மாநில சுயாட்சியை வழங்குவதோடு வேலை, சுகாதாரம், பள்ளிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ராணுவங்கள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்துத் தனிப்பட்ட நேர்மையான விசாரணைகள் நிகழ்த்தி தண்டனை தரவேண்டும் என்கிறா குஹா.

Democrats and Dissenters
Ramachandra Guha
Allen Lane Publishers
பக்கங்கள்: 310
விலை: 699

மாவோயிஸ்ட்கள் ஆதிவாசிகளின் பாதுகாவலர்கள் இல்லை!


மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பின் முப்பத்தி ஆறாவது ஜெயபிரகாஷ் நாராயணன் நினைவு சொற்பொழிவில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அதன் எழுத்து வடிவம் இது:
 மக்கள் சிவில் உரிமைகள் கூட்டமைப்பு நடத்தும் இந்த ஜெயபிரகாஷ் நாராயணன் பேசுவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. இந்த அமைப்பின் நெடிய பயணத்தில் நான் முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக இணைந்து பயணிக்கிறேன். சுப்பாராவ் அவர்கள் ‘நாம் குற்றவாளிகள்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட துண்டறிக்கை எண்பத்தி நான்கின் சீக்கிய படுகொலைகளின் பின்னால் இருந்த அநீதியை உலகுக்குப் புலப்படுத்தியது. பாகல்பூரில் இஸ்லாமிய நெசவாளர்கள் எத்தகு கொடிய வன்முறைக்குச் சக இந்துக்களால் ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதை நேரில் காணும் வாய்ப்பு இந்த அமைப்பாலேயே எனக்குக் கிடைத்தது. சுற்றுச்சூழல் குறித்துக் கவனம் பெரிதாக ஏற்படுவதற்கு முன்பே சுரங்கப் பணிகளால் காடுகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, காடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நேரிடும் சிக்கல்கள் என்பன குறித்து விரிவான அறிக்கைகள் வெகுகாலத்துக்கு முன்னரே அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
Displaying IMG_0455.JPGDisplaying IMG_0455.JPG
ஜெயபிரகாஷ் நாராயணனை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மகத்தான போராளியாகப் பலருக்குத் தெரியும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் அவர் நடத்திய தீரமிகுந்த இரண்டாவது விடுதலைக்கான போரும் மறக்க முடியாத ஒன்று. அவர் அதே சமயம் காஷ்மீரிகள், நாகாக்கள் ஆகியோரோடு இந்திய அரசு பேசுவதற்கான, உரையாடல் நிகழ்த்தி சமரசம் செய்து கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தந்தவர். அவர் காஷ்மீர் சிக்கலில் சொன்னதை நேரு, சாஸ்திரி, இந்திரா என்று யாரேனும் கேட்டிருக்கலாம். படேல் ‘மோசமான தலைவலி’ என அழைத்த காஷ்மீர் சிக்கல் பெரும் இன்னலைத் தரும் தீராத மைக்ரேன் தலைவலியாக மாறியிருக்காது. மேலும், ஜெ.பி கிராம சுயாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று விடுதலைப் பெற்ற காலத்திலேயே நேருவுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினார். வெறுமனே, பிரிட்டனின் நாடாளுமன்ற, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான ஜனநாயகமே முழு ஜனநாயகம் என்பது குறைபாடுள்ள பார்வை எனச் சரியாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆதிவாசிகளின் நிலைமை சுதந்திர இந்தியாவில் மிகுந்த கவலைக்கிடமான ஒன்றாக இருக்கின்றது. இந்த வரலாறு விடுதலைக்கு ஒரு வருடத்துக்கு முன்னரே துவங்கி விடுகிறது. 13/12/46 அன்று நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின் முன்னால் ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்துக்கு வந்தன. இன்றைக்கு அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நடைமுறைகள் எனக் கொண்டாப்படும் யாவும் அதில் அடங்கியிருந்தன. நேரு அவற்றை அறிமுகம் செய்து பேசுகிற பொழுது,
‘சமூக, பொருளாதார, அரசியல் நீதி உறுதி செய்யப்படும். வாழ்க்கை நிலை, வாய்ப்புகள் ஆகியவற்றில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படும். அனைவரும் சட்டத்தின் முன்னர்ச் சமமாக நடத்தப்படுவர். கருத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, ஒரு இடத்தில் கூடும் உரிமை, விரும்பும் செயலை செய்யும் உரிமை ஆகியவை சட்டம், பொது நீதிக்கு உட்பட்டு வழங்கப்படும். அதே சமயம், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, பழங்குடிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் பாதுகாப்பு விடுதலை இந்தியாவில் உறுதி செய்யப்படும்.’ என்று வாக்களித்தார்.
இந்தத் தீர்மானங்கள் குறித்துப் பழமைவாதியான புருஷோத்தமதாஸ் தாண்டன், இந்துத்வவாதியான ஜனசங்கத்தின் ஷ்யாமபிரசாத் முகர்ஜி, பட்டியல் ஜாதியினரின் தலைவரான அம்பேத்கர், எம்.ஆர்.ஜெயகர், பொதுவுடைமைவாதியான மினு மசானி, பெண்கள் இயக்கத் தலைவரான ஹன்சா மேத்தா, இடதுசாரியான சோம்நாத் லஹிரி என்று பலரும் இந்தத் தீர்மானங்களை விவாதித்தார்கள். ஒருவர் இந்தத் தீர்மானம் குறித்துப் பேச எழுந்தார்.
