‘லியோ’ – மரணம் நெருங்குகையில் மகிழ்வாய் இருத்தல்


இது தமிழில் வெளிவந்த ‘லியோ’ திரைப்படம் குறித்த அறிமுகம் அல்ல. ‘Netflix’-ல் காணக்கிடைக்கும் ‘Leo’ குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால், சொற்களின் அதிசயத்தை திரையில் வார்த்திருக்கும் அழகிய முயற்சி இப்படம்.

ஐந்தாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான பள்ளியில் விளையாட்டுப் பிராணிகளாக, ‘லியோ’ எனும் 74 வயதாகும் பல்லியும், ‘Squirtle’ எனும் ஆமையும் அறிமுகம் ஆகிறார்கள். இக்குழந்தைகளின் சிக்கல்கள், கவலைகள் புதியவை. கூடவே, கடுமை தொனிக்கும் ஆசிரியை வந்து சேர நிலைமை மோசமாகிறது. வார இறுதி நாளன்று ஒருவர் ஒரு பிராணியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற விதியின்படி ‘லியோ’ குழந்தைகளின் வீட்டிற்குச் செல்கிறது.

இன்னும் வாழ்வதற்கு ஓராண்டே இருக்கும் நிலையில் தப்பித்து போய் வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பது அதன் கனவு. வாராவாரம் தப்பிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. ஏன்? ஒவ்வொரு வாரமும் பேசும் பல்லியாக குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறது லியோ.

பெற்றோரின் மணவிலக்கு, கீச்சென்ற குரல், எப்போதும் கண்காணிக்கும் கண்கள், பெற்றோரின் கவனிப்பற்ற குழந்தைமை, வதைமுகமான வகுப்பறை என அத்தனை வெளிகளின் வழியாக உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் ஓடுகிறது உலகறிந்த லியோ.

போகிற போக்கில் அதன் இலக்கு மாறுகிறது. கூடவே, சில பொய்களும் சேர்ந்து கொள்கிறது. கடுமைமிக்க வகுப்பறையில் கலகலப்பின் சுவையை கண்டுணர வைக்கும் மாயமாய் லியோ மாறுகிறது. தீர்வுகளை விட காது கொடுத்து கேட்பதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன், மழலைகளின் ஒவ்வொரு கணத்தையும் கட்டுப்படுத்தும் Drone-கள் இவற்றின் நடுவே மனங்களித்து வாழ்தல் குறித்த படம் இது. உருவம், பிறர் நம் மீது கொண்டிருக்கும் பார்வை குறித்த கவலைகள், உற்றவர் இல்லாத ஏக்கம் எனப்பலவற்றின் தொகுப்பாக காட்சிகள் விரிகின்றன.

திடீரென்று இந்த மகிழ்ச்சியால் ஆன உலகம் உடைகிறது. லியோ வில்லன் ஆகிறது. வாழ்வு முடியும் கணத்தினில் புறக்கணிப்போடு மனம் வெதும்பி வெளியேற்றப்படுகிறது. ஏன்? திரையில் பாருங்கள். இக்கதை சிறுவர்களைப்பற்றியதாக பாவனை செய்தபடியே சொல்லப்படும் பெரியவர்களுக்கான கதை.

டி.என்.சேஷன் – வாழ்வும், பணியும்


டி.என்.சேஷன் 10-11-2019 ல் காலமானார். கேரளாவின் திருநெல்லை நகரில் பிறந்த சேஷன் பொறியியல் படிக்கிற அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்தும் அண்ணனின் வழியில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்  என்று  உறுதி பூண்டார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார்.  காவல்துறை தேர்வில் வெற்றி பெற்ற அவர் அப்பணிக்கு செல்லாமல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் மதுரை ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது போராட்டங்களை மிக கடுமையாக அவர் அடக்கினார் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும் முதல்வர் பக்தவச்சலம் அதற்கு செவி சாய்க்கவில்லை.  பின்னாளில் சேஷனின் நினைவலைகள் கோவிந்தன் குட்டி எழுத்தில் நூலான போது, ‘மதுரை ஆட்சியராக இருந்த காலத்தில்  கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அண்ணா சி.ஐ.ஏ கைக்கூலி என்று எனக்கு தெரிய வந்தது. அவர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை அவர் முன்னின்று நடத்தினார்’ என்கிற தொனியில் பேசியிருந்தார். இத்தகைய கூற்றுக்கு சேஷன் எந்த ஆதாரத்தையும் தரவில்லை. நூல் வெளிவருவதற்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியாக மேற்சொன்ன கருத்து இதழ்களில் வெளிவந்தது. திமுக, அஇஅதிமுக ஆகியவை அவர் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தன.

திரிபுரா தலைமை செயலாளர், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவரும், இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் டெல்லியில் இருந்து அதனை கண்காணித்தவர்களில் ஒருவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ப.ஸ்ரீ.இராகவன்  அண்ணா குறித்த சேஷனின் கூற்று ‘அபாண்டமான குற்றச்சாட்டு, ஒன்று, அறிந்து சொல்லிய பொய்யாக இருக்க வேண்டும். அல்லது வீண் வம்பு பேசுகிறவர்கள் இவர் காதில் போட்ட வதந்தியாக இருக்க வேண்டும்.  அல்லது வேறெதாவது மறைமுக உள்நோக்கத்தில் பிறந்த குசும்பாக இருக்க வேண்டும்’ என்று ‘நேரு முதல் நேற்று வரை’ நூலில் பதிவு செய்கிறார். 

புகைப்பட நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சேஷனின் நூலிற்கு  நீதிமன்றங்கள் தடை விதித்தன. ப.ஸ்ரீ.ராகவன் சேஷனின் அண்ணா பற்றிய கருத்துக்கு வெளியிட்ட மறுப்பு அறிக்கை குறித்து சேஷன் அமைதி காக்கவே செய்தார். நூல் வெளிவந்த போது அண்ணா குறித்த பகுதிகளை அவர் நீக்கியிருந்தார்.

சேஷன் மத்திய அரசில் பல்வேறு துறைகளில் செயலலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் போபார்ஸ் பீரங்கி வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது பாதுகாப்புத் துறை செயலாளராக சேஷன் திகழ்ந்தார். போபர்ஸ் ஆயுத பேரத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று அடித்து பேசினார். இது அவரை கேபினட் செயலாளராக ஆக்கி அழகு பார்க்கும் அளவுக்கு ராஜீவ் காந்தியின் நம்பிக்கையை பெற்றுத்தந்தது. வி.பி.சிங் பிரதமர் ஆனதும் சேஷனை திட்ட கமிஷன் உறுப்பினராக கட்டம் கட்டினார்.

அடுத்து சந்திரசேகர் பிரதமர் ஆன போது சுப்பிரமணியன் சுவாமி சட்ட அமைச்சராக இருந்தார். ஹார்வர்டில் சேஷன் படித்த போது அங்கு பணியாற்றிய சுவாமி சேஷனை தலைமை தேர்தல் ஆணையராக ஆக்க பரிந்துரைத்தார்.  அடுத்த ஆறு ஆண்டுகள் தலைமை தேர்தல் ஆணையராக சேஷன் நிகழ்த்தியது இந்திய ஜனநாயகத்தின் போக்கையே மாற்றியது. தலைமை தேர்தல் ஆணையர் ஒருவர் குறித்ததை போல தேர்தல் ஆணையத்தின் வரலாற்றை சேஷனுக்கு முன், சேஷனுக்கு பின் என்று பகுக்கலாம் என்கிற அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324 தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல்களை முறையாகவும், நேர்மையாகவும் நடத்த பரந்துபட்ட அதிகாரங்களை வழங்கியிருந்தது. சேஷன் அதற்கு முன்பு தேர்தலை எப்போதும் நடத்திய முன் அனுபவம் கொண்டவரில்லை. ‘சற்றும் தாமதமோ, குறைபாடோ இல்லாமல் இயங்க வேண்டும்’ என்று மட்டும் முடிவு செய்து கொண்டதாக பின்னாளில் தெரிவித்தார். முதல் வேலையாக தேர்தல் காலங்களில் நடக்கும் குற்றங்களை பட்டியலிட்டார். அவற்றின் எண்ணிக்கையே நூறுக்கு மேலே நீண்டது. அடுத்தது மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்த முனைந்தார்.

மாதிரி நடத்தை விதிகள் தேர்தல் காலத்தில் அமலுக்கு வருபவை. அவை சட்டங்கள் இல்லை என்றாலும் அவற்றை பொதுவாக பின்பற்ற வேண்டும் என்பது எழுதப்படாத உடன்படிக்கை. கேரளாவில் அறுபதுகளில் குடிமைச் சமூகத்தின் முயற்சியால் நடத்தை விதிகள் முதல்முறை உருப்பெற்றன. அவை அவசர நிலை அட்டூழியங்களுக்கு பிறகு புதிய, வலுவான வடிவத்தில் அனைத்து கட்சிகளால் வடிவைமைக்கப்பட்டன. எனினும், நடைமுறையில் அவை அரிதாகவே பின்பற்றப்பட்டன.

சேஷன் எங்கே சிக்கல் என்று பார்த்தார். தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மீது முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்திற்கே வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அதற்குண்டு என்று அவர் கேட்டார். சிலர் முரண்டுபிடித்தார்கள், சிலர் நீதிமன்ற படியேறினார்கள். சேஷன் உறுதியாக நின்றார்.  தேர்தலை நிறுத்தி வைக்கும், தள்ளிப்போடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு என்கிற சவுக்கை எடுத்துக் கொண்டார்.  சரத் பவார் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலத்தில் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் காலத்தில் எல்லைமீறும் அதிகாரிகளை வகையாக கவனித்து கொள்வதாக பொதுவெளியில் மிரட்டல் விடுத்தது இருந்தார். வாக்கு எண்ணிக்கையை நடத்த மாட்டேன் என்று சேஷன் தொடை தட்டியதும் பவார் இறங்கி வந்தார்.

தேர்தலில் ஆள் மாறாட்டங்கள், கள்ள வாக்குகள் மலிந்திருந்த காலம் அது. புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அட்டை வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கேட்டார் சேஷன். பதினெட்டு மாதங்கள் அரசாங்கம் சட்டை செய்யாமல் இருந்தது. சேஷன் ஒன்றே ஒன்றுதான் சொன்னார், ‘ஜனவரி 1,1995 முதல் புகைப்படத்தோடு கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்த தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தாது. அவ்வளவே!’. அலறியடித்து கொண்டு இயந்திரம் இயங்கியது.  உச்சநீதிமன்றம், வாக்குரிமை என்பது குடிமக்களின் உள்ளார்ந்த உரிமை, அவர்களுக்கு அடையாள அட்டைகள் இல்லை என்கிற காரணத்துக்காக தேர்தல்களை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று தீர்ப்பு எழுதியது. எனினும், சேஷன் ஓய்வு பெறுவதற்குள் இருபது லட்சம் அடையாள அட்டைகள் புழக்கத்திற்கு வந்திருந்தன.

