ஹர்ஷா போக்லே காட்டும் விளையாட்டு வழி வாழ்க்கை


அனிதா போக்லேவும் அவருடைய கணவரான ஹர்ஷா போக்லேவும் இணைந்து எழுதிய ‘The Winning Way’ நூல் குறித்துச் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு அறிமுகம் எழுதினேன். அதன் பிரதியை எங்கும் நான் பாதுகாத்து வைக்கவில்லை. இப்போது அதே நூலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வாசித்தேன். விளையாட்டின் வழியாக மேலாண்மை என்பது தான் நூலின் மையம். அதைக் கடத்துவது இந்தப் பதிவின் நோக்கமில்லை. நூலின் சுவையான சிதறல்கள் மட்டும் இங்கே:

வீரம் என்பது அச்சப்படாததை போல நடிப்பது:

ஆடுகளத்தில் எதிராளிக்கு கிலி கொடுத்துக் கொண்டிருப்பது முக்கியமானது. ஜெப்ரி பாய்காட் எதிரணி வீரர்கள் ஆடுகளத்துக்குள் நுழைந்த அடுத்தக் கணம் களத்தில் இருப்பார். ‘பயந்துட்டான் மாப்ளே’ என்று எதிரணி நினைத்து விட்டால் இன்னமும் வேகமாகப் பாய்வார்கள்.

அது மேற்கிந்திய அணியுடனான போட்டி. எதிரணி பந்து வீச்சாளர் வீசிய பவுன்சர் கவாஸ்கரின் மண்டையைப் பதம் பார்த்தது. எதிரில் இருந்து மொகிந்தர் அமர்நாத்துக்கே வலிக்கிற அளவுக்குச் சத்தம் கேட்டது. ‘ஒன்றுமில்லை. பந்தை போடு’ என்று சைகை காட்டினர் கவாஸ்கர். தண்ணீர் கொண்டு வந்த கிரண் மோரே, தலையைத் தடவி ‘ரொம்ப வலிக்கலையே’ எனக்கேட்டார். அப்படி ஒரு முறை முறைத்தார் சுனில் கவாஸ்கர். வலிக்கிறது என்று காட்டுவது எதிராளிக்கு வல்லமை தந்துவிடும் என்பது அவரின் பார்வை. 

Image may contain: 2 people, people smiling, text

ராகுல் திராவிட் 1998-99 காலத்தில் கென்யா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பந்துகளை விரட்ட கே பார்க்க கூடத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தார். சதங்களை விரட்டுவது என்கிற சூத்திரம் அவர் முன்னால் நின்றது. ஆனால், திராவிட் அதை நிராகரித்தார். ‘Result Goals ஐ விட performance Goals முக்கியம்.’ என்று முடிவு கட்டினார். அதாவது ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக ஆடவேண்டும். சதங்களைத் துரத்துகிற பாணி வேண்டாம். அது இந்தியாவின் மிகச்சிறந்த பினிஷராகத் திராவிடை மாற்றியது. எலிப்பந்தயங்களில் ஓடுகிறவர்கள் கவனிக்க வேண்டியது இது.

ட்வென்டி ட்வென்டி போட்டிகளுக்குத் திராவிட் சரிப்பட மாட்டார் என்று பலர் கருதினார்கள். அவரின் தடுப்பாட்டம் செல்லாது என்பது பலரின் கணிப்பாக இருந்தது. திராவிட் துவக்க ஆட்டக்காரராகக் களத்தில் இறங்குவார். விக்கெட்கள் விழாமல் பார்த்து கொள்வார். ஓரளவுக்கு அடித்தளம் இடப்பட்டதும் விக்கெட்டை தாரைவார்த்து விட்டு நடையைக் கட்டுவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கலக்கி எடுத்தது. 

