காந்தியின் இந்தியா


இந்திய விடுதலையில் துவங்கி சமூகச் சீர்திருத்தம்,இந்து-முஸ்லீம் ஒற்றுமை என்று பல்வேறு தளங்களில் காந்தியின் பங்களிப்பு வியக்க வைப்பது.

பொதுமக்களுக்கான இயக்கமாக விடுதலை இயக்கத்தை மாற்றியது அவரின் முதன்மையான சாதனை. கட்சியின் உறுப்பினர் கட்டணத்தை நாலணாவாகக் குறைத்தார். மொழிவாரியாக மாகாண அளவில் காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்டது. கட்சியின் நிர்வாகத்தைக் கவனிக்க மத்திய செயற்குழு அமைக்கப்பட்டது. கடைக்கோடி மனிதனையும் அரசியல் போராட்டத்துக்குள் கொண்டுவருவதைக் காந்தி சாதித்தார்.

தென் ஆப்ரிக்காவில் இந்தியா என்கிற அரசியல் கருத்தாக்கம் முழுமை பெறுவதற்கு முன்பே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காந்தி கண்டு உணர்ந்தார். அதனால், இந்தியா என்கிற நாட்டை ஒரு மொழி, ஒரு கலாசாரம், ஒரு மதம் என்று மாற்ற கனவு காணாமல் அனைவருக்குமான தேசமாக இதனைக் கனவு கண்டார்.

தொழிலாளிகள், விவசாயிகள், முதலாளிகள், இடதுசாரிகள், வலதுசாரிகள்,பெண்கள், சிறுபான்மையினர் என்று சகலரையும் உள்ளடக்கியதாகக் காந்தியின் தேசியம் இருந்தது. இதனையே, வரலாற்று ஆசிரியர் முகுல் கேசவன், ‘Noah’s Ark of Nationalism’ என எழுதினார்.

காந்தி நவீன பெண்ணியப் பார்வையில் அணுகினால் சமயங்களில் ஏமாற்றம் தரக்கூடியவர். அவர் பெண்கள் கருத்தடை முறைகளைக் கைக்கொள்வதை விரும்பாதவர். அதே சமயம், இந்தியாவில் பெண்களை அதிகளவில் அரசியல் மயப்படுத்திய மகத்தான பெருமை காந்திக்கு உண்டு. உப்புச் சத்தியாகிரகத்தில் அந்த முயற்சி விஸ்வரூபம் எடுத்தது. ‘இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ஒரு பட்டியலின பெண்ணே வரவேண்டும்.’ எனக் காந்தி விரும்பினார்.

ஜாதி என்கிற பிற்போக்கான விஷயத்தைப் பிடித்துக் கொண்டு இந்தியர்கள் சக மனிதரை கொடுமைப்படுத்துவதைக் காந்தி பல்வேறு வகைகளில் எதிர்கொண்டார். தீண்டாமைக்கு எதிரான உலகின் மிகப்பெரிய இயக்கத்தைக் காந்தி நடத்தியதாக வரலாற்று ஆசிரியர் டேவிட் ஹார்டிமான் போற்றுகிறார். கோயில் நுழைவுப் போராட்டங்கள் எல்லாத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு சாதிக்கப்பட்டன. தன்னுடைய இறுதிக் காலத்தில், ‘ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் அவர்களின் திருமணத்துக்கு என்னை அழைக்காதீர்கள். என் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடையாது.’என்று எழுதினார்.

காந்தி எதையும் திணிக்க வேண்டும் என்பதில் உடன்பாடில்லாதவர். பசுவதைக்கான எதிரான தன்னுடைய போராட்டங்களில் கூட முஸ்லீம்களின் நம்பிக்கையைப் பெற்றே செய்ய வேண்டும்,அரசு அதனைத் திணிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

உரையாடல் என்பது எப்பொழுதும் அவசியம் என்பதில் காந்திக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன்னுடன் முரண்பட்ட சுயராஜ்ய கட்சியினரை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே இயங்க அனுமதித்தார். அம்பேத்கருடன் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தினார், அவருடன் பல சமயங்களில் வேறுபட்டாலும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கர் ஆவதை உறுதி செய்தார் என்கிறார் ராஜ்மோகன் காந்தி. ஜின்னாவை இந்தியாவின் பிரதமராக ஆக்கியாவது பிரிவினையை நிறுத்தலாம் என்று அவர் முயன்றார். இறுதிக் கணம் வரை முயற்சித்து விடுவது என்பது அவரின் பங்களிப்பு.