அடுத்தது வாரி இறைக்கப்படும் பணம். தண்ணீர் போல தேர்தல் காலத்தில் பணம் செலவிடப்பட்டு கொண்டிருந்தது. எல்லா கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் வரவு, செலவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேஷன் உத்தரவு போட்டார். பூச்சாண்டி காட்டுகிறார் என்றே பலர் அசட்டையாக இருந்தார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்கிற முறையை அறிமுகப்படுத்தினார். தேர்தல் செலவுகள் 1991 நாடாளுமன்ற தேர்தலின் போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. கணக்குகளை ஒழுங்காக தாக்கல் செய்திருக்காத 1,488 வேட்பாளர்களை சேஷன் மூன்றாண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77 அவருக்கு கைகொடுத்து இருந்தது. வேட்பாளர்களின் செலவுக்கு கட்டுப்பாடுகளையும் வெற்றிகரமாக விதித்தார். 

அதோடு நிற்காமல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிற காலத்தை மாற்றியமைக்க முடிவு செய்தார். சேஷனின் வருகைக்கு முன்புவரை தேர்தல் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இது பொதுவாக தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பே நிகழும். அதற்கு பதிலாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் நாளில் இருந்தே விதிகள் நடைமுறைக்கு வரும் என்று தடாலடி காட்டினார். 

அடுத்தது சுவர்களை ஆக்கிரமித்து கொள்ளும் தேர்தல் சின்னங்கள், விளம்பரங்கள், காதை கிழிக்கும் ஒலிப்பெருக்கிகள் பக்கம் கவனம் திரும்பியது. காங்கிரஸ் கட்சி பெருமளவில் பிளவுண்டு சின்னங்கள் சார்ந்து பல்வேறு மோதல்கள் வெடித்த காலத்தில் அதனை விசாரிக்கும் பொருட்டு சின்னங்கள் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை தேர்தல் ஆணையம் 1968 -ல் இருந்து பயன்படுத்த ஆரம்பித்து இருந்தது. அதனை தனக்கு ஏற்றார் போல் வசதியாக பொருள் கொண்ட சேஷன்  அனுமதி இல்லாத ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டன. கிராமங்கள், நகரங்களில் முறையே இரவு 11 மணி, 10 மணியோடு பரப்புரை முடிந்திருக்க வேண்டும் என்று கண்டிப்பு காட்டினார்.  ஒரு படி மேலே போய், பொது இடங்களில் தேர்தல் விளம்பரங்கள் என்பதே இருக்க கூடாது என்று உத்தரவிட்டதோடு, முடிந்தால் தனியார் வீடுகளில் தேர்தல் காலத்தில் விளம்பரங்கள் செய்பவர்கள் முடிந்தபிறகு தாங்களே வெள்ளையடித்து தரவேண்டும் என்றும் கண்டிப்பு காட்டினார். தேர்தலின் வண்ணமய பொழுதுகள், பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் பறிபோகிறதே என்று சிலர் சேஷனிடம் குறைபட்டுக் கொண்டார்கள். ‘பொழுதுபோக்கு, கொண்டாட்டம் எல்லாம் வேண்டுமென்றால் திரையரங்குக்கு போய் உட்காருங்கள். தேர்தல் தான் கிடைத்ததா?’ என்று அவர் பதிலளித்தார்.

சேஷன் கையில் தேர்தல் நிறுத்த ஆயுதம் சிக்கிக்கொண்டு படாத பாடு பட்டது என்றால் மிகையில்லை. வி.பி.சிங் கட்சியின் கோட்டைகளாக திகழ்ந்த பகுதிகளில் அவர் தேர்தலை உப்பு சப்பில்லாத காரணங்களை சொல்லி சேஷன் நிறுத்தினார் என்பதை பேராசிரியர்  கிறிஸ்தோஃப் ஜாப்ரிலா சுட்டிக்காட்டுகிறார். பஞ்சாபின் கல்கா இடைத்தேர்தலின் போது சாலைகளை அடைப்பது, வாகனங்களை மொத்தமாக தடை செய்வது என்று சேஷன் எல்லை மீறினார். மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டது என்று செய்தித்தாள்கள் கவனப்படுத்தின. பஞ்சாபில் வாக்குப்பதிவிற்கு நடக்க சில மணி நேரங்களே இருந்த போது தடாலடியாக சேஷன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தேர்தலை  நிறுத்த ஆளுநர் மனம் நொந்து பதவியை விட்டு விலகினார்.

தேர்தல் சமயத்தில் சாதி, மதம் என்றோ, இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்றோ வாக்குறுதிகள் தருவது கூடாது, அதன் மூலம் வாக்காளர்களை ஈர்த்தால் தேர்தலை ரத்து செய்வேன், வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று சேஷன் கண்டிப்பு காட்டினார். இது தேர்தல் அரசியலுக்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு வகையில் எதிரானது கூட. தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்காமல் எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என்று பேராசிரியர் கில்மார்ட்டின் வினா எழுப்புகிறார். இத்தகைய சேஷனின் அணுகுமுறைக்கு அவர் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருந்த பார்வையும் ஒரு காரணம் . ‘இந்தியாவின் இருநூறு அரசியல் தலைவர்கள் – மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என்று இவர்களில் எத்தனை பெற தனிப்பட்ட அல்லது கொள்கை ரீதியான ஊசலாட்டங்களில் தெளிவு பெற அணுக முடியும்? ஒருவரைக்கூட அணுக முடியாது…. இவர்கள் எல்லாம் சித்திரக்குள்ளர்கள்’ என்று சேஷன் எழுதினார்.

சேஷன் இப்படி மனம் போன போக்கில் தேர்தல்களை   நிறுத்திக் கொண்டிருந்தது இடதுசாரிகளை கடுப்பேற்றியது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். தனக்கு உதவிகரமாக இருப்பார் என்று தப்புக்கணக்கு போட்ட நரசிம்ம ராவ் சேஷனை காப்பாற்றினார். சேஷன் மகனுக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஆளுநரின் செயலால் தேர்தலை நிறுத்தினார். பீகார் தான் சேஷனின் சோதனையின் உச்சம். வன்முறை, படுகொலைகள், பூத் கைப்பற்றல்களுக்கு பெயர் பெற்ற அந்த மாநிலத்தில் 650 கம்பெனி துணை ராணுவப்படையை இறக்கினார். நான்கு கட்டங்களாக தேர்தலை நடத்தினார். அதற்கு பிறகும் நான்கு முறை தேர்தலை தள்ளி வைத்தார். இந்த புள்ளிவிவரம் எவ்வளவு காலம் எடுத்தது என்கிற தெளிவைத் தரலாம்: தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 8, 1994 -ல் செய்யப்பட்டது. இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்தது மார்ச் 28, 1995.
சேஷனின் தீவிரமான முயற்சிகளால் வன்முறைகள் பெருமளவில் தேர்தலில் குறைந்தன. உத்திர பிரதேசத்தில் 1991 பூத் கைப்பற்றல்கள் 873, 1993-ல் இந்த எண்ணிக்கை 255 ஆக குறைந்திருந்தது. 1996 பொதுத் தேர்தலில் 1500 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தியா முழுக்க அனுப்பப்பட்டார்கள். மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தில் முறையே 59,000 பேர் , 1,25,000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். மத்திய பிரதேசத்தில் மட்டும்   87,000 வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. பூத் கைப்பற்றல்கள் இந்திய அளவில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு 2614 ஆக இருந்தது இப்போது 1056 ஆக குறைந்திருந்தது. தேர்தல் வன்முறைகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை 272-ல் இருந்து ஏழே வருடத்தில் 60 ஆக குறைந்திருந்தது.

சேஷன் தேர்தலில் வாக்களிக்க தைரியத்தோடு வரலாம் என்கிற நம்பிக்கையை தன்னுடைய நடவடிக்கைகளால் தந்ததால் வன்முறை சூழல், மதப்பிணக்குகள் என்று பல தரப்பட்ட சவால்களுக்கு இடையேவும் உத்திர பிரதேசத்தில் 1993-ல் வாக்களித்தவர்களின் அளவு 10% அளவு உயர்ந்தது. இதனை ‘சேஷன் விளைவு’ என்று பேராசிரியர் கிறிஸ்தோப் ஜாப்ரிலா புகழ்கிறார். தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தேர்தலில் அச்சமில்லாமல் வாக்களிக்க இந்நடவடிக்கைகள் உதவின என்கிறார்.

சேஷன் தேர்தல் பரப்புரையில் விதிமுறைகளை மீறியதாக சொல்லி இரண்டு அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்று நரசிம்ம ராவிடம் அழுத்தம் கொடுத்தார். பல்வேறு வகைகளில் அவரின் செயல்பாடுகள் அரசுக்கு தலைவலி கொடுப்பதாக இருந்தன. சேஷனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்னும் இரண்டு தேர்தல் ஆணையர்களை அரசு நியமித்தது. ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட நியமனம் ஒன்றை முன்னெடுத்தவர் சேஷன். இப்போது தன்னுடைய கழுத்திலேயே கத்தி வைக்கப்பட்ட போது அவர் உச்சநீதிமன்ற படியேறினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டே மத்திய அரசு அவர்களை நியமித்து இருந்தது. நீதிமன்றம் அரசின் முடிவுக்கு எந்த தடையையும் விதிக்கவில்லை என்றாலும் சேஷன் இரு ஆணையர்களுக்கும் எந்த பணியையும் ஒதுக்க வெகுகாலம் மறுத்து சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். நீதிமன்றம் ‘தன்னுடைய சொந்த பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்தி கொள்ள முனைகிறார்’ என்கிற அளவுக்கு காட்டம் காட்டிய பிறகே இறங்கி வந்தார். மூன்று தேர்தல் ஆணையர்களும் ஒரே அளவு அதிகாரம் படைத்தவர்கள், முரண்பாடுகள் வரும் போது பெரும்பான்மை வாக்கின் மூலம் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு எழுதியது.

சேஷன் தன்னுடைய பதவிக்காலம் முடிந்ததும் குடியரசு தலைவர் தேர்தலில் சுயேட்சையாக நின்றார். அவர் சிவசேனா, பாஜக கட்சிகளிடம் ஆதரவு கோரினார். பால் தாக்கரேவை சந்தித்து ஆதரவு கோரினார். ‘சாதி, மத, ஊழல் வேறுபாடுகளை கடந்த ஒருவரே ஜனாதிபதி ஆகவேண்டும்’ என்று அவருக்கு ஆதரவு நல்குவதாக சிவசேனா அறிவித்தது. ஐ.கே.குஜ்ரால் சிவசேனையின் இந்த முடிவு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்கோத்ராவிடம் கேட்டார், ‘அது வேறொன்றுமில்லை. ஒரு தலித் குடியரசுத் தலைவர் ஆகிவிடக்கூடாது என்பதே சிவசேனாவின் எண்ணம்’ என்றார். இதனை தன்னுடைய சுய சரிதையில் குஜ்ரால் பதிவு செய்துள்ளார். கே.ஆர்.நாராயணன் அந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார். மனசாட்சியின் படி வாக்களியுங்கள் என்று குரல் கொடுத்த சேஷன் 5% வாக்குகளை மட்டும் பெற்று டெபாசிட்டை இழந்தார். வெகு சீக்கிரமே காந்தி நகரில் அத்வானியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நின்று சேஷன் இரண்டு லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று தோற்றுப்போனார்.

‘உங்களுடைய சிறகுகளை அரசு வெட்டி எறிந்து விடும் போல் இருக்கிறதே?’ என்று சேஷனை பார்த்து கேட்டதும் இப்படி பதில் சொன்னார், ‘நான் அப்போதும் நெருப்புக் கோழியை போல மின்னல் வேகத்தில் இலக்கு நோக்கி ஓடுவேன்’. தேர்தல்களில் தோற்றவர் என்றாலும், தேர்தல் அரசியலில் கடைக்கோடி குடிமக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பெரும் முயற்சியை முன்னெடுத்த அரிய அதிகாரி என்று அவர் நினைவுகூரப்படுவார்.