Image result for dravid first test match

எதைக்கண்டும் பிரமிக்காதே:

1976-ம் வருடம். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 403 என்கிற இலக்கு குறிக்கப்பட்டு இருந்தது. அதை இந்திய அணி துரத்தினால் துவம்சம் என்றே பலர் எண்ணினார்கள். நான்கே விக்கெட்களை இழந்து அணி அந்த இமாலய இலக்கை எட்டியது. எப்படி எனச் சுனில் கவாஸ்கரிடம் கேட்டார்கள். ‘அவ்வளவு பெரிய இலக்கை எல்லாம் கண்முன் கொண்டுவரவில்லை. ஆட்டம் ஆரம்பிக்கிற போது இப்போதைக்கு அவுட் ஆகாமல் ஆடுவோம் என்று முடிவு செய்து கொண்டோம். காலை வேளை கடந்ததும், எப்படியோ தப்பித்து விட்டோம், முட்டாள்தனமாக ஆடாமல் மட்டும் இன்னும் கொஞ்ச நேரத்துக்குப் பார்த்துக் கொள்வோம் எண்பது அடுத்த இலக்கு. அன்றைய ஆட்டம் முடிகிற நிலைமை வந்ததும், நாளைக்கு ஆடுவதே முக்கியம் என்று தடுப்பாட்டம். இப்படித்தான் வெற்றி பெற்றோம்.’ என்றார். 

Image result for sunil gavaskar

ஹோப்பார்ட் நகரில் ஒருநாள் போட்டி. இந்திய அணிக்கு நாற்பது ஓவர்களில் 321 இலக்கு. தலை மேல் கைவைத்து உட்கார்ந்து இருக்க வேண்டிய அணி. இப்படிக் கோலி யோசித்தார், ‘இரண்டாகப் பிரித்துக் கொண்டால் 160 ரன்களை ஒவ்வொரு இருபது ஓவருக்கும் அடிக்க வேண்டும். இதைத்தானே ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் செய்து கொண்டிருக்கிறோம். அவ்வளவு தான்.’ அப்படியே ஆடி அன்று அணி இலக்கை எட்டி இருந்தது.

ஆஸ்திரேலிய அணி 434 ரன்களை அடித்து இருந்தது. காலிஸ் அறைக்குள் வந்தார். ‘இந்தப் பிட்ச், தட்வெட்பத்தில் இவர்கள் அடித்திருக்கும் ரன்கள் போதாது. என்னைக்கேட்டால் அவர்களால் இன்னமும் 15 ரன்களை அடித்திருக்க முடியும். ஸோ, ஈஸி பாய்ஸ்.’ என்று இயல்பாகப் பேசினார். அணி அடித்து நொறுக்கியது. பிரமிப்பவர்கள் பின்தங்கி விடுகிறார்கள்.

முடியாது எனச் சொல்லாதே:

ஸ்டீவ் வாக் தன்னுடைய அணியைப் பார்த்தார். இந்த அணி அடுத்தப் பத்து ஆண்டுகள் உலகக் கிரிக்கெட்டையே ஆட்டிப்படைக்கும் என்றால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஸ்டீவ் வாக் எளிமையான இலக்கு ஒன்றை வைத்துக் கொண்டார். உலககோப்பைக்குச் சில மாதங்களே இருந்த சூழலில் அதற்கு முந்தைய தொடரை ‘NO REGRETS TOUR’ எனப்பெயரிட்டார். அணியின் அத்தனை வீரர்களும் செய்கிற அனைத்தையும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும். அணியின் கூட்டத்தில் கூடத் தங்களின் முழுப் பங்களிப்பை தரவேண்டும். தோற்றாலும் பரவாயில்லை, நான் இன்னமும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று யாரும் வருத்தப்படக்கூடாது. இவ்வளவுதான் அவர் அணிக்கு போட்டுகொடுத்த பாதை. அணி உலககோப்பையைத் தூக்கியது, கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.