காந்தி தொழில்மயத்துக்கு எதிரானவர் இல்லை. இயந்திரமயமாக்கலின் வன்முறைக்கு எதிரானவர். கிராமங்களை நோக்கி நம்முடைய கவனம் திரும்ப வேண்டும், அங்கே சுயாட்சி பாய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே உப்பு,ராட்டை, கதர் என்று பல்வேறு அடையாளங்களின் மூலம் மக்களைச் சென்றடைந்தார்.

காந்தியின் பங்களிப்பு எத்தகையது?அரசியல் அறிவியல் அறிஞர் சுனில் கில்னானியின் வரிகள் சரியான பதிலாக இருக்கலாம்:

காந்தி இல்லாமல் போயிருந்தாலும் இந்தியாவுக்கு விடுதலை கிட்டியிருக்கும். எனினும், வன்முறையான, நாட்டைப் பிளவுபடுத்துகிற பாதையில் அது நிகழ்ந்திருக்கும். காந்தி உரையாடல்,சமரசம் ஆகியவற்றை அரசியலின் அடிப்படையாக மாற்றியதன் மூலம் இந்தியர்களை இணைக்கும் ஒரு கருத்தாக்கத்தைத் தந்தார்.

அவர் உருவாக்கிய இந்தியா குறைகள் அற்றது இல்லை. அவர் தீண்டாமையை முழுமையாக ஒழிக்கவில்லை. ஆனால்,அதைச் சட்டரீதியாகத் தடை செய்வதைச் சாதித்தார். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அவர் சாதிக்கத் தவறினார். எனினும், மத வன்முறை, படுகொலைகள் நடந்த பொழுது அதற்கு எண்ணற்ற இந்தியர்கள் அவமானம் கொள்வதை அவரின் அரசியல் சாதித்தது. மாவோ, ஸ்டாலின் முதலியோர் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களின் வாழ்க்கையை, சிந்தனையை மாற்ற முயன்றார்கள். காந்தி அதற்கு மாறாக அரசு,அதிகாரம் ஆகியவற்றை மக்களுக்காகச் சிந்திக்கும் வகையில் மாற்ற முயன்றார்.