சான்றுகள்:
1) One day’s sultan:T.N. Seshan and Indian democracy-David Gilmartin


2) The Great March of Democracy Edited  by S.Y.Quraishi
3) https://www.indiatoday.in/india/story/tn-seshan-no-nonsense-man-tn-seshan-cleaned-up-india-electoral-system-1617702-2019-11
4) Elections Model Code of Conduct: A Reference Handbook – K.C.Saha
5) A Tumultuous and Glorious Seventy Years – T.N.Seshan
6) T.N.Seshan – An intimate Story – Konark Publishers
7) நேரு முதல் நேற்று வரை – ப.ஸ்ரீ.இராகவன் 
8) T.N. Seshan CEC Vs Union of India & Ors, 14, July 1995
9) Matters of Discretion- An Autobiography- I.K.Gujral
10)https://www.thequint.com/voices/blogs/tn-seshan-a-life-of-integrity-dedicated-to-public-service
11) https://www.business-standard.com/article/beyond-business/-the-more-you-kick-me-112051

12) https://www.thehindu.com/todays-paper/tp-national/the-man-who-cleaned-up-the-indian-electoral-system/article29940502.ece

காஷ்மீர் குறித்து வேகமாக பரப்பப்பட்ட  படம்  சொல்வதெல்லாம் உண்மையா? 


பொய்களும், அரைகுறை உண்மைகளும் வேகமாகக் கவனம் பெற்றுவிடுவதன் அடையாளமே கீழ்கண்ட படம். இதனை ஆங்கிலத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டுடே எந்த ஆய்வும் செய்யாமல் வெளியிட அதனைத் தமிழ் ஊடகங்கள் செவ்வனே மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஏன் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தவறானவை அல்லது அரைகுறையானவை என அறிவோம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

(I) காஷ்மீருக்கு என்று இரட்டைக் குடியுரிமை எல்லாம் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்புக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியா ஒற்றைக் குடியுரிமை கொண்டிருக்கும் நாடு. வேறொரு நாட்டின் குடியுரிமையை ஒருவர் பெற்றால் அக்கணமே அவர் இந்தியக் குடிமகனாக இருக்க முடியாது. காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு என்று குறிப்பிட்ட சில சிறப்புரிமைகள் உண்டு. அது குடியுரிமை அல்ல. விடுதலை இந்தியாவில் குடியுரிமை எப்படிக் குடியுரிமை உருவம் பெற்றது என்று அறிய விரும்புபவர்கள் அவசியம் பேராசிரியர் நீரஜா கோபால் ஜெயலின்
‘Citizenship and its discontents’ நூலை வாசிக்க வேண்டும்.

(II) பொருளாதார அவசரநிலை (சட்டப்பிரிவு 360) என்பது இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்த பின்பு ஒரு முறை கூட அறிவிக்கப்பட்டதில்லை. இதுவரை ஜம்மு காஷ்மீரில் போர், அந்நிய தாக்குதலின் போது அவசரநிலையை அறிவிக்க இயலும்.

(III) சிறுபான்மையினருக்கு 16% இட ஒதுக்கீடு என்பது இன்னொரு பூசுற்றல். இந்த எண் எங்கிருந்து முளைத்தது என்று தேடிப்பார்த்தும் தெரியவில்லை. சமீபத்திய சட்டத்திருத்தம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை காஷ்மீரில் உறுதி செய்துள்ளது. சீக்கியர்கள், இஸ்லாமியர்களிலும் மேல்சாதியினர் உண்டு. எதையாவது அடித்து விடுவது என்று வந்த பின்பு உண்மையைப் பற்றி என்ன கவலை?

(IV) ஒரு காஷ்மீரி பெண் வேறு மாநில நபரை மணந்தால் தன்னுடைய குடியுரிமையை இழக்கிறார் என்பது அடுத்தப் பிதற்றல். குடியுரிமையை நெறிப்படுத்தும் சட்டங்களில் இப்படியொரு சட்டப்பிரிவு இல்லவே இல்லை. வேறு மாநிலத்தவரை காஷ்மீரி பெண் திருமணம் செய்து கொண்டாலும் அவரின் குடியுரிமை அப்படியே இருக்கும். சிறப்புரிமைகளைத் தான் குடியுரிமை என்று எண்ணிக்கொண்டார்கள் என்று சமாளிக்க எண்ணுகிறார்களா? அடுத்தப் பத்தியை படிக்கவும்.

(V) காஷ்மீரி பெண் வேறு மாநில ஆணை திருமணம் செய்து கொள்வதால் காஷ்மீரிகளுக்கு என்று இருக்கும் சிறப்புரிமைகள் எதனையும் இழக்க மாட்டார் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு தீர்ப்பு நல்கியது. ஒரே ஒரு நீதிபதி மட்டுமே அத்தீர்ப்பில் முரண்பட்டார். புகழ்பெற்ற சுசீலா சாஹ்னி எதிர் ஜம்மு காஷ்மீர் அரசு வழக்கிலேயே இத்தீர்ப்பு 2002-ல் வழங்கப்பட்டது. ஆக இந்தக் குடியுரிமை, சிறப்புரிமை இழப்பு என்பதெல்லாம் இல்லை. காண்க: https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/j-k-women-marrying-non-natives-don-t-lose-residency-rights-expert-119012201079_1.html

(VI) ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இருக்கிறது. முதலில் நீர்த்துப்போன ஒரு சட்டத்தை 2004-ல் மாநில அரசு நிறைவேற்றியது. 2009-ல் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு இணையான தகவல் அறியும் உரிமைச்சட்டம் காஷ்மீரில் அமலுக்கு வந்தது.

(VII) இறுதியாக ஜம்மு காஷ்மீருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுவோம். இந்தியாவில் சிறப்புரிமைகளை அனுபவிக்கிற மாநிலம் காஷ்மீர் மட்டுமில்லை. இந்தியா asymmetric federalism-ஐ பின்பற்றுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலசாரம், பண்பாடு, நடைமுறைகள், இந்தியாவோடு இணைந்த பாதை ஆகியவற்றில் மாறுபட்டிருக்கும். அதனால் அவற்றுக்கு ஏற்ப அரசியலமைப்பில் சிறப்புப் பிரிவுகளின் மூலம் சிறப்பு உரிமைகள் காஷ்மீர் அல்லாத பத்து மாநிலங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவாக அறிய படிக்கவும்:

https://www.google.com/amp/s/thewire.in/government/jammu-kashmir-constitution-special-powers-10-states/amp/

பகுத்தறிவும், அரசமைப்புச் சட்டம் குறித்த தேடலும் நம்மிடையே பெருகட்டும்.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

 

In this era of fake news such half baked posts are widely shared. I will break point by point why this is fake on many accounts. I wish those who share this do some basic study of constitution.
 
(I) There is no dual citizenship in Kashmir. No state in India enjoys this privilege of Dual citizenship. In India there is only Single Citizenship. For those interested in history of making of Citizenship in India They can read Niraja Gopal Jayal’s ‘Citizenship and its discontents’.
 
(II) Article 360 was never implemented in any state or whole of country anytime in past 69 yrs of existence of Constitution. Previously, Emergency can be declared in Jammu and Kashmir when there is war or external aggression.
 
(III) How this number of 16% was arrived I don’t know. The reservation bill actually provides 10% reservation for EWS. EWS are not per se minorities. Even upper castes exist in Sikhs, Muslims.
 
(IV) The losing of citizenship by marrying person outside state is another lie. The property rights are gone yes, but, not citizenship rights. Go get your basics right.
(V) Jammu & Kashmir do have RTI Act. First watered down version was passed in 2004. And in 2009 Jammu & Kashmir Right to Information Act came into force which is on similar lines with Central Act.
 
(VI) The Kashmiri women doesn’t lose Citizenship or residency Rights post 2002. J & K high court in a full bench judgment with one judge dissenting has said (Susheela Sahwney Case) that A women doesn’t lose her rights as Kashmiri by marrying a non-resident. https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/j-k-women-marrying-non-natives-don-t-lose-residency-rights-expert-119012201079_1.html
 
(VII) Finally the first point. Special powers of Kashmir. It was not the only state that enjoyed special powers. India practices asymmetric federalism and provides special powers to Ten States. Here is a summary of it: https://www.google.com/amp/s/thewire.in/government/jammu-kashmir-constitution-special-powers-10-states/amp/
 
Little sense and sanity is to be expected.

சொற்களில் கவனமாயிருங்கள்


சொற்களில் கவனமாயிருங்கள்,
அதிசய சொற்களிலும் கூட,
ஆச்சரிய சொற்களுக்காக நம்மால் இயன்றதையெல்லாம் புரிகிறோம்,
அவை பூச்சிகள் போல மொய்க்கின்றன,
ஆனால், கொட்டாமல் முத்தமொன்றை ஈந்துவிட்டு அகல்கின்றன.
அவை விரல்கள் அளவுக்கு நல்லவையாகவும் இருக்கக் கூடும்.
நீங்கள் நம்பிக்கையோடு அமரக்கூடிய பாறையாகவும் சொற்கள் திகழலாம்.
அவை மலர்களாகவும், காயங்களாகவும் இருக்கலாம்.
எனினும், நான் சொற்களைக் காதலிக்கிறேன்.
அவை மேற்கூரையிலிருந்து தரை சேரும் புறாக்களாக இருக்கலாம்.
அவை என் மடியில் வீற்றிருக்கும் ஆறு புனித ஆரஞ்சு கனிகள்.
அவை மரங்கள், வேனலின் கால்கள்,
வெய்யோன், அவனின் ஒளிரும் முகம்.
இருந்தாலும், அவை அடிக்கடி என்னைக் கைவிடுகின்றன.
நான் சொல்ல விரும்புபவை தீராமல் என்னுள்ளே இருக்கின்றன,
அத்தனை கதைகள், உருவங்கள், சொலவடைகள்,
ஆனால், சொற்கள் போதுமானதாக இருப்பதேயில்லை,
பிழையானவை என்னை முத்தமிடுகின்றன,
சமயங்களில் கழுகைப் போல வான் ஏகுகிறேன்,
சிறுகுருவியின் சிறகுகளுடன்,
ஆனால், சொற்களின் மீது அக்கறையோடு கனிவாய் இருக்கிறேன்.
சொற்களையும், முட்டைகளையும் கவனமாகக் கையாளவேண்டும்.
அவை உடைந்தால் மீண்டும் உயிர்த்தெழுப்பவே முடியாதவை. – Anne Sexton

Image result for anne saxton
தமிழில்: பூ.கொ.சரவணன்

தண்ணீர் மத்தன் தினங்கள்


ஏன் இந்த நாள் இப்படி முடிய வேண்டும்? Sethupathi Nedumaran தம்பி சொல்லித்தான் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்திற்கு சென்றேன். கொண்டாட்டம், தர்பூசணி நிறைந்த குவளைகள், துள்ளல், பெருகிக்கொண்டே இருக்கும் வெடிச்சிரிப்பு என இத்தனை நெருக்கமான, சினிமாத்தனம் இல்லாத ஒரு திரைப்படத்தை பார்த்து பல நாளாகிறது.
 