ஆஸ்திரேலிய அணி இந்திய தொடருக்கு வந்திருந்தது. பயிற்சி போட்டியில் வார்னே around the wicket வரவில்லை என்பதைச் சச்சின் கவனித்தார். அந்தப் பாணியில் பல நூறு பந்துகளை வீச செய்து
அடித்துப் பயிற்சி செய்தார். டெஸ்ட் போட்டியில் வார்னே வீசிய முதல் பந்தே around the wicket. எல்லைகோட்டுக்குப் பறந்தது. சச்சின் எவ்வளவு எளிமையாக அடித்து விட்டார் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள் 🙂

இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி மோதுகிற ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடர் 1989-ல் நடைபெற்றது. இம்ரான் கான் தொடர்ந்து தன்னுடைய அணியினரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். ஒரு இடத்தில் கூட இந்திய அணியைப் பற்றிப் பெருமையாக ஒரு வார்த்தை பேசவில்லை. மீண்டும், மீண்டும் உற்சாகபடுத்தியே எதிரணியை அசரடித்தார்.

தியாகங்கள் செய்தாலே சிகரங்கள் கிட்டும்:

அது 2014. சாய்னா பாட்மிட்டன் விளையாட்டுக்கு ஒரு கும்பிடு போட்டு விடலாம் என்கிற அளவுக்குத் தோல்விகளும், சோர்வும் துரத்தியது. அப்போது இறுதியாக ஒரு முறை என்று முடிவு செய்து கொண்டார். சொகுசான ஹைதராபாத் வாழ்க்கையை விட முடிவு செய்தார். பயிற்சியாளரை மாற்றினார். ஒரு எளிய அறையில் பெங்களூரில் தங்கிக்கொண்டு பிசாசை போலப் பயிற்சி செய்தார். உலக நம்பர் 1 ஆனார். இந்திய ஓபன், ஆல் இங்கிலாந்து ஓபன் என்று வெற்றிகள் குவிந்தன. உலகச் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை எட்டினார். 

Image result for saina nehwal

வெற்றிகள் வெகுசீக்கிரம் வேண்டாம்:
அப்போது பீட் சாம்பர்ஸ்க்கு வயது 19. யு.எஸ். ஓபன் பட்டத்தை வென்றிருந்தார். உலகமே திரும்பி பார்த்தது. அடுத்த வருடம் மண்ணைக் கவ்வினார். கண்ணீர்விட்டு அழுவார் என்று பார்த்தால், ‘இது நன்மைக்கே’ என்றார் அவர். காரணம் எளிமையானது, வெகு சீக்கிரமே வெல்ல ஆரம்பித்தால் தலைக்கனம் கூடும், தவறுகள் புரியாது, தனித்து வெகுகாலம் ஜொலிக்க முடியாது. ஒரு அதிர்ச்சி ஓராயிரம் நன்மைகளைத் தரும். 

Image result for pete sampras

சாதாரணமானவை சாதிப்பதை சாய்க்கலாம்:

ஆஸ்திரேலிய அணி வெற்றியின் கோட்டில் நின்று கொண்டிருந்தது. ஆனால், லக்ஷ்மன்-இஷாந்த் ஜோடியை தாக்கி பிரிக்காமல், தற்காப்பின் மூலம் தகர்க்கலாம் எனக் கனவு கண்டது. ஒன்பதாவது விக்கெட்டுக்கு கூட்டு சேர்ந்த அவர்கள் இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துப் போனார்கள்.

உலகக் கோப்பைக்கான அணியை வார்த்துக் கொண்டிருந்தார் இம்ரான்கான். ஒரு வீரரை அதிரடியாக ஆடிவிட்டு வா என்று அனுப்பியிருந்தார். அவரோ விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தினார். பெவிலியனுக்குத் திரும்பியதும், இம்ரான்கான் எல்லாருக்கும் விழும்படி சொன்னார், ‘இனிமேல் நீ எப்போதே பாகிஸ்தான் அணிக்குள் இடம் பிடிக்க மாட்டாய்.’ நான் சொல்வதைக் கேட்காவிட்டால் பேக்கப் என்பதை அந்த ஒற்றை நிகழ்வு அணிக்கு உணர்த்தியது.