– பூ.கொ.சரவணன்

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள்


உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள் தனிமையை நாடி எங்கோ வெறித்துப் பார்க்கும் விழிகளோடு, நினைவுகளிலும், படபடப்பிலும் அவள் தொலைந்திருப்பாள். எல்லாக் குழப்பங்களையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள முடியாமல், இதயத்தின் துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல், “நான் நல்லாத்தான் இருக்கேன்.” என்பாள். அவள் போராட்டக்குணத்தை இழந்துவிடவில்லை, பயனற்ற ஒன்றுக்கு போராடுவதையே அவள் நிறுத்திவிட்டாள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். எல்லாம் சரியாகிவிடும் என அவளிடம் சொல்லாதீர்கள். அது மாறவே மாறாது என்கிற அளவிற்கு அவள் அதனோடு போராடி ஓய்ந்து விட்டாள். அதற்கு மாறாக, ஒவ்வொன்றாகச் சரி செய்ய அவளுக்கு உதவுங்கள். இதுவும் கடந்து போகும் என ஆறுதல் சொல்லாமல் கடக்க உதவுங்கள். அவளுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, எனினும், அதைக்குறித்து அவள் வருந்தவில்லை.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவள் உடைந்து போயிருக்கலாம். எனினும், அவள் வலிமையோடு எழுந்து நிற்பாள். கானல் நீராகிப் போன கனவுகள் அவளை வாட்டினாலும் எப்படி வாழ்வது என்றும், இதயம் காயப்பட்டுக் கண்ணீர் வடித்தாலும் எப்படி அன்பு செய்வது என்று அவள் கற்பிப்பாள். எப்படி அச்சமில்லாமல் இருப்பது என்று நரகத்துக்குச் சென்று திரும்பிய அவள் கற்பிப்பாள். அவளை அச்சப்படுத்தக் கூடியது எதுவுமில்லை. உங்களுக்கு எப்பொழுதும் கைகொடுக்கும் உங்கள் மீது நீங்கள் வைக்க வேண்டிய நம்பிக்கையை அவள் புலப்படுத்துவாள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். புதிராகப் பரவசப்படுத்தும் அவளை விடுவிக்க முயன்று மகிழ்ச்சியைச் சுவைப்பீர்கள். எனினும், அவளை உங்களால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாது. அவளைப் புரிந்து கொள்ள முயலாதீர்கள். அவளுக்கே அவளைப்பற்றிய புரிதல் இல்லாத பொழுது உங்களால் எப்படி அவளைப் புரிந்து கொள்ள முடியும்? தன்னுடைய வாழ்வின் போராட்டங்களை மனதின் பக்கங்களில் எழுதிச் செல்லும் திறந்த புத்தகம் அவள். அவளின் வாழ்வின் இறுதிக்கணம் வரை நீளும் அந்தப் புத்தகத்தை நீங்கள் ஒரு கணமும் வாசிக்காமல் இருக்க முடியாது. அவளின் கொடுங்கனவுகளில் இருந்து பேய்க்கதைகளையும், வலிகளில் இருந்து கவிதைகளையும் அவள் படைப்பாள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவளை யாரும் ஏற்றுக்கொள்ளவோ, அன்பு செய்யவோ தேவையில்லை. அவளை யாரும் காப்பாற்றவும் வேண்டியதில்லை. அவளின் நினைவு நரகத்தின் பூதங்களை ஊற்றெடுக்கும் மனதின் குழப்பங்களில் உயிரூட்டி உலவ விடுகிறாள். அந்தப் பூதங்களை விரட்டாதீர்கள். அவை மனிதர்களைப் போல ஆபத்தானவை அல்ல. அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு, அவளின் மனவெளியில் ஒரு நடை போங்கள். அவளின் கலைப்பண்பால் மாற்றப்பட்டுவிட்ட உலகின் மகத்தான இடத்தைக் காண்பீர்கள். அவளின் பிணைந்த நினைவுகள் கொடிகள் போலக் கூடிச்சிரிக்கும், படபடப்பு மரங்கள் அவளின் தலையில் வேர்விட்டிருக்கும், நம்ப முடியாத இடங்களில் நம்பிக்கை மலர்கள் பூத்துக் குலுங்கும். அவளின் நம்பிக்கையின்மை தழைக்கும் மண்ணில் ஆங்காங்கே தன்னம்பிக்கை, அன்பு விதைகள் தூவிக் கிடக்கும். கருணை நதி பாய்ந்து ஓடும். பிரபஞ்சத்தைப் போல அழகும், முடிவற்றதாகவும் அவளின் இதயம் இருப்பதை மேலும் அவளின் மனவெளியின் பரப்பில் நடமாடுகையில் கண்டு பிரமிப்பீர்கள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். அவள் பெரிதாக எதுவும் கேட்க மாட்டாள். எதிர்பார்ப்புகள் பிரிவில் முடியும் என அவள் அறிவாள். அவளைக் காயப்படுத்தி விடுவோமோ என அஞ்ச வேண்டியதில்லை. அவளுக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைத் தெரியாமல் மீற நேரிடுமோ எனக் கவலை கொள்ள வேண்டியதில்லை. வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றே அவள் எதிர்பார்க்க மாட்டாள். மனிதர்கள் வாழ்க்கைக்குள் வருவது விட்டு விலகத்தான் என அறிந்திருப்பதால் அவள் மிக மோசமானவற்றுக்கும் தயாராகவே இருக்கிறாள். இந்தப் பாதையில் அடிக்கடி பயணத்திருப்பதால் அவள் தொலைந்து விடமாட்டாள்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். உலகம் உங்களுக்கு அளித்த காயங்களை அவள் ஆற்றுவாள். உங்களின் இதயத்தின் உடைந்த துண்டுகளையும், அவளின் இதயத்தின் உடைந்த துண்டுகளையும் இணைத்து ஒரு அழகிய ஓவியத்தை வரைவாள். அது பிகாசோவின் தூரிகையையும் தோற்கடித்து, அவளின் வெற்றிக் குவியலின் மகத்தான நினைவு பரிசாகும்.

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள். ஒரு நாள் அவள் மீண்டு வருகையில், இதுவரை கண்டிராத அற்புதத்தைக் காண்பீர்கள். கடந்த காலம் கடந்து பீனிக்ஸ் போல எழும் அவள், கதிரவனைப் போல முழுமையான புகழில் ஒளிர்வாள். உலகை நம்பிக்கையோடு எதிர்கொள்வாள். நீங்கள் இருவரும் இணைந்து உலகை மாற்றலாம், குறைந்தபட்சம் ஒரு உடைந்த இதயத்தை மீட்கலாம்.
– Pramitha Nair

570409e3cf9f1b7c5453829d6fed6323.jpeg
மூலம்: http://theanonymouswriter.com/of…/date-a-girl-who-is-broken/

(மொழிபெயர்ப்பு: பூ.கொ.சரவணன்)

