ராம் புனியானி அவர்கள் தொகுத்த ‘religion,power and violence’ என்கிற நூலை வாசித்து முடித்தேன். இந்துத்வ அரசியல் தன்னை எவ்வாறு சமகாலத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதைப் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல் இது. சோவியத் ரஷ்யா இருந்தவரை அதனை எதிரியாகக் காட்டி அமெரிக்கா உலக அரசியலில் இயங்கியது. அதன் வீழ்ச்சிக்குப் பிறகு எண்ணெய் வளமிகுந்த நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தைத் தொடரவும், உலகில் தன்னுடைய இருப்பைஉறுதிப்படுத்திக்கொள்ளவும் வசதியாக அதற்கு ‘இஸ்லாம் மீதான போர்’ என்பது பயன்பட்டது. இஸ்லாம் மதமே வன்முறைமயமானது போன்ற வாதங்களும், இஸ்லாமில் இருப்பவர்கள் தீவிரவாதிகள் என்கிற பார்வையும் முன்வைக்கப்பட்ட சூழலில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அந்நியர்கள் அவர்கள் ஆதிக்க இனமான இந்துக்களுக்கு அடங்கியே நடக்க வேண்டும் என்று இந்துத்துவாவின் முழக்கம் இன்னமும் வலுப்பெற்றது.
இந்து மதத்தைப் பொறுத்தவரை மைய சனாதன மதம் சாய்பாபாவை பார்ப்பனமயமாக்கியது, பழங்குடியினர் தெய்வமான பூரி ஜெகன்னாதரையும் தனதாக்கிக் கொண்டது. சிறு தெய்வங்களைப் பெருதெய்வங்களாகவோ, அல்லது காணடிக்கவோ செய்தது. பக்தி இயக்கம் வடமொழியின் ஆதிக்கத்தில் இருந்து விலக்கி பக்தியை மக்களின் மொழிகளான தமிழ், அவாதி, மராத்தி ஆகியவற்றில் பரப்பியது. பிராமணிய எதிர்ப்பும் அதன் பேசுபொருளானது. ஒரே தெய்வம் உண்டு என்று அவை முழங்கின; இஸ்லாமிலும் இந்தியாவைப்
பொறுத்தவரை சூபிக்கள் இந்த மண்ணின் கலாசாரக் கூறுகளை உள்வாங்கி இஸ்லாமை பரப்பினார்கள். ஜாதி எதிர்ப்பு, தீண்டாமை அழிப்பு என்பவற்றை முன்னிறுத்தி பக்தி இயக்கங்கள் தோன்றினாலும் உயிர்க்கொலையின்மை, ஒரே கடவுள் மீதான நம்பிக்கை என்று தங்களை அறியாமலே அவை காலப்போக்கில் சனாதன தர்மத்தை வலுப்படுத்தின.
![](https://z-1-scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/940813_1064205320277210_7918877139040986639_n.jpg?oh=f8a55b69542380481f3ef6f279ff1a90&oe=574022C4)
நேருவிய சோசியலிசம் மக்களின் வறுமையைப் போக்க பெருமளவில் தவறிய நிலையில் அதற்கு மாற்றான பொருளாதார முறையைக் காங்கிரசோ, இடதுசாரிகளோ முன்வைக்கவில்லை. காங்கிரசில் இருந்த எஸ்.கே.பாட்டீல் அப்படியொரு யோசனையை முன்னெடுத்த போதும், அடுத்து வந்த தேர்தலில் அவர் தோற்றுப்போனதால் அது சாத்தியமாகாமல் நின்று போனது. இடதுசாரிகள் தங்களுக்கான அரசியல் தருணங்களைக் கோட்டை விட்டார்கள். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அவர்கள் பெருமளவில் அரசுக்கு ஆதரவு தந்தார்கள், அல்லது மவுனம் சாதித்தார்கள். விடுதலை இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் போராட்டமான ரயில்வே ஊழியர் போராட்டம் இடதுசாரிகள் நடத்தியதில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்,
ஜனசங்கம் மட்டுமே மதக்கலவரங்களுக்குக் காரணம் என்று ஒற்றைப்படையாக முடித்துவிட முடியாது. பிவாண்டி, சூரத், பீகார் ஷெரிப் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் காங்கிரஸ் அரசுகளின் கைங்கரியம் உண்டு என்பது தான் உண்மை. உச்சபட்சமாக இந்திராவின் படுகொலையின் பின்னர்ச் சீக்கியர்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது. ஒரு மாற்றுப் பொருளாதாரத்தை முன்வைக்காதது, காங்கிரசின் போலி மதச்சார்பின்மை ஆகியவை இந்துத்துவ அரசியலை வளர்த்தெடுக்கக் களம் அமைத்துக் கொடுத்தன.
