‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதை மஞ்சும்மல் பாய்ஸ்


‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல். 

இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.


இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம். 

இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன.  சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. 

‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட. 

உண்மை நாயகர்கள் சிஜூ, சுபாஷ்

‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்


இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

அரிய சுவை தரும் அற்புதக்கதை ‘தேநீர்க் குடில்’


‘தேநீர்க் குடில்’ எனும் கவிஞர் யூமா வாசுகியின் நூல் வெகுநாள் காத்திருப்பிற்கு பின்பு வாசிக்க கிடைத்தது. இந்நூல் எழுத்தாளர் ஆரணி கே.யுவராஜன் அவர்களின் வாழ்க்கையின் தாக்கத்தில் எழுதப்பட்ட சிறார் கதை. யுவராஜன் சாரை வெகு நெருக்கமாக கண்டிருக்கிறேன். குழந்தைகள் உலகிற்கு தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட அன்பு மனம் மிக்கவர். ‘ஒப்புரவு’ எனும் வள்ளுவரின் சொல்லாடலுக்கு பொழிப்புரை அவரின் வாழ்க்கை என்பது துளிகூட மிகையில்லை. அவரின் பாசமிகு அம்மாவின் முகத்தை பார்க்கும் போது, மனதில் ரம்மியமும், மகிழ்ச்சியும் ஊற்றெடுக்கும்.  யுவராஜன் அண்ணனின் குழந்தைகளுக்கான படைப்புகள் அத்தனை அன்பும், கதைகளின் மழைச்சாரலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் ஊட்டுபவை. அவரின் வாழ்வும் அத்தகையது தான்:  https://www.bbc.com/tamil/india-62246095

அவரின் குழந்தைப்பருவத்தின் தாக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் தேநீர்க்குடில் வேலிகள் அற்றது, பகட்டை விரும்பாதது, பாட்டாளிகளின் உறைவிடம். யூமா வாசுகி அவர்களின் இக்கதையில் ‘ராஜா’ எனும் சிறுவன் தான் நாயகன். அவனுக்கு நரம்புத் திரட்சிக்  குறைபாட்டினால் முகமெங்கும் சிறு, சிறு கட்டிகள். வெறுப்பும், ஒதுக்கலும்  வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாகிறது. இக்கதையின் மைய இழை அந்த வெறுப்பு சார்ந்தது அல்ல. வாழ்வின் வலிகள், மனிதர்களின் கசடுகளை வாசிப்பின் ருசியில் கடக்கிற ராஜாவின் பயணம் நம்மை அப்படியே தழுவிக்கொள்கிறது.

பள்ளியின் பிரார்த்தனை கூட்டத்தில் தலைமையாசிரியர் இப்படி சொல்கிறார். 
“… அவனை யாரும் வெறுக்காமல் புறக்கணிக்காமல் கேலி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. தான் இப்படி இருக்கிறோமே என்று அவன் மனதில் குற்ற உணர்ச்சியோ, தாழ்வு மனப்பான்மையோ ஒருபோதும் வந்துவிடக்கூடாது. 
இந்த உலகின் மீதான அன்பையும், சக மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொண்டு வெல்வதற்கான திட்டத்தையும் அவன் மனதில் நாம் உண்டாக்க வேண்டும்… அதற்காகவும் தான் சமூகம் இருக்கிறது, இந்தப்பள்ளி இருக்கிறது, நாம் இருக்கிறோம்…’ 

இது உரிமைப் பிரகடனம் மட்டுமல்ல. சமத்துவமும், உடன்பிறப்புணர்வும் பிணைத்து, அணைத்து பயணிக்க வேண்டும் என்பதற்கான அன்புக்குரல். ராஜாவின் தனிமையை போக்கும் வண்ணம் மாலதி அக்காவும், தோழன் இம்மானுவேலும், மேரியம்மாவும் அவனை அரவணைத்துக் கொள்கிறார்கள். தன்  பள்ளியைவிட்டு விட்டு மாலதியக்கா விரைவில் விடை பெறுவார் என்று ராஜா வருத்தப்படுகையில், “சரி, விடுறா, நான் இந்த வருடம் உனக்காகவே பெயிலாயிடுறேண்டா.” என்கிறாள். வெம்மைமிக்க வாழ்வின் கணங்களில் ‘உனை  நான் மறவேனே’ எனும் அந்த குளிர்ச்சி மிகுந்த குரலின் சாரல் எத்தனை ஆசிகளை விட மேலானது. 
இத்தேநீர்க்குடில் அயர்வு தரும் வாழ்வினில் நிம்மதியாக இளைப்பாறும் வண்ணம் அமைந்திருக்கிறது.

இதில் யெஸ்.பாலபாரதி அண்ணனும், அவருடைய படைப்புகளும் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. ராஜா வாசிப்பின் வழியே மனித வாழ்க்கையின் அடுக்குகள், சிக்கல்கள், நுட்பங்கள், அதிசயங்கள், உணர்வுப் பிரவாகம் ஆகியவை புலப்படுகின்றன. அது யூமா வாசுகியின் எழுத்தில் பலவிதமான அபூர்வமான வாசனைகளை உடைய மலர்களால் ஆன பெரிய மலைப்பாம்பின் பிடியில், ராஜா விரும்பி சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்வதாக அமைகிறது. இந்நூல் தன்னம்பிக்கை சிம்மாசனத்தில் ராஜாவை நிறுத்துவதோடு நில்லாமல், சமூகத்தின் கூட்டு மனசாட்சியை குற்றவுணர்ச்சிக்கும், பகுப்பாய்விற்கும் வெறுப்பற்ற, மென்மையான கதைநடையில் உட்படுத்துகிறது. நோய்மையால்  தாழ்வுணர்ச்சி அடையும் குழந்தைகளை அரவணைத்துக் கொள்ளும் கரங்களை பெருக்கப்போகும் அற்புதம். தவறவிடக்கூடாத ஆக்கம்.

தன்னறம் நூல்வெளி வெளியீடு
 நன்கொடை : ரூபாய் 150
அலைபேசி: 9843870059

உன் குரலினும் உற்ற கீதம் உண்டோ அம்மா?


சில குரல்களுக்கு வயதே ஆவதில்லை என்று தோன்றும். அல்லது அக்குரல் எல்லா பருவங்களிலும் நம்மோடு அணுக்கமாக, நெருக்கமாக உரையாடும் ரசவாதம் கூட காரணமாக இருக்கலாம். எஸ்.பி.பி.யின் குரல் அத்தகைய கவர்ச்சியை காலங்களைக் கடந்து பரிசளித்துக் கொண்டே இருந்தது. ரஹ்மானின் குரலிலும் எப்போதும் உணர்வெழுச்சியை, புத்துணர்ச்சியை நல்கும் வசியம் உண்டு. கட்டுரை அதைப்பற்றியல்ல.

முதுமையால் பிடித்த பாடகர்கள் வரிகளை மறக்கும் போது ஏற்படும் பரிதவிப்பே தாள முடியாதது. ஞாபகங்கள் தவறி குழறும் உறவுகளின் குரல்களைப் போல நொறுக்குபவை வேறொன்றில்லை.  முதுமை, மூப்பு, நோய்கள் குறித்த கவலைகள் பெருந்தொற்று காலத்தில் பெருகி இன்று வரை கனவுகளிலும் அச்சுறுத்துகிறது.

என்னுடைய அம்மா கொளஞ்சியம்மாளின் குரலுக்கு வயதே ஆவதில்லை எனத் தோன்றும்.  உருவத்திற்கும், குரலிற்கும் தொடர்பில்லை என்பதைப் போன்ற ஆளுமை அக்குரலில் வெளிப்படும். மேடைப் பேச்சிற்கு தயாராகும் மாணவர்களுக்கு அவர் அளிக்கும் பயிற்சியே சுவை கூட்டுவது. ஏற்ற, இறக்கம், எங்கே நிறுத்துவது, எப்போது புன்னகைப்பது, எங்கே கைகள் உயர வேண்டும், எங்கே விரைய வேண்டும் என அனைத்தையும் பொறுமையாக சொல்லித்தருவார். அசோகமித்திரனின் புலிக்கலைஞனை அக்கணங்களில் ஏனோ நினைவுபடுத்துவார் அம்மா.

அநேகமாக அம்மாவின் பால்யம் முதல் இன்று வரை நோக்காடே விலகாத துணையாக வருகிறது. மஞ்சள் காமாலை, காசநோய் என்று அத்தனைத் தாக்குதல்களும் அவரின் குரலின் தன்னம்பிக்கையை சிதைக்க முடிந்தது இல்லை. வலியின்றி அவர் உறங்கிய நாட்கள் அரிதாகவே வாய்த்தன. ஆயினும், இன்றைக்கு தான் முதல் முறையாக பள்ளிக்குச் செல்லும் சிறுமியைப் போல் உற்சாகமாக அவர் பள்ளிக்குச் செல்வார். அத்தனை வலியும் ஊழித்தாண்டவத்தில் காணாமல் போகும் நிலத்தைப் போல மறையும். தமிழருவியாய் பொழியும். கதைப்பாடல்கள் கண்முன் விரியும். மெய்ப்பாடுகள் அவரை ஆட்கொள்ளும்.

அம்மாவை பெருந்தொற்றுக் காலம் மனதளவில் சோர்வடைய வைத்தது. குழந்தைகள் இல்லாத அவை வெற்று அறைகளாக அவரை வாட்டின. அவர் குரல் சவலையாக ஒலிக்கும்.  அவர்களைக் கண்ட முதல் நாள் அம்மாவின் குரலின் இளமை ஆச்சரியப்படுத்தியது.

அம்மாவிற்கு சமீபத்தில் உடல்நலம் பெருமளவில் குன்றியது. பக்கவாதம் அவரின் பேச்சையும், செயல்பாட்டையும் பதம் பார்த்தது. மருத்துவமனையின் அச்சுறுத்தும் சூழலில் கூட ‘நான் கொடியேத்தப் போயிருவேனில்ல?’ என்று மட்டுமே அவர் கேட்டார். ‘எப்படா என்ன ஸ்கூலுக்கு கூப்பிட்டுப் போவீங்க’ எனக்கேட்கையில் அக்குரலின் ஏக்கம் என்னவோ செய்தது. ஆயினும், மனவுறுதியாலும், மருத்துவத்தின் உதவியாலும் அம்மா தேறி வருகிறார்.

நேற்று தான் முதல் சுழி போட்ட சிறுமியைப் போல, எழுத்துகளை அசைவற்ற விரல்களால் உயிர்ப்பூட்டினார். அவை கண்ணாமூச்சி ஆடின. அவர் தளர்வார். உடைந்து போய் மீண்டும் முயல்வார். அவரின் குரலை நோய்மை வருத்தியது. மூப்பும், வாழ்வின் நிலையாமையும் இன்னமும் அருகே அச்சுறுத்தின. ஆயினும், அம்மாவின் மணி, மணியான கையெழுத்து மீண்டும் துளிர்த்தது. அவர் பள்ளித்தலம் நோக்கிச் சென்ற அந்நாள் அவரின் குரலில் அத்தனை நம்பிக்கை இல்லை. ஒவ்வொன்றிற்கும் பிறரைச் சார்ந்திருப்பதை அவர் வெறுத்தார். ஆயினும், பள்ளி வாசலை மிதித்ததும் அவரின் குரல் மறுபிறப்பெடுக்கும். காணொளியில் அத்தருணங்களை விழி நீர் வழியாமல் காணவே முடியாது. அம்மாவின் கடந்த காலக்குரல் தான் இப்போதும் ஒலிக்கிறதா எனத்தெரியவில்லை. ஆயினும், அக்குரல் அதிசயமானது. அது துவளாதது. முதுமை அருகே வருகையிலும் இளமையாய் முறுவலிப்பது. உடற்பிணி எவற்றின் தடயமும் இன்றி மிளிர்வது. அம்மா பாடிக் கேட்டதே இல்லை. அவரின் பேச்சினும் அரிய இசைக்குறிப்பு உண்டா என்ன?

(இன்றோடு அம்மா ஆசிரியப்பணியில் சேர்ந்து 26 ஆண்டுகள் நிறைவடைகின்றன).

‘Fullbright Scholar’  ஆனந்த் தட்சிணாமூர்த்தியின் கல்விக்கனவிற்கு கைகொடுங்கள் !