ஆணவக் கொலைகளின் காலம்


staalin.jpg

ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் எழுத்தில் ‘ஆணவக் கொலைகளின் காலம்’ நூலை வாசித்து முடித்தேன். பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும் ஜாதி அரசியல் எப்படிப் பண்பாட்டு, மொழி, அரசியல் தளங்களில் தன்னுடைய கொடுங்கரங்களை நீட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் குலைக்கிறது என்பதை நூல் வெறுப்பின்றிப் பதிவு செய்கிறது. என்னமோ அரசியல் கட்சிகளால் தான் ஆணவ கொலைகள் நடப்பதை போன்ற தோற்றம் உண்டாக்கப்படுகிறது. ஆனால் , மக்களிடையே நீக்கமற ஜாதியுணர்வு கலந்திருக்கிறது. அது பாம்பின் நாக்கைப் போலத் தேவைப்படும் பொழுது மட்டும் வெளிப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஜாதி என்பது பண்பாட்டு அதிகாரத்தைத் தன்னகத்தே கொண்டு இயங்கி வரும் சூழலில், கோயில் நுழைவைத் தாண்டி கோயில் மரியாதை , தனிக்கோவில், நல்ல வீடு, வாகனங்கள் என்று பல்வேறு தளங்களில் தங்களுக்கான இடத்தைத் தலித்துகள் போராடிப் பெறுகிறார்கள். நவீன அரசியல் காரணமாக ஆட்சி நிர்வாகத்தில் கிராமங்கள் அளவில் இடம் கிடைப்பது நடக்கிறது. அங்கே அமர்ந்து விவாதித்து, பேசி, சண்டையிட்டு அரசியல் செய்கிறார்கள். தேர்தல் அரசியல் எண்ணிக்கை சார்ந்த ஒன்றாக இருப்பதால், பண்பாட்டுத் தளத்தில் ஜாதியை கையில் எடுத்துத் தேர்தலில் கொள்முதல் செய்வது தொடர்ந்து நிகழ்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, தொழில்நுட்பம் என்று பல்வேறு காரணங்களால் இடப்பெயர்ச்சியும், மக்கள் தொடர்பும் நிகழ்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆணும், பெண்ணும் இயல்பாகப் பழகும் வாய்ப்புகள் பெருகி காதல் அரும்புகிறது. பெண்ணுடலை சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஜாதி அமைப்புப் பதற்றம் கொள்கிறது. இயல்பாகச் சமூகத்தில் நிகழும்

இவற்றையும், கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுக்கு வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும் பதற்றத்தோடு அணுகுகின்றன ஆதிக்க ஜாதிகள். இந்த இயல்பான மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ளாமல் எளிமையான எதிர்த்தரப்பாகத் தலித்துகளைக் கூட்டாகக் கட்டமைத்து வன்முறையைக் கைக்கொள்கிறார்கள். தலித்துகளைக் கொல்வதும் , தலித்தோடு காதல் பூண்ட தங்கள் ஜாதி பெண்ணைக் கொல்வதையும் செய்கிறார்கள்.

மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் மாநாட்டில் கலப்புத் திருமணத்துக்கு எதிரான பகிரங்க எதிர்ப்பை காடுவெட்டி குரு பதிவு செய்ததன் நீட்சியாகவே தர்மபுரியில் பல நூறு குடிசைகள் எரிக்கப்பட்டதைக் காணவேண்டும் என்கிறார் ஆசிரியர். கொங்கு வெள்ளாளர் அமைப்புகள் சில ஜாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராக உறுதி மொழி எடுத்ததோடு நில்லாமல், கலப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்யும்படி கோரின. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்பு பாதுகாப்பாக இருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்க சொல்லி வன்னியர் அமைப்புகள், கொங்கு வேளாளர் பேரவைகள் , தேவர் அமைப்புகள் போராடுவது ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்கள் சார்ந்த அக்கறையின்மையின் அப்பட்டமான ஆதாரம்.

அண்ணல் அம்பேத்கர் ஜாதியமைப்பு குறித்த தன்னுடைய ஆய்வில் ஜாதி முறையின் தோற்றத்துக்கும், அதன் நீடிப்புக்கான காரணமாக அக மண முறையைச் சுட்டுகிறார். ஒத்த குழுவில் ஏற்படும் ஆண் -பெண் எண்ணிக்கையை ஒட்டி பெண்களின் மீது திணிக்கப்படும் விதவைக் கோலம், உடன்கட்டை நடைமுறை, குழந்தை திருமணம், ஆண்களின் துறவு எனப் பல போக்குகளை நுண்மையாக விவரித்தார். ஜாதி அமைப்பை ஒழிக்கக் கலப்பு மணம் தான் வழி எனத் தான் நம்புவதாக அறிவித்தார்.