அவர் இந்திய ஹாக்கி அணியில் கலக்கியவரும், கிறிஸ்துவராக இருந்து பின்னர் அம்மதத்தை விட்டு வெளியேறியவரும் ஆன பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங். அவர் பின்வருமாறு பேசினார்:
ஒரு காட்டுவாசியாக, ஆதிவாசியாக நான் இந்தத் தீர்மானத்தின் நுணுக்கங்களை நான் உணர்ந்திருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். என் பகுத்தறிவு, என்னுடைய மக்களுடைய பகுத்தறிவு நாம் விடுதலைச் சாலையில் இணைந்து பயணித்துப் போரிடவேண்டும் என்று சொல்கிறது. நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள் தான். அவமானம் தரும் வகையில் நடத்தப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் நாங்கள் 6,000 வருடங்கள் அடக்குமுறையில் வாழ்ந்து வருகிறோம். சிந்து சமவெளி நாகரிகத்தின் குழந்தையான நான் எங்களுக்குப் பின்னர்ச் சிந்து சமவெளிக்கு வந்து எங்களைக் காட்டுப் பகுதியை நோக்கி நீங்கள் துரத்தினீர்கள் எனச் சொல்லமுடியும்.
என் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்டங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. என்றாலும், பண்டித நேருவின் வார்த்தையை நான் நம்புகிறேன். நீங்கள் எல்லாரும் விடுதலை இந்தியாவின் சமமான வாய்ப்புகளை வழங்கி யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் புதிய அத்தியாயத்தைப் படைக்கப்போவதாகச் சொல்லுவதை முழுமையாக நம்புகிறேன்.
இந்த உரை நிகழ்த்தப்பட்டு எழுபது வருடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகளின் நிலைமை இந்தியாவில் எப்படியிருக்கிறது?அவர்கள் இன்னமும் சுரண்டப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள், தங்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். பத்து கோடி பழங்குடியின மக்களில் 85% பேர் மத்திய இந்தியாவிலும் 15% பேர் வடகிழக்கிலும் வாழ்கிறார்கள். இவற்றில் 1.2 ஆதிவாசி என்கிற சொல் நிலத்தின் ஆதிக்குடிகள் எனப் பொருள்படும். குஜராத்தில் துவங்கி ஒரிசா வரை மத்திய இந்தியாவில் பழங்குடியினர் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களை ஆதிவாசிகள் என்று இந்த உரையாடலில் அழுத்தமாக அழைப்பேன்/ சமவெளியில் வசிக்கும் மக்களுடன் அவர்களுக்கு இணக்கமான உறவு இருந்தது. தேன், மருத்துவப் பச்சிலைகள் தந்துவிட்டு உப்பு முதலிய பிற பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் உறவு இருந்தது.
 ஆங்கிலேயர் காலத்தில் ஆதிவாசிகள் மீதான சுரண்டல் வேகமெடுத்தது.
தொடர்வண்டிகள் ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் ஆதிவாசிகளின் நிம்மதியான வாழ்க்கையைக் குலைத்தார்கள். அவர்கள் உருவாக்கிய சாலைகள், தொடர்வண்டிகள் அதுவரை நுழைய முடியாமல் இருந்த ஆதிவாசிகள் பகுதிக்குள் வியாபாரிகள், ஒப்பந்தக்காரர்கள் நுழைந்தார்கள். அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. அம்மக்கள் சுரண்டப்பட்டார்கள். இதற்கு எதிரான தீவிரமான எழுச்சிகள், ஆயுதப்போராட்டங்கள் எழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சந்தால் புரட்சியில் (1830-1850) துவங்கி பிரஸா முண்டா (1890) தலைமையிலான கலகம், ஆந்திராவில் ஆலடி சீதாராமா ராஜூ (1920) இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் வரை போராட்டங்கள் வெவ்வேறு வகையில் எழுந்தன.
விடுதலை கிடைத்த பொழுது ஆதிவாசிகளுக்கு ஒரு ‘புதிய அத்தியாயம்’ காத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. மக்களியல் ஆய்வாளர் அரூப் மகாராத்தா பல்வேறு தரவுகளை ஒப்பிட்டு அதிர்ச்சி தருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள் இருவரும் ஒப்பிடப்படுகிறார்கள். கல்வியறிவில் முறையே 23, 30 % என்கிற அளவிலும், பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 62, 48 சதவிகிதத்திலும் 50, 40 என்கிற சதவிகிதத்தில் அவர்களின் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலையும் உள்ளது. இவை ஆதிவாசிகள் மிக மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் நிலை அவர்களைப் போலவே கடும் அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு ஆளாகும் தலித்துகளை விட மோசமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.
ஆதிவாசிகள் மிக மோசமான சூழலில் வாழ்கிறார்கள். அடிப்படை சமூக வசதிகளான நல்ல குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி, சுத்தமான கழிப்பறைகள் கூட அவர்களுக்குப் பெரும்பாலும் கிடைப்பதில்லை. சமூகவியல் கூறுகள் நமக்குச் சொல்வது ஒன்றுதான். புதிய அத்தியாயம் எதுவும் இம்மக்களுக்கு எழுதப்படவில்லை. தலித்துகளுக்கு அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான அளவுக்கே கிடைக்கிறது. அதைவிட அவலமான சூழலில் ஆதிவாசிகளின் நிலைமை உள்ளது. அதே சமயத்தில் அரசின் கொள்கைகள் ஆதிவாசிகளை அடிக்கடி புலம்பெயர வைக்கிறது.
