பிரிதலின் பருவகாலம்


அந்திவேளையில் மேகம் தூறுகையில்  விடைபெறல்கள் அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும். 

சொற்கள் அருகி விக்கி நிற்கையில் பிரிதல்கள் நிகழ்கின்றன. 

அலைபேசியின் ஊடாக அழுது அயர்ந்து போன முகங்கள் உடைந்து மறைகின்றன. 

புன்னகைத்தபடி கையசைத்து விலகுகையில் சன்னலோரம் பிரியமிக்க உறவொன்று  எட்டிப்பார்க்கையில் கேவல்கள் மின்னி அறைகின்றன. 

துயர்மிக்க காலங்களை கடக்கும் வண்ணம் விழாவொன்று நிகழ்கிறது. 

உடைந்தபடி உருகி வழியும் இசைச்சரம் ஒன்றின் தொடர்பறுந்து செவி துடிக்கையில் பிரிவுக்காலத்தின் வெம்மை இளைப்பாறுகிறது.

 ஒவ்வொரு பிரிதலின் கணத்தினிலும் புதிய நடுக்கங்கள் கரம் சேரும். 

ஆயினும், பிரிவைக் கடக்கும் பயணத்தில் புதிதாய் பூக்கும் தழும்பொன்றின் நேசம் மட்டும் எப்போதும்  உடனிருக்கும். – பூ கொ சரவணன்

அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’


‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

சாவித்திரிபாய் பூலே – கல்விக்கண் திறந்த ஆளுமை


சாவித்திரிபாய் பூலேவின் 125 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்குறிப்பில் இருந்து..

‘வணக்கம். நலமா? என் பெயர் சாவித்திரிபாய் பூலே. என் கதையைச் சொல்கிறேன். இது பல்லாயிரம் பெண்களின் கதை.

என்னுடைய ஊர் சத்தாரா. இப்பகுதியின் அரசர் மூன்றாம் பேஷ்வா பாஜிராவ். ஊர் முழுக்கக் கட்டுப்பாடுகள். கல்வி என்பது பிராமணர்கள் உள்ளிட்ட சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்தது. பெண்கள் நிலைமை மோசம். குழந்தையாக இருக்கும் போதே திருமணம். கணவர் இறந்தால் மொட்டையடித்து ஒதுக்கிவிடுவார்கள். நெருப்பில் தள்ளும் வழக்கமும் உண்டு. படிப்பெல்லாம் சுத்தம். நாங்கள் படித்தால் உருப்பட மாட்டோம் எனச்சொன்னார்கள். ஊரில் பலருக்கும் கடிதம் எழுதுவோம் என்றார்கள். படிக்கிற பெண்ணுடைய கணவரின் சாப்பாட்டில் புழுக்கள் நெளியும். சீக்கிரம் அவர் செத்துடுவார் என்றுகூடச் சொல்வார்கள். நான் சிரித்துக்கொள்கிறேன். எப்படியெல்லாம் ஏமாற்றப் பார்க்கிறார்கள்?

அதை விடுங்கள். என்னுடைய ஊருக்கு போவோம். என்னுடையது விவசாயக் குடும்பம். நான் குளிர்மிகுந்த ஜனவரி மாதத்தில் பிறந்தேன். இளம் வயதில் பள்ளிக்கூடத்தைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. 9 வயதில் ஜோதிபாய்யோடு திருமணம். புனேவிற்குக் குடிபெயர்ந்தேன்.

அவர் மிஷனரி பள்ளிகளில் கல்வி பயின்றார். எனக்கும் எழுத, படிக்க உதவினார். பல்வேறு கதைகள், அனுபவங்கள். ஒருநாள் பிராமணர் வீட்டுக் கல்யாணம். போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். ‘நாமல்லாம் சூத்திரனுங்களாம். தீட்டாயிடுச்சாம். விரட்டிவிட்டுட்டாங்க’ எனப் புலம்பினார். எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் என அவருக்குக் கனவு. சாதிப்பாகுபாடுகள் படிப்பாலும், விழிப்புணர்வாலும் தான் ஒழியும். நான் மேலும் படித்தேன். ஜோதிபாய் உடனிருந்தார், உற்சாகப்படுத்தினார். அவருடைய நண்பர்களும் பாடம் சொல்லிக்கொடுத்தனர். எனக்குப் படிப்பது சுகமானதாக இருந்தது. இன்னமும் கற்க வேண்டுமென ஆசையாக இருந்தது. ஃபராரி, மிட்செல் எனும் இரண்டு ஆங்கிலேய ஆசிரியைகள் அன்போடு உதவினார்கள். நான் படித்ததைப் பலருக்கும் சொல்லித்தரும் நேரம் எப்போது வரும்?

ஜோதிபாய் பெண்களுக்கான பள்ளியைத் துவங்கினார். ஒரே எதிர்ப்பு. பள்ளிக்கூடத்திற்கு வெளியே ‘ஒழிஞ்சு போங்க’னு கோஷம் போடுவார்கள். என் மாமனாரை தூண்டி விட்டார்கள். ‘நீ எக்கேடோ கெட்டுப்போ. இவளை ஏன் படிக்க வைக்கிறே’ எனக்கேட்டார். இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நடுத்தெரு என்றார். நானும், ஜோதிபாயும் நடுத்தெருவை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்குள் கல்விக்கனல் எரிகிறது. அது ஒரு வீட்டிற்குள்ளேயே அணைந்து விடலாமா? ஆகாது.

எங்கள் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த ஒரே ஆசிரியரையும் மிரட்டினார்கள். வேறு வழியில்லை. என்னையே பாடம் நடத்தச் சொன்னார் ஜோதிபாய். பள்ளிக்கு நடந்து போவேன். என் மீது சாணி, அழுகிய காய்கறிகளை வீசுவார்கள். சில நாட்கள் வெற்றிலைப் போட்ட எச்சில் கூடப் பரிசாகக் கிடைத்தது. முதலில் பயமாக இருந்தது. பள்ளியின் பெண் குழந்தைகளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பயமெல்லாம் பாசத்தின் முன் பறந்தது. அழுக்குகளை வீசியவர்களிடம் சொன்னேன், “என்னுடைய தங்கைகளுக்குப் பாடம் சொல்லித் தரப்போகிறேன். இந்தக் குப்பைகள் எல்லாம் எனக்கான வாழ்த்து மலர்கள். இறைவன் உங்களை ரட்சிக்கட்டும்’.

என் அண்ணன் என்னைக் கடிந்து கொண்டான். ஏன் இந்த வேண்டாத வேலை என்றான். நான் சொன்னேன்,
“படிக்காமல் இருப்பது முழு மிருகத்தனம். அறிவைப் பெறுவதாலே பிராமணர்கள் மேல்நிலையில் உள்ளார்கள். கல்வியும், அறிவும் அற்புதமானது. கற்றவர் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் எனப்பட்டாலும் அவரே உயர்ந்தவர். நாங்கள் தீண்டப்படாதோர் கற்க வேண்டும் என உழைக்கிறோம். அதன்வழியே விடுதலை கிட்டும். என் கணவர் பிராமணர்களை எதிர்த்துக்கொண்டு ஏன் தீண்டப்படாதவர்களுக்குக் கற்பிக்கிறார்? அவர்களும் சமமான மனிதர்கள். மானமிகு வாழ்க்கை எல்லாருக்கும் ஆனது. அதற்குக் கல்வி கற்க வேண்டும். அதற்காகவே நானும் கற்பிக்கிறேன். இதிலென்ன தவறு ? நாங்கள் சிறுமிகள், பெண்கள், மகர்கள், மங்குகள் என அனைவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்ப்போம்’ என்றேன்.

ஆரம்பத்தில் பெரிதாகப் பெண்கள் படிக்ற வரவில்லை. இத்தனைக்கும் எங்கள் பள்ளியே இந்தியர்கள் நடத்தும் முதல் பெண்கள் பள்ளி. நானும், ஜோதிபாயும் ஊர் ஊராகச் சுற்றினோம். படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பரிசுப்பணம் தந்தோம். கிராமம், கிராமமாகப் படிப்பின் அவசியம், நன்மைகளை எடுத்துச் சொன்னோம். கல்வியோடு விளையாட்டுகள், கலைகளைப் பேரன்போடு பகிர்ந்தோம். கூட்டம் பெருகியது.

9 ஆசிரியர்கள், 132 மாணவர்கள், 3 பள்ளிகள். அது கனவின் தொடக்கம். 1851, 1852 காலத்தில் தேர்வுகளை நடத்தினோம். கிட்டத்தட்ட திருவிழா தான். பெண்கள் படித்து, தேர்வில் அசத்துவதைப் பார்க்க 3,000 பேர் கூட்டம். அலையில் எழும் சூரியனாய் எங்கள் பெண்கள் மின்னினார்கள்.

‘பூனா அப்சர்வர்’ எனும் பத்திரிகை 1852 -ல் என்ன எழுதியது? ‘ஜோதிபாய்- சாவித்திரிபாயின் பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களை விடப் பத்து மடங்கு அதிகப் பெண்கள் படிக்கிறார்கள். மிக உயர்ந்த கல்வித்தரம். விரைவில் இப்பெண்கள் பெரும் சாதனைகள் புரிவார்கள்’. 50 க்கும் மேற்பட்ட பெண்கள், அனைவருக்குமான பள்ளிகளை நடத்தினோம்.

எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. ஜோதிபாயை இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘குழந்தை பிறக்கலைனா பொண்ணு தான் மலடியா? ஆம்பிள கிட்டயும் பிரச்சனை இருக்கலாமே. பிள்ளை பொறக்கலைனு பொண்டாட்டி வேற கல்யாணம் பண்ணிக்கிட்டா புருஷனுக்கு எப்படியிருக்கும்? என்னால சாவித்திரியை விட்டுட்டு இருக்க முடியாது’ என்றார்.

பல கைம்பெண்கள் நிலைமை கண்ணீரை வரவைத்தது. சொந்தக்கார ஆண்கள் வதைத்தார்கள். பரிதாபமாகக் கைம்பெண்கள் கர்ப்பமானார்கள். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களைக் காப்பாற்றினோம். 1853-ல் அப்பெண்களை அரவணைக்க இல்லம் துவங்கினோம்.

கையால் நெய்த ஆடைகளை அணிவது வழக்கம். அவை எளிமையான, ஆனால், கம்பீரமான ஆடைகள். இல்லத்தரசிகளுக்கு ஆடை நெய்யக் கற்றுக்கொடுத்தேன். பொங்கல் பண்டிகை அன்று பெண்கள் அமைப்பைத் துவங்கினேன். மாமியார், மருமகள், அம்மா, மகள் என அனைவரும் வந்தனர். ஒன்றாக அமர்ந்து சொந்தக்காலில் நிற்கப் பழகினோம்.