அனைவருக்கும்  அன்பு கலந்த வணக்கம், 

    உங்களிடம் ஒரு பேருதவியை  எதிர்நோக்கி எழுதுகிறேன். தமிழ்நாட்டில் புனைவு, அல்புனைவில் வெளிவரும் ஆக்கங்கள் அற்புதமானதாக இருந்தாலும் எப்போதும் ஒரு குறை உண்டு. அவை பிற மொழிகளிலோ, ஆங்கிலத்திலோ  முறையான  மொழியாக்கம், செம்மையாக்கம்  இல்லாததால் சென்று சேர்வதே இல்லை. இப்போது எதற்கு இதெல்லாம்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன்.

அமெரிக்க-இந்திய அரசுகள் இணைந்து  Fulbright-Nehru  Fellowship ஒன்றை உருவாக்கின. இதன் நோக்கம் ஒன்று தான். அமெரிக்காவின்  தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இந்தியாவை  சேர்ந்தவர்கள் மேற்படிப்பு  படிப்பதற்கான உதவியை நல்கும்  திட்டமாகும். பல்வேறு கட்டத்  தேர்வுகள், நேர்முகத்திற்கு  தேர்ந்தெடுக்கப்படும் ஆளுமைகள்  அமெரிக்காவில்  மேற்படிப்பு படிக்க அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு என்று J1 விசா வழங்கப்படும். இந்த விசா  சற்று வேறுபட்ட ஒன்று. இந்த விசாவில்  அமெரிக்கா  செல்லும் மாணவர்கள் படிப்பு  முடிந்ததும்   இந்தியாவிற்கு திரும்பி விடவேண்டும்.  கல்விக்காலம்  முடிந்த  பிறகு  அங்கே வேலை  பார்த்து கல்விக்கடன், செலவுகளை  ஈடுகட்டும்  வாய்ப்பு அறவே இல்லை. Fullbright Fellowship  கல்விக்காலம்  முடியும் வரை, குறிப்பிட்ட  உதவித்தொகையை  மாதாமாதம்  வழங்கும். இந்த உதவித்தொகை பாதி கல்விக்கட்டணத்திற்கு தான் போதுமானது. மீதமுள்ள தொகையை  கற்கப்போகும் மாணவரே திரட்ட வேண்டும். Inlaks Scholarship, JN Tata Endowment loan scholarship என்று  சிற்சில  உதவித்திட்டங்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாருக்கும்  உதவுவதில்லை. 

இப்போது ஆனந்த் தட்சிணாமூர்த்தியை  சந்திப்போம். அவரின்  சொற்களிலேயே ,

“என் பெயர்  ஆனந்த் தட்சிணாமூர்த்தி.  நியூயார்க் பல்கலைக்கழகத்தின்,  ‘Centre for Publishing’ ஆனது  ‘Publishing: Digital and Print Media’ -ல் பட்ட மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. இக்கனவை  எட்டுவதற்கு இப்படிப்பிற்கு  செலுத்த  வேண்டிய  கட்டணமே தடையாக கண்முன்  நிற்கிறது. 

பெருமைமிகு Fulbright-Nehru  Fellowship எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தரப்படவுள்ள உதவித்தொகைமேற்படிப்பினை  முடிக்க  போதுமானதில்லை. பாதிக்கு பாதி கட்டணத்தை  கட்ட  முடியாத  நிலையில் உள்ளேன். இக்கட்டணத்தை  செலுத்த  உங்களின் மேலான உதவியை  நாடுகிறேன். 

பதிப்புத்துறையில்  மேற்படிப்பில் கால்பதிக்கப் போகும் முதல் Fullbright  Scholar  நானாகவே  இருப்பேன். பதிப்புத்துறையில்  புதியன விரும்பும் ஒருவனாக இக்கனவை  துரத்துகிறேன். 

அம்மாவை இளம்வயதிலேயே  பறிகொடுத்துவிட்ட  என்னை  என் அப்பா தான் தனியொருவராக  வளர்த்தெடுத்தார்.  அப்பா தமிழ்  இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். (சட்டம், பொருளாதாரம் என்று அவரின் கல்வித்தாகம்  விரிந்து கொண்டே இருந்தது ).  அப்பா, சங்க இலக்கியத்தை நிலாச்சோறுடன்   ஊட்டி வளர்த்தார். என்னை பகுத்தறிவாளனாக  வளர்த்தெடுத்தார். பக்தி இலக்கியத்தின் கவிதைகளை ஆழமாக  அறிந்துகொள்ள மட்டுமே ஆலயங்களை நோக்கி பயணித்தோம். தீவிர இலக்கிய கூட்டங்களின் வழியாக தமிழ் இலக்கியத்தில் மனதைப்  பறிகொடுத்தேன். பெரும்பாலான  மாணவர்களை  போல பொறியியல் படித்து முடித்தேன். இருந்தாலும் மனதெல்லாம் கலை, இலக்கியத்தை சுற்றியே சுழன்றது. 

‘Young India Fellowship’ (YIF) எனும்  இலக்கியம், வரலாறு  உள்ளிட்ட பல்கலை பயிற்சியினை வழங்கும் படிப்பினில்  இணைந்தேன். இப்படிப்பிற்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாணவர்களில் முழு  உதவித்தொகை பெற்ற  வெகு சிலரில் நானும் ஒருவன். அங்கே வழங்கப்பட்ட எழுத்துப்பயிற்சி, கடுமையான பாடம் சார்ந்த தேடல்கள் எழுதுவதற்கான  ஊக்கமாக அமைந்தது. தமிழிலக்கியத்தினை உலக அரங்கிற்கு  கொண்டு சேர்க்கும் என் கனவுகள் அங்கேயே துலக்கம்  பெற்றன. தயங்கி தயங்கி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த நான் நம்பிக்கை மிளிர பேசவும், எழுதவும் ஆரம்பித்தேன். என் வாழ்க்கையும், இலக்கும்  தெளிவானது. எனக்கான  திசை புலப்பட்டது. 

What have I done so far?

YIF-ல் வாசிப்பின் மீது தீராக்காதல்  பெருக்கெடுத்தது. பல்வேறு  எழுத்தாளர்கள், பதிப்பாளர்களை  சந்தித்தேன். எப்படி  மைய நீரோட்ட பதிப்பாளர்கள்  இந்திய மொழிகளில் வெளிவரும் ஆக்கங்களை கண்டும் காணாமல்  இருக்கிறார்கள் என்று கண்முன்னே பார்த்தேன். ராயல்டி என்று  சொற்பத்தொகை மட்டுமே படைப்பாளிகளுக்கு வழங்கப்படுவதை கண்டேன். மேற்கத்திய  நாடுகளில் எப்படி படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஏலம்  விடப்படுகின்றன, நம்ப முடியாத அளவுக்கு படைப்புகள் விலை கொடுத்து வாங்கப்படுவதையும்  அறிந்து கொள்ள முடிந்தது. பதிப்பாளரால் தான் பதிப்புத்துறையின்  போக்கை மாற்றி, உள்ளூர் மொழிகளில் இயங்கும் எழுத்தாளர்களை  உலகமெங்கும் கொண்டு சேர்க்க முடியும் என்று  புரிந்தது. 

இதே  காலகட்டத்தில் இதழியல், படைப்புகளை சந்தைப்படுத்தல், பலரிடம் படைப்புகளை சென்று சேர்த்தல்  ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றேன். இந்தியாவின்  முன்னணி இதழியலாளர்களில்  ஒருவரான   சேகர் குப்தாவுடன் இணைந்து ThePrint  எனும்  செய்தித்தளத்தை  வளர்த்தெடுப்பதில் ஈடுபட்டேன். அங்கே அரசியல் கட்டுரைகள், ஆளுமைகள்  குறித்த ஆக்கங்கள், நெடுங்கட்டுரைகள் ஆகியவற்றை  இடைவிடாமல்  எழுதினேன்.    

You can find all the articles under my byline here – https://theprint.in/author/aananth-daksnamurthy/

இப்பணிக்கு பிறகு, தமிழ்நாட்டின்  கலைப்படிப்புகளுக்காக உருவான முதல் தனியார் பல்கலைக்கழகத்தினை  வளர்த்தெடுப்பதில்  பங்காற்றினேன். தமிழ்நாடு அரசின் தொழிற்துறையில்  ‘ Content & brand communications’-னை  தலைமையேற்று  நடத்தினேன். 70 பக்க அளவில் வெளிவரும் தொழிற்துறையின்  காலாண்டிதழினை தொகுப்பது, எடிட் செய்வதில் ஈடுபட்டேன். முதலமைச்சரின் உரைக்கான  கருத்துகளை  வடிவமைப்பதிலும்  பங்காற்றினேன்.  

 
https://investingintamilnadu.com/DIGIGOV/TN-pages/enewsletters.jsp?pagedisp=static
 இவை போக  வெவ்வேறு ஆவணப்படங்களின் மொழியாக்கத்திலும்  ஈடுபட்டேன்.  My work for Race to Feed the World Docuseries

 CNA Insider docuseries-ல் வெளிவந்த  ‘Race to feed the world’ ஆசியாவின் உணவுப்பாதுகாப்பு குறித்து பேசுகிறது. 
https://www.channelnewsasia.com/watch/race-feed-world/question-space-1925316My work for The Longest Day Docuseries

‘The Longest Day’ எனும் ஆவணப்படம் பருவநிலை  மாற்றத்தினால்  ஆசியா  எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறது  என்பதை  விவசாயிகள், மக்கள் நலப்பணியாளர்கள், இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்கள்  ஆகியோரின்  குரல்களின் வழியாக ஆவணப்படுத்தியது. 

https://www.channelnewsasia.com/watch/longest-day/water-1463951

அண்மையில், அல்புனைவு தமிழ் நூலொன்றின் சில பகுதிகளை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம்  செய்தேன்.  தமிழ் இலக்கிய  ஆர்வலராக  இருந்ததில்  இருந்து பதிப்புத்துறையின்  ஆழ, அகலங்களை அறியும் இடத்திற்கு  வந்து நிற்கிறேன். 

என்னுடைய  கனவு அயலகத்திற்கும், தமிழகத்திற்கும் பாலம் அமைக்கும்  ஒன்றாகும். நம் நாட்டின்  எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்களை  அமெரிக்காவின்  புகழ் மிக்க  பதிப்புத்திட்டங்களுக்கு  அறிமுகப்படுத்துவது ஒரு கனவு.  உலகமெங்கும்  பரவிக்கிடக்கும் ஆகச்சிறந்த  சிந்தனைகள், திறன்கள்,  வளங்களை இந்திய மொழிகளுக்கான பதிப்புத்துறைக்குள் கொண்டு  சேர்ப்பது மற்றொரு கனவு.   இதனை இப்பட்டப்படிப்பு  சாத்தியப்படுத்தும்.  


மேற்படிப்புக்கு ஆகும் செலவு: 
 

NYUஇரண்டாண்டு படிப்பு 
முதலாண்டு (12 மாதங்கள் )இறுதியாண்டு  (10 மாதங்கள் )
tuition $42,462$44,797
கல்விக்கட்டணம் $2,346$2,475
காப்பீடு $3,845$4,056
விடுதிக்கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள் $26,220$21,850
புத்தகங்கள் $1,200$1,000
மொத்தம் $76,073$74,178
Fulbright Award$39,995$44,056
பற்றாக்குறை $36,078$30,122

 
ஏறத்தாழ 66,190 $ பற்றாக்குறை  உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான  வாய்ப்பினை  வேண்டாம்  என்று  சொல்கிற மனநிலைக்கு வந்து விட்டேன். எனக்கான கல்விக்கான  வாசல் கதவுகளை  திறக்க  தமிழ்ச்சமூகம்  உதவும்  என்கிற நம்பிக்கையில்  உங்களிடம் உதவி கேட்கிறேன். நியூயார்க் பல்கலையில்  படிக்கும் வாய்ப்பினை பெறுவதற்கு  தாராளமாக  உதவிடுங்கள். 

Milaap தளத்தில்  ஆனந்தின் மேற்படிப்புக்கு உதவுவதற்காக சுட்டி:  https://milaap.org/fundraisers/support-aananth-daksnamurthy

 உங்களின்  நேரத்திற்கும், பேரன்பிற்கும் நன்றிகள், 
அன்புடன், ஆனந்த்  தட்சிணாமூர்த்தி 

வங்கிக்கணக்கு  விவரம்: 

Account holder name: Aananth D

Account number: 002001001623067

Bank name: City Union Bank

IFSC code: CIUB0000153

Swift Code: CIUBIN5M


மேலதிக விவரங்களுக்கு: 


 aananth95@gmail.com எனும் மின்னஞ்சல்  முகவரியில்  என்னைத் தொடர்பு  கொள்ளலாம்

வங்கிக்கடன் முதலியவற்றை  முயன்று  பார்க்கலாமே?:

என்  தந்தை  ஓய்வு பெற்ற  அரசு  ஊழியர். ஓய்வூதியத்தை  சார்ந்து  வாழும் அவரால் இவ்வளவு பெரிய தொகைக்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. எப்படியாவது இந்த கட்டணத்தை கட்ட நான் முயன்று பார்த்து விட்டேன். வேறெந்த  வழியும் இல்லாத நிலையில் தான், உங்களின்  உதவியை வேண்டுகிறேன்.  