ஜாதி மறுப்புத் திருமணம் என்பது என்பது தமிழகத்தில் நூற்றாண்டு கண்டுவிட்ட ஒன்றாகும். முதலில் ஜாதி மறுப்புத் திருமணங்களாக ஆரம்பித்த இவை தற்போது வெறும் சடங்கு, புரோகிதர் ஒழித்த திருமணங்களாக ஜாதிக்குள் நடக்கிற அளவுக்குச் சுருங்கிவிட்டது. திராவிட இயக்கம் கலப்புத் திருமணத்தை அழுத்திப் பேசினாலும் அதன் ஆதாரவாளர்களாகத் திகழ்ந்த ஆதிக்க ஜாதியினர் அவற்றைச் சட்டை செய்யவில்லை. தங்களை ஆண்ட பரம்பரையாகக் காட்டிக் கொள்ளும் ஆதிக்க ஜாதிகள், இட ஒதுக்கீடு என்று வரும் பொழுது மட்டும் வஞ்சிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்டவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள் எரிக்கப்பட்ட பொழுது திமுகத் திராவிடமா, தமிழனா என்று விவாதித்து அறிக்கை விட்டுவிட்டு ஒதுங்கி கொண்டது. அதிமுகவோ நிவாரண நிதியை கொடுத்துவிட்டு மவுனம் காத்துக் கொண்டது, தமிழ் அடையாளம் என்பதன் கீழ் தங்களுடைய கள வேறுபாடுகளைப் புறக்கணித்துவிட்டு ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கூடினார்கள். திரைப்படப் பெயர் மாற்றம், ஈழப் பிரச்சினை என்று இயங்கிய இவர்கள் ஜாதி ஒழிப்புக்குக் களத்தில் இறங்கி பணியாற்றவில்லை. தலித்துகளின் நியாயமான கோபங்கள் மீது எழுந்த விடுதலை சிறுத்தைகள் இயக்கம் ஆர்ப்பாட்ட அரசியலைத் தாண்டி ஜாதி அமைப்பை எதிர்கொள்வதில் சுணக்கம் கொண்டுள்ளது. தமிழால் இணைந்து போராடலாம் என்று கணக்கு போட்ட இருவரும் முகத்தில் அறையும் சிக்கலைகளைத் தொட்டு அது சார்ந்து இயங்கி இருக்கலாம். ஆகவே இதனைத் ‘தமிழ்த் தின்ற சாதி’ என்று ஸ்டாலின் ராஜாங்கம் அழைக்கிறார்.

PMK_RAMADOSS_2470c.jpg
திராவிட அடையாள அரசியலில் தலித்துகளை இணைத்துக்கொண்டு அதிகாரத்தில் அவர்களுக்கான இடத்தை மறுக்கும் அரசியலை திராவிட இயக்கங்கள் மேற்கொள்கின்றன. தலித் இயக்கங்களின் எழுச்சி திராவிட இயக்கங்களின் போதாமையால் மட்டும் எழுந்தவை அல்ல, திராவிடக் கட்சிகளின் அடையாளமும், அரசியலும் ஜாதிமயமானதாக ஆனதற்கு எதிராக எழுந்த கலகமே தலித் இயக்கங்கள். எனினும், அவை சமூக விரோத இயக்கங்கள் [போல இன்றைய அரசியல் களத்தில் ஆதிக்க ஜாதி அரசியலால் முத்திரை குத்தப்படுகிறார்கள். ராமதாஸ் என்கிற ஒற்றை அரசியல்வாதி மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசுவதைப் போன்ற தோற்றத்தை உண்டு செய்து, பிராமணர்களை மட்டும் சாடிவிட்டுத் தலித்துகள் மீது வன்முறையை, அடக்குமுறையை ஏவும் தமிழகத்து இடைநிலை சாதிகள் குறித்து மூச்சுகூட விடாமல் இருக்கின்றன திராவிட இயக்கங்கள். ஓட்டுக்கள் போய்விடும் என்கிற வாக்குவங்கி அரசியல் இதனைச் செலுத்துகிறது.

தலித்துகளும், திராவிட இயக்கமும் கொள்வதே இயற்கை கூட்டணி என்கிறார் கி.வீரமணி. ஆனால், எம் எல்.ஏ , எம்பி ஆகிய அரசியல் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல, அரசு சார்ந்த திட்டங்கள். பொது ஏலம் , அரசு மூலதனம் ஆகியவை பெரும்பான்மை சாதியினருக்கு உரியதாக ஆக்கப்பட்டு விட்டதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். பெரியார் பிறக்காத உத்திர பிரதேசத்தில் தலித் முதல்வராக முடிகிறது, தமிழகத்தில் முடியவில்லை என்றுகூடச் சொல்ல முடியவில்லை என்று திருமாவளவன் வருத்தப்படுகிற அளவுக்குத் தமிழகத்தின் நிலை உள்ளது.