கைவிடப்பட்ட கைம்பெண் ஒருவரின் மகனை தத்தெடுத்துக் கொண்டோம். யஷ்வந்த் எனப் பெயரிட்டு வளர்த்தோம். மருத்துவம் படித்தபின் ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குச் சேவை செய்தான் யஷ்வந்த்.

கண்முன் இன்னொரு அநீதி தெரிந்தது. கணவன் இறந்ததும் கைம்பெண்களுக்கு மொட்டையடித்தார்கள். மனைவி இறந்தால் கணவனுக்கு மொட்டையடிக்கிறோமா? ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்தக் கொடுமை? சவரம் செய்பவர்களை நாடினோம். வேலை நிறுத்தம் செய்யக் கோரினோம். கூடுதல் கூலி வேண்டியோ, சலுகைகள் நாடியோ அல்ல. கைம்பெண்களின் சமத்துவம் நாடி போராட்டம் நிகழ்ந்தது. சவரக்கத்திகள் ஓய்வெடுத்தன. பல கைம்பெண்களின் கண்ணீர் காணாமல் போனது. அந்தச் சவரத்தொழிலாளர்களை நினைக்கும் போதே பெருமிதம் பூக்கிறது.

1877-ம் ஆண்டு. பெரும் பஞ்சம். மக்கள் பசியால் செத்து மடிந்தார்கள். விலங்குகள் இறந்து தரையில் விழுந்தன. பெரும் உணவுப்பஞ்சம். மக்கள் ஊரைவிட்டு வெளியேறினார்கள். ஆறு, குட்டை, குளம் எல்லாம் வற்றின. தவித்த வாய்க்கு தண்ணீரில்லை. மரங்களில் இலையே தென்படவில்லை. வறண்ட நிலம் பாளம், பாளமாய்ப் பிளந்தது. விஷப்பழங்களை உண்டார்கள், சிலர் சிறுநீரை குடித்தார்கள். மக்கள் உணவுக்காக, தண்ணீருக்காக அழுதார்கள், பின், பரிதாபமாக இறந்தார்கள்.

நாங்கள் கிராமம், கிராமமாகச் சுற்றினோம். இயன்றவரை நீரும், சோறும் தந்தோம். கந்துவட்டிக்கார கொடுமைகளைத் தட்டிக்கேட்டோம். ஏழைப்பிள்ளைகள் தங்கவும், கற்கவும் 52 விடுதியோடு கூடிய பள்ளிகள் திறந்தோம்.

1890-ல் ஜோதிபாய் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றேன். ஆணும், பெண்ணும் சமம் எனும் தாமஸ் பெய்னின் ‘Rights of Man’ னின் வரிகளை ஜோதிபாய்ச் சொல்லிக்கொண்டே இருப்பார். அதை எண்ணிக்கொண்டு நானே அவரின் உடலுக்குத் தீமூட்டினேன்.

1897 பெரும் பிளேக் நோய். லட்சக்கணக்கான மரணங்கள். மருத்துவர்கள் சாதி பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள், அதி-சூத்திரர்கள் யாருமின்றி இறந்தார்கள். நானும், யஷ்வந்தும் அசரவில்லை. எங்கள் சத்தியசோதக் அமைப்பினரோடு உழைத்தோம். மருத்துவமனைகள் நடத்தினோம். உயிரைப் பணயம் வைத்து போராடினோம். பிளேக் நோயுற்ற மகர் சிறுவன் ஒருவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நானே தொட்டுத் தூக்கினேன். அவன் உயிரை காப்பாற்றி விட்டோம். களைப்பாக இருக்கிறது. பிறிதொரு நாள் இன்னமும் சொல்கிறேன். ‘

சாவித்திரிபாய் பிளேக் நோய்க்கு எதிரான போரின் போதே வீர மரணம் எய்தினார். ‘கல்வித்தாய்’, ‘இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்’ எனும் பல்வேறு பெருமைகளுக்கு உரியவர். ‘மாசற்ற ரத்தினங்களின் பெருங்கடல்’ எனும் கவிதை நூல் இயற்றினார். அவரின் கவிதை ஒன்று:

உனக்கு நீயே துணை, ஓயாமல் உழை.
கல்வியும், பொருளும் கொண்டு சேர்.
அறிவிழந்தால் அனைத்தும் அழியும்.
கல்விச்செல்வமின்றிக் கால்நடை விலங்கு நாம்.
சோம்பி அமராதே, எழு, கல்வி கற்றிடுக.
ஒடுக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள் துயர்துடை.
கற்கும் பொன் வாய்ப்பினை பற்றிக்கொள்.
ஆகவே, கற்றிடுக, சாதிச்சங்கிலிகளை உடைத்தெறிக.
பிராமணர்களின் புனித நூல்களை வேகமாகத் தூக்கியெறிக.

மறைந்து போதல் எனும் கலை


என்னை உனக்குத் தெரியாதா என்று அவர்கள் வினவும்போது,
தெரியாது என்று பதிலளி.

அவர்கள் பார்ட்டிக்கு அழைக்கையில்,
அந்தக் கூடுகைகள் எப்படியிருக்கும் எனப் பதிலளிப்பதற்கு முன் ஒரு கணம் யோசிக்கவும்.
உரத்த குரலில் யாரோ ஒருவர் தான் எப்போதோ கவிதையொன்றை இயற்றியதாக உன்னிடம் தெரிவிப்பார்கள்.
வழவழப்பான சாஸேஜ் உருண்டைகள் காகித தட்டுகளில் பரிமாறப்படும்.
இப்போது பதிலளி.

நாம் எல்லாம் சேர்ந்து களிப்போம் என அவர்கள் சொன்னால்,
ஏன் என வினவு.

அவர்களை முன்போல நீ அன்பு செய்யவில்லை என்று பொருளல்ல.
நீ மறந்து விடக்கூடாத ஒன்றை நினைவுகூர முயன்று கொண்டிருக்கிறாய்.
மரங்கள். அந்திக் கருக்கலில் ஒலிக்கும் மடாலய மணி.
அவர்களிடம் புதிய வேலையொன்று உனக்காகக் காத்திருப்பதாகச் சொல்.
அது எப்போதும் முடியப்போவதே இல்லை என அறிவிக்கவும்.

காய்கறிக்கடையில் யாரேனும் உன்னை அடையாளம் கண்டுகொண்டால்,
கொஞ்சநேரம் தலையசைத்துவிட்டு, முட்டைகோஸ் போல மாறிவிடு.
பத்தாண்டுகளாகத் தலைகாட்டாத ஒருவரை வாசலில் சந்தித்தால்,
உன்னுடைய புதிய கீதங்களை எல்லாம் அவனிடம் பண்ணிசைக்காதே.
உன்னால் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க இயலவே இயலாது.

இலை போல உணர்ந்து உலவி நட.
எந்த நொடியிலும் நீ தடுமாறி விழலாம் எனத் தெரிந்துகொள்.
உன் நேரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய என இப்போது முடிவெடு. –
Naomi Shihab Nye,
Words Under the Words: Selected Poems தொகுப்பு

தமிழில்: பூ.கொ.சரவணன்

தமிழ்த்தாய் வாழ்த்து ‘மாநிலப் பாடலான’ வரலாறு.


‘நீராருங் கடலுடுத்த…’ பாடல் பெ.சுந்தரனார் இயற்றிய ‘மனோன்மணீயம்’ எனும் நாடகத்தின்  பாயிரத்தில் உள்ளது .  பெ.சுந்தரனார் தத்துவப் பேராசிரியர், ஆய்வாளர்.  கால்டுவெல் 9-ம் நூற்றாண்டுக்கு முன் தமிழில் நூல்கள் இருந்ததில்லை என்று கருத்துரைத்தார். அதனை மறுதலித்து ஞானசம்பந்தர் காலம் 7-ம் நூற்றாண்டு என நிறுவியவர் சுந்தரனார்.    தன்னுடைய ‘மனோன்மணீயம்’ நாடக  நூலிற்கு  ஆங்கிலம், தமிழ்  என்று  இரு  மொழிகளிலும்  முன்னுரை எழுதியுள்ளார்.   


தன்னுடைய  முகவுரையில். “பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்ற கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்று உதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது”  என்று  வருந்துகிறார்.  

ஓவியம்: மணியம் செல்வன்/ நன்றி: இந்து தமிழ் திசை


பாயிரத்தில்  ‘தமிழ் தெய்வ  வணக்கம்’ என்று  தமிழை  தெய்வமாக  போற்றிப் பரவுகிறார்.  கால்டுவெல் திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி எனக் கருத, தமிழ்த்தெய்வ வணக்கத்தில்  தமிழே மற்ற திராவிட மொழிகளுக்குத் தாய் என்று சுந்தரனார் எழுதினார். மேலும், தமிழைத் தாய், அணங்கு  என்று பலவாறு  போற்றுகிறார். இப்பாடலில்  வழங்கி வரும் முதன்மையான கருத்துகள்  என்று சிலவற்றைப்  பேராசிரியர் கைலாசபதி  அடையாளப்படுத்துகிறார். அவை,

  (அ) இந்திய நாட்டில்  தெக்கணம்  திலகமாகத்  திகழும்  பகுதி. 

(ஆ) திராவிடம் முதன்மையான  சிறப்புமிக்கதாகும் 

(இ) தமிழ் உலகமெங்கும் மணக்கும்  புகழும், பெருமையும் மிக்கது

(ஈ) எல்லையற்ற, சிதையாத பரம்பொருளை  போன்றது தமிழ்

(உ) தமிழே  திராவிட  மொழிகளுக்கு  தாய்

(ஊ) ஆரியம்  போல்  வழக்கழியாமல்  சீரிளமை  மிக்க  மொழியாகத்  தமிழ்  திகழ்கிறது 


“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்  எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்   கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்  உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து  சிதையாஉன்   சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”


‘நீராருங்  கடலுடுத்த’ எனும்  துவங்கும்  இப்பாடல்  முந்தைய தமிழ்  படைப்புகளில்  இருந்து பல வகைகளில்  வேறுபட்டது . நாடகத்துறையில் மட்டுமன்றி தமிழ்ச்சமூக, பண்பாட்டுத் தளங்களில்  புதிய பாய்ச்சலுக்கு  அடிகோலியது. பேராசிரியர் டேவிட் ஷூல்மானின்  பார்வையில்  தமிழ்த்தேசியத்திற்கான  முன்னோடிப்  பார்வை இப்பாடலில் காணக்கிடைக்கிறது. ஆய்வாளர்  பிரேர்னா  சிங் இப்பாடல் துணைத்தேசியமும், தமிழர்  நலனும்  கைகோர்க்கும்  இடம் என்கிறார். தமிழ்த்தாயின்  உலகத்தில் “சாதி, சமய, பாலினப்பாகுபாடுகள் கிடையாது. கற்றலும், கலையும், பண்பாடும் தழைத்தோங்கின” என்று  சுட்டிக்காட்டுகிறார் வரலாற்றாளர்   சுமதி  ராமஸ்வாமி . திருக்குறள் இருக்கக் குலத்திற்கொரு நீதி சொல்லும் மனுநீதி எதற்கு என்றும் அவ்வணக்கத்தில் சுந்தரனார்   கேட்கிறார். திருவாசகத்துக்கு உருகாமல் ஆரவாரமிக்கப் பிற  மந்திரச்சடங்கில் உருகுவரோ என்றும் தமிழ்த்தெய்வ வணக்கத்தில் கேட்கிறார். இது ஆரிய வேதங்களைக் குறிக்கிறது என்கிறார் வரலாற்றாசிரியர் சுமதி ராமஸ்வாமி.