இப்படிப்பிற்கு பின்பு என்ன திட்டம் ? 

படிப்பு  முடிந்ததும், இந்தியாவிற்கு  திரும்பி இந்திய மொழிகளில்  பதிப்புத்துறையில் உடனடியாக இயக்குவேன். சிறிய அளவிலான பதிப்பகம்  ஒன்றை  துவங்கி  நடத்தும்  திட்டம் உள்ளது. வளர்ந்து வரும்  எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்  ஆகியோர் பயன்பெறும் வண்ணம் உள்ளுறை உதவித் திட்டங்களை  எடுத்து நடத்தும்  திட்டமும்  உள்ளது.

செயற்கரிய சேவைகள் புரிந்த மருத்துவர் சுனிதி சாலமன்


மருத்துவர் சுனிதி சாலமன் (14 அக்டோபர், 1939 – ஜூலை 28, 2015)

மருத்துவர் சுனிதி சாலமன் அவர்களை இந்தியாவில் முதன்முதலில் எய்ட்ஸ் நோய்த்தொற்றைக் கண்டறிந்த குழுவினை வழிநடத்தியவர் என்கிற ஒரு வரிச்செய்தியோடு கடந்துவிட முடியாது. அவரின் குடும்பம் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டது. தோல் பொருட்கள் தயாரிப்பில் கோலோச்சி கொண்டிருந்த கைடொண்டே குடும்பத்தில் பிறந்தார். வீட்டிற்கு வந்து அம்மை நோய்த்தடுப்பு ஊசி போடும் மருத்துவரின் கனிவில் இருந்து தானும் டாக்டராக வேண்டும் என்கிற கனவு அவருக்குத் துளிர்த்தது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று அவரின் மனு ஏற்கப்படவில்லை. அப்போதைய சுகாதாரச் சேவைகள் துறையின் பொது இயக்குனர் சென்னைக்கு வந்திருப்பதை அறிந்து அவரிடம் நேரடியாக வாதிட்டு தனக்கான இடத்தைப் பெற்றார்.

எம்.எம்.சி.யில் படிக்க வந்த சுனிதிக்கு சக மாணவர் சாலமன் விக்டர் மீது காதல் பூத்தது. “நான் ஓயாம பேசிக்கிட்டே’ இருப்பேன். அவர் குறைவா தான் பேசுவார். அவர் தமிழ். நான் மராத்தி. மதமும் வேற. அம்மாகிட்டே போய் நான் வேற மதத்து பையன் ஒரு கிறிஸ்டியன் இல்லை முஸ்லீம்னு வெச்சுக்கோயேன் அவன லவ் பண்ணினா என்ன பண்ணுவேன்னு கேட்டேன்.’ அம்மா, ‘அதுல என்னடா இருக்கு. எல்லாரும் ஒரே கடவுளோட படைப்பில பூத்த பூக்கள் தான?’ அப்படின்னு கேட்டாங்க. ஆனா, சாலமனை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னப்ப அவங்க ‘நான் உன்னை நினைச்சு அப்படிச் சொல்லலைன்னு சொன்னாங்க’ என்று பின்னாளில் எடுக்கப்பட்ட lovesick ஆவணப்படத்தில் பதிந்திருந்தார் சுனிதி.

ஒருவழியாக சாலமனை மணமுடித்தார்.மருத்துவர் சதாசிவம் அவர்களின் வழியில் இதய மருத்துவராக வேண்டுமென்று லண்டனில் காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்பில் பணியாற்ற சாலமன் பயணமானார். அவரோடு பயணமான சுனிதியும் லண்டனின் கிங்க்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவத்துறையில் பணியாற்றினார். இருவரின் உலகமும் பணிப்பளுவால் நிரம்பிக்கொண்டது. ஒருவர் இரவெல்லாம் வேலை பார்த்துவிட்டு திரும்ப வரும் போது, இன்னொருவர் பணிக்கு கிளம்பியிருப்பார். சமையலறையில் துண்டுச் சீட்டுகளின் மூலம் காதலை வளர்த்துக் கொள்ள வேண்டிய கொடுங்காலமாக அது கழிந்தது.

அடுத்து அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்குப் பயணம் என்கிற சூழல் வந்த போது, பணியையும்-குடும்பத்தையும் ஒருங்கே கவனித்துக் கொள்ளும் வகையில் சுனிதியை கிளினிக்கல் துறையல்லாத படிப்பை தேர்ந்தெடுக்கச் சொல்லி சாலமன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, சுனிதி நோயியல் துறையில் மேற்படிப்பினை சிகாகோவின் குக் கவுண்டி மருத்துவமனையில் பயின்றார். அதற்குள் சாலமனின் வழிகாட்டி சதாசிவம் இறந்துவிடத் துறையைத் தூக்கி நிறுத்த மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிக்கு இருவரும் திரும்ப நேர்ந்தது. சுனிதி தன்னுடைய பொது மருத்துவக் கனவுகளில் இருந்து மைக்ரோபயாலஜி துறைக்கு நகர்ந்திருந்தார்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சுனிதி சாலமன். ஒவ்வொரு பேராசிரியரின் கண்காணிப்பின் கீழ் இரு மேற்படிப்பு மாணவர்கள் அமர்த்தப்படுவார்கள். அப்படிச் சேர்ந்த நிர்மலா செல்லப்பனிடம் ஹெச்.ஐ.வி கிருமி தமிழ்நாட்டிலும் காணப்படுகிறதா எனத் தேடுவோம் என்று சுனிதி சொன்னார். அப்போது முதலில் தன்பாலின ஈர்ப்புக் கொண்ட ஆண்களிடம் எய்ட்ஸ் கண்டறியப்பட்டு இருந்தது. அதனால், ‘இங்கே எல்லாம் அவங்களைத் தேடி நான் எங்கே போவேன்’ என்று நிர்மலா கேட்டார். சுனிதி பாலியல் தொழிலாளிகளிடம் தேடலாம் என்று பரிந்துரைத்தார்.

இரண்டு குட்டிக் குழந்தைகளின் தாயான நிர்மலாவிற்கு அச்சமாக இருந்தது. அவருடைய கணவர் வீரப்பன் ராமமூர்த்தி பெரும் ஆதரவு நல்கினார். அவரின் பைக்கில் பாலியல் தொழிலாளிகளைக் காவல்துறை கண்காணிப்பில் வைத்திருந்த இல்லங்களுக்குச் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்தார். இவற்றை ஐஸ் பெட்டி ஒன்றில் எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் ஏறினார்கள். கணவனும், மனைவியும் ஆட்டோ பிடித்துச் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றார்கள். பரிசோதனையில் ஆறு மாதிரிகள் மஞ்சள் நிறத்துக்கு மாறின. அவர்களால் நம்பவே முடியவில்லை. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்குப் புதிய மாதிரிகளை அனுப்பி வைத்த போது, அவர்களும் ஹெச்.ஐ.வி இந்தியாவின் கதவுகளைத் தட்டிவிட்டதை உறுதி செய்தார்கள். 1986-ல் அச்செய்தி அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

(சுனிதி சாலமன்-நிர்மலா செல்லப்பன்)

தமிழகம் பேரதிர்ச்சிக்கு ஆளானது. சுனிதி மராத்தி, அவர் தமிழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்க பார்க்கிறார் என்றெல்லாம் வசைகள் பாய்ந்தன. சுனிதி சாலமனை வேறொரு கவலை சூழ்ந்திருந்தது. ஹெச்.ஐ.வி நோயாளிகளை மருத்துவர்கள் தொட மறுத்தார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் பார்க்க முடியாதென்று கதவுகள் மூடப்பட்டன. ‘எய்ட்ஸ் தொற்று பாலியல் தொழிலாளிகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இந்நோய் ஒழுக்கக் கேடானவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை முதன்முதலில் பச்சிளம் குழந்தைகளிடம் இந்நோய் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால் இத்தனை வெறுப்பும், அருவருப்பும் இருந்திருக்காதோ என்னவோ’ என்று பின்னாளில் சுனிதி பேசினார்.

தான் கண்டுபிடித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகம் வெறுத்து ஒதுக்குவது சுனிதியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. முதன்மையான காரணம், அவர் கண்ட ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களின் கதைகள். முதன்முதலில் நோய்த்தொற்றுக் கண்டறியப்பட்டவர்களில் பதிமூன்று வயது சிறுமி ஒருவரும் இருந்தார். கடத்தப்பட்டு மூன்று நாட்கள் பட்டினி போட்டு அவரை வன்புணர்வு செய்த கொடூரத்தில் இருந்து தப்பி வந்திருந்தார். அவரை மாதிரி எத்தனையோ மக்களின் வாழ்க்கைக்குள் சத்தமில்லாமல் அவநம்பிக்கை, மரண பயம் சூழ்ந்திருந்தது.

சுனிதியிடம் ஒரு பெரும் பணக்காரர் வந்தார். தன்னுடைய தங்கை, மருமகனை மகளுக்கு மணமுடிக்கக் கேட்டிருந்தார். அப்போது தான், தன்னுடைய மகனுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதை அவர் சொன்னார். கதவுக்குப் பின்னிருந்து அதனைக் கேட்ட மனைவி, மகனிடம் உண்மையைச் சொன்னார். விஷத்தை குடித்துவிட்டு வண்டியோட்டிக் கொண்டு போய் இருவரும் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். ‘என்னோட மருமவள எய்ட்ஸ் வராம காப்பாத்தனும்னு நான் நினைச்சது தப்பா டாக்டரம்மா’ என்று அவர் கேட்டார். அரற்ற முடியாமல் சுனிதி நேராக வீட்டிற்குப் போனார். தன்னுடைய நாய்க்குட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்.

ஹெச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரின் கனவாக மாறியிருந்தது. இத்தனைக்கும் எம்.எம்.சியிலேயே இலவச சிகிச்சை, கலந்தாய்வு மையம் ஒன்றை அவர் ஏற்படுத்தியிருந்தார். எனினும், மக்கள் அங்கே வர அஞ்சினார்கள். இனிமேலும், இப்படியே விடமுடியாது என்கிற கட்டத்தில், பதவியை விட்டுவிட்டு முழுநேரமாக அவர்களுக்கு உதவ முனைந்தார். சாலமன் முடியாது என்று அரற்றினார். எண்ணற்ற தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள், பல பேருடன் உறவு கொண்டவர்கள், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் என்று ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களோடு புழங்கி உயிரை போக்கிக் கொள்ள வேண்டுமா என்கிற கேள்வி அவருக்கு இருந்தது. “சாலி! என்கூட வாங்க. அவங்க கதைங்கள கேட்டுப் பாருங்க. அவங்க கண்ணில இருக்கிற மரணப் பயத்தைப் பாருங்க. இவங்கள நாம காப்பாத்தாம யாரு காப்பாத்துவா?” என்று கணவரை ஏற்க வைத்தார்.

அந்த பெரும் பயணம் 1993-ல் துவங்கியது. கையில் பெரிதாகப் பணமில்லை. அன்பு தோய்ந்த கனவு மட்டுமே இருந்தது. விடுதிகளில் அறையை வாடகை எடுத்துச் சிகிச்சை தர ஆரம்பித்தார். நண்பர்களின் இல்லங்களில் இருந்த காலியிடத்தில் போராட்டம் தொடர்ந்தது. பொதுக் கிளினிக் ஒன்றை தியாகராய நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் துவங்கியிருந்தார். யார் வேண்டுமானாலும் வரக்கூடிய மருத்துவமனையாக இருந்தாலும் எய்ட்ஸ் பயம் உள்ளவர்கள், சிகிச்சை வேண்டுபவர்கள் வந்து சேரக்கூடிய இடமாக மாறியது அவரின் மருத்துவமனை. மூன்று பேரோடு துவங்கிய YRG Care முன்னூறு பேரோடு கிட்டத்தட்ட இருபதாயிரம் ஹெச்.ஐ.வி நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கிற மையமாக வளர்ந்து நிற்கிறது. பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய தொழுநோய் வார்ட் ஒன்றை V.H.S அமைப்பிடம் இருந்து தன்னுடைய மையத்திற்காகச் சுனிதி பெற்றுக்கொண்ட அவர் . ‘எய்ட்ஸ் தான் புதிய தொழுநோய்’ என்று சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் சேவைகளைப் பெருமளவு இலவசமாக வழங்க உலகத்தின் பல்வேறு நாடுகள், அமைப்புகளின் ஆய்வுப்பணிகளில் தன்னையும், தன்னுடைய அமைப்பினரையும் தீவிரமாக ஈடுபடுத்தினார். ஏழை என்பதற்காக ஒருவருக்கு மருத்துவச் சேவை மறுக்கப்படக் கூடாது என்பது அவரின் பார்வையாக இருந்தது.