சப்டைட்டில் இல்லாமல் அருகிருந்த நண்பனின் உதவியோடு முதல் பாதியைக் கடந்த நாங்கள் இரண்டாம் பாதியில் வசனங்கள் புரியாமலே திரைமொழியில், ஆடிப்பெருக்கன்று அடித்துச் செல்லும் நீர்ச்சுழல் போல கலந்து விட்டோம். பள்ளி மாணவன் ஜேசன், அவன் ஆசிரியர் பிற நண்பர்கள், செவ்வி துளிர்க்கும் பிரியங்கள் இதற்குள் இப்படியொரு படையலைத்தர முடியுமா என இன்னமும் நம்பமுடியவில்லை.
Image result for thanneer mathan dinangal;
 
அந்த பதின்பருவ நாயகனும், நாயகியும். நடிக்கவா செய்கிறார்கள். நம் வாழ்வின் திரும்பாத பொழுதுகளை கண்முன் தங்களின் உடல்மொழியில், அடர்த்தியான மௌனத்தில், பேரன்பில் நிறைக்கிறார்கள்.
 
இசையும், படத்தொகுப்பும் புரிகிற மாயத்தில் திக்குமுக்காடுவது ஒரு புறம் என்றால் ஜேசனின் வாழ்வின் தோல்விகள், கசப்புகள், நிராகரிப்புகள் ஊடாக வெள்ளந்தியான தெருச்சண்டைகளும், மயிலிறகு குட்டி போட்டது போன்ற பிரியங்களும், வெகுளித்தன்மை மாறாத குழந்தைமையும், ஊடலுவகையும் நம் இருளினை ஒளிரச்செய்கின்றன. ஒரு வரி கூட மிகையாக எழுதப்பட்டதில்லை. அந்த தர்பூசணித் தினங்களில் சேறு அப்பி, கடிபட்ட பழத்துணுக்குகளின் சாறு ஆடையில் வழிந்து, காத்திருப்பின் கனிவு பெருகி வானில் சற்றே மிதந்தபடி வெளியே வருவீர்கள். கலையின் வெற்றியும், உண்மையின் கதகதப்பும் அதுதானே?

Does ‘Shamefully 2’ deserves all this attention & hype…


Watched ‘yours shamefully 2’ short film. I liked the theme and issue which it had touched upon. In this world of instant shares and immediate shaming, it gives a mirror to introspect and be more restrained. All said, now i will record my issues with this film.

Why the movie got such a mileage and views? It is not only because it emotionally as well as poignantly attacks social media warriors. But, what does it also does? It points that elite or non-victimised women may play the victim card. I don’t deny that there had been such instances of fake victimisation and harassing of innocent men as well as teenage guys.

Image may contain: 1 person

Let’s now come to some reality check. Which gender is sexually harassed, abused, stalked for born in that gender? It is mostly women. Who face acid attacks or has to bear the brick bats of society for speaking against sexual predators? It is again women.

Who does more polygamy in India? Men. Married women outnumber married men by 66 lakhs. That is at least 66 lakh men married more than one women. Who owns most of the land, powerful positions across India? Men.

If a woman comes out against a powerful man what is the initial reaction? Slut shaming or endless questions about her character. The video’s narrative focuses on unheard voices of victimised men and it almost exclusively sounds aloud that men are affected by social media frenziness.

Marital rape, domestic violence, sexual abuse, everyday stalking, fighting it out amidst inequal power structures is an everyday crusade for millions of ‘working’ women across India. (Almost all women across India work).

We as a society express our immediate condolences for those videos which question our sheepishness without affecting existing prejudices as well as biases. Many will say that the short film touches upon unheard voices of men or those suffering from shares. How about the girls who committed suicide for the share of morphed images of them? Or those whose private videos made it into pornographic sites? Or those who came out boldly for crusading against the sexual predators who re exploiting them using their positions? Whose side majority took? The gender to which they belonged or the patriarchy for which they re loyal. Women had been made to bear the brunt in almost all the cases as chastity and protection of culture is almost the responsibility of women alone.

Sharing responsibly is need of the hour. No doubt. Social media activism should be more sensible. Totally agreed. But, that should not make us blind to the fact that majority of hapless victims are from one gender. If they re born in suppressed or depressed castes as well as in poor economic conditions life is much much horrible. Let’s not assume the moral high ground of speaking for suppressed minority among dominant gender and lose sight of our perverted, misogynistic behavior which affects women more.

ஒரு அறிமுகம் – கமலா தாஸ்


இந்தியாவின் தனித்துவமான, ஆழமான பெண்ணியக் கவிகளில் முக்கியமானவரான கமலா தாஸ் அவர்களின் சுய சரிதையான ‘என் கதை’ வெளிவந்த நாள் இன்று என்பதை ஒட்டி கூகுள் ஒரு டூடூலை வெளியிட்டு இருக்கிறது. அவரின் சொந்த வாழ்க்கையின் சுவடுகள் கொண்ட ‘ஒரு அறிமுகம்’ கவிதை ஆங்கிலம் வழி தமிழாக்கமாக இதோ:

Celebrating Kamala Das

ஒரு அறிமுகம்- கமலா தாஸ்

எனக்கு அரசியல் தெரியாது, ஆனாலும், நான் பெயர்களையே அறிவேன்
அரசியலில் உள்ளவர்களின் பெயர்களை அறிவேன்
அவற்றை அச்சாரம் பிசகாமல் மீண்டும் மீண்டும் உச்சரிப்பேன்
வாரத்தின் நாட்களைப் போல, மாதங்களின் பெயர்களைப் போல, அவர்கள் பெயர்களை நேருவில் துவங்கி மடமடவென ஒப்பிப்பேன்
நான் இந்தியன், பழுப்பு நிறம், மலபார் மண்ணில் மலர்ந்தவள்
மூன்று மொழிகளில் பேசி, இரண்டில் எழுதி, ஒரு மொழியில் சிந்திப்பவள்
ஆங்கிலம் உன் அன்னை மொழியில்லை, அதனால், அதில் எழுதாதே என்றார்கள்
விமர்சகர்களே, நண்பர்களே, வருகை தரும் உறவுகளே
நீங்கள் எல்லாரும் என்னை ஏன் தனியாக விடக்கூடாது
நீங்கள் அனைவரும் நான் விரும்பும் மொழியில் என்னைப் பேச விடுவீர்களா?
நான் பேசும் மொழி எனதாகிறது
அதன் சிதைவுகள், விபரீதமான வெளிப்பாடுகள்
யாவும் என்னுடையவை, அவை என்னுடையது மட்டுமே
என் மொழி பாதி ஆங்கிலம், பாதி இந்தியன், வேடிக்கையானதும் கூட, என்றாலும், அது சத்தியமானது
நான் எவ்வளவு மானுடம் மிக்கவளோ அத்தனை மானுடம் என் மொழியிலும் வழிகிறது
அம்மொழி எந்தன் ஆனந்தங்கள், காத்திருப்புகள், நம்பிக்கைகளைக் குரலெடுத்துக் கொட்டுகிறது
காக்கைகளுக்குக் கரைதலை போல, சிங்கங்களுக்குக் கர்ஜிப்பதை போல என் மொழி என் பயன் காக்கிறது
அது மனிதரின் பேச்சு
அது மனதின் பேச்சு. அங்குத் தொலையாமல் அருகே தொடரும் பேச்சு அது
விழித்தும், கூர்ந்தும் இருக்கும் மனமது
புயலில் தொலையும் மரங்களின், மழையில் கரையும் பருவகால மேகங்களின்
சிதையில் எரியும் பிணத்தின் கோர்வையற்ற முணுமுணுப்புகளின்
கேளாத, காணாத குரல் அல்ல அது
நான் மழலையாக இருந்தேன்
நான் வளர்ந்து விட்டேன் எனப் பின்னர் அறிவித்தார்கள்
என் தோள்கள் ஊதி பெருத்தன
ஓரிரு இடங்களில் ரோமங்கள் தோன்றின
வேறென்ன கேட்பது என்று தெரியாமல் காதல் வேண்டுமெனக் கேட்ட போது
அவன் பதினாறு வயதினளை படுக்கையறைக்கு அழைத்துப் போய்த் தாழ்ப்பாளிட்டான்
அவன் என்னை அடிக்கவில்லை, என் துயர்மிகு பெண்ணுடல் வதைபட்டதாய் மருகிற்று
என் மார்பகங்களின், கர்ப்பப்பையின் சுமை என்னை நசுக்கியது
நான் பரிதாபமாகச் சுருங்கிப்போனேன்
அதன் பின்….ஒரு சட்டையை, என் தம்பியின் ட்ரவுசரை அணிந்து கொண்டேன்
முடியை வெட்டி, எந்தப் பெண்மையைக் காணாமல் கடந்தேன்
புடவையைப் போர்த்திக்கொள்
பொம்பளையா இரு, பொண்டாட்டியா இரு என்று அவர்கள் சொன்னார்கள்
துணிகளில் வேலைப்பாடுகள் செய்து வீழ்ந்து போ
சமையல்காரியாய் இரு, வேலையாட்களோடு சண்டையிடு
அனுசரித்துப் போ என்று கத்தினார்கள் வகைப்படுத்துபவர்கள்
சுவர்களில் அமராதே
திரைச்சீலைகள் மூடிய சன்னல்களுக்குள் ஊடுருவி பார்க்காதே
ஆமியாய் இரு இல்லை கமலாவாய் இரு
இல்லை மாதவிக்குட்டியாகவே இரு
எதோ ஒரு பெயரை, எதோ ஒரு வேடத்தைத் தேர்வு செய்யும் நேரம் நெருங்கிவிட்டது
கண்ணாமூச்சி ஆட்டங்கள் ஆடாதே
மனச்சிதைவோடு மற்போர் புரியாதே
பெருங்காமம் கொண்ட பெண்ணாகாதே
காதலன் கைவிட்டு அகல்கையில் அழுதழுது அவமானம் கூட்டாதே
நான் ஒரு ஆடவனைக் கண்டேன்,காதலித்தேன்
அவனை எப்பெயர் இட்டும் அழைக்க வேண்டாம்
அவன் எல்லா ஆடவரை போன்றவன்
அவர்களைப் போல அவனுக்கு ஒரு பெண் தேவை
எப்படி ஒவ்வொரு பெண்ணைப் போலவும் பிரியம் நாடி நான் பசலை கொள்கிறேனோ
நதியின் பெரும்பசி பிரவாகம் என்னுள்
ஓயாத அலைகடலின் காத்திருப்பு
நீ யார் என்று அனைவரையும் கேட்கிறேன்
விடை இது தான். நான் தான் அது
தன்னைத்தானே அழைப்பவர்களை இந்த உலகம் முழுக்கக் கண்ணுறுகிறேன்
உறைக்குள் வாள் போல உறைந்து இருக்கிறான்
நான் தனித்துக் குடிக்கிறேன்
நள்ளிரவில், உணவு விடுதிகளில், புதிரான நகர்களில் குடித்துக் கிடக்கிறேன்
நான் தான் சிரிக்கிறேன், நானே காதல் லீலைகள் புரிகிறேன்
பின்னர் நானே அவமானம் கொள்கிறேன்
பொய்கள் பேசி, தொண்டைக்குள் விம்மியபடி பொய்களோடு பிணமாகிறேன்
நானே பாவி, நானே புனிதர்
நான் பிரியத்துக்கு உரியவள்
துரோகங்கள் தாங்குபவள்
உனக்கில்லாத பேரின்பங்கள் எனக்கும் இல்லை
உனக்கில்லாத வலிகள் எனக்குமில்லை
நானே என்னை நான் என அழைத்துக்கொள்கிறேன் .