இஸ்லாம் வாளால் தான் இந்தியாவில் பரவியது என்று வலதுசாரிகள் தொடர்ந்து சொல்கிறார்கள். இந்து ஆலயங்களை அவர்கள் மதக்காரணங்களுக்காக அழித்தார்கள் என்று மட்டுமே அழுத்திச் சொல்லும் அவர்கள் அதில் பெரும்பாலும் கொள்ளையிடும் எண்ணமும், அரசியல் காரணங்களும் முந்தியிருந்தன என்பதை மறைக்கிறார்கள். காஷ்மீரின் அரசன் ஹர்ஷர், பர்மர் அரசனான சுபவர்மன் ஆகியோர் எண்ணற்ற இந்து, சமண ஆலயங்களை அழித்தது சொல்லப்படுவதில்லை. சிவாஜியின் கப்பற்படையில் முக்கியத் தளபதிகளான தௌலத் கான், சித்தி மிஸ்ரி, அவரின் அயலுறவு செயலர் முல்லா ஹைதர் என்று பலரும் இஸ்லாமியர்கள் என்பது சொல்லப்படாது. இந்துக்கள் இஸ்லாமியர்களால் பெருமளவில் மதமாற்றப்பட்டார்கள் என்கிற வாதத்தை நிருபிக்கும் புள்ளிவிவரங்கள் இல்லை, மாறாக இஸ்லாமியர்களின் ஆட்சி என்று பொதுவாகச் சொல்லப்படும் சுல்தானிய, முகலாய ஆட்சிக்குப் பின்னரே வெள்ளையர் காலத்தில் தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருகியது. தென்னகத்தில் இஸ்லாம் வியபாரத்தாலும், வடக்கில் சூபிக்களாலும் பெருமளவில் பரவியது.
![](https://i0.wp.com/cdn.charismanews.com/images/stories/2014/featured-news/religion-and-spirituality-syncetism.jpg)
இஸ்லாம் ஒற்றைப்படையான மதம் என்றும், அதில் எந்தப் பன்முகத்தன்மையும் இல்லையென்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. உள்ளூர் அரேபிய (இஸ்லாமுக்கு முந்தைய) கலாசாரங்களான சுன்னத், பழங்குடியின மரபுகள் சேர்க்கப்பட்டன. பல்வேறு இடங்களில் தேவதைகள், தீய ஆவிகள் ஆகிய மைய இஸ்லாமின் நம்பிக்கைக்கு மாறான கூறுகள் அந்தந்த பகுதிகளில் இணைந்து கொண்டன. ஆங்கிலேயர் தங்களின் இனமே உயர்ந்தது என்கிற போக்கில் வாதங்களைக் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மூலம் வைத்த பொழுது அதை எதிர்க்க ஒற்றைப்படையான இந்து மதத்தை உயர்ஜாதி குறிப்பாகப் பார்ப்பன அறிவுஜீவிகள் முன்னிறுத்தினார்கள். ஜேம்ஸ் மில் வரையறுத்த மதங்களின் அடிப்படையில் வரலாற்றைப் பிரித்துப் பார்க்கும் போக்கை உள்வாங்கிக் கொண்டார்கள். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பண்பாடுகள் நிராகரிப்புக்கு உள்ளாகின.
இந்துமதம் என்பது ஒற்றைப்படையானதாகச் சமைக்கப்படும் வேலைகள் துவங்கின.