இது ஒருபுறம் என்றால், வயதானவர்கள், இந்திய மரபை புனிதம் என்று கட்டிக் காக்கிறவர்கள் சுனிதி சாலமனின் எய்ட்ஸ் விழிப்புணர்வை செவிமடுக்க மறுத்தார்கள். அவர் மாணவர்கள், இளைஞர்கள் கதவுகளைத் தட்டினார். அவர்களிடம் ஹெச்.ஐ.வி குறித்து உரையாடினார். பல இளையவர்கள் திறந்த மனதோடு உரையாடினார்கள். தங்களையும் இந்தப் பயணத்திற்கு ஒப்புக் கொடுத்தார்கள். செக்ஸ் குறித்த திறந்த உரையாடல்களை தொடர்ந்து மேற்கொண்டதோடு, எய்ட்ஸ் குறித்த கற்பிதங்கள், மூட நம்பிக்கைகளை மென்மையான குரலில் அவர் கேள்விக்கு உள்ளாக்கினார்.

‘கல்லால அடிச்சு கொல்ல வேண்டியவங்கள எப்படித் தொட்டு, கட்டிப்பிடிச்சு பேசுறியோ’ போன்ற வார்த்தைகளைச் சுனிதி காதில் போட்டுக்கொண்டதே இல்லை. அவருக்கு ஒவ்வொரு ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவருக்கும் நோய்த்தொற்று இல்லாத மழலை பிறக்கும் நாள் பொன்னாள் தான். ஹெச்.ஐ.வி தொற்றுள்ள கர்ப்பிணிகளையும் பிறரோடு பொதுப் பிரசவ வார்டிலேயே அனுமதிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து போராடினார். ‘நோயை விட மக்களிடம் நிலவும் தேவையில்லாத அருவருப்பும், வேறுபடுத்திப் பார்ப்பதுமே கொடுமையானவை’ என்று அவர் கருதினார். மேலும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு, புதிய நோய்த்தொற்று வருவதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு திருமண உறவை ஏற்படுத்தும் முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

‘நிறைய அனாதைகளை உருவாக்க போறேன்னு கரிச்சு கொட்டுவாங்க. ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டவங்க இருபது, இருபத்தஞ்சு வருஷம் வாழுறாங்க. பிறகு என்ன?’ என்று ஆன் எஸ்.கிம்மின் ‘lovesick’ ஆவணப்படத்தில் பேசினார் சுனிதி சாலமன். ‘இவங்களுக்குத் திருமணம் ஆகுறப்ப மறக்காம பத்திரிகை வைப்பாங்க. ஆனா, தயவு செய்ஞ்சு வந்துடாதீங்கன்னு கேட்டுப்பாங்க. ஒரு எய்ட்ஸ் டாக்டர் அங்க போனா மத்தவங்க எல்லாம் என்னென்னெவோ பேசுவாங்க இல்ல. அதுதான் காரணம் ’ என்று அதே ஆவணப்படத்தில் தெரிவித்தார் சுனிதி.

ஒரு சம்பவத்தை அவர் UNDP-யின் இதழுக்கு அளித்த பேட்டியில் நெகிழ்வோடு கவனப்படுத்தினார் :

“ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவான பொண்ணு அவங்க ஃபிரெண்டை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்தாங்க. அவர் இவங்கள லவ் பண்றேன்னு சொன்னார். ‘எனக்கும் பிடிச்சு இருக்கு, ஆனா, காதல் எல்லாம் வேணாம்’ இவங்க சொல்லவே அவருக்கு ஒன்னும் புரில. தனக்கு ஹெச்.ஐ.வி இருக்குனு சொன்னா நம்புவாரானு தெரியாம என்கிட்டே கூட்டிட்டு வந்தாங்க. நான் பொறுமையா அவங்க நிலையை விளக்கி சொன்னேன். அவர் டக்குனு எழுந்து வெளியே போயிட்டார்.

பொண்ணு உடைஞ்சு போயிட்டாங்க. நானும் தான். சூழலை இயல்பாக்க ஒரு காபி சாப்பிட போனோம். அந்தப் பையன் திரும்ப வந்திருந்தார். கையில ரோஜா பூங்கொத்தோட நின்னுகிட்டு இருந்தார். ‘என்கிட்டே இதை மறைக்காம சொன்னது எனக்கு உன்மேலே இருக்கக் காதலை, மரியாதையைக் கூட்டித்தான் இருக்கு. எப்படி இப்படி ஆச்சுன்னு நான் கண்டிப்பா கேக்க மாட்டேன். ஆனா, உன்கூட எப்பவும் இருப்பேன்னு’ சொன்னார். எங்க ரெண்டு பேரு கண்ணிலயும் தண்ணி. எல்லா நேரத்திலும் அழுகையை மறைக்கணும்னு இல்லை. இப்படிப்பட்ட நிறையப் புரிஞ்சுக்குற மனுஷங்க தேவை.’

சுனிதி அப்படிப்பட்ட மனிதர்களில் முதன்மையானவர். இந்தியாவின் எய்ட்ஸ் தடுப்பு வரலாற்றின் முதன்மையான ஆளுமை அவரே. அந்நோய் குறித்த அவநம்பிக்கை, வெறுப்பு, நோய் பீடிக்கப்பட்டவர்களின் மீதான கண்டனப் பார்வைகளை அயராது எதிர்கொண்டார். இறுதிவரை மருத்துவர்கள் ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று மரணத் தண்டனையை அறிவிக்கும் நீதிபதிகளாக நடந்து கொள்ளாமல், கனிவும், அக்கறையும் மிக்கவர்களாகச் சக மனிதர்களை அணுக வேண்டும் என்கிற அரிய பாடத்தின் முதன்மையான எடுத்துக்காட்டாக அவரே திகழ்ந்தார்.

உதவியவை:
1. https://yrgcare.org/paying-tribute-to-late-dr-suniti-solomon-on-her-78th-birth-anniversary/
2. https://www.newyorker.com/news/news-desk/postscript-suniti-solomon-aids-researcher

3. https://www.thehindu.com/sci-tech/health/world-aids-day-how-dr-suniti-solomons-flexibility-shaped-indias-aids-crisis/article7936732.ece

4. https://www.livemint.com/Leisure/0BndFwDSQojGe71oE8lFVK/Freedom-to-live-with-HIV–Suniti-Solomon.html

5. www.bbc.com/news/magazine-37183012

6. https://www.thebetterindia.com/76774/suniti-solomon-doctor-hiv-aids-india/

7. HIV/AIDS in News- Journalists as Catalysts UNDP
8. https://www.netflix.com/in/title/80238021?source=35
9. https://yrgcare.org/wp-content/uploads/2015/10/HIV_in_India.pdf

புகைப்பட நன்றி: YRG CARE.

அவர்கள் நேற்று மதியம் என்ன செய்தார்கள்?


என்னுடைய அத்தையின் வீட்டை தீயிட்டு கொளுத்தினார்கள். இரண்டாக மடிக்கப்பட்ட ஐந்து பவுண்ட் தாளைப் போல மண்டியிட்டு தொலைக்காட்சிகளில் வரும் பெண்களைப்போல நான் தேம்பி அழுதேன். என்னைக் காதலித்தவனை அழைத்தேன் அவன் என் ‘குரலை’ ஆற்றுப்படுத்த முயன்றான்.
நான் ஹலோ என்றேன்
அவன் வார்ஷன், ஏன் இப்படியிருக்கிறாய், என்னாயிற்று எனக் கேட்டான். நான் பிரார்த்தித்து கொண்டிருந்தேன்
என் பிரார்த்தனைகள் இப்படி இருந்தன;
அன்புள்ள ஆண்டவரே
நான் இரு தேசங்களில் இருந்து வருகிறேன்.
ஒன்று தாகமாய் இருக்கிறது
இன்னொன்று தீப்பற்றி எரிகிறது
இரண்டிற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. அன்றிரவு
என் மடியில் உலக வரைபடத்தை ஏந்திக்கொண்டேன்
மொத்த உலகத்தின் மீதும் என் விரல்களால் நீவிவிட்டு
சன்னமாக
எங்கேனும் வலிக்கிறதா என வினவினேன்அது இவ்வாறு பதிலளித்தது
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும்
எல்லா இடங்களிலும். – Warsan Shire.தமிழில்: பூ.கொ.சரவணன்

உயரே, கேம் ஓவர் -போராளிகளின் கதை


கடந்த சில வாரங்களில் ‘உயரே’,’கேம் ஓவர்’ திரைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. இரு திரைப்படங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. பார்வதி, டப்ஸி எனப் பெண்களைச் சுற்றியே இக்கதைகள் சுழல்கின்றன. நம்பிக்கையும், வெளிச்சமும், தேடலும் பாய்ந்தோடி கொண்டிருந்த இருவரின் வாழ்விலும் ஆண்களின் வன்மம் மிகுந்த வன்முறையால் அச்சமும், தற்கொலை எண்ணமும் சூழ்கிறது. இதனை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள்? மீண்டார்களா இல்லை மடிந்தார்களா என்பது கதையைச் செலுத்தும் மையச்சரடு எனலாம்.

‘உயரே’ பல வகைகளில் நம் அன்றாட வாழ்க்கையில் கடக்கும் உயரே பறக்க முனையும் பெண்களை இயல்பாக முன்னிறுத்துகிற கதை. அதில் மிகைப்படுத்தல் என்பது கிட்டத்தட்ட எங்கேயும் இல்லை. ஒரு பைலட்டாக மாறிவிட வேண்டும் என்கிற குழந்தைப் பருவக்கனவு பார்வதியை செலுத்துகிறது. எப்போதும் உயரத்தில் உலவ வேண்டும் என்கிற கனவு கண்களில் மின்னுகிறது. அவளின் தந்தை செல்ல மகளின் கனவிற்காகத் துணை நிற்கிறார். உற்ற நண்பனாகத் தந்தை எப்படித் திகழ முடியும் என்பதை அவரின் பாத்திர வார்ப்பின் மூலம் இயல்பாகக் கடத்தி விடுகிறார்கள். தன்னுடைய மகளின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் உலகமே தனக்குச் சொந்தமானதை போல அவர் குதூகலிப்பது மனதை நெகிழ வைக்கிறது. தன்னைத் தேய்த்துக் கொண்டு தன் மகளின் பயணத்தில் அவரும் பங்கு கொள்கிறார்.

‘கேம் ஓவர்’ திரைப்படம் இப்படி இதமான அனுபவத்தை எந்தக் கணத்திலும் தருவதில்லை. படபடப்பும், நடுக்கமும், நாடித்துடிப்பை ஏற்றும் இசையும் தான் படம் முழுக்க நம்மைப் பீடிக்கிறது. டப்ஸியின் உலகம் இருளைக் கண்டு அஞ்சுவதாகவே இருக்கிறது. கடந்த காலம் அவரைக் கதவடைத்துக் கொண்டு அருவருப்போடும், ஏளனமாகவும் பார்க்கும் நிகழ்காலத்தைப் பார்க்க விடாமல் தடுக்கிறது. உளவியல் த்ரில்லரா, பேய்ப்படமா, பெண்ணியப் படமா என்று எந்த வகைமைக்குள்ளும் அடங்காமல் ஒரு கேமரின் வாழ்க்கையைப் போராட்டங்களோடு படம் விரித்துச் சொல்கிறது.