அவ்வரிகள்,  


வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்-குணர்ந்தோர்கள் 

உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக்-கொருநீதி 

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில்- மாண்டோர்கள

 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.


இப்பாடலுக்கு  பிறகே  தமிழைத் தாயாக, தெய்வமாக  போற்றிப்பரவுவது  பரவலானது. மேலும், தமிழ்த்தாய் தமிழ் மக்களின் அன்னையாக  போற்றப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில்  எண்ணற்ற  பாடல்கள்  தமிழன்னையை  போற்றி  பாடப்பட்டன. இவற்றுக்கான  முதல்  வித்து  ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’ ஆகும். 

நன்றி: கரந்தைத் தமிழ்ச்சங்க கல்லூரி முகநூல் பக்கம்


கரந்தைத் தமிழ்ச்சங்கம் தன்னுடைய  மூன்றாம்     ஆண்டறிக்கையை  1913-ல் வெளியிட்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த ….’ பாடலைப்  பற்றி  பேசுகிறது:

பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாகிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம்.எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாகத் திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.’  என்று ஆண்டறிக்கை குறிப்பிடுவதை  ஆய்வாளர்  கரந்தை ஜெயராஜ் கவனப்படுத்துகிறார். 

1913-ம் ஆண்டறிக்கை


இப்பாடல் படிகளை  கரந்தை  தமிழ்ச்சங்கத்தை  சேர்ந்த  உமாமகேசுவரனார்  பல நூறு  பிரதிகள்  அச்சிட்டு  கொண்டு  சேர்த்தார். இப்பாடல், பட்டி தொட்டியெங்கும்  பாடப்பட்டது. பல்வேறு  தமிழ்ச்சங்க  கூட்டங்களில்  இப்பாடல்  ஒலித்தது. தனித்தமிழ்  மாநாடுகளில்  தவறாமல்  இடம்பெற்றது.  .தனித்தமிழ் மாநாடுகள்,  பாடநூல்களில்  இடம்பெற்றது. தனிநாயகம்  அடிகள் “இப்பாடலின்  வரிகள் கடந்த  அறுபது  ஆண்டுகளாக  எதிரொலித்துக்  கொண்டே இருக்கிறது, தமிழ்ப்பற்றின் முதன்மையான  பாடல்  எனும்  அதன்  பெருமையை  விஞ்சும்  படைப்பு  எதுவுமில்லை”  என்று  1963-ல் புகழ்ந்தார். 

இப்பாடலை  தமிழக  அரசு  அனைவரும்  பாடும்வண்ணம்  வழிவகை  செய்ய  வேண்டும்  என்கிற  கோரிக்கைகள்  அறிஞர் அண்ணா  ஆட்சிக்காலத்தில்  வலுப்பெற்றது. 1969-ல் அண்ணா  இயற்கை  எய்திவிட, கலைஞர்  கருணாநிதி  அப்பொறுப்பை  ஏற்றுக்கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதும் பாடப்படவில்லை என்று இன்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

கரந்தைத்  தமிழ்ச்சங்க  விழாக்களிலேயே  முதல்  ஆறு  வரிகள்  மட்டுமே  பாடப்பட்டு  வந்தன  என்பதை  சுட்டிக்காட்டுகிறார் கரந்தை  ஜெயராஜ். அச்சங்கத்தின் 1917-ம் ஆண்டறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆறு வரிகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது என அவர் கவனப்படுத்துகிறார். திரைக்கலைஞர்களுக்கான  விருதளிப்பு  விழாவில்  தமிழ்நாட்டின் வழிபாட்டுப்  பாடலாக   ‘நீராருங் கடலுடுத்த’ அமையும்  என மார்ச் 1970-ல் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

புகைப்பட நன்றி: kalaignar.dmk.in

 பிற  மொழிகளை  தாழ்த்திப்  பேசும்  வரிகளைத்  தவிர்த்து  பாடலை  அமைத்துக்  கொண்டதாக  அவர் குறிப்பிட்டார். ஆரியம்  போல்  வழக்கழிந்து  முதலிய  வரிகளும்  சேர்க்கப்படவில்லை. ஆயினும், கரந்தைத்  தமிழ்ச்சங்கத்தின்  வழக்கத்தை  அடியொற்றியே  இப்பாடல் வரிகள்  அமைந்திருப்பதையும் கவனத்தில்  கொள்ள  வேண்டியிருக்கிறது.  மேலும், ‘நீராருங் கடலுடுத்த…’ பாடலினை  தமிழ்நாட்டின்  வழிபாட்டுப்  பாடலாக  ஆக்கிய  அரசாணையை  கூர்ந்து  நோக்கினால்  இன்னொன்றும்  புலப்படும்.

 ஜூன் 17, 1970 -ல் வெளியிடப்பட்ட அரசாணை  எண்  1393-ல் தமிழ்நாடு  முழுமைக்கும்  பொதுவாக  வழிபாட்டுப்  பாடல்  அமையும்  வண்ணமே  ‘நீராருங்  கடலுடுத்த ‘  இருக்கும் என்கிறது. மேலும், ‘மதம், குறிப்பிட்ட  நம்பிக்கையோடு’  தொடர்புடையதாக    இல்லாத  வண்ணம்  இப்பாடல் இருக்குமாறு  அமைந்திருப்பதாகவும்  அரசாணையில்  சொல்லப்பட்டு  இருந்தது.  பல்வேறு  தமிழ்நாட்டு  நிகழ்ச்சிகளில்  இந்து  மதப்  பாடல்களும்,  வடமொழி,தெலுங்கு  பாடல்களும்  ஆதிக்கம்  செலுத்திக்கொண்டிருந்த  போது  இந்த  அறிவிப்பு அவற்றை  மாற்றியது. மேலும், பாயிரத்தில்  உள்ள  சிவனைப்பற்றிய  குறிப்பு இடம்பெறாமல்   போனதையும், ‘தமிழ்த்தெய்வ  வணக்கம்’  ஆனது  ‘தமிழ்த்தாய்  வாழ்த்தாக’ மாறியதையும்  மதச்சார்பற்ற, அனைவருக்கும் பொதுவான தமிழ்  அடையாளத்தை  முன்னிலைப்படுத்தும் முயற்சியாகக் கொள்ள  வேண்டியிருக்கிறது.  (ஆங்கிலத்தில் ‘Hymn on Goddess of Tamil’ என்றே அரசாணை குறிப்பிடுகிறது’. )


மேற்சொன்ன  அரசாணையை  ஒட்டி 23 நவம்பர்  1970-ல்  அரசாணை  ஒன்று  வெளியிடப்பட்டது.  அதில்  ‘நீராருங் கடலுடுத்த ….’  வழிபாட்டுப்பாடலாக  விழாக்களின்  துவக்கத்தில்  பாடப்பட  வேண்டும்  என்று  அறிவுறுத்தப்பட்டது. அரசுத்துறை, கல்வி  நிறுவனங்கள், உள்ளாட்சி  அமைப்புகள்  நடத்தும் நிகழ்ச்சிகளில்  இப்பாடல்  மோகன  ராகத்தில், திஸ்ர  தாளத்தில்  இசைக்கப்பட  வேண்டும்  என்றும் கூறப்பட்டு  இருந்தது.

Memo no. 3584/70-4

காஞ்சி  மடாதிபதி  விஜேயந்திரர்  கலந்து   கொண்ட நிகழ்வொன்றில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ இசைக்கப்பட்ட  போது  கண்மூடி அமர்ந்து  இருந்தார். இதனையடுத்து  கண் இளங்கோ என்பவர் ராமேஸ்வரத்தில்  உள்ள காஞ்சி  மடத்தின் கிளையில்  நுழைந்தார். அதற்கு  மட  மேலாளர் எதிர்ப்பு தெரிவிக்க அவரை  கண் இளங்கோ  மிரட்டியதாக  .  மடத்தின்  மேலாளர்  காவல் துறையில்  புகார்  அளித்து  இருந்தார்.  இது தொடர்பாக  தன்மீது  பதியப்பட்ட   முதல் தகவல்  அறிக்கையை ரத்து  செய்யுமாறு மதுரை உயர்நீதிமன்றத்தை  கண்  இளங்கோ  நாடினார். 


இவ்வழக்கில்  நீதிபதி  ஜி.ஆர்.சுவாமிநாதன்  மேற்குறிப்பிட்ட இரண்டு  அரசாணைகள்  1393,  3584/70-4  ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ வழிபாட்டுப்  பாடலாகவே  இந்த  அரசாணைகள்  வரையறுத்து  இருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த்தாய்  வாழ்த்து  வழிபாட்டுப்பாடல், அது, கீதம்  அன்று”. என்று குறிப்பிட்டார்.  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடப்படும்  போது   எழுந்து நிற்க  வேண்டும்  என்று எந்தச் சட்டமும், அரசாணையும்  இல்லை என்பதையும்  அத்தீர்ப்பில்  கவனப்படுத்தினார்.