ஜாதியமைப்பு ‘அண்டாமை-காணாமை’ எனும் அளவுகோல்களைக் கடந்து நவீன அரசியலில் அதிகாரத்தைத் தொடர்ந்து தக்க வைக்கும் ஒன்றாக உள்ளது. ஆதிக்க ஜாதிகளுக்கு இருக்கும் உள்ளூர் அதிகாரம், பணபலம் ஆகியவை தேர்தலில் வாக்குகளை அள்ளித் தருகிறது. சமூக இயங்குமுறையில் ஊடுருவிவிட்ட இதனைக் குறித்துப் பேசாமல், விமர்சிக்காமல், எதிர்கொள்ளாமல் மாற்றம் என்பது சாத்தியமில்லை.

கலப்புத் திருமணங்களைத் தீவிரமாகச் சமூக, அரசியல் தளங்களில் முன்னெடுப்பது இல்லை. ஜாதி ஒழிக என்கிற கோஷங்கள் எழுகிற அதே சமயம், ஜாதி வன்முறையைத் தூக்கிப்பிடிக்கும் காரணிகளை எதிர்கொள்வது கூட்டுச் செயலாக நிகழ்வதே இல்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தினராக இருபதாம் நூற்றான்டுக்கு முன்னர் வரை இருந்த நாடார்கள் கள்ளர்கள் உடன் இணைந்து கொண்டு கண்டதேவி தேரை வடம் பிடித்து இழுக்கத் தலித்துகளை அனுமதிக்காததைச் சுட்டும் ஆசிரியர் ஜாதி எப்படித் தன்னுடைய கொடுங்கரங்களைத் தலித்துகள் மீது செலுத்திக் கொண்டே இருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நாடக காதல் புரிகிறார்கள்,வன்கொடுமை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் முதலிய குற்றச்சாட்டுகளை ராமதாஸ் வைக்கிறார். அன்புமணி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பொழுது அவரின் துறை எடுத்த கணக்கெடுப்பின் படியே இந்தியாவில் கலப்புத் திருமணங்கள் குறைவாக இருக்கும் மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இடப்பெயர்வு, நவீனம் ஆகியவற்றால் காதல் திருமணங்கள் பெருகியிருப்பதை வசதியாக மறைக்கும் போக்கு இது. மேலும், கட்டப்பஞ்சாயத்து என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் செய்கின்றன. தானும் தங்களுக்குத் தேவையானதை பெற்றுக்கொள்ளும் இடத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு சில இடங்களில் பெற்றிருப்பதன் அறிகுறி அது என்கிறார் ஆசிரியர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்துப் பெரியளவில் அறிதல் இல்லாமலே தலித்துகள் உள்ளார்கள், மேலும், குறைந்த அளவிலேயே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். என்றாலும், ஓரளவுக்கேனும் ஆதிக்க ஜாதியினரை அச்சுறுத்தும் சட்டமாக இது இருப்பதாலேயே அதனை நீக்க போராடுகிறார்கள் என்கிறார்.

ஆணவக் கொலைகள் எங்கள் மாநிலத்தில் நடக்கின்றன என்று இருபத்தி ஒரு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அப்படியொன்று நடக்கவில்லை என்று சட்டசபையிலும், உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு பிடிவாதம் பிடித்தது. ஆணவக் கொலைகளை, ஜாதி அரசியலை கண்டிக்கும் வாய்ப்பாக இருந்தும் திமுகத் தலைவர் கருணாநிதி அதைச் சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே அறிக்கை விட்டார்.

வன்முறையை வெவ்வேறு வடிவங்களில் கைக்கொள்ளும் யுவராஜ் முதல் பல்வேறு இடைநிலை சாதியை சார்ந்தவர்கள் நாயகர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் பிராமணரின் அதிகாரத்தை எதிர்த்து கிளர்ந்த திராவிட இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ‘பிராமணியத்துக்குத் துணை போகும்’ என்று மட்டும் கூறிக்கொண்டு எதிர்கொள்வது தமிழகத்தின் சமூக நீதிக்கு நல்லதல்ல என்பது நூலில் அழுத்தமாகப் பதிவு செய்யப்படுகிறது.

மிக முக்கியமான நூல். அவசியம் வாங்கிப் படியுங்கள்

ஆணவக் கொலைகளின் காலம்
ஸ்டாலின் ராஜாங்கம்
காலச்சுவடு வெளியீடு
பக்கங்கள்: 190
விலை: 175

anavak-kolai-9999993-800x800.jpg

பெண் குழந்தையைப் பொத்தி வளர்ப்பவரா நீங்கள்? ‘தங்கல்’ திரைப்படத்தைப் பாருங்கள்!