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

இரு திரைப்படங்களின் முதல் காட்சியுமே பரபரப்பாகவே துவங்குகிறது. ஒன்று உடைந்து விழப்போகும் விமானத்தைக் காப்பாற்ற முயலும் படபடப்பு தரும் காட்சிகள் வளர்வதைக் காட்டுகிறது. இன்னொன்று ஒரு பெண்ணைக் கொன்று, பந்தாடும் சில்லிட வைக்கும் காட்சிக்கோர்வையைச் சடசடவென்று கண்முன் பரப்பி நம்மையும் அந்த ‘pacman’ ஆட்டத்திற்குள் இழுத்து கொள்கிறார்கள்.

*spoilers ahead*
பள்ளிக்காலக் காதல் பார்வதியின் கனவுகளை முடக்கிப் போட பார்க்கிறது. சந்தேகமும், அதீத கட்டுப்பாடும் பிரியத்தை முறித்துக் கொள்ள முனைகையில் எல்லாம் வாஞ்சையாகக் காதலனை அணைத்து இறுகப்பற்றிக் கொள்கிறார் பார்வதி. ஆனால், மிகைத்த அடக்குமுறை ஒரு கட்டத்தில் பிரிவாக வெடிக்கிறது. பார்வதியின் முகத்தில் அமிலம் வீசுகிறான் அந்தக் கொடூரன். சீக்கிரமே விமானியாகி வானில் சிறகடிக்கப் போகிறோம் என்கிற கனவு குப்புற விழுகிறது.

ஒரு ஆணின் கண நேர உணர்ச்சி வேகம் எப்படிப் பெண்ணின் வாழ்நாள் வேதனையாக மாறிவிடுகிறது என்பதைப் படிப்படியாகக் கண்முன் கொண்டு வருகிறார்கள். அமில வீச்சு தன்னம்பிக்கையும், பெருங்கனவுகளும் கொண்ட ஒரு ஆளுமையை எப்படி உடைத்துப் போடுகிறது என்பதைக் காட்சிகள் கடத்துகின்றன. என்னமோ நம் மேனியில் அமிலம் பட்டு எரிவதை போன்ற பதைபதைப்பை அடுத்தடுத்த கணங்கள் கடத்துகின்றன. நம்முடைய பாலினத்தைக் கடந்து பார்வதியாகவே நாமும் உணர நேர்கிற அளவுக்கு நேர்த்தியான காட்சியமைப்பும், நடிப்பும் இணைகின்றன.

டப்ஸியின் வாழ்வில் இருளும், ஒரு டாட்டூவும் வெளிவரவே முடியாது என்று நம்புகின்ற அளவுக்கான வடுவை ஏற்படுத்துகின்றன. இந்தப் போராட்டத்தில் அவருக்குள் நிகழும் மாற்றங்கள், மனக்கொந்தளிப்புகள், இனிமேலும் உயிரோடிருந்து இருந்து என்ன பயன் என்கிற ஊசலாட்டங்கள் ஆட்கொள்கின்றன. இன்னும் கொஞ்ச தூரம் தான், மீண்டு விடலாம் என்கிற நம்பிக்கையை அவரின் கையில் குத்தியிருக்கும் டாட்டூவே எதிர்பாராத வடிவத்தில் தருகிறது. ‘நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்வுதான் என்று தெரிந்து விட்டால் இறுதியாக ஒரு முறை போராடித்தான் பார்த்துவிடு மகளே’ என்று அந்த நிகழ்வு டப்ஸியோ உந்தித்தள்ளுகிறது. அவரால் அது முடிந்ததா என்பதை இரண்டாம் பாதி அச்சப்பட வைக்கும் திரைக்கதையோடு, ஒரே மாதிரியான காட்சிகளை வெவ்வேறு வகைகளில் கண்முன் நிறுத்தி கதை சொல்கிறது. அஸ்வின் சரவணன் , காவ்யா ராம்குமாரின் திரைக்கதை நம்மை நடுங்கவும், நெருங்கி அந்த உலகை காணவும் வைக்கிறது.

பார்வதியின் பறக்கும் கனவுகள் குப்புற விழுந்த பின்பு அவரின் தற்கொலை எண்ணங்கள் உடனிருப்பவர்களால் தள்ளிப்போகிறது. ‘லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம்’ என்று முதல் வகுப்பிலேயே ஆசை காட்டும் பட்டப்படிப்பை விட்டு வானமே எல்லை என்று எண்ணிய அவர் வேகமாக வெளியேறுகிறார். சட்டப்போராட்டங்கள் ‘எத்தனை நாளைக்கு இந்த வேதனை’ என்று அவரை உடைந்தழ வைக்கிறது. ஒரு புதிய நம்பிக்கை என்றோ சந்தித்த ஒரு அறிமுகத்தின் மூலம் கிட்டுகிறது. ஆனால், கடந்த காலத்தின் காயங்களுக்குக் காரணமானவனும், சிதைந்து போன முகமும், மீண்டெழ முனையும் அகமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிகள் நிலைமையைச் சிக்கலாக மாற்றுகின்றன.

டப்ஸி ஓயாமல் pacman கேமில் தன்னைத் தொலைக்கிறார். அவரின் அச்சங்கள் கனவா, நிஜமா என்று புரியாத ஒரு கேம் உலகத்திற்குள் அவரைத் தள்ளுகிறது. சற்று ஏமாந்தாலும் மரணம் நிச்சயம் என்கிற சூழல். மூன்றே வாய்ப்புகள். அவரோடு பேசக்கூட மறுக்கிற, முகந்தெரியாத இருட்டு மிருகங்கள் கொன்று போட பார்க்கின்றன. ஏளனமும், நசுக்கிவிடுகிறேன் பார் என்கிற வெறி கொண்டும் திரியும் அவற்றோடு தன்னுடைய ஒரே துணையான வேலையாளான கலாம்மா (வினோதினி) உடன் எதிர்கொள்கிறார்.

இரு திரைப்படங்களிலும் குற்றம் புரிந்தவனைச் சிறைக்கு அனுப்பி விட்டாலும் அன்றாடம் அவமானம், குற்றவுணர்வு, வேதனை என்று பலதரப்பட்ட உணர்வுகளை எதிர்கொண்டு கொண்டே இருக்கும் பெண்களின் உலகம் நம்மைப் பதைபதைக்க வைக்கிறது. தண்டனை வாங்கித்தந்துட்டா எல்லாம் சரியாகிடுமா என்கிற கேள்வி ஆண்களின் முகத்தையும், பொதுபுத்தியையும் சேர்த்தே அறைகிறது. உயரே கதையில் ஆண்களின் உதவியோடு பார்வதி மீள்கிறாள். ஆனால், கேம் ஓவரில் தன்னுடைய போராட்டத்தை ஆண்களின் துணையின்றித் தானே வெல்ல முனைகிறார் ஸ்வப்னா (டப்ஸி).

நம்பிக்கையும், கதகதப்பும் வரும் என்று நம்புகிற கணத்தில் தன்மானத்தைக் காவு கேட்கும் நிகழ்வுகள் அரங்கேறுகிற போது, ‘கொஞ்சம் flexible-ஆ இருக்கப் பாரேன்’ என்கிற அறிவுரையை ஏற்க மறுக்கிற பார்வதி நிமிர்ந்து உட்கார வைக்கிறார். அதற்கு அவர் சொல்கிற காரணம் தன்மானத்தை மீட்டெடுக்க முனைபவர்களுக்கான வெளிச்சப்புள்ளி. உடைந்து போன சிதிலங்களில் இருந்து அவர் நடுங்கியபடியே, ரத்தம் சிவந்த, கருகிப்போன முகத்தோடு எழுந்து காக்பிட்டில் உட்கார்கிற கணம் மீண்டும் மீண்டும் கண்முன் நிறைந்து ஒளிர்கிறது. ஒரு பெண்ணிற்குத் தேவை வாழ்க்கை தரும் துணை தான் என்கிற பார்வையை இயல்பாக மனு அசோகனின் இப்படைப்பு நொறுக்குகிறது. உதவுகிறவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுதாக மீட்கும் மீட்பர்களாக மாற வேண்டியதில்லை என்பதை இயல்பாகப் பார்வதியின் பாத்திரம் புரிய வைக்கிறது.

இரு திரைப்படங்களும் வெவ்வேறு வகையான உணர்வுகளைத் தருகின்ற கதைப்போக்கை கொண்டவை. ஆனால், இரண்டுமே ஆண்களின் வன்முறையையும், பாதிக்கப்பட்டவர்களை நோக்கியே வீசப்படும் ஏளனப்பார்வையையும் ஒட்டியே நகர்கின்றன. இரு கதைகளும் நரகத்திற்குள் விழுந்த பின் நாயகிகள் அத்தனை போராட்டத்தோடு எழுந்து நிற்க முயல்கிறார்கள். பிரமிக்க வைக்கும் வெற்றிகள் அல்ல அவர்களின் பயணத்தின் நோக்கம். தங்களின் ஆளுமையை, சிற்றகல் வெளிச்சத்தைத் தங்களுக்கே உரிய வகையில் திரும்பப் பெற முயலும் போர் அது. உச்சக்காட்சி முடிந்த போது இரு திரைப்படங்களும் கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டன. இக்கதைகள் ஆண்களாகிய நாம் வாழ முடியாத வாழ்வினை நெருக்கத்தோடும், உண்மையின் சாயலோடும் சொல்கின்றன. குற்றப்பார்வையை நம்மை நோக்கி திரைமொழியில் திருப்பும் இரண்டு முயற்சிகளும் அவற்றின் சிற்சில போதாமைகளைத் தாண்டியும் மகத்தான திரைப்படங்கள்.

கும்பளாங்கி இரவுகள்: கனவிலும் கசடுகள் அகற்றும் கதை


 

மது நாராயணின் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா தயாரிப்பில் வெளிவந்திருக்கும்
ஷ்யாம் புஷ்கரனின்
‘கும்பளாங்கி இரவுகள்’ திரைப்படம் ஒரு தனித்த அனுபவம். இதற்கு மேல் சிதிலமடைய முடியாது என்கிற அளவுக்குக் குலைந்து போய் நிற்கும் ஆண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு வீடு தான் கதையின் மையம். குட்டிச்சுவரை கிட்டே நெருங்கும் ஒரு இல்லம். அங்கே கசடுகளும், சச்சரவுகளும், அவநம்பிக்கையுமே சூழ்ந்து நிற்கிறது. ஓரிரு காதல்களும், தன்னை முழுமையான மனிதனாக உணரும் ஒருவரும் இந்த வீட்டின் போக்கை எப்படி மாற்றுகிறார்கள் என்பதே கதை.

இந்தக் கதை ஒரு வகையான மாயக்கதை தான். இதனை யதார்த்தத்தின் பிரதி என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், தேர்ந்த திரைக்கதையும், வெகு இயல்பாகத் திரையில் வாழும் நடிகர்களும் அலையாத்தி காடுகளும், உப்பங்கழிகளும் நிறைந்த கும்பளாங்கி கிராமத்திற்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையிலான வன்மத்தையும், முன்முடிவுகளையும் தாங்கிக் கொண்டு திரியும் ‘முழுமையான மனிதர்களை’ இப்படம் பகடி செய்கிறது. அதனைப் பரப்புரைத் தொனியின்றிச் செய்வது தான் இப்படத்தை கலைப்படைப்பாக உயர்த்துகிறது. சீர்குலைந்து போன குடும்பங்களை நாடிச்செல்லும் காதல்கள் வீழவே செய்யும் என்கிற பொதுப் புத்தியை கலைத்து போடுகிறார்கள் கும்பளாங்கி மாந்தர்கள்.
மரபை மீறுகிற ஆவேசம் இன்றி, சிற்சில வரிகளில், முக மாற்றங்களில் அடக்குமுறை கேள்விக்கு ஆளாகிறது.

#spoilers ahead#
‘என் பெற்றோரின் சாபம் தான் நான் இருக்கிற இடத்தை எல்லாம் மண்மேடாக ஆக்கிவிடுகிறது. இந்த வீடும் அப்படி ஆகிடும்’ எனக் கதறுகிற பெண்ணைப் பார்த்து, ‘இதுக்கு மேலே இந்த வீட்டில நாசமா போக என்ன இருக்கு? என்னடா ஃபிராங்கி’ எனச் சௌபின் கேட்கையில் ஊழை வெல்லும் உறுதி திரையில் ஒளிர்கிறது. ‘நான் ஆம்பிளைடி’ என ஷானே நிகாம் முஷ்டி முறுக்குகையில் ‘போடா’ என்று நாயகி புறங்கையால் அவனைத் தள்ளுவது அத்தனை அழகானது. ‘மீன் பிடிக்கிறதெல்லாம் மட்டமான தொழில் இல்லையா?’ என்கிற மேட்டுக்குடியின் கேள்வியை மீனவரின் மகனே கேட்கிற போது, அன்பும், உணவின் சுவையின் நினைவுகளும் மின்ன, ‘எனக்கு மீன்னா உசுரு. மீன் பிடிகிறது கேவலம்னு நான் சொன்னேனா’ என்று அவனுடைய காதலி கேட்கையில் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. மதங்களைக் கடந்து காதல் கொள்ளும் பெண், %கர்த்தர் நமக்கும் தான் நெருக்கமானவர் % என்கிற கணம் ஆழமானது.