 ஆதிவாசிகள் வாழும் காடுகள் செம்மையானவை, அங்கே நெடிய நதிகள் விரிந்து ஓடுகின்றன, எண்ணற்ற தனிமங்கள் இந்தப் பகுதிகளில்
மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. இவை மூன்றையும் சேர்த்து ‘ஆதிவாசிகளின் முப்பெரும் சாபம்’ என்று சொல்வேன். விடுதலைக்குப் பிறகு தொழில்மயமாக்கல், வளர்ச்சி ஆகியவை வேகமெடுத்தது. அப்பொழுது தொழிற்சாலைகள், அரசு சுரங்குகள், அரசு நீர்மின் திட்டங்கள் ஆகியவை இப்பகுதிகளைக் கூறுபோட்டு எழுந்தன. சமவெளி மக்களின் நல்வாழ்வுக்கு இம்மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். எத்தனை லட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்பது குறித்துப் பல்வேறு கணிப்புகள் உள்ளன. அதே சமயம், 1.2 கோடி வரை மிதமான அளவீடுகளும் அதிகபட்சமாக 1.5 கோடி வரையும் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. எப்படியிருந்தாலும், மிக அதிக எண்ணிக்கையிலான ஆதிவாசிகள் தங்களின் இருப்பிடங்களை விட்டு அரசின் கொள்கைகளால் துரத்தப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி.
631b5950-0d94-411b-ab01-b363a816044a
இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகித எண்ணிக்கையில் உள்ள ஆதிவாசிகள் நாற்பது சதவிகித அளவுக்கு இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாகச் சமூகவியல் அறிஞர் வால்டர் பெர்னாண்டஸ் கண்டறிந்து உள்ளார். அதாவது இடப்பெயர்வுக்கு உள்ளாவதற்கு ஆதிவாசிகள் அல்லாத மக்களைவிட ஐந்து மடங்கு அதிகம். இப்படிச் செய்யப்படும் இடப்பெயர்வில் ஒழுங்கான இழப்பீடோ, வசதிகளோ தரப்படுவதில்லை. இம்மக்கள் தங்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை, கிராமத்தை, நிலத்தை, மொழியை, நாட்டுப்புற பாடல்களை, இசையை முப்பெரும் சாபத்தால் இழந்து வெளியேற நேரிடுகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடர்வண்டிப்பாதைகள், சாலைகள் அமைப்பதற்கு ஆதிவாசிகளின் வனங்களுக்குள் அரசு நுழைய முயற்சித்த பொழுது கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இத்தனைக்கும் விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசைப் போலப் பெரிய அணைகளையோ, கனிம வள சுரண்டலையோ ஆங்கிலேய அரசு ஆதிவாசிகளின் வாழ்விடங்களில் மேற்கொள்ளவில்லை. காடுகளின் வளங்களையே அது அள்ளிக்கொண்டு போனது.
விடுதலைக்குப் பிந்தைய முதல் பதினைந்து வருடங்களில் வளர்ச்சி திட்டங்கள்
பழங்குடியின மக்களின் வாழ்விடங்களின் வழியாக மேற்கொள்ளப்பட்ட பொழுது அம்மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. புதிதாக எழுந்திருக்கும் அரசு தங்களின் வாழ்க்கையை முன்னேற்றி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துப் போகும் என்று நம்பினார்கள். விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்குச் சென்று நாட்டுக்காகத் தியாகம் செய்த தலைவர்கள் நாட்டை ஆள்வது அவர்களுக்கு நம்பிக்கை தந்தது. பிறருக்கு மக்களுக்குத் தங்கள் நிலங்களைக் கொடுத்தால் தங்களின் வாழ்க்கையும் முன்னேறும் என்று உளமார அவர்கள் நம்பினார்கள். கல்வி, முன்னேற்றம், அடிப்படை வசதிகள் தங்களுக்குக் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். வேலைவாய்ப்புகள், கல்லூரிகளில் இடம் ஆகியவற்றைக் கூட அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஓரளவுக்குத் தன்மானம் மிகுந்த வாழ்வை அவர்கள் எதிர்நோக்கினார்கள். அந்த நம்பிக்கை பொய்க்க ஆரம்பித்த பொழுது தான் கிளர்ச்சிகள் ஏற்பட்டன.
1966-ல் பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தலைமையில் விடுதலை இந்தியாவின் ஆதிவாசி கிளர்ச்சி முதல்முறையாக நிகழ்த்தப்பட்டது. அரசின் வனக்கொள்கைகளுக்கு எதிராக ஆதிவாசிகளை அந்த முன்னாள் பழங்குடியின மகாராஜா அணிதிரட்டினார். போலீஸ் இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்கியது/ பிரவீர் சந்திர பன்ஜ் தியோ தன்னுடைய ஊரான ஜந்தர்பூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். எழுபதுகளில் நிலவுரிமை சார்ந்து பூமி சேனா, முன்னாள் பாதிரியார்கள் ஆதிவாசிகளின் நில, வன உரிமைகளைக் காக்க நடத்திய கஷ்டகாரி சங்கத்தனா இயக்கங்கள் இயங்கின. ஜார்கண்ட் இயக்கம் பழங்குடியின தலைவரான ஜெய்பால் சிங்கின் கருத்தாக்கமான தனிப் பழங்குடியின மாநிலம் என்பதை அமைக்கும் நோக்கத்தோடு எழுந்தது. மத்திய இந்தியாவின் பீகார், ஒரிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் இருபது மாவட்டங்களை ஒன்றாக இணைத்து ஒரு மாநிலத்தை அமைக்க அவர் விரும்பினார். 56-ல் மாநில மறுசீரமைப்புக் குழுவிடம் அந்த வைத்த பொழுது அது ஏற்கப்படவில்லை. ஜெய்பால் சிங்கின் மாநிலமான பீகாரில் இருந்த பழங்குடியின மாவட்டங்கள் கனிமங்கள், வன வளங்களைக் கொடுத்தார்கள். ஆதிவாசிகள் அல்லாத பிராமணர்கள் அவர்களை ஆண்டார்கள். அவர்களின் சுரண்டலை எதிர்த்து இம்மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் நிகழ்ந்தது. அது வன்முறையைப் பயன்படுத்தியது.