ஹரியானாவின் கதை இந்தியாவின் பெரும்பான்மை பெண்களின் கதையும் உண்டு. ஹரியானாவில் ஆண்:பெண் விகிதாசாரம் இந்தியாவிலேயே குறைவான ஒன்று. குழந்தைத் திருமணங்கள் அங்கு அன்றாட யதார்த்தம். காப் பஞ்சாயத்துகள் எனப்படும் வடநாட்டு கட்டப் பஞ்சாயத்துகள் நவ நாகரீக ஆடை அணிகிற பெண்களைத் தண்டிப்பது, சாதி அமைப்பை வலுவாகத் தூக்கிப் பிடிப்பது, ஆணவப் படுகொலைகளைக் கூட்டாகச் செய்வது ஆகியவற்றைத் தொடர்ந்து செய்கிறவை. ‘முட்டிக்குக் கீழ்தான் மூளை’ என அந்த மாநில ஆட்களை எள்ளி நகையாடுகிற அளவுக்கு நிலைமை மோசம். அப்படிப்பட்ட ஊரில் இருந்து தன்னுடைய மகள்களை மகத்தான சாதனைகளை நோக்கி நகர்த்தும் ஒரு தந்தையின் நிஜக்கதைதான் தங்கல்.

(கதையின் நெகிழ்வான தருணங்கள் இங்கே பேசப்பட இருக்கிறது. படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் படிப்பதை தவிர்க்கலாம்.)

ஒரு பெண்ணை எப்படி வளர்ப்பது? கண்ணின் மணியாக, கோழி தன்னுடைய குஞ்சை அடைகாப்பது போல வளர்ப்பது தான் பெரும்பாலான குடும்பங்களின் மனப்போக்கு. “ஐயே பொட்டப்பொண்ணு!” எனப் பல குடும்பங்கள் கதறுவது ஊரக இந்தியாவின் உண்மை முகம். காரணம் வரதட்சணை கொடுத்துப் பெண்ணை எப்படியேனும் கட்டிக் கொடுப்பது என்பதே அந்தப் பெண்ணுக்குத் தாங்கள் செய்யக்கூடிய மகத்தான சேவை என்று பதிய வைக்கப்பட்டு இருக்கிறது.
தன்னளவில் நிராசையான இந்தியாவிற்குச் சர்வதேச பதக்க கனவை தன் மகள்களின் வழியாகச் சாதிக்க நினைக்கும் மகாவீர் சிங்கிடம் அவரின் மனைவி கேட்கிறார்,
“இப்படிக் கிராப் வெட்டி ஆண் பிள்ளைகள் போல ஷார்ட்ஸ் போட்டு வளர்த்தால் எந்தப் பையன் கட்டிப்பான்?”

Image may contain: 5 people, people standing

“என் பொண்ணுங்களுக்கு ஏத்த மாப்பிள்ளைக்கு அலைய மாட்டேன். அவங்களைத் தைரியமா, நம்பிக்கையுள்ளவங்களா வளர்ப்பேன். அவங்களுக்கான மாப்பிளைகளை அவங்களே தேடிப்பாங்க.” என்று அந்த மல்யுத்த நாயகன் சொல்கையில் சிலிர்க்கிறது.

பெண்கள் வெளியிடங்களில் புழங்குவதே பெரும்பாலும் தடுக்கப்பட்ட மாநிலத்தில் ஆண்களுடன் மகளை மல்யுத்தம் செய்ய வைக்கிறார். ஊரே எள்ளி நகையாடுகிறது. வகுப்பில் ஆண் பிள்ளைகள் சீண்டுகிறார்கள். ஆனால், தேசியளவில் தங்கப் பதக்கத்தை ஜெயித்து வருகையில் ஊரே திரண்டு தங்களின் மகளாக வாரியணைத்துக் கொள்கிறது.
பெண்களை அழகுக்காக மட்டுமே ஆண்கள் ரசிப்பார்கள் என்பது பொதுபுத்தி. சமீபத்தில் பி.சாய்நாத்தின் ‘PARI’ தளத்துக்காகப் பருத்தி வயல்களில் இருந்து பாராலிம்பிக்ஸ் நோக்கி என்கிற கட்டுரையை மொழிபெயர்த்தேன். அதில் வளர்சிக் குறைபாடு உள்ள அம்பிகாபதி எனும் பெண் தேசிய அளவில் சாதித்த பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இப்படிப் பதிவு செய்திருந்தார்: “எனக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே ஊரில் இருக்கிறது. ஒவ்வொருமுறை வெற்றியோடு அவர் திரும்புகிற பொழுது எண்ணற்ற கட்டவுட்களுடன் எங்க ஊரின் ரசிகர்கள் (பெரும்பாலும் ஆண்பிள்ளைகள்) வரவேற்கிறார்கள். “ புற அழகைத் தாண்டி அளப்பரிய சாதனைகள் சார்ந்தும் சமூகம் கொண்டாடும் என நம்பிக்கை தரும் தருணங்கள் அவை.