மேலும், “தமிழ்த்தாய்  வாழ்த்திற்கு  உச்சபட்ச  மரியாதையும், மதிப்பும்  தரவேண்டும். தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும்  போது  கூட்டத்தினர் எழுந்து நிற்பது  மரபாக  இருக்கிறது  என்பது உண்மை. ஆனால், ஒரே வழியில்  தான்  மரியாதை  செலுத்த வேண்டும் என்று   கேள்வி எழுப்பிக்கொள்ள  வேண்டும்.   பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும்  நாம் கொண்டாடும்  போது, ஒரே வழியில்  தான் மரியாதை செலுத்த  வேண்டும்  என்று வலியுறுத்துவது போலித்தனமானது.  …..  
ஒருவர் சந்நியாசி ஆகும் போது, பண்பட்ட மரணத்துக்கு  ஆட்படுகிறார். அவர் மறுபிறப்பு  எடுத்ததாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்நியாசி  எளிய  வாழ்வினையே   வாழ்கிறார்.அவர்  வழிபாட்டில்   ஈடுபடும் போது, அவர் எப்போதும் தியான  நிலையில் இருப்பார். தமிழ்த்தாய்  வாழ்த்து வழிபாட்டுப்பாடல் என்பதால்  சந்நியாசி  தியான  நிலையில் அமர்ந்து இருப்பது  நிச்சயம்  நியாயமானது. இந்த  நிகழ்வில், மடாதிபதி தியான  நிலையில்  அமர்ந்து  கண்மூடி இருந்தார். அது அவர் தமிழ்த்தாய்க்கு மதிப்பும், மரியாதையும்   செலுத்தும் விதமாகும்.”  என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி


இதனையடுத்து, தமிழ்நாடு  அரசு அரசாணை (நிலை) எண் 1037 ஐ 17.12.2021 ல் வெளியிட்டது. இதில் தமிழ்த்தாய்  வாழ்த்தின்  தோற்றம், வளர்ச்சி,  அதனை அரசு  நிகழ்ச்சிகளில்  விழாவின்  துவக்கத்தில்  பாடவேண்டும் என்று ஆணையிட்ட  அரசாணைகள் ஆகியவை  குறிப்பிடப்பட்டு, ஏழாவது பத்தியில் ‘தமிழ்த்தாய்  வாழ்த்து’ தமிழ்நாட்டின் மாநிலப்பாடலாக  அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில்  அமைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள், அரசு  அலுவலகங்கள், பொதுத்துறை  நிறுவனங்கள் உள்ளிட்ட பொது  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு  முன்பு தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாயம்  பாடப்பட  வேண்டும் என்றும், தமிழ்த்தாய்  வாழ்த்து  பாடப்படும் போது  அனைவரும்  தவறாமல் எழுந்து  நிற்க  வேண்டும் என்றும் ஆணை எண் 1037 ஆணையிட்டது. மேலும், பாடல்  பாடப்படும்  போது  எழுந்து  நிற்பதில்  இருந்து மாற்றுத்  திறனாளிகள், கர்ப்பிணித்  தாய்மார்கள்  ஆகியோருக்கு விலக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

 சான்றுகள்/ உதவியவை :

1. மனோன்மணீயம் http://www.tamilvu.org/library/lA310/html/lA310vur.htm

2. மனோன்மணியம்  சுந்தரனாரின்  இன்னொரு  பக்கம் – பேராசிரியர்   அ  கா பெருமாள் 

3. நீராருங் கடலுடுத்த –  கரந்தை ஜெயக்குமார்

 4.   ‘ Regional nationalism in twentieth century Tamil literature ‘ Tamil Culture  Vol10 : pp 1-23, 1963 – Revd X. S. Thaninayagam

 5.  ‘The Tamil Purist Movement – A revaluation’ -Social Scientist, Vol. 7, No. 10 (May, 1979), pp. 23-51 – K Kailasapathy 

6. தமிழ்நாடு அரசாணை  நிலை எண் 1393, பொதுத்  (அரசியல்) துறை, 17.06.1970

7. தமிழ்நாடு அரசாணை   எண் 3584/70-4, 23.11.1970 

8. தமிழ்நாடு  அரசாணை  நிலை  எண் 1037, 17.12.2021 

 9. ‘Tamil: A Biography’ – David Shulman pp: 296

10. ‘Passions of the Tongue’ – Sumathi Ramaswamy

11. ‘En/gendering Language : The Poetics of Tamil Identity’ – Sumathi Ramaswamy  Comparative Studies in Society and History , Volume 35 , Issue 4 , October 1993 , pp. 683 – 725

12. ‘How Solidarity Works for Welfare -Subnationalism and Social Development in India’ – Prerna Singh pp: 123

13. Kan. Ilango v. State Represented by Inspector of Police & AnotherCrl. O.P (MD)No.17759 of 2021 and Crl. M.P. (MD)No.9690 of 2021

சொற்களில் கவனமாயிருங்கள்


சொற்களில் கவனமாயிருங்கள்,
அதிசய சொற்களிலும் கூட,
ஆச்சரிய சொற்களுக்காக நம்மால் இயன்றதையெல்லாம் புரிகிறோம்,
அவை பூச்சிகள் போல மொய்க்கின்றன,
ஆனால், கொட்டாமல் முத்தமொன்றை ஈந்துவிட்டு அகல்கின்றன.
அவை விரல்கள் அளவுக்கு நல்லவையாகவும் இருக்கக் கூடும்.
நீங்கள் நம்பிக்கையோடு அமரக்கூடிய பாறையாகவும் சொற்கள் திகழலாம்.
அவை மலர்களாகவும், காயங்களாகவும் இருக்கலாம்.
எனினும், நான் சொற்களைக் காதலிக்கிறேன்.
அவை மேற்கூரையிலிருந்து தரை சேரும் புறாக்களாக இருக்கலாம்.
அவை என் மடியில் வீற்றிருக்கும் ஆறு புனித ஆரஞ்சு கனிகள்.
அவை மரங்கள், வேனலின் கால்கள்,
வெய்யோன், அவனின் ஒளிரும் முகம்.
இருந்தாலும், அவை அடிக்கடி என்னைக் கைவிடுகின்றன.
நான் சொல்ல விரும்புபவை தீராமல் என்னுள்ளே இருக்கின்றன,
அத்தனை கதைகள், உருவங்கள், சொலவடைகள்,
ஆனால், சொற்கள் போதுமானதாக இருப்பதேயில்லை,
பிழையானவை என்னை முத்தமிடுகின்றன,
சமயங்களில் கழுகைப் போல வான் ஏகுகிறேன்,
சிறுகுருவியின் சிறகுகளுடன்,
ஆனால், சொற்களின் மீது அக்கறையோடு கனிவாய் இருக்கிறேன்.
சொற்களையும், முட்டைகளையும் கவனமாகக் கையாளவேண்டும்.
அவை உடைந்தால் மீண்டும் உயிர்த்தெழுப்பவே முடியாதவை. – Anne Sexton

Image result for anne saxton
தமிழில்: பூ.கொ.சரவணன்

தண்ணீர் மத்தன் தினங்கள்


ஏன் இந்த நாள் இப்படி முடிய வேண்டும்? Sethupathi Nedumaran தம்பி சொல்லித்தான் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்திற்கு சென்றேன். கொண்டாட்டம், தர்பூசணி நிறைந்த குவளைகள், துள்ளல், பெருகிக்கொண்டே இருக்கும் வெடிச்சிரிப்பு என இத்தனை நெருக்கமான, சினிமாத்தனம் இல்லாத ஒரு திரைப்படத்தை பார்த்து பல நாளாகிறது.
 
சப்டைட்டில் இல்லாமல் அருகிருந்த நண்பனின் உதவியோடு முதல் பாதியைக் கடந்த நாங்கள் இரண்டாம் பாதியில் வசனங்கள் புரியாமலே திரைமொழியில், ஆடிப்பெருக்கன்று அடித்துச் செல்லும் நீர்ச்சுழல் போல கலந்து விட்டோம். பள்ளி மாணவன் ஜேசன், அவன் ஆசிரியர் பிற நண்பர்கள், செவ்வி துளிர்க்கும் பிரியங்கள் இதற்குள் இப்படியொரு படையலைத்தர முடியுமா என இன்னமும் நம்பமுடியவில்லை.
Image result for thanneer mathan dinangal;
 
அந்த பதின்பருவ நாயகனும், நாயகியும். நடிக்கவா செய்கிறார்கள். நம் வாழ்வின் திரும்பாத பொழுதுகளை கண்முன் தங்களின் உடல்மொழியில், அடர்த்தியான மௌனத்தில், பேரன்பில் நிறைக்கிறார்கள்.
 
இசையும், படத்தொகுப்பும் புரிகிற மாயத்தில் திக்குமுக்காடுவது ஒரு புறம் என்றால் ஜேசனின் வாழ்வின் தோல்விகள், கசப்புகள், நிராகரிப்புகள் ஊடாக வெள்ளந்தியான தெருச்சண்டைகளும், மயிலிறகு குட்டி போட்டது போன்ற பிரியங்களும், வெகுளித்தன்மை மாறாத குழந்தைமையும், ஊடலுவகையும் நம் இருளினை ஒளிரச்செய்கின்றன. ஒரு வரி கூட மிகையாக எழுதப்பட்டதில்லை. அந்த தர்பூசணித் தினங்களில் சேறு அப்பி, கடிபட்ட பழத்துணுக்குகளின் சாறு ஆடையில் வழிந்து, காத்திருப்பின் கனிவு பெருகி வானில் சற்றே மிதந்தபடி வெளியே வருவீர்கள். கலையின் வெற்றியும், உண்மையின் கதகதப்பும் அதுதானே?