தோல்விகள் பெருகினாலும் தனித்த வெற்றிகளே தேவை:

எக்கச்சக்க வெற்றிகள் வேண்டும் என்று நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. உண்மையில் பல்வேறு தோல்விகளுக்கு நடுவேயே சிற்சில வெற்றிகள் சாத்தியம். அந்த வெற்றிகள் மகத்தானதாக இருக்க வேண்டும். திராவிட் சச்சின் இணைந்து 615 முறை பார்ட்னர்ஷிப் போட்டு இருக்கிறார்கள். ஐம்பது ரன்களைக் கடந்த போட்டிகளே நல்ல போட்டிகள் என்று அளவுகோல் வைத்துக் கொண்டால் இந்த இணை அதைச் சாதிக்கத் தவறிய போட்டிகள் 397. ஆனால், 218 போட்டிகளில் ஐம்பது ரன்களைக் கடந்த போதெல்லாம் கலக்கி எடுத்து காலத்துக்கும் நினைவில் நிற்கிற வெற்றிகளைப் பெற்றார்கள். 

Image result for sachin

புல்லேலா கோபிசந்த் சீனர்களைப் பாட்மிட்டன் போட்டியில் சந்திக்கிறார். அவர்களை எதிர்ப்பது கடினம். காட்டுமிராண்டிகள், நம்மைவிடச் சில அடிகள் கூடுதல் உயரம். நான்கு முதல் ஏழு புள்ளிகள் அவரையே உன்னால் பெற முடியும் என்றெல்லாம் பலரும் அச்சுறுத்தினார்கள். கோபிசந்த் எளிமையாக இப்படிப் பார்த்தார், ‘எப்படியும் ஏழு புள்ளிகள் தான் பெற முடியும் என்கிறீர்கள். நான் முழுதாக அடித்து ஆடிவிடுகிறேன். தோற்றாலும் துவண்டுபோய்த் தோற்க கூடாது.’ அந்தக் கோப்பையைத் தன்வசமாக்கி கொண்டு தான் அந்தப் போராட்டக்காரர் இந்தியா திரும்பினார். தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண்களிடம் அவர் சொல்வது, ‘நீங்களாக உங்கள் இயல்புக்கு ஆடுங்கள். எப்போதாவது தலையிடுகிறேன். பயிற்சிகள் உங்களின் போரட்டகுணத்தை மழுங்கடிக்கக் கூடாது.’ போர்க்குணம் மறந்து போர்க்கலை புத்தகங்களைப் புரட்டுவது பயன்தராது.

தலைவா நீ தனித்து நட:

அணித் தலைவருக்குச் சொகுசான பிசினஸ் கிளாஸ் இருக்கை தரப்படும். அதிகமாகக் களைத்துப் போயிருக்கும் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த இடத்தைத் தருவது தோனியின் வழக்கம். சேர்ந்து பயணிக்கிறோம் என்பதை உணர்த்தும் வெளிப்பாடு அது.

அது உலககோப்பை முதல் சுற்று. பாகிஸ்தான் தோல்விகளை மட்டுமே பெற்றுக்கொண்டு இருந்தது. அடுத்தப் போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் நடையைக் கட்ட வேண்டும். அணியின் மேலாளர் இன்திகாப் ஆலம் பாகிஸ்தான் போவதற்குப் பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டார். இம்ரான் சொன்னார், ‘உலககோப்பையை நாம் ஜெயிக்கிறோம். என்னைக் கேட்காமல் எதையாவது செய்தீர்கள் அவ்வளவுதான்.’ அடுத்தடுத்த போட்டிகளில் வென்றார்கள்.

அரையிறுதிக்கு முந்தைய நாள். இன்சமாம் உல் ஹக் ‘நான் ஊருக்கே போறேன். எனக்கு விளையாடவே வரலை.’ என்று கதறினார். இத்தனைக்கும் உலககோப்பைக்கு முன்னால் இம்ரான் கான், ‘இந்த உலககோப்பையில் மற்ற அணியினரின் பந்து வீச்சை இன்சி பதம் பார்ப்பார்.’ என்று அத்தனை நம்பிக்கையாகப் பேசியிருந்தார். அவர் இன்சமாமை பார்த்து இப்படிச் சொன்னார், ‘உன்னை முல்தானில் இருந்து ஆக்லாந்து அழைத்து வந்தது நன்றாக ஆடுவாய் என்று தான். நாளை என் நம்பிக்கையைக் காப்பாற்றுவாய். போ.’ அப்படித்தான் நடந்தது. அணி உலககோப்பையை முத்தமிட்டது. 