Image result for MADHAVIKUTTY

தமிழில்: பூ.கொ.சரவணன்

கருத்துரிமை நெரிப்பின் கலங்கவைக்கும் வரலாறு-ஒன்று!


காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா கருத்துரிமையைக் காப்பதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதை அபினவ் சந்திரசூடின் ‘Republic of Rhetoric’ நூல் ஆய்வு செய்கிறது. கௌதம் பாட்டியாவின் கருத்துரிமை குறித்த நூல் அரசியல், சமூகச் சூழ்நிலைகளைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்கிற விமர்சனத்துக்கு இடையே இந்நூல் அந்த இடைவெளியை பெருமளவில் நிரப்புகிறது.
இந்திய விடுதலை மன்னர்கள், ஆதிக்கச் சாதியினர், நிலச்சுவான்தார் ஆகியோரின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதை ஓரளவுக்குச் செய்தது. இந்தச் சாதனை ஆங்கிலேயர் காலத்து அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தது. கருத்துரிமை சார்ந்து அப்படிச் சொல்ல முடியாது என்பதை இந்தியாவின் கருத்துரிமை சார்ந்த சட்டங்கள், கட்டுப்பாடுகள் உணர்த்துகின்றன. அரசியலமைப்பு சட்ட விவாதங்களில் ஹனுமந்தையா சொன்னதைப் போல, ‘நாம் வீணை, சிதார் இசைக்கு ஆசைப்பட்டோம். ஆங்கிலேயே வாத்தியக்குழுவின் இசை தான் கிட்டியுள்ளது’. அபினவ் இந்த நூலில் நிரூபிப்பதை போலச் சமயங்களில் ஆங்கிலேயரின் சட்டங்களை விடக் கடுமையான கட்டுப்பாடுகளை விடுதலைக்குப் பிந்தைய சட்டங்கள் விதித்து இருக்கின்றன. 

தேசத்துரோக சட்டத்தின் திகில் வரலாறு:
மெக்காலே இந்திய குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய போது தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவையும் உருவாக்கினார். எனினும், குற்றவியல் சட்டம் 1860-ல் நடைமுறைக்கு வந்த போது வரைவில் இருந்த தேசத்துரோகம் சார்ந்த சட்டப்பிரிவான 113 அமலுக்கு வரவில்லை. பத்தாண்டுகள் கழித்தே அந்தச் சட்டத்தைச் சீரமைத்து சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்தில் தேசத்துரோக சட்டத்தின் எல்லைகள் பெரிது என்றாலும், நடைமுறையில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. மெக்காலே அரசின் மீது ‘disaffection’ காட்டினால் ஒருவர் மீது இச்சட்டத்தைப் பாய்ச்சலாம் என்று வரையறுத்து இருந்தார். அரசின் மீது நல்ல நம்பிக்கையோடு மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் இதில் வராது என்பது அவரின் பார்வையாக இருந்தது. பர்னேஸ் பீகாக் என்கிற சட்டத்துறை வல்லுநர் வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதாகக் கருத்துகள் இருந்தால் மட்டுமே தேசத்துரோக சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மாற்றியமைத்தார். அவரின் சட்டம் பிரிட்டனின் தேசத்துரோக சட்டத்தை ஒத்திருந்தது. ஆனால், ஸ்டீவன் என்கிறவர் உருவாக்கிய இறுதி வடிவத்தில் சட்டம் கடுமையானதாக ஆக்கப்பட்டது. அப்போது இஸ்லாமிய வாகாபிக்கள் கிறிஸ்துவர்களான ஆங்கிலேயருக்கு எதிராகப் புனிதப்போரை நடத்தக்கூடும் என்கிற அச்சத்தில் இச்சட்டம் தேவைப்படுவதாக அறிவித்தார்.
உடலுறவுக்கான விருப்ப வயதை பத்தில் இருந்து பன்னிரெண்டுக்கு உயர்த்திய ஆங்கிலேய அரசின் நடவடிக்கையை விமர்சித்துப் பங்கோபாசி என்கிற செய்தித்தாள் எழுதிய கட்டுரைகள் சார்ந்தே முதல் தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டது. எனினும், இந்த வழக்கு சீக்கிரமே விலக்கி கொள்ளப்பட்டது. இஸ்லாமியர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என்கிற அச்சத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம், இந்து தேசியவாதியான திலகர் மீது பாய்ச்சப்பட்டது. திலகரின் சிவாஜி குறித்த உரை மக்களைத் தூண்டிவிடுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில் ஜூரி தீர்ப்பளிக்க வேண்டியிருந்தது. இங்கிலாந்தில் ஜூரி ஒரு மனதாகத் தீர்ப்பு வழங்கினாலே இரண்டாண்டு தண்டனை. இந்தியாவிலோ அதற்கு மாறாகப் பெரும்பான்மை போதும். கூடுதலாக, நாடு கடத்தல் இந்தியர்களுக்குத் தண்டனை. இந்தியர் அல்லாத ஐரோப்பியர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மட்டுமே. இதனால் திலகர் மீது சுமத்தப்பட்ட ராஜதுரோக குற்றங்களில் இந்திய உறுப்பினர்கள் அவரைத் தண்டிப்பதை எதிர்த்து வாக்களித்தாலும் பெரும்பான்மை ஆங்கிலேய உறுப்பினர்களின் வாக்குகளால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும், திலகர் மராத்தி மொழியில் எழுதிய கட்டுரைகள் படிப்பறிவு இல்லாத, முட்டாள் மக்களுக்காக எழுதப்பட்டது. அவை வாசித்துக் காட்டப்பட்டு அவர்களைத் தவறான பாதையில் செலுத்துகிறது என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருதிப்பகுதிக்குள் மெக்காலேவின் குறுகலான குற்றங்களை மட்டுமே தண்டிக்கும் ராஜதுரோக சட்டத்தை விரித்துப் பொருள் கொண்டு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் தண்டனையை வழங்கின. இதை அடுத்து, தேசத்துரோக சட்டத்தை விரிவாக்கி ‘அரசு மீதான வெறுப்பு, அவமதிப்பு, பகை’ ஆகியவற்றை வளர்ப்பதையும் தேசத்துரோக குற்றம் என வரையறுத்துச் சட்டம் 1898-ல் அமலுக்கு வந்தது. காந்தி மீது இச்சட்டம் பயன்படுத்தப்பட்ட போது வரலாற்றில் முதன்முறையாக அந்தச் சட்டத்தின்படி தான் குற்றவாளி என்று காந்தி ஏற்றுக்கொண்டு அதிரவைத்தார். வன்முறைக்குத் தூண்டாத வரை அரசுக்கு எதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்துவது குற்றமில்லை என்றும், தான் தோன்றித்தனமான ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மக்களின் தலை மீது இறங்க தயாராக் இருக்கும் வாளே இச்சட்டம் என்று கடுமையாகக் காந்தி சாடினார்.
Gwyer என்கிற உச்சநீதிமன்ற நீதிபதி வன்முறைக்குத் தூண்டினாலோ, அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டினால் மட்டுமே இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று உலகப்போர் சமயத்தில் தீர்ப்பு எழுதினார். மஜூம்தார் என்கிற சட்டசபை உறுப்பினர் நாற்பத்தி ஒன்றில் டாக்காவில் மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது எனத் தொடரப்பட்ட வழக்கில் இப்படி அவர் தீர்ப்பு எழுதினார். அரசாங்கங்களின் கர்வத்தைக் காயப்படுத்துகிற கருத்துக்களுக்கு மருந்து போட்டுக்கொள்ள இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றார். ஆனால், அவரின் கருத்தை பலேராவ் வழக்கில் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சில் ஏற்க மறுத்தது. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் ஆயுள்தண்டனை தேசத்துரோக குற்றத்துக்கு விதிக்கப்பட்டது. 1974-ல் கைது உத்தரவு இல்லாமலே தேசத்துரோக குற்றங்களுக்குக் கைது செய்யலாம் என்று இந்திரா காந்தி அரசால் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
Image result for republic of rhetoric
கருத்துரிமை காவலர் கே.எம்.முன்ஷி:
கே.எம்.முன்ஷியை கிரான்வில் ஆஸ்டின் உரிமைகளை மட்டுப்படுத்துகிற செயலில் ஈடுபட்டவர் என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரோடு இணைத்து குறிப்பிடுகிறார். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது என்பதை அபினவ் சந்திரசூட் நிறுவுகிறார். கே.எம்.முன்ஷி பத்திரிக்கைகளை முன் தணிக்கை செய்கிற பணியில் உலகப்போர் சமயத்தில் ஈடுபட்டிருந்தார். அவரே கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் வரைவை தயாரித்த குழுவின் தலைவராக இருந்தார். அதில், பொது அமைதி, நன்னெறி, தேசத்துரோகம், ஆபாசம், அவதூறு, தெய்வ நிந்தனை என்று பல்வேறு கருத்துரிமையை மறுக்கும் பிரிவுகள் அடுக்கப்பட்டன. கே.டி.ஷா, ‘ஒரு வலது கை தந்ததை மூன்று, நான்கு இடது கைகள் பறித்துக் கொள்வதைப் போல’ இது இருப்பதாகக் குறைபட்டார். அம்பேத்கர் இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்திப் பேசினார். டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் கருத்துரிமை கட்டுப்பாடுகள் அற்றதாக இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

அம்பேத்கர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் பேச்சுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். வகுப்புவாத வெறியை தூண்டிவிடும் பேச்சு கருத்துரிமையின் கீழ் வரக்கூடாது என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் வாதிட்டார். இது அரசுக்கு எதிரான கருத்துக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படும் என்று கவலை தெரிவித்தார் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி. கே.எம்.முன்ஷி வன்முறையைத் தூண்டிவிடாத பேச்சை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றார். தெளிவாக, ஆபத்தை விளைவிக்கும் பேச்சுக்களையே கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வாதிட்டார். அவரின் வாதங்களால் அம்பேத்கர், அல்லாடி ஆகியோரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. தேசத்துரோகம் சார்ந்த பேச்சுக்களையும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்தும் பிரிவுக்குள் கொண்டுவருவதையும் முன்ஷி நீக்க திருத்தம் கொண்டு வந்தார். அது ஏற்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு முடிவு செய்தது. நீதிபதிகள் காலனிய ஆட்சிக்கு நன்றியோடு இருந்துவிட்டு இன்னமும் பதவியில் தொடர்கிறார்கள், அவர்களுக்கு ஏன் பாதுகாப்பு என்று பி.தாஸ் என்கிற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், நீதிமன்ற அவமதிப்புக் கருத்துரிமையில் சேராது என்று முடிவு செய்யப்பட்டது. நியாயமான கட்டுப்படுகளையே கருத்துரிமைக்கு விதிக்க வேண்டும் என்கிற பார்கவாவின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.