மகாவீர் சிங் பெண்ணியவாதி இல்லை. அவரின் மனைவியை வீட்டு வேலைகளே செய்ய வைக்கிறார். போயும், போயும் பெண் குழந்தை பிறந்ததே என்று முதலில் வருந்துகிறார். “எதுனாலும் தங்கம் தங்கம் தான்” எனத் தெருச்சண்டையில் மகள்கள் ஈடுபடும் பொழுது உணர்கிறார். எதிர்த்து ஆட பெண்கள் இல்லாத களத்தில்,, ஆண்களோடு மோதவிட்டு வார்த்து எடுக்கிறார். வாய்ப்புகள் இல்லை, வீட்டை விட்டு எப்படி வெளியே அனுப்புவது என அஞ்சும் பெற்றோர்கள் அந்தக் காட்சியில் விழித்துக் கொள்ளலாம்.

தந்தைக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான போராட்டத்தில் சிக்கிக் கொள்ளும் மகாவீர் சிங் ‘எந்தத் தேர்வும் எனக்கு இல்லை.’ என்று வயிற்றைக் கழுவ வேலையில் தன்னுடைய மல்யுத்த கனவுகள் மலர்ந்த காலத்தில் தங்கிவிட்டார். அவரின் சர்வதேச கனவுகள் சாம்பலானது. மகள் சாதிக்கிறாள் என்று தெரிந்ததும் வேலையைத் தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு மல்யுத்தம் செய்கிறார்.

இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது. போதுமான வாய்ப்புகள் இன்மை, ஏளனம், வறுமை என்று பலவற்றை ஆண் வீரர்களைப் போல அவர்கள் எதிர்த்துப் போராடுவது ஒருபுறம் இவை அனைத்துக்கும் மேலே மகாவீர் சிங் சொல்வதைப் போல, “கேவலம் பொண்ணு” என்று பார்க்கும் சமூகத்தின், ஆண்களின் அன்றாடப் போரை எதிர்த்து கத்தி சுழற்றிய தங்கங்கள் அவர்கள்.

இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த கறிக்கடை பாய் கோழிக் கறியை குறைந்த விலையில் மகாவீர் சிங்கின் மகள்களுக்குத் தருகிறார். உச்சபட்ச காட்சிக்கு முன்னால் தன்னுடைய மகள்கள், “அப்பா அக்கா ஆடுறதை பாக்கணும்!” என்று கேட்டுக் கொண்டதற்காகப் பாய் அவர்களை வண்டியேற்றி அழைத்து வருகிறார். மகாவீர் சிங் சொல்கிறார், ‘மகளே! நீ நாளைக்கு நன்றாக ஆடவேண்டும்., உன்னை யாரும் மறக்கவே முடியாதபடி ஆடவேண்டும். உன் தங்கம் பல பெண்களை
அடக்குமுறைகளை, அடுப்படியைத் தாண்டி அடித்து ஆட உற்சாகப்படுத்தும்.’

Image result for dangal

சீதையைப் போல இரு, தமயந்தியைப் போல இரு, பெண்ணாய் இரு.” என்றெல்லாம் சொல்லாமல், ‘பி.டி. உஷாவைப் போல வா, அஞ்சு பாபி ஜார்ஜ் போல அசத்து, தீபிகா போல அடித்து ஆடு, சிந்து போல பெருமை தேடித் தா, சானியா போல சரித்திரம் படை.’ என ஊக்குவிக்க படம் சொல்லித் தருகிறது.

நிஜ நாயகன் மகாவீர் சிங்குக்கும், கீதா, பபிதா எனும் தங்கத் தாரகைகளுக்கும், அமீர் கானுக்கும், இந்தப் படக்குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு விளையாட்டுகளின் மீதும், பெண்களைப் பொத்தி வளர்க்கும் போக்கை மாற்றிக் கொள்ளவும் இந்தப் படம் ஊக்கப்படுத்தும்.

எளிமையான வாழ்க்கையைக் கேட்காதீர்கள், எதிர்த்து போராட மகள்களுக்குச் சொல்லித் தாருங்கள். பஞ்சு மெத்தையில் மடியில் படுக்க வைக்காதீர்கள். மண்ணில் மிருகங்களோடு வாழவேண்டிய நிலையில் நம்பிக்கை தாருங்கள். ஆடைகளிலும், முடியிலும், பெண்ணின் ஆடம்பரத் திருமணத்திலும் இல்லை குடும்பத்தின் பெருமை என்று அடித்துச் சொல்கிறது இந்தப் படம்.