என் தந்தை பாலையா


இந்தியக் கிராமங்கள் குடியரசுக்கு முழுக்க எதிரானவை. இவை ஆதிக்க ஜாதியினரால் ஆதிக்க ஜாதியினருக்கு நடத்தப்படும் குடியரசு. இங்கே தீண்டப்படாத மக்களுக்கு இடமில்லை. அங்கே தீண்டப்படாதோரால் காத்திருக்கவும், சேவகம் செய்யவும், அடங்கிப் போகவும் மட்டுமே முடியும். இங்கே ஜனநாயகத்துக்கு இடமில்லை. சமத்துவத்துக்கு, விடுதலைக்கு, சகோதரத்துவத்துக்கு இடமே இல்லை.’-அண்ணல் அம்பேத்கர்

‘My Father Baliah’ எனும் நூலை வாசித்து முடித்தேன்.. ‘ஒரு ஊரில் ஒரு தலித் இருந்தார்’ என்று ஒரு கதை துவங்கினால் எப்படி இருக்கும்? ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியை மூன்று தலைமுறை கதைகளின் ஊடாக சொல்லிச்செல்கிறார் Y.B.சத்தியநாராயணா. தொடர்வண்டிகள் என்பது ஆங்கிலேயரின் காலனியத்தை, பஞ்சத்தை, வறுமையை பரப்பியது என்பது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசின் கருத்தாக இருந்தது. எனினும், அது தலித்துகளின் வாழ்க்கையில் விடுதலையை, வளர்ச்சியை தருவதாக இருந்தது.

கடுமையான உடல் உழைப்பை கோரிய ரயில்வே துறை பணிகளை செய்ய ஆதிக்க சாதியினர் தயாராக இல்லாத நிலையில் தலித்துகள் அவற்றை வேலை வாய்ப்புக்கான வழியாகவும், கிராமத்தின் கொடுமையான ஜாதி அமைப்பை விட்டு வெளியேறும் வாய்ப்பாகவும் பார்த்தார்கள். அப்படி வெளியேறிய நரசய்யா குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் கல்வியால் முன்னேறிய கதை தான் இந்த நூலில் விரிகிறது.
நூலில் முதல் காட்சியே அதிர வைக்கிறது. கூட யாரும் துணைக்கு இல்லாமல் தெலங்கானாவின் வங்கபள்ளி கிராமத்தில் தன்னுடைய மனைவியின் பிணத்தை சுமந்தபடி நரசய்யா தன்னுடைய மகனோடு கண்ணீர் வழிய நடக்கிறார். மதிகா எனப்படும் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் பிணத்தை தீண்டக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். ஊரில் வீடுகளும் மனுவின் மனு சாஸ்திரம் படியே இருந்தன. மேற்கிலிருந்து கிழக்காக காற்று வீசும் என்பதால் மதிகாக்களின் வீடுகளில் வீசும் காற்று தங்கள் வீட்டை நெருங்கக்கூடாது என்று பிராமணர்களின் வீடுகள் மேற்கு திசையில் கட்டப்பட்டிருக்கும்.

வெலமா எனப்படும் இடைநிலை சாதியை சேர்ந்த நிலச்சுவான்தார்கள் மதிகா பெண்களை தோன்றும் போதெல்லாம் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிஜாமுக்கு வரி வசூலிக்கும் பொறுப்பில் இருந்த இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்ட மக்களை கசக்கிப் பிழிவதோடு தீண்டாமையை விடாமல் கடைபிடித்தார்கள்.