முதல் சட்ட திருத்தத்துக்கு வழி வகுத்த பிரசாத், முகர்ஜி:
கருத்துரிமைக்குக் கட்டுப்பாடுகள் ஓரளவுக்கே விதிக்கப்படுவதை அரசியலமைப்பு சட்ட குழுவின் விவாதங்கள் உறுதி செய்தாலும் சீக்கிரமே சிக்கல்கள் எழுந்தன. அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு வெறுப்பைத் தூண்டும், வகுப்பு வாதத்தை வளர்க்கும் பேச்சுக்களை, எழுத்துக்களைத் தடை செய்ய அரசுகள் முயன்ற போது அது கருத்துரிமைக்கு எதிரானது என நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. ரொமேஷ் தாப்பர் என்கிற இடதுசாரியின் ‘CrossRoads’ செய்தித்தாள், ப்ரிஜ் பூஷன் என்கிற வலதுசாரியின் ‘Organiser’ செய்தித்தாள்களை அரசு கட்டுப்படுத்தியது. அவை கருத்துரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இருக்கும் மதச் சிறுபான்மையினரின் நலனை காக்க லியாகத் அலிகான் உடன் நேரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அது சார்ந்தும் பிரிவினை, காஷ்மீர் சிக்கல்கள் சார்ந்தும் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி கடுமையாகப் பேசினார். பாகிஸ்தானுடன் போரிட்டே ஆக வேண்டும் என்று தொடர்ந்து பேசினார். இது படேல், நேரு ஆகியோரை கவலைக்கு உள்ளாக்கியது.

இன்னமும் மோசமாக, சார்ஜூ பிரசாத் என்கிற நீதிபதி, சங்க்ராம் என்கிற துண்டு பிரசுரத்தில், ‘நான் ரத்தவெறிக் கொண்ட காளி…. நான் தாகம் கொண்டிருக்கிறேன், எனக்குப் புரட்சி வேண்டும், போராட்டத்தின் மீது நம்பிக்கை வேண்டும்., அநீதியின் சங்கிலிகளைக் கிழித்து, கிழித்து எறியுங்கள்.’ என்று எழுதப்பட்டதை எதிர்த்துத் தொடர்ப்பட்ட வழக்கில், ‘கொலை செய்யத் தூண்டினாலும் அதுவும் கருத்துரிமை. அதற்கான தண்டனையைத் தூண்டியவர் அனுபவிக்க வேண்டும், ஆனால், கருத்துரிமையைக் கட்டுப்படுத்த முடியாது’ எனத் தீர்ப்பு தர அதிர்ந்து போனது அரசு. முதல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் ‘பொது அமைதி’, ‘அயல்நாடுகளோடு நட்புறவு’, ‘குற்றத்துக்குத் தூண்டுவது’ ஆகியன சார்ந்து கருத்துரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று திருத்தும் கொண்டு வந்தார். அயல்நாடுகளோடு நட்புறவை ஒரு தனிக் குடிமகனின் கருத்துகள் சீர்குலைக்குமா என்று நஸ்ரூதின் ஷா என்கிற உறுப்பினர் ஆச்சரியப்பட்டார்.

நியாயமான கட்டுப்பாடுகள் (reasonable restrictions) விதிக்கப்பட வேண்டும் என்கிற திருத்தத்தை அம்பேத்கர் கொண்டு வந்ததை உள்துறை அமைச்சர் ராஜாஜி பெரும் விவாதத்திற்குப் பிறகே ஏற்றுக்கொண்டார். குற்றத்துக்குத் தூண்டுவது என்கிற பிரிவு இருக்க வேண்டுமா என்கிற விவாதம் எழுந்த போது, ‘மதுவிலக்கு இருக்கும் ஊரில் மற்றவர்கள் கால்சட்டை பையில் சாராயம் சுமந்து செல்ல தூண்டுவது குற்றமில்லையா?’ என்று கேட்டார் ராஜாஜி. அம்பேத்கர், ‘வயல்களுக்கும், விறகு பொறுக்கக் காடுகளுக்கும் பட்டியலின சாதியினர் போகக்கூடாது எனச் சமூக விலக்கை சாதி இந்துக்கள் விதித்தால் அவற்றை ஏற்க முடியாது.’ என்று வாதிட்டார். பிளிட்ஸ் இதழில் கரஞ்சியா இந்தச் சட்ட திருத்தத்தைக் கருப்பு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்தை வன்புணர்வு செய்வது என்றெல்லாம் சாடினார். சட்டதிருத்தங்கள் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.
எதிர்ப்புக்குரியவற்றைப் பதிப்பிப்பது சார்ந்து 1951, 1971-ல் நேரு, இந்திரா அரசுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன. இவை காலனிய சட்டத்தை விடக் கடுமையாகப் பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தின என்கிறார் சந்திரசூட். எவ்வளவு முன்பணத்தை அச்சகம் செலுத்த வேண்டும் என்கிற வரையறையை விதிக்காமல் இந்தச் சட்டங்கள் அதை அரசை தீர்மானிக்க விட்டன, ஆங்கிலேயர் காலத்தில் வரையறை விதிக்கப்பட்டு இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

திமுகவை பிரிவினை முழக்கத்தைக் கைவிட வைத்த சட்ட திருத்தம்:
திமுக அறுபதுகள் வரை திராவிட நாடு/தமிழ்நாடு கேட்டு தொடர்ந்து போராடிக்கொண்டு இருந்தது. சீனப்போர், நாகா, பஞ்சாப் பிரிவினை முழக்கங்கள் எல்லாம் சேர்ந்து கொள்ளப் பதினாறாவது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் ‘தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை’ சார்ந்து கருத்துரிமை கட்டுப்படுத்தப்படலாம் என்கிற சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்ட சீர்திருத்தத்தைச் செய்யுமாறு சி.பி.ராமசுவாமி ஐயர், காமராஜர் முதலியோர் அடங்கிய தேசிய ஒற்றுமை கமிட்டி பரிந்துரை செய்தது. மேலும், பதவி ஏற்றுக்கொள்ளும் சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையைக் காக்கும் வகையில் இயங்குவேன் என்று உறுதிமொழி ஏற்பதும் கட்டாயமானது. நீதிபதிகளும் இவ்வாறு பதவி பிரமாணம் எடுக்க வேண்டியது கட்டாயமானது. இதன்மூலம் நீதிபதிகள் பிரிவினையை ஆதரிக்கும் பேச்சுகளைக் காப்பாற்ற முடியாமல் தடுக்கப்பட்டது. நரசிம்ம ரெட்டி எனும் உறுப்பினர் முந்தைய தேர்தலில் திமுகத் தந்த கடும் எதிர்ப்பை தாங்க முடியாமல் காங்கிரஸ் அதைப் பழிவாங்கவே இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டினார். சட்ட அமைச்சர் சென் நாகா, பஞ்சாப் பிரிவினை, தெற்கின் போராட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். பூபேஷ் குப்தா என்கிற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அப்போது அமலில் இருந்த அவசரநிலை சட்டத்தைச் சுட்டிக்காட்டி கருத்துரிமை உறைந்து போயிருக்கும் காலத்தில் அது குறித்து விவாதிக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார். மக்களவையில் சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அண்ணா ஏழு திமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தது கணக்கில் கொள்ளப்படவில்லை என்றார். மாநிலங்களவையில் அண்ணா மட்டுமே சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார். செழியன் சட்டத்தை எதிர்த்துப் பேசுகையில்:

‘தயவு செய்து எங்களோடு வாதிடுங்கள், போட்டி போடுங்கள், எங்களைச் சம்மதிக்க வையுங்கள். நாங்கள் மாறவே மாட்டோம் என்று தெரிந்தால் எங்களை விட்டுவிடுங்கள், மக்களிடம் போய் அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். இதை நீங்கள் செய்தால் தான், அது உண்மையான ஜனநாயகம். வேறு ஏதேனும் செய்வீர்கள் என்றால், அதற்குப் பெயர் ஜனநாயகம் இல்லை. அது வேறொன்று.’

என்றார்.
Image result for anna with era sezhiyan
         மேலும் அமெரிக்க உச்சநீதிமன்றம், ‘கருத்துக்களைக் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்ப்பது என்பது கல்லறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒற்றுமையை மட்டுமே சாதிக்கிறது.’ என்று அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி பேசினார் செழியன். ஹெச்.என்.முகர்ஜி இறையாண்மை, ஒற்றுமை முதலிய வார்த்தைகள் தெளிவாக இல்லை, அவற்றைத் தவறாகப் பயன்படுத்தலாம் என்று கவலை தெரிவித்தார். காமத் ஸ்காட்டிஷ் ஹோம் ரூல் கட்சியைப் போல வன்முறையைத் தூண்டாமல் பிரிவினை பேசி, தேர்தலில் பங்கு கொண்டால் ஏற்பதில் ஒன்றும் தவறில்லை என்றார். வடக்கிற்கும், தெற்கிற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதைக் கோப்ரகடே, பிபுதேந்திர மிஸ்ரா முதலியோர் சுட்டிக்காட்டி பேசினார்கள்.

(ஆபாசம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்ற அவமதிப்பு குறித்த கருத்துரிமை விவாதங்கள் நாளை விரிவாக பேசப்படும்)


……………………………

மெய்ப்பொய்கை – பேசப்படாத பாலியல் பெண்களின் துயரம்!


ருச்சிரா குப்தா தொகுத்த ‘River Of Flesh’நூலை வாசித்து  முடித்தேன். இந்நூல் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும், அதில் ஈடுபடும் பெண்களின் உலகத்தைப் பன்னிரெண்டு மொழிகளில் வெளிவந்த 21 சிறுகதைகளின் மூலம் கண்முன் நிறுத்துகிறது. முன்னுரையில் பேராசிரியர் ருச்சிரா எழுப்பும் கேள்விகள் மனதை உலுக்குபவை. பாலியல் தொழில் என்பது கல்லூரி பெண்கள் நுகர்வு வெறிக்காக மேற்கொள்வது என்றும், அதுவும் ரத்தத்தை உறிஞ்சும் தொழில்கள், கொடுமைக்கார திருமணங்கள் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு தரவும் பாலியல் தொழில் பயன்படுகிறது என்கிற தொனியில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், கள நிலவரம் வேறானது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அடிப்படைத்தேவைகளுக்கே அல்லாடுகிறார்கள். கடனில் சிக்கி இறுதிவரை வெளிவர முடியாமலே இறந்து போகிற பெண்கள் பலர். ஆனால், அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகர்கள், உறவுக்காரர்கள் பெரும்பணம் ஈட்டுகிறார்கள். 9-13 வயதுக்குள் பெண்கள் இதற்குள் தள்ளப்படுகிறார்கள். கண்ணில் ரத்தம் வரவைக்கும் முறைகளைக்கொண்டு அவர்களைப் பருவம் எய்த வைக்கிறார்கள். அடித்தும், பட்டினி போட்டும், போதை மருந்துகள் கொடுத்தும் அவர்கள் காலத்துக்கும் பாலியல் தொழிலேயெ உழல வைக்கப்படுகிறார்கள்.

தூக்கமின்மை, உடற்பிணி அவர்களைப் பிடுங்கி தின்கிறது. சமீபத்திய ஆய்வுகள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையால் ஏற்படும் உடல், மனரீதியான பாதிப்புகள் போர்க்களத்தில் வீரர்கள் எதிர்கொள்ளும் துயரங்களை விட மோசமானவை என நிறுவுகின்றன. இவர்களின் உலகை வெவ்வேறு சிறுகதைகளின் மூலம் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளும் முயற்சியே இத்தொகுப்பு என்கிறார் ருச்சிரா குப்தா.

கமலா தாஸின் கதையில் பலதரப்பட்ட பெண்களும், ஆண்களும்,குழந்தைகளும் நடமாடுகிறார்கள். பாலியல் வேட்கை மிகுந்த ஆணுக்குள் எட்டிப்பார்க்கும் தந்தையின் பிரியம் சில வரிகளில் கடத்தப்படுகிறது. மோகத்தின் வெம்மையில் போலி வாக்குறுதி தந்து பெண்ணின் மனதை உருக்குலைக்கும் இளைஞன் ஒருவன் கடந்து வந்த பல முகங்களை நினைவுபடுத்துகிறான். 