எண்பதுகளில் பெரும்பாலும் ஆதிவாசிகளை உள்ளடக்கிய நர்மதா பச்சோ அந்தோலன் இயக்கம் மேதா பட்கரால் துவங்கி மேற்கொள்ளப்படுகிறது. நர்மதா அணையின் மீது கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக இந்த இயக்கம் இயங்குகிறது. இந்த அணைக்கு எதிரான இயக்கம் வித்தியாசமானது. நதியின் மீது கட்டப்படும் அணையின் பயன்கள் பெரும்பாலும் குஜராத்துக்குச் செல்கிறது. ஆனால், பாதிக்கப்படும் மக்கள் மத்திய பிரதேச மாநிலத்தைப் பெரும்பாலும் சேர்ந்தவர்கள். அதிலும் அறுபது சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் பழங்குடியினர். இந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்கிறது/.
இந்த அநீதிகள், இடப்பெயர்வுக்கு எதிரான போராட்டங்களை எல்லாம் விடப் பெருமளவில் நிகழும் இன்னொரு கிளர்ச்சி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது. 67-ல் மேற்குவங்கத்தின் நக்சல்பாரியில் பழங்குடியினரையும் உள்ளடக்கி எழுந்த இந்த இயக்கம் வன்முறையைத் தன்னுடைய முறையாகக் கையாண்டது. அந்த அமைப்பு தன்னுடைய போராளிகளாக ஆதிவாசிகளை மாற்றிக்கொண்டது. முதலில் மாவோயிச இயக்கங்கள் மேற்கு வங்கத்தில் கானு சன்யால், சாரு மஜூம்தார் ஆகியோரால் துவங்கப்பட்டது. ஆந்திராவில் நாகி ரெட்டியின் தலைமையில் ஸ்ரீகாகுளம், அதிலாபாத் மாவட்டங்களில் இந்தக் கிளர்ச்சி எழுந்தது. ஆரம்பத்தில் இருந்தே மாவோயிஸ்ட இயக்கம் பழங்குடியினரின் பகுதிகளில் இயங்கியது. அது அவ்வப்பொழுது எழுச்சி பெற்று மீண்டும் அடக்கப்படும். 6o களிலிருந்து தற்போது வரை பல்வேறு மத்திய இந்திய மாவட்டங்களில் இந்த இயக்கம் பழங்குடியினரை அங்கமாகக் கொண்டு இயங்குகிறது. மகாராஷ்டிராவின் கச்சிரோலி, சத்தீஸ்கரின் பஸ்தார், ஒரிசாவின் கலஹாண்டி, கோராபுட், ஜார்க்கண்டின் பெரும்பான்மை மாவட்டங்களில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது.
அறுபதுகளில் இருந்து சுரண்டல், இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு உள்ளானதற்கு எதிராகக் கிளரச்சிகளில் பல்வேறு பகுதிகளில் ஆதிவாசிகள் இயங்கி வருகிறார்கள். இவை மூன்று வகையில் நடைபெறுகின்றன. ஆதிவாசிகளின் பாரம்பரிய தலைவர்கள் பிரவீர் சந்திர பன்ஜ் தியோவைப் போன்றோர் வழிநடத்துவது நடக்கிறது. சமூகச் சேவை இயக்கங்களான கச்டகாரி சங்கத்தன், நர்மதா பச்சோ அந்தோலன் முதலிய இயக்கங்கள் அமைதிவழியில் இன்னொருபுறம் செயல்படுகின்றன. ஆயுதம் ஏந்தி மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் போராடுகிறார்கள்.
இம்மக்களைப் போலவே கொடுமையான அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆதிவாசிகளின் போராட்டங்கள் ஆச்சரியம் தரும் வகையில் அமைதி வழியில் நடக்கிறது. அவர்களின் நலன்களைப் பேசும் அரசியல் தலைவர்களான கன்ஷி ராம், ராம் விலாஸ் பஸ்வான் மாயாவதி முதலியோர் எழுந்தார்கள். மாயவாதி மூன்று முறை உபியின் முதல்வராக இருந்துள்ளார். அடுத்துவர இருக்கும் தேர்தலிலும் அவர் முதல்வர் ஆவார் என்கிறார்கள். பல்வேறு கூட்டணி அரசுகள், மாநில அரசுகளைத் தலைமையேற்று நடத்துவதும் தலித் தலைவர்களால் செய்யப்பட்டது.
மாயாவதி 2006-ல் நடந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்றார். அம்மக்கள் சட்டரீதியான வழிமுறைகளையே தங்களின் எழுச்சிக்கு பயன்படுத்துகிறார்கள். ஆதிவாசிகளைவிட ஏன் தலித்துகள் ஏன் சட்டரீதியான வழிமுறைகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள்? ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்கள், சமூகச் சேவை இயக்கங்களைக் கொண்டு தங்களின் எழுச்சியை மேற்கொள்ள முயல்கிறார்கள். தலித்துகள் சமயங்களில் மாவோயிஸ்ட்களுடன் இணைந்தாலும் பெரும்பாலும் அமைதி வழியில் போராடுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு. பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நான் இரண்டு காரணங்களை முன்வைக்கிறேன். ஒன்று வரலாற்று ரீதியானது, இன்னொன்று புவியியல் சார்ந்தது.