சூபி பிரிவு பௌத்தம், வேதாந்தம், யோகம் ஆகியவற்றின் பண்புகளை உள்வாங்கிக் கொண்டது. கபீர் பந்தி எனும் கபீரின் பிரிவு இந்து-முஸ்லீம்களை ஒன்று சேர்த்தது. சூபி துறவிகளான பிர்களை வழிபடுவதும் ஏற்பட்டது. இஸ்மாயிலிஸ் எனும் இஸ்லாமின் பிரிவு இந்து மதத்தின் பல்வேறு கூறுகளைத் தனதாக்கி கொண்டது. அதன் கோஜா பிரிவு ஓம் என்பதற்கு இணையாக அலி என்பதைக் குறிப்பிட்டது. கல்கி அவதாரம் அரேபியாவில் தோன்றியது என்றும் அறிவித்தது. குரானை அதர்வ வேதத்தோடு ஒப்பிடுவதும், நபிகளை மகாதேவருடனும், அலியை விஷ்ணுவுடனும் ஒப்பிடுவதும் அந்தப் பிரிவின் வழக்கமாக இருந்தது.
வங்கத்தில் சூபிக்களும், வைணவ பக்தி இயக்கத்தினரும் ஜாதியை எதிர்த்தார்கள். மலாதார் பாசு எனும் காயஸ்த வகுப்பை சேர்ந்த கவிஞரை பர்பக் எனும் சுல்தான் ஸ்ரீ கிருஷ்ணவிஜயா நூலை எழுத ஆதரித்தார். ஈட்டன் எனும் வரலாற்று அறிஞர் இஸ்லாம் கான் எனும் முகலாய ஆளுநர் வங்கத்து இந்துக்களை மதமாற்றுவதை அனுமதிக்கவில்லை என நிறுவுகிறார். சத்யா பிர், மானிக் பிர் முதலிய துறவிகள் இரண்டு மதத்தவராலும் வங்கத்தில் வழிபடப்படுகிறார்கள். சுந்தரவனக்காடுகளில் பான் பீபி எனும் தெய்வம் இஸ்லாமியர், இந்துக்கள் இருவருக்கும் உரியவர். இஸ்லாமியர்கள் அந்தத் தெய்வத்துக்கு மூலிகை கிரீடம், பின்னப்பட்ட முடி, கழுத்து சங்கிலி, குர்தா, பைஜாமாக்கள் அணிவிக்கிறார்கள். இந்துக்களின் இடத்தில் அவள் கிரீடம், பிற ஆபரணங்கள் அணிந்து காணப்படுகிறாள். வடக்கு வங்காளத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் இருவரும் கங்கை மாதாவை மீன்பிடிக்கப் போகையில் வழிபடுகிறார்கள். தக்ஷிண ரே என்கிற வனதெய்வமும் இருவரின் பொது வழிபாட்டுக்கு உரியது. சௌதி அரேபியாவின் இஸ்லாமியர்களைப் போல் அல்லாமல் மணிப்புரி இஸ்லாமியர்கள் பெற்றோரின் உடன் பிறந்தவரின் மகன்/மகளை மணக்கும் வழக்கமில்லை, கேரளாவின் மாப்பிள்ளைமார்கள் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்களைப் போல் இல்லாமல் தாய்வழி மரபையே பின்பற்றுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.-ம், விடுதலைப் போராட்டமும்:
இந்திய விடுதலைப் போரில் பங்காற்றியதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்லிக்கொள்கிற வகையில் அது பெரிதாக எதனையும் செய்யவில்லை என்பதோடு, ஆங்கிலேயருக்கு ஆதரவான போக்கையே பெரும்பாலும் எடுத்துள்ளது என்பதும் கசப்பான உண்மை. ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ். தலைவராக விடுதலைப் போரில் பங்காற்றினார் என்று சொன்னாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்குகொண்ட அவர் காந்தியின் வழிகாட்டுதலுக்கு மாறாக வக்கீல் வைத்து வாதாடி சீக்கிரமே சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
![](https://i0.wp.com/samvada.org/files/IMG_6145-242x300.jpg)
உப்புச் சத்தியாகிரகத்தில் பங்குகொண்ட பொழுது அங்கே சிறைக்குள் போய் அமைப்புக்கு ஆள் திரட்டவே அவ்வாறு சிறை புகுந்ததாக அவர் எழுதியுள்ளார். மற்ற எந்தப் புள்ளியிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான சுவடுகள் எதுவுமில்லை. காங்கிரஸ் கட்சியை முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த செயல்படுகிற ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்று குற்றஞ்சாட்டிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்தப் பிரிவினையைத் தூண்டிவிட்டு குளிர் காய்ந்த ஆங்கிலேயரை எதுவுமே விமர்சிக்கவில்லை என்பதும், கிறிஸ்துவர்களாக, இஸ்லாமியர்களாக மாறிய இந்நாட்டு மக்களை அந்நியர்கள் என்று கூறிவிட்டு, அவர்களை விட அதிக அந்நியமும், அயோக்கியத்தனமும் மிகுந்த ஆங்கிலேயருக்குச் சலாம் போட்ட சரித்திரம் ஆர்.எஸ்.எஸ். எனும் அற்புத அமைப்பினுடையது.