தமிழ்ப்பற்றும், மொழி அரசியலும்


பேராசியர் சுமதி ராமசுவாமி தமிழ்ப்பற்றின் நவீன வரலாற்றை ‘Passions of the tongue’ என்கிற தலைப்பில் எழுதினார். அந்நூலை மொழிபெயர்க்க முயன்று சில காரணங்களால் நின்று போனது. அந்நூலின் முன்னுரை மொழி அரசியலின் ஆழ அகலங்களை கண்முன் நிறுத்த முனைகிறது. வாசித்துப் பாருங்கள். ஆங்கில மூலத்தினை இங்கு படிக்கலாம்: https://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=ft5199n9v7&brand=ucpress
 
இல்லங்களுக்கு இடையில், மொழிகளுக்கு இடையில்:
 
மொழிப்பற்றைக் குறித்த இந்தப் புத்தகத்தை மொழிகளின் மீதான என் காதலைப் பற்றிய ஒரு வாக்குமூலத்தோடு துவங்குவது பொருத்தமாக இருக்கும். இன்னமும் நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்வதென்றால் எனக்கு எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் மீது மட்டும் தனித்த பற்றில்லை. புதுத் தில்லியில் பல்வேறு மொழிகள், லயம் மிக்க ஒலிக்குறிப்புகள் இவற்றால் சூழப்பட்ட வீட்டில் வளர்ந்தேன். மொழியியல் ரீதியாக என்னுடைய வீடு பலதரப்பட்ட மொழிகளின் சங்கமமாக இருந்தது. என்னுடைய வீடு தற்கால பாணியில் சொல்வது என்றால், மொழியளவில் மட்டுமேனும் நவநாகரீகப் பண்புடையதாகத் திகழ்ந்தது. என் தாய் தமிழ் பேசுவதைக் கேட்டபடி வளர்ந்தேன். வழக்கப்படி, தந்தையும் தமிழிலேயே பேசினார். என் தந்தை கன்னட மொழியில் சரளமாகத் தன்னுடைய உடன்பிறந்தவர்களோடு உரையாடுபவராக இருந்தார். பெங்களூரில் இருந்த அவரின் நிறுவனத்தைக் கன்னட மொழியைக் கொண்டே அவர் நிர்வகித்தார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெற்றோருக்கு பிறந்து பெங்களூரில் வளர்ந்த என் தந்தை கன்னடத்திலேயே தான் கணக்குப் போடுவதாக, ஏன் கனவு கூடக் காண்பதாக வலியுறுத்தி சொல்வார். பெரும்பாலான பிராமணர்கள் வீட்டில் நடப்பதை போல, ஆறுவயது முதல் வீட்டில் இறை வழிபாட்டிற்காக எனக்குப் போதிக்கப்பட்ட மந்திரங்களின் மூலம் சம்ஸ்கிருத அறிமுகமும் கிட்டியது. பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் வளர்ந்த இளம் பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் நடப்பதை போல, நானும் ‘இந்திய கலாசாரத்தை’ காத்தபடியே, நவீனமானவளாக, மேற்கத்திய தாக்கம் கொண்டவளாக மாறவேண்டிய சுமைக்கு ஆளானேன்.
Image result for சுமதி ராமஸ்வாமி
 
ஏழு வயது இருக்கும் பொழுது, இந்திய பாரம்பரிய இசை வகைகளில் ஒன்றான கர்நாடக சங்கீத வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டேன். இவ்வாறு தெலுங்கு மொழியின் ஒலிக்குறிப்புகளுக்கு அறிமுகப்படுதப்பட்ட நான் பொருள் புரியாமலே அப்பாடல்களைக் கற்றுக் கொண்டேன். இன்றுவரை என்னுடைய இசைத்தட்டுக்களில் தெலுங்கு பாடல்களை இழைய விட்டுக் கசிகிற கணங்கள் உண்டு. என்னுடைய பள்ளிக்கல்வியின் மொழியாகவும், தனிப்பட்ட வாசிப்பு இன்பத்தின் மூலமாகவும், குடும்பத்தினர், நண்பர்களோடு இயல்பாக உரையாடும் மொழியாகவும் இந்திய ஆங்கிலம் திகழ்ந்தது. டெல்லியின் கடைகளில் பேரம் பேசவும், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவற்றை ரசிக்கவும் இந்தி உதவியது. இந்திப் பாடல்கள், திரைப்படங்களைக் கண்டு களிப்பது முன்னைப் போல இல்லாவிட்டாலும் இன்னமும் தொடரவே செய்கிறது. இந்த இந்திப் படங்களைப் பார்த்ததும், டெல்லியின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்ததும் ஒரு பயனைத் தந்தது. இந்தி மொழி பேசுபவர்களோடு நெருங்கிய, இணக்கமான கடந்தகாலத் தொடர்பு கொண்ட உருது மொழியோடு அறிமுகத்தை என்னை அறியாமலே நான் பெற்றதை பின்னரே உணர்ந்தேன்.
 
ஆக, நான் புழங்கிய இந்த மொழிக் குடும்பத்தில் என்னுடைய ‘தாய் மொழியாக’ கருதப்பட்ட தமிழின் இடம் என்ன? தமிழைப் பள்ளியில் நான் கற்கவில்லை. எனக்குத் தமிழை வாசிக்கவும் தெரியாது. தமிழைப் பொது இடத்தில் பேசவோ, பிறர் பேசி கேட்கவோ இல்லை. வீட்டில் தமிழைத் தொடர்ந்து பயன்படுத்தினோம் என்றாலும் ஆங்கிலமும், இந்தியும் அவ்வப்பொழுது உள்ளே நுழைந்து கொள்ளும். தமிழ் குறித்து இன்றைக்குத் தேர்ந்த அறிவிருப்பதால் நாங்கள் வீட்டில் பேசிய தமிழ்மொழி பெருமளவுக்குச் சம்ஸ்கிருதமயமானதாக இருந்தது எனச் சொல்ல முடியும்.
Image may contain: 1 person
.
ஒற்றை மொழி ஆதிக்கம் செலுத்திய சுற்றுப்புறங்களில் பன்மொழி புலமை கொண்ட வினோத ஜந்துவாக நான் வளர்ந்ததாக உங்களுக்குத் தோன்றலாம். எனினும், இந்தியாவின் நகரப்புறங்களில் வாழும் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் இது போன்றே பல மொழிகளைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்துவதை உணர்வார்கள். பயன்படுத்துகிற மொழிகள் நபருக்கு, நபர் வேறுபடும் என்றாலும் பலமொழிகளை எதிர்கொள்ளும் அனுபவம் எல்லாருக்கும் உரியது என அழுத்திச் சொல்வேன். என்னுடைய பன்மொழித் திறன்கள் இந்திய துணைக்கண்டத்தில் பன்மொழிகளின் ஆழமான வரலாற்றின் பிரதிபலிப்பு எனலாம். இந்த வரலாறு இடம்பெயர்ந்து, வெவ்வேறு ஊர்களில் குடிபெயர்ந்த குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்திற்குள், வீட்டுக்குள் மட்டும் தங்களுடைய மொழியைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடாகும். தாறுமாறாக அமல்படுத்தப்பட்டாலும் தேசிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய குடிமகனையும் குறைந்த பட்சம் மூன்று மொழிகளை (தாய்மொழி/வட்டார மொழி, இந்தி, ஆங்கிலம்) கற்கவேண்டும் என எதிர்பார்ப்பதன் விளைவுமே எனக்குக் கிடைத்த இத்தனை மொழி அறிமுகம். எனினும், என்னுடைய வாழ்க்கையின் அனுபவங்கள் துல்லியமாகக் காட்டுவதைப் போல மொழிக்கொள்கை மூன்று மொழிகளை வளர்க்கும் என்கிற அரசின் நம்பிக்கைக்கு மாறாக வெவ்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டது.
 
அடுக்கிக்கொண்டே போகும் அந்தச் சிக்கல்களில் சில: எப்படித் தாய் மொழியை வரையறுப்பது? ஆங்கிலமும், இந்தியும் மரியாதை, வருமானம், அதிகாரம் ஆகியவற்றின் மொழிகளாகத் திகழும் சூழலில் எப்படித் தாய் மொழியை வளர்ப்பது? ஆங்கிலத்தைக் காலனிய மேற்கின் நீட்சியாகப் பார்க்கும் தேசியவாத சக்திகளை மீறி எப்படி வளர்த்து எடுப்பது? இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட இந்தி, ஒரு பகுதியின் மொழியை ஒட்டுமொத்த இந்தியாவின் மீது திணிக்கும் உள்நோக்கம் கொண்டது என்று எழுந்த எதிர்ப்புகளை எப்படித் தணிப்பது? இந்த மொழிப்போர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன என்பது நவீன இந்தியாவின் மொழிகளின் கலாசார அரசியல் குறித்த என் ஆர்வத்தைக் கூட்டின.
என்னைப்போன்ற வர்க்கம், ஜாதி, கல்விப் பின்புலத்தில் இருந்து எழும் இந்தியர்கள் பல மொழிகளில் தேர்ச்சி கொண்டவர்களாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
 
என்னுடைய அதிகாரப் பூர்வ தாய்மொழியாகத் திகழ்ந்தாலும் தமிழானது நான் இயங்கிய மொழிப் பொருளாதாரத்தின் ஓரத்திலேயே இருந்தது. தமிழ் குறித்து ஆய்வு செய்ய என்னுடைய அறிவுசார் தேடல் திரும்பியதே ஆச்சரியம் தருகிற திருப்பமாகும். இந்தியும், ஆங்கிலமும் பேசும் என்னுடைய பள்ளியிலிருந்து நான் வீட்டிற்கு ஐந்தாவது படிக்கும் பொழுது வந்து சேர்ந்தேன். அப்பொழுது, “நாம்பலாம் தமிழா?” என என் அன்னையிடம் மழலைத் தமிழில் நான் கேட்ட தருணத்தில் தான் என்னுடைய வருங்கால அறிவுலகின் வளர்ச்சிக்கான விதைகள் ஊன்றப்பட்டதாக என்னுடைய அன்னை ஆணித்தரமாகப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். என் நினைவோ வேறொன்றைச் சுட்டுகிறது. மெட்ராஸில் இருந்த என்னுடைய பாட்டி ஒட்டுமொத்த கூட்டுக் குடும்பத்துக்கும் எழுதிய கடிதத்தைப் புரிந்து கொள்ளும் பதின்பருவத்து வேட்கையில் என்னுடைய தமிழ் சார்ந்த தேடல் துவங்கியது. ஆங்கிலம், தமிழ் கலந்து எழுதப்பட்ட அந்தக் கடிதம் எனக்குப் புரிபடாத புதிராகவே இருந்தது. கடிதத்தின் துவக்கத்தில் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான
உடல்நலம் சார்ந்த விசாரிப்புகளுக்குப் பின்னர்த் தமிழ் மொழிக்கு மாறிவிடும். சுவாரசியம் மிகுந்த, குடும்ப ரகசியங்கள், மகிழ்ச்சிகள் என்று அமைந்த குடும்ப வாழ்க்கையின் முக்கியமான தகவல்கள் தமிழில் அமைந்திருக்கும். இது என்னுடைய மொழியறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. கவர்ச்சிமிகுந்த குடும்ப அரசியலின் கூறுகளை நான் புரிந்து கொள்ள முடியாதவாறு சாதுரியமாகத் தடுத்த மொழி அரசியலை தாண்டுவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டேன். பதினைந்து வயதில் தமிழை எழுதக் கற்றுக் கொண்டேன். மெதுவாக, ஆனால், உறுதியாக நான் தமிழில் வாசிக்கப் பழகிக் கொண்டேன். என்னுடைய உடன்பிறந்தவர்களுக்கு ஆர்வமூட்டும் அந்தக் கடிதங்களைப் படித்துக் காட்டும் பணியை நானே செய்தேன். இன்றுவரை அவர்களுக்குத் தமிழைப் படிக்கத் தெரியாது.
 