அப்பட்டமாக, நேராகச் சொல்வது என்றால் இதற்குக் காரணம் அண்ணல் அம்பேத்கர். ஆதிவாசி அம்பேத்கர் ஒருவர் அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆதிவாசிகளுக்கு ஒரு தேசிய தலைவர் இன்னமும் கிடைக்கவில்லை. அவரின் காலத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே தலைவராகப் பார்க்கப்பட்ட அம்பேத்கர் இந்தியாவின் தலைவராக நேசிக்கப்பட்டு, போற்றப்பட்டுக் கொண்டாடப்படுகிறார், மறுகண்டுபிடிப்புக்கு அவர் உள்ளாகி இருக்கிறார். பிற தலைவர்கள் மாநிலத்தலைவர்களாகவோ, கட்சியின் முகமாகவோ மாற்றப்பட்டுவிட்ட சூழலில் அவர் இந்தியா முழுக்க இருக்கும் தலித்துகளின் நம்பிக்கை ஒளியாக உள்ளார். சுரண்டலுக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான அவரின் வெற்றிகரமான போராட்டம் அவரை முன்மாதிரியாக ஆக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தைப் பெருமளவில் உருவாக்கிய அம்பேத்கர் கல்வி, மக்களை ஒன்று சேர்த்தல், அமைதி வழியில் கிளர்ச்சி செய்வது ஆகியவற்றின் மூலம் தன்னுடைய மக்களுக்காகப் போராடினார். அம்பேத்கர் எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் வழியில் இயங்கினார். சத்தியாகிரகத்தில் கூட அவர் ஈடுபட்டார். கல்வி, அமைப்புகளைக் கொண்டு இயங்க அவர் காட்டிய வழியில் தலித்துகள் இயங்குகிறார்கள். அப்படியொரு வழிகாட்டும் தலைவர் ஆதிவாசிகளுக்கு இல்லை.
மேலும், ஆதிவாசிகள் பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக உள்ளார்கள். அவர்களின் மீதான வன்முறைகள், சுரண்டல்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அவர்கள் அனைவரும் தங்களின் சிக்கல்கள் ஒன்றே என்று இந்திய அளவில் அணிதிரளவில்லை. அதே சமயம் ஆதிக்க ஜாதி இந்துக்களின் கொடுமைகளுக்கு ஆளாகும் தலித்துகள் இந்திய அளவில் திரண்டு போராடுவது நிகழ்கிறது.
புவியியல் ரீதியாக ஆதிவாசிகள் பீடபூமியின் பகுதிகளில் பெரும்பாலும் வசிக்கிறார்கள். ஆந்திராவில், மகாராஷ்டிராவில் 9%, தமிழகத்தில் 1% என்று இருக்கும் அவர்கள் இந்தியாவின் பழங்குடியின மாநிலம் என அறியப்படும் சத்தீஸ்கரில் கூட 30% என்கிற அளவில் தான் இருக்கிறார்கள். தலித்துகளோ இந்தியா முழுக்கப் பரவியிருக்கும் சிறுபான்மையினராக உள்ளார்கள். அவர்கள் 350 – 400 மக்களவைத் தொகுதிகள் வரை வாக்குவங்கி கொண்டவர்களாக உள்ளார்கள். தமிழகத்தில், கர்நாடகாவில், ஆந்திராவில் என்று பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் பத்துச் சதவிகிதம் அளவுக்கு ஓட்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாபில் இது இருபது சதவிகிதத்தைக் கடந்து அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஆதிவாசிகளோ அதிகபட்சம் எழுபது தொகுதிகளில் மட்டுமே காணப்படுகிறார்கள். இவ்வாறு ஒப்பிடுவதால் தலித்துகள் கொடுமைக்கு ஆளாவதில்லை என்று நான் சொல்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். தலித்துகள் கடும் அநீதிகள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு அனுதினமும் ஆளாக்கப்படுகிறார்கள். அதே சமயம், அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தேர்தல் அரசியல், சட்ட ரீதியிலான வழிமுறைகளின் மூலம் மேற்கொள்கிறார்கள்.
நியாயமான, கவலையளிக்கும், நேர்மையான தங்களின் பிரச்சனைகளுக்கு அமைதி வழியில் போராடுவது., கருத்தை முன்னிறுத்துவது ஆகியவற்றைச் செய்கிறார்கள். ஆதிவாசிகள் மாவோயிஸ்ட்களுடன் இணைந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்டு தங்களின் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள்.