பட்டியல் ஜாதியினர், பெண்கள்,பழங்குடியினர் ஆகிய விளிம்புநிலை மக்கள் சார்ந்து ஆர்.எஸ்.எஸ். செயல்படும் விதம் இன்னொரு அதிர்ச்சி அத்தியாயம். பட்டியல் ஜாதியினரை அம்பேத்கர் நவீன மனு என்றும், இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தில் இணைந்தவர் என்று சொல்லியும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் பயன்படுத்திக்கொள்கின்றனர். குஜராத் படுகொலைகளில் பழங்குடியினர், தலித்துகள் ஈடுபடுத்தப்பட்டது இதற்கு ஒரு ஆதாரம். ரக்ஷாபந்தன், ராமநவமி முதலிய விழாக்கள் தலித் குடியிருப்புகளில் கொண்டாடுவது, ஜெய் பீம் என்று சொல்லி பாடம் நடத்த ஆரம்பித்து இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தோடு முடிப்பது இவர்களின் பாணி.
அது ஏன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாக்பூரில் எழுந்தது என்கிற கேள்வி எழலாம். இதற்கு ஆய்வாளர் பிரளய் கானுங்கோ பதில் தருகிறார்,’ மகாராஷ்டிராவில் படித்த ஆதிக்கச் சாதியினரில் (பார்ப்பனர் என்று வாசிக்க) நான்கில் ஒருவர் இங்கேயே இருந்தார்கள். இங்கே இருந்து ஹிதவாதா, மகாராஷ்டிரா முதலிய இதழ்கள் வெளிவந்தன. பல கல்விநிலையங்கள் இருந்தன. இடைநிலை சாதியினர் எழுச்சி பெற்றதால் போன்ஸ்லே முதலிய அரசர்களிடம் உயர் பதவிகளில் இருந்த பிராமணர்கள் எப்படியேனும் தங்களின் இடத்தை மீட்க விரும்பினார்கள். அம்பேத்கர் தலைமையில் பட்டியல் ஜாதியினர் திரண்டதும்
அவர்களின் செயல்வேகத்தை அதிகப்படுத்தியது’.
பழங்குடியினரை கிறிஸ்துவ மத மாற்றத்தில் இருந்து தாய்மதத்தை நோக்கி திருப்பி வனாஞ்சல் என்கிற பெயரில் களம் புகுந்தன சங்க பரிவாரங்கள். ஜார்கண்டில் உள்ள பலமு மாவட்டத்தில் இருந்தே அயோத்தியின் கரசேவைக்கு அதிகபட்ச பழங்குடியினர் அனுப்பட்டார்கள் என்கிற செய்தியை வாசிக்கிற பொழுது காலாட்படையாக அப்பாவிகள் எப்படி வலைவிரித்துச் சிக்கவைக்கப்படுகிறார்கள் என்கிற வேதனையே ஏற்படுகிறது.