Image may contain: text
தன்னுடைய மனைவியின் மரணத்துக்குப் பிறகு நரசய்யா ரயில்வேவில் பாய்ண்ட்ஸ்மேன் பணியில் சேர்ந்தார். ரயில் தண்டவாளங்களில் நூறு கிலோவுக்கு மேலே இருக்கும் சங்கிலிகளை வேகமாக தூக்கிக் கொண்டு ஓடி ரயில் பெட்டிகளை இணைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டார். சில காலம் உழைப்புக்குப் பிறகு, செகந்திரபாத்துக்கு நரசையாவின் குடும்பம் மாறியது அவரின் மகன் பாலையாவுக்கு கல்வியைத் தந்தது.
பாலையாவும் ரயில்வேவில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு பிறந்த பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தினார். இரவு பத்து மணிக்கு தூங்க வைத்து, அதிகாலை நான்கு மணிக்கு எழுப்பிவிட்டு அவர்களை படிக்க வைத்தார். தான் பள்ளிக்கல்வியைத் தாண்டாவிட்டாலும் மகன்கள் கல்லூரி செல்ல வேண்டும் என்று ஊக்குவித்தார். ரயில்வேவில் கால் கடுக்க, தோள் ஓய வேலை பார்த்த பின்பு வயல்வெளிகளில் வேலை பார்த்து பிள்ளைகளை படிக்க வைத்தார்.

ஒரே குடும்பத்தில் இருந்து எழுபதுகளில் மூன்று பேராசிரியர்கள் எழுந்தார்கள். முனைவர் பட்டம் பெற்று பல உயர்ந்த மாணவர்களை உருவாக்கினார்கள். மதிகா குடும்பத்தின் முதல் ஜாதி மறுப்புத் திருமணம் பாலையாவின் திறந்த மனதால் நடைபெற்றது.

தலித் என்கிற அடையாளத்தை மறைக்க வேண்டிய தருணங்கள் வலி தருபவை. கல்லூரி அறிவிப்புப் பலகையில் உதவித் தொகை பெறும் பெயர் இடம் பெற்றால் ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என ஓடோடிப் போய் க்ளார்க்கிடம் கெஞ்சுவது. ஆசிரியராக பாலையாவின் மகன் வேலை பார்க்க போன ஊரில் மதிகா என சொன்னால் வீடு கிடைக்காது என்பதால் ஜாதியை மாற்றிச் சொல்வது. பெயரின் பின்னால் இருக்கும் ஐயா என்பது தலித் என்பதைக் காட்டிக் கொடுத்தபடி இருந்ததால் பெயரை ஆசிரியரே மாற்றுவது என்று சமூகத்தின் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.

Image result for y b satyanarayana

வேதியியல் பேராசிரியராக பாலையாவின் மகன் சத்தியா உயர்கிறார். அவர் பணியாற்றிய கல்லூரியில் முப்பத்தி மூன்று வயதில் அவரின் திறனால் முதல்வர் பதவி வந்து சேர்கிறது. தன்னுடைய பெருந்தன்மை மூலமும், நிர்வாகத்திறமை மூலமும், மதிகா எனச் சொல்லித் திட்டியவர்களை கூட அரவணைத்துக் கொள்கிறார். கல்வியின் அடுக்குகளும், கடும் உழைப்பும் எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேல் எழுப்பும் என்பதற்கு பாலையா எடுத்துக்காட்டாக கல்வியை ஆயுதமாக்கி சாதித்தார்.

இந்த புத்தகத்தில் காதலும், துரோகமும் உண்டு. நெகிழ வைக்கும் தருணங்கள் உண்டு. போனவர்கள் திரும்பவே திரும்பாத பிரிவுகள் உண்டு. சாதியைக் கடந்து சக மனிதர்களாக பிள்ளைகளை பார்க்கும் நம்பிக்கை தரும் மனிதர்கள் உண்டு. உச்சத்துக்கு போனாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை உணரவே உணராத கற்றவர்கள் உண்டு. மதிகா மக்களின் திருமணங்கள், கலாசாரம், தெய்வங்கள், நம்பிக்கைகள் பற்றிய சுவையான குறிப்புகள் உண்டு. பாலையா எனும் ஒற்றை மனிதனின் கதை மட்டுமல்ல இது. ஒரு சமூகம் தன்னைத் தானே பிரதிபலிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்கள் உயர இட ஒதுக்கீடும், கல்வியும், நகர வாழ்வும் தரும் வாய்ப்புகளை உணரவும் வைக்கும் நூல். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்

HARPER COLLINS வெளியீடு
பக்கங்கள்: 211
விலை: 35௦