Image may contain: text

பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் தாய்மார்களின் பதைபதைக்க வைக்கும் வாழ்க்கையை இரு கதைகள் கண்முன் நிறுத்துகின்றன. அதிலும் நாயனா அட்டர்கரின் கொங்கனி கதையில் குழந்தை காலடியில் அழுது கொண்டிருக்க, ஆடவன் ஒருவன் அக்குழந்தையின் அன்னையோடு புணர்ந்தபடி இருக்கிறான். அவனின் மோகத்திற்கும், குழந்தையின் கதறலுக்கும் இடையே தவிக்கும் அந்தத் தாயை போல எத்தனை அன்னைகள்?

ஆண் வெறுப்பு மட்டுமே கதைகளின் மையமில்லை. அப்பெண்களின் உலகின் அன்பும், கனிவும், தயக்கங்களும், துயர்களும் அழகியலோடு கடத்தப்படும் கதைகள் அநேகம். பிபூதிபுஷன் பண்டோபாத்தியாயா கதையில் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் சூழல் எந்தப் பரப்புரையும் இல்லாமல் புரிய வைக்கப்படுகிறது. ஒரு பிராமணச் சிறுவனுக்கு அன்போடு தீண்டாமைக்கும், சாதி கட்டுப்பாடுகளுக்கும் பயந்து கொண்டே தின்பண்டங்கள் கொடுத்து அன்பை பொழியும் பெண்கள் நெகிழ வைக்கிறார்கள். முப்பது வருடங்கள் கழித்து அவர்களைச் சந்திக்கும் கணத்தை இப்படிக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்:

‘எனக்கு ஞாபகம் இருக்கு. அந்தப் பைத்தியக்கார வாண்டு பிராமணப் பையன் தானே நீ. எப்படி வளந்துட்டே? அம்மா அப்பாலாம் உயிரோட இருக்காங்களா?’
‘யாரும் உயிரோட இல்லை’
‘எத்தனை பசங்க’
‘அஞ்சு பேரு’
‘உட்காரு ஐயா. இங்கே உக்காரு. இந்தா வந்துடறேன்.’

அந்தப் பெண் திரும்புகையில் என்ன தந்தாள், அவனின் முகம் மறந்து போயிருந்தாலும் பேரன்பை எப்படிப் பத்திரப்படுத்தித் தந்தாள் என்பவை எல்லாம் அற்புத கணங்கள்.

மான்டோவின் கதையில் வரும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்ணின் கெஞ்சலும், அவள் தலைக்கு மேலே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் நூறு மெழுகுவர்த்தி வெளிச்சமும் பரிதாபத்தைக் கோரவில்லை. தூக்கம் தொலைத்து தரகர்களுக்குப் பணம் ஈட்டித்தரும் அடிமையாக மாற்றப்பட்டாலும் தன்னைப் பார்த்து யாரும் இரக்கப்படுவதற்கு அவள் அனுமதிக்கவில்லை. தூக்கத்திற்காக, நிம்மதிக்காக அலையும் அவள் கதையின் இறுதியில் செய்யும் செயலும், கொள்ளும் பேருறக்கமும் அதிர வைக்கும்.

கமலேஸ்வரின் இந்தி கதையில் வருகிற நாயகி தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் தன்னுடைய மருத்துவச் செலவுகளுக்காக வாங்கிய கடனை எப்படியாவது அடைத்து விடுவது என உறுதியோடு இருக்கிறாள். உயிரை எடுக்கும் வலியிலும் தன்னை நாடிவரும் தோழனுக்கு இன்பம் தர முயலும் அவளின் கரிசனம் கலங்க வைக்கிறது. அக்கதையின் இவ்வரிகள் எத்தனை ஆழமானவை?:

ஆயிரம் ஆண்கள் அவளுடைய வாழ்க்கைக்குள் வந்திருக்கிறார்கள். ஆனால், தன்னுடைய மிச்ச வாழ்க்கை முழுக்க அடைக்கலம் தரும் நிழலுடையவர்களாக அவர்கள் யாரும் இருக்கவில்லை.

அவளுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் கடன் வாங்கினாள், ஆனால், அங்கேயும் நம்பிக்கை இல்லை. என்றோ ஒருநாள் காணாமல் போகப்போகும் அவர்களை எப்படி அவளால் நம்ப முடியும்? முதுமை அவளைத் தீண்டியதும் ஆண்கள் அப்படியே கைவிட்டுவிடுவார்கள். அவர்களின் குழந்தைகள் வளர்ந்ததும் அவளிடம் வருவதை நிறுத்திக்கொள்வார்கள்….அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் கடன் கொடுத்தவர்கள் அவளைக் காண வருவது தான். 

Image result for river of flesh
ருச்சிரா குப்தா, படம் நன்றி: http://speakingtigerbooks.com/books/river-of-flesh-and-other-stories-the-prostituted-women-in-indian-short-fiction/

பிரேம் சந்தின் கதையின் கவித்துவமும், அதில் நிரம்பி வழியும் பேரன்பும், வன்மமும் சொற்களில் அடங்காதவை. ஆண் தன்னுடைய தாபங்களுக்கு ஏற்ப பெண்களை நாடுவது போல, அவனுடைய காதலியும் நாடினால் என்னாகும் எனத் துரிதமாக விவரிக்கும் இக்கதையில் நின்று தரிசிப்பதற்குள் காட்சிகள் கடந்து விடுகின்றன.

குர்அதுல்ஐன் ஹைதரின் கதை முழுக்கப் பழம்பெருமை மிக்க ஒரு பெண்ணே நிறைந்திருக்கிறாள். கதையின் இறுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் இறை நம்பிக்கையுள்ள பெண்ணின் குரல் அத்தனை வலிமிக்கதாக ஒலிக்கிறது:

நம்முடைய செயல்கள் எல்லாம் நியாயத் தீர்ப்பு நாளில் நம்மைப் படைத்தவனால் தீர்ப்பளிக்கப்படும். இந்த மும்பையில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள், எல்லா வகையான விஷயங்கள் இங்கேயும் நடக்கின்றன. …குரானை ஓதி நியாயத்தீர்ப்பு நாளில் எங்களுக்குக் கருணை காட்ட பிரார்த்தனை செய்.

சித்திக் ஆலமின் கதை மாய யதார்த்தவாத பாணியில் பயணித்துக் கிளர்ச்சியாக வாசிப்பு அனுபவத்தைப் பரிசளிக்கிறது. இஸ்மத் சுக்தாயின் கதையில் வரும் நாயகி லஜ்ஜோ கொண்டாட்டத்தின் திரு உரு. அவள் விதிகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டள்ளவள். அவளின் கசடுகளை விட அவளின் விடுதலையும், இன்ப நாட்டமும், குறும்புமே நம்மை நிறைக்கிறது. திருமணத் தளை அவளைக் கட்டிப்போட முயல்கையில் அவள் புரிபவை சுவையானவை. வெறும் ஒப்பாரித்தன்மையோடு தான் அவர்களின் வாழ்க்கை அணுகப்படும் என்கிற பொதுப்பார்வையை உடைத்துப்போடும் மகத்தான உருது சிறுகதை அது.

நபேந்து கோஷின் கதையின் இறுதி வரிகள் பெண்களின் நம்பிக்கையைத் தங்களின் வேட்கைகளுக்காகப் பலியிடும் ஆண்களின் உலகையும், பெண்ணின் வாழ்க்கையையும் சில வரிகளில் நம்முன் நிறுத்தி நகர்கிறது:

அவனைச் சைய்யா சுலபமாக மறக்க மாட்டாள். தீன்காரி தாஸ் என்கிற பல்ராம் சௌத்ரி அவளை அர்ஜுனனாக மயங்கினான். அந்த மயக்கம் அவள் வயிற்றினில் நாளும் வளர்கிறது. அது அவள் கருப்பையை விட்டு வெளிவந்த பின்பும் நாளும் வளரும். அது வளர்ந்து கொண்டே இருக்கும், அவளுடைய இறுதி மூச்சுவரை அவளின் ஆன்மாவை கடித்துக் குதறிக்கொண்டே இருக்கும். பல்ராம் சைய்யாவை மறந்தாலும், அவளால் அவனை மறக்கவே முடியாது.

மனிஷா குல்ஷரேஷ்தாவின் கதை மகன், தாய் ஆகிய இருவரின் குரல்களில் ஒலிக்கிறது. அவனைப் பெற்று, தனியாளாகத் துரோகத்தின் நிழலில் வளர்த்த அன்னையைப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவள் என்பதால் அம்மா என்று அழைக்க மறுத்து மகன் தான் கண்டதை விவரிக்கிறான். அன்னையின் குரல் அவனுக்கு உண்மையைச் சொல்ல மறுக்கிறது. அவனுடைய கேள்விகளுக்கும், முன்முடிவான போலி அறத்துக்கும் அவளின் ஆன்மா அடிபணிய மறுக்கிறது. இக்கதையின் ரகசியத்தை விடவும் அதன் நெருக்கமும், நேர்மையும் மொழிபெயர்ப்பிலும் அப்படியே கடத்தப்பட்டு இருக்கிறது.

மாதுரிமா சின்ஹாவின் கதை நெஞ்சில் அறம் இன்றி, போலித்தன்மை மிக்க மனிதர்கள் பிரியத்தின் சிறு நிழலையாவது கண்டு விட மாட்டோமா எனக் கொடிய வாழ்க்கைக்கு இடையே பரிதவிக்கும் பாலியல் தொழிலில் சிக்குண்டு நிற்கும் பெண்களை ‘மோசமானவர்கள்’ என்கிற அபத்தத்தை எளிய கதையமைப்பில் சாடி செல்கிறார்.

கடிதங்களால் ஆன இரு கதைகள் தொகுப்பை அலங்கரிக்கின்றன. புரியாத மொழியில் இருவரும் எழுதிக்கொள்ளும் கடிதங்களை வாசித்து, பேரன்பை சுவாசித்து, மீண்டும் அவற்றை எழுதியவர்களே எடுத்துச் செல்லும் வலி கண்களைக் கசிய வைக்கிறது. தந்தையின் காதலியை தேடிச்செல்லும் மகளுக்குக் கிடைக்கும் அன்னையின் வாசனை நம் நாசியையும் நிறைக்கிறது.