Image result for imran khan

கங்குலிக்கு இந்திய அணி பூனைக்குட்டிகள் போலப் பதுங்காமல் புலி போலப் பாயவேண்டும் என்கிற ஆக்ரோஷம் இருந்தது. யுவராஜ், ஹர்பஜன், பதான் என்று பல புதியவர்களைக் கண்டெடுத்து வளர்த்து அணியைத் திடப்படுத்தினார். ஒரு முக்கியமான போட்டியில் முதலில் பந்து பதானிடம் தரப்பட்டது.. தாறுமாறாகப் பந்தை அவர் வீசுகிறார். கங்குலி ஓடிவந்தார். திட்டுவார் என எதிர்பார்த்தால், ‘நான் உன்னை வெகுவாக நம்புகிறேன். நீ இயல்பாக இரு. இத்தனை பதற்றம் தேவையே இல்லை நண்பா!’ என்று தட்டிக்கொடுத்து விட்டுப் போனார். அடுத்து நடந்ததெல்லாம் வரலாறு.

The Winning Way 2.0: Learnings From Sport for Managers

304 பக்கங்கள்
விலை: 299

 — with Harsha Bhogle.

போஸ் தூக்கிலிடப்பட்டாரா? நேரு தான் இதற்கு காரணமா?


போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பது போன்ற கருத்தை உண்டு செய்யும் ஒரு பேட்டி இன்றைய தமிழ் இந்துவில் வந்திருக்கிறது.
https://twitter.com/PUKOSARAVANAN/status/727016224429760512

இந்தப் பேட்டிக்கு வரிக்கு வரி மறுப்பு சொல்லுகிற அளவுக்கு எக்கச்சக்க பிழைகள்.
/ ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந் தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது. இந்த சமயத்தில்தான் ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது./ போஸ் படைகள் மகத்தான வெற்றியை நோக்கி சென்றது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் தடைபட்டது போன்ற தோற்றம் இந்த வரியில் ஏற்படுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வரலாற்று ஆசிரியரான Srinath Raghavanதன்னுடைய புதிய புத்தகத்தில் ஆசியாவில் ஜப்பான் தன்னுடைய மிகப்பெரிய தோல்வியை போஸால் சந்தித்தது என்று பதிவு செய்கிறார். நேதாஜி படைகளை முன்னின்று நடத்தும் திறமையற்றவர் எனக்கருதிய ஜப்பான் களத்தில் அவரைப் போரிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார் Sunil Khilnani. (http://www.bbc.co.uk/programmes/b072jfcz) மேலும் இம்பால் போர் நடைபெற்றது நாற்பத்தி நான்கில், அணுகுண்டு வீசப்பட்டது அதற்கு அடுத்த வருடம். பசும்பொன் தேவர் எப்படி இத்தனை ஆயிரம் பேரை அவ்வளவு தூரத்துக்கு பிரிட்டிஷ் கண்ணில் மண்ணைத் தூவி அனுப்பினார்? போர்க்காலத்தில் கப்பல் போக்குவரத்து தமிழகத்துக்கும், ஜப்பானுடன் போர் நடந்து கொண்டிருந்த பகுதிகளுக்கும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் பி.ஏ.கிருஷ்ணன்

இது இருக்கட்டும். /இந்திரா காந்தி ஆட்சியின்போது நேதாஜி உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய ‘கோஸ்லா’ விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நேருவிடம் சுருக் கெழுத்தாளராக இருந்த ஷியாம்லால் ஜெயின் அளித்த வாக்குமூலத்தில் போஸ் அவர்களை நேரு காட்டிக்கொடுக்கிற வகையில் அட்லீக்கு கடிதம் ஒன்றை டிக்டேட் செய்ய, அதை தான் அடித்ததாக ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார். ஆசப் அலியோடு நேரு நடுவில் ஆசப் அலியின் இல்லத்தில் பேசியதாகவும் குறிப்பிடுகிறார். காண்க:http://www.dailypioneer.com/…/nehru-termed-bose-your-war-cr…

அந்த கடிதத்தினை மோடி அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம் கடிதம் டெல்லியில் இருந்து எழுதப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலியின் வீட்டில் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டதாகவும் ஷியாம்லால் ஜெயின் சொல்கிறார்.