Image may contain: 7 people, including Gowthami, people smiling

‘என்னடீ நான் உனக்கு அண்ணன் இல்லையா’ என்று காதலை குலைத்து போடும் தருணத்தில், ‘நீ அண்ணனாவே இருந்தாலும் வாடி, போடி போடக்கூடாது.’ என்கிற எதிர்க்குரல் ஏன் அத்தனை கம்பீரமானதாக இருந்தது? அதுவரை எதிர்ப்பைக் காட்டாத பெண்ணிற்குள் கனன்று கொண்டிருக்கும் கேள்வித்தீ சுடர்விட்டுப் பரவுகையில் ஊற்றெடுக்கும் வெம்மை தானோ அது?
#spoilers over#

கச்சிதமான மனிதனாக வலம்வரும் ஃபகத் ஃபாசிலின் நடிப்பும், அந்த மிரட்டும் பார்வையும், மிரளவைக்கும் மருட்சியான சிரிப்பும், எதையுமே செய்யாமலே எதையாவது செய்து விடுவாரோ என்கிற படபடப்பை தருகிற காட்சியமைப்பும் மறக்க முடியாத அனுபவத்தை வாரி நிறைக்கின்றன. கும்பளாங்கி இரவுகள் அவநம்பிக்கை, மரணங்கள், கண்ணீர், காழ்ப்புகள் அனைத்தையும் கரைக்கும் வல்லமை மானுடத்திற்கும், நகர முனையும் மாந்தர்களுக்கும் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லிச்செல்கிறது. இந்தக் கதையின் நாயகர்கள் அசகாயசூரர்கள் இல்லை, அவர்கள் மடிகள் நாடி தேம்புபவர்கள். உடன்வர மறுக்கும் உறவுகளின் வலிகளை உணர்ந்து கொள்கிறவர்கள். இடிபாடுகளில் இருந்து எழுந்து புன்னகைப்பவர்கள். படுக்கைக்குள் எட்டிப்பார்ப்பவர்களை எட்டி உதைக்க அஞ்சாதவர்கள். அவசியம் பாருங்கள்.

வெறுப்பற்ற பெண்ணியம் பேசுவது எப்படி?


Nanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின்’ netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது. நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.

 

Image result for hannah  nanette

“நான் டாஸ்மானியா மாநிலத்தின் சிறிய நகரத்தில் வளர்ந்தவள். டாஸ்மானியா அற்புதமான இடம். அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நாள் அந்த மாநிலத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஒரு கடிதம். அன்புள்ள மேடம் என்று துவங்கிய அந்தக் கடிதம் என்னை மாநிலத்தை விட்டு வெளியேற சொன்னது. நான் என்னை ஓரளவிற்கு லெஸ்பியனாக உணர்பவள். என்னுடைய மாநிலத்தில் 1997-வரை தன் பாலின உறவானது சட்டப்படி குற்றம். என் ஊரை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு மோசமான விஷயம். தன்பாலின உறவில் ஈடுபடுவர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவின் மையப்பகுதிக்கு மொத்தமாக ஓடிபோய் விட வேண்டும். மறந்து கூட மீண்டும் டாஸ்மானியா வரவேண்டும் என்று எண்ணக்கூடாது.

நான் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், என்னைக் குறித்தும் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளை உதிர்ப்பேன். தன்பாலின உறவுகள் எப்படி அச்சத்தோடும், ஐயத்தோடும் அணுகப்படுகின்றன எனப் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளைக் கூட்டத்தினர் சிரிக்க வீசிக்கொண்டே இருப்பேன். ….

 

நான் என்னைப்போன்ற லெஸ்பியன் மக்களின் உணர்வுகளை, சிந்தனைகளைப் போதுமான அளவுக்கு மக்கள் முன் கொண்டு சேர்த்ததில்லை என உணர்கிறேன். ஒரு பெண் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியின் முடிவில், ‘போதுமான அளவுக்கு லெஸ்பியன் நகைச்சுவை இல்லை’ என்று குறைபட்டுக் கொண்டார். என்னை லெஸ்பியன் நகைச்சுவை கலைஞர் என அறிமுகப்படுத்துகிறார்கள். நான் லெஸ்பியனாக இருப்பதை விட, அதிக நேரத்தை சமைப்பதில் செலவிடுகிறேன். என்னை ஏன் சமையல் கலையில் அசத்தும் நகைச்சுவை கலைஞர் என்று யாரும் அறிமுகப்படுத்துவது இல்லை? நான் அனேகமாக இவ்வகையான நகைச்சுவை நிகழ்ச்சிகளை மொத்தமாக முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

நான் நகைச்சுவை கலைஞராக எப்படி உருவெடுத்தேன்? என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா? இல்லை. அது தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது. நான் என் குரலை பிறர் கேட்க வேண்டும் என்பதற்காக, பிறர் என்ன பேச அனுமதிக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே இழிவுபடுத்திக் கொள்வது. இனிமேல், அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன். என்னையோ, என்னைப் போன்றவர்களையோ இழிவுபடுத்தும் விஷயங்களை நகைச்சுவை என்கிற பெயரில் நிச்சயம் மேடைகளில் நிகழ்த்த மாட்டேன்….

Image result for hannah  nanette

என்னை நான் லெஸ்பியன் என்று கூட அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டேன். இந்த அடையாளத்தை விட்டும் நான் வெளியேறக்கூடும். என்னை நான் ‘சோர்ந்து போனவர்’ என்று வேண்டுமானால் அடையாளப்படுத்திக் கொள்வேன். நான் சோர்ந்து போயுள்ளேன் . பாலினம் என்பது இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திரியும் உங்களைப் போன்றவர்களால் நான் அயர்ச்சி அடைகிறேன். நீங்கள் வேறுபட்டவர்கள். எல்லாரும் உங்களைப் போல இருக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இயங்குபவர்கள். சாந்தம் கொள்ளுங்கள் அன்பர்களே.

 

கொஞ்சம் முடியோடு பிறந்திருக்கும் பெண் குழந்தையை, ‘ஆம்பிள பிள்ளையா’ எனப் பிறர் கேட்கிறார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு உரிய அடையாளங்கள் என்று நீங்கள் கருதும் அடையாளங்களால் ஏன் நிறைக்கிறீர்கள்? யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது? ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அதைக்குறித்து அக்கறை கொள்வதே இல்லை. நம்முடைய கவனம் முழுக்க வேற்றுமைகளில் மட்டுமே குவிந்து இருக்கிறது. ‘Men are from Mars, Women are for his penis’

Image result for cute kids with pink bands

…..

 

என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு பலர் என்னை ஆண் என்று எண்ணிவிடுவார்கள். பிறகு உண்மை தெரிந்ததும் அதற்காக வெகுவாக வருந்துவார்கள். விமானத்தில் ஏறிய போது. ‘வாங்க சார்’ என்று அன்போடு விமானப் பணி ஆண் அழைத்தார். பின்னர்ப் பெண் என உணர்ந்து கொண்டு அதிர்ந்து போய் மன்னிப்பு கேட்டார். என்னை ஆண் என்று பிறர் கருதும் கணங்களில் எந்த முயற்சியும் இல்லாமலே பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அதிகாரம் செலுத்த முடிகிறது….ஆனால், நான் நேர் பாலின உறவு கொள்ளும் வெள்ளையின ஆண் என அறியப்பட விரும்பவில்லை. அப்படிப்பட்ட அடையாளம் எனக்குப் பல மடங்கு கூடுதல் சம்பளத்தைத் தரும் என்றாலும் எனக்கு அந்த அடையாளம் வேண்டாம்….

 

இதுவரை மானுடத்தின் முகமாக இருந்த வெள்ளையின ஆண்கள் காட்டிக்கொண்டார்கள்.  திடீரென்று ‘நீங்களும் மனிதர்களில் ஒரு வகை’ என்பதை நாம் முதன்முறையாக உரக்க சொல்லும் போது அதனை எதிர்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களை ‘வெள்ளையின ஆண்’ என்று விளித்தால் ‘reverse-racism’ எனக் கதறுகிறார்கள். என்னை, என்னுடைய உருவத்தை, பாலின தேர்வை பல்வேறு வகைகளில் கேலி செய்யும் விதிகளை இயற்றி தந்தவர்கள் நீங்கள். உங்களுடைய படைப்பான விதிகளை உங்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறோம். அவ்வளவே

 

“ஆண்களை இவ்வளவு வெறுக்கும் நீ, ஏன் எங்களைப் போல ஆடை அணிகிறாய், காட்சி அளிக்கிறாய்” எனக் கேட்கிறார்கள். “மச்சி! உங்களுக்கு நல்ல முன்மாதிரி வேண்டும் இல்லையா. அதற்காகத் தான்”. என்பதே என்னுடைய பதில். உங்களுடைய அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ள முனையாமல், திறந்த மனதோடு அணுகுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். …

இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் உதிர்க்கப்படும் நகைச்சுவை துணுக்குகளின் வடிவம் எளிமையானது. அவை முதலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும். பின்னர் ஆச்சரியப்படுத்தும் வகையில் அது முடிவுக்குக் கொண்டு வரப்படும். ஆனால், நான் முழுக்கப் பதற்றங்களால் நிரம்பியிருக்கிறேன். நான் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், எனக்கு வேறென்ன செய்வது என்றும் தெரியவில்லை.

 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலை வரலாற்றில் நான் பட்டம் பெற்றேன். கலை வரலாற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்வது என்னுடைய உலகம் இல்லை. அது எனக்கான உலகம் இல்லை. கலை என்பது மக்களை மேம்படுத்துவது இல்லையா? என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சி உங்களை மேம்படுத்தும் என்று நான் உறுதி தரமாட்டேன். நாம் உருவாக்கிய கசடுகுகளில் நம்மை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மன உளைச்சலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தேன். நிகழ்வு முடிந்ததும் என்னிடம் வந்த ஒரு நபர், “கலைஞர்கள் தான் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முயலக்கூடாது. வான்கா மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் மெச்சும் ‘சூரிய காந்திகளை’ப் படைத்திருக்க முடியாது ” என்று அறிவுரை தந்தார். நான் கற்ற கலை வரலாறு இப்படிக் கைகொடுக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது.

Image result for van gogh sunflowers

 

“வான்கா மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார் என்பது உண்மையே. ஆனால், அவர் மருந்துகள் உட்கொள்ளாமல் இல்லை. அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டார். பல்வேறு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை தந்தார்கள். அவருக்குச் சிகிச்சை தந்த மனநல மருத்துவர்களின் ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். அதிலும் ஒரு ஓவியத்தில் மனநல மருத்துவர் foxglove மலர்களோடு நிற்கிறார். அந்த மலர்கள் வலிப்புக்கு வைத்தியம் பார்க்க உதவுபவை. கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால், சுற்றியிருப்பவை அடர்மஞ்சளாக அம்மருந்து தெரிய வைக்கும். ஆகவே, மருந்து உண்டதால் தான் வான்கா சூரியகாந்தியை படைக்க முடிந்தது. நீங்கள் இன்புற ஏன் கலைஞர்கள் துன்பத்தில் உழல வேண்டும். அவர்களின் படைப்புத்திறனுக்குத் துயரம் என்கிற சுமையை ஏன் விதிக்கிறீர்கள். உங்களுக்குச் சூரியகாந்தி வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கி வளர்த்து ரசித்து விட்டுப் போங்கள். கலைஞர்களைக் காவு கேட்காதீர்கள்.” என்றேன்.

 

அவர், ‘ரொம்பக் கொதிக்காதீர்கள்’ என்றார். நான் மென்மையாகச் சொன்னேன். ‘நான் கொதிக்கவில்லை. உணர்வதை வெளிப்படுத்துகிறேன்”. ‘கொதிக்காதே/உணர்ச்சிவசப்படாதே’ என்று என்னிடம் சொல்பவர்கள் எல்லாம் அதைக் காட்டுக்கத்தலில் தான் சொல்கிறார்கள். குசு, மூக்கை பார்த்து ‘உன்கிட்டே ஒரே நாத்தம், சுத்தமா இரு’ என்றதை போலத்தான் இந்த அறிவுரை இருக்கிறது. என்னுடைய உணர்ச்சிகளும், கொதிப்பும் தான் என்னுடைய சிக்கலான வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வலிமையோடு பயணிக்க உதவியிருக்கின்றன. உணர்வற்று வாழ்வது இயலாத ஒன்று.