நான் இப்பொழுது கோட்பாட்டு ரீதியாக விளக்கக் கூடிய மொழி அரசியலின் நேரடி அனுபவத்தை அப்பொழுதுதான் பெற்றேன். பல்வேறு மொழிகள் குடும்பத்திலோ, நாட்டிலோ பெருகுகையில் மொழி மூலங்களைப் பயன்படுத்தித் தங்களுக்கு நெருக்கமான அரசியலை அரசியலை தங்களுக்கு மட்டும் புரியும் மொழியில் மேற்கொள்வதன் மூலம் பரிச்சயம் இல்லாத மற்ற மொழிக்காரர்களை அந்நியப்படுத்தும் அரசியலின் அறிமுகம் வீட்டிலேயே கிட்டியது.
என்னுடைய இளங்கலை படிப்பை டெல்லி பல்கலையிலும், மேற்படிப்பை ஜவகர்லால் நேரு பல்கலையிலும் படிக்கையில் என் அறிவுசார் ஆர்வம் தமிழ் பேசும் இந்தியாவின் வரலாறுகள், பண்பாடுகள் மீது அதிகரித்தது. இந்தியாவின் தலைசிறந்த இரு பல்கலையிலும், மிகச் சிறந்த சில வரலாற்றாசிரியர்களுடன் வரலாற்றைக் கற்றேன். அது இன்றுவரை எனக்குப் பெருமளவில் உதவுகிறது. இந்தியத் தலைநகரில் இந்தியாவின் புவியியல், அரசியல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு போலத் தென்னிந்தியா சார்ந்த வரலாற்றுத் துறை ஆர்வம் பெருமளவில் இல்லாமல் இருந்தது என்னைச் சஞ்சலப்படுத்தியது. தமிழகத்தில் வலிமைமிகுந்த பிராமண எதிர்ப்பு இயக்கத்துக்குப் பின்னால், பிறப்பால் பிராமணப் பெண்ணான என்னுடய தமிழ் சார்ந்த ஆர்வத்தை எனது தாய்வீடாக நான் கருதிய தமிழ்நாடு வரவேற்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து என்னைப் பெனிசிலுவேனியா பல்கலையின் மானுடவியல் துறைக்கும், பின்னர்ப் பெர்க்லியில் உள்ள கலிபோர்னிய பல்கலையின் வரலாற்றுத் துறைக்கும் கொண்டு சென்றது. நான் தட்டுத்தடுமாறிய என் “தாய்மொழி”யை என் வீடு, தாய் ஆகியோரை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்த நாட்டில் முறையாகக் கற்றுக்கொண்டேன் என்பது தமிழுடனான என்னுடைய நம்பிக்கையற்ற காதலின் வரலாற்றுக்குப் பொருத்தமான முடிவாகும்.
 
நான் ஒரு மொழியைப்பேசி அதைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட ஒற்றை அடையாளத்தோடு வளரவில்லை. பலதரப்பட்ட, சமயங்களில் முழுமையற்ற வெவ்வேறு சூழல்களில் நான் பயன்படுத்திக் கொள்ளும் வசதியான (சுமையான?) அடையாளங்களோடு வளர்ந்தேன். ஒருபுறம், இதனால் பல மொழிகளுக்கும், பல வீடுகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டதாக அடிக்கடி மோசமாக உணர்ந்தேன். இதற்கு நேர்மாறாக, பல மொழிகள், பல இடங்கள், பல மனிதர்களிடையே இருத்தல் ஆகியவற்றின் ஆனந்தங்கள், சாத்தியங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றையும் சிறப்பாக அனுபவித்தேன். இந்த வாழ்க்கை எனக்குப் பெண்ணியத் தத்துவவியல் அறிஞர் ரோசி ப்ராய்டோட்டியின் கருத்தாக்கத்தை நினைவுபடுத்துகிறது.
 
இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த அவர் பிரெஞ்சு மொழியில் கல்வி கற்றார். இப்படிப்பட்ட பல்வேறு அடையாளங்கள் தாங்கிய வாழ்க்கையை அவர், ‘நாடோடி உணர்வு நிலை’ என்கிறார். இது என்னுடைய அடையாளங்களுக்கு இடையேயான வாழ்க்கையை எதிரொலிப்பது போல உள்ளது. 1994-ல் ‘Nomadic Subjects’ எனும் தனிக்கட்டுரையில் இப்படிப்பட்ட உணர்வுநிலை, ‘மையம், அது சார்ந்த குறிப்பிட்ட இடங்கள், குறிப்பிட்ட வகையான அதிகாரப்பூர்வ அடையாளங்கள் எனும் கருதுகோள்களை முழுமையாக மூழ்கடிக்கிற ஒன்றாக உள்ளது’ எனக் கருதுகிறார். மேலும், இந்த உணர்வுநிலை சமூகம் வரையறுத்து இருக்கும் சிந்தனை, செயல்பாடுகளோடு பொருந்திப் போவதை தன்னளவில் எதிர்க்கிறது, மேலும், ஒருவரை அடையாளப்படுத்தும் பெரும்பான்மை வழிமுறைகளின் ஆதிக்கத்தில் கரைந்துவிடாமல் தன்னை இந்த உணர்வுநிலை காத்துக் கொள்கிறது என்கிறார்.
 
நாடு கடத்தப்பட்ட, இடம் பெயர்ந்த மக்களின் உணர்வுநிலையில் காணப்படும் பிரிவு, இழப்பு, தாய்வீடு திரும்புதல் முதலிய உணர்வு நிலைகளுக்கு மாறாக, ஒரு நாடோடி தன்னுடைய உலகத்தோடு கொண்டிருக்கும் உறவானது, ரோசி ப்ராய்டோட்டியின் பார்வையில் ‘தோன்றி மறையும் பிணைப்பு’ மற்றும் ‘சுழற்சியில் அடிக்கடி தோன்றும்’ உறவாகும். இந்த நாடோடி பாணியானது, கடந்த காலத்தின் நிலை, பெருமிதம், ஒற்றைத்தன்மை ஆகியவற்றில் மனதை பறிகொடுத்து நிலைத்து நிற்பதில்லை. இந்த நாடோடித்தன்மை பன்மொழிப்புலமையோடு கைகோர்த்துப் பயணிக்கிறது. நிலையான அடையாளங்கள், தாய் மொழிகள் குறித்து ஆரோக்கியமான சந்தேகம் கொள்கிறது. நாடோடியான பன்மொழிப் புலமையாளர் பல்வேறு மொழி அடிப்படைகளிடம் மென்மையான நெருக்கம் கொண்டிருப்பதால் எந்த வகையான மொழி அல்லது இனத் தூய்மையை நாடுவதில்லையோ? என ரோசி ப்ராய்டோட்டி வினா எழுப்புகிறார். (Braidotti 1994: 8, 28).
 
இந்த ஆயிரம் ஆண்டுகளின் கேள்விகேட்கும் சிந்தனையின் முன்னுதாரணமான வடிவமாக நாடோடித்தன்மையைக் கருதும் ப்ராய்டோட்டி யின் எல்லாக் கருத்துக்களோடும் நான் ஒப்ப வேண்டியதில்லை. அவருடைய ஆர்வமூட்டும் பரிந்துரைகளின் தத்துவத் தாக்கங்கள் குறித்து நுண்ணாய்வு செய்யப்போவதில்லை. பின்காலனிய காலத்தில் பல்வேறு மொழிகள், வீடுகளுக்கு இடையே வாழும் நாடுகளைக் கடந்த நாடோடி மக்களின் வாழ்க்கை முடக்கிப்போடும் பயனற்றவைகளின் தொகுப்பாக அல்லாமல், பல முக்கியமான வாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகக் காண முடியும் என எனக்கு எச்சரித்த படைப்பாகவே காண்கிறேன். புதுப்பித்துக் கொள்ளும், மோசமாகிக் கொண்டே இருக்கும் தேசியம், பிரிவினைவாதம், இடப்பற்று சார்ந்த உணர்வுநிலைகள் மிகுந்த இந்த வரலாற்றின் குறிப்பிட்ட தருணத்தில் அவற்றைக் கவனத்தோடு அணுக இந்த நாடோடி உணர்வுநிலை உதவுகிறது. இதனால் ப்ராய்டோட்டி சொல்வதைப்போல ‘ஏற்படுத்தப்பட்ட பகுப்புகளிடையேவும், அனுபவத் தளங்களின் ஊடாகவும் சிந்திக்கவும், பயணிக்கவும் முடிகிற, எல்லைகளை மழுப்பி, பாலங்களை எரிக்காமல் செயல்படவும் முடிகிறது’ (1994: 4, 12).
 
கலாசார அடிப்படைகள், நம்பிக்கைகள் சார்ந்த கட்டமைப்புகள் அதிகாரம் மறுக்கப்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வலிமை பெறும் முக்கியமான வழிமுறைகளாக உள்ளன. பின்னோக்கி சொல்வதைச் சாராமாகக் கொண்ட இந்தக் கலாசார நம்பிக்கைகளுக்கு யார் அங்கீகாரம் தருவது என என்னுடைய நாடோடி உணர்வுநிலை கேள்வி கேட்கிறது. எந்தச் சூழல்களில் இது நிகழும்? மிக முக்கியமாக, ஏன், எப்படிக் கலாசாரச் சொத்துக்களான மொழி, மதம் அல்லது எல்லாவற்றை விடவும் புனிதமான உடமையாகக் கருதப்படும் தேசம் ஆகியவை மிகப்பெரும் உருவம் கொண்டதாக, அழியாத்தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றன? இதன்மூலம் எப்படி இவை ஆட்கொள்பவர்களை ஆட்கொள்கின்றன?
(இந்நூலின் முதல் பக்கம்: )
figure
 
இந்தப் புத்தகமும், என்னுடைய வாழ்க்கையைப் போல நாடோடித் தன்மையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வின் ஒரு பகுதி இந்த நூல் உருவாக்கத்தில் பயன்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் கண்டங்கள், கலாசாரங்களைக் கடந்து செய்தேன். புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராசில் எழுதப்பட்டது, பிற பகுதிகள் அமெரிக்காவில் இருந்தாலும் மிகவும் வேறுபட்ட கலசார, அறிவார்ந்த இடங்களான பெர்க்லே, சிகாகோ, பிலடெல்பியா ஆகியவற்றில் எழுந்தன. என்னுடைய வாழ்வின் இந்திய பக்கங்கள் அமெரிக்க ஆய்வுப்புலத்தில் அரிதாகி வரும் என்னுடைய இருப்பில் ஒரு வேகத்தையும், வேட்கையையும் செலுத்துகின்றன. அதேசமயம், நான் பணியாற்றும் இடத்தில் நான் பெற்று இருக்கும் நிலையே பகுத்தாயும், மையமற்ற வாய்ப்புகளை உள்ளடக்கிய நாடோடி வாழ்க்கையை வசதியாகத் தொடர உதவுகிறது. வரலாற்றை எழுதுதல் என்பது சமீப வருடங்களில் நாட்டைப் பற்றி எழுதுவதோடு சிக்கலான செயல்பாடாகப் பிணைந்துள்ளது என்று பலமுறை சொல்லப்பட்டு விட்டது.
Image result for passions of the tongue
 