கிஷன் சந்தரின் கதை பிரிவினை காலத்தில் ஒரு பாலியல் தொழிலாளி ஜின்னா, நேரு இருவருக்கும் எழுதும் கடிதமாக நீள்கிறது. மத வெறி எப்படி இளம் சிறுமிகளின், பெண்களின், குடும்பங்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போடுகிறது என்பதை விட அந்தப் பாலியல் தொழிலாளியின் கடிதத்தின் இரு பத்திகள் சூடுபவை. அவற்றோடு நம்மை உலுக்கும், இன்னமும் கரிசனத்தோடு, கவலையோடு பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்களை அணுகும் இந்தச் சிறுகதை தொகுப்பின் அறிமுகத்தை முடிக்கலாம்:

“கொடுமைக்கார முஸ்லீம்கள் பேலாவின் அம்மாவுடைய மார்பகங்களை அறுத்து எறிந்தார்கள். ஒரு அன்னையின் மார்பகங்கள் தன்னுடைய பிள்ளை இந்துவா,முஸ்லீமா, சீக்கியனா, யூதனா எனப்பார்க்காமல் பசி தீர்க்க பாலூட்டுகிறது. உலகத்தின் அகன்ற பரப்பினில் படைப்பின் புதிய அத்தியாயத்தை அது கொண்டு வருகிறது. இந்தப் பால் கசியும் மார்பகங்களை அல்லா உ அக்பர் என உச்சரிக்கும் மக்களே வெட்டினார்கள். அறியாமை அவர்களின் ஆன்மாவை கருத்த நஞ்சால் நிறைத்து விட்டது. நான் புனித குரானை வாசித்து இருக்கிறேன். பேலாவின் பெற்றோருக்கு ராவல்பிண்டியில் நிகழ்த்தப்பட்டவற்றை இஸ்லாம் ஒன்றும் கற்பிக்கவில்லை என எனக்குத் தெரியும். அது மனிதமும் இல்லை, பகைமையும் இல்லை, பழிவாங்கலும் இல்லை. அது மிருகத்தனமான, கோழைத்தனமான, கொடூரமிகுந்த, சாத்தானை ஒத்த செயல். அது இருளின் நெஞ்சத்தில் இருந்து வெளிப்பட்டுக் கடைசிக் கீற்று நம்பிக்கையையும் கறைப்படுத்தி விட்டது.’
———————————————————————————————————-
ரெஹனா, மர்ஜானா, சூசன் பேகம் அவர்களின் தந்தையின் பிணத்தின் முன்னால் ஒவ்வொருவராக வன்புணர்வு செய்யப்பட்டார்கள். தங்களுக்குத் தாலாட்டு பாடிய, கண்ணியம், பக்தி, வெட்கத்தோடு தங்கள் முன் தலைகுனிந்து நடந்த அம்மாக்களை, சகோதரிகளை வன்புணர்வு செய்தார்கள் அந்த ஆண்கள்.

இந்து மதத்தின் புனிதம் பறிபோனது. அதன் அறங்கள், நம்பிக்கைகள் அழிக்கப்பட்டன. இப்போது அமைதி மட்டுமே நிலவுகிறது. க்ராந்த் சாஹிபின் ஒவ்வொரு வரியும் அவமானப்பட்டு இருக்கிறது. கீதையின் ஒவ்வொரு வரியும் காயப்பட்டு இருக்கிறது. அஜந்தாவின் கலையழகு குறித்து என்னிடம் யார் பேச முடியும்? அசோகரின் எழுத்துக்கள் குறித்து யார் என்னிடம் சொல்ல முடியும்? எல்லோராவின் சிற்பி குறித்து யார் கீதமிசைக்க முடியும். அந்த ஆதரவற்ற பட்டுல் சிறுமியின் கடித்துக் குதறப்பட்ட உதடுகளில், மிருகங்கள்,அரக்கர்களின் பல்தடங்கள் இருக்கும் அவளின் கரங்களில் உங்கள் அஜந்தாவின் மரணம் தெரிகிறது, உங்கள் எல்லோராவின் இறுதி ஊர்வலம் நடக்கிறது, உங்கள் நாகரீக சமூகம் பிண ஆடை போர்த்திக்கொண்டு நகர்கிறது…

அவர்களை என் தொழிலுக்குள் நான் தள்ளமுடியும். ஆனால், ராவல்பிண்டியும், ஜலந்தரும் அவர்களுக்குப் புரிந்ததை நான் செய்ய மாட்டேன். 

Image result for மெய்ப்பொய்கை

River Of Flesh
தொகுப்பாசிரியர்: ருச்சிரா குப்தா
Speaking Tiger
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350

(இத்தொகுப்பின் ஒரு முக்கியமான குறை பல்வேறு மொழிகளின் சொற்களுக்கு பொருள் இறுதியில் கூட தரப்படவில்லை. இது வாசிப்பை சமயங்களில் தடைப்படுத்துகிறது. இந்நூல் தமிழில் மெய்ப்பொய்கை என்கிற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. நான் ஆங்கிலத்திலேயே நூலை வாசித்தேன். )

 

காயப்படாமல் காதல் புரிவது எப்படி?


 

பிரியமுள்ள ரஃபேலுக்கு,
நான் உன் மீது அளவில்லாத அக்கறை காட்டுகிறேன். நீயோ பாராமுகமாக இருக்கிறாய். அதனால் நான் உன்னை விட்டு விலக நேர்கிறது. இது என் குற்றமா? கண்மண் தெரியாமல் அன்பை பொழிவது தான் நான் செய்கிற தவறா? இல்லை, நான் தான் அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறேனோ?

அளவுக்கு மீறி ஆசைப்படுகிறேன் என்பது உண்மை என்றால், உன்னைக் காலத்திற்கும் காதலிக்க என்ன வழி? கட்டற்று காதலித்து, கையளவு அன்பை எதிர்பார்ப்பதே சிறந்த வழியா? இப்படிப்பட்ட கலவையான உணர்வுகளைக் காலத்துக்கும் தாங்கிக்கொண்டு பிரியத்தோடு இருக்க முடியுமா? அப்படிப்பட்ட ஆற்றல் அம்மாக்களுக்கும், துறவிகளுக்கும் மட்டுமே சாத்தியம். நான் அன்னையுமில்லை, அனைத்தும் துறந்த துறவியும் இல்லை. என்னால் எதிர்ப்பார்ப்பையும், பேரன்பையும் பிரித்துப் பார்க்க முடியாது.
எதிர்பார்ப்பையும், அக்கறை ததும்பும் அன்பையும் பிரித்து விட முடியுமா என்ன? இப்படிப்பட்ட அரிய நிலை குறித்து உளவியல் வல்லுனர்களும், ஞானிகளும் பேசி கேட்டிருக்கிறேன். இந்த எதிர்பார்ப்பற்ற நிலைக்கு உன்னதமான விழிப்புணர்வோ, அளவில்லாத துன்பமோ அழைத்துச் செல்லும். இன்னும் அந்த இடத்தை நான் சென்றடையவில்லை. சில நேரங்களில், எப்போதுமே அங்கே போக மாட்டேன் என்று தோன்றுகிறது.

என்னுடைய ஆன்மாவின் ஒரு பகுதி, அங்கே போகக்கூட விரும்பவில்லை. நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதற்கும், எதையாவது எதிர்பார்ப்பதற்கும் இடையே நூலிழை வேறுபாடே உள்ளது. அது சுய-மோசடிக்கும், சுய-மரியாதைக்கும் இடையே உள்ள வேறுபாடு. நாம் எல்லோரும், இரு பக்கமிருந்தும் பேரன்பும், புரிதலும் பாயும் உறவினில் திளைக்கும் பேறு பெறவேண்டியவர்கள்.

எதையாவது எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று. அதில் சுயமரியாதை கலந்துள்ளது. நாம் எல்லோரும், இரு பக்கமிருந்தும் பேரன்பும், புரிதலும் பாயும் உறவினில் திளைக்கும் பேறு பெறவேண்டியவர்கள்.

எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது மேன்மைமிக்க நிலையாக இருக்க வேண்டியதில்லை. அது காயப்படாமல் காதல் புரிய முயலும் முயற்சியாகவும் இருக்கலாம். அன்பின் நிழல் கூடப் படராத காலங்களின் கடுமை தாளாமல், அதிலிருந்து தப்ப முயல்கிறோம். அப்போது எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதே காதல் காலத்துக்கும் தொடர வழி என்கிற தத்துவம் மூளைச்சலவை செய்கிறது. அந்தச் சுயமோசடியில் மூழ்கி விடுகிறோம்.

அது சரியாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை, அளவு கடந்த அன்பை பொழியும் அந்த நபர் தவறானவரோடு காதல் கொண்டிருக்கலாம். தனக்கானதை கேட்டு பெறவோ, வேறொருவரை காதலிக்கவோ தைரியமில்லாமல் அங்கேயே துவண்டு நிற்கலாம். ஒரு வேளை, தன்னுடைய காதலோடு கலந்து பாயும் எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொள்ளும், உணர்வுகளை மதிக்கும் உன்னதமான உறவை தேடி கண்டடைவதே அவருடைய முதல் வேலையாக இருக்க வேண்டும்.
ஆனால், என்ன செய்வது? உயிர் கரையும் உறவினில் எது சரியான எதிர்பார்ப்பு என எப்படித் தெரிந்து கொள்வது? எல்லாருக்கும் பொருந்த கூடிய ‘ஒரு உறவில் எது சரியான எதிர்பார்ப்பு’ என வழிகாட்டும் கையேடு எதுவும் எழுதப்படவில்லையே?

நமக்கு நாமே எது எதிர்பார்ப்பின் எல்லை என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். நாம் எப்படி அன்பு செய்யப்பட வேண்டும் என நாமே அறிந்து கொள்ளவேண்டும்.
ஆனால், நமக்கானவர்கள் பிரியத்தை எப்படிப் பொழிய வேண்டும் என்று தெரிகிறதா? அப்படியே தெரிந்தாலும், அதை எப்படி நம் காதலருக்கு கடத்துவது? அப்படிப்பட்ட மொழியைக் கண்டறியாத சபிக்கப்பட்ட சமூகம் அல்லவா இது?
ரஃபேல்! எப்படி உன்னிடம் அதைச் சொல்வது? என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவது? நான் “தேவை”, “ஆசை”, “வேதனை”, “தனிமை” “அச்சம்” முதலிய வார்த்தைகளை உதிர்க்கலாமா? .
உனக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியே ஆக
வேண்டுமா?

Related image

இதற்குப் பதிலாக, நீ என்னை எப்படிக் காதலிக்க வேண்டும் என்று ஏங்கி தவிக்கிறேனோ, அதைப் போல உன்னைக் காதலிப்பதன் மூலம் என் கண்ணீரின் துளிகள் உன்னை நனைக்குமா? நீ எனக்கானவன் என்றால், பழத்தோட்டத்தின் மரங்கள் ஒன்றுக்கு ஒன்று இடிக்காமல் கிளைகளைப் பரப்புவதைப் போல, என் பிரியத்தின் பேரொளியை நீ பருகிக்கொள்வாய் இல்லையா? உன் கிளைகள் எனக்கு வழிவிடாமல் போகும் என்றால், நாம் காவிய காதலர்கள் இல்லை. சத்தமில்லாமல் நான் அகல்வதே சரியாக இருக்கும்.

Image result for how to love without getting hurt

எந்தச் சுவடும் இல்லாமல் அகல்வது ஒன்றும் எனக்குப் புதிதில்லையே? கண்டுகொள்ளாத உனக்காகத் தருவதற்கு என்று என்னிடம் இருக்கும் ஒரே கண்ணியமிகுந்த செயல்பாடு அது தானே? என் இதயத்தை இருகூராகப் பிளக்கும் இக்கணங்களில் அறிவை பயன்படுத்த முயல்கிறேன். அப்போதெல்லாம், தலையெழுத்தை மாற்றவா முடியும் என்று தோன்றுகிறது. இதைக்கூட நீ காதல் மிகைத்து பொங்கி வழியும் பிதற்றல் என்று சொல்வாய். எனக்கு இது ‘எதோ ஒன்று குறைகிறது’ என்று என் இதயம் குமுறும் வழியாகவே தோன்றுகிறது.

அன்னா 

Labyrinths பக்கத்தில் காணப்பட்ட பிலிப் ஜானின் எழுத்தின் தமிழாக்கம் இது.