 

என் அம்மாவோடு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையின் துயர்கள் குறித்து நகைச்சுவையாக நானும், அவரும் அவ்வப்போது பேசிக்கொள்வோம். அன்றைய தினம் உரையாடல் அப்படிப் பயணிக்கவில்லை. அவர், என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உங்கள் ஐந்து பேரையும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்த்தேன். ஆனால், உன்னை நேர் பாலின ஈர்ப்பு கொண்டவள் என்று கருதிக்கொண்டு வளர்த்து விட்டேன். வேறு எப்படி வளர்ப்பது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடு மகளே. என்னை மன்னித்துவிடு. நீ தன்பாலின ஈர்ப்புள்ளவள் என்று தெரிந்த போது, உன் வாழ்க்கை கடினமானதாக இருக்கும் என்று உனக்கு முன்னரே எனக்குத் தெரியும். உன்னை நேர் பாலின ஈர்ப்புள்ளவளாக மாற்ற முயன்றேன். நான் உன் வாழ்க்கையைத் துயரம் மிக்கதாக ஆக்கிவிட்டேன். இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ளாது எனத் தெரிந்ததால், உன்னை மாற்ற முயன்றேன் மகளே. மன்னித்துவிடு” என்று அரற்றினார்.

 

நான் திகைத்து போனேன். என்னுடைய கதையின் நாயகியாக எப்படி என் அம்மா மாறினார்? வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா? கதைகளுக்கு ஆரம்பம், மையம், முடிவு என்று மூன்று பகுதிகள். நான் முன்னரே சொன்னதைப் போல நகைச்சுவைக்கோ இரு பகுதிகள் மட்டுமே. என்னுடைய நிஜ வாழ்க்கையின் வலிகளை இந்த நகைச்சுவை சரியாகக் கடத்தவில்லை. நகைச்சுவைக்கு என்று நான் உருவாக்கும் பன்ச்லைன்கள் உண்மையின் வலியை சிதைக்கின்றது.

 

எனக்குள் இன்னமும் என் அடையாளம் குறித்த அவமானம் இருக்கிறது. என் சிந்தனையில் அந்த அவமானம் அறவே இல்லை. ஆனால், என் உணர்சிகளில் அவமானம் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. என் பாட்டியை நான் நெடுங்காலமாக நேரில் பார்க்கவில்லை. என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.

 

நான் வளர்ந்தது டாஸ்மானியாவின் வடமேற்கு பகுதி. அதற்குப் பைபிள் பகுதி என்று பெயருண்டு. 1989-1997 காலத்தில் தன்பாலின சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்று பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. அது என்னுடைய வளரிளம் பருவமும் கூட. என் பகுதி மக்களில் 70% தன் பாலின சேர்க்கையில் ஈடுபடுவர்களைக் கிரிமினல் சட்டங்களில் சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. என்னை வளர்த்த, அன்பு செய்த, நான் நம்பிய மக்கள் தன்பாலின சேர்க்கையைப் பாவமாகக் கருதியது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களைக் கொடூரமானவர்கள், ஈவிரக்கம் அற்றவர்கள், குழந்தைகளோடு உடலுறவு கொள்ளும் காமுகர்கள் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள்.

Image result for tasmania  anti gay

நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பது வெளிப்பட்ட போது காலம் கடந்து விட்டிருந்தது. நான் என்னுடைய அடையாளத்தை, தன் பாலின ஈர்ப்பை வெறுப்பவளாக மாறியிருந்தேன். ஒரு ஸ்விட்சை அமுக்கிய உடனே மாறிவிடக் கூடிய உணர்வு அல்ல அது. தன்பாலின ஈர்ப்பை வெறுப்பது உள்ளுக்குள் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. இதனால், எங்கள் அடையாளத்தை நாங்களே வெறுக்க ஆரம்பிக்கிறோம். முழுக்க முழுக்க எங்களை நாங்களே வெறுத்து வேகிறோம். அவமானத்தால் கூனிக்குறுகி பத்தாண்டுகள் இருட்டில் இருந்தேன். அந்த இருட்டு என்னைப் பிறர் பார்ப்பதில் இருந்து மட்டும் தான் காக்க முடியும். நான் அவமானத்தில் உழல்வதை அதனால் தடுக்க முடியாது இல்லையா?

ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே மூழ்கடித்தால், அந்தக் குழந்தையால் தான் சுயமரியாதை உள்ளவள்/ன் என்கிற எண்ணத்தை உள்வாங்கிக் கொள்ளவே இயலாது. தன்னைத் தானே வெறுப்பது என்பது வெளியில் இருந்து ஊன்றப்படும் விதை. அது ஒரு குழந்தையின் மனதில் விதைக்கப்பட்டால், அது முட்செடியாக மாறுகிறது. வேகமாக வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது. புவி ஈர்ப்பு விசையைப் போல அது நீக்கமற நிறைந்து விடுகிறது. இயல்பான ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. என்னுடைய இருட்டை விட்டு வெளியே வந்த போது என்னிடம் நகைச்சுவை இருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதிலும், என்னை நானே வெறுப்பதிலுமே என் கவனம் இருந்தது. அடுத்தப் பத்தாண்டுகளில் எனக்கான வெளியை கண்டடைந்தேன். ஆனால், என் வாழ்க்கையின் துயர்களை நகைச்சுவைக்கு நடுவே மறைத்துக் கொண்டேன். என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்லியே ஆகவேண்டும்,

 

யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பாடத்தை நான் அதிகவிலை கொடுத்துக் கற்றுக்கொண்டேன். அந்தப் பாடம் தன்பாலின ஈர்ப்பை பற்றியது அல்ல. பொதுவெளியில் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் எப்படி விவாதிக்கிறோம்? அது சிறுபிள்ளைத்தனமானதாக, வெறுப்பு வழிவதாக, அழிவுக்கு அறைகூவல் விடுப்பதாக இருக்கிறது. நாம் யாருடன் முரண்படுகிறோமோ அவர்களை விட நியாய உணர்வு மிக்கவர்கள் என்று காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம். அவர்களின் மனித நேயத்தை நம்முடைய கருத்துக்களின் மூலம் தட்டி எழுப்ப நாம் முனைவதே இல்லை. அறியாமை நம்மிடையே எப்போதும் நடமாடி கொண்டே இருக்கும். யாருக்கும் அனைத்தும் தெரியாது.

……………………………….

நான் உலகத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய கலை வரலாறு படிப்புக் கற்றுக்கொடுத்தது. இந்த உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்று நான் மெத்தனப்படவில்லை. கலை வரலாற்றைப் பொறுத்தவரை பெண்கள் இரு வகை மட்டுமே – கற்புக்கரசி, வேசி. ஆணாதிக்கம் சர்வாதிகாரம் இல்லை. அது ஒரு பெண்ணுக்கு இரண்டு தேர்வுகளைத் தருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நாம் உய்ய வேண்டும். மேற்கத்திய ஓவியங்களில் வந்து செல்லும் பெண்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள், சதைப்பிண்டங்கள்…. நான் இந்த உன்னதக்கலையை அதன் உண்மையான பெயர் சொல்லி அலைக்கப்போகின்றேன். அது ‘bullshit’! ஆண்கள் தங்களுடைய ஆசனவாயின் மலர்களை ஏந்தும் ஜாடிகளாகப் பெண்களைக் கருதி வரைந்தவையே இந்த மேற்கத்திய ஓவியங்கள்…

 

நான் பாப்லோ பிகாசோவை வெறுக்கிறேன். அவர் நவீன ஓவியக்கலையின் க்யூபிசத்தைத் தந்தவர் என்பதால் அவரை நீங்கள் வெறுக்கக் கூடாது என்பார்கள். பிகாசோ மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த மனநோயின் பெயர் பெண் வெறுப்பு. பெண் வெறுப்பு மனநோயா என்று நீங்கள் அதிரக்கூடும். ஆம், தன்பாலின ஈர்ப்பற்ற ஆண்களுக்கு இருக்கும் பெண் வெறுப்பு மன நோயே ஆகும். பிகாசோ மனநோயாளி இல்லை என்று கற்றறிந்த அறிஞர்கள் சொல்வார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பிகாசோவின் ஒரு மேற்கோள் இது, ‘ஒவ்வொரு முறை ஒரு பெண்ணை விட்டு விலகும் போதும் அவளை எரிக்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணை, அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த காலத்தை மொத்தமாக அழித்துவிட வேண்டும்.’ அவர் பதினேழு வயதே ஆன மரியா தெரசா வால்டர் என்கிற பெண்ணோடு உடலுறவு கொண்டார். அந்தப் பெண் சட்டப்படி வயது வந்தவர் கிடையாது. பிகாசோவிற்கு அப்போது நாற்பது வயது கடந்து விட்டிருந்தது. அவருக்குத் திருமணமாகி இருந்தது. அதனை நியாயப்படுத்த வேறு செய்தார். ‘ I was on my prime. She was on her prime’ என்று அதை விவரித்தார். இதனைப் படித்த போது எனக்கு வயது பதினேழு. நான் அப்படியே உறைந்து போனேன்.

Image result for pablo picasso marie therese walter

பிகாசோ உருவாக்கிய க்யூபிசம் மகத்தான அற்புதம். அவர் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இரு பரிமாண தலத்தில் முப்பரிமாண வடிவங்களை வரைய ஓவியர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். பிகாசோ இப்படி ஒரே ஒரு பார்வையோடு ஓவியங்களை வரைய மாட்டேன் என்று மறுத்தார். ‘உங்களுடைய பார்வைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் பாயட்டும். மேலிருந்து, கீழிருந்து, உள்ளிருந்து, வெளியில் இருந்து என்று அனைத்து பார்வைகளைக் கொண்டதாகவும் இருக்கட்டும்’ என்று அவர் போட்ட வித்தே ஓவியத்துறையைப் புரட்டி போட்டது. அற்புதம். எத்தகைய கலைஞன். இப்போது சொல்லுங்கள். அவர் படைத்த எத்தனை ஓவியங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்திருந்தன. எதுவுமில்லை. அவை அவரின் பிறப்புறுப்பின் எண்ணங்களைக் கலைடாஸ்கோப் கொண்டு காட்டிய ஓவியங்கள். அவ்வளவே. கலையையும், கலைஞனையும் பிரித்துப் பாருங்கள் என்கிறார்கள். நான் பிரித்துப் பார்க்க மறுக்கிறேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் இத்தனை கலை வரலாறு உங்களை மூச்சு முட்ட வைக்கும். மன்னிக்கவும். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாதிரியார்கள் காமுகர்களாக இருப்பது, ட்ரம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது முதலியவை நகைச்சுவைக்குப் பயன்படும். முன்னொரு காலத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மோனிகா லெவின்ஸ்கி பன்ச் லைனாகப் பயன்படுத்தப்பட்டார். அவரைக் கேலி செய்ததற்குப் பதிலாக, பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கிளிண்டனை நகைச்சுவை கலைஞர்கள் மேடைகளில் கிழித்துத் தோரணம் கட்டியிருந்தால், இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி விட்டு அதைக்குறித்து அகங்காரத்தோடு அறிவித்துக் கொள்ளும் ஒரு ஆண் அமெரிக்கக் குடியரசு தலைவர் மாளிகையில் உட்கார்ந்திருக்க முடியாது.

 

நம்முடைய நகைச்சுவையின் இலக்காக இருக்க வேண்டும் தெரியுமா. ஒருவரின் நற்பெயர் மீது நமக்கு இருக்கும் அளவுகடந்த வெறி. அனைத்தையும் விட ஒருவரின் புகழ் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. மானுடத்தை விடவும் நற்பெயர் நமக்கு முக்கியமானதாகி விடுகிறது. இவ்வாறு வழிபாட்டுத்தன்மையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது ஒழிய வேண்டும். பிரபலங்களான பிகாசோ, கிளின்டன், ட்ரம்ப், வேய்ன்ஸ்டீன், ரோமன் போலன்ஸ்கி என்று பெண்களை, குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய ஆண்கள் விதிவிலக்குகள் அல்ல. அவர்களே பெரும்பான்மை. அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல, அவர்களே சமூகத்தின் உண்மை முகத்தைச் சொல்லும் கதைகள்.