முஸ்லீம்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளானாலும் அவர்கள் பெரும்பாலும் ஆயுதம் ஏந்துவது கிடையாது. அவர்கள் மாநில, நாடாளுமன்ற தேர்தல்களில் முக்கியமான தேர்தல் சக்தியாக உள்ளார்கள். எனினும், ஆதிவாசிகள் இவர்கள் இருதரப்பினரையும் விடக் கடுமையான ஒடுக்குமுறை, அநீதிகளுக்கு ஆளாகிறார்கள். அதேசமயம், அவர்கள் இந்தியாவில் மிகக்குறைந்த கவனமே பெறுகிறார்கள். அவர்கள் குறித்துப் பேச வேண்டிய அரசு, அதிகாரிகள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். பல்கலை பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் பெருமளவில் அவர்களை இந்தியாவின் சமமான குடிமக்களாக ஆக்க செயல்படுவதில்லை. இஸ்லாமியர்கள், தலித்துகள் குறித்தும் பெரிதாகக் கவனம் தரப்படுவதில்லை என்பது கவலை தருவது. தலித்துகள், முஸ்லீம்கள் மத்திய அமைச்சரவையில் பாஜக அரசைத் தவிர்த்து இடம்பெறுவது நிகழ்கிறது. முக்கியமான அமைச்சரவைகள், ஜனாதிபதி பதவி முதலிய அரசமைப்புப் பதவிகள் அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. அதேசமயம் எந்த ஆதிவாசியும் இப்படிப்பட்ட இடங்களைக் கூட அடையவில்லை. தலித், முஸ்லீம் சிக்கல்கள் தேசிய பிரச்சனையாகக் காணப்படுகிற பொழுது, ஆதிவாசிகள் சிக்கல் உள்ளூர் பிரச்சனையாகவே முடிக்கப்பட்டு விடுகிறது.
அரசு, ஆதிவாசிகள் அல்லாத பிற குடிமகன்கள் ஆதிவாசிகளின் நலனில், போராட்டங்களில் கவனம் செலுத்தாமல் போனதால் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை தங்களுடையதாக மாவோயிஸ்ட்கள் மாற்றிக்கொண்டார்கள். ஆதிவாசிகளின் பகுதியில் மாவோயிசம் செழிப்பதற்கு வரலாறு, புவியியல் ஆகியவற்றோடு வேறொரு முக்கியக் காரணமும் உள்ளது. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில், தேச கட்டமைப்பில், ஜனநாயக அமைப்பில் ஆதிவாசிகள் மிகக்குறைவாகப் பெற்று, மிகப்பெரிய அளவில் இழந்திருக்கிறார்கள். ஆகவே, அந்தக் கடும் அதிருப்தியை மாவோயிஸ்ட்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்வதில் வெற்றிக் கண்டிருக்கிறார்கள். ஆதிவாசிகளின் நலன்களைக் குறித்துக் குரல் கொடுப்பதை மாவோயிஸ்ட்கள் செய்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
மாவோயிஸ்ட்கள் புவியியல் ரீதியாக வெற்றிகரமாக இயங்குவதற்கு ஆதிவாசிகள் வசிக்கும் மலைகள், வனங்கள் உதவுகின்றன. அவர்களின் கொரில்லா போர்முறைகளுக்கு அதுவே உகந்த நிலம். திடீரென்று தோன்றி தாக்கிவிட்டு மறைந்துவிட முடியும். காவல்துறையைச் சுட்டுக் கொல்வதோ, எதிர்பாராத தருணத்தில் அரசியல் தலைவர்களை அழிப்பதோ இந்த நிலப்பரப்பில் சுலபமான ஒன்றாக இருக்கிறது. மேலும் காவல்துறை ஒரு மாநில எல்லையைக் கடந்து நகர முடியாது என்பதால் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா என்று மாநிலம் விட்டு மாநிலம் தாவி தப்பிக்கும் போக்கும் ஆதிவாசிகளிடம் உள்ளது.
மிகக்குறைவாகப் பெற்று, அதீதமாக இழந்த பழங்குடியினர் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். அரசு எப்படி இவர்களை எதிர்கொள்வது. அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுபவனான நான் மாவோயிஸ்ட்களின் வன்முறையை ஏற்க மறுக்கிறேன். ஒரு கட்சி ஆட்சி ரஷ்யா, சீனாவில் எப்படிப்பட்ட படுகொலைகள், ரத்த வெள்ளம், கொடுமை, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தன என்பதை உலக வரலாற்றின் மாணவனாக அறிவேன். அதனால் நான் மாவோயிஸ்ட்களை நிராகரிக்கிறேன். எப்படி ஒரு ஜனநாயக அரசு மாவோயிசத்தை எதிர்கொள்வது.
இருவழிகள் உள்ளன. காவல்துறையைக் கொண்டு இவர்களைக் கட்டுப்படுத்துவது ஒரு புறம் நிகழவேண்டும். மாவோயிஸ்ட்களைத் தனிமைப்படுத்தி, ஓரங்கட்டி, சரணடைய சொல்லவேண்டும், அவர்கள் அப்பொழுதும் வன்முறையைப் பின்பற்றுவார்கள் என்றால் அவர்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும். இன்னொரு புறம் வளர்ச்சியின் கனிகள் பழங்குடியின மக்களைச் சென்றடைய வேண்டும். நல்ல பள்ளிகள், மருத்துவ மையங்கள், சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். PESA எனப்படும் கிராம சுயாட்சியை இப்பகுதிகளுக்குப் பரவலாக்க வேண்டும். ஐந்தாவது பட்டியலில் கனிம வளங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பாதியை பகிர்ந்து கொள்ள இடமிருப்பதாக ஏ.எஸ்.சர்மா எனும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சொன்னதைப் பின்பற்ற வேண்டும்.
