தலித்துகளின் போலிக்காவலரான இந்துத்வம்


Fascinating Hindutva நூலை வாசித்து முடித்தேன். எந்த இந்து மதத்தினுள் தலித்துகள் ஒடுக்கப்பட்டும்,பல்வேறு அடக்குமுறைகளுக்கும் உள்ளானார்களோ அதே இந்து மதத்தின் அடையாளங்கள் நீங்கள்,அதன் பாதுகாவலர்களே தாங்கள் தான் என்று சொல்லி அவர்களின் ஓட்டுக்களை கவர பி.ஜே.பி. நடத்தும் சாமர்த்திய அரசியலை கள ஆய்வு,நேர்முகங்கள்,அவர்களின் தேர்தல் பிராசார யுக்திகள் ஆகியவற்றின் மூலம் அற்புதமாக இந்நூல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

90 களின் ஆரம்பத்தில் ராமரை முன்னிறுத்தி தன்னுடைய தேர்தல் அரசியலை பி.ஜே.பி. கட்டமைத்தது. அப்பொழுது தொலைக்காட்சியில் ஓடிய ராமாயணம் சீரியல் பெரிய உத்வேகத்தை அந்த அரசியலுக்கு தந்தது. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் உயர் ஜாதியினர் இணைந்து கிச்சடி சாப்பிடும் நிகழ்வுகள்,அவர்களுக்கென்று சிறப்பு பள்ளிகள் என்று அவர்களை தங்களோடு இணைக்கும் முயற்சிகளை பி.ஜே.பி. செய்தது. ஆனால்,ஆதிக்க ஜாதியினர் அவர்களை தங்களோடு இணைத்து கொள்ள மனம் ஒப்பாதது மற்றும் ராம ஜென்ம பூமி அரசியலின் நீர்ப்பு ஆகியன பி.ஜே.பி.யின் பாணியை மாற்றிக்கொள்ள வைத்தது. 

மாயாவதி செருப்பால் பிராமணர்களை அடிப்போம் என்று சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்ததை விடுத்து,அவர்கள் நம்மை முன்னடத்தி செல்லும் யானைகள் போன்றவர்கள் என்று தன்னுடைய அரசியல் அமைப்புக்குள் அவர்களை இணைத்து கொண்டார். பி.ஜே.பி. உள்ளுக்குள் வாருங்கள் என்றது எடுபடாமல் போகவே ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தது. பழங்காலத்தில் இந்து மதத்தை காக்கவும்,இந்தியாவை தாக்கிய இஸ்லாமியர்களை எதிர்த்து போரிடுகிற வேலையையும் செய்தவர்கள் நீங்களே ! என்று ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் கதைப்பாடல்கள் மூலமும்,வரலாற்றை திரித்தலின் மூலமும் அரசியல் செய்ய ஆரம்பித்தது. 

இஸ்லாமிய அரசர்கள் மற்றும் தலித்துகள் சில புள்ளிகளில் சண்டையிட வேண்டிய சூழல் இருந்திருந்தாலும் பெரும்பாலும் அமைதயாகவே அவர்களுக்கிடையே ஆன வாழ்க்கை இருந்திருக்கிறது. அதை குலைக்கும் வகையில் விஷம பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. ராஜ ஹரி சந்திராவின் நாடகத்தோடு லைலா மஜ்னு நாடகமும்,ஷிரி பர்ஹத் நடந்து கொண்டிருந்த ஊர்களில் அவையெல்லாம் இஸ்லாமிய நாடகங்கள் என்று அவ்வூர் ஆர்.எஸ்.எஸ். தலைகள் நோ சொல்லிவிட்டார்கள். 

சுகல்தேவ் என்கிற அரசன் கொள்ளைக்காரனாகவும் அவனிடம் இருந்து மக்களை காப்பற்றியவரான காஜி மியானை வில்லன் போல சித்தரித்து சுகல்தேவை நாயகன் ஆக்கி மக்களை ஏமாற்றுகிற வேலையை செய்வதோடு நில்லாமல் காஜி மியான் தர்காவுக்கு தொழுநோய் குணமாகிறது என்று போய்க்கொண்டு இருந்த இந்துக்களையும் தடுத்து நிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அனுமானை வணங்கிவிட்டே மல்யுத்தம் சொல்லித்தருகிற பண்பை இஸ்லாமிய மற்றும் இந்து மல்யுத்த வீரர்கள் வைத்திருப்பதை மறைத்து அனுமன் மற்றும் வானர சேனைகள் தலித்துகள் தான் ! அவர்கள் மூலமே ராமன் வென்றான் என்றொரு கதை ஒரு பக்கம் என்றால்,நிஷாத் வகுப்பை சேர்ந்த குகன்,கட்டைவிரல் கொடுத்த ஏகலைவன் மகாபாரதம் இயற்றிய வியாசர்,ராமாயணம் எழுதிய வால்மீகி,ஐம்பதாயிரம் முஷாகர்கள் இருக்கும் வகுப்பை சேர்ந்ததாக சொல்லப்படும் சபரி ஆகிய அனைவரும் இந்து மதத்தை காத்த தலித்துகள். ஆகவே,நீங்கள் எங்களுடன் இணைந்து விடுங்கள் என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள். 

அம்பேத்கரை நவீன மனு என்று புகழ்ந்து அவர் எதிர்த்த இந்துத்வத்துக்குள் அவரையும் இணைத்ததோடு நில்லாமல்,பிராம்மணியத்தை தீவிரமாக எதிர்த்த புலே உங்களை மதம் மாற சொல்லவில்லை என்பதிலேயே அவரும் இந்து மதக்காவலர் என்று உணர்ந்து கொள்ளுங்கள் என்பதாகட்டும்,புத்தர் மகா விஷ்ணுவின் அவதாரம் எதற்கு மதம் மாறிக்கொண்டு என்றும் பரப்புரைகள் நிகழ்கிறது. மதம் மாறினால் இட ஒதுக்கீடு தராதீர்கள் என்று அத்வானி முழங்குவதை இந்த பின்னணியோடு இணைத்தே பார்க்க வேண்டும். 

தலித்துகள் என்கிற பதத்தையே உபயோகிக்க பெரும்பாலும் மறுக்கிற இந்த காவி நபர்கள் இஸ்லாமியர்கள் வஞ்சித்த மக்கள் தலித்துகள் என்கிற அர்த்தத்தில் வஞ்சித்கள் என்கிற பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் போகிற பொழுது அந்தந்த பகுதி ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக இருக்கும் புராண கதாபாத்திரத்தை இந்து மதத்தின் காவலர் என்று சொல்லி ஓட்டுக்களை கவர முயற்சிக்கிற அரசியல் பாணி இன்னமும் தொடர்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களை மைய சமூக நீரோட்டத்தில் இணைக்க முயற்சிகள் எடுக்காமல் அவர்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்யப்பார்க்கும் இந்துத்வாவின் தமிழக முகங்களும் அதையே செய்வதை நீங்கள் கவனிக்கலாம். அவசியம் படிக்க வேண்டிய சிறிய நூல் 

ஆசிரியர் : பத்ரி நாராயண் 
sage வெளியீடு 
பக்கங்கள் : 216 
விலை : 425