Image result for donald trump clinton polanski

இந்தக் கதைகளின் நீதி என்ன தெரியுமா? ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே? இந்த ஆண்கள் நம்முடைய வாழ்க்கை கதைகளைப் படிப்பவர்கள். அவர்கள் மனித நேயமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அது குறித்துத் துளி கூடக் கவலைப்படவில்லை. இந்த ஆண்கள் தங்களுடைய விலை மதிப்பில்லாத புகழோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை, இவர்கள் எத்தனை கொடூரமானவர்களாக இருந்தாலும் நாம் கவலை கொள்வதில்லை. புகழ் மீதான உங்களுடைய வெறி கெட்டு ஒழியட்டும். என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். ம்ம்ம்ம். (பெருமூச்சு விட்டு சிரிக்கிறார்) எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது இல்லையா. நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறையில் இருக்கும் சிலர், ‘இந்தப் பெண் தன்னுடைய பதற்றத்தின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விட்டாள்’ என்று நினைக்கிறார்கள். அது சரி தான். கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.

 

ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் கோபப்படக்கூடாது இல்லையா? தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி?’ என்று என்னை அடித்துத் துவைத்தான். நான் ரத்தம் சொட்ட சொட்ட நின்றேன். நான் அவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவமனைக்கு ஆவது போயிருக்க வேண்டும். நான் இவை எதையுமே செய்யவில்லை. ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே நிறைத்தால் அது தான் வாழ்வதற்கான எந்தத் தகுதியும் அற்ற ஒருத்தியாகத் தானே உணரும். மற்றொரு புறம், இன்னொரு மனிதன் என்னை வெறுப்பதற்கும் அனுமதி தருகிறீர்கள்.

 

அந்தச் சம்பவம் நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பதால் நிகழவில்லை. அது என்னுடைய பெண் அடையாளம் சார்ந்தது. நீங்கள் பெண் என்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களின் படி, நான் வழிதவறிப்போன பெண். நான் தண்டிக்கப்பட வேண்டியவள். இந்த வாழ்க்கைப்போராட்டம் உங்களால் ஏற்பட்ட பதற்றம். இதனை இனிமேலும் என்னால் சுமந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் போன்ற ‘இயல்பானவர்களாக’ இல்லாத எங்களுக்குள் இந்தப் பதற்றம் சுட்டெரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்பது தானே உங்களுடைய பார்வையாக இருக்கிறது.

 

இந்த அறையில் இருக்கும் ஆண்களே. உங்களுடைய சட்டையை மடித்துக் கொண்டு இந்த அநீதிக்கு எதிராகக் கிளம்புங்கள். சே, என்ன அவமானம் இது! ஒரு லெஸ்பியன் உங்களுக்கு எப்படி ஆடை அணிவது என்று அறிவுரை சொல்கிறாள். இந்த நிகழ்ச்சியின் கடைசி நகைச்சுவையாக இதுவே இருக்கட்டும்.

 

என் வாழ்க்கை முழுக்க நான் ஆண்களை வெறுப்பவள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் ஆண்களைச் சத்தியமாக வெறுக்கவில்லை. நான் பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று என்றைக்கும் எண்ணியதில்லை. அதிகாரம் தலைக்கேறினால் ஆண்களைப் போலவே பெண்களும் நடந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஆண்களான நீங்கள் ஒட்டுமொத்த மானுட நிலையை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்று இயங்குகிறீர்கள். அதிகாரம் ஆண்களுக்கு உரியது, மனிதகுல மேன்மை எங்களுடைய பொறுப்பு என்று நீங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுகிறீர்கள். அப்படித்தான் கதைகளைக் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். உங்களை நோக்கி எழுப்பப்படும் ஒரு விமர்சனத்தை, ஒரு எளிய நகைச்சுவையை உங்களால் நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியவில்லையே. உங்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றத்தை வன்முறை இல்லாமல் சீர்செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் சிரமேற்றுக்கொண்ட பணிக்குத் தகுதியானவர்கள் தானா நீங்கள் என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

 

நான் ஆண்களை வெறுக்கவில்லை. நான் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறேன். ஒரு அறையில் ஆண்களுக்கு நடுவே ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்க நேர்ந்தால் எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இப்படி நடந்து கொள்வது வேடிக்கையானது என நீங்கள் எண்ணக்கூடும். அப்படி என்றால், நீங்கள் பெண்களோடு உங்கள் வாழ்க்கை முழுக்க உரையாடி இருக்கவில்லை என்று பொருள். நான் உங்களை வெறுக்கவில்லை. என்னைப்போன்ற பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் வாழ்ந்திருந்தால் என்னாகி இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்.

Related image

 

நான் சிறுமியாக இருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானேன். என்னுடைய பதினேழு வயதில் ஒரு ஆண் என்னை அடித்துத் துவைத்தான். என்னுடைய இருபதுகளில் இரு ஆண்கள் என்னை வன்புணர்வு செய்தார்கள். எனக்கு நடந்தவை சரியானவையே என்று ஏன் சமூகம் கருதியது. ஏன் என்னை மட்டும் குறிவைத்து தாக்கினார்கள். நான் உங்களில் இருந்து வேறுபட்டவள் என்பதால் தானே? இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு என்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே? உங்களைப் போல இல்லாமல் வேறுபட்டவர்களாக இருப்பது அத்தனை பெரிய குற்றமா?

 

உங்களிடம் ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என்னை நீங்கள் பாதிக்கப்பட்டவளாகப் பார்க்க ஆரம்பித்து இருக்கலாம். நான் ஒன்றும் பாதிக்கப்பட்டவள் இல்லை. என்னுடைய கதையை உங்களிடம் சொல்கிறேன். ஏனெனில், என் கதை மதிப்புமிக்கது. நீங்கள் அனைவரும் என் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்ன அறிந்து கொண்டேன் என்பதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கவே உங்கள் முன் நிற்கிறேன். எங்களை ஆதரவற்றவர்களாக நிற்க வைத்தாலும் எங்களுடைய மனித நேயம் இறந்து விடாது. இத்தனை வலிகளுக்கு நடுவேயும் நம்பிக்கையோடு இருப்பதே மனிதநேயம் தான். இன்னொரு சக மனிதரை ஆதரவற்றவர்களாக நிற்க வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கருதிக்கொண்டு இயங்குபவர்களே மனிதநேயம் அற்றவர்கள். அவர்களே பலவீனமானவர்கள். அத்தனை அடிகளுக்குப் பிறகும், உடைந்து போகாமல் இருப்பதே உன்னதமான வலிமை.

 

ஒரு பெண்ணை அழிக்கிறீர்கள் என்றால் அவளுடைய கடந்த காலத்தையும் அழிக்கிறீர்கள். என்னுடைய கதையை நான் சாகவிட மாட்டேன். என்னைப்போலப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன். நான் குறை சொல்வதற்காக என் கதையைச் சொல்லவில்லை. பணம், அதிகாரம், புகழ் நாடி என் கதையை உங்கள் முன் கொட்டவில்லை. என்னை வாட்டிக்கொண்டிருக்கும் தனிமையின் வெம்மை சற்றே தணியவே என் கதையைக் கண்ணீரோடு சொல்கிறேன். உங்களோடு என்னைப் பிணைத்து கொள்ளவே என் கதையைச் சொல்கிறேன். என் கதையை நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். முரண்சுவையாக, பிகாசோ சொன்னதைப் போல, ‘நாம் வேறுபட்ட சமூகத்தை வரைய துணிவோம்.’ எல்லா வகையான பார்வைகளும் கொண்ட உலகத்தைப் படைக்க முனைவோம். வேறுபாடுகள் கொண்ட சமூகமே நம்முடைய பலம். வேற்றுமைகளே நமக்கான ஆசிரியர். வேறுபாடுகளைக் கண்டு அஞ்சுவீர்கள் என்றால் நம்மால் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது.

Image result for tasmania  anti gay

 

பிகாசோ எல்லாருடைய பார்வைகளையும் தானே படைத்துவிட முடியும் என்று நம்பியது தான் அவரிடம் இருந்த கோளாறு. அவரின் பார்வையை மட்டுமே கணக்கில் கொண்டதால் தான் நம்மால் ஒரு பதினேழு வயதின் பெண்ணின் பார்வையைக் கவனத்தில் கொள்ளவே இல்லை. ஒரு பதினேழு வயது பெண்ணிடமா உன்னுடைய பலத்தைப் பரிசோதிப்பாய். என்னைப்போன்ற வலிமை மிக்கப் பெண்ணிடம் உன் வேலையைக் காட்டிப்பார் காமுகனே. வரமாட்டாய். உடைந்து, உருக்குலைந்து போய், தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட பெண்ணை விட உலகில் வலிமை மிக்கவர் யார் உள்ளார்?

[பலத்த கரவொலி]

 

எதோ ஆண்களைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி நான் கேள்விகளால் துளைப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். முழுக்க முழுக்க உண்மை. நான் ஒரு வாழ்நாள் முழுக்க அனுபவித்ததை ஒரு மணிநேரம் உங்களுக்குச் சுவைக்கத் தந்தேன். அவ்வளவே. எனக்கு ஏற்பட்ட ரணங்கள் உண்மையானவை, அவை என்னை முடக்கி போட்டன. நான் மீண்டும் தழைக்க முடியாது. அதனால் தான் நான் நகைச்சுவை கலைஞராக இனிமேலும் தொடரக்கூடாது. என்னுடைய பதற்றம் மிகுந்த கதையை நகைச்சுவையால் சொல்லிவிட முடியாது. அதனைக் கோபத்தோடு தான் உரக்க சொல்ல முடியும். நான் கோபத்தோடு இருக்கிறேன். எனக்குக் கோபப்பட எல்லா உரிமையும், நியாயமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய கோபத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உரிமையில்லை. நான் அதனை நிச்சயம் செய்யமாட்டேன். கோபமும் நகைச்சுவையைப் போல அனைவரையும் இணைக்கக் கூடியது. முகந்தெரியாத மனிதர்கள் அனைவரும் ஒரே கோபத்தில் ஒன்று சேர முடியும். அது ஆனால் நல்லதில்லை.

 

நகைச்சுவையைப் போலக் கோபம் பதற்றத்தை தணிக்காது. கோபமே ஒரு நச்சான பதற்றம். அது வேகமாகப் பரவும் வியாதி. அதற்குக் கண்மூடித்தனமான வெறுப்பைப் பரப்புவதைத் தாண்டி எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய கருத்துரிமை பொறுப்பு மிக்க ஒன்று. நான் பாதிக்கப்பட்டவள் என்பதற்காக என் கோபத்தைப் பரப்புவது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது. வெறுப்பு என்றைக்கும் மேம்பாட்டிற்குப் பயன்படாது.

வாய் விட்டு சிரித்தால் நம்முடைய நோய்கள் விலகாது. கதைகள் நம்மைக் குணப்படுத்தும். நகைச்சுவை கசப்பான கதைகளைத் தேன் தடவி தருகிற ஒன்று. நீங்கள் நகைச்சுவையாலோ, வெறுப்பாலோ ஒன்று திரள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என் கதைக்குச் செவிமடுங்கள். என் கதையை ஒவ்வொரு சுய சிந்தனையுள்ள மனிதரும் தனிப்பட்ட முறையில் உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். என் கதை உங்களுடைய கதையைப் போன்றதில்லை. ஆனால், என் கதை உங்களுடைய கதையும் கூட. என் கதையை இனிமேலும் என்னால் சுமக்க முடியாது. என் கதையைக் கோபத்தால் நிறைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய கதையை அக்கறையோடு பார்த்துக் கொள்ள உதவுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 

வான்காவின் மகத்தான படைப்பான சூரிய காந்திகள் அவருடைய மனநோயால் நமக்குக் கிடைக்கவில்லை. அத்தனை துயரத்திலும், வலியிலும் அவனை நேசிக்க ஒரு உயிர் இருந்தது. அவன் தம்பியின் அன்பு இந்த நம்பிக்கையற்ற உலகத்தில் பற்றிக்கொள்ள, தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள வான்காவுக்கு உதவியது. நாம் படைக்க விரும்பும் கதையின் மையமும் அதுதான். ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ளவர்களாக உணர வேண்டும். பிணைய வேண்டும். நன்றி!

Image result for hannah gadsby netflix