முதலில் தேதி டிசம்பர் 26, 1946 அன்று இந்தக்கடிதம் ஆசப் அலி முன்னிலையில் அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆசப் அலி அதற்கு முந்திய நாள் சென்னையில் காமராஜர் ராஜாஜி கோஷ்டி சிக்கலை தீர்க்கும் வேலையில் இருந்தார். கடிதம் அடிக்கப்பட்டதாக சொல்லப்படும் நாளில் அவர் மும்பையில் படேலை சந்தித்து உரையாடினார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். அவர் அடுத்த நாள் தான் டெல்லிக்கு கிளம்பிச் செல்கிறார் என்பதும் செய்தித்தாள் செய்திகளின் மூலம் தெளிவாக புலப்படுகிறது. டெல்லியில் கடிதம் அடிக்கப்பட்ட நாளில் ஆசப் அலி இல்லை!

 

சரி நேரு இருந்தால் கூட போதுமே. கதையை முடித்துவிடலாம் என்று கருதினால் அதற்கும் வழியில்லை. நேரு இந்தியா முழுக்க சுற்றுப்பயணத்தில் அப்பொழுது இருந்தார். கல்கத்தா, பாட்னா என்று பயணம் மேற்கொண்டிருந்த நேரு இருபத்தி ஆறு டிசம்பர் முதல் இருபத்தி ஒன்பது டிசம்பர் வரை அலகாபாத்தில் இருந்திருக்கிறார். மதன் மோகன் மாளவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியிருக்கிறார். மகளுடன் இணைந்து ‘DISCOVERY OF INDIA’ நூலின் பிழை திருத்தும் பணியை டிசம்பர் 29 அன்று அலகாபாத்தில் மேற்கொண்டு இருக்கிறார். ஆக, அவர் டெல்லியில் இந்தக் கடிதம் எழுதப்பட்ட்ட காலத்தில் இருக்கவில்லை.

ஆதாரங்களுக்கு காண்க:

https://raattai.wordpress.com/…/nehru-was-in-allahabad-fro…/

கோஸ்லா கமிட்டியின் முன்னால் இந்த வாக்குமூலத்தை ஷியாம்லால் ஜெயின் வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், கோஸ்லா கமிட்டியின் இறுதியின் அறிக்கையில் இந்தக் கடிதம் பற்றிய சிறுகுறிப்பு கூட இல்லை. இந்த வாக்குமூலம் தரப்பட்டதாக சொல்லப்படும் முதல் கதை போஸின் உறவினர் பிரதீப் போஸ் வாஜ்பேயிக்கு 1998-ல் எழுதிய கடிதத்தில் தான் முதன்முதலில் இடம்பெறுகிறது. அதை வாஜ்பேயி அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை ஏன் என்று யோசித்துக் கொள்ளலாம்.http://www.telegraphindia.com/116…/…/nation/story_65592.jsp…

இந்த ஷியாம்லால் குறிப்பிடும் கடிதத்தில் சோவியத் ரஷ்யா வெறும் ரஷ்யா என்று தற்கால வழக்கில் இருக்கிறது. அதேபோல நேதாஜியை போர்க்குற்றவாளியாக ஆங்கிலேய அரசு அறிவிக்கவில்லை. அவரை போர்க்குற்றவாளி என்று இந்தக்கடிதம் பிழையாக குறிப்பிடுகிறது. அதேபோல எல்லா கடிதங்களிலும் இருக்கும் நேருவின் கையெழுத்து இந்தக் கடிதத்தில் இல்லை.