இவை இரண்டிலும் மத்திய அரசு தவறியிருக்கிறது. காவல்துறை செயல்பாட்டை அது அவுட் சோர்ஸிங் செய்கிறது. உங்கள் ஊரைச் சேர்ந்த மிக மோசமான உள்துறை அமைச்சர் என நான் உறுதியாகக் கருதும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சல்வா ஜூடும் எனும் அநீதி சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டது. மாநில ஆளும் பாஜக, மத்திய காங்கிரஸ் ஆகியவை கூட்டு சேர்ந்து இதனை அரங்கேற்றின. பதினான்கு முதல் இருபத்தி ஒரு வயது பழங்குடியின இளைஞர்கள் கையில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு மாவோயிஸ்ட்கள், பழங்குடியினர் எதிர்கொள்ளப்பட்டார்கள். இடதுசாரிகள் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் வங்க, இந்து, பத்ரோலக் கட்சி போலவே நடந்து கொள்வதால் இதற்கு எதிராகப் பெரிதாக எதுவும் முயலவில்லை. இது அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி ராவ் தலைமையிலான பெஞ்ச் அது சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்துச் சல்வா ஜூடுமை கலைக்கும்படி சொன்னது. சத்தீஸ்கர் அரசு மத்திய அரசின் ஆசியோடு வேறு பெயர்களில் அடக்குமுறை சாம்ராஜ்யத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு காவல்துறையின் கையில் இல்லாமல் அது இப்படித் தவறாக அவுட் சோர்சிங் செய்யப்படுவது கவலைக்குரியது.
ஆதிவாசிகள் நம்முடைய பொருளாதார அமைப்பில் பெரும் கொடுமைக்கும், ஒடுக்குமுறைக்கும், துரத்தியடிக்கப்படுவதற்கும் உள்ளாகிறார்கள். அரசின் கட்டுப்பாட்டில் பொருளாதாரம் இருந்த பொழுது கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள் என்றால், தாரளமயமாக்கல் காலத்தில் வளர்ச்சி என்கிற பெயரில் அவர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள். பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் பரவியிருக்கிறார்கள் என்றாலும், ஓடிஸா எடுத்துக்காட்டுத் தாராளமயக்காமல் என்ன செய்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கும். பதினைந்து வருடங்களுக்கு முன்வரை அங்கே மாவோயிஸ்ட்கள் தாக்கம் இல்லை. ஆனால், ஒரிசா அரசு சுரங்க நிறுவனங்களோடு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது. பாக்சைட் முதலிய பல்வேறு தனிமங்கள் வெட்டியெடுக்கப்பட ஆதிவாசிகள் தங்களின் வாழ்விடங்களை விட்டு அதிகாரத்தைக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். இப்பொழுது ஆறு மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டில் ஓடிசாவில் உள்ளன.
மாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அரசு பாதுகாப்பை உறுதி செய்து, வளர்ச்சியில் ஆதிவாசிகளுக்குப் பங்கைத் தரவேண்டும். இதற்கு மாறாகக் கண்காணிக்கும், அச்சுறுத்தல் தரும் அடக்குமுறை அரசாக ஒருபுறமும், இன்னொரு புறம் உலகமயமாக்கல் காலத்தில் வளர்ச்சியின் கனிகளைச் சற்றும் ஆதிவாசிகளுக்கு வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாத புறக்கணிப்பை அரசு செய்கிறது. அரசும், குடிமக்களும் நிரப்பத் தவறிய இடத்தை மாவோயிஸ்ட்கள் பிடித்துக் கொண்டார்கள்.
அதேசமயம், ஏழைகளை விடுவிப்பவர்கள் என்றோ, பழங்குடியினரின் பாதுகாவலர்கள் என்று மாவோயிஸ்ட்கள் என எண்ணிக்கொள்ள வேண்டாம்.
ஆதிவாசிகள் தண்டகாரண்யம் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக்க கனவு காண்கிறார்கள். சுக்மா, பஸ்தார் முதலிய மாவட்டங்களில் பரவியுள்ள அவர்கள் மத்தியில் உள்ள அரசை நீக்கிவிட்டுத் தாங்கள் ஆள பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் காடுகளில் வெற்றிகரமாக இயங்கலாம். சமவெளிக்கு வந்தால் அவர்கள் ராணுவத்தால் நசுக்கப்படுவார்கள். அதேபோலப் பழங்குடியினரிடம் கிடைக்கும் ஆதரவு விவசாயிகள், மத்தியவர்க்க மக்கள் ஆகியோரிடம் அவர்களுக்குக் கிடைக்காது. அவர்களின் சாகசம் மிகுந்த கனவு ஓரளவுக்குக் கிளர்ச்சியையும் பெருமளவில் அச்சத்தையும் ஒருங்கே எனக்குத் தருகிறது. எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் வருகிறார்களோ அங்கெல்லாம் கடும் வன்முறை நிகழ்கிறது. அரசும், அவர்களுக்கும் இடையே அப்பாவி ஆதிவாசி மக்கள் சிக்கி சீரழிகிறார்கள்.
அரசைப் போலவே சிறுவர்களை அவர்கள் தங்களின் படையில் சேர்க்கிறார்கள். மக்கள் கல்வி கற்க விரும்பாததால் பள்ளிகளைக் குண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஜெயபிரகாஷ் நாராயண் கனவு கண்ட கிராம சுயராஜ்யம் அவர்களின் எழுச்சிக்குத் தடை என்பதால் ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படும் கிராமத்தலைவர்கள் கடத்தி கொல்லப்படுகிறார்கள். அவர்கள் அமைதிவழி அரசமைப்பு வழிமுறை, அரசு அதிகாரத்தின் அடையாளமாக, வளர்ச்சியைக் கொண்டு வருபவர்களாக இருப்பதால் கிராமத் தலைவர்களைக் கொல்கிறார்கள். தகவல் சொல்லுபவர்கள், இருபக்கமும் நிற்காமல் அமைதியாக இருக்கும் அப்பாவிகள் ஆகியோர் மாவோயிஸ்ட்களால் கொல்லப்படுவது பலபேரால் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வினை ஆற்றும், ஜனநாயகம், அரசமைப்புக்கு எதிரான, வன்முறை, ரத்த வெறி மிகுந்த கருத்தாக்கம் ஒன்றே மாவோயிஸ்ட்களால் முன்னெடுக்கப்படுகிறது. எனவே. இவர்களைக் கனவு நாயகர்களாக, தன்னிகரில்லா தலைவர்களாகக் கொண்டாடுவது அபத்தமானது.