அதிகாரப்பூர்வ வரலாறுகள் பெரும்பாலும் நாடு என்கிற வெளிக்குள் இருந்தே எழுதப்பட்டுள்ளன. எனினும், இந்த வரலாற்று நூல் நாடுகளைக் கடந்து, மொழிகளை, இருப்பிடங்களைக் கடந்து பயணிக்கிறது. இதன் இறுதி உருவாக்கம் அது பேசும் மக்கள், அந்த மக்களைக் குடிகளாகக் கொண்ட நாடு ஆகியவற்றை விட்டு வெகுதூரம் தள்ளிய ஒரு இடத்திலேயே நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட படைப்பின் உள்ளடக்கத்தால் ஏற்படக்கூடிய வரவேற்பு, வாசிப்பு சார்ந்த சிக்கலான விளைவுகளை நான் அறிந்திருந்திருக்கிறேன். எனினும், சல்மான் ருஷ்டியுடன் இணைந்து ‘பகுத்தாய்வு சிந்தனை யின் நோக்கம் புதிய கோணங்களில் வரலாற்று உண்மைகளைத் திறந்து விடுவதும், கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளை நிலைகுலைப்பது’ என்றே சிந்திக்க விரும்புகிறேன். என்னுடைய நாட்டைவிட்டு நிகழ்ந்த நகர்வு, பகுத்தாயும் நாடோடி வாழ்க்கை எனக்கு உறுதியான வாய்ப்பை தருகிறது. இல்லையேல், ரூஷ்டி எள்ளல் ததும்பச் சொல்வதைப் போல, இப்படி எண்ணிக்கொள்வது தான் என்னுடைய பணியைச் செவ்வனே செய்ய உதவும்.
 
தமிழில் – பூ.கொ.சரவணன்

கும்பளாங்கி இரவுகள்: கனவிலும் கசடுகள் அகற்றும் கதை


 

மது நாராயணின் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா தயாரிப்பில் வெளிவந்திருக்கும்
ஷ்யாம் புஷ்கரனின்
‘கும்பளாங்கி இரவுகள்’ திரைப்படம் ஒரு தனித்த அனுபவம். இதற்கு மேல் சிதிலமடைய முடியாது என்கிற அளவுக்குக் குலைந்து போய் நிற்கும் ஆண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு வீடு தான் கதையின் மையம். குட்டிச்சுவரை கிட்டே நெருங்கும் ஒரு இல்லம். அங்கே கசடுகளும், சச்சரவுகளும், அவநம்பிக்கையுமே சூழ்ந்து நிற்கிறது. ஓரிரு காதல்களும், தன்னை முழுமையான மனிதனாக உணரும் ஒருவரும் இந்த வீட்டின் போக்கை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே கதை.

இந்தக் கதை ஒரு வகையான மாயக்கதை தான். இதனை யதார்த்தத்தின் பிரதி என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தேர்ந்த திரைக்கதையும், வெகு இயல்பாகத் திரையில் வாழும் நடிகர்களும் அலையாத்தி காடுகளும், உப்பங்கழிகளும் நிறைந்த கும்பளாங்கி கிராமத்திற்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையிலான வன்மத்தையும், முன்முடிவுகளையும் தாங்கிக் கொண்டு திரியும் ‘முழுமையான மனிதர்களை’ இப்படம் பகடி செய்கிறது. அதனைப் பரப்புரைத் தொனியின்றிச் செய்வது தான் இப்படத்தை கலைப்படைப்பாக உயர்த்துகிறது. சீர்குலைந்து போன குடும்பங்களை நாடிச்செல்லும் காதல்கள் வீழவே செய்யும் என்கிற பொதுப் புத்தியை கலைத்து போடுகிறார்கள் கும்பளாங்கி மாந்தர்கள்.
மரபை மீறுகிற ஆவேசம் இன்றி, சிற்சில வரிகளில், முக மாற்றங்களில் அடக்குமுறை கேள்விக்கு ஆளாகிறது.

#spoilers ahead#
‘என் பெற்றோரின் சாபம் தான் நான் இருக்கிற இடத்தை எல்லாம் மண்மேடாக ஆக்கிவிடுகிறது. இந்த வீடும் அப்படி ஆகிடும்’ எனக் கதறுகிற பெண்ணைப் பார்த்து, ‘இதுக்கு மேலே இந்த வீட்டில நாசமா போக என்ன இருக்கு? என்னடா ஃபிராங்கி’ எனச் சௌபின் கேட்கையில் ஊழை வெல்லும் உறுதி திரையில் ஒளிர்கிறது. ‘நான் ஆம்பிளைடி’ என ஷானே நிகாம் முஷ்டி முறுக்குகையில் ‘போடா’ என்று நாயகி புறங்கையால் அவனைத் தள்ளுவது அத்தனை அழகானது. ‘மீன் பிடிக்கிறதெல்லாம் மட்டமான தொழில் இல்லையா?’ என்கிற மேட்டுக்குடியின் கேள்வியை மீனவரின் மகனே கேட்கிற போது, அன்பும், உணவின் சுவையின் நினைவுகளும் மின்ன, ‘எனக்கு மீன்னா உசுரு. மீன் பிடிகிறது கேவலம்னு நான் சொன்னேனா’ என்று அவனுடைய காதலி கேட்கையில் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மதங்களைக் கடந்து காதல் கொள்ளும் பெண், %கர்த்தர் நமக்கும் தான் நெருக்கமானவர் % என்கிற கணம் ஆழமானது.

Image may contain: 7 people, including Gowthami, people smiling

‘என்னடீ நான் உனக்கு அண்ணன் இல்லையா’ என்று காதலை குலைத்து போடும் தருணத்தில், ‘நீ அண்ணனாவே இருந்தாலும் வாடி, போடி போடக்கூடாது.’ என்கிற எதிர்க்குரல் ஏன் அத்தனை கம்பீரமானதாக இருந்தது? அதுவரை எதிர்ப்பைக் காட்டாத பெண்ணிற்குள் கனன்று கொண்டிருக்கும் கேள்வித்தீ சுடர்விட்டுப் பரவுகையில் ஊற்றெடுக்கும் வெம்மை தானோ அது?
#spoilers over#

கச்சிதமான மனிதனாக வலம்வரும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பும், அந்த மிரட்டும் பார்வையும், மிரளவைக்கும் மருட்சியான சிரிப்பும், எதையுமே செய்யாமலே எதையாவது செய்து விடுவாரோ என்கிற படபடப்பை தருகிற காட்சியமைப்பும் மறக்க முடியாத அனுபவத்தை வாரி நிறைக்கின்றன. கும்பளாங்கி இரவுகள் அவநம்பிக்கை, மரணங்கள், கண்ணீர், காழ்ப்புகள் அனைத்தையும் கரைக்கும் வல்லமை மானுடத்திற்கும், நகர முனையும் மாந்தர்களுக்கும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. இந்தக் கதையின் நாயகர்கள் அசகாயசூரர்கள் இல்லை, அவர்கள் மடிகள் நாடி தேம்புபவர்கள். உடன்வர மறுக்கும் உறவுகளின் வலிகளை உணர்ந்து கொள்கிறவர்கள். இடிபாடுகளில் இருந்து எழுந்து புன்னகைப்பவர்கள். படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பவர்களை எட்டி உதைக்க அஞ்சாதவர்கள். அவசியம் பாருங்கள்.

மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் அரிய பணிகள்


:
தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் பெ.சுந்தரனாரின் (சுருக்கமாகப் பெ.சு,) அறிவுலகப் பணிகள் குறித்து, ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் ‘மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்’ என்கிற குறுநூலை எழுதியுள்ளார். நாற்பத்தி இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த பெ.சு நாடகாசிரியர், ஆய்வாளர், உரைநடை எழுத்தாளர் என்கிற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். அவர் மொத்தமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவை 650 பக்கங்களில் அடங்கிவிடும். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றின் கால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு ஆகியவற்றுக்கு வித்திட்டவர் என்கிற சிறப்புக்கு உரியவர்.
தன்னுடைய மனோன்மணியம் நாடக நூலில் தன்னை, ‘அடியேன் கடையேன்; அறியாத சிறியேன்; கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்’ என்று அடக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்த்த பெ.சு. தன்னுடைய தமிழார்வத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து மாட்டுவண்டி ஏறி செங்கோட்டை அடைந்து அங்கிருந்து சென்னை வரை பயணம் செய்து தமிழறிஞர்களைக் கண்டு, அறிவுப்பசி ஆற்றிக்கொண்டார். அன்றைய சமஸ்தான மன்னரின் உதவியோடு லண்டனில் இருந்து ஆங்கில நூல்களை வரவைத்து வாசித்து இருக்கிறார்.

களக்காட்டில் இருந்து ஆலப்புழைக்குக் குடிபெயர்ந்த வேளாளர் குடும்பம் என்றாலும் தமிழையும், சைவத்தையும் பெ.சுவின் குடும்பம் மறக்கவில்லை. திருவிதாங்கூர் அரசர்களின் மொழி வெறுப்பற்ற தன்மை இதற்குக் காரணம் என்று ஆதாரங்களோடு கவனப்படுத்துகிறார் அ.கா.பெருமாள். பெ.சு வரலாறு, தத்துவம் பயின்றார். தத்துவத்தில் 1880-ல் முதுகலை பட்டம் பெற்றார். சட்டம் பயின்றாலும் அப்படிப்பை அவர் முடிக்கவில்லை. பெ.சு. அவர்கள் திருநெல்வேலி ம.தி.தா. இந்துப்பள்ளியின் தலைமைப்பொறுப்பில் இருந்த போது தமிழை முறையாகக் கற்றதோடு, ஸ்ரீ கோடகநல்லூர் சுவாமிகளிடம் சித்தாந்த சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்ததோடு தானே சுயமாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ளார். திருவனந்தபுரம் கல்லூரியில் பயின்ற போது தமிழ்த்துறைக்குப் புத்தகங்களை வாங்கியுள்ளார்.

திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியின் தத்துவத்துறை பேராசிரியராக இருந்த முனைவர் ராபர்ட் ஹார்வி இங்கிலாந்து போக வேண்டி இருந்த போது தன்னுடைய இடத்திற்குப் பெ.சுவை பரிந்துரை செய்தார். 1878-1882 வரை தத்துவ ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மூன்றாண்டுகள் சமஸ்தான மன்னரால் பிறவகைச் சிரஸ்தார் என்னும் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இது அரசு நிர்வாகம் தொடர்புடையது. இப்பணி காலத்தில் தான் பல்வேறு கோவில்களுக்குப் பயணம் செய்து, கல்வெட்டுகள், ஆவணங்களைப் பெ.சு. ஆய்வு செய்துள்ளார். 1885-1897 வரை ஹார்வியின் பரிந்துரையால் மகாராஜா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார். நன்றி மறவாமல் தன்னுடைய வீட்டிற்கு ஹார்விபுரம் என்று பெயரிட்டதோடு, தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தை அவருக்கே சமர்ப்பித்தார்.

நாடகாசிரியர்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தமிழ் நாடகங்கள் எழுந்தன. தமிழகத்தில் அக்காலத்தில் 327 நாடகங்கள் வெளிவந்ததாக ஒரு ஆய்வுக்குறிப்புண்டு. பெ.சு இத்தகைய நாடகங்களைப் படித்துள்ளார். லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி கதையின் தழுவலாகத் தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தைப் பெ.சு எழுதினார். பெ.சுவின் நாடகம் எளிமை, விறுவிறுப்பு, அமைப்பிற்காகப் பரவலாகப் படிக்கப்பட்டது. இந்நாடகத்தை அரங்கேற்றும் நோக்கத்தோடு பெ.சு எழுதவில்லை, வாசிப்பின்பத்திற்காகவே அதனை இயற்றியதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

வெண்பா, கலிப்பா, குறள் வெண்செந்துறை, வஞ்சிப்பா என்று பல்வேறு பாவினங்கள் விரவிவர இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலை தத்துவப் பின்னணியோடு பெ.சு படைத்தார். ‘இல்லறம், துறவறம், பக்தி ஞானம் முதலிய மோட்ச சாதனங்கள்’ பாத்திரங்களின் மூலம் உருவகப்படுத்தி இந்நாடகம் அமைந்தது.

Image result for சுந்தரம் பிள்ளை ncbh
இந்நாடகத்தில் திருக்குறள் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது. ‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி’ என்கிற வரி நூலில் இடம்பெறுகிறது. ‘பத்துப்பாட்டில் மனம் பற்றியவர் பிற நூற்களைப் பற்றமாட்டார்’ என்று பெ.சு சிலிர்க்கிறார். மனோன்மணியம் நாடகம் பல்வேறு பல்கலைகழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புக்கு உரியது.

ஆய்வறிஞர்:
கரைக்கோட்டை, ஒழுகினசேரி சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரன் கோவில் கல்வெட்டுகள் என்று பலவற்றைப் பெ.சு. படியெடுத்து உள்ளார். ஆங்கிலத்தில் பத்துப்பாட்டு, திருவிதாங்கூரின் ஆரம்பகால வரலாறு, ஞானசம்பந்தர் காலம், உதிரியான சில கல்வெட்டுகள், நம்பியாண்டார் நம்பியின் காலம் முதலிய கட்டுரைகளை எழுதினார். பத்துப்பாட்டின் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகிய மூன்று நூல்களையும் பெ.சு மொழிபெயர்த்துள்ளார்.

திருவிதாங்கூர் வரலாறு கட்டுரையில் கொல்லம் ஆண்டு என்கிற வழக்கம் எப்படி வந்தது என்பதைக் கல்வெட்டுகளைக் கொண்டு ஆய்வு செய்து புதியதொரு பார்வையை முன்வைக்கிறார். அக்கட்டுரையில் சமூக நோக்கோடும் பெ.சு எழுதியுள்ளார். திருவிதாங்கூர் வரலாற்றில் ஆரியப்பண்பாடும், ஆரியருக்கு முந்தைய திராவிடப்பண்பாடும் இணைந்தே உள்ளன என்கிற பெ.சு கன்னியாகுமரி முதல் பறவூர் வரை பயணிக்கும் ஒருவன் பழம் திராவிட மரபைக் காணமுடியும் என்கிறார். திருவிதாங்கூர் பகுதியின் வேணாட்டு மன்னர்களின் காலத்தைப் பெருமளவில் துல்லியமாக முதலில் கணித்தவர் பெ.சு. சம்பந்தர் காலம் கட்டுரையில் அவரின் காலத்தைச் சமூகச்சூழல், சமூக வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெ.சு கண்டறிந்துள்ளார். ஆதி சங்கரரின் நூல்கள், மத்தவிலாச பிரகசனம் ஆகியவற்றைக்கொண்டு சம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று நிறுவுகிறார். ராஜராஜன் காலமே நம்பியாண்டார் நம்பி காலம் என்றும் வாதிடுகிறார்.

ராமாயணத்தின் சாதி குறித்துக் கூர்ந்து நோக்கிய பெ.சு. அது குறித்து வெ.சு. முதலியாரிடம் பேசினார். அதைக்குறித்து எழுதவுள்ளதாகச் சொன்னாலும் அதற்குள் அமரரானார். ஆகவே, பெ.சுவின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறித்துக் கட்டுரை வரைந்தார் வெ.சு.முதலியார். ‘அதில் ராமாயணம் ஆரியச்சார்புடையது. ஆரியர் என்பவர் தமிழ் பிராமணர், வட இந்திய சாதியர் சிலரைக் குறிக்கும் சொல். ஆரியர் அல்லாத அநாரியர் தென்னிந்தியக் குடிகள் ஆவர்.’ என்றதோடு, ‘பெண்ணைச் சிறைப்பிடித்தும் ராவணன் கொல்லவில்லை, திராவிடப்பெண்ணான சூர்ப்பநகையை லட்சுமணன் துரோகம் செய்தவன். விபீஷணன் என்ற திராவிடன் துரோகம் செய்தவன்; அதற்காக ஆழ்வார் பட்டம் பெற்றவன். ஆரியர்கள் திராவிடர்களை இழிவானவர்கள் எனச் சொல்லி நம்பும்படி ஆக்கிவிட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

உரைநடையாசிரியர்:
உரைநடையில், ‘சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றொகை விளக்கம்’ என்கிற ஒரே நூலை எழுதினார். இந்நூலில் கலைச்சொல்லாக்கம் உண்டு. இதைக்குறித்துப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ‘தமிழ்ச்சுடர்மணிகள்’ நூலில். ‘….சுந்தரம்பிள்ளை தன் நூலில் தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்களைத் தந்திருக்கிறார். வடசொற்களை விலக்கும் கருத்தே இவரிடம் கிடையாது. தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் வேண்டுவன செய்தவர்களில் சுந்தரம் பிள்ளை தலைசிறந்தவர்’ என்று புகழாரம் சூட்டுகிறார்.

கவிஞர்,கட்டுரையாசிரியர்:
பெ.சு. ஒரு நற்றாயின் புலம்பல், பொதுப்பள்ளி எழுச்சி, அன்பின் அகநிலை முதலிய பல்வேறு கவிதைகளையும் இயற்றியுள்ளார். ஒரு நற்றாயின் புலம்பல் மணமாக வேண்டிய தினத்தன்று இறந்து போன மகள் குறித்து அரற்றும் அன்னையின் அழுகுரல். பொதுப்பள்ளி எழுச்சி தத்துவ நோக்கோடு அறியாமைத் துயிலில் இருந்து எழுப்பிய இறைவனை நோக்கி பாடப்பட்டது. அன்பின் அகநிலை விவிலியத்தின் புனித பவுல் கருத்துகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. சீவராசிகளின் இலக்கணமும், பிரிவும், மரங்களின் வளர்ச்சி, புஷ்பங்களும் அவற்றின் தொழிலும் முதலிய மூன்று அறிவியல் கட்டுரைகளையும் பெ.சு எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் ‘Hobbes, the father of English ethics’. ‘Bentham, The Juristic Moralist’, ‘A scene from A Tamil play’, H.T.Wills முதலிய கட்டுரைகள் எழுதினார்.

தன்னுடைய மனோன்மணியம் நாடகத்தின் துவக்கத்தில்’தமிழ் மொழியின் இலக்கியங்களை அழியாமல் பாதுகாத்த திருச் சி.வை.தாமதோரன் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் ஆகிய இருவரையும் வணங்குகிறேன். கல்வி, கேள்வி, அறிவு முதலியவற்றால் சிறியவனாகிய நான் மனோன்மணியம் என்னும் நாடகத்தைப் படித்திருக்கிறேன்.’ என்று தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறார். உ.வே.சா மனோன்மணியத்தைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்படைப்பில் குறைகள் உண்டு என்றதை பெ.சு அறிந்தார். கடிதம் எழுதி குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்கவும் செய்தார். மேலும், திருவிதாங்கூர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வருமாறு உ.வே.சாவிற்கு அன்போடு அழைப்பு விடுத்தார்.

தமிழக அரசு அவரின் தமிழ்த்தெய்வ வாழ்த்தை தமிழ்த்தாய் வாழ்த்தாக ஆக்கியது. அவரின் மூலப்பாடலில், ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன் சீரிளமை’ என்கிற வரி வடமொழி வெறி நிலவிவந்த காலத்தில் எதிர்க்குரலாக ஒலித்துள்ளது. மொழிவாரி மாநிலங்கள் உருவான போது, நாஞ்சில்நாடு தமிழர்க்கு உரியது என்று தன்னுடைய மனோன்மணியம் நூலில் பெ.சுந்தரனார் குறிப்பிட்டு இருந்தது கவிமணி, ஜீவா, ம.பொ.சிவஞானம் ஆகியோரால் மேற்கோள் காட்டப்பட்டு இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

நாற்பத்தி இரண்டு வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போன பெ.சுந்தரனாருக்கு அஞ்சலியாக அவர் உ.வே.சாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளே அமையக்கூடும்: ‘நம்மனையார் தேகநிலையைக் கருதும்போது இருதலைக்கொள்ளியினுள் எறும்பு என்றே உண்மையாய் எண்ண வேண்டியதாக இருக்கிறது. உழைத்தால் சரீர உபாதை துணிபாக நிற்கிறது. உழைக்காவிட்டால் சரீரமிருந்து என்ன பயனென்ற சோகமும் அப்படியே ஏது செய்ய? கடவுள் இச்சைபோல நடக்கட்டும்’

மிக முக்கியமான ஆளுமையின் பன்முகத்தன்மையை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது அறிஞர் அ.கா.பெருமாளின் இக்குறுநூல்.

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம் -அ.கா.பெருமாள்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
பக்கங்கள்: 82
விலை: 70