இதற்குப் பிறகு வாய்மொழிக் கதைகளாக வழங்கப்படும் சிலவற்றை கட்டுரை சொல்லிச்செல்கிறது. அவற்றுக்கு ஆதாரங்கள் எழுபது வருடங்களாக கிட்டவில்லையா என்ன? இறுதியாக ரஷ்யாவில் வைத்து ஸ்டாலின் போசை கொடுமைப்படுத்தினார் என்று உண்மையை மட்டுமே பேசும் சுப்ரமணிய சுவாமி சொன்னதை ஆதாரமாக சுட்டுகிறது கட்டுரை. ரஷ்யாவுக்குள் போஸ் நுழைந்திருக்கிறாரா என்று அறிய இந்திய அரசு கேட்ட கேள்விக்கு ‘அவர் இங்கே நுழையவில்லை.’ என்று சோவியத் அரசு பதில் தந்திருக்கிறது.http://www.ndtv.com/…/netajis-death-grandnephew-releases-se…

மேலும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் போஸ் குறித்து ரஷ்ய அரசு எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கையை விரித்துவிட்டது.
போஸ் மரணத்தில் நேருவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஒரே ஒரு கடிதமும் போலியானது என்று வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கிறார்கள். தரவுகளும் இது புனையப்பட்ட கடிதம் என்பதை நிறுவுகிறது. ஜப்பான் இந்த வருட இறுதியில் தன்னிடம் இருக்கும் இரண்டு கோப்புகளை வெளியிடுகிறது. மேலும் மூன்றுநாடுகளிடம் இந்திய அரசு கோப்புகளை வெளியிடச்சொல்லி கேட்டிருக்கிறது. அதுவரை போஸ் விஷயத்தில் நேரு தவறிழைக்காத மனிதர் என்று உறுதிபடச்சொல்லலாம். முக்குலத்தோர் ஓட்டுக்களை வாங்கும் முனைப்பில் இருக்கும் ஒரு சங்கத்தலைவரின் பேட்டியின் கருத்துக்களை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பதிப்பித்து இருக்கலாம் Tamil The Hindu

சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ


லீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.

லீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். அவரின் இளம்வயது முதலாளித்துவக் காதல், பொருளாதார வீழ்ச்சியின்பொழுது விழுந்தது. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருந்தது. அம்மா எண்ணற்ற வேலைகள் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்தார்.கேம்ப்ரிட்ஜில் படிக்கப்போன லீக்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிர்ச்சியை அதிகரித்தது. பட்டங்கள் பெற்று நாடு திரும்பிய சூழலில், உலகப்போரில் ஜப்பான், பிரிட்டனைப் பந்தாடியது அவருக்கு இங்கிலாந்து மீதிருந்த காதலை அடித்து நொறுக்கியது.

ஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.

முதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.

இயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்தன.ஒரு கட்டத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. சிங்கப்பூர் தனிதேசமாக உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. “பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் !” என்று சொல்லிவிட்டு லீ சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பின்னர் எழுந்து வந்தார்.லீ தனக்கென்று பாதைகள் வகுத்துக்கொண்டார்.

ஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்
சார்ந்தே அமைந்திருந்தது,

சான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்

பல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.

சின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.

கேள்விகள் கேட்கிற எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்காமல் சிறை வரவேற்கும். நீதி என்றெல்லாம் பேச முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சீனப்பாரம்பரியம் கொண்டவர்கள்தான் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் பெரும்பாலான உதவித்தொகைகள் அவர்களுக்கே சென்று சேர்கிறது. பாதி ஜனநாயகம் கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில் ஆளுங்கட்சியான லீயின் கட்சியை எதிர்த்து பெரும்பாலும் வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள்.

இப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.

“ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை !” எனப்பட்ட சிங்கப்பூர், ‘பொருளாதாரப்புலி’ என்கிற பெயரை அவரின் பணிகளால் பெற்றது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்த சிங்கப்பூரின் நிஜ நாயகன் அவர்