ஏன் மாவோயிசம் ஆதிவாசிப்பகுதியில் வளர்ந்துள்ளது என்பதையும், ஆதிவாசிகள் நம்முடைய ஜனநாயகத்தில் மற்ற எல்லாச் சிறுபான்மையினரை விடவும் கடும் அடக்குமுறை, அநீதிகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதேசமயம், மாவோயிஸ்ட்களை அதற்கான தீர்வு என்று எண்ணிக்கொள்ளக் கூடாது. சமூகச் சேவை இயக்கங்கள், மருத்துவர்கள். பல்வேறு அதிகாரிகள் மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை ஜனநாயக முறையில் பழங்குடியினருக்கு வழங்க முடியும் எனச் செய்துகாட்டியுள்ளார்கள். அதை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். காங்கிரஸ் அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டம் தீரமிகுந்த பழங்குடிகள் அமைச்சரால் ஏற்பட்டது. அதை மற்ற அமைச்சர்கள் நிறைவேற்ற தயாராக இல்லை. அதே போல, இப்பொழுதைய அரசு வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகும் செயல்களை தொடர்ந்து செய்கிறது, அனுமதிக்கிறது.
என்னுடைய உரையின் இறுதிப்பகுதிக்கு வந்துள்ள நான் ஆதிவாசிகளின் அவலகரமான நிலையை எட்டுப் புள்ளிகளில் முக்கியமாக நிகழ்வதாகக் காண்கிறேன். அது இன்னமும் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்.
வளமிகுந்த வனங்கள், நெடிய நதிகள், கனிம வளங்கள் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்த பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் தாராளமயமாக்கல் காலத்தில் முப்பெரும் சாபத்துக்கு உள்ளாகி விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
தேசிய இயக்கத் தலைவர்களான காந்தி முதலியோர் பெண்கள்., இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆகியோருக்காகப் பேசினாலும் ஆதிவாசிகளைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரும் கூட ஆதிவாசிகளின் நலனில் அக்கறையில்லாதவராக, கடுமையான கருத்துக்களைக் கொண்டவராக இருந்தார். இதனால் அவர்கள் நலன் கவனம் பெறவே இல்லை.
மக்கள்தொகையில் குறிப்பிட்ட சில பகுதியில் அவர்கள் அடங்கிவிடுவதால் தேர்தல் அரசியலில் அவர்கள் கவனிக்கப்படுகிறவர்களாக இல்லை.
அவர்களுக்கு இருக்கும் இட ஒதுக்கீட்டையும் அவர்களைவிட நன்றாக ஆங்கிலம் அறிந்த வடகிழக்கு பழங்குடியினர் கைப்பற்றிக்கொள்கிறார்கள். மேலும், கிறித்துவ, இந்து., மாவோயிச மிஷனரிக்களுள் சிக்கிக்கொண்டு அவர்கள் பரிதவிக்கிறார்கள். அம்மக்களின் எண்ணற்ற தாய்மொழிகளில் பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் இந்தி, ஓடியா முதலிய மொழிகளில் கல்வி கற்கும் அவலமும், தங்களின் மகத்தான கலாசார வளங்களை இழக்கும் கொடுமையும் அரங்கேறுகிறது.
ஆதிவாசிகளுக்கு உத்வேகம் தரும், அகில இந்திய அளவில் ஒன்று திரட்டும் ஒரு தலைவர் அம்பேத்கரை போலக் கிடைக்கவில்லை.
திறன், அறிவு, சுற்றுச்சூழல், பல்லுயிர் வளம் ஆகியவற்றைக் கொண்டு வளர்ச்சியை அடையும் எடுத்துக்காட்டுகள் இன்னமும் அவர்களிடையே எழும் சூழலும், வாய்ப்பும் இல்லை. தலித்துகளில் தொழில்முனைவோர் எழுவதைத் தேவேஷ் கபூர் முதலியோர் படம்பிடித்துள்ளார்கள். ஆதிவாசிகள் வளர்ச்சியின் பாதையில் எப்பொழுது செல்லமுடியும் எனத் தெரியவில்லை.
அரசு அதிகாரிகள். காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் எல்லோரும் இம்மக்களின் நியாயமான சிக்கல்கள் குறித்துப் பாராமுகம் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
தங்களின் போராட்ட நெருப்பு எரிய எரிபொருளாக ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் வன்முறையை அரசும் கடும் வன்முறையால் எதிர்கொள்கிறது. வளர்ச்சி என்பதை மறந்ததைப் போல அரசு நடந்து கொள்கிறது.
வரலாற்று ஆசிரியர்கள் ஜோசியர்கள் இல்லை. அதேசமயம், தற்போதைய ஆதிவாசிகளின் நிலைமை கவலைக்கிடமானதாக உள்ளது. அது வருங்காலத்தில் செம்மையுறும் என்கிற நம்பிக்கையை மட்டும் வெளிப்படுத்தி உரையை முடிக்கிறேன். நன்றி!
தமிழில்: பூ.கொ.சரவணன்