![](https://i0.wp.com/media2.intoday.in/indiatoday/images/Photo_gallery/advani27_101111022236.jpg)
பாரதமாதா, கவ்மாதா, கங்காமாதா என்று பல்வேறு அடையாளங்களைக் கொண்டு நிகழ்த்திய விழாக்கள் தந்த உந்துதலில் தான் பாஜக கரசேவையில் ஈடுபட்டது. மேலும், குஜராத் ஜில்லா பரிஷத் தேர்தலில் 27% இடங்களை மட்டுமே வென்றதால் தான் முஸ்லீம் மீதான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் விளைவாகக் குஜராத்தில் பெரும் வெற்றியை பாஜக பெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கிறிஸ்துவர் என்பதால் அதைக்கொண்டும் கிறிஸ்துவ வெளிநாட்டு சக்திகள் இந்தியாவைக் கைப்பற்ற முயல்கின்றன என்று பிரச்சாரம் செய்தன இந்துத்வா அமைப்புகள்.
பெண்களுக்கு எதிரான வன்முறையில் இந்து, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை. அறுபதாயிரம் பெண்களைக் கும்ப மேளாவில் ஆண்கள் விட்டுவிட்டுப் போனது நடந்தது. முட்டா என்கிற பெயரில் தற்காலிக திருமணங்களை இஸ்லாமிய குருமார்கள் நடத்துகிறார்கள். சதி முறையை ஆதரிக்கும் உலக அமைப்பின் தலைமையகம் சிக்காகோவில் உள்ளது. பொதுச் சிவில் சட்டம் என்பதில் இஸ்லாமியப் பெண்களை இணைக்காமல் அவர்களுக்கான சமத்துவத்தை அடிப்படைவாதிகள் தொடர்ந்து மறுக்கிறார்கள். பர்தா அணியும் வழக்கமில்லாத காஷ்மீர் பெண்கள் அவற்றை அணியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதை மீறிய மூன்று பெண்களை ரஜுவ்ரி மாவட்டத்தில் சுட்டுக்கொண்டார்கள். லஷ்கர் இத் தொய்பா அமைப்புக் காஷ்மீரில் பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்று அறைகூவல் விடுத்தது.
தலித்துகளுக்கு எதிரான பார்வையையே தன்னகத்தே இந்துத்வா கொண்டுள்ளது. அகிலப் பாரதிய வித்யா பரிஷத் எனும் பரிவார அமைப்பு குரு சபைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இடத்தைப் பெற வேண்டும், பிராமணிய சமூக அமைப்பு ஏற்பட வேண்டும், ஏழைகளுக்கு ஓட்டுரிமை கூடாது, மேல்தட்டினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும், சிறுபான்மையினர் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு ‘அற்புதமான’ கனவுகளை முன்வைத்தது. திலகர் காலத்தில் இருந்து சித்பவன பிரமணர்கள் பெஷ்வாக்கள் காலத்தில் தலித்துகளைக் கழுத்தில் துடைப்பத்தோடு, சட்டியோடும் அலையவிட்ட கொடிய காலத்தை நோக்கி திருப்பவே பேராவல் கொண்டார்கள். தாங்களே உயர்ந்த இனம் என்கிற இனப்பெருமையை வேறு திலகர் முன்வைத்தார். பூரி சங்கர மடத்தின் மடாதிபதி, மீண்டும் இந்து மதத்துக்கு வந்த பழங்குடியினர், தலித்துகள் மலிவான விலையில் கோயில்களைக் கட்டி அங்கே வழிபட வேண்டும், மற்ற இந்துக்களோடு மண உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினார். வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்று பேசினாலும் அது யாருக்கான வளர்ச்சியாக இந்துத்வா கனவு காண்கிறது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
தொடர்ந்து பொதுச் சிவில் சட்டம் குறித்துப் பேசும் பலரும் இஸ்லாமியர் இடையே நடக்கும் பலதார திருமணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைச் சரி செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிற அதே சமயம் வேறு சில கவலைதரும் தகவல்களையும் கணக்கில் கொள்ளவேண்டி இருக்கிறது. இந்தியாவில் அதிக இருதார திருமணங்கள் இந்துக்களிடையே காணப்படுகிறது. இருதார திருமணங்கள் செய்த ஆண்கள் சரளா முட்கல், ப்ரியா பாலா முதலிய வழக்குகளில் ஹோமம், சப்தபடி முதலிய பிராமணிய திருமணச் சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் இரண்டாவது திருமணம் திருமணமே அல்ல என்று கச்சிதமாகக் கணவன்மார்களை நீதிமன்றம் விடுவித்தது.
ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் தர கோர்ட் உத்தரவிட்டும் ராஜீவ் காந்தி இஸ்லாமிய சட்டத்தை மீண்டும் பழமைக்குக் கொண்டு செல்லும் வகையில் சட்டம் இயற்றினார். ஆனால், தற்போதைய தீர்ப்புகள் அந்தச் சட்டத்தை இஸ்லாமிய பெண்களுக்குச் சாதகமாகக் கோர்ட் பயன்படுத்துகிறது என்பதைத் தெளிவாக்குகிறது.
இஸ்லாமியர்கள் கல்வி கற்பது என்றாலே நமக்கு மதராஸாக்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. ஆனால், ஷா வாலியுல்லா, சையது அகமது கான், தியோபந்திக்கள், அலிகார் பல்கலைக் கழகம், ஜமியா மிலியா இஸ்லாமியா என்று பல்வேறு நபர்கள், அமைப்புகள் இஸ்லாமியர்களிடையே கல்வியைக் கொண்டு சேர்க்க பாடுபட்டார்கள்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ள முப்பதுக்கு முந்தைய காலத்தில் மெட்ராஸ், வங்காளம் ஆகிய பகுதிகளில் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் அதிகச் சதவிகிதத்தில் கல்வி பெற்றுள்ளது புலனாகிறது. காரன்வாலிஸ் நிரந்தர நில சீர்திருத்தம் கொண்டுவந்து பல இந்துக்களை ஜமீன்தார்கள் ஆக்கி இஸ்லாமியர்களை வேலை இழக்க செய்தார். பாரசீகம் பெற்றிருந்த அதிகாரப்பூர்வ இடம் ஆங்கிலத்துக்கு வழங்கப்பட்ட பின்பு பல இஸ்லாமியர்கள் பணி இழந்தார்கள். விடுதலைக்கு முன்னால் பல்வேறு நிதி வளம் மிக்க, கல்வி அறிவு பெற்ற இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் சென்று சேர்ந்ததும் நடந்தது. இங்கே இந்தியாவில் இயங்கிய இஸ்லாமிய கல்வி இயக்கங்கள் மேல்தட்டு இஸ்லாமியர்ளான அஷ்ரப்களையே பெருமளவில் குறிவைத்தது. இன்றைக்கு ஒரு வலுவான தலைமை, மத்திய வர்க்கம் இல்லாமல் இஸ்லாமியர்கள் கல்வியில் பெருமளவில் பின்தங்கியிருக்கிறார்கள்.
![](https://i0.wp.com/cdn.youthkiawaaz.com/wp-content/uploads/2012/06/Youth-Ki-Awaaz31.jpg)
தனிகா சர்க்காரின் ஆய்வுகள் பெண்கள் எவ்வாறு பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்க் கலவரங்களில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பெருமளவில் இந்துத்வ அமைப்பினரால் ஈடுபடுத்தப்பட்டனர் என்று காட்டுகிறது. அம்பேத்கரின் மண்ணான மகாராஷ்ட்ராவில் தலித் தலைவர்களே ஜீவன்சக்தி-பீம்சக்தி என்று சொல்லி இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்துள்ளார்கள்.
பல்வேறு பேராசிரியர்கள் எழுதியிருக்கும் இந்த நூல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆனதால் சில பகுதிகள் தேவைப்படததாகத் தோன்றலாம். மற்றபடி முக்கியமான ஒரு தொகுப்பு.
விலை: 380
SAGE PUBLICATIONS
RELIGION,POWER AND VIOLENCE-Expression of politics in contemporary times
Edited by: Ram Punyani