நான் இன்றைக்கு இந்தியா தன்னுடைய வரலாற்றில் இருந்து கொரோனா வைரஸ் கொள்ளை நோயை எப்படி எதிர்கொள்வது எனப் பாடம் படிக்கலாம் என்று உரையாற்ற இருக்கிறேன். இந்தியா பேரிடர் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது. இந்நோயை அரிதான ஒன்று, நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் ஒன்று என்றெல்லாம் வர்ணிப்பதை கண்டோம். இந்த நோயை பதினான்காம் நூற்றாண்டின் கருப்பு மரணங்கள், ஸ்பானிஷ் ப்ளூ, முதலாம் உலகப்போருக்கு அடுத்து தாக்கிய இன்ப்ளூயன்சா நோய்த் தொற்று ஆகியவற்றோடு ஒப்பிடுகிறார்கள். இந்தியாவும் 1918-19 ஆண்டுகாலத்தில் பாதிக்கப்பட்டது.
எனினும், வரலாற்றாசிரியர்கள் வரலாற்றில் இருந்து எளிமையான படிப்பினைகளை எடுத்துக் கொள்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. எங்களுடைய வரலாற்று ஆய்வு முறைகள், இரு வேறு நிகழ்வுகளை ஒப்பிடும் போது அவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி மட்டும் கவனம் செலுத்தாமல், அவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருகின்றன. இந்த எச்சரிக்கையை மனதில் வைத்துக் கொண்டு, கடந்த காலங்களில் இந்தியா இப்படிப்பட்ட கொள்ளை நோய்கள், தேசிய அவசரநிலைகளை எதிர்கொண்ட விதத்தில் இருந்து பாடங்கள் படிக்க இயலும்.
நான் குறிப்பாக மூன்று வெவ்வேறு முக்கியமான வரலாற்று நிகழ்வுகளைக் கவனப்படுத்த உள்ளேன். இவை ஒவ்வொன்றுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும், இவற்றில் இருந்து நாம் வெவ்வேறு படிப்பினைகளைப் பெற முடிகிறது. முதலாவதாக 1896-ல் இந்தியாவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்த பிளேக் நோய் அடுத்த இருபதாண்டுகளுக்குத் தொடர்ந்ததைப்பற்றிப் பேசுவோம். அதற்கடுத்து 1918-19 காலத்தில் நிகழ்ந்த இன்ப்ளூயன்சா கொள்ளை நோய், இறுதியாக இரண்டாம் உலகப்போர் காலத்தை இந்தியா அணுகிய விதம், பல்வேறு விஷயங்களை அணிதிரட்டிய பாங்கு என்று பயணிப்போம்.
(புகைப்பட நன்றி: விகடன்)
முதலாவதாகப் பிளேக் நோயை எடுத்துக் கொள்வோம். இந்நோய் 1896 கடல் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. இரண்டாண்டுகள் கழித்து, இந்நோயின் வீரியத்தைப் பிரிட்டீஷ் அரசாங்கம் உலகெங்கும் பரவியிருந்த தன்னுடைய வியாபாரத்தை அசைத்துப் பார்க்க ஆரம்பித்த போதுதான் உணர்ந்து கொண்டது. இந்தியாவின் பம்பாய் நகரங்களில் இருந்து கல்கத்தா, கராச்சி என்று பிளேக் நோய் படிப்படியாகப் பரவ ஆரம்பித்தது. அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அது பல்வேறு சிறு நகரங்கள், கிராமப்புறங்கள் என்று கிளை பரப்பிக் கொண்டே சென்றது. 1901-ல் பிரிட்டிஷ் இந்திய அரசின் கணக்குப்படி இரண்டரை லட்சம் மக்கள் இந்நோயால் மடிந்து போயிருந்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் பேர் பிளேக் நோயால் இறந்தார்கள். இன்னும் இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பிளே காவு வாங்கியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டிருந்தது.
இந்தத் தொற்றுநோயின் வேகத்தைக் கண்டு திகைத்த பிரிட்டிஷ் அரசாங்கம் நோய் பரவ ஆரம்பித்த இரண்டாம் ஆண்டில் இருந்தே கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. நோயாளிகள், கப்பல்கள், தொடர்வண்டிகளைச் சோதிப்பது, சிறைப்பிடிப்பது என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிளேக் பாதிக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார்கள். வீடுகள், பொதுச் சொத்துக்களைப் பிளேக் பாதிப்புக்கு ஆளான போது அழித்தார்கள். எல்லா வகையான யாத்திரைகள், திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் பெருந்திரளாகக் கூடுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய கடுமையான, தீவிரமான நடவடிக்கைகள் இந்திய மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பின. குறிப்பாகப் பத்திரிகைகள் அரசின் போக்கை கடுமையாகச் சாடி எழுதின.
கட்டாயப்படுத்தித் தனிமைப்படுத்துவது, வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்ப்பது, இன்னபிற தடுப்பு நடவடிக்கைகளை தேசிய தலைவர் திலகர் கண்டித்தார். புனேவில் இருந்து வெளிவந்த அவரின் கேசரி இதழில் அரசின் போக்கு விமர்சிக்கப்பட்டது. திலகர் உள்ளிட்ட தலைவர்கள் பிளேக் நோயை அரசு அறிவியல்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். அதேவேளையில், சர்வாதிகாரப்போக்கோடு, தான்தோன்றித்தனமாக எடுக்கப்படும் முடிவுகள் மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தி விடும் என்று கருதினார்கள். அவர்களின் அச்சம் சரியென்பதை நிறுவும் விதமாக நோய் ஏற்பட்ட 1896-ல் இருந்து அடுத்தடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவமனைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. பிளேக் நோய்க்காக மக்களைப் பரிசோதிக்க வந்த மருத்துவர்கள் தாக்கப்பட்டார்கள், கல்கத்தா, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. பிளேக் நோய் குறித்துப் பலதரப்பட்ட வதந்திகள் உலவ ஆரம்பித்தன. அரசின் அடக்குமுறையும், இந்த வதந்திகளும் கைகோர்த்துக் கொண்டன.
பிரிட்டீஷ் அரசாங்கம் பிளேக் நோய்த்தொற்றை எதிர்கொண்ட விதம் அரசாங்க அதிகாரம், பலம், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி ஆகியவற்றின் போதாமைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு வழியாகப் பிரிட்டிஷ் அரசு மக்களுக்குப் பெரும் இன்னல்களைத் தரும் தவிர்க்க முடியாத நடவடிக்கைகளை எடுக்கும் போது உள்ளூர் தலைவர்களின் உதவியை நாடினார்கள். அவர்களின் ஒத்துழைப்பு மக்களுக்கு இடரைத் தரும் நடவடிக்கைகளை அமல்படுத்தி அதன்மூலம் பெருமளவில் பிளேக் நோயை எதிர்க்க உதவியது.
நாம் பார்க்க இருப்பது 1918-ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய இன்ப்ளூயன்சா கொள்ளை நோய். இந்தக் கொள்ளை நோய் தான் பல்வேறு வகைகளில் தற்போதைய COVID-19 நோய்ப் பரவலோடு ஒப்பிடத்தக்கது. இரண்டு தொற்றுகளும் உலகம் முழுக்கப் பரவின என்பதோடு இரண்டுமே ப்ளூ வகை நோய்த்தொற்றாகும். மேற்சொன்ன இன்ப்ளூயன்சா காய்ச்சலால் உலகம் முழுக்க ஐந்து கோடி மக்கள் இறந்தார்கள். இந்தியாவின் 1921 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இதில் 1.2 -1.3 கோடி மக்கள் இந்தியாவில் இறந்து போனார்கள்.மக்கள் தொகை கணக்கெடுப்பில் மரணங்களின் எண்ணிக்கை குறைத்தே மதிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. பின்னர் மக்கள் தொகை ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள் ஒரு கோடியே எழுபது லட்சம் முதல் 1 கோடியே எண்பது லட்சம் மக்கள் இந்தியாவில் மட்டும் ப்ளூ கொள்ளைநோயால் இறந்து போனார்கள் என்கிறது. அதாவது உலகத்தில் நிகழ்ந்த மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்பட்டது.
இந்தக் கொள்ளை நோய் இந்தியாவை என்ன செய்தது என்பது குறித்துக் காத்திரமான வரலாற்று ஆய்வுக்காக இப்பேரிடர் காத்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து நாம் பெறுவதற்குப் பல்வேறு பாடங்கள் உள்ளன என்றாலும் நான் ஒன்றே ஒன்றை தொட்டுக்காட்ட விரும்புகிறேன். இதனைக் குறித்து நம்மிடம் போதுமான தரவுகள் இருக்கின்றன. இந்த நோய் எப்படி வெவ்வேறு பகுதிகள், தரப்பினரை வெவ்வேறு விதமாகப் பாதித்தது என்பதைக் காண்போம். முதல் உலகப்போரில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக இறந்து போனவர்களை விட அதிகமாக 1.7-1.8 கோடி மக்கள் இந்நோயால் இந்தியாவில் இறந்து போனார்கள். இதில் பெரும்பாலான மரணங்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்கு, மத்திய பகுதிகளில் நிகழ்ந்தன. அதிலும், இன்னும் நுணுகி பார்த்தால் உள்ளூர் அளவிலும் நோயின் தாக்கம் வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ப மாறுபட்டிருந்தது.
உத்திர பிரதேசம் அப்போது ஐக்கிய மாகாணங்கள் என்று அறியப்பட்டிருந்தது. இப்பகுதியில் ஆயிரத்துக்கு இருபது பேர் நோயால் பீடிக்கப்பாட்டார்கள். ஆக்ராவில் மட்டும் பத்திற்கு ஏழு பேர் ப்ளூ தாக்குதலுக்கு ஆளானார்கள். வயதை அளவுகோலாக வைத்துக் கொண்டு பார்த்தால் பம்பாய் மாகாணத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானவர்கள் இருபது முதல் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் (42%). கரோனா நோய்த்தொற்று வயதானவர்களிடம் அதிகம் காணப்படுவதில் இருந்து இது மாறுபட்டு நிற்கிறது. அன்றைய ப்ளூ தொற்றில் பம்பாய் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 20% மட்டுமே. பொதுவாக இன்ப்ளூயன்சா நோயால் முதியவர்களே அதிகம் பாதிக்கப்படும் போது, ஏன் இந்தத் தடவை மட்டும் இளையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள் என்கிற கேள்விக்கு விடைதர முடியாமல் ஆய்வாளர்கள் இன்றுவரை திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நோயின் தாக்கம் பாலின அடிப்படையிலும் மாறுபட்டது. பம்பாய் மாகாணத்தில் அதிகமான இறப்புகள் நிகழ்ந்த இருபது -நாற்பது வயதினரில் ஆண்களை விடப் பெண்களின் மரண அளவு 12-14% கூடுதலாக இருந்தது. கொள்ளை நோய்க்காலங்களில் கூடப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்யத் தலைப்பட்டதோடு, குடும்பத்தினரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புக்கும் ஆளாக்கப்பட்டார்கள். இதனால் அவர்கள் கூடுதலாக இறந்து போனார்கள். வர்க்க, சாதி அடிப்படையிலும் மரண அளவுகள் மாறுபட்டன. ஏழைகளும், கீழ் சாதியினர் எனக் கருதப்பட்டவர்களும் அதிகளவில் இறந்து போனார்கள். அவர்களின் வாழிடங்கள் போதுமான சுகாதாரம் இன்றி இருந்தன என்பதோடு அவர்கள் சிறிய இடத்திற்குள் பல பேர் நெருக்கமாக வாழ வேண்டிய நிலையில் இருந்தார்கள். பலர் திறந்தவெளியில் தூங்க வேண்டிய அளவுக்கு வறுமை ஆட்டிப்படைத்தது. அவர்களிடையே மனித தொடர்பு அதிகமாக இருந்தது நோயை வேகமாகப் பரப்பியது.
இது போதாது என்று பம்பாய் மாகாணத்தில் ப்ளூ நோயோடு பஞ்சமும் கைகோர்த்துக் கொண்டது. கொள்ளை நோயால் விவசாயத் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. தொழிலாளர் தட்டுப்பாட்டால் உணவு உற்பத்தியானது 1917-ஐ ஒப்பிடும் போது அடுத்தாண்டு இருபது சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பம்பாய் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பஞ்சம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்க வேண்டியிருந்தது. இதனால் உணவுத் தட்டுப்பாட்டோடு ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இது நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தி மேற்சொன்ன மரணங்களுக்கு வழிவகுத்தது. இந்நோயை போலவே கொரோனா வைரஸ் கொள்ளைநோயின் தாக்கமும் பல தரப்பட்ட மக்களிடையே வெவ்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனைக் கணக்கில் கொண்டு அரசாங்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.
இறுதியாக, இன்னொரு நோய்த்தொற்று/கொள்ளை நோய் குறித்து நான் பேசப்போவதில்லை. இரண்டாம் உலகப்போர் காலத்துக்குச் செல்ல இருக்கிறோம். கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் போரோடு உருவகப்படுத்தப்படுகின்றன. கொரோனாவுக்கு எதிராகப் போரில் இருக்கும் நாம் மக்களை, நம்முடைய ஆற்றல் வளங்களைத் திரட்டி அதற்கு எதிராகப் போரிட வேண்டும் என்று பேசப்படுகிறது.
இந்தியா இரண்டாம் உலகப்போரின் போது எப்படிப் பல தளங்களில் அணி திரட்டியது என்பது நமக்கு வழிகாட்டியாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல் சில எச்சரிக்கைகளையும் வழங்குகிறது. இடர் சூழ்ந்த காலத்தில் அப்போதைய அரசு இந்தியாவின் வர்த்தக நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பல்துறை வல்லுநர்களோடு கைகோர்த்துக் கொண்டு இயங்கியது. எப்படி அரசு அணிதிட்டியது என்பதற்கு மோசமான பக்கமும் உண்டு. அது ஒரு புறம் என்றால், ஜப்பானுடன் போர் வலுத்த 1942 ஐ ஒட்டிய காலத்தில் இந்திய அரசு அமைப்புரீதியாகப் பல்வேறு புதுமைகளைப் புரிந்தது. பல்வேறு கமிட்டிகள், குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் சில அறிவுரை வழங்குவதாக இருந்தன. வேறு சில அதிகாரமிக்கவையாகவும் திகழ்ந்தன. இந்தக் குழுக்களில் வர்த்தகத் தலைவர்கள், குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், பல்துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்தக் குழுக்களில் இடம் பிடித்தார்கள். இந்தக் கமிட்டிகள், குழுக்கள் அரசாங்கத்தின் வெவ்வேறு உறுப்புகளோடு இணைந்து இயங்கின. இந்த அரசாங்க உறுப்புகள் போர்க்காலத்தில் இந்திய பொருளாதாரத்தைத் துடிப்போடும்,முனைப்பாகவும் வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன.
குறிப்பாக, இன்றைக்குக் கிட்டத்தட்ட களத்தில் தென்படாத ஒரு முயற்சி அப்போது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. உலகப்போர் துவங்கிய இரண்டு ஆண்டுகள் வரை கூட இந்தியாவிடம் மெஷின் கருவிகளை உற்பத்தி செய்யும் திறன் இருக்கவில்லை. அதற்குமுன்பு வரை எல்லா மெஷின் கருவிகளையும் வெளியில் இருந்தே இறக்குமதி செய்து கொண்டிருந்தோம், உலகப்போர் வேகமெடுத்த காலத்தில் அரசு வெவ்வேறு குழுக்கள், கமிட்டிகளோடு சேர்ந்து இயங்கி ஐந்து நிறுவனங்களை மெஷின் கருவிகள் தயாரிக்கக் கண்டறிந்தது. அவற்றிற்கு நிதியுதவி, தர வழிகாட்டுதல், விலை நிர்ணயம் ஆகியவற்றில் வழிகாட்டப்பட்டது. மேலும், அவற்றிடம் இருந்து அரசு கருவிகளைக் கொள்முதல் செய்யும் என்றும் உறுதி தரப்பட்டது.
எண்ணி பதினான்கே மாதங்களில் 1942-43 காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மெஷின் கருவிகள் உற்பத்தியில் இந்தியாவில் ஈடுபடத் துவங்கியிருந்தன. இது போர்க்காலத்தில் மட்டுமல்லாமல் அதற்கடுத்த காலத்திலும் இந்திய தொழில் நிறுவனங்கள், தொழில்மயமாக்கலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், போர்க்காலத்தில் அரசு எப்படிப் போக்குவரத்தை முறையாக ஒருங்கிணைத்து அத்தியாவசிய சேவைகள் சென்று சேர்வதை உறுதி செய்தது என்பதும் நம்மை ஈர்க்கிற ஒன்று. பல்வேறு நீர்வழி போக்குவரத்துகள் ஏற்படுத்தப்பட்டன. சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் இணைக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தனியார்வசம் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்க முயற்சிகள் தனியாரோடு ஒருங்கிணைந்து முனைப்பாகச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் இங்கிருந்து பெற இயலும்.
இப்போது உலகப்போரின் எச்சரிக்கையூட்டும் பக்கத்திற்குச் செல்வோம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் வங்கத்தில் பெரும்பஞ்சம் ஏற்பட்டதைப் பலரும் அறிவோம். அதிகம் அறியப்படாத இன்னொரு பஞ்சம் திருவிதாங்கூர் பகுதியில் ஏற்பட்டது. அன்றும், இன்றும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பெருமளவில் இடம்பெயர்கிற சூழலில் நமக்கான படிப்பினைகள் இப்பஞ்சங்களில் பொதிந்து இருக்கின்றன. இந்த இரண்டு பஞ்சங்களிலும் உணவுத் தட்டுப்பாடு என்பது பஞ்சத்திற்கு முதன்மையான காரணம் அல்ல. உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் வகையில் பல்வேறு விநியோக சங்கிலிகள் அறுந்து போயின என்பது உண்மை. ஆனால், அடிப்படையான பிரச்சனை இந்திய ஏழைகளின் வாங்கும் திறன் பெருமளவில் வீழ்ந்தது என்பதிலேயே இருந்தது. அதுவும் போர்க்காலத்தில் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்த பின்னணியில் இதனைப் பொருத்தி பார்க்க வேண்டும்.
நாம் இன்று வேறுபட்ட சூழலில் இருக்கிறோம். உலகப்போர் காலத்தில் மக்களைத்திரட்டிபோர் புரிய முயன்றது அரசு. இப்போது மக்களை வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வைத்து அதன்மூலம் நோய் பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளால், ஏழைகளின் வாங்கும் திறன் குறைந்திருக்கிறது, குறையும், வங்க, திருவிதாங்கூர் பஞ்சங்களில் இருந்து நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது தான். போர், பேரிடர் காலத்து நடவடிக்கைகள், அணிதிரட்டல்களால் ஏழை எளியவர்களின் வாங்கும் திறன் வீழ்ச்சியடையும். அத்தகைய சூழலில் அவர்களின் வாங்கும் திறனை பேணிப்பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படவேண்டும். பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் சொல்வதைப் போல அவர்களுக்கு உரிய கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இவற்றின் மூலமே இந்தப் பேரிடரில் இருந்து பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் நாம் வெளியேற இயலும்.
வரலாற்றாசிரியர் A.J.P. டெய்லர் வரலாற்றில் இருந்து நாம் எப்படிப் புதிதாகத் தவறுகள் செய்யலாம் என்று மட்டுமே கற்றுக்கொள்ள இயலும் என்று சொன்னார். இந்தளவிற்கு வரலாற்றை அவநம்பிக்கையோடு அணுக வேண்டியதில்லை. வரலாற்றில் இருந்து அதுவும் குறிப்பாக இந்தியா வரலாற்றில் இருந்து நல்ல, மோசமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ள இயலும். இத்தகைய சவாலான காலங்களில் எப்படி அரசின் கொள்கைகள், செயல்முடிவுகள் எச்சரிக்கையாக இருந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் வரலாறு திகழக்கூடும்.
வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் அசோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். நேரு காலத்து இந்தியா, வங்கப்போர், இரண்டாம் உலகப்போரின் வரலாறு என அவரின் ஆய்வுகள் பரந்துபட்டவை. இந்த உரை Carnegie Endowment க்காக நிகழ்த்தப்பட்டது.
புகைப்பட நன்றி: தி இந்து
தமிழில்: பூ.கொ